Thursday 22 September 2016

வயது வந்தவர்களுக்கு மட்டும்.....

சின்ன வயசில் எங்களின் குளத்தடி குழப்படி குருப்பின்,கிரிகெட் விளையாடி முடிய ,புளிய மர இருட்டில் நடக்கும், பிந்திய இரவு சம்பாசனைகளில் கொஞ்சம் அறிவுபூர்வமா எப்போதும் பயந்து பயந்து விவாதிக்கும் விசியம் ," அடல்ட்ஸ் ஒன்லி " என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் கண்டிப்பாக பார்க்க அனுமதிக்கப்பட்ட ஆங்கிலப் படங்கள் டவுனில எந்த தியடரில் ஓடுது என்பதும்,அந்தப் படம் ஏன் பார்க்க வேண்டும் என்பது போன்ற மிட் நைட் மசாலா விசியங்கள்.

                                              இனி நான் சொல்லப்போறது அந்தப் படங்களை தியேடரில் பார்ப்பதில் உள்ள சிக்கல்கள , " யங் லேடி  சட்டர்லி லவ்வர்ஸ் " என்ற 18 என்ற இலக்கத்தைச் சுற்றி வட்டம் போட்ட கொஞ்சம் வில்லங்கமான படம் பார்த்து பெற்ற " அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்பெருங் காடு உளரும் அசைவளி போலும் " ஜென்ம சாபல்யம், அதைப் பார்க்க நாங்கள் எடுத்த ரிஸ்க், அதோடு இணைந்த" மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகலஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது" போன்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் விளங்கும் சம்பவங்கள்.

                                                   டவுனில இருந்த லிடோ ,வெலிங்கடன், ரீகல்,முக்கியமா இசகு பிசகு   மூத்திர முடுக்கில இருந்த சாந்தி  தியடரில்தான் அந்த மாதிர்ப் படங்கள் அதிகம் போடுவார்கள்,போட்டு அதன் விளம்பரத்தில் 18 என்ற இலக்கத்தைப் போட்டு அதைச் சுற்றி ஒரு வட்டம் போட்டு ,சில நேரம் " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் " எண்டு போட்டு இருப்பார்கள், அது இன்னும் ஆர்வத்தைக் கிளப்பும்,

                                               அந்த இளந்தாரி வயதில, மீசை முளைத்துக்கொண்டும். தோள்ப்பட்டை விரிந்து கொண்டும்,பார்க்கிற சுமாரான பெட்டைகள் வெட்டி வெட்டி அக்சிடென்ட் பட்ட லொறி போல நடக்கும் போதும் அபிநய சுந்தரித் தேவதைகள் போலவும் ,அவர்கள் இளிக்கும் இழிப்பிலும் புன்னகை அரசிகள் போல தெரிந்து கொண்டு இருந்த போதும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதுக்கும் கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் இடையில் உள்ள வரன்முறை எங்களுக்கு அப்போது விளங்கவில்லை,.
                                                         குளத்தடி குழப்படிக் குருப்பின் நண்பர்களில் கொஞ்சம்,வயதுக்கு மீறி விபரம் தெரிந்த பித்துக்குளி தான் அதை கொஞ்சம் விபரமா சொன்னான்,அவன்தான் முதல் முதல் எங்களுக்கு வெள்ளைகாரிகளின் உடுப்பு இல்லாத படம் போட்ட புத்தகம் முதல் முதல் காட்டி எங்க அறிவுக் கண்ணைத் திறந்தவன் எண்ட படியால அவன் சொல்வதை நாங்க எப்பவும் கேட்போம்,அவன் சொன்னது,

                                  " கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டுபோடுவது கலியாணம் கட்டிய ஆண்கள் பார்க்கும் படம் "

                                        எண்டு, கலியாணம் கட்டிய ஆண்கள்தான் எல்லாத்தையும் ரியலிடியில் லைவ் அக்சனில் பார்க்கலாமே அப்புறம் எதுக்கு அவர்கள் வெள்ளித்திரையில் ஆ வெண்டு கொட்டாவி விட்டுப் பார்க்கவேண்டும் எண்டு நாங்கள் கேட்டதுக்கு அவன் சொன்ன " படு முடைப் பருந்து பார்த்திருக்கும்நெடு மூதிடைய நீர் இல் ஆறே..." போன்ற சங்க இலக்கியச் செறிவுள்ள தெளிவுரையை இங்கே எழுதவே முடியாது,...

                                                      யாழ்பாணத்தில அந்த நாட்களில் படிக்கும் மாணவர்கள் இப்படி இங்கிலிஸ் படம் பார்ப்பது ஒரு பஞ்சமகா பாவச் செயல் என்பது போலதான் இருந்தது,முக்கியமா தியடரில் டிக்கெட் எடுக்க முடியாது எண்டு சொன்னாலும், வீராளி அம்மன் புண்ணியத்தில் டிக்கெட் எடுக்கலாம், அதில சில டெக்னிக்குகள் இருக்கு,   பாடசாலை  வகுப்பைக்  கட் அடிச்சு படம் பார்பது எப்பவுமே  பயங்கர ரிக்ஸ்  , எல்லாப் பாடசாலை மாணவர்களும் கட் அடிப்பார்கள். பிரிஞ்சுபலுக்கு  யாரும்  சொல்லிக்கொடுதுப்  பிடிச்சா வாழ்க்கை அவளவுந்தான். 

                                        அதுக்குதானே  வார  இறுதி  நாட்களில்  ரெண்டுநாள் பாடசாலையில்  லீவு தருவார்களே. அதைவிட அந்த சனி ஞாயிரு  நாட்களில்  தியேட்டரில்  சனம்  அதிகமா இருக்கும். சனத்தோடு  சனமா  கும்பலில்  கோவிந்தா போட்டு  கடல் மீன்கள்  போல  சுழி ஓடலாம் . பொது ஜனம்கள்  எப்பவுமே  நாங்கள்  படிக்கிறமா  கிழிக்கிறமா  என்று  ஆராய்ச்சி செய்வதில்லை.   அரைகுறை  ஆடை  இங்கிலிஸ்  படம்  பார்த்துக்  குட்டிச்சுவர் ஆனாலும் அவர்களுக்கு  கவலை  இல்லை 
                                     முக்கியமா நாங்கள் தியேட்டருக்கு படம் தொடங்க முதலே போக மாட்டோம்,வெளிய ரோட்டில விடுப்பு பார்க்கிற மாதிரி நிண்டுகொண்டு முதலாவது பெல் அடிக்கும் வரை அப்பாவிகள் போல நிற்போம்,அது அடிக்க தியேட்டர் உள்ளுக்க லைட் நிற்பாட்டி போடுவார்கள், அந்த இடை வெளியில் போய் டக்கெண்டு டிக்கெட் கவுண்டரில் கொஞ்சம்,குதிக்காலில் எம்பி நிண்டு கொண்டு " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி " எண்டு பாடிக்கொண்டு டிக்கெட்  எடுப்போம்,

                                                    ஒருநாளும் எங்களுக்கு வயது வந்துவிட்டதா எண்டு டிக்கெட் கொடுப்பவர் செக் பண்ணியதே இல்லை,அப்படி எடுத்துக்கொண்டு இரண்டாவது பெல் அடிக்க, படம் பற்றிய தொடக்க டைட்டில் விசியம் மிஸ் பண்ணும் கவலை இருந்தாலும், இருட்டில தடவிக்கொண்டு போய், அதிகம் யாரும் இல்லாத மூலையில் இருந்து பார்த்தல் தான் எங்களுக்கு இங்கில்ஷ் இடைஞ்சல் இல்லாமல் விளங்கும் என்பதால் அப்படி இடங்களை செலக்ட் பண்ணி உடைந்த கதிரையில் இருந்து பார்ப்போம்.

                                                 இடை வேளையில்,எல்லா லைட்டும் போடுவார்கள் நாங்கள் போட்டிருக்கிற தொப்பியை நல்லா இழுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்போம்,எழும்பி கண்டின் இக்கு போகமாட்டோம்,போனால் பிறகு கதை மறந்து விடும் என்பதால் கதையின் தொடர்ச்சியை மறக்காமல் இருக்க அப்படியே இருப்போம். படம் முடியத்தான் முக்கிய அலுப்பு தொடங்கும்.வெளிய வாறதுதான் பெரிய கவுரவப் பிரச்சினை,அதிலயும் எல்லாரும் எழும்பிப் போன பிறகுதான் பதுங்கி பதுங்கி வெளிய வருவம்,

                                                         அந்த நேரம் தான் வருசத்தில எப்பவாவது கலியான வீடு ,செத்தவீட்டுக்கு மட்டும் தலை காட்டும் சித்தப்பா, பெரியப்பா அல்லது மாமாவை தியேடர் வாசலில் சொல்லி வைச்ச மாதிரி சந்திக்க வேண்டி வரும், தூரத்து சொந்தகாரரே திடீர் எண்டு ரெம்ப அக்கறையான நெருங்கிய ரத்த உறவு  சொந்தமா மாறி வீட்டை வந்து சொல்லி கொடுப்பார்கள்,வெலிங்கடன் தியட்டரில் "யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படம் ரசித்து பார்த்து முடிய " தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! " எண்டு பாடிக்கொண்டு வெளிய வர புண்ணியக் குஞ்சி சித்தப்பு, டவர் கூல் பாருக்கு முன்னால் நிண்டார்,

                                                என்னைக் கண்டார்,  கண்டும் காணதது போல அண்டங்காகம்  போல  தலையை  வேற  பக்கமா திருப்பிக்கொண்டு     நிண்டு   போட்டு ,நான் வீட்டை வரமுதலே அவர் வீட்டை வந்து அம்மாவுக்கு சொல்லிக் கொடுத்திட்டார்.. வீட்டை வர முதலே அம்மா,
                                     " பூனை போலப் பந்துங்குறாய் எங்கடா போயிட்டு வாராய். "

                                             எண்டு கேட்டா, நான் பேசாம நின்டேன்,

                               " ஏனடா இந்த வயசிலேயே தலையால தெறிக்கிறன் எண்டு நிக்குறாய் ,நான் எவளவு கஷ்டப்பட்டு உங்களை எல்லாம் வளர்குறேன், இதெல்லாம் உனக்கு இப்ப தேவையா "

                      எண்டு கேட்டா, கொஞ்சநேரம்  தலையை  மண்டிக்கொண்டு நின்றேன் 

                               " சொல்லு  இப்பவே  தியேட்டர்  வாசலில்  நிண்டி  என்றால் பின்னடிக்கு  நெடுகிலும்   சீவியம்  கிழியப்போகுது "

                                      "    ஹ்ம்ம்,,நல்ல  கருத்து  உள்ள  படம்  எண்டு  பிரெண்ட்ஸ்  சொன்னாங்கள்  அதால  பார்க்கப்  போனேன் "

                                    "    சரி  அது  என்ன  படம்  சொல்லு  "

                               "  குதிரை  லாயத்தில்  குதிரைக்குக்  கொள்ளு வைக்கிற  கதை "

                                    " அது  அப்ப  நல்ல  படம் போல  இருக்கே ,,"

                                "   ஓம்  நல்ல  படம் தான்  ..இப்படி வெள்ளைக்  குதிரையை  இங்கே  எங்க அம்மா  பார்க்க கிடைக்கும்,,இப்பிடி  இங்கிலிஸ்  படதிலதானே  காட்டுறாங்கள் "

                                   "    இதென்னவோ  உன்னோட வயதுக்கு  பார்க்கத்  தேவையில்லாத  படம்  எண்டது போல எல்லோ குஞ்சி  சாடை  மாடையா  பறைஞ்சார் "

                                     " அதுதானே  சொன்னேன்  அவருக்கு  இங்கிலிஸ் விளங்காது  எண்டு "

                                   " அப்பிடியே  சிலமன்,,   அதுக்கு  என்னத்துக்கு  புண்ணியக்  குஞ்சி  குத்தி  முறியுது  எண்டு  ஓடிவந்து  சொன்னார் "

                                    "   ஓம் , அவருக்கு  இங்கிலிஸ்  தெரியாது  அதுதான்  அப்படி  சொல்லி இருப்பார் "

                                   "  என்னதான் இருந்தாலும்  இதெல்லாம்  உனக்கு இப்ப தேவையா  சொல்லு "

                     " தேவைதான், தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! "

                       எண்டு சொல்ல நினைச்சேன்,பயத்தில அதுக்கு ஒண்டும் சொல்லவில்லை, அம்மா

                     " இனி இதெல்லாம் பார்க்க மாட்டேன் "

                                          எண்டு தலையில அடிச்சு சத்தியம் செய்து தரச் சொன்னா, செய்து கொடுத்தேன், அதென்ன பெரிய விசியமா, அம்மா இப்படி எல்லாத்துக்கும் கேட்பா,ஒரு கட்டத்தில் எனக்கே எது எதுக்கு தலையில அடிச்சு சத்தியம் செய்து கொடுத்தது எண்டு நினைவே இல்லை அந்த இளந்தாரி டீன் ஏஜ் வயது  நாட்களில். ஆனாலும் என்னோட நியாயமா

                                    " பள்ளிக்கூடத்தில இங்கிலிஸ் டிச்சர் சொன்னவா,இங்கிலிஸ் படம் பார்த்த இங்கில்ஸ் நோலேச் அதிகம் ஆகும் எண்டு அதால பார்த்தேன் "

                         எண்டேன், நல்ல காலம் அம்மா அது என்ன படம் எண்டு கேட்கவில்லை,புண்ணியக் குஞ்சியும் விபரமா சொல்லவில்லை..

                                              யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் படக் கதை விக்டோரியா ராணி இங்கிலாந்தை ஆண்ட காலத்தில் நடக்கும் ஒரு கதை ,லோர்ட் என்ற உயர் சமூகத்தில் இருக்கும் கவுரவமான  பிரபு சடர்லி ஒரு பக்கவாத நோயாள திடிர் எண்டு படுக்கையில் விழ,அவரின் இளம் மனைவி லேடி சடர்லி என்ற அழகான் இளம் பெண் வேறு ஒருவரின் படுக்கையில் ஏறும் கதைதையை சுவாரசியமா சொல்லி இருந்தார்கள். பிரபு சடர்லி நல்ல மனிதர் அவரே சொல்லுறார்,

                                      " இனி என்னிடம் திருமண உறவு சந்தோஷ விசியங்களை எதிர் பார்க்க வேண்டாம்,உன் விருப்பப்படியே இன்னுமொரு பிரபுவிடம் உனக்கு விரும்பினால் உன் ஆசைகளை பெற்றுக்கொள் "

                          எண்டு உண்மையாகவே கொஞ்சம் விக்டோரியன் கால நடைமுறைகளில் இருந்து விலத்தி சொல்லுறார்.

                                               லேடி சடர்லி இயல்பாக இருப்பா,நிறைய பிரபுக்களின் பார்டிகளுக்கு பக்கவாத கணவனையும் அழைத்துக்கொண்டு போவா ,லோர்ட் சடர்லி எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருப்பார் .ஆனால் காதல் என்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே எண்டு, நீலக் கண்கள்,அதில் ஏக்கம், நுரை போல வழுக்கி விழும் சுருள் முடி, கீழ் நோக்கி வளைந்த கிளி மூக்கு எண்டு அண்டலேசியன் அழகில்  அந்த அம்மணி கைய்க்கு சவுக்காரம்  போட்டுக் களுவிப்போட்டுதான்  காலையே  தொட வேண்டும் போல அவளவு  தங்கப் பதுமைக்   களையா  இருப்பா 

                                  ஆனால்   அழகில் அம்சமாக இருக்கும் அவர் மனைவி லேடி சடர்லி,  உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு பாய்வது வேறு ஒரு உயர் குல பிரபுவுடன் இல்லை,  பதிலாக அவர்கள் பரம்பரைக் குதிரை லாயத்தில்,குதிரைக்கு கொள்ளு வைக்கும் எடுபிடி வேலை செய்யும் ஒரு சாதாரணமாண வேர்கிங் கிளாஸ் என்ற உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்து  ஒரு இளம் மனிதருடன்.  அதுதான் கதையின் திருப்பம்,.

                                        அந்தப் படம் எடுக்கப்பட்ட திரைக்கதை உண்மையில் டி எச் லாரன்ஸ் என்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அந்தக் கதையை ஒரு " கொன்பெஸ்சனல் ஸ்டைலில் " நாவலாக எழுதினாராம், விக்டோரியா ராணி அந்தக் கதையை தடை செய்தா. அவரையும் " உதவாக்கரை " எண்டு சொல்லி இருக்குறா.

                                நடு நெத்தியில சந்தனம் பூசி நாமம் போட்ட அந்த கதை அதன் சுருக்கிய வடிவில் நான் பின் நாட்களில் படித்து இருக்கிறேன், அதில நிறைய இலக்கியம் இருந்தது, அதைத் தடை செய்த விக்டோரியா மகா ராணியின் கணவர் இறந்தபின் அவா யாரோடு காதலில் இருந்தா எண்ட விசியம் செமக் காமடி,பாவம் தன் காதல் வாழ்கையை அவா யாருக்கும் சொல்லாமல் செத்துப்போனா விக்டோரியா மகா ராணியின் ரோமன்ஸ் உண்மைக் கதை " யங் லேடி சடர்லி " என்ற இளம் பெண்ணின் விரகதாபத்தை விட சுவாரசியம் ஆனது என்பதையும் படித்து இருக்குறேன்...

                                       உண்மையில் யாழ்பாணத்தில் வெலிங்கடன் தியடரில் பார்த்த " யங்  லேடி சட்டர்லி லவ்வர்ஸ் " படத்தில,லேடி சடர்லி உடுப்பு எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சு போட்டு, கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும்படி செய்த விசியங்களை விட, அந்தப் படத்தில வார அமரிகன் செடில் பிரெட் வகைக் குதிரைகள்,  அவை பாய்ந்து திரியும் பரந்த புல் வெளிகள், சடை வளர்த்த ஐஸ்லாண்டிக் குதிரை இழுக்கும் குதிரை வண்டிகள், பெரிய பெரிய விக்டோரியன் இங்கிலாந்து வேல்ஸ் நாட்டின் நாட்டுப்புற மாளிகைகளை  வளைத்து எடுத்துப்  படமாக்கி இருந்தார்கள்  

                                                   அதில் நடக்கும் இரவுப் பாட்டிகள், கிளிங் கிளிங் எண்டு மோதும் சம்பெயின் கிண்ணங்கள் , நளினமான இங்கில்ஷ் வால்ஸ் நடனம், மென்மையான மெழுகுவர்த்தி வெளிச்சம், உறவின் பிளிவாக மயக்கும் பின்னணி கிளாசிகல் சிம்பொனி இசை , அழகான பெண்களின் நீண்ட எல்லாத்தையும் இழுத்து மூடிய நிறைய ப்ரில் வைத்த உடை, பெண்களின் தலையில அலைய விட்டு தூக்கி நிமிர்த்தி,சரிய விட்டு நடு வகிடில் நதி பாயும் கொண்டைகள் ,முக்கியமா இலக்கணம் தவறாத விக்டோரியன் ஆங்கிலம் என்னை மிகவும் கவர்ந்த விசியம்...

                                   அந்தப்  படத்தில்  பல  இடங்களில்  திறந்த  மார்பகம்  எப்படி  இருக்கும்  என்று  பார்க்கக் கிடைத்தது. ரொமான்ஸ் கலவிக்கு  எவளவு முக்கியம்  என்று படிப்பினை கற்பித்தது . ஒரு  சீனில்  மரத்தோடு  சாத்தி  வைச்சு  அந்த    மச்சோ  ஆண்மை  குதிரைக்காரன் செந்தூரப்பூப்போல  மென்மையான   லேடி சட்டர்லியை .....................போட்டு  எடுக்க அந்த  மரம் புயலில் அகப்பட்டது  போல  முறியிற மாதிரி  உலுப்பி எடுக்கும். 

                                     செக்ஸ்  இவளவு  சுவாரசியமான  விசியம்  என்று  அந்த வயதில்  கொஞ்சம் மூளையின்   ஹிப்போதலமசில் குண்டுசியால குத்தின மாதிரி  இருக்க , எதிர்கால  வாழ்வின் சில  முக்கிய  காலகட்டம் கனவுபோல  வந்தது. இதெல்லாம்  தெரியாமால் இருப்பதே  தவறுபோல  இருந்தது.  

                                " காந்திருவம் "  என்று மருதன் இளநாகனார் என்ற புலவர் பாடிய  அகநானூறு இல் வரும்   சங்கத் தமிழ் சொல்லும்  " கருத்து ஒருமித்த இருவர் தாமே கூடி இணைவது " என்ற கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் புரியும் விசியங்கள் " யங் லேடி சடர்லி லவ்வர்ஸ் " என்ற அந்தப் படத்தில் அதிகம் கவரவில்லை!  என்  நண்பர்கள்  கதிரை நுனியில் குதிக்கால் குத்தி  நிக்கதான்  அதை  ரசித்துப் பார்த்தாங்கள்.  அதென்னவோ  உண்மைதான்