Thursday 13 December 2018

நினைவுக்கிடங்கிலிருந்து 001.


நோர்வேயில் ரெண்டு வருடங்கள் முன் மிகவும் அறிமுகமான ரெண்டு நண்பர்கள் குறிப்பிட்ட சில மாத இடைவெளிகளில் இறந்துபோனார்கள். உலா வயதாகி இனிப் பலவீனங்களைப் பலப்படுத்த முடியாத உடம்பின் இயலாமையில் இறந்தார். உலா அட்டகாசமான  மனிதர் ! பெந்தபேரீட் சோல்பெர்க்க்கு சாகிற வயதில்லை.  என்னைவிட வயது குறைவு. அகலமாக இறந்துபோன பெந்தபேரீட்  சோல்பெர்க் அருமையான மனுஷி  ! 




                                                        ரெண்டுபேரையும் அழைத்துக்கொண்டுபோன மரணம் மிகக்கச்சிதமான வடிவமைப்பு ! அதேநேரம் ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையான பொய் ! முன்னமெல்லாம்  மரணம் பற்றிய  தனிரகமான வேதனைகள்  இருந்தது. இப்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும் .




                                                      ஒரு புள்ளியில் முடிவையும் தொடக்கத்தையும்  இலகுவாகி விட்டு அடுத்தகட்ட சோதனைக்குத்  தயாராகி   நீண்ட வரிசையில் நிக்கின்ற  சங்கடத்திலிருந்து  சமாளிப்பாக எதையாவதுசொல்லி, கலைந்து போவதுபோலிருக்கும் வாழ்க்கையில் , எப்போதுமே  யாரோவொருவரின் மரணம் , நமக்குரியதுபோலவும்  தலையசைப்பில் அடிபட்டுக்கொண்டிருக்கிறது   !  அவளவுதான் .!!!


சின்ன வயதில் ஊரில பெரிய வயதான வாழ்ந்து முடித்த மனிதர்கள் இறந்து போவார்கள், தாத்தா சீனியப்பு,,குஞ்சியப்பு,,அப்ப்பப்பு ,சித்தப்பு என்ற அவர்கள் எங்களோடுஅதிகம் வயது ஒப்பீட்டில் நெருக்கமாக ஒன்றாகவே பயணிப்பதில்லை. அதனால் அவர்கள் மறைவு அதிகம் நினைவுகளைக் காவுவேண்டுவதில்லை. அதைவிட சாவு என்னவோ புரிந்துகொள்ள முடியாத சூணியம் வைச்ச சாபம் போல இருந்தது அந்த நாட்களில் 



                                                   இப்போது நாலு கழுதை வயது தாண்டி நடுத்தரம் பாயுற வயதில் பல மனிதர்களுடன் வேலைசெய்யும் இடங்களில் பழகவேண்டியுள்ளது. அதில் சிலர் அவர்களின் அழைப்பு நேரத்தில் விடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்., இப்ப சாவு என்பது வெளிச்சமான வாழ்வின் இன்னொரு இருண்ட பக்கம் போலவும் உயிர் வாழ்வது என்பது இரவும் பகலும் போல என்று அர்த்தமாக இருக்கு .

                                                     ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்த உயிர் அம்மாவின் கர்ப்பப்பையில் உருவாக்கி வெளியேறிப் பிறப்பதில் தொடங்குது ,அதன் பின் ஒவ்வொரு நாளும் பொழுதும் அதன் கலங்களின் வளர்ச்சி இன்னுமொரு உயிரை உருவாக்கிவிட்டு முடிவான ஒரு நாளின் இறப்புக்குத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது , யாருமே தப்ப முடியாத மிகக் கச்சிதமான வடிவமைப்பு அது என்று கையைப் பிசைந்துகொண்டு நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும் .



                                                நேற்று என்னோட சோசியல் ரேச்ற்றோறேண்டில் பலவருடம் வேலை செய்த உலா என்பவர் செத்துப் போனதுக்கு நினைவு கொள்ள மெழுகுத்திரிகள் ஏற்றிவைத்தோம் ,அவர் நினைவுகளைப் பதிய ஒரு நினைவுப் புத்தகமும் வைத்தோம் அதில நான் தமிழில் அவர் ஆத்மாசாந்தி அடையப் பிராத்தனை அது இது எண்டு ஒண்டும் எழுதவில்லை . சில வரிகள் நன்றியாகவும் நிலையாமை பற்றியும் எழுதி விட்டேன்.

                                                      சென்ற மாதம் உலா சுகவீனம் உற்று இருந்தார் என்று சொன்னார்கள். அதனால் சென்ற வருட டிசெம்பர் மாதத்தின் பின் வேலைக்கு வரவில்லை. அவர் அந்த சோசியல்ரேச்ற்றோரென்ட் சமூக உதவி நிறுவனத்தில் அதிகாரி. நான் அங்கே சமயலறையில் சராசரி குக் , ஆனாலும் மனிதர்களை உயர்த்தி வைக்கும் பொசிடிவ் எனெர்ஜி உள்ள நல்ல மனிதர், என்னோட நல்ல ஒட்டு.

                                                       அந்த இடத்தில பலவருடம் வேலை செய்துகொண்டு இருக்கும் ஒரே ஒரு இலங்கைத் தமிழ்க் குடிமகன் நான் தான்.  அந்த இடத்தில வேலை செய்த என்னோட அருமையான உயிர் நண்பி பெந்த பேரிட் சோல்பேர்க் என்ற அம்மணியும் மேலே போனா. சாவு வீதி வளைவு மூலையில் கை விரல்களில் நாட்களை எண்ணிக்கொண்டு போகும் வரும் முகத்தைப்பார்த்துத் தேடிக் காத்துக்கொண்டு குந்தி இருக்குது போல இருக்கும் சில நேரம் .

                                                           உலா இறந்தது எனக்குக் கொஞ்சம் தன்னும் கவலையாக இல்லை. அவருடைய காலத்தில் இருந்து அவர் அடுத்த பரிமாணத்துக்கு போய்விட்டார். வாழ்க்கையைப் பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த காலத்தில் கொஞ்சம் புரிந்து கொள்ள உதவியவர். அடுத்த மனிதருக்கு இறப்பு வருவது என்பதே உயிரோடு இருக்கும் போது நாங்கள் உயிருள்ள அடுத்த மனிதருக்கு செய்வதுக்கு எவளவோ நல்ல விசியங்கள் இருக்கு என்பதை நினைவுபடுத்துக்கு என்று நினைக்கிறேன்!





பெந்த பேரிட் சோல்பேர்க் Bente Beret Sølberg என்ற என்னுடைய ஒரு நல்ல நட்பு சில நாட்கள் முன், நோர்வேயில் இருந்து கோஸ்டோ ரிக்கோ என்ற நாட்டுக்கு பிராயணம் செய்த போது.அந்த நாட்டில் இருந்து ,நாற்பது மூ ன்று வயதில் , இந்த உலகத்திற்கு எதிர் பாராமல் விடை கொடுத்துவிட்டு , ஸ்பேஸ் டைம் இன் இன்னுமொரு பரிமாணதிற்குள் சென்ற ஒரு அவல சம்பவம் நடந்துள்ளது. 

                                                                    பெந்த பேரிட் சோல்பேர்க்கின் கதை முடிந்தாலும்,அந்தக் கதையின் 
தொடர்ச்சி ஏதோ ஒரு விதத்தில்அவாவின் நட்பில் இருந்த எல்லார் கதையிலும் தொடரும் போல உள்ளது அதுக்கு காரணம் அந்தப் பெண் எங்களோடு இருந்த காலத்தில் செய்த ஒவ்வொரு சின்ன சின்ன விசியங்களிலும் அன்பின் அடையாளத்தை நிறையவே ஆழமாக பதிந்து விட்டு சென்றது..

                                                                            நோர்வே நாட்டின் தென் மேற்கு பகுதியில் உள்ள பிரேடிக்சாட் இடத்தில பிறந்த பெந்த, ஒஸ்லோவில் வேலை செய்யும் இடத்தில என்னோட நட்பாக எப்பவும் இருந்தா,இந்தியாவுக்கு பல முறை போய் முக்கியமா இந்தியாவின் இமாலயா மலை முழுவதும் சுற்றி, இந்தியாவை இதயத்தில் நேசித்ததால்.என்னை எப்பவும் நமஸ்தே எண்டு சொல்லி தான் வணக்கம் சொல்லுவா,

                                                                      இந்திய பயண அனுபவத்தை " Journey for my life time " எண்டு ஒரு புகைப்படத் தொகுப்பாக பேஸ் புக்கில் போட்டு இருந்தா. என்னோட கிட்டார் விடியோ கேட்டு முதல் முதல் உற்சாகம் தந்த ஒரே ஒரு நேர்வே இனப் பெண்மணி பெந்த பேரிட் சோல்பேர்க். எனக்கு ஒரு ஒலிப்பதிவு உபகரணமும் தன்னிடம் இருந்ததை தந்தா.

                                                               பல மாதங்களாக சந்திக்காத அவாவை,அண்மையில் சில வாரம் முன் எதிர் பாராமல் அவசரமா போய்க் கொண்டு இருந்த ஒரு இடத்தில சந்தித்தேன், என்னை இழுத்து வைத்து இருத்தி நிறைய விசியம் கதைத்தா. அந்த சம்பாஷனை முடிவில்

                                          " என்னை மறந்து விடுவியா "

                                                                       எண்டு கேட்டா ,நான் ஒண்டும் சொல்லவே இல்லை சிரிச்சுப்போட்டு போயிட்டேன்,அதுதான் அவா என்னோட பேசிய கடைசி வார்த்தை. இப்பொழுது கவலையாக இருக்கு " மறக்கவே மாட்டேன் " எண்டு வாயலா ஒரு பதில் அந்த நேரம் சொல்லி இருக்கலாம் எண்டு.

                                                                         நேற்று அவா இறந்த செய்தி கேள்விப்பட்டு ,அவாவின் பேஸ் புக் போய் பார்த்தபோது அதிர்ச்சியாக நோர்வே நாட்டின் ,கார்டமொன் விமான நிலையத்தில் இருந்த கோஸ்டோ ரிக்கோ நாட்டுக்கு போவதுக்கு முன்னர் போட்ட " My Journey Starts From Here " என்ற கடைசி போச்டிங்கோடு அந்த இதயம் நின்று விட்டது,

                                                                           பல ஆச்சரியமான சம்பவங்களில் இதுவும் ஒரு சம்பவம் போல இருக்கு, பாவம் பெந்த அந்த போஸ்டிங் எழுதும் போது தெரியாமலே போனது அவாவுக்கு தன்னோட இன்னுமொரு பயணம் தொடங்கப்போகும் சம்பவம் நடக்கப் போவது.கடைசியில் அவா பயணம் அடுத்த உலகத்துக்கு தொடக்கி விட்டது போய் ரெண்டாம் நாள் ஆள் போயிட்டா,,,

                                                                       பெந்த பேரிட் சோல்பேர்க் எல்லாரோடும் இலகுவில் பழக மாட்டா ,என்னோட ஒரு அதிசயமா ரெம்பவே நெருக்கமான நட்பாக இருப்பா,நான் சாப்பிடும் போது என்னோட இருந்து எப்பவும் இந்தியா பற்றிக் கதைத்து கதைத்து சாப்பிடுவா.

                                                                          நான் சில நேரம் இந்திய வகை சைவ உணவு சமைத்தால்,நான் முள்ளுக் கரண்டியால் சாப்பிட அவா கையால சாப்பிடுவா ,அப்படி சாப்பிட தனக்கு விருப்பம் எண்டு சொல்லுவா,

                                                                   பெந்த இளவயதில் நேர்ஸ்க்கு படித்தவா , உயர் குடி ,படித்த குடும்பதில் பிறந்தவா, இந்த வருட மே மாதம் , பல வருடங்களின் பின் தான் பிறந்த கிராமத்திட்கு சென்று நோர்வேயிய கலாச்சார உடை அணிந்து சகோதரியின் பிள்ளையின் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டதாக மிகவும் சந்தோசமாகா சொன்னா. ,

                                                              அந்த படத்தை பேஸ் புக்கில் போட்டும் இருந்தா ,அவா சொந்த வாழ்க்கை பிரசினையில் பல கட்டங்களை சோகமாகக் கடந்தவா ,அதால பலமுறை வாழ்வின் விளிம்புவரை போய் உயிர் தப்பியவா ,எனக்கு எல்லா கதையும் சொல்லுவா,,அவாவின் எதிர் பாராத மரணத்தின் பிண்ணனியில் சில விசியங்கள் இருக்கு,....

                                                        பொதுவாக நேரடியாக எல்லாரோடும் பழகாத என்னோட வாழ்கையில் நிறைய மனிதர்களை குறுகிய காலத்தில் வெறுப்பு ஏற்றிய சம்பவங்களை சந்தித்து இருக்கிறேன், நிறைய மனிதர்கள் அனாவசிய அலுப்பு கொடுத்து வெறுப்பு ஏற்றி இருந்த கொஞ்ச நின்மதியையும் இழக்க வைத்திருக்குறார்கள்.

                                                                   பல வருடம் நட்பில் இருந்த இந்த அன்பான,அடக்கமான பெண் ஒரு நாள் தன்னும் நான் எவளவு குழப்பமா கதைத்தாலும், சிரித்து சிரித்து அமைதியா பதில் சொல்லும் ஒரு நல்ல ஜீவன் . சில மனிதர்கள் பதிந்து செல்லும் மிக அழகான நினைவுகளை அதிகம் கஷ்டப்பட்டும் மறக்கடிக்க நினைத்தாலும் முடியாது , அதை மறுத்தால் உயிர் வாழ்தலுக்கு அர்த்தமேயிருப்பதில்லை.!



                                                                           அந்தப்  பிரசன்னத்தை நிறுத்தி தொடரிருப்பைத்  தொலைத்துவிட்டு  மூச்சிழுத்து விழுங்குகிற  ஆத்மார்த்த ஏமாற்றம் ஒரு வெறுமைதான்  ! அடுத்தகட்டத்தைத்  தவிர்த்துவிட்டுப் பார்த்தால் இதெல்லாம்  வெறும்  சந்திப்புப் போலிருக்கும் , நீளத்தனிமை  நினைவில் இடறி விழும் ஒரு மென்மையான பொழுது  சுடர்மனதில் நீர்க்குமிழிகளாகுகின்றது  நம்மை அதிகம் நெருங்கிப் பாதித்துவிட்டுச் சென்றவர்களின் பிரிவு !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே 




*

மேலே நடந்தது புலம்பெயர் நாடுகளில் வாழுபவர்களின் அன்றாட வாழ்வியல்  அவஸ்தை.. இனி நம்முடைய மனிதர்களின் மரணங்கள் எப்படியான நெருக்குவாரத்தை தருகிறது என்று பார்த்தால். அது இன்னொருவிதமான ணைபவம் போலிருக்கு. " அதெல்லாம் ஒரு காலத்தில் எங்கட ஊரில ,, "  என்று இன்றைக்கு பலவருடங்கள் முன்னதாக நடந்த மரண வீடுகளில் உறவுமுறைகள் எப்படி ஓவென்று சொல்லி அழுது கொண்டாடினோம் என்று பார்க்க ஒருவிதமான மலைப்பாக இருக்கு.



                                              மரணஅறிவித்தல்கள் ஒரு காலத்தில் அதிகாலையில் எழும்பினால் சாவுமேளம் அடிக்கும் அதை வைத்து ஊரில யாருக்கு விசா கிடைத்தது என்று கதை வழியில் காற்றின்போக்கில் அறியமுடிந்த ஒரு அலாதியான காலத்தைத் தொலைத்துவிட்டு இப்ப இன்றைக்கு இன்டர்நெட் பதிவுகளில் அதைப் பார்க்கவேண்டி இருக்கு. கடல் கடந்த புலம்பெயர்வுகள் தந்த முக்கிய அவலத்தில் அதுவும் ஒன்று.



                                                              முன்னம் எல்லாம் உடன்பிறப்புக்கள் உறவினர்கள் தொலைபேசியில் சொல்லுவார்கள் . இன்றைக்கு அதுவும் அரிதாகிவிட்டது. துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் அவசர உலகத்தில் அவரவர்களுக்கு ஆயிரம் சோலிகள் குருவி தலைக்குமேலே பனங்காய் போல இருக்கலாம். அல்லது இதெல்லாம் இப்ப முக்கியமா என்ற அலட்சியமாயும் இருக்கலாம்..



                                                           அந்த ஊருக்கு ஒருநாள் திரும்பி வருவேன் என்று சொல்லிவந்தவர்களில் பலர் அது நடந்தேற முதலே இந்த உலகத்தை விட்டு அகாலமாக அந்நியநாடுகளில் விடைபெறும் சம்பவங்கள் நிறையவே நடக்குது. அதிலும் பலர் பொறுப்புகளோடு இருக்கும் நடுத்தர வயதில் பலியாவது இன்னும் சோகமாகவே இருக்கிறது.

                                                          ஊர்கூடி உறவுமுறை சொல்லி உரிமையோடு அழுது குளறி ஒப்பாரி வைச்சு பாடை கட்டிப் பந்தம் கொளுத்திப் பிடித்து நிலபாவாடை விரித்து அமர்களமாக மரணத்தைக் கொண்டாடிய ஒரு தொன்மையான வாழ்வியல் பூர்வீக அடையாளங்களுடன் வாழ்ந்த சமுதாயம் இன்றைக்கு " R.I.P " என்ற மூன்று ஆங்கில வார்தைக்களைப் போகிறபோக்கில் தட்டிவிட்டுப் போகும் சுருக்கமாகி முடிந்துவிடுகிறது.


                                                              நினைவுகளின் வழித்தடத்தில் என் பெற்றோர்களின் தலைமுறை இருந்தது. அவர்கள் எங்கே இருப்பார்கள், எப்படி இருப்பார்கள் என்பது போன்ற ரத்த உறவுத்தொடர்புகள் நிறையவே அறுந்துபோனாலும் யாரோ ஒருவர் போடும் மரணஅறிவித்தல் பல விடயங்களைத் தோண்டி எடுக்கும்போது அந்த இழப்பின் ஈடுசெய்ய முடியாத வலி தெரிகிறது.




                                                        தலைமுறைகளோடு நேசமாக நெருக்கமாக உறவாட முடியாமல் போவதே உலகம் எங்கும் சிதறி வாழும் இலங்கைத் தமிழர்களின் தேற்றமுடியாத சோகம். அதுக்கு தனிப்படவும் பொதுவாகவும் நிறைய அந்நியப்படும் காரணங்கள் அவர்கள் அவர்கள் வாழும் நாட்டில்இருக்கு. வேறுவழி இல்லை அதிலிருந்து தப்ப.




                                                          குஞ்சியப்பு, அம்மாச்சி, சித்தப்பு, பெரியையா, ஆளவந்தான்தாத்தா,,அன்னலட்சுமிமிப் பாட்டி போன்ற ஆலமரங்கள்சரிந்து விழும்போது அருகிருந்து ஆசுவாசித்து வழியனுப்பிவைத்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வெறும் கதையும் பழங் கதையும் ஆகிப்போனது ஒரு இனத்தின் வரலாற்றுத் தோல்வி.




                                                       இப்பிடியே நாயைப் பிடி பிச்சை வேண்டாம் என்று இன்னும் எவளவு காலம் தான் ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு போல ஓடிக்கொண்டிருக்கப்போறோம் ? அதுவும் எந்தத் திசையில் ஒடப்போறோம் ?, இந்த அர்த்தமில்லா ஓட்டம் எங்கேதான் கொண்டுபோய் விடப்போகுது ? போன்ற ஆதாரமான கேள்விகளுக்கு விடைகளும் இல்லை.




                                                             இணையவலைகளில் மரணஅறிவித்தல் பதிவுகள் போடும்போது அதில இருந்து ஓரளவு அறியமுடிகிறது உலகம் முழுவதும் பரந்துவாழும் குடும்ப உறவுகளின் தொடர்ச்சிபற்றிய தகவல்கள். இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு விலை கொடுக்கவேண்டி உள்ளது. இது கொஞ்சம் மனத்தைக் கனமாக்கும் விலை போலவே இருக்கு. !


2015 ஒஸ்லோ நகரம்   நோர்வே