Tuesday 6 March 2018

செய்வதுக்கு ஒன்றுமேயில்லை..


சில வருடங்கள் முன்னம் நீண்ட கவிதைகள் ஒளிப்படங்களோடு எழுதியிருக்கிறேன். சில வாசக நண்பிகள், " ஏன்பா நாங்கள் என்ன நேர்சரி பிள்ளைகளா படம் பார் பாடம் படி எண்டு பிலிம் போட்டு காட்டினாலா, அல்லது நிலவைக் காட்டி நிலா நிலா ஓடிவா என்று சொன்னாலா எங்களுக்கு விளங்கும்,, எங்களுக்கு வார்த்தைகளில் உள்ள அர்த்தம், வரிகளின் உணர்ச்சி கனமாகி வாசிக்கும் போதே மனப்படமாகி விடுமென்றால் அது போதும் பா, " என்றார்கள் . அவர்கள் சொல்வதில் உண்மை இருந்ததால் ஒரு கட்டத்தில் ஒளிப்படங்கள் எனக்கும் சலித்துப்போய்விட்டது. நீண்ட கவிதைகள் அப்போது எழுதினது உண்மைதான் அதுக்கும் சில வாசக நண்பிகள், , " , ஏன்பா உனக்கு சிக் என்று சுருக்கமா அஞ்சு வரியில் எழுத தெரியாதா பா , ,இந்த நீண்ட அல்லாடல்களை வாசிக்க நேரம் ஒதுக்கினா வீட்டில பிராணநாதன் எங்களை ஒருபக்கமா ஒதுக்கி வைச்சிருவார் பா,,பார்த்துப்பா,பிறகு அந்தப் பாவம் பரம்பரைக்கும் உன்னைத்தான் பிடிச்சு உலைக்கும் பா , " என்று சொன்னார்கள், அவர்கள் சொன்னதில நியாயம் இருந்திச்சு. , காலம் போற போக்கின் வேகம் தெரியாமல் , சுருக்கி எழுதாமல் தெரியாத்தனமா அப்போது எழுதிப்போட்டேன், இப்ப அப்படி எழுவதில்லை. . இந்தக் கவிதைகள் என் முகநூல் சுவரில் சில வருடங்கள் முன் வலம்வந்தவை , நல்ல காலம் சேமித்து வைத்தேன், அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.





அந்தப் பெண் குழந்தையின் 

கேள்விகளில் 
நாலே நாலு விடயங்கள்தான்
உங்களுக்கான
உலகம் தெரிந்தவரையில்
விடை தெரியாமலிருந்தது

முதல்க் கேள்வி
எதற்காக வளர்ந்த மனிதர்கள்

அவசரமா ஓடுகிறார்கள் ?
அதுக்கு 
புதர் ஓரமாகவிருந்த 
கறுப்புப் பூனையை
கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தாள்


ரெண்டாவது கேள்வி
என்ன காரணமாக

அம்மா எப்போதும்
கையைப்பிடித்து இழுத்து
வழிகளையும் நடைபாதையையும் காட்டுறா ?
அதன் விளக்கமாக
சோலை முடியும் சாலை ஓரம் 
ஒரு மர அணில் விபத்தில் 
செத்துக்கிடந்தது

மூன்றாவதாக

மேகமில்லா வானம் ஏன் 

எல்லாவித நிறமாக இருக்கென்று நினைத்தாள்
பிறந்த நாளுக்குப்
பறக்கவிட்ட பல்வர்ணப் பலூன்கள்
போதுமான
காரணமென்று சமாதானமாகினாள் !


நாலாவது 
மிக முக்கியமனான கேள்வியின்

நடுவில்
குறுக்கிக்கொண்டு நானும் 
கும்பிட்டபடி நீங்களும் 
நிற்பதால்
இப்போதைக்கு அதை விட்டுவிடுங்கள்
அவள்
பெரிய மனுசியான பின்
அதுக்குவிளக்கம் சொல்லுவோம்!

...................................................................................................................................





அந்தக் குடிகாரன்
வெற்று விஸ்கிப்போத்தலை
வெறித்துப் பார்ப்பதில்
அவனின் தோல்விகள் எல்லாமே
மயக்கிக்கொண்டிருந்தது ,

யாரை நினைத்துக் குடித்தான்

என்பதே 
அவனைத் தவிர உலகத்தில்
யாருக்கும் முக்கியமில்லை
அவனின்
முகச்சவரம் செய்யாத
நீண்டநாள் எழுதிய கவிதை
விளங்கவேயில்லை
ஆதர்சங்களை இன்னும் அழகாக
அடுக்கியிருக்காலாமே
மூடிகளைத் தேடி எடுத்து
உப்பில்லாத நாக்கில் தடவிப்
பொருத்திப் பார்க்கிற நேரம்
எங்கிருந்து
என்ன வந்தது 
அங்கிருந்து நஞ்சு வந்தது போலிருக்கு
ஒரு மதுமயங்கியின்
உலகத்தில்
தொடக்கம் தெளிவாகவே இருக்கும்
முடிவுகள் என்னவோ
உத்தரவாதமாக
முரண்பாடாகவே இருக்கும்
போதை இறங்கும் இடையில்
நீங்கள் சொல்லும் எல்லா விளக்கமும்
அவனுக்குக் குழப்பமாயிருக்கும்
குடிகாரன் 
உங்களுக்குக்காக குடிப்பதில்லை
அவனுக்குக்காகவே 
நைத்துப் போன ஆத்மாவை 
அழித்துக்கொள்கிறான்
இன்னொருமுறை
பாதை ஓரமோ
புல்வெளியிலோவொரு
வெற்று விஸ்கிப் போத்தலைக் காணும்போது
பலவிதமான திருட்டுக்களில்
சந்தோசங்களைக் களவெடுத்த
கணத்தையும் நினைத்துக்கொள்ளுங்கள்
.................................................................................................................................




இரவுநேரத்தை

விலைபேசும் பெண்ணின்
மஸ்காராக் கண்களில்
மயில் அகவிக்கொண்டிருக்க
நகரமே
நீலப்படம் போலிருந்தது

நீண்ட குதியுயர்ந்த சப்பாத்தில்

அவள்
இன்னும்மின்னும் உயரமாகவிருந்தாள்
சாம விளக்குகள்
சாமந்திப் பூப்போல
மன்மதக் கன்னங்களை 
இடம்மாற்றிக்கொண்டிருந்தன.

மிகமிக இயல்பாக
கருங்கல்லுப் பாதையில்
வெட்டிவெட்டி
நடந்துகொண்டிருந்தாள்
நானோ 
ஓரமாக கவனித்துக்கொண்டே
கடந்துகொண்டிருந்தேன்.

மஞ்சள் அரைச்சுப்பூசி
மனதை மயக்கிய மச்சினியா 
அவளெனக்கு
எதற்காக நிமிர்ந்து பார்க்கவேண்டுமென்றுதான்
ஆசைகளை அடக்க நினைத்தேன்
அவள் கால்கள்
காலத்தைக் காலியாக்கிக்கொண்டிருந்தது.
மிச்சமுள்ள 
இச்சைகள் எச்சில்வழியவைக்க
கிட்டவாகப் போய்
ஒருதரம் ரசித்தேன்.

செவ்வாழைத் தொடைகளுக்கு நடுவில்
மிகப்பெரிய பணக்காரன் 
ஒருவன்
சில மணித்தியாலங்கள்
பிச்சைக்காரணாகியிருக்கலாம்.
......................................................................................................................................



அந்தப் புல்வெளியை
சமஜோசிதமாக இணங்கவைத்து
ஒரேயொரு கவிதைஎழுதும்
உதேசங்களுடன்தான்
மாலை முழுவதும்
காத்திருந்தேன்
சிணுங்கல் மழை
புதர்களைக் குளிப்பாட்டிவிட்டுத்
குளிரில் நடுங்கவைத்து
தலைதுவட்ட மறந்து
புருஷனுக்குச் சமைக்க
மேற்கால ஓடிக்கொண்டிருந்தது.


வெள்ளை மேகத்தை
கறுப்பு மேகங்கள்
மாத முடிவில்
கந்துவட்டிக்காரன் போல
திரத்திக்கொண்டிருக்க
சாம்பல் நிற அடிவானம்
நமக்கு எதுக்கு வம்பு என்பதுபோலப்
பதுங்கியது.


மார்பில் அடித்துக்கொண்டு
மிகத் தாழப்பறந்த
வில்லோப் பறவைகள்
விரல்விட்டு எண்ணவும்
அகலமான இறகுகளில்இடம் தரவில்லை,


இந்த இடத்தில்தான்
முன்னொரு போது
கார்க் கதவுகளை அகலத்திறந்து
உறைபனி விறைக்க வைத்த
உள்ளங்கைகளை
நெஞ்சோடு உரசிச்சூடாக்கிய
நினைவுகள் வந்தது.


புல்வெளிக்கு
அதுவும் நல்லாவே ஞாபகமிருக்கலாம்
ஆனால்
எனக்கு இப்ப விபரிப்பு வேண்டும்
அதுவும்
புத்தம்புதியதான வரிகளில்
உரித்து எடுத்து எழுதக்
காற்றும் வார்த்தைகள் தரவில்லை,


கும்மிருட்டில் குந்தியிருந்து
மின்மினிப்பூச்சிகள்
புறப்பட்ட நேரம்
அவிட்டுக்காட்ட இனி எதுவுமில்லை
என்பதுபோல
இருள் அடாவடியாக நெருங்குவரை
அங்கேதானிருந்தேன்.


இருட்டின் இலக்கணத்தில்
வரிசைக்கிராமமாக எல்லாம் வந்தது
கவிதைதான் வரவேயில்லை !


.............................................................................................................................





என்னை
மதிக்கவேகூடாது என்பதுபோல
சீண்டிக்கொண்டிருந்தது
மந்தாரம் போட்ட வானம்
அப்பவும் உறுதியாக
மழையைப் பற்றி
இனி எழுதவதேயில்லை என்ற
முடிவோடுதான்
அந்த சதுக்கத்தில் இருந்தேன்,


அவசர மனிதர்கள்
ஆவேச வேகமாக
நடந்துகொண்டிருந்த
சப்பாத்து விழிம்புகளில்
எள்ளிநகையாடி
தூறலும் சாரலுமாக
அதுதான் எனக்கு முன்னே
வெறுப்புக் காட்டியது,


நானென்ன
விசுவாமித்திரனா
ஊர்வசிக்கும் மேனகைக்கும் மயங்க
சும்மா அசையாமல்
நடு மண்டையில் விழுந்து
நெற்றியில் உருண்டு
நாக்கில் ருசிக்கும்வரை
வழித்து விட்டுக்கொடுத்துகொண்டிருந்தேன்,


என்னதான் நடக்குமென்ற
நப்பாசையில்
நாலு மணித்தியாலம்
தெப்பலாகவே நனைத்தேன்
ஒதுங்கும் எண்ணங்கள்
அதுவரை வரவில்லை,


என் பிடிவாதங்கள்
தொடுவானம் வரை நீள
மழையதன்
புறம்போக்குப்புத்தியைக் காட்டியது
அதன் கடைசி அஸ்திரம் அதுவென்று
இடியும் மின்னலும்
முன்னமே சொல்லியிருக்கின்றன,


என்
உள் உடுப்புக்கள்
குளிரத் தொடங்கியபோது
மார்பிடைப் பள்ளத்தாக்கில்
முகம்புதைத்து இதம் தேடிய
உன்
சூடான வாசம் வந்ததடி,


நாசாமாப்போன மழை
நினைத்ததை சாதித்தேவிட்டது
நான்தான்
தோற்றுப்போனேனடி.!



...........................................................................................................




உயிர்வாழ்தலில்
சந்தேகமேயில்லாமல்
நிர்ணயிக்கப்பட்ட
அந்த நிறைவு நாள்
எப்போது சொல்லிவரும் ?


எல்லாக் கடன்களும்
இழுபறிப்பட்டாவது
கொடுத்துமுடிந்துவிட்டது,
எல்லாருக்கும்
நல்லவன் போலநடித்துக்
களைத்துவிட்டேன்,


சுவைநிரம்பிய எல்லாச்
சாப்பாட்டையும்
சாப்பிட்டு ஏப்பம்விட்டாகிவிட்டது,
வடிவமைக்கப்பட்ட உடைகள்
வேண்டிய மட்டும்
போட்டு அழகுகாட்டியாச்சு,


இனிப்
பார்ப்பது ரசிப்பதுக்கும்
சொர்க்கமே இறங்கிவந்து காட்டிய
இடங்களே
சலித்துப்போய்விட்டது,


நல்லதாக நாய்வாலை நிமிர்த்தி
நாலு வரி எழுதி
சிந்திக்க வைத்ததில்லை,
அதனால் என்ன
சிலநேரங்களில்
சிரிக்க வைத்திருக்கிறேன்,


கடமைகள் கனதியாகவிருந்தபோது
முடிந்தவரையில்
வசவு வார்த்தைகளோடே
பொறுப்புகளைப் பகிர்ந்தேன்,


இப்பிடியே
ஒரு வட்டத்தை இயக்குவதை
வாழ்க்கை என்கிறீர்கள் நீங்கள்
சரி
அந்தச் சுழற்சியில்
நான் எதற்கு
உங்களிடம் வந்து மாட்டினேன் ?



..............................................................................................................





இரவெல்லாம் 
இன்னொரு கனவு
அதில் நான்
மிகவும் விருப்பமாகி
ஆறுதல் தேடி எடுத்த
நெருக்கமான மனிதர்களுடன்
இறந்தகாலத்தில் வாழ்ந்தேன்,


கண் முழித்துப்பார்த்தால்
இன்னொரு நியக்கனவு
அதில்நான் உத்தரவாதமாகக்
கையைக் காலை ஆட்டி
வேலைக்கு ஓடிக்கொண்டு நடமாடுகிறேன்,


சொல்லும்படியாக
இதில்தான்
நரிபோல எல்லாரையும் முட்டாளாக்கி
நாட்டியமும் ஆடமுடிகிறது !
பிறகு
எதுதான் உண்மையான
விதியின் அதிகாலைக்கனவு ?


எதுதான்
அந்தரத்தில் நிரந்தரமான மயக்கம் ?
அல்லது
எதெல்லாம்தான் நிர்மலமான தெளிவு ?


சென்ற கிழமை நடந்த
அயல்வீட்டு அறிந்தவரின்
மரணச்சடங்கில்
சடைபின்னிய சின்னப் பெண்
சவப்பெட்டியைச்
அசையவிடாமல்க் கட்டிப்பிடித்து
" இன்னொருமுறை
எனக்காகவே வாழ்ந்துவிடு தாத்தா "
என்று சிதறிக் கதறுகிறாள்


" இன்னொருபரிமாணத்தில்
உன்
பிரியமான தாத்தா
இனிதான் உண்மையாகவே
உனக்காக வாழப்போகிறார் "
என்று சொல்ல நினைச்சேன்,


எனக்கோ
அறிவியல் அவலமான இடத்திலயும்
சப்அட்டமிக் பார்டிகல் குவாண்டம் பிசிக்ஸ்
புரிந்த அளவில் தெரியும்
அவளுக்கு
அளவில்லா அன்பு மட்டுமே தெரியும்,


அதுதான்
சாவின் பிரைச்சனையே !



.............................................................................................................................




காலமொரு
முடிவில்லா வேட்டை 
பாகப்பிரிவினை போன்ற 
சில போலியான சம்பவங்களோடு
இயல்பாகவேயது 
இயங்கிக்கொண்டிருப்பது போலிருக்க
சிலநேர அங்கீகாரம் பெற்ற
அது நிச்சயமாக
போலிப்பெருமிதங்களிலும்
புரிவில்லா அறிமுகத்திலும்
மையம் கொண்டது,


மணித்துளிகள்
கடிகார முட்களின் சுழற்சியில்
நொடிகளாக மரணிப்பதைப்
பார்த்துக்கொண்டே
உயிரின்
பிடியினை மேலும் இறுக்கமாக்கி
நேற்று நடந்ததில்
நல்லதே இல்லையென்றும்
இன்று கடப்பதில்
திருப்திகள் இல்லாமலும்
நாளைக்கு மட்டும்
வெற்றிகள் குவியுமென்ற
பிரபஞ்ச மாயையின்
நமபிக்கைச் சிக்கல்தான்
காலமென்று நீ சொல்கிறாய்,


நானோ
வெட்டவெளியில்
வெற்றிடமாகக் கைவிடப்பட்ட
இடத்தை நிரப்பும் ஈர்ப்புவிசையின்
மறுபிறப்பு என்கிறேன்,


உனக்கு கட்பனைமட்டுமே தெரியும்
அதனால்அப்படி நினைக்கிறாய்,


எனக்கு
ஒன்றுமில்லாததில்
அர்த்தம் கண்டுபிடிக்கத் தெரியாது
அதனால் இப்படிச் சொல்கிறேன்,



............................................................................................................




உன்
கடுங்கறுப்பு நிற

சின்னச் சப்பாத்துக்கள்
இனியுனக்குப் பொருந்தவேபோவதில்லை
அதன் வார்களையும்
நோகடிக்க விரும்பாமல்
தத்தித் தாவி நடைபயின்ற
வித்தைகளையுமது மறக்கவில்லை,

உன் உலகம் போலவே
பாதங்களும் இப்போது பெரிதாகிவிட்டது,
என் 
கனவுகள் போலவே
அதுவும் காலம்கடந்து விட்டது,

நீயிப்போது 
என்னைவிடஉயரமான
பெரியதனமான பெரிய மனுசி,

என்ன காரணமென்று 
சொல்லமுடியாததும்
விழுங்கமுடியாதுமான 
ஒரு
 நீண்ட பிரியமான நினைவில் 
மெல்லவே நோகாமல்த் துடைத்து
இப்பவும்தான் அதை
மிகமிக முக்கியமாக
எப்போதும் பார்க்கும்படியான
அடக்குத்தட்டில் வைத்திருக்கிறேன்,

நீ வரும்போது
அதைப் பார்ப்பாய் 
அதைப்பற்றிப் கேட்பாய்யென்று 
நப்பாசையுடன்நினைப்பது,

நீயோ அதைத்தவிர 
வேறெல்லாம் விபரிப்போடு கதைப்பாய்
காசுக்கொடுப்பனவுக்
கணக்கு வழக்குளில்
உனக்கு எப்போதும் தெளிவிருக்கும்,

அதிலுன் பிஞ்சுவிரல்களின்
அக்குள் வியர்வைவாசம் 
இப்பவும் அப்பியிருக்கு
அதுவும் 
எனக்குமட்டுமே தெரியும்,

இன்னொருமுறை 
நீயும் பிறக்கப்போவதில்லை
நானும்
அந்த வாசத்தில் சுவாசம் இருக்கும்வரை
இறக்கப்போவதில்லை.!
.