Tuesday 31 March 2015

சின்னக் குமிழிகளில் பிடிவாதங்களை...

அஞ்சு 
சதத்துக்குப் 
பிரயோசனமில்லாத
முட்டாள்த்தனமும் 
இதயத்தை 
இறுக்கிப் பிடிக்கும்
வறட்டுக் கவுரவமும்
ஒன்றுமேயில்லாத
சுய பெருமையும்
பெரிய
வட்டமாகி
அதிகம்
துன்புறுத்தி
மனதை அழுத்தும்
நாட்களில்
நிமிடங்களில்
உடைந்து போகும்
சின்னக் குமிழிகளில்
பிடிவாதங்களை
விரும்பியே
விட்டுக் கொடுக்கும்
குழந்தை மனதை
இப்போதும்
நினைக்கையில்
சுகமாயிருக்கிறது.
.


30.03.15

வடதுருவ உல்லாசம் ..

பிரமாண்டத் 
தனிமையின் 
துணையை அனுசரித்து 
துருவக் 
கரடிகளும் 
உறைபனி
ஓநாய்களும்
இரை தேடிச் சென்ற
வழித் தடங்களை
விசாரித்து விலத்தி
திசையறி கருவி
பிரித்துக் காட்டிய
சுழற்சியில்
பாதைக் குறிப்புகளும்
வரை படங்களும்
பிரயாண முகவர்களுமில்லாத
பயணத்தில்
நண்பர்களோடு
நடந்தே கடந்து
தொலைந்து போனதை
எழுதிவைத்து
மறுபடியும்
நினைத்துப் பார்த்து
ரசிக்கத் தொடங்கி
பழைய
பரிமாணத்திற்குள்
பிரவேசிக்க
எந்த அடிக் குறிப்பும்
தேவை இல்லை.
.


.31.03.15

Sunday 29 March 2015

ஒரு ஞாபகம் மட்டுமே...

மரம் 
விழுத்திய 
இலையின்
நல்ல நினைவுகள்
நிறமற்ற 
வெய்யிலில்ப்
பரவலாகப் பறந்து
கொண்டிருக்கு...

கோடை மழையில்
உறை பனியில்
மஞ்சள் வெயிலில்
மெல்லிய தென்றலில்
பறவையின் இறகில்
அதன் அந்தரங்க
நினைவு நிறங்கள்
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கலாம்

இறப்புப் போல
நேரம் குறித்த
உடைப்பின்
தொடர்ச்சியாக
இலை
கடைசிவரை
மரத்தின்
காலடி உறவை
உதறி விட்டு
எங்கேயும்
செல்வதில்லை....

மரம்
நம்பும் உலகத்தில்
இலை
ஒரு ஞாபகம்
மட்டுமே,
இடைவெளிகளை
நிரந்தரமாக நிரப்பும்
இருப்பு
அல்ல............... 
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 10.06.14

செபமாலை மாதவே!

செபமாலை மாதவே! புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்க்கடைகளில் பச்சைக் கலரில், பச்சைப் போத்தலில் அடைத்து விற்கப்படும்  திரவம் வெறும் சீனியும், பச்சை கலரிங்கும் போல தான் இருக்க, அதன் உண்மையான வடிவம் ஒரு காலத்தில் யாழ்பானத்தில வசாவிளான் என்ற  வலிகாமம் வடக்கில் உள்ள இடத்தில இருந்த தோலைக்கட்டி " மவுன விரதப் பாதிரி " மார்களின் ஒரு தியான மடத்தில், அதனுடன் இணைந்த ஒரு செறிவுக் குளிர்பான உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தோலக்கட்டி நெல்லி கிரஸ்  என்ற உண்மை இப்பவும் நெல்லி மரங்கள் சாட்சியாக உலகப்புகழ் வரலாறாக இருக்கு.

                                 இலங்கை தீவின் வடக்கு தொங்கலில் இருந்த அந்த,  தற்சமயம் புத்தபெருமானின் புதல்வர்கள் பலாலி அதியுர் பாதுகாப்பு வலய ராணுவமயமாக்கலில் அடி வேண்டித் தரை மட்டமாக்கிய தோலைக்கட்டி பாதிரிகள் மடத்தில் இருந்துதான், ஐக்கிய இலங்கையில் எல்லா இனமும்,மதமும் ஆளை ஆள் சந்தேகிக்காமல் அருகருகே இருந்த போது தென்பகுதியின் பொறுத்த சிங்கள நகரங்களான காலி ,மாத்தறை, உட்பட ,சண்டைக்கு முந்திய இலங்கை  எங்கும் தாகம் தீர்த்த " தோலைக்கட்டி நெல்லி கிரஸ்-" தயாரிக்கப்பட்டது யாழ்ப்பான  ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குப் பின்னர் நடந்த ஒரு  ஆச்சரியம் ,

                                   அதைவிட அதை "கொக்க-கோலா "  போன்ற ஒரு ரகசிய " ரெசிப்பியாக " வைத்து உற்பத்தி செய்தவர்கள் "கிறிஸ்தவ  மவுன விரதப் பாதிரிமார்கள் " என்பது இன்னுமொரு ஆச்சரியம்! அந்த நெல்லிகிராஸ் அடைத்து வரும் பச்சைக் கலர் போத்தல் ,அந்த போத்தலின் லேபலில் உள்ள ஒரு சின்னத் தேவாலயத்தின் படம், இது ரெண்டுமே காணும் பார்க்கவே வெய்யில் நாட்களில்  நுனி நாக்கு வெளியே தள்ளி  நடு நாக்கில நெல்லிக் கிரஸ் ஊறவைக்க ...

                     " தோலக் கட்டி மடம் 1928 இல் பாதிரியார், சன்யாசி தோமஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது என்றும் அன்றைய பாப்பரசர் பியஸ் XI, இன் அழைப்பின் பேரில் அமைதியான வாழ்வில் வாழ இதை ஆரம்பித்த  இவர்களது கத்தோலிக்கப் பிரிவு ரோஸரியன்ஸ் என்றும் . இவர்களது நோன்பு 24 மணி நேரமும் ஜெபமாலை சொல்லிக்கொண்டிருப்பது. அதாவது விழித்திருக்கும் நேரமெல்லாம் மாதாவை நினைத்து செபம் செய்வது, அதனால்தான் அவர்கள் யாருடனும் அனாவசியமாகக் கதைக்கமாட்டார்கள். கதைப்பதைக் கண்டவர்கள் எனக்குத் தெரிந்து யாருமில்லை. "  என்று அவர்களை நேரடியாப் பார்த்த சுவிடனில் வசிக்கும் சிந்தனையாளர்  சார்ல்ஸ் போமன் சொல்லியுள்ளார்.

                                   மவுன விரதப் பாதிரிமார்கள், அவர்கள் தங்களுக்குள்ளும், வெளிஆட்களோடும் அதிகம் பேசவே மாடார்களாம். அவர்களைப் போலவே, இங்கிலாந்தில் இருந்து வந்து குடியேறிய , ஒரு கத்தோலிக்க  மவுன விரதப் பாதிரிமார்களின் "மிசனரி 1300 வருடங்களின் முன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இருந்து சில மையில் துரத்தில் உள்ள ஹோவ்ட் ஓயா என்ற தீவில் இருந்து இருக்கு ! நோர்வே அகழ்வாராச்சி திணைக்களம் பாதுகாத்து வைத்துள்ள  அவர்கள் வாழ்ந்த அந்த  சிதைவடைந்து போயும் காலம் கருங்கல்லில் வரலாற்றைப் பதிந்துவிட்டுச் சென்ற பாழடைந்த வாழ்விடத்தை  பார்த்த போதுதான்  " செபமாலை  மாதவே.."   என்று சொல்லத் தோன்றியது....

                       அந்த தீவுக்கு கோடை காலத்தில் ஆண்களும், பெண்களும் உடுப்புகளை மிச்சம் பிடிச்சு வெய்யில் காயப் போவார்கள், இப்ப உண்மையை உங்களிட்ட மட்டும் சொன்னா என்ன..."அரை நிர்வாணப் பெண்கள் வெயில் காய்வார்கள் அந்த அழகிய தீவில் ..".என்ற ஒரு தகவல் கிடைத்த உட்சாகத்தில பார்க்கப் போய் தான் நானும், நோர்வேயின் ஆதியான மக்கள் வசித்த ஹோவ்ட் ஓயா மிசனரி பாழடைந்த தேவாலய வாழ்விடம் என்ற இந்த  இடத்தைப்பார்க்க வேண்டி வந்தது.

                     சென்ற வருடக் கோடை காலம் ,நேரம் கிடைத்த போது ,ஒஸ்லோ நகரின் முக்கோணக் கழிமுகத்தில் ஒஸ்லோ பிஜோர்ட் என்ற கடலின் நடுவில் ,ஒஸ்லோவை பார்த்தவாறு சில நிமிட நேர பாடிக்கொண்டே போகும்  படகுப் பயணத்தில் உள்ள  தீவுகள் எல்லாத்தையும் பொதுப் போக்குவரத்துப் படகில் சென்று சுற்றிப் பார்த்த போது, ஹோவ்ட் ஓயா என்ற தீவில் அரை நிர்வாணப் பெண்கள் கடற்கரை ஓரம் வெயில் காய்வார்கள் எண்டு ஒரு நண்பர் பல வருடங்களின் முன் சொன்னது  கேள்விப்பட்டு,கடற்கரைகள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை அதால் கடலும் அலையும் கரையும் தேடி அந்த தீவை நடந்து சுற்றிப் பார்த்த போது இந்த பாழடைந்த வாழ்விடத் தொகுதி அரை நிர்வாணப் பெண்களை விடக் கவர்சியாகா இருக்க, கொஞ்சம் விவரமா ஆராய்ந்து பார்த்தேன் !

                           ஆயிரம் வருடம் முன்னர் இந்தப் பாதிரிமார்கள் வாழ்ந்த முறை பற்றி இந்த பாழடைந்த கருங்கல் கட்டிடத்தின் முன் ஒரு பலகையில் விரிவாக எழுதி இருந்தார்கள். மிசனறிப் பாதிரிமார்கள் வாழ்க்கை கண்டிப்பு நிறைந்தது எண்டு கேள்விப்படதுக்கு எதிராக, இந்தப் பாதிரிமார் ,சமய நம்பிக்கை இல்லாதவர்களையும் தங்களோடு வைத்து இருந்து இருக்குறார்கள், என்ன மவுனமாக  இருக்கவேண்டும். அவளவுதான் கொண்டிசன்!

                                    இப்ப  இந்தப் கத்தோலிக்க  மவுன விரதப் பாதிரிமார்களின் "மிசனரி 1300 வருடங்களின் முன் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இருந்த பாழடைந்த அவர்களின் வாழ்விடங்கள் சிதைந்து உள்ள பகுதியில் நோர்வேகாரர்கள் நவீன இலத்திரன்  எலட்ரிக் கருவிகளால் தோண்டி தோண்டி ஆராய்ச்சி செய்கிறார்கள் ஆயிரம் வருடம் முன்  எப்படி எலும்பையும் உறையவைக்கும் உறைபனிக் குளிரை சாமாளித்து பாதிரிகள் ரோசரி மாலையை உருடிக்கொண்டு வாழ்ந்தார்கள் என்று அறியவும் , அடிப்படைத்தேவைகளை சமாளிக்கத் தேவையான வசதிகளை  எப்படி அவர்கள் உருவாகினார்கள் என்பதையும் அறிய.

                                      இந்த மிசனரி பல வருடங்கள் இன்றைய வெள்ளையும் சொள்ளையுமான நோர்வே மக்களின்  கொள்ளுத்தாத்தாகளான வைகிங்குகள் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் காலத்திலும்  இதே இடத்தில இருந்து இருக்கு. மிகவும் கொடூரமாக கழுத்தை நெரித்துக் கொல்லும் ,சண்டை பிடிக்கும் மனப்பான்மை உள்ள வைக்கின்குகள் இந்தப் பாதிரிமார்களின் கழுத்தில கயிறு போட்டு நெரிக்காமல்  மவுனமாக இருந்தது இன்னுமொரு ஆச்சரியம்.

                                     அதன் பின் வந்த சில நூற்றாண்டில் நோர்வே ரோமன் கத்தோலிக்கத்தில் இருந்து ப்றோடாஸ்தான் கிறிஸ்தவத்துக்கு மாற ,அரசாங்கம் இந்த மிசனரி இடத்தை பலவந்தமாக கைப்பற்ற ,மவுனமான அந்தப் பாதிரிமார்களின் கதை அதோட  மவுனமாகிவிட்டது! இப்ப இந்த இடம் ஒரு கோடை காலஅரை நிர்வாணப் பெண்கள் வெயில் காய் சுற்றுலா மையம் .அவளவுதான் !

            மவுன விரதப் பாதிரிமார்களின் மிசனரி 1300 வருடங்களின் முன் இருந்த இடத்தில நல்லாப்  புல்லு முளைத்து இருந்தது, கருங்கல்லு சுவர்களில் கடல்ப் புறாக்களின் எச்சங்கள் மிச்சங்களாக இருந்தது, உப்புக் கடல்க் காற்று  பல கருங்கல் சுவர்களை கொஞ்சம் அசைத்துப் பார்த்த அடையாளங்கள் இருக்க, அப்படியே  அந்த இடத்தின்  பெயர் மட்டும் இன்னும் " மவுன விரதப் பாதிரிமார்களின் வாழ்விடம் " எண்டு நோர்வே மொழியில்  ஒரு மொத்தமான மரப்பலகையில் உளியால தோண்டி எழுதி இருந்தது , அந்தப் பெயர் மட்டும் இன்னும் ,உலகம் எங்கும்  பலவருடங்களின் முன்னமே அழிந்து, உற்பத்தியை  நிற்பாட்டிய  " தோலைக்கட்டி நெல்லி கிரஸ்-" பெயரில் இன்றும் ஒரு பச்சை கலர் திரவம் உலகம் எங்கும்  உலாவுவதைப்போலவே  ஒரு பெயராகவே உலவிக்கொண்டே இருக்கலாம் ......

.


நாவுக் அரசன்

ஹுவாட் ஓயா ,ஒஸ்லோ பிஜோர்ட்
நோர்வே.

Sunday 22 March 2015

இசை அமைப்பாளர் உதயன் விக்டர்

பல வருடங்களின் பின் கிராமிய இசைக் கருவிகள் இசைத்து இசை அமைக்கப்பட்ட மத்யமாவதி ராகத்தில் அமைந்த மன்னாரு திரைப்படத்தில் வரும் ,இலற்றோனிக் இரைச்சல் இல்லாத என்பதுக்களில் வந்த மண்வாசனைப் பாடல்கள் போல வயலும், ஆறும் ,மண்ணும் ,ஆலமரமும் அய்யனாரும் மறுபடியும் உயிராகி வரும் இந்த பாடல் " ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி .." என்ற பாடலை இளம் இசை அமைப்பாளர் உதயன் விக்டர் இசை அமைக்க, எஸ் பி சைலயா , கிருஸ்ணராஜ் சேர்ந்து பாடிய பாடல்.
                                            ஒரு கிராமத்தில் அன்றாடம் நிகழும் சம்பவங்களை அதிகம்கண்ணை உறுத்தாமல் படம் பிடித்துள்ள இந்தப் பாடல் ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி , பாடல் கேட்க நல்லா இருக்கு, ஆனால் யூ டுபில் உள்ள குப்பைகள் எல்லாம் பிரபலம் ஆனது போல இந்தப் பாடல் அதிகம் பார்க்கப்படவில்லை அது ஒரு சோகம்.
                                               எம் ஜி ஆரின், சிவாயியின் சினிமா முடிந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவுக்குள் வந்த இளையராஜாவோடு சேர்ந்து பாரதிராஜா தந்த கிராமிய மணம் கமழ்கிற வெற்றிப் பாடல்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு கிராமியப் பாடல்களுக்கு பெரும் மரியாதையை உருவாக்கித் தந்தது.இந்தக் காலகட்டத்தில்தான், பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர் வைரமுத்துவும் இதற்கு முக்கியக் காரணமாய் இருந்தார்.
                                               நாட்டுப்புறப் பாடல்களை அப்படியே காப்பியடிக்காமல் . நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் இனிய இசைநயத்தைப் போல புதிய மெட்டுக்களை உருவாக்குவதும், இதயத்தை வருடும் நயமிக்க வார்த்தைகளைக் கற்பனை செய்து பாடல்களை எழுதுவது இவ்வாறன இசைமெட்டுக்களை இயற்றுவதில் இசைஞானி இளையராஜாவும், பாடல்வரிகளை எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவும் சினிமாவில் தனிமுத்திரை பதித்த இருவருமே கிராமத்திலிருந்தே வந்தவர்களாதலால் கிராமத்து இசை மெட்டுகளும், வரிகளும் அவர்களின் இரத்தத்தில் இருந்தது.
                                               கிராமத்துக் குயில்களின் குரலோசை போன்ற பல பாடல்களை S P ஷைலஜா பல இசை அமைப்பாளர்களின் இசையில் அழகாக பாடியிருக்கிறார். மறந்து போன அந்தக் குரலை மறுபடியும் வெள்ளித்திரையில் உதயன் விக்டர் பதிந்துள்ளார். தன்னுடைய காற்சட்டை காலத்தில் அவர் மிகவும் ரசித்த S.P.சைலஜா அவர்களை இந்த பாடலை பாடவைத்தது மிகவும் சந்தோசமான ஒரு விடயம் என்றும் , ஏறக்குறைய 40 இசைக் கலைஞர்களை இந்த பாடலில் வாத்தியங்கள் வாசிக்க வைத்து இசை அமைத்ததாகவும் உதயன் விக்டர் சொல்லியுள்ளார்.

                                                  " சென்னையில் இருக்கின்ற முன்னணி வயலின் கலைஞர்கள் 12 பேர் வாசித்தார்கள் . இசை அமைப்பில் வயலின் இசை மிகவும் முக்கியமானதும் கடினமானதும் ஆகும் . இந்த பாடலின் பதிவு எனக்கு பல சுவையான அனுபவங்களை தந்திருக்கின்றது .S.P..சைலஜா வின் குரலும் என் இனிய நண்பர் கிருஷ்ணராஜ் குரலும் மிகவும் இனிமை .கஷ்டப்பட்டு இசைக்கிற பாடல்கள் மக்களை சரிவர சென்றடையவில்லை என்பதை விட வாழ்க்கையின் மிகப்பெரிய சோகம் எதுவும் இல்லை.. " என்று உதயன் விக்டர் தன்னுடைய ஆதங்கத்தை சொல்லி இருக்கிறார்.

                               " ஊரையெல்லாம் காவல் காக்கும் அய்யனாரு சாமி .." என்ற பாடலைக் கேட்க இந்த லின்ங்கை கிளிக் பண்ணுங்கள் ...https://www.youtube.com/watch?v=9Jdr2NoaRcM
                                    .

தணலின் அனல்

நெருப்பின் தகிப்பை
நாங்களாக
அனுபவிக்காத வரை
தணலின் அனல்
எங்களுக்கு 
வெளியே இருக்க
யாருக்கோ
வியர்ப்பது போலத்
தோன்றும்.
ஆலையிலே
சூடான
மூச்சுக் காற்றை
குளிர்மைப்படுத்த
எல்லோரும்
வெளியில் சென்றுவிடும்
மாலையிலே மட்டும்
தென்றல்
உள்ளே நுழையும்....
சாம்பல் இருட்டில்
கண் முன்னே
நெருப்பைப் பிடித்து
வளைக்கும்
முகங்கள் உருக
வெளியேற விரும்பாது
புகையாகிப் போன
கரி போல
ஒரு மனிதனின்
பார்வை...
உணர்ச்சியை வசப்படுத்தி
யதார்த்தத்திலிருந்து
தப்பியோட நினைக்காத
ஆயிரம் குரல்களை
அடைத்து
வைத்து கொண்டு
திண்டாடுகின்ற
சிலர் இங்கே
விறகாக
எரிவதால் தான்
அவர்களின்
குடும்பம்
நிழலோடு
குளிர் காய்கிறது.
.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 22.03.15.

Saturday 21 March 2015

தவற விட்ட சந்தர்ப்ப்பம்...

எல்லா ஒப்பீடுகளின்
துவக்கமுமே
தவறாக உள்ள
இயற்கையில்
பூச்சிகள் 
சிறகிருக்கும் வரை
தம்மை
வீழ்ச்சிகளுடன்
ஒப்பிடுவதேயில்லை....
பூனையின்
உயர்வு மனப்பான்மையால்
பெருமைப்படும்
பெரிய உலகத்தை
தாழ்வு மனப்பான்மை
பாதிக்க அனுமதிக்காத
பூச்சிகளின்
சின்னஞ்ச் சிறிய
வெட்ட வெளியுடன்
எப்படி
ஒப்பிட முடியும்?
மேல் என்றோ ,
கீழ் என்றோ
எண்ணுவதற்கு .
இடம் கொடுக்காத
பரிணாம வழிகளில்
மனிதாபிமானம்
வரையறுக்கப்படாமல்
தமக்கே உரிய
தனித் தனியான
தந்திரங்களை
வைத்துள்ளது
பிராணிகள் ..
பலியாகப் போகும்
ஜந்துக்கு
தப்பி வாழ்தல்
எவ்வளவு
முக்கியமானதென
அறிவுரை
சொல்லி முடிக்க முன்னர்
பலி எடுக்கும்
மிருகம்
தவற விட்ட
சந்தர்ப்ப்பம் பற்றி
கவிதை
எழுதித் தரச்சொல்லி
கேட்கிறார்கள்
மனிதர்கள்.
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 21.03.15.

கிரீச்சிடும் மொழியில்

சிட்டுக் குருவிகளுக்கும் 
எங்களுக்கும் 
இடையே
சினேகிதமான 
உரையாடல் 
கிட்ட வைத்து
நிகழ்வதற்கு
எந்த வாய்ப்புமில்லை...

ஒரு
மென்மையான
அனுபவமாக
அன்பை அழைக்கும்
கிரீச்சிடும் மொழியில்
அவைகள்
எதையும்
வலிந்து வலியுறுத்த
விரும்புவதில்லை...

இன்று
அதிகாலை
வரத் தவறியிருந்தால்
கோபிக்காமல் .
நேற்று வந்த
நினைவுகளைத்
மரங்களின் தளிர்களில்
ஒற்றி எடுத்து
அதில் வாழலாம்......

சிட்டுக் குருவிகளின்
சின்னச்
சிறகடிப்பு
அழகின் ஆசிர்வதிப்பில்
மொட்டுகள் மலரும்
அமைதியின் அனுபவம்
அதைக்
கவிதையாக
எழுத
சிறகை விரித்தால் போதும்
முழு வானமும்
உங்களுடையதாகிவிடும்.
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ 20.03.15

Friday 20 March 2015

நடிகனானேன் ....

வாழ்கையே ஒரு மேடைநாடகம் என்று நிஜமான உலகத்தில் அப்பப்ப வாழ்க்கை வெறுக்கும் போது இப்பவும் சொல்லிக்கொண்டு இருந்தாலும், என்னோட இளந்தாரி வயதில் , முன் அனுபவம் எதுவுமில்லாமல் இரண்டு நாடகத்தில் மேடையில் மேக் அப் போட்டு நாடக இயக்குனரிடம் திட்டு வேண்டிக் கொண்டு அடிவேன்டாத குறையாக நடிக்கும் வாய்ப்பு, அதுவும் அந்த இரண்டும் தற்செயலாகக் கிடைத்த சம்பவம் போன்ற ஒரு ரியல் அனுபவ சம்பவம் இன்று வரை வேறே எங்கேயும் கிடைக்கவில்லை.

                                அந்த இரண்டு நாடகத்தில், அந்த நாட்களில் கட்டுமஸ்தான தேகக் கட்டில் இருந்ததால் ,சீதாலட்சுமி சுயம்வரம் என்றதில் ஜெனகனின் வில்லை முறிக்க முயல வரும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் ஒரு ராசாவாக வரும் வேடத்தில் கொஞ்ச நேரமே வரும் அந்த ராஜா வேஷம் போட்டேன்.

                                      ரெண்டாவது நாடகத்தில், அதில பொம்புளையாக நடிக்க வேண்டிய நடிகர் சின்னமுத்து வருத்தம் வந்ததால் நடிக்கமுடியாமல் போக எந்த வித முன்னறிவுப்பு ஒத்திகை எதுவுமேயில்லாமல், இன்னொருவரின் மனைவியான கிளியோபட்ராவை ஜுலிய சீசர் கடத்திக்கொண்டு வந்து காதலியாக்கிய சம்பவங்கள் வரும் சேக்ஸ்பியரின் ஜுலிய சீசர் நாடகத்தில் நடித்தேன் 


                                    தமிழில் மொழிபெயர்த்துப் போட்ட நாடகத்தில், பிறசியருக்குள்ள தேங்காய் சிரட்டையை வைச்சு நெஞ்சை எடுப்பாக்கி, உயர்த்திக் கட்டிய கொண்டை போட்டு , நீண்ட மினுங்கல் ஒட்டிய கவுன் ஒன்றைக் கொழுவிக்கொண்டு அழகிய எகிப்து நாட்டு இளம் பெண்ணாகிப் பொம்பிளை வேஷம் போட்டு நடித்தேன். அதுதான்  உண்மைக்கு மேலே  உண்மை

                                       யாழ்பாணத்தில் எங்களின் அயலில் இருந்த வாசிக்கசாலையில் எங்களின் மதிப்புக்குரிய உள்ளுர்க் கவிஞ்சர் கந்தப்பு நாடகங்கள் போடுவார், அதிகம் தமிழ் புராண, சமுதாய , புரட்சி நாடகங்கள் போட்டாலும் சில நேரம் ஆங்கிலதில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நாடகங்களும் போடுவார். 


                              முக்கிய எவசில்வர் போன்ற பாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வேறு இடங்களில் மேடைகளில் நடிக்கும் நடிப்பு நல்லா தெரிந்தவர்கள், அலுமினியம் போன்ற சில்லறைப் பாத்திரங்களில் என்னைப்போல முன்னப்பின்ன அனுபவம் இல்லாத சின்னப் பொடியன்களை பின்னேரங்களில் ,வாசிகசாலை லைபிறேரியில் வைச்சுப் பழக்கிதான் கவிஞ்சர் கந்தப்பு

                                  " பல மேடைகளில் பிரகாசித்த, பிரமாண்டமான நடிகர்கள் நடிக்கும், இதுவரை யாருமே தொடாத எல்லைகளைத் தொடும் பிரமாண்டமான தயாரிப்பு "

                                         என்று விளம்பரம் போட்டுத்தான் நாடகம் மேடை ஏற்றுவார்.

                                   ஆனாலும் கவிஞ்சர் கந்தப்பு செய்த இதையும் சொல்லத்தான் வேண்டும் , கொஞ்சம் விளங்கிக் கொள்ள கஷ்டமான நவீன அங்கத ஸ்டைலில் பாதல் சர்க்காரால் வங்காள மொழியில் எழுதப்பட்ட ஏபங் இந்திரஜித் என்ற ஓரங்க நாடகத்தை பிறகொரு இந்திரஜித் என்ற மொழிபெயர்ப்பை தழுவி மேடை எல்லாம் இல்லாமல் வாசிக்கசாலை விளையாட்டு மைதானத்தில், அம்மசியா குளக்கட்டுடன் ஓரமாக நின்ற இலுப்பை மரத்துக்குக் கீழேயும், யதார்த்தமாக உங்களில் நாங்களும் ஒருவர் என்ற கொன்செப்டில் மேக் அப் போடாத நடிக்கர்கள் பார்வையாருக்கு இடையில் இருந்து எழுந்து வந்து நடித்து,மறுபடியும் பார்வையாளருக்குள் போய் இருக்கும் மொடேர்ன் அப்சற்ற்க் ஸ்டைலில் நாடகம் போட்டும் இருக்கிறார்.

                                               சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஸ்ரீராமனுக்கு நடித்தது எங்களின் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் ஸ்போர்ட்ஸ் மாஸ்டரா இருந்தவர். அவர் நல்ல உயரம், அவரோட இளவயதில் உயரம் பாய்தலில் வடமாகாண சம்பியன் . அவர் பாஞ்ச உயரத்தை பல வருடமா வேற யாருமே பாயவில்லை என்று சொல்லுவார்கள், அவர் குரல் அண்டங்காகம்  அடங்காமல்  சனிக்கிழமை கத்துவது போல இருக்கும், 


                                         ஆனாலும் அந்த நாடகத்தில் ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்  என்றால்   போலவே  ஸ்ரீராமச்சந்திரமூர்திக்கு பேச வசனம் இல்லை,அவரின் தம்பி லட்சுமணன் டப்பின் ஆர்டிஸ்ட் போல ஸ்ரீராமனுக்கு பக்கத்தில் நின்று சவுண்ட் கொடுப்பதால் நாடகம் முழுவதும் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் அந்த ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் அம்மாவாசை இரவு போல நல்ல கறுப்பு, அவருக்கு நிறையப் பவுடர் அடிச்சுதான் அயோத்திக்கே கொண்டுபோய் கவிஞ்சர் கந்தப்பு அந்தாளை ஸ்ரீராமன் ஆக்கின மாதிரி இருந்தது.

                                      ஆனால் சீதைக்கு நடித்த அழகான இளம் பெண் மதியாபரணம் டீச்சரின் மகள் பவானி. அவள் மேக் அப் எந்த சோடனைகளும் இல்லாமலேயே கம்பன் வர்ணிச்ச " தே மலர் நிறைந்த கூந்தல்; தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத் தாமரை இருந்த தையல், சேடி ஆம் தரமும் அல்லள்; " மாதிரி இருந்தாள்.

                                        டவுன் இங்கிலிஸ் பள்ளிக்கூடத்தில கெமிஸ்ட்ரி படிப்பித்துக்கொண்டு இருந்த சயன்ஸ் பட்டதாரியான மதியாபரணம் டீச்சர் எப்பவுமே தமிழ்,சைவ சமயம்,இலக்கியம் இதுகளில் நிறைய ஆர்வம் உள்ளதாலும், கவிஞ்சர் கந்தப்பு மேலே மதிப்பு இருந்ததாலும் , தன்னோட ஒரே மகள் பவானியை சீதாலட்சுமி சுயம்வரம் நாடகத்தில் ஜெனகனின் மகளாக நடிக்க விட்டா.

                                   பவானி நடிப்பது கேள்விப்பட்ட , அவளுக்கு அந்த நேரம் நூல் விட்டுக்கொண்டு இருந்த எங்கள் குளத்தடி குழப்படிக் குருப்பில் இருந்த வாக்குக் கண்ணால பார்க்கும் சின்னக் கண்ணன் வந்து தானும் அந்த நாடகத்தில் நடிச்சே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்க கவிஞ்சர் கந்தப்பு

                                     " டேய் நீ நாடகம் பார்க்கிற சனம்களைப் நேராப் பார்த்தா, உண்ட மண்டை கோணாலா போகுமே, காண மயில் ஆட கண்டிருந்த வான்கோழி ,,,, "

                                          என்று என்னமோ சொல்லி அவனை அடிசுக் கலைச்சு நடிக்க விடவில்லை. ஆனால் பவானி ,சின்னக்கண்ணனை மட்டுமில்லை ,எங்கள் ஊருக்குள்ள எல்லா இளையவர்களின், கனவிலையும் கலர் கலரா வந்து நித்திரையைக் குழப்பிக்கொண்டு மிகப் பிரபலமான அழகில் எல்லாருமே கட்டினால் அவளைக் கட்ட வேண்டும் இல்லாட்டி மொட்டையைப் போட்டுக்கொண்டு சாமியாரப் போக வேண்டும் என்ற மாதிரி ஒரு அலை அந்த நேரம் அடிச்சுக்கொண்டு இருந்தது உண்மை.

                                           ராமாயணத்தில் உள்ள எல்லாருக்கும் தெரிந்த கதையான சீதாலட்சுமி சுயம்வரம் நாடகம் கோசலையின் மைந்தன் தசரதனின் தனயன் ஸ்ரீராமன் , மிதிலை மன்னன் ஜெனகமகாராஜாவின் வில்லை வளைத்துக் காட்ட,ஆயிரம் வருசமா அதே ராமன்,அதே சீதைக்கு மாலை போடும் அரைச்ச தோசை மாவை ஆடுக்கல்லுக்கு குஞ்சரம் கட்டி சோடனை போட்டு அரைக்கும் நிகழ்வு. 


                                              அது பார்க்க கலியான வீட்டில் மணவறையின் முன் நடக்கும் அமளி துமளி போலவே பிண்ணனி திரைச்சீலையில் அரண்மனை அலங்கார மண்டபங்களின் நடுவில் நடப்பது போன்ற நாடகம், அந்த வில்லை முறிக்கும் காட்சியில் ஒரு பெரிய மரத்தால செய்த வில் வைச்சு இருந்தார்கள்,அந்த மரவில்லை ஸ்ரீராமன் இல்லை யாருமே முறிக்க முடியாது அவளவு பாரமான வில்லு,

                                         பிறகு எப்படி நாடகத்தில் ராமன் சிவதனுசு வில்லை முருங்கைக்காயை முறிக்கிற மாதிரி முறிக்க முடியும் என்று சந்தேகம் உங்களைப்போலவே எனக்கும் பன்னிரண்டு தேசத்து ராசாக்களில் கலிங்கத்து ராஜா வேஷம் போடும் போது இருந்தது,


                                                       அந்த வில்லில் ஒரு கொழுக்கி நடுவில் இருக்கு ,அதை கை விரலால் சுண்ட வில்லு ரெண்டா உடையும், ஸ்ரீராமன் மட்டும் தான் அந்தக் கொழுக்கியை விரலால் சுண்டிவிட வில்லு உடைய சீதாப்பிராட்டி விரலால் கொழுக்கியைச் சுண்டிய ஸ்ரீராமனின் ஆண்மையில் சரணடைந்து மாலையை சுயம்வரமாக கழுத்தில் போடுவா,இதுதான் கவிஞ்சர் கந்தப்பு கம்ப இராமயணத்தில இல்லை வால்மீகி ராமாயனதிலையும் இல்லாத அந்த வில்லை உடைக்கிற ஸீனில செய்து வைத்திருந்த உத்தி.

                                   அந்த நாடகத்தில் பன்னிரண்டாவதா வரும் ஸ்ரீராமன் தான் ஜெனகனின் வில்லை உடைக்கவேண்டும். ஆனால் நாடகம் தொடங்க முதலே எனக்கு அந்த வில்லில இருக்கிற கொழுக்கியை நினைக்கவே கை குறு குறுக்கத் தொடங்கி விட்டது,அதைவிட அழகாக சோடிச்சு மேடையில் மாலையுடன் நிக்கும்  பாவானியைப்  பார்க்க,,அடச்  சீ .. சீதையைப் பார்க்க உடம்பெல்லாம் இன்னும் ஜெனரேற்றர் வைச்சு இழுத்த மாதிரி கரண்ட் பாயத் தொடங்க,எனக்கு முன்னால் நாலு ராஜாக்கள் போய் அந்த வில்லை தூக்கி வளைப்பது போல நடிச்சு, அது முறிக்க முடியாத மாதிரி கீழே போட்டு நடிச்சு கவலையுடன் சீதையை பார்த்துபோட்டு வர ,

                                        " வில் கை வீரன் ராமன் நாம் எல்லாம் வெறும் கை வீரர், இதோ இப்போது கலிங்கத்து மன்னன் தன்னுடைய ஆண்மையைக் காட்ட வருகிறார்,வாருங்கள் கலிங்கத்து மகாராஜா "

                                         என்று சொல்ல நான் அஞ்சாவதாக குத்துச் சண்டை வீரன் முகம்மது அலி மேடையில் பாயிற மாதிரி நடு மேடை அதிர வில்லுக்கு மேலேயே பாஞ்சேன். கவிஞ்சர் கந்தப்பு கொஞ்சம் சந்தேகமாத்தான் என்னைப் கடைக் கண்ணால பார்த்தார்,என்னவோ திருகுதாளம் செய்யப்போறான் எண்டுறதை போல,

                                                  அதில பேசுவதுக்கு ஒரு வசனமும் எனக்கு இல்லை,அதால வில்லை எடுத்து கவிஞ்சர் கந்தப்பு சொல்லித் தந்த மாதிரி முறிக்கிற நடிப்பு விட என்னோட நடிப்பு அதிகமானதால் ,சீதை என்னைப் பார்த்துச் சொண்டில சிரிக்க, " மங்கையின் புருவம் வில்லாகும் நோக்கிய பார்வை அம்பாகும் மாமலை ஓர் சிறு கடுகாகும்... " என்ற பாடல் நினைவுவர ,என் விரல் தவறுதால கொழுக்கியில் தட்டுப்பட்டு வில்லு ரெண்டா உடைஞ்சு போச்சு, 


                                        சீதை குழம்பி மாலையை எனக்குப் போடவா என்று கவிஞ்சர் கந்தப்புவைப் பார்க்க , கவிஞ்சர் கந்தப்பு தலையில ரெண்டு கையையும் வைச்சுகொண்டு நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க, பார்வையாளர்கள் என்ன நடக்குது என்று விளங்காமல், ஒருவேளை இராமயணத்தை இப்ப மாற்றி எழுதிப்போட்டான்களா என்று நினைச்சோ என்னவோ விசில் மட்டும் பறந்தது.

                               கவிஞ்சர் கந்தப்பு உடன ஓடி வந்து திரையை இழுத்து ,

                                   " அண்ணலும் மேல் நோக்க, அவளும் சற்று கீழ் நோக்கஎன்னதுவோ நடந்துவிட இருவருமே நிலை தவற ,வானமது பூச்சொரிய வையகத்தின் வாழ்த்தொலிக்க நங்கையவள் மண வைபோகம் மங்கலமாய் நடக்கும் , நாடகம் இடைவேளைக்கு பிறகு தொடரும் "

                                         என்று சொல்லி முழு மேடையையும் திரைச்சீலை யால இழுத்து மறைசுப்போட்டு என்னட்ட வந்தார்,வந்து என்னோட காதைப் பிடிச்சு திருகி,

                                    " செம்மறி ஏண்டா ,,வில்லை உடைச்சனி, 


                                "  தெரியாமல்  கை விரல்  எகிறிப் போட்ட்டுது  ஐயா "

                          "    அது ராமன் தாண்ட்டா உடைக்க வேண்டும் ," 

                             " அப்படியா  பவானியை  பார்க்க  அவளை  யாரோ கொத்திக்கொண்டு  போறது  போல பயம்  வந்திட்ட்டுது "

                     "  அவள்  பவானி  இல்லையடா  ,,அவள்  சீதை  ,,ஜெனகனின்  மகள்  டா,,வால்மிகியின்  இலக்கிய  வடிப்புடா  அவள்  "

                                  "   மன்னித்துக்கொள்ளுங்க  ஐயா !"

                                 " விழுவானே இப்ப நாடகத்தை இடையில நிப்பாட்டி இன்னொருக்க தொடக்கவைச்சுப் போட்டியே,"

                                     "  மன்னித்துக்கொள்ளுங்க  ஐயா ,,இனி  நான்  இப்படி வில்லை  உடைக்க  மாட்டேன்  ஐயா 
                              
                                           " எத்தினை சனம் நீ வில்லை உடைச்சதைப் பார்த்துதுகளோ தெரியாது,ஏண்டா கழுதை வில்லை உடைச்சனி " எண்டு திட்டினார்,

                               நான் சீதையைப் பார்த்துக்கொண்டே

                                          " அய்யா தெரியாமல்,விரல் அந்த கொழுக்கியில தட்டுப்பட ,வில் உடைஞ்சு போச்சு,என்னை மன்னிச்சுக்கொள்ளுங்க அய்யா,நீங்க தானே நானே நடிக்கத் தெரியாது எண் டு சொல்லவும்,என்னோட உடம்பு பொலிவைப் பார்த்து ராசாவுக்கு நடிக்க வற்புறுத்தி பழக்கிநீங்க " 


                                                  என்றேன் .கவிஞ்சர் கந்தப்புக்கு கோபம் வந்திட்டுது,

                                  " அடே விழுவானே நான் வில்லு உடைக்கிற மாதிரி நடிக்க எல்லாட பழகினன்னான் ,நீ ஏண்டா விழுவானே கொழுக்கியை இழுத்து சனத்துக்கு முன்னால பரிசு கெடுத்துப் போட்டியே, "

                                        என்று திட்டினார்,நான் சீதையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன், அவளும் மாலையை ஒரு ஓரமாக வைச்சுப்போட்டு கவலையோட இருக்கிற மாதிரிதான் இருந்தாள்.

                  அதுக்கு பிறகு,

                                       " ஆயிரத்தின் யானை பலம் படைத்த அசுரக் கோன் , அண்டை தூர தேசம் சேர்ந்த அமர்ந்த வீர மன்னர் வலிமை வீரம் தீரம் நிறைந்த புவியறிந்த வல்லவர் கலிங்கத்து ராஜா வில்லை உடைக்க முயற்சித்து முடியாமல், அந்த முயற்சியில் தன்னோட நாரியை முறிச்சுக்கொண்டு போய் விட்டார் "

                                என்ற கவிஞ்சர் கந்தப்புவின் அறிவிப்போடு, மேடையின் திரை விலக ஆறாவது ராஜா மேடையில் போய் வில்லை உடைக்க முயற்சிப்பதில் இருந்து நாடகம் தொடர்ந்து நடக்க ,நான் நல்லா நாரியை நிமிர்த்திக்கொண்டு, கலிங்கத்து ராஜா சோடனை எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு மேடையின் பின் பக்கத்தால குதிச்சு போக வெளிக்கிடும் போது,சீதையை பார்த்தேன் அவள் அப்பவும் கையில மாலையோடு கடைசியில் ஸ்ரீராமன் வந்து கொழுக்கியை சுண்டி வில்லை உடைப்பதுக்கு காத்துக்கொண்டு இருந்தாள்,நான் அவளுக்கு சிக்னலில்

                                  " உது சரி வராது பவானி , நான் வில்லை எப்படி ரெண்டா மடக்கி உடைச்சு முறிச்சேன் எண்டு பார்தனி தானே பவானி , பேசாம வா பவானி ஓடிப் போவம் பவானி "

                                    எண்டு கேட்டேன் ,அதை கவிஞ்சர் கந்தப்பு மேடையின் ஓரத்தில் இருந்து கண்ட்டுடு மறுபடியும் நரி போல பல்லை நற நற என்று நெரிசுக்கொண்டு என்னைப் பார்க்க தொடங்கவே நான் சத்தமில்லாமல் வீட்டை போட்டேன். எப்பவும் போல அந்த நாடகம் 


                                                 " பாவையின் பார்வையில் கூர்மையாய் ஒன்று வில்லது விழுந்தது துண்டுகளாய் இரண்டு எட்டடியில் எழில் சுமந்த அழகின் அவதாரம் சொட்டும் அழகில் நிறைந்த சீதையை மணந்தான் திக்கெட்டும் புகழ் நிறைந்த சக்ரவர்த்தி திருமகன் " 

                                                     என்று குடுத்துவைச்ச ஸ்ரீராமன் கொழுக்கியை விரலால் தட்டி சிவதனுசு வில்லை உடைச்சு சுயம்வரம் நடந்து முடியும். அது எல்லாருக்குமே தெரிந்த முடிவுதான்.

                                                   அதுக்குப் பிறகு நாடகம் நடிக்கிறது மட்டுமில்லை,,சும்மாவும் வாசிகசாலைக்கு வம்பளக்கவும் போறதில்லை,ஆனால் எப்படியோ மறுபடியும் கவிஞ்சர் கந்தப்பு போட்ட ஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,ஆனால் அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி ,,,,,போன நேரம் ஒரு ரோட் சைட் ரோமியாவால் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவத்தின் பின் நாடகம் நடிப்பதை அடியோடு விட்டேன், ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தைப் பிறகு எழுதுறேன் 


Thursday 19 March 2015

நாட்டு நடப்புகளின் பேச்சுத்துணை..

அடம் பிடிக்கும்
அவலங்களைச்  
தள்ளி வைத்து விட்டு
நட்பாகச் 
சந்திக்கும் ஒரு 
ரகசிய புள்ளியில் 
கலவரமான 
நவீன கண்டு பிடிப்புக்களின் 
நடமாட்டமில்லாத 
ஊரின் 
பொழுது போக்கு 
நாட்டு நடப்புகளின் 
பேச்சுத்துணை..

எண்ணங்களை
எதிராகப்   பார்க்கும் 
கருத்துக்கள் 
வேண்டுமென்பதுதான் 
லட்சியமென்றாலும் 
குறைந்த பட்சம்
ம் ம் ம் என்று 
ஒத்துக் கொண்டே
பதிலைக் 
விட்டுக் கொடுத்துவிட்டு  
அமர்ந்து விடுகின்றனர்.....

அடிப்படையில்
இடிந்து போன 
அன்றாட வாழ்க்கையை 
தாயக்கட்டை உருட்டி 
விளையாடி 
ஆளுங்கட்சியும் 
எதிர்கட்சியும்
அவர்களின்     
அப்பாவித்தனத்தைத் 
வாக்குகளில் 
பங்கு போட்ட போதும் ....

செய்திகளில் 
எழுப்பப்படும் 
சில ஓங்கிய குரல்களுக்கு
வெள்ளாந்தியான 
மனிதர்களின் 
ஒற்றுமையைப் 
பதிலாக்க 
முடிந்ததென்று 
சந்தோஷப்பட்டுக்கொண்டே 
கிராமங்கள் 
சொர்க்கங்களை 
மறைத்து 
வைத்திருக்கிறது.
                                         
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 19.03.15

///இந்த வாட்டர் கலர் ஓவியம் ,,புகழ் பெற்ற ஓவியர் ராஜ்குமார் சேதுபதி துரிகையில் வரைந்த அன்றாட மனிதர்கள் என்ற தொகுப்பில் பார்த்த போது இப்படி வரிகளில் எழுதத் தோன்றியது///.

Wednesday 18 March 2015

நெஞ்சோடு பதிவு செய்தாய்..

வாடைக் காற்றுக்கு
வாழ்க்கைப்பட்ட
மணக் கோலம்
முடிய முன்னமே
அடங்க மறுத்து 
புறப்பட்டுக்கொண்டிருந்த
அழுக்கான
செம்மண் புழுதியில்....
அவசரத்தில்க்
குறுக்க வந்த மாதிரி
மேகங்களின்
நிறைவேறாத
ஆசையின்
கோபம் போல
நேரம் கெட்ட நேரத்தில்
அழுதுகொண்டே
இறங்கியது
கோடை மழை,
ரசிக்கத் தெரியாமல்
சேற்றில் விளையாடி
வெள்ளம்
போட்டு முடியாத
நீர்க் குமிழிகளைத்
தேடித் தேடி
உடைத்தேன்
நான்.....
கைகளை
முடிந்தவரை
அகலமாக்கி
வான் நோக்கி
விரித்து
முகத்தில் விழுந்து
கன்னத்தில் வழிந்த
துளிகளை
துடைக்க மனமிலாமல்
நெஞ்சோடு
பதிவு செய்தாய்
நீ
பிற்காலத்திலும்
மழைக்கு
குடையாகவும்
வெயிலுக்கு
செருப்பாகவும்
நீ
காத்திருக்க
அலட்சியத்தோடு
அலைந்தே
புயல்களை விலைக்கு
வேண்டி
வீணாகிப் போனேன்
நான்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 17.03.15

Tuesday 17 March 2015

1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன்..

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவின் ,முக்கியமான வீதியான கால்ஜோஹான்ஸ் காத்தாவில் உள்ள இந்த சிலை ,1940 இல் இருந்து 1945 வரை தொடந்து ஐந்து வருடம் நோர்வே தழுவிய சைக்கிள் மிதிப்புப் போட்டியில் முதலாவதாக வந்த குன்னர் சொன்ஸ்டபிசன் என்ற இந்த வீரனின் சைக்கிகிள் சம்பியன் ஓடின 1940 ஆண்டு மொடல் ரேஸிங் சைக்கிளுடன் நிக்கும் வெண்கலச் சிலையைச் சென்ற கிழமை சாம்சுங் கலக்ஸ்ஸி என்ற என் மஹாலட்சுமி போன்ற மொபைல் போனில் எடுத்தேன்.
                                         நோர்வே அரைவாசி வருடம் குளிர் உயிரை எடுக்கும் நாடு,கோடைகாலத்தில் மட்டும் சைக்கில் ஓடலாம், அதைவிட ஒஸ்லோ நகரம் வாழ்க்கை போல மேடு பள்ளம் அதிகம் உள்ள பிரதேசம், ஆனாலும் என்னைபோல இங்கே சைக்கில் ஓடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்,கோடையில் வீதிகளில் வயது,பால் வேறுபாடு இன்றி இந்த இரண்டு சில்லு இரும்புக் குதிரைகள் பாய்ந்து போவது இயல்பான காட்சி.
                                          கழுத்தில கமராவைக் கொழுவிக்கொண்டு திரியும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர் " போலப் பல படங்கள் சரிஞ்சு சுழண்டு, நெளிஞ்சு சுழண்டு ,உருண்டு பிரண்டு ,விழுந்து கிடந்தது பரதநாட்டியம் ஆடி இந்த ஒரு சிலையையே ஒரு மணித்தியாலம் பல கோணங்களில் ,முன்னால ,பின்னால ,பக்கவாட்டில் , என்று பாலு மகேந்திரா போலக் கனவு கண்டு கேவலம் என்னோட மொபைல் போன் கமராவில் எடுத்தேன். அதில வந்த ஒரு நல்ல " டைமென்சன் டீட்டேயில் ", " கொன்ச்பெட் டெப்த் " என்று " ப்ரோபோசனல் ஸ்டில் போட்டோ கிராபர் " சொல்லும் விசியங்கள் தற்செயலாகப் பின் பக்கமாக எடுத்த நிலையில் கமராவிற்குள் அகப்பட்ட படம் இது என்று நினைக்கிறேன்.
                                      நேற்று பெய்த இலற்றோனிக் தொழில் நுட்பம் மழையில் இன்று எங்கள் உள்ளங்கையில் உள்ள இன்றைய டிஜிட்டல் உலகத்தில், காளான்கள் போல முளைச்ச இன்பில்ட் கமரா உள்ள மொபைல் போன் வந்தபிறகு தவிச்ச முயல் அடிச்ச நிண்டவன் வந்தவன் போனவன் எல்லாரும் போட்டோக்கிராபர் போல படங்கள் தாறுமாறா கிளிக் கிளிக் என்று கிளிக்கோ கிளிக்கி , அதுகளை வளவுக்குள்ள ஆரும் வரலாம் ஆரும் போகலாம் என்று படலை திறந்து விட்டுக் கிடக்கும் சமூகம் வலை வீசிக்கொண்டிருக்கும் இன்டர்நெற்றில் எல்லாருக்கும் வேலிக்கு மேலால போட்டுக் காட்டி " பழைய பொஞ்சாதி கை வெல்லத்தைப் பார்க்கிலும் புதுக் காதலியின் கைத் தவிடு ருசிபோல " அமர்களமாக்கி அதிர வைக்கிறார்கள்.
                                       என்னதான் நாங்கள் படம் எடுத்தாலும் ,பல வருடமா புகைப்படக் கலையைப் படித்து, கைகளால் கமராவின் கழுத்து லென்ஸ்சைத் திருகித் தூரம் பார்த்து, தொட்டுத் தடவி எட்ட வைச்சுக் கிட்டப் பார்த்து பிரேம் பிடிச்சு ,உள் நுழையும் ஒளியின் அளவை அப்பாச்சரில் அளந்து விட்டு , கமரா கண்ணடிக்கும் சட்டர் பீட் வேக இமைகளைச் சரி செய்து, நிழல்களால் கமராவின் விழிகளுக்கு மஸ்காரா மை பூசி , நிறங்களைத் தேர்ந்தெடுத்து லிப்ஸ்டிக் தடவி, பளிச் பளிச் என்று பிளாஷ் மின்னல் அடிச்சு , மழை பெய்த மாதிரி விரல்களால் ரீலோட் செய்து " மனுவல் செட்டிங்கில் " உண்மையான கலை அம்சமுடன் ஸ்டில் படங்கள் எடுக்கும் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோ கிராபர்களின் " கலைப்படைப்புகள் செலுலோயிட் திரையில் இல் விழுவது போல தலைகீழாக நின்றாலும் நம்மைப் போன்ற அரை அவியல்களால் அவர்கள் போல சொல்லிவைச்சு எடுப்பது கஷ்டம்தான்.
,
.

Monday 16 March 2015

ஸ்காபுரோ பெபையர் - ஆற்றம்கரையின் அலை

பருவ வயதில் அடக்கி வைக்க முடியாமல் பாலுணர்வு ஹோர்மோன்கள் தொடக்கிவைக்க மன்மதனின் ஐந்து பாணங்களும் பாயும் நேரம் உலகம் எங்கும் காதலர்கள், தங்கள் காதலை ஆண் பெண்ணிடமோ,அல்லது பெண் ஆணிடமோ சொல்லும் விதங்கள் ஏறக்குறைய நாடுகளின் எல்லைகளைத் தாண்டியும் ஒரே மாதிரி தான் ரொமாண்டிக் கலந்த எதிர்பார்ப்புகளுடன் இருக்குது,
                                           16 வயதினிலே படத்தில வரும்" செந்தூரப்பூவே செந்துரப்பூவே " பாடல் எவளவு காதல் விரகதாபத்துடன் தென்றலைத் தூது விட்டு ஒரு செய்திக்குக் காத்திருக்கும் ஒரு இளம் கிராமத்துப் பெண்ணின் ஏக்கத்தை சொல்லுதோ அதே போல, Scarborough Fair என்ற இந்த ஸ்கொட்லாந்து நாடுப்புற நாட்டார்பாடல் மத்தியகால ஆங்கிலத்தில சொல்லுது. அவளவுதான் வித்தியாசம்,
                                            மற்றப்படி ballad ஸ்டைலில் இருக்கும் இதன் தாளநடையை பலர் பலவிதத்தில பாடியுளார்கள் ,முக்கியமா இதன் வாசனங்கள் "typical of the middle English period " ஆங்கிலத்தில் இருக்கும் இந்தப் பாடலை செல்டிக் யாழ், செல்லோ வயலின் , தம்பரின் போன்ற வாத்தியங்களுடன் ஐரிஸ் மக்கள் பாடுகின்றார்கள். இந்தப் பாடலில் வரும் .Between the salt water and the sea strand என்ற வரியில் வரும் strand என்ற சொல்லு நோர்வே நாட்டு நோர்க்ஸ் மொழியில் உள்ளது அதுக்கு அர்த்தம் கடல்,ஆறு போன்றவற்றின் கரை 
                                    ஒரு கிராமப் பெண்ணின் மீது காதலில் விழுந்த ஒரு இளைஞன் ,அந்தப் பெண்னின் காதலை ஏற்றுக்கொள்ள கொஞ்சம் "நடைமுறைக்கு ஒத்துவராத " செயல் ஒன்று அந்தப் பெண் செய்து காட்ட வேண்டும் எண்டும் , "தனக்கு ஒரு ஹம்பரிக் ஷர்ட் தைத்து தரவேண்டும்,ஆனால் அதில துணிகள் வைத்து இனைக்கக்கூடது ,அப்புறம் அதை தண்ணி இல்லாத கிணத்தில தோய்த்து தரவேண்டும் எண்டு , வில்லங்கம் பிடிச்சு " கல்லில நார் உரிச்சுதா " அப்பத்தான் உன் காதலை ஏற்றுக்கொள்வேன் இளம் பெண்ணே என்பதுபோல சொல்லூறான்.
                                         சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் அந்தப் பாவப்பட்ட இளம்பெண்ணும், தான் அதுகள் எல்லாத்தையும் செய்துவிட்டேன், " Scarborough Fair, சந்தைக்குப் போகும் Parsley, sage, rosemary, thyme என்ற வாசைனை இலை,குழை ,தளைகளே, என் கண்ணாளன் சொன்ன எல்லாத்தையும் நான் செய்துவிட்டேன், என் கண்ணாளனை கண்டால் வீட்டுக்கு வீடுக்கு வந்து என்னை கலியாணம் செய்ய சொல்லுங்க " என்று," tell him to come and he'll have his shirt And he shall be a true love of mine " என்று மனம் உருகி, வஞ்சகம் இல்லாமல் கிராமியத்தனமாக ஆற்றம்கரையில் அலைபாய்ந்து தூது விடுகின்றாள ,
                                       அந்தக் கண்ணாளன் வந்து கலியாணம் காட்டினானா ,அல்லது திருநெல்வேலி இருட்டுக்கடை "அல்வா" கொடுத்திட்டுக் கம்பி நீட்டிணாணா எண்டு இந்தப் பாடலில் இல்லை. எனக்கும் ஐரிஸ் மொழி வரலாறு தெரியாது. ஆனால் இதுவும் காதவர்ராஜன்-ஆரியப்பூமாலை தமிழ் வரலாற்று காதல் நாடகம் போல, ஒரு தொடர் நாடகமாக middle English period இல் இருந்திருக்காம்.
                                            எனக்கு மிகவும் பிடித்தபாடல் "Scarborough Fair" என்பதால் மிகவும் மனதிருப்தியாக சில வருடங்களின் முன் " pan flute " என்ற லத்தின் அமரிக்க பழங்குடியினர் வாசிக்கும் புல்லான்குழல் போன்ற காற்று வாத்தியத்தில் அவர்கள் வாசித்த, CD ஒன்று வாங்கி இருந்தேன் ,அதில இந்த பாடலும் இருந்தது ,அதை எப்போதும் கேட்பேன் , பஸ்சில ,ட்ரெயினில் வேலைக்கு போகும்போதும் வரும்போதும் சக்கரவள்ளிக் கிழங்குபோல சிகப்பாக இருக்கும் இளம் பெண்களைக் கண்டாள் சத்தமில்லாமல் வாயிற்குள் " ஹம் " பண்ணிப் பாடுவேன்.
                                முக்கியமா உலகப் புகழ் பெற்ற பாடகர் டேவிட் வித்தாகர் என்ற ஜெர்மன் நாட்டு பாடகர் பாடிய வேர்சனும் என்னிடம் இருந்தது, அதில இருந்து கிளாசிக்கல் இசை நுணுக்க ஐடியாவை உருவி எடுத்து , இந்தப் பாடலை நானே பிண்ணனி ரிதம் கிட்டார் வாசித்து,சின்னமேளம் வாசித்து  கிளாசிகல் ஸ்டைலில் , அக்கொச்டிக் கிட்டாரில முடிந்தளவு ஒரு " கிளாசிகல் பிங்கர் பிளக்கிங் ஸ்டைல் " என்ற இசைக்கும் முறையில் விரல்களால் மீட்டி கிட்டாருக்கே நோகாமல் நானும் வாசித்துள்ளேன்
https://www.youtube.com/watch?v=TmBNkO4w2Ac

Sunday 15 March 2015

விழுந்த பூக்களின் வாசம்..

புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத 
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
கவிதைத் தொகுதி.....
சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....
புயல்
வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு .
உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..
மலர்களின்
அவல
ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.
.

வர்ஜீனியா நிக்கலோய் நிங்கி ...புத்தம் புதுக் காலை!

இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி (வர்யீனியா நிக்கொலோய்(?) ) இளையராஜாவின் ஒர்க்ச்றாவில் என்பதுக்களில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த எங்கள் இளைய ராஜாவின் ரேக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவா , 

வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டேர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவா , தமிழ் நாட்டு சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் எண்டு கேட்டு இருக்கிறா.

அந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களின் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராச் ராஜாவுக்கு ஒர்க்ச்றாவில் புல்லங்குழல் வாசிதவர்கள் இருந்தும் , இளைய ராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார் ,

அதில் "அலைகள் ஓய்வதில்லை " படத்தில் வரும் "புத்தம் புது காலை வரும் " பாடல், "மூன்றாம் பிறை" படத்தில் சுதாகருடன் சேர்ந்து " பூங்காற்று " என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றா ." ஜானி " படத்தில வார ராஜாவின் "ஆசைய காதில தூதுவிட்டு " பாடலில் நின்கி ,ராஜா கொடுத்த நோட்ஸ் சோடா தன்னோட கொஞ்ச நோட்ஸ் இசையையும் இனைதாவாம், ராஜ சிரிச்சுப் போட்டு ,ஒண்டும் சொல்லவில்லையாம் .

ராஜாவின் ஆஸ்தான புலான்குழல் ஆர்டிஸ்ட் களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவாவிடம் இருந்து கற்றதா ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்,

அந்த " நின்கி என்ற female classical flautists வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடையவன் " எண்டு ஒரு TV பட்டியில் சொன்னார் . நின்கி "one of the top 10 Flutists at that time" என்ற "லெவலில் " தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புலான்குழல் இல் தமிழ்நாடில கலக்கி இருக்குறா !

நின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெகார்டிங் தொடங்கமுன் ,மற்ற ஒர்கேச்டிரா வாத்தியகாரர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த "நோட்ஸ்" களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து பிரக்டிஸ்ட் பண்ணிக்கொண்டு இருந்தபோது, நின்கி அவாவோட புலான்குழல் " ஸ்கோர் நோட்ஸ்" ஐ இளையராஜவுக்கு உடனையே,அழுத்தம் திருத்தமாக,வாசித்துக் காடிப்போட்டு பேசாம,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பாவாம், சிலநேரம்" ரெகார்டிங் ஸ்டுடியோ"வுக்கு வெளியபோய் ,சின்னப் பையன்களுடன் "பல்லாங்குழி" விலாயாடுவாவாம்.

நின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய,உயரமான பெண்மணி, மசால் தோசை , சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்டுவாவாம் ,இந்திய தமிழ் கலாசாரப்படியே இளையராஜாவின் ரேகொர்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி , சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் ரேச்ர்டிங்குக்கு வருவாவாம் !

நின்கி "தான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் " எண்டு அவாவோட இளையராஜாவின் ஆர்கிஸ்ராவில் வாசித்த இசைகலைஞ்சர்களுக்கு சொல்லி சிரிபாவாம் ,

நின்கி ஒரு கட்டத்தில ராஜாவின் ஆர்கேச்ற்றாவில் இருந்து விலத்தி,பழையபடி ஹொலண்ட் போயிட்டா ,காரணம் ஒரு சக தமிழ் இசைகலைஞ்சரை காதலித்ததாகவும் , ஏற்கனவே திருமணமான அவர், நின்கிங்கு பொய் சொல்லி அவாவை "பயன்படுத்தியதாகவும்" சொல்லுறார்கள்(?), சரியா தெரியாது!

நின்கி என்ற வர்ஜினியா நிகொலோய் என்ற இந்த ஹோலந்த் ( நெதர்லாந்து ) நாட்டு வெள்ளைகாரி தமிழாநாடு வந்து ,தமிழ் சினிமாவில், இளையராவின் இசையிட்கு புல்லாங்குழல் வாசித்தது அந்த மூங்கில்கள் தவம் இருந்து செய்த புண்ணியதின் பலன் ,வேற என்ன?............

ஒரு கட்டத்தில் யாருக்குமே தன் அடையாளத்தை சொல்லாமல் ,தமிழ் சினிமா இசையில் தன் பங்களிப்பை பதிவு செய்த நின்கி என்ற வர்யீனியா நிக்கொலோய் ஒரு தடயமே இல்லாமல் ஐரோப்பா போய் ,தன் தாய் நாடு ஹொலண்டில் நோய் வாய்ப்பட்டு இறந்துபோய் விட்டதாகவும் சொல்லுறார்கள் !
.


நாவுக் அரசன்
ஒஸ்லோ.

Saturday 14 March 2015

அலங்கார நகரம்..

எழுதுவதுக்கு எதுவுமே இல்லாத நேரத்தில் என்னத்தை இழுத்துப் பிடிச்சு உக்கார வைத்துக் கவிதை எழுதுவது என்று வெறுப்பாக இருக்கும். சில நாட்கள் முன்னர் நடுவிரவில் வேலை முடித்து வரும் போது என்னோட அப்பார்மென்ட் உள்ள கட்டிடத் தொகுதி, அதுக்கு உள்ளே போகும் நிகழ்வு,போன உடன கொம்புடரை திறந்து பார்ப்பது, அலுத்துப்போய் கிட்டாரை கையில் எடுத்து ரெண்டு தட்டு தட்டுவது, அதுவும் அலுத்துப்போய் தலைமாட்டு கால்மாட்டு தெரியாமல் சுருண்டு கட்டிலில் விழுவது போன்ற சுவராசியமற்ற எப்பவுமே நிகழும் சம்பவத்தை கவிதை மொழியில் எழுத முயற்சிக்கலாமே என்று தோன்றியதின் துன்ப விளைவே இது....
.
மனிதர்கள் 
கவனிக்க மறந்தாலும் 
தன்னுடைய 
பிரகாசமான பக்கத்தை 
மட்டுமே உலகிற்குக் 
காட்டுகிறது 
மாடிக் குடியிருப்புக் 
கட்டிடம்.. 

வெளிக்கதவைத்
அலட்சியமாகத் 
திறந்து 
உள் நுழையும் போதே 
வெளி உலகம் 
கலந்துரையாடலிருந்து 
விடைபெறும்... 

படிகளில்
வலுவாகக் காலுன்றி 
மேலேற 
மனசாட்சியோடு 
பேசிக்கொண்டே 
சந்தோஷங்கள் 
மெதுவாக
படிப்படியாக 
கீழிறங்கி விடும் 

உள்க் கதவில் 
திறப்புப் போட 
உறவுகள் 
வெளியே தள்ளப்பட்டு 
சமாளிப்பு 
மறுபடியும் குறுக்கு 
வழியிலே 
மவுனம் சிந்தும்... 

இதயம் முழுவதையும் 
காதலுக்காக 
கண்ணீரால் நிரம்பிவிட்டு 
ஜன்னல் வழியாகப் 
புன்னகை 
செய்து கொண்டிருக்கும் 
அலங்கார நகரம் 

பொய்யான 
வலைச் சமூகத்தால் 
வளர்க்கப்பட்ட 
கணனியின் 
திரையைத் திறத்தாலும் 
நாலு பேர் 
உருவாக்கியுள்ள 
நாடகத்தில் 
யாருமே தமது 
இதயத்தைத் 
திறப்பதில்லை.....

கிட்டாரில் 
எதோவொரு பாட்டை 
ஏதோவொரு மெட்டில் 
வாசிக்க 
அடைத்து நிரப்பி 
மெல்லிசையாக மாறி 
விழிப்புணர்வு
நின்றுவிட

சோம்பலோடு 
அமைதியில் தள்ளாடும் 
உலகத்தை 
நமக்கேற்றபடி 
நிர்ப்பந்தப்படுத்த முடியாமல் 
இரவு 
முழுவதும் 
காணாமல் போய்விடும்.
.நாவுக் அரசன்
ஒஸ்லோ 13.03.15