Thursday 27 April 2017

வஸந்தியக்கா !

 எங்களின் ஊர்ல எப்பவும் சொல்லுவார்கள் மனநிலை சரியில்லாத ஒரு ஆணுக்கு கலியாண வயது வரும்போது ஒரு பெடிச்சியைப் பிடிச்சு சடங்கு செய்து வைத்தால், ரெண்டு பிள்ளை பெற்றவுடன் ஆசா பாசம் காட்டி  அவனை எப்படியும் அவள் நோர்மல் நிலைமைக்கு கொண்டு வந்து  சரியாக்கி விடுவாள் என்றும். அதைவிட என்னோட பாட்டி எப்பவும் சொல்லுவா,  கலியாணம் செய்து வைப்பது  நூறு வருடம் ஏழைகளுக்கு வயிறாற  அன்னதானம் போட்ட கோபுரங்கள் தரிசித்த  கோடி புண்ணியம் எண்டும் சொல்லுவா. 

                                                இது ரெண்டையும்  நம்பித்தான் அத்தானுக்கு வஸந்தியக்காவுக்கும் கலியாணம் செய்து வைத்தேன் .


                                          
நல்ல மனநிலையில் திடகாத்திட்டமாய்  உள்ள  ஆண்களே  கலியாணம் கட்டினவுடனே  பல இடங்களில் மனப்பிறழ்வாகி  இருக்கிறார்கள். அல்லது வாற  குடும்பக் குத்துவிளக்குகள் பல ஆண்களை சிக்கவைத்தே சின்னாபின்னம் ஆக்கியும் இருக்கிறார்கள். 

                                                       இதுக்குள்ள     மனநிலை சரியில்லாத ஒரு ஆணுக்கு ..... இந்தமாதிரியான கோணங்கிகளின் கோட்பாடு  நடைமுறைக்கு உதவாது என்று தெரிந்தாலும் , வாலறுந்த பட்டங்களும் பறக்கலாம்  என்பது தானே வாழ்வின் நம்பிக்கை,  என்ன செய்வது பரீட்சித்துப் பார்க்கலாம் என்றுதான் எப்போதும்  நினைப்பது,
                                  
                                               அது நாலாம் நாளே பிசகி சொதப்பும் என்று நான் நினைக்கவேயில்லை. 

அத்தான் நோர்வேயில் இருந்தார். நானும் அப்போது நோர்வேயில் இருந்தேன். வஸந்தியக்க என்னோட நண்பன் முசக்குதிக்காட்டு நேரடி வழிமறிப்பு  மோதலில்........ என்ற இயக்கத்தில் இருந்த போது வலதுகாலை இழந்த கொழுவிக் குமாரின் மூத்த சகோதரி. 

                                               கொழுவிக் குமார் ஜெய்ப்பூர் செயட்கை பிளாஸ்டிக் கால் போட்டுக்கொண்டு, விடுதலைப் போராட்டத்தைத் தூஷணத்தில் திட்டியபடி இப்பவும் ஊர்ல இருக்கிறான்,


                                                             
அன்றாடம்  சில்லறைகளையோடு அல்லாடும்  சைக்கிள் திருத்தும் கடைவைச்சுக்கொண்டிருக்கிறான். தனியாத்தான் இருக்கிறான். அவன் பருத்தியடைப்புமுனையில்  வள்ளம் ஏறி இந்தியாவுக்கு ட்ரைனிங் எடுக்கப் போகும் வரையில் உயிருக்கு உயிராகக் காதலித்த அவன் காதலி அவன் கடைசியில் தோற்றுப்போய் வந்த போது வேறு ஒருவரைக்  கலியாணம் கட்டி ஹோலன்டுக்குப் போய் போய்விட்டாள் . 

                                                   எல்லாக் கவலைகளும் விழுங்கியபடி இப்பவும் தனியாத்தான் இருக்கிறான் கொழுவிக் குமார் . இந்தக் கதை கொழுவிக் குமார் பற்றியது இல்லை. ஆனால் அவன் நிலைமைக்கு இரங்கி அவனின் அக்கா , வஸந்தியாவுக்கு கலியாணம் செய்துவைக்கப் போனதோடு முள்ளில் பாதம் வைத்து  நடந்து போனவைகள்


 வஸந்தியக்க தொண்டர் ஆசிரியர் என்ற பஸலிட்டி டீச்சர் என்ற வேலையில்  ஆரம்பப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மாதாந்த வசதிப் பணத்தில் மாதம் மாதம் தொங்கிக்கொண்டிருந்தா  . சுமாரான நிறமுடைய அழகான பெண் . கே ஆர் விஜயா போல அழகா சிரிப்பா. மேட்படிப்பு படிக்க வசதியில்லாமேல் போன வறுமை  ஏக்கம் கண்களில் எப்பவுமே பாரமாக இருக்கும்.  

                                                              எப்பவுமே எதையும் அலடிக்கொலாமல் தன் தன்னம்பிக்கையைத் பின் தொடர்ந்து கொண்டு  மெல்ல நடப்பா. உபசரிப்பில்  கரிசனையை அழியாத செல்வமாக்கி  மிகவும் நெகிழ்ந்து போக வைக்கும்  அன்பானவா. 

                                                    இதெல்லாம் அந்த நேரமே. நானும் குமாரும் நண்பர்களாக இருந்த அந்த நாட்களில் தெரிந்து கொண்டவைகள்.
                     
                                                                   
முப்பத்தியைந்து வயதுவரை சீதனம் கொடுத்துக் கலியாணம் செய்துவைக்க வசதியில்லாத அல்லல் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த கும்பத்தில் வஸந்தியாக்க இருந்ததால்  நோர்வே வந்தால் பொருளாதார ரீதியாகவும், அதைவிட அவாவுக்கு என்றென்றும் கங்கை வழியும் கண்களில் அன்பு நிறைந்த  பொன் வண்ணங்கள் வீசும்  ஒரு குடும்ப வாழ்க்கை அமைக்கலாம் என்பதுதான் என்னோட பிளான் ஆக அப்போது இருந்தது. 

                                                   ரெண்டுமே கடைசியில் எங்கெங்கோ சென்ற எண்ணங்கள்  நினைத்தபடி  ஒரு புள்ளியில் சேரவேயில்லை . 

                                            நினைப்பதெல்லாம் நிறைவேறாத ஒரு வாழ்க்கையின் புதிர் தானே  நேரான பாதைகளை விலத்தி இன்றைக்கும் விதியை வளைந்த கோட்டில் எழுதிக்கொண்டு செல்கிறது  


                                                                
நோர்வேயில் சமூக உதவியில் இருப்பவர்கள் ஸ்பான்சர் செய்வது கஷ்டம் . அத்தான் சமூக  நலஉதவித் திட்டத்தில் இருந்தபடியால்  என்னோட ஷகி சிசிலியாவை  கேட்டு அவளையும் இதுக்குள்ள இழுத்து  வைச்சு  குத்தி முறிச்சு குத்துக்கரனம் அடிச்சு ஓட்டுமாத்து செய்தும் அத்தானுக்கு ஸ்பான்சர் செய்ய முடியவில்லை. 

                                                 பிறகு   ஒரு சைக்காட்ரிஸ் டாக்டரை அவருக்கென்று ஒரு வாழ்க்கைத்துணை  வேண்டும்  என்று  சிபாரிசு செய்துதான் அந்த ஸ்பொன்சரே நடந்தது !

                                                             
                                                     
இந்தக் கதையின் முடிவில்  வரவேண்டிய முடிவுவரிகளை  நோர்வேயில் வசித்த அத்தானிடமிருந்தும் , இலங்கைக்குத் திரும்பிப் போன வஸந்தியக்காவிடமும் இருந்து   நானே ஒரு ஒருகிழமை இடைவெளியில்  கேட்கவேண்டிய விதி என் தலையில் எழுதிவைக்கப்பட்டிருக்கு என்றுதான் நினைக்கிறேன் . 

                                                        ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் நானே திருமணம் பேசி முடித்து வஸந்தியக்காவை  நோர்வேக்கு அத்தான் ஸ்பொன்சர் செய்து எடுக்கும் வரையில் முண்டுகொடுத்து வேலை செய்த ஆள் . கடைசியில்  அத்தான் இப்படித்தான் சொன்னார்                      
                             
                                 " அப்பேக்க அவா  வந்த நாலாம்நாளே என்னை நிமிர்த்தி எடுக்க , என்னை முழுசா என்னமோ சேத்துக்குள்ள புதைஞ்சுபோன ஆளப்போல நினைச்சு  திருத்த வெளிக்கிட்டுட்டா , எனக்கு அது ஐஸே பிடிக்கவில்லை,  அதால திரும்பிப்போகச் சொல்லிபோட்டன். அதால உடன ரிட்டர்ன் டிக்கெட் போட்டுக் கொடுத்தேன் , அப்பேக்க இதைவிட  நான் வேற  என்ன முடிவு எடுக்கிறது நீரே சொல்லும் பார்ப்பம் ஐசே "



                                                 இதுதான் அத்தான் எனக்குச் சொன்ன விளக்கம் , 

ஆனால் வஸந்தியக்க சொன்ன பதில் வேற, பதில் சின்னப் பதில் தான். ஆனால் வாழ்க்கை முழுவத்துக்குமான வலிகளை ஒன்றுசேர்த்து வைத்துள்ள பதில் , வஸந்தியக்கா சொன்ன பதில் ,இதுதான்

                                     " அந்தாள் திருத்த முடியாத   கேஸ்   "



ஏன் இப்படி நடந்தது என்றால் மேட்கொண்டு கதையை வாசியுங்க.



திண்ணையில  விழுந்தவளுக்கு திட்டுக்கெண்டு வந்திச்சாம் கலியாணம்  என்று ஒரு பழங்கதை இருக்கு. அது பழையகால மனிதர்கள் பழையகால மனிதர்களுக்கு சொன்னது என்பது போல இருந்தாலும் அதில வாற அபத்த சம்பவங்கள் போலவே நிஜ வாழ்க்கையிலையும் பல சம்பவங்கள் நிகழும். 

                                                  அதில் அச்சுறுத்தல் போலவே பதுங்கி இருக்கும் சின்னத் திருப்பங்கள் ஒரு முழுமையான  மனிதனின்  உணர்வோடு விளையாடி கடைநிலைக்கும்  இறக்கிவிடும் , கொஞ்சம் கஷ்டமான நிலைமைதான் அப்படி எதிர்கொள்ள நிகழும்போது


நோர்வேயில் மனநிலைகளை இலகுவாகப் பிரட்டிப் போடும் சமநிலை அற்ற வாழ்க்கைமுறை  நிறையவே இருக்கு. வாழ்க்கைத் தரத்தை நிலத்தில இருந்து பத்தடி உயர்த்தி வைத்திருக்கும் பணக்காரா  நாடு வேறையா அதனால மனநிலை குழம்பியவர்களை கவனமாகப் பராமரிக்கும் சமூக உதவித் திட்டங்கள் சிறப்பாக செய்து வைத்திருக்க்கிறார்கள். 

                                                  இந்த   தலையைப் பிடிக்காமல் வாலை வைச்சு உருவும் முரண்பாட்டின் பல அபத்தமான கலாச்சாரக் குழப்பம் அதன் முகத்தில் இருந்தாலும் வடக்கு ஐரோப்பாவில் உள்ள நோர்வே ஒரு அழகான  நாடுதான்  .



இந்தக் கதைக்கு நோர்வேயை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை,  நாலு காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் அது நாலுபக்கமும்  காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும் என்ற  காதலில்  எதிர்ப்பார்ப்புக்கள்  பொய்த்துப் போகும்போது அந்த வீழ்ச்சியத் தாங்கும்  சக்தி எல்லாருக்கும்  இருப்பதில்லை. 

                                                      சிலர் அடியோடு மாறி விடுவார்கள். அந்த  அன்பின் அடியில்  இருந்து எழும்பிவராமல் , அல்லது  எழும்பிவர  விருப்பம்  இல்லாமல் கிடைத்த  ஒரேயொரு  வாழ்கையைத்  தாங்களாவே திசை திருப்பிவிடுவார்கள். அதுக்கு  முக்கியகாரணம் காதல்தான் .


அத்தான்  இப்ப  எப்படி இருப்பார் ?,  முன்னர் இருந்ததை விடவும்  முன்னேற்றமாய்  இருப்பாரா ?, அல்லது அதைவிடவும் வாழ்க்கையைச்  சிக்கலாக்கி  சின்னாபின்னமாகிய மனநிலையில் இருப்பாரா ?, அல்லது அதிஸ்டமாக மீண்டு  பழைய மிடுக்கோடு உயிர்தெழுந்துவிட்டாரா ?,  அல்லது உயிரோடுதான் இருப்பாரா ?  என்று எனக்குத் தெரியவில்லை. 

                                     கடைசி வரியை எழுதும்போது சாவு பற்றிய பயன்கள் இல்லாத போதும் மனது கனக்கத்தான்  செய்கிறது !!!!!

                                                     
வாழ்க்கைப்பாதை ஒரு வட்டம்போல தொடங்கிய  இடத்தில்  அல்லது ஏதோவொரு சந்தர்ப்பத்தில்  சந்தித்த இடத்தை இன்னொருமுறை தொட்டுச்செல்லும் சாத்தியங்கள் எப்போதும் நாங்கள்  நினைத்தபடி தட்செயலாகவும்  நடப்பதில்லை. அப்படி நடந்தால் அதுக்குப் பெயர் வாழ்கையும் இல்லை. 

                                                   அப்படித்தான் ஊரில  புண்ணியக்குஞ்சி எப்பவும்  கோடாப் போட்ட வழக்கம்பரை  சுருட்டுப் பத்திக்கொண்டு சொல்லுவார். அப்படியான ஒரு திசையில்தான் அத்தானின் வாழ்க்கை திசை மாறியது

                                                              
எல்லாரும் அவரை அத்தான்  என்று சொல்வதால்தான் நானும் அத்தான் என்று சொல்வது. மற்றப்படி அவர் என் கூடப்பிறந்த அக்காவின் கணவரோ,  ஒன்றுவிட்ட அக்காவின் கணவரோ, அல்லது  தூரத்து  உறவுமுறையான அக்காவின் கணவரோ   இல்லை. 

                                                     எங்கள் ஊரைச் சேர்ந்தவரும் இல்லை. ஏதோவொரு உரைச் சேர்ந்த   எல்லாருக்கும் பொதுவான  அத்தான். அத்தான் அந்த உறவுமுறை சொல்லும்  பெயர் , அந்த அன்பின்  அழைப்பு   எவ்வளவு  அன்பான நெருக்கத்தின்  பெயர் சொல்லும் வார்த்தை. அத்தானும் அப்பிடித்தான் அன்பானவர்.



நோர்வேயில் அவர் வசித்த காலத்தில் எனக்குத்  தெரிந்து அவர் கலியாணமே  கட்டியதில்லை. தனியாகத்தான்  இருந்தார். அதுவும்   நோர்வேயில் இருந்தார். ஆனால் ஒரேயொரு முறைதான்  காதலித்தார். அதுவும் இந்த நோர்வேயில். அதுவும் நோர்வே நாட்டு வெள்ளைப் பெண்ணை. 

                                                       அந்த ஒருதலைப்பட்சமான காதலில்தான் அவருக்கு ஒருநாள்  நடந்த ஒரு  சம்பவத்தில் எதிர்பாராத நேரத்தில் கரண்ட் சோர்ட்சேர்க்கிட்டில்  பிசகி அடிக்குமே  அதே  மாதிரி மண்டையில்   பியூஸ் போனது !

                                                            
கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம் போல அவரோடு பலவருடம்  பழகியிருக்கிறேன் . ஒருநாளும் அவர் வாயால் எதற்காக அவருக்குப்  பியூஸ்  போனது என்று சொன்னதேயில்லை. அதைவிட அவர்  தனக்கு  மண்டைக்குள்  குழப்பம்  குடியிருக்கு என்று அவராக ஒத்துக்கொண்டதில்லை. 

                                                  மனநிலை பிறழ்வான மனிதர்கள் ஒருபோதும் அப்படி  உண்மையை நாலு பேருக்கு தெரியும்படி ஒத்துக்கொள்வதில்லை. அல்லது ஒத்துக்கொள்ளும் தைரியம் இருப்பதில்லை. இப்பிடி அடாத்தாக இருப்பதால் மருத்துவ உதவியும் பெற விரும்பமாடார்கள்

                              
முப்பது சொச்சம் வருடங்களின் முன் நோர்வேயிட்குப் படிக்க வந்த   அத்தான் வேலை  செய்யமுடியாத நிலையில் உள்ளவர்கள் வசிக்கும்   ஒரு சமூக உதவித்திட்டத்தில் கொடுக்கப்பட்ட தனியான  அப்பார்ட்மெண்ட்டில்  மிகத்  தனிமையாக  புரநகர  ஒஸ்லோவில்   வசித்தார்.  

                                                        அவர்  என்ன  படித்தார்  என்று  எனக்குத்  தெரியாது. பலருக்கும்  தெரியாது. காரணம் அவர் படித்த போது  வசித்த  நகரம் தென்மேற்கு நோர்வேயில் உள்ள ஒரு தனிமையான நகரம். இலங்கைத்  தமிழர் அந்த நகரத்தில் ஒருசிலரே வசித்ததாகக்  கேள்விப்பட்டிருக்கிறேன் .



அத்தான் ஊரில எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று சொல்வதுக்கு  ஒரேயொரு வார்த்தைப் பிரயோகபமே  பிடிமானமே இருக்கு. அவர் எப்பவும் இலங்கைத் தமிழர்  முன்னம், அல்லது அப்போது என்று சொல்வார்களே  அப்படிச் சொல்வதுக்குப் பதிலாக அத்தான்  " அப்பேக்க,, அப்பேக்க " என்றுதான் சொல்லுவார். 

                                                   இப்படி ஊர்ல ஒரு குறிப்பிட்ட ஊரில் வசிப்பவர்கள்தான் சொல்லுவார்கள். அது எந்த ஊர் என்று அப்பேக்க அந்த ஊர்ல இருந்து போட்டு இப்பேக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழ் பெருங்குடி மக்களுக்கு தெரியும்.



பல  வருடங்களின்  முன் வேலை இல்லாத  ஓய்வு நாட்களில் அவரின் வீட்டுக்குப்  போவேன்.  அவர் வீட்டுக்கு  வேற யாருமே காளாஞ்சி கையில  கொடுத்துக் கெஞ்சிக் கேட்டாலும் போவதில்லை, வருவதில்லை. நானும் அங்கே  போவதுக்கு  விஷேடமான காரணம் என்றும் சொல்வதுக்கு  ஒன்றைத்  தவிர வேற ஒரு  காரணமென்று  ஒன்றுமில்லை . 

                                             வேறென்ன  கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை எண்டது  போலத்  தண்ணி அடிக்கத்தான் போறது !!!!!!!!!!!!!

                                            
அத்தான் தனியாகக்  குடிக்க மாட்டார்.  நான்  போனால்தான் வசந்தமண்டப பூசை ஆரம்பிக்கிறது. அவர் குடிச்சாலும் நல்ல தெளிவாகக்  கதைப்பார். நான்தான் வெறி ஏற  ஏற விசர்க்குனமும் சேர்ந்து ஏறி ஒரு கட்டத்தில் முழு விசரன் ஆகிவிடுவேன் . ஆனால் ரெண்டு பேரும் பல விசியங்கள் அப்போதுதான் மனம் விட்டுக் கதைப்போம். 

                                                       அத்தான்  மற்ற நேரங்களில் அநாவசியமாகக்  கதைக்க மாட்டார். கவலையாகவும்  இருக்க மாட்டார்.  சந்தோஷமாயும் இருக்க மாட்டார்   ஆனால் ஆதாரமான  எந்த உலக உணர்ச்சியும் இல்லாத மாதிரி  இருப்பார்.



அந்த அப்பார்ட்மெண்ட் மாரிகால மருதனாமடம் சந்தை போலக் கச கச எண்டு இருக்கும். கதவைத்திறந்து உள்ளே போனால் முதலில் மயக்க வைக்கும் சோம்போறித்தனமான வருடங்கள் சேர்த்து வைச்ச  வாசங்கள் மூக்கைத் திணறடிக்கும்.   

                                                       எதுக்குள்ளே எது கிடக்குது  என்று தோண்டிக் கிளறிப்பார்த்தால்தான் எதிர்பார்க்காத  திசையில் இருந்து   அலாவுதீன்  பூதம் கிளம்பும். குசினியில் அவர் சமைப்பதேயில்லை.   இதுக்குள்ள ஹோலின் ஒரு மூலையில் பெரிய கம்பிக் கூட்டில் முயல் வளர்த்தார்.

                                                                   
சில நாட்களில் அத்தானை வெளிய அழைத்துக்கொண்டு நடக்கப்போவேன்,வேண்டா வெறுப்பாக வருவார். ஆனால் எப்பவும் அவர் எப்பவும் சோபாவில் அருகில் வைத்திருக்கும்  ஒரு டெடிபியர் கரடிப் பொம்மையை நோகாமல் கைக்குழந்தை போல வாரி அணைத்து எடுத்து  ஜக்கட்டுக்குள் செருகிக்கொண்டு வருவார். 

                                             அவருக்கு குழந்தைகள் மேலே விருப்பமாக இருக்கலாம். அல்லது கலியாணம் கட்டி பிள்ளைகள் பெற்றுக்கொள்ள விருப்பமாக இருக்கலாம் என்று நினைப்பது. ஆனால் ஏன் அப்படி என்று கேட்டதில்லை.

                                                அத்தான் அவர் வீட்டு ஜன்னல் திரைச் சீலைகளை இழுத்து மூடி அவர் வசிக்கும் இடத்தை இருடாகவே வைத்திருப்பார், ஏன் அப்படி செய்யுறீங்க எண்டு கேட்டா .
                   
                                                      " அதைசே ,,அப்பேக்க  அமெரிக்க CIA என்னைத் தேடி சட்டலைட் விட்டு இருக்கிறாங்கள் ,,"

                                                    என்றும். தன்னை அவர்கள் கண்காணிப்பதாகவும் சொல்லுவார் . ஜன்னலுக்கு கிட்ட போய் எட்டிப்பார்த்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும் எண்டு சொல்லுவார்

                                                                 
ஒரு நடுக்கோடையில் ஒரு நாள் அவரைக் கடைசியாக சந்தித்தது நினைவிருக்கு. 

                                                      நோர்வேயில் கோடைகாலம் மட்டுமே ஒரு விதமான அலாதியான அலங்கரிப்பு வெய்யிலில் மிகையாக அள்ளிக்கொட்டும் பருவகாலம். மற்ற இலையுதிர், இலைதளிர், உறைபனி பருவகாலத்தில் இந்த நாடு செத்த வீட்டில ஒப்பாரி வைப்பது போலவே அழுதுவடியும். இரவுகளில் தெளிந்த வானத்தில் நட்ச்சத்திரங்களையே தனித்தனியாக  எண்ண முடியும்

                                                     அத்தான் எப்பவுமே ஹென்னெஸி என்ற விஸ்கிதான் குடிப்பார். அதுவும் நான் போனால் மட்டுமே குடிப்பார். ஏனென்றால் நான்தான் அதை வேண்டிக்கொண்டு போக வேண்டும். மேசையில் அதை வைச்சுப்போட்டு போத்திலைப் பார்த்து

                                     " உன்னிடம் மயங்குகிறேன் ,,உள்ளத்தால் நெருங்குகிறேன் ,, உன்னிடம் மயங்குகிறேன் ,,உள்ளத்தால் நெருங்குகிறேன் .........."

                                                                என்று பாட்டுப் படிப்பார். ராகு காலம் பார்ப்பது போல  மூடிய திறக்கமாட்டார் . எனக்கு புண்ணியகாலம் முடியப்போறது போல அவதியா இருக்கும். அதனால் எப்பவுமே நாலு டியூர்பெர்க் பிரீமியம் எஸ்ப்போர்ட்  பியர் கொண்டு போறது. அதிகமாக நான் நாலும் இழுத்து முடியத்தான். அத்தான் முதல் சொட் நாக்கில படாமல் அண்ணாந்து விடுவார். 

                                                 அவர்  ஏன் எல்லாரையும் போல  அப்படி விஸ்கியை சொண்டில  சுவைக்காமல் பம்ப்பு செட் வைச்சு இறைக்கிற மாதிரி உள்ளே விடுறார் எண்டதுக்கு காரணம் தெரியாது. ஹ்ம்ம். விசித்திரமான குடிகாரர்.

                                                        
அத்தான் வெறி ஏறத்தான் கதையை தொடங்குவார், அல்லது என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லுவார், நானும் காத்திருந்து

                                       "    ஏன் அத்தான் இப்படி இருக்குரிங்க "

                                     " இப்படி என்றால் என்ன ஐஸே "


                                      " இப்படி குளிப்பு முழுக்கு இல்லாமால்  தாடி மீசையோடு ,  தவயோக சுவாமிகள் போல  உலகத்தோடு வெறுத்துப்போய் தனியாக இருக்குறீங்க "


                                               "எனக்கென்ன பிரச்சினை இப்ப "


                                            " இல்லை  எப்பாவது  உங்களை  நீங்களே  பார்த்து இருக்குறீங்களா "

                                                        " இல்லையே "


                                             " எங்களை நாங்களே நேரடியாய் பார்க்க முடியாதுதான் அதுதானே எங்கள் எல்லாருக்குமுள்ள பிரச்சினை "


                                      "   இப்ப என்ன செய்ய சொல்லுறீர் "


                           "  ஒருக்கா  உங்களை  நீங்களே  கண்ணாடியில்  பாருங்கோ "

                                      " எங்க போய் பார்க்க சொல்லுரீர் ,இங்க தானே  முகம் பார்க்கிற  கண்ணாடியே இல்லையே "

                                   " பாத்ரூமில ஒன்று  இருக்கே அத்தான் "

                                          " பாத்ரூமுக்குள்ள  நான் லைட் எல்லாம் ஒப் பண்ணிப்போட்டு எல்லோ உள்ளிடுறனான் "

                                     " அடிடா  சக்கை  எண்டானாம் ,,ஏன்  அங்கேயும்  அமெரிக்கன் சட்டலைட் விட்டு தேடுறாங்களோ அத்தான் "

                           " இல்லை ஐஸே,,எனக்கு  இருட்டுதான்  பயமில்லாத  இடம் "
  
                             " அட  குட்டி இளவரசன் கதையில  உசார் மடையன் வின்ஞானி வார  மாதிரி இது மிகவும்  சுவாரசியமா இருக்கே "

                                " அதார் அந்த வின்ஞானி ,,சொல்லும்  ஐஸே  கேட்பம் "

                                          " ஒரு வின்ஞானி உங்களைப்போலவே  குளிப்பு முழுக்கு இல்லாமல் இருந்தார்,, ஆனால் அவர் இரவில தொலைநோக்கி வைச்சு இருட்டில ஒரு கிரகம் தேடிக்கொண்டிருந்தார் "

                                             " ஹிஹிஹி ,,அப்படியே,,சொல்லும்,,பிறகு  அவர் கண்டுபிடிச்சாரோ  "


                                      " ஓம்  கண்டுபிடிச்சு  அதை அறிவிச்சார்   ஆனால்  அவர் சொன்ன விதம் எடுபடவில்லை "

                                                    "ஏன்  அப்படி நடந்தது "

                                                            " அதுதானே சொன்னேன்  அவரும் உங்களைப்போல  குளிப்பு முழுக்கு இல்லாமல் தாடி மீசையோடு  தவத்திரு தவயோகசாமிகள்  இருந்தார் "

                                             "ஹிஹிஹிஹி  பிறகு என்ன நடந்தது "

                                              " குட்டி இளவரசன் அவருக்கு உதவி செய்து அவரின் கண்டுபிடிப்பைப் பிரபலமாக்க ஒரு ஐடியா கொடுத்தான் "

                                                " ஹிஹிஹிஹி  அதென்ன "

                                      " அதை நீங்களே  அந்தப்புத்தகத்தை  எடுத்து  வாசித்து அறியுங்க "

                            "  ம்,..உலகத்தோடு வெறுத்துப்போய் என்றால் என்ன ஐஸே "



                        " இப்படி உலகத்தோடு வெறுத்துப்போய் தனியாக "



                                " அதைசே ,,அப்பேக்க ,,ரெபேக்கா ஒருநாள் சொன்னதுபடி  வந்தாள் எல்வோ,,"
 
                                          "  ,,ஹ்ம்ம் "


                                        "  ஆனால் அப்பேக்க அவள்தானே  தனியா வரவில்லையே "

                           "  சொல்லுங்க அத்தான் பிறகு  என்ன நடந்தது "

                               "   அதைசே ,,அப்பேக்க ,,ரெபேக்கா ஒருநாள் சொன்னதுபடி  வந்தாள் எல்வோ,,ஹ்ம்ம்,,,ஆனால் அப்பேக்க அவள்தானே  தனியா வரவில்லையே "

                                         " அட கோதண்டராம...மிச்சத்தை சொல்லுங்கோ  அத்தான் ,,ரெபேக்கா வந்து "

                                   " அதைசே ,,அப்பேக்க ,,ரெபேக்கா ஒருநாள் சொன்னதுபடி  வந்தாள் எல்வோ,,ஹ்ம்ம்,,,ஆனால் அப்பேக்க அவள்தானே  தனியா வரவில்லையே "

                                               இதைத்தான் அத்தான் திருப்பி திருப்பி சொல்லுவார். ரெபேக்கா வந்ததோடு கதை நிக்கும். மேட்கொண்டு சொல்லவே மாடடார். 

                                                         கொஞ்சம் விஸ்கி உள்ளுக்குப்போய் வாய் உளறிக்கொட்டி சிலநேரம் உண்மைகள் வரவைக்க  வேலையக் காட்டும் என்று காத்திருந்தா அதுவும் நடக்காது. நேரம் செல்லச் செல்ல அத்தான் அளவுக்கு அதிகமான மவுனமாகி இன்னொரு உலகத்துக்குள் நிர்மலமாக நுழைந்துவிடுவார் .

                                           அந்தநேரம்  மூடி  திறக்காத ஒரு கவனியெர் செவாலியே  பிரெஞ்ச்  றோஸ்  வைன் போத்தலை  எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைச்சுப்போட்டு அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்.

                                                           
ஆனால் இந்த ரெபேக்கா சம்பவம்  அது தான் அத்தானின்  வாழ்க்கையோடு உள்ளிறங்கி விளையாடிக் கலவரங்களை உண்டுபண்ணிப்போட்டு கடைசியில் அவருக்கு இப்படியான ஒரு விட்டேந்தியான நிலமைக்குள் விட்டுச் சென்றது. 

 அதில ரெபேக்கா என்ற பெண்னின் பக்கத்தில் பிழைகள்  இல்லை.  அத்தானோடு  அந்தக் காலத்தில் நோர்வேயிட்க்கு வந்த சிலருக்கு தெரியும், அதில ஒருவர் அதை எனக்கு  ஒஸ்லோவில் வைத்து விடிகாலை வரையில் விழித்திருந்த  ஒரு தண்ணிச் சாப்பாடு சங்காபிஷேகத்தில்  சாடைமாடையா சொல்லி இருக்கிறார்.

                                                             
அத்தான் வடமேட்கு  நோர்வேயிட்க்கு வந்த புதிதில் ரெபேக்கா அவர் வாசித்த தொலைதூர நகரத்தில் அறிமுகமாகி இருக்கிறாள். சாதாரண நண்பியாகப்  பழகி இருக்கிறாள். கிராமப் புறங்களில் வசிக்கும் நோர்வே மக்கள் இதயத்தை நனைக்க வைக்கும் அன்பு காட்டும்  நல்ல மனிதர்கள் . 

                                             அத்தானுக்கு அவள் நிறைய மொழிபெயர்ப்பு உதவிகளையும் வேறுபல உதவிகளையும் செய்துகொடுத்திருக்கிறாள். எப்படியோ சில மாதங்களிலேயே அத்தான் ரெபேக்காவை ஒருதலையாக காதலிக்க ஆரம்பித்தது ரெபெக்காவுக்கு தெரியாது

                                                                    
ஈஸ்ட்டர்  வார இறுதி  விடுமுறை நாளில்   ஒரு சனிக்கிழமை   துணிந்து தன்  காதலை அவளிடம் சொல்ல வேண்டும் என நினைத்து  ஒரு கவனியெர் செவாலியே  பிரெஞ்ச்  றோஸ்  வைன் போத்தலும், நெதர்லேண்ட்  போஸ்க்கே  டுலிப் லில்லி  மலர்ககொத்தும் வாங்கி வைச்சுக்கொண்டு  அவர் வசித்த அப்பார்ட்மென்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். 
                                          அவளும்  சனிக்கிழமை வந்திருக்கிறாள். அன்றைக்குத்தான் அத்தானுக்கு சனியனும் காலைச் சுத்திப் பிடிச்சது !!!!

                                                   காரணம் ரெபேக்கா  அவளோட ஆபிரிக்கா   காணா நாட்டுக் காப்பிலிக்   கணவனோடும் ரெண்டு சின்னப் பிள்ளைகளோடும் வந்தாள்.   

                                                   அன்றைக்கு இரவு  எதிர்பாராத நேரத்தில் கரண்ட் சோர்ட்சேர்க்கிட்டில்  பிசகி அடிக்குமே  அதே  மாதிரி மண்டையில்   பியூஸ் போட்டுது !!!

                                                                       
முதலியார் முத்தின வாழைக்காய்க்கு விலைபேசிய வீணாப்போன மாதிரி சில நேரம் எதுவும் நடக்கலாம் என்று நல்லாவே தெரியும் ,தெரிந்தும், இதெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நான் அத்தானுக்கு ஒரு கலியாணம் செய்து வைச்சுப் பார்ப்பம் சிலநேரம் ஆள் பழைய நிலைமைக்கு திரும்பி வரலாம் என்றுதான் நினைச்சேன். 

                                                     வாழ்க்கையே நிலையாமை நோக்கிய பயமொன்றில்  அடுத்த கடடத்துக்கு ஆங்காங்கே தைரியங்களை வரவழைத்துக்கொண்டு தீர்த்தயாத்திரை போவதுதானே , அதில ரிஸ்க்  எடுப்பது ஒரு விதமான திரில் தானே, இல்லையா சொல்லுங்க பார்ப்பம்,

                                                 "  அத்தான் நீங்க இப்பிடி தனியா இருக்குறீங்க,,உங்களுக்கு ஒரு  தமிழ்  பெண்ணொன்று வாழ்க்கைத்துணையா  உங்களோடு இருந்தால் நல்லம் தானே "

                                                     " ஹ்ம்ம்,,,,அப்பேக்க  சின்ன வயசில அம்மாவும் இப்பிடித்தான் சொல்லுவா,,சடங்கு செய்யிற வயசில கலியாணம் கட்டிப்போட வேண்டும் எண்டு "

                                    " அதுதான் நானும் கேட்க்கிறேன் ,,உங்களுக்கு விருப்பமா,,விருப்பம் என்றா எப்படியா ஒரு பெண்ணை நீங்க எதிர்பார்க்குறீங்க "

                                                " ஹ்ம்ம்,, அப்பேக்க  ஸ்டாண்லி கொளிச்சில படிக்கேக்க  வதனரூபி என்று ஒருத்தி என்னோட படிச்சவள் ,,மாம்பழம் சந்தியில் இருந்து வருவாள், நல்ல வடிவான பெட்டை , "

                                                   " ஹ்ம்ம்,,நல்லாத்தான்  சைக்கிள் டயர் தேய்த் தேய ரவுண்ட் அடிச்சு  சைட் அடிச்சு இருக்குறீங்க  போல இருக்கே,,"

                                               " அப்பேக்க நினைக்கிறது  பின்னடிக்கு கலியாணம் கட்டின்னா இவளைப்போல ஒருத்தியத்தான் வைபோசா கடத்திக்கொண்டு  போய் என்றாலும்  கட்ட வேணும்  எண்டு ,"

                                          " பிறகு ,,  "

                             " ,அதெல்லாம்  அப்பேக்க  நடந்த கதையல்லோ "

                                " ஹ்ம்ம்,, எனக்கு வதனரூபி எப்படி இருந்தால் எண்டு தெரியாதே அத்தான்  ,, நீங்களே  உங்க  போர்வெண்தனிங்  எதிர்ப்பார்ப்பு  டிமாண்டிங் ஒப்சனை சொல்லுங்களேன் "

                                    " ஹ்ம்ம்  நல்ல வெள்ளையா இல்லாட்டியும் பரவாயில்லை..சுமாரான நிறமாய்  இருக்கவேணும் "

                           " என்னது,,,நிறத்துக்கே கலியாணம் கட்டப்போறிங்க "

                            " ஹ்ம்ம்,,இல்லை ஐஸே,,பிறகு எங்கட ஆக்களிண்ட நல்லது கெட்டதுக்கு மனுசி எண்டு அவளைக் கூட்டிக்கொண்டு பேக்கேக்க  கொஞ்சம் எழுப்பமா  இருக்குமெல்லோ "

                                 " அட,,அட,,,பிறகு  வேற என்ன  போர்வெண்தனிங் ,,அதுகளையும்  சொல்லுங்கோ "

                                  " ஹ்ம்ம்,,மெல்லிசா  இருக்க  வேணும் ,," 

                                        " பிறகு ,, வேற என்ன "

                                  " எனக்கு குண்டுப் பெண்களைக் கண்ணில காட்டப்படாது ,," 

                                                " பிறகு ,, வேற என்ன "

                                         " அப்பேக்க  ஊர்ல எங்கட வீட்டு ஒழுங்கை முடக்கில  ஒருத்தி இருந்தால் அவளும் என்னோட படிச்சாள் ,,சகடை போல வண்டியத் தள்ளிக்கொண்டு வருவாள் , "

                               " அட,,,அதென்னதுக்கு மெல்லிசு..ட்ரெயின்  பஸ்ஸில போறதக்கு  டிக்கெட்  எடுக்கிறது  செலவு எண்டுப்போட்டு  தூக்கிக்கொண்டு திரியப்போறிங்களோ"

                                " ஹ்ம்ம்...அப்பேக்க  ஊர்ல எங்கட வீட்டு ஒழுங்கை முடக்கில  ஒருத்தி இருந்தால் அவளும் என்னோட படிச்சாள் ,,சகடை போல வண்டியத் தள்ளிக்கொண்டு வருவாள் , "

                                 " சரி  விடுங்க ..பிறகு  வேற என்ன  போர்வெண்தனிங் ,,அதுகளையும்  சொல்லுங்கோ "

                                     " நல்லா சமைக்க வேணும்,,அப்பேக்க  அம்மா ஊர்ல  அடுப்புக்குள்ள நிண்டு  சமைச்சு  சமைச்சுக்  கொட்டுவா,,"

                                       " பிறகு ,, வேற என்ன "

                             " அதுபோல,, உடுப்பு துணிமணி நேரத்து நேரம்  பிழிஞ்சு துவைச்சு போடக்கூடிய ஆளா  இருக்கவேண்டும்,"

                           " பிறகு ,, வேற என்ன "

                         " ,வீடு வாசலை ஒவ்வொருநாளும் கழுவி துடைக்க வேணும்.," 

                               பிறகு ,, வேற என்ன "

                            " உமக்கு தெரியும் தானே நோர்வே வாய் பொத்தி  சுத்தம் பேணுற  கன்றி எண்டு "

                                  " ஓம்  ஓம்..உங்கட அப்பார்ட்மெண்டை  பார்த்தாலே தெரியுதே "

                                     " அது  நான் இப்படி இருக்கிறபடியா சிலம்பாய்ய்  போல இருக்கு..." 

                                     " பிறகு ,, வேற என்ன "

                                       " தாலி கட்டி பொஞ்சாதி எண்டு ஒருத்தி வந்தா  இதெல்லாம் செய்யத்தானே  வேணும் "

                              " அத்தான்,,இதெல்லாம் செய்ய  தாலி கட்டி பொஞ்சாதி தேவையில்லை,பேசாம  மாதக் கொன்ராக்கில  ஒரு போலந்து வேலைக்காரியை  பிடிச்சு  வையுங்கோ..அவளுகளுக்கு  தாலியும்  தேவையில்லை,, வேலியும்  தேவையில்லை ,அதில்லாமல் காசு கொடுத்தா கலியாணமும் அப்பப்ப  அவசரத்துக்கு  டெம்பிரேரியாக் கட்டலாம்  "  

                                    " ஹ்ம்ம்,,இல்லை,,இப்ப நீர் தானே தமிழ் பெண்  இருக்கு எண்டு சொன்நீர் ,,அதால என்னோட  போர்வெண்தனிங்களை சொன்னேன் ஐஸே ,," 

                                " ஹ்ம்ம்,, அதுதான் நானும் ஜோசிக்கிறேன் "

                                        " நீர்  ஐஸே  சிலநேரம் இங்காலையும்  அங்காலையும் கிள்ளிவிடுற வேலை பார்க்கிரியிற் போல இருக்கு,,இப்படித்தான் அப்பேக்க ஊர்ல உப்புக்குளம் பிள்ளையார்கோவிலடியில  இருந்து ஒரு பொம்பிளை அம்மாவுக்கு வீட்டில மா இடிக்க  அப்பேக்க வருவா,,அவாவும் உம்மை  மாதிரித்தான்  சல்லாபி  சலாபி கதைக்கிறது  "

                                 " சரி  விடுங்க,,முதலில்  பொம்புளை தேடுவம்,,அதே இன்னும் தொடங்கவில்லை. "

                                       " என்னவோ என்னோட  போர்வெண்தனிங்களையும்  மறக்காதையும் "

                                    " ஓம்,,ஓம்,,மறக்கவே  மாடடேன்,,மறக்கிற  மாதிரி சிம்பிளாவா  சொல்லி இருக்குறீங்க "

                                              
அதோட அந்த பூசை முடிஞ்சுது. நான் அன்றைக்கே ஜோசித்துப்பார்த்தேன் இந்தமாதிரியான கோணங்கிகளின் கோட்பாடு  நடைமுறைக்கு உதவாது என்று தெரிந்தாலும் , என்னோட பாட்டி எப்பவும் சொல்லுவா  வாலறுந்த பட்டங்களும் பறக்கலாம்  என்பது தானே வாழ்வின் நம்பிக்கை,  என்ன செய்வது பரீட்சித்துப் பார்க்கலாம் என்றுதான் எப்போதும்  நினைப்பது .  

                                            ஆண்கள் எவ்ளவு மட்டமாக இருந்தாலும் கலியாணம் கட்டிட நினைக்கும் போது கொஞ்சம்   எடுப்பாத்தானே ஜோசிக்கிறார்கள்!!!!!!

                              எதுக்கும் ட்ரை ஒன்று குடுத்துப் பார்க்கலாம்  என்று நினைக்கும் போதுதான் வஸந்தியக்கா  டக்கென்று  நினைவுக்கு வந்தா..!

................தொடரும் ..............