Sunday 28 August 2016

மழைநாளில் ஒஸ்லோ வீதிமனிதர்கள்




 " மழை நாளில் ஒஸ்லோ வீதி மனிதர்கள் " என்ற தலைப்பில் பல படங்கள் மழையோடு மழையாக மனம் போல் நனைந்து எடுத்தேன். அதில் எடுத்த ஒவ்வொரு நிழல்படத்தையும் ஒவ்வொரு படமாகப் போட நினைத்து உள்ளேன். அவை கவிதைபோல எழுதுவதுக்கான உற்சாகத்தை தருவதால் அதோடு கவிதைபோல ஒன்றையும் தள்ளி விடப்போகிறேன். 

ஒரு மழை நாளில் மொபைல் போனில் படம் எடுப்பதில் உள்ள முதல் நடைமுறைச் சிக்கல் அதன் தொடு திரையில் தண்ணி விழுந்துபட்டவுடன் தொடுதிரையை உருட்ட முடியவில்லை. அங்கால இங்கால அசையவே அடம்பிடிக்குது. " இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல " எண்டது போல அதைத் துடைத்து மறுபடி இயக்கவேண்டி இருந்தது.

அதுக்கு போஸ் கொடுத்தவர்களிடம் பேசி முன்அனுமதி பெற்று அவைகளை எடுத்தேன், உண்மையில் படம் எடுப்பதை விடசுவாரசியமாக அவர்கள் எல்லாருமே என்னோட பத்து நிமிடம் பேசிவிட்டுத்தான் சென்றார்கள். ஜோசித்துப் பார்த்தா இந்தப் படங்களுக்கு " பேச யாருமில்லா ஒஸ்லோ வீதி மனிதர்கள் " என்று பெயரை இந்தப் படத்தொகுப்புக்கு வைச்சு இருக்காலம் போல இருக்கு....

பொதுவா இப்படி " ப்ரோஜெக்ட் " எல்லாம் " ப்ரோபோசனால் ஸ்டில் போட்டோகிராபர்கள் " தான் செய்வார்கள். நான் அந்த வகை இல்லை, என்னிடம் சும்மா பிலிம் காட்டவும் ஒரு காமராவே இல்லை,அதுகளை இயக்கவும் தெரியாது . அது எனக்கு தேவையும் இல்லை. அப்புறம் " எள்ளுதான் எண்ணெய்க்கு அழுவுது, எலி புழுக்கை ஏன் அழுவுது? " என்று நீங்க நினைத்தா, அதில கொஞ்சம் உண்மை இருக்கு..ஆனால் எனக்கு நிறையவே மனநிறைவு கிடைத்தது.

அழகான பல வர்ணக் குடைகள் , அதில் நடமாடும் இளம் பெண்கள், சாட்டோடு சாட்டா இறுக்கிப் பிடிக்கும் காதலர்கள். குடையிருந்தும் விரித்துப் பிடிக்க மறந்த மனிதர்கள், பிளாஸ்டிக் மழைக்கவசங்களில் நடனமாடும் மனிதர்கள், எதுவுமே இல்லாமல் வானமே கூரை பூமியே வீடு என நினைத்துக் குளிக்கும் மனிதர்கள்...ஏகப்பட்ட சாத்தியங்கள்.

அடிச்சு ஊத்தும் மழையை வீட்டு ஜன்னலுக்கால " நோகாமல் நொங்கு தின்னுற " மாதிரி பார்த்து ரசிப்பதுக்கும், மழைக்குள் இறங்கி அதோடு பேசிக் கொண்டு அதைப் படம் பிடிப்பதும் வேறு வேறு வித்தியாசமான அனுபவங்கள். காலநிலைகள் கடந்து செல்லும் காலத்தின் நிலைப்படிகள். அதில் தாண்டி பாதங்களை வெளியே வைக்க சுவாரசியத்தைத் வேற எதுவும் தேவையில்லை.

மழை நாளில் ஒரு நகரம் படு உற்சாகமாகத்தான் இயங்குது. அப்படி அதன் ஆத்மாவை பிரியாமல் ரசிக்க மறந்த நாட்கள் சபிக்கப்பட்டவை. அதை நினைக்க முன்னம் எல்லாம் " என்ன சீவியமடா இது " என்ற ஒரு " பன்ச் டயலக்கை " எப்பவுமே போகிற போக்கில் கடைசியில் வேண்டா வெறுப்பாக போட்டு விட்டுப் போவது, ,உண்மையில் அதை இன்றைக்கு மனம் விரும்பியே பொசிடிவ் ஆகப் போடவேண்டியிருக்கு...


                                    அருமையான  சீவியம்  இது.!



மழை 
மும்மரமாக
வெள்ளிகளை
இழுத்து நீட்டி 
இறக்கி விட்டு 
ஓய்வெடுத்து 
தார் போட்ட 
வீதியெல்லாம் 
தேரோடி நீராடி 
விளையாடிக்கொண்டிருந்த 
நேற்றைய மாலை


தூறல் 
விதைத்துக்கொண்டிருந்த
சாரல் துளிகளோடு 
வெய்யில் 
இடையே குறுக்கிட்டு 
நிமிடத்துக்கு ஒரு 
வெளிச்சம் 

பிரதிபலிக்க 
ஒரே படத்திலையே 
கற்றுக்கொண்ட 
மொத்த வித்தையையும்
தானியங்கித் தன்பாட்டில் 
செருகி விட்டது
கையடக்கி...!

                                              


முற்பகலில்
சாரல் விசிறியபடி
கால்களில்
தப்புத் தண்ணி
தெளித்துக்கொண்டு 
நெருக்கமாக
வரவிரும்பும்
மழைப் பாதைகள்...

அந்தி மாலை
ஈரமாகத்
தெரிந்தாலும்
பச்சை மரங்களைப்
பொறுத்தவரை
அதன்
குளிர்மை
பக்கத்து வீட்டு
இரகசியக் காதலிகள்....

இனிப்
பின்னிரவெல்லாம்
கிளைகளிளிருந்து
சொட்டுச்சொட்டாக விழும்
பருவத் துளிகளை
புல் வெளிகள்
மன்மதலீலை செய்து
சுற்றி வளைத்து
தாராளமாகப்
பயன்படுத்திக்கொள்ளும்! 

.

அக்கறையோடு 

மழை
அதைவிடக் கரிசனையோடு 
நனையாமல் குடைபிடி 
மனிதர்கள். 
யாரோ ஒரு கர்ணன்   
விளம்பர மொடல் 
நனையக் கூடாது என்ற 
உயர்ந்த சிந்தனை
தன்னோட குடையை 
அவளுக்கு கொடுதுப்போட்டு 
நனைந்துகொண்டே 
வீடு போயிருக்கிறான். 
ஆண்களுக்கு இரக்கம் தான்!
 அட நம்புங்கப்பா 
" முல்லைக்கு குடை கொடுத்த பாரி வள்ளல்கள் " 
இந்த  
நகரத்தில் நிறையப் பேர்.

                                   
 


மனம்போல 
நனைய விரும்புவன் 
தாழ்வாரத்தில் 
ஒதுங்கும் போது
விசிறுகிறது

அவன்
விருப்பமாக
வீதியெங்கும்
இறங்கி
நடக்கும்போது
அள்ளிக்கொட்டுது

ஒரு
தனி மனிதனோடு
தன்னுடைய
சந்தோசங்களைப்
பகிர்ந்துகொள்ள
விரும்பியே

அந்தரங்கமாக
ஒதுங்காமல்
அடக்கத்தை
அவிட்டு எறிஞ்சுபோட்டு
ஆட்டம் போடுது
மழை !

                                   



மதித்து
ஒதுங்கியே 
நடைபாதைக்கு
வழி விட்ட
மிதிபடாத
சருகுகளின்
உணர்வுகளில்
மனித
அவமதிப்புக்கள்
இல்லை.!

.

அரைகுறைகள்தான்
ஆடுவார்கள் என்று 
கேள்விப்பட்டிருப்பீர்கள்
புது வெய்யிலோடு
பூபாளம் பாடி
அழகாய்
விடியாத நாளுக்கு
வானமே கூரை
வீதியே வீடு
என்று
நினைப்பவன்
யார்
முகத்தில்
இன்று விழித்தேன்
என்று யோசிப்பதில்லை!
                                      
.

அத்தனை
நவீனத்துவம்
நிறைந்த நகரத்தில்
அபத்தமான
பிரதிபலிப்புகளும்
இடறுவது
விநோதமாகத் தோன்ற
சவால்களின்
உச்சகட்டப்
பிரதியாக
மழை கழுவிவிட்ட
தார் வீதிகள்
இப்படியான
மனிதர்களை
அடையாளப்படுத்துவது
எப்பவாவது
ஒரு முறையே
கிடைக்கிறது ! 

.


..என்
வேதனையை
வெளியே இழுத்துவிடு
என்று
வாழ்விடமில்லாதவன்
சட்டப்படி
கேட்கிறான்

போதைவஸ்தில்
விழுந்து அழிந்துபோன
முகத்தைக்
காட்ட விரும்பாத
அவனின்
புதிய காதலி
இயலாமையைத்
திரும்பிக்கொள்கிறாள்

சமூகத் தோல்வியின்
பெரிய
அவலத்தை
சின்ன சட்டத்துக்குள்
அகப்படுத்த
நான்
அவசரப்படுகிறேன்

நிலைமையைப்
புரிந்துகொண்ட
மழை
கொஞ்சம்
தாமதிக்குது !

.

ஈரமான
மழையைப் பற்றிய
அவனின் 
கற்பனை போலவே
கடைசியில்
இதுவும் நடந்தது

அதிகம்
உளறுகிற
அவளாகவே உருவெடுத்தவை
எழுதச் சொல்லி
கையைக் கடிக்க
நிரந்தர வேலை
வருடங்களாய் இல்லை

காதல் பற்றிய
வர்ணனைகளில்
பாதுகாப்பாக இருக்கும்
உறுதிமொழிகளை
உள் நோக்க
பதுங்கிக் கொள்ளும்
அவநம்பிக்கைகள்

அவனே
உருவாக்கிய
முடக்கி அழித்து விடும்
நேசத்திற்கு
பக்குவம் தேவையென்று
உணர்ந்துகொண்ட
மேகங்கள்
இருண்டு திரண்ட
ஒரு நாளில்

எழுதி வைத்த
வரிகளுக்கும் சொல்லாமல்
திறப்பு ஓட்டையில்
செருகி வைத்த
கடைசிக் கவிதையோடு
அவனும்
பெரிய நகரத்துக்குள்
காணாமல் போனான்.

                                            
நடு நகரப் பாதை
தேக்கி வைத்து
ரசித்துக் கொண்டிருந்த 
சின்னக் குளங்களில்
கடந்த அவனின்
பிரிக்கமுடியாத முகத்தைத்
தேடித் தேடி
ரசித்துப் பார்த்தாள்

வேகமாகச் சீறிய
வாகனம்
உடை நனைக்க
சிதறியெறிந்த முத்துக்களை
முகம் சுழிக்காமல்
வரம்போல
வேண்டிக்கொண்டாள்

அப்பப்ப
அவன் கைகளை
இறுக்கிப்பிடித்து
இசை வீணை வாசிக்கும்
நாடிகளில்
சூடேற்றி இரவுக்கு
ஒத்திகை
பார்த்துக்கொண்டாள்

முகத்தில்
துவானம் கிள்ளி முடிய
ஒளி வீசிய
ஒரு துளியை
நாக்கால் நக்கி
கன்னம் சிவந்து
சிரித்துக் கொண்டாள்

மிச்சத் தூரத்தை
அரங்கேறி விரித்த
குடையில்
விழுந்த துளிகளின்
இடைவிடாத
தாளத்தின்
பேச்சைக்கேட்டுக்கொண்டே
நடை போடுகிறாள் !

அவனோ
மழையை
விட்டுத் தொலையச் சொல்லி
திட்டிக்கொண்டு
முட்டித் தட்டும்
குடைகளைச்
சபித்துக்கொண்டு
அவளையும்
இழுத்துக்கொண்டு போகிறான்! 

.
                                         


மழையின்  மாலை நேரம். 
காதலை  நெருக்கமாக்கிவிட்ட குடை. 
நடைபாதையில் 
வெள்ளித் தெறிப்புக்கள்.
மெலிய சாரல் போடும் தூறல் 
புழுதியைக் 
கழுவி எடுக்கும் பாதை. 
நீளவே நடக்கும் 
நீண்ட நிழல்கள். 
ரகசியமான  
சதிக்குத் தயாராகும் மம்மல் இருட்டு. 
வண்ணக் கலரில் 
உயிர்ப்பைத்  தேடி எடுத்தாள் 
மஹாலட்சுமி 
கறுப்பு வெள்ளைக்கு மாற்றிவிட 
மழை 
இன்னும் அதிகமாக காட்சியை
ஈரமாக  
நனைப்பது போலிருக்கு
எனக்கு. 
உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை.!



Saturday 27 August 2016

அன்னமிக்கா ,பதின்நாலு கவிதைகள் .


......................................................................047
எது கவிதை
என்ற குழப்பத்தோடுதான்
இதயம் தாண்டி வந்து
இதையும்
எழுதிக்கொண்டிருக்க
முழங்கையில்
வியர்த்து வடிந்த முகத்தை
புறங்கையால்
தேய்த்தெடுத்தாள் அனாமிக்கா
ஏரிக்கரையில்
நீலத் தண்ணி
ஒப்பீடுகள் எல்லாம் சேர்த்து
மேகத்தைப் பிரதியெடுத்து முடிய
அதில் நான் எறிந்த கல்
அலைகளை
ஆவேசமாக்கிவிட்ட நேரம்
வானம் துண்டுதுண்டாக உடைந்தது
இலை நுனியை விட்டு
நழுவிவிடும் பனித்துளி போல
அளவீடுகளில்
புதிதாக எதையும் சேர்க்காத
வரன்முறைகளுக்கு உட்பட்ட
வாழ்க்கை
அதன் எல்லைக்கோடாக
உணர்ச்சியையே வைத்திருக்கென்றாள்
அனாமிக்கா
நான்
குறிபார்த்து எறிவதுக்கு
இரண்டாவது குறுணிக்கல்
தேடினேன்
தனிமையையாவது
அமைதியாக இருக்கவிடடாவென்று
சிரித்துக்கொண்டே
மூக்கில் சினந்துகொண்டாள்
இப்படியான
தருணங்களில் தான்
வார்த்தைகள்
மதன சுரங்களின்
நிறங்களில் மயங்கிவிட
என்னையே எனக்குப் பிடிப்பதில்லை
.

..............................................................048


நிர்பந்தங்களிலிருந்து
ஆகாயம் போன்ற நிம்மதி
ஒரு கணம்
செய்துகொண்ட ஒப்பதத்தை மறந்து
இன்னொருமுறை 
அனாமிக்காவின்
சுவடுகளைச் சேகரிக்க
ஆரம்பித்துக்கொண்டிருந்தது

தேவைக்கேற்றபடி
சட்டென்று முடிவு எடுக்க முடியாத
சலிப்புக்கள்
எரிச்சலாகித் தலைகோதும்
உலக வாழ்வியல்அவஸ்தையாக
உறைபனியில்
அவள் நடந்த பாதையில்
முன்கோடையின்புழுதி
வசவு போலவே அப்பியிருந்தது.
குறித்த சில நாட்களில்
ஏற்பட்ட பரீட்சயம்
ஒப்பீட்டளவில் ஆவியாகி
மிகக்குறைந்த நேரத்தில்
கிடைத்தற்கரிய
அனுபவம் எல்லாமே
படபடப்புகளாகிக் கொண்டிருந்தன.
காத்திருப்பில்
வண்ணத்துப்பூச்சிகள்
வானவில்லுகுப் போட்டியாக
நிறங்களைப் பூசிக்கொண்டபோதும்
நுழைய இடமில்லாத
இடப்பற்றாக்குறையை
ஏற்படுத்திய காற்று
அங்கலாய்ப்பாகவிருந்தது
பொறுமையோடு
இருத்தலென்பது
என் சக்குப்பிடித்த மூளையின்
நப்பாசை.
அசல்பிரதிகளை விட்டுவிட்டு
நகல்களில் நளினம் தேட
நகரவேமாட்டேன் என்ற
நினைவுகளின் ஞாபகமூட்டலில்.
அனாமிக்கா
அழுந்தப் பிடித்துக்கொண்டு
அதே புன்னைகையில்

..............................................................049

அந்தக்கதை
அதிகம் அறியப்படாத
இயல்பு நிலைகளில்
சிதைக்கப்பட்டிருந்த
முகவரிகளில் ஒதுக்குப்புறமானவொரு
இடைப்பட்ட நகரத்தில்
இந்தா அந்தாவென்று
அறுபடக்காத்திருந்தது
நான்
அதன் முதல் பகுதியை
ஒரு அனிச்சை விதமான
தயக்கத்துடன்
ஈனமனதின் ஈரக்குரலாகத்
ஒற்றி எடுத்து எழுதியதென்பது
அனாமிக்காவுக்காக மட்டுமே
யாரோ ஒருவருக்காகவென்று
வாசிக்க விட்டுச் செல்லப்பட்ட
அந்தக் கதையில்
விடுகதைகளோ
அதீதமான புனைவுகளோ
ஜோசிக்கவைக்க
இடைவெளிகள் கொடுக்கும்
முஸ்திப்புக்களோ இல்லையென்று
அனாமிக்காவே முன்வந்து
ஒத்துக்கொண்டாள்
தொடங்கியபோது
ரெண்டாவது பந்தியில்
எல்லாக் கதாபாத்திரங்களுமே
திசையறியாமல்
திணறிவிட்டன என்றவள்
பலவீனங்களைச் சொன்னதும்
உண்மைதான்
" எரிந்துகொண்டிருக்கும்
அந்தக் கதையின்
செந்நிற ஒளிச் சிதறல்களை
இரவெல்லாம்
நசிந்துபோன ரகசியத் தொனியில்
தத்தளிப்புகளாக்கி
விவரித்துவிடு " என்றாள் அனாமிக்கா
அசட்டையாகவே இருந்தேன்
விடிந்து பார்க்கக்
கதை எரிந்து சம்பலாகியிருந்தது.

..................................................................050

எல்லாவிதமாயும்
காய்ந்துபோன சருகுகளை
வாரியணைத்துக்கொண்டு
தூர வீசியடித்த
குறுணி மணல்களையும்
கூ ட்டிக்கொண்டு
மழையின் வடிசல் தண்ணி
தெருவெங்கும் அதன்
வந்து போன அடையாளத்தைப்
பதிவுசெய்திருந்தது
முதல் திருப்பத்தில்
அன்னாமிக்கா
எதிரும் புதிருமாக
நனைந்து போன
சுருள்முடியை ஒருக்களித்து
பின்னுக்கு விழுத்திய போது
மூச்சு முட்ட மூன்றுமுறை
தும்மினாள்
பிரியத்துடன் அலைந்து
எப்போதும் போல
அளவில்லா ஆனந்தத்தையும்
அடர்த்தியான அமைதியையும்
மேகத்திலிருந்து
இறக்கிக் காட்டிவிட்டு
எடுத்துக்கொண்டுபோனது போலவே
குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது
வக்கிர குரூரங்களும் ,
அதீத சுயநலன்ங்களும்,
ஆழ்மன வக்கிரங்க்களும்,
பலவீனங்களும் தின்ற
மீளமுடியா துயரமாக
எனக்கு ஒரு மழைநாளின்
முன்னிருட்டு
அவலமாக இருக்கிறது
எனக்கும்
அனாமிக்கா போலவே
பொதுவாகப் பெய்யும்
மழையில் நனைய பிடிக்கும்.
தனிப்பட
மனப்பிறழ்வில்
இருக்கும் பொழுது
எப்படி எல்லோருக்குமான மழையில்
ரசித்து நனையமுடியும்?

............................................................051

பழையவீடு
ஒரு மூலையில் கிடந்த
கத்தரிப்பூ விழிகளில்
அனாமிக்கா
மிகப்பழைய அல்பமொன்றை
ஊதித்தள்ளி தூசுதட்டி
சுட்டு விரலை நிமிண்டித்
தடவிக்கொண்டே
அற்புதங்களாய் விரிந்துகொண்டிருந்தாள்
அதிலிருந்த
எல்லாப் படங்களிலும்
காலத்தின் மழுங்கடிப்புகள்
மங்கியே போய்க்கொண்டிருக்க
அன்னாமிக்கா
பருத்திப்பாவாடை சட்டையில்
தாவணிப்பருவத்தின்
விளிம்பில் நின்றுகொண்டிருந்தாள்
ஒரு பொழுது
அம்மாவின் மடியில்
இன்னொருபொழுது
அப்பாவின் தோள்களில்
ஒரு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில்
தாத்தா பாட்டியின்
புறங்கையை இறுக்கிப்பிடித்து
ஒரு கறுத்தப் பூனையின்
கழுதை வளைத்துக்
கன்னத்தைத் தேய்த்துக்கொண்டு
வயது வந்துகொண்டும்
போய்க்கொண்டுமிருக்கும்
இடைவெளிகளில்
வெற்று நினைவாக முடக்கப்பட்டால்
உனக்கே உனக்கானதென்று
நினைவூட்டுவது
எதெல்லாம் என்று கேட்டேன்
எல்லோரும்
ஏதோவொரு பிரிதலில்
புரியமுடியாத பதில்களைச்
சொல்லிவிடுவதுக்கு முன்னே
தொலைந்துவிட்டார்கள்
நேற்று வரையிலும்
அதுபாட்டில்கடந்த
அன்றாட நான் இன்று நானாக மாறிவிட்டேன்
என்றாள்
அதுக்குப்பிறகும்
அந்த அல்பத்தை வைத்தவளை
விசாரித்து
நோகடிக்கலாமாவென்று ஜோசிக்க
அனாமிக்கா
அதிலிருந்து ஒரேயொரு படத்தை
உருவியெடுத்து
நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள்.

...................................................................052

காலடி ஓசைகளில்
சிரிப்பொலிச் சிதறலுடன்
மிதந்துக்கொண்டிருந்த
கடைசிநொடி
சட்டென்று அறுபட்டு
விழித்தெழுந்துகொள்ள
சலிப்பான
மரணவேதனையில்
ஒரு பகலின் நீட்சி தொடங்குகிறது
பேசிமுடியாத
மிச்ச வார்த்தைகள்
அயர்விலும் ஆற்றாமையிலும்
நெடுநேரம் காத்திருந்த
அந்தக் கனவை
மஞ்சள் வெளிச்சம்
வடிகட்டி எடுத்து
சொல்லாமலே வெளியேற்றியது
நிசப்த சஞ்சரிப்புக்கள்
சங்கடப்படுத்தும்
படுக்கையறையின்
ஒரு முக்கோண மூலையில்
இரவெல்லாம் வந்து உரிமையெடுத்து
சிதிலமாக்கிப்போனதுக்காக
கொஞ்சம்
இருட்டுப் பதுங்கிகொண்டிருந்தது
அவசரமாய் உதறிப்போன
அச்சமூட்டும்
நவரச வாசனைகளுடன்
கனவில் வந்தவள்
அனாமிக்காவாக என்று
அதிகாலை நினைவுகளைத்
தோண்டியெடுத்து
தீவிரமாய்விசாரித்தேன்
இப்பிடித்தான் பலமுறையும்
இமைச்சிறகுகள் செரிகிக்கொண்ட
கணநேரங்களில் தான்
அனாமிக்கா
நடந்து கொண்டு வருவாள்
எதற்காக வருகிறாள்
என்பதைக் கனவுகள் சொன்னதில்லை
போனாப்போகுதெண்டு
காலடி ஓசைகளையாவது
சேர்த்து வைக்கு முன்னேயே
அரக்கப்பரக்க
விடிந்துவிடுகிறதே.

...................................................................053

வைகறையில்
விழித்துக்கொண்ட அனாமிக்கா
தலைக்கு முழுகி
திருவிளக்குப் பற்றவைத்து
கூந்தல் துவட்டிய துவாயால்
என்முகத்தை ஒற்றி எடுத்து
இன்றைக்கு
வரலக்ஸ்மி விரதம்
தொடங்குதென்றாள்
நானோ
படுவிரிப்புகளைச்
முறுக்கி உருடுடிச் சுருட்டி
சொகுசுகள் நடுவில்
உரிமைஎடுத்து
அலாதியான உலகம்
என்ன மண்ணாங்கட்டிக்கு
அவசரப்பட்டு விடியுதென்று திட்டி
அயர்த்துகொண்டிருந்தேன்
அனாமிக்கா
இன்னும் அலங்கரித்தாள்
கழுத்தோடு ரெண்டு பக்கம்
குஞ்சர மல்லிகை
நெற்றியில் கோபுரசந்தனம்
பிறைபோல அம்மன் குங்குமம்
நடு வகிட்டில்
அய்யாங்கார் பொட்டு
அப்புறம்தான்
நானே கண்ணைக் கசக்கி
முழிச்சுப் பார்த்த நேரம்
நாவல் நிறத்தை மினுக்கிய
செம்பகப்பூ
கண்டாங்கி சேலை
புள்ளிக் கோல
மஜெந்தாநிற ரவிக்கை
இன்றைய
திருப்பள்ளி எழுச்சி
ஆனந்த விவரணமாகியதை
விவரித்துக்கொண்டிருக்க
ஆச்சரியங்களுக்கு
அவசியமில்லை என்பதால்
ஒரேவரியில் சொல்லுறேன்
அனாமிக்கா
என்
அம்மாபோலவேயிருந்தாள்.

..........................................................054

ஜன்னலில்
தட்டி எழுப்பும் துளிகள்
அதன் தாலாட்டில்
மீண்டுமொரு முறை
எந்தப் பொறுப்புகளும் முளைவிடாத 
இளமை வளரும் வயதில்
ஒரு மழை நாள்
ஆனால்
இப்போதெல்லாம்
அதே நெகிழ்ச்சியுடன் ரசிக்கமுடியவில்லை
எத்தனை துன்பம்
எத்தனை அவமதிப்பு
மனதுக்க்குள் இரகசியமாக
நுழைய முயன்று தோற்றது
பின் ஜெயித்தது
ஒருபோதுமில்லா நடுக்கத்துடன்
அனாமிக்கா
பிரிவின் வரி சொன்ன இரவு
அன்றும் இப்பிடித்தான்
மழையும் சேர்ந்தே அழுதது
நுட்பமான
குளிர்ச்சி உணர்ச்சியின்
அலைக்கழிப்புகளுக்குள்
நம்மையறியாமல்
ஆட்படுத்தக் கூடிய
மழை பெய்யும்வரை
நேசங்களை மறப்பதற்கில்லையென்று
ஆத்மாவை சமாதானமாக்கிவிட்டாள்
அனாமிக்கா
அதுவும் இயல்பான
போலிருந்தாலும்
வாழ்தலின் சந்தோஷங்கள் மீதான
எல்லா நம்பிக்கையும்
ஒளித்து வைத்துக்கொள்ளும்
வரைவுகள்
விதிமுறை மீறிவிட்டதே என்றேன்
இதுதான் விதி என்றாள்
அனாமிக்கா.

...............................................................055

அனாமிக்கவுக்கும்
இது வலி
காதலர்கள் போலவே
விழாக்காலமென்று நினைத்த
விரல் பிடிப்புகளுடன்
வீதி உலாப்போன
மிகப்பெறுமதியான
எதிர் காலமே
நிரவமுடியாத ஒரு சந்தேகத்தில்
தவறவிடப்பட்டிருக்கலாம்
இன்னொருமுறை
நமக்கென அமைத்த சவுகரியமான
தட்டிக்கழிப்பில்
சொல்ல முடியாத
அழுகை விக்கி விக்கி வரும்
அதை ஜதார்த்தம் எண்டு
சமாளிப்பேன்
அனாமிக்கா அவள்வேலைக்காக
ஓடிக்கொண்டிருப்பாள்
பயந்துபோய்
முடிவெடுத்து முன்னிறுத்தி
சந்தோஷவானில்
இறக்கை விரித்துப்
பறக்கும்சந்தர்ப்பங்கள்
சாரைப்ப்பாம்புகள் சருகுவது
போலவே இருந்தது
இன்னொரு யுத்த முனை என்று
நினைத்தால்இன்றும்
நண்பர்கள் ஆகவே முடியாதென்றபோது
அனாமிக்கா
கன்னத்தைத் தந்தாள்
பிறகு
நெஞ்சின் மேல் விளிம்பைத்
தந்துவிடுவேன் என்று தந்தாள்
நான்
என்னக்கு எப்பவுமே பிடித்த
அவள் உள்ளங்கையை இறுக்கிப்பிடித்தேன்

...................................................056

கிலேசங்களில்
எதுவுமேயில்லை
உடன்பிறப்புக்கள்
பரந்து இருக்கிறார்கள்
தேசங்களின் பூகோள எல்லைகள்
தந்திரமா விரிந்தது
அனாமிக்கா
ஒருத்திதான் என்னருகில் இருக்கிறாள்
ஒரு நேரம் சாப்பிட்டு
முழுநேரம் பசியிருந்து
இளமையின் எல்லாவிதமான
பூரிப்புகளையும்
உருவி எடுத்து
எழுதி முடித்துக் களைத்துப்போய்
போயே போய்விட்டது
நேற்றுவரையான ஆசுவாசங்கள்
இரவிரவாக
இருட்டைக் களவாடியவர்கள்
வெளிச்சத்தில்
விலாவரியாக உலாவிக்கொண்டிருக்க
உறவுப்பாசம்
கறல் பிடித்து திறக்க முடியாத
பூட்டுக்குப்
போட்டு நெம்பி எடுக்கும்
பொருந்தாத சாவி என்றாள்
அனாமிக்கா
நல்லாகவே கவனித்தேன்
அனாமிக்கா
அமைதியாக இருந்தாள்
இருத்தலை இலகுவாக்கிய
அவள் மட்டும் இல்லையென்றால்
இந்தக் கவிதையின்
கடைசி வரிளோடு
நானே தற்கொலை செய்திருப்பேன்
அதைச் செய்யவில்லை
அதனால்த் தான்
முழங்காலிட்டு அவளை விட
இன்னுமின்னும்
அமைதியாக இருக்கிறேன்
இப்போதைக்கு
நான்செய்ய முடிந்தது எல்லாமே
அதுதான்.

.....................................................057

காட்டுப்பாதை
முக்கோண வடிவில்
ரெண்டாகப் பிளந்த
தொடக்கத்தில்
அடர்த்தியாக வளர்ந்திருந்த
மரங்களோடு
நல்ல சிநேகமிருந்தது
ரெண்டுவழியும்
புதர்கள் மண்டிக்கிடந்த
பூக்களின்பெயர்களையும்
அனாமிக்கா
ஒவ்வொன்றாய் பிரியமெடுத்து
சொல்லி இருக்கிறாள்
தொடக்க வாசல் படிகளில்
வாசம்போலவே
விட்டகுறை தொட்டகுறையாக
நடந்து நடந்து கடக்கவே
அடியெடுத்துக் கொடுக்கும்
கழிவிரக்க நினைவுகளுக்கும்
பஞ்சமில்லை
ஒற்றையடிகள்
சேருமிடம் நிர்ணயித்துப்
பலமான தீர்மானங்களோடு
அனாமிக்கா
திர்கதரிசியாகி வென்றுவிடுவாள்
பலவீனமான எனக்கு
இப்போதுள்ள பிரச்சினை
எந்த வழித்தடத்தில்
வாஞ்சையோடு இறங்குவதென்பது
நீளமான விசும்பு
புல்நுனிகளில் உலகத்தையே
புள்ளிகளாக
ஆட்டி வைத்தாலும்
முடிவு எங்கு போகுமென்று
அனாமிக்கா வந்து சொல்லாதவரை
என் விடிவுகளில்
வெள்ளிகள் தெரிய வாய்ப்பேயில்லை.

அனாமிக்காவுக்கு
விருப்போடு வேண்டிக்கொடுத்த
ராகமாலிகா சேலையை
அவள்
ஒருநாளும் கட்டியதில்லை
அதன் சருகு மடிப்புக்கள்
கலையாமல்
முகர்ந்து பார்த்து
அப்பிடியே வைத்துவிடுவாள்


...............................................058

அந்த சேலைக்கு
அளவெடுத்து பிளவுஸ் வேற
தைத்துக்கொடுத்தேன்
அவளோ
அதையும் சேலையின்
நடுவில் பிடிவாதமாக செருகி
வெள்ளிக்கிழமைகளில்
மட்டுமே அதை
பூ வாசம் போல எடுத்தணைப்பாள்

அதயவள்
கட்டுவதுக்கான சாத்தியங்கள்
ஊர் கோலம் போகும்
மோகன ராக மேகங்கள்
புதுமஞ்சள் பூசி
கல்யாணம் பேசி
தலைவாழை இலை போடும்
ஒரேயொருநாள்
அதிசயமாக நடக்கலாம்

இல்லை என்றால்
என் வாழ்வோடு பேசி
வலிகளை இன்னுமின்னும்
அதிகரித்து
கட்டாமலே போகலாம்
அதன் விகசிப்புக்கள்
எனக்குப்பிடித்த எல்லாமே
நிறைவேறாமல் போகும்போதுதான்
நானும்
உயிரோடிருப்பதுபோலவே உணரவைக்குது


.............................................................................059

வெளிச்சம்தான்
வெள்ளாந்தியாக இருக்குமென்று
நினைக்க
இருட்டும் கூட
இரைச்சலான இசையோடு
வெளிவந்துகொண்டிருந்தது
கைகளைத்
தட்டிகேளிக்கையில் ஆரவாரிக்கும்
கூட்டதிலிருந்து
வெகுதுாரத்தைத் தேர்ந்தெடுத்து
விலத்தி வைத்தது போல
அனாமிக்கா
தனிமையோடு பேசிக்கொண்டிருந்தாள்
" உனது அலட்சியங்கள்
ஏதேனும்
ஒரேயொருநாள்
வலிந்து வந்து
இதயத்தை திறக்கிற நொடியில்
காதல்
எதுவென நீ நினைக்கிறியோ
அதுவே நான் " என்று
உருகிக்கரைந்துகொண்டிருந்தான்
மேடைப் பாடகன்
எதைப்பற்றியும்
பிரகரணப்படுத்த முயற்சிக்காமல்
காற்றில்
நுழைந்து வெளியேறும்
சொற்களோடு
தோழமையான சுரங்கள்
ஆத்ம பரிசோதனை செய்வதை
நானும் ரசித்துகொண்டிருந்தேன்
அலங்கோலமாய் இருக்கிறது
தனிமையைப் பற்றி
காதுகிழியப் பாடுவது
என்று அனாமிக்கா
சொன்னபோது
அதுவரையில்
அமைதியை அநாவசியமாய்
புரட்டி போட்டுக்கொண்டிருந்த
அந்த நிகழ்ச்சி
முடிந்தே போனது

.........................................................................060

நடுவகிடு எடுத்து வெய்யில் 
உச்சியில் பிளக்க 
என்னோடுதான் 
நுரை தள்ளும் கடற்கரையில் 
நடந்துகொண்டிருந்தாள் அனாமிக்கா 
அவள் நிழல்
என் நிழலோடு
வாரிச் சுருட்டி
கிளிஞ்சல்கள் எல்லாத்தையும்
கூட்டிக்கொண்டு வந்தது

ஒரேயொரு
வழி தவறி வந்த அலை
சிலிர்த்துக்கொண்டு
அவளின்
பிரத்தியேக வியர்வை
வாசங்களைக் கெஞ்சிக் கேட்டது

நேசமான சில அலைகள்
தலையைக் கரையில்
முட்டி முட்டி மோத
கடல்ப்புறாக்கள்
இரைச்சலாகச் சத்தமிடத்தையாவது
நானவள் நின்று ரசிப்பாளென
நினைக்க
கண்டும் காணாதது போலவே
அதையும் கடந்தாள்

அதிராத குதிக்கால்
வெண்மணி மணலில்
வேகம் குறையாமல்
தாளம் போட
அவளின் நீண்ட நிழல்
என் மீது பக்கவாட்டில் சேர்ந்த நேரம்
அனாமிக்கா திரும்பினாள்

இப்பிடித்தான் எப்பவும்
அவள் எறியும்
நிழல்களை மட்டுமே
சேகரித்து வைப்பதே
எனக்கும் வெய்யிலுக்கும்
வேலையாகவே போய்விட
சேரவே முடியாதவர்களைச்
சந்திக்கவே விரும்பாத அலைகள்
பின்வாங்கிவிட்டது .

.




Thursday 25 August 2016

ஏகாதசியும் பாட்டியும் ...

சின்ன  வயசில் அதிஷ்டவசமாக   நான்  என்  பாட்டியுடன்தான்  வளர்ந்தேன். என் பாட்டி  எலிசபெத் மகாராணி போன்ற ஒரு  றோயல்  ஹைனஸ்  லேடி. என்  மூளை  ஆமை வேகத்தில்  வளர்வதைப்  பார்த்து  இவன்  உருப்படுவனா  என்ற  சந்தேக்கதில்  என்  அம்மா என்னைப்  பாட்டியுடன் தள்ளிவிட்டுப் போய்  இருக்கலாம். அதில்  நான் பெற்றுக்கொண்டாதே  அதிகம், இழந்துபோனதென்று எதுவுமே  இல்லை.  பாட்டியைத் தவிர...

                                             தில்லுமுல்லுகள் திருகுதாளங்கலுடன்  இன்றும்  வாழ்ந்துக்கொண்டு  இருக்கும்  என்  முரட்டுக்காளை வாழ்கையில் பாட்டி என் இதயத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் பதிந்து விட்டுப்போன அன்பு பாசம் கருணைதான்  என் முக்கிய அடையாளமாக வெளிவரும் நேரங்களில் நானும்  எல்லார் போலவும் இந்த உலகத்தில் வாழமுடியும் என்ற நம்பிக்கையின் ஒளிக்கீற்றை  ஏற்றிவைத்த பாட்டி இறக்கும்போது நான் அருகில் இருந்து இருக்கிறேன். இதைவிட  வேறென்ன வேண்டும் ,,சொல்லுங்க பார்ப்பம்.


                                           எங்களின் பாட்டி மிகவும் கிருஸ்ன பக்தையாக இருந்தா, அதுக்கு அவா பல காரணம் சொல்லுவா ,முக்கியமானது அவா மலேசியாவில் இருந்த போதே ,இரண்டாம் உலக யுத்தம் நடந்த போது ,ஜப்பான் ஆர்மி அப்போது இங்கிலீஷ்காரன் ஆண்ட மலேசியாவுக்கு வந்து அந்த நாட்டைக் கைப்பற்றிய போது, பாட்டி ,தாத்தா ,என்னோட சின்ன வயது அம்மா, அந்த யுத்தத்தில மயிர் இழையில் உயிர் தப்பி இருக்குறார்கள், அவர்களைக் காப்பாற்றியது, யாழ்பாணத்தில இருந்த வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் என்ற பெருமாள் கோவிலில் இருந்த கிருஷ்ண பரமாத்மா எண்டு சொல்லுவா !

                                பாட்டி வருசத்தில வாற எல்லா ஏகாதசி விரதமும் பிட்டிப்பா,  அதுக்கு அவா சொன்னது இப்பவும் நினைவு இருக்கு,



                             " காயத்ரிக்கு ஈடான மந்திரம் இல்லை. தாய்க்கு சமமான தெய்வங்கள் இல்லை, கங்கைக்கு நிகரான தீர்த்தங்கள் இல்லை, ஏகாதசியை மிஞ்சிய விரதம் இல்லை "



                          எண்டு சொல்லி , வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்  கோவிலுக்கு என்னையும் கூட்டிக்கொண்டு போய் அந்தக் கோவிலில் மவுனமாக இருந்து பிராத்தனை செய்வா, அந்தக் கோவிலில் இருந்த நவக்கிரகங்களை என்னையும் இழுத்துக்கொண்டு சுற்றுவா, நான் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்  புண்ணியத்தில் அந்தக் கோவிலுக்கு வரும் சன்ம்களை விடுப்புப் பார்ப்பேன் ,


                                           துவாரகையில்  கிருஸ்னர்  பிறந்த  கிருஸ்ன ஜெயந்திக்கு  வீடு முழுவதும் விளக்கு  ஏற்றி  வைத்து " ஜெய ஜெயாயார்தனா  கிருஷ்ண கோபிகாபாதி  ஜென்ம மோகனா
ஜெய ஜெயாயார்தனா  கிருஷ்ண ராதிகாப்பதி "   என்று 
  பயகொவிந்தம்  பாடி அமர்களப்படுத்துவா .  எங்களுக்கு  அந்த  நேரம்  கிருஷ்ணபரமாத்மாவின் அஸ்கு பிஸ்கு  பிகருகள்  தான்  ராதிக்காவும்  கோபிக்காவும்  என்பது  தெரியாமல்  அவர்கள்  என்னவோ  பெண் தெய்வங்களாக  இருக்கவேண்டும்  என்று  நினைத்து  பக்தியோடு  பாட்டியுடன்  சேர்ந்து  பாடுவோம்.  


                                       ஒவ்வொரு புரட்டாதி மாதமும் ,சனிக்கிழமை ,விரதம் இருக்க, வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள்  கோவிலில் இருந்து அவாவைத் தேடி ஒரு வயதான சாமியார் போல இருப்பவர்வருவார் வந்து , நம்மாழ்வார்  போலவே 



                                               " வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிந்தா கோ ....கோவேறு வலன்சேர் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிந்தா  "



                               எண்டு சொல்லிக்கொண்டு ,ஒரு பித்தளைக் குடத்தை கொண்டுவர அதில அவா படி அரிசி போடுவா, அந்த சாமியார் துளசி இலை எங்களுக்கு தருவார் ,



                           பாட்டி புரட்டாதி சனிகிழமை காகத்துக்கு பைவ் ஸ்டார்  ஹோட்டல் மெனு போல  சாப்பாடு வைத்துப்போட்டுதான் சாபிடுவா, ஆனால் அன்றைக்கு எண்டு ஒரு பஞ்சத்தில அடிப்பட்ட சனியன் பிடிச்ச  பரதேசிக் காகமும் வராது ,வாற காகமும் வெத்திலை பாக்கு வைச்சு மடியில  அணைச்சு   வைச்சு  ஹோர்லிக்ஸ்  விளம்பரத்தில்  வரும் அமுல்
பேபி   போல  வாயில ஊட்டிவிட்டாதான் சாப்பிடுவன் என்டுரது போல அடம் பிடிக்கும்கள் .

                                  பாட்டியப் போல ,எங்கள் வீட்டில் வேறு ஒருவருக்கும் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்த கிருஷ்ண பரமாத்மாவில் அதிகம் ஆன்மீக ஈடுபாடு இல்லாத போதும், எனக்கு கிருஷ்ண பரமாத்மா கோகுலத்துப் பெண்களுடன் செய்த லீலைகளை அறிவதில் ரெம்பவே ஆர்வம் அந்த நாட்களில் இருந்தது, பாட்டி அதுகளைக் கேட்டால் சமயம் சார்ந்து சொல்லுவா ,ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் உள்ளது எண்டும் ,அந்த ஏகாதசிக்கு உள்ள பெயர்களே,கிருஷ்ணரின் கேர்ள் பிரெண்ட்ஸ் களின் பெயர் எண்டு படித்ததை அவாவிடம் ஒருநாள்  சந்தேகத்தில கேட்க அவா அதுக்கு

                        "கிருஷ்ணருக்கு ருக்மணி, காளிந்தீ, மித்ரவிந்தா, ஸத்யா, ஜாம்பவதி, பத்ரா, சத்யபாமா, சாருஹாஸினி என எட்டு மனைவிகள்,  ஏகாதசி கிருஷ்ணபட்சத்தில், சுக்லபட்சத்தில் வரும். சில ஆண்டு ஓர் ஏகாதசி அதிகமாக வர அதை கமலா ஏகாதசி என்று அழைப்பார்கள்........... ".

                           எண்டு சொல்லி மளிப்பிட்டா ,

                      நாங்கள் சின்னவர்களாக இருந்த போது எப்பவுமே குழந்தைக் கண்ணன் கதைகள் சொல்லுவா, அந்தக் கதைகளின் முடிவில் எப்பவுமே ஒரு பெரிய தத்துவத்தையும் சேர்த்தே சொல்லி அந்தக் கதையை முடிப்பா ,ஆயர் பாடிக் கோகுலத்தில் மாயக் கண்ணனின் குழப்படிகளை எப்படி யசோதை பொறுத்துக்கொண்டாள் என்றதுக்கு ,

                                "   கிருஷ்ண பரமாத்மா, தன் தாய் யசோதை வெண்ணெய் உண்டாயா? எங்கே உன் வாயைக்காட்டு என்று அதட்டியபோது அப்பாவித்தனமாக வாயைத் திறந்து காட்டினார். வாய்க்குள் உலகத்தையே கண்டு யசோதை திகைத்துப் போனாளாம். அப்படித்தான் பகவான் தான் யார் என்பதை தன் தாய்க்குக் காட்டியிருக்கிறார்  "  

                  என்று சொல்லி முடிப்பா.

                        நான் பாடசாலையில் படிக்கும் நாட்களில் ராமாயணத்தில் வரும் கிருஷ்ணரும் ,மகாபாரத்தில் வரும் கிருஷ்ணரும் வேறு வேறு விதமாக மாண்டார்கள்,என்று படித்த போது மிகவும் குழப்பமாக இருந்து ,ஒரு முறை அதைப் பாட்டியிடமே கேட்டேன் ,

                                " " மஹாபாரதத்தில் , கிருஷ்ணர் தியானத்தில் இருந்தபோது ஒரு வேடனிற்கு மறைவாக அவரது பாதம் தெரிந்தது. அவரது பாதத்தை ஏதோ விலங்கு என நினைத்து மறைவில் இருந்து அம்பு எய்தான் வேடன். அதன் காரணமாக கிருஷ்ணர் இறந்தார்..ராமாயணத்தில் , விஷ்ணுவின் அவதாரமாகிய ராமன் வாலியை மறைவில் இருந்து அம்பு எய்து கொன்றார் .பின்னர் வாலி ஒரு வேடனாக மறுபிறப்பு எடுத்து விஷ்ணுவின் அவதாரமாகிய கிருஷ்ணரை மறைவில் இருந்து அம்பு எய்து கொன்றான் " 

                                             என்று விபரமா சொல்லுவா,
                          
                                    பரசுராமர், தேவகி வயிற்றில் வளர அந்தக் குழந்தையை ,கம்சனுக்குப் பயந்து வாசுதேவர் அந்தக் குழந்தையை , தேவகியின் கர்ப்பப் பையில் இருந்து எடுத்து வேறு ஒரு பெண்ணின் வயிற்றில் வளர வைத்த கதையை பாட்டி சொல்ல சயன்ஸ் பிக்சன் கதைகள் படிப்பது போல இருக்கும் ,ஆதிசேஷன் என்ற பாம்பை பிடிசுக் கொண்டுவந்து பாற்கடலைக் கடைந்த கதையில் ஆதிசேஷன் எண்ட பாம்பு உண்மையில் மனிதர்களின் ஆணவம் எண்டு அர்த்தப்படுத்தி,மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு பாத்திரமும், வேதவியாசர் எழுதிய விசித்திர மனிதர்களின் வாழ்கைத் தத்துவம் எண்டு சொல்லுவா ,

                     " ஆணவம் அழிவுக்கு அஸ்திவாரம் "

                         எண்டு எனக்கு மென்மையாக எப்பவும் சொல்லுவா, பாட்டி மென்மையாக,மெதுவாக அதைச் சொன்னது அந்த நாட்களில் தெளிவாக எனக்கு கேட்காததால், அதால என்னோட வாழ்கையில் பிட் காலத்தில் பிரசினைகள் வந்தது உண்மை.. 

                                  மகா பாரதக் கதைகளில் ,பாண்டவர்களையும் ,கவுரவர்களையும் பற்றி எந்தக் கதை சொன்னாலும், அவர்களின் அப்பாவுக்கும் அரண்மனை வேலைக்காரிக்கும் தப்பான   உறவில்  பிறந்த அவர்களின் சகோதரமான விதுரனை எப்பவுமே விட்டுக்கொடுக்காமல் உயர்வாக சொல்லுவா, மஹா பாரதத்தில் பாண்டவர்களையும், கவுரவர்களையும் விட விதுரன் ஒழுக்கமானவன் எண்டு தான் எல்லாக் கதையின் முடிவிலையும் சொல்லுவா, விதுரனுக்காகா பாட்டி எப்பவுமே இரக்கப்படுவா. அது  இப்பவும்  எனக்கு  ஆச்சரியமா  இருக்கு 

                                           பாட்டி ,எப்பவுமே பஞ்சாங்கம் பார்த்துதான் எல்லாம் செய்வா, ரகுநாத  ஐயரின்  வாக்கிய பஞ்சாங்கத்தில்  சாத்திரம் பார்ப்பா,  ராகுகாலம் பார்க்காமல் வெளிய இறங்க மாட்டா, புண்ணியகாலம்  பார்க்காமல் எதுவுமே  செய்ய மாட்டா , வெளிய போட்டு வீட்டுக்குள்ள வர முன்பு கிணற்றடிக்குப் போய் காலைக் களிவிபோட்டு தான் வீடுக்க உள்ள வருவா, இல்லாட்டி

                       " உச்சனை உச்சன் பார்தால்ப் பிச்சை,  தப்பி  ஓடிப்போனவனுக்கு  ஓம்பதில  வியாழன்  அகப்பட்டவனுக்கு  அட்டமத்துச் சனி  என்று   சனியன் எப்பவுமே குத்திக்  காலோடுதான் ஒட்டிக்கொண்டு வரும் "

                                       எண்டு சொல்லுவா.பாட்டி அம்மாவாசை, பறுவதுக்கு எங்களின் வீட்டில மடி ஆசாரம் பார்த்து ,தை மாதம் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியானது ‘ஸபலா’ ஏகாதசி இல் தான் அவா அதைப் பொங்கல் போல கொண்டாடுவா .

                                பாட்டியின் கடைசிக் காலத்தில் ,வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் மறந்து எங்கள் வீடில் நிறைய மாற்றம் வந்து, நாங்கள் அதிகம் அவாவின் ஆன்மீகத்தைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை ,பாட்டி தான் இறந்தால் ஒரு ஏகாதசியில் தான் இறக்க வேண்டும் எண்டு சொல்லுவா ,அவா இறந்தபோது எங்கள் வீடில் நிறைய மாற்றம் வந்து, நாங்கள் எல்லாருமே தலையால தெறிச்சு " எந்தப் புல்லை திண்டால் பித்தம் தெளியும்" எண்டு அல்லாடிக்கொண்டு இருந்ததால், ஆன்மிகம் வீட்டை விட்டுப் போய் , கடைசியில் எங்களிடம் பஞ்சாங்கமே இருக்கவில்லை , 

                                  எங்களின் வீட்டில ஒரு பிரம்பு " ஈஸி செயர் நாற்காலி "இருந்தது, அதில் ஜோகர் சுவாமிகள் வந்து படுத்து இருப்பாராம் எண்டு பாட்டி சொல்லி இருக்கிறா , அவாவே கடைசி காலத்தில் அந்த பிரம்பு நாற்காலியில் இயலாமல்ப் படுத்து..... பாட்டி இறந்துகொண்டிருந்த போது நான் அம்மாவிடம் ,

                                       " பாட்டி தான் இறந்தால் ஒரு ஏகாதசியில் தான் இறக்க வேண்டும் எண்டு சொல்லுவா "....என்ற .   அதை சொன்னேன் , அம்மா அதை பெரிசாக எடுக்கவில்லை.  எனக்கு  சின்ன  வயசிலேயே  விசர்  முத்தி விட்டது  என்பது போல  என்னைப்  பார்த்தா.  என்  அம்மாவுக்கும்  ஆன்மீகத்துக்கும்  பதினஞ்சு  கிலோமீட்டர்  தூரம் என்று  அப்போதுதான்  கண்டு  பிடிச்சேன் 

                          பாட்டி தைப் பூசத்துக்கு முதல் நாள் இறந்தா எண்டு பின்னாட்களில் நான் அறிந்தேன், வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஏன் பாட்டி விரும்பிய இறுதி விருப்பத்தை நிறைவு செய்யவில்லை என்று இன்று வரை எனக்கு விளங்கவேயில்லை.

                                    எங்கள் வீடில என்னோட அம்மாவழிப் பாட்டிய தவிர யாருக்குமே சங்கீதம் தெரியாது! என்னோட அம்மாவுக்கு அடுப்பு ஊதுற இரும்பு குழலுக்கும், புல்லாங்குழலுக்குமே வித்தியாசம் தெரியாது.

                   அப்பா M .K தியாகராஜ பகவதர் பாடல்கள் மட்டும் பாடுவார், திருநீலகண்டர் எண்ட படத்தில வார ",நீல கருணாகரனே நடராஜா " , என்ற பாடலை நீல கண்டன் போலவே அப்பா இழுக்க அம்மா முறைத்துப்பார்ப்பா ,அவர் குரலை உயர்த்தி "சராசரங்கள்..சராசரங்கள் .. வரும் சுழண்டு " எண்டு பாடதொடங்க , அம்மா தோசைக்கல்லை எடுத்து, அதை சராசரங்கள் போல  சுழட்டி

                                 "இப்ப இதை நிப்பாடாப் போறிங்களா ,இல்லை நான் உடுத்த சேலையோட வீட்டை விட்டு இப்பவே போகவா? " 


                                   என்று கேட்பா, அவர் சமாளித்து, மென்மையாக கீழ் ஸ்தாயியில் 


                                       "ராதை உனது கோபம் ஆகாதடி...." எண்டு சமாளிக்க,,இப்படிதான் M .K.T பகவதரின் பெயரால சங்கீதம் சின்னவயசில எங்க வீடில அறிமுகமானது!.

                             பாட்டியின் சங்கீத உலகம் அவாவோட சின்ன வயசில " வயலின்" என்ற வாத்தியத்தில் தொடங்க்கி இருக்கு, ஆனாலும் பாட்டி இளவயதில் கலியாணம் கட்டி, தாத்தாவோட வெள்ளைக்காரனுக்கு கீழ, வேப்பம் குழை அடிச்சு, இங்கிலிஸ் காரனுக்கு இங்கிலிசில சாம்பிராணி போட்டு உத்தியோகம் பார்க்க, அந்த வயலினையும் தூக்கிக்கொண்டு அந்தகால மலாயா ,,இந்தகால மலேசியாவில உள்ள பண்டார் சிரம்பான் போனவா, அங்கெ ரப்பர் தோடத்தில சுப்போவேசியர் வேலை செய்த தாத்தாவோட வாழ்ந்தபோதுதான் என்னோட அம்மா மலேசியாவில இருக்குற சிரம்பான் என்ற இடத்தில்தான் பிறந்தா!

                                பல வருடனகளின்பின் இரண்டாம் உலகயுத்த அலங்கோலத்தின் பின் "டீன் ஏஜ் " வயசில் இருந்த என்னோட அம்மாவையும் கூட்டிக்கொண்டு அவர்கள் தாய்த்திரு நாடு இலங்கைகே திரும்பி வந்துவிடார்கள், ஆனால் அவர்கள் வந்த கப்பல் நடுகடலில ,புயலால் இழுத்து எறிந்து , அலைகளுடன் அலைக்கழிந்து ,நாகபட்டினம் என்ற துறைமுகத்தில கரைஒதுங்க, அதில் பிரயாணம் செய்த பலரின் பிரயாணப் பெட்டிகளை கடல் காவுகொண்டு விட்டது, பாட்டியின் பெட்டியும் மிஸ்ஸிங் அதில இருந்த அவாவோட வயலினும் " மிஸ்ஸிங் இன் அக்சன் "!

                                               பாட்டி அதுக்கு பிறகு வயலினே வாசிக்கவில்லை,ஆனால் அவா பல பாடல்களை "ஏழு சுர வரிசையில் " ச  பா ,ரி க ம ப த  னிச ,எண்டு  ஆரோகண அவரோகன சுரம்  எல்லாம் சொல்லி வாயால் பாடுவா, சிலநேரம் அவா பாட அவாவின் கை வயலினில ஓடுவதுபோல நளினமாகா அசையும்! பாட்டி சின்ன வயசில் சொல்லித்தந்த மகாத்மா காந்தியின் பாடல் ஒன்றுதான் நான் இன்னும் நினைவுவைத்து இருக்கிறேன்.

                                        பாட்டி, அவாவோட வாழ்க்கையே சத்திய சோதனைபோல இருந்ததாலோ என்னவோ, மகாத்மா காந்தியின் அகிம்சையின் தீவிரவிசுவாசி, அகிம்சை எப்பவுமே வெல்லும் என்று உறுதியா சொல்லுவா ! எனக்கு அந்தக் காலத்திலேயே அகிம்சை உறுதியா வெல்லுமா எண்டதில நிறைய சந்தேகம் இருந்திச்சு ,,ஆனால் பாட்டிக்கு இருக்கவில்லை ! அவா அகிம்சையின் பலத்தை எங்களுக்கு விளங்கப்படுத்த காந்தியின் தண்டி யாத்திரை, உப்பு சத்தியாக் கிரகம், கதர் சட்டை , போன்ற சம்பவனகளை எல்லாம் சின்ன சின்ன கதைகளாக சொல்லுவா!

                              ரவீந்திரநாத் தாகூர் எழுதிய  கீதாஞ்சலியை  ஆங்கிலத்தில்  படித்த பாட்டி    மகாத்மா காந்தி சுடப்பட்ட போது  அவர்  படத்துக்கு  மலர்மாலை  அணிவித்து ஒரு  நிகழ்வில்  இந்தியாவின்  தேசிய கீதம்  ஜனகனமனவை  யாழ்பாணத்தில்   பாடியே  அசத்தி இருக்கிறா . பாட்டி  என்னைபோல  வாயால வடை  சுடுற  ஆள்  இல்லை.அக்சன்  அக்சன்  எப்பவுமே  அக்சன்.

                                          பாட்டி காலையில ஒவ்வொரு நாளும் "ரகுபதி ராகவ ராஜாராம் " என்ற பாடலை மனமுருகிப் பாடுவா , அந்தப் பாடலில் " ஜெசுவே அல்லா தேரே நாம் , பயகொவிந்தம் மேரே நாம் " எண்டு வார வரியில் , அல்லா, ஜேசு,கிருஷ்ணர், என்று எல்லா கடவுளும் ஒரே பாடலில்வர, கொஞ்சம் குழம்பிப் போய், 

                                " இந்தப் பாடலின் அர்த்தம் என்ன பாட்டி ?"

                                  என்று கேட்ருக்கிறேன், பாட்டி குழம்பாமல் , நல்ல தெளிவா , அமைதியாக 

                                           " அல்லா, ஜேசு,கிருஷ்ணர் எல்லாரும் ஒண்டுதான் ,முஸ்லிம்,கிறிஸ்டியன், இந்து எல்லாரும் ஒரே கடவுளின் படைப்புகள் ,அவர்களை ஒருநாளும் பிரித்துப் பார்க்கக் கூடாது " 

                                      என்று "அட்வைஸ்" போல சொன்னா!

                                    நான் அதை நல்லா மனதில பதித்துக்கொண்டேன் ,அந்த நல்ல ,உயர்ந்த சிந்தனை பிட்காலதில பாட்டியின் பெயரால  உதவி செய்தது .....எப்படி ?

                                 நான் கொஞ்சம் வளர்ந்து , மீசை முளைக்கத் தொடங்கி, தோள் மூட்டு விரிந்து , என்னோட "டீன் ஏஜ் " வயதில் நான், என்னோட பாட்டி சொன்ன அட்வைஸ் போலவே, பாத்திமா என்ற முஸ்லிம் பெண்ணையும், மேரி பிலோமினா என்ற கிறிஸ்டியன் பெண்ணையும், உமா மகேஸ்வரி என்ற ஐயர் வீட்டுப் பெண்ணையும், ஒரே நேரத்தில, ஒருத்திக்கி ஒருத்தி தெரியாம, உசிருக்கு உசிரா காதலித்தேன் !.

                                                 அல்லா, ஜேசு,கிருஷ்ணர், முவரும் தான் அந்தப் இருக்கிறார்கள் ,அந்தப் பாடலில் புத்தரும் ,,பவுத்த சமயமும் வரவில்லை எண்டு இப்ப சரியாக் கவலைபடுரன்....அந்த மூன்று சொப்பன சுந்தரிகளையும் பற்றி 3 சிறுகதை எழுதியுள்ளேன் ,பாட்டியின் ஆவி வந்தாலும் என்ற பயத்தில இன்னும் வெளிவிடவில்லை ...

                           இதுக்கு மேல இனி என்னத்தைச் சொல்லுறது . ஏதோ என்னால பாட்டியின் அட்வைசுக்கு செய்ய முடிஞ்சது அவளவுதான் அந்த நேரத்தில!.
 .

Friday 12 August 2016

அனாமிக்கா மேலும் பதின்மூன்று கவிதைகள்..

...........................................................................034
வடக்கு வானத்தை
வரைந்து முடித்த
பறவைகள்
அசதியாக வந்திறங்கி
நீளவாக்கில்வட்டமாக
அனாமிக்காவுக்கு முன்
பணிவோடு இருந்தன

நானோ
நம்பிக்கையானவைகளையே
நம்பமுடியாமல்
ஒரு பட்டமரத்தில்
முதுகை வசாமாக
முண்டுகொடுதுக்கொண்டிருதேன்
பறவைகள்
இன்னொருமுறை
மேற்குவானத்தையும்
அளவெடுத்து
வரைந்துவிட
அங்கலாய்த்துக்கொண்டே
இறக்கைகளில் வேகம் சேர்க்க
ஒருங்கிசைவான
அன்னாமிக்கா
நினைவுகளில் விரிந்து
பறந்துகொண்டிருந்ததை
அவள்
நீலக்கண்கள்அலைபாய்வதில்
நிரூபித்துக்காட்டினாள்
இன்றையதினம்
இப்படிதான் முடியுமென்று
நினைத்த நொடியில்
சடசடசடசடசடசடவென்று
சிறகுகள் அடிக்கப்
பறவைகள்
எம்பிப்பறந்து
மேகங்களைப் பிரித்துவிட்டன
....................................................................................035

வக்கிர குரூரங்கள்
சில நேரங்களில்
நிர்வாணமான
வார்த்தைகளாகி
வந்து விழுந்துவிடும்போதேல்லாம்
அதன் மூலகாரணம்
முகத்தில் அடிக்கும் அகோரம்தான்.

தோல்விகளையே
தொடர்ந்துகொண்டிருப்பதால்
மரியாதைகள் பற்றிய
உணர்வற்றிருக்கும்
எப்போதும்
முடிவில்லா விடைகளே
அதுவாக
நேரம் தேர்ந்தெடுத்து
கேள்விகளாக மாறிவிடுகிறது
செல்லரித்துப்போன தனிமை
தப்புத்தாளங்களை தேர்வுசெய்ய
நானே என்
கேவலம் கெட்டுப்போன
வக்கிரகங்களைத்
திசையறியாமல்
விமர்சனமாக்கும் போது
அது யாரை திரும்பிப் பார்க்கிறது ?
என்று
அனாமிக்காவிடம் கேட்டேன்
காமம் வெக்கமற்றது
அருவருப்பான
அற்பஉரையாடல்கள்
உன் அடிமனது
வாடிகால் தேடும்
இழிவுநிலை என்கிறாள்
அநாமதேயமாகவே இருக்கவிரும்பும்
அனாமிக்கா.
..................................................................................036

போலி உறவுகள்
உன்னதமானவயில்லையென்று
மாலை வெயிலுக்கு
நிழல் சொல்லிக்கொண்டிருந்த
மரங்களின் கீழே
அனாமிக்கா
இலைகள் சுதந்திரத்தை
இழப்பது பற்றி ஜோசிக்கிறாள்

வெட்கமில்லாத
பிரியங்களில் பழிவாங்கப்பட்டு
மேகங்கள்
விலத்தி விலத்தித்
தள்ளாடும் போதையோடு
கீழ்வானத்தில்
சூரிய நெருப்புத்தேடி
அலைந்துகொண்டிருந்தன
நலுங்குநேரம் தவறவிட்ட
பூக்களின் இதழ்கள் சோம்பலாக
நகர நெரிசலில்
அன்பின் ஸ்பரிசம் கேட்ட
நெருக்குவார மனிதர்களின்
தனிமைக் குரல்
அந்தப் பூங்காவின்
கரைகளில் அலையடித்தது
ஏதாவது சொல்லித் தொலை
அனாமிக்கா
உன் நெடில்மவுனம்
என் பிடிவாதங்களை
எதிர்பாராதவிதமாக
மண்டியிடவைக்குது என்றேன்
மலர்களின் வாசனையில்
வழித்துணைக்கு
ஏதாவது
மிச்சமாக எஞ்சி இருந்தால்
சேர்த்துவைத்துக்கொள் என்றபோது
அஸ்தமன வெளிச்சங்கள்
முன் இருட்டோடு
ரகசிய ஊடலுக்கு
நெருக்கமாகிக்கொண்டிருந்தது.
.................................................................................037


ஒருவிதமான
தந்திரத்தின் அடிப்படையில்
நிகழ்ந்துவிட்டது போலவே
கோடையில் மழை
இடைச்செருகலாக வந்தது
உலகமே
தனிப்பட்ட முறையில்
நேற்றோடு அந்நியமானது போல
அனாமிக்கா
நனைந்துகொண்டே
நடையை விடாமல் தொடர்ந்தாள்
கடந்தகாலதைப் பேசுகின்ற
இனிய ஏக்கமாக
மனதையழுத்திக் கொண்ட
துயரமெல்லாமாகவும்
இருவரும்
ஈரம் சிதறிய வழியெங்கும்
கதைக்காமலே கடந்துகொண்டிருந்தோம்
ஆனாலும்
இருள் மேகம்
இயல்பில் இருந்த போதும்
அதன் உறவுமுறையில்
மவுனங்கள் மொழிபெயர்க்கும்
துளிகளில்
குழப்பங்களை மட்டுமே
நினைத்துக்கொண்டு நான் நடந்தேன்
காரணம்சொல்லப்படாத
இடைவெளிகளைத் தேடாதே
எதட்காக
மழை பெய்கிறது என்பதை விட்டு
எப்படிப் பெய்கிறது
என்பதை பாரென்ற போது
அனாமிக்கா
பிரியங்களின் பிரகாசத்தை
புரியவைத்தாள்
...................................................................................038

ஏரிக்கரையில்

கதை நடந்துகொண்டிருந்தாலும்
ஏனோதானோ போல இல்லாமல்
என் கால்களிலும்
இளமையோடிருப்பத்துக்கான
குறிகோள்களிருந்தது
அனாமிக்கா
கரையோரமெல்லாம்
பிச்சி மலர்களின்
இடுப்பைச் சுற்றி வளைத்து
நாணல்கள் நிமிண்டிப்பார்ப்பதை
இடை இடையில்
நின்று பார்த்து அசைந்துகொண்டிருந்தாள்
உண்மைகளை
உடைத்து உடைத்துப்
பேசுவதுபோலவே
சதிராடிக்கொண்டிருந்த
நீரலைகளை
கரைகள் நக்கிக்கொண்டிருந்தன
பார்ப்பதில்
ஒன்றுமேயில்லை
நிறங்களின்மாயைக்கு
எண்ணம்கள் வரையும்
வட்டங்களுக்கு
வெளியே இருக்கின்றன செயல்கள்
என்றாள் அனாமிக்கா
பேய்க்காற்றின்
கடும்போக்கை
இலைகள்
விமர்சிக்கத் துணிந்த போது
பேர்ச்மரங்கள்
உதவிக்கு வரவில்லை போலிருந்தது
அன்றைய
நடைப்பயணத்தின்
புழுதி கிளம்பிய பாதையெல்லாம்
புதுவிதமான அமைதி.
.........................................................................039

" ஞானக்கூத்தன் கவிதைகள்
உனக்கு விளங்குமா
அனாமிக்கா ?
எனக்கவர் பிரத்தியேக மொழியும்
சிக்கலான உருவகநடையும்
பலநேரங்களில்
புரியவே புரியாது " என்றேன்
" கடந்து போகும் காலம்
நிலையாமையைப்பற்றிகொண்டு
சொல்லாமலே
நழுவி விடுவதைப்போல
திரும்பி பார்க்க வைக்கிற
அவர் கவிதைகளின்
ரகசியங்கள்
உனக்கு சொல்லட்டுமா " என்றாள்
அந்தக்
கவிஞரைப் படிக்காமலே
கடந்து இழந்த
எல்லாவற்றின் மீதும்
ஆர்வத்தைத்தூண்டுகின்ற
வாஞ்சையோடு வந்து தெறித்தன
அனாமிக்காவின்
விளக்க சந்தங்கள்
" கற்பனைகளற்ற உண்மையில்
முறுக்கிவிடப்பட்ட
எண்ணப் பரிமாற்றங்கள்
ஆதாரமான
உணர்ச்சியைப் பகிர்வதுக்கு
சொற்களாக மாறி
இடைஞ்சலாகவே
இருக்கவேண்டிய அவசியமில்லையென்று
ஞானக்கூத்தன்
நிருபித்தார் " என்றாள்
இப்பிடித்தான்
என்ன சந்தேகம் கேட்டாலும்
அது பற்றிய விவரணைகளின்
அதீத அர்த்தங்களில்
எல்லைகளைத் தாண்டியே பேசுவாள்
அனாமிக்கா
நானோ
எப்போதும்போல
ஒரு வட்டத்துக்குளே நின்று
முட்டாள் ஆகிக்கொண்டிருப்பேன்.
...............................................................................040
என்றோவொருநாள்
கேட்கப்படலாம்
அந்த நேரத்தில்
எதையாவது இடைச்செருகலாம்
சமாளிக்கலாமென்றிருந்த
கேள்வியை
ஆற்றின் கரை மணலில்
நேற்று உலாவியபோது
அனாமிக்கா கேட்டேவிட்டாள்
அந்த
உரையாடல் தொடங்கிய
நொடிகளில்
எனக்கு தனிப்பட்ட முறையில்
மிகவும்கோபமாயிருப்பதும்
அந்நியமானதுமான
ஆத்மா
விழித்துக்கொண்டது
வாக்குவாதம்
வம்பு இழுக்கும் போதெல்லாம்
நான் எனக்குள்ளிருந்து
துல்லியமாகப்
பின்வாங்கிய என்னையே
வெளியேற்றிவிடுவதை
பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
சிக்கலான கேள்வி
அதன்
இயல்பில் இருக்கும்போதே
அதில் வன்மத்தையும்
சந்தேகங்களையும் உருவாக்கிவிட
நேர் மாறாக
விடைகள்என்னுடைய
குறைகளையும் குழப்பங்களையும்
மட்டுமே
மூளைக்கு அனுப்பியது
எப்படியோ
புரிந்து கொள்ள முடியாத
ஆனால்
பிரியத்தின் நேசத்தில்
சுவாசிக்கும்
முழுமையான மறுபுறத்தை
ஏக்கம் எட்டிப்பார்க்கும்
மனநிலையில் அனாமிக்கா இருந்ததால்
என் பதில்
ஏற்கனவே சொன்னதுப் போல
எனக்கு மறுபிறப்பாகியது.
..................................................................................041


சொல்லிமுடியாத
கதைகள் ஒவ்வொன்றிலும்
குவிமையம்
எத்தனை பெரிய
உணர்ச்சியாகவிருந்தாலும்
உரையாடல்கள் மூலமாகவே
கடத்திவிட முடியுமென
நம்பிக்கொண்டிருப்பவள்
அனாமிக்கா.
நிகழ்கால
சௌகரியங்களின் கதகதப்பில்
இறந்தகாலம் அறுபட்டு
எதிர்காலத் திகைப்பில்
நுழையத் தயங்கும் தத்தளிப்பு
எனக்கென்று
எப்போதுமுள்ள ஆதங்கம்
மிகுந்த நம்பகத்தன்மை
புனைவுகளோடு
உண்மைக்கு நெருக்கமாக
முடிவிலாவது
பதிவு செய்யப்பட்டிருகிறதா
என்றெல்லாம் பார்ப்பாள்.
சம்பவங்களின்
விட்டேந்தியான மனப்பான்மைகள்
பொருந்தாமல்
குறிக்கோள்களற்ற சம்பவங்களில்
இல்லாத ஒன்றை
'உருவாக்க' முனைவதே
கற்பனையின்கோளாறுதான் என்பாள்
கவிதைகளின்
பிழிவுகள்இதில் இல்லைதான்
ஒத்துகொள்கிறேன்
எழுதுவதின்
கொண்டாட்ட மனநிலையையாவது
தக்கவைத்துக் கொள்வதால்
என் எழுத்து
தப்பித்துவிடலாம் என்றேன்.
.................................................................................042

மர்ம முடிச்சுக்களை அவிழ்க்கும்
பாவனையில்
தினுசான வகையில் திணிக்கப்பட்ட
நினைவுகளைத்
தின்று முடித்து ஏப்பம்விட்டு 
நடுச்சாமம் போல
சாந்தியடைந்தது
அந்தக் கவிதையின் வரிகள்
" Desire is an empty landscape
where lovers are two dew drops
Like a Breeze sleeping on a flower
Oh! Can hear a buzz in two hearts silently
Curls and Moustache shower in the heavenly rain
Hatred left and Happiness filled the void
Wind has no boundaries
In the sleep of the youth, two yearnings
Upon waking,flying colors
With Hands locked let us cross the boundaries
Like a lightning in the cloud
Like a feet for the path
Whose life with whom? Whose body with whom? "
அனாமிக்கா
இதை ஆங்கிலத்தில் சொன்னபோது
ஒவ்வொரு நொடியும்
அவளை விழுங்கிக்கொண்டிருக்கும்
வெற்றிடம்
எழுதியதாகவிருக்கலாம்
என்பதுதான் முக்கியமாக
என் வியப்பில் முனைப்பாகவிருந்தது
இப்பிடித்தான்
அச்சொட்டாக அசத்தி வைத்து
அனாமிக்கா எழுதுவாள்
" யாருடைய இலையுதிர்கால
வார்த்தைகள்இவைகள்
அனாமிக்கா
ஜீவனோடு வாசமாகிவிட்டதே
எழுதிவிட்டுப் போன பேனாவின்
முகவரியையும் சொல்லிவிடு " என்றேன்
அனாமிக்கா
பதிலென்று எதுவும் சொல்லவேயில்லை
" திசைகளற்ற
காலத்துடன் சமாந்தரமாக
எடுத்துக்கொண்டு செல்லவும்
நரை தட்டும்போது
தலையில்க் குட்டி
சாரல் மழையை ஞாபகப்படுத்தவும்
இப்படிச் சில கவிதைகள் தானே
சகாப்தங்கள் கடந்தும்
தேவைப்படுகிறது " என்றாள்
அனாமிக்கா
..........................................................................043

சந்தரப்பங்களைக் 
கையிலெடுக்கும் மனிதர்கள்
அதிகாரங்களைத்
தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற
அனாமிக்கா
உன்னைப்போல தர்மசங்கடங்கள்தான்
தற்குறிகளென்று
என்னைப்பார்த்துச் சொன்னாள்

மோதிக்கொள்வது
சட்டப்படி பிழை என்பதாலும்
தேடித்தேடி
அலையமுடியாது என்பதாலும்
இன்றுவரை
பழிவாங்கப்படவேண்டியவர்களின
நீண்டகாலப் பட்டியலில்
பல பெயர்ககளை
மறந்துவிட்டேன் என்றேன்

முகமெல்லாம் சிவந்து
உனக்காக
வாழ்ந்திருக்கிறேன் என்றுசொல்ல
ஒரு நண்பன் இல்லாதவன்
நடுக்கடலில்
நக்குத்தண்ணி என்றாள்

காலத்துக்கு வயதாகி
ஞாபகம் மறந்தாலும்
மிக மிகத்தெளிவாகச்
சொல்லி விடுகிறேன்
பலரின் முகங்கள்
விடுப்பட்டுப் போய்விட்டதென்றேன்

அனாமிக்கா
விஸ்வரூபம் எடுப்பாளென்று நினைக்க
அவளோ
தர்மம் வெல்வது பற்றிக்
கீதையின் சாரத்தில்
குணங்களின் ப்ரபாவங்கள்,
ஸ்வரூபமான தத்வம்,
ரஹஸ்யம் கொண்ட உபாஸனை,
கர்மம் தேடும் ஞானம்
எல்லாம் விளக்கத் தொடங்கினாள்


.........................................................................044


அனாமிக்கா 
பார்க்காத போது 
காற்றவள் புதிய புத்தகப் 
பக்கங்களை 
மழைக்காலமென நினைத்து 
புரட்டி வாசித்துக்கொண்டிருந்தது

மொழிக்குள்
இருக்கின்ற அத்தனை
வைராக்கியமான
வார்த்தைகளையும்
கலைத்து எழுதி எழுதிக்
களைத்துவிட்டேன் என்றேன்

அர்த்தங்கள்
திரைபோட்டு வைத்துள்ள
அசாத்தியங்களை
வெறுமனே கரைகளில்
நின்று கொண்டு உணர்வது
ஆபத்து என்றாள்

கண்டடைய முடியாத
ஏமாற்றங்களே
எப்போதும் வாசமாகி
ஒரு தளம் கிடைக்கும்போது
வசனம் போல வசமாகி
ஒற்றை வரியாகி விடுகிறது

நிழலான மனசில்
நான் எதுவரை
நீ எதுவரை என்பதை
முடிவிலியான வேதமாக்கி
அனாமிக்கா
ஏறி மிதித்து ஓடிக்கொண்டிருக்கும்
மேகங்களுடன் ஒப்பிட்டாள்

சருகுகள்
இன்னொருமுறை ருதுவாகி
இலைகளாகும் நாளை
நினைத்துக்கொண்டிருக்க
அனாமிக்காவோ
அடுத்தொரு பழைய புத்தகத்துக்குள்
இறங்கிவிட்டாள் 


...............................................................045


எப்பவாவது 

மழை பெய்து முடித்து 
வெளிச்சங்கள் படிஞ்சு 
மண் ஈரமான நாட்களில் 
அனாமிக்கா 
ஒரு கவிதை எழுதுவாள்

அதில்
அதிகம்பேர் போலவள்
உணர்ச்சி உத்தேசங்களோடு
மொழியைச் சுற்றிவளைத்து
சேறுபோலக் குழப்பி
சூறாவளி போலாக்காமல்
மெல்லெனவே நேராக
தென்றலோடு பேசத்தொடங்கி விடுவாள்

பதில்கள்
பழிவேண்டப்படும்
கேள்விகளே
அதிகம் அதிகமாயுள்ள
அவள் கவிதைகள்
வாசித்து முடிய
வியப்புக்குக்குறிகள் தேடுவதில்
ஒருநாளும் ஏமாற்றியதில்லை

உதாரணமாக
" .....ஒரு முடிவோடு
இரகசியமாக்
கருக்கலைப்புச் செய்தவளின்
வலிகளும்
இரகசியமானவை
அவனோ
ஒரு கணத்தின் காமத்தைத்
திசைதிருப்பியத்துக்காக..... " என்று
" முகமுள்ள ஏமாற்றம் " என்ற
நீண்ட கவிதையில்எழுதினாள்

அனாமிக்காவின்
கவிதைமொழிக் கச்சிதமே
சந்திக்க முடியாத
தண்டவாளங்களை
எறியங்களாக்கி
இரண்டு முடிவிலிப் புள்ளியில்
சந்திக்க வைப்பாள்

இப்பிடித்தான்
சிக்கலேயில்லாத வார்த்தையில்
மிகப்பிரியமான
அர்த்தங்களை உள்செருகி
நெஞ்சில பனிக்கட்டியை வைத்து
அது கசிந்து உருக்கும்
குளிர் போல
ஒரு செக்கன் உள்ளிறங்கி
மனதை நனைத்து விடுவாள்.


..........................................................................046


நிறங்களே 

காட்சியில் நனைவது போல 
கோடுகளில் முட்டிப் 
புள்ளிகளில் தொடங்கும் 
மொழியில்
அனாமிக்கா ஓவியம் வரைந்தாள்

பறவைகளை
வானத்துக்குள் வரைவதென்றால்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
ஆனாலும்
ஒருநாளும் சிறகுகள் காற்றோடு
உடன்படுவது போல வரையவே மாட்டாள்

தாய்ப்பறவை .
தாழப் பறக்கும் போது .
அதன் வால்பகுதியை
சிரத்தை எடுத்து வரைந்து .
குஞ்சுகளை
நிழலாக்கி மறைத்துவிடுவாள்

பலமுறை கேட்டும்
பறவைகள் நிலத்தில் நிட்பதை
வரைந்ததே இல்லை
அதட்கான
விளக்க விவாதங்களைக் கேட்டே
களைத்துப் போயிருந்தேன்

வண்ணப் பூசுமைகள்
நிலமெல்லாம் சிதறிப்போயிருந்த
ஒரு மந்தார நாளில்
மிக நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்
அனாமிக்கா
பறவையின் கால்களை நிலத்தில்
நிறுத்தி வைத்து வரைந்தாள்

ஏனோ தெரியவில்லை
இறக்கைகைகள் ஓய்வில் தெரியும்படியான
அந்த ஓவியத்தில்
காட்சிப் பிழைபோல
பறவைகளின் முகத்தில்
சொல்ல முடியாத
ஏமாற்றமேயிருந்தது .