Thursday 14 December 2017

எதார்த்த உலகம் .

நம்மை அண்மித்து பார்க்க ஏதுவான  சுற்றுவட்டார அவதானிப்புகளில் கிடைக்கும் அனுபவங்கள் கவிதையாகும் போது கூடுதலான எதார்த்த உலகம் ஒன்றை அது சிரிஸ்டிஸ்த்து விடும். என்ன அந்த அவதானிப்புகளை அப்படியே உள்ளபடி எழுதினால் சப்பென்று பத்திரிகை நேரடி ரிப்போர்ட் போல வரும், அப்படி எழுதாமல் அதில் கொஞ்சம் வார்த்தைச் சித்துக்களை செய்து, கவிதைமொழி கலந்து, பரிமாணங்களை உடைத்து, இன்னொரு தளத்தில் உணர்வுகளை சடப்பொருள்களுக்கும் கொடுத்து விட்டு, அதிகம் அல்லாடாமல் சுருக்கமாக வரிகளில் வாசனைகள் தடவி,  எழுதினால் ஓரளவு நல்ல கவிதைகள் வரலாம் என்று எப்போதும் நினைப்பது.


                                                      என்னால் அப்படி எழுத முடியுமா என்பதே ஒரு பரிசோதனை முயட்சிதான். என்னோட இன்றைய வாழ்க்கைநிலை நிறைய நேரம் பிரயாணம் செய்யவும், திசைகள் இல்லாமல் அலையவும் இடைவெளிகள் தந்துள்ளது. அப்படியான சந்தர்ப்பம்தான் அதிகம் எழுத வைத்தது. என்ன இது ஒரு ஸ்கண்டிநேவிய என்ற வடக்கு  ஐரோப்பிய நாட்டின் அன்றாட வாழ்வியலோடு சம்பந்தப்பட்ட்து ,இங்குள்ள காலநிலை, மனிதர்கள், அவர்களின் பழக்கவழக்கம், கலாச்சாரம் இதுகள் அதிகம் தெரியாதவர்களுக்கு  கொஞ்சம் விளங்க  இலகுவாக இருக்காது. எப்படியோ மனித உணர்வுகள் நாடுகளின் எல்லை கடந்து ஒன்றேதான் . . .
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
.
விறைப்பாக
நகரத்தை ஊடறுத்து
படுத்துக்கிடக்கிறது நடைபாதை,
முட்டாக்குத்துணியால்
தைலையைச் சுற்றி இழுத்துவிட்ட ...
ரோமேனியா
நாடோடிப்போன பெண்
முகமெல்லாம் ஜோசிக்கிறாள்,
அவளருகில்
அவள் காதலனாய்தான் இருக்கவேண்டும்
ஆனந்தமாய்
எக்கோடியன் வாசிக்கிறான்,
ஊரோடு பஞ்சம்வந்ததென்றவள்
அப்பாபோலிருக்கும்
புஸ்திமீசைக் கிழவன்
குரலெடுத்துப் பாடுகிறார்,
விறைத்துப்போகிறது
மூக்கை நுழைக்கும்
ஆகஸ்ட்மாதக் குளிர்காற்று,
பிரியோஜசனமில்லாத மனிதர்கள்
பட்டனத்துப் பவுசுவில்
சாதாரணமாக ஓரமாகிறார்கள்,
தயங்கிநின்றபடி
அம்மச்சியாகுளத்தடிப்
பீநாறிமரத்தின்
பூவாசங்கள் சேர்ந்துகொள்ள
நான்தான்
அந்தப் பாடலின் மெட்டுப்பற்றி
அதிகமதிகமாய் மோப்பம் பிடித்தேன்
அது
தற்கொலைச்சிந்து போலிருந்தது. !

.
....................................................................
.
பெண்களின்
நவீன உள்ளாடைக்கடைக்
காட்சியறையில்
அந்தரங்க
அழகுப் பிரமிப்புக்களை
" ஆ " வெண்டுபார்த்து விரும்பி
விழுங்கியபடியே கடப்பவன்
சமநிலையிழந்து
அங்காடி முனையில்
திரும்ப மறந்து
வெள்ளைச் சுவரோடு
முகமோதுகிறான்
அவன்
நேராகத்தான் நடந்துபோனான்!
பிரமிப்பு
எண்ணமெல்லாம்
அந்தரங்கமாகக்
குறுக்குவழியில் போயிருக்கலாம் !
.

................................................................
.
எனக்கும்
அந்த இளையவளுக்குமிடையில்
நேருக்குநேர்
ஓரக்கண்பார்வைகள்
தர்ப்பூசனிப்பூ நிறக் கூந்தலைக் ...
கற்றை பிடித்து காதிலிருந்து
நிலவு முகமெல்லாம்
சடை விழுத்திவிடுகிறாள்
நீலக்கண்களில்
நீண்டு விரிந்த ஆயாசம்
நிலத்தடி ரெயில்
உறுமிக்கொண்டு வேகமெடுக்குது
பிறகு
அள்ளி முடித்துப் பின்னுக்கு
தள்ளிவிடுகிறாள்
பூர்விகக் கன்னங்களை
அநாதரவாக விட்டுவிட்டுச் செல்வதில்
குற்ற உணர்வு இல்லை
நிலத்தடி ரெயில்
தாகமாக வேகம்குறைக்குது
மறுபடியும்
வெண் நடுவகிடு கோதி
முகமெல்லாம் பரப்பிவிடுகிறாள்
போதாமையை உணரச்செய்யும்
நெற்றி அசைவின்றி உறைந்து கிடக்குது
நிலத்தடி ரெயில்
விக்கல் எடுத்தமாதிரி குத்துது
இப்போது
வாஞ்சையுடன் தழுவிக் கொள்கிற
சில கற்றைக் கூந்தலை
வாசனை முகர்ந்து பார்க்கிறாள்
அலைவுறுவதையே விரும்பி
கைவிட்டு புறப்படும் உக்கிரம் கொள்கிறது
அந்தக் கனதிநிமிடம்
நிலத்தடி ரெயில்
ஊஞ்சல் போல ஆடிக்கொண்டு அசையுது
மறுபடியும்
பின்னோக்கி தள்ளி விழுத்தி
மேகங்களைத் தொட்டுவிட முயல்கிறாள்.
அதை மகிழ்ச்சியாக மாற்றுகிறவள் .
எதையோ இணைத்துவிட்டதில் திளைக்கிறாள்
நிலத்தடி ரெயில்
நிறுத்தமொன்றை தேர்வுசெய்கிறது
நான்
என் இருக்கையிலிருந்து எழுந்து
நகரத் தொடங்குகிறேன்

.
........................................................................................
.
வயதானவர்
சுங்கான் புகைத்தபடி
அலைபேசும் இளம்பெண்னில்
இச்சைகளை அவிட்டுவிட்டு
தன்
இளமைக்காலத்தோடு
மீள் ஒப்பீடுசெய்கின்றார்
இறுக்கிப்பிணைக்கப்பட்ட
நார்த்தடத்தின் இழுப்புமுனையில்
அவரின்
குட்டிநாய்க்குட்டி
மறைவான புதர் நுழைந்து
பின்னம் கால்களை அகட்டி
அடக்க ஒடுக்கமாக
மூத்திரம் பெய்கிறது !
.
...................................................................................
.
இருள் கடத்திவைத்திருக்கும்
ஒலிகள் அடைக்கப்பட்ட
மையமான உலகத்தில்
மிகச் சிறிய
செவ்வியல் அரங்கு , ...
அந்தோனியோ விவால்டியின்
நான்கு பருவங்களையும்
எக்கித் தள்ளிவிடும்
வயலின்களின் நரம்பிழுவை ,
நிசப்த நிறுத்தங்களில்
பெரிய ஜன்னலை
வேடிக்கை பார்க்கிறேன் ,
வெளியெல்லாம்
அத்துவான அம்பலத்தில்
நட்சத்திரங்களின் நடனம்,
பின்னர்
காற்றின் தொடராகவே
நாங்கு புல்லாங்குழக்கள்
செபாஸ்டியன் ஜொகானஸ் பாச்சின்
மறுக்கப்பட்ட தேவதைகளின்
கன்னிகழியாத
இசைக்கோலத்தை விடுவிக்கின்றன,
இழுபறியாக
மூன்று மணிநேரம்
எடுப்பெடுத்தே
நாதசுரக்கோலங்களை
வாரிபோட்டுக்கொண்டுபோய்விட்டது,
முடிவுவரையில்
பூத்திருந்தது காத்திருந்தேன்
ஏனோ
எங்கேயோவொன்று
நிம்மதியாக எழுந்துவரவில்லை,
அதில் பல ரகசியங்களும்
வெளிப்படுத்தப்படவில்லை !

.
.......................................................................................
.
சில்லறைகளில்
வாழ்வோட்டமிருப்பதால்
சுழட்சிமுறைக்கு
அலுமினியபேணி பொறுக்கும்
அதிஷ்டமில்லாதவன்
அதீத நம்பிக்கையோடு
குப்பைத்தொட்டியைத்
திறந்து பார்த்து
துலாவி ஏமாந்து
கழி(வு)விரக்கமில்லாத
பணக்காரர்களை வாரித்திட்டி
உமிழ்ந்துப்பி
அறைந்து மூடுகிறான் !
.
...............................................................................
.
நான்
பயண அனுபவங்களை
நிறுத்தங்களோடு பாதுகாப்பவனல்ல.
கலையாததேன்கூடு போலக்
கூட்டமில்லாத ...
மதியநேர கடுகதிரெயில்,
வயதானவொருவர்
எங்கேயோ பார்த்துக்கொண்டு
ஓரிடம்பற்றி
எங்கேயோ கேட்கிறார்!
நான்
”எங்கே இறங்கவேண்டும் ?”என்றேன்.
என்
குரலின் திசை சரியாகவிருந்தது!
” கடல் முடியுமிடம் ?”என்றார்
கறுப்புக்கண்ணாடியைச் சரிசெய்து
ரெயில் அமர்முடுகுவதை
சந்தேகமாக உற்று
"அரண்மனைப்பாலம் தாண்டியாச்சா " என்றார்
நான்
நிலைமாறும் ஜன்னலோடு
திசைக்கேற்பத் தலைதிருப்பினேன்,
ஒருபக்கம்
சமாந்தரமாக மலைகள் மறைய
மறுபக்கமெல்லாம்
வெயில்காய்ந்த வயல் வெளிகள்
தண்ணிகாட்டிய
ராஜஸ்தானப்பாலம் எங்கே ?
ரயில் ஆர்முடுகுவதுக்குள்
அலைக்கழிப்பில்லா அவசரங்களோடு
இறங்கிப்போய்விட்டார் !
நிதானமாகத்தான்
சிலநேரம்
பார்வையற்ற உரையாடல்களைச்
சேதாரமில்லாமல் கையாளவேண்டியிருக்கு !

.
..................................................................................
.
சேர்ந்தழுவத்துக்கு
யாரையோ
யாசித்தபடி
கை விரல்களை
மேல்நோக்கிப் பிராத்திக்குது
இலையுதிர்ந்தமரம் ,
ஒருமித்த ஒத்திசைவுகள்
கிடைத்ததுபோல்
விறைத்த கிளையில்
வந்திறங்கிய சாம்பல்ப்பறவையும்
இறக்கைகளை உள்ளிழுத்து
குற்றவுணவில்லாத குளிரை
மனமொருமித்துச்
சபிக்குது !
.

..................................................................
.
மேப்பிள் மரங்கள்
இலைகொட்டிக்கொண்டிருந்த
வெறிச்ச வீதியில்
தட்செயலாகப்
பேச்சுக்கொடுத்த மனிதன் ...
சுருக்கம் விழுந்தோடும்
நேற்றுவரையில்
இளமையைத் தேடியதாகச் சொன்னான்,
அவனுக்கு
நாளையென்பதில்லாததுபோலவே
கால்களில் களைப்பு,
நெற்றியெலாம் வரைகோடுகள்,
தீப்பந்தங்கள் பற்றவைத்து
அவனருகிலொரு இளம்பெண்
அவள் கண்களில்
இரத்த சலனம்
முகத்தில் கலவரமான கோபம்,
இன்றுவரையில்
காதலைத்தேடியதாக அவள் சொன்னாள்,
மூச்சுமுட்டி விழும்
நம் மூன்று பேரின்
உரையாடல் மவுனப்பரப்பில்
உட்காந்துகொள்ளக்
காற்று இடம்தேடிக்கொண்டிருந்தது,
அவன் புலம்பியதுக்கும்
அவள் விளம்பியதுக்கும்
நான் விளங்கியதுக்கும்
முடித்துவைக்கும் பிராத்தனைகளில்
ஒவ்வொரு வாய்க்கும்
ஒவ்வொரு பெயருண்டு !

.
........................................................................................
.
கை தவறிவிட்ட
பலூனை
திரும்பிவரும்படி
அப்பாவின்
கைப்பிடியை உதறிவிட்டு
கெஞ்சிகேட்டழுகிறாள்
குட்டிப்பெண்,
நெருக்கியடிக்கும்
வாடிக்கையாளர் கூட்டத்தில்
பலூன்
காற்றில் முகவரிதேடிபடியே
திசையிழந்த
தலைகளுக்குமேலாக
அங்காடியெங்கும்
அசைந்தாடியலைகிறது !
.
............................................................................
.
எல்லாருக்கும் இலவசமென
உள்நுழைவு அச்சடிக்கப்பட்டிருந்ததை
வாசித்துத் திகிலடைந்து
சட்டென்று
படிதாண்டி உள்வாங்கிவிட்டேன் ! ...
எனக்கு
ஏற்கனவே கொஞ்சமாதான்
அதுகள் பற்றித் தெரியும் !
விளக்கங்கள் மேலதிகமாய்த் தெளிவாக்க
விடேந்தியாக விடப்பட்ட
அழகான பெண்களும்
கையைப் பிடித்து இழுக்காத குறையாக
கந்தர்வ ரம்மியங்களைத்
திணித்துக் கொண்டிருந்தார்கள்.
துரிகைகளின் மயிர் அடர்த்தியை
ஆழமாக விசாரித்ததுபோல
மூலவர்ணக்கலவைகளை அடியொற்றி
மூன்று வெவ்வேறு அரங்குகள்,
1. வஸல்லி கண்டிஸ்கியின்
அலைக்கழிக்கும் அமைதி
2. லியனார்டோ டாவின்சியின்
எண்ணைவடிப்பு வழுவழுப்பு
3. வின்சென்ட் வான் கோவின்
செவ்வியல் நீரோவியங்கள்
உஊஊஊப்ப்ப்ப்பப்ஸ்ஸ்ஸ்ஸ்
நிறங்களின் நிலைமையை ஊகித்து
சட்டென்று சுதாரித்து
சடுதியாக வெளியேறிவிட்டேன் !
இனி
தேடலின் விடுபட்ட பக்கங்களை
நீண்ட நாட்களாகவே
நிழல்போல அரித்துக் கொண்டிருக்கும்
அந்தராத்மா !

.
..............................................................................
.
என்னோடு சேர்த்து
முந்நூறு சொச்சம்
அசந்துபோன ரயில்ப்பயணிகள் ,
எஞ்சின்வேகம்
காற்றைக் கோடுகிழிக்கும்போது
நிலமதிரும் சந்தங்கள்,
அவ்வப்போது
நிறுத்தங்கள் பற்றிய
சில்லறைத்தனமான
மவுனத்தில் இடைஞ்சல்கள் ,
எல்லோருக்கும் பொதுப்படையில்
தண்டவாளச் சில்லுரச
எண்ணெய் ஆவியாகப்போகும்
கிரீச்சிடல்கள் ,
கண்களை மூடியபடி
மஞ்சவண்ணாமரக் குயில்களோடு
நான் மட்டும்
தனியாகவிருந்தேன் !
.
.................................................................................
.
அடிப்படையில்
அவரின்
அந்தாதிக் கேள்விகள்
அவராகவே இருந்துமில்லாத போதும்
ஓரளவு எளிதாகிவிட்டது. ...
நான் பேச்சுத் தமிழில்ப் பறைஞ்சால்
அவரோ
இலக்கணத் தமிழில் சல்லாபித்தார் .
அவர்
விந்திவிந்தித் தொடங்கினாலும்
வேதாந்த சித்தாந்தம்
சொல்வதில் ஓர் ஒழுங்கு இருந்தது
நான்
தன்னையறிதல் பற்றி
ஏதாவது வினாவுவதட்குள்
என்
கண்களைபார்த்தே
உரையாடலைத் தொடங்கினார்
நான்
வாழ்க்கைக்குள் மீளமுடியாதவைகள்
கேட்பதற்குள்ளாகவே
என்னைத் துளைத்தெடுத்து
என்
பின்புலங்கள் சொல்லத்தொடங்கியபின்புதான்
நான்
கருத்துக்களுக்குள் சென்றேன்.
அங்குதான்
நான் யார் ?
என்பதிலுள்ள
அத்தனை பிரச்சினைகளும் தொடங்கியது !

.
......................................................................
.
ரெயில்டிக்கெட் அளவில்
மன்றாடமாகக்
கசங்கிய காகிதம்தான்
அவசரத்துக்குக்
கையில் கிடைத்தது,
நினைவசைவிலிருந்த
ஒரு
வேரறுந்த பட்டமரத்தைப்பற்றி
முகமிருக்கும்
நாலுவரியில் உயிர்ப்பித்துவிட்டு
நாலாய் மடித்துக்
காற்றில் வீசியெறிந்தேன்,
திருப்தியடைந்தது போலவே
விரிந்துபறந்தொரு
இளமரத்தைத் தேடிபிடித்து
ஈரமான இலையில்
ஒட்டிக்கொண்டது !
.

.................................................................................
.
எனக்கெனவே
வடிவமைக்கப்பட்டது போல
அதிகாலை
நடைபாதை நிழலில்களில்
குளிர்நாளின் ...
சலிப்புத்தரும் அயர்ச்சி !
இனியும்
ஏற்றுக்கொள்ள விரும்பாத
பொறுப்புக்களையெல்லாம்
இடம்மாற்றிவைத்துவிட்டது
மேப்பிள்மர இலைகளுக்கு
தங்க முலாம்பூசிக்கொண்டிருந்த
வெளிச்சப்பகல் !
பிரதிக்கப்பட்ட
திசையில்லா அலைச்சலில்
மிச்சங்களையெல்லாம் கடந்துவிடும்
கடைநிலை உத்தேசத்தில்
மாலைப்பொழுது !
தனிமனிதர்கள் போலவே
துணை தேடும் துடிப்பில்
தன்னை இன்னமும்
ரகசியமானவொண்றாகவே
கட்பனை செய்கிறது
நடுச்சாம இருட்டு !
ம்ஹூம்.!!!!!!!!!!
ஒன்றும் தேறவில்லை. !!!!!!!!!!
பலருக்கு
முழுமையில்லாத நாள்
இப்படித்தான் முடிந்துபோகிறது !

.
.......................................................................
.
திடுக்கிடலுடன்
அதிகாலை நடைவீதி,
சஞ்சலங்களோடு
முகத்தில் வெய்யில் ,
பாரபட்சமின்றிக் குத்திக்கிழிக்கும் ...
கார்திகைக் குளிர் ,
எல்லைகள் விரிந்துகொண்டிருக்கும்
புதிய பயணம்,
எந்நிலையிலும்
உந்தித் தள்ளுவது
அசட்டுத்தனமான தொடக்கம் தந்த
மௌனத்திலிருந்து பிரவாகிக்கும்
நம்பிக்கைதான்.

.
...........................................................................
.
எல்லாப்பொருத்தமும்
அமர்க்களமாக அமைத்திருக்கும்
அந்தப்பெண்ணுக்கு
பிசாசு பிடித்திருக்கவேண்டும் !
உரத்தகுரலில் கத்தி...
கைகளைத் திக்கில் பரப்புகிறாள்,
மூச்சுமுட்ட
மழைக்குள் ஓடிப்போகிறாள்,
காதலர்கள்
முத்தமிடுவதைக் கவனித்து
நிறையவே ஜோசிக்கிறாள் ,
தெருப்பிசைக்காரனின்
குளிர்தாங்காக் கந்தலுடைக்காகக்
பரிதவிக்கிறாள் ,
ஜவுளிக்கடை ஜன்னலில்
முகம் பார்க்கிறாள் ,
கைதவறி விழுந்த
முடிச்சுப் பொதிக்கும்
பரிகாசமாகச் சிரிக்கிறாள்,
இலைகொட்டிய
வெற்று மரக்கிளைகளுக்காய்
தலைகுனிகிறாள் ,
ஒவ்வொரு
அவசர வாகனங்களையும்
வெறுப்பாகவே நோக்குகிறாள்,
எதிர் வெட்டவெளிகளைக்
கண்ணில் ஒற்றிக்கொள்கிறாள்,
புறாக்களுக்குக்
எம்பிப் பறக்கச்சொல்லி
அகலக் கைவிசிறிக் காட்டுகிறாள்,
இதையெல்லாம்
திரும்பத் திரும்பவே நிரூபிப்பதில்
அவளுக்கு வருத்தமில்லை,!
நமக்குத்தான்
எதையோ கண்டுபிடித்தது போல
விசர் வருகுது! !

.
........................................................................
.
புதிய
சந்துப்பாதைகள்,
பழக்கமில்லாத
தட்காலிகத் தங்குமிடம் ,
தனித்தும் சோடியாகவும் ...
உள்ளிழுத்துக் கொள்கிற
உல்லாசப் பிரயாணிகள் ,
விழுந்துவிட்ட ஈர்ப்பைப்
புறந்தள்ள முடியாத
முகஸ்துதிகள் ,
ஆனாலும்
பிரியத்துடனேயே இருக்கிறது
வாசனைகள் !

.
..............................................................................
.
சொர்மலாந்து
புல்வெளிப்பிரதேசத்தில்
பாச்சல் குதிரைகள்
சோம்போறித்தனமாக
மேய்ந்துகொண்டிருக்கின்றன ,...
ச்ஜெர்ந்ஹோவ் நெடுங்சாலையில்
பேர்ச்பித்துளா மரங்கள்
இலையுதிர்குளிர் வருவதுபற்றி
விவாதம் செய்கின்றன
கேநேஸ்தா
வடிசாளைப் புறநகரம்
புழுதிக் காற்றில்
எந்தக் கனவுகளும் இடைப்புகாமல்
உறங்கிக்கொண்டிருக்கு
பிளேன்
அடைக்கல கிராமம்
என்னைப்போலவே
ஏதிலிகள் போலிறங்கும்
பிளிக்கன் பறவைகளுக்கு
திசைகள் காட்டி்ககொண்டிருக்கு
ஓரளவுக்கு எதிர்பார்த்தபடியே
எல்லாவிதமான முன்னசைவுகளிலும்
ஒரு மரணத்தின்
கடைசி ஒத்திகைகள் ,
ஸ்டேர்ன்ச்ட்டேர்
தேவாலயத்தின் சவக்காலையில்
ஒரு பெண்
பரமபிதாவின் பாவமன்னிப்புப்
போதனைகளோடு
மூன்றாம் நாள் எழுப்பப்பட்ட
சத்தியாமான தேவவார்த்தைகளோடு
அடக்கமாக இறக்கப்படுகிறாள்
அவளின் நிறம்
அவளின் குணம்
அவளின் வாசனை
அவளின் கோபம்
அவளின் சாபங்கள்
தனிப்பட எனக்கு நல்லாவே தெரியும்
நினைவுகளை நிறுத்தினாலும்
அவள் எழுந்துவரவே போவதில்லை
அவளின் பெயர்
இன்னும் சில மாதங்களில்
கல்லறையில் எழுதப்படும்
அதுவரையில்
அந்தப் பெயர் கொஞ்சநாளாவது
எனக்கே சொந்தமாகவிருக்கட்டும்

.
..............................................................................
.
தெருப்பாடகன்
கம்பளிக் கையுறை போட்ட
பத்து விரல்களிளும்
"ஸ்பானிஷ் லல்லபாய் "பாடலை
ஹார்மோனிக்காவில் வாசிக்கிறான் ...
அவன்
மனைவியாகவே இருக்கவேண்டும்
வெறுங்கையால்
" மெக்சிகன் பியான்கோ" தாளகதியில்
மத்தளம் அடிக்கிறாள்,
கால்நடை மனிதர்கள்
மணித்துளிகள் இடைவெளியில்
வேகமாகக் கடந்து போய்விடுகிறார்கள்,
உள்ளங்கையால்
சக்கரங்கள் உருட்டியபடியே
நடைதள்ளுவண்டியில்
அசவுகரியமாக வந்தவன்
மிகக்கிட்ட நெருங்கி வந்து
கைதட்டி
உடம்பெல்லாம் அசைத்து
இலவசமான இசை
பிடித்து அடைத்துவைத்திருந்த
சந்தோசங்களையெல்லாம்
வெளியேற்றிக்கொண்டிருக்கிறான்! 

.
......................................................................................
.
விண்மீன்கள் தூங்கியிருப்பதால்
ஜன்னல்களுக்குள்
நிலையெடுத்து நின்றுகொண்டு
வீதிவிளக்கோடு
முட்டிமோதிக்கொண்டிருக்கும்...
மின்மினிப்பூச்சிகளின்
பின்கோட்டு அழகோவியமெல்லாம்
சிதறிவழியும் நிழல்களைப் பற்றிக்
கவிதை எழுதுகிறாய் !
ஆழிக்கடலின் அமைதியோடு
இரவெல்லாம் ஒருவன்
மன அலைகளோடு ஒட்டாமல்
அந்தக் குறுமண் பாதையிலே
வெறுங்காலில்
நடந்தலைவதைப் பார்த்திருக்கிறீயா ?
கவித்துவ எண்ணங்கள்
கரையேறித் தவழ்ந்துமிழும்
பட்டாம்பூச்சி வார்த்தைகளோடே
வாழ்ந்துகொண்டிருக்கும்
நீயெங்கே
அதையெல்லாம் கவனிக்கப்போகிறாய் ,
சிலநேரம்
புகைமூட்டம் போலவே
அவன் அசைவுகளைக் கண்டிருப்பாய் ,
அவனின்
கொப்புளம்போட்ட பாதங்களின்
வலியுனக்குத்தெரியவர வாய்ப்புகளேயில்லை
அதைப்பற்றி
விபரமாகத் தகவலறிந்த
அதிகாலைத் துருவநட்ச்சத்திரம்
எத்தனைமுறை கண்கலங்கியதென்பது
மிகப்பிரபலமான உனக்குத்
தெரியவரவும் வாய்ப்புகளேயில்லை !

.
..............................................................................
.
கதகதப்பைப்
பாரக்கனதியாக்கும் ஆடை
விரல்களைத் தின்னும்
கடும்தோல்ச் சப்பாத்து
வியர்வை நாறும் ...
தடித்த கழுத்துப்பட்டி
தலை மயிர்களை
எண்ணிப் பிடுங்கும் குல்லாய்
இந்த
மரணத்தின்
விளையாட்டுதான்.
நம்பிக்
கையிழந்த
வடதுருவ மனிதர்களின்
குளிரைப் புறக்கணிக்கும்
கடைசி முயற்சி

.
.......................................................................
.
கொஞ்சம்போல
நனைத்தெடுக்கும்
சாத்தியங்கள் இருந்தது
திரண்ட முகில்களில்,
பிறகுதான் ...
பலவீனமான விடியிருளின்
திரைகளை விலக்கித்
துளிகளை அறிமுகப்படுத்தொடங்கியது
தூறல்கள் ,
பாதையோரம்
வீடில்லாதனையே அதுவும்
குறிவைத்ததுத் தாக்குகிறது,
அகலவீதிகளில்
அடித்துப் பிய்க்குது
வெள்ள வெள்ளோட்டம் ,
கவிஞ்சர்களின்
பிரியங்களை விதைக்கும்
ஆச்சரியங்களையெல்லாம்
வித்தையாக்கத் தெரிந்திருக்கிற
இந்த மழை
கூரையில்லாதவனின்
கதகதப்பான கனவில்
ஈரமாகப் பெய்து முடித்திருக்கலாம் ,
தனியொருவனைப்
பழிவேண்டிகொண்டுருக்கும்
மழையின்
இத்தனை தடுமாற்றங்களிலும்
பக்குவமின்மையிலும் கூட
அழகாகத்தானிருக்கிறது
அள்ளிக்குளித்த
நகரம் !

.
......................................................................
.



ஜோன்ஸன் .001

 வேலைத்தளத்துக்கு வந்த அன்று ஒரு கன்னங்கரேல் நிறத்தில் கவ்போய் குதிரைக்காரர் தொப்பி போட்டுக்கொண்டு வந்திருந்தார் ஜோன்சன், வேலைத்தளத்துக்கு உள்ளே வந்து ஒருமணித்தியாலத்துக்கு மேலாக நின்றும் அந்தக் க்வபோய் தொப்பியை அவர் கழட்டவேயில்லை . அந்த வேலைத்தளத்தை சுற்றிபார்த்தார். அவருக்கு அங்கே என்ன வேலை கொடுத்து மேலிடத்திலிருந்து அனுப்பினார்கள் எனறு எனக்குத் தெரியாது. அதைக் கேட்க்கும் அதிகாரமும் என்னிடம் இருக்கவில்லை. சிலநேரம் தட்காலிகமாக சிலரை மேலிடம் இப்படி அனுப்பும் என்று தெரியும் .


" இங்கே ரெண்டு திண்ணாக்கரசு வேலை செய்வதாக ஹெட்ஒபிஸில் ஜிஎம் பரன்சோதி ஐயா சொல்லி அனுப்பி இருக்கிறார், "


" ஓம், ஓம் ..இங்கே ரெண்டுபேரும் திண்ணாக்கரசுகள்தான் "


" , மானேஜர் திண்ணாக்கரசு அண்ணையை முதலே தெரியும்,,உமக்கும் பெயர் திண்ணாக்கரசுவா , அல்லது வேற ஏதும் பெயர் இருக்கா,,எப்படி உம்மைக் கூப்பிடுறது , "


" ஓம், ஓம், எப்படியும் கூப்பிடலாம்,,அரசு என்றுதான் இங்கே வேலை செய்யுறவை கூப்பிடுவினம் "


                           இதுதான் ஆரம்ப அறிமுக தொடக்கம். அவர் பெயர் ஜோன்சன் என்பதை அவர் சொல்லவில்லை. மேலிடத்தில் இருந்து கொடுத்தனுப்பிய இடமாற்றக் கடிதம் மடித்து வைத்திருந்தார். அதை எனக்கு காட்டவில்லை . அதை எனக்கு காட்டவேண்டிய அவசியமும் இல்லை. இப்பிடி யாரும் இடமாற்றத்தில் வந்தால் அந்தக் கடிதத்தை மனேஜர்தான் வாங்கி எப்பவும் பைலில் வைப்பார்.


                                        ஜோன்சன் கொஞ்சம் எங்கள் பாண் பேக்கரியின் " பிராண்ட் நேம் " போல இருந்த பிராண்டல் எண்ணெய் வாசம் ,ஈஸ்ட்டில் கோதுமை மா புளிக்கிற மணம் போன்ற வாசனைகள் அதிசயமாக முகர்ந்துகொண்டிருந்தார் . அவரோட ஸ்டைலுக்கு அந்த இடம் தெருவில துண்டைப்போட்டு பிச்சை எடுப்பது போலிருந்தது போல இருந்திருக்கலாம் .


                                        முடங்கப் பாய் இல்லை எண்டு சடங்கை நிறுத்தினவன் கதை போல தெரியாமல் குழப்பமான இடத்துக்கே வந்து மாட்டிப் போட்டனோ என்று நினைத்தாரோ தெரியவில்லை . கொஞ்சம் அமைதியாக இருந்தார். பிறகு,


" என்னோட பெயர் ஜோன்சன், நாவாந்துறை ஊர் , எஸ்கேயோடு பெரிய ஸ்டோர்ல வேலை செய்துகொண்டு இருந்தேன் ,,இப்ப இங்க பிடிச்சு அனுப்பி இருக்கினம் "


" அப்படியா,,இது பேக்கரி,,மாவும், பாணும் ,பணிசும் தான் இங்கே,,எனக்கு படிவம் செய்யுற வேலை "


                                                    என்று சொன்னேன், ஏனென்றால் பாண் பேக்கரி அரசாங்க சார்பான எம்பிசிஎஸ் நடத்தினாலும் அதில பாண் போடுற பாஸ், அவனுக்கு ரெண்டு உதவி பாஸ், அவர்களுக்கு கீழே ரெண்டு கைவேலை, ஒரு தட்டு துடைக்கிற உதவியாள், ஒரு விறகு பிளக்கிறவன் இவர்கள் எல்லாம் அன்றாடம் சம்பளம் கையில எடுக்கும் வெளி ஆட்கள். அவர்களை வைத்து வேலை வேண்டுறது குருடனை ஆடு மேய்க்க விட்டுப்போட்டு அதைத் தேட எட்டுப் பேரை அனுப்புறது போல ,


                                                  
பலவருடம் எம்பிசிஎஸ் இல் பிரான்ச் மனேஜர் ஆக இருந்து பலநோக்கு நெளிவு சுளிவுகளில் மூச்சைப் பிடிச்சு முத்துக் குளிச்சு சுழி ஓடியவர் வயதான திண்ணாக்காரசு மனேஜர் , அவர்தான் பேக்கரி மனேஜர், அதனாலோ தெரியவில்லை அவரைப்பற்றி என்னோடு உரையாடலை ஆரம்பித்தார். அது அவருக்கும் இயல்பாக ஒரு புது இடத்தில பழக்கத்தைக் கொண்டுவர உதவியாக இருந்தது,அதிகம் யாருடனும் கதைக்க விரும்பாத எனக்கும் தான் ,


" அப்பிடியே, செபமாலை மாதாவே , திண்ணாக்கரசு அண்ணை நல்ல கலகலப்பான ஆளே,,அவரோடு வேலை செய்து இருக்கிறேன்,,"


" ஓம், ஓம்,,,கலகலப்பும்தான், அங்,,,ங்,,,ங்க் ,,,,கலகமும்தான் "


" ஆள் நாட்டுக்கூத்து அண்ணாவியும் , ஒரு நாடக நடிகரும் என்று தெரியுமோ "


" ஓம், ஓம்,, சொல்லி இருக்கிறார் "


" , திண்ணாக்கரசு அண்ணை, எங்கட ஊர்ல வந்து இலங்கைவேந்தன் என்ற நாடகம் போட்டு இருக்கிறார், "


" ஓம், ஓம்,,"


"செபமாலை மாதாவே , அதில ராவணன் வேஷத்தில ஆள் சரியான கலாதி,,நடிப்பு அந்தாளுக்கு ஒட்டிப் பிறந்த கலை "


." ஓம், ஓம்,,"


" கொழும்புத்துறை குஞ்சிதபாதத்தின் அடங்காபிடாரி நாடகத்தில நடிச்சவர் எண்டும் சொல்லி இருக்கிறார், ,,ஒரே எகத்தாளமாதான் இருந்து இருக்கும் அந்த நாடகம் ."
" ஓம், ஓம்,,"


" திண்ணாக்கரசு அண்ணை நல்ல கலகலப்பான நாடக நடிகர் , செபமாலைமாதாவே , அந்தாள் சும்மா வயதிறந்தாலே முசுப்பாத்தி கதைகள் தானே,,எப்ப வருவார் இங்கே,,அவருக்கு வேலை நேரம் ஸ்டார்ட் ஆகிறது எத்திணைமணிக்கு,,"


                                                  என்று நிறுத்தாமல் ,சிரிச்சுக்கொண்டு சொன்னார். நான் எல்லாத்துக்கும் " ஓம், ஓம்,," என்று தலையை ஆட்டிக்கொண்டிருந்தேன் .ஜோன்ஸன் கலகலப்பான பேச்சு துணை என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விட்டது . ஆனாலும் அதிகம் யாரோடும் கதைக்க விரும்பாத என்னிடமிருந்து அவர் எதையும் அதிகம் அறிய முயட்சிக்கவில்லை , பதிலாக நான் எப்பவும் நிறைய விசயங்களை கேட்டுக்கொண்டே இருப்பேன், அவர் சலிப்பு அடையாமல் சொல்லிக்கொண்டே இருப்பார்.
.
................................நமக்கு தெரிந்தவர்கள் இறந்துவிடும் போதுதான் அவர்கள் நினைவுகளை மீட்டும் போதுதான் காலமும் இன்னொருமுறை எழுந்து முன்னுக்கு வந்து பல சம்பவங்களை இன்னொருமுறை வாழ்ந்துவிடு என்பதுபோலத் தருகிறது.அப்படி அந்த நினைவுகள் மட்டுமே நம்மளால திரும்பிக்பாக்கமுடியும்படியாகத்தானே உயிர் வாழ்தல் என்பது வரையப்பட்டு இருக்கிறதே .....................


                                                   ஜோன்ஸன் இலகுவாக எல்லோரோடும் பழகிற ஆள் மாதிரி தெரியவில்லை. அவருக்கு மானேஜர் திண்ணாக்கரசு பற்றி தெரிந்ததெல்லாம் சொல்லி முடிய, ஒரு கதிரையை எனக்கு அருகில் இழுத்துப் போட்டு , அந்த க்வபோய் தொப்பியைக் கழட்டி கையில வைச்சு திரிசூலம் போல கொஞ்ச நேரம் சுத்திப்போட்டு , அதை மடியில வைச்சுப்போட்டு நான் நிரப்பிக்கொண்டு இருந்த F 15. 9 B . படிவங்களை பார்த்துக்கொண்டிருந்தார்.


                                             
அந்த வேலைத்தளம் தூய்மையான தமிழில் சொன்னால் ஒரு வெதுப்பகம். அப்படித்தான் அப்போது அந்தப் பெயர் பாவனையில் இருந்தது. அல்லது பாவனைப்படுத்தும்படி கட்டளை இடப்பட்டிருந்தது. அத எங்கள் ஊர் பேச்சு மொழியில் சொல்வதென்றால் பாண் பேக்கரி என்று சொல்லுவார்கள். எம்பிசியேஸ் என்ற பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமானது அந்த வெதுப்பக்கம், நான் அங்கே கணக்கு வழக்குப் பார்க்கும் கிளார்க் வேலை செய்துகொண்டிருந்தேன்.


                                   அந்த வெதுப்பக்கம். இருந்தது ஒரு கிராமப்புறத்தில். நாயன்மார்கட்டுக்குளத்துக்கும் மாம்பழம்சந்திக்கும் நடுவில் தவிட்டுத் துரையன்னை கடைச் சந்தியில் இருந்தது . காலையில் எல்லாரும் அரசாங்க வேலைக்கு டவுனுக்கு போவார்கள், நான் கொஞ்சம் இடைச்செருகல் கிராமநகரமாக இருந்த என் ஊரில் இருந்து சைக்கிளை மிதிச்சுக்கொண்டு பின்தங்கிய கிராமத்துக்கு வேலைக்கு போவேன். பின்னேரமும் அதுபோல அவர்கள் களைச்சு விழுந்து வர நானும் மாறிப் போகும் ஒரு குளறுபடி நடக்கும்.


                                      ஜோன்சன், இருட்டைப் போட்டோகொப்பி அடிச்ச மாதிரி கறுப்பு நிறம், கழுத்தில ஒரு மொத்த உருளை சங்கிலி, கை மணிக்கட்டில ஒரு உருளை கைச்செயின் , அஞ்சு விரலிலும் சவரக்கல்லு சைசில் இனிஷியல் எழுதிய மோதிரம், கோல்டன் செயின் ரோலெக்ஸ் கைக்கடிகாரம். அதன் டயலும் தங்கப்பவுன் போலிருந்தது. புத்திசாலித்தனத்தை மறைக்க முடியாத காந்தப்பார்வைக் கண்கள், வழுவழுப்பான அகல் வெளிச்ச முகம், சுத்தி வளைக்காத நேர்மையான சிரிப்பு, அன்றுதான் ஜோன்சனை முதல் முதலில் சந்தித்தேன்.


                            இவளவு நகை நட்டு நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டுப் பெண்கள் போல அள்ளிப் போட்டுக்கொண்டு வேலைக்கு வருகிறாரே இதை எல்லாம் எங்கிருந்து சம்பாரித்தார் என்ற டவுட் எனக்கு எப்பவுமே இருந்தது. அந்த வெதுப்பக்கத்தில் வேலை செய்த வெளிஆட்களுக்கும் இருந்தது, யாரும் என்ன ஏது என்று சங்கதி கேட்ட்தில்லை.


                                முயல் பிடிக்கிறவன் முண்டாசை அவிட்டு விட்டு அதை ஆட்டிக் காட்ட சொந்த வாழ்க்கைக்கு ஆப்பு விழுந்த மாதிரி ஒருவரின் பெர்சனாலிட்டி என்பது அவர் அவர் விரும்பியபடியே அமைத்துக்கொள்வதுதானே. அதில அவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள் என்றால் அது அவர்களைப்பொறுத்தவரையில் பொசிடிவ் ஆன மனநிலையை ஏட்படுத்தலாம் தானே .


..................வாழ்க்கையில் கதைகள், அதில வரும் ஒரு கற்பனை, அது ஒரு முழுக் கற்பனை , கட்பனையின் பெயர்கள் என்னைப் போலவே உண்மை இல்லை. என்பதுபோல வயதும் ஓடிப்போக . இவளவு கால தொடர்புகள் அறுந்துபோன இடம்பெயர், புலம்பெயர், தலைமறைவு, கால இடைவெளியில் ஜோன்சன் பற்றி பலமுறை ஜோசித்து இருக்கிறேன். கண்டியில் செமினரியில் வேலை செய்கிறார் என்று எங்கயோ கேள்விப்பட்டேன் . அவளவுதான்.......................


                                            
எம்பிசீயெஸ் என்ற பலநோக்குக்கூட்டுறவுசங்கம் அலிபாபாவும் நாட்பது திருடர்களும் கதை போல ஒரு மர்மஜோக மூடுமந்திரம் . அது ஒரு அரசாங்க நிறுவனமாக இருந்தாலும், அதில போதிய சம்பளம் கொடுப்பதில்லை. அதில் வேலைசெய்பவர்கள் அவர்களின் சொந்த புத்திசாலித்தனத்தால் மேலதிக வரும்படிகளை ஏட்படுத்திக்கொள்ள முடியும். ஜோன்சன் சிலவேளை மத்தியகிழக்கு நாடுகளில் வேலைசெய்திருக்கலாம் என்பதுதான் பொதுவான அனுமானமாக இருந்தது .


                                         ஜோன்சன் நாவாந்துறையில் இருந்து வருவதாகச் சொன்னார். ஆனால் அவரின் எடுப்பைப் பார்த்தால் வெளிநாட்டில் இருந்து நேரா வந்து பேக்கரிக்க குதிச்ச மாதிரி இருந்தது. அவரோட அணுகு முறைகளில் கொஞ்சம் இல்லை அதிகமாகவே ஒருவிதமான தன்னுணர்வுக் கட்டுப்பாடு இருந்தது . வெளிநாட்டில் வசித்து இருக்கலாம் போலிருந்தது பேச்சு முறையில் இருந்த கண்ணியத்தில். அது எந்தவகை நாடாக இருக்கும் என்று மட்டுப்பிடிக்க முடியவில்லை


" நாவாந்துறையில் பாலச்சந்திரனைத் தெரியுமா,"


" யார் அவர்,,, "


" நாவாந்துறைதான் அவரும்,,அவரும் இரவு பகல் எண்டு இல்லாமல் எப்பவும் ஒரு பாலுமகேந்திரா தொப்பி போட்டு இருப்பார், "


" ஹஹஹஹஹ்,.. அட.,,தாலியக்கட்டு.,,, ,என்னோட தொப்பி நல்லா கிண்டுது போல இருக்கே "


" அந்த் தொப்பி வருஷக்கணக்கில வெய்யிலில போட்டு வாங்கி நல்ல வெளிறின நிறத்தில இருக்கும் ,"


" ஹாஹாஹா...இந்த திணாக்கராசுவும் வாயில வெடிச் சிரிப்பு வைக்கிற திண்ணாக்கரசு போல இருக்கே "


" ஹ்ம்ம் ,,,நான் சும்மா வெங்காய வெடி,,மனேஜர் திண்ணாக்கரசு அண்ணை வரமிளகாய் சரவெடி "


" பிறகென்ன,,அரசுவுக்கும் ஏடாகூடமா எகத்தாளம் வருக்குதே "


" இல்லை,,நீங்க நட்பான ஆள் போல இருக்கு அதால சொல்லுறேன் "


" வேற என்னவும் பெயர் சொல்லுவினமா நீர் கேட்ட அவருக்கு ,,அல்லது சென் மேரிஸ் கோவிலடியா ,அல்லது ,சென் நிக்லஸ் கோவிலடியா ? "


"அவர் நான் பேஸ் கிட்டார் வாசிக்கிற எங்கட ம்யூசிக் குரூப்புக்கு ஈகுலைசர் மிக்ஸர், பாபர் பொக்ஸ், மைக் செட், எல்லாம் கொண்டுவருவார் "


" , அட.,,தாலியக்கட்டு..... தொம்சன் சவுண்ட்ஸ்... .நம்மளிண்ட ,, சவுண்ட்ஸ் பாலா ,அவர்தானே" ,


" ஓம், "


" சவுண்ட்ஸ் பாலா, தெரியும், அட.,,தாலியக்கட்டு.... அவர் எங்கட சொந்தம், சவுண்ட்ஸ் பாலா சென் நிக்கல்ஸ சேர்ச்க்கு பக்கத்தில வீடு ,,, நாங்கள் சென் மேரிஸ் சேர்ச் பங்கில இருக்கிறம் "


என்று சொன்னார், அதில இருந்து என்ன தாலியக்கட்டோ தெரியவில்லை நீண்ட நாள் பழக்கம் போல பிலாப்பழப் பால்போல பசை போட்டு ஒட்டிவிட்டார். இப்பிடித்தான் மனிதர்களுக்கு இடையில் உள்ள அவர்களுக்கே உரிய தட்ப்பாதுகாப்பு வெளிஇடைவெளிகளை நிரப்ப இன்னொரு பரஸ்பரம் அறிமுகமான மனிதர் தேவையாக இருக்கு,



முக்கியமாக எங்களின் ஊரில் லேசில் யாரும் யாருடனும் ராமனா, சீதையா, லட்ச்சுமணனா என்று தொடக்க விழுந்தேன் முடிச்சுக் கவிழ்ந்தேன் என்று ராமாயணம் போலக் கதைக்கமாட்ட்டார்கள். அதுவே ஒரு எட்டுப் பத்து மணித்தியாலம் ஒன்றாக இயங்க வேண்டிய தேவை இருக்கும் வேலைத்தளமாக இருந்தால் கொஞ்சம் இலகுவாக பழகும் சந்தர்ப்பங்கள் இருக்கத்தான்செய்யும் .


...........................அண்மையில், கிட்டத்தட்ட இருவது வருடங்களின் பின் வில்சன் ஒரு பதிவில் ஜோன்சன் அண்ணா என்று சொல்லி ஒரு படம் போட்டு இருந்தார். அந்தப் படம் ஜோன்சன் வெளிநாட்டில் இருந்தபோது எடுத்த படம். அது எனக்கு நல்ல நினைவாக இருந்தது , .....................


                                                ஜோன்சன் என்னோடு சில மாதங்களே அந்த வெதுப்பக்கத்தில் வேலை செய்தார்.ஆடிப்பாடி வேலை செய்யாட்டியும் இருவருக்கும் அலுப்பில்லாமல் வேலை செய்தோம். கொஞ்சம் அந்நியோன்னியமாக கொசப்புக் கதைகள் கதைச்சு பழகத் தொடங்க, என்னிடம் இருந்த இவர் எந்த நாட்டில வசித்தார் இவளவு தங்கப் பவுன் அங்கமெல்லாம் அள்ளிக்கட்ட என்ற நீண்டநாள் சந்தேகத்தைக் கேட்டேன்


" ஓம், கன வருஷம் இருந்தனான் ,


" ஓ ,,நான் நினைசேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்று "


" ஒரு கட்டதுக்கு மேலே பிடிக்கவில்லை,,வேற சில காரணங்களும் தான். மருகா திரும்பி வந்திடன் "


" மிடில் ஈஸ்ட் ??   எந்த நாடு,,சவூதியா,?,குவைத்,?,,,டோகாகட்டார் ?"

" இல்லை இல்லை,,,மிடில் ஈஸ்ட் எந்தப் பக்கம் இருக்கெண்டே தெரியாது, அரசு"

"அப்ப ஓமான் ? ,,அந்த நாடா ?"


" ஓமானோ????? ,,அட தாலியக்கட்டு... அது என்ன சாமான் எண்டே எனக்கு தெரியாது "


" மலேசியா பாக்டரி வேலை ?,,"

" இல்லை, அரசு " 

" சிங்கப்பூர் டொலர் எக்சேஞ் பிசினஸ் ? "


" அட.,,தாலியக்கட்டு.,,, இல்லை,...,இதுக இல்லை,,இதுக என்க இருக்கெண்டே தெரியாது "


" அல்லது கிரீஸ் கப்பலா ? "


"கப்பலோ,?,, நம்மட அராலி கடல்ல தொழில்செய்யிறவங்க வைச்சிருக்கிற நீல்மரைன் கொம்பனி அடிச்சு விட்டானே மல்டிடே பைபர்கிளாஸ் போட்டைத்தவிர வேற ,,ஒன்றுமே தெரியாது,,கப்பலோ!!!!! ,,ஹாஹாஹா "


" அப்ப வேற எங்க இருந்திங்க "


" சுவிஸ் "


" என்னது,,சுவிச் ,,அதுவா "


" லைட் போட அமத்துற சுவிச் இல்லை,, இது சுவிஸ் எண்டுறது சுருக்கமா,,சுவிஸ்ஸர்லாண்ட் ,,,"


" அப்படியா "


" டொச்சில சுவைட்ஸ் , அந்த நாட்டின் மிகப்பழைய காலத்துப் பெயர் ஹெல்வெட்ச்சியா என்று சொல்லுவாங்க அரசு "


"அப்படியா "


" ஓம்,,,சுவிஸ் .கையில கட்டுற மணிக்கூடு,, பிளாக்மணி காசுகள் பதுக்கி வைச்சிருக்கிற சுவிஸ்பாங் எல்லாம் நல்ல பேமஸ்ஸே "


" அட சுவிஸ் ,   ஆ...ல்...ல்...ல்ப்ஸ் ...   எண்டு ஒரு பனிச்சறுக்கு மலை "


"ஓம். ஆல்ப்ஸ்.....   அல்பாய்ன்ஸ் ,,..என்னெண்டு தெரியும்? ,ஆல்ப்ஸ் ..,,அதுதான் வின்டர் காலத்தில பேமஸான விளையாட்டு இடம், டூரிஸ்ட் வார இடம்  ஆல்ப்ஸ் "


" ஆ...ல்ப்...... எண்டு ஒரு பனிச்சறுக்கு மலை இருக்கெண்டு மேப்பில காட்டி சோசல்ஸ்டடி மாஸ்டர் படிப்பிச்ச நினைவு இருக்கு ,


" லுசான்ல சில வருடம்,,பிறகு சூரிச்,,,"


" பெயரைக்கேக்கவே இங்க நிக்கவே காது நுனி குளிருது ".


" பிறகு கடைசியில் செயின்ட்காளன்ல ,,,இடையில கொஞ்சகாலம் பிரஞ்சு கதைக்கிற லவுசாணியிலயும் இருந்தேன்,"


" அதுதான் பார்த்தேன் உங்களிடம் ஒருவித நளினமான நாகரீக ஸ்டைல் இருக்கு "


" அட.,,தாலியக்கட்டு.அப்படி ஒரு பளாயும் இல்லை,,,"


" என்னது,,"


" இங்கிலீஸ்,,டொச்,,கதைக்க கொஞ்சம் தெரியும், நல்லா நேரம் காலம் இல்லாமல் தும்படி அடிச்சு உழைச்சன் ,...வேற ஒரு ,தாலியக்கட்டுமில்லை ."


" சரி ஏன் திரும்பி வந்திங்க,,அவன் அவன் இங்க இருந்து தலையக் குடுதெண்டாலும்அங்கெபோக காணி பூமியை வித்து அடகுவைச்சு ஓடித்தப்பி போக இந்தா அந்தா எண்டு குதிகாலில கெம்பி குதிச்சு போக நிக்குறாங்கள் "


" அட.,,தாலியக்கட்டு.,,அதுதானே சொல்லுறேன் ..ஒரு கட்டதுக்கு மேலே பிடிக்கவில்லை..மணிக்கூடு போல ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை,,,வீடு,,,,வேலை,,,வீடு..,வாழ்க்கை,,,,வீடு...,வேலை..."


" அட,,இங்க மட்டும் என்னவாம் அதுதானே இங்கே. யும் ,,ஜோன்சன் என்ன சொல்லுறீங்க."
.
.....................வில்சன் பதிந்த அந்த ஜோன்சனின் படத்தைக் கிளிக் செய்தபோது , அது ஜோன்சனின் முகநூல் கணக்குக்கு கொண்டுபோய் விட்ட்து. ஆச்சரியமாக அந்தப் படத்தின் கீழே நிறைய அவரோடு ,நண்பர்கள் உறவினர்,May he rest in peace ,So sad to see leaving so early., என்று ஆங்கிலத்திலும் கடவுள் நித்திய இளைப்பாற்ரியை அவருக்கு அருள் வாராக! என்று தமிழிலும் எழுதி இருந்தார்கள்.......................... .


" ஹாஹாஹா...அட.,,தாலியக்கட்டு.,,அரசு,,அரசு,,உமக்கு தெரியாது அப்பனே ,"


" எனக்கு வெளிநாட்டு அனுபவம் சுத்தமாகவே இல்லை, ஜோன்சன் "


" இங்க வேலை அரைவாசி வாழ்கை அரைவாசி இருக்கே,,,,மற்றது நம்மளிட நாடு,,நம்மட சனங்கள்,,நம்மட சாப்பாடு,,,இதுபோல சுவிஸில வருமே ,,சொல்லும்பார்ப்பம் "


" உள்நாட்டிலேயே உழுதுகொண்டு இருப்பதால் உண்மையாகவே எனக்கு வெளிநாட்டு அனுபவம் இல்லை,,ஆனால் நீங்க சொல்லுறதை நம்புறேன் "


" பொறும் வாறன்,,நாளைக்கு ஒரு பெரிய ஆல்பம் கொண்டுவந்து காட்டுறேன்,,"


" அட, "


" நான் வேலை செய்த குசினி...பிறகு சாப்பாடு கொண்டுபோய் விநியோகிக்கும் ம்யூசிக் காளியாடடம் நடக்கிற இடம்,, டொச் படிப்பிச்ச டீச்சர் . ஆல்ப்ஸ் மலையில பனிச் சறுக்கி விழுந்து எழும்பினது .... என்னோட பொஸ் ,,அவன் ஒரு ஜெர்மன்காரன் ,,மரங்களால ஒரு பாக்கில மணிக்கூடு செய்து வைச்சு இருக்கிற இடம்.... லவுசான் ரிவர்..எல்லாம் காட்டுறேன் ..


" சரி ,,கொண்டுவாங்க ,,வெளிநாட்ட போட்டோ அல்பத்திலே என்றாலும் தொட்டு தடவி வாசனையை முகர்ந்து பார்த்து மனச்சாந்தி அடைவம் "


.......................ஜோன்சன் .வில்சன் பதிந்த அந்த படத்தில் ஆங்கிலப் பாடகர் லயனல் ரிச்சி போல ஜோன்சன் நீண்ட சுருள் முடி அடிக் கழுத்துவரை நீண்டு தொங்க, வெளிநாட்டு சுவாத்தியதில் முகமெல்லாம் செல்லச் சதைகள் மினுக்கு மினுக்கு என்று பளிச்சிட இளமையாக சிரித்துக்கொண்டிருந்தார்.........


" ஹாஹாஹா ......அட.,,தாலியக்கட்டு,,,அப்படி ஒண்டும் அங்கெ இல்லை,,"


" சுவிஸ் பணக்காரநாடு ,கார், வீடு எல்லாம் சும்மா கிடைக்கும் அது இது என்று இங்கே கதைகளை அவிட்டு விடுகிறார்களே,,அது உண்மையா,,அல்லது சும்மா காதில பூ சுத்துறாங்களா ? "


" .அட.,,தாலியக்கட்டு,,,அப்படி ஒண்டும் அங்கெ இல்லை,,"


" அப்ப இங்கே சொல்லுறாங்களே ,,சும்மா பொட்டனி கட்டி அள்ளி அடையலாம் எண்டு "


" ஹாஹாஹா ......அட.,,தாலியக்கட்டு, துண்டைக்காணோம் துணியக்காணோம் என்று வேலை செய்தால் தான் கார்,,வீடு வேண்டலாம் "


" அப்ப வேற என்னதான் ஓசியில இருக்கு ஜோன்சன் "


"ஓசியில மூச்சு விடுற காத்துதான் இருக்கு ,, பாத்ரூமில குளிக்கிற தண்ணிக்கும் மீட்டர் வைச்சு காசு,,குளிச்சு முடிய போற கழிவுதண்ணிக்கும் மீட்டர் ஓடக் காசு,,அரசு "


" வேற என்ன இருக்கு ஜோன்சன் "


" என்ன சின்ன நாடு சுவிஸ்,, நல்ல அமைதியான துப்பரவு சுவிஸ்ஸர்லாண்ட் ..அந்த நாட்டுக் காத்தை சுவாசித்துக்கொண்டிருந்தாலே தொன்னூறு வயசுக்கும் சுவாத்தியமா இருக்கலாம்,,,"
.
.                   ............ஜோன்சனின் நினைவுகளில் ஒரு காலத்தில் முடிவில்லாத ஒளி உயிர்ப் பிடிப்புகள் மீது ஒளிர்ந்து சமதானத்தில் இளைப்பாறிவிடும் வாழ்க்கையை இன்னொருமுறை சமாந்தரமாக பார்க்க முடியும் போலிருக்கு.......................


                                         அடுத்த நாள் அல்ல அதுக்கு அடுத்தநாள்தான் சொன்ன மாதிரியே ஜோன்சன் ஆல்பம் கொண்டுவந்தார். அதில அவர் சொன்னதுபோலவும் அதுக்கு மேலேயும் நிறைய அவரோட சுவிஸ் வாழ்க்கை பற்றிய டாக்குமெண்டரி போல நிறைய கலர் படங்கள் இருந்தது. எல்லாமே மிகச் சிறப்பாக இருப்பது போலிருந்தது அந்த ஆல்பத்தில் .


                                                          சாம்பல் வாழைக்காய் நிறத்தில மாலைநேர பனிப்பொழிவுகளும் ,
பெயர் தெரியாத மலர்களும், அழகான வீதிகளும், வைட்சுவான் தேவதைக்கதைகளில் வருவதுபோல உயரமான சமயலறைச் சிம்மினி வைச்ச சுண்ணாம்புக்கல் வீடுகளும் , வெளிச்சமான கோடைகாலமும் , ஆறுகளும் ஏரிகளும், வெள்ளை மனிதர்களும் ஏகப்பட்ட நிறங்களில் பூலோக சுவர்க்கம் போலவே இருந்தது சுவிஸ்ஸர்லாண்ட்.


                                           ஜோன்சன் பிளாஸ்டிக் போலியெத்திலீன் போன்ற ஒரு உடுப்பால தலையில் இருந்து கால்வரையில் மூடிக் கட்டிக்கொண்டு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் அண்டா குண்டா பாத்திரங்களில் ச்பக்கத்தி நூடில்ஸ்க்குள்ளே தக்காளி ஸோஸ் போட்டு கிண்டிக்கொண்டு சமைக்கும் படங்களும், பின்னர் அதை ஒரு வானில இசை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு கொண்டுபோய் விட்பனை செய்யும் படங்களும் இருக்க, அவரோட பொஸ் அந்த ஜெர்மன்காரனைப் படங்களில் காட்டி அவனைப் புகழ்ந்து விபரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார் ஜோன்சன்.


                                                   
நமக்கெல்லாம் அப்போது வெளிநாடு என்பது கதைப்புத்தகங்களில் வாசிக்கும் போதோ, அல்லது டவுனில் தியடரில் ஓடும் இங்கிலீசு படம் பார்க்கும் போதோ, அல்லது இப்படி வெளிநாடு போட்டு வந்தவர்கள் விமானமேறி வந்து சொல்லும் விவரணங்களில் இருந்தோதான் ஒரு விதமான கண்ணா பின்னா என்று பிக்காஸோவின் தி லேடிஸ் ஒப் அவிக்னன் ஓவியதில நிக்கிற பெண்களில் எதையுமே உருப்படியாக கண்டுபிடுக்க முடியாதது போலத்தான் இருக்கும்.


                                           அப்படி இருந்தாலும் வெள்ளைக்காரர்களை ஓரளவு கிட்டவே நெருங்கி வாசனையே பார்க்கும் அளவுக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்து இருக்கு. எங்க ஊர் நல்லூர் திருவிழா பார்க்க வெள்ளைக்கார டூரிஸ்ட்கள் சுவிங்கம் சப்பிகொண்டு பெரிய பெய்ய ஏசி பஸ்ஸில் வந்து எங்கள் வீட்டுக்கு முன்னால் நிட்பாட்டி போட்டு , பிறகு கோவிலடிக்கு அதிலிருந்து வெறுங்காலில் இறங்கித்தான் போவார்கள். .எங்க அயலட்டை தெரு நாய்கள் தலைக்கு தோயாத அவர்கள் மணத்தில் கவரப்பட்டு ஓடிப்போக அதுகளுக்கு பிஸ்கெட் போட்டு அதுகளோடு இங்கிலீஷில் கதைப்பார்கள்.


                                                        ஜோன்சன், சுவிஸில் அவரோட வேலை வைன் கொடுத்த மணிக்கூடு போல உணர்ச்சி இல்லாத மெஷின் போல என்று சொன்னார். அவர் வேலைசெய்தபோது எடுத்த படங்களை பார்க்கவே கடைந்த மோரைத் தூளியில திருகி நெய் எடுக்கிற மாதிரித்தான் இருந்தது. . அதுதான் ஒரு கட்டத்துக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியாதவாறு வெறுக்கவைத்தது என்றும், அவரோட காதலி அப்போது இலங்கையில் இருந்ததாலும், ஒரு முடிவோடு சுவிஸ் வாழ்க்கைய மூட்டை கட்டி வைச்சுப்போட்டு அப்போது யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த போதும் ஊருக்கே வந்துவிட்ட்தாகச் சொன்னார்.


..............................தெரிந்தவர்கள் இறந்தது பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் ஏனோ கவலை வருவதில்லை. எனக்கு வயதாகிக்கொண்டிருப்பதாலா ,,,அல்லது எல்லாருக்கும் போல எனக்கும் முடிவுக் காலமென்பது ஏற்கனவே மிகக் கச்சிதமாக வடிமைக்கப்பட்ட ஒன்று என்பதால தெரியவில்லை ................


                                        ஜோன்சன் அதுக்கு பிறகு ஒரு சில மாதங்களே வெதுப்பக்கத்தில் வேலை செய்தார். பின்னர் இடம்மாறிப் போய்விட்டார். ஆனால் அவர் சுவிஸில் செய்த அவரோட வேலை வைன் கொடுத்த மணிக்கூடு போல உணர்ச்சி இல்லாத மெஷின் போல என்று சொன்னார் அல்லவா அதை இன்னொருமுறை கேட்க்கும் சந்தர்ப்பம் வன்னியிலே கிடைத்தது. அதுவும் அப்போது அவர் ஸ்டோர்கீப்பர் ஆக அவர் வன்னியில் இடம்பெயர்ந்து வேலைசெய்தபோது,,
.
......................................ஒருநாள் அவரைச் சந்திக்கப் போனபோது, ஒரு மணிக்கூடுதான் அதுக்கு காரணமாய் இருந்தது..............


                                                   
ஜோன்சன் வெதுப்பகத்தை விட்டு போன கையோடு வலிகாமம் வடக்கில் இலங்கை ராணுவம் ரிவரிச சூரியகதிர் ராணுவ நடவடிக்கை தொடங்கியது. ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணுற்றி ஐந்தில் அது டிசம்பர் பருவ மழையோடு , அகோர செல் மழையும் சேர்ந்து குடாநாட்டைப் பிடித்த போது, குடாநாடு முழுவதும் இயல்பாக வாழ்ந்த மக்கள் இஸ்ரேலியர்கள் ஜோர்டான் நதியைக் கடந்து எகிப்துக்குப் போன எஸ்சோடாஸ் போன்று நாவற்குழி பாலம் தாண்டி தென்மராட்சிக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய சோகமான வரலாற்றுச் சம்பவம் நடந்தது ,


                                                                                      பின்னர் கொஞ்சநாள் கொடிகாமதில குந்தி இருந்து இந்தா விடமாடாங்கள் அந்தா விடமாடாங்கள் என்று நம்பி ஏமாற ஒருநாள் காலை புகையிலைத் தோட்டப் பனிப்புகாருக்கு ஊடாக எதிர்ப்பு சமரோ,,முறியடிப்பு சமரோ எதுவும் இல்லாமல் இலங்கை ராணுவம் வாரத்வத்தை சரசாலை முனையால் உடைச்சுக்கொண்டு மீசாலைவரை பிடிக்க, பலர் திரும்பி ராணுவம் பிடித்த இடங்களுக்கு சென்றார்கள். அப்படிப் போவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் பலர் வள்ளத்தில் ஏறி கிளாலி கடலால் வன்னிக்கு போகவேண்டிய நிலைமை வந்திட்டுது.


                                                     எம்பிசீஸ் தென்மராட்சியை ராணுவம் பிடிக்கலாம் என்று நினைத்தோ தெரியவில்லை , கொஞ்ச ஊழியர்களை வன்னிக்கு அனுப்பி , அங்கெ இடம்பெயர்ந்துள்ள குடாநாட்டு மக்களுக்கு அரசாங்க நிவாரணம் வழங்கும் வேலைகளைத் தொடங்க அதில வேலை செய்த பலரை வன்னிக்கு போய் வேலைசெய்யும் விருப்பம் இருந்தால் போகும்படி அறிவுறுத்தினார்கள்.


                                                  ஆர்வக்கோளாறில் வன்னிப்பெருநிலப் பரப்பில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றதிலும், தனியாக ராணுவம் விடுவித்த ஊருக்கு திரும்பி போவதில் ஆபத்து இருந்ததாலும் , நான் வன்னிக்கு போனேன். ஜோன்சன் ஆரம்பத்திலேயே வன்னிக்கு போய்விட்டார். அப்படிதான் பின்னர் அவரைப் பரவிப்பாஞ்சான் கிளிநொச்சியில் சந்தித்த போது சொன்னபோது அறியமுடிந்தது. பரவிப்பாஞ்சான் ஸ்டோர் ஒபிஸில் அவர் வேலைசெய்தார் என்று நினைக்கிறன். சரியாக சொல்லமுடியவில்லை.


                                                                 அதுவும் கொஞ்சநாள்தான், இலங்கை ராணுவம் கிளிநொச்சியையும், தாண்டிக்குளத்தையும் நெடுஞ்சாலை ஊடாக இணைக்க A 9 பாதையில் வன்னிவிக்கிரம சண்டை தொடக்கிபரந்தன் கெமிக்கல் பக்ட்ரீயில் நின்ற ராணுவம் முன்னேறி கிளிநொச்சி நகரையே பிடிக்க, மீண்டும் ஒரு இடப்பெயர்வு வன்னிக்கு உள்ளேயே நடந்தது. எங்கள் இடம்பெயர்ந்த எம்பிசியெஸ் தலைமை அலுவலகம்
ஸ்கந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது


                                                             அங்கே இயங்கிய கிளைகளுக்கு விநியோகிக்கும் மையமாக,கரும்புத்தோட்டமும் ,வாய்க்கால்ப் பிள்ளையார் கோவிலும், நஞ்சுண்டகாட்டு வயல்களும் , ஆணைமுறிப்புக் காடும், அக்கராயன் குளமும், கோணல்த் தென்னை மரங்களும் நிறைந்த அழகான இரண்டாம் வாய்க்கால் ஸ்கந்தபுரத்தில் ஜோன்சன் ஸ்டோர்கீப்பாராக வேலை செய்தார். அவருக்கு கிளார்க் ஆக வில்சன் வேலை செய்துகொண்டிருந்தார்.


            .........................ஜோன்சன் நல்ல இதயமுள்ள அன்பான மனிதர் .இருந்துமென்ன எல்லாமே மிகச் சிறப்பாக இயங்குவது போலிருக்கும் ஒரு வாழ்வோட்டம் ஒரு சின்ன அதிர்வோடு அடங்கிவிடுகிறது . அதுபோலத்தான் வளைவுகள் இல்லாத பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் நதியும்தான் ஒரு வெள்ளம் வரும்போது சுழித்து விடுகிறதே ...............


                                                                            
ஒருநாள் அவரைச் சந்திக்கப் போனபோது, ஒரு உறவினர் லண்டனில் இருந்து வன்னிக்கு வந்தபோது எனக்குக் கொண்டுவந்து தந்த ஒரு மணிக்கூடுதான் அதுக்கு காரணமாய் இருந்தது. நான் கட்டியிருந்த அந்த வெளிநாட்டு மணிகூட்டை ஜோன்சன் கேட்டார். எனக்கு அந்த மணிக்கூடு பற்றிய பெறுமதியான விசயங்கள் ஒன்றுமே தெரியாது. ஜோன்சன் அதை வேண்டிப்பார்த்திட்டு நிறைய விசியம் சொன்னார். அதனால அவருக்கே அந்த மணிகூட்டை அவரிடமே கொடுத்திட்டேன்........


                                                                          அந்தக் கடிகாரம் ஒரு காந்தக் கடிகாரம் . அதில திசை எல்லாம் கொம்பாஸ் போல பார்க்கலாம், அது மூடி போட்டு மூடி இருந்தது. மூடியைத் திறந்துதான் டயல் பார்க்க வேண்டும். மூடிக்கு மேலே வெளியே கிரேசி கோர்ஸ் செவ்விந்தியத் தலைவன் குதிரையில் இருக்கும் படம் வெட்டி இருந்தது. அதன் இணைப்பு வார்களில் ஸ்பிரிங்ஸ் இணைப்புகள் இணைக்கப்பட்டு இருந்தன. ஜோன்சன் தான் அதை பார்த்திட்டு இந்த விபரங்களோடு இது பெரிய பெரிய ஹார்ஸ் பவர் உள்ள ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள் ஓடித்திரியும் ஹெல் ஏஞ்செல்ஸ் என்ற ஒரு கும்பல் அணிவது என்று சொன்னார்.


                                                                                 இதுவரைக்கும் அறியப்படாத வன்னிப் பெருநிலப்பரப்பில் சில வருடங்கள் ஜோன்சனுடன் ஒரு நடுக்காட்டுப் பகுதியில் ஒன்றாக தங்கி வசிக்கவேண்டிய சம்பவம்தான் அவரைப்பற்றி இன்னும் நிறைய விசயங்கள் அறியக் காரணமாக இருந்தது .


.....அந்த வாழ்க்கை துன்பங்களோடே இன்பமாகக் கடந்துபோன கனவு...அந்த நினைவுகள் .தொடர்ந்து வரும் .....
.
This  pics was taken by  dear friend  Thevaraja Wison,  thanks wilson.