Tuesday 30 June 2015

.அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ..

புழுதி படிந்த வீதியில் களைத்துப்போய் வந்த ஒளவைப்பிராட்டி ஒருநாள் புளியமரத்துக்கு கீழே நிழல் ஒதுங்கினாள். புளியமரத்தில புளியம்பழம் உலுப்பிக்கொண்டிருந்த முருகப்பெருமான் அதியமான் இரும்பொறை நெல்லிக்கனி கொடுத்த தமிழ்ப் புலவியுடன் அறிவில் விளையாட ஆசைப்பட்டு
                               " வடவேங்கடத் தென் குமரித் தமிழின் இருப்பிடமே .மிகவும் களைத்துப்போய்விட்டாய் போல, புளியமரத்தின் கீழே சற்று நீடுகையில் இளைப்பாறு , அந்த இடைவேளையில் உனக்குப் படிக்க ஒரு கவிதை தருகிறேன், ஆனால் முதலியேயே சொல்லு உனக்கு சுட்ட கவிதை வேணுமா அல்லது சுடாத கவிதை வேணுமா " என்று என்று கந்தக் கடவுள் கேட்க .
                                ஒளவைப்பிராட்டி ஜோசித்தாள், இந்தப் பொடியனைப்பார்க்க எடிக்கேசன் இல்லாத சுண்டங்காய் போல இருக்கிறான் ,ஆனாலும் அவளுக்கு சுட்ட கவிதை என்றால் என்ன சுடாத கவிதை என்றால் என்னவெண்டு தெரியாது. ஆனாலும் ஒரு சின்னப்பொடியன் புளியமரத்தில நிண்டு தமிழ் கூறும் ஆயிடை நல் உலகு தலைவணக்கும் புலவிக்கு சவால் விடுகிறானே என்று நினைத்து , அதென்ன சுட்டது,சுடாடது என்று விளக்கம் கேட்க ஈகோ விடாததால் , பொடியன் முதல் கவிதை போடட்டும் பிறகு அவனை வைச்சு மடக்கலாம் என்று வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ என்று நினைத்து
                                            " ஆடையால் ஏனை அணியால் அலங்கரித்துப் பெறுபேற வந்த பெரு மூடன் போலிருக்கும் பெருமானே சுட்ட கவிதையே போடு மகனே " என்று சொல்ல .
                                   திருச்செந்தூர் கந்தக்கடவுள் யாரோ பேஸ்புக்கில் எழுதிய ஒரு கவிதையை ஒரு சின்னப் பேப்பரில் எழுதி கீழே தள்ளி விட்டார்
                                                  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல் மரங்கள் என்று எழுதிய ஒளவைப் பிராட்டி அதை வாசித்துப்போட்டு,நானே கத்தும் கடல் சூள் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அகப்பட்ட காளமேகத்தின் தலையையே தனிப்பாடல் வெண்பாவில் உருடின ஆள். இதெல்லாம் ஒரு கவிதையா என்று பொருமிக்கொண்டு ,
                                     " இப்பூ ,இதுவா கவிதை , " என்று அந்த சின்னப் பேப்பரை ஊதித்தள்ளிவிட
                                        " ஹஹஹஹஹஹா பாட்டி பாட்டி ,நீ அவசரத்துக்கும் ஒரு பார்டி வைக்க தகுதி இல்லாத பார்டி , கவிதை ரெம்ப சூடாக இருக்கா அதுதான் இப்பூ ,இதுவா கவிதை என்று ஊதித்தள்ளி விட்டாயா " என்று கேட்டாணாம்...அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ...
.
.

Sunday 21 June 2015

கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா...

வாழ்க்கை அனுபவம் என்பதை எப்படியும் எழுதலாம்.அதில் உண்மைகள் அரைவாசி புனைவுகள் அரைவாசி. அந்த விகிதாசாரம் தேவைக்கு ஏற்றபடி கலக்கும் போது சில நேரங்களில் பிரமிப்பாக இருக்கும். அந்த நினைவுகளில் ஏதோவொன்று ஒரு காலக்கடத்தின் சந்தோசங்களை மறுபடியும் உயிராக்கும் .
                             
                                                     இந்த இசைகருவி, நோர்வே , தலைவிதி நகர் ஒஸ்லோவில ,என்னோட அயல்வீட்ல வசித்த, என்னைப் போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு வயதான வடக்கு ஈராக்  நாட்டைச்  சேர்ந்த ஒரு வயதானவரிடமிருந்து  ஒரு நாள்  கிடைத்தது!அது கிடைத்த போது அதிகம் உட்சாகமாய் பின்னுக்கு பல சம்பவங்கள் தொடருமென்று அப்போது தெரியாது. 

                         அந்த வயதான அரபா மனிதர் நான் வீட்டில கிடாரை அகாலமான நேரம்களில் அதிரவைத்து நோண்டுவது தெரிந்து ஒருநாள் என்னை அழைத்து, தானும் தன் மனைவியும் நோர்வே குளிர் ஒத்துவராததால் மீண்டும் ஈராக்  போகப் போவதக சொல்லி இந்த அரபிக் தன்பூர் இசைக்கருவியைக் காட்டி 

                             "உங்களுக்கு இதை அன்பளிப்பாக தர விரும்புகிறேன் மகன் "என்றார் !

                                                         இந்த கருவி எனக்கு வாசிக்க தெரியாது, ஆனால் இந்த இசைக்கருவி வாசிக்கும் நிகழ்வுகள் ஈரான் நாட்டு மாணவர்கள் என்னோட படித்த போது பார்த்திருக்கிறேன். எனக்கு வாசிக்க முடியாத கருவி என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதால் இண்டரெஸ்ட் வரவில்லை, அவர் வாசிப்பதை சும்மா பார்த்து கொண்டு இருந்தன், அவர் நல்லா வாசித்தார் , வாசித்து முடிந்தபின் நடந்த அந்த உரையாடலில் அவர்


                            " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்,,
இன்ஷா   அல்லா,,,," 

                             "        என்ன சொல்லுறீங்க அரபா,,உண்மையாவா சொல்லுறீங்க "

                                       "  ஆமாப்பா,  இன்ஷா   அல்லா,,  ,உண்மைதான்,,இதன் இசையில் ஒரு பெண்களைக் கவரும் கவர்ச்சி இருக்கு "

                                           " அட,,இது எனக்கு இவ்வளவுநாளும் தெரியாமல் போச்சே "

                                          " அதனால் என்ன,,இப்ப  நான்  சொல்லி இருக்கிறேனே,,வாழ்க்கையில் சில சம்பவங்கள் சில நேரத்துக்காக காத்திருக்கும்,அந்த நேரம் வரும் போதுதான் அதிசயங்கள் நடக்கும்,,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ,"


                                         எண்டுசொல்ல, நான் அவரின் நடுத்தர வயதான மனைவியைப் பார்த்தேன் , அந்தப் பெண்மணி கழுத்தைப் பாலில் குளித்த கிளியோபட்ரா போல அந்த நடுத்தர வயதிலும் வீனஸ்  நட்சத்திரம் அளவுக்கு  ஜொலிக்க , இதுக்கு மேல என்ன உத்தரவாதம் தேவை எண்டு , ஜோசிக்கத் தேவை இல்லை எண்டு போட்டு , சடார் புடார் எண்டு கலியாணம் கட்டுற ஹோர்மோன்கள் மூளையின்  ஹிப்போட்டலாமாஸ் இல் தாறுமாறாய் பாய தொடங்க
                          
                               " இதைதான் இவளவுனாலும் தேடிக்கொண்டு இருந்தேன் அய்யா ,ஆண்டவன்  உங்களின் வடிவில் வந்து அருள் புரிந்து இருக்கிறான் ,நன்றி அய்யா " 
                                        
                        எண்டு சொல்லி இந்த இசைகருவியைக் கையோட கிளப்பிக்கொண்டு வந்துடன்,
                                       
                                 "  மகன்,நீங்கள் தனியா இருகிரிங்கள்,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா, கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் ,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா
                           
                                         எண்டு வேறு சொனாரா, நானும் இத வீடில வைத்து நோண்டி "ஹபீபி ஹபீபி " (அன்பே அன்பே ) எண்டு தெரிந்த கொஞ்ச அரபிமொழிய வைத்து வாசித்து பழகினன்.கிடார் வாசித்தால் இது வாசிக்கலாம், fred board கொஞ்சம் வித்தியாசம்! 

                                   என்னோட தொடர் மாடியில் நட்பான,ஒரு அரபிமொழி பேசும் , மத்திய ஆசியாவின் எதோ ஒரு நாடில இருந்து வந்த அரசியல் அகதிக் குடும்பம் இருக்குது, அந்த வீடில உள்ள பெண்கள் எல்லாம் பிரம்மதேவனிடம் அட்வான்ஸ் கொடுத்து, அளவு கொடுத்து சொல்லி செய்விச்ச மாதிரி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிபோல அழகா இருப்பார்கள் ,அவர்கள் அழகைப்பற்றி ஒரு கவிதை அல்ல ஒரு கவிதை தொகுதியே எழுதி சொந்தகாசை செலவழித்து அதை வெளியிடலாம் ,,அவளவு சொக்கத் தங்க தேவதைகள் !

                                           
                          ஒரு நாள் எப்படியும் அவர்களுக்கு இந்த அரபிக் தன்பூர் கருவியில் கீதம் இசைத்து ,அவர்கள் அன்பைப் பெறவேண்டும் எண்டு எப்பவுமே நினைப்பது ஒரு நாள் அந்த இளம்பெண்களை தொடர்மாடி நிலத்தடி வாசலில் சந்திக்க நேர்ந்தது ,பாலைவனத்தில ஒட்டகம்போல ஒரு ஓரமா ஒதுங்கி நிண்டு , அந்த வீட்டில வசிக்கும் கடைசி , சிறிய இளம் பெண்னிடம் ,

                          " என்னிடம் அரபிக் தன்பூர் இசைக்கருவி வீட்டில இருக்கு " 

                               எண்டேன், பேரீச்சம்பழகலரில் இருந்த அந்த சின்ன தேவதை திடுக்கிட்டு, நான் சொன்னது விளங்காமல் ,ஏதோ என்னோட வீட்டில அனக்கொண்டா மலைப் பாம்பு இருக்கு எண்டு சொன்னதுபோல விழிக்க ,நான் அவளுக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னேன் !அவள் பிரகாசமானா பாரசீக விழிகளால் ஆச்சரியமாகி ,

                       
                              "ஒ அப்படியா ,நீ வாசிபியா அதை ? எதுக்கும் அக்காமாரிடம் போய் சொல்லுறன்  எண்டாள், நான் இயல்பாக
                              
                       "அதுக்குதானே உன்னிடமே சொன்னேன் " எண்டு மெதுவாக சொல்ல,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா , 
                    
                      அவள் "என்ன சொன்னாய் எண்டு குழப்பமா கேட்டாள்", நான்
                          
                     " உன் அக்காமார் அரபிக் தன்பூர் இசையில் மயங்கி உயிரை விடுவார்கள் எண்டு கேள்விப்பட்டன் என்றேன் ! 
                        
                            அவள் சிரிச்சுப்போட்டு , "அப்படி எல்லாம் நாங்க மயங்குற ஆட்கள் இல்லை ,",என்று சொல்லிப் போயிட்டாள்
                                

                               அதன் பின், அந்த சம்பவத்தையும் அரபிக் தன்பூர் இசைக்கருவியையும,மறந்தாலும்,ஒருகோடைவிடுமுறையில் அவர்கள் குடும்பமாக வெளியே புல்வெளியில் இருந்தததை ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அந்த வயதான ஐயா சொன்ன ஆசீர்வாதம், அவரின் கிளியோபட்ரா மனைவி நினைவுவர, ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ,ஆனால் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையில் , நைசா அரபிக் தன்பூர் இசைக்கருவியை நாரதர் போல தூக்கிக்கொண்டு போய் ஒரு ஓரமா பிச்சைக்காரன் போல , அவர்களோடு நானும் குந்திஇருந்து இந்த கருவிய வாசித்தன்,
                                                

                                    நான் பல மாதமா திட்டமிட்டு ,பழகிய " கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா ....." பாடலை இழுத்து இழுத்து வாசித்தேன் ,அவர்கள் என்னை அதிகம் கவனிக்கவில்லை, நாசாமப்போன இந்த அரபிக் தன்பூர் கருவியை அதிகம் கவனித்தார்கள் ! அவர்கள் வீட்டில இருந்து வந்த குட்டிப்பெண் மட்டும் என்னை சந்தேகமாகவே இவன் என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறான் என்பதுபோல எச்சரிக்கை உணர்வோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

                                      என்ன உலகமடா இது எண்டு வெறுப்பு வந்தாலும் அவர்கள் என்னோட இன்னிசை மழையைக் கொஞ்சம் ரசித்தார்கள், குப்புஸ் என்ற அரபிக் சாப்பாட்டை வாயில அடைஞ்சு கொண்டு இருந்த அந்த அழகான பெண்கள் என்னை ஏன் நாயே என்றும் கவனிக்கவில்லை. ஆனால் யாரும் அந்த வயதான ஈரரக் நாட்டவர் சொன்ன மாதிரி மயங்கின மாதிரி தெரியவில்லை, 


                                                 இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ஆணையாக   அவர்கள் வளர்க்கும் இருண்டு பூனைகள் மட்டும் படு இண்டரஸ்ட் ஆக கேட்டுக்கொண்டு இருந்தன, வேற ஒண்டுமே நடக்கவில்லை. எழும்பிப் போற நேரம், இவன் எங்கே உருப்படப் போறான் என்று அந்த ரெண்டு பூனைகளும் என்னைப் பார்க்க , அந்தப் பேரீச்சம்பழ சின்னப் பெண்ணிடம் எப்படி என் பாட்டு என்று கேட்டேன் ,அதுக்கு அவள் நோர்ஸ்கில் என்னை விசாரித்தாள் 

                       " என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு , 


                             " அப்பிடி எல்லாம் ஒன்றும் இல்லை,,அரபிக் தன்பூர் இசைக்கருவி எனக்கு உயிர் தெரியமா "

                                " அப்பிடியா ,சரி ஒரு பாட்டுத்தானே  என்னமோ வாசித்தாய் ,,அது  எங்கள் நாட்டு இசை போல இல்லையே "

                                  " ஓம்,,அந்த ஒரு பாட்டுதான் இதில கிடந்து முறிஞ்சு முறிஞ்சு வாசிக்கப் பழகினேன் ,ஒரு முடிவோடுதான் பழகினேன் ,இது இந்திய இசை "

                                  "  சரி,,அந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் "

                               "  அது வந்து,,வந்து,,,,,ஓட்கம் தெரியுமெல்லோ,,அது  ஒருநாள் பாலைவனம் முழுவதும் அலைஞ்சுச்சாம் "

                               "  எதுக்கு அலைஞ்சுது ,,,"

                                "அதுக்கு  சாப்பாடு  இல்லை ,,தண்ணி இல்லை என்று  அலைஞ்சுது "

                                 "  ஹஹஹஹ் ,,ஓட்டகம் ,,அப்பிடி எல்லாம்  அலையாது" 

                          " வேற என்னத்துக்கு ஓட்டகம் பாலைவனத்தில் அலையும் "

                                " ஓட்டகம் தண்ணி இல்லாமல் ,சாப்பாடு இல்லாமால் மாதக்கணக்கில் சமாளிக்கும் "

                                      " அதெப்படி "

                                         " ஓட்டகம் அதன் கழுத்தில நிறைய கொழுப்பு சேர்த்து வைத்திருக்கும்,,அது அதுக்கு  பசி வரும்போது இரைமீட்டிட உதவும் "

                                         " ஓ,, நீங்களும் ஓட்டக்கப்பாலும் பேரிச்சம் பழமும் சாப்பிடத்தாலா இப்படி அழகா இருக்குறீங்க "

                                            " என்ன,,உனக்கு இப்ப என்ன பிரச்சினை,,சொல்லு,,என்ன பிரச்சினை,,நாங்க வடிவா இருந்தா உனக்கு என்ன "

                               " ஆனால் அநியாயத்துக்கு அள்ளிக்கொட்டுற வடிவா எல்லோ இருக்குறீங்க "

                               " இப்ப உனக்கு  என்ன  பிரச்சினை அதில "

                                     "   ஹ்ம்ம்,பேசாமல் ஒரு ஓட்டகாமா பிறந்திருக்கலாம்      "             

                                            "  அது எனக்கு தெரியாது,,,ஓட்டகம் பின்னங் காலில் எம்பி உதைக்கும் தெரியமா,,,,அந்த அடியில நீ அந்த இடத்திலேயே குளறிக் குளறி உயிரை விடுவாய் "

                                          " அட,,அப்படியா ,,பயமா  இருக்கே "

                                        " நாங்கள் குருதிஸ்தானில் வசித்த நேரம் எங்களின் மாமா இப்படி இசைக்கருவி வாசிப்பார்,,ஆனால் நல்லா ரசித்து வாசிப்பார், "

                                           "  ஓ  ,,அவர்  என்ன  பெரிய ஓல்டு மொங்கு பிஸ்தாவா "

                                            "      என்ன "

                                           "   ஒண்டுமில்லை "

                                       "  இல்லை நீ என்னவோ  எங்க மாமாவைப்பற்றி சொன்னாய் "

                                        "  இல்லைப்பா,,சும்மா  வாய் தவறி உளறிப் போட்டேன் "

                                         " நீ இந்த இசைக்கருவியோடு இங்கே வந்து குந்தின நேரத்தில் இருந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக்கொண்டுதானே இருக்கிறாய் "

                                         "  சம்பந்தம் முடிக்க தான் வந்து இருக்கிறேன் "

                                 " என்னது ,,இதென்ன  சொல்லுறாய்,,உனக்கு விசரா "

                                          " அப்பிடி எல்லாம் ஒன்றும்  இல்லை "

                                           " நீ  என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு  நீ மசிங்கி மசிங்கி வாசிக்கிறதை பார்க்க  " எண்டாள்  .

                        நான் கோவத்தில, " இப்படியா ஒரு இசைக்கலைஞ்சனை அவமதிப்பிங்க " என்று கேட்டேன் 


                                       அவள் ஈஈ ஈ ஈ ஈ  என்று ஒட்டகம் போலப் பல்லை இளித்தால், நானும் பதிலுக்கு ஈ ஈ ஈ ஈ ஈ என்று கோவேறுகழுதை போலப்  பல்லை இளிதுப்போட்டு வந்திட்டேன்                               

                                 
                                       அதுக்குப் பிறகு , கொஞ்ச நாள் இந்த கருவி வீடில சுவரில தொங்கியது ,பார்க்க அழகா இருக்கும்,நினைக்க கோபம் வரும், இப்படியான தருணங்களில் தான் இசை மீதும்,இசைகருவிகள் மீதும் ,கடவுளின் " நற்கருணை" மீதும் வெறுப்புவருகின்றது ! இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இந்த அரபிக் இசைக்கருவியில் ஒரு முன்னோடிபோல ,பல தமிழ் ,ஹிந்தி ,பாடல்கள் வாசித்தாலும் , கீளதேய சாஸ்திரிய கரநாடக சங்கீத இல் வரும் தியாகராஜ சுவாமிகளின் " எந்தரோப மகானோ பாவு லு " என்ற பஞ்ச இரத்தின கீர்த்தனையை இதில வாசித்திருக்கிறேன் !
                                          

                                 சில மாதங்களின் முன், எனக்கு கலியாணத்துக்கு ராசியில்லாத இந்த இசைக்கருவி இனி வேலைக்கு ஆகாது எண்டுபோட்டு என்னோட தொடர்மாடியில் தனியாக வசிக்கும் , என்னைப்போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு ஆப்கானிஸ்தான் இளம் நண்பனுக்கு..
                        
                                    " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்" 
                             
                                       எண்டு அந்த வயதானவர் எனக்கு சொன்ன டைலாக்கை சொல்லி கொடுக்க அவனும் என்னைப்போலவே வாயைப் பிளந்து வேண்டினான் ,ஆனாலும்
                            
                                            " நான் திருமணம் ஆகியவன் , என்னோட மனைவிக்கு இன்னும் நோர்வே வர "பமிலி ஸ்பொன்சர் விசா" கிடைக்கவில்லை ,

                                    "  அப்படியா,,அது  கவலையான நிலைமைதான்"

                                  " எப்படியும் அவளுக்கு  இங்கே வர ஒருவருடம் எடுக்கும் போல இருக்கு "

                                   " அது,,இன்னும்  துன்பமாய்  இருக்குமே,,உங்களுக்கு "

                                      "  நல்ல உதவி நீங்கள் இதை தந்தது ,,மனைவி வரும்வரை யாராவது பாரசீகப் பெண்கள் கிடைக்க கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் எண்டால் அது நடந்துதான் தீரும் ,,இன்சா அல்லா ,," என்றான்
                          
                                  நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் ? கடவுளும் இருக்கிறவனுக்கு தான் இன்னும் கூரையப் பிச்சுக்கொண்டு கொடுக்கிறார் !.


.

.

Friday 12 June 2015

காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!

மனிதர்களுக்கு எது முக்கியம்,எது முக்கியமில்லை என்பதில் எங்களின் தேர்வுகள் எப்போதுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. சிலநேரம் ஆச்சரியமாக இருக்கும் சிலரின் அற்பமான விருப்பங்கள் அவர்களுக்கு அதிமுக்கியமாக இருப்பதை அறியும் போது. 

                                               என்னோட அப்பாட்மென்டில் உள்ள எல்லா வீடுகளும், இருண்டு பாதுகாப்பான திறப்புக்கள் போட்டு திறப்பது போலத்தான் கதவுகள் இருக்கு. ஆனால் ஒருவர் அதுக்கு மேலாக மிகவும் பாதுகாப்பாக இன்னும் ஒரு வெளிஇணைப்பு ரகசிய இலக்கங்கள் அமத்தும் பூட்டுப் போட்டு அதைவிட வேறு இரண்டு சிக்கியூரிட்டிக் கொம்பனியின் எலார்ம் போட்டு வைச்சு இருக்கும் அறிவித்தல் உள்ள தகவல் அந்தக் கதவில் எழுதபட்டுள்ள அதி உச்ச பாதுக்காப்பு ஏற்பாட்டுடன் வசிக்கிறார்.

                                      இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் தேடினாளாம் கதைபோல பல விசியங்கள் நாங்கள் நினைக்காத ஒரு நாளில் நடுவீட்டின்  கூரையைப் பிச்சுக்கொண்டு நேராக வந்திறங்கும்.  ஆனால் அவர் வீட்டில் என்ன அப்படி இருக்கு என்று எனக்கு தெரியாது. நான் நினைக்கிறன் என் அயலில் உள்ள ஒருவருக்குமே தெரியவாய்ப்பில்லை, காரணம் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை.யாரையும் அவர் வீட்டுக்கு உள்ளே அழைத்ததுமில்லை. ஆனால் ஒரே ஒருநாள் அந்த சிதம்பர இரகசியத்தை அறிய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

                                பொதுவெளியில் எல்லோரும் ஒரு சமூகத்தின் மத்தியில் பகிரங்கமாக பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து இந்தக்கதை சொல்ல முடியுமா என்று நினைத்தால், ஒருவிதத்தில் சொல்லலாம் போலதான் இருக்கு, அதுக்கு காரணம் அந்த மனிதர் அவரோட கதவில நோர்வே மொழியில் " எந்த இடத்தில் அவமானப்பட்டீர்களோ அதே இடத்தில் உங்கள் தலையை உயர்த்தி உங்களை மேன்மையாக என் இயேசு வைப்பாராக...ஆமென் !!!! " என்று எழுதி ஒரு ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறார்.        

                                    இது இன்னும் ஆர்வத்தை அவர் மேல் கிழப்பும். இந்த வயதான மனிதர் ஏன் இப்படி அதியுயர் பாதுகாப்பில் இருக்கிறார் என்ற ஒரே ஒரு கேள்விக்கு புதிரான , நானே ஜோசிக்கும் விடைகள் ஆயிரம் மண்டைக்குள்ள எப்பவும் முட்டி மோதும். ஆனால் ஒன்றும் பயனில்லை.  இனி அலட்டாமல் நேராகவே உலாவ் தாரியர் என்ற அந்த மனிதரின்  கதைக்குள்ள வாறன்.

                          மத்தியதர வர்க்க, " கையில காசு வாயில தோசை " என்று உழைத்து வாழும் அன்றாடம் காச்சிகள் அதிகம்  வசிக்கும் என்னோட பதினோருதட்டு தொடர்மாடிக் குடியிருப்பில் ஐந்தாவது தட்டில் உள்ள பன்னிரண்டு நெருப்புப் பெட்டி போன்ற குடியிருப்பில்தான் என்னோட உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இருக்கு. அந்த தட்டில் எதிர் எதிரே ஆறு குடியிருப்புக்கள் இருக்கு. அதில் வலது பக்க தொடக்கத்தில் இருந்தார் உலாவ் தாரியர் என்ற அந்தத் தனிமையான நோர்வே நாட்டு மனிதர். 

                                               நான் அந்த தட்டின் இடது பக்கத் தொங்கலில் தொங்கிக்கொண்டு இருக்கிறேன். வலதையும் இடதையும் பிரிக்கும் நடுவில் உள்ள கொறிடோர்தான் அதிகமாக என் தட்டில் வசிப்பவர்களை எப்பவாவது சந்திக்கும் " கனெக்டிங் பீப்பிள்ஸ் " சந்திப்பு மையும்.

                                    வசதியான ,நல்ல வேலை, கணவனும் மனைவியும் வேலை செய்யும் நோர்வே மக்கள் அதிகம் பெரிய இடவசதியுள்ள அப்பர்த்மெண்டில் இருப்பார்கள். , பணக்கார நோர்வே மக்கள் அப்பன் வீட்டு சொத்தில் வில்லா என்ற தனி வீடுகளில் இருப்பார்கள். என்னோட குடியிருப்பில் இல்லை, அவர்களுக்கு என்னோட குடியிருப்பு இருப்பதே பலசமயம் நினைவில் இருப்பதில்லை. 

                                                     ஆனாலும் என்னோட குடியிருப்பு தொடர்மாடியில் நிறைய நோர்வே மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் வசிப்பதுக்கு அவர்களின் வாழ்க்கை முறையைக்  குறை சொல்லும்படியான காரணங்கள் தான் இருக்கு.  வயதான  உலாவ் தாரியர்க்கும் அவைகள் பொருந்தும் என்று கோடைகாலத்தில் அவரோடு வெளியே உள்ள புல் வெளியில் கதைத்த போது அறிய முடிந்தது.

                           அளவுக்கு அதிகமான பணமும்,அளவுக்கு அதிகமான பெண்களின் தொடர்ப்பும் மனிதர்களை சீரழிக்கும் என்பதுதான்  உலாவ் தாரியரின் வாழ்க்கைக் கதை,அதையெல்லாம் " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  " என்று நோர்வே மொழியில் கொஞ்சம் கொச்சையான மொழியில் எனக்கு சொல்லுவார். அவரின் கதையை பியோதர் தவஸ்ட்டேக்கியின் " ப்ரதர் கொச்மநோவ் " நாவல் போல நாநூறு பக்க நாவலாக எழுத முடியும். அவளவு மேடுகளும் பள்ளம்களும் ,சில நேரம் அவரே தோண்டிய குழிகளும் அதில இருக்கு. 

                                         அவரின் வாழ்கையை ஒரு சிறுகதை போல சுருக்கி எழுத அந்தோன்  செக்காவ் போன்ற ஒருவரால் முடியும் ஆனால் என்னைபோல சாமானிய மனிதர்களால் முடியாது, இருந்தாலும் வியப்பில் ஆழ்த்திய ஒரு சின்ன சம்பவத்தை  முயற்சிக்கிறேன்.

                       உலாவ் தாரியர், வடகிழக்கு ஒஸ்லோவின் விளிம்பில், சுவிடன் எல்லைக்கு கிட்ட  உள்ள கிராமத்தில் ஒரு பணக்கார அப்பாவுக்கு ஒரே ஒரு பிள்ளையாக பிறந்து இருக்கிறார். அதுவே போதுமே வெம்பிப் பழுத்து தலையால தெறிக்க. சின்னவயசில் அழகா இருந்த அவர், இளவயதில் ஒஸ்லோவில் படித்து இருக்கிறார், ஒஸ்லோவின் முக்கியமான புட்போல் கிளப் ஆனா " வோலறேங்காவில் " கோல் கீபாராக இருந்து இருக்கிறார், 

                                            பின்னர் என்ன வேலை செய்தார் என்று இன்றுவரை அவர் சொல்லவில்லை,ஒருவேளை அதைப்பற்றி சொல்ல ஒன்றுமேயில்லையோ தெரியாது. ஆனால் நாலு முறை கலியானம் காடினார், நாலு பேரையும் விவாகரத்து செய்தார் .அவரின்   காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! வரும் போது இருந்ததை விடப் போகும்போது மினுக்கமாகப் போனதாக சொல்லுவார் .அவருக்கு பிறந்த பிள்ளைகள் மட்டும் அருமையான பிள்ளைகள் என்று சொல்லுவார்.

                         குழப்பமாக  காதலிகள் அவர் வடிவுக்கு காலுக்க சுருண்டு விழுந்த கதை கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில் வாற வல்லவரையன் வந்தியத்தேவன் போன்றவை , அவருக்கு பிறந்த பிள்ளைகள் அவரை விட்டு பதினெட்டு வயதில் " மண்டையப் போடும் போது சொத்தைப் பிரிக்க வாறோம் " என்று சொல்லிப்போட்டு போய் விட்டார்கள். வருட இறுதியில் வரும் கிறிஸ்மஸ் விடுமுறைக்கு பரிசாக தான் அனுப்பும் காசுக்கு நன்றி சொல்ல மட்டும் டெலிபோன் எடுப்பார்கள் என்று சொல்லுவார்.

                          பல வருடம் தனியாக இருந்தார், உலகம் சுற்றினார், ஆபிரிக்கா போய் கென்யாவின் சிங்கம் உலாவும் சவானாக் காட்டில் தனிய டென்ட் அடிச்சு இருந்தார், பிரேசிலுக்கு போய் அமேசன் நதியில் இறங்கி அனக்கொண்டா பாம்புகளைத் தேடினார், இந்தியாவுக்கு போய் புனித கங்கை நதியில் பாவங்களைக் களைய முழுக்குப் போட்டார். அங்கே சாதுக்களுடன் வாழ்ந்தார். எல்லாம் விபரமா சொன்னார் .

                              சாதாரண மனிதர்கள் செய்யமுடியாத எல்லாம் ஒரு கை பார்த்துப்போட்டு   இப்போது வயதாகி எங்கும் போவதில்லை ,ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்களின் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்கா என்ற சேர்ச்சுக்குப் போவார். வாசலில் எப்பவாவது என்னைக் கண்டால் என்னையும் வரசொல்லுவார்.சின்ன உரையாடலின் முடிவில் நான் எப்போதும் நேரம் இல்லை என்று ஏதாவது சாட்டு சொல்லி நழுவுவேன், அவர் சிரிச்சுக்கொண்டு  

                             " எந்த மனிதனோ, மனுஷியோ உங்களை புறக்கணித்திருந்தாலும் அவர்கள் மத்தியில் உங்களை ஆச்சரியப்படத் தக்க. வண்ணமாக என் இயேசு உங்கள் தலைகளை உயர்த்துவாராக,ஆமென் !!! " 

                                   என்று சொல்லிப்போட்டுப் போவார்.

                          இந்தவருடத் தொடக்கத்தில் ஒருநாள் அவரை எங்களின் வீட்டுக்கு அருகில் கீழே உள்ள சூப்பர் மார்கட்டில் கண்டேன், வழமைப்போல சுருக்கமான உரையாடல், அதன் முடிவில்

                       " இன்று உனக்கு நேரம் இருந்தால் என்னுடைய வீட்டுக்கு இப்ப வாவேன், கோப்பி குடிச்சு கொஞ்சநேரம் ஆறுதலாகக் கதைக்கலாம், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! "

                                           என்றார், எனக்கு சனிக்கிழமை லோட்டரியில் லட்சம் விழுந்த மாதிரி இருந்தது. நான் வெளியே சில முக்கியமான வேலைக்கு அப்போது  போகவேண்டி இருந்தது. ஆனாலும் அந்த இடத்துக்கு போன் அடிச்சு எனக்கு உடம்பு சுகமில்லை இன்னொருநாள் வருகிறேன் என்று சொல்லிப்போட்டு, அவரோட பைகளை வேண்டிக் காவிக்கொண்டு அவரோடு வெளிக்கிட்டு  வந்தேன். அவர் கதவு திறக்க பத்து நிமிடம் எடுத்தது, முக்கியமாக  சிக்கியூரிட்டி பூட்டின் இரகசிய எண்களை அவர் அமத்தும்போது அதை எனக்கு மறைத்துக்கொண்டு அமத்தினார்.

                           விசாலமான அவரின் வசிப்பிடத்தில், ஆச்சரியமாக அவர் வீட்டுக்கு உள்ளே வழமையான நோர்வே மக்களின் வீடுகளில் இருக்கும் கலை அம்சமான எதுவுமே இல்லை. ஒரு சின்ன சோபா நடு வீட்டில்,ஒரு சின்ன டெலிவிசன், ஒரு சின்ன மேசை , சுவர்களில் கறுப்பு வெள்ளையில் குடும்ப்பப் படங்கள், அதில அவர் புட் [போல் விளையாடிக்கொண்டு இருந்த கால உன்னத நாட்களின்  பெருமிதம் மங்கிப்போய் இருந்தது , நிறைய வெள்ளிக்  கேடயங்கள் தூசு பிடித்துப்போய் இருக்க, கால்பந்துப் போட்டிகளில் வென்று கிடைத்ததில் சுவரில் தொங்கவிட்டு இருந்த பதக்கங்களில் பாசி பிடிச்சுப் போய் இருந்தது.

                                             நிறையத் தடித்தமட்டைப் புத்தகங்கள் ஒரு அலுமாரியில் இருந்தது. அந்த அலுமாரிதான் மிகப் பெரிதாக இருந்தது. வேற கண்ணுக்குள்ள குத்துற மாதிரி ஒரு மண்ணும் இல்லை அந்த வீட்டில. உலாவ் தாரியர் சுருக்கமாக, மெதுவாக, அந்த வீட்டின் அமைதியைக் குழப்பாமல்  கதைத்தார். நான் முக்கியமான கேள்வி கேட்கவேண்டிய தருணத்துக்கு காத்திருந்தேன்.

                              உலாவ் பரம்பரைப் பணக்காரராக இருந்தாலும்,அவர் வம்ச சொத்துப் பத்து எல்லாம் அவர் கிராமத்தில் இருக்கு. அப்புறம் காசு கட்டாயம் ஏதோ ஒரு பாங்கில் பாதுகாப்பாக இருக்கும் .வீடுக்குள்ள காசை உரப்பையில் கட்டி வைச்சுக்கொண்டு இருக்கும் அளவுக்கு அவர் முட்டாள் இல்லை. அப்படி இருந்தாலும் என்னைப்போல ஒரு வெளிநாட்டுக்காரனை நம்பி வீடுக்குள்ள உள்ளிட விரும்பமாட்டார். 

                                                 சில நேரம் அழகான பெண்கள்....ஹ்ம்ம்,,,அந்த வீட்டில் பெண்கள் வாசமே இல்லை, பதிலாக மாதக்கணக்கில்  தோய்க்காத பழைய துணிகளில் இருந்து வரும் உறண்டல் வாசம் தான் வந்தது. பொறுமையை அதுக்கு மேலயும் கமகட்டில அமத்தி வைக்க முடியாமல், இதுக்குமேலே என்ன இருக்கப்போகுது, அதைவிட அந்த வீடுக்குள்ள இனி ஆராய்ச்சி செய்ய வரவேண்டிய தேவையே இல்லாமல் இருப்பது யதார்த்தமாய் இருந்ததால்,

                        " உலாவ்  ,உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் "

                                 என்று கேட்டேன் ,அவர் மவுனமாக இருந்தார், கொஞ்ச நேரத்தில் எழும்பிப் போய்க் கதவை செக் செய்தார். அது இறுக்கமாக உள்ளுக்கு தாழ்ப்பாள் போட்டு இருக்கு என்பதை உறுதி செய்துகொண்டு வந்து சோபாவில் மவுனமாக நாடியைத் தடவினார். ஆமுடையானை நம்பி அவசாரி ஆடலாமா? என்ற பழமொழி போல என்னைப் பார்த்தார், பார்த்துப்போட்டு 

                        " சரி,கேள் ,என்னத்தைப் பெரிசாகக் கேட்கப் போகிறாய், என்னத்தைப் பெரிசா அதுக்கு பதிலாக நான் சொல்லப்போறேன், நானே இந்தா அந்தா என்று கிடக்கிறேன்,காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ... சரி கேள், விடை கிடைக்குதோ இல்லையோ கேள்விகள் சில நேரம் மிக மிக முக்கியம்,  "  என்றார்.

                        " உலாவ்,,நீங்கள் ஏன் இவளவு பாதுகாப்பாக வீட்டுக்கு சிக்கியூரிட்டி  பூட்டு எல்லாம் போட்டு வைச்சுக் கொண்டு  இருக்குரிங்க, நீங்கள் தப்பாக நினைக்காவிட்டால் அந்தக் காரணத்தை சொல்ல முடியுமா "

                          என்று சும்மா பொழுது போகாமல் குழந்தைகள் பாலமித்திராவில் வாற பலராமர்  கதை கேட்பது போல முகத்தை வைச்சுக்கொண்டு கேட்டேன். 

                     "  அதில என்ன சந்தேகம் உனக்கு, என் வீட்டுக்கு  பாதுகாப்பு தேவை ,அதனால் கதவுக்கு அதிக பாதுகாப்பு கொடுத்து வைத்து இருக்கிறேன் ,ரெண்டு  எலார்ம் சிக்கியூரிட்டிக் கொம்பனிக்கே மாதம் மாதம் நாலாயிரம் குரோனர் சுளையாக் கட்டுறேன் "   என்றார் 

               " அதுதான் எனக்கும் விந்தையாக இருக்கு, ஏற்கனவே ரெண்டு நல்ல பூட்டு நிரந்தரமா இருக்கே,பெருமாள் கோவில் உண்டியலுக்குப் போட்ட மாதிரி ஏன்தான் பெரிய ஒரு எக்ஸ்ட்ரா சிக்கியூரிட்டி பூட்டு போட்டு வைச்சு இருக்குரிங்க ,உலாவ் , அதுதான் குழப்புதே...   "   என்றேன் 

                               நானே ஒரு உப்புச் சப்பில்லாத கேள்வியைக் கேட்டது போல எதிரொலித்துக் கொண்டிருந்தது என் சிந்தனைப் போக்கைப் புரிந்துகொண்ட மாதிரி  ஜன்னல் திரைச்சீலைகள் மட்டும் கொஞ்சம் நிழலாக அசைத்துக்  கொண்டிருக்க , அந்த வீட்டின் பயமுறுத்தும் அமைதி மூலை முடுக்குகளில் அதிகமாகப் பதுங்கி  இருந்தது  .

                       "  நான் நினைச்ச கேள்வியைத்தான் கேட்கிறாய். முக்கியமான கேள்வியும் தான், காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்!  இதுக்குப் பதில் நீ நினைப்பது போல கடினமாக இருக்காது. ஹ்ம்ம்....காதல் ,,ஹ்ம்ம் ,நிபந்தனையற்ற  காதல் ,,,அது என்ன  எண்டு  தேடித்தேடி ,,முக்கியமா அறிவுள்ள மனிதர்களிடம் தேடித்தேடி ,ஹ்ம்ம்,, " என்று பெருமூச்சு விட்டுப் போட்டு மறுபடியும் நாடியைத் தடவினார்.

                                         " நோர்வே நாடு பற்றி உனக்கு அதிகம் தெரியாது, முக்கியமா நோர்வே மக்கள் எப்படி வாழ்கையை நினைகிறார்கள் என்று உனக்கு தெரியாது,,அதிலும் நோர்வே பெண்கள் பிசாசுகள் "

                                      " ஹ்ம்ம்,,உலகம் முழுவதும் பெண்களைப் புரிந்துகொள்ள கஷ்டம் தான் .." 

                                               " என்ன கஷ்டம்....நான் இந்தியா சுற்றிப் பார்த்த போது ஒரு குடும்பத்தைப் பார்த்தேன். வயசான அம்மா ,அப்பா இவர்கள் இருவரையும் அவர்களின் அதிகம் வருமானம் இல்லாத பிள்ளைகள் கடவுள் போல அந்த வயதான காலத்திலும் தலையில தாங்கிப் பராமரிக்கிறார்கள் ,எனக்கு அதைப்பார்க்க கண்களில் கண்ணீர் வந்தது.என் பிள்ளைகள் நாளைக்கே மண்டையப் போட்டால் லோயரோடு வந்து நிக்குங்கள் என் சொத்தைப் பிரிக்க .."

                         "  உலாவ், உங்களை தர்மசங்கடம் ஆக்கும் கேள்வியாக இது இருந்தால்,தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு மடையன் அநாவசியமா அற்ப கேள்வி கேட்டுவிட்டேன் போல இருக்கு "

                        என்றேன். அவர் மறுபடியும் நாடியைத் தடவிப் போட்டு, என்னைப் பார்த்து முதல் முதலாக சிரிச்சுப் போட்டு,  நோர்வே மொழியில் ஒரு பெண்ணின் பெயரும், ஒரு ஆணின் பெயரையும் அன்பாக அழைத்தார். அவரின் படுக்கை அறையில் இருந்து ,பதுங்கிப் பதுங்கி ஒரு வெள்ளைநிறப் பூனை வந்து அவர் மடியில் பாஞ்சது .ஒரு கறுப்புநிறப் பூனை வந்து அவரின் தோழில் பாஞ்சு ஏறி இருந்தது.

                 உலாவ் தாரியர் என்னைப்பார்த்து, " காலுக்க சுருண்டு விழுந்த காதலிகள்! ,,,இனி நீ இந்த வீட்டுக்கு இந்த மாதிரிக் கேள்வியுடன் வரமாட்டாய் " என்று நினைக்கிறன் என்றார்.
.
.

Tuesday 2 June 2015

வேரும் விழுதுகளும்!!

தாத்தாவின் 
கைப் பிரம்பு 
ஓய்வு பெறுவது போல
பேசுவதுக்கு 
சந்தர்பங்களை 
இழந்து கொண்டு போக
அகஸ்திய மொழியின்
வசனங்களில்
இலக்கணம்
அசந்து தூங்கி விடுகிறது....

வேலையை
இரவல் மொழியில்
சமாளிக்க
இன்னொரு வழியில்
அந்நியமான வீட்டில்
அப்பாவின்
படத்துக்குக் அருகிலேயே
எல்லாத் திருப்பங்களிலும்
பசை போல
வேறு பாசைகள்
ஒட்டிக் கொள்கிறது.......

என்
பிள்ளைக்குக்
கிட்ட வராமல்
விட்டு விலகிப்
போய்க்கொண்டே
பூஞ்சணம் பிடிக்கும்
என்
தாய் மொழியில்
" தன் மொழியை மறந்தவன் "
என்ற தலைப்பில்
கவி விதையை எழுத
முதல் வரியை
தொடக்கினேன்...

அதை
எழுதி முடிக்க
வார்த்தைகள் தேடி
வழியிலாமல்
திணறிய போது தான்
உறுதி மொழியாக
குளத்தடி முடுக்கில்
நாலு தலைமுறைக்கு
அசையாமல்
விழுது விட்ட
ஆல மரம்
நினைவுக்கு வந்தது,
.


.
13.04.15
ஒஸ்லோ .

இங்கமார் பெர்க்மன்...நிழலின் நிஜம்.

யாழ்பாணத்தில, யாழ் மத்திய கல்லூரிக்குப் பின்னால, " அலைஸ் பிரான்சிஸ் " எண்டு ஒரு பிரெஞ்சு கலாசார மையம் இருந்தது. அதில வார விடுமுறை நாட்களில் உலகத்தரமான, உலக அளவில் பல கலை, அழகியல் விசியங்களுகாக விருதுகள் வென்று, " இன்டலக்சுவல் " என்ற அறிவுக் கொழுந்துகள் ஆர்வமாகப் பார்த்து, அதைவிட ஆர்வமாக விமர்சிக்கும், அக்கடமி விருதுகள் ,ஆஸ்கர் பரிசுகள் வென்ற சினிமாப் படங்கள் போடுவார்கள். 

                         அதில போடப்பட்ட ஒரு சுவீடன்  என்ற நாட்டில் எடுக்கப்பட்ட, ஸ்வீடிஷ் இயக்குணரான இங்கமார் பெர்க்மன் இயக்கிய படங்களும், அவரின் பெயரும் அதிகம் எல்லாருக்கும் அந்த நேரத்தில தெரிந்து இருந்தது. அவர் சில வருடம் முன் இறந்த போது யாழ்பாணத்தில் இருந்து ஒரு கவிஞ்சர் வெகு உருக்கமா அவரை சிலாகித்த எழுதியதை சுவிடனில் இருந்து நான் வாசித்த போது ஆச்சரியமா இருந்தது..

                                            இங்கமார் பெர்க்மன் படங்கள் எதுக்காக உலகம் முழுவதும் அறிவாளிகளால் அதிகமாகப் பேசப்பட்டது எண்டு விளக்கமா சொல்ல என்னால முடியலை. பல வருடம் முன் , அவர் எடுத்த படங்கள் எல்லாத்தையும் ஒரு நாள் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக் கொலமில் ,அவர் அதிகம் இயங்கிய ஒரு நாடக மையத்தில் போட்டார்கள்,

                      என்னோட ஸ்வீடிஷ் மனைவியைக் கேட்டேன்

                                   " நீயும் வாறியா , இங்கமார் பெர்க்மன் , உங்க ஆள், பெரிய இயக்குனர் என்று என்னோட சின்ன வயசில் கேள்விப்பட்டு இருக்கேறேன், படம் பார்த்திட்டு, கம்மலா ஸ்தானில் எங்காவது ரேச்ற்றோறேண்டில் சாப்பிடுவம் ,பிறகு சுளுசன் போய் பாலத்தில் நின்று மீன்கள் பாய்வதைப் பார்க்கலாம் "

                                 என்றேன் அவள், சந்தேகமா என்னைப் பார்த்தாள்,,சிரிச்சுப் போட்டு

                                " உனக்கு அதெல்லாம் விளங்குமா, அது தான் ஜோசிக்கிறேன் , அந்தாளோட படம் பார்க்கிறதும் ,வானத்தை சும்மா கொட்டாவி விட்டு ஆ வெண்டு நிமிர்ந்து பார்க்கிறதும் ஒண்டுதான், சுளுசனில் மீன்கள் பாய்வதைப் பார்க்க என்றால் வாறன் , மீன்கள் பாஞ்சு விளையாடுவதை மணித்தியாலக் கணக்கில் பார்த்தாலும் அலுக்காது " என்றாள்.

                                         அவள் வரவே இல்லை. நான் தனியாக போனாப் போகுது எண்டு போய் பார்த்து இருக்குறேன், அந்தப் படங்களை நானும் இயன்றளவு கொட்டாவி விட்டாமல் பார்த்த போது ஒன்று விளங்கியது. அவர் எழுதிய எல்லாப் படங்களின் ஸ்க்ரிப்ட். படமாக்கப் பட்ட விதம் எல்லாதிலையும் ஸ்வீடிஷ் மக்களின், சுவாரசியம் இல்லாத" மன நிலை " இருக்கு, அதுகளை எப்படி யாழ்பாணத்தில் உள்ள ரசிகர்களால் அந்த நாட்களில் சுவாரசியமா விளங்கிக் கொள்ள முடிந்தது எண்டு விளங்கவே இல்லை..

                                        பெர்க்மன் கொட்டாவி விட்ட பல படங்கள் மலையாளப் படத்தை விட மெதுவாக போக,,சில படத்தில கடைசியில் வரவேண்டிய கிளைமாக்ஸ் வரவே இல்லை, ஒரு படதில கதை கல்லு நெரிக்கிற ரோட்டு ரோலரை விட மெதுவாக தொடங்கி அதன் முடிவில் அதிவேக ட்ரைன் பறக்கிற மாதிரிப் பறக்க,பெர்க்மன் ,ஸ்வீடனின் சிறுவயதில் உப்பசலாவில் வளர்ந்த இடத்தின் சூழ்நிலை நிலமை ,எல்லாப் படங்களிலும் நிறைய அபத்தமான சம்பவங்கள், நிலை இல்லாத காதல், துரோகத்தனமான காமம், சுற்றி இருபவர்களின் சூழ்ச்சி, வாழ்வின் நிலையாமை, இறப்பு இருட்டுப்போல எப்பவும் மங்கலாக வருவது, மரண தேவதையின் நடனம் எண்டு சிலாகிக்கப்படும் ஒரு விசியம் பார்க்க பயம் வாறதுக்குப் பதிலா சிரிப்பு வருகுது, ஒரு இளம் பெண் கற்பழிக்கப்படும் போது ,,மாடுகளும்,ஆடுகளும் அசையாமல் அதை சுற்றி நிண்டு பார்ப்பது ,,,இப்படி கொஞ்சம் வாழ்வின் வெளிச்சம் விழாத பக்கங்களை இங்கமார் பெர்க்மன் வெள்ளித்திரையில் கிட்டதட்ட நாற்பது கதைகளை படமாக எடுத்து இருந்தார்...

                                  சினிமா எதுகாகா எடுக்கப்படுகிறது எண்டு இன்னும் சரியா சொல்ல முடியாத காரணங்கள் ஆயிரம் இருக்கும் அவல சூழலில் ,பெர்க்மனின் எல்லா காதல் ரோமன்ஸ் படங்களும்,அபத்தமான காதல் படங்கள், அதுக்கு காரணம் பெர்க்மனின் சொந்தக் காதல்,கலியாணம் அப்படி இருந்தது இருக்கலாம்,அவர் ஐந்து முறை சட்ட்டப்படி கலியாணம் கட்டினார், அதே அளவு சட்டமில்லாத காதலிகள் இருந்தார்கள்,அவர்களுக்கும் சட்டம் திட்டம் எண்டு ஒண்டுமே இல்லாமல் பிள்ளைகள் பிறந்தார்கள்,

                                          அதை விட அவர் படங்களில் அவருடன் நடித்த, அல்லது அவர் இயக்கிய பெண் நடிகைகளுடன் நிறையத் தொடர்ப்பு இருந்தது,ஒரு சாதாரண மனிதருக்குகே அதிகம் பெண்கள் தொடர்பு இருந்தாலே நெறைய ரோமன்ஸ் கதைகள் எதார்த்தமா கிடைக்கும் ,அப்படி எதார்த்தமா அவரின் பாத்திரங்களாய் வெள்ளி திரையில் மின்னிய கன்னிகள் போனாப் போகுது எண்டு கொஞ்சம் அவருடன் எதார்த்தமா பழகி இருக்கலாம் போல,,,


                                          இங்கமார் பெர்க்மன் இறந்த சில மாதங்களில் ஒரு இளம் பெண், திடீர் என்று பெர்க்மன் படங்களில் வரும் நிழல் காட்சிக்குள்ள இருந்து எழுந்து வாற மாதிரி , தன்னோடு அப்பா பெர்க்மன் என்றும், அவர் சொத்தில் பங்கு வேண்டும் என்றும் சுவிடிஷ் நீதிமன்றதில் ஒரு வழக்கப் போட்டா, அதுக்கு ஆதரமா தன்னோட அம்மா எழுதிய நாட்குறிப்பை சாட்சி கொடுத்தாள் அந்தப் பெண். அவளின் அம்மா இங்கமார் பெர்க்மனின் தீவிர ரசிகை என்று,அவர் எடுக்கும் படங்களின் சூட்டிங் ஸ்பாட் இக்கு போய் அவர் எப்படி படம் எடுக்கிறார் என்பதை பார்ப்பதும் அவாவின் ஆர்வமாக இருந்து இருக்கு, பெர்க்மன் அந்தப் பெண்னின் ஆர்வக்கோளாறு அடங்க முதலே கிடைத்த இடைவெளியில் எடுத்த  குறும்படம் தான் அந்த இளம் பெண் என்று தெரியவந்தது.

                                  இவளவு கொஞ்சம் குளறுபடியா அவரைச்  சொன்னாலும்,அவர் எடுத்த சில எதார்த்த படங்கள் உலகம் எங்கும் உள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்கு. அப்படி சிம்பாலிக் ஆக பல விசியங்களும் சொல்லித்தான் இருக்குறார். சுவிடனில் பல வருடம், வசிபதால்,ஸ்வீடிஷ் மொழி,கலாசாரம் தெரிந்ததால் விளங்கிய என் அறிவுக்கு , ஸ்வீடன் என்ற சுவாரசியம் இல்லாத நாட்டை உலக அளவில் கொஞ்சம் பிரபலம் ஆக்கிய பெருமை இங்கமார் பெர்மனுக்கு இருக்கு எண்டது உண்மைதான், இங்கமார் பெர்க்மான் உலக மொடேர்ன் எதார்த்த அப்ச்ற்றக் சினிமாவின் தந்தை எண்டு சொல்லுறார்கள் பலர்.

                                        எனக்கு இந்த எதார்த்த சினிமா இயக்குனர் ஆகுவது போன்ற விசியன்களில் ஆர்வமே எப்பவும் இருந்ததில்லை இங்கமார் பெர்க்மானின் ஒரு நிழலான காதலியாக லிவ் உல்மன் என்ற ஒரு நோர்வே வெள்ளைக் குதிரையும் சில வருடம் இருந்தா,,

                                     அண்மையில் அவா மனம் திறந்து தன்னோட இங்கமார் பெர்க்மனுடன் ,ஒரு நடிகையா திரை சீலைக்கு மறைவிலை எதார்த்தமாயும் ,கமராவுக்கு பின்னாலை எதார்த்தமாயும் , சூட்டிங் இஸ்பொட்டிலை எதார்த்தமாயும், லொகேஷன் யூனிட் லைட் எல்லாம் அணைத்த பின் எதார்த்தமாயும் செய்த காதல் ரோமன்ஸ் விசியங்களை எதார்த்தமா , சுவாரசியமா வெளிபடையா சொன்னா, அது கேட்ட போது உடம்பெல்லாம் புல் அரித்தது , நானும் ஏன் சினிமாவில் இறங்கி எதார்த்தமா பல விசியங்களை அனுபவித்து இருந்து இருக்கலாமே எண்டு நினைக்க தோன்றியது!.

.


18.04.14.