Saturday 26 September 2015

குளம் விழுங்கிய கதை .

எங்கள் எல்லார் வாழ்க்கையிலும் விதி அதன் கடைசி வரியை முடிவில் எழுதினாலும்,சிலரோட விடை பெறுதல் எதிர் பாராத நேரத்தில் எதிர் பாராத இடத்தில நடக்கத்தான் செய்கிறது. எங்களின் குளத்தடி குளப்படிக் குரூப்பில் எங்கள் எல்லாரிலும் மிகவும் உற்சாகமா வாழ்கையின் எதிர்கால கனவுகளைக் கலர் கலராக் கண்டு கொண்டு இருந்த ஜெகதீஸ் என்ற ஜெகதீஸ்வரனின் கதை சில அத்தியாங்களுடன், எங்களின் இளம் வாழ்கையில் அற்புதங்கள் அள்ளி எறிந்த குளத்திலேயே திருக்கார்த்திகை விளக்கீட்டு நாளன்று  முடிந்தது. அதை விட முக்கியத்துவமா  நினைவுகளின் நாட்குறிப்பில் அழைக்க விரும்பாத ஒரு அவலத்தின் அபத்த வரலாறாய் அதை விதி எழுத வைத்தது.

                                         ஜெகதீஸ் தான் எங்கள் குளத்தடி கிரிகட் டீமில் இருந்த ஸ்டார் ப்ளேயர், மேற்கு இந்திய தீவின் கிரிகெட் கறுவல் விளாசல் மன்னன்கள் போல விளையாடுவான். அவர்கள் போலவே உயரமா, கருப்பா இருப்பான், ஒடுங்கிய முகமும் சுருள் முடியும் அவர்கள் போலவே இருக்கும். 

                                         குளத்தடி வயல்வெளிக் கிரவுண்டில முழங்கையை ரப்பர் போல வளைத்து பெட் பிடிச்சு நாலு பக்கமும் சுழட்டுவான். அவனிட்ட சரியா அம்பிட்ட பந்து கதறிக் கதறித் தான் எல்லைக் கோட்டைத் தாண்டி,சிலநேரம் நடு குளத்துக்க விழும்,அல்லது வெள்ளைச் சொண்டன் வீட்டு விளாத்தி மரதுக்கால பிச்சுக் கொண்டு போய் தகரக்  குசினிக்கு மேலால தாளம் போட்டுப்  பறக்கும், அல்லது தெய்வேந்திரத்திண்ட பண்டிகள் நின்று உருளுற கொட்டகையின் கூரையைப் பிய்துக்கொண்டு போய் வயிரவர் வழவில விழும்.

                                   அவன் விளையாட வந்தால்த்தான் நாங்களே முக்கியமான பல கிரிகெட் டீம்களுடன் விளையாடவே சம்மதிப்போம், அந்த முக்கியம்னா டீம் களுடன் நாங்க ஒரு நாளுமே வெண்டதில்லை,ஆனால் ஜெகதீஸ் விளையாடிய எல்லா மச் இலும் நாங்க வேட்டி அவிண்டு விழுந்த மாதிரிக் கேவலப்படாமல் அரும்பட்டில தான் தோத்து இருக்கிறோம், அதனாலதான் அவன்  எங்கள் குளத்தடி கிரிகட் டீமில்  ஸ்டார் ப்ளேயர் அதால் அவன் வந்தால் மட்டும் விளையாட சம்மதிப்பது.

                                  குளத்தடி வயல்வெளிக் கிரவுண்டில  இருந்து கிழக்குப் பக்கம், நாவல் மரத்தோட போற கிடுகு வேலி வரிச்சு வைச்சுப் பிடிச்சு கட்டிய தவமணி அக்காவின் மேட்டுக் காணிக்கு கொஞ்சம் தள்ளி, இப்பில் இப்பில் மரங்கள் சரிந்து விழுந்து வேலியை சரிச்சு விழுதும் உடையார் வளவோடு சேர்ந்தால் போல , தெய்வேந்திரதிண்ட பண்டிகள் குறுக்க மறுக்க ஓடியும் ,அவைகளை கவனிக்காமல் பனை வடலிகள் சின்னப் பிள்ளைகள் போல அடக்கமா வளரும் காணிக்கு, தெற்க்குப் பக்கம் மதியாபரணம் டீச்சர் வீட்டுக் குசினியில் இருந்து வழியும் தாவாரத் தண்ணி வழிந்து ஓடும் ,விளாத்தி  ஒழுங்கை என்ற கை ஒழுங்கையில தான் ஜெகதீஸ் வீடு இருந்தது.

                          அவனோட வீட்டுக்க பக்கத்தில தான் நொள்ளைக்கண்ணா என்ற வாக்குக் கண்ணால பார்க்கும் சின்னக் கண்ணாவும்,  ஐஸ்பழம் என்ற மணிவாசகன் என்ற இன்னும் இரண்டு குரூப் மெம்பர்கள் இருந்தார்கள். அவர்கள் அவளவு முக்கியம் இல்லாத சோத்திகள் என்பதால்,ஜெகதீஸ் வீடு தான், குளத்துக்கு அந்தப்பக்கமும்,  வயல் வெளிக்கு இந்தப் பக்கமும், உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன, எங்கட ஊரின் தாவணி போட்ட ,முகமெல்லாம் மாவிளக்குக் கோலம் போட்ட பெட்டைக்களின் ரகசிய இதயத்திலும்  பேமஸ் ஆக இருந்தது...... 

                                   ஜெகதீசுக்கு எங்கள் குரூ இப்பில் எல்லாரையும் பிடிக்கும் ,ஒருவனை மட்டும் பிடிக்கவே பிடிக்காது, அவன்தான் பாதருக்கு படிக்கப்போறேன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்த ஜேசுதாசன், ஜேசுதாசன் எல்லாத்துக்கும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ எண்டு பைபிள் பிரசங்கம் செய்வதால்  ஜெகதீஸ் எப்பவும் ஜேசுவை நக்கல் அடிச்சுக்கொண்டு இருப்பான், ஜேசு கிரிகெட் விளையாட மாட்டான் அதால அவனை எப்பவும் அம்பியாருக்கு தான் விடுவம், ஆனாலும் அதுவும் ஜெகதீஸ் இக்கு வயித்தில புளியைக் கரைக்கும் ,

                      "அட விளுவான்களே ,  இந்த பரிசுத்த  பங்குத் தந்தையை என்னத்துக்கடா கிரிகெட் டீம் இல வைச்சு இருகுரிங்க,, இவனை விட தவமணியக்கா நல்லா கிரிகெட் விளயாடுவாவே ,அவாவை வையுங்கடா, கிளவி எண்டாலும் இவனை விட உருண்டு பிரண்டு பந்தைப் பிடிப்பா   " எண்டு சொல்லுவான் ,

                          ஜேசு பேசாமல் கேட்டுக்கொண்டு தலையைக் குனிந்து கொண்டு இருப்பான். நாங்க அதுக்கு ஒரு விமர்சனக் கருத்தும்  சொல்ல மாட்டாம், சொல்லி என்ன வரப்போகுது ஜெகதீசை எதிர்த்தால் ஏறக்குறைய எங்களின் கிரிகெட் டீமே இல்லை. அதைவிட காலுக்கு இடையால பந்து மெதுவாப் போனாலே குனிஞ்சு பிடிக்க விரும்பாத எங்கள் கிரிகெட் டீம் கப்டன் பித்துக்குளியும் ஜெகதீசும் வாயும் வயிறும் போல நல்ல ஒட்டு. ஒண்டுக்கும் உதவாத " காலுக்கு இடையால பந்து மெதுவாப் போனாலே குனிஞ்சு பிடிக்க விரும்பாத பித்துக்குளிய " எதுக்கு கப்டனா வைச்சு இருந்திங்க ?  எண்டு நீங்க கேட்பிங்க,அதுக்கு ஒரு இடக்கு முடக்கான கதை இருக்கு அதைப் பிறகு சொல்லுறேன்.

                                       எல்லா நாளும் போல இல்லாமல் ஒரு நாள், வாழ்க்கை  எல்லா விதத்திலும் குழப்பமான நிகழ்வுகளை ஒரு சின்னக் கால இடைவெளியில்க்  சிலரோட எதிர்கால நம்பிக்கையில் எதிர்பாராத சம்பவங்களுடன் கனதியாக்கும் . எல்லா இளையவர்களுக்கும் இருந்த வயதுக் கோளாறு அல்லது மோப்பம் பிடிக்கும் ஆர்வம், சில நேரம் பல வருடங்கள் தக்க வைத்த நல்ல பெயரை ஒரு சின்ன சம்பவத்தில் கிழித்து எறியலாம்,நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ அது பல சமயம் நடக்கத்தான் செய்கிறது. 

                                      அதன் காரண காரிய விளக்கம் யாரும் ஆராந்து பார்பதில்லை, தெருத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச மாதிரி ஊரில் உள்ள கொஞ்சம் நிழலான ஆசாமிகளே அந்த நேரம் நியாயஸ்தன் ஆகி அப்படியான சம்பவங்களுக்கு ஒரு வரலாற்று அந்தஸ்தும் கொடுத்துப்போட்டு அவர்கள் பாட்டில் போவார்கள்,,அப்படி அதிகம் எங்கள் ஊரில செய்து கொண்டு இருந்த நிழலான ஆசாமி புண்ணியக்குஞ்சி, ஜகதீஸ் அவரோட பெறாமகன் முறையானவன்.  

                                      மதியாபரணம் டீச்சர் வாசிக்க சாலையில் பின்னேரத்தில் தமிழ் பாடம் இலவசமா படிப்பித்துக் கொண்டு இருந்தா அந்த நாட்களில்,  " தற்காத்துக் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்...  " எண்டு மதியாபரணம் டீச்சர் தமிழ்ப் பாடத்தில் திருக்குறள் அழகா, அணி இலக்கணம் பிரித்து விளக்கிக்கொண்டு இருந்த ஒரு நாள்ப்  பின்னேரம், 

                                   மம்மலோடு குளத்தில கொக்குகள் ஓடு மீன் ஓடி  உறுமீன் வரும்வரை வாடி இருந்து இனி இருந்து வேலை இல்லை எண்டு பறக்க வெளிக்கிட்ட இருட்டின நேரம், வீராளி அம்மன் கோவிலில் துர்கை அம்மன் திருவிழாவில், செங்களுநீர்த் தொட்டித்  திருவிழா நடந்து கொண்டு இருத்த நேரம், கோவிலில் பயனை பாடப் போன புண்ணியக்குஞ்சி சித்தப்பா கவிஞ்சர் கந்தப்பு மாஸ்டரோட தேர் முட்டியடியில் வாக்குவாதப் பட்டுக் கொண்டு இருந்தநேரம், ஜெகதீஸ் அலவாங்கு இரவல் வேண்ட டீச்சர் வீட்டை போய் இருக்கிறான் , யாரோடும் அதிகம் வெளிய வந்து பேசாத, தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று பல்கலைக்கழகக் கனவுகளுடன் இருந்த டீச்சரின் ஒரே மகள் பவானி மட்டும் வீட்டில தனிய நிண்டு இருக்கிறாள்..

                           பவானிக்கு ,ஜெகதீஸ் பற்றி அதிகம் தெரியும், மதியாபரணம் டீச்சர் வீடு விளாத்தி ஒழுங்கையில் அயல் வீடு அதால எப்பவும் அடிக்கடி ஒழுங்கை முடக்கில் சந்திக்க வேண்டிவரும். இப்படி நெருக்கமாக  வேலி , மதில், ஒழுங்கை என்று சின்ன  மறிப்புகள்  மட்டும் பிரிக்கும் இடை வெளியில் வாழும் மனிதர்களுக்கு பல விசியம் அயல் அட்டையில் உள்வீட்டுக்க உலாவுவது போல தெரியும்.

                                    முதல் முறையா  பவானியின் பிறந்தநாளுக்கு பள்ளிக்கூடம் போட்டு வந்த  அவளை விளாத்தி  ஒழுங்கைளில் இடைமறித்து நெஞ்சுச் சட்டைக்க கண்டோஸ் சொக்கிலேட் செருகி இருக்கிறான் ஜெகதீஸ்.பாவனிக்கு அது பிடிக்கவே இல்லை. முக்கியமா அவன் முரட்டுத்தனமா அப்படி செய்தது அவளுக்கு அவனில வெறுப்பு வர வைத்தது. அதன் பின்  ஜெகதீஸ் இரகசியமாக பலமுறை தனியாக  பவானியோடு கதைக்க முயற்சித்து இருக்கிறான்.

                          நல்லகாலம்  மதியாபரணம் டீச்சருக்கோ ,அல்லது  புண்ணியக்குஞ்சி சித்தப்புக்கோ இதுகள் தெரியாது. தெரிஞ்சால் ஊருக்குள்ள அமளிதுளியாகத்தான் எப்பவும் போல முடியும் . பாவானி  எல்லா அலுப்புகளையும் சகித்துக்கொண்டு இருந்தாள். ஜெகதிஸ் அதை சாதகம் ஆக்கி வேண்டிய அளவு அவளைத்  தன்னைத் திரும்பிப் பார்க்க வைக்கப் போட்ட  முயற்சிகளில் எப்பவுமே தோல்விதான் அடைந்துகொண்டு இருந்தான்.

                           அதன் பின் ஒரு கட்டத்தில்  பாவனி அவனை நிமிர்ந்தும் பார்க்க  விரும்பவில்லை. காரணம் யாருக்கும்  தெரியாது . இளம்  பெண்களுக்கு சில இளம் ஆண்களை மட்டுமே பிடிக்கும், அதுக்குக் காரணம் சொல்ல எந்த அனுமானங்களும் உதவி செய்யாது.

                               எப்படியோ அன்றைக்கு மதியாபரணம் டீச்சர் வீட்டில இல்லாத நேரம் பவானி வீட்டுக்கு ஜெகதீஸ் போன நேரம் பவானி அவன் கேட்ட அலவாங்கை  எடுத்துக் கொடுத்துப்போட்டு

                   " ஜெகதீஸ்வரன் ,  எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா " எண்டு கேட்டு இருக்கிறாள்,

                            அவன் " என்ன செய்யவேண்டும் " எண்டு கேட்க,கொஞ்சம் தயங்கி என்னவோ சொல்ல நினைத்து, அதை விட்டுப்போட்டு வேற என்னவோ சொல்வது போல  

                        " நான் உங்களிடம் கேட்பதுக்கு ஒரு காரணம் இருக்கு, அம்மாளாச்சியான ஒருவருக்கும் சொல்ல மாட்டிங்க எண்டு சத்தியம் பண்ணிச் சொல்லுங்க " எண்டு கேட்க அவனும்,

                      " வீராளி அம்மாளாச்சியான யாருக்கும் பேச்சு மூச்சே நின்றாலும் வாயே திறக்க மாட்டேன், என்னை நம்பி சொல்லுங்க, யாரை நம்பாட்டியும் என்னை நம்பலாம்  " எண்டு சொல்ல 

                          பவானி ," உண்மையாதானே சொல்லுரிங்க,உங்கள் அம்மாளாச்சி மேல வைச்ச சத்தியத்தை நம்பலாம் தானே,பிறகு இது  அயலட்டையில் ஆருக்கும் தெரிய வந்தால் அம்மாவோட,என்னோட மானம் மரியாதை எல்லாம் போயிடும் " எண்டு சொல்லி,,

                                கொஞ்ச நேரம் ஜோசிதுப்போட்டு ஒரு பேப்பரை நாலா மடிச்சு,அதுக்கு ஸ்ட்ப்பிளர் கிளிப் அடிச்சு வைச்சிருந்த கடதாசியை ஜெகதீஸ் இடம் கொடுக்க எடுத்த நேரமே  ஜெகதீசுக்கு மின்னல் வெட்டி ....

                                         அவன் . வான வெளியில் பரசூட்டில்  பாரம் இல்லாமல் மிதந்து பறந்து பறக்க, பின்னணியில் இளையராஜாவின் வயலின் பின்னனியில் வரும் பாடல் கோரஸாகக்  கேட்க, நுனி நாக்கில தேன் விழுந்தது போல இருக்க, கால்களில் மெல்லிய நீரோடையின் தண்ணி மணலோடு அரிக்க, பவானி வீட்டைச் சுற்றியே கணபதி ஓமதுக்கு கிளம்புற மாதிரி குங்கிலிய வாசம் கிளம்ப ,அரேபியன் வெள்ளைக் குதிரை நாலுகாலில் பாஞ்சு பாஞ்சு போக அதன் சடை மயிர்கள் கம்பி போல நிலைக்குத்திட்டு நிக்க...உள்ளங்கை வியர்க்கத் தொடங்கியது.. 

                                       " எனக்காக இதை ,உங்களின் பெஸ்ட் பிரென்ட் சின்னக் கண்ணனிடம் கொடுபின்களா, அவங்க வீட்டுக்கும்  தெரியாமல் கொடுப்பிங்களா ,அம்மாளாச்சி மேல வைச்ச சத்தியம் போல யாருக்கும் சொல்ல மாட்டிங்க தானே " எண்டு சொல்ல,

                                     ஜெகதீஸ் அதிலேயே அரைவாசி சீவன் போனது போல  நாக்கில தண்ணி வத்தி  ,சின்னக்கண்ணன் பெயரைக் கேட்டவுடன  பிசுக்கங்ககாய் மாதிரி வெளிறிப்போயிட்டான். ஆனாலும் சமாளித்து, 

                                 " ..ப்பூ அட இதுவா விசியம்,இதுக்கு போய் இந்தப் பாம்புப்  பயம் போடுறிங்களே, ...ப்பூ இதென்ன சின்ன வேலை, கட்டாயம் கொடுப்பேன், கண்ணனுக்கு உங்களின்  காதல் கடிதத்தை நான்  கொடுக்காம வேற யார் கொடுகிறது ப்பூ... "

                                எண்டு அதை வாங்கி பொக்கெட்டில் வைச்சுக் கொண்டு , நெஞ்சு பக்கு பக்கு எண்டு அடிக்க, பவானியை நினைக்க தலை சுத்திர மாதிரி வர வியர்த்து விறு விறுக்க வீட்டை வந்து முதல் வேலையா அதை திறந்து வாசித்தான். அவன் அந்தக் கடிதத்தை சின்னக் கண்ணிடம் கொடுக்கவே இல்லை. அதைப் பற்றி சத்தியம் பண்ணிக்கொடுத்த மாதிரி வெறும்  ரெண்டு நாள் தான்  அவன் யாருக்கும் அதைப்பற்றி ஒண்டுமே சொல்லவில்லை. மூன்றாம் நாள் அவன் செய்து கொடுத்த சத்தியத்தை அவனே வேண்டுமென்றே மறந்திட்டான்.  ஆனால் அந்தக் கடித எழுத்துக்கள் மங்கும் வரை திருப்பி திருப்பி படிச்சுப்போட்டு...  

                                        ஜெகதீஸ் ஒரு நாள் குளத்தடிக்கு வந்தான்,வந்து கிணத்துக் கட்டில கைக்குழந்தையை வைச்சுப்போட்டு வந்த மாதிரி பதறியடிச்சான் முதல் வேலையா சின்னக் கண்ணன் எங்க எண்டு தேடினான், நல்ல காலம் அவன் அன்றைக்கு வெள்ளி திசை வேலை செய்ததால் விளையாட வரவில்லை. கேதீஸ் எங்கள் எல்லாரோடும் 

                                             " இண்டைக்கு இப்பவே ஒரு முடிவு எடுக்கக் கதைக்க வேண்டும்,நொள்ளை என்ன அந்த வடுவா ,பதுங்கி பதுங்கி இருந்து கொண்டு பெரிய தேசிங்குராஜ போல காதல் வேலை எல்லாம் செய்யுறன்  " எண்டு சொன்னான்,

                                     நாங்க ஒன்றுமே விளங்காமல் , எதுவா இருந்தாலும் கிரிகெட் விளையாடி முடிய புளியமரதுக்குக் கீழ போய் இருந்து கதைப்பம் எண்டு அவசரப்படாமல் சொல்ல 

                                 " டேய் அலுக்கோசுகளே ,இல்லை இப்பவே கதைக்க வேண்டும் எண்டு சொல்லுறன், நீங்கள் என்னடா சொல்லுறிங்கள், நொள்ளை இதோட அழியப் போறான்  " எண்டு கோபமா கிரிகெட் ஸ்டார் பிளையர் சிக்ஸர் விளாசினது  போல சொன்னான்,

                                 " சரி சொல்லு என்ன விசியம் கதைக்கப் போறாய் ,டவுனில அடல்ஸ் ஒன்லி இங்கிலிஸ் படம் ஏதும் வந்த சிலமன் அறிஞ்சனியா  " எண்டு பித்துக்குளி கேட்டான் 

                                   அவன் அதுக்கு , " டேய் எருமை மாடு அதுவா இப்ப முக்கியம் ,நொள்ளைக் கண்ணனை கிரிகெட் டீமில் இருந்து வெளிய தூக்க வேண்டும், நொள்ளைக்கு நான் ஆர் எண்டு இப்ப காட்டுறேன் பாருங்கடா,அவனுக்கு பெரிய கமலஹாசன் எண்டு நினைப்பு   " எண்டான்,

                                அதுக்கு ஐஸ்பழம் , " அட அவன்தான் நல்லா விளையாடுரானே,அதை விட அவன் நல்ல கீப்பர்,அவன் இல்லாட்டி ஒருத்தரும் எங்களில் கீப்பர் இக்கு சரிவர மாட்டமே " என்று சொல்ல, 

                                               " அட செம்மறிகளே நான் என்னவோ சொல்லுறன்,நீங்க என்னவோ பிணாத்துரின்களே எனக்கு அந்த இந்த விசர்க்கதை தேவை இல்லை,நொள்ளைக் கண்ணன் காகம் போல ஒன்டரைக் கண்ணால பார்த்துக் கொண்டு பெரிய நினைப்பு அவனுக்கு,முதல் அவனை இங்கே வரவே விடக் கூடாது " எண்டான்,

                                             நாங்க ஏன் இவன் இப்படி எங்கப்பன் குதிருக்குள்ள எண்டது போலக்  குதிக்கிறான் எண்டு விளங்காமல் முழிக்க , 

                                          ஜேசுதாசன் " முதல் என்ன நடந்தது உனக்கும் அவனுக்கும் அதைச் சொல்லு,நீயும் அவனும் தானே நல்லா மச்சான் மச்சான் எண்டு மாங்காய்க்கு உப்பு நீ தடவ,அவன் மிளகாத் தூள் தடவிக்கொண்டு ஒட்டி உறவாடிக்கொண்டு இருந்திங்களே,  " என்றான் 

                                         " அட பரதேசிகளே அப்படிதான் நானும் அவன் ஒரு முட்டாள் எண்டு நினைச்சு கொண்டு இருந்தேன் , அவன்  பெரிய வேலை எல்லாம் உங்களுக்கும் ,எனக்கும்  மண்டையில மண்ணைத் தூவிப்போட்டு செய்து இருகிறான். என்ட வீட்டு ஒழுங்கைக்க  வந்தே ,,ஹ்ம்ம் ... பவா .............  வேண்டாம்  அதை  நானே சொல்லக் கூடாது.மலிஞ்சா சந்தைக்கு வரத்தானே  வேண்டும்....ம்ம்  ... இப்ப முடிவா நீங்க என்னடா சொல்லுறிங்கள் " எண்டான், நாங்கள் ஏகமனதாக

                            " சின்னக்கண்ணன் எங்களுக்கு முக்கியம், அதைவிட அவன் ஒருதரோடும் ஒரு பிரச்சினையும் இல்லையே,உனக்கும் அவனுக்கும் தனிப்பட்ட பிக்கல் பிடுங்கல் எண்டா கிரவுண்டுக்கு வெளியால வைச்சுக்கொள் ஜெகதீஸ் ,இதுதான் எங்களின் முடிவுடா  " 

                                    என்றோம் . ஜேகதீஸ் கொஞ்சம் ஆவேசம் வந்த கோபமாக ,அவன் ஏற்கனவே எடுத்து வைச்ச முடிவு போல ,

                                 " அப்படியா கடைசில உங்கட கோணங்கா மானங்கா  புத்தியைக் காட்டிப் போடிங்கலேடா,,நான் இனி நொள்ளை கிரிகெட் டீம் இல இருந்தால் விளையாட வரமாட்டேன்,என்னோட பெயரையும் டீம் இல இருந்து எடுத்து விடலாம்,,நான் இல்லாட்டி தானே உங்களுக்கு அருமை தெரியும்,, காதல் மன்னன்,,ஹ்ம்ம் ,,  அந்த நொள்ளையை வைச்சு நீங்க என்னத்தைக் கிழிக்கப் போறீங்க எண்டு நான் பார்க்கத்தானே போறேன்,,, " 

                               எண்டு சொல்லிப்போட்டு, எங்க கிரிகெட் டீம் கப்டன் பித்துக்குளியை  மட்டும்  கூப்பிட்டு கையில பிடிச்சு இழுத்துக்கொண்டு ,

                                                 " இந்த லூசுகள் உருப்படாதுகள், பித்து , தனியா வாடா ,உன்னோட மட்டும் ஒரு விசியம் கதைக்க வேண்டும்,"

                             எண்டு அவனைக் குளத்துக் கட்டுக்கு கிட்ட உள்ள நாவல் மரத்துக்கு இழுத்துக்கொண்டு போனான்.கதைச்சு முடிய எங்களுக்கு கேட்காத தூரத்தில் நிண்டு தூசனத்தில்  சின்னக் கண்ணனைப் பேசினான், எங்களையும் "  ஊத்தைப் பண்டியோடு சேர்ந்து கிடக்கும்  ஊத்தைப் பண்டிகள் " என்று திட்டினான் ,நாங்க பேசாமல் பண்டிபோலவே கேட்டுக்கொண்டு நிண்டம். பிறகு திரும்பிப் பார்க்காமல் போட்டான்.

                                            பித்துக்குளியும் ஜெகதீசும் என்ன கதைத்தார்கள் எண்டு அடுத்தநாள் பித்துக்குளியே  வந்து கொஞ்சம் குளம் அதிர வைக்கிற மாதிரி சொன்னான். ஆனால் ஜெகதீஸ் சொன்ன மாதிரியே  அதுக்கு பிறகு கிரிகெட் விளையாட வரவில்லை, அவன் சும்மாவும் நாங்க என்ன செய்யுறோம் எண்டு பார்க்கவும் குளத்தடிப் பக்கமே வரவில்லை.

                                சில நாட்களின் பின் ,சின்னக்கண்ணன் பவானி காதல் கதை அம்மன் கோவிலில் திருவெம்பா பயனை நடக்கும் நேரமே தொடங்க்கி விட்டது எண்ட  அவளவு நாளும் எங்களுக்கு சொல்ல மறைத்த கதையையும், ஜெகதீசிடம் பவானி கடிதம் கொடுத்து அதை சின்னக் கண்ணனுக்கு கொடுக்கும்படி கேட்டதையும் பித்துக்குளி கிரிகெட் விளையாடி முடிய எங்கள் எல்லாரையும் வட்டமா இருத்தி வைச்சு சொன்னான்.

                                   திருவெம்பா பஜனையில் பித்துதான் அதை நடத்தப் பொறுப்பா ஆறுமுகநாவலர் போல திருநீறு எல்லாம் குறி போல இழுத்துக் கொண்டு , நாங்க பின்னால இருந்து பாட  முன்னால ஓதுவார் போல சப்பாணி கட்டிக்கொண்டு இருந்து பாடுவதை சரி பிழை பார்ப்பான். அவன் பார்வையில் ஒரு காதல் கதை தப்பிப் போய் இருக்கவே முடியாது,

                                        ஆனால் எப்படியோ பவானியின் இன்னுமொரு கடிதம் கொடுக்கும் முயற்சி வீராளி அம்மன் கோவிலடியில் கையும் மெய்யுமா பிடிபட,,டீச்சர் படிசுக் கிழிச்சது காணும் எண்டு பவனியை கொழும்புக்கு அனுப்ப...சின்னக் கண்ணன் பின் நாட்களில் ..... என்ற இயக்கத்துக்கு போய் சிலிண்டருக்கு சக்கை அடையும் போது டிக்னேடர் தவறுதலா இறுகி அது வெடிக்க சிதறிப்போன கதை. அதெல்லாம் தெரியாமலே பவானி கொழும்பில் வாழ்ந்த கதையை " ஒரு காதல் வந்தது " என்ற கதையில் எழுதி இருக்கிறேன் .

                                    அதன் பின் ஜெகதீஸ் ஒரு ஒரு முறைதான்  குளதடிக்கு திருக்கார்த்திகை விளக்கீட்டு நாள்  அன்று வந்திருக்கிறான். அந்த மாதம் பருவ மழை அடிச்சு ஊத்தி குளம் தழும்பு தட்டிக்கொண்டு நிரம்பி நிறைமாத கற்பிணிப் பெண் போல இந்தா அந்த எண்டு கட்டுக்கு மேலால பாயுறேன் எண்டு நிண்ட நேரம் அதிகம்  குளத்தடி குரூப் ப்ரெண்ட்ஸ் வயலில் நிற்கவில்லை, முக்கியமா நானே அன்று இல்லை ,பங்கர் வெட்ட வேறு ஒரு இடத்தில நின்டதால் நான் அந்த சமபவத்தைப் பார்கவில்லை,

                              ஜெகதீஸ் வந்து குளத்தைப் பார்த்திட்டு ,இந்தப் பக்கம் இருந்த நாவல் மரத்தடியில் இருந்து அடுத்த பக்கம் இருந்த தாளம் பத்தைக் கரை வரை நீந்திப் போய் திரும்பி வருவேன் எண்டு சவால் விட்டு இருக்கிறான். தான் ஒரு ஆண்மையுள்ள வீரன் என்பதை எல்லாருக்கும் காட்டிப் பழிவாங்கும் நோக்கம் போல , அடி வேண்டிக் காயம்பட்ட புலிபோல  அவன் அங்கேயும் இங்கேயும் திரிஞ்சு இருக்கிறான்.

                                   அந்தக் குளத்தில் யாருமே இறங்கி குளிக்கவோ, நீந்தவோ மாட்டார்கள். நிண்ட பொடியன்கள்

                         " டேய் ,உனக்கு என்ன விசரா , இப்ப இதுக்குள்ள குதிச்சு யாருக்கு நீ என்னத்தை நிரூபிக்கப் போறாய்,  குளம் நிரம்பி நிக்குது இப்ப நீந்த வேண்டாம், கரையில நிக்கவே கட்டு வழுக்கி விழுத்துது ,உனக்கு இப்ப என்னத்துக்கு இந்த தேவையில்லாத வேலை  "

                                 எண்டு சொல்லி இருக்கிறாங்க.

                                    பண்டி வளர்கிற தெய்வேந்திரம் மட்டும்  தண்ணி அடிச்சுப்போட்டு வெறி ஏற ஏற குளத்தடியில் கள்ளுப் போத்தலைக் கட்டிப்பிடிசுக்கொண்டு இருப்பார். அவருக்குள்ள தண்ணி அதிகமா உள்ள இறங்கின நேரம் கெட்ட நேரம் குளத்துக்க கோவணத்தோடு நிண்டு நீந்திக்கொண்டு அவரை விட்டுப் போட்டு  ஓடிப்போன அவரோட ரெண்டாவது பொஞ்சாதியை நினைச்சு " பேசாதே வாயுள்ள ஊமை நீ, சொந்தம் என்ன பந்தம் என்ன போனால் போகுமே , பேசாதே.பேசாதே வாயுள்ள ஊமை நான் ... ."   எண்டு வாய் கிழியப்பாடி வெறியில் நீந்துவார்...

                                    ஜெகதீஸ் , சவால் விட்டு சொல்லிக்  கொஞ்ச நேரத்தில் ,பொடியன்கள் சொன்னதைக் கேட்காமல் குளதுக்க பாஞ்சு இருக்கிறான். அரை வாசி நீந்திப் போய் நடுக் குளத்துக்குக் நின்று தண்ணியை வேகமாக கையால வலிச்சும், பின்னம் காலால அடிச்சும் அந்தரிச்சு கையை காட்டி,

                                " காப்பாற்றுங்கடா,,,சுழி  இழுக்குது,,,,டேய்  ,,யாரவாது  பாஞ்சு  வாங்கடா    "

                            எண்டு ஒரே ஒரு தரம் கத்திப்போட்டு  உள்ளுக்க தாண்டு போட்டான். அதை பார்த்துக்கொண்டு நிண்ட ஜேசுதாசன் ஒருவன் மட்டுமே சடார் எண்டு குதிச்சு அரைக் குளத்துக்கு நீந்திப் போன நேரம், ஜெகதீஸ் தாண்ட இடத்தில இருந்து ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருக்க, ஜேசுவும்

                        "  செபமாலை மாதவே ,, சுழி இழுக்குது,  பயங்கரமா  சுழி இழுக்குதடா  "

                          எண்டு கஷ்டப்பட்டு வலிச்சு அடிச்சு திரும்பி நீந்தி வந்திடான், பண்டி வளவில நிண்ட  தெய்வேந்திரம்,பொடியன்கள் ஓடுப்பட்டுத் திரிய  வெறியில ஓடிவந்து பார்த்திட்டு,

                                             ," எண்ட அம்மாளாச்சி,  சரி பொடி .....சரி. ..தண்ணியோட விளையாடினா ஒரு நாள் அது அதன் பலத்தைக் காட்டும்,,மூன்று தரத்துக்கு மேல மன்னிக்காத தண்ணியோட விளையாடி இப்ப பொடி போயிட்டுதே ,,ஒடுங்கோடா ஓடிப் போய் அயல் அட்டை சனத்தை இழுத்துக்கொண்டு வாங்கடா " 

                                                எண்டு பதறியடிச்சு குழற ,,அயல் அட்டை குளறி அடிச்சுக்கொண்டு வர,,,ஜெகதீஸ் விழுந்த குளம் எப்பவும் போல அமைதியா இருந்தது, இந்தக் கரையில் நாவல் மரம் மழைக்கு நனைஞ்சு வழிய,அந்தப் பக்கம் தாளம் பத்தைக்கள் ஒண்டுமே நடக்காத மாதிரி காற்றில் அசைய,தெய்வேத்திரதிண்ட பண்டிக்கள் கீய் கீய் எண்டு வழமை போல கத்திக்கொண்டு இருக்க, ஆள்க்காட்டிக் குருவிகள் தாழப் பறந்து பாடிக்கொண்டு இருந்தது

                       அந்த  மார்கழி மழை இரவிலும் ஒரே ஒரு நட்சத்திரம் சுட்டு விரல் மோதிரம் போல மின்னி மறைய, குளக்கரையில் சதக் சதக் எண்டு நாங்கள் நடந்து திரிந்த இடமெல்லாம் மாரித் தவளையும்,  மண்டுவம் தவளையும் மாறி மாறிக் சாகப் போற மாதிரி கத்திக்கொண்டு கிடக்க, குளத்து தண்ணியோடு மெல்ல கோரைப் புல்லுகள் பாரம் தாங்க மூடியாமல் சரிஞ்சு படுத்துக் கிடக்க , குளத்தடிக் குருப்பில் இருந்த எல்லாரும் குளத்தைச் சுற்றி கையாலாகாத் தனத்தில் கையைப் பிசைந்து கொண்டு நிக்க...      

                                   ஜெகதீஸ் மட்டும் இல்லை !

                                        திருக்கார்த்திகை விளக்கீட்டு இரவுக்கு ரோட்டில விளக்கு வைக்க வாழை மரம்,பாப்பா மரம் நட்ட எல்லா வீடுகளும் அதைப் பிடுங்கி எறிஞ்சு போட்டு விளாத்தி ஒழுங்கையில் செத்த வீடு கொண்டாடப் போக ,நாங்க இரவு முழுவதும் மழையில நனைஞ்சுகொண்டு பெட்ரோல் மக்ஸ் கொளுத்தி குளத்து தண்ணி ஓடி வெளியேறும் வாய்கால் பண்ட்டுக்காலத்தான் பிரேதம் இழுபட்டு வரலாம் எண்டு குளத்தை சுற்றிக்கொண்டு  இருந்தம்.  

                                       வயசான  புண்ணியக் குஞ்சியும்  வந்து கதைக்குக் கதை சொல்லிக்கொண்டு , விளக்கத்துக்கு விளக்கம்  எடுத்து விட்டுக்கொண்டு.  அவரும், கழுத்தில இருந்து காது தலை எல்லாம் மப்பிளரைச் சுற்றிக்கொண்டு  இரவு முழுவதும் வையன்னா சீனா கூணா கடை  சுருட்டை தொடர்ச்சியாகப்  பத்திக்கொண்டு,

                             " இதால எழும்பும் பாருங்கடா ,,மோட்டுக் கழுதை இவன் உங்களோடு குளத்தடியில் எடுபட்டுத் திரியும் போதே இப்படி ஒரு நாள்  இந்தப்  பிரகண்டம் நடக்கத்தான் போகுது எண்டு எனக்கு தெரியும் ,,இனி என்னத்தைக் கதைச்சு , நான் நினைக்கிறன்  மேக்கால வாய்க்கால் போக்கு  பிரேதம்  சில நேரம் அதால எழும்பும்.. "

                                எண்டு ஒவ்வொரு திசையாய் தேடிக்கொண்டு எங்களோட இருந்தும், விடியும் வரை ஜெகதீஸ் வரவில்லை.

                                                 காலையில் முதல் முதல் தலை மட்டும் மிதந்து புன்னியக்குஞ்சி சொன்ன இடத்தில எழும்பி வர, அவனோட உடம்பில பல இடங்களில் மீன் கடித்துத்  தின்ற அடையாளங்கள் இருக்க, அவனோட கை ரெண்டும் குறண்டிப் போய் இருந்தது, புண்ணியக் குஞ்சி அதைப் பார்த்திட்டு, 

                               " அருமந்த பொடி , பொடிக்கு தண்ணியில  சரணவாதம் வந்திருக்கு  அதுதான் நீந்த விடாமல் இழுத்துப் போட்டுது,நல்ல தண்ணியில் நீந்துறது லேசுப்பட்ட விசியம் இல்லை, உப்புத் தண்ணி போல தூக்கிக் கொடுக்காது, நாலு  அடி நீந்தும் போது கையாளும்,காலாலும் அடிக்கத் தவறினாலே உள்ளுக்க இழுக்கும் , இனி இதைக் கதைச்சு என்ன வரப்போகுது, சரி ஆளை ஆள் வாயப் பார்க்காமல் எல்லாரும் சேர்ந்து தூக்குங்கடா ...  " 

                                   எண்டு சொன்னார்.

                        குளம் அப்பவும் அமைதியாக " ..ப்பூ அட  இதுவா விசியம், இதுக்கு போய் இந்தப் பாம்புப்  பயம் போடுறிங்களே, ...ப்பூ " எண்டு சப்புக்கொட்டிச்  சொல்வது போல மூச்சு விட்டுக்,  கேட்டுக்கொண்டு  இருந்தது.......
.

.26.09.14



.


.
26.09.14