Friday 29 July 2016

அனாமிக்கா மேலும் பதினோரு கவிதைகள்

.......................................................................011

அசதிபோல 
முகத்தைத் தூக்கிவைத்து 
அதிகம் பேசாத நாட்களில் 
அனாமிக்கா 
சிதிலமான கனவுகளை 
ஒருங்கினைத்தெழுதுவாள்

உரையாடலுக்கும்
உரைநடைக்குமிடையில்
அப்படி என்னதான் வரைவென்று
வண்ணாத்திப்பூச்சிகள்
திட்டமாகத்
தற்கொலைக்கு முயற்சித்த
ஒரு நாளின் முடிவில் கேட்டேன்

ஊரைச் சுற்றிவரும்
வார்த்தைமொழி
கன்னித்தன்மையைக்
உத்தியோகபூர்வமாகக்
களவு கொடுத்துவிடுமென்றும்
பதியும் சொல்வரிகள்
அங்கீகாரமெடுத்து
ஆவணமாகிவிடுமென்றாள்

நடைபாதை முடிவில்
போட்டிருந்த மரவாங்கில்
கோடுகள் குழப்பமாகியே
வயதாகிப்போன
பிளவுகளின் நடுவில்
விரிசலாகுவதைப்
பார்வையில்த் தொடர்ந்துக்கொண்டிருந்தேன்

தனது
மரணசாசனத்தையும்
எழுதித்தரும்படி
ஒரு மஞ்சள் இலை அவள்
புறங்கையில் ஆடிப்போய்
அடங்குவது போலவே
வந்திறங்கியது

இயற்கையின்
ஏற்புடைய உடன்பாடுகள்
முரண்டு பிடிப்பதில்லையென்று
அனாமிக்கா
ஆவேசமாக காற்றுக்குச் சொல்லி
புதியவொரு வெள்ளைத்தாளில்
இடஞ்சுழி போட்டு
எழுதத்தொடங்கினாள்.


......................................................................012

தள்ளிவைக்கும்
நாட்கள் முந்திப் பிந்தினாலும்
நான் எப்போதும்
வழித்துனையாக வருவேன்
என்பதிலெல்லாம் 
அனாமிக்காவுக்கு சற்றேனும்
அப்போதெல்லாம்
சந்தேகமில்லை

இயல்பான சுரப்பிகள்
இலக்கணம் தவறியதால்
எண்ணங்களின் நடுவில்
அப்போதும் தனிமை தள்ளாடுது
என்பது தெரிந்து வைத்தும்
பிரத்தியேகங்களில்
புரிந்துணர்வோடுதான்
விலத்திப்போவேன்

அடி வயிற்றில்
கரு தடம்புரண்டு
இறுக்கிப்பிடிக்கும் போது
மனவுளைச்சலை
அடங்காமல்அவிழ்த்துவிட்டு
என்னை அவசரமாய்
உதறிஎறியும்உதேசங்களில்
பார்த்துக்கொண்டிருக்கமாட்டாள்

ஒருபொழுதேனும்
உறைந்து போகாத
புதிரான வாசனை வேறு
அவள்வியர்வையில் இருக்க
என் கால் மடியில்
இழுத்துச் சாயவைத்து
தலைகோதிக்கொடுப்பேன்

ஆதரவை அதிகம் தேடும்
வலிகள்நிறைந்த
சின்ன விழிகளில்
என் சிநேகிதம் இன்னொருமுறை
மூச்சு தருகிறது என்ற போதும்
அனாமிக்காவுக்கோ
இன்னுமின்னுமாய்
பசியோடு மாதவிடாய்கள்
ஈரமாகிக் கொண்டிருக்கலாம்.


...................................................................013

தெரிவுகள் பற்றிய 
வரன்முறைகள் 
நியதியற்ற கொள்கைகள் 
ஒருபோதும் குறுக்கிடவிடாபடி 
புதிய பாதைகளையே 
அனாமிக்கா
எப்போதும் தேர்வுசெய்கிறாள்

ஆனாலும்
அவள் நடக்கும் பாதையில்தான்
ஏதோவொரு ஜென்மபந்தத்தில்
முடிச்சுப் போட்டது போல
இலைவளர்காலத் துளிர்களுக்கும்
உற்சாகம் பற்றிக்கொள்கிறது

உங்களுக்கும்
எனக்குமிது குழப்பமாகவிருக்கும்
காரியங்களில்
அவளின் உள்ளுணர்வு
காற்றின் போக்கில்தான்
அத்தாசிப்படுத்தும்
திசைகளைத் தேர்வு செய்யுது

பழைய பாதைகள்
முடிவது பற்றியோ
பாதைகளே இல்லையென்பதோ
அவளின் பாதங்களைப்
பொறுத்தவரை
எந்தப் பொல்லாப்புமின்றி
எப்பவோ முடிந்த காரியம்

வழியின் திருப்பத்தில்
ஒரேயொரு பூ மலர்ந்து
காவுகொடுக்கக் காத்திருந்தால்
அவளே அவளுக்கான
இரட்சிப்பு உலகத்தில்
அதையே முகர்ந்து பார்த்து
நீண்ட நேரம்
நின்று சிலையாகிவிடுவாள்


................................................................014

தூண்டில்போடும் 
பார்வைகளோடு அணைத்து 
ஏரிக்கரை நகரும் 
பொழுதுகளிலெல்லாம் 
அனாமிக்கா 
கவ்வவேண்டுமென்று
எதையுமே தேடுவதில்லை

காலப்பிரஞ்ஞை
பிதற்றித் தடுமாறும்
வளைந்த மரங்களின்
கிளைகளில்
மஞ்சள் இலைகள்
இன்றோ நாளையோவென்று
பிரிவுக்குக் காத்திருக்கும்

கோடை மலர்களை
மார்போடு சூடிக்கொண்ட
ஆற்றம் கரையில்
அயோக்கியன் போலவே
சுழித்து ஓடும் திருப்பங்களில்
அகப்பட்ட கஞ்சல்களோடு
மறுகரையில்
வெய்யில் விளையாடும்

உலர்ந்த உதடுகளில்
அனாமிக்கா
வசந்தகாலம் கசிந்துவிடும்
முதல் முதலான
தேனைப்போலவே
சில்லென்ற குரலெடுத்துப்
பாடிக்கொண்டிருப்பாள்

பகல்களையே
உறங்க வைக்கும் வித்தை
அவளுக்கு அத்துப்படி
அந்தப் பாடலின் அர்த்தம்
வலிகளையெல்லாம் சேர்த்தே
வெள்ளம் போல இழுத்துவர
நான் கால்களை
நதியோடு நனைத்துக்கொண்டிருப்பேன் 


...............................................................................015

அனாமிக்காவை
ஒரேயொருகணத்தில் 
புகைப்படமெடுக்க 
ஒரேயொருமுறை 
புன்னகை செய்துவிடு என்று 
கெஞ்சிக்கூத்தாடிக் கேட்டேன்

நிழலைப்போல
ஒளிப்பதிவு செய்யும் மொழியில்
உன்னால் எதுவரை
ஒரேயொரு காட்சியில்
ஊடறுத்து உள்நுழைந்து
நிரூபிக்க முடியுமென்கிறாய் என்றாள்

முடியாதுடி என்றபோது
ஒரேயொரு செய்தியை
இரண்டுமுறை
அழுத்திப்பிடித்துக்கொண்டு
பதிவுசெய்யும் நிலைப்படங்களுக்கு
முகங்கள் தேவையில்லையே
என்றபோது இருட்டத் தொடங்கியது

முகம் காட்ட விரும்பாத
இளம் பெண்ணின்
மூகாந்திரங்கள் போடும்
முடிச்சுக்கள்
முகவரியைத் தவறவிட்ட
விசித்திரங்கள் என்றேன்

முன்னிரவு சோம்பலாகிப்
பின்னிரவாகும் வரை
நளினமான நகரத்தில்
இஸ்டப்படி இரவு
ஓலைப்பாயை விரித்து
ஓசைகளில் யாரோவொருதியின்
காமத்தைக் களவாடிக்கொண்டிருந்து

அனாமிகா
நகரம் உமிழுந்து துப்பும்
மின்மினிப்பூச்சி வெளிச்சங்களை
விழுங்கிக்கொண்டு உலாத்தினாள்
நானோ அவள் பின்னே
காற்றின் பழியில் அவள்
அலைபாயும் கூந்தல்
செய்யும் ரகளைகளை
இரசித்தபடி நடக்கிறேன் 


.................................................................016

மெழுகுதிரி வெளிச்ச 
இருட்டறையில் 
சாம்பல் நிறப் பூனை 
எங்கிருக்கிறது என்பது 
அனாமிக்காவுக்கும் 
அவள் பூனைக்கும் மட்டுமே
தெரியும்

எப்போதாவது
கதவைத்திறந்து உள்ளிடும் போது
ஒரு மூலையிலிருந்து
சத்தம் வரும்
அந்த வீட்டில் அந்த மூலை
எந்தப் பக்கமென்றும்
உறுதியாகச் சொல்ல முடியாது

அவள்
எழுதிக்கொண்டிருக்கும் போது
அந்தப் பூனை
அவள் முகத்தை
வரிக்கு வரி
பின் தொடர்ந்து
வாசித்துக்கொண்டிருக்கும்

பூனைக்கண்களுக்கும்
என் கேள்விகளுக்கும்
அனாமிக்காவுக்கும்
நடுவில்
மேசையில் திறந்தபடியுள்ள
புத்தகங்களின் எழுத்துக்கள்
நடமாடிக்கொண்டிருக்கும்

கடல் போல
அவளுக்குரிய சிந்தனைகள்
அலையடிக்கும் போது
ஒரு கோப்பையை துலாவி
அதில் மீன் இருக்கா என்று பார்ப்பேன்
அதை மட்டும் வைத்துக்கொண்டு
கடலில் மீனே இல்லையென்ற
முடிவுகளுக்கு
ஒரு நாளும் வரவே முடியாது 


..................................................................017

அனாமிக்கா
நிறைய சொற்களைப்
பொக்கிஷம் போல 
வார்த்தையாக்குவாள் 
அதற்கெல்லாமே 
ஆதர்சங்கள் எப்போதுமே
அச்சிடப்பட்ட புத்தகங்களேயென்பாள்

அவற்றின்
முதல் பக்கம் முதல்
கடைசி பக்கம் கடைசியாக
முகத்தைக் கொடுத்து வைத்து
வாசனைகளில்
நிரவி எம்ப்பிப் பறந்து
முகர்ந்து பார்ப்பாள்

பலசமயங்களில்
கவிதைகளின்
இறுதித் தடத்தை
அளவுகோலாக்கி
சைடோனியா விலியம்ஸ்சை
அறிமுகம் செய்தவளே
அவள்தான்

கதைகளையவள்
கண்டுகொள்வதேயில்லை
புனைவுகள்
சுய இன்பம் போன்ற
பொய்களின் போலி என்றும்
சுயசரிதைகளை
சவுகரியமாக்கும் அளவுக்கதிகமான
அலட்டல் என்பாள்

ஆழமற்றிருக்கின்ற
வியாக்கியானங்கள்
வெறும் அற்ப வியாபாரம்
திசைகளைத் தேடிக்கொண்டேயிரு
தேடல் திணறும் கடலில்
முழ்கிப் போவாய்
நான் அலை போல வந்து
காப்பாற்றுவேன் என்பாள்

நானவள்
மைதான அகலமான
கன்னம் இரண்டிலும்
சைபிரஸ் கிரேப்புருட் நிறத்தில்
கலிங்கு பாயும்
கண்களை வர்ணித்து எப்போது
ஒரேயொரு
கவிதை எழுதலாமென்பது பற்றி
மேலோட்டமாகச்
சிந்தித்துக்கொண்டிருப்பேன்.


....................................................................018

பின்னிரவெல்லாம் 
அனாமிக்கா
இருட்டின் மறைப்பில் 
பூக்களின் வாசம் தேடி 
பூங்காக்களில் உலாவுவதாக 
இயல்பாகச் சொன்னாள்

உன் வயதுக்கும்
மை வைக்கும் இளமைக்கும்
அதெல்லாம்கூட
எவளவு ஆபத்துகளை
வீட்டுக்குகே
வாசல்தேடிக் கொண்டு வருமென்று
நோர்ஸ்க்கில் சொன்னேன்

மிகஅலட்சியமாக இருந்தாள்
புரியும்படியாக
சுவுடிஷ் மொழியில் சொன்னேன்
அதுக்குமவள்
மூக்கை உறிஞ்சிச்சுழிக்க
ஆங்கிலத்தில்
அடுக்கி அடுக்கிச் சொன்னேன்

அதையும் உதறிப்போட்டு
சொரணை இல்லாமலிருக்க
மண்டையில் இறங்கிற மாதிரி
தமிழில் சொன்னேன்
கழுத்தை நெரிப்பது போல
அவள் ங்கே என்று
எதற்காக இப்ப நாலு மொழியில்
திட்டுகிறாய் என்றாள்

வயதுப் பெண்
பருவம் தவறாத
இரவெல்லாம் அலைந்தால்
நாலு பேர்
நாலு விதமாகப் பேசுவார்களென்று
சிம்போலிக்காகச் சொன்னேன் என்றேன்

அனாமிக்கா
ஹஹஹஹ என்று சிரித்தாள்
பிறகு கொஞ்சம் ஜோசித்து
ஹிஹிஹிஹி என்று இழித்தாள்
பிறகு அடக்க முடியாமல்
ஹோஹோஹோ என்று நெளித்தாள்
பிறகு என்னவோ நினைவு வர
ஈஈஈஈஈஈஈ என்றாள்

கடைசியாக
கழுதை போலப்
பல்லைக்காட்டிய போதுதான்
வரிசை தவறாத
ஆரோக்கியமான
பாண்டிய நாட்டு முத்துக்களை
முதன் முதலாகப் பார்த்தேன்


...........................................................................019


பெண்ணுரிமைக்குரிய
அதியுட்ச வரம்புளின்
தத்துவார்த்த கற்பிதங்களை
அனாமிக்கா
ஒருநாளும் என்னோடு 
விவாதித்ததில்லை
அவளுக்கது
முக்கியமில்லாத நாட்களின்
தொடக்கம் போலவே
எனக்கும் முடிவுறாத கேள்விகளின்
விடைகள் ஏற்கனவே
ஏதோவொருதத்தில்
நம்பிக்கையாகவே
நிரப்பப்பட்டிருந்தது
அவளுக்கு விரும்பியபடி
உடுத்திக்கொண்டு
வேண்டிய விதங்களின்மாதிரி
நடந்து கொள்வது
நட்பாக கதைத்துக்கொள்வது
போன்ற எல்லாவற்றிலும்
அக்கினிச்சுவடுகளைத் தேடாமல்
அன்னிச்சையாக
அத்தியாவசியமான
சிறகுகளை விரித்துக்கொண்டாள்
நாலு திசைகளின்போக்கில்
போய்க்கொண்டிருக்கும்
எனக்கோ
அதன் சூட்சுமம் பிடிபடவில்லை
ஒரேயொருநாள்
மறுதலித்துக் கேள்விகேட்டேன்
எதேச்சையாக அன்றவள்
ராகமாலிகா சேலை கட்டியிருந்தாள்
முழங்கால்களை
மேசைக்கு மேலே போட்டு
அதை ஆட்டிக்கொண்டு
அனாமிக்கா விளக்கிக்கொண்டிருந்தாள்
நானோ
சீமெந்து நிலத்தில்
சப்பாணி கட்டிக்கொண்டு
பணிய இருந்து
கேட்டுக்கொண்டிருந்தேன்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''020
நாட்கள்
அலட்சியமாகப் போவதை
நானோ கணக்கெடுக்கவில்லை
நிமிடங்கள் கழிவதை
காலப்பிரமாணத்தில் 
அனாமிக்கா
யுகங்களாய் நினைக்கிறாள்
வருடங்கள்
வயாதாகிப் போவதன்
நேரடிச் சாட்சி என்றேன்
அனுபவங்களின்
முதிர்ச்சிகள்
அதில்தான் எப்போதும்
ஒத்திகைபார்க்குதென்றாள்
எது கேட்டாலும்
அதில் உள்ளே இறங்கித்
தேடலாக்கி
கடைநிலையில் எதையாவது
தேடியெடுத்து
நிரூபித்துக்காட்டுவாள்
" எடியே
அகராதிக்குப் பிறந்தவளே
இவளவு கதையளக்கிறாயே
நாலுபேர் கேட்கும்
நாலு விதமான கேள்விக்கு
உன் அடையாளம் மட்டும்
சொல்லிவிட்டுப் போய்விடுவென்று "
கோபமாகக் கேட்டேன்
என்னைத்
தின்னுவது போலப் பார்த்து
" இப்பவல்ல எப்பவுமே
அனாமிக்கா
அநாமதேயமாகவே
இருபாள் " என்றாள்.
நான் பேச்சில்லாமல்
வாயடைத்துப்போனேன்

................................................................................021


எழுதிக்கொண்டேயிருப்பது 
முதுகைக் குனிய
விருப்பமில்லாத
அடிமைகளின்
விட்டுப் பறக்கவிரும்பும்
விடுதலையின்
பரிசோதனை ஆடுகளம்
என்பாள் அனாமிக்கா

யாரோவொருவரின்
தந்திரங்கள்
யாரோவொருவரின்
சுதந்திரங்களைப்
பறித்துக்கொண்டு போவது
அதில் தான் நடக்காதென்பாள்

மோதிக்கொள்ளும்
முஸ்தீபுகள்
தூங்கி எழுந்தது போல
யாரையும் ஒதுங்கவைக்காத
வெற்றிச்செய்திகளும்
நேற்றுப்போலவே
இன்றும் நிலைத்தகவலாகலாமென்றாள்

நாளைக்குக்
கசப்போடு காத்திருந்தால்
திருகுதாளங்கள்
பின் வினையாகுமுன்
நெஞ்சுறையும் உண்மைகளை
இன்னுமதிகமாக அவை
நிருபித்துவிடும் போலிருக்கு என்றேன்

கவனமாக இருக்கச் சொல்லு
எல்லா விளையாட்டுக்கும்
முடிவைத் தீர்மானிக்கும்
விதிமுறைகள்
இருக்கிறதென்கிறாள்அனாமிக்கா.
அவள் எது சொன்னாலும்
சரியாகத்தானிருக்கும்.


..
.
             

Saturday 23 July 2016

சமந்தா சலூன்

முடிவுகள் ஒரு முடிச்சுப்போல சிலநேரம் அதன் தொடக்கம் பிடிபடும் போது இலகுவாக  அவிழ்த்துவிட்டு அதன் சிக்கல்களை  சரியாக்கிவிடலாம் . சில நேரம் முடிவுகள் நமக்குப்புரியும்படியான ஒரு  பாதையில்  இருந்து  விலத்தி இன்னொருவிதமான வழிகளை  விரித்து வைத்தும் இருக்கலாம் . ஒரு முடிவோடு தொடங்கும் பயணத்தில்  சில  நேரம் பாதைகளே  அவைகளாக மாற்றிவைத்து எங்கள் வழிப்பயணத்தைக்  கேலிக்குரிய ஒரு திசையில்  நகர்த்தி வேடிக்கை  பார்க்கலாம் 

                                                                       சரியாக  நினைவு  இப்ப என் வயதான  மரமண்டைக்குள்  இல்லை , தொண்ணுற்றி ஆறு  எண்டு   நினைக்கிறன் ராணுவ நடவடிக்கை  சூரிய கதிரில்  வலிகாமம் முழுவதும் ஒரு பின்மாலை  இடம்பெயர்ந்து  தென்மராட்சி  வடமாராச்சி என்று வன்னியில் அவலமாக  இருந்த  நேரம் ஒரு அதிகாலை சரசாலை  ஊடாக  ராணுவம் அகோர  செலடியில்  தென்மாராட்சி  வாசலை கோப்பாய்ப் பக்கமாக  கைப்பற்றியது ,விடுவிக்கிறோம்  என்று  கைப்பற்றி மீசாலை  வீரசிங்கம் மகாவித்தியாலம்  வரையில் முன்னேறி அதில் தடை  போட்டு வலிகாம மக்களை மீண்டும்  உள்ளே  எடுத்தார்கள் 

                                      அந்த  தடைக்கு  இந்தப்பக்கம்  தான்  கடைசியாக சாந்தனை  சந்தித்தேன் , ஒரு தோளில் போடும் கன்வாஸ் பையுடன் நின்றான் ,நானும் இங்கால  போறாதா  அங்கால  போறதா  என்று முடிவு  எடுக்க முடியாமல் தடுமாறிக்கொண்டு  நின்றேன் . அவனும்  அப்படிதான் ஒரு முடிவு எடுக்க முடியாமல் திணறுவது போல  இருந்தது . என்  உடன்பிறப்புகள் நேரத்தோட  தென்மராட்சியை விட்டு  கிளாலி  கடந்து வன்னியையும்  வவுனியாவையும் கடந்தே  போய்விட்டார்கள் 

                                  " சம்பந்தர்  நான்  உள்ளுக்க போகப்போறேன்  மச்சான்  ..நீ  என்ன  பிளான்  " எண்டு  கேட்டான் , அதுக்கு  நான்  

                                    " நான்  வன்னிக்கு  போறேன்  மச்சான்,,இலவசமா வள்ளம்  விடுறாங்கள் ,,வன்னியில்  காணியும்  கிடுகும்  கொட்டிலும்  தாறாங்களாமடா "

                                   "    அங்க  போய்  என்ன  மலேரியாவில்  சாகப்போரியா "

                                      "   அது  தெரியாது  மச்சான் ,,"

                               "   நீ போ..நான்  தனியாத்தான்  போகப்போறேன்..போய்  சலூன்  இருந்தா  நடத்துவம்  இல்லாட்டி வேற  என்னவும்  செய்வம் ,,இப்பிடியே  ஓடிக்கொண்டு  இருக்க  ஏலாது  மச்சான் "

                              "  நீ  தனியப்  போறாய்  என்டுறாய்,,உனக்கு  என்னவும்  நடந்தால்  யாருக்கு  மச்சான்  தெரியும்,,யார்  என்ன  செயுறது "

                                "   பிறக்கும்போது  தனியாதானே  பிறந்தேன்  வாறது  வரட்டும் ,,"

                                           இதுதான்  சாந்தன்  சொன்ன கடைசி  வாக்கியம். ராணுவம் உள்ளே எடுத்த  பல  இளையவர்கள்  பின் நாட்களில் சந்தேகத்தில்கடத்தப்பட்டு  செம்மணி  புதைகுழியில் சுட்டுப்  போட்டு புல்டோசரால்  மண் தள்ளி  சுவடுகள்  அடையாளங்கள் இல்லாமல்  மூடப்பட்டார்கள் . அதில்  சாந்தனும்  ஒருவர்  என்று பல வருடங்களின் பின் புலம்பெயர்ந்து  சுவிடனில் பாதுகாப்பாக வசிக்கும்போது கேள்விப்பட்டேன் 


எங்கள் ஊரில நிறைய மனிதர்கள் ஒரு காலத்தில் சுவாரசியமாக இருந்தார்கள் . அந்த சுவாரசியங்களை காலம் அவளவு இலகுவாக விழுங்க முடியாதவாறு நினைவுகளில் அப்பப்ப அவைகள் வந்து போவது இப்போதைய இருத்தலில் முக்கியமான ஒரு காலகட்டத்தை கடந்து முடித்து வெளியேறிவிட்டாதாக  நினைக்கவே விடுகுதில்லை. அந்தக் காலம் விடுதலைப்போராட்டம் நடந்த வருடங்கள்

                                                   முப்பது சொச்சம் வருடங்களை வலியோடு சேர்த்து இழுத்துக்கொண்டு  போன பாதையில் நடந்த விடுதலைப் போராட்டம் ஒரு குண்டக்க மண்டக்க குளறுபடி என்று எப்பவும்  சாந்தன் சொல்லுவான். நான் அதை அப்படி நினைக்கவில்லை என்றும் சொல்லமுடியாது. நான் அதைப்பற்றி சொல்வது முக்கியமில்லை. ஆனால் சாந்தன் அதை சொல்லும்போது சாகலாம் போல இருக்கும் .அதில் அவன் என்னத்தை எல்லாம் இழந்தான் என்பது ஒரு தனிமனித வரலாறு இல்லை. ஒரு இனத்தின் கசப்பான ஒட்டுமொத்த வரலாறு.


                                                 சமந்தா சலூன் பல வருடமாய் கிடாய்விழுந்தான் ஒழுங்கை வாசலில் இருந்தது. அப்போது அதுக்கு அந்தப் பெயர் இல்லை. உண்மையில் சொல்லும்படியாக ஒரு கவர்சியான பெயரே இல்லை. சாந்தகுமாரின் வயதான அப்பா அதை நடத்திக்கொண்டிருந்தார்.அது ஒரு சலூன் என்பதுக்கு எந்தவித வெளி விளம்பர அடையாளங்களும் இல்லாமல் அது இயங்கிக் கொண்டிருந்தது, அந்தக் காலங்களே அப்படிதான் விளம்பரங்கள் அளவுக்கு அதிகமாக கவனத்தைச் சிதறடிக்கச் தேவையற்ற ஒரு காலம் . 


                                       அதை சாந்தகுமார் நடத்தத் தொடங்கியபோதுதான் அதுக்கு சமந்தா சலூன் என்று பெயர் வைத்தான் . ஏன் அப்படி ஒரு அழகான இளம் பெண்ணின்  பெயரைத் தேர்வுசெய்து வைத்தான் என்பதுக்கு எந்தவிதமான உதியோகபூர்வமான  விளக்கங்களும் இல்லை. அந்த  விவரணங்கள்  யாருக்கும் அப்போது  தேவை இல்லாமலும் இருந்தது. ஆனால் அந்தப் பெயர் சிங்களப் பெயர் போல இருந்தது என்னவோ  கொஞ்சம் குழப்பமாக இடறியது உண்மைதான் 


                                             சொர்கத்துக்கும் நரகத்துக்கும்  நடுவில் உள்ளதுபோல   முன்னுக்குத் தள்ளித் திறக்கும் ஒரு பாதிக்கதவு  எல்லா சலூன்கள் முன்னுக்கும்  உள்ளது  போல  தொங்கிக்கொண்டு இருக்கும். அந்தக்  கதவைத்  தள்ளிக்கொண்டு  உள்ளே வந்து இருந்து  பத்து  நிமிடத்துக்கும்  அந்தக்  கதவு  உள்ளேயும்  வெளியேயும் மெல்ல மெல்ல கிரிச்  கிரிச்  என்று எலிபோல  சத்தம்  எழுப்பிக்கொண்டு   ஒரு கட்டத்தில் அடங்கி  நிலையாக  நிக்கும். மற்றப்படி அடக்கமான   ஒரு சின்னக் கடை  அது . 


                                                ஒருவிதமான  அழுக்கு முடிகளின் வியர்வை உறிஞ்சிய  பிரண்டல்  வாசம்  நிரந்தரமாகவே காற்றில்  சுற்றிக்கொண்டு  இருக்கும் அந்தக்  கடையின்   உள்ளே ரெண்டு தலைமயிர் வெட்டுபவர்கள் தலையை நிமிர்த்திக்கொண்டிருக்கும் கதிரை. அதன் குஷன் இருக்கைகள் பிய்ந்து போய் அரை மணித்தியாலத்துக்கு மேலே அதில இருந்தால் மூட்டைப் பூச்சி ஊசிபோடத் தொடங்கும். பாதரசம் விளிம்புகளில் கழண்டு போன ரெண்டு பெரிய கண்ணாடி கதிரைக்கு முன்னே உலகம் போலவே விரிந்து இருக்கும்.

                                                  ரெண்டு தும்பு கழண்ட தும்ப்புக்கட்டை. ஒரு மூலையில் சவரச் சவுக்காரம் கரைத்த சின்ன அலுமினியச் சட்டி. அந்த மூலைக்கு எதிர் மூலையில் ஒரு நசினல் பனசோனிக் ரேடியோ. அதில கெஸட் போட்டு ஏகாதசிக்கு பெருமாள் கோவிலில் உண்டியல் குலுக்கின மாதிரி எப்பவும் இளையாராஜா பாடல்கள். முகம் வழிக்கும் சவரக் கத்தி தீட்ட ஒரு பழைய சிம்மக்கல்லும், சிலநேரம் ரெண்டு இழுவை இழுக்க ஒரு மாட்டுத் தோல் பெல்ட்டும் தொங்கும்  


                                            ஒரு சின்ன அலுமாரியில் துவாய்கள் அடிக்கி வைச்சு இருக்க,   சுவர்களில்  தமிழ் சினிமா நடிகைகளின் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். முக்கியமா வாணிஸ்ரீயின் படங்கள் தான் அதிகம். வானிஸ்ரீக்கும் ஒரு முடிவெட்டும் சலூனுக்கும்  அவளவு  நெருக்கம்  வந்ததே ஒரு  காரணத்தோடுதான் .ஏனென்றால் அதை நடத்திக்கொண்டிருந்த சாந்தகுமாரின்   அப்பா சிவாயி, எம் யி ஆர் ஹீரோக்கள் முன்னணியாக   சினிமாவில்  முத்துக்குளித்த  காலத்து ஆள் .


                                                 வாணிஸ்ரீயின் தீவிர இரசிகராக இருந்த அவர் . வசந்தமாளிகை படத்தை ஐம்பது தடவைக்கு மேலே ரசித்துப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறான் சாந்தகுமார் . ஆனால் சாந்தகுமார் சலூனைப் பொறுப்பு எடுத்தபின் எல்லா எழுபதுக்களின் சினிமா ஹிரோக்களின் படங்களைக் கிழித்து எறிந்து போட்டு வானிஸ்ரீயை மட்டும் அப்படியே வைத்து இருந்தான்.அதுவே பெண்களை எல்லாவிதமான சூழ்நிலையிலும் ரசிக்கக் கூடிய இடமே ஒரு சலூன் போல  இருக்கும் 


                                                         முடிவெட்ட வாற எல்லா ஆண்களும் வானிஸ்ரீயின்  கூந்தல் அழகையும்,,கண்களில் மின்னும்  வெளிச்சங்களையும் வெள்ளித்திரை அழகையும்  ரசித்தபடிதான் தலையைத்  தாண்டவக்கோனே என்று கொடுத்திட்டு  இருப்பார்கள். மங்கிப் போன எல்லாப் படங்களிலும் வாணிஸ்ரீ முகமெல்லாம்  பிரகாசங்கள் வாரியிறைத்து  சிரித்துக்கொண்டு இருப்பா. வாணிஸ்ரீ முடிவெட்டும்  கதிரையில் குஷன்  மறைவில் இருந்து கடிக்கும்  மூட்டைப் பூச்சி கடியில் நெளியும் அவர்களைப் பார்த்து சிரிப்பது போல இருக்கும். 


                                     சாந்தன்  அவனுக்குப்  பிடித்தது  என்று ஒரேயொரு படம் தான் தொங்கவிட்டு இருந்தான். அதுவும் ஒரு மூலையில் அதிகம்  யாருக்கும்  கண்ணைக்குத்தாமல் இருக்க வேண்டும் என்பது போல கறுப்பு வெள்ளையில்  இருந்தது . அதில் கியூபாவில்  பஸ்டிட்டா  கொடுங்கோலனின்ஆட்சியைக்  கவிழ்த்த  பிடல்காஸ்ட்ரோவும்  எர்னெஸ்ட்டோ சேகுவேராவும் ஒரு ஜீப்பில் இருக்கும் படம் . அதில் சேகுவேரா  ஹவானா சுருட்டுப் பத்திக்கொண்டு இருப்பார் .அந்த சுருட்டின் புகை நிறைவேறிய ஒரு நீண்ட  கனவின் தொடர்ச்சி போல சந்தோசமாக சுருண்டு எழும்பிக்கொண்டு இருக்கும் 

                                   அந்த  சலூனில  எப்பவுமே  மல்லிகை மாத  சஞ்சிகை  இருக்கும்.  சாந்தன்  அதை வாசிக்கவேமாட்டான். நான்  ஆர்வமா  வாசிப்பேன். சில  நேரம்  மல்லிகை  வந்திருக்கா  என்று  கேட்டு  அதை  வாசிக்கவே  அவனோட  சலுனுக்கு போய்  மணித்தியாலங்களை செலவு  செய்து மல்லிகையில்  வரும்  கவிதை  கதை  எல்லாம்  ஒன்றுவிடாமல் வாசிப்பேன் . ஓரளவுக்கு  என்னோட  ஆரம்பகால  இலக்கிய  ஆர்வம் வந்ததுக்குக்  காரணமே  அந்த  சலூன் வாசமும் மல்லிகை  வாசமும்தான்  காரணம் , சாந்தன்  நான்  வாசிகிரத்தை  பார்த்துக்கொண்டு  மற்றவர்களுக்கு  முடி  வெட்டிகொண்டிருப்பான் 

                                         பொதுவா  அவன் முன்னம் பின்னம்  அதிகம் அறிமுகம் இல்லாத  யாரோடும்  அதிகம்  கதைக்க  மாட்டான் .அதுக்கு  உண்மையாகவே பயப்படும்படியாக  ஒரு காரணம்  இருந்தது . அது  அவன்  வாயைக்  கட்டிப்போட்டு ஒருவிதமான  இறுக்கமான  சூழ்நிலையை உருவாக்கி வைத்து  இருந்தது. சலுனில் யாரும்  இல்லை  என்றால் 

                                      "    சம்பந்தர்  சொல்லு  மச்சான்,,உந்த  மல்லிகையில்  என்னடா  இருக்கு  இப்பிடி  பிடிச்சு தின்னுற  மாதிரி  மூச்சு விடாமால்  வரிக்கு வரி  வாசிக்கிறாய் "

                                           "   இதில  நல்ல  விசியம்  இருக்கு ,,நீதானே  வேண்டிப் போடுறாய்  என்னத்துக்கு  வேண்டிப்போடுறாய் "

                                       " அட  மச்சான்,,இது  எண்ட  அப்பருக்கு  தெரிஞ்ச  ஒரு  ஆள்  கொண்டுவந்து  போடுவார் ,மச்சான்  அப்பர்  காலத்தில  இருந்து நெடுகிலும்  இது  வந்துகொண்டு  இருக்கு "

                                "    ஓம்,,மச்சான்  ,,அவர்தான்  டொமினிக்  ஜீவா "

                                "   ஓமடா  அவர்  எங்களுக்கு  கொஞ்சம்  தூரத்து  சொந்தம் ,,பாவம்  மனுஷன்  சைக்கில் பின் கரியரில்  இதைக்கட்டிகொண்டு  வெயிலில் மண்டை  பிளக்க  வருவார் "

                               " ஓம்,,அப்பிடி  கஷ்டப்பட்டுதான்  இலக்கியம்  வளர்கிறார் ,,அவரே  முறிஞ்சு  முறிஞ்சு  அதை  எல்லா  இடமும் கொண்டுபோய்ப்  போடுறார் "

                            "  உதென்ன முற்போக்கு  சஞ்சிகையா "

                        " ஓம்  அப்பிடிதான் சொல்லலாம்  மச்சான் "

                        "சாதி  வெறி...சமுதாயப்பார்வை ..சமூகப் புரட்சி  இதுகளை  சும்மா  எழுதிக்கொண்டு இருந்தா  நடக்கிற  காரியமே   "

                               "அது  எனக்கு  தெரியாது  மச்சான்,,ஆனால்  அந்தக்  கொடுமைகளை  அவலங்களை  எழுதுறதே  ஒரு முயற்சி தானே  " 

                          "என்னவோ  நீதான்  சொல்லுறாய்,,எனக்கு  உதுகளில்  நம்பிக்கை  இல்லை  மச்சான்  " 

                                "அது  உன்னோட  சொந்த அபிப்பிராயம் ,,நான்  என்ன  சொல்ல  முடியும்  "

                       "  உனக்கு தெரியும்  தானே  நான்  இயங்கியல்வாத  சோஷலிசம்,,,வர்க்க  கொமினிசம்...மக்கள்  யுத்தம்  எல்லாம்  படிச்சு  இருக்றேன்  டா..."

                             "  ஹ்ம்ம்....அது  தெரியும் "

                            " ஆனால்  இனி  அது  எல்லாம்  ஆரோடும்  கதைச்சா  நாரிதான்  முறியும்,,அரசியல்  பாசறையில்  படிச்ச  எல்லாமே  அவங்கள்  அப்பிக்கொண்டு  போன  நேரத்தோடு  சரி "

                          " ஹ்ம்ம் ..அது சோகம்  தான் "

                        " தெருவுக்கு  தார்  ஊத்திறதுக்கு  எண்டு  சொல்லி  வீடா சோத்துப்பாசல் வேண்ட  விட்டாங்கள் இதுக்கா  நான்  ட்ரைனிங்  எடுக்கப்  போனேன்,,சொல்லு  பார்ப்பம்  சம்மந்தர் "

                                      "      ஹ்ம்ம் "

                        "   ஊர்மிளா  செத்ததுக்கு  நோட்டிஸ்  ஓட்டவிட்டாங்கள் அதில என்னோட  வந்த சுக்குட்டி ,தனபால்,,நடுவில் ,,நிக்சன் எல்லாரையும் .......ங்கள் வந்து  பிடிச்சுக்கொண்டு  போய்  சுட்டாங்கள் ,,,"

                                      "   ஹ்ம்ம்,,,தெரியும் "

                            "  நான் பசை  வாளிக்கு  அமரிக்கன் மா  கரைக்கப்  போனதால்  தப்பினேன் ..அதை  வைச்சு  மருதடிக்  குளத்துக்கு பின்னால வறுகித் தப்பி ஓடினேன்  ..தெரியுமா  உனக்கு "

                                          "    ஹ்ம்ம்  அது  தெரியாது "

                         "   பெரிய  ஐயா   என்ற...அந்த  ............பொம்புள பொறிக்குக்கு நாங்க  எதுக்கு  சாக  வேண்டும் ,,ஊர்மிளா  ஆர்  தெரியுமா  ,,அந்தப்  பொட்டைப்  பொறுக்கியின்  வைப்பாட்டி "

                                 "  ஹ்ம்ம் "

                             "    இருந்த  இயக்கதிலையே  அதிகம்  பேர்  இருந்தது  எங்கட  இயக்கம்...பெரிய  ஐயா  ராவு ராவா கூத்துப்  போட்டு  பெண்டுகளின் ...இக்குள்ள  தமிழ்  ஈழம்  பிடிக்க  நாங்க  சாப்பாடும்  இல்லாமல்  மரவள்ளிக்கிழங்கு  ஒரு நேரம்  திண்டுகொண்டு ஆதையிண்ட சீலைக்க  அணில் பண்ணசுதாம் ....விசரைக்  கிளப்பாதை  சம்மந்தர் "

                    "  ஹ்ம்ம்..என்னக்கு  விளங்குதடா ,,சாந்தன் "

                                           "  இப்ப  பார்  மச்சான்  டிக்கு டிக்கு  என்று  அவன் அவனின்ட  காஞ்சு  போன  காஞ்சோண்டி  மண்டைகளை  பிறாண்டிக்கொண்டு  இருக்றேன் "

                                 "   நீ  உயிரோடு  இருக்கிறது  அதுவே  பெரிய  விசியம்  தெரியுமா ,,சின்னக்கண்ணா  அவன் ஜெலிக்னைட் அடையும் நேரம்  சிலிண்டர்  வெடிச்சு சிதறிப் போனான்  டா "

                         " ஓமடா  அது  நானும்  கேள்விப்பட்டேன் ..பொறு  மச்சான்  ஒரு  ஆள் வாரார்,,வைச்சு  சிரைச்சுப்போட்டு  வாறன்  மிச்சம்  கதைப்பம் "

                                                               

சாந்தகுமார் என்ற சாந்தன்  என்னோட சைவ மங்கையக்கரசி ஆரம்பப் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புவரை ஒன்றாகப் படித்தவன். அந்த வயதில் அவன் பின்நாட்களில் கத்திரிக்கோலை பிடிச்சு  ஒரு சலூனில் சிக்கிக்கொண்டு சிங்கி அடிக்கவேண்டி வரும் என்று நானோ,அவனோ ,யாருமே நினைத்திருக்க சந்தர்ப்பம் இருந்ததில்லை . என்னைப்போலதான் அவனும் படிப்பில சிங்கம் புலி போல இல்லாமல் சுமாராக வகுப்புகளைக் கடந்து கொண்டிருந்தான் . ஆனால் அவன் அப்பா சலூன் நடத்துறார் என்று ஒன்றாகப் படித்த எல்லாருக்கும் தெரியும்

                                        ஆறாம்  வகுப்புக்கு  நான் டவுன் பள்ளிக்கூடத்துக்குப் போய் விட்டேன். சாந்தன் அந்த ஆரம்பப் பாடசாலையில் படிதுக்கொண்டிருப்பதாகத்தான்  நினைத்துகொள்ளும்படியாக இருந்தது . டவுன்  பாடசாலையில் நான் படிக்கப்போயிருந்தாலும் சாந்தன் போன்ற ஆரம்பப் பாடசாலை நண்பர்களை ஊருக்குள் எப்பவும் சந்திக்கும் நட்பான நிகழ்வுகள்  அதிகமாக இருந்தது . வீராளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு எப்பவுமே சாந்தன் வருவான். 


                                                        சமந்தா சலூனில தலைமுடி வெட்ட வேண்டிய தேவை இருக்கோ இல்லையோ என்பதைவிட சாந்தனை சந்தித்துக்  கதைப்பதுக்காகவே   எப்போதும் போவது. சாந்தான்  என்னைக் கண்டால்  


                                               " சம்மந்தர்   எப்படி மச்சான்  இருக்கிறாய்  " 

                               என்பான்  ,,நானும்   

                                         " ஏதோ  இருக்கிறேன் மச்சான் " 

                                        என்பேன் . அவன் ஏன் என்னை சம்மந்தர்   என்று சொல்லி அழைப்பதுக்கும் சரியான விளக்கம் இல்லை,  என்னோட  மூத்த அண்ணரின் பெயர்  தான்............. அதால்  என்னை சுருக்கமா  சம்பந்தர்  என்று  சொல்லி இருக்கலாம். என்னோட  மூத்த அண்ணரும் நானும்  சாந்தனும் படித்த அந்த ஆரம்பப் பாடசாலையில் தான் படித்தார். 

                                          விடுதலைப் போராடத்தில் எல்லா இயக்கமும் இயங்கிய காலத்தில் சாந்தகுமார் ......  என்ற இயக்கத்துக்குப் போனான். அந்த இயக்கம் அவனுக்கு அடிப்படைப் பயிட்சியை வடமாராச்சி கிழக்கில் உள்ள மணல்காடு என்ற சவுக்கம் தோப்புக்கள் அதிகமுள்ள இடத்தில கொடுத்தார்கள் .பிறகு ஆயுதங்கள் அந்த இயக்கத்துக்கு வருகுது  ,,,,வருகுது  என்று சொல்லி சொல்லியே பயிட்சி எடுத்த எல்லாரையும் வைச்சு வீணடித்தார்கள் .

                                 சாந்தன் பயிட்சி முடித்து வந்த நேரம் அவனைச் சந்திக்கும் ஒரு நிகழ்வு வீராளி அம்மன் கோவில் திருவிழாவில் கிடைத்தது. ஏற்கனவே ஒல்லியா வளர்ந்து இருந்த அவன் அந்த பயிட்சி முடிய தேடாவளயக் கயிறு முறுக்கின மாதிரி இருந்தான். குடிலில் போட்டு வாட்டின புகையிலை போல கறுத்துப் போயிருந்தான். கோவில் திருவிழாவில என்னைப்போன்ற இளசுகள் பெண் பிள்ளைகளின் அழகைப் பார்க்க அவனோ எப்பவும் எச்சரிக்கையாக ஒரு இடத்தில நிலை எடுத்து  எல்லாரையும் எதிரி போலப் பார்த்துக்கொண்டு இருந்தான் 

                                அந்த நேரம் அவன் முள்ளியவளை காட்டில உதய பீடம் பயிட்சிப் பாசறையில் ட்ரைனிங் முடித்து வெளியேறும் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தான் . புதிதாகச் சேர்ந்த இளையவர்களுக்கு ஒரு தேசத்தின் விடுதலைக்கு கனவோடு ஜெனரல் கியாப் என்ற வியட்நாம் மக்கள் விடுதலைப் போராளி எழுதிய " மக்கள் யுத்தம் மக்கள் போராட்டம் " என்ற புத்தகத்தை விவரித்து, 

                                             "  மக்களை அணிதிரட்டி தென் தமிழ்ஈழம் உள்ளிட மலையக மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்யும் ஒரு பரந்த தமிழ் ஈழமே தென்னாசியாவில் போராடும் எல்லாப் பாட்டாளி  வர்க்க விடுதலை உணர்வுள்ள தேசிய மக்களின் சுரண்டல் விடிவுக்கு ...      "                         
                                                                                
                                                            என்று  அவன் வகுப்பு எடுத்த அன்று இரவு  அந்த இயக்கம் தடைசெய்யப்பட்டது. சாந்தனையும் எப்படியோ தண்ணியூற்றில் வைச்சு  அடுத்த சில நாட்களில் தேடிப்பிடித்து கையைக் கட்டி ,கண்களையும் கட்டி ஒரு நாலுக்கு நாலு சதுரம் உள்ள அறையில் அடைத்தார்கள் . அந்த இடம் கரிப்பட்டுமுறிப்பில் இருந்தது. தடைசெய்யப் பட்ட அவன் இயங்கிய இயக்க உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்து  யாருமே சுடப்படவில்லை .

                                                    சாந்தன்  முடிவெட்ட  யாரும்  இல்லை  என்றால் வெளியே  வீதியை வேடிக்கை  பார்த்துக்கொண்டு  நிற்பான் . நான் அவடத்தால்  சும்மா  போனாலும்  உடன  

                           " சம்பந்தர் ,,என்னடா  செய்யுறாய் வாடா   மச்சான்  " என்பான்

                          "  எனக்குதானே  முடி  இன்னும்  பெரிதா  வளரவில்லை ,,இப்ப  வந்தா  என்னத்தைப்  பிடிச்சு  வெட்டப்போறாய் "

                              "  சும்மா,,வாடா  மச்சான்,,கதைச்சுக்  கனநாள்,,,காதுப்பக்கம்  கொஞ்சம்  சடை  கெம்பிக்கொண்டு  நிக்குது,,சைட்டா  பிடிச்சு  அரிஞ்சு  விடுறேன் ,,முதல்  உள்ளுக்கு  வாவன்,,இளையராஜாவின்  புதுப்  பாட்டுக்  கேசட்  ஒன்று  கிடைச்சுது  மச்சான் ,,வா  போடுறேன் "

                                      இப்பிடி  பாட்டு  போடுறேன்  என்றால்  நான்  எப்பவும்  அவன்  தலையை  வெட்டினாலும்  பரவாயில்லை  என்று  உள்ளே  போவேன்  என்று  அவனுக்கு  தெரியும். இளையராஜாவின்  பாடல்கள் அவளவு  விருப்பம்  எனக்கு. அது அவனுக்கும்  நல்லாத் தெரியும் . உள்ளே  போனால் புது  பாடல்  கேசடை  முதலில்   இருந்து  பாடவிட்டுப்போட்டு ,கதிரையில்   இருத்தி ஒரு  வெள்ளைத்துணியை  எடுத்து கழுத்துவரை கட்டிப்போட்டு  சீப்பும்  கத்திரிக்கோலும் அவனை அறியாமலே கையுக்கு வந்திரும் .

                                  "    சொல்லு  சம்பந்தர்  என்னடா  செய்யுறாய் ,,எங்க  இந்தப்பக்கம்  கனநாளாய்த் தலைக் கறுப்புக்   காணமுடியவில்லை "

                               " எங்க  மச்சான்  நேரம்  கிடைக்குது ,,ஏதும்  ஒரு  வேலையில்  சேருவம்  என்று  ஓடுப்பட்டுக்கொண்டு  திரியிறேன் "

                             " ஓம்,,அது கஷ்டம்தான்  தான்  மச்சான்,,நல்ல  காலம் எனக்கு  அப்பரின்  வேலை தெரியும்,,சலூன் சும்மா  பூட்டிக்கொண்டு கிடந்தது,,,உனக்கு தெரியும்தானே நான்  பட்ட  சீரழிவு,,தப்பி  உசிரோட  வந்த  உடன  பேசாமால்  இதைத்  தொடங்கிட்டேன் "

                                    "    ஹ்ம்ம்,,,,அது  நல்லதுதான் "

                                "  தெரியும்தானே  அவங்கள்  வெளிய விட்ட நேரம்  சோலி  சுரட்டுக்கு  போகக்கூடாது  என்று  வார்ன்  செய்து...பைல்  போட்டு  வைச்சுத்தானே  விட்டவங்கள் "

                                 "   ஹ்ம்ம் ,,சரி  விடு "

                           "   எங்களோடு  படிச்சதுக்கள்  இப்ப  எங்க  எங்க  இருகுதுகளோ  தெரியேல்ல ,,உனக்கு  என்னவும்  தெரியுமா "

                           "  இல்லைடா...எனக்கும்  அதிகம்  தெரியாது "

                              "உமாமகேஸ்வரி   இப்ப  எங்க  மச்சான் "

                           " யாரடா  குருக்களோடு  மகள்  தானே,,எனக்கு  எப்படி  தெரியும் அவள்  இப்ப  எங்க  என்று "

                                          உமாமகேஸ்வரி எங்களோடு படித்த எல்லாப் பெண் பிள்ளைகளிலும் பார்க்க துளசிப் பூப் போல அழகானவள்  . கலவரம்  இல்லாத ஹம்சத்வனி ராகம் போல  அமைதியான முகம் . சிந்தாமணிக் கடலை உறப்போட்ட   நிறம். கறுத்த பொட்டு நெற்றியில்  இழுத்து தலைமயிரை  படிய வாரி ரெட்டைப்பின்னல் போடுவாள். அதிகம் யாரோடும்  கதைக்க   மாட்டாள்.  நிழலைக் கூட  நிமிர்ந்தே பார்க்க மாட்டாள். நாங்களும் பார்க்க மாட்டோம்.உறை போட்ட  பெரிய  சூட்கேஸ் கொண்டு வருவாள். அதன் உள் பக்கத்தில் சாமிப்படங்கள் ஒட்டி இருப்பாள் .   சரஸ்வதிப் பூசைக்கு " சாமய வர கமணா "என்று சங்கீதம் பாடுவாள் 

                              "  ஓமடா  அவள்  தான் ,,    அவளோட  நான்  ஒன்பதாம் வகுப்புவரை  படிச்சன்,,,நீ  தானே  அஞ்சாம்  வகுப்போட டவுனுக்கு  பாஞ்சு  போயிட்டியே ,,அவள்  என்னோட  லைன்  அடிச்சுக்கொண்டு இருந்தாள் "

                             "  உண்மையாவா  சொல்லுறாய்,,அவள்  ஐயர்  பெட்டை  எல்லா "

                              "  பார்த்தியா  உன்னோட  சாதிப்புத்தியை எழுப்பிக்  காட்டுறாயே...ஐயர்  பெட்டை  என்றால்  என்னடா ,,அவளுக்கு  மட்டும்  என்ன எல்லாம்  பவுணாலையே  செய்து கிடக்கு "

                               "  இல்லை  மச்சான்  நான்  நடைமுறையை  சொன்னேன் "

                            " மன்னாங்கட்டி  நடைமுறை  அவள்  வழிஞ்சு  வழிஞ்சு  லைன்  அடிச்சாள்  டா,,உமாவுக்கு  அவளவு  விருப்பம் என்னில  தெரியுமா  "

                                " பிறகு  என்ன  ,,உடுத்த உடு  துணியோட இழுத்துக்கொண்டு  ஓடி  இருக்கலாமே "

                                  "  என்னடா  சம்பந்தர்  முசுப்பாத்தி  விடுறியா "

                           "  இல்லை மச்சான்  நான்  இன்னொரு  நடைமுறையை  சொன்னேன்,,அதுதான்  நடக்கும்  அடுத்ததா "

                               "  ஓமடா  அதுதான்  பிளான்  போட்டேன்,,உமாவும்  அதுக்கு  முதலில்  பயந்தாள் "

                              "   கதையை  செருகாமல்  ஒழுங்கா  சொல்லி  முடியடா "

                          "   சம்பந்தர்  நான்  சொன்னா  நம்ப மாட்டாய்   கதை  போய்  செருகிட்டுது ,,அதுக்குள்ளே  உமா ..."

                        "  ஹ்ம்ம்...சொல்லு  உன்னோட மிச்ச  ரொமான்ஸ்  கதையை "

                                  "  ஆனா ,உமா..கொஞ்சம்  நாள்  தரச்சொல்லி  கெஞ்சினாள்.."

                                 " அட அட  என்ன  ஒரு ஹிரோயின்  என்ன  ஒரு  ஹீரோ ,,சரி  பிறகு  என்ன  பிக்கல் பிடுங்கல் "

                                     " சின்னச்  சில்லெடுப்பு  வந்தது,,சம்பந்தர்  அதை  என்னண்டு  சமாளிகிறது  என்று  அப்ப  தெரியவில்லை   " 

                                      " காதல்   என்ன  சிட்டுக்குருவி  லேகியமா  சுமுத்தா வழிக்கிக்கொண்டு போக,,சில்லெடுப்பு  வந்தா  தாண்டா  அது  காதல்  "

                                   "ஹஹஹா  ,,உனக்கு  முசுப்பாத்தியா  இருக்கு,,நானும்  உமாவும்  பட்ட  பாடு  எங்களுக்குத்தான் தெரியும்  சம்பந்தர்  " 

                                   "  கஷ்டம்  இல்லாமல்  காதல்  இல்லை டா  மச்சான்..அவங்கட  வீட்டில  பிரசனை  எடுத்தாங்களா ,,ஐயர்  ஆட்கள்  பயந்தாங்கொள்ளிகளே  "

                                      "  அதில  ஒண்டும்  வரவில்லை,  உமா  வீட்டுக்கு  ஒரு  மண்ணும்  தெரியாது..,உமா  நல்லா  படிப்பாள்  தெரியும்தானே "

                              " ஓம்,,அது  உண்மை, அவளுக்கு  சரஸ்வதி  கடாட்ஷம் ,அவள்தானே எப்பவும்  முதலாம்  பிள்ளை "

                           "  நான்  கடைசி  வாங்கு  அதுவும்  தெரியும் தானே "

                             "  காதலுக்கு  என்னடா  படிப்பு  ,,அது  பக்கு  பக்கு கடாய்  விளக்கு திரி  வைச்ச மாதிரி    பத்தி  இருக்குமே "

                                "   கைலாசபிள்ளையார்  திருவிழாவில தான்  கடைசியா  கதைச்சேன்  ,,போட்ட  பிளான்  எல்லாம் அதில  வைச்சு இன்னொருக்கா இன்னும்  வடிவா பிளான்  போட்டோம் "

                                 "  அடப்பாவி  இப்பிடி  என்றால்  நானும்  அங்கேயே  படிச்சு  இருப்பேனே...நான்  போனது  பொடியன்கள்  மட்டும்  படிக்கிற பள்ளிக் கூ டம்  டா...நல்லா  வறுத்து  எடுத்திட்டாங்கள் அங்க "

                            "    உமா,,நல்லா  லைன்  போட்டு  ,,ரெண்டு  பேரும்  அந்த  மாதிரி  ஒட்டு  தெரியுமா,  சொல்லி  வேலை  இல்லை ,"

                                "     ஹ்ம்ம்,,,பிறகு  என்ன  நடந்தது "

                          "  மச்சான்  உனக்கு  கன்னத்தில பூனை  மயிர்  சிலுப்புது ,,நாடியில்  ஆட்டுக்கிடாய்  தாடி ,,அலங்கோலாமா இருக்கடா ,,நாலு  இழுவை  இழுத்து  சேவ்  எடுத்து  விடவா "

                            "    சரி,,,சேவ்  எடு   ...எடுத்து  எடுத்து  கதையை  சொல்லுடா "

                                   சாந்தான் ஒரு அலுமினிய சட்டியில்  சவுக்காரம்  கரைச்சு  அதை பிரசில் தோச்சு  எடுத்து  முகம் முழுவதும் அடிச்சுப்போட்டு, சவரக்  கத்தியை  பெல்டில நாலு  இழுவை  மேல் வாக்கிலும்  பக்க  வாட்டிலும்  இழுத்துப்போட்டு அதை உள்ளங்கை சூரிய மேட்டில  வைச்சு சாணை பார்த்திட்டு , கேசட்டில " அடி  ஆத்தாடி  மனசொன்று ரெக்கை  கட்டிப்  பறக்குது  சரிதான..."   என்ற  பாட்டை  போட்டுடு கன்னம்  எல்லாம்  வழிசுக்  கழுத்துக்குக்  கிட்ட கத்தியைக்  கொண்டுவந்து  வைச்சிட்டு 

                                       " டேய்  மச்சான்,,,நான்  எடுத்த  முடிவு  சரியா  என்று  இப்பதான்  ஜோசிக்கிறன்  மச்சான் "

                                     "   அடப்பாவி  சவரக்  கத்தியை என்னோட   கழுத்தில சங்குக்கு  நடுவில  வைச்சுக்கொண்டு  இதைக்  கேட்கிறாயே "

                                        "  டேய் இல்லை   மச்சான்,,,நான்  எடுத்த  முடிவு  சரியா  என்று  இப்பதான் உண்மையாவே  ஜோசிக்கிறன்  மச்சான் "

                                    "   டேய்  விளையாடாதே,,,நீ  என்னடா  முடிவு  எடுத்தாய்..அதை  சொல்லு "

                                    சாந்தன்  மிச்சம்  சொல்லத்  தொடங்க  கேசட் பிளேயரில் " கண்மணி  நில்லு  காரணம்  சொல்லு.  காதல்  கிளியே ....ஏழையின் காதலை  ஏன்  மிதித்தாய்.......  " என்ற  பாடல்  பாடத்  தொடங்கி  விட்டது ...
.
.
...........தொடரும் .......

.

Tuesday 12 July 2016

அனாமிக்கா...முதல் பத்துக் கவிதைகள்

............................................................... 001

சுழண்டு வீசிய காற்றில்
ஒரு சருகும் 
ஒன்றிரண்டு இலைகளும்
அனாமிக்காவின் 
மடியில் விழுந்தது 
அவளோ
காற்றின் திசையைக்
கண்டுபிடிக்கும் முனைப்புடன்
சிந்தனையில் மூழ்கியிருந்தாள்

வார்த்தைகள்
உள்நுழையமுடியாத
மவுனத்தில்
முன்னொரு போது இதேபோல்
நடந்ததை
உனக்கு நினைவூட்டமுடியாவிட்டால்
நானும் அதை மறந்து போகவேண்டுமா?
என்று கேட்டாள்

இனி சென்று பார்க்க முடியாத
ஒரு காலத்தை
வயதாகிய ஒரு பருவத்தை
தேடமுடியாத
நம் அதிர்ஷ்டங்களை
நீதியற்ற தீர்ப்புகளை
உனக்கு இதையெல்லாம்
நினைவூட்டுதல் வருத்தமானது
என்றேன்

நினைவுகள் அழியும்
அதன் பெறுமதிகளை
தராதரம் மறுக்கப்படும்
ஒரு கணப்பொழுதில்
எல்லாவற்றையும்
வலிந்து கொண்டே இழுத்தெடுப்பது
அவமானம் என்றாள்

நான் பார்ப்பதை
அவளும் உள்ளுணர்வில்
இல்லாத நேரத்தில் கவனித்துக்
கண்டுபிடித்துவிட்டதாக
மகிழ்ச்சியில்
இது வெறும் ஒரு சம்பவமில்லை
எனக்கூற விழையும்முன்னே
அடுத்த மரத்துக்கு
நகர்ந்துவிட்டாள்.


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''002

சின்னச் சின்னச்
சண்டைகள் கருக்கொண்டு
பயமுறுத்திய போதெல்லாம்
விஷமத்தனமான
பார்வைகளை வீசி
அனாமிக்கா
நம்பிக்கைகளை உடையவிடாமல்
கதவுகளை அடைத்துவைத்தாள்

அதன் பிறவு
நீலக் கண்கள்
காவல் வைத்த
ஒவ்வொரு இரவையும்
விடிந்தபின் பார்த்துக்கொள்ளலாம்
என்று சொல்லியே
கடந்து விட்டேன்

தேரை இழுத்துத்
தெருவில விட்ட மாதிரி
கடைசியாகச் சந்தித்த ஏரிக்கரையில்
அவள்
சடுதியாகக் கிளம்பிப்போனத்தில்
அதிர்ச்சியாகிய
நேரம் ஓடாமல் நின்றது

மறந்து வைத்து விட்ட
கையடக்கியை
எடுப்பதற்காகச்
மறுபடியும் அங்கே சென்றேன்
பறவைகள் சத்தம் கேட்டது
பார்த்தும் பாராமலும்
காற்று இறுக்கிக்கொண்டிருக்க
அனாமிக்கா
உட்காந்திருந்த சீமெந்துக்கட்டில்
அவள் சூடு
அப்பிடியே இருந்தது.


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''003
அனாமிக்காவுக்கு
இதெல்லாம் தெரியாதென்பது
நேற்றுத்தான்
தெரிய வந்த போதும்
கடவுளறிய
எனக்கும்அவளுக்குமிடையில்
எதுவுமேயில்லை என்பதும்
பொய்

இவளவுநாளும்
கட்டாயம் சிலதாவது
தெரிந்திருக்குமென்றுதான்
நினைத்துக்கொண்டு
மேம்போக்காக்
கதைத்துக்கொண்டிருந்தேன்

திறமையாகக்
கதை எழுதத் தெரிந்த
அவளுக்கு
இதுவரை ஒருவரும்
நேராகவே வந்து
இதெல்லாம் ஏன் தெரியாதென்று
கேட்டதில்லை என்றுசொன்னாள்

அப்படித் தெரிந்தாலும்
ஒரு கேள்வியும்
ஒரு தயக்கமும்
ஒரு விடையும்
ஒரு சந்தேகமும்
ஒரு முடிவும்
உள்ளே உழன்று இருக்கும்.

அன்னாமிக்கா எழுதியது
வியர்வை நாளில்
அவள் டூரியான் பழ
கமக்கட்டு வாசம்போல
எல்லோருடைய கவனத்திற்கும்
எழுந்து போகவில்லையென்ற
கவலை எனக்குமிருக்கு

அதைப் பற்றி யோசிக்க
பிரபஞ்சம் போல்
அது வளர்ந்து கொண்டே
அவளையே விழுங்கக் காத்திருக்கும்
நாளில்
இன்னொருமுறை
அனாமிக்கா யார் என்று
உங்களுடன்
கதைக்க விரும்புகிறேன்.


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''004
முகமூடியை
நானாகவே கழட்டிவைக்கப்
பயப்பட்டுக்கொண்டு 
வாழ்வின் பயனற்ற தன்மை
பகல்களை திரைச்சீலைகளாக்கி
இழுத்துமூட வைக்கும்
சுய உணர்வின்றிய பொழுதுகளில்
நான் எப்போதும்
உளறிக்கொண்டேயிருப்பேன்

குற்றவுணர்ச்சி பற்றி
இனியெப்போதும் பேசாதே
என்பாள் அனாமிக்கா
எங்கெல்லாம்
சாத்தியமாகுமோ
அங்கிருந்தெல்லாம்
சிந்தனைகள்
திருடப்படுகின்றனவென்பது
அவளின் முகத்தில்தான்
பக்குவமாகும்

மிகச்சிறந்த பொழுதுகளில்
வாழ்வதாக
நம்ப வைத்துக்கொண்டு
உத்தரவாதமாக
இறந்து கொண்டிருக்கிற
நிகழ்வுகளை
ஈவிரக்கமின்றி பதிவு செய்கிறேன்

என்னை உசுப்பிவிட்டுப்போட்டு
அனாமிக்கா
வெளிச்சங்கள்
அவளுக்காகவே
வடிவமைக்கப்பட்டது போல
வேடிக்கை பார்க்கிறாள்
நான்
இரவுகளையாவது யாரும்
திருடாமலிருக்க
ஜன்னலையும் கதவுகளையும்
இறுகிச்சாத்துகிறேன்


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''005

நிறங்களில் நிறைந்த
குதியுயர நீண்ட சப்பாத்துக்கள்
வாசலில் இருக்கின்றன
அனாமிக்காவிடம் .
அவற்றின்
முழங்கால் வரையான
விளிம்புகளில்
பூனை மயிரோ
குதிரை வாலோ போல
ஏதாவதொரு விரிசடை

வடிவம் பெறநினைக்கின்ற
தன் முனைப்பால்
எப்போதும் உலாப்போக
பாதுகாப்புகளற்ற
சருகுப் பாதைகளின்
தேர்ந்தெடுப்புக்கு
அலைய அவசியமில்லை.

அவளினொரு
திசை வழியாகிய
நடத்தலின் முடிவில்
நிறைந்து கிடக்கின்ற
சப்பாத்து அடிகளின்
வெட்டு அடையாளங்களை
கண்டெடுக்கத்தான்
எனக்கு நேரம் போதாமலிருக்கிறது

மென்மையானவளின்
ஒவ்வோர் அடிவைப்புக்களும்
ஈர மண்ணைப்
பொறுத்தவரை
இயல்பான தாய்மையின்
இன்னுமொருவித பதிவுதான்.

" பின்தொடர்ந்து
பாதச்சுவடுகள் படித்த
நாட்களின் மீதான அரவணைப்பு
என்னை முறித்து விடுகிறது"
என்றேன் ஒரு நாள்

இரட்சிக்கின்ற பார்வையில்
நிமிர்ந்து சிரித்து
தன் வெறும் பாதங்களை
கருங்கல்லு நிலத்தில்
குறுகுறுவெண்று
உரசிக்கொண்டிருந்தாள்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''006
நேற்று முழுவதும்
தூறலோடு 
ஊடுருவிக்கொண்டிருந்த 
மழையையை
உள்ளங்கை விரித்து
குமிழிகளில் புள்ளிகளாக
சிலமணித்துளிகள்
வேண்டிக்கொண்டிருந்தாள்
அனாமிக்கா

உருக்குலைந்துகொண்டிருந்த
எனக்கோ
அவள் வெளிர்முகத்தின்
பிரகாசங்கள்
பிடிப்புக்களை முறுக்கேற்றப்
போதுமானதாயிருந்தது

எப்போதும்
செய்துகொண்டிப்பதில்
சுவாரசியங்களடைந்து
தொடர்ச்சியாக இரசிப்பவள்
நேற்றய மழை நிக்குமுன்னே
இடையில்
நனைந்து கொண்டே
நடக்கத் துவங்கினாள்.

சாரல் மாலை
தார் வீதியெங்கும்
சாய்மனையில் உட்காந்து
ஆடிக்கொண்டிருக்க
சின்னஞ்சிறு
வெள்ள ஓடைகளை
வாய்க்கால்களின்
அடைசல் மறித்துக்கொண்டிருந்தது

கோடை மழையில்
தெப்பலாக நான் குளிப்பேன்
என்பது மழைக்குத் தெரியும்
ஆனால்
" மழைக்கு உன்னைப் பிடிக்காதடா "
என்கிறாள் அனாமிக்கா
அவள் விருப்பத்க்கு
எதிர்ப்பெதுவும் சொல்லாமல்
குடையை விரிக்கிறேன்

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''007
ஓடைக் குளிர்மையில்
இசைக் குறிப்புக்களை
சப்தஸ்வரங்களாக்கி
நரம்புகளிலிருந்த
விண் இழுவிசையை
இறக்கி வைத்தாள்
அனாமிக்கா

நீரில் நீந்தும்
சின்னஞ்சிறு மீன்களோ
அந்த நாதம்
தண்ணியில் கரைந்திருந்தது
இளவெய்யிலோடு
பிரிந்து வருகிறதென்று
நினைக்கின்றன

நிழல்தரு மரத்திலிருந்து
ஹம்மிங் செய்யும் பறவை
வயலின் விட்ட இடத்திலிருந்து
பின்தொடரும்போது
இலைகளை அமிழ்த்தி
மழை தூற ஆரம்பிக்கிறது

தோள்ப்பட்டை
விலா எலும்புகளுக்கு
நெருக்கமாகிய
அந்த இசைக்கருவி
சுதந்திரமாக
அட்சரம் பிசகாத
அதிர்வுகளை அடுத்த நிலைக்கு
ஏற்றிவிடுகிறது

ஏதோவொரு
முக்கியமான முடிவெடுத்து
இதுவரைக்கும்
அவள் வயலின் இசைப்பது
எனக்குத்
தெரியக்கூடாதென்பதில்
அக்கறையோடு
அவள் பெயர் போலவே
சந்தங்களையும் மறைத்திருக்கிறாள்
அனாமிக்கா.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''008
பின்னிரவெல்லாம்
அனாமிக்கா
இருட்டின் மறைப்பில்
பூக்களின் வாசம் தேடி
பூங்காக்களில் உலாவுவதாக 
இயல்பாகச் சொன்னாள்

உன் வயதுக்கும்
மை வைக்கும் இளமைக்கும்
அதெல்லாம்கூட
எவளவு ஆபத்துகளை
வீட்டுக்குகே
வாசல்தேடிக் கொண்டு வருமென்று
நோர்ஸ்க்கில் சொன்னேன்

மிகஅலட்சியமாக இருந்தாள்
புரியும்படியாக
சுவுடிஷ் மொழியில் சொன்னேன்
அதுக்குமவள்
மூக்கை உறிஞ்சிச்சுழிக்க
ஆங்கிலத்தில்
அடுக்கி அடுக்கிச் சொன்னேன்

அதையும் உதறிப்போட்டு
சொரணை இல்லாமலிருக்க
மண்டையில் இறங்கிற மாதிரி
தமிழில் சொன்னேன்
கழுத்தை நெரிப்பது போல
அவள் ங்கே என்று
எதற்காக இப்ப நாலு மொழியில்
திட்டுகிறாய் என்றாள்

வயதுப் பெண்
பருவம் தவறாத
இரவெல்லாம் அலைந்தால்
நாலு பேர்
நாலு விதமாகப் பேசுவார்களென்று
சிம்போலிக்காகச் சொன்னேன் என்றேன்

அனாமிக்கா
ஹஹஹஹ என்று சிரித்தாள்
பிறகு கொஞ்சம் ஜோசித்து
ஹிஹிஹிஹி என்று இழித்தாள்
பிறகு அடக்க முடியாமல்
ஹோஹோஹோ என்று நெளித்தாள்
பிறகு என்னவோ நினைவு வர
ஈஈஈஈஈஈஈ என்றாள்

கடைசியாக
கழுதை போலப்
பல்லைக்காட்டிய போதுதான்
வரிசை தவறாத
ஆரோக்கியமான
பாண்டிய நாட்டு முத்துக்களை
முதன் முதலாகப் பார்த்தேன்

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''009
அனாமிக்கா
நிறைய சொற்களைப்
பொக்கிஷம் போல
வார்த்தையாக்குவாள்
அதற்கெல்லாமே 
ஆதர்சங்கள் எப்போதுமே
அச்சிடப்பட்ட புத்தகங்களேயென்பாள்

அவற்றின்
முதல் பக்கம் முதல்
கடைசி பக்கம் கடைசியாக
முகத்தைக் கொடுத்து வைத்து
வாசனைகளில்
நிரவி எம்ப்பிப் பறந்து
முகர்ந்து பார்ப்பாள்

பலசமயங்களில்
கவிதைகளின்
இறுதித் தடத்தை
அளவுகோலாக்கி
சைடோனியா விலியம்ஸ்சை
அறிமுகம் செய்தவளே
அவள்தான்

கதைகளையவள்
கண்டுகொள்வதேயில்லை
புனைவுகள்
சுய இன்பம் போன்ற
பொய்களின் போலி என்றும்
சுயசரிதைகளை
சவுகரியமாக்கும் அளவுக்கதிகமான
அலட்டல் என்பாள்

ஆழமற்றிருக்கின்ற
வியாக்கியானங்கள்
வெறும் அற்ப வியாபாரம்
திசைகளைத் தேடிக்கொண்டேயிரு
தேடல் திணறும் கடலில்
முழ்கிப் போவாய்
நான் அலை போல வந்து
காப்பாற்றுவேன் என்பாள்

நானவள்
மைதான அகலமான
கன்னம் இரண்டிலும்
சைபிரஸ் கிரேப்புருட் நிறத்தில்
கலிங்கு பாயும்
கண்களை வர்ணித்து எப்போது
ஒரேயொரு
கவிதை எழுதலாமென்பது பற்றி
மேலோட்டமாகச்
சிந்தித்துக்கொண்டிருப்பேன்.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''010
உயரமான
இடங்களில் உலாவும் போதுதான்
நிமிடத்தில் மயக்கும்
நிபந்தனையற்ற
சந்தோசக் குழந்தைகளின் 
வாஞ்சை போலவே
எப்போதும் அனாமிக்கா
தெத்துப்பல்லு தெரியச் சிரிப்பாள்

முடிவேயில்லாத
சலிப்புக்கள்
பற்றிய தெளிவேயில்லாத
அற்பத்தனமான
சிறிய கேள்விகளை
அப்பாவிபோலக்
அந்த நேரம்தான் கேட்பேன்

தற்கொலை
தற்காலிகத் தீர்வென்றும்
கடைசி நம்பிக்கையே
இறந்து கொண்டிருப்பவன்
கொஞ்சநாள்
வாழ நினைப்பதும் என்பாள்

என் நிறங்களற்ற
மவுனத்தை வாசித்து
பெரிய வானத்தை விட
நீளமானது
பறவையின் சின்னச் சிறகென்று
நானே எதிர்பாக்காத
திசைகளிருந்து
நம்பிக்கையும் தருவாள் ....

பிரபஞ்சத்தின்
நிரந்தரமான அர்த்தம்
அளவிலா அன்பு
என்றவள் முடிக்கும்போது
ஜன்னல் விழிம்பில்
கால்களை உதறி
காற்றை உள் இழுத்து
பெருமூச்சுவிட்டு
சுதாகரித்துக்கொள்வேன்.

.
.

Sunday 10 July 2016

சாமியம்மா .--.பாகம் ஒன்று ---

சென்ற வருட டிசம்பர் மாதம் கவுசல்யா ஒஸ்லோ வந்திருந்தாள். இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் என்ற இடத்தில் கைனக்கோலோயிஸ்ட் என்ற பெண்நோயியல் நிபுணராக இருக்கும் அவள் என்னை சந்திக்க வந்தது பல நாட்களாகப் போட்ட்டு வைச்ச பிளான் என்று சொன்னாள் .அவளின் அம்மா பர்வதம் மாமி சில வருடங்கள் முன் இறந்துபோனது பற்றி நானும் கேள்விப்பட்டதால் அவளை சந்தித்தேன் .

                                            நானே மனிதர்களை அதிகம் சந்திக்க விரும்பாத, சுவாரஸ்யங்களின் சராசரிக்கும் குறைவான பிறவி. கவுசல்யா எனக்கு அப்பப்ப மருத்துவ டிப்ஸ் தரும் அக்கறையுள்ளவள். அதை விட பழையகால மனிதர்களை இந்தக் காலத்தில் சந்திப்பதில் இடங்களில் ஒட்டிக்கொண்டுள்ள நினைவுகளும் ,நினைவுகளில் ஒட்டிக்கொண்டுள்ள இடங்களையும் தவிர  கதைப்பதுக்கு எதுவுமே இருப்பதில்லை என்பது என்னோட கொள்கையாக இருப்பதால்,முதலில் தயங்கினான்,,ஆனாலும் சந்தித்தேன் 

                                     ஒஸ்லோவில் கடற்கரை ஆடம்பரமாக  வீதியுலா போகும் ஆர்கிற்புரிக்கி  என்ற இடத்தில உள்ள ஒரு விலைஅதிகமான ரெஸ்ட்ரோரெண்டில் அந்த சந்திப்பு ஒரு பின் அந்தி மாலை நிகழ்ந்தது. ஒஸ்லோ பியோட் கழிமுகத்தில் உல்லாசப்பிரயாண கப்பல்களில் வந்து இறங்கியவர்கள் கடற்கரை வீதியில்   தலையை வெட்டித்தள்ளும் விலைவாசியில் இருந்த பாதையோர விலைப்பட்டியல்களை ஆச்சரியமாகப் பார்க்க,தாழப்பறந்த  விப்பர் பறவைகள் இரவுக்கு கடலோடு என்னதான்  செய்வது என்று ஏங்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தன 

                                                              வெளியே  கிறிஸ்மஸ்  வருகையை உறுதிப்படுத்தும் உறைபனி அள்ளிக்கொட்டிக்கொண்டிருக்க அதை சின்ன  வாகனத்தில் முன்னுக்கு லைட் போட்டு தேடித் தேடி வழித்துக்கொண்டிருந்தார்கள் .துறைமுகத்தின் அந்தப்பக்கம் இருக்கும் இறங்குதுறையில் மஞ்சள் விளக்குகள் கசிய விட்டுக்கொண்டிருந்த ஒளியை மூடு பனி வடிகட்டிக்கொண்டிருந்தது 

                                            உள்ளே   ரெஸ்டோரோரென்ட் கதகதப்பில் இருந்தது. கவுசல்யா  லிவிலிவிலிவி மார்க்   டெனிமும் மேலே ஒரு பிரென்ச் வூல் சுவேடரும் போட்டு , தலை மயிரை கழுத்துவரை வெட்டி பொப் போல பொம்ம விட்டிருந்தாள் . அடக்கமான கச்சித சிகை அலங்கரிப்பு அவளை ஒரு வைத்தியநிபுணர் என்று காட்டவில்லை . எடுத்த எடுப்பில் பார்க்கும் யாருமே அவள் ஒரு விமானப்பணிப்பெண் என்று சொல்லும்படியாக அலங்காரம் அலாரித்துக்கொண்டிருந்தது 

                                                             கவுசல்யா  ஆங்கிலம் கலந்த தமிலாங்கிழ  மொழியில் தமிழில் கதைக்க மிகவும் விரும்புவது போல முயட்சித்து ழகரம்  ளகரம்  லகரத்தில் தடக்கி தடக்கி விழுந்து எழும்பி உயிர்ச் சொற்களில் உயிரையே விடுவது போலவே   கதைத்துக்கொண்டிருந்தாள்  , ஒருகட்டத்தில்   

                                                  "கவுசல்யா உனக்க்கு நினைவு இருக்கா நீ   ஓ லெவல் பைனல்  டெஸ்ட் எடுக்க வேண்டி இருந்த அந்த வருடம் படுத்த படுக்கையாக விழுத்தது,,,உன்னை புண்ணியக்குஞ்சி சாமியம்மா வீட்டுக்கு கொண்டு போனது ...மசுக்குட்டி மாமிக்கும் உன் அம்மாவுக்கும்  சண்டை  வந்தது ...ஒப்பேரேசன்  செல்லத்துரைக்கு  அலவாங்குக்  குத்து  வயித்தில  விழுந்தது ......"

                                     "   ஹ்ம்ம்,,புண்ணிய மூர்த்தி சித்தப்பா,,,அவரா,,ஹ்ம்ம்,,ஹ்ம்ம்,,அது  யார் செல்லத்துரை மாமா  அவரா...கொஞ்சம் கொஞ்சம் இவர்கள்  முகம்  நினைவு  இருக்கு "

                                   "   புண்ணியக்குஞ்சியை  கழுத்துறையில் வைச்சு சிங்கள ஆட்கள் வெட்டிக் கொலை செய்து  போட்டாங்கள் "

                                 "  ஓ  மை  காட்,,வாட்  ஹப்பின்ட் "

                                  "  அதெல்லாம் விபரமா எனக்கு தெரியாது,,கேள்விப்பட்டேன் அவளவுதான் தெரியும் "

                                "   சோ  சாட்,,,அதென்ன  சாமியம்மா வீட்டுக்கு  என்னைக் கொண்டுபோய் ,,என்னமோ நடந்ததா,,வாட் இஸ்  தட்..டெல் மீ..ப்ளீஸ் "

                               " அங்கேயும்,,அதுக்குப்  பிறகும்  நிறையக்  கூத்து நடந்ததே ,,உனக்கு  சிலநேரம் அதுகள் தெரியாமல் இருப்பதே நல்லது  "

                                   "ஓ ரியலி,,ஐ டோன்ட் ரிமெம்பர்  வாட்  ஹப்பின்ட்  அப்படியா ,,இப் ஐ சே த த்ருத் .......எனக்கு  இது  ஒன்றுமே நினைவு  இல்லையே ,,டூ  யூ  நோ ,,லெட்ஸ்  டெல் மி "

                                             "உண்மையாவா  சொல்லுறாய்,,நான் சொல்லும் பெயர்கள் தன்னும்  நினைவு இல்லையா "

                                        "  நோ,,,,,,நோ.....நோ....ஹானஸ்ட்லி ,,ஐ டோன்ட் நோ "

                                        "  சரி  விடு,,,,அதில  ஒண்டும்  இல்லை."

                                                     "  ஓகே,,லெட்ஸ் பினிஷ் தட் வே..இட்ஸ் பைன் போர் மி ,,என்ன நான் சொல்லுறது ஓகே தானே "

                                         " ஓகே,,கவுசல்யா ,,வேற என்னவும்  சொல்லு,,எப்படி  உன்னோடு வேலை,,என்ன கார் வைச்சு இருக்கிறாய்,,இந்த வருடம் உன் ஹோச்பிடலில் உனக்கு ஹெட் ஒப் த டிபாட்மென்ட்  டீன் வேலை கிடைக்கப்போறதா சொன்னியே எண்ணச்சு அது    "                       
                                               
                                                செய்வினை சூனியம் ஏவல்  என்பது எல்லாம் உண்மையா பொய்யா என்பது போன்ற அனுமானங்களுக்கு அப்பால்  அதை செப்பவர்களும் ,அதையே எடுத்துவிடுபவர்களும் இருந்த ஊரில் அந்த நேரம் தேர்த் திருவிழாவில் சிதறு தேங்காய் அடிச்ச மாதிரி பொம்பர் அடி,செல் அடி ,அந்தச் சமர் ,இந்தச் சமர் என்று யுத்தம் வீட்டுக்கு வீடு வாசல்படியில் செத்த வீடுபோல ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது 

                                       எவ்வளவுதான் நிஜ வாழ்க்கை ஒரு அந்நிய சூழலில் சலங்கை கட்டிக்கொண்டு சதிர் ஆடினாலும் ஒரு காலத்தில் நடந்து கடந்த பாதையில் சந்தித்த மனிதர்கள் பதிவுசெய்த சம்பவங்கள் அப்பப்ப வந்து வந்து  இருப்பு இங்கே இல்லை வேற எங்கோ பாதிவழிப் பயணத்தில் பறிக்கப்பட்டது போலிருக்கு என்று சொல்லுவது போலிருக்கும் . கொஞ்சம்  உண்மையாகவே சொன்னால் ஏவிவிட்டமாதிரிதான் இருந்தது.

                                          அதையெல்லாம் சொல்லாதவரையில் தொண்டைக்குழியில் என்னமோ வந்து அமுக்குவான் பிசாசு அமுக்கின மாதிரி இருக்கும் .இந்த மாதிரியான பேய்,பிசாசு,பில்லி சூனியம் போன்றவற்றில் எங்கள் ஊரில் அதிகம் கதைக்கப்பட்டுக்கொண்டிருந்த சாமியம்மா வீட்டில் கவுசல்யா வைத்தியம் பார்க்கவேண்டும் என்று விதி எழுதிவைத்ததுதான் நடந்தது.

                                          நேராகவே விசியத்துக்குள்ள வாரேன் , கவசல்யா படிப்பிலே பயங்கரப் புலி. அவள் வயதுக்கு வந்த சில மாதங்களில் என்னவென்று அறிய முடியாத ஒரு நோயால் மாதக்கணக்கில் படுக்கையில் கிடந்தாள். பர்வதம் மாமிக்கு ரெண்டு கையிலும் நாடி விழுந்திட்டுது அந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்தபோது. எப்படியாவது அவளை எழுப்பி அந்த வருடம் மறுபடியும் படிக்க வைக்க பாடாய்ப் பாடுபட்டுக்கொண்டிருந்த போது எங்கள் ஊரில் சண்டை அகோரமாக நடந்துகொண்டிருந்தது 

                                                 பர்வதம் மாமி கவுசல்யாவை பெரியாஸ்பத்திரிக்கு பலமுறை கொண்டுபோய் வாட்டில வைச்சுப் பார்த்தா, அங்கே டாக்குத்தர்மார்  எல்லாவிதமான டெஸ்ட் எடுத்தும் மண்டையைக் குடைந்தும் அது என்ன விதமான நோய்க்குறி என்று ஒரு முடிவுக்கு வரவில்லை.  பெரிய டாக்குத்தர் அய்யா வந்து உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொன்ன   முடிவோடு ஒரு வாரத்தில துண்டுவெட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் , நவீன மருத்துவம் அதுவும் அந்த நேரம் சரிவரவில்லை ,

                                           பிறகு காரணம்தப்பி மரணம் என்று வாசலில் நின்ற பலரை இஞ்சி முரைப்பா கொடுத்து எழுப்பிவிட்ட சிவசொம்புப் பரியாரியிடம் கொண்டுபோனா, அவரும் பித்தம்,கணம் ,வாதம் நாடியெல்லாம் பிடிச்சுப்பார்த்தும் ஒரு துப்பும் பிடிபடவில்லை . சிவசொம்புப் பரியாரி பழைய செய்யுளில் எழுதின செகராசசேகரம் ,பரராசசேகரம் என்ற ரெண்டு  புத்தகத்திலும் சில பக்கங்களை  பிரட்டி பிரட்டி பார்த்தார். அவளவுதான் அதுக்குமேல ஒன்றும் சொல்லவில்லை. பரியாரி ஒருவிதமான கடுக்காய் கலரில் இருந்த கசப்புக் கஷாயம் நாலு வேளை தவறாமல் சிரடடையில் அரைச்சுக் குடிக்கக் கொடுத்தார் .

                                                   கவுசல்யா விழுந்து படுத்த ஒரு கிழமையில் ரெண்டு கையும் சரணவாதம் வந்தமாதிரிக் குறண்டத்தொடங்க ,கண் ரெண்டும் மஞ்சள் காமாலை வந்தமாதிரி மஞ்சளா வெளிறி  மோட்டுவளையில் என்னவோ பார்த்து மிரளுவது போல  நிலைகுத்தி ஏறக்குறைய அவளால் இனி இயல்பாக எல்லா  இளம் குமர்ப் பிள்ளைகள் போல இயங்கமுடியமா என்ற கேள்வி அந்த வருத்தம் போலவே  ஒவ்வொருநாளும்  வலுத்துக்கொண்டிருந்தது .

                                            பர்வதம் மாமியும் கவுசல்யாவும் தான் அந்த வீட்டில இருந்தார்கள்.மாமிக்கு ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு இயக்கத்திலே இணைந்து இந்தியாவுக்கு ட்ரைனிங் எடுக்கப்போனான்.போனவன் போனதுதான் வரவே இல்லை. மாமி விசாரிக்க களத்தில நிக்குறான்,பின் தளத்தில நிக்குறான் என்று அந்த இயக்கம் சொன்னது.கருத்து முரண்பாட்டில் உள்வீட்டு வேலையாக  நித்திரைப்பாயில் வைச்சுப் போட்டுத் தள்ளிப்போட்டு சவுக்கம் தோப்பில் தாட்டுப்போட்டாங்கள் என்றும் ஒரு கதை அடிபட்டது .

                                                            அரசாங்க புடவைக்கு கைத்தொழில் திணைக்களம் நடத்திய நெசவு பாடசாலையில் வீவிங் டீசர் ஆக அரசாங்க வேலை செய்ததால் மாத முடிவில் சம்பளம் என்று  பர்வதம் மாமி வாழ்க்கையை ஓரளவு நகர்த்திக்கொண்டிருக்க முடிந்தது . அவாவின் புருஷன் கொக்கட்டிச் சோலை இறால் பண்ணையில் டெக்னீசியன் ஆக இருந்தார். இனக்கலவர சண்டைகள் தொடங்கிய நேரமே அவரை அந்த றால் பண்ணையில் ஒருநாள் அவரையும் அதில வேலை செய்த பலரும் படுகொலை செய்யப்பட்டார்கள் .

                                                      வாழ்க்கைத் துணை இழந்து விதவையாகி வெள்ளைச் சேலையில் அமங்கலமா இருந்தாலும்   அதுக்குப் பிறகு பர்வதம் மாமியின் ஒரே ஒரு கனவு கவசல்யா .அவளையாவது உருப்படியா படிப்பித்து ஒரு நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தா. ஆனாலும் வாழ்க்கைப் பாதைகள் வழிக்குறிப்புக்கள் இல்லாத ஒற்றையடியில் தான்  எதிர்காலத்தை வரைந்து வைக்கும் என்று அவாவுக்கு தெரியவில்லை 

                                               புண்ணியக்குஞ்சி ஒரு விதத்தில் பார்வதம் மாமிக்கு உறவு முறை.  ஊருக்குள்ள நல்ல அட்வைஸ் சொல்லும்படியான ஒரு மனிதர் அவர்.இல்லாத பிள்ளைக்கு பேர் வைக்கிறது போகாத ஊருக்கு வழி சொல்லுறது போன்ற  பல குழப்பங்கள் அவரைச் சுற்றி இருந்தாலும் அனுபவம் என்பது அவரோடு எப்பவுமே சமாந்தரமாகப் பயணிக்கும் ஒன்று. அவரும் வந்து ஒருநாள் கவுசல்யாவை படுத்த படுக்கையாய்ப்  பாத்துப்போட்டு , கோடாப் போட்ட பாதி சுருட்டை கொடுப்பில  பத்த வைச்சு இழுத்து விட்டுப்போட்டு  

                                                     " எடி ஆத்தை,  என்னடி பிள்ளை இப்படி அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விழுந்து கிடக்கிறாள் , நீ ஏமாலாந்திக்கொண்டு நிக்கிறாய் "

                                            "  நானும் குஞ்சி முடிஞ்சவரை  எல்லா வைத்தியமும் பாத்திடேன் ,,ஒண்டும் சரி வருகுது இல்லையே  குஞ்சி "

                                                 "அடியே,,பிள்ளை அடிச்சு வளத்தின மாதிரி பாட்டிலே கிடக்குறாள் ஆவெண்டு  வெள்ளி பார்த்தது காணும்,,இப்ப இதுக்கு என்னவும் செய்ய வேணுமே "

                                         "ஓம் குஞ்சி எனக்கு ஒண்டுமே பிடிபடுகுது இல்லை,  கடவுள் என்னத்துக்கு  இந்தப் பிள்ளையப்போட்டு இந்தப் பாடுபடுத்துறார்  எண்டுதானே  எனக்கும் விளங்கவில்லை  குஞ்சி "

                                " எடி ஆத்தை ,,ஊருக்குள்ள செய்வினை சூனியம் காதும் காதும் வைச்ச மாதிரி  நடக்குதுடி ..இதுக்கு மலையாளத்தான் மருந்துதான் சரி வரும் போல இருக்கு, "

                                             " என்ன குஞ்சி  இப்பிடி சொல்லுறியள்,,மெய்யாதானா சொல்லுறியள் குஞ்சி "


                                 " ஓமடியாத்தை , பிள்ளைக்கு ஆரோ சூனியம் வைச்சுப் போட்டிடங்கள் போல கிடக்கு இவள் மல்லாந்தி மல்லாந்தி முழிக்கிறதை பார்க்க , "

                                       " என்ன குஞ்சி சொல்லுறியால் ,,கேட்கவே பயமா இருக்கே ,,எங்களுக்கு ஊருக்குள்ள எதிரிகள் யாரும் இல்லையே குஞ்சி "

                                  "  எடி  ஆத்தை,,உனக்கு  ஒரு நாசம் அறுப்பும் விளங்காது,,இங்க எரிச்சல் பொறாமை பிடிச்சதுகள் தானே ஊருக்குள்ள அசுமாத்தம் இல்லாமல் அலுவலைக் கொடுக்குதுகள் "

                                  " மெய்யாதானா சொல்லுறீங்கோ  குஞ்சி "

                                   "   உனக்கு ஒப்பரேஷன் செல்லத்துரை வயல் வரப்பு சண்டை என்னெண்டு முடிஞ்சது தெரியுமே,,சும்மா உலகம் தெரியாமல் விசர் கதை கதைக்காதை,,எடி ஆத்தை  ,,நான் சொல்லுரத்தைக் கேள்,,இதுக்குள்ள என்னவோ பிரகண்டம் இருக்கு "

                                "எனக்குதான் அப்பிடி ஒரு சொத்து பகையோ,,வேற பகையோ  பிக்கல் பிடுங்கல் ஒண்டும் இல்லையே ,, சரி,,குஞ்சி,,இதுக்கு இப்ப என்ன பரிகாரம் செய்யிறது எண்டு சொல்லுங்கோவன் "


                                    "  ஓம்டி  ஆத்தை , சிங்கள நாட்டில இதுக்கு சொல்லப்பட்ட மருந்து கமே வெதமாத்தாய மத்துரு  செய்வான் ,,அல்லது பண்சாலையில் ஹாமத்துறு  செய்வான் ,,சொல்லி ஒருகிழமையில் நிமித்தி எடுத்துப்போடுவாங்கள் இங்க வெச்சு ஒன்றும் செய்ய முடியாது போல இருக்கு "

                                   "  சிங்கள நாட்டுக்கு கொண்டுபோக எனக்கு என்ன வசதி இருக்கு,,சொல்லுங்கோ பார்ப்பம் குஞ்சி "

                                       "   ஹ்ம்ம்,,,எதுக்கும் ஒருக்கா சாமியம்மா பார்வை பார்த்தால் நல்லம் எண்டு நினைக்கிறன்,,மனுஷி வேப்பிலை அடிச்சு உருவேற கலைவந்து ஏவல் என்னவும் இருக்கு என்றா சொல்லும்,,,நான் அதுதான் முதலில் செய்யவேணும்  எண்டு சொல்லுவன் "  என்று சொன்னார் ,, 

                                                    
                                   சாமியம்மா வீட்டில் சாமியம்மா ஒரு சாதாரண பெண் போல இருக்கவில்லை. கொஞ்சம் தெய்வத்தன்மை மனித வடிவில் வந்திறங்கி ,நம்பிக்கைகள் பொய்த்துப்போன மனிதர்களின் நம்பிக்கையில் பல மாற்றங்களை ஏட்படுத்தியது .அதுக்கும் கடவுள் அனுக்கிரகம் போன்ற விபரங்கள் பின்னணியாகத் தேவை இல்லாமலே இருந்தது .சாமியாடுற பொம்புளை என்று அவாவை ஊரில சொன்னாலும் மனுசி பலருக்கு தெய்வம்போலத்தான் இருந்தா .

                                         ஒருகாலத்தில் வட்டிக்கடை நடத்தின பேரம்பலம் என்பவரின் மனைவிதான் சாமியம்மா. அவர்கள் வட்டிக்கடை அவர்கள் வீட்டிலேயே இருந்தது. முன்னுக்கு  ஜன்னல் கம்பிகளில் கிராதி போட்டு அதுக்கு உள்ளே ஒரு கிராதி போட்டு அதுக்கும் உள்ளே இரும்புக்கு கிராதி போட்டு ஜெயில் போல இருக்கும் அந்த வீட்டுக்கு உள்ளே போறது என்றாலே மூன்று இரும்பு  ஆமைப் பூட்டுக்கள் திறந்த பிறகுதான் போக முடியும். அவ்வளவு அரண்மனைப் பாதுகாப்பு இருந்தது ,   

                                          இயக்க ஆரம்ப நாட்களில் ஒருநாள் ஒரு இயக்கம் அவர்கள் வீட்டுக்கு வந்து துவைக்கைக் காட்டி லாக்கரில் இருந்த எல்லா அடைவு நகையையும் அள்ளிக்கொண்டு போட்டார்கள். அதுக்குப் பிறகு பேரம்பலம் தாடி வளர்த்து அந்த ஜன்னல் கம்பிக் கிராதியை இறுக்கிப்பிடிச்சு வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பார் .கொஞ்ச மாதங்களில் ஒருநாள் அந்த ஜன்னல் கிராதிக் கம்பியை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு இருந்த நேரம்  நெஞ்சுக்க என்னமோ செய்யுது என்று நெஞ்சை பிடிச்ச ஒரு நாள் சீவன் போட்டுது. 

                                                           அதுக்கு பிறகு அதுவரை சாதாரண குடும்பப் பெண் ஆக இருந்த சாமியம்மா ஒரு முடிவோடு சாமியம்மா ஆகினதா தான் சொல்லுவார்கள். அல்லது வேற காரணங்கள் இருக்க முடியுமா என்று யாருக்கும் எதுவும் சொல்லும்படியாக காரண காரியங்கள் இல்லை  . மூன்று இரும்பு ஜெயில் கிராதிகளையும் உடைச்சு எறிஞ்சு போட்டு ஓவென்று வாசல்கள் திறந்து விட்ட போதுதான் அது சாதாரணமான ஒரு வீடுபோல வந்தது 

                                      பழங்கிணற்றடி வீராளி அம்மன் கோவிலுக்கும், பெட்டிசம் பாலசிங்கம் வீட்டுக்கும் எல்லையாக இருந்தது சாமியம்மா வீடு. மற்ற இரண்டு பக்கமும் வடக்கால உடையார் வளவும், தென் திசையில் மதியாபரணம் டீச்சர் வீடும் எல்லைகளாக இருந்தது. வாழை,கமுகு,தென்னை,ஆடாதோடை  என்று சோலைபோல இருந்த அந்த வீட்டில் சாமியம்மா தனியா இருந்தா .அந்த வீடு விட்டலாச்சாரியார் படங்களில் வரும் பேய் வீடு போல இருக்கும்.

                                             ஜடா மாலை,முத்துமணி மாலை என்று நிறைய பாசிமணி மாலைகள் அள்ளிப்போட்டு , நெற்றியில் பெரிய அம்மன் குங்குமப் பொட்டு வைச்சு நடுவகிட்டு தொடக்கத்தில் கஸ்தூரி மஞ்சள் போட்டு வைச்சு    சாமியம்மா சீத்தாபழம் போல செழிப்பான பெண்மணி. கருத்தகொழும்பான் போல சதைப்பிடிப்பான தேகம். நாலு மணித்தியாலம் அசையாமல் அனுங்காமல் சப்பானிக்கட்டி இருப்பா. கலையாடும் நேரம் காளி அம்மன் வாலாயம் முகம் முழுதும் வந்து ஏறி இருக்கும் 

                                                  கழுவித் துடைத்து  சுத்த சைவம் ,மாதத்தில் அரைவாசிநாட்கள் அம்மன் விரதம் ,மடி ஆசாரம் பார்த்து மஞ்சள்தண்ணி தெளித்த வீடு , நடுஹாலில் பூசை புனஸ்காரம் என்று கலையாடுறதுக்கு நிறைய அம்மன்,ஆதிகேசவன், வீரப்பத்திரர் சாமிபடங்கள் அடுக்கி வைச்ச உயரம் குறைந்த அகலமான  மரமேசை  , நிறைகுடம் , வேப்பிலை, சந்தனம், குங்குமம்,திருநீறு , சாம்பிராணி ,தேங்காய்சிரடடைகள், பூசுமஞ்சள்  ,கப்பூரம் , கைமணி , அதுக்கு முன்னாலதான் சாமியம்மா சப்பாணியில் நாரி வளையாமல் இருப்பா. சாமியம்மா வெத்திலை போடுறது மேளக்காரர் வெத்திலை போடுறதைவிட சுவாரசியமா இருக்கும் . 

                                                          ஒரு பெரிய வெத்திலையை எடுத்து அதை மூன்று தரம் பிரட்டிப் பிரட்டி தொடை சேலையில் துடைத்து கடவிரலையும் சின்னிவிரலையும் இறுக்கி அதன் காம்பை நறுக் என்று  சுண்டி எறிஞ்சுபோட்டு ,ஐயங்கார்  பொட்டு வைக்கக் கிண்ணத்தில் கிள்ளின  மாதிரி சுட்டுவிரலில் வாச சுண்ணாம்பு தொட்டு  எடுத்து அதை வெத்திலையின் பின் பக்கம் என்னவோ எழுதுவதுபோல விரலால் கீறி ,மிக நேர்த்தியான வட்டமா உள்ள சீவல் நாலே நாலு தேர்ந்து எடுத்து நடுவில வைச்சு கடை வாயில அடைவா 

                                                               கடைவாயில் அடைஞ்ச தாம்பூலம் வலதுபக்கக் கொடுப்பில தள்ளிக்கொண்டு நிக்கும். அதை மெல்லவே மாட்டா . மற்றக் கொடுப்புக்கு மாற்றவும் மாட்டா . கொம்பொறிமூக்கன் பாம்பு தவளையை பிடிச்சு வாயில கவ்விக்கொண்டு மிரட்சியில் பார்ப்பது போல இருக்கும். உண்மையில் அந்தநேரம் சாமியம்மாவைப் பார்க்கவே பயமா இருக்கும். சாமியம்மாவும் மற்றவர்கள் பயப்படும்படியான ஒரு வெறித்தனமான பார்வைதான் அப்போது பார்த்துக்கொண்டிருப்பா .

                                   செவ்வாயும் வெள்ளியும் பயனை நடக்குது என்ற பெயரில் தான் சாமியம்மா வீட்டில் கலையாடி தேசிக்காய் வெட்டு நடக்கும்.பயனை பாடப் பல பெண்கள் போவார்கள். ஆண்கள் அதிகம் போவதில்லை. சில விசேட நாட்களில் கழிப்பு கழிக்க என்று ஒரு சம்பவம் நடக்கும் அதுக்கு குறிப்பிட்ட அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கு பற்றுவார்கள் . நிழலாக ரகசியம் பேசுவது போல அது மர்மமாகவே இருக்கும் 

                                             பெட்டிசம் பாலசிங்கம் வீடு பின் வளவில் சாமியம்மா வீட்டு வெளியோடு முடியும். பெட்டிசம் கலையாடுறது சாமியாடுறதுக்கு ஜென்மத்து எதிரி.  

                                "  இந்த அறுதலிதான் வெள்ளடியான் சேவலில் மந்திரிச்சு விட்டு அதைக் கழுத்தைச் சுத்தி கூரைக்கு மேலால எறிஞ்சு எண்ட ராசாத்தியின் உயிரை எடுத்துப்போட்டாள், சூனியக்காரக் கிழவிக்கு இன்னும் சாவு வருக்குதில்லயே "

                                           என்று வெளிப்படையாகவே சொல்லித்திரிவர்    அவரோட பொஞ்சாதி இறந்ததுக்குக் காரணமே சாமியம்மா என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். ஆனால் அதை எந்த அரசாங்க டிப்பாட்மென்ட் இக்கும் பெட்டிசம் எழுதி வேலை நடக்காது என்று நல்லா தெரியும் அவருக்கு. அதனால சாமியம்மா பற்றி இல்லாததும் பொல்லாததுமா வதந்திகளை எப்பவுமே கிளப்பிவிட்டுக்கொண்டிருப்பார். அவர் பொஞ்சாதி புற்றுநோய்  வந்து இறந்தாத்தான் ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரியும்.அதுதான் உண்மையும் ,

                                          அந்த வீட்டின் பெரிய  நடு ஹோலில் பயனை நடந்தாலும்,அந்த ஹாலின் ஒருபக்கம் உள்ள ஒரு அரை பலவருடமா பூட்டப்பட்டே  கிடப்பது போல அந்த அறைக்கதவில் சிலந்தி வலை கட்டி இருக்கும் . எப்பவோ ஒரு காலத்தில் அந்தவீடு மங்கலமா இருந்த போது ஒரு பொங்கலுக்கோ,தீவாளிக்கோ கட்டித் தொங்கவிட்டு இருந்த மாவிலை காஞ்சு சருகாகி ஒரு நூலில் அந்த கதவுக்கு மேலே இருக்கும். அந்த அறைக்குள் என்ன இருக்கு என்று யாருக்குமே தெரியாது 

                                           சாமியாவுக்கு ஜால்றா போட ஒரு பயனைக் கோஸ்ட்டி இருந்தது. அதில டோல்கி கோபாலு என்ற எங்கள் உள்ளூர் இசைக்கலைஞர் டோல்கி மேளம் வாசிப்பார். அவர் ஒரு பிரபலம் இல்லாத ஒரு இசைக்குழுவின் மேடைகளிலும் சினிமாப் பாட்டுகளுக்கு டோல்கி வாசிப்பார். சாமியம்மா பயனையில் அவர் டோல்கியை கொஞ்சம் உருவேற்றும் நாதத்துக்கு கிட்டிடவா கொண்டுவர அதை துந்தனா மேளம் போல வாசிப்பார்,,அந்த நாதத்தில் பயனை எகிறி எழும்பி அகோரமா சாமியாடும் 

                                             சாமியம்மாவே டோல்கி கோவாலுக்கு மியூசிக் டைரக்ட்டர் போல ஆவேசமாக நல்ல பாம்பு படம் எடுத்து சீறுற மாதிரி ,,உஸ்ஸ்ஸ்   உஸ்ஸ்ஸ்ஸ்    என்று மூச்சை முன்னுக்கு ஓங்கி வெளிய விட்டு 

                                   " டேய்  கோவாலு ,,,ஏத்தடா  நாலு கட்டைக்கு ,  காளியம்மா  நாதம்  பாடுது,,,டேய்  கோவாலு ,,ஏத்தடா  அஞ்சு  கட்டைக்கு,,டேய்  கோவாலு உறுமி உறுமி வாறாள் டா  அங்காள அம்மன்,,,டேய் கோவாலு,,இப்ப  ,,இப்ப ,,,உஸ்ஸ்ஸ்    உஸ்ஸ்ஸ்ஸ் ..கோவாலு  ஏத்தடா  ஆறு  கட்டைக்கு,,அம்மன்  அகோரமா  ஆடி  வாரா  டா "

                                     டோல்கி கோவாலுக்கு அந்த அளவுப் பிரமாணங்கள் நல்லா விளங்கும்,,அல்லது  சாமியம்மாவின் ஆவேசம்  விளங்குமா என்பதும் தெரியாது.ஆனால் டோல்கியில் வார் அறுந்து தோல் பிஞ்சு போறமாதிரி கோவாலு போட்டு முழக்குவார் .

                                                    பயனை தொடங்குமுன் பயனைக்கும், சாமியாடுறதை விடுப்புப் பார்க்கவும் வந்திருக்கும் எல்லாரோட முகங்களையும் சாமியம்மா நல்லா உற்றுப் பார்ப்பா. முகத்தில் ஓலைச்சுவடி வாசிக்கிறமாதிரி அவாவின் கண்கள் ஓடும் ,சிலரை மட்டும் சிங்கள ஆமிக்காரன் செக் பொயிண்டில்  ஐடண்டிக் கார்டில் தமிழ் பெயரைக் கண்டவுடன தமிழரை மட்டும் பெருவிரலை சொடுக்கி கைகாட்டி  அங்காலே வா என்பானே அதுபோல சைகை செய்து எழுப்புவா 

                                                     அப்படி எழுப்பிக்கொண்டு வாற ஆட்களை வீட்டுக்கு வெளியே முற்றத்தில் நிட்பாட்டி வைச்சு அவர்களைச் சுற்றி கொக்கச்சத்தக்கதால் வட்டமாக கோடு நிலத்தில கீறிப்போட்டு அதுக்குள்ள நிக்கச் சொல்லுவா. பிறகு உள்ளே போய் கொஞ்சநேரம் கழிச்சு தேசிக்காய் மூன்றை எடுத்துக்கொண்டு வந்து வெட்டி மஞ்சள் தட்டிலே போட்டு பிரட்டி எடுத்து அதை அந்த வட்ட த்துக்குள் நிக்கிற எல்லார் உச்சம் தலையையும் தேச்சு வலது இடது பக்கமா துப்பிப்போட்டுத்தான் உள்ளுக்கு எடுப்பா 
                                                         

                                     செய்வாய் வெள்ளியில்   இரவு பன்னிரண்டு மணிவரைக்கும் தான் சாமியம்மா வீடு பயனையில் அதிரும். சரியாகப் பன்னிரண்டு மணிக்கு குறுக்க அரிவாள் போட்ட மாதிரி சத்தம் அடங்கிப்போடும் . பன்னிரண்டு மணிக்கு சாமியம்மா ஒரு முடித்  தேங்காயில் கப்பூரம்  பத்த வைச்சு  அதை உள்ளங் கையால அடிச்சு அணைச்சுப்போட்டு , ஒரு முழுத் தேசிக்காயை வாயில அடைஞ்சு அதை சக்கையாக  நெரிச்சு துப்பிப்போட்டு இந்தக் கடைசி வசனம் சொல்லுவா 

                                         "   இனிக் ,,காடேறி சுடலை மாறன்  வாற நேரம்,,,இதுக்கு மேலே உங்களை நான் காபாந்து செய்ய முடியாது,,அதுக்கு எனக்கு கட்டளையும் இல்லை,,எல்லாரும் பாதுகாப்பாய் வீடு வாசலுக்குப் போய்ச் சேருங்கோ "

                                                 இதோட  அமைதி ஆகிடும் சாமியம்மா வீடு. அமைதி என்றால் சவுக்காலை போல அமைதி. அந்த அமைதி பயப்படுத்தும்படி இருக்கும். ஒரு சின்னக் குண்டூசி விழுற சத்தமும் வராது. இரவெல்லாம் என்னதான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருட்டுக்கே தெரியாது. அவ்வளவு  அனுமாஸ்ஸா அமைதிக்குப் பின்னால் நிறைய இந்த உலகத்துக்குச் சம்பந்தம் இல்லாத இன்னொரு உலகத்தின் நாடகம் நடக்கும் .

                                                               புண்ணியக்குஞ்சி ஒருநாள் சாமியம்மா வீட்டுக்கு போய் இருக்கிறார்.சாமியம்மா பூசைக்கு ஆயத்தம் போல தியானம் போல இருந்து இருக்கிறா, புண்ணியக்குஞ்சி ஒரு பக்கமா குந்தி இருக்க,கண்ணை முழிச்சுப்பாத்திட்டு 

                                                   "   இதார் பேச்சு மூச்சு இல்லாமல் குத்திக்கொண்டு இருக்கிறது,,பார்க்க சித்தப்பு போல இருக்கே "    


                                                  " ஓம் ஓம் ,,நான் தான்,,ஆனால் பேச்சு மூச்சு இல்லை என்றால் இப்ப ஆள் முடிஞ்சலோ இருக்கும்,,நான் தான் கையைக் காலை உதறிக்கொண்டு இருக்கிறேனே  "                                                                     

                                  " என்ன சித்தப்பு,,இந்தப்பக்கம் தனியா வந்து மண்டிக்கொண்டு இருக்கிறியள் எண்டு கேட்டேன்  "

                                       " அட பேந்துபார்...ஆடு மாடுகள் தான் கூட்டமா  வரும்  தெரியும் தானே,,நான் வேங்கைப்புலி எப்பவும் தனியாத்தானே  உலாவுறது  அது  தெரியாதோ உங்களுக்கு "

                                        "  அப்ப பின்ன இங்க பயனை பாட வாற ஆட்களை   மாடுகள் ஆடுகள் எண்டுறியளோ,,இந்தப் பிலாக்கணக்  கதை  தானே  சித்தப்பில மற்ற ஆட்களுக்கு  கொதிவரப் பண்ணுறது "

                                   "  இல்லை  இல்ல,,அம்மா,,,கோவிக்காதையுங்கோ ,,ஆணியில்  பொம்புளை பார்க்கப்போனவனுக்கு  எட்டுச் சோடி செருப்பு ஆடியில தேஞ்சு போன மாதிரி,,நான்  வாயைத்திறந்தால் வம்பாதானே எல்லாரும்  நினைக்குதுகள் "

                                      " அது தானே உண்மை,,சித்தப்புக்கு வாயிலதானே  சனியன்,,அதுதானே ஊர் முழுக்க சனம் பறையிறது "

                                        "  ஓ,,வெறும் வாயில கொட்டாவி  விடுற சனம்களுக்கும் வாயைப் போட்டு ஆட்டவும்  அவல் வேணும்தானே "

                                         " உந்தக்  கிரந்தம் மட்டும் இன்னும் சித்தப்புவை  விட்டுப்  போகுதில்லை "

                        " அட அட  அதுக்கும்  எண்ணவும் காய்வெட்ட போறிங்களோ "

                                   " சரி,,உந்த விண்ணணாத்தை அங்கால  வைச்சுப்போட்டு,,வந்த விசயத்தை  சொல்லுங்கோ  சித்தப்பு,,எனக்கு அலுவல் ஆயிரம் கிடக்கு "

                               " எங்கட பர்வதம் தெரியும்தானே ,,அவளிண்ட பிள்ளைக்கு  என்னமோ காத்துக்கறுப்பு ராவுப்பட்ட நேரம் அண்டிப்போட்டுது போல கிடக்கு "

                                                       " ஓம்,,அதுவே வந்த அலுவல் "

                           " ஓம்,,ஓம்  பொடிச்சியை மல்லாக்கா விழுத்திப்போட்டுது .. "

                                 "  அவள்  சடங்கு வைச்சு  குமரி  ஆகிடாள் இல்லையா,,அப்பிடித்தான்  கேள்விப்பட்டன்,,மெய்தானே "

                                              "    ஓம் ஓம் குமரிதான் , ஒரு கையோடு இந்தக்கிழமையில் ஒருநாள் பார்வை பார்த்தால் நல்லம்,,கொஞ்சம் பிள்ளை அலங்கோலமாய்க் கிடக்கிறாள்   "

                                                         என்று கவுசல்யா நிலைமையை சொல்ல, சாமியம்மா ஒருக்கா சாமிப் படங்களைப் பார்த்துப்போட்டு  ,தீட்டுத்  துடக்கு இல்லாத ஒருநாள் அவளைக்கொண்டுவரச் சொல்லி ,ஒரு லிஸ்டில் இன்ன இன்ன சாமான் எல்லாம் வேண்டிக்கொண்டு வரச் சொல்லி எழுதிக்கொடுத்தா . அதுக்குப்பிறகு கொஞ்சநேரம் புண்ணியக்குஞ்சியோடு ஊர் விடுப்புக் கதையில் கொஞ்சம் கேட்க ,எப்பவும் போல புன்னியக்குஞ்சி அவரோட திரைக்கதைகளில் கொஞ்சம் அவிட்டுக் கொட்டிப்போட்டு வந்திட்டார் .

                                                                   அந்த வாரத்தில் வந்த வியாழக்கிழமை கவுசல்யாவை குளிப்பாட்டி கொண்டுபோய் சாமியம்மாவுக்கு முன்னால கிடத்த, சாமியம்மா வந்து கொஞ்சநேரம் ஒன்றுமே சொல்லாமல் பல வருடமா  பூட்டிக் கிடந்த அறையை பார்த்திட்டு, அந்த சிலந்திவலை கதவை மூடின அறையை கொஞ்சநேரம் சந்தேகமாய் பார்த்திட்டு,

                                               ரெண்டு விசியம் சொன்னா ,

                                                  அதில முதல் சொன்ன விசியம் ஓரளவு நம்பும்படியாக இருந்தது . பார்வதம் மாமியின் பின் காணியில் வடமேட்கு  மூலையில் ",,,சாமவேத  பாதாளம்  பதம் ஏழும் பண்ணிய திருட்டுக் கட்டியை .... மண்வெட்டியால் தோண்டிப்பாக்க சொன்ன  ......".அந்த  ரெண்டாவது விசியம்  பிடரி மண்டையில் உலக்கையால் அடிச்ச மாதிரி   தூக்கிவாரிப் போட்டது... 
,
.
..தொடரும் .......