Tuesday 15 October 2019

மூன்றாவது மழை !

அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரச்சொற்கள் போன்று ரகசியமாக கவிதைக்கென்று எந்தக் கவிதைமொழியும் இல்லை. சாதாரண சொற்களே சரியான இடத்தில வந்து அமர்ந்துகொள்ளும் போது இன்னொரு படி மேலேறிவிடலாம் சொல்லவரும் செய்தி.    


                                                                       துயரங்களோடு பொறுமையையும்    அசைத்துப் பார்த்துக்  கொண்டே இருக்கிற வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்துக்குப் பின்னாலும் மேஜிக்கல் ரியலிசம் போல ஒரு அபத்தமான மனவெளிச்சி பலசமயங்களில் நம்மை அறியாமல் சேர்ந்துகொள்ளும். அதை அப்படியே எழுதாமல் கொஞ்சம் வெட்டிக் கொத்தி சுருக்கமாக்கிப்  படிமவித்தைக்காட்டினால் சற்றியலிஸ்ட் வகைக்கவிதைகள் எல்லாருக்குமே சாத்தியம்தான்  !

                                                                                   மென்மையான   மொழிக்கு மிக  அருகில் இருக்கவே விரும்புகின்றன நவீனபுதுக் கவிதைகள் . புதுக்கவிதைகளுக்கான   கவிவிதிமுறை என்று  இதுவரை  கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு விதிகள்  என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்? எண்ணங்களை  ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றதுக்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவைதான் .


                                                                         திறமை  சார்ந்த ஒரு விடயம் எழுதிக்கொண்டிருப்பது . அதை அதிகம் ஈடுபட  திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு புதுமுயட்சி எழுத்தும் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது.


                                                                           இந்தக் கவிதைகள் முகநூல் சுவரில் எழுதிப்பதிவிட்டவைகள் .மின்னேறிஞ்சவெளியில் தொகுத்துப் பகிர்ந்துகொள்கிறேன் பகிந்துகொள்கிறேன்  !


*
வீடுகளின் தாழ்வாரங்களில்
மாட்டிக்கொண்டிருந்தது
கோமேத நிறத்தில்
இருட்டு !
ஆத்மாவின் 
ஆர்பரிப்புகளில் 
நினைப்பதைத் தெரியப்படுத்தும்
பேரமைதி !
சிறு கூட்டமாக 
பறவைகள் பறந்தபோது
தியானித்துக்கொண்டிருந்த
தனிமரம்
இலைகளை அசைத்துக்கொண்டது !
கிசுகிசுத்தபடி
எவ்வளவுநேரம்
இதையெல்லாம் பார்த்தபடி
காத்திருந்ததென்று தெரியவில்லை
கதவிடுக்கில்
வெளிச்சம்  கசிந்தபோது
உள்நுழைந்துவிட்டது
காற்று !


*


நினைவுத்தரவு
சொல்லிய விவரங்களுடன்
அந்தத் தோற்றம் ஒத்துப்போனது !
இள நரை
ஐம்பதுகளின் ஆரம்பக்கட்டம் ,

ஆனாலும்
இளமையின் தடயங்கள் ,
அடையாளம் தெரிய
கண்களில் அசாதாரண அமைதி,
அம்சமாகத் தேர்வுசெய்யும்
பெண்மயிலின் நீள்கழுத்து ,
எல்லாத்துக்கும் பொதுவான
புன்னகை !
வறண்டுபோன
ஞாபக மடிப்புகளுக்குள்ளிருந்து
பெயரை உடனடியாக மீட்கமுடியவில்லை !
போதுமான இவைகளுடன்
தயக்கமில்லாமல்
பத்துநொடியில்
பழைய முகத்தைப் புதிப்பித்து
அறிமுகம் செய்திருக்கலாம் !
ஏனோ தெரியவில்லை
பெரும்பாலான முனைப்புகள்
அந்தக் கட்டம்வரை போவதில்லை !
அன்று அப்படியே
தூரநின்று விலகிவிட்டேன் !



*


ஏதொவொருவிடத்தில்
சிதறிவிடுவது போலிருக்கும்
தனிமைக்குரலின்
தாய்மொழி எதுவென்று தெரியவில்லை !
காற்றைப் பிழிந்துகொண்டு

மழையின்
நதிநீர்க்கோலங்கள் விழுந்துகொண்டிருந்தன !
ஒரு குடைமரத்தின் கீழே
நிசப்தத்தில் ஒதிங்கியிருந்தேன் !
ஆக்ரோஷமான
பெருங்காட்டின் நீர்வீழ்ச்சி போலவே
யாருமற்றபோதும்
இரைச்சலாகக் கதைத்துக்கொண்டிருந்தது
அசை நேரம் !
வானமேகங்கள் தெளிவடைந்து
மென்மஞ்சள்த் தீற்றுகளுடன்
சமாந்தரமாக
உடன்பாடாகிக்கொண்டிருக்க
மழைத்துளிகள்
இப்போது மெலிந்துகொண்டிருந்தன !
மூடுதிரை விலக்கி
தலைநனைத்து நடைதொடங்க
அப்போதும்தான்
அனுமதியில்லாமல்
அருகே வந்துகொண்டிருந்தது
இன்னுமொரு அமைதிக்குரல் !



*


நிச்சயமின்மை
இவ்வளவு தூரம் வந்தபின்னும்
தணியவில்லை !!!
அரைகுறையான
அந்தரங்க உணர்வு போல

சலனமுறும் கேள்விகள் !
அதே
சூழ்நிலைகள்தான் !!!!
வேறுபடுகிறது
ஆழப்புரிதலிலும்
வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிற
சிந்தனை அடுக்குகள் !
தரிசனங்களிருக்கும்
ஒரு சமாதிநிலையின்
நீட்சியாக இது இருக்கலாமோ ?
சிலர் நொறுங்கிவிடுகிறார்கள்.
சிலர் தப்பித்துவிடுகிறார்கள்.
சற்றே ஓய்ந்ததுபோல தோன்றிய தருணம்
சொல்ல முயன்று
தோற்றுபோகிற துயரம்
அதுவுமொரு சுகம்தான் !



*


சரியாகக் கணிப்பிடமுடியவில்லை
எவ்வளவு நிசப்தத்தை
அடைகாத்துவைத்திருந்தேனென்று !
அனுதாபத்துடன்
மன்னிப்பை முன்னிறுத்தி 

விழிக்கரையில் புன்சிரித்து
கைகுலுக்கும் போதே
பரஸ்பரமாக
ஏதோவொன்று கசிந்துவிட்டது !
அவளின்
இளம்பழுப்பு முகம்
திரண்டெழுகிறதைத் தவிர்க்கமுடியவில்லை!
பார்த்த சந்தர்ப்பத்தில்
ஒரு காரணத்துக்காக
வேண்டுமென்றதை மறைத்து
மீண்டு உச்சரித்து
தாழ்வுணர்ச்சியை வெற்றிடமாக்கியிருக்கலாம் !
உண்மையென்னவோ
இன்னொரு காரணத்துக்காக
சொற்களை வெளியேற்றிவிடமுடியவில்லை !
குற்றஉணர்வு எப்போதும்
மனசாட்சியின் மேல்மட்டத்தில்
நல்லவேளை
வார்த்தைகள் மனதிலேயே !



*


பெயருக்கு ஏற்றபடி
ஒன்றிரண்டுகளைத்தவிர
மற்றெல்லாம் பிரமிப்பு !
ஆழ்கடலிலும்
ஆழமான கம்பள விரிப்புகள் ,

நீர்க்குமிழிகள் பிரகாசமான
தொங்குவிளக்குகள்,
அலங்கார மரச்சட்டங்களில்
ரம்மியமான வர்ணத்தெளிப்புகள் !
எதிர்பார்த்துபோலவே
புராதனமான நுண்கலைக்கூடத்தில்
அழுத்தமான
செல்வச்செழிப்பின் ஆக்கிரமிப்பு !
நூற்றாண்டுகளின்
காலாவதியான செழிப்பைக் காட்டிய
உலகியல் லவ்கீயத்தினுள்ளும்
சிலநேரங்களில்
விரோதமான விதிமுறைகளும்
புகுத்தப்பட்டுவிடுகின்றது போலிருந்தது
ஒரு
அறைக்குள் நுழைந்தபோது
சுவரின் உயரத்தில்
மனிதத்தின் தொடர்ச்சியாக
அன்னை தெரஸாவின் ஒளியுருவ ஓவியம் !



*


நாய்க்குட்டியுடன் உரையாடும்
ஒரு குழந்தையின்
பிரியமான குதூகலங்கள் !
மொழியின் முதல் சொல்லை அறிந்ததுபோல
வாலாட்டுகிறது நாய்க்குட்டி,

அதைத் தன்மொழியில் சொல்லிப்பார்த்துக்
கண்களைப் பரவசமாக்குகிறது,
நேரிடையாகவோ
அல்லது ஏதேவொன்றுடன் தொடர்புபடுத்தியோ
உள்வாங்கிக்கொள்கிறது ,
துள்ளிக்குதிக்கும்
ஒவ்வொரு நிமிடத்திலும்
அதன் எதிர்வினைகள்
குழந்தையின் சந்தோஷத்திலே குவிக்கப்படுகிறது .
ஒரு வயதானவர்
அநாவசியமான அந்நியோன்னியத்தை மாட்டிக்கொண்டு
அச்சமுறுத்தும் பாணியில்
நிகழ்சம்பவத்தை உற்றுப் பார்க்கிறார் !
எதிர்பாரத இடறலில்
நாய்க்குட்டி
பின்னம் கால்களுக்குப் பின்வாங்கிவிடுகிறது !
நாய்க்குட்டி
நினைத்திருந்தாலும் நினைத்திருக்கலாம்
ஒருபொழுதிலும்
குழந்தை
பெரியவளாய் வளர்ந்துவிடக்கூடாதென்று !



*


காலடியோசையில்
கதவுக்குப் பின்னால்
யாரெல்லாம் இருக்கிறார்கள் ?
மறுபுறமாக மர்மமாகவிருக்கும்
எதிர்பார்ப்பே ...

காத்திருப்பை நகர்த்துகிறது !
அவ்வப்போது
காரசாரமான உரையாடலில்
ஜன்னல் வழியாக ஏறிக்குதித்து வருகிறது
விவாதிக்கும் சத்தங்களும்
வேறு சில ஓசைகளும் !
அந்தரங்கத்தை மறைக்கும்
திரைச்சீலை நிழலுருவங்கள் !
இருட்டுவதுக்குள்
யாரவது வெளியே வந்தாகவேண்டும்
அல்லது
யாருமேயில்லையான மனப்பிரமையா ?
சலிப்பாகி
அந்தப்பக்கம் பார்க்கவேயில்லை !
இன்னொரு முறை
நிதானமாகக் கவனித்தபோது
ஒருவிதத்தில்
காலத்தைக் கடந்துவிட்டதைப்போல
எல்லாம் அந்தந்த இடங்களில். !



*


அமர்ந்திருந்தவர்
முன்னும் பின்னுமாக
ஆடிக்கொண்டிருந்தார்.
பலவிதமாக உடம்பை வளைத்தபடி
உந்துருளும் பிடிவளையத்தை இயக்கி

சரிவான இறக்கத்தில்
நிதானம்தவறாமல் இறங்கினார் !
காலத்தின் எச்சசொச்சமாக
விதித்துவைக்கப்பட்ட
முஸ்டிகளின் முடிவிடத்தில்
அதீத தன்னம்பிக்கை !
நெருங்கிக் கவனித்தபோது
காற்றுப்போன பலூனைப் போல
முகச்சுருக்கங்கள் !
மௌனத்தால் தோற்கடிக்கப்பட்டு
மென்மையாகியிருந்தது
கால்கள் இல்லாத மனிதனின்
கண்கள் !
மறுபடியும்
ஏமாற்றமடைய விரும்பவில்லை.
இரண்டில் எது
என்னை மிகவும் அச்சுறுத்தியதென்று
தீர்மானிக்க முடியவில்லை.!



*


வழக்கத்தைவிட
அசந்து கிடக்கும் விழிகளில்
நேரிடையாகவே சிக்கிக்கொள்ளும் பின்னிரவுகள்
மெதுவாகிவிட்டது போலிருக்கிறது !
உள்ளீடுகளைப் பாதிக்காதவரையில்

அதைப்பற்றித் தெரிந்துகொள்ள விருப்பமில்லை,!
விழிப்பு வரும்போது
தரையோடு சரியாகத் தொடர்புகளின்றி
நுழையமுடியாத ஓரிடத்தில்
மிதந்துகொண்டிருப்பதுபோன்ற உணர்வு !
அதையும் சமாளிக்கலாம் !
மூச்சொலியில்
உறக்கப் பேரிரைச்சல்கள்
அது நேர்மையாகவே பயமுறுத்துகிறது,
நடுநெஞ்சின் மீது அழுத்துவதுபோல
அருவருப்பான முகச்சுளிப்பில்
காற்றில் அடித்துப்போட்ட கனவுகளிலிருந்து
வியர்த்துக்கொட்டி முழித்துக்கொள்ள
நகர்ந்துகொண்டிருப்பதன் வேகம் தெரியாமல்
அசைந்துகொண்டிருக்கிறது காலம் !



*


சொற்களால்
எண்ணங்களை வெற்றிடமாக்குவதைப்பற்றி
மறுபடியும் மறுபடியும்
திருத்தி எழுதிக் கிழித்துப்போட்டது
ஒரு மணித்தியாலம் போலிருந்தது !

விசித்திர உருவத்துடன்
உள்ளபடியே ஒப்புவிக்க
மொழிக்கு என்னோடு என்ன விரோதம் ?
முறைத்துக்கொள்ளும்
வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து
எழுதக் கற்றுக்கொள்ளும்
என் மீது நானே எரிந்து விழுகிறேன் !
என்னைப் பார்க்க
எனக்கே பாவமாக இருக்கிறது !
வார்த்தைகள் தரும் அர்த்தங்களை
சுயத்தாலே நிரப்பமுடியாதபோதில்
அதற்குள் கனமே இல்லாமல்ப்போய்விடுகிறது !
ஒத்துக்கொள்கிறேன்
நேசமுள்ள வாசனைகளையோடு
தேர்ந்தெடுத்து வைத்திருந்த
பிரியமான வார்த்தைகளை சொல்லிப்பார்க்க
ஒரு நிமிஷம்தான் எடுத்தது !



*


மயக்கங்களைத் தொலைத்த
மேகங்கள்
சும்மா உலாத்திக்கொண்டிருந்தன !
சட்டென்று
விழித்தெளிம்பித் தலையாட்டியபடி

தனக்குரிய
தன்னியல்பில் பின்தொடர்கிறது
பனிக்காற்று,
வெயிலில் பழுப்பான
நடுப்பகலைப் பார்த்த
வெண்மையான மாலைநேரம்
சாம்பல்நிறமாக
எளிமையாகவிருக்கும்
அடிமனதுக்குள் விழிப்புணர்வு !
குழந்தைத்தனமாக
தனக்குரிய பின்தளத்திலிருந்து
காலநேர எல்லைகளை விரித்துகொண்டு
ஏகாந்தப் பெருவெளி !
அழுத்தமாகிக்கொண்டிருக்கும்
இன்னொரு சாயங்காலம்,
இன்னொரு பூங்கா.



*


பொழுது போகாத நேரத்தில்
இப்படித்தான்
வாசல்களைத் திறந்துவைக்கின்றன
திவலைத் தூறல்கள் !
ஒரு ஓவியத்திலிருந்து

நிறங்கள் கரைந்து வழிவதைப்போல
தனக்குள்ளே சிலிர்த்துக்கொண்ட மின்னலுடன்
அடுத்த காட்சிக்கு விரைகிறது
சாதாரணமானவொரு மழைநாள் !
ஒட்டிப்பிறந்தது போல
அசாதரணமாக இரண்டு மழை ஒரேநேரத்தில் !
முதல் மழையின்
இடிமுழக்க நொடியில்
என்னைச் சுற்றி நடந்தவர்கள்
குடை விரித்து ஒதுங்கிக்கொள்ள
மழை அவர்களை விலத்திவைத்தே பொழிகிறது !
ரெண்டாவது மழை
எப்போதும்போல்
ஏதோவொரு யோசனையுடன்
ஏதோவொரு கனவு கண்டுகொண்டு
நடைவழியை சுத்தமாகக் கழுவிக்கொண்டிருக்கிறது !
நான்
நனைந்து கடந்துகொண்டிருக்கிறேன் !
எதிர்பாராத திருப்பத்தில்
மூன்றாவது மழையும் சேர்ந்துகொள்கிறது
அது பிரத்தியேகமாக
எனக்குளே பெய்கிறது !



*



Wednesday 18 September 2019

மரணத்தின்நிழல் !

நெருக்கமான ரெண்டுவார இடைவெளியில் மூன்று அறிமுகமானவர்கள் அவர்களின் பயணப்பாதையில் இருந்து  அகாலமாகத்   தவறிப்போனார்கள் . மூன்று பேருமே நடுத்தரவயதுள்ளவர்கள் . மரணத்தோடு சமரசம் செய்துகொள்ளும் உத்தேசங்கள் எதுவுமில்லாத போது மரணம் சரியான தருணம் பார்த்து  அவர்களை விழுங்கிவிட்டது  ." மரணத்தின் நிழலில் " இந்த அவலமான   சாவின் மறைமுகமான  தாக்கத்தில் , பாதிப்பில் எழுதப்பட்டவைகள் .

கவிதைகளோடு அறிமுகமான திருமலை எம் ஏ ஷகி , உடல்நலமில்லாமல் இருந்தார். ஆனால் சடுதியாக பிரிந்துபோகும் நிலைமை இருக்கவில்லை.  ! சட்டென்று நூலறுந்து காற்றில் காணாமல்ப்போன பட்டம் போலிருந்தது அந்த அதிர்ச்சியின் வீச்சு  . 
                                                                                  
                                                              ஷகியின் ஆரம்பகாலக் கவிதைகள் அவருடைய வாழ்வின் வலி !எளிமையான கட்டமைப்பில்  அதிகம் படிமங்கள் போட்டுக் குழப்பாமல்  நிதர்சனமாக அதில் நிறையவே துன்பியல் இருந்தது.
                                              சஹியிடம் தனக்கென ஒரு பாணியில் இஸ்லாமியத் தமிழ் உரைநடை மொழியில்  ரசனையாகக்  கதை எழுதும் ஆளுமை நிறையவே இருந்தது . அதை தொடரும்படி எப்பவுமே ஊக்கப்படுத்துறது , அனால் சஹி அதில அதிகம் முனைப்புக்காட்டவில்லை !   
                                                                    
                                                    புற்றுநோயுடன் போராடித் தோற்றுப்போன   ஷகியின்  இறுதிக்கால கவிதைகள் தத்துவார்த்தமான வார்த்தைகளில் நிலையாமையின் பரிமாணத்தில் தேர்ந்தெடுத்த  ஏதோவொன்றை நிரூபிப்பதுபோல இருந்தன .





ஜீவகுமார் என்ற ஜீவா , ஆரம்பகாலத்தில் நோர்வேயில் இருந்தபோது நெருங்கிய பழக்கமான ஒருவன். சில மாதங்கள்  நானிருந்த வீட்டில் தங்குவதுக்கு  வாரதும் போறதுமாக  இருந்தான்  பியஸ்க்கோ என்ற பாரில் தண்ணி அடிப்பதும் ,பம்பலம் பகிடியும் ஆக ஒருகாலம் இருந்தது. 

                                                                          ஒஸ்லோ தமிழர்களின்  வீடுகளுக்குப்போய் சாந்தி பூசை, துடக்கு கழிவு  போன்ற    அய்யர் வேலையும் செய்வான். ஒரு முறை அவனுக்கு  உதவியாளராக நானும் போயிருக்கிறேன் .சமஸ்கிருத  மந்திரம் சொன்னதாக நினைவில்லை.  பூசை முடிய அந்தத் தமிழ் குடும்பம் தானமாகக் கொடுத்த விலை குறைந்த  வேஷ்ட்டியை தூக்கி காட்டி படுதூஷணத்தில அரைமணித்தியாலம் மந்திரம் சொன்னது நினைவிருக்கு !
                      
                                                                      ஜீவா அநியாயத்துக்கு ஒரு ஒரு உளறுவாயன் , அவனோட வாய் முன்னெடுக்கும்  அணுகுமுறை தான் அவனுக்கே எதிரி. எல்லோரோடும் வாயைக்கொடுத்து பிரச்சினையை வேண்டிக்கட்டுவது . அனால் நல்ல நேர்மையான மனதுள்ளவன், நோர்வேயில் இருந்து  யாழ்ப்பாணம் சென்றபோது அவனோட  ஊரான  கோண்டாவிலில் இறந்ததாக தகவல்கள். மரணம் மர்மம் போலவுமிருக்கு  !


மிக்கா, என்ற மீக்காயில் என்னை ஒத்த வயதுள்ள  சுவிடீஷ் நண்பன்  . ஸ்கர்ஹோலமன் என்ற நகரத்தில்  உள்ள வோர்பேரி மலையடிவாரத்தில்   அறிமுகமானவன்  வின்டர் காலத்தில் என் வாழ்வாதார  நிலைமை   மிகவும் நெருக்குவாரமாக இருந்தபோதில் நிறைய உதவி செய்தவன். 

                                                     சப்பாத்தில சக்கரம் போட்டு ஓடுவார்களே அதில  விண்ணன். மல்டிபரல்  தாவு செல் அடிச்சமாதிரி சும்மா கூவிக்கொண்டு பறப்பான் .ஒருநாள்தன்னும்  தட்பாதுகாப்புக்கு தலைக்கவச  ஹெல்மெட் போடவே மாட்டான் .அது ஏன்பா  நீ அதெல்லாம் போடுறதில்லை என்று  கேட்டால் " அதெல்லாம் எல்போட் போட்டு ஒடிப்பழகிற தவ்வல்கள் பயத்தில  பாவிக்கிறது  , நானெல்லாம் புரோபோசனல் லெவல் என்று சொல்லுவான்
                                                   " வாழ்க்கையில் எப்பவுமே ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள் " என்று பொஸிடிவாக அடைவஸ் செய்கிறேன் பேர்வழி என்று     எனக்கும் அதைப்போட்டு பாலன்ஸ் எல்லாம் பிடிக்கவைத்து ஓடப்பழக்கினான்  .வயதான என்னோட கால்கள் சும்மாவே எம் எஸ் பெர்னாண்டோ போல பைலா ஆடுவதால் அது எனக்கு ஒத்துவரவில்லை  . 

                                                       சப்பாத்தில சக்கரம் போட்டு ஒருநாள் ஓடியபோது அகாலமாக விழுந்து மண்டையை உடைத்து  அதீத இரத்தப் பெருக்கில் அந்த இடத்தில இருந்து தாமதமாகி ஆஸ்பத்திரிக்கு ஏறிப்பறிக்க  அடுத்தநாள்  மரணம்  !அவனுக்குரிய விதி அவனோடயே  சப்பாத்துச்சக்கர உருளியில் ஓடிவந்து ஒரு தருணம் பார்த்த இடத்தில அதுகுறித்த நேரத்தில்  சறுக்கியிருக்கு !!


                                                         
வாழ்க்கை  என்பது ஏதோவொன்று   நம்மை  விழுங்கக்  காத்திருக்கும்போது  அதன்  நெளிவு சுளிவுகளில் மாட்டிக்கொள்ளாமல்  உச்சிக்கொண்டு  சுழி ஓடுவது  போல  இருக்கும். இருந்தாலும்  அதன்  நல்ல  பக்கத்தில்  நல்ல  விசியங்களும்,  துன்பமான  பக்கங்களில்  விடைபெற்றுப்  போன   நினைவுகளும் சேர்ந்துகொண்டேயிருக்கிறது  .

                                                                                    நம்முடைய காலத்தில் நம்மோடு பயணிக்கும் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின்னாக விடைபெற்றுப்போய்விடுகிறார்கள் . அந்த வெற்றிடம் மனதை அரித்துக்கொண்டேயிருக்கும் .  பலமுறை ஜோசிப்பது  வாழ்தல்  என்பதே  இருத்தலின்  இன்னொரு  பரிமாணம் என்றும்   . மரணம் அதன் இன்னொரு பரிமாணம் என்றும் . ! 


*
சிதிலமான கூட்டில்
அநாதரவாக
ஒரு பறவையின் சிறகு ,

எதற்கென்று தெரியாமல்
முகம்மோதி
ஈரப்படுத்தும் காற்று ,


எதிர்பாராமல்
நினைத்தபோக்கில் பெய்துவிட்டு
ஓய்ந்துபோகும் மழை ,


இருண்ட சாலையையோரம்
வீசப்படுக்கிடக்கும்
கரடிபொம்மை ,


சுமைதாங்கமுடியாமல்
வேரோடு சாய்ந்தபடியிருக்கும்
தனிமரம் ,


பாதையின் வளைவை
கண்வெட்டாமல் வெறித்துப்பார்த்கொண்டிருக்கும்
வயோதிபர் ,


தனித்தபடி சுரங்கள்
கீழ்ஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருக்கும்
ஏதோவொரு பழையபாடல் ,


சந்தேக மையல் வீச்சுக்ளோடு
தலையைக்குனிந்தபடி
கடந்துபோகும் இளம்பெண் ,


ஒவ்வொன்றிலும்
ஏனோ தெரியவில்லை
இப்பெல்லாம் மரணத்தின்நிழல் !


*

இளம்சிவப்பில் சூரியன்
மழைக்குளிரும் காற்றில்லை
சில்லென்று
கோடையிலும் ஈரம்
கழுத்திலும் நெற்றியிலும் !

முட்டிபோட்டு
தண்ணி மொண்டு
முகம் துடைத்து
கண் மழங்க விழித்தபடி
வெறும் தொண்டை விழுங்கி
மனசுக்குள் சலிச்சு
தினம் பழகிய கோலம்
விடிகாலை !


*


எக்கச்சக்கமான புத்தகங்களால்
அடைசலாகிய அறை ,


வேதாந்தியைப் போல
நீண்ட வெள்ளைத் தாடியை
ஜோசிக்கும்போது நீவிவிடுக்கொண்டிருந்தார். 


நானோ பாதிரியாரிடம் பாவங்களை
ஒப்புக்கொடுப்பதுபோல
நாற்காலி விளிம்பில்
அதைரியத்தோடு உட்கார்ந்தவாக்கில்
மறுமை உலகம்பற்றிய
சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன் !


உள்ளுணர்வில்
கச்சிதமாகத் தெரிந்திருந்த ஏதோவொன்றில்
என் பார்வையைத்
தன் வெளிறிய நீலக் கண்களால்
சந்திக்கத் தயாராக இல்லாதவர் போல
மணித்துளிகள் மவுனித்திருந்தார். 


ஜன்னலுக்கு வெளியே
எதனாலோ
தூண்டப்பட்டு விழித்துக்கொண்ட
மெல்லிருட்டு நெருங்கிக்கொண்டிருந்தது !


என்ன சொல்லியும்
என்னை நம்பவைக்கமுடியாத போது
பதிவு செய்யப்பட்ட நிரூபணங்கள் ஏதுமில்லையென்றார்


உண்மையைச் சொன்னால்,
அவர் உண்மையைச் சொல்லவில்லை !


*

சன்னமான
இழைகளால் பின்னப்பட்டதுபோன்ற
நிலை பற்றிய தெரிவிப்புக்களில்
எப்போதுமே முரண்பாடு !


முதலாவது

அருவருப்பால் முகம்கோணி
உண்மையைச் சொல்லமுடியாமல்
கையில்பொத்தி வைத்திருக்கிறதுபோல
ஒரு எண்ணம்,
அல்லது எதிர்பார்ப்பு. 


முடிந்தவரை அதில்
ஏதும் அறியாததுபோல
பாவனை செய்வதில் தோற்றுவிடுகிறேன் !


இரண்டாவது
உங்களைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ
அதே அளவு
என்னைப்பற்றியதுமான
தகவல் வெளிப்பட்டுவிட்டது போல
ஒரு அவநம்பிக்கை
அல்லது ஐயம் !


எனக்குத் தெரியும்
பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற
பரமரகசியங்களின் மதிப்பு அதிகமென்று! 


வாழ்க்கை என்னுமளவிலும்
கடினமான சூழல் ரெண்டிலுமே !


எப்படியோ
ரெண்டுமே நல்லதுக்கில்லை !


'

தூங்குமூஞ்சி சோம்பேறிகள் சேர்ந்திருந்து
தோற்றுப்போன குரலில்
அரக்கப்பரக்க பேசிக்கொண்டிருந்த சதுக்கத்தில்
சுவாரஸ்யமான ஒரு பாடலை
சத்தமில்லாமல் காற்றில்தேடிக்கொண்டிருந்தேன் !


வெய்யில் மாலைநேரம்
பரபரத்துபடி வேகமாகக் கடந்ததுகொண்டிருந்தது !


என் முணுமுணுப்பு 

கெக்கலிப்புப்போலிருந்திருக்கவேண்டும்
உரையாடலை நிறுத்தி
சற்று மவுனமாயிருந்தனர் சோம்புகள் !


மிரட்சிகளேதுமில்லாத சூழ்நிலையின்
இறுக்கத்தைத் மேலும் தளர்த்துவதுபோல
மரங்களின் இலைகள்
தமக்குள் பாடிக்கொள்ளும் மென்சத்தம் கேட்கிறது..


சிக்கலான நேரங்களில்,
சிக்கலான இடங்களில்
சில நேரம் மிகச் சிக்கலான பாடலொன்றின்
மெட்டுக்குள் அமிழ்ந்துபோவதும்
அவசியமாகத்தான் தோன்றுகிறது.!!!


'
சாதாரண நாட்களில்
எதன்மீதும் கோபமில்லை. 


எப்போது நிலைதடுமாறுமென்று
எப்போதுமே கேட்டதில்லை. 


சம்பவங்கள் அனைத்துமே

காலஅனுசரிப்பில் அமைக்கப்பட்டவைதானே. 


கடவுளுக்கே தெரியும்
படைத்ததில்
எவ்வளவு குறைகள் இருக்கிறதென்று. 


அசாதாரணமாக
மரணவிறைப்பு நெருங்கும் சமயத்தில்
அடித்தொண்டையிலிருந்து எழும்பும் ஆதங்கம் போலவே
இரவுகளில் நான் மவுனித்திருக்கிறேன் 


இல்லையில்லை
இரவுகளில்த்தான் விழிப்புணர்விலிருக்கிறேன் 


இப்பொழுதெல்லாம்,
வெளிச்சமான பகல்கள்
என்னை கைவிடுவதற்கான காரணம் 


என் வெற்றியா ? 

அல்லது என் தோல்வியா ?
என்பது கூட சரியாகப் புலப்படுவதில்லை

*

மரநாற்காலியின் மேல் பகுதியை
விட்டு விலகிச் செல்கிறது
அந்நியர்களின் உரையாடல் !


மூன்றாவதாக என்காதுகளையும்
சேர்த்துக்கொள்கிறேன் !


அவளுக்கோ
பிறந்து இடத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது.
அந்த இடத்தை
காட்டிக் கொடுக்கும் முயற்சியில்
தன்னையும் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறான்
அவன் !


இளமைக்காலம் பற்றிப்பகிர
தாய்மொழியில் 

அந்நியோன்னியமாகிவிடுகிறார்கள் 

இலக்கில்லாமல் நானோ
எங்கெல்லாமோ அலைந்துகொண்டிருந்தேன் !


எதிர்காலத் திட்டங்களைப் பேசிக்கொண்டு
எதையோ பார்த்துச் சிரித்தார்கள் !


புரிதலின் அடி நீரோட்டம்
அவர்களிருவருக்குமிடையே
அகப்பரப்பில் வலுவடையக்கூடும் !


என்னுடைய பின்புலத்தை
நானும் விசாரிக்கிறேன் எனக்குள் !


நெருக்கமாகப் பின்தொடருகிற
ஒரே இடத்தில்
இம்மூன்று விரட்டல்களும் நிகழ்கின்றன
என்பதைத் தவிர
நமக்கிடையே எந்த சம்பந்தமுமில்லை…!


*

பாதி உலகில்
கதகதப்பாக உட்கார்ந்துகொண்டு
மணித்தியாலங்கள்
உபதேசம் செய்கிறது
அவர்களுக்குச் சுலபமா இருக்கு....


மிகவும் தீனமாக
கச்சிதமான
நரம்புகளின் முடிவில்
கேலிக்குரிய விதமாக
வெகுதூரம் தள்ளி இருக்கறது
என் ஆத்மா !


‘நான்’ ஒன்றும் மகிழ்ச்சியாக இல்லை,
அப்படித்தானே?
மனதை வெறுமையாக்கி
வடியவிட்டு
பத்து நிமிடங்கள்தான் கடந்திருந்தன.


தெரிந்தவற்றிலிருந்து
அழித்த பின் எதை நினைவு வைத்திருப்பது ?


மறுபடியும் துவங்கி விட்டது.
என்னுடைய
மறுபாதி உலகம் !


*

இதுகாறும் கேட்டிராத
ஏதோ ஒன்று
விலா எலும்புக்கூட்டுக்குள் 


சிறைப்பட்டது மாதிரியே
சட்டென்று
நெஞ்சு நெருக்கும் வலி
இறுக்கிப்பிடித்தது !


இதயத்தமணித் துடிப்புகள்
வெற்றிடத்தில்
இட்டுக்கட்டப்பட்டவை போல ,,,


வேடிக்கையாகவிருந்த நிமிடத்தில்
எனக்கதில்
சிறிது கூடத் தொடர்பில்லை போலத்
தூரமாகிப்போய் நின்றேன் !


மனதின் மவுனம்
நியாயப்படுத்தியிருக்கிறது
உயிரோடிருத்தல்
ஓரங்க மேடையென்றும்
வாழ்ந்துகொண்டிருப்பது
அதிலொரு அபத்த நாடகமென்றும் ! 


அந்தப்
பிரமையை உடைத்து
கனவில் விழிக்கவும், 


மெதுவாக எழுந்து பார்க்கவும்
நடந்து கொண்டிருக்கவும் 


ஒரு பாவனையோடு
நிறுத்திக்கொள்கிறேன் !





Wednesday 11 September 2019

வேறோர் குரல் !


நிலப்பரப்பை
மூழ்கடிக்கும்முன்னிரட்டு !
குரல்வளையத் திருகிக்கொண்டிருந்த
நெரிசலான இரைச்சல்
பூமியெங்கும் அதிர்ந்து கொண்டிருந்தது !...
பின்னணியில் மேகங்கள்
ஆவேசமாக முறுக்கிக்கொண்டிருந்தன !
இன்றளவும் உறவைத்தொடர்கிற
பூர்வஜென்ம பந்தம்போல
பெயர்தெரியாப் பறவை
காற்றில்க் கலைந்தபடியிருந்த
கடைசித் தருணங்களுக்கான காட்சிப்படிமத்தின்
இறுதிவரியை பாடிக்கொண்டிருந்தது !





*


பின்மாலை வெய்யில்
எப்ப வேண்டுமென்றாலும் கண்மூடலாம் போலிருந்தது !
அவ்வப்போது அலையெழுப்பி
போட்டுஉருட்டி விளையாடிக்கொண்டிருக்கும்
சாயங்கால மனதுக்குள்

சுள்ளென்று இழுத்துப்பிடிக்கும் சலிப்பு !
முகப்புத்தாழ்வாரத்தில்
குளிர்காற்றில் சுழன்றபடியிருந்தன
பழுத்து விழுந்த இலைகள் !
எப்பவும் இப்படித்தான் என்றில்லை . !
எல்லாரும் சொல்றமாதிரி
தலைமுழுகிவிட்டுப் போகமுடியுமா?
உள்ளங்கைகளை விரித்து வைத்து
அதிஷ்டரேகைகளை உறுப்பார்க்கும்போது
மையத்திலிருந்து ஓரத்திற்கு நகர்ந்துவிடுகிறது
ஒரு பிரியமான குரல்
அல்லது
ஒரு நேசமான நினைப்பு
அல்லது
ஒரு அன்பைப்பிழியும் சொல் !



*


இடம் சரியாக இல்லையென்பதுபோல
வழக்கத்துக்குமாறாக
அசுமாத்தம் ஏதுமின்றிக்கிடந்தது
வழக்கமாகச் சலசலக்கும்
வளைசதுக்கம் ,

தூங்குமூஞ்சி மதுப்பிரியர்களும் இறந்தவர்கள்போல
நிசப்தத்தில் அமர்ந்திருந்தனர்.
காற்றசைந்தபோதும்
ஒருவர் கூட நகரவில்லை
வெய்யிலைத் தவிர
வேறு ஒரு ஓசையும் அங்கே இல்லை.
தப்பிச் செல்வதுக்கு
ஒரு வழியையும் பற்றி
அதிகம் ஜோசிக்கமுடியாத நேரம்
ஆகாயத்தில் மேகங்கள் இருந்தன,
குளிர் இன்னும் எழும்பவில்லை.
தூரத்தில்
சலனமாக பிரார்த்தனைக் குரல்
எல்லாம் அமைதியாகி விட்டது.



*


இடிந்துபோன கடந்தகாலத்தை
அழிவிலிருந்து மீட்டெடுத்து ...

காட்சிப்படுத்தமுடியுமா ?
சந்தேகமாகவிருக்கிறது !!!!
அபத்த நாடகத்தின்
நடுப்பகுதியில் ஸ்தம்பித்துவிடுவது போலிருக்கு
நினைவுகளின்மீதேறிப் பயணிப்பது !
சராசரி மனநிலையிலும்
ஈர்ப்புக்களைக் குறையவிடுகுதில்லை
அடுத்தகட்டத்தை நிர்ணயிக்காத
எதிர்காலம் !
இயல்பாகப் பயணித்துக்கொண்டிருப்பது
உணர்ச்சிகரமாக மாறி
கேள்விகளால் துளைக்கும்போது
எரிச்சல் வருகிறது !
திணறிக்கொண்டிருக்கும் அன்றாடங்களில்
தேங்கிவிட்டது போலிருக்கும்
நாளையென்பது
கனவுலகத்துக்கு ஒருவழிப்பாதை !
அதில் மூழ்கித்திழைத்துச் சஞ்சரிக்கும்
மிகமிக மென்மையான
ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும்
மாறிக்கொண்டிருக்கும் நிகழ்காலத்திற்கு
தற்செயலாக அமைந்துவிட்ட
பொருத்தமான குறியீடு !



*


நிலை மாற்றங்களும்
அதைத் தாங்கியடி நின்றுகொண்டிருக்கும் ...

நீண்ட பொழுதுகளும்
வெறுமனையே காலப்பிரமாணமில்லை !
நகர்த்தலிலும்
முழுமை பெறாது கசிந்து வழிகிறது
குளிர் உறிஞ்சும் அதிகாலை !
பெரிதாக வெளிப்படாவிட்டாலும்
கண்கொண்டு கூச்சமடைய வைக்கிறது
முன்கோடை வெயில் !
வாய்ப்புகள் அதிகமில்லாதபோதும்
வந்துபார்த்துவிட்டுப்போகிறது
காதலுணர்வு !
சொல்லமுடியாத தருணத்தில்
மதிப்பில்லாத அவமானங்கள் !
உயிர்ப்புடன் கடைசி வரையிலும்
எரிந்து கொண்டிருக்கிறது
நம்பிக்கை !
மெளனத்திற்கு எதிராக
ஓயாது உளறியபடியிருக்கிறது மனது !
அமைதியாய் அதைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
நிழல்தந்து ஆத்மா!
ஆற்றாமையின் உள்ளக் குமுறலாக
நோகடிக்கும் அனுபவங்கள் !
அடி நீரோட்டமாய்க்
கால்களை நனைத்துக்கொண்டிருக்கிறது
புள்ளியாக நகரும் காமம் !
என
எழுதலிலும் , வீழ்தலிலும் வாழ்கின்றது
ஒரு மிகச் சாதாரண நாள் !



*



விம்மிவிம்மி
அவர்கள் கதைத்துக்கொண்டிருந்ததில்
இடிபாடுகளுக்குள் அகப்பட்ட
ஒரு பூனைக்குட்டியின் கதறல் இருந்தது !
அதைவிட அச்சுறுத்தியதென்னவென்றால்...
பறக்கும் பழக்கத்தை
பலவிதங்களில் பிரயாசைப்பட்டுக் கைவிடும்
ஒரு பறவையை
அது ஞாபகப்படுத்தியது !
அவர்களில் பலர் என்னைச்சுற்றிலுமிருந்தார்கள்
அவர்கள் நடுவில்
ஒரு வயதான தந்தையும்கூட இருந்தார் !
ஒடுங்கிப்போய்
மவுனமாகவிருந்தபோது
எந்த முயற்சியுமில்லாமல்
அவர்களிலிருந்து மாறுபட்ட ஒருவனாய்
என்னையறியமுடியவில்லை !
இறுகப் பிணைக்கப்பட்ட
இரும்புக்கதவை அகலத்திறப்பதுபோல
ஒருகாலத்தில் கொந்தளித்த
என் பழைய கோபமும்
நாளைக்கான
அவர்களின் தீர்க்கதரிசனமும் ஒன்றாவேயிருந்தது !











*


நேற்று முழுவதும்
எந்தத் தலையீடும் இல்லாமல்
அழிவு நடனமாடிக்கொண்டு
மிச்சமின்றி
அதன்போக்கில் பொழிகிற ...

மழைநனைந்த மலர்கள்
ஒவ்வொன்றையுமே ஆர்வமாகவும்
உள்ளங்கையைத் தாடைக்கு அணைகொடுத்து
கவனித்துக்கொண்டு இருந்தேன்.
நேரத்தை
மையப்படுத்தும்
இன்றும் அப்படித்தான் !
துல்லியமா ஒரே மாதிரி
அதிதீவிர தகவமைப்புத் திறனில்
புத்தம் புதிதாக
ஏதோவொன்றை சொல்லிக்கொண்டிருந்தன.



*


சத்தமாகச் சிரித்து
கதவடைத்ததுபோல மெல்லக் கதைத்த
அப்போதெல்லாம் உடலெங்கும்
மயிர்கால்கள் சில்லிட்டன !
அடிவயிற்றைப் பிசைந்துகொண்டு ...

சிலந்திவலையில் ஊர்கின்றன
ஒவ்வொரு உரையாடலும் !
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது
பழகிப்போன குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாக பயனற்றுப்போய்விடுமா?
புரிதல்களை
ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும் தன்மையை
இழந்துபோவதால்
தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமா ?
அடிக்கடி
ஒழுங்கில் இருந்து ஒழுங்கின்மைக்குச் சென்று
விவாதப்போர் நடத்துகிறது மனது
யார்நீ ? என்கிறது ,
அந்தக்கேள்வியால் திடுக்கிட்டடு
உச்சத்தில் விழித்தெழுந்தபோது
அமைதிக்குள்ளிருந்து
வேறோர் குரல் எழுந்தது,!!



*


தேவதைகள்
பூமியிலும் வாழ்ந்தார்கள் !
புள்ளிபுள்ளியாக மழைபெய்து
மாக்கோலத்தை அழிப்பதுபோல
நினைமனதை நெருடுகிற...

எந்தவிதமான சலனங்களுமின்றி
நடுநிசிகளிலும் நடுப்பகல்களிலும்
கண்டும்காணாமலும் கடந்துசென்றார்கள் !
அப்போதெல்லாம்
பழக்கப்பட்டுப்போன இயல்பாகவே
வாழ்க்கையும் வலம்வந்துகொண்டிருந்தது !
புராதனமான பாவனைபோலிருந்தாலும்
ஓரக்கண்களிலும்
வெட்கத்தை ஏந்தவைத்து
ரசனையுடன் புலம்பவைத்த அழகு !
பச்சைநிறப் பட்டுச்சேலை
முந்தானைக் கூந்தலை மூடிமறைத்தபோதும்
முகத்தை வசீகரித்து வைத்திருந்த
அந்தக் காலத்தோற்றம்
இப்போதெல்லாம் இல்லாமல்ப்போய்விட்டது !
நாளுக்கு நாள்
யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதுபோல
ஜதார்த்தங்களே
தலைமறைவாகிக்கொண்டிருக்கிறன !



*

காது மந்தமாகி வெகுகாலம்
வாயசைவில் வார்த்தைகளைப் புரிந்துகொள்வார்
மேசையிலும் தரையிலும் புத்தகங்கள்
அவர்சொல்வதை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன்.
நீண்ட சிநேகிதமெல்லாமில்லை ...

ஒட்டுதல்கள் இல்லாத பரஸ்பர நடப்பு !
" புதிதாக ஒன்றும் எழுதமுடிவதில்லை
சொன்னது பலிக்கவில்லை " என்றார்
மரணத்துக்குள்
ஒரு காலடி எடுத்துவைத்ததுபோல
அறைமுழுவதும் வெள்ளை நிறம் !
நான் குறுக்கீடுகளின்றி அமைதியிலிருந்தேன் !,
வெறிச்சோடிக்கிடக்கும் அமைதியைக்
கலவரமாக்கிவிடுவதுபோல
"கல்லறைபோல ஏதாவது எழுதிவையுங்களேன் "
இதைத்தான் கேட்க நினைத்தேன்
முரண் நிகழ்வுகளையும்
காலத்தின் ஊஞ்சல் விளையாட்டையும்
நித்தியத்தில் ஆழ்த்துகிற
மௌனத்தை இடையூறு செய்வதுபோல
அந்த விண்ணப்பம் எஞ்சியிருந்தது
நினைக்கும்போதெல்லாம்
ஒருவித அலறல்போலவே
இப்பவுமிருக்கிறது !
















Tuesday 19 March 2019

ஆதிமனது !

புத்தகங்கள் ஒருகாலத்தில் நம்மை எல்லாம் இழுத்தி இருத்திவைத்து வாசித்து மகிழ்வடையவைத்த காலம் இப்போது எங்கேயோ போயே போவிட்டது. அந்த அலாதியான காலத்தை இப்போது அப்பப்ப  அசைபோடவே முடிகிறது. வேறு ஒன்றும் செய்வதுக்கும்  இல்லை . வாசிப்பு என்பது இப்பெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குள்ளேயே நடந்தேறுகிறது.  அவ்வளவு அவரசமாகக் காலம் தள்ளிக்கொண்டு நம்மை முத்தி ஓடுகிறது.


                                                                              எழுத்தாளர்  திரு  . ராராஜி ராஜகோபாலன்  அவர்கள் எடுத்த  இந்த ஒளிபடத்தைப் பார்த்தபோது இளவயதில் நிறைய புத்தகங்கள் வேண்டி வாசித்த  " சோவியத் யூனியன் புக் சொப் " தான் நினைவுக்கு வந்தது. ஒரு அமைதியான சூழலில் இருக்கும் ஒரு புத்தகநிலையத்தை  அவர் விரும்பி  எடுத்த இந்தப் படத்துக்கு "
 ஒரு கவிதை போல இருக்கு இந்த இடம்  " என்று உளறிக்  கருத்திட்டேன் , அவரோ இன்னும் அழகாக  "
ஹியூறோன் வாவிக் கரையின் சிறிய ஊரில் பெரிய இதயம் " என்று அவருடைய பாணியில் பதில்க் கருத்திட்டு மிக உயர்ந்த ஒரு அர்த்தத்தில் அதைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தார்



                                                                            பலாலி வீதியில் இருந்த அந்தச் சின்னஞ் சிறிய புத்தக நிலையம்  ஒரு கட்டத்தில் அந்தப் புத்தக நிலையம் பலாத்காரமாக மூடப்பட்டு அதை நடாத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவங்களும் கூடவே நினைவுக்கு வந்தது. அந்த புத்தகசாலை  நிறைய ரஷிய நாவல்கள், கதைகள் வாசிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது. அதில் புத்தகங்ககளும் விலை குறைவு . இப்பவும் அங்கே வேண்டி வாசித்த புத்தக தலைப்புகளும், அதை எழுதியவர்களின் பெயர்களும், கதைகளும் நினைவு இருக்கு. அப்படியான ஒரு காலம் இனி வருமா தெரியவில்லை.


                                                                          அப்புறமாய், இந்த எழுத்துருக்கள் எப்ப எழுதியவைகள் என்று சரியாகச் சொல்லமுடியவில்லை. மின்னேறிஞ்சவெளி வலைப்பூங்காவில் ஒரு பக்கமாக இவ்வளவுநாளும் இருந்த இவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்




ஒருசமயம்
இரக்கத்தின் விளிம்பிலும்,
பாட்சாதாபதிலும்
இன்னுமொருமுறை
உன்னிடம் திரும்பிவந்தால்

முடிந்தவரையில்
நிதானமாக
சாகும்வரைவாழ்ந்துவிடு !


இப்படிக்கு
அவசரமான வாழ்க்கை !



*


என்னைசத்
தேடிக்கொண்டு திரியும்
என்
கவிதைகளையே
சந்தர்ப்பம் இருந்தும்

நானின்னும்
சந்திக்கவில்லை !
உங்களை
நானெப்படி
மதிப்பிடமுடியும் !



*


இதற்குப்பிறகு
எனக்கு

என்ன நிகழும் ?
நலிவடையவைக்கும்
இதைக் கேட்கவே வேண்டாம் ,

இதற்குப்பிறகு
எனக்கு

என்ன விருப்பம்
அதைமட்டும்
விசாரியுங்கள் !



*


சொந்தமென்று
எனக்குள்
விதைக்கப்பட்ட கனவு,
அதிலேயே
சுவாச நேசிப்பைத்

தேடி எடுத்துத்தந்து
மிகவும் ரம்மியமானவற்றை
உதாரணமாக்கியவள்
நீயடி....!



*


நாட்பட்ட முதுகு
நாரி முறிக்கும்
விலா எலும்புகள்
நகரமறுக்குமிப்போதே
சேமித்துவைக்கும்நோக்கத்தில்

நிறுத்தக்குறிகள்
வைக்காமலே நிரம்பிவிட்டது
உளைவு வலி !



*


நினைவு
அருகில் இருப்பதால்
மகிழ்ச்சி நிறைந்து வழியும்
தனியிரவு !
நட்சத்திரங்கள்

ஒவ்வொன்றும்
விளக்கனைத்துப்போய்விட
விடியும் பொழுதில்
வேறு பலது
பிழைத்து விடுகிறது



*


ஓட்டைகளால்
உள்நுழைந்து வெளியேறுகிறது
தந்திரமான குளிர் !
முடிந்தவரை
தேசியக்கொடியால்
இறுக்கிப்போர்த்தபடி
நடுங்கும்
பிச்சைக்காரன்!
தைக்கப்படவேண்டிய
கிழிசல்கள்
இன்னும்தான்
நிறையவேயிருக்கு !



*


யாராயிருக்கும்
நிலவின் நிழலுக்குக்
குறிவைத்து
காறிக்குதப்பி
உமிழ்ந்து துப்பியது ?
ஒரு
அலையைப்
பின்தொடர்ந்து
விரட்டியபடியேயிருக்கு
தெருத்தண்ணி !



*


சும்மா தன்னும்
எட்டிப்பாரேன் என்றது
வழிவிடுதலைத்
தீர்மானிக்கும்
வெளிக்கதவு ,
மெதுவாகத்திறப்பதட்குள்
தோச்சுப்பிழிந்த
குளிர்காற்றை
புறங்கையால் வழித்து
முகர்ந்து பார்குது
முகம் !



*


நிலைப்பாடுகளில்
நடுக்கொள்ள
ஒரு பூனைக்கு
ஏகப்பட்ட சாத்தியங்கள் !

சுவருக்கு
அந்தப்பக்கமும்
சுவர் !
இந்தப்பக்கமும்
சுவர்தான் !



*


விவரணையை
உசுப்பிவிட்டுப் போகவும்
மேகமில்லாத
வெற்று வானம்!
கைகளை அகலவிரித்து

கொட்டாவி
பின்மூச்சு மூட
அழைப்பிதழ்கள் இல்லாமல்
எதற்காக
உள்ளே வந்தாய் என்றது
வெளி  !



*


இன்னும்
தூக்கம்விடியாத
மூஞ்சியில்
அதிகாலைப் புகார்,
தண்ணி தெளித்து
எழுப்பிக் கொண்டிருக்கு
ஜன்னலோரக்
கண்ணாடியெங்கும்
பேர்ச்மரங்கள்!



*


தன்
நிலைபடுத்தி
விமர்சிக்குமளவுக்கு
பெருமையாக
உளறிப்போட்டேன்!
அவ்வளவுதான்!
என்
தொடர்கதை
முடித்துவைக்கப்படலாம் !



*


நிசிநேரத்திற்கு
முன்னோடியாக
நம்பமுடியாத
எல்லாவற்றையும்
மனமழுந்தி உச்சரிக்கும் 
பன்னிரண்டுமணி !
சிணுங்கல்
மொழியலைகள்
இங்கிருந்துதான்
கதைக்கத் தொடங்குகிறன !



*


அலட்டிக்கொள்ளாமல்
மேனியுரசி
ஆடையவிழ்க்குது
வெள்ளுறை
வெண்பனிவெய்யில்
எனக்கு
மூக்கு நுனி மட்டுமே
வேர்க்கிறது !



*


பலவீனங்களைப்
பலப்படுத்தமுடியாத
ஊனுடம்பு,
பழையன
கழிதலுக்குள்
ஒடுங்கிவிடுகிறது
மரணம் !



*


இனிமேலாவது
ஏதாவது நடந்தேறுமா ?
நினைப்பை
முடிப்பதுக்குள்ளாகவே
இச்சை

மோப்பங்களை
அவிழ்த்து விடுகிறது
ஆதிமனது !



*


பல்லை
நெரித்தபடியேயிருக்கிறது
கையலைபேசி ,
விலகி ஓடச்சொல்லுதா ?
அல்லது

இயலாமையின்
சமீபங்களை நெருங்கச்சொல்லுதா?
அதுதான்
குழப்பமாகவிருக்கிறது. !



*






Saturday 19 January 2019

கவனச்சிதறடிப்புக்கள் !

நனவோடையில் நனைந்தபடியோ அல்லது எதார்த்தமாக எழுத்துவத்துக்கோ எப்பவுமே அத்திவாரம் போல  ஒரு களம் எப்பவுமே தேவையாக இருக்கு. பலவருடங்கள் இருந்த நோர்வேயில் எழுதியவைகள் எல்லாம் ஒருவிதமானவை , நோர்வே போலவே வெளிப்புற அலங்காரங்கள் அதிகம் உள்ளவை. இப்போது வசிக்கும் சுவீடன் இன்னொருவகை,  சுவிடீஷ் வாழ்வியல் அமைப்புமுறை போலவே  மனதை அதிகம் விழுதிக்கொண்டிருக்கும் வகை.





                                                                      " It took me fifteen years to discover I had no talent for writing, but I couldn't give it up, because by that time I was too famous..."  என்று Robert Benchley என்ற ஆங்கில எழுத்தாளர் ஒருமுறை எழுதியிருந்தார். ஏனென்றால் இவளவு வருடங்களின் பின்  இப்பெல்லாம் அடிப்படையில் நானொரு விவரண எழுத்தாளன் என்றுதான் நினைப்பது  .


                                                                  என் வியர்வை நடந்து கடக்கும் மொழி என் வாழ்வின் மிகத் தனிப்பட எனக்கே எனக்கான அனுபவம். அதை மண்டையைத் திறந்து அதுக்குள்ளே மயிலெண்ணெய் விட்டுப்பார்த்த மாதிரி நான் உணர்கிறேன் . நான் பார்க்கும் உலகத்தைதான் நீங்களும் பார்கிறீர்கள், ஆனால் நான் அதை எப்பவும் வேறுவிதமாகப் பார்ப்பேன்




                                                              ஒரு நாட்டை சில பல காரணங்களுக்காய் அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போட்டு திரும்பிவந்து " அடைக்கலமானானேன் உன்னிடமே அடைக்கலமானானேன் உன்னிடமே " என்று ரெம்ப நல்லவன் போல பாட்டுப்பாடி அந்த நாட்டில் இன்னொருமுறை வாழ்வதுக்கான அடுக்களைக்கு கட்டமைப்பது ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையில் மிகவும் கஷ்டமான ஒரு கைங்கரியம்.


                                                                            சுவீடனில் இப்பெல்லாம் ஒரு கழுதையைத் தேடி அதுக்குக் குதிரை போல கொம்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம் ஆனால்  எழுத்துவதுக்கென்று  உந்துதல் தரும் பொறியைக் கண்டுபிடிப்பது  பூதக்கண்ணாடி வைச்சு கிண்டினாலும் கண்டுபிடிக்க கஷ்ட்டம் போலிருக்கு  .   


                                            அதில உள்ள குழப்பங்கள் சொல்லும்படியாக நடைமுறைச்சிக்கலை இடியப்பச்சிக்கல் லெவலுக்கு ஆக்கினாலும் வாழ்க்கையை வாழ்ந்தேயாகவேண்டும் என்ற அட்ப ஐடியாவில் வாழும் எனக்கு சுவாரஸ்யமாகவேயிருக்கு,
                          
*                                                            

என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,...

அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !



*


ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் ...

பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை ! 






*

எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு ...

எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !



*

அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது ...

இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்

நான் !




*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு,

வெளியே
கறுப்புப் பகல், !
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !





*



காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,...

தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !



*

இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு ...

காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !



*




எதிர்ப்பில்லாத் திசையில்
பார்ப்பதுதான்
ஒரு
பறவையின் ...

இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !


 *



ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த ...

சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!




 *



பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !...

தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !



*


ஆசுவாசமாக 
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில், 
மூடுமுன் கதவோடு 
உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !



*
ஆக்கிரமிக்கும்
தனிமைப் பார்வையில்
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல
அசாதரணமாகவே
கண்களைத் திறக்கின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !



*
காற்று 
தெருப்புழுதி நெரிசலில் 
என்னவெல்லாமோ
மதிக்கும்படி 
சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !



*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத 
எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ? 



*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு 
மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !