Tuesday 5 January 2016

ஞானப்பிரகாசம் ஹோட்டல்

காலம் என்பது சில நேரம் விரும்பாத நேரத்தில் எதிரும் புதிருமாகக்  கோடுகள் போலக் கோலம் போட்டுவிடும். அதன் வடிவங்கள் மேலோட்டமாகப் பார்க்க அலங்கோலமாக இருக்கும். கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒரு வித அழகு மறைமுகமாக இருக்கும். கூடவே  தவிர்க்க முடியாத வேதனைகளும் வலிகளும் அதன் போக்கில் கடைநிலையில் வழிகளை அடைத்துக்கொண்டும் இருக்கும் .அதிலிருந்து சிலரே மீண்டு வருகிறார்கள்.

                                   எங்களின் ஊரில  எங்கள்  வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி, சந்தியில ஞானப்பிரகாசம் என்ற ஞானத்தோட தேத்தண்ணிக் கடை இருந்தது, அதுக்கு ஞானப்பிரகாசம் ஹோட்டல் எண்டு பெயர்ப் பலகை ஹில்டன் ஹோட்டல் ரேஞ்சுக்கு ,முன்னுக்கு இறக்கிய தாழ்வான பத்திக்கு மேல தொங்கினாலும், அது இருக்கிறது அதிகம் பேருக்கு தெரியாத மாதிரிதான் இருந்தது அந்த ஹோட்டல் , 

                            ஞானப்பிரகாசம் ஹோட்டல்க்கு ஒரு பக்கம் பழமுதிர்சோலை சில்லறைக் கடையும், இன்னொரு பக்கம் அன்னக்கிளி பாண் பேக்கரியும் இருந்தாலும், ஞானப்பிரகாசம் ஹோட்டலில் இருபத்துநாலு மணித்தியாலம் அலறும் ரேடியோவும், பின்னேரம் தொடங்க்கி நடு இரவுவரை ஹோட்டலின் முன்னால்  கொத்து ரொட்டிக்காரன் "  டக்காடா டக்கடா " எண்டு, தண்டவாள தகட்டில ரொட்டி போட்டு உலகம் அதிரக் கொத்துற சத்தமும் கட்டாயம் அதால போற வாற எல்லாரையும் திரும்பிபார்க்க வைக்கும், இரவின் அமைதியில் ரொட்டிக்காரன் கொத்துற சத்தம் எங்களின் வீட்டுக்கே கேட்கும் 
                                         
                              பிரகாசம் எண்டு எல்லாராலும் அழைக்கப்படும், ஞானப்பிரகாசம் மலையகத்தைச் சேர்ந்தவர், ஆனால் பனங்காய் சூப்பின மாதிரி யாழ்ப்பாணத் தமிழ் கதைப்பார் . அந்த நேரம்  நாற்ப்பது ஐஞ்சு சொச்சம் வயசில் இருந்தார். சுமாரான உயரம் உள்ளவர்.  ஆனால் பெருத்த உடல்வாகு அந்த வயதுக்கு அவருக்கு  இருந்த வண்டி பெரிதாக இருந்தது. சிங்களவர் போல சாரம் கட்டுவார்.  அவர் மனைவி சிங்களப் பெண், அவர்கள் எப்படி எங்களின் ஊருக்கு வந்து,ஹோட்டல் தொடக்கினார்கள் எண்டு அதிகம் வரலாறு யாருக்கும் தெரியாது.

                                     பெட்டிசம் பாலசிங்கம் மட்டும் ஞானப்பிரகாசம் ஏன் ஹட்டனில் இருந்து, சின்ன வயசிலேயே கொழும்புக்குபோய்  கொழும்பு ஹபர்ல வேலை செய்து, அங்கே வேலை செய்த நேரம்  சிங்களப் பெண்ணைக் காதலித்து, இலங்கையில் எல்லா இடமும், எல்லா இனமும் வாழக்கூடிய நேரத்தில, எங்கள் ஊருக்கு பெட்டி படுக்கையோட வந்து அந்த இடத்தை எடுத்து வருசக் கணக்கா ஹோட்டல் நடத்திக்கொண்டு இருக்கும் பின்னணி ஓரளவு தெரிந்தவர், 

                                           ஆனாலும் பெட்டிசம், அவர் சமூக அக்கறை சார்ந்து கொஞ்சம் எச்ற்றாவா, அந்தச் சிங்களப் பெண் இன்னொருவரின் மனைவி எண்டும் ,

                        " பிரகாசம் அவளை மருந்து போட்டு  மயக்கி உடுத்த சீலையோட அந்தப் பெடிச்சியை யாழ்பாணம் இழுத்துக் கொண்டு வந்திட்டான் "

                                      எண்டும் அவர் பாணியில் விபரம் சொல்லுவார். அது உண்மையா எண்டு ஊருக்குள்ள யாருக்கும் தெரியாது,  அதைவிட அது பெட்டிசம் பாலசிங்கதைத் தவிர வேறு யாருக்குமே தேவை இல்லாத ஒரு விசியமா இருந்தது.  ஞானப்பிரகாசம்  அவர் பொஞ்சாதியை " நோனா "  எண்டுதான் கூப்பிடுவார் சில நேரம் கோபம் வரும்போது " கழுதை " எண்டு கூப்பிடுவார், அவரோட வாழ்கையத் திரும்பிப் பார்க்கும் நேரம் எல்லாம் , ஆட்களுக்கு முன்னாலேயே கோபமா 

                        "  கேத்தாரமா பஞ்சாலையில் வெசாக் பாக்கப்போன நேரம் இந்தக் கழுதையை மட்டும் சந்திக்காமல் இருந்து இருந்தால் இப்ப நான் இருக்க வேண்டிய இடமே வேற , இந்தக் கழுதை  கலியாணத்துக்குப் பிளான் போட்டு  குழிப் பனியாரத்தை  சீனிப் பாணியில தோச்ச மாதிரி போட்டுப் பினைஞ்சு  கதைச்சு மடைக்கிப் போட்டுதே நாட்டு வழப்பம் தெரிஞ்ச கழுதை  "  என்று திட்டுவார் ,

                                    அந்த நோனா, ஒரு நாளும்  ஞானப்பிரகாசத்தை  ஆட்களுக்கு முன்னால் மரியாதை குறைவா பேசமாட்டா, அதிகம் யாழ்ப்பாணத்  தமிழில் கதைக்கமாட்டா, ஒரு வித குழந்தைகளின்  மொழித் தமிழில் சிங்கள வார்த்தைகள் தவறி விழுவதை  விழுங்கி விழுங்கி  பகுபதம் பகாப்பதம் பிழையாக வசனம் வைச்சு, 

                                " உங்களுக்கு என்னோட வாழ விருப்பம் இல்லை என்றா, ஒரு போத்தல் பொலிடோல, அல்லது ஒரு முழம் தேடாவளயக் கயிறு வேண்டி தாங்கோ,,நான் யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இந்த உலகத்தை விட்டே போறேன்,,இனி என்னால உங்களைக் கட்டி போட்டு  பிறகு பிக்குது பிடுங்குது எண்டு விட்டுப்போட்டு என்னோட அப்பா,அம்மா உள்ள சிங்கள நாட்டுக்கு போறதை விட இங்கேயே சாகலாம் " என்று சொல்லுவா  

                                   " ஓமடி ஓமடி ,,இனி என்னத்தைக் கதைச்சு என்ன வரப்போகுது, கொழும்புக்கு வேலைக்கு வராமல் உடப்புசல்லாவையில் இருந்து இருந்தா,,இப்ப எங்கயும் இரப்பர் தோட்டக் கானியோடு ஒருத்தியைக் கலியாணம் கட்டி,,காலையும் அந்திக்கும் கித்துள் கள்ளுக் குடிச்சுக்கொண்டு இருந்து இருப்பேன் " 

                                " பிறகேன் பன்சாலையில் வைச்சு கண்ணடிச்சுக் காதலிக்கிறேன் ,  சொந்தமா  இரப்பர் தோட்டம் இருக்கு எண்டு ,,அதில பால் வடியுது அது இது எண்டு பொய் சொல்லி என்னோட அப்பா அம்மா சகொதறன்களோடு சண்டை பிடிச்சு இங்க கொண்டு வந்திங்க "

                               " அதுதாண்டி  நான் செய்த மோட்டுப் பிழை ,,என்னோட தமிழ் சாதி சனத்துக்க ஒரு பொம்பிளை எடுத்து இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்குமே "

                             " அட,,அட,,அவளையும் என்னைப்போலதான் அடிச்சுப் பிழிஞ்சு தோச்சுக் காயப் போட்டு இருப்பிங்க,,போங்க நீங்க ,,என்னோட  இனி இந்தக்  கதை கதைக்க வேணாம் "

                              " பார்த்தியே உனக்கு வாய் கபரக்கொய்யாவுக்கு நீளுற மாதிரி நீண்டுகொண்டு வருகுதே ,,வாயைப்பொத்திக்கொண்டு போ,,எனக்கு விசர் வரப் பண்ணாதை ,,நான் பாணந்துறை ஓசிக் கொறியாவின்  சண்டியங்களுக்கே அழுத்மாவத்தை சந்தியில் வைச்சு சுருள் வாள் எடுத்துக்கொண்டு போய் வெளுத்தனான் , இண்டைக்கு வெள்ளிக்கிழமை அதால சொல்லுறேன்  என்  கையாலயே  அடிவேண்டிச் சாகாதை "

                                                    என்று திட்டுவார். ஞானப்பிரகாசம், உண்மையில அவளவு சண்டியனா என்று தெரியாது , கட்டின  மனுசியை வெருட்டுற ஆம்பிளைகள் எல்லாருமே இப்பிடி வாள் எடுத்து வீசி சண்டித்தனம் செய்த மாதிரி வாயால கதைப்பது வழமை . ஆனாலும் விதி என்பதுதே மைதானங்களை நாங்களாவே தேர்ந்தெடுக்க முடியாத , எழுதப்பட்ட  ஆட்ட விதிகள் இல்லாத விளையாட்டு. அது முடியும் போதுதான் வெற்றி தோல்வி என்பதே தெரியவரும் . உங்களுக்கும் எல்லாருக்கும் போல ஞானப்பிரகாசத்துக்கும் அதில விதி விலக்கு இல்லை .  

                                  குள்ளமான உருவம் உள்ள ஞானப்பிரகாசம்,  ஹில்டன் இண்டர்னசினல்  ஹோட்டல் முதலாளி போல எப்பவும் கசியரில் ஏறி இருந்து , உள்ளங்கை கை ரெண்டையும் ஒன்றோட ஒன்று தட்டிக்கொண்டு ஜோசிதுக் கொண்டு இருப்பார், அல்லது வெளிய கடைக்கு முன்னால ஒரு மர ஸ்டூல் போட்டு அதில காலுக்கு மேல காலைப் போட்டு,  அதை ஆட்டிக் கொண்டு, பிரிஸ்டல் சிகரட்  குடித்துக்கொண்டு இருப்பார்,ஞானப்பிரகாசம் பிரிஸ்டல் சிகரட் தவிர வேற எந்தவகை சிகரட்டும் குடிக்க மாட்டார், அவர் குடிக்கும் பிரிஸ்டல் சிகரட்டிலேயே அரைவாசிதான் பத்துவார்,,மிச்ச அரைவாசியை சுண்டி எறிவார்.

                                            சில நேரம் எங்கள் ஊரில இருந்த உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர் எப்பவும்  கனகலிங்கம் சுருடுப் பத்திக்கொண்டு  ஞானப்பிரகாசத் துக்கு முன்னாலா நிலத்தில குந்தி இருக்க , ஞானப்பிரகாசம் புகையை நல்லா உள்ளுக்க இழுத்து, ஊட்டிக் குளிர் போல  ஊதி வெளியவிட்டு கொண்டு " எப்படி பிசினஸ்ஐ டெவலப் ஆக்காலம் " எண்டு விளக்கமா  உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர்க்கு சொல்லிக்கொண்டு இருப்பார். 

                                       ஞானப்பிரகாசம்  ஒருநாளும் ஒரு வேலையும் ஹோட்டலில் செய்ததை நான் கண்டதே இல்லை ,ஒருவேளை அவர் " பிசினஸ்ஐ டெவலப் " ஆக்கிற சிந்தனையில் மூளை எந்த நேரமும் வேலை செய்துகொண்டு இருந்ததால் மற்ற வேலை செய்ய நேரம் இருக்காமல் இருந்து இருக்கலாம் எண்டு நினைக்கிறேன் . ஒருமுறை அவரோட நோனாவை 

                                 " ஏன் உங்க மாத்தையா இருந்த இடத்தில இருந்து வேலை எடுகிறார் ,உங்களுக்கு ஒரு உதவி செய்வதில்லை,,நேரம் காலம் இல்லாமல் நீங்க கிடந்தது நாலா முறியிரிங்க,பார்க்கவே ஒரு மாதிரி  இருக்கு ,  " 

                                           என்று கேட்டேன். அவா அதுக்கு 

                              "என்னை எப்படி நடத்தினாலும்  எண்ட மனுஷன் நல்லவர்  ,அவரை நான் கஷ்டப்படுத்தாமல் வைச்சு இருக்க வேணும் எண்டு விருப்பம் ,உண்மையில் அந்தாள் ஒரு  பாவம் ,,அயின்செக்க மினியா எண்டு சிங்களத்தில சொல்லுறது இப்பிடி ஆட்களைத்தான் "

                                          எண்டு சொன்னா. 

                                                தொண்ணுறுகளில் யாழ்பாணத்தில் சண்டை அமோகமா நடத்த நேரம் கரண்ட் இல்லாமல் பல வருஷம் யாழ்ப்பாணமே ஒளி இழந்த நேரம், அரிக்கன் லாம்பும், பெட்ரோல்மக்ஸ்உம் விழியாக, கார், லொறி பட்டறி இலயும் , ஜெனறேடரிலையும் மின்சாரம் இயங்கிய நேரம், ஞானப்பிரகாசம் கடையில, லொறி பட்டறியில் கரண்ட எடுத்து எந்த நேரமும் ரேடியோ பாடும் ,நாங்கள் விரும்பும் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் உள்ள  கெஸட் கொண்டுபோய் கொடுத்தா அதையும் போடுவார். 

                                         ஆனால் இரவு எப்படியும் லண்டன் பி பி சி தமிழோசை செய்தி போடுவார், அதைக் கேட்கவே நிறையப்பேர் அவர் கடைக்கு முன்னால வந்து நிற்பார்கள். அது முடிய எம் யி ஆர் , சிவாயி பழைய பாடல்கள்தான் இருட்டோடு இசைவாகிக் காற்றில் மிதந்து இரவின் மடியில்த் தாலாட்ட ,அந்தப் பாடல்களும் விட்டு விட்டு எங்களின் வீடுக்கு வரும்.  ஆனாலும் அபத்தமாக  சிலநேரம்

                       " நீர் மேகம் ஆனால் என்ன.... நான் தோகை ஆனா பின்னே....  " 

                        என்று பாடல் தொடங்க, கொத்து ரொட்டிக்காரன் டக்காடா டக்கடா எண்டு கொத்த தொடக்க, கொஞ்சநேரம் தகர சத்த தனி ஆவர்த்தனம் சத்தம் மட்டும் கேட்டு , அவன் கொத்துரத்தை நிற்பாட்ட ,

                              ."...மயில்த் தோகை எண்ணம் கண்டேன் மான் விழியே ....."  

                         எண்டு பாடலின் கடைசி வரிகள் தெளிவாக வந்து , அந்தப் பாடல் அடிவேண்டியே இறந்து போகும், அதுக்கு ஓசியில் பாட்டுக்கேக்கிற நாங்கள் ஒரு குறையும் சொல்ல முடியாது ,ஞானப்பிரகாசம் ஹோட்டலில் இருபத்து நாலு மணித்தியாலம் அலறும் ரேடியோ போடுறது பிஸ்னஸ் டெவெலப் பண்ண. எங்களுக்கு ஓசியில் மெல்லிசை மன்னரின் இன்னிசை மழை பொழிவதுக்கு இல்லையே ...சொல்லுங்க பார்ப்பம். 

                                                    ஞானப்பிரகாசம் ஹோட்டல் இயங்க முக்கிய காரணம் நிச்சயமா ஞானப்பிரகாசம் இல்லை.  அவரின் சிங்கள  மனுசிதான் அதை நாரி முறிய முறிய நடத்தினா, அவாதான் கண்ணுக்கு நெய் விட்டு , முன்னுக்கும் பின்னுக்கும் ,குசினிக்கும் டீ பட்டறைக்கும் ,கசியர் மேசைக்கும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கும் அந்த மனுஷி  மிகவும் பிரயாசையானா பெண்மணி , 

                                            கொத்துக்காரனுக்கு அடுப்புக்கு விறகு குறையுது எண்டால் பின்னால அடி வளவில, அடுக்கி இருக்கிற பெரிய மரக்குத்தியை இழுத்துக் கொண்டு வந்து, கோடாலியால பளார் பாளர் எண்டு பாலைக் குத்தியப் பிளப்பா, பிளந்திட்டு ஓடி வந்து டீ அடிப்பா, கொதிதண்ணி அடுப்புக்கு கரி அள்ளிப் போட்டுடு , கையை துடைச்சுப்போட்டு கொதிக்கிற எண்ணையில் வாய்ப்பன் போடுவா, கையை துடைச்சும் துடைக்காமலும் ஓடி வந்து கசியரில் காசு எடுப்பா,ஒரு கையால சடக்கு சடக்கு எண்டு மரக்கறி வெட்டி கொண்டு மற்றக் கையால கறிக்கு உப்பு புளி பார்ப்பா ,சடார் புடார் எண்டு சாம்பாரு வைப்பா,வடைக்கு ஓட்டை போடுற நேரமே , உரலில சம்பல் இடிப்பா, பெட்ரோல் மக்ஸுக்கு காத்து அடிப்பா, அடிச்சுப்போட்டு, டக்கெண்டு சாப்பாடு மேசை எல்லாம் துடைப்பா, வெறியில  வந்து வம்புக்கு   " பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்.. ....  ..  " எண்டு பாடிக்கொண்டு  வந்து அட்டகாசம் செய்கிரவங்களை பிடிச்சு தள்ளிக்கொண்டு வந்து வெளிய போடுவா,

                                              இதெல்லாம் இயல்பா நடக்கிற நேரத்தில்  ஞானப்பிரகாசம், கடைக்கு முன்னால மர ஸ்டூல்ல காலுக்கு மேல காலைப் போட்டு,அதை ஆட்டிக் கொண்டு,பிரிஸ்டல் சிகரட் குடித்துக்கொண்டு ,புகையை நல்லா உள்ளுக்க இழுத்து, ஊதி வெளியவிட்டு எப்படி பிசினஸ்ஐ டெவலப் ஆக்காலம் எண்டு விபரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார். 

                                            அந்த ஹோட்டலில் அவர்களின் உறவுக்காரா சுரேஷ் எண்டு ஒரு பையன்தான் சப்பிளையரா வேலை செய்தான் ,அவன் யாரவது டீ ஓடர் பண்ணினா முன்னுக்கு நிண்டு

                      " மாமி ஒரு பிளேன் டீ "

                           எண்டு கத்துறது செம்மணி வயல் வெளிகளில் ஆட்காட்டிக் குருவி தாழப்பறந்து கிரீச் கிரீச் எண்டு காத்தில ஏறிக்  காது  கிழியக்  கத்துறது போலக்  கத்தி ஓடர் கொடுப்பது எங்களின் சந்தியில் இருந்த  சுப்பிரமணியம் கடைக்குக் கேட்கும், மாமி குசினில நிண்டு

                         " ஏண்டா சுரேஷ் சாகப்போற  மாதிரி கத்துறாய்,  மெதுவா சொல்லடா "

                              என்று கிணத்துக்க நின்று கத்துற மாதிரி  கத்துறதுசுப்பிரமணியம் கடையில் இருந்து ரெண்டு வீடு தள்ளி இருந்த எங்களின் வீட்டுக்கே கேட்கும், இருவரும் கதைச்சுப் பேசி அந்த அகோர சத்தத்தை ஒருநாளும் குறைத்தே இல்லை. 

                                            ஞானப்பிரகாசம் ஹோட்டல் வாய்பன் நல்ல ருசி , பிரகாசம் மனுஷி குசினியில வாய்ப்பன் போடுறது, கிரிகெட் பிளையர் ஸ்பின் போல் போடுறமாதிரி இருக்கும். கையில வாழைபழம் பிசைந்த புளிச்ச வெள்ளைமாவை கிள்ளி, உள்ளங்கையில அமத்தி , மோதகம் போல ஒரு சுழட்டு சுழட்ட , அது சுழன்டுபோய் எண்ணையில சுழண்டு விழந்து, அதிலயும் கொஞ்சம் கிடந்தது சுழண்டு , உருண்டையா பிரவுன் கலரில வாய்பன் வரும் ,

                                               நானும் ஒருநாள்,

                                 " மாமி , நானும் வாய்பன் போட்டுப பார்க்கவா "எண்டு கேட்டேன்,

                     " அதுக்கென்ன செய்து பாருமன் " எண்டு சிம்பிளா சொன்னா,

                          நானும் சிம்பிளா புளிச்ச வெள்ளைமாவை கிள்ளி ,உள்ளங்கையில அமத்த அது விரல் இடைவெளிக்கால பிதுங்கி வெளியவர, சுழட்டோ சுழட்டு எண்டு சுழட்டியும், கடைசியில கையை உதறியும் வாய்ப்பன் மா கையையே விட்டுக் களரவில்லை, அவா சிரிச்சுக்கொண்டே

                             " பெடியா உனக்கு வாழகையில சமையல் வேலை சரியே வராது " எண்டு சொன்னா , நான் அதை அப்ப பகிடியா நினைச்சன்,,அதுவே என் வாழ்கையில் இப்பவும் விளையாடும் விந்தைக்கு பெயர்தான் விதி..

                                             தொண்ணுற்றி ஐந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கையில் யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த போது , நாங்களும் இடம்பெயர்ந்து வன்னிக்குப் போன போது,ஒருநாள் ஞானப்பிரகாசதை கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் உள்ள மதவடியில் கண்டேன், கவலையா கையைக் கட்டிக்கொண்டு பகலிலேயே நுளம்பு அடிசுக் கொண்டிருந்தார்.  அடுத்தது என்ன செய்யுறது எண்டு தெரியாத மாதிரி , நாடியைத் தடவிக்கொண்டு வாய்க்கால் தண்ணி ஓடுறதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்  

                                            " கிட்டப் போய், " என்ன முதலாளி என்ன நடக்குது , என்ன பிளான் ,ஹோட்டல் இங்கயும் திறக்கிற பிளான் ஒண்டும் இல்லையா " எண்டு கேட்டேன்,

                             " ஹ்ம்ம்,, இங்க பட்டப் பகலிலேயே நுளம்புக் கடி தாங்க முடியவில்லை ,,இங்க என்னத்தைப் பிடிச்சு என்னத்தை செய்யுறது "

                                     "  ஆனால்,நீங்க சும்மா இருக்க மாட்டிங்களே "

                                   " அது உண்மைதான்,,,சமையல் சட்டி பானை எல்லாத்தையும் விட்டுப்போட்டு வந்து நிக்குறன்,,இனி எல்லா அடுக்குகளும் புதுசா வேண்டி எல்லோ வேலை தொடங்க வேண்டும் "

                                    " ஹ்ம்ம் "

                                   " கதிரை,மேசை,சோக்கேஸ், தேத்தண்ணி பொயிலர் , கொத்து ரொட்டி போட கொத்து மேசை எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இப்ப போகப் போகுதே,,,கையில காசும் அந்தளவு  இல்லை  "

                                   "   ஹ்ம்ம் "

                            " எல்லாம் ,இந்த சிங்கள மனுசியைக் கட்டினதால  வந்தது,,இல்லாட்டி  கொழும்புக்கு வேலைக்கு வராமல் உடப்புசல்லாவையில் இருந்து இருந்தா,,இப்ப எங்கயும் இரப்பர் தோட்டக் கானியோடு ஒருத்தியைக் கலியாணம் கட்டி,,காலையும் அந்திக்கும் கித்துள் கள்ளுக் குடிச்சுக்கொண்டு இருந்து இருப்பேன் "

                                    " இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்,,இது இராணுவ நடவடிக்கையில் இடப்பெயர்வு,,எல்லாரும்  தானே இப்பிடி திக்கு திசை தெரியாமல் வன்னிக்குள்ள வந்து நிக்கிறம் "

                                 " அதுவும்,,சரிதான்,,, இப்படி நடக்கும் எண்டு முன்னமே தெரிஞ்சு இருந்தா ,,முருகண்டி,,முழங்காவில் பக்கம் ஒரு பிரான்ச் திறந்து இருக்கலாம்,,இப்ப எல்லாத்தையும் பறிகொடுதுப்போட்டு தேத்தண்ணி பொயிலர்   பத்த வைக்க நெருப்புக் கொள்ளியும் அடுத்த மனுசரிட்டக் கடன் வேண்ட வேண்டி இருக்கே "

                                " ஆனால்  உங்கட நோனா சும்மா இருக்க மாட்டவே "

                              " அவளோ,,இங்க நுளம்பு ஒரு பக்கக்  காதுக்க கிண் கின் கிண் கின் எண்டு புறுபுறுக்க நோனா மற்றக் காதுக்க கடை எடு கடை எடு புறுபுறுக்க எனக்கு இரணைமடுக்குளத்துக்க குதிச்சு சாகலாம் போல இருக்கு "

                                   "  ஒ அப்ப நோனா இங்கேயும்  அடியடா பிடியடா எண்டுதான் நிக்குறா போல ,,அவா நல்ல பிரயாசை ,,இங்கேயும் கடையை நடத்துவா போல இருக்கே "

                             " அதுக்குதான் வேலை நடக்குது ,  மனுஷி கிளிநொச்சி பழைய சந்தைக்குப் பின்னால ஒரு இடம் எடுத்து இருக்குறா , வேலை நான் பிளான்  போட்டுக் கொடுத்த  மாதிரி நடக்குது . 

                             " அப்ப நீங்கள் கிட்ட நிண்டு கைக்கு உதவியா நிக்கலாமே "

                             " அதுதான் பிளான் போட்டு நோனாவிட்ட கொடுத்திட்டனே "

                                    "  ஹ்ம்ம் " 

                                    " இடம்பெயர்ந்த சனம்களிட்ட ஹோட்டலில் போய்   காசு  கொடுத்து சாப்பிட வசதி இங்கே அதிகம் இல்லப்போல  நிலவரம்  கிடக்குது ,எண்டாலும் எனக்கு இப்ப ஹோட்டல் நடத்துறதை விட்டா வேற வேலை தெரியாதே , "

                                        " அதுவும் ஒரு பிரச்சினை தான் ,,நிவாரண அரிசியையே சனம்கள் செலவுக்கு காசு இல்லாமல் கடைக்கு அறவிலைக்கு  விக்குதுகள் "

                                       " இந்த நோனாக்  கழுதையைக் கலியாணம் கட்டி யாழ்பாணம் ஒளிஞ்சு ஓடி  வராமல் இருந்திருந்தா,இப்ப கொழும்பு ஹாபரில  அரசாங்க வேலையில  இருந்து பென்சனும் எடுத்து இருக்கலாம்,,,"

                                   " மறுபடியும் தொடங்கிட்டிங்களா ,,இதை நிற்பாட்டிப்போட்டு நடக்கிறதைப் பாருங்க "

                                      " அதுதான் இடையில  தாலி அறுந்து போச்சே ,,,சரி  வாவன் பொடியா உனக்கு இப்ப கட்டுற கடையக் காட்டுறன் "

                 என்று  விரக்தியா சொன்னார் , நானும் என்ன நடக்குது என்று பார்க்கப் போனேன், 

                                      கிளிநொச்சி பழைய   சந்தைக்குப் பின்னால, ரெயிலே தண்டவாளம் ஒரு காலத்தில் போட்டு இருந்த இடத்தைக் கிரவல் மண் போட்டு நிரவிய  காட்டு பகுதியில முதிரை மரத்துக்கு கீழ ஒரு கொட்டில் ஏறக்குறைய போட்டு முடிஞ்சு ,ஞானப்பிரகாசதிண்ட மனுஷி ஒரு மேசைக்கு மேல ஏறி நிண்டு, இடுப்பில பனை ஈக்கை செருகிக்கொண்டு, வாயிலயும் கொஞ்சம் பனை ஈக்கை கவ்விக்கொண்டு, மேசையில விழுகிற மாதிரி பலன்ஸ் பிடிச்சு நிண்டு தென்னம் கிடுகு ஓலை அடுக்கி அடுக்கி கூரைமேய சப்பிளையர் சுரேஷ் கீழ நிண்டு ஒவ்வொரு ஓலையா

                        " மாமி பிடிடியுங்கோ பிடியுங்கோ மேசை விழப்போகுது " எண்டு மெதுவா சொல்ல ,

                       மாமி " ஏண்டா சுரேஷ் அவசரப்படுதுறாய் " எண்டு மெதுவா, குரலே இல்லாத மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தா.அந்தக் கொட்டில் பார்க்க மாட்டுக்  கொட்டில் போல இருந்தது ,அதைத் தேத்தண்ணிக்  கடை போல ஆக்குவதுக்கு இன்னும் எவளவோ முதலீடுகள் செய்ய வேண்டும் போல இருந்தது . 

                                                     ஞானப்பிரகாசம் பக்கத்தில பாட்டில விழுத்திப் பிளந்து  இருந்த ஒரு தென்னங் குத்தியில குந்தி இருந்து ஒரு ஆர் வி ஜி பீடியைப் பத்த வைச்சுக் கொண்டு ஜோசித்தார். அவரிடம் இருந்த  முதலாளிக்கு உரிய களை இறங்கி இருந்தது. சேட் கொலரைக் காற்று உள்ளுக்கு இறங்கி விளையாடக்கூடிய மாதிரி நல்லா உயர்தி விட்டு  கட்டி இருந்த சாறத்தால முகத்தைச் துடைசார் .  நான் 

                                         " என்ன முதலாளி  பெரிசாக் கப்பல் கவுண்ட மாதிரி ஜோசிகுரீங்க ,பிறகென்ன கிட்டதட்ட கடை போல வந்திட்டுதே கொட்டில் " 

                                           எண்டு சிரிச்சுக்கொண்டு  கேட்டேன் ,

                              " இல்லை , சும்மா கடை போல வந்து பிரிஜோசனம் இல்லையே,,இதை ஞானப்பிரகாசம்  ஹோட்டல் போல ஆக்க வேணுமே , ஆக்கி  பிறகு இந்த யானைக்  காட்டுக்குள்ள எப்படி பிஸ்னஸ்ஐ டெவெலப் ஆக்கலாம் எண்டு ஜோசிகுரன் " 

                                         எண்டு சீரியஸ் ஆகப்  பதில்  சொன்னார் .
.
.

பஞ்சு அருணாசலம்.

செட்டிநாட்டில்,அதிகம் அறியப்படாத ஒரு கிராமத்தில் அரிசி மில் நடத்திக்கொண்டு இருந்த ,சினிமா, இசை ,பாடல்கள் இன் கவர்சியால் கவரப்பட்டு, சென்னை வந்து கவிஞ்சர் கண்ணதாசனுக்கு உதவியாளராய் இருந்து அவர் சொல்ல சொல்ல பதினைத்து வருடங்கள் பக்கத்தில் இருந்து பாடல்களை எழுதிக் கொடுத்து ,கண்ணதாசனுக்கு எடுபிடிபோல வெத்திலை பாக்கு மடித்துக் கொடுத்து , பாடல் எழுதும் வித்தையைக் கண்டு பிடித்து, ,தற்செயலாக " பொன் எழில் பூத்தது பூஞ்சோலை... " என்ற பாடலை மக்கள் திலகத்துக்கு எழுதி அன்று முதல் பாடலாசிரியர் ஆகி ,

                                                      கவிஞ்சர் வாலி மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிய பாடல்கள் எழுத வாய்ப்பு அற்று இருந்த நேரம் அவரை அழைத்துவந்து தன்னோட " வைதேகி காத்திருந்தாள் " படத்தில் " ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சம் காற்றாடி போலாடுது " என்று இளையராஜாவுக்கு எழுதவைத்து தமிழ்நாட்டை அந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கவைத்து ,சொந்தமாகவே அவரே நிறையப் பாடல்கள் எழுதிக்குவித்த,

                              கவிஞ்சர் கண்ணதாசனின் மூத்த சகோதரரின் மகன் பஞ்சு அருணாசலம்.
  அவர்தான் காமடி நடிகர் விவேக் என்ற விவேகானந்தனை, விவேக் செய்துகொண்டு இருந்த அரசாங்க வேலையை விட்டு விட்டு முழு நேர நடிகன் ஆகு என்று நம்பிக்கை கொடுத்த...

                               தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை எழுதி,பாடல்கள் எழுதி , யாருமே நம்பிக்கை அற்று இருந்த நேரம் இளையாராஜா என்ற இசை அமைப்பாளரை முதல் முதல் இனம் கண்டு " அன்னக்கிளியில் " அறிமுகம் செய்து கமலஹாசன் ,ரஜனிகாந்து கால் ஊன்ற கதைகள் எழுதி தானே அதை படமாகத் தயாரித்த பஞ்சு அருணாசலம் செட்டியார் ,,,

                                  திரைக்கதை எழுதுவது கடினம்,,கதை,கவிதை,நாவல் எழுதுவது போல அதை எழுத முடியாது,விஷுவலா வெள்ளித்திரையில் வருவது போல சம்பவங்கள் ,திருப்பங்களை வைச்சு பார்பவர்களை தியேட்டர் கதிரையை விட்டு எழும்பிப் போகாமல் எழுதவேண்டும். அவர் எழுதிய " மேலோன்சொளிக் ஸ்டைல் " திரைக்கதை " ஆறில் இருந்து அறுபது வரை,," அதேபோல " மெலோராமிக் ஸ்டைலில் " எழுதிய திரைக்கதை " கல்யாணராமன்" ,இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். இந்த இரண்டு படமும் ஒரு கிழமையில் ஒரே நேரத்தில் திரைகதை எழுதப்பட்டு,ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது என்று சொல்லுறார்கள் .பஞ்சு அருணாசலம் அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து கொண்டுதான் திரைக்கதை எழுதுவாராம்

                                     அன்னக்கிளி பாடல்களை இளையராஜா எந்தவித வாய்தியமும் இல்லாமல் மேசையில் தட்டி கிராமத்தில் நெல்லு அறுக்கப் போகும் பெண்களின் தெற்கில் இருந்து வந்த நாடோடித் தென்றல் நின்று நிதானமா அள்ளிக்கொடுத்த " அன்னைக் கிளி உன்னை தேடுது ஆறு மாதம் ஒருவருடம் ஆவாரம்பூ மேனி வாடுது..." என்று தான் போட்ட மெட்டுகளை அவரே பாடிக்காட்டி இருக்கிறார்.அந்தப் பாடல்கள் தந்த தொடக்கம் இன்றுவரை இளையராஜாவை தேட வைக்கும் வரலாற்று சம்பவத்தை தமிழ் சினிமாவின் இசை அத்திவாரக் கற்களின் ஆத்திசூடி ஆக்கிக் காடியவர் பஞ்சு அருணாசலம்.

                              அரிசி வியாபாரம் செய்துகொண்டு இருந்த இந்த சாதாரண மனிதர் மட்டும் இல்லை என்றால் இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைக்காமலே போயும் இருக்கலாம். ஜோசித்துப் பார்த்தால் சாதாரண மனிதர்களின் அசாதாரண தன்நம்பிக்கையில் தான் வரலாறு பொன் எழுத்துகளைத் தேடி எடுத்து திசை திரும்புகிறது....


.