Tuesday 7 August 2018

ஒரு கனவென்பது....!

ஏறக்குறைய கடந்த ரெண்டு வருடங்கள் விட்ட குறை தொட்ட குறையாக    முகநூலில் எழுதிப்போட்டு ஆங்காங்கே சிதறிக்கிடந்த எல்லா கவிதைமொழிப் பரிசோதனை முயற்சிகளையும் ஒவ்வொரு தலைப்பில் என்னோட வைப்புச் சொப்புக்கள் எல்லாம் பதுக்கி வைத்திருக்கும்  மின்னேறிஞ்சவெளி வலைப்பூங்காவில்  தொகுத்தாகி முடிந்து விட்டது .


                                                               இதை எல்லாம் தொகுப்பதே எனக்கொரு சத்தியசோதனை போலிருந்தது . நீங்க பிறந்த ஜனன ´லக்கின  கிரக ராசிக்பலன் படியும் இனி உங்களுக்கும் சோதனை அதிகம் இருக்கப்போவதில்லை.  இதுதான் கடைசித் தொகுப்பு, இதோடு வாசிக்கிறது தொல்லையில் இருந்தும்  உங்களுக்கும்  களிப்புக்  கழியுது.


                                                 தொடர்ந்தும் எழுத முடியுமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கு. நிண்டான் திண்டான் பாஞ்சான் போல எப்பாவது சில நாட்களே முகநூல்ப் பக்கம்  வரவும், வந்து பதிவுகள் வாசிக்கவும், வாசித்து லைக்கவும் , சிலநேரம் கொமெண்டவும்  முடிகிறது. அவளவுதான் இப்போதைக்கு சொல்லமுடிகிறதும் !




*


இந்தப் பூவோடு
அனுக்கிரகத்தை நினைப்பதை 
நிறுத்திவிடுங்கள் ! 
கொடியில் 
தளிர் அரும்பாகி 
செடியினில்
குளிர் விடியலோடு
தென்றல் தாலாட்டி மலர்ந்து
மடியில் விளையாடும்
மயில் ஊஞ்சல்
வயதொன்றில்
கதவுகளற்ற
கர்ப்பக் கருவறையில்
கடவுளின் காலடியில்
பிய்த்து எறியப்பட்டாள்
காஸ்மீர் ரோஜா !
இனியாவது
ஆண்டவனுக்கு
மலர்களை அர்ப்பணித்து
அவமதிக்காதீர்கள் !




*


நொதித்துக்  கொதிக்கும்
ஆடி  மாதம் ,
நீள வாக்கில்
வெட்டி வைச்ச
தர்ப்பூசணி,
அதன்
குங்கும நிறத்தில்
வெய்யின் ருசி !



*

ஒரு 
விடுமுறை நாளில் 
ஒரு 
சாவோடுசம்பந்தப்பட்ட
ஒரு 

பொருந்திவராத நேரம்

ஒரு
அடிவானத்தை

வடிவமைத்துக்கொண்டிருக்கு
முகில்களோடு மோதும்

ஒரு
வானம்பாடி!




*

நீலக் கடலும் காற்றும்
நிறைவு வாழ்வும்
நுரைபொங்கி
அலை தவழும் நினைவு,
களைத்துப்போன மனது ...
உயிர்வாழ்வதை
எனக்குள்ளேயே
வலிய மறுதலிக்க
இரவின் போர்வை விலத்தி
விடிந்தது
சென்ற வருடமொன்றில்
இறந்துபோனவளின்
பிறந்தநாள் !



*





ஒரு
உண்மை

ஒரு
இடம்மாற்றிவைத்த உத்தி
ஒரு
நியாயத்தை அநியாயப்படுத்த

அறுதியிடுகிறது
ஒரு
அலங்கரிக்கப்பட்ட

பொய்.






*

மனப்பிரமைகளை
இன்னொருவரில்த்
தேடிக்கதைக்கும் போதெல்லாம்
செவிப்பறை கிழிகிறது !
இதுதான் ...

நடந்துமுடிந்ததென்று
என்னமோவெல்லாம்
உருவாக்கிப் பிசத்துகிறாய் !
சரி
ஒத்துக்கொள்கிறேன்
மிகவும் அயர்ச்சியான
உள்மனப் பிறழ்நிலமைகளை !
ஆனாலும்
நண்பா
நானில்லாமல்ப் போனபின்னாவது
நிரூபிக்கமுடிந்த எல்லாவற்றையும்
சொல்லவிரும்பாமலிருந்ததை
ஒப்புக்கொள்வாயா ?


*


ஒரு
கண்ணாமூச்சி விளையாட்
டு
ஒரு
பறத்தலுக்கான போராட்டம்

ஒரு
அகாலமான நினைவு 
 
ஒரு
பதற்றமான திசைப்போக்கு

ஒரு
பரபரப்புகளில்லா வானவெளியில்
ஒரு
ஊகிப்பதற்கான இடைவெளியை
நிராகரித்துவிடுகிறது!





*


நீண்ட
வழித்தடத்தில்
இருட்டு ,
கோடை மழையில்
நெருக்கமான
முத்தச் சூடு,
நட்சத்திரங்களெல்லாம்
விருமுறைக் கொண்டாட்டத்தில் 
பால் வீதியில்
உறங்கியபடி,
நான்
எனக்குள்ளேயே
என்னோடு
தனித்துப்போய்யிருக்கிறேன்......
எனக்குத் துணையாகாவே
வெளிச்சங்களை
அளவாகவே
கசியவிட்டபடி
விடியும்வரை 
அலைக்கழியுது
வசந்தகாலக் காற்றில்
ஏற்றி வைத்த
அகல் விளக்கு !

*











தலை வாழை
இலை போட்ட
விருந்து ..

நீ
குனிந்து
நிமிர்ந்து பரிமாறுகிறாய்
,
திறந்த ஜன்னல்களில்
வெட்கப்பட்டுக்கொண்டிருக்கு

தென்றல் ..!

*


இசையோடும்
கதையோடும்
இலங்கை வானொலியில்
பொங்கும் பூம்புனல் ..
சிறப்புக் கதை சொன்ன
ஆனந்த விகடன்


மாமரத்தில மஞ்ச மைனா
மஞ்சவண்ணாவில மாங்குயில்....
வெய்யிலை விழுங்கிய
வேப்பமர நிழல்கள்...
அலட்டிக் கொள்ளாத
நீல வான மேகம்...
வாசமள்ளி எறிஞ்ச
மல்லிகைப் பந்தல் .....
நினைவுகளில்

ஒரு
கனவென்பது
நிண்டு கொல்லும்

அந்தக்
கணாக் காலம்!


*



ஒரு
புத்தம்புதிய

காலத்தைத் தேர்ந்தெடுத்து
ஒரு
வாழ்கையைக் கொண்டாடிவிட
ஒரு
சொர்கமில்லை என்று

அங்கலாய்க்குது
ஒரு
பெயர் வைக்கப்படாத

பறவை !


*



விட்டில் பூச்சிகளை
நெருங்கிப் பார்க்கவிடாமல்
இரவுமுழுதும்
எதையோ
மறைக்கவிரும்புகிறது
சிம்மினி விளக்கின்
கண்ணாடிகளில்
திரைபோடும்
கரும்புகை !



*


ஒரு
எரி கல்லுப்போல
ஒரு
செங்கோணமுக்கோணத் திசையிலிறங்கி
ஒரு
தீர்மானமான உறுதியோடு
ஒரு
வெற்றிடமான நொடியில்
ஒரு
தற்கொலை !



*

இந்த மரவீடு 
பசுந்தீவனப்புற்களின் 
சேமிப்புக்களஞ்சியமாயிருக்க
லாம் !



குதிரைகளின் 
பிராண்டல் வாசம் 

பழைய நண்பன் போல
நினைவழியா
இதயசுகமாயிருக்கு, !



வாசனை முழுவதும்
நினைவுகள்
தாங்கிப்பிடிப்பதால்
கழுத்தைத் திரும்பிப் பார்க்காமல்
கடந்து போவது
இலகுவாயிருக்கவில்லை,



காலத்தை
உதாசீனம் செய்துகொண்டதாலோ
தெரியவில்லை
பண்ணைக்களஞ்சியம்
ஒரு பக்கம் சாய்ந்துவிட்டது,



கறலரித்துக்கொண்டிருக்கும்
இரும்புத் திருப்புமுனைகள்,
இடுக்குகளிலும்
சிலந்திவலைகளைத் தாண்டி
உள்நுளையமுடியாத
பழைய வெய்யில் ,



உக்கிக்கொண்டிருக்கும்
வைராக்கிய மரச்சட்டங்கள் .
தூசி அப்பிப்படிந்தும்
நிலையாமையை நியாயப்படுத்த
சிதைவுகளோடு எதிரியாகி
மாறிமாறி முரண்படும்
வரலாறு ,



நான்
குதிரைலாயத்தை
கொஞ்சநேரம் தான்
நடைநிறுத்தி நின்றுபார்த்தேன்



அதற்குள்ளேயே
வாழ்ந்தழிந்து முடியும் போதும்
தொடக்கப்புள்ளியில்
கொண்டுவந்து நிறுத்திய
அதன் பிடிவாதங்கள்
என்
நிகழ்காலத்தை நிராகரித்துவிட்டது !