Saturday 29 October 2016

தலைப்புக்கவிதைகள் இரண்டாம் தொகுப்பு

என்னைப் போல மன உளைச்சலை  வார்த்தைகளில் ஏற்றி எழுதி வைத்து அமைதி காணவிரும்பி எல்லாருக்கும் புரியும்படி எளிமையான கவிதைமொழியில் எழுதும் பலர் இருக்கிறார்கள். எங்களின் கவிதைகள் காற்றில புடைக்கிற சுளகில இருந்து பறக்கிற உமி போல. அற்பமான ஆயுள் உள்ள ஒருமுறை வாசிக்கவே விளங்கும்படியான ஒரு பொழுது ஒரு உணர்வு என்ற வகையைச் சேர்ந்தவை, அவற்றால் நிரந்தரமான தலைஇடி இல்லை.

அப்படி இருந்தும் பல கவிதைகள் விளங்கவில்லை என்று கேட்பார்கள், அதுக்கு முடிந்த விளக்கம் கொடுப்பது எழுதியவர்களின் மதிப்பை அதிகரிக்கும். அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு கட்டாயம் விளக்கம் சொல்லவேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லைதான். விளங்கவில்லை என்று சொல்ல கட்டாயம் தில் வேணும்.ஏனென்றால் கீழைத்தேய மன ஓட்டத்தில் ஒன்று எங்களுக்கு விளங்கவில்லை என்று கேட்டால் அவர்களைப் படுமுட்டாள்கள் என்ற வகையில் சேர்ப்பார்கள். உண்மையில் மேலைநாட்டு பழக்கத்தில் தெரியவில்லை என்பவர்களிடம்தான் தேடலே அதிகமிருக்கும் 


அம்மாவின் ஞாபகம்....
..................................................
உறை பனி

சறுக்கி விழுத்தும்

ரகசியாமாக 
அந்நியமான 
இருண்ட
மாலைப் பொழுதில்
தவிர்க்க முடியாத 
துயரங்களுடன்
மூக்கு நுனியை 
துருவக் குளிர் 
விறாண்டிச்  செல்ல...

சில
நினைவுகள் 
வேகம் பிடித்து
தூக்கி எறிந்த வேகத்தில் 
எல்லைக்கு அப்பால்
ஓடின...

சில
சம்பவங்கள் 
உரிய இடத்தில்
வந்து நின்ற போதும்
காற்றை விசாரிக்க  
கதவைத் தாண்டவே இல்லை...

கடந்து செல்லும் 
பாதையின் 
தனி மரத்தில் 
மிக இறுக்கமான
இயற்கையின் 
கை விடப்பட்ட 
கால நிலையில்
சின்னக் குருவி
சிதிலமான  கூட்டை 
மறுபடியும் 
சீரமைக்கும் 
நேர்த்தியைப் பார்க்க  
அம்மாவின்  ஞாபகம்
வந்து விடுகிறது.

மாமரங்களுக்கு வயதாகி விட்டது..

........................................................................

சுருக்கம் விழுந்து 

இறுக்கமாகி

இதுக்கு மேலும் 
வேர்கள்  
ஓட மறுத்து  
மாமரங்களுக்கு 
வயதாகி விட்டது..

நல்ல 
நினைவாக 
பூரண கும்பத்திலும் 
துன்ப நிகழ்வாக 
தோரணங்களுடனும் 
மாவிலைகள் 
வருடம் தவறாமல் 
பழங்களோடு 
நெருங்கி வந்தன..

உறுஞ்சி எடுத்த
குருவிச்சைகள்
அதிகமாக 
ஊஞ்சல் கட்டிய
வடுக்களில் 
அணிலும்
புலினிகளும்
ஆர்ப்பரிக்க 
நடு இரவு  
நத்துக்களும்
நடுங்க வைத்த
நாட்குறிப்பு.... 

ஒன்றாய் 
வளர்ந்தவர்கள் 
ஓடிப் போனபின்
புதியவர்கள்
வந்த நேரத்தில்  
புதுக்கவிதை
எழுத முடியாமல்
இருந்திருக்கலாம்....  

கிளைகளின்
நடுவே 
கூடு கட்டிக் 
குஞ்சு பொரித்த 
சின்னப் பறவை 
நன்றியாக 
ஒரு 
சின்னச் சிறகை 
விட்டுச் சென்ற 
சம்பவத்தில் 
பழையவர்களின்
நினைவுகள்
மீட்டப்பட்டிருக்கலாம்.


...........................................................
நடக்கப்போற 
நல்லதையே 
நாலுவிதமாய்
பேசிக்கொண்டேயிருக்குது 
தென்றல்...

தூறல் மழை 
தூவிக்கொண்டு
போகும்  
கருத்துக்களுக்கு 
நடுவில்  
நல்ல எண்ணம்களும் 
நனையத்தான் 
செய்கிறது......

எரிச்சல்  தருகிற
குளிரிலும் 
பரபரப்புத் தேடும் 
செய்திகளோடு
உவமானம் 
சேர்த்து வைக்க  
அலையுது 
இயற்கை....

எப்போது 
சிரிக்கலாமென 
எதிர்பார்த்து நின்று 
வழிந்து ஓடிப் போன
வசவுகளை  வரவேற்ற
வாழ்க்கை   
இதயத்தை மட்டும் 
அசைக்கவேயில்லை...

ஆனாலும்
சாரலாகி ஓடிப் போன
கடந்தகாலம் 
காதலுக்காக மட்டும்  
அப்பப்ப 
ஆடிப்போனது 
என்பதென்னவோ 
உண்மைதான்...

.........................................................
வழமை போலவே 
கோபத்தைக் 
கணக்கில் எடுக்காமல் 
சுவர்க்கத்தை அடைய
அவர்களின்   
மன்னிப்புக்காக
மன்றாடும் 
ஒவ்வொரு முறையும் 
இதயம்  பலவீனமடைகிறது.....

ஒரு
கச்சிதமான
பொய்யை 
நாலு பக்கமும் 
கற்பனையில்   உருவாக்கி
அதை ஆராதிக்கிறார்கள்... 

திட்டிப்  பேசுகிற
நேரங்களில்
மிக இயல்பான
ஆரோக்கியமான 
அமைதியான  வாழ்வு
அடி வேண்டுவதை 
சாத்தியமாக்கும்
பின் விழைவுகளை 
தவிர்க்க முடியவில்லை.... 

இந்தப்
விரிசல்கள் 
தொடுவான எல்லையில்
போய் முடிய முன் 
வசதியான இடத்தில 
முழுவதும்
உடைய முன்னர் 
நிறுத்திக்கொள்ள வேண்டும் 

ஒவ்வொரு
செயலுக்கும்
ஒருஅர்த்தம்
முக்கியத்துவமாயுள்ள
தீர்மான உணர்வு
நிரந்தர திருப்தியை அளிக்க
எவ்வளவு தூரம்
பறக்க முடியுமோ
அவ்வளவு தான்
மனித எல்லை.

வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன்....

..................................................................................

இந்த 
குளிர் காலம் முழுவதும் 
ஒளிந்து பிடித்து 
விளையாடும்
குழந்தைகளின் 
உற்சாகம் போல  
கவிதைகள் 
கவனித்துக்கொண்டேயிருந்தன.. 

மைய உணர்வுக்குள்
இணைத்துக்கொண்ட
தருணம்களில் 
ஒதுக்குப் புறத்தில் 
வார்த்தைகளை 
உருவக் காரணமாயிருந்தது
தனிமை.....

விமர்சனங்கள்
வெளியடையாத
அதில் தேர்ந்த கவிஞ்சனின் 
கர்வமோ 
புத்திசாலித்தனமோ 
அடிப்படையிலுமில்லை....

பார்த்த போது ஏற்பட்ட
விந்தையான 
எண்ணத்தைத்
இழுத்தெடுத்து 
உருகிப்  போகாத 
உறைபனியில் 
எழுதி வைத்தேன்.

சறுக்கி 
நடக்கும்போதோ
வழுக்கி  நகரும்போதோ
மாற்றுமுயற்சிகளிலும்
புதிய இரசனைகளிலும்
தீவிர உரையாடல்களிலும்
அவைகளின் 
பங்களிப்பும்
இணைந்திருக்கவில்லை.. 

நம்மையறியாமல் 
நம்பிக்கையில் 
கொண்டு வந்து
நிறுத்தும்  
மனசாட்சி
அதுவாகவே  
என்னை இயக்கியது
எனச் சொல்லலாம்.

அந்நியமான வரிகள் 
உருவானதற்குப் 
பின்னணியில்
இருந்தவர்கள்
பற்றிச்  சொல்லேன் என
நீ  
ரகசியமாகக் கேட்டால்  
நீ
என்ன பதில்
வைத்திருக்கிறாயோ 
அதேயே தான் நானும்
வெளிப்படையாகவே 
வைத்திருக்கிறேன். 



தெருவிளக்கின் விளக்கம்...

............................................................

மங்கலான 
தெருவிளக்குகள் 
நடைபாதைகளின்  
அமைதியோடு 
மல்லுக்கட்டினாலும்  
வழி நெடுகிலும்
நிழல் வழிந்து கொண்டே  
வரத்தான் செய்கின்றன

யாருமேயில்லாத 
பொழுதுகளிலும்
இருட்டுக்கு 
அளவுகடந்த
எதிர்ப்புக்  காட்டி
ஆழ்மனத்திலும்
அவைகள் ஒரு பிடிப்பு
வைத்திருக்கின்றன

வாழ்வில்
எங்கேயாவது  
காதல் இருக்கட்டும்,
சாகசம் ஏதாவது
கிடைக்கும் வரை 
பரிசோதனை
செய்து பார் என்பதுபோலப்
பார்க்கின்றன

கொஞ்ச நேரம் 
நின்று நிமிர்ந்து பார்க்க 
உனது இதயத்தில்
தேடுவதுக்கு ஏதாவது 
இருக்கிறதா
இல்லையென்றால்
நேரத்தை வீணடிக்காமல் 
வீட்டுக்குப் 
போய்ச்சேரும் 
நேரத்தைச் சொல்லியது

புரிந்துகொண்டு 
பிறர்மீது கடினமாக
இருப்பது மறையத் தொடங்க
என்ன தான் 
செய்யமுடியும்
வெளிச்சத்தில் 
கிடைக்காத விளக்கம்
பின் தொடர்வுகள் 
நிகழும்போது
நிகழ்ந்துவிடுகின்றன.

சிற்பியின் மொழி
............................................
பல கற்கள் 

காலுக்குள் 

மிதிபட 
சிலது மட்டுமே 
கடவுளாகித்  
தொட்டுக் கும்பிடும் 
தகுதி பெறுகின்றன..

பிரம்மாண்டமான 
கற்பனையில் 
ஈரத்தைக் கசியவிடும் 
எல்லாக் பாறைகளுக்குள்ளும்
வாழத் துடிக்கும்  
பெண்களின்  
சிலைகள் இருக்கலாம்.... 

சிற்பியின் மொழி 
கருங் கல்லுக்குப் 
புரியும் நேரம் 
உளிக்கு வலிக்குமென்று 
தெரிந்தும் 
தேவையற்றதை
தேடி ஒதுக்கி   
நீக்குவதால்  
வெளியே வருகுது
தெய்வத்தன்மை... 

அவை 
திருப்திகளின் 
உத்தரவாதத்தில் 
நம்பிக்கைகளை 
உடுத்தியபடி 
கலாச்சாரங்களை
ஆவணப்படுத்தி 
பண்பாட்டைப்
பிரார்த்தனை செய்கின்றன..

கால ஓட்டத்தில் 
சிற்பி 
உயிரோடு 
இல்லாத காலத்திலும் 
 பேசமுடியாத  சிற்பம் 
காலமுள்ளவரை 
உயிரைப் பிடித்து
வைத்துக்கொண்டுதான்  இருக்கு 

நல்லவர்களுக்கு நடுவில்.....

................................................................

குழந்தையைத்

திருத்துவது போல

வளர்ந்தவர்களைத் 
திருத்த முடியுமாயின் 
எத்தனை சுகமாக
இருந்திருக்கும்.......

எதிர்பார்க்காமல் உதவும்
நண்பர்கள்
எப்போதாவது தென்பட 
எதிர்பார்ப்புடன்
உதவும் நண்பர்கள்
கை தட்டும் கிட்டத்தில் ,

நம்மை 
அழிக்கத் துடித்து  
உணர்வுகளைப் 
பொருட்படுத்தாத
உறவுகளுடன்தான்
இப்பவும் வாழ்க்கை 
வேண்டா வெறுப்பாக  
பிணைக்கப்பட்டிருக்கிறது.....

தகுதியற்ற 
மனிதர்களுக்கு
முக்கியம்  கொடுத்து 
முகஸ்துதிக்கு
முகவரி  வரைந்து வைத்து 
அவர்களிடம் 
சுய கவுரவத்தையும் 
கொடுத்து வைக்கிறோம்....

நமக்காக
வாழும் வரையில்
அவர்களின்
நேர்மையின்மை
துன்புறுத்தும்
அவர்களுக்காக
நாம் வாழ
ஆரம்பிக்கும்போது
அது அங்கீகரிக்கப்படும் ...

முழுக்க முழுக்க
நல்லவர்களுக்கு 
நடுவில் நம் வாழ்க்கை
அமைந்திருந்தால்...
ஒரு வேளை 
இத்தனை இதமாக 
இருந்திருக்குமென்று 
உலகத்தை
சின்னக் கைகளில் 
விரிக்கும் 
குழந்தைகளின் 
குதூகலம் 
நமக்கும் கிடைத்திருக்கலாம் !

தெரியாமத்தான் கேட்கிறேன், 
....................................................................
நன்றாகவே
நினைவிருக்கு
விழுதுகளை  அறுத்த 
புது உலக தந்திரம்
சும்மா கிடைக்க
இறந்துபோன
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கிள்ளித் தந்து  போன  
சந்தோசங்கள் ..

பழைய வீட்டின் 
கதை சொல்லும்
வேப்பமரக் கதவுகள் 
தாழ்வாரமெங்கும்
பாட்டியின் 
நினைவைத்தின்னும்
நிழல்.

கன்னிக்கால்
முள் முருக்கின் 
வேலியோட
ஓதியமரக் கிளையெங்கும் 
வளைந்து ஓடி
இருட்டிலும்  ரகசியமா
இலை தடவும் அம்பலவி,

பின்னால கொய்யாவும்
மறக்காத மாதுளையின் 
நடுவே
அடர் பாசி
அள்ளிக் கொட்டி
இருள் போல
துலாக் கிணறு.

இடையில
எலுமிச்சை
நாவுற நாரத்தங்காய் ,
தெற்கால தென்னையும்
கரை எல்லாம் கமுகோடு 
வாசல் வரைக்கும்
குலை தள்ளி
வாழ்வாங்கு வாழ வைத்த
வாழைமரம் ,

தெரியாமத்தான் கேட்கிறேன், 
குளத்தையும் ,
கோவிலையும்
குடும்பங்களையும்,
கும்மாளத்தையும் 
உறவுகளையும்
ஊர்களையும் 
இருபதாயிரம் மைல் தள்ளி 
இழந்து போட்டு வந்து
அப்படியென்ன
சுதந்திரம்
அடுத்தவனின்  நாட்டில் ?

...............................................................
இருப்பதில் 

எடுத்துக் கொடுத்து 

உதவி செய்வதில்
திருப்தியடையும்
மனமுள்ளவர்கள்
உற்சாகமாக
இருக்கிறார்கள்.... 

விழியாக இருந்து
வழி காட்டிக் கொண்டே 
கடந்து செல்லும் 
நிமிடங்களை 
மற்றவர்களுக்காக
இழக்கத் தயாராக
இருப்பவர்களை   
உலகப் 
பார்வையற்றவர்களுக்கு
தெரிவதில்லை... 

உதவ தயாராக
இருப்பவர்களுக்கு
இது சாதாரண செயல் 
உதவி கோருபவருக்கு
இது சரியான
நேரத்தில் கிடைத்த
உயிர் மூச்சு... 

உதவுபவர்கள் 
பயனாளிகள்
இருவரையும் 
மற்றவர்கள் 
மதிப்பீடு செய்யலாம்
முடிவில் 
உதவி மட்டும்
நியாயத் தீர்ப்பு நாள் 
தாரசு முள்ளின் 
நடுவில் இருக்கும்

ஆய்த எழுத்துக்கள் மட்டும் 

.....................................................
ஒரு

பரிசுத்தமான 

பின்னிரவில் 
உயிர் மெய் 
எழுத்துக்கள் 
காணாமல்ப் போனது.... 

அதைக் 
களவெடுத்த 
கவிதாயினிகள் 
விதவையாகிக் 
கவிதையாக்க
கவிஞ்சர்கள்
மொழியின் வீரியத்தை
நலமடித்தார்கள் ..

பலர் 
சிறுகதையாக்கி 
சிறுமைப்படுத்த
புனைகதை  எழுதிய சிலர்
உயிரையும்
மெய்யையும்
பிரித்தே வைத்து
புதிர் ஆக்கினார்கள்.. 

மொத்தமாகக் 
கொள்ளையடித்த 
ஒருவர் 
நாவல் எழுத
கடைசி வரிகளில் 
காட்டிக் கொடுத்து சிலர் 
கட்டுரை எழுதினார்கள்...

சுய நிர்ணய உரிமை 
இழந்த மிஞ்சிய எழுத்துக்கள் 
அதை எதிர்த்து 
இலக்கணம் 
தவறாமல் ஊர்வலம் போக..

அதிகம் அறியப்படாத 
ஆய்த எழுத்துக்கள் மட்டும் 
ஆக்ரோஷமாக 
முழங்கி
வன்முறையால்  
தங்கள் தலை எழுத்தை 
மாற்றப் போவதாக 
சபதம் எடுத்துள்ளன.

மறந்த இறுதி நிமிடத்தில்...
..................................................
காதல் 
எந்தத் தந்திரத்திலும்  
விட்டுக்கொடுப்பதில்லை
விட்டு விடுதலையாகிச் 
சுதந்திரத்தில் 
பறப்பது.....
பறந்து 
இரந்து கெஞ்சிப்  
பிச்சை எடுப்பதில்லை
கொடுத்த கவுரவத்தை
இழக்காது திருப்பி
இதயத்தைத்  திறந்து  
எடுப்பது...

எடுத்த 
புரிந்துணர்வை
அபத்தங்களில் 
வளர்ப்பதில்லை
புரிந்தே கொடுத்த 
பந்தங்களின் 
உணர்வாக
இருப்பது....

இருந்த 
வரை முழுவதும்
இயல்பாகவிருந்து
தவறியும் நினைக்க 
 மறப்பதையே
ஜோசிக்க 
மறப்பது..

மறந்த
இறுதி நிமிடத்தில்
மரண உறுதியாக 
வரும் போது 
நினைத்த
ஒரேயொரு  முகம்
உன்னுடையதாக
இருக்குமாயின் 
இறக்க மறுத்திருக்கலாம் 
உனக்காவும் 
எனக்காகவும் 
அந்தக் காதல்.


.....................................................
மீட்டிய 

சட்ஷமம் 

முதல் தருணம்  
சுரம் கொடுத்த  
நாதங்களுக்கும் 
விரல்களுக்கும்
நீ  சரணம் ..

பின் 
எழுந்த 
பஞ்சமங்கள் 
பட்டாம்பூச்சியாகி
இதயமெல்லாம் 
காரணமேயில்லாமல்
நீ  பல்லவி  

சங்கீதம் 
தளிர்விடுமோவென   
நடுவில்
பன்னீரைத் தூவி
பதங்கள் 
பாதயாத்திரை போக
நீ சிம்மேந்திரமத்யமம்

இன்னொருமுறை
கிடைக்காவிட்டாலும் 
பார்வைகள் 
இடையே
தவறி விழுந்த
கற்பனை ஸ்வரங்கள்
பேசிய
உன்  உருத்திரவீணையில்  
மட்டும் ்
நான் இப்பவும்    
அனுபல்லவி.  


ஏமாந்து போகிறேன்...

...........................................................

அளவோடு அமைதி
ஓட்டிக்கொண்டிருக்கும்
நிலத்தடி மின்சாரஊர்ந்தில் 
அலட்சியமாக
ஏறுபவர்களை பார்த்து 
ஆர்வமின்றி
இறங்குபவர்கள்
மனங்களில்
தேக்கம் இல்லாமல் 
கடக்கிறார்கள்

நீட்டி
நிமிர்ந்திருக்க 
போட்டி
போட்டுக்கொண்டு
இடம் பிடிக்க
தேவையே இல்லாத 
நிலை தான்
இடைவெளி  உள்ள
ஒரு சித்திரம் 

பனிச் சறுக்குப்  
பயணிகள் 
அதிகம் 
கதைத்துகொண்டு 
வந்ததில்  விழுந்தெழும்பிய 
தாக்கங்கள் உள்ள 
அனுபவங்களின்  
வார்த்தைகளே அதிகம் 
சறுக்கி சறுக்கி 
வழுக்கி விழுகிறது 

முன்னிருக்கையில் 
அருகருகேயிருந்தும்  
மன அளவில்
வெகுதொலைவு
இடைவெளி உள்ள
அவனும் அவளும்    
தரையில் விழுகிற கால்கள் 
ஒன்றையொன்று
தற்செயலாகத்
தொட்டுக்கொள்ள
எச்சரிக்கையாகி
சட்டென்று
 விலகிக்கொள்கிறார்கள் 

அதிகம் 
யாருமற்ற 
மெற்றோவை 
புதிய எண்ணப்போக்கில் 
இன்று மட்டும் 
ஆக்கிரமித்து   
உறைபனி  சிதறும்  
ஜன்னல்களில் 
என் முகத்தை  
முதல்ப் பக்க 
செய்தி ஆக்கிப் பார்த்து
ஏமாந்து போகிறேன்

ஆனாலும் 
பழகிய  எண்ணப் போக்கில்  
உருவாகும்
எதுவும்
ஏற்கனவே இருந்த
அனுபவத்தின்  
பிரதிபலிப்பாகத் தெறித்து 
அடங்கும் 
இதன் தொடர்ச்சியை
யாரும்
முறிக்கவே  முடியாது.


கடந்து கொண்டே போய் விடுகின்றன..

...................................................................................
அநேகமாகப் 
பெறுமதியான நாட்களை 
யாரும் 
செலவழிக்கத்
தேவையில்லை 
சொல்லாமல்க் 
கொல்லாமல் 
அவைகளாவே 
கடந்து கொண்டே 
போய் விடுகின்றன..

வெப்பக்
காற்றுக்  கசியும்
சாம்பல் வண்ணம்
தீட்டப்பட்ட
புற்களோடு கலந்த
மண்வாச நகரத்தை 
பார்த்துப் பார்த்துக்
கண்களுக்கு
அலுத்துவிட்டது .... 

கதவைத் திறந்தவுடன்
தடவி உறைக்கும்  
குளிரில் நடக்கும்
சக்தியைக்
கால்களுக்குள்
இழுத்துப்போட்டு ஏற்றுவது
இனியும் 
அவ்வளவு
சுலபமாக இல்லை...

நிரந்தரமில்லா வேலை
தப்பி வாழும் 
ஆர்வத்தைக்
குறைத்து விடுகின்ற
கடை நிலைத்
தருணங்கள்  
முட்டிமோதிக் கொண்டு
பயப்படுத்துகிறது...

சிதறியிருக்கும்
உடன் பிறப்புக்களின் 
நினைவுகள்  
நனைத்து  விட்டுப்  போன 
பழைய வீட்டின்
நிரம்பி வழியும்
கடந்த காலத்தையும் 
சேர்த்துத்
தூக்கிக் கொண்டு..

கால்களில்
நடப்பதற்கான
தெம்பும்
கண்களில்
காண்பதற்கான
கனவும்
நிரம்பிய வரை 
வருகின்ற 
வருடத்தின்
வார்த்தைகள் தரும் 
உத்தரவாதத்தில்
தங்கியிருக்கலாம்.