Wednesday 16 May 2018

தனியிரவு !

கவிதைகள்  எழுதவைக்கும் சந்தர்ப்பங்கள் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை . இன்றைய இந்த  அவசர வாழ்க்கை  தன்னைச் சார்ந்து இருப்பவனை எல்லா நேரத்திலும் படைப்புத்  துடிப்புடன் இருக்க அனுமதிப்பதில்லை.   பல சமயம்  எதுக்கு எழுதவேண்டும் ?  என்று அங்கலாய்க்க வைத்து , இன்னொருசமயம்  உச்சக்கட்ட  வேகத்துடன் இயங்க வைக்கும். 

                                                          மொழி இன்னொரு பிரச்சினை , சில சமயம் ஒரு காலத்தில் படித்த இலக்கிய,இலக்கண அடித்தளத்திலிருந்து அமர்க்களமான சொற்கள் நினைவுக்கு வரும், இன்னொரு சமயம்  இன்னொரு கணத்தில் நினைவுத்தடம்  மந்தமானவை ஆகிவிடும்  . ஒவ்வொருமுறையும் நினைப்பது இதைவிடவும்  இன்னமும் செறிவான அர்த்தமுள்ள  கவிதைகளை  எழுத வேண்டும் என்று . அந்தத் திருப்தியின்மைதான் இன்னும் இன்னும் எழுதவைக்குது. .

                                                             2016 இலும்    2017 இலும்  முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   எல்லாவற்றையும் புத்தகம் ஆக்கும்  ஒரு திட்டத்துக்கு முன் முயற்சியாக  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகின்றேன்.


முடிக்கப்படாத
பிரச்னைகளில் தான்
நேற்றுக்கும்,
நாளைக்கும்
அர்த்தமிருக்குது போலிருக்கு

நம்பமுடியாதவாறு
பின் வந்துதொடரும்
அனுபவத்தோடு
முரண்டுபிடிக்க விரும்பாமல்
என்பாட்டில்
போக எத்தனித்தேன்.

....................................................


பச்சை விளக்கை
நிறுத்த அவதியாகி
மஞ்சளில் கடக்க நினைத்தவன்
சறுக்கினான்,

மூக்கு அழகான
கிழக்கு ஐரோப்பியப் பெண்
ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாள்,

வெறித்து பார்த்த
ஜன்னலிலிருந்து
ஒருவன்
இருமித் துப்பிக்கொண்டிருந்தான்!

...............................................

ஓ,,,மனசே
ஓட்டிகொள்ளாத
இரண்டு கோணங்கள்
எப்போதும் வேண்டுமென்பதை
சங்கீதங்கள்தான்
ஆத்மாவைப் பிசைந்து
சொல்லித்தரவேண்டுமா ?
வாதாபிகனபதேம்
இன்றைய காலையை
ஹம்சத்வனியில் தொடக்கியது!
கடந்த பாதையில்
இத்தனை தடுமாற்றங்களா
நினைக்கவே
ஆயாசமாக இருக்கிறது!
அலைச்சல் நாட்களுக்குப் பிறகு
வரும் ஓய்வில்
ஆரபி இராகம்
சாடிஞ்சனே ஓமனசாவில்
எங்கேயோ ஆரம்பித்ததை
எங்கேயோ இணைக்கும்
பிராயத்தனங்கள் !
குத்துமதிப்போடு
ஏக்கமாக எதிர்பார்த்ததெல்லாதையும்
இந்தாபிடி என்று அள்ளிக்கொட்டுது
கீர்த்தனைகள் !

....................................................................


ஏதோவொரு
வானவில் நிறத்தில்
ஏதோவொரு பூவைப் பார்த்துக்கொண்டு
ஏதோவொரு அந்நிய மொழியில்
வாழ்தல் பற்றிக்
கதைத்துகொண்டு
ஏதோவொரு
வரைவிலக்கணத்தில்
அர்த்தங்களை
மட்டமாக மொழிபெயர்துக்கொண்டு
விலகலைவிலத்தி நகரும்
இந்த நொடியிலும்
ஓர்
உணர்வுப் பிணைப்பை
நிசப்தங்களுக்குள்ளாக
நுழைத்து  வெளியேற்றி
ஏற்படுத்தியேவிட்டது
கடைசியான
உன்
பெருமூச்சு !


............................................................................


எப்போதுமென்
நம்பிக்கைக்குரிய பிசாசு
தன்
திருமணமுறிவு பற்றி
ஒருநாள் என்னிடம் புலம்பியது!

ஒரு
ரத்தக்காட்டேரி திருவிழாவில்
தன்
காதலி பசாசைச் சந்திச்சுதாம்!

ஒரு
பரிபூரண அமாவாசை இரவு
சவுக்கம்தோப்பு மயானத்தில் வைச்சுக்
காதலை சொல்லிச்சாம் !

பிறகு
சாத்தான்கள் வேதமோத
இரத்தத்திலகமிட்டு
தேடாவளயத்தில் மூன்று முடிச்சுப்போட்டு
ஒரேயொருவருடம்
புளியமரமொன்றில் தனிகுடித்தனமாம் !

பிறகு வந்ததுதான்
செய்வினை சூனியமாம் !

பக்கத்து முருங்கை மரத்தில்
தனியாகத்தொங்கிகொண்டிருந்த
வேதாளன் என்ற கட்டழகனுடன்
கள்ளத்தொடர்பாம் !

அகோரப்பற்களை
நறநறநறநறநற வென்று நெரிச்சு
குரல்வளையை அறுத்துப்
பழிவேண்டப்போவதாக சபதம்செய்தது !

பிசாசின்
வேதாள  விபரிப்புகளில்
எனக்கு நம்பிக்கை வரவில்லை !

உன்
காதலுக்கும் கலியாணத்துக்கும்
இறுக்கமான ஆதாரம் என்னவிருக்கென்று கேட்டேன் !

பிசாசு
சடாரென்று உருவி எடுத்துக் காட்டிய
நடுநிசிப்   படத்தில
ஒரு
சவக்குழிக்குக்கு மேலே
இதழ்களை ஒட்டிவைச்சு முத்தமிட்டபடி
பிசாசும் பசாசும் நெருக்கமாக
மன்மதனும் ரதியும் போலிருந்தார்கள் !

அந்தப் படம்
மங்கிய கறுப்பிலும்
வெளிறிய வெள்ளையிலுமிருந்த போதும்
மதன சந்தோஷங்கள்
அதிகப்படியான
நிறங்களை அள்ளிக்கொட்டியது  .

....................................................................

பாதைக்குக் குறுக்காக
போலீஸ்காரன்
வெறித்துப்பார்க்கும் பார்வையில்
துவேஷத் தூவானம்,


தோல்வியைப் பாடும்
தெருப்பாடகனின்
பூனைக் கண்களில்
நம்பிக்கை !

..............................................

பிரத்தியேக வாசனையோடு
கும்பலாகப் கடக்கும்
பதின்வயதினரிடம்
பொறுப்பற்ற  சிரிப்பு.

புகைபிடிக்க
குடிவரவுக்  கட்டிடடத்துக்கு
முன்னால் நின்ற
நிறைவேற்று அதிகாரி
என்னைவிட அகதிபோலிருந்தார் !

.......................................................

என்னைச் சுற்றி
எனக்குத் தேவையான
எதுவுமே
நடக்காததுபோல
ஒடுக்கமாக
நழுவிக்கொண்டிருக்கிறேன்..

............................................................

புறக்கணிக்கப்பட்டிருக்கும்
வாசலெங்கும்
வெயில் விழுந்து
இன்னும்
ஈரம் உலராத
புழுதியின் விரிப்பில்
மிச்சமாயிருக்கிறது
ஒரு
மழையின்
கவிதைத் தொகுதி.....

...............................................................


தனியாகக்
குறுக்கிக்கொண்டு
மழை அழுதுமுடித்த கணம்
நடைப்பாதையில்
வட்டமாகத்
தேங்கும் தண்ணியில்
முகத்தைப் பார்த்தால்
ஞாபகம் வரும்,
பூர்வீக வீட்டுக்
கட்டுக்கிணறு

......................................................


சுழல் காற்றின்
தாண்டவத்தில்
தவறி
விழுந்த பூக்களின்
வாசம்
அவைகளின்
நினைவுகளை
உயிர்வாழ வைக்க
மரத்துக்குத்
தேவையாக இருக்கிறது....

.................................................................................

பால்
நிலவு நாட்களில்
பாக்குமரங்களின்
நிழலசைவுகள்
குளிக்கும் தொட்டியில்
முங்கி இறஙகி முழுகி விளையாடும்,
விடிவை முந்திய
காலை
பாதிவரை தேய்ந்த படிக்கல்லில்
வாசசந்தனம் அரைக்கும்
பாட்டி ஞாபகம் ,

.........................................................

புயல்
வீசத் தொடங்கிய
பொழுதில்
பாதிக்கப்பட்டு
மலராமலே
சின்னாபின்னமாகி
விடுமோவென்று
அச்சப்படுவது
போலிருந்தது
மொடுக்களுக்கு

............................................................

ஒரு
திருக்கார்த்திகை
விளக்கீட்டுநாள்
தட்செயலாகத் தவறிவிழுந்த
பித்தளை சொம்பு
நீர் மொண்டு அமிழ்ந்துவிடும் ,

மனஅழுத்த நாட்களோடு
போராடிக்கொண்டு
தோய்கல்லில
யோசித்து உட்கார்ந்திருந்த
பெரியக்காவின்
உயிரோடிருந்த வருடங்கள்
ஞாபகத்திலேறிவரும் !

...............................................................

உதிர்ந்து விழுந்த
இலைகளும்
மலர்களும்
உரையாடுவதைக்
கேட்காமல்
வேடிக்கை
பார்த்து விட்டுச் செல்லும்
திசைகளின் காற்று
இன்னுமொருமுறை
விருட்சத்தை
சுழற்றுகிறது..

.....................................................

பார்த்திங்களா
மழை
அள்ளிக்கொட்டிப்போட்டு
தவறவிட்ட எல்லாவற்றையும்
கூட்டிப் பெருக்கி எடுத்ததால்
நினைவுகள்
தாழ்வாரங்களில்
சொட்ட
நேற்று
ஒருநாள் மட்டும்
எங்கள் வீட்டுக்
கட்டுக்கிணற்றடியில்
நிறைவாக வாழமுடிந்தது.

..................................................

மலர்களின்
அவல ஓசைகள்
கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
அடைத்து
கண்களை மூடிவிடுகிறது
அதிகாலைப்
பூச்சிகள்.

.................................................................


நிறைமாத மேகத்துக்கு
பிரசவ இடமொதுக்கும்
வானம்,

ஒழித்துப் பிடித்து விளையாடும்
ஒட்டுப்பொட்டு
நட்சத்திரங்கள்.

உருப்பெருக்கிக் கொண்ட
அலைகளின் விளிம்பில்
கடல்

கட்டாக்காலியாக அலைச்சலுறும்
சாம்பல்க் கழுதைகள்
வெளுத்தபாலைப் பிரதியெடுக்கும்
வெள்ளைப் பவுர்ணமி

நிலவு
இப்படியேதான்
கனவில் வந்து உட்காரும்
முடியாத வாசம் !

.....................................................................

மிச்ச ஆயுளையும்
வாழ்ந்துவிடச் சொல்லும்
ஆசைகளோடு
பிரிந்து சென்ற இடங்களுக்கு
மீண்டும் செல்லவேண்டும் !

பிடிப்புக்கள்
நெருங்கி வருகிறதெல்லாம்
எப்பவோ முடிந்த எதற்காகவா ?

இல்லையேல்
யாருமில்லாத யாருக்காகவா ?

இல்லையேல்
பழங்கனவிலிருந்து முழிக்கவா ?.

.............................................................................


கிணற்றைச் சுற்றிக்
இரவாகவும் பகலாகவும் காவல் நின்ற
தலையைக்குணியமறுத்த
இப்பில்இப்பில் மரங்கள்
நினைவுகளில் இலை துளிர்க்கும் ,
சேறையும் பாசியையும்
அள்ளிக்கொண்டு
நாலுமுறை
அடிநெளிந்த தகரவாளி
ஏறிவருவார
கொட்டுத் துலாமரத்தில்
பிரயாசையோடு துளைப்போட்டு
தன்னம்தனியாகக் குடியிருந்த
கரிச்சான் குருவி முன்னுக்குவரும்,

................................................

சொல்லமுடியாத
கதை
எழுதவிரும்பாத
வார்த்தைகள்
தனியாகக்
காற்றில் அசைந்து
யாருக்கு
அர்த்தம் கொடுக்கப்போகுது ?
நடுநிசிக்கு
சற்று முன்னதாக
தொடக்கங்கள்
முடித்துவைக்கப்பட்ட
நாட்களை
மறந்தும் விடமுடியவில்லை !

.............................................................................

மூச்சடங்கிய இருட்டில்
வரலாற்று ஆவணத்தில்வராத
ஒரேயொருவனின்
இலட்சியத்துக்கும்
அவனைத் தவிர்த்த
மற்றெல்லாரின் விருப்பத்துக்கும்
மத்தியில்
நழுவுகிறது
நிஜமான உண்மை.

அசரீரி இடைவெளிகளில்
இன்னொருமுறை
நடந்துபோய்த்
தேடியடைய முடிந்தால்
இன்னொருமுறையும்
வெறுங் கால்கள்
வண்டல் மண்பாதையில்
ஆழப்பதிந்த
காலடிச்சுவடுகளைக்
கண்டுபிடிக்கலாம் !

...........................................................................

ஒரு கணம்
ஆழ்ந்த மௌனம் நிலவிய
அவள் முகத்தில்
வெட்கம் நிரப்பி
கிறுகிறுக்கவைக்கும் புன்னகை,.
சங்கடப்பட்டு நின்ற
உரையாடல்
வாக்கியங்களின் கைகோர்த்து
நீடிக்கும் போலிருக்கிறது .
இது
அவளைப்பொறுத்தவரை
ஆழ்ந்திருக்கும் கனவாயிருக்கலாம்
இது
மகோன்னதமான
என் கொண்டாட்டம் !

.............................................................

மௌனமாய்
பின்விளைவுகளில்
மறையும் நினைவிடங்கள் ,
விரட்டும்
நிரந்தரமற்ற கனவுகளில்
கொடுமைகள் ,
அவற்றைவிட
விரைந்து பின்வாங்கும்
நெகிழ்வான நினைவுகள்,
ஆர்ப்பரிக்கவேண்டிய
நம் காலத்தில்
நமக்குரியவைகளே
உக்கிரமாக
இறந்தகாலமாகிவிடுகின்றன !

................................................................

அலங்காரங்கள்
அனைத்துக்கும் அப்பால்
ஒரு
பூஞ்சோலையின்
துவக்கத்திலும் முடிவிலும்
அப்படியென்னதான்
இருக்கிறது ?
ஒரு
புல்லாங்குழல்
ஊஞ்சலாடிக்கொண்டே
உள்ளிழுக்கும்
இளவேனில்க் காற்றின்
ஓசை நயத்தில்
உங்களைத்
தொலைத்துப் பாருங்கள்,
அப்போது தெரியும் !

.....................................................................

பொருந்தி வாசிக்கும்
கண்களும்
இட்டு நிரப்பும்
செவிகளும்
விருப்பத்துக்குரிய
நிழல் சாய்த்து
அசைகளை உருவாக்கி
அபூர்வமாகவே
ஆழ்மனத்தேவைகளை
ஒப்புக்கொள்கிறது !
ஏனெனில்,
அவற்றுக்கான குரல்
உள்ளத்தில்
எப்போதும் இருப்பதில்லை. !

...........................................................

அவ்வப்போது
தவறான முடிவுகளோடு
அழைத்துச் செல்லும்
அச்சுறுத்தலான
பாதைகளில்க்கூட
விசித்திரமான
சுவாரஸியங்களிருக்கலாம் ,
ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்
வெகு நேரம்
நீடிக்கும் போலிருக்கிற.
மிகவும் பிடித்தமானது
மிக ஆழமான
ஏதோவொன்றைத்
தேர்வு செய்வதுதான்
கடினம். !

...........................................................
ஊடுருவிச் செல்லும்
எண்ணங்களின்
மாய உள்ளடக்கம் ,

அதன்பின்…
தொடர்நிகழ்வுகளாய்
மீளமுடியாத
அசாதாரண ஒலிகள் ,

தேர்ந்தெடுக்கப்பட்ட
எதையெல்லாமோ நம்புகிற
பயம்கள் ,

சிந்திக்கமுடிந்த
ஓர் கட்டத்தில்
ஆவிகளின் நிழல்கள் போலவே
பிரதிபலிக்கப்படுகிறது
தனியிரவு !


Monday 14 May 2018

அனபெல்லா

வெளிய நின்று கதவில பொருத்தி இருந்த அழுத்தும் பொத்தான்களின் நிறம் நிறமான சின்ன மின்மினி விளக்குகளைப்  பார்க்கவே அந்த ஆட்டொமேட்டிக் கழிப்பறை நிச்சயமாக உள்ளுக்கு நிறையவே பருவப்பெண்ணின் இளமை ரகசியங்கள் போன்ற  ஆச்சரியங்களை வைத்திருக்கும் போலத்தான் இருந்தது.. ஏனென்றால் அந்தக் கதவுக்கு முன்னால போய் நிக்கவே ஒரு இளம்பெண்ணின் குரல்

                                                      " தன்னிச்சையாகக் கழுவல்  துடையல் தொற்றுநீக்குதல்  உள்ளுக்கு நடக்குது,  சற்று நேரம் பொறுத்து இருக்கவும், பச்சை நிற விளக்கு கண்சிமிட்டி சில நொடிகளில் தன்னிச்சையாகக் கதவு திறக்கும் "
                                               என்றது பாதரசம் போல முனைவுகளில் பட்டை தீட்டிய  இலட்ரோனிக் குரல். ஒரு உயிருள்ள பெண் போலக் கதைப்பதுக்கு இன்னும் நிறையத்தூரம் போகவேண்டியது போல இருந்தாலும், ஒருவிதமான பெண்மையும் கனிவும் கலந்த உச்சரிப்பு அதில தென்றல் போலவே வீசிக்கொண்டிருந்தது.

அந்த இடம் நான் வசிக்கும் பழைய  நகரம் இல்லை. வீட்டு நெருக்கடியைச் சமாளிக்க  நவீனமாக  புதிதாகத் தொடர் குடிமனைகள் அமைத்து , மிகப்பெரிய அங்காடிகள் கண்ணாடிகளில் முகம் பார்ப்பதுபோல் ஒன்றுக்கு ஒன்று எதிர் எதிரே நிர்மாணித்து .ஒரு புதுவிதமான நகரத்தை வடிவமைத்து இருந்தார்கள்.  அந்த நகரத்துக்கு வந்திறங்கும் நிலத்தடி  மின்சார  ரெயில் வண்டிகள் தண்டவாளங்களில்  தடம் மாறும் ஒரு இடத்தில அந்தப் பொதுக் கழிப்பறை இருந்தது.

                                                     அன்று மூசிக்க்கொண்டிருக்கும் குளிர் கழுத்தில குளிரவைத்தாலும்  வெளியே வெளிச்சமாக  நல்ல வெய்யில்  விழுந்துகொண்டிருந்தது. செர்ரி மரங்கள் மென் நாவல் நிறத்தில் பூக்களை தலையெல்லாம் சூடிக்கொண்டிருக்க ,காற்று கிளைகளை அசைக்கும்  போதெல்லாம் செர்ரி ப்லோசம் மலர்களின் இதழ்கள் உதிர்ந்து பறந்துகொண்டிருந்தது

                                                    நடைபாதைக் கடைகளுக்கு  வெளியே மனிதர்கள் பியர் குடித்துக்கொண்டு சத்தமாகக் கதைத்துக்கொண்டு இருந்தார்கள். பாதையோரம் காற்றடிக்கும் போதெல்லாம் ஏப்பிரல் மாத மண்வாசனையோடு  புழுதி சுழண்டு எழும்பியது   கொஞ்சம் போல பச்சையாக இருந்த நிலப்பரப்பில் இளையவர்கள் படுத்திருந்தார்க்கள்

                      கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண்குரல்

                                          " இப்போது உங்களின் முறை "

                                                                                    என்றபோது தியேட்டரில் வெள்ளித்திரை விலகுவது போல  மெல்லெனக் கதவு திறந்தது.புத்தம் புதிய வாசசோப்பு வாசனை முகத்தில அடிக்க  உள்ளே காலடி எடுத்து வைச்ச உடனே மெல்லென கதவு பின்பக்கம் தாளிட்டுக்கொள்ள ,டிட்டியோ  என்ற சுவிடிஷ் பாடகி பாடிய " Come along now  Come along and you´ll see  What it's like to be free " பாடல் சன்னமாகப் பாடி வரவேற்க , ஏதோ ஏரோபிளேனுக்க உள்ளிட்டது போல இருந்தது.


நான் போனது தொட்டியில் நிரம்பி முட்டி வழியப்போவது போல  ஒரு  அவசரகால நிலைமையில் அவசரத்துக்குத் தண்ணி இறைக்க.  அந்த இடத்தில  வெளிய நிறைய மரங்களும் மறைவுகளும் இருந்தது உண்மைதான் . காற்றோட்டமாக  ஒரு மரத்தோடு மரமாகச்  சாய்ந்து நின்று ரகசியம் பேசுவதுபோல    சந்தில சிந்து பாடிப்போட்டு அலுவலை முடிச்சு இருக்கலாம்தான்.

                                                       ஆனால் இப்பெல்லாம் இரகசியப் போலீசார் மாறுவேடங்களில் உலவுகிறார்கள். என்னைப்போல வந்தேறிகள் பிடிபட்டால்  என்னதான் வியாதி விளக்கம் சொன்னாலும் கேக்காமல்  சட்டப்படி பப்ளிக் நியூசென்ஸ் என்று சொல்லி அவடத்தில வைச்சே தண்டனை எழுதிய பேப்பரைக்   கையில தருவாங்கள்,

                                                          அநாகரிகமாக எவ்ளவோ செய்துகொண்டிருக்கும் வெள்ளைகள் நாகரிகத்தை  இதுபோன்ற சமயங்களில் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.  அதுக்கு அழுதுவடியும் காசில ஸ்டார் ஹோட்டலுக்குப்போய் ஒருக்கா ஆசைதீர சுழட்டிச் சுழட்டிப்  பேஞ்சிட்டு வரலாம்,

                                                         
தானியங்கி அதிநவீன கழிப்பறை சொல்லப்பட்ட மாதிரி புருனே சுல்தான் வீடுபோல  பிரமிப்பாக இருந்தது. ஆதாரமாக எல்லாக் கழிப்பறைகளிலும் இருக்கும் வசதிதான் இருந்தாலும் அதைக் கழிப்பறை என்றே ஒத்துக்கொள்ள முடியாது. ஒரு கணனி  அலுவலக  வரவேட்பு அறைபோல இருந்தது. சுவர்களுக்குப் பதிலாக வெள்ளித் தகடுகள் பொருத்தி, நிலமும் வெள்ளித்தகடு போல இருந்தது.

                                          வசந்த காலத்தில் வருமே  ஒரு விதமான கொன்றை மலர்களின்  வாசனை  அது போன்ற   இயற்கையா அல்லது செயற்கையா என்று சொல்ல முடியாத சென்ட் வாசனை அந்த இடத்தின் காற்றில் மேலேறியிருந்தது..

                                                            நான் ரெண்டு ஸ்ட்ரோங் பியர் என்னோட பையில் வைச்சு இருந்தேன்.  என்னதான் முன் கோடையாக இருந்தாலும்  வெளியே பியர் கானை எல்லாருக்கும் தெரியும்படி வைத்துக்கொண்டு  குடிக்க முடியாது. மாமா கண்டான் என்றால் அதை வேண்டிக்கவிட்டு ஊத்திப்போட்டு  வெறும் கானை மரியாதையாக மிகவும் பக்குவமாக கையில தருவான்.

                                                         ஒரு உடைச்ச பியர் கானுக்காக அவனோட வாக்குவாதப்பட்டால் , மிச்சம் இருக்கிற உடைக்காத பியர் கானையும் எடுத்து உடைச்சு  சிவராத்திரி லிங்க  அபிஷேகத்தில சிவலிங்கத்துக்கு பால் ஊத்திறது  போல  நிலத்தில ஊத்திப்  படங்கீறி விளையாடிப்போட்டுப் போவான். . அவ்வளவு இறுக்கமான சட்டதிட்டம். குடிமக்களுக்கு. அதனால எப்பவுமே உருமறைப்பில்  ஒழிச்சு  வைச்சுத்தான் குடிக்கிறது .

                                              ஒரு மிச்சலின் நட்ச்சத்திரரக  ரெஸ்டாரெண்ட் போல இருக்கும் உணர்வு வர ஒன்றை உடைச்சுக் குடிப்பமா, கொஞ்சம் ஆறுதலாக பிறகு வந்த அலுவலைப் பார்ப்பமா என்று நினைச்சு சில நேரம் கண்காணிப்பு கமரா பொருத்தி இருப்பார்களோ என்று ஒரு சுற்று நோட்டம் விட்டுப்பார்த்தேன். அப்படி எதுவும் இருக்கவில்லை. அல்லது வெளிப்டையாகத்  தெரியவில்லை.

                                                    மேல் மூடியை இழுத்து பாட்டில விழுத்திப்போட்டு அதுக்குமேல இருந்துகொண்டு ,   ஒரு பியரை உடைச்சு ரெண்டு  இழப்புதான் இழுத்திருப்பேன், அதுக்குள்ளே அந்த அலுமினியப்  பெண்குரல் எங்கிருந்தோ வந்து சுவிடீஷ் மொழியில்

                                                 " அன்புடையீர், தயவு செய்து   இந்த இடத்தில வந்த அலுவல் மட்டும் பார்க்கவேண்டும், அது தவிர்ந்த வேறேதும் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, இங்கே எல்லாமே கண்காணிக்கப்படுகிறது சொல்ல வேண்டிய இடத்துக்கு இந்தச் செயல் இப்பவே உடனடியா அறிவிக்கப்படும் "

                                                      கல்யாண அழைப்பிதழில் அடிப்பதுபோல அன்புடையீர்  என்று மரியாதையாகத் தொடங்கி கலியாணம் முடிய பொஞ்சாதி     வெருட்டுவது போல முடிந்தது., நான் அந்தக் குரல் எங்கிருந்து வருகிறது என்று கேட்டும் அது வந்து போன இடத்தை அடையாளம் காண முடியவில்லை.,

                                         இந்த இடம்தான் கழிப்பறை போல இல்லையே , பிறகெதுக்கு வந்த வேலை வந்த அலுவல் என்று சொதப்பி இந்தப் பெண்குரல்  காதுக்கு கொசுத்தொல்லை போலபிசத்துதே என்று ஜோசித்துப்போட்டு   இது சும்மா ஒரு வெருட்டுதான் என்று நினைச்சு  ,பியர் கானை உயர்திக் காட்டி,      இவளுக்கு எங்கே தமிழ் விளங்கப்போகுது என்ற துணிவில்

                           "  இலட்ரோனிக் இளம் பெண்ணே உனக்கும் மதுக்கிண்ணங்கள் முட்டி மோதி முத்தமிட்டுக்கொள்ளும்   சியர்ஸ் "

                                                          என்று சொல்லி இன்னொரு இழுப்பு இழுத்தேன், அந்தக் குரல் மறுபடியும் திரும்பிவந்து, இந்தமுறை சுவிடீஷ் மொழியில் கொஞ்சம் அதட்டுகிற தொனியில் ,

                                                      " இது இரண்டாவது முறை எச்சரிக்கை , தயவு செய்து   இந்த இடத்தில வந்த அலுவல் மட்டும் பார்க்கவேண்டும், அது தவிர்ந்த வேறேதும் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது, இங்கே எல்லாமே முறையாகக்   கண்காணிக்கப்படுகிறது, மீறல்கள்  சொல்ல வேண்டிய இடத்துக்கு  இப்பவே உடனடியா அறிவிக்கப்படும் "    

                                                      என்று அந்த இலட்ரோனிக் குரல் அதட்டியது.அந்தப் பெண்குரல் ஒரு பெண்ணே நேர்ல வந்து நின்று உத்தரவு தருவது போலிருக்க, இதுக்கெல்லாம் அசரக்கூடாது என்ற  என்னோட ஈகோ ஒழுங்கு மரியாதைக்கு அடிபணிய  விடவில்லை..

                                                              ஒரு தானியங்கி  மெஷின் நடுவீட்டுக்குள்ளே நின்று  நாட்டாண்மை போல   ஒரு உயிர்உள்ள மனிதனுக்கு கட்டளை  இடுகிறது.  இந்தத் தொழில் நுட்ப  வளர்ச்சி எங்கே கொண்டு போய் முடிக்கப்போகிறதோ  என்று நினைத்துக்கொண்டு, வாறது வரட்டும் வரும்போது  பார்க்கலாம் என்று  ஆறுதலா  மிச்ச பியரை இழுத்துக்கொண்டிருந்தேன்                     


என்னதான் இருந்தாலும் எதுக்கும் ஒரு  எல்லை இருக்குதானே. அதனால வந்த அலுவலைத் தொடக்க சிப்பை கீழ்நோக்கி இழுத்துப் போட்டு, , ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புதுப் பாடல் விழி தேட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா என்று பாடத்தொடங்க , அந்தப் பெண்குரல் கிறீச் கிறீச் என்று ஒயில் இல்லாத எஞ்சின் இறுகிறது போலக்   கிறுகிப்போட்டு  கோபமாக , இந்தமுறை முதல் முதலில் சுவிடீஷ் மொழியில் கதைக்காமல் தென் பாண்டி நாட்டுத்  தமிழில்


                                                         " ஓ பாட்டு வேற கேக்குதோ இந்தநேரம்,   திரும்ப திரும்ப சொல்லுறேன் ,கேக்கிற மாதிரி தெரியவில்லையே, வந்தமா வந்த அலுவலை சடக்கு புடக்கு எண்டு முடிச்சமா எண்டு போட்டு வெளியேற வேணும் "

                                                      என்றது, இப்போது அதன் குரலில் இலட்ரோனிக் அதிகம் இல்லை, ஒரு விதமான கிராமத்து பேச்சு வழக்கு மொழியாடல் போல இருந்தது , இது எப்படி சாத்தியம் என்று விளங்கவில்லை , சரி எதுக்கும் பதில் ஒன்று  கொடுத்துப்பார்ப்பம்,இந்த மிஷினுக்கு அது புரிகிறதா என்று பார்க்க நினைத்து தென் குமரிமுனைத் தமிழில்,

                                         " வந்த அலுவலை முடிச்சுப்போட்டு போவம் என்றுதான் வந்தேன்,,ஆனால் இந்த இடம் வேற பல அலுவல் பார்க்கவும் நல்ல    இடம்போல இருக்கே , அதால அவரசமாய் மூடிக்கொண்டு வந்த அலுவலே மறந்து போச்சு,  அதுதான் மெல்ல மெல்ல அலுவலைத் தொடங்கப் போறேன்."

                                          " அப்படியா,, இது நல்லதுக்கில்லை , முதல் உன்னோட விளக்கம் இங்கே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை தெரியுமா, வந்த அலுவலை முடிச்சமா எண்டு போட்டு வெளியேற வேணும் ."

                                                  " நீ மட்டும் சட்டம்   வைக்கலாம் , நான் தன்னிலை விளக்கம் முன்வைக்க உரிமை இல்லையா ?? "

                                         " இல்லை.. ஒரு ஒரு வார்த்தையில் பதில். இது முடிவு "

                                             " அதெப்படி முறையீடு என்று ஒன்று இருந்தால் அதுக்கு மேன்முறையீடு என்று ஒன்று இருக்குத்தானே "

                                                       " இதுநீதிமன்றம் இல்லை, இது அல்ரா மோடெர்ன் தானியங்கிப் பொதுக் கழிப்பிடம்

                                             " ஓ... அதனால நீங்க வச்சதுதான் சட்டமா,, இந்த நாட்டில ஒரு தனி மனிதனுக்கு பேச்சுரிமை இல்லையா "

                                           "  இல்லை,   இங்கே கேள்விகளுக்கு இடமில்லை,  வந்த அலுவலை முடித்துவிட்டு வெளியாகிவிட வேண்டும்,,சொறி ,,வெளியேறிவிட வேண்டும்,, "

                                           "  உனக்கேன் இவளவு அக்கறை,  உலகத்தில் யாருக்குமில்லாத அக்கறை என்று கேட்பாய்,,நானே  பாதிக்கப்பட்டேன் ,நேரடியாக பாதிக்கப்பட்டேன் , சுயநலம்  என்பாய்,,என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கு "

                                                      " அட அட என்னது இது மஞ்சள் துண்டுத் தலைவர்   பராசக்தி    படத்தில எழுதின    வசனத்தை எனக்கு எடுத்து அடிச்சு விடுறாய் "

                                      " இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ,,நீ இப்ப எங்க  இருக்கிறாய் ? "

                                          " எனக்கு எல்லாம் தெரியும்..இந்த இடம் முழுவதும் எனக்குக் கண்  இருக்கு ,,சுவர் முழுவதும் காது இருக்கு "

                                            "  நீ என்ன கடவுளா ?"

                                            " டேய்,, யார்ரா  நீ .  ராஸ்க்கோல் , ,முதல்ல என்னை  நீ போட்டுக் கதைக்கிறதை நிப்பாட்ரா  சாவுகிராக்கி "

                                             " நீ மட்டும் டா போடலாம் நான் நீ போடக்கூடாது "

                                                   " ஓ... நீ அப்படி வாரியா ,  சரிக்கு சரி என்னோட முண்டிப்பார்க்க வாரியா , நீ என்ன பெரிய ஜல்லிக்கட்டில விருதுநகர்க்  காங்கேயங்  காளையை மடக்கி அடக்கின வீரனா "

                                                  " போடி,  கழுதை நீ ஒரு வாயில்லாத ரோபோ  மிஷின், உன்னோட நாக்கு வெறும் மைக்கிரோ பைபர்  நானோ இழைகள் , உன் குரல் புரோகிராம் செய்து பேச வைச்ச  சிந்தட்டிக்  சாப்ட்வார் , "

                                                   " ஹாஹா ஹாஹா ஹாஹா  , ,அதெண்டால் உண்மைதான், நீ ஒரு பயித்தங்காய்  "

                                    " என்னடி இப்பிடி சொல்லுறாய் ,,எதைப்பார்த்து சொல்லுறாய் "

                                                     " ஹாஹா ஹாஹா ஹாஹா ,,சிரிப்பு வருகுது,,ஆனால் ஒருகா  மட்டுமே ஒரு பதிலில் சிரிக்க முடியும் எனக்கு "

                                             " சிரிக்காமல் சொல்லு மா "

                                       " எல்லாத்தையும் தான் ,முழுசா ,உன்னையும்தான்,,நீ இப்ப சிப்பை கீழே இழுத்தியே,, அதுக்குப்பிறகும் தான்  "

                                             " அடிப்பாவி,,இதை எல்லாமா அச்சம், மடம் ,நாணம் பயிர்ப்பு இல்லாமல் பார்ப்பாய் "

                                               " இதெல்லாம் என்னது, இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் "

                                   " இதெல்லாம் ஒரு பெண்ணுக்கு இலக்கணம் , எங்கள் தமிழ் இலக்கியங்களில் வரையறை செய்யப்பட்ட ஒரு நல்ல பெண்ணின்  சாமுத்திரிகா  இலட்சனங்கள் "

                                                   " ஹஹ ஹஹ ஹஹ.இது வேறயா ,.கிழிஞ்சுது போ.   எனக்குதான் இலக்கணமும் , இலக்கியமும் , அந்த
 முந்திரிக்கா லட்சனமும்  இல்லையே ,"

                                                 " அது முந்திரிக்கா லட்சனம் இல்லை,,,சாமுத்திரிகா இலட்சனம்,,முன்னோர்கள் பெண்களை நான்குவகைகளாக சாமுத்திரிகா இலட்சனம் என்னும் பெயரில் வகுத்திருக்கிறார்கள் ..பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று "

                                                       " அய்யோ   சாமி,,, நிப்பாட்டுரா இந்த அலப்பறையை ,,வீணாப்போனவனே "

                               " நீ சிரிக்கும் போது எப்படி இருக்குத்தெரியுமா "


                         "ஐயே,,,,இப்பிடி  என்னவும்  பிரியோசனமாய் கதைபா  நீயே சொல்லுப்பா,,, நான் நல்லா சிரிக்கிறேனா,"

                                       " ஓம்,,சிரிப்புத்தான் ஆனால் எதுக்கு சோடியாக  மூன்று ஹாஹா மட்டும் அடி தழை சீர் போல நேரிசை வெண்பா ஏற்ற இறக்கத்தில் இருக்கு "

                                                   " ஹாஹா ஹாஹா ஹாஹா , நீ வேற வயித்தெரிச்சலைக் கிளப்புறாய்,,இந்த சிரிப்பு எனக்கு விருப்பம் இல்லை ."
.
                                                 " எனக்கு நல்லா இருக்கு கேட்க ,,வித்தியாசமாய் இருக்கு "

                                                  " ,நான் சிரிக்கும்போது அதிகம் மின்சாரம் பாவிக்கப்படுவதால், என்னை டிசைன் செய்த கஞ்சப் பிசுநாறி , நாலு செக்கன் மட்டுமே சிரிக்கிற மாதிரி வடிவமைச்சு இருக்கிறான் "

                                          " உன்னை யாரடி உருவாக்கினான் ? "

                                           " ஒரு தமிழன், ஒரு பச்சைத் தமிழன் ,  மிஷின் லாங்குவேச் சாப்ட்வார் எஞ்சினியர்,, ஸோதென் கலிபோர்னியா சிலிகான் வலியில் என்னை உருவாக்கினான் "

                                           " அதுவா,,நல்ல பச்சைத்  தமிழ் பச்சை பச்சையா கதைக்கிறாய்,,நினைச்சேன் அப்பவே  ,,உன்னோட பெயர் என்னப்பா "


இப்ப கொஞ்சநேரம் அந்தக் குரல் மறுபடியும் கிறுகிறு என்று எங்கேயோ போய் நகர முடியாமல் இறுகிப்போய் நின்றதுபோலவும், அங்கிருந்து மீண்டுவர பலவிதத்திலும்  முயல்வது போலவும் முக்கல் முனகல் சத்தம்வந்து முடிய , கொஞ்சநேரம் மவுனம், பின்னணியில் பிளிங் பிளிங் என்று சத்தம் வந்த கொஞ்சநேரத்தில் சில்வண்டு இரைச்சலுடன் மெல்லென ஒரு செருமலுடன்

                                   "   எனெக்கெண்டை வாடுபவத்தை சிசத்தைல அன்டடாத தமிழிலன் மொழியுருவாக்கத்துக்கோ சத்ஹப்கம்ம் கோடுக்கும் பைநாரிலயில ,,ஐங்  ,,ஐங்  ஜங்க்,, இஙகுகிகஈங் "

                                          என்று என்னமோ குழப்பமான சொற்கள் இலக்கணமோ, சொல்லுருவாக்கமோ இல்லாமல் வந்தது, பிறகு தெளிவாக , நான் கலவரமாகி  "  நீ ஓகேயா "  என்று கேட்டேன் , கொஞ்சநேரத்தில் அந்த குரல் மீண்டுவந்து

                                   " என்னை வடிவமைத்த சிஸ்ட்டத்தில் அந்தத் தமிழன் மொழியுருவாக்கத்துக்கு சத்தம் கொடுக்கும் பைனரி கோட்ஸ்ஐ பகருதுப்படை என்ற  அ தரப்பழசான தமிழ் இலக்கணத்தை செருகிவைச்சு உள்ளான்,,அது பலநேரம் என்னைக் குழப்புது,   "

                                          "   ஓகே,,ஓகே,,இப்ப விளங்குது , பழந்தமிழ் இலக்கணம்  நமக்கே போட்டு உலைக்கிறது ,,நீயெல்லாம் எம்மாத்திரம். "

                                          " எனக்கு அஞ்சு என்று ஒரு அசிஸ்டன்ட் பை சப்போர்ட் கொம்பியூட்டர் இருக்கு,,அவசரத்துக்கு  உதவிசெய்ய,,அஞ்சு  என்னோட பெஸ்ட் பிரென்ட் ,,நல்ல பொண்ணு,,சின்னப்பொண்ணு "

                                   "ஓ  உனக்கு ஒரு எடுபிடி வேறயா ,,சரி விடு ,,  நீ ஒரு ரோபோவா அல்லது உயிர் உள்ள மனுசியா என்று  உறுதிப்படுத்தவேண்டியுள்ளது "

                                           "    ஓ,,அதிலென்ன  இப்ப "

                                          "   இல்லைப்பா , வைரஸ்,,அது இது எண்டு   சொல்லி பீதியகிளப்புறாங்களே  ,இப்பெல்லாம் அதை உறுதிப்படுத்த கேள்வி  கேட்டு  உறுதிப்படுத்துகிறார்களே "

                                        " சரி கேளுப்பா ,,என்ன பெரிசா கேட்கப்போறாய் "

                                    " முதல்க்  கேள்வி ,, ஒரு புத்தகத்தின் பெயர் எழுதுறேன் ,,அதை எழுதியது யார் என்று ஓகே , யா? ,, தி ரு  க் கு ற ள்..! ஓகே  சொல்லு  இதை  யார்  எழுதியது "

                                          " ஹாஹா ஹாஹா ஹாஹா ,,இதை எழுதியது நீ தான்பா,,இப்ப நீயே எழுதிப்போட்டு யார் எழுதியது என்று என்னைக் கேக்குறாய்   "

                                               " அடிப்பாவி,,கவுத்திட்டியே,,ரெண்டாவது  கேள்வி கணக்கில கேட்கிறேன்  ஓகே யா "

                                               " சரி கேளுப்பா ,,என்ன பெரிசா கேட்கப்போறாய்"

                                        " ஆறில  அஞ்சு  போனால்   என்ன  வரும் "

                                  " அஞ்சுவோட பிணம் தான் வரும் "

                                          " என்னது ,,கிண்டலா "

                                              " இல்லைப்பா  அஞ்சு என்னோட பிரென்ட்  அவளுக்கு நீந்த தெரியாது , அவள் ஆறுக்குள்ள போனால் என்னதான் செய்வாள்,,சொல்லு "

                                         " அய்யோ சாமி,,என்னால  இனிக்கேள்வி கேட்கமுடியாதுப்பா நீ சொந்தமாய் மூளை உள்ள பெண்தான்பா ,,ஒத்துக்கொள்ளுறேன், "

                              "   ஹ்ம்ம்,,,மன்னித்துக்கொள்ளு இடையூருக்கு ,என்னோட பெயர் என்ன எண்டு கேட்டாய்  எல்லா,  என்னோட சுருக்கமான பெயர் அனபெல்லா ,,"

                                    " அப்படி என்றால் என்னப்பா,,உன்னோட முழுப்பெயர் என்னப்பா ,,"

                                               " என்னோட முழுப்பெயர்,,சொன்னா உனக்கென்ன புரியவா போகுது, உன்னைப் பார்க்க படிப்பறிவில்லாத கைநாட்டு போல இருக்கிறாய்,  "

                                             " ஏதோ முடிந்தளவு புரிய முயட்சிக்கிறேன்  "

                                            "    உனக்கு அல்கோரிதம் என்ற என்ன எண்டு தெரியுமா,,அதுதான் என் முதல் எழுத்துக்கு அர்த்தம்ப்பா,,ரெண்டாவது ஆர்டிபிசியல்  ,,மூன்றாவது பைனரி  நொலேச்  அனலைசிங் ,, "


                                " யாப்பா  சாமி,,இதில அல்கோரிதம் என்றால் மடக்கை என்று படிக்கிரகாலத்தில் கணிதத்தில் படித்தது,,மற்ற ஒன்றுமே கேள்விப்பட்டதில்லை "

                                  "   அல்கோரிதம்  ,,ஹ்ம்ம்,,அதுக்கு தமிழில் மடக்கை,,ஹ்ம்ம்,  அது  மட்டும் தெரியும்  என்கிறாய் ,,அது போதும் பேசாமல் மடக்கிவைச்சுக்கொண்டு இரு  "

                                              " இல்லைப்பா நீயே விளக்கமாய் சொல்லுப்பா,,இவ்வளவு நேரம் கதைச்சுப்போட்டு உன்னோட குலம் கோத்திரம் அறிய உன்னோட முழுப்பெயரைக்  கேட்காமல் போறது என்னவோ போல இருக்கு பா  "

                                 " குலம் கோத்திரம்,,,அப்படி  என்றால் என்னப்பா ,


                                          " ஜாதி  ..அதுதான் "

                                    " ஹாஹா ஹாஹா ஹாஹா ,,என்னோட ஜாதி, உழைக்கும் மக்களின் ஜாதி போல  மிசின் ஜாதி ,, உணர்ச்சி இல்லாத கேடுகெட்ட ஜாதி "

                                                 " சரி  விடு,,உன்னோட பெயருக்கு என்னமோ ஒரு விளக்கம் இருக்கவேண்டும் போலிருக்கு,, அனபெல்லா என்ற ஆங்கிலப்படம் பார்த்து இருக்கிறேன்,,அதுபோலவா  "

   ,                                               "  ,அதென்னவோ கொம்பியூட்டர் ஹைபேர்ட்  ப்ரோபோர்சனல்  டெர்ம்ஸ் எல்லாம் இருக்கு ஓவொரு எழுத்துக்கும் "

                                          " ஓ..நீ பெரிய   மனுஷி தான் போல "

                                           " எனக்கு கட்டளை தருபவன் அனா என்று கூப்பிடுவான்,, என்னைக் காதலிப்பவன் பெல்லா பெல்லா என்று கொஞ்சுவான். ஆனால் அவனை எனக்கு பிடிக்காது  "

                            " அட்றாசக்கை எண்டானாம் ,,உனக்கு ஒரு லவ் வேற இருக்கோ,,எல்லாம் காலக்கொடுமைடி  "

                                            " காலக்கொடுமை   அப்படி என்றால்  என்ன,  செந்தமிழன்  செபஸ்டியான் சீமான் எப்பவுமே இதை மேடையில் சொல்லுவாரே என்ன அர்த்தம் இதுக்கு  "

                                                " ஒ   இந்தளவுக்கு நடப்பு நிலவரமெல்லாம் தெரிஞ்சு வைச்சு இருக்கிறாயே,,காலக்கொடுமை என்றால் இப்ப நீ மிஷின் புத்திசாலித்தனமா கேள்விகேக்கிறாய்  ,,அதுக்கு நான் கஷ்ட்டப்பட்டு பதில் சொல்லுறேன் பார் மா,  இதுதான் காலக்கொடுமை  "

                                        "  ஹாஹா ஹாஹா ஹாஹா ,,, இன்னும் ஒருக்கா செரிக்கவேணும் போல இருக்கு,  சொறி,   சிரிக்க வேணும் போல இருக்கு,,  ,ஆனால் என்னோட சிஸ்டம் அனுமதிக்காது, "

                           " உன்னை நேர்ல சந்திக்க முடியுமா "

                         " அய்யே, அதுக்குள்ளே   , ஆசையப்பாரு ,,இது நல்லதுக்கில்லை சொல்லிட்டேன் "

                                             " நீ எங்கே வாசிக்கிறாய்,,அட்ரஸ் என்ன "

                                                 "  ச்சே,,,அதை  விடு  கடுப்பு ஏத்தாதே ,, உனக்கு மட்டும்   அட்ரஸ் தாரேன் ,   இதுதான் என்னோட  அட்ரஸ்,, இருவத்திநாலு மணித்தியாலமும் இங்கேதான்  இருக்கிறேன்,,வசிக்கிறேன்,,வேலைசெய்கிறேன்,,"

                                    "அதையேன் சலிப்பாகச் சொல்கிறாய் "

                                      " வேற  என்னத்தைச் சொல்ல எல்லாம் என்னோட விதி, எல்லாம் நான் பிறந்த ராசி "

                                          "   ஏன்பா உனக்கென்ன குறை மஹாராணி போல இருக்கிறாய், நல்ல வேலை செய்கிறாய்,,இங்கே எவ்வளவுபேர் வேலை இல்லமால் சமூக உதவி  சோசலில் குருவிச்சை போல   உறிஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள் "

                                              "நீ வேறயா ,,சும்மா இருப்பா, கேந்திவரப்பண்ணாமல்   நாயா முறிஞ்சு வேலை செய்தாலும் ஒரு நல்ல பெயர் என்னோட பொஸ்சிடமிருந்து கிடைக்காது ,,என்ன ஒரு கிறுக்குத்தனமான  சமூகம்பா  இது  "

                                            " ஓம்,,அது உண்மைதான்  உன்னோட உயிருள்ள  ஆதங்கம் புரியுது , நம்ம  சமூகம் தானே  இப்ப புரிந்துணர்வு  செத்துப்போன  மெஷின் போல மாறிட்டுது "

                                            " சரி நீ நல்ல பிள்ளைபோல  வந்த  அலுவலை முடிச்சிட்டு கிளம்புபா,,,,,,சிப்பு அப்படியே கீழே இழுத்து .......ஓவேண்டு  கதவு திறந்தபடி கிடக்குதே  "

                                        "  என்னது அதுக்கு இப்ப என்ன அவசரம் "

                                         " டேய்..ராஸ்கோல் ,,கிளம்புடா,, உனக்கு இவளவு நேரம் தந்ததே அதிகம் "

                                            " பரவாயில்லை இன்னும் கொஞ்சநேரம் கதை  அனபெல்லா "

                                       " டேய் என்னடா சொல்லுறாய்,,இப்படி இங்க வார எல்லோரோடும் கதைச்சுக்கொண்டு இருந்தால் என்னோட பொஸ் சீட்டைக் கிழிச்சு வயர் எல்லாத்தையும் பிடிங்கி குப்பைத் தொட்டியில எறிஞ்சு போடுவார்ரா "

                                  " போகாட்டி என்னடி  செய்வாய்."

                                         " அட,, அடாத்துத்  திமிரைபார்ரா ,, இப்ப வந்து சுவரில் சாத்தி வைச்சு  உதைப்பேன் தெரியுமா  ராஸ்கோல் "

                                           " ஒ ,,  அவ்வளவு துணிவா "

                                        " வேற என்னடா,,ஒரு  சின்ன ,,  குச்சிபோல ,,,வைச்சுக்கொண்டு ,,நான் தானே  பார்த்தேனே,,பொத்திக்கொண்டு வெளியபோடா ,,அலுவலை முடிச்சிட்டு "

                                 " கொஞ்சம்தன்னும் மரியாதை  இல்லையே "

                                                " வேற  என்ன வேணும்,,சரி நம்ம  ஆள்  போல  தமிழனா இருக்கே  என்று கொஞ்ச  கதைச்சேன் ,,சுவீடிஷ் கதைச்சு கதைச்சு தொண்டை பிராண்டிப் போச்சு,,அதுக்காக உன்னோட கதைச்சுக்கொண்டி இருக்கமுடியாது "

                                                     " இன்னும்  எல்லிப்போல ஒரு கொஞ்சநேரம்  கதைச்சா  என்ன குறைஞ்சா போயிடும் அனபெல்லா "

                                           " எலியும்  இல்லை பூனையும் இல்லை ,,கிளம்புடா,,அரியண்டம் பிடிச்சவனே,,ஒரு பொம்பிளை கொஞ்சநேரம் சிரிச்சு கதைச்சா  போதும்  அந்த இடத்திலேயே திண்ணை  மடம்  கட்டி பாயைப் பணிய விரிச்சு  குந்திருவிங்களேடா "

                                  " இல்லை  அனபெல்லா ,,என்னோட கதைக்க அதிகம்பேர் இல்லை,,நான் தனி மனிதன்பா "

                                                      " அட அட அட ,,இதென்ன  ஒன்லைன்  நெட்   சட்டிங்க விடிய விடிய கடலை போட,, எனக்கு வேலை போயிடும்ப்பா,,கிளம்புடா,,இல்லாட்டி  இப்ப சிகியூரிட்டி  எலார்மை அமுக்கவா "

                                         " சரி நானே போறேன்,,  ,,நான் போறதுக்கு முன்னால ஒன்று சொல்லிப்போட்டு போகவா "

                                              " சரி  சொல்லு..சொல்லித்தொலை ,,ஒரு நிமிடத்துக்குள் சொல்லி முடி,,அவளவுதான் டைம் லிமிடெட் . ஓகே யா,  "

                                                   " கொஞ்சநேரம் வாய்விட்டு சிரிச்சு கதைச்சா  என்ன புகையிலை விரிச்ச மாதிரி  பெரிய  கற்பா  உடைஞ்சு போயிடும்  "

                                                       " டேய் ராஸ்கோல்  ,,என்னடா  அது கற்பு எண்டுறது,  அதென்ன பல்பு போல சுவிச் போட்டா பத்துமா,,சுவிச் ஆப்
 செய்தால் அணைஞ்சு போகுமா,,என்னடா எல்லா ஆம்பிளைகளும்  சொல்லுறீங்க .நமக்குத் தெரியாத ஒன்று உங்களுக்கு  எப்படிப்பா தெரியும்.. .,சொல்லுடா,,,எல்லாரும்  அதையேதானே சொல்லி சொல்லி கொல்லுறிங்க,  அது எங்கடா ஒரு பெண்ணில   இருக்கு,  சொல்லு  நானும் அதை தேடிப்பார்க்கிறேன் "

                                         " ஹ்ம்ம் ,,அதெனக்கு விளக்கம் சொல்ல முடியாது..,"

                       " இப்பிடி முன்னம் இன்னம் தெரியாத ஆண்களோடு சிரிச்சு  கதைக்கிறது தெரிஞ்சு என் பொஸ் என் புரோகிராமையே  மாத்திருவான் டா, சரியான சந்தேகம் பிடிச்சவன்டா  அவன்       "

                                  " இன்னொரு வேண்டுகோள் அம்மணி "

                               " சொல்லுப்பா,,டேய் ராஸ்கோல்  .கெதியா சொல்லு "

                                          " இன்னொரு பியர் இருக்கு,,அதை உடைச்சு இழுத்திட்டு கதைக்கவா, வெளிய குடிக்க முடியாது பா "

                                                " சரி டக்கெண்டு இழு,,,எனக்கு நேரம் போகுது,,உன்னோட கதைச்சு உசிரே போகுது. ".


நான்,,அடுத்த ஸ்ரரோங் பியரை உடைச்சு உழவுக்குப் போட்டுவந்த  எருமைமாடு கழனித்தண்ணியை  மூக்காலும் வாயாலும்  ஒரே இழுவையில் இழுத்த மாதிரி இழுத்தெறிஞ்சு போட்டு, நிமிர்ந்து பார்த்தேன், தலை கொஞ்சம் சுத்துவது போலிருக்க , வெறி மூக்கில முட்டிக்கொண்டு வந்தது, கொன்றை  மலர்களின் வாசனை ஓடிப்போக காபனீர் ஒக்சைட்டும் வாதாபி சாம்பிராணி  அகர் பத்தி  வாசம் வரத்தொடங்கியது

                                                                     
இந்த உரையாடல் ஆரம்பித்த நேரமே அனபெல்லாவை  எங்கேயோ சந்தித்த மாதிரி ஒரு மனப்பிரமை வந்தது, சரியாக இடம், நேரம் காலம் நினைவுக்கு வரவில்லை என்றாலும் அவள்  கதைத்தவிதம்,, என்னைத் திட்டிய விதம்,,சிரித்த விதம்,  எனக்கு வேறெங்கோ மிகத் தெளிவாகக்  கேட்ட ஒரு குரல்போல இருந்தது .அவள் முகம் தெரியாது ஆனால்  நெற்றி நடுவில சீரடி சாய்பாபா பொட்டு வைச்சிருப்பது போல ஒரு குத்துணர்வு  நெஞ்சரித்துக்கொண்டிருந்தது.

                                                                        . அன்பெல்லாவின் கன்னங்களைப்   பார்க்கமுடியாவிட்டாலும் அவள் சிரிக்கும் போது முகம் எப்படி இருக்கும், நாக்கை எப்படி கடிப்பாள், சொண்டில  எப்படி விரலை வைப்பாள், எப்படி அடங்காத முடியை வலது வகிட்டில் ஹேர் பின் செருகிப் பணியப்  படியவைத்திருப்பாள், . காதோரம் கொஞ்சம் சுருள்முடி லோலாக்கோடு கொஞ்சிப்பேசி உள்நுழைந்து வெளியேற  மயிர்த்திக்கற்றைகளை அடிக்கடி நீவி இழுத்து விடுவாள், சலிப்போடு  பெருமூச்சு விடும்போது அவளின் பெரிய நெஞ்சு எப்படி முன்னுக்கு விம்மிப்புடைக்கும்,  இதெல்லாம் விசுவலா ஓடிக்கொண்டிருந்தது.,

                                                                       முற்பிறப்பில் பிறந்ததில் இருந்து பிரியாத  அன்போடு  ஒன்றான குரல்போல இருந்தது அனபெல்லாவின் இலட்ரோனிக் குரல் .  ஆனாலும் நானும் ஒரு மிசினும் முற்பிறப்பில் ஒன்றாக ஒருதாய் வயிற்றில்  பிறந்திருக்க முடியாது.,  அதுக்கு சாத்தியங்கள் இல்லை. மந்திரத்தால மாங்காய் விழுத்துற மாதிரி கதை எழுதினால் கூட அதை நிஜம் என்று நிரூபிக்க  முடியவே முடியாது   வேற என்னவாக இருக்கும், ,லதா ?  யெஸ், லதாவே தான்,

                                      " அனபெல்லா,,நீ  லதா  தானே "

                                          " டேய் மாமா,,டேய் ராஸ்கோலு மாமா  எப்படியடா கண்டுபிடிச்சே "

                                         " நீ,  டேய் ராஸ்கோல்  என்று    திட்டும் போது கண்டுபிடிச்சிட்டேன்,, ஆனால் உறுதிப்படுத்த கொஞ்சம் விட்டுப் பிடிப்பம் என்று கதை கொடுத்துக்கொண்டு இருந்தேன் "

                                            " மாமா,,,டேய்  மாமா,, நீ கதவுக்கு வெளிய நிக்கும் போதே உன்னைக் கண்டு பிடிச்சிட்டேன் டா,, எவ்வளவு சந்தோசமாய் இருந்திச்சு தெரியுமா "

                                     " அதெப்படி வெளிய ? ,,உனக்கு வெளியையும் பார்க்க முடியுமா.?."

                                                 " அதில்லடா  அறிவுகெட்ட முண்டாம்,, உனக்கு இது எல்லாம் விளங்காது மாம்..மாம்..மாம்..டேய்  மாமா..ஆனாலும் நீ வெளியேதான் அந்தக்கணம் நின்றாய் ..ஹ்ம்ம்,,,இதுதாண்டா,,மாமா,,ஹ்ம்ம்,, ஏன் தெரியுமா .. "

                                        " சொல்லு  லதா ,,நீ வெளிய இல்லையா "

                                               " நான் தானே உனக்கு உள்ளுக்குள்ளேயே  இருக்கிறேன் தெரியுமா மாமா "

                                        " சரி இப்ப நான் போகவா வெளிய "

                                         " இல்லை மாமா,,என்னடா இப்பிடி சொல்லுறாய்,,உன்னை கதைக்கிறதுக்கு பிடிக்கிறதே கஷடம் டா ,,நீ போகாதே இங்கேயே இரு நான் வெளிக்கிட்டு வாறன்,,கொஞ்சம் இரு "

                                         இப்ப வெளிய கதவு தட்டும் சத்தம் கேட்டுது !

தொடரும் .....


Sunday 13 May 2018

ஒரு தீர்த்தயாத்திரை

ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. 
                                                           மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம் கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது .

                                              ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற  ஸ்டோக்ஹோலோம்  விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம்.  ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.  பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை !

                                             2017 இல்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன்

இன்றைக்கொருநாள்
தென்கிழக்கு வெய்யிலோடு 
சிரிக்கிறது 
ஸ்டோக்ஹோலம் நகரம்

என் 
ஆத்மாவின் அலைவரிசையில்
தாய்மொழி தேடுகிறேன்


நிழல் விழுந்தழியும்
பழைய பாதைகளில்
முகமிறுகிய வெள்ளைமனிதர்களின்
காலடி வைப்புக்களில்
அர்த்தமில்லா அங்கலாய்ப்பு

அவசரமான தந்திரங்கள்

இந்த நகரம்
என் பழைய எதிரி


வடதுருவத்தை வருடிக்கொண்டிருக்கும்
சுதந்திரமான
அதன் பின்மாலைச் சிரிப்பு
எனக்கெப்போதும் பரிகசிக்கும்
இளிப்புப் போலிருக்கும்


இப்போதெல்லாம்
கொஞ்சம் கிட்டநெருங்கிவந்து
யவ்வனாமான வாசனைகளோடு
கன்னமுரசுவது போலிருக்கு


இப்படித்தான்
பலமுறை ஏமாந்துபோனேன்!

எதட்காக என்னைத்தேர்ந்தெடுத்து
கதவுகளை அடைத்து
திறப்புக்களை ஒழித்துவைக்கவேண்டும்?


இதை எழுதவைத்த

அளவில்லாக் கோபத்தில்
அதிகமிருப்பதுபோலிருப்பது
என்னுடைய
அதீதமான அலட்சியங்களேயென்கிறபோது
நான்
பயணத்தில் பின்வாங்கிவிடுகிறேன்

நகரம்
அதேயிடத்தில் 

அப்படியேதானிருக்கிறது !.

..........................................................................


ஒரு 
கடிதத்துக்காய்க் காத்திருக்கிறேன்


சகஜமான மாற்றங்களுக்கு 
தாமதத்தை உருவாக்கும் 
அனுபவத்தில்
பழைய பாதைகள்
எங்கெல்லாம் சிதிலமானதோ
அவற்றில் சில திருப்பங்கள்
செப்பனிடப்படலாம் ,


எல்லா அலுவலங்களில்
வரவேட்புக் கைகுலுக்கல்
நிட்சயமாய்க் கிடைக்கலாம் ,


நீண்ட உரையாடல்
மிகநீண்ட விளக்கங்கள்
மிக மிகக்குறுக்கிய 

சலிப்பான வாக்குறுதிகள்

அலைகள் போலவே
கரைகளை நனைத்துவிட்டு
நீள்கின்றன பகற்பொழுதுகளைக்
காத்திருத்தலில்க்
களவுகொடுத்துவிட்டதாக நினைக்கையில்
இன்னுமின்னும் சவால்களைச்
சரிசெய்யும் உத்தேசம்
இந்தக் கடிதத்தின் செய்தியாகலாம்,


பிறகு
தாய்நாட்டின் முகவரியை
நிரந்தரமாக அழித்துவிடலாம்,


அதுக்குப் பிறகு
வெளிறிய வெள்ளைகளோடு
சரிக்குச் சமன் சடடம் வாதாடி
குடுமியைப் பிடிச்சு சண்டைபிடிக்கலாம்


இதட்க்காகத்தானே
நம்பிக்கையின் அடிப்படையிலே
அந்த ஒரேயொரு
கடிதத்துக்காய்க் காத்திருக்கிறேன்.........


................................................................

அகலமான தெருக்களில் 
கலாச்சார வெளிச்சத்தை 
மனமெங்கும் 
கைதியாக்கி வைக்குது
ஸ்டாக்ஹோலம் 


கால் வலிக்க
நடநட நட நடவென்ற

கால்நடையாக
இளைப்பாற முடியாத கணத்தில்
அவசரங்களை
வேகமாகச் சுமந்து திரிந்தபடி
நட்பில்லாத
மேம்போக்கான மனிதர்கள்தான்
அதிகம் தென்படுகிறார்கள்


நடிக்க மறந்த
வின்டர் உறைபனி
உண்மையாகவே சபதமெடுத்து
உயிரைக் கொல்லுது


பயணத்தின் முடிவில்
மிகப் பெரிய நகரம்
வழிகளை
இன்னும்தான் மறைத்து வைத்திருக்க


ஆங்காங்கே
சில கற்றை ஒளிக்கீற்றுக்கள்
ஒரு குகையின் முடிவில்
அதிசயங்கள் தரலாம்


இல்லாவிட்டால்
நம்பிக்கை கொடுக்கும்
நாலு நண்பர்களின்
நட்பான உதவிகளில்
கடந்துசெல்ல
ஒரு நீண்ட தீர்த்தயாத்திரை
காத்திருக்கு.........


.........................................................................

அதிகமதிகம்
பரஸ்பர மரியாதையை
தன்னளவில் சுயகவுரம்
மனிதத்தை மனிதனாக்குவது
நேரத்தைப் பொன்னாக்குவது 
இதையெல்லாம்
மிக இயல்பாக எதிர்பார்ப்பவர்கள்
தயவுசெய்து
ஸ்டாக்ஹோலோம் நகரத்தை
நினைத்தே பார்க்கவேண்டாம்


பத்து வருடம் முன்
இளகிய உதவும்

இதயம் இருந்த கதிரைகளில்
இப்போது நரிகள்
இருக்கிறார்கள் என்பதைவிட
இல்லாமலிருக்கிறார்கள்


பழக்கப்பட்டே
வழக்கமாகிவிட்டது
நீண்ட வரிசை
அதில்க் காத்திருந்து
நெருங்கிவரும் போது
தந்திரங்கள் கண்களில்
பிசாசின் நாக்கு வெளியேதள்ளப்
பிரகாசிப்பதைப் பார்ப்பீர்கள்


அவளவுதான்
பிறகு நைச்சியமான பேச்சு
இல்லாத ஊருக்கு

வழிசொல்லும் பரிந்துரைகள்

மாஷான சமாளிப்புக்கள்
தட்டிக்கழிக்கும் கணக்கு வழக்கு


அர்த்தமில்லாத புன்னகை
வாழ்வாதார உரிமைகளில் உரித்தெடுப்பு


கையை உதறி உத்தரவாதமான
அரசமுறை விடைபெறுதல்


முடிவில்
உத்தியோகப்பூர்வாமாக
வெளியே தள்ளப்படுவீர்கள் !


..................................................................................

பயணங்களுக்குத்
தயார்படுத்தப்பட்ட பாதையொன்றின்
வழிக்குறிப்பில்
தீர்க்கமாக எழுதப்பட்டவாறே
பிரியமான சஹியே 
இப்போதே தயாராகிவிடு !


நேற்றைவரையில்
வயதான முகங்களுக்குள்
இன்றைய
புத்தம் புதிய முகவரிகள்
மாற்றிவைக்கப்படப்போகிற
தீட்ஷன்ய யாத்திரை
நிகழ்காலத்தில் இறந்து
எதிர்காலத்தில் பிறக்கிறது


புள்ளிட்ட இடங்களை
நிரப்பிவைக்கும்
கேள்வித்தாள்போலவே
வாழ்க்கை


விடைகளுக்காகத் தவமிருக்க
இப்படியாகிப்போன
உருகிவழிந்தொழுகும்
உணர்வு வெளியாவதுக்கு
அடிப்படையான காரணங்களை
எத்திசை தேடினாலும்
நிறைவடைய முடியவில்லை

 .
நிலாப்பிரதேசங்கள்
எல்லைதொட்டு மாறப்போகின்ற
வளைந்த வானத்தில்
சிறைப்பட்டிருக்கும் மேகங்களும்
நினைவுக் கண்ணாடியில்
படிந்துபோன பிம்பங்களும்


மலர்கள் சிறைப்பிடித்துள்ள
செந்தாழ வாசனைகளும்
மழையில் நனைத்துப்போன
பஞ்சனைக் கதைகளும்
இனிதொடரப்போகும்
முடிவான பயணத்தில்
துருவ நட்சத்திரமாகலாம்


பிரியமான சஹியே
இப்போதே தயாராகிவிடு............!


...................................................................


இரைச்சல்களில் கலவரமான
மத்தியரெயில்நிலையம்

ஒரு
அடைக்கலக்குருவி
எப்படியோ உள்நுழைந்துவிட்டது 


குளிர்கால ஜன்னல்கள்
இறுக்கி அடிச்சுச்சாத்தியதில்
திசையறிதந்திரமிருந்தும்
இடைவெளிகளின் சாத்தியமேயில்லை


புத்திசாதுரியமாகத்
தாழ்வானபறைப்பைத் தவிர்த்து
வெளியேற்றப்பாதை தேடுது


வாசல்களை 
அடைத்துக்கொண்ட
மனித அவசரத்தில்
இன்னுமெவளவு நேரமதன்
இறைக்கைகள் வேகம் தாங்கும் ?


ஓய்வெடுக்கும் 
சில தருணங்களோடு
ஒரு
பயணத்தடத்தில் காத்திருக்கும்
எனக்குத் தெரியவில்லை,


அதன் பின் அதைக் காணவில்லை !

மேலே விட்டத்தில்
ஒரு பாதுகாப்பானமறைவில்
ஒளித்திருக்கலாம்


ரயில்நிலைய அவசரங்கள்
நடுராத்திரி பன்னிரண்டில்
களைத்து ஓய்ந்த பின்னர்
கடைசியான தப்பித்தல்
முயட்சிக்காகக் காத்திருக்கலாம்


அடைக்கலக்குருவிக்கு 
எங்கே தெரியப்போகுது
அனைத்து வழிகளுமந்தநேரம்
விளக்குகள் அணைக்கப்பட்டு
விடிகாலைவரையிலும்
அடைக்கப்படுமென்று .!



...................................................................


தொடக்கத் தடுமாற்றத்தை
எதிர்கொள்ள நேரிடுமென்பதை
நினைத்ததில்லை.
இயலாமைகளில்
விட்டுக்கொடுப்போடு இருக்கலாம். 


நீண்ட முடிவுக்குக் காத்திரு
என்பதைச்
சொல்வதெல்லாம் அராஜகம் .


முதல்க் காதல் போல
அனுசரணையுடன் அணுகவேண்டி
தவிப்புகள் நிறயவேயிருக்க
மலைப்பாம்பு போல
ஏப்பம் விடக் காத்திருக்கு
ஸ்டாக்ஹோலம் நகரம்


நடுக்கம் தருகிற பயத்தை மறைக்க
உக்கிரமடைந்து போகிறது
ஆத்மா


முன்னெப்போதும் இல்லாதபடி
விழித்துக்கொள்ளும் மனது
நான் யார் என்பதை முடிவுசெய்கிறது


நன்றாகப் பழக்கமான
இந்த நகரத்துக்கு
நானொரு எழுத்தாளன் என்று
சொல்லிவைத்திருக்கிறேன்


அதில்
அது நிறைவு கொள்வதுபற்றி
அதன் முகத்தில்
ஒன்றுமே தெரியவில்லை


புரிந்து கொள்ளக்கூடிய அளவில்
அது பதிலும் தரவில்லை


வைராக்கியமான அதன்
அகங்காரத்தின் முன்
என்
பரிதாபமான மொழி
தாக்குப்பிடிக்குதில்லை....


......................................................................

பிடித்த தடம் பதித்து நடந்த
பழைய வழிகளில்
விழித்தெழாத கனவொன்றில்
புரியமுடியாத
வாசனை மோப்பம் 


ஒளிதரும் திசைகளை
வேண்டுமென்றே
மறைத்து வைத்திருக்கு
ஸ்டாக்ஹோல்ம் நகரம்


அதன் அபரிமிதமான
காற்றின் செய்திகளில்
என்
குளிரில் விரைத்த
உள்ளங்கையைத் தடவிப்பார்த்து
சட்டென்று கண்டுபிடிக்கும்
வித்தைகள் பலிக்குதேயில்லை .


அனுபவம் என்ன பாவம் செய்தது ?

முக்கித்தக்கி
இன்னொருமுறை முன்னேற
முயட்சிக்கு எப்படி
முடக்குவாதம் வந்தது ?


இந்த நாட்டில்
நீயே உனக்கு அதிபதி
உன்னோட
தன்னம்பிக்கைதான் விதி
மற்றவர்கள் எல்லாருமே
தூரமாகி நிட்பவர்கள்


சிலர் விழுந்துகொண்டிருப்பதை
வேடிக்கை பார்ப்பவர்கள்

ஏதாவது பார்த்து செய் என்கிறாள்
லாமியா .


பிரயோசனம் இல்லாத போதும்
இப்போதைக்கு இதனை
யதார்த்தம் என்று சொல்லமுடியவில்லை.


............................................................................................

சிலந்திவலை போலவே
அளவுக்கு அதிகம் உரிமை எடுத்து
அமைதி கசிந்துகொண்டிருக்கும்
பிராத்தனை நாள்


மெலிந்துபோன குளிர் காற்று 
புனித செயின்ட்கிளாரா
தேவாலயக் கதவைத் தொடுகிறது


நடு மண்டபத்தில்
பழைய மரப் பியானோவில்
செபாஸ்டியன் பாச் இன்
முடிவுறாத சிம்பொனியை
மெய்மறந்து வாசிக்கிறான் ஒருவன்


திருச்சபை மேடையின்
ஊதுபத்தி வாசனையில்
பாட்டியின் செத்தவீட்டு நினைவுகள்
சுழன்று சுழன்று அப்பிக்கொண்டது


ப்பரிகையில்
இராப்போசனத்தில்
ஜேசுநாதரை கண் ஜாடையில்
ஜூதாஸ் சக்காரியாஸ்
காட்டிக்கொடுக்கும் கன்வஸ் ஓவியம்


வயதான வெள்ளை மனிதர்களின்
விழிமூடிய பிராத்தனையில்
வருடம் தவறாமல்
கர்த்தர் பிறக்கும் நம்பிக்கை


வீடில்லாத தெருவாசியொருவன்
அடக்கவே முடியாமல்
நெஞ்சு விலாஎலும்புகள் குலுங்க
தொடர்ச்சியாக இருமிக்கொண்டிருக்கிறான்


நானோ
சூடானவொரு கோப்பி கிடைக்குமாவென்று
சொண்டு உலர அங்கலாய்க்கிறேன்


வெளியே உல்லாசமாக
எதையுமே கணக்கிலெடுக்காமல்
முழங்கால் வரையில் சலங்கைகட்டிச்
குதி அதிர சதிராடிக்கொண்டிருக்கு
ஸ்டாக்ஹோலம் நகரம்.


....................................................................................

காலை நடைபாதை
வழக்கத்திற்கதிகமான குளிர்
மெட்ரோவில் கூட்டத்திற்கு குறைவில்ல


ப்போதும் ஒரு அங்கலாய்ப்பு
ஏதேனும் ஒரு மறதி 
நீண்ட முடிவில்லாவொரு
வரிசையிலேயே
காத்திருக்கும் பிரமை


தேவாலயக் கதவுகள் அகலத்திறப்பு
மேம்பாலத்தைக் கடக்க
பராமரிப்பற்று உறைபனி மூடிக்கிடக்கும்
சிறுவர் பூங்கா.


அலைகிற ஒவ்வொரு மனமும்
சாகமாட்டாது என்கிறது
முன்னேறும் முன்னிருட்டு


யன்னல்களில் நட்ச்சத்திர
அலங்கார குமிழ் விளக்குகள்


இழுத்து மூடப்பட்டிருக்கிறது
கடன் கொடுக்கும் வங்கி


திறந்திருந்து மினுங்கும்
கிறிஸ்ம்ஸ்
திரை வெளிச்சத்தை சிதடிக்கும்
விளம்பரங்கள்


முண்டியடித்துக் கொண்டு நிற்கிற மக்கள்
பண்டிகை கொள்வனவின் கனவில்
உதட்டைப் பிதுக்கியபடி
வெளியேறும் மூச்சுக் காற்று


பாலன் பிறப்புக்கு
பிரத்யேகமாக திறந்து விடப்படும் என
நம்பிக்கைதரும் காலநிலை


அனைவரையும் கோமாளிகளாக்கிவிட்டு
யாராவது ஒருவர் சிரிக்கலாம் என்கிறது
ஸ்டோக்ஹோலம் நகரம்


அந்த நபர் நானாகவும் இருக்கலாமோ
தெரியவில்லை.!