Sunday 24 January 2016

சிங்கி மாஸ்டர்


ஒரு சிலரை அறிந்து கொள்வதற்கு நீங்கள் தொலை தூரம் பயணப்பட வேண்டியிருக்கும்! சில நேரம் அவர்கள் எங்களுக்கு நடுவில்,அல்லது அருகில்  எங்களின் சமகாலத்திலேயே உலாவித் திரிவார்கள். தேடல் பயணத்திற்க்கு பின் அவர்களை பற்றிய அறிதல் உங்களுக்கு தேவைப்படாமலேயே போகலாம், ஆனால் அவர்கள் ஒருவிதமான அபத்தமான் வாழ்க்கை முறையிலும் சில நல்ல சிந்தனைகளை விட்டுச் செல்லலாம்...

                                      ஊரில  இள வயதில் சிறுகதை , நாவல், எழுத்து வடிவில் வந்த நாடகம் போன்ற உரை நடை இலக்கியம் ஆர்வமாகப் படிக்க முக்கிய காரணமா இருந்த ஒருவர் சிவாநந்தராஜா என்ற சிங்கி மாஸ்டர், அவரை மாஸ்டர் எண்டு சொன்னாலும் அவர் எந்தப் பாடசாலையிலும், எந்தப் பாடமும் படிபிக்கவில்லை . மலேசியாவில் பிறந்து ஆங்கில மீடியத்தில்ப் படித்த அவர், அன்றாட வாழ்கையை ஓட்டுறதுக்கு என்ன வேலை செய்தார் எண்டு அறுதியா சொல்ல முடியாது, 

                                    ஏறக்குறைய எல்லா வேலையும் செய்தார் எண்டுதான் சொல்லவேண்டும் ,அந்த வேலைகளிலும் ஒரு வேலை தொடர்ந்து ஆறு மாதத்துக்கு மேல ஒரு இடத்தில செய்தார் என்றதுக்கும் எந்த சான்றும் இல்லை. அவர் கொலும்பில அரசாங்கத்தில இன்கம் டக்ஸ் டிபார்ட்மென்டில வேலை செய்து தனிச் சிங்கள சட்டம் வந்து சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் எண்டு வர ,சொல்லாமல் கொள்ளாமல் அந்த அரசாங்க வேலைய விட்டுப் போட்டு ஊருக்கு வந்திடார் எண்டு சொல்லுவார்கள்.

                                எங்கள் ஊரில இருந்த வாசிகசாலையில் ,இலக்கிய சங்கத்துக்கு பொறுப்பா இருந்த, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய தத்துவங்கள், இசங்கள், அவை வந்த இலக்கியப் புத்தகங்கள் எல்லாத்தையும் கரைசுக் குடிச்ச சிங்கி மாஸ்டர் தனியாதான், சுப்பிரமணியம் கடைக்கு அருகில், மசுக்குட்டி மாமி வீட்டில வாடகை ரூமில மாதம் மாதம் கடன் சொல்லி வாடகை கட்டியும்,கட்டாமலும் , மசுக்குட்டி மாமியின் இரக்க குணத்தில குருவிச்சை போல ஒட்டிக்கொண்டு வாழ்ந்தார். 

                                     அவருக்கு மனைவி எண்டு ஒருவரும் இருந்த மாதிரி எனக்கு தெரிந்தவரை இருக்கவில்லை, எனக்கு தெரியாமல் இருந்தது பற்றி என்னால் ஒண்டுமே சொல்லமுடியாது,ஆனால் மசுக்குட்டி மாமியும் அவாவின் புருஷன் விட்டுடுப் போக கொஞ்ச வருஷம் தனியாதான் இருந்தா எண்டு சொல்லமுடியும் .ஒரு விதத்தில அவருக்கு ஒரு பெண் துணை கிடைப்பதில் உள்ள முக்கிய பிரச்சனையே அவர் வாழ்ந்த விதம், அவரின் உலகம் வேற, அவர் இயங்கிய தளம் வேற, அது என்ன எண்டு சொல்லுறன்,

                                             எங்க ஊரில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல், எப்பவும் ஜோசிக்கிரதாலோ என்னவோ நெற்றி எல்லாம் சுருக்கம் விழுந்து,அவர் புத்தகம் வாசித்ததை அதிகம் நான் கண்டதில்ல, ஆனால் வாசித்ததை ஜோசிக்கும்,விவாதிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கும், 

                                     எங்கள் ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கிறிஸ்தவரான ஆங்கில ஆசிரியரான அன்டனிப் பிள்ளை மாஸ்டருடன் எப்பவும்   சிங்கி மாஸ்டர் வாக்குவாதப்படுவார் ,

                      " அன்டனி மாஸ்டர் நீங்கள் விசியம் தெரியாமல் பைபிள் பற்றி போதிக்குரிங்க, உங்க பாதர் மாருக்கே ஒழுங்கா வரலாறு தெரியாது, பைபிளின் மூலநூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு எபிரேய, அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. 

                            " இதுகள் எங்களுக்கு தெரியும் ,மிஸ்டர்  சிவானந்தராஜா , நான் செமினரியில் கொஞ்சகாலம் தியோலாயி  படிச்சனான், இதை திருப்பி திருப்பி எனக்கே போட்டுக் காட்டுறது  ஒரு பிரிஜோசனமும் இல்லை கண்டியலே மிஸ்டர் ,, "

                               "  இல்லை  மாஸ்டர் ,  புதிய ஏற்பாடு முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இயேசுவின் பன்னிரண்டு  சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். அது உங்களுக்கு தெரியுமோ மாஸ்டர் .

                              "  கொஞ்சம்   கேள்விப்பட்டது  தான் ,,நீர்  மிச்சக் கதையை  சொல்லுமேன் மிஸ்டர்  சிவானந்தராஜா "

                                        "  இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு, இதை சொன்னா உங்களுக்கு கோபம் வருகுது "

                         என்று பெரிய விளக்கம் கொடுப்பார் , அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பதில் சொல்லாமல் ஜேசுநாதர் போல பொறுமையாக் கேட்பார்.

                                    சிங்கி மாஸ்டர்  எங்கள் சந்தி ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில கடனுக்கு சீனி போடாத பிளேன் டீ குடிச்சிக் கொண்டு , மார்கஸ் அரேலியசின் " மெடிடேசன் " புத்தகம் ஏன் பிலேட்டோ சொன்ன  " ரிப்ப்பபிளிக்  " புத்தகத்தை விட நடைமுறையில் பிரிஜோசனமானது எண்டு ஞானப்பிரகாசதுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார். ஞானப்பிரகாசம் கடனுக்கு கொடுத்த பிளேன் டீ காசு எப்பவரும் எண்டு தீவிரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார்.

                                   சிங்கி மாஸ்டருக்கு ஏறக்குறைய எல்லா இசங்களும் தெரியும் ,அவர் ஆங்கில அறிவுள்ளபடியால், கொஞ்சம் அட்வான்சாக அவர் காலத்து யாழ்ப்பான தமிழ் எழுத்தாளர்களை விட ஐரோப்பா,மேலை நாட்டு இன்டலக்சுவல் இலக்கிய விசியம் தெரியும் ஆனால் அவர் ஒரு கதையோ ,கவிதையோ,கட்டுரையோ எழுதிய சிலமன் இல்லை, இவை பற்றி அவரிடம் கேட்டால் 

                             "எடேய்  இந்த இசம்கள் எல்லாமடா  ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையேப்பா ,  அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாதடாப்பா  , எனக்கே ஆங்கிலத்தில் தான் அழகா விளங்கும் .." என்று சொல்லுவார் .

                               " எப்படியோ..எங்கள் ஆட்களும்  அவைகளைத் தொட்டு எழுதுகிறார்கள் தானே "

                                       " டேய்   பிளேட்டோ தன்னுடைய குடியரசு என்ற  புத்தகத்தில்  கலையைப்  பற்றி சொல்லும் போது ,என்ன சொன்னார் தெரியுமா "

                              " எனக்கு எப்படி தெரியும்,,எனக்கு பிளேட்டோ என்றால் யார் என்றே தெரியாது,,நீங்களே சொல்லுங்க "


                        " டேய்..அறுவானே  ,பிளேட்டோ , சொன்னார் கலை மனிதனின் விருப்பதிற்கு மாறாக அவனை மாற்றக்கூடிய வலிமை படைத்த அதனால்  மனித குலத்திற்கு நன்மைகள் இருந்தாலும்,தீமைகளே அதிகம். அதனால் கலையை புறக்கணிப்போம் அப்படி புறக்கணிப்பதில் மனித குலத்திற்கு எந்த இழப்பும் ஏற்பட போவது இல்லை. மாறாக வருங்காலம் நன்றாக இருக்கும் என்றார்...அது பெரிய  குழப்பத்தைக் கொண்டு வந்தது  " என்று சொன்னார் 

                                   அந்த நாட்களில் வந்துகொண்டு இருந்த முற்போக்கு ,பிற்போக்கு உள்ளூர் எழுத்துகளை அவர்

                             "எடேய் இவங்கள் எல்லாம்  சும்மா சிலு சிலுப்பு ,இவங்களுக்கு ஆழமா ஜோசிக்க வைக்கும் தத்துவார்த்த எழுத்து எழுததெரியாது "

                               எண்டு சொல்லுவார், அதுகளை வாசிக்குறது வேலை மினக்கேடு எண்டு தாடியைத் தடவி சொல்லி , அவர் அதுகளை வாசிக்கவும் மாட்டார்,

                            " நீங்கள் வாசிக்காமல் எப்படி சொல்லுரிங்கள் " எண்டு கேட்டால் ,

                             " Philip van doren எழுதிய "the greatest gift " என்ற சிறுகதை உனக்குத் தெரியுமா ,சொல்லு அதை எப்பவாவது வாசித்து இருக்கிறியா "

                               " இல்லை,, நான் தமிழ் சிறுகதையே வாசிக்க மாட்டேன்,,விளங்காது "

                          " அந்த சிறுகதையை  வைச்சு frank capra இயக்கத்தில் " its a wonderful life " என்ற திரைப்படம் நைன்டீன் போட்டி சிக்ஸ் இல  வந்தது "

                             "  ஒ அப்ப நான் பிறக்க முதல் வந்த படம் போல,,சரி அந்தக் கதை என்ன சொல்லுது "

                           " அடேய் மடையா,, ஒருவன்  தற்கொலை செய்யப்போறான்,,அவனை ஒரு கடவுளின் தேவகுமாரன் வந்து காப்பற்றுறான் "

                              " ஒ,,இதில என்ன சுவாரசியம் இருக்கு ..சப் எண்டு இருக்கே கதை "

                                " அடேய் செம்மறி,,இந்தக் கதை இப்ப அஸ்ட்ரோ பிசிக்ஸ் இல சொல்லுறாங்களே பரலல் யூனிவேர்ஸ் தியரி  அதைப்போல கொன்செப்ட்  உள்ள ஒரு சிறுகதை "

                           " இப்ப என்னதான் சொல்ல வாரிங்க  மாஸ்டர் "

                           " டேய் செம்மறி   நான் சொல்ல வாறது ,,சிறுகதை எல்லாராலும் எழுத முடியாது, அது ஒரு வித்தை. இப்படியான உலகத்தை பிரட்டின கதைகள படிசுப்போடு சும்மா சீனடி சிலம்படிக் கதையை படிக்க சொல்லுறியா " 

                          " ஒ,  சிறுகதை வாசிக்க எழுதியது ,சரி அந்தப் படம் நல்லா ஒடிச்சா , "

                              " அடேய் கழுதை ,  நல்ல திரைப்படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைவது வழக்கம்போல் இப்படத்துக்கும் நடந்தது... வழக்கம்போல் இப்படமும் இன்று உலகின் தலை சிறந்த படமாக கருதப்படுகிறது..இந்தப் படத்தின் தொழில் நுட்பம், கேமிரா கோணங்கள் .திரைக்கதை ,நடிப்பு இவையெல்லாம் முக்கியமானவை என்றாலும் படத்தின் கதைக்குள் நுழைந்து திரும்பும் போது அது தரும் உணர்வு உண்மையிலுமே அற்புதமானது ,"

                                  "ஒ,,நமது எழுத்தாளர்களும் தமிழில் சிறுகதைகள் எழுதி இருகிரான்களே ,,அதைக் கவனிக்கவில்லையா "

                                 
                                   " எடேய் நான் முதல் பந்தியும், கடைசிப் பந்தியும் வாசிப்பனடா ,அதில பிடிபடும் அவங்களின்ட எழுத்திண்ட விறுத்தம் ,ஒரு கதையைத் தொடங்கிறதும் ,முடிகிறதும் தான் கஷ்டம், நடுவில என்னத்தையும் வைச்சு சலாப்பலாம் "

                            "  ம்  ...ம் "

                            " its kind of insulting to the human race really,..... that people think we can not make something like........It means absolutely nothing."  

                               " ஹ்ம்   ம்  " 


                         " Human conscious mind builds from our subconscious from within from the smallest to the space we know as infinity we know space is What is this 'center of Earth' crap? .....It means absolutely nothing."



                          எண்டு சொல்லுவார், அவர் அப்படி சொல்லுறது சரியா எண்டு எனக்கு தெரியவில்லை ,எப்படியோ அவர் உலகத் தரமான பல விசியங்கள் நல்லா தெரிதவர் .முக்கியமான பிரச்சினை அவர் ஆங்கிலத்தில் பிரசங்கம்  போலத் தொடங்கினால் அவர் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம் 

                             "  டேய் உனக்கு ஒரு விசியம் சொல்லுறேன்,,நல்லாக் கேட்டுக்கோ ,,"

                             "  சரி சொல்லுங்கோ "

                        " I just want the truth, not a half truth or assumptions. don't teach what you think is right. I am capable of filling in the blanks so anything and everything I have been made to believe through my life I now question as they only teach us what they want us to know, they only tell us what they want us to believe.இப்ப ஏன் மண்டையைச் சொரியுறாய்


" காதுக்க யாழ்தேவி ட்ரைன் ஓடுற சத்தம் கேட்குது "


" பொறு மிச்சத்தையும் சொல்லி முடிக்கிறேன் "


" சரி சொல்லுங்கோ


" உனக்குத் தெரியுமா for one believe that there is more to this life than what we have been made to believe. my belief is in religion they teach you what they want. religion is the cause of most wars in the past and some in the,, "


"ம்.... மாஸ்டர் நீங்க சொல்லுறது ஒண்டுமே விளங்கவில்லை "


" அடேய் மோட்டுக் கழுதை இது தாண்டா ரியாலிட்டி "


" ம் ம் "


" பசிக்குது மணியம் கடையில் அரை றாத்தல் பாணும் ஒரு இதர வாழைப்பழமும் வேண்டித் தாரியா "


" ம் "


" என்னண்டு வேண்டுவாய் சொல்லு "


" அம்மா கொப்பிக்கு எழுதி அங்கே தான் சாமான் வேண்டுவா,,அதில போட்டு வேண்டித் தாறேன் "


" ஹ்ம்ம் அப்படியே நாலு சுருட்டும் வேண்டித் தருவியா "


" ஹ்ம்ம் வேண்டித் தாரேன் "


                                இப்படிதான் அவருடன் உரையாடல் எப்பவும் முடியும். ஆனாலும் இவை பற்றி இங்கே நான் எழுதுவது  பின்நவினத்துவ ஸ்டைல் கதை இல்லை,எனக்கு அந்த ஸ்டைலில் எழுத தெரியாது  . ஆனாலும் அவர் எனக்கு பல இசங்கள் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்கள்,அதை எழுதிய எழுத்தாளர் பற்றி எப்பவும் சொல்லுவார், முக்கியமா எப்பவும் போஸ்மோட்டம் இசம் எண்டு அடிக்கடி சொல்லுவார், போஸ்மோட்டம் என்ற இறந்தவர்களை சவச்சாலையில் வைச்சு கிண்டிக் கிளறுரதுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு விளங்காமல் இருந்தது . 

                                 ஒரு நாள் சுப்பிரமணியம் கடைக் கட்டைக் குந்தில இருந்த நேரம், அவரிடமே கேட்டேன் ,நான் கேட்டவுடன அவருக்கு இலக்கியத் தாகம் வந்திட்டுப்  போல

                           "எடேய்   சொல்லுறன் முதல் ஞானம் கடையில் ஒரு பிளேன் டீயும் வாய்பனும் வேண்டிதாறியாடா  " எண்டு கேட்டார், நான் வேண்டிக் கொடுத்தேன் , அவருக்கு இலக்கிய உற்சாகம் வந்திட்டுது ,

                  " எடேய்  நீ கேட்ட அது போஸ்மோட்டம் இசம் இல்லையடா மடைச் சாம்பிராணியே  ,போஸ்ட் மொடேர்ன் இசம் ,தமிழில பின் நவீனத்துவம் எண்டு சொல்லலாம் , மிஷேல் ஃபூக்கோ தான் அந்த இலக்கிய எழுத்து முறையைக் கண்டு பிடித்தவர்டா மக்கு மடையா  " என்றார் ,நான் அதை புரியும் படி சொல்ல முடியுமா எண்டு கேட்டேன்,

            அவர் கொஞ்சம் ஜோசிதார் ,

                     " எடேய் முதலில் வெளிய வா , அடேய் அவசரத்துக்கு பிறந்தவனே  முதல் அவசரப்படாதை , மனியத்திட்ட கடையில ஒரு கனகலிங்கம் சுருட்டு வேண்டிதா சொல்லுறன் "

                             என்றார் ,நான் சுருடுக்கும் படி அளந்தேன். குந்தில இருந்து அதைப் பத்திக் கொண்டு இருக்க , அந்த நேரம் பார்த்து ஒரு நாய் வந்து, வைரவர் கோவிலுக்கு முன்னால இருந்த லைட் போஸ்ட்டை சுற்றி சுற்றி பின்னங் காலை தூக்கி மணந்து பார்கிறதை எனக்கு காட்டினார்,

                 " அடேய் இப்ப நாய் என்ன செய்யப் போகுது சொல்லு பார்ப்பம் " என்றார்,

                                 நான் " நாய் பின்னங் காலை வேற என்னத்துக்கு பரதநாட்டியம் ஆடவா தூக்குது, தூக்கி மூத்திரம் பெய்யப் போகுது " என்றேன்,

                              சொன்ன மாதிரி நாய் பின்னங் காலை தூக்கி வலு சிரத்தையா லைட் போஸ்டுக்கு தண்ணி வார்க்க , அவர் என்னைப் பார்த்து

                       " அடேய் விழுவானே இப்ப பார்த்தியா , இந்த நாய் முன்னப் பின்ன ஜோசிகாமல் இயல்பா பின்னங் காலை தூக்கிச்சுதெல்லா ,  இது பின் நவீனத்துவ நாய் " எண்டு சொன்னார் ,

                       " அப்ப நாய் முன்னங் காலைத் தூக்கி இருந்தா முற்போக்கு நாய் எண்டு சொல்லலாமா " எண்டு கேட்க நினைச்சேன் கேட்கவில்லை.

                              "அடேய் செம்மறி ,  பின்நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிராய் என நினைக்கிறேன். அப்படி அல்ல , அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையும் அல்ல. அது ஒரு சுவாரசியமான பொதுப்போக்கு மட்டுமேடாப்பா "

                          எண்டு சொல்லிடுப் போட்டார்! உண்மைதான்,,இந்த இசம்கள் இமசைதான் விளங்கிக்கொள்ள , இருந்தாலும் வாசிக்க சுவாரசியமா சில நேரம் இருக்கும் போல இருந்தது அவர் சொல்லும் விளக்கம் கேட்க .

                                          அதுக்குப் பிறகு அவருக்குப் பின்னாலா திரிந்து பின்நவீனத்துவம் என்றால் என்ன எண்டு நான் கேட்கவேயில்லை , ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கத் தொடன்கிய காலத்தில் அது என்ன விசியம் எண்டு நோண்டிப்பார்க்க , உண்மையில் அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியடைந்து, எல்லாவற்றையும் தர்க்கவியல் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்ட, அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப்படுத்துகிறார்கள். 

                                   பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுவான எண்ணம், இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார் மிஷேல் ஃபூக்கோ, குறிப்பாக ஒழுங்கமைப்பு அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்வது பின்நவீனத்துவம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இசம்கள் எல்லாம் ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையே அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாது ,எனக்கே ஆங்கிலத்திலதான் அது விளங்கியது.

                       எல்லா இயக்கமும் மும்மரமா யாழ்பாணத்தில் இயங்கிய காலத்தில் சிங்கி மாஸ்டர் எந்த இயக்கத்துக்கும் சார்பாக இருக்கவில்லை,ஆனால் அவர் கற்பனாவாத சோசலிசம் என்று ஒரு கட்டுரை உள்ளூர் பத்திரிகையில் எழுதி இருந்தார் என்று ஒரு முறை எனக்கு காட்டி இருக்கிறார் ,அதில அவர் எழுதியதுகளும் எனக்கு விளங்கவில்லை ,சுருக்கமா இதில என்ன எழுதி இருகுரிங்க என்று கேட்டதுக்கு, அந்தப் பேப்பரை வேண்டி சுழட்டி எறிஞ்சு போட்டு ,

                       " எடேய், நாசம் அறுவானே இதுவுமா உனக்கு தெரியாது ,   முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் அதனையொட்டிப் பல நாடுகள் சோசலிச நாடுகளாக மாற ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது. 
                          
                               "   ஒ ,,அப்படியா,,அதுக்குப் பிறகு என்ன நடந்தது .."

                       
                          " அத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப்படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளின்  மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட..." 

                                " அதார்  மார்குஸ்,,எக்ன்கிஸ் ,,லானின்,,,ச்ச்டிளின்   " 

                              "டேய்,கோவேறு  கழுதை  அவர்கள்  தான்,,கார்ல்  மாக்ஸ்,,,பிரெறேடிக்ஸ்  ஏங்கெல்ஸ்,,,வில்டாடிமிர்  உளியானிச்  என்ற  லெனின்,,மற்றது  ஜோசப்  ஸ்டாலின்,,,நல்லாக்  கேட்டுக்கோ   " 

                            " ஹ்ம்ம்,,  இரும்பு  அடிக்கிற  இடத்தில  இலையான்  வந்து  மாட்டின  மாதிரி  மாத்திப்போட்டனே   " 

                                "  என்னடா  உனக்குள்ள  பிசத்துறாய்  " 
                               
                           "  இல்லை,,இதெல்லாம்  தெரிந்து  எனக்கு  என்ன  வரப்போகுது "
                              
                            "  இதெல்லாம் தாண்டா ,,உலக அரசியலின்  போக்கு,,தெரியுமா   " 
                              
                                "  எனக்கு நான்  போற  போக்கே  பிடிபடுகுது  இல்லையே  மாஸ்டர்  "

                            "    பொறு,,மிச்சத்தையும்  சொல்லவிடு ,,"

                                "    ஹ்ம்ம்,,சொல்லுங்கோ "

                                   " அதன் விளைவாக வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்துப் போட்டாங்களடா மூதேசிகள்  " 

                                       என்று கோபமாக, ஆனால் அவர் எப்பவும் கதைக்கும் பேச்சுமொழியில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு பொது மேடையில் பேசுவது போல  சொன்னார் .எனக்கு இவளவு முற்போக்கு சிந்தனையை ஜோசிக்கவே  மண்டைக்குள்ள யாரோ மணி அடிக்கிற மாதிரி இருந்தது.

                                  சிங்கி மாஸ்டர், கொஞ்சம் வித்தியாசமா , நிழலா இயங்கியதால் , அவரின் உண்மையான அறிவு வீச்சைப் புரிந்துகொள்ளாத பலருக்கு அவர் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்க,,யாரோ அவர் 

                          " ........ " தின்  உளவாளியா இருக்கலாம் எண்டு வதந்தியைக் கிளப்ப ,ஒரு இரவு அவர் வீட்டுக்கு வந்த " ......  " க்க ஆட்கள் , அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் இழுத்துக் கொட்டி ,தேடு தேடு எண்டு சல்லடை போட்டுத் தேடி , அவரின் கண்ணைக்கட்டி , கை இரண்டையும் பின்னாலா கட்டி வேனில ஏத்திக்கொண்டு போனதா ,மசுக்குட்டி மாமி சொன்ன செய்தி கொஞ்சம் கொஞ்சமா ஊருக்குள்ள கசியத் தொடங்கியது , 

                                 அவரை தேடுறதுக்கு அவருக்கு எண்டு ஒரு குடும்பமோ ,மனைவியோ ,பிள்ளைகளோ இருக்கவில்லை . அவருக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு யாருக்கும் தெரியாது. அவரைத்  தேட  வெளிக்கிட்டால் வீண்  சோலிகள் இன்னும் சந்தேகமாக வரலாம்  என்பதால் அப்போது   இருந்த  விடுதலைப்போராட்ட  கால நிலவரத்தில்   யாரும்  முன்னுக்குத்  தலையைக்  கொடுக்க  வரவில்லை .

                                 மசுக்குட்டி  மாமி  சிங்கி மாஸ்டர்  இருந்த  அறையைப் புதிதாக வெள்ளை  அடிச்சு  வாடைக்கு விட்டா. சிங்கி மாஸ்டர் சேகரித்து வைத்து இருந்த புத்தகங்களைக்  கழிவுப்  பேப்பர் விலைக்கு  நிறுத்து  வித்துப் போட்டு   முன்னுக்கு  ஒரு  சின்னப்  பத்தி  இறக்கி வாடகைக்கு விட்டா. அதைக்  குத்தைக்கு எடுத்த  பரமானந்தம் அவரோட தனலட்சுமி அச்சுக்கூடத்தில்  அடிக்கும் சிவாயி  எம் யி ஆர் சினிமாப் படங்களில் வரும்  பாடல்களை அச்சிட்ட  சின்னச் சின்னப்   புத்தகங்களை  அதில்  அடுக்கி  வைச்சு  இருந்தார்.
.
.

Sunday 17 January 2016

சமாதான நீதவான்

அந்தக் காலகட்டத்தைச் சொல்வதென்றால் , எல்லா இயக்கக்கங்களும் ஊரில இரவில மண்னெண்னைக் குப்பி விளக்கைச் சுற்றிக்கொண்டிருக்கும்  ஈசல் போல இயங்கிக்கொண்டிருந்த நேரம். அதில்  என் வயது இளையவர்கள் ஏதோ ஒரு இயக்கத்தில் சிலர் ஆயுதப்பயிற்சி  எடுத்து இருந்தார்கள், சிலர் அரசியல் வகுப்புக்களில் பயிற்றப்பட்டு இருந்தார்கள்,சிலர் குறைந்தபட்சம் ஆதரவாகக்  கொள்கைகளைக் கதைத்துக்கொண்டு இருந்தார்கள் .

                                         இப்படி இருந்த ஒரு காலத்தில் சாதாரண மனிதர்கள் அவர்கள் வாழ்கையில் மும்மரமாக இருந்தார்கள் . அப்புறம் இதில வாற பெயர்கள் உண்மையான பெயர்கள் இல்லை, ஆனால் இப்படி மனிதரும்,கதையும் எங்கள் ஊரில இருந்தது,,சில நேரம் பல ஊர்களிலும் இருந்து இருக்கலாம் .அதில் ஒரு குடும்பத்தில் நடந்த  சம்பவங்களைக்  கதையாக சொல்கிறேன் , அது சரியா,பிழையா,அதன் சமூக நீதி, நியாயம், பற்றி நான் ஒண்டுமே சொல்ல விரும்பவில்லை. அது என்னோட வேலையும் இல்லை. 

                                        எங்கள் ஊரில ஒரு ஜே பி என்று சுருக்கமா சொல்லும், " ஜஸ்டிஸ் ஒப் பீஸ் " என்ற சமாதான் நீதவான் செல்வநாயகம்  இருந்தார், அவரிடம்தான் புதுசா பாஸ்போர்ட் எடுக்க போறவர்கள் " கரக்டர் சேட்டிபிகேட்" என்ற நல்நடத்தைப் பத்திரம் எல்லாரும் எடுப்பார்கள். நானும்  பாஸ்போர்ட் எடுக்க " கரக்டர் சேர்டிபிகட் " எடுக்க அவரிடம்தான் போனேன். அதுக்கு எனக்கு முக்கிய காரணம் பாஸ்போர்ட் இல்லை ,அவரோட இரண்டு பொஞ்சாதிகளையும் கிட்டத்தில பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும் எண்ட ஆதங்கத்தில்.

                                    அதுக்கு முதல் ஜே பி வீட்டு விவகாரம் ஏன் ஊருக்குள்ள அதிகம் கவனிக்கப்ட்டது எண்டு சொல்லுறன் . ஜே பி ஆரம்பத்தில் புரொக்டர் தணிகாசலத்துக்கு உதவியா, அவரோட பைல் கட்டுகளைக் கமக்கட்டில வைச்சுக் காவிக்கொண்டு கோட்ஸ் இக்கும் அலுவலகத்தும் இழுபட்டவர் , கொஞ்சம் சட்டதிட்டம் கேள்வி ஞானத்தில் அறிந்து, பண்டாரநாயகாவுக்கு அரசியல் ஆதரவு செய்த புண்ணியத்தில், புரொக்டரின் சிபார்சில் அந்த சமாதான் நீதவான் பட்டம் கிடைத்து இருந்தாலும் , பெட்டிசம் பாலசிங்கம் மட்டும், 

                                  " இங்கிலிஸ் பேபரை தலைகீழா வைச்சு வாசிக்கிற இவன் செல்வநாயகம், ஸ்ரீமாவுக்கு பந்தம் புடிச்சு, நீதி அமைச்சருக்கு காக்கா பிடிச்சு அந்த பதவி எடுத்திட்டான் செல்வநாயகம், இவன் பெண்டுகளை மெய்கிரதுக்கு நேரம் இல்லாமல் இருக்குறான்,,இவனுக்கு என்னத்துக்கு ஜே பி வேலை  "

                                      எண்டு சொல்லுவார் , உண்மையில் அவருக்கு அந்த பெயர் கட்டாயம் கொடுத்தே இருக்க வேண்டும் எண்டதுக்கு முக்கிய காரணம், அவருக்கு இரண்டு பெண்சாதி, அதுவும் அக்காவும்,தங்கசியும் ,ஒரு பொஞ்சாதியை வைச்சே வருஷம் முழுவதும் அமைதி இழந்த வீடுகள் அதிகம் இருந்த ஒரு ஊரில ,அவர் வீட்டில மட்டும் ,சண்டை ,சச்சரவு ஒருநாளும் வராமல் தாளம் போடும், குடும்ப தலைவனா இருக்கும் ஒருவருக்கு சமாதான் நீதவான் பதவி ஊருக்கு பொதுவா கொடுத்ததில் ஆச்சரியம் இல்லைதானே சொல்லுங்க பார்ப்பம்.

                                   ஆங்கில அறிவு இல்லாத ஒருவர் ஜே பியாகா வரமுடியுமா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஜே பி செல்வநாயகம், முக்கியமான பல டாகுமென்ட் எழுதவோ,,அல்லது மொழிபெயர்க்கவோ எப்பவுமே எங்களின் ஊரில் இருந்த தத்துவஞானி சிங்கி மாஸ்டரிடம் தான்  உதவி கேட்பார். சிங்கி மாஸ்டர் அது எல்லாம் செய்து கொடுத்துப்போட்டு கைச்செலவுக்குக் காசு வேண்டுவார். சிலநேரம் ஜே பிஜோட தத்துவம் கதைக்கப் போய் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் வரும்.

                             ஜே பி செல்வநாயகம், பார்க்க ஜெமினி கணேசன் போல அமரிகன் மா நிறத்தில இருப்பார்,அயன் பண்ணின வெள்ளை எட்டு முழ வேட்டி, மடிப்பு கலையாத நசினல் சேர்ட், தியாகராஜ பாகவதர் போல பின்னால விழுத்திய நீண்ட சுருள் முடி. பவுன் கலர் செயின் போட்ட மணிக்கூடு, அதுக்கு மேட்ச் பண்ண பவுன் கலர் பிரேம் போட்ட கண்ணாடி, வீட்டில நிக்கும் போதும் சோலாப்பூர் செருப்பு , சிவப்பு சொண்டில ஒரு நிரந்தரப் புன் சிரிப்பு, அந்த சிரிப்போட சரிகை போட்ட மாதிரி கீழ் வெட்டுப் பார்வை வீசும் கண்கள் அதிகம் ஒருவருடனும் பேசாத மவுனம், பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஏக பத்தினி விரதன் பண்பாடு ,

                              இதுதான் ஜே பி செல்வநாயகம், இப்படி ஒருவருக்கு இரண்டு பெண்சாதி, அதுவும் அக்காவும், தங்கசியும் மன்னவனும் நீயே வள நாடும் உன்னதுவே எண்டு மயங்கியதில் ஆச்சரியம் ஒண்டுமே இல்லை எண்டு நீங்க நினைச்சால் அதில முழுவதும் உண்மை இல்லை, ஆனால் பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஆண்களைத்தான் ,குடும்பப் பண்பாடு அதிகம் உள்ள பெண்களுக்குப் பிடிக்கும் எண்டு அவரைக் கவனித்த போதுதான் தெரியவந்தது,

                                   ஜே பீ யின் அழகை சொல்லிப்போட்டு ,அந்த இரு பெண்கள் அழகை சொல்லாம விட்டால் வீராளி அம்மன் எண்ட கண்ணைக் குத்துவா ,ஆனாலும் சில்லறைக் கடை சுப்பிரமணியம் சொல்லுறது போல ஒரு வரியில சொல்லுறன் ஜே பீ இன் இரண்டு மனவிகளும் புன்னகை அரசி கே.ஆர் விஜயாவின் அச்சுப் பிரதி, இதுக்கு மேல ஒப்பிட்டு சொல்லலாமே தவிர குறைச்சு சொல்ல ஒண்டுமே இல்லை.

                              ஜே பீ குடும்பத்தை ஊர் நன்மை தீமையில் சேர்பதில்லை,அவர்களும் அதை பெரிதா எடுபதைல்லை,வீராளி அம்மன் திருவிழாவுக்கு மட்டும் தான் அந்த இரண்டு கே.ஆர் விஜயாவும் அம்மனுக்கு போட்டியா அலங்கரித்து வெளிக்கிட்டு வர ,அவர்களுக்கு பின்னால எப்பவுமே ஜே பீ சேட்டுப் போடாமல் பட்டு வேட்டி கட்டி, பட்டு சால்வை போர்த்திக்கொண்டு வேண்டும் எண்டே எல்லாரும் அவரையும், அவர் தர்ம பத்தினிகளையும் பார்த்து வயிறு பத்தி எரியட்டும் என்பது போல கோயிலில் போய் நிற்பார் 

                                 அந்த திருவிழாவைத் தவிர ஜே பீ இன் மனுஷி இரண்டு பேரும் அதிகம் வெளியில போறது சந்தியில இருந்த சுப்பிரமணியம் கடைக்கு,ஆனால் சுப்பிரமணியம் அநாவசியமா அவர்களுடன் கதைக்க மாட்டார் , அவர்களும் வந்தமா ,வேண்டினமா ,போனமா எண்டு மறைவார்கள், மணியம் ஜே பீ க்கு பயம் அதுக்கு ஒரு காரணம் மற்றது அவரின் மனைவிகள் மனியதிண்ட உறவுகள் ,

                        ஜே பி முதல் மனைவியைத்தான் சட்டப்படி திருமணம் செய்து இருந்தார், அவர் அக்காவைத் திருமணம் செய்து கொஞ்ச மாதங்களில், குசினியில் கத்தரிக்காய் பொரிக்கும் போது நெருப்பு தாச்சியில பத்தி இருக்கு, அது நடந்த சில வாரங்களில் அக்காவையும் அத்தானையும் தனிய விட்டுப் போட்டு, தங்கசிக்கு வேற ஒரு இடதில திருமணம் நடந்தது ,நடந்து கொஞ்சநாளில் தங்கசி, அவா கலியாணம் கட்டின புருஷனை விட்டுப்போட்டு, பழையபடி அக்கா வீட்டை வந்திட்டா,

                              அத்தான் மைத்துனி கலியான பந்தத்தை உதறி திரும்பி வந்ததுக்கு கவலைப்படவில்லை, பதிலா, பொறுப்பாக ,

                      " ஏன் கட்டின புருஷனை கடாசிப் போட்டு " வந்தாய் எண்டு கேட்டாராம்,

                          அவா ,அதுக்கு " எண்ட அக்கோய் நான்  இப்ப........   இருக்கிறேன்  அக்கோய்  " எண்டு பதில் அழுதுகொண்டு சொன்னாவம்,

                                அதைக் கேட்ட அக்காவுக்கு அதிர்ச்சியா மயக்கம் வந்திட்டாம், அத்தான் அப்பவும் பெண்களை நிமிர்ந்து பார்க்காத மாதிரி சிரித்துக்கொண்டு நிண்டாராம்,அக்கா

                      " எண்ட தாலிய பங்குபோட வந்தியேடி போடி வெளியே " எண்டு தங்கச்சிய வெளிய தள்ளா,

                " என்னை அந்தரிக்க விட்டா பொலிடோல் குடிப்பன் எண்ட அக்கோய்  " எண்டு தங்கசி சொல்ல ,அக்கா ,

                    " என்ர கூடப்பிறந்த செல்லமே அப்படி செய்யாதையடி " எண்டு மறுபடியும் வீடுக்கு உள்ள எடுக்க,

                             அத்தான் அப்பவும் பெண்களை நிமிர்ந்து பார்க்காத ஏகபத்தினி விரதன் மாதிரி நிண்டாராம் எண்டு தான் ப்ரேகிங் நியுஸ் குஞ்சரம் காவி திரிந்து ஊருக்குள்ள கொஞ்சநாள் தலைப்பு செய்தி அடிப்பட்டது,கொஞ்சநாளில் அது எல்லா பரபரப்பு நியுஸ் போலவும் அடங்கி, அக்காவும் தங்கையும் அத்தானுக்கே அடிமை ஆக, குன்றத்தில குமரனுக்கு கொண்டாடத்தில குறைவு இருக்கவில்லை!.

                               ஜே பிக்கு அஞ்சாறு பிள்ளைகள் இருந்தார்கள்.மூன்று வளர்ந்த பெட்டைகள் இருந்தார்கள்.அழகான அம்சமான பெட்டைக்கல்.,இடுப்புக்கு கீழ நிக்கும்  நல்ல சடைச்ச தலை மயிர்.அதில எவள் அக்காவுக்குப் பிறந்தாள்,எவள் தங்கசிக்குப் பிறந்தாள் என்ற விபரம் ஜே பி வீட்டு நாலு சுவரைத் தாண்டி வேற ஒருத்தருக்கும் தெரியாது. அவரோட பெரிய பெட்டை ஓடிட்டர் வீட்டுக்கு வருவாள், அவரிட்ட இங்கிலிஸ் படிச்சாள்.  

                                           நான் கரக்டர் சேர்டிபிகட் எடுக்க அவரிடம் போய் அவர் ரோட்டு படலைகுள்ள முக்கால் மணித்தியாலம் நிண்டன், ஜே பீ நான் போனவுடனே நான் வந்து நிக்கிறதைக் கண்டுடுடார், வீட்டுக்கு உள்ளுக்க பார்த்து என்னவோ சொல்ல இரண்டு கே.ஆர் விஜயாவும் வந்து வாசலில் பதுங்கி அரைவாசியா எட்டிப் பார்த்தார்கள்,ஜே பீ பிறகும் பேப்பர் பார்த்துக்கொண்டு வெளிவிறாந்தையில் இருந்தார்,நான் அதுக்கு மேலயும் பொறுக்காமல், தகரக் கதவில தட்ட,அவர்

                       " என்னட்டையோ அலுவல் " எண்டு கேட்டார், அதுக்குதான் நான்

                  " முக்கால் மணித்தியாலம் கால் மூட்டு வலிக்க ரோடில நிக்குறேன் ஐயா " எண்டேன்,

                                 அவர் வீட்டுக்கு உள்ளுக்க பார்த்து என்னவோ சொல்ல வெளிக்கதவு ஜன்னல் எல்லாம் மூடுப்பட்டது, கையால் வா எண்டு சொன்னார் ,நான் உள்ளுக்க போய் ,கையில கரக்டர் போர்மை சுருட்டிக்கொண்டு விறாந்தையில் கையைக்கட்டிக் கொண்டு நிண்டன், வீட்டுக்க " திருபரங் குன்றத்தில் நீ சிரித்தால் ,,," என்ற பக்திப் பாட்டுப் மெலிதாகப் பாட,அவர் திரும்ப

                        " என்ன விசியம் " எண்டு கேட்டார் , நான் கரக்டர் சேர்டிபிகட் எடுத்து பாஸ்போட் எடுக்க வேணும் " என்று சொன்னேன்,

                             " ஊருக்குள்ள இந்த நேரம் தான் நான் எல்லாருக்கும் வேணும்,காவாலி ,கடைப்புளி ,களிசறைகளுக்கு நான் அதுகளிண்ட கரக்டர் தெரியாம கையெழுத்துப் போடுறது,,,," 

                              " ஹ்ம்ம்,,உங்களைத் தேடி வாறதே உங்களுக்குப் பெருமைதானே அய்யா "

                        " சொல்லு பார்ப்பம் ,நாளைக்கு என்னோட் பதவிக்கு ஒரு பிரச்சினை வந்தா ஒரு மூதேசியலும் வராதுகள்,இன்னும் எண்ட குடும்பத்தை சீரளிசுக் கதைக்குங்கள் " 

                       நான் " ஐயா முதலில் உங்களுக்கு கரக்டர் செர்டிபிகிட் கொடுக்க என்ன நல்ல கரக்டர் தகுதி இருக்கு "

                      எண்டு கேட்க நினைச்சன், பாஸ்போர்ட் நினைவு வர பேசாம நிண்டுடன்,ஜே பீ இப்படியான நேரத்திலதான் ஊர் ஆட்கள் அவரைப் பற்றி கதைக்கிரதுக்கு பழிக்குப் பழி வேண்டுறது, நல்லா முழக்கிப்போட்டு

                              " உனக்கு சொல்லவில்லை, ஊர் சனத்திண்ட  வாயில் இருக்கும் மேலதிக கொழுப்பை எப்படி எடுக்கிறதென்று எனக்குத் தெரியுமே. ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் எல்லாரும் என்னட்டை வந்து ஆகத்தான் வேண்டும் ,  

                             "  ஹ்ம்ம் "

                               "  சந்திரனிட்ட எழுப்பதைப் பார்த்தியே "

                              "  எந்த சந்திரன் "

                                  "  உண்ட வீட்டுக்குப் பக்கத்தில விளாத்தியடி ஒழுங்கையில் தண்ணி இறைக்கிற மிஷின் வைச்சு இழுத்துக்கொண்டு திரிஞ்சானே "

                         "  ஓம்,,வாட்டர் பம் சந்திரன் ,,ஹ்ம்ம் அவன் இப்ப என்ன எழுப்பமோ "

                           " அவன் தானே இப்ப சவுதிக்கிப் போட்டு வந்து லோங்க்ஸ் கழுசான் போட்டுக்கொண்டு திரியிறான் , அவனுக்கும் நான் தான் பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்தனான் "

                               "  ஒ ,,அதுவா ,,அவன் கஷ்டப்பட்டு வேலை செய்திருக்கான்,,சம்பாரிச்சு இருக்கிறான் "

                                 "   அது பிரச்சினை இல்லை,,அந்த மூ தேசி நான் பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்ததை நினைக்கு இல்லையே,,எனக்கு முன்னால சேட்டைத் துறந்து போட்டு போட்டிருக்கிற சிங்கப்பூர் செயினை இழுத்து விட்டு நெளிப்புக் காட்டுது "

                                    " ஹ்ம்ம்,,அது நடக்கும் தானே "

                               " என்ன ,நடக்கும் ,,சொல்லு பார்ப்பம் பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்திராட்டி இந்தக் காக்கொத்து அரிசிக்கும் வழி இல்லாதுகள் வெளிநாடு போய் இருக்கும்களே,, சொல்லு பார்ப்பம் "

                                      "  ஹ்ம்ம்,,சரி விடுங்க அய்யா,,எல்லாரும் நல்லா வரத்தானே வேணும் "

                                   " வரட்டும்,,ஆர் வேண்டாம் எண்டது,,ஆனால் மரியாதை இருக்க வேணும் ,,நான் அவனுக்கு  பாஸ்போட் எடுக்கக் கரக்டர் சேர்டிபிகட் கொடுத்திராடி இப்பவும் தண்ணி இறைக்கிற மிஷினை இழுத்துக்கொண்டு திரிஞ்சு இருப்பான்,,அதை  நினைக்க வேணும் "

                                     "  ஹ்ம்ம் "

                                 "  சந்திரனுக்கு ஒழுங்கா சாரம் இடுப்பில கட்டத் தெரியாது இப்ப எஸ் லோன் குழாய் போல லோங்க்ஸ் போட்டுக்கொண்டு ,,எனக்கு முன்னால சிக்கிரட் பத்திப் புகையை ஊதிக்காட்டுறான்"

                                       " ம்ம்,,அவனைப் போலதான் பலர் இப்ப "

                               " நாய்க்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணி எண்டு இதுக்குதான் சொல்லுறது  "

                                    " ம்ம் "

                              "  சரி  ஆறுமுகப்பாட்டி இப்ப எப்படி இருக்குறா , பெட்டையள் மூன்றும் குமரி ஆகிட்டாள்கள் ,,குறிப்பைக் கொண்டுவந்து ஒருக்கா சாதகம் பார்க்க வேணும்,,இனிக் கலியாணம் காட்சிகள் அவளுகளுக்கு எப்படி அமையப்போகுதோ எண்டு பார்த்து வைச்சா நல்லம் எண்டு நினைக்கிறன் "

                             "  ஹ்ம்ம் "

                              " நீ பாஸ்போட் எடுத்து எங்க போகப் போறாய்......களோட ரகசியமா  இழுபடுறாய் எண்டு சாடைமாடையாக் கேள்விப்பட்டன் "

                                 "  ஹ்ம்ம் "

                         " உங்களை மாதிரி ஆட்கள் வெளிநாட்டுக்கு ஓடினால்,,பிறகு ஆர் இங்கே ஈழம் பிடிக்கிறது,,சொல்லு பார்ப்பம் "

                               " அப்படி இல்லை அய்யா,,சும்மா ஒரு பாதுகாப்புக்கு எடுத்து வைப்பம் எண்டு ஜோசிக்கிறேன்    "   

                           " என்னவோ,,நீ அயல் அட்டையில் அறிஞ்ச ஆள் எண்டபடியால கரக்டர் சேற்றிபிகட் தாரன் ,,இல்லாட்டி இப்ப நான் தெரியாத ஆட்களுக்கு கையெழுத்துப்போட விருப்பம் இல்லை,,அதுதான் சொல்லுறேன் "

                                எண்டு சொன்னார் ,என்னோட பாட்டி ஒரு பிரபலமான மரியாதையான பெண், நான் அவாவின் பேரன்,அதலா எனக்கும் கொஞ்சம் மரியாதை ஒட்டிக் கொண்டு இருந்தது, அது ஜே பீ கும் தெரியும். அதைவிடப் பாட்டி சாதகம் நல்லாப் பார்ப்பா 

                     ஜே பீ அதுக்கு பிறகு, கரக்டர் சேர்டிபிகட், நிரப்பி சையின் வைச்சார் ,

                      அந்த நேரம் பார்த்து உள்ளுக்க ரேடியோவில " கம்பன் ஏமாந்தான்  இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே ,,கற்பனை செய்தானே...."    பாட்டு வர  ஜே பி சடார் என்று 

                 " இஞ்சேருங்கோ ,,இப்ப இந்த ரேடியோவை நிட்பாடுங்கோ, அண்டம் குண்டம் எல்லாம் பத்திக்கொண்டு வருகுது, நேரம் கெட்ட நேரத்தில இவங்கள் ரேடியோவில போடுற பாட்டைப் பார்  " என்று போட்டு என்னைப் பார்த்து

                          " கம்பன் தானே ஏமாந்தான்,,,வம்பன்கள் ஏமாறவில்லையே...அப்புறம் என்ன வந்தது,  " எண்டு சொன்னார் .

                          நான் இதில யார் கம்பன்,யார் வம்பன் என்று தெரியாத மாதிரி முகத்தை வைச்சுக்கொண்டு நின்றேன்.

                                       " என்னட்ட கரக்டர் சேர்டிபிகேட் எடுத்து பாஸ்போட் எடுத்து சவுதிக்கு போட்டுவந்து, கமக்கட்டுக்க சென்ட் அடிச்சுக்கொண்டு,  சிங்கப்பூர் செயினை போட்டு நெஞ்சை திறந்து காட்டிக்கொண்டு போறதுகள்,ஒருநாளும் நன்றியோட நினைக்குதுகள் இல்லை,நான் கரக்டர் சேர்டிபிகேட் கொடுத்துதான் சவுதிக்கு போய் சம்பாரித்து இவளவு பவுசும் காட்டுதுகள் " ,    எண்டு சொன்னார் 

                        கடைசியா, என் நெஞ்சில பாலை வார்த்த மாதிரி ," வஞ்சிக் கோட்டை வாலிபனில் " எம் யி ஆர் காத்து காத்து கிடந்த நேரம் கதவு திறந்த மாதிரி 

                        " இஞ்சேருங்கோ அந்த ஸ்டாம்ப் சாமியறை மேசையில கிடக்கும் எடுத்து தாங்கோ ",

                   எண்டு சொல்லிக் கொஞ்ச நேரத்தில ,ஜன்னல் திறக்க ஒரு கை மட்டும் வெளிய வர, நான் கடைக் கண்ணால பார்த்தேன் ,ஜே பீ என்னைப் பார்த்தார், ஒண்டும் சொல்லவில்லை, அது எந்த கே.ஆர் விஜயாவோட கையா இருக்கும் எண்டு ஜோசித்தேன்,கடைசியா சீல் குத்த முதல் என்னை பார்த்து ,

                        " உன்னோட பழக்க வழக்கம் எல்லாம் எப்படி ஒழுங்கா இருக்குறியா,.....களோட இழுபடுறியாமே எண்டு சாடை மாடையா கேள்விப்பட்டன் "

                           எண்டு போட்டு, எந்த நாடுக்குப் போகப்போறாய் என்றார் ,நான் சும்மா எடுத்து வைப்பம் எண்டு சொன்னேன், ஜே பீ அதுக்கு பிறகு

                          " ஊருக்குள்ள என்னப் பத்தி என்ன கதைவளி உலாவுவது "

                           " எனக்கு ஒண்டும் தெரியாது அய்யா "

                         "  பொய் சொல்லதேவையில்லை ,,உண்மையச் சொல்லு,,புண்ணியமூர்த்தி  என்னவாம்,,என்னைப்பற்றி நாக்கு வழிச்சு கதைச்சுக்கொண்டு திரியிறாராம் எண்டு கேள்விப்பட்டேன்  "

                                 " புண்ணியக்குஞ்சியை நான் ஊருக்குள்ள கண்டே கனகாலம் "

                              "ஒ,,அப்பிடியே சங்கதி,  புண்ணியமூர்த்தி பழையபடி சிங்கள நாட்டுக்குப் போயிருப்பான்,,,அங்கே தானே அவனின்ட எடுப்பட்ட வைப்பாடிகள்  பார்த்துக்கொண்டு இருப்பாளுகளே "

                                " ஹ்ம்ம்,,அப்படியும்  இருக்கலாம் "

                           " என்ன அப்படியும் இருக்கலாம் எண்டு இழுக்கிறாய் ,,அதுதானே உண்மை, புண்ணியமூர்த்தி  கிரந்தம் கதைச்சுக்கொண்டு திரியிறது உனக்குத் தெரியாதா "

                                " இப்ப ஏன் அவரை இதுக்குள்ள இழுத்துக் கதைப்பான்,,அய்யா "

                       " புண்ணியமூர்த்தி கோவில் நிர்வாகத்தில் என்னை சேர்க்கக்கூடாது எண்டு முண்டு கொடுத்துக்கொண்டு நிக்குராராமே "

                                    "  எந்தக் கோவிலில் "

                                   " வீராளி அம்மன் கோவிலிலதான் "

                                " ஒ இப்பிடி ஒரு பிரச்சினை வேற நடக்குதோ "

                             " உது கன வருஷமா நடக்குது,,புண்ணியமூர்த்திக்கு என்னோட ஜே பி பவர் விளங்கவில்லை.. புண்ணியமூர்த்தி ஆரோ எடுப்பட்ட நொத்தாரிசைப் பிடிச்சு கையுக்க போட்டு  கள்ள உறுதி எழுதி தென்னம் காணி வேண்டினத்தை பிடிச்சுக் கொடுத்தாதான் என்னோட ஜே பி பவர் தெரியும்,,,அப்ப  தெரியும் "

                                    " ம் .சரி விடுங்க அய்யா,,எனக்கு இந்த போர்மில ஒரு சீலைக் குத்தி கையெழுத்து போட்டு விடுங்கோ,,நான் என்பாட்டில போறேன் அய்யா ."

                             " பொறு வாறன்,,அதுக்கு முதல் சொல்லுறதை சொல்லி முடிக்க வேணும்,  புண்ணியமூர்த்திக்கு வாயில சனியன்,,கதைக்கப் பேசத் தெரியாது,,தனக்கு சிங்களம் தெரியுமெண்ட நினைப்பு, சரி அதை விடு என்னத்துக்கு எண்ட வீட்டுக்க நடக்கிறதை நாலு இடத்தில கதைக்க வேணும் சொல்லு  "

                                " புண்ணியக்குஞ்சிக்கு  வாயைச் சும்மா வைச்சுக்கொண்டு இருக்க ஏலாது ,,அவல் இடிக்கிற உரல் போல அவரோட வாய் ,  என்னவும் எப்பவுமே சொல்லிக்கொண்டு இருப்பார்,ஆனால் யாரும் அவர் கதையைக் கணக்கில எடுப்பதில்லையே "

                               "மதவடிச் சந்தியில்  புண்ணியமூர்த்தி  வாய்க்காலுக்கு மேலே கடை கட்டி இருக்கிறான்,,அது என்ன சட்டம்,,எந்தத் ஊரில அப்பிடி ஒரு சட்டம் இருக்கு,,சொல்லு பார்ப்பம்    "

                                 "அதில என்ன பபிழை இருக்கு எண்டு எனக்குத் தெரியவில்லையே,,அய்யா   "

                                   " வாய்க்கள் என்பது முனிசிப் பால்டிக்கு சொந்தமான உரிமை, அது தண்ணி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு இடம் ,அதுக்கு மேலே யாருமே எதுவுமே கட்ட முடியாது, புண்ணியமூர்த்தி இதெல்லாம் ஆருக்கும் தெரியாது என்று நினைச்சுக்கொண்டு குறளி வித்தை காட்டுறான் "

                              " புண்ணியக்குஞ்சி நல்ல வேலைகளும் ஊருக்குள்ள செய்யுறார் தானே ,,அய்யா "

                                       " எங்க புண்ணியமூர்த்தி என்னத்தை வெட்டிக் கிழிச்சான் எண்டு சொல்லு பார்ப்பம்,,ஆரும் இளிச்சவாயுள்ளதுகளுக்கு மண்டையில் ஏறி நிண்டு ஆடி இருப்பான்,சிங்களவனை சிரிச்சு மளிப்பி சுழிக்கிற சேட்டை இந்த ஜே பி செல்வநாயகத்திட்ட நடக்காது   "

                               "   ஹ்ம்ம்,,"

                               " இப்பிடித்தான்  உதவாத வேலைகள் செய்துகொண்டு திரியிரதுகள் என் பாட்டில இருக்கிற என்னைப் பளிச்சுக் காட்டுதுகள் .. சரி,,நீ என்ன அறிஞ்சாய்,,கதை வழிகள் அதைச் சொல்லு ,,சொல்லு,,பயப்பிடாமல் சொல்லு "

                       எண்டு கேட்டார் ,நான் பேசாம நிண்டன்,அவரே எல்லாம் சொன்னார் ,அவருக்கு எப்படி இதெல்லாம் தெரியும் எண்டு ஆச்சரியமா இருந்தது,

                              " பெட்டிசம் பாலசிங்கம் கிட்டடியில் என்னட்ட அடிவேண்டி சாகப் போறான், அவனுக்கு என்னோட ஜே பீ பவர் தெரியேல்ல ,என்னட்டை இருந்து அந்த பதவிய எடுக்க அந்த செம்மறி படாத பாடு பட்டு பெட்டிசம் எழுதுறான் " ,

                                எண்டு போட்டு ,வேறு சில விசியம் சொன்னார் , அவர் சொன்ன விசியங்கள் அவர் இரண்டு குடும்பக் குத்துவிளக்குகளை ஒரே வீட்டில வைச்சு குடும்பம் நடத்துறது பிழை இல்லை எண்டு , பாரதம் ,இதிகாசம் ,கெருட புராணம், மனு நீதி, எல்லாத்திலையும் இருந்து விளக்கம் சொல்ல அவர் இன்னும் இரண்டு பெண்சாதி கொண்டுவந்து நாலுபேரையும் வைச்சு நடத்தினாலும் பிழை இல்லை போல இருந்து, அப்படி " லோயிக்கா " வைச்சு வாங்கினார் . சொல்லிப் போட்டு

                                " உனக்கு இப்ப கேள்வி ஏதோ கேட்க வேண்டும் போல கழுத்தில நரம்பு துடிக்குதே, நீ கேட்கிரதைக் கேள் "

                              என்றார். அந்த நேரம் வீடுக்குள இருந்து ரேடியோவில் " இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாடா,,அவை இரண்டும் சேர்ந்தொரு,,,," ,சினிமா பாடல் கசிந்து வர .... 

நான் மெல்ல குரலை தாழ்த்தி,நான் நிழலா இயங்கிய .... இன் துணிவில ,

                          " ஐயா நீங்க சொல்லும் சமூக நீதிப்படி பார்த்தா " எண்டு இழுத்தேன் ..

                         " என்ன பார்த்தா , அதையும் சொல்லு "என்றார் ,நான் என்னோட சந்தேகத்தைக் கேட்டேன்,

                             " ஒரு ஆண் ஒரே வீட்டில இரண்டு பெண்ணுடம் வாழலாம்  என்றால் அது தமிழ் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகும் நிலைமையில் இல்லையே அய்யா ....." 

                            எண்டு உளற ,எனக்கே பயம் வந்திட்டது ,ஜே பீ கரக்டர் செர்டிபிகேடை பிடுங்கி கிழிச்சு எறிஞ்சு உதைஞ்சு கலைக்கப் போறார் எண்டு நினைச்சேன்,ஜே பீ கையை முகவாயில வைச்சு ஜோசித்தார், காலுக்கு மேல காலை தூக்கிப் போட்டுட்டு ,

                       " நீ சொல்லுறது நியாயம்,  நான் நீ இப்படிக் கேட்பாய் என்று எனக்கு முதலே தெரியும்  ",என்றார்  ,

                    நான் கொஞ்சம் தயங்கி ,  "  சமுகசிந்தனையோடு எனக்கு கேள்வி கேட்க  தெரியாது ,அந்தளவு அறிவு எனக்கு இல்லை அய்யா  ,அது எல்லாம் சீரியஸ் அறிவுக்கொழுந்துகள் செய்யிற வேலை ,எனக்கு என்ன அடிப்படையில் தோன்றியதோ அதைக் கேட்டேன் அய்யா " என்றேன் .   

                              அதுக்கு அவர்    " உனக்கு ஒரு விசியம் தெரியுமா " எண்டு ,

             " திருமணத்தில் மணவறையில் வைச்சு மணப்பெண் தாரை வார்த்துக் கொடுக்கும் போது, மாப்பிள்ளைக்கு அருகம் தரப்பை விரலில் போட்டு, ஐயர்  என்ன சொல்லுறார்  தெரியுமா " எண்டு கேட்டார்,

                               நான் தெரியாது எண்டேன்,அவர் விளக்கமா அந்த

                      ''சோமஹ ப்ரதமோவிவேத கந்தர்வவிவிதே உத்ரஹத்ருதியோ அக்னிஸடேபதிஸ துரியஸதேமனுஷ்ய ஜாஹ'''',

                       சம்ஸ்கிருத மந்திரம் முழுவதையும் சொல்லி,அதன் ஒவ்வொரு வடமொழி வரிக்கும் விளக்கம் சொல்ல ....


                                             எனக்கு மண்டை விறைச்சுப் போச்சு .!

.

Friday 15 January 2016

ஒ நெஞ்சே நீ தான்...

வாழ்கையின் நடுவயதிலிருக்கும் மனிதர்கள் அவர்கள்  கடந்து வந்த வாழ்க்கையில்  சுதந்திரமாக வாழ்ந்த கட்டங்களைத்  திரும்பிப் பார்த்தால் அது பெரும்பாலும் பொறுப்பிலாமல் அலைந்த நாட்களாய்த்தானிருக்கும் . அந்த வயதில்  ஏற்படுகிற நட்புப் போன்ற காதல்  பெரும்பாலும் பொறுப்புக்கள் வந்து விழும்போது  அற்பாயுளில் மறைந்துவிடும்  நிலையில், அதற்குப் பிறகும் அந்த நட்பையும் காதலையும்  தொடரும் வகையில் வாழ்க்கை முறையை  அமைத்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள்...
                                             
                                  ஊரில இளம் வயசில் வளர்ந்தது டவுனுக்கு கிட்ட உள்ள கொஞ்சம் மூச்சு விட நெருக்கமான, அந்நிய மனிதர்கள் அருகில்  சுற்றி  வர வசிக்கும், நாகரீகம் கொஞ்சம் அதிகமா அட்டகாசம் போட்ட   நல்லூரில்  கிராம வயல் வெளிகள், பனை மரக் கூடல், ஆறு, போன்ற அழகிய வண்ணாத்திப்பூச்சி கிராமிய லோக்கேசன் உள்ள இடத்தில இருந்து நான் வளர்ந்த இடம் வெகு தூரத்தில் இருந்தாலும், என் அயல் வீட்டு  நண்பர்களுடன் இயற்கைக்கு நெருக்கமான , இயற்கை இன்னும் இயற்கையாகவே இருந்த , எங்களின்  நண்பன் அருணா வசித்த அளவெட்டி என்ற வலிகாமம் மேற்கில் இருந்த ஒரு கிராமத்திற்கு சைக்கிளை எடுத்து கொண்டு, வீட்டில

                    " வயல் வெளிகள் பார்த்து கும்பளாவளைப் பிள்ளையாரை  கும்பிடுடப் போறம் "

                            எண்டு சொல்லிப் போனாலும் ,உண்மையில் அந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் அந்த ஊரில பனை மரக் கூடல் அதிகம் , அதால பனை மரத்தின் முக்கிய பயன்பாடு அதிகம் இருந்தது ,

                                           அளவெட்டி எல்லா யாழ்ப்பான கிராமம் போல இருந்தாலும்,கொஞ்சம் அதிஸ்டமாக  அதன் கிழக்கில, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் மேற்கு விளிம்பில் தொடங்கி , நிறைய வயல் வெளிகள் பச்சையும், மஞ்சளுமாகக்  கம்பளம் விரிக்க, வடக்கில் அம்பனைக்கு கிட்ட உள்ள இடத்தில் வயல்களை நிரப்பிய குளங்கள் மாரி மழைக்கு   நிரம்பி  எழுதிய முன்னுரையின் தொடர்ச்சியாக, வலிகாமப் பெண்களின் இடுப்புப் போல ஒடுங்கித் தொடங்கி, அகன்று, ஆழமாகி வயல்களுக்கு நடுவால் சாரைப்பாம்பு போல வளைந்து வளைந்து யாழ்பாணத்தில் ஓடிய ஒரே ஒரு ஆறு எண்டு சொல்லும் வழுக்கை ஆறு,

                                அளவெட்டிக் கிராமத்தின் பருத்திச் சேலைக்குப், பட்டுச் சரிகை போட்டு  மாரி காலத்தில் மஞ்சள் நிறத்தில் தண்ணி தேங்கியும், தேங்கிய தண்ணி சில நேரம் அராலிப் பாலத்துக்கு கீழால வழிந்தோடி அராலிப் பண்ணை தரவைக் கடலில் விழும். அந்தக் கிராமிய லோக்கேசனை இப்படிதான் ஹைக்கூ கவிதை வடிவத்தில் சொல்லலாம். பாரதிராஜா படங்களில் பார்த்த கிராமியப் பிரமிப்பை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு அளவெட்டி அலாதியான அழகை அபரிமிதமாக அளிக்கொட்டிக் கொண்டு இருந்தது 

                                 நாங்கள் நண்பர்கள் சும்மா ஒரு பம்பலுக்குத் தான் அந்த நேரத்தில் கள்ளு எப்படி இன்னிக்கும், எப்படிப் புளிக்கும்   எப்படி வெறிக்கும் போன்ற வில்லேச் விஞ்ஞானி ஆராய்ச்சி நோக்கத்தில் அதை எப்பவாவது குடிப்பது. டவுனுக்கு கிட்ட உள்ள சில இடங்களில் கற்பகதருவின் புளித்த பதநீர் விற்கும் ரகசியமான வீடுகள், வெளிபடையாக  விற்கும் கோப்பிரேசன் என்ற கள்ளுத் தவறணை ஒதுக்கமான இடங்களில் இருந்தாலும் நாங்கள் அதில் இருட்டோடு இருட்டா ஒதுங்கித்  தாக சாந்தி செய்யத் தன்னும் முடிவதில்லை,

                          முக்கிய காரணம் நாங்கள் டவுனில உள்ள பாடசாலைகளில் படிச்சுக் கிழிக்கிறேன் பேர்வழி என்று எழுப்பமாகப் பவுசு விட்டுக்கொண்டு திரிந்ததும்  யாரவது கண்டால் அது வீட்டுக்கு தெரியவந்தால் அது பெரிய வாழ்க்கைப் பிரச்சினையாக  வெடிக்கும் என்ற நிலைமையும் இருந்தது . அதை விட அது அயல் அட்டை ஊருக்குள தெரிந்தால் யாரும் பொம்பிளை தரமாட்டார்கள் என்ற எழுதப்பாடாத விதிகள் ஊருக்குள் இருந்தது. என்னோட , அம்மாவே எப்பவும்

                                   " குரங்கிண்ட கையில கொள்ளிக் கட்டையை கொடுத்து கூரையில் ஏற்றி விட்டு வேடிக்கை பார்த்த மாதிரி , குடி வெறியில் விழுந்தால்,சாதி சனம் மதிக்காது,கலியாணம் கட்ட பொம்பிளையும் தரமாட்டார்கள், அந்த சீரளிஞ்ச பழக்கத்தை மட்டும் பழகாதையடா, அயல் அட்டை முகத்தில முழிக்க ஏலாமல் வரும் "  என்று எப்பவும் சொல்லுவா ,

                                அதால வாழ்க்கை முழுவதும் தனிக்கட்டையா இருக்க வேண்டி வரும் எண்டு வீட்டில சொன்னதாலும், என்னத்தை இழந்தாலும் கலியாணத்தை இழக்க விரும்பாததால் ,ஒரு நாளும் அந்த இடங்களுக்குப் போவதில்லை.

                                     இப்படி வெகு தூரத்தில் உள்ள அளவெட்டி கிராமத்தில் எங்களை யார் எண்டு அங்கே இருக்கும் பனை மரங்களுக்கே தெரியாது, இப்படியான எங்கள் இக்கட்டான அவல சூள்நிலையில் நாங்க கண்டுபிடித்த இடம் தான் அளவெட்டியில் இருந்த பத்துப் பனையடி என்ற இடத்தில இருந்த பூலோக சொர்க்கம். 

                                                 எங்கள் வீட்ட்டடியில்  இருந்து சைக்கிள்  மிதிச்சு, கே கே எஸ் ரோட்டின் இடைஞ்சல் போக்குவரத்துகால் சுழிச்சு ஓடி,  நகர சந்தடி நெரிசல் குறையும் வரை மிதிச்சு, இணுவில் தாண்டி சைக்கிள்  மிதிக்க கொஞ்சம் வெங்காய தோட்டங்கள் வெளிக்கிடும். மருதனாமடம் தாண்டி மிதிக்க புகையிலைத் தோட்டங்கள்  மூக்கை பிடுங்கத் தொடங்க சுன்னாகம் வரை சைக்கிளை மிதிக்க ஏறக்குறைய வலிகாம கிராம அடையாளம் தொடங்கும். சுன்னாகத்தில் சந்தை வளைவில் திருப்பி வலது பாக்காம மிதிக்கக் கிரவல் ரோட்டு சைக்கிளை தூக்கி தூக்கி எறிய கந்தரோடைக்கு குறுக்கால சைக்கில் மிதிக்கவே அளவெட்டி வாசம் அடிக்கும்.

                           வழுக்கை ஆற்றுப் பாலத்துக்கு மேலால சைக்கிளை மிதிக்க வழுக்கை ஆறு சின்னதா ஒரு கோடு போல அம்பனை வயல் நடுவில் கிடந்தது நெளியும். வலிகாமம் தெற்கையும், வடக்கையும் பிரிக்கும் சந்தியில் சைக்கிளை இடது பக்ககமா சரிச்சு மிதிக்க அளவெட்டி வரவேற்கிறது என்ற தகரப் பலகைக்கு பக்கத்தில ஒரு இலுப்பை மரம் சடைச்சு நிண்டு சிரிக்கும்.அப்படி  சைக்கிளை இடது பக்கம் திருப்பாமல் நேராக விட்டா சித்தங்கேணி வட்டுக்கோட்டை மூளாய் சுழிபுரம் என்று போகலாம்.

                                                  அளவெட்டிக்கு நாங்க போனவுடன் முதல் போறது ஆசுகவி விநாசித்தம்பி அவர்களின் சின்னக் கோவிலிலுக்கு. அங்கே போய் அவர் கையால திருநீறு வேண்டிப் பூசிக்கொண்டு, சில நேரம் பாவ மன்னிப்புப் போல , கும்பளாவளைப் பிள்ளையாருக்கும் ஒரு கும்புடு போட்டு வைச்சிட்டு ,பத்துப் பனையடி என்ற இடத்தில பனை மரங்களுக்கு கீழே இருந்த கோபிறேசனுக்கு ஒரு அஞ்சு லீடர் பிளாஸ்டிக் கானை எடுத்துக்கொண்டு நான்தான் போவேன், 

                              பத்துப் பனை கோபிறேசனுக்கு உள்ளுக்கு தென்னம் குத்தியை நாலு பக்கமும் அணைச்சு, நடுவில மணல் போட்டு நிரப்பி வயதான பலர் எப்பவும் கள்ளுப் பிலாவைக் மணலில நட்டு வைச்சுப்போட்டு

                 " ஜி ஜி பொன்னம்பலம் என்னத்துக்கு சிறிமாவிண்ட அரசாங்கத்தோடு ஒட்டினது..எஸ் டவுள் யு ஆர் டி  பண்டாரநாயக்கா  என்னத்துக்குத் தனிச் சிங்களச்   சட்டம் கொண்டுவந்தது ... "

                          எண்டு கதையில கைலாசம் போய்க் கொண்டு இருப்பார்கள், நான் சில முறைதான் போய் இருந்தாலும் அந்தக் கோபிரேசன் மனேயர் பல வருட அறிமுகம் போல சிரிப்பார்,

                                  " உங்களை போல சின்னப்  பொடியளுக்கு கள்ளு விக்க சட்டம் இல்லை, சாமாசத்துக்கு தெரிய வந்தா பைன் அடிப்பாங்கள் " எண்டுவார் ,

                              பெரிய பரலில் இருந்து பிளாஸ்டிக் கோப்பையில் அள்ளி என்னோட அஞ்சு லிட்டர் கானுக்கு ஊற்றும்போது,

                                       " பார்த்தா படிக்கிற பொடி போல இருக்கு, அஞ்சு லிட்டர் கான் கணகில இப்பவே இழுக்க வெளிக்கிட்டா ,பின்னடிக்கு சீவியம் கிழியப் போகுதே "

                               எண்டு சொல்லித்தான் கள்ளு அள்ளி நிரப்புவார், கடைசியில் அவர் சொல்ல வேண்டியதை சொன்ன மாதிரி ஒரு சிரிப்பு சிரிப்பார், அவளவுந்தான்,

                    ஒரே ஒரு முறை ஒரு வயதானவர்,

                    " கொஞ்சம் பொறு வாறன், நாசமாப் போன நாடுக்குள்ள ஞாயி ற்றுக் கிழமை நரி  நாரி உளைவுக்கு  நல்லெண்ணெய் தேடிச்சாம் கதை  போல கோதாரி விழுவார் என்னத்துக்கட்ட இந்த இளந்தாரி வயதில குடியில விழுகிறன் எண்டு நிக்குரீங்களடா   " 

                  எண்டு என்னோட கையைப் பிடிச்சு இழுத்து நிற்பாட்டி 

                       " எடேய் வம்பில பிறந்துகளே , என்னத்துக்கடா இப்ப இந்த கானில இவளவு கள்ளு " 

                     எண்டு கேட்டார் ,

                            " அம்மா அப்பம் புளிக்க வைக்கக்  கள்ளுவேண்டிக் கொண்டு வரச்சொல்லி சொன்னா, அதுதான் வேண்டிக்கொண்டு போறேன் எனை அப்பு " எண்டேன்,

                        அவர் " நாசமறுப்பு , அதுக்கு ஒரு எப்பன் அரைப் போத்தல் கள்ளு காணும் தானே, விளுவாரே " எண்டு கேட்டார்

                              ,நான் " இண்டைக்கு எங்க ஊரில்ல எல்லார் வீடிலையும் அப்பம் புளிக்க வைக்கப் போகினம் எனை அப்பு, அது தான் எல்லா வீட்டுக்கும் சேர்த்து அஞ்சு லிட்டர் கான் நிரப்பி வேண்டிக்கொண்டு போறேன் "

                         எண்டு சொன்னேன். அவர் சுருட்டை வாயில பத்த வைச்சு ஜோசித்தார்,ஆனால் எடக்கு முடக்கா ஒண்டும் சொல்லவில்லை.

                              அந்தக் கள்ளைக், கைக் குழந்தையைக் கொண்டு வாற மாதிரி பக்குவமாய்க் கொண்டு வந்து, முதலில் விபரமா சொன்ன பனோராமிக் லோக்கேசனில், வண்ணாத்திப்பூச்சிகள் பறக்கும் வழுக்கை ஆற்றம் கரையில், இந்தக் கரையில் இருந்து குடிப்போம்,அந்தக் கரையில் மாடுகள் வந்து நிண்டு எங்களைக் குழப்பமா பார்த்துக்கொண்டு இருக்க, சில நேரம் ஒரு வயதான மனிதர், ஆற்று தண்ணியில் சீலைகளைத் தோய்த்து,ஒரு கல்லில " விசுக் விசுக் விசுக் " எண்டு தலைக்கு மேலால் சுழட்டி சுழட்டி வெளுப்பார்.

                                   தூரத்தில் ஆள்காட்டிக் குருவிகள் கீழுக்கும் மேலுக்கும் வால் காட்டிக்கொண்டு பறக்கும், அராலிக் கடலில் இருந்து வரும் உப்புக் காற்றின் வாசம் வயல் வெளியின் வானவெளி எங்கும் வீசி அடிக்க , அம்பனைப் பனங்கூடல் பனை மரங்களின் காய்ந்த காவோலைகள் ஒன்றோடு ஒன்று உரசி " கர கர " எண்டு சத்தம் எழுப்ப, அந்த சத்தத்துக்கு குல்யில்கள் குளறி அடிச்சு பறந்தோட, நாங்கள் எப்பவுமே இளையராவின் பாடல்கள் வாய் விட்டு வயல் முழுவதும் அதிரப் பாடி, அஞ்சு லிட்டர் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் மண்டி முடிய, வெறும் கானில மேளம் அடிச்சு ,

                          " போனால் போகட்டும் போடா ,,இந்தப் பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா "

                             எண்டு , ஆற்றில விழுந்து நீந்திக் குளிச்சு , அருணா வீட்டை போய் சில நேரம் சாப்பிடுவம்.

                                          அளவெட்டியில் கிராமதில் வசித்த அருனேஷ்வரன்  என்ற  அருணா அந்த ஊரில படித்துக்கொண்டிருந்த போதும் , எங்களின் யாழ்ப்பான  டவுன்  தனியார் கல்வி நிறுவனத்தில் படித்த அயல் நண்பர்கள் மூலமா எங்களுக்கு அறிமுகம் ஆகி,கொஞ்ச நாளில் எங்க டவுன் அயல் அட்டைக்கே அறிமுகமாகி, ஏறக்குறைய எங்களின் வீட்டில் வந்து இரவும் தங்கி நிற்பான், நாங்க அவன் வீட்டுக்கு போறம் எண்டு வீட்டில எண்டு சொல்லிப்போட்டு ,அளவெட்டிக்குப் போய் பனை மரத்துக்கு கீழ நிற்போம்,

                              அருணா எங்கள் நட்பில்,அயலில் அறிமுகம் ஆனது போல நாங்களும் அளவெட்டி போகும் போதெல்லாம் அவனின் அயலில் கொஞ்சம் அறிமுகமாக, அவன் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு பெண்ணின் முகமும் எனக்கு கொஞ்சம் பிரகாசமாக அறிமுகமாக அவள் ஒரு முறை நாங்க அருணா வீட்டில, பக்கிஸ் பெட்டியில மேளம் அடிச்சு பாட, தலையைக்குனிந்து கொண்டு வெட்கமா வந்து, கொஞ்சம் துணிந்து எங்களுடன் நட்பாக, சிரித்து கதைத்தாள்,நான் கிட்டார் அடிப்பேன் எண்டு அருணா அவளுக்கு சொல்ல,

                        " உண்மையாவா, ,ஏன் நீங்க கிட்டார் கொண்டு வந்து இங்கே எங்களுக்கும் அடிசுக் காட்டலாமே "

                     எண்டு சொன்னாள்,நாங்க அவள் ஊருக்கு வாறதே வேற ஒரு விசியம் அடிக்க எண்டு எப்படி சொல்ல முடியும்,,நீங்களே சொல்லுங்க பார்ப்பம்,, 

                          ஒவ்வொரு முறை நாங்க அளவெட்டி போனால், அவள் அருணா வீட்டுக்கு வருவாள், ஒரு கட்டத்தில் எங்கள் எல்லாருக்கும் நல்ல ப்ரெண்ட்டான பின் ஒருநாள் நான் அவளுக்கு

                     " நால்லூர் தேர் திருவிழாவுக்கு எங்க வீட்டுக்கு வரலாமே ,அருணா வரும் போது, "

                             எண்டு சொன்னேன்,,அவள் ஜோசிகாமலே முகம் எல்லாம் சிரித்து,,

                                 " உண்மையாதான் சொல்லுரின்களா , உண்மையாதான் சொல்லுரின்களா, உண்மையாதான் சொல்லுரின்களா 

                               எண்டு மூன்று தரம் கேட்டாள்,நாலாம் தரம் கேட்க முதல் நானே சொன்னேன்,

                              " சப்பர திருவிழா இரவு வந்து எங்க வீடில தங்கினிங்க எண்டால் காலையில் வசந்த மண்டபப்  பூசை இடிபடாமல்ப்  பார்க்கலாம்,  அப்ப வாங்க  "

                               எண்டு  சொன்னேன் அவள் முகத்தை கையால மூடி, திரும்பத் திறந்து நம்ப முடியாமல் என்னைப் பார்த்தாள்,

                       " அப்பாவிடம் கேட்டு சொல்லுறேன்,எனக்கு நால்லூர் திருவிழா,தேர் பார்க்க சரியான விருப்பம்,அருணா அண்ணாவும் வாற படிய அப்பா ஓம் எண்டுதான் சொல்லுவார்,,நீங்களும் எல்லாரும் டவுனில படிச்சாலும், நல்லா எங்களைப் போல அன்பா பழகுரிங்க "

                               எண்டு கிராமத்து பெண் போலவே அப்பாவியா சொன்னாள், நாங்க என்னத்துக்கு அளவெட்டிக்கு வாறம் எண்டு அவளுக்கு எங்க விளங்கப் போகுது,எண்டதை நினைக்க உலகத்தை சுத்தவும் ஒரு எல்லை வேண்டும் எண்டு நினைச்சாலும்,அதுகளை வெளிய சொல்லவே இல்லை . அருணா வீட்டுக்கு வெளியே நிறைய வேப்ப மரங்கள்  நின்றது அதுக்குக் கீழே கதிரைகளைப் போட்டு அருணாவும் என்னோட மற்ற நண்பர்களும் கரம்போட் அடிச்சுக்கொண்டு இருந்தாங்கள் , 

                       நான் அது விளையாடவில்லை , எனக்குக் கரம்போட் விளையாடவும் தெரியாது. அருணா வீட்டுக் கிணற்றடியில் பயிற்றம் கொடி நட்டு இருந்தது, அதில நிறைய பயிற்றம் பூ பஞ்சுபோலப் பூத்து தொங்கிக்கொண்டு இருந்தது,நான் அதை ஆர்வமாகக் கிட்டப் போய்ப் பார்த்துகொண்டு இருந்தேன் ,பின்னுக்கு அவள் குரல் கேட்டது 

                            " என்னது  பயற்றம் கொடியை முயூசியத்தில் சயன்ஸ் எக்ஸ்சிபிசன்   பார்க்கிற மாதிரி அதிசயமாப் பார்குரிங்க ,,இதுக்கு முதல் பார்த்ததே இல்லையா "

                               " இல்லை,,இவளவு கிட்டத்தில் பார்த்ததே  இல்லை,,எங்களின் வீட்டுப் பக்கம்  இப்படி எல்லாம் அதிசயங்கள்  இல்லையே "

                      " ஒ.அப்படியா,,அருணா அண்ணா ஆட்களோடு கரம்போட் விளையாட விருப்பம் இல்லையா."

                        " எனக்கு அது விளையாடத் தெரியாதே "

                         " ஹஹஹா,,அதென்ன பெரிய கஷ்டமா அடி கட்டையால  மற்றக் கட்டைகளை அடிச்சு எதிர்ப் பக்கம் உள்ள ஓட்டையில் விழுத்துறது ,,இதென்ன பெரிய விசியமா "

                           "  நான் அடி கட்டையை அடிச்சேன் என்றால்  பிறகு அதை அளவெட்டி முழுக்கத் தேட வேண்டி வரும் "

                      " ஹஹஹ   ஹஹா, ஹஹ   ஹஹ   ஹா "

                         " அதுக்கேன் இப்பிடிக் கிடந்தது பெருமாள் கோவில் உண்டியல் குலுக்கின மாதிரி  சிரிகிரிங்க ,பிரெண்ட்ஸ் எல்லாம் பார்கிறாங்க ,,"

                          " ஹஹஹஹா,நல்லாப் பாக்கடும்,,எனக்கு வயிறு நோகுது சிரிச்சு "

                             " சரி,,சிரிச்சு முடியுங்க "

                        " ஒரே முசுப்பாத்தி ,,குழந்தைப் பிள்ளைகளே கரம்போட் விளையாடுவாங்க ,அடி கட்டை  அதை அடிக்கத் தேவை இல்லை,,சும்மா சுண்டினால் போதும் "

                            " ஹ்ம்ம்,,,அதுக்கும்  எனக்குப் பொறுமை இல்லையே ,,நம்மக்கு என்ன என்னதில இண்டரஸ்ட் இருக்கோ  அதில் எல்லாம் மட்டுமே நேரம் போவது தெரியாமல் ஈடுபடலாம் ,,இல்லையா  அப்படிதானே "

                              "  ,ஹஹஹஹஹா, ,பிறகு எப்படி கிட்டார் வாசிக்குரிங்க,,அதுக்குப்  பொறுமை எங்கிருந்து வந்தது "

                         " அது  இப்பதான்  பழகிக்கொண்டு இருக்கிறேன்,,,அதில  என்னவோ இண்டரஸ்ட்  இருக்கு "

                   " ஹ்ம்ம்,,அப்படிதான்,,உங்களுக்கு வேற என்ன இண்டரஸ்ட் "

                     " வேற ஒன்றும் சொல்லும்படியா  இன்னும்  இல்லை "
                        
                      " ஹ்ம்ம்,,அளவெட்டியில் என்ன இண்டரஸ்ட் உங்களுக்கு,,என்ன இங்க பிடிச்சு இருக்கு உங்களுக்கு "

                        " அளவெட்டியில் எனக்கு என்ன பிடிச்சு இருக்கு எண்டு சொன்னால்,,பிறகு நீங்க என்னோட கதைக்க மாட்டிங்க "

                          " ஒ அதென்ன,,,எனக்கு சொல்லுங்க,,ப்ளிஸ் ,,எனக்கு  சொல்லுங்க "

                          " ஹ்ம்ம்,,அந்த இண்டரஸ்ட் க்குத்தான் நாரி முறிய எங்க ஊரில இருந்து சைக்கிளை மிதிசுக்கொண்டு வாறமே "

                          " ஹ்ம்ம்,,,எனக்கு விளங்கவில்லை ,,என்னமோ சொல்லுரிங்க,,இனி எப்ப இங்க வருவிங்க,,வாற சனிகிழமை இரவு ஜெனரேற்றர்,  டெக் வாடைக்கு எடுத்து வைதேகி காத்திருந்தாள்  படம்  எங்கட வீட்டில போடப் போறோம்,,நீங்க வருவிங்களா "

                         " அதில நல்ல நல்ல பாட்டுக்கள் இருக்கே,,கெசட்டில் பாட்டுக் கேட்டிருக்கிறேன் படம் இன்னும் பார்க்கவில்லை,,சரி வைதேகி ஏன் காத்திருந்தாள்  ,,சொல்லுங்க "

                         " எனக்கு எப்படித் தெரியும்,,நானும் இனித்தான் பார்க்கப்போறேன்,,பார்த்திட்டு சொல்லுறேன்,,அதில ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு காற்றாடி போல் ஆடுது என்று ஒரு பாட்டு இருக்கு ,,கேட்க என் நெஞ்சே காற்றாடி போல ஆடும் "

                              " ஹ்ம்ம், நல்லா மயில்த் தோகை  விரித்து ஆடும்  போலதான் இருக்கு ,,நீங்க சொல்லுற விறுத்தத்தைப்  பார்க்கவே "

                         " அவ்வே அவ்வே,,ஆனால் எனக்கு அதில உள்ள இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ பாட்டுதான் அதிகம் விருப்பம்,,ஏன் தெரியுமா " 

                        " எனக்கு எப்படித் தெரியும் நீங்களே உங்க பொன்னான வாயால சொல்லுங்க "

                      " ஹஹஹா,,நான் பரதநாட்டியம் படிச்சு இருக்கிறேன்,,அதால அதில வாற ஜதி, அலாரிப்பு ,அடவு  எல்லாம் நல்லா இருக்கும் "

                             " ஒ ,,பரதநாட்டியம் வேற ஆடுவிங்களோ,,கொஞ்சம் ஆடிக் காட்டுங்களேன் , பதஞ்சலி முனிவர் பெயரால் புண்ணியமாப் போகும் "

                          " எங்க ஆட "

                      " ஒ சிதம்பர நடராஜா சபையில்த்தான் ஆடுவின்களோ, சலங்கை ஒலி போல  இந்தக் கிணத்துக்கட்டில ஏறி நிண்டு ஆடுங்க "

                             " ஹஹஹஹா ஏன் நான் உசிரோட இருக்கிறது பிடிக்கவில்லையா ,,சொல்லுங்க பிடிக்காட்டி நானே கிணத்துக்க குதிக்கிறன் "


                          " சும்மா பகிடிக்கு சொன்னேன்,,,,முதலில் உங்க வீடு எங்க இருக்கு,,"

                         "  எங்க வீடா ,,இந்தக் கிணத்துக்க எட்டிப் பாருங்க,,இதுக்குள்ளதான் இருக்கு ,,ஹஹஹஹா "

                            "  ஹஹஹஹா.. "

                             " உங்களுக்கு அம்பனை தெரியுமா "

                               " எனக்குப் பனை மட்டுமே தெரியும் "

                         " ஹஹஹா,,உருப்பட்டமாதிரித்தான் "

                        " ஏன் உங்க வீடு அம்பனையிலா இருக்கு,,அதெங்க இருக்கு "

                         " ஹ்ம்ம்.. எங்க வீடு  இந்த ஒழுங்கையின் தொங்கலில் உள்ள பழைய காலக் கல் வீடு ,, முன்னுக்கு ஒலையால வேன்ஞ்ச பத்தி பந்தல் போலப் போட்டு இருக்கும் , அவடம் தான் அம்பனை ,அருணா அண்ணா எங்களின் கிட்டத்து சொந்தக்காரார் அவர் அப்பாவும் என்னோட அம்மாவும் மாத்து சம்ப்பந்தம் செய்த வழியில் சகலன் சகலி  முறை "

                      "  ஹஹஹா,,இதெல்லாம் ஏன் சொல்லுரிங்க "

                    " இல்லை,,நீங்க பயப்பிடாமல்,தயங்காமல் எங்க வீட்டுக்கு வரலாம் அதுக்கு சொல்லுறேன்,வருவிங்களா,வைதேகி காத்திருப்பாள் "

                         " என்னது ,எனக்கு வைதேகியைத் தெரியாதே,,அவா  எதுக்கு எனக்காக காத்து இருக்க வேண்டும்,,சொல்லுங்க "

                          " அய்யோ கடவுளே,,அது அந்தப் படத்தோட பெயர்,,,அதுதான் நாங்க போடப்போறோம்,,அருணா அண்ணா வேற ரெண்டு படம் கொண்டு வாருவார் என்று சொன்னார் ,,நீங்க வருவிங்களா "

                       " என்னோட மற்ற பிரெண்ட்சைக் கேட்க வேணும்,,அவங்க வந்தாதான் வருவேன்,,இல்லாட்டிப் பம்பல் இல்லையே.."

                         "  ஒ உங்களுக்குப் பிரெண்ட்ஸ் அவளவு முக்கியமா "

                      " ஓம்,,அவங்கள்தான் பிளான் போடுறது,,நான் பின்னால இழுபடுறது "

                     " அட அட அட அட...என்ன ஒரு கொள்கை. இப்பபிடித்தான் வாழவேண்டும், சரி வராட்டி விடுங்க,,இன்னொரு நாள் பகல் வாங்க எங்க வீட்டுக்கு,,அதுக்கும்  உங்க பிரெண்ட்ஸ் வந்தாலா இழுபட்டுக் கொண்டு வருவிங்க "

                           " ஹஹஹஹா,,எனக்கு இப்ப பதில் சொல்ல தெரியலை ,,"

                       " ஒ ,,ஹ்ம்ம்,,நான் கேட்கிற ஒண்டுக்கும் ஒழுங்கா பதில் சொல்லவில்லை,,இதுக்கு மட்டுமா சொல்லப்போரிங்க   ,ஹ்ம்ம் "

                          "  நாங்க வரா விட்டாலும் நீங்க நல்லூர் தேருக்கு வாங்க,அதை மிஸ் பண்ண வேண்டாம் ..சரி தானே "

                             " ஹ்ம்ம் ,மிஸ் பண்ணவே மாட்டேன்,,இப்பிடி சந்தர்ப்பம் கிடைக்கிறதே அரிது...... விடுவேனா...... ,,நான் வீட்டுக்கு போகப்போறேன்,,இன்று செரியான  வெய்யில் நீங்க போகும்போது தொப்பி போட்டுக்கொண்டு போங்க,,இல்லாட்டி மண்டையில் வெயில் கொதிக்கும்,,சும்மா அங்கே இங்கே சுத்தாமல்,,ஒழுங்கா வீட்டுக்குப் போங்க,,இல்லாட்டி எனக்கு கோபம் வரும்,,பிறகு கதைக்க மாட்டேன் ,சரியா "

                          "    சரி, உங்களுக்கு என்ன பெயர் இவளவு அளந்துகொண்டு இருக்குரிங்க ,,உங்க பெயர் சொல்லவில்லையே   "

                           " என்னது, அளக்கிறேனா ,,,இப்பிடியா கதைப்பிங்க,,எனக்கு கோபம் வருது,,ஹ்ம்ம்,,இப்ப அழுகை வருது,,நான் ஆசையாக் கதைக்குறேன்,,அளக்குறேனாம்.   இப்பிடியா கதைப்பிங்க,,போங்க நீங்க,,என்னோட பெயர் சொல்லமாட்டேன் "

                        "  அட அட நான் சும்மா முசுப்பாத்திக்கு சொன்னேன் ,,கோவிக்கவேண்டாம்,,ஆனாலும் உங்களுக்கு கோபம் வரும்போது முகம் அழகா இருக்கு  "

                                " ஹஹஹஹஹா,,உண்மையாவா,,என்னோட தலையில ஐஸ் வைக்கவில்லை தானே "

                             "  இல்லை,,உங்க பெயர் சொல்லுங்க,,பிரெண்ட்ஸ் எல்லாரும் எங்களையே பிடிச்சுத் தின்னுற மாதிரிப் பார்த்துக்கொண்டு கரம்போட் விளையாடுறாங்க இப்ப போகக் கேட்பாங்கள் என்னடா ரீல் விட்டனி எண்டு "

                          " ஒ நல்லா ரீல் விடுவிங்களோ,,அய்யோ பயமா இருக்கு,,நான் அப்பாவிப் பெண்,,உலகம் தெரியாத அத்துப்  பூச்சி,,"

                            " ஹலோ,,என்ன கிண்டலா ,,நான் ஏன் உங்களுக்கு ரீல் விட்டு ஏமாற்றவேண்டும் சொல்லுங்க "
  
                            "  அய்யய்யோ,,கோபம் மூக்கில முட்டிக்கொண்டு வருகுதே,,இப்பிடித்தான் கோபம் எப்பவும் வருமா "

                     " அதை விடுங்க,,உங்க பெயரைச்சொல்லிப்போட்டுப் போங்க "


                       " ஹ்ம்ம்,,,வைதேகி  என்றே வைச்சுக்கொள்ளுங்களேன்  "


                       "  ஹஹஹஹா,,சரி,,வைச்சாப் போச்சு. "

                                 எங்களின்  வீடு நால்லூர் கோவிலுக்கு மிக அருகில் இருந்ததால். தேர், தீர்த்தம், இரண்டு நாளும் எங்க வீடு சொந்தகாரர், நண்பரகள் வருகையால் அத்திவாரமே  அதிரும். அப்படி வரும் எல்லாருக்கும் நாங்க சாப்பாடு கொடுப்போம். வாற சனங்களும் சேர்ந்து அம்மாவுடன் சமைபார்கள். தனிமை என்பது கிடைக்காவிட்டாலும் அலாதியான நாட்கள் அந்தத் திருவிழா நடக்கும் இருவத்திஐந்து நாட்களும். நல்லூர் கோவிலில் தீர்த்தம் அன்று கொடி இறக்கி அடுத்தநாள் பூங்காவனத் திருவிழாவோடு புயலோடு மழை பேஞ்சு விட்ட மாதிரி அமைதியாக இருக்கும் எங்களின் ஊர். 

                             அந்த வருசத் திருவிழா தொடங்கவே அருணா எங்க வீட்டுக்கு வந்திட்டான் . அவன் ஒரு நல்ல முருக பக்தன். காலையில பிரதட்டை கோவில் நாலு வீதியைத் சுற்றி அடிப்பான். விரதம் இருப்பான். எனக்கு அந்த நம்பிக்கைகளில் ,கொஞ்சமும் நம்பிக்கை இல்லாததால் நல்லுர்க் கோவிலடிக்கு அதன் நாலு  வீதிப்பக்கத்துக்கு சும்மா தன்னும்  விடுப்பு பார்க்கவும் போறதில்லை, 

                                 சப்பர திருவிழாவுக்கு எங்க வீடுக்கு அவள் வந்தாள், நான் அம்மாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

                  " தேர், தீர்த்தம், இரண்டு நாளும் வீடில நிண்டு பார்த்துட்டுப் போகலாமே மகள் "

                           எண்டு அம்மா சொல்ல அவள் சந்தோசமா என்னைப் பார்த்து தலையை ஆட்டி சிரித்தாள், அம்மா

                                "நீர் என்ன  சொல்லுறீர் பிள்ளை , இவன் உங்கட ஊருக்கு வந்து ,அருணா வீடில வந்து வாலைச் சுருட்டி வைச்சுக்கொண்டு இருப்பனா, இந்தக் குரங்கு  அனுமார் வாலயம் வந்த மாதிரி ஒரு இடத்தில  இருக்க மாட்டானே "

                                எண்டு என்னைப் பற்றிக்  கேட்டா , அவள் வாயைக் கையால பொத்திக்கொண்டு சிரித்தாள், தேர் திருவிழா இரவு எங்களின் வீட்டிலேயே நின்றால் அந்த தேவதை .என்னோட அம்மாவுக்கு நல்ல விருப்பம் அந்தப் பெண்ணில் என்பது எனக்கு கொஞ்சம் சந்தோசமாக  இருந்து, என் சகோதரிகள் கொஞ்சம் சந்தேகமாகத்தான் என்னையும் அவளையும் பார்த்தார்கள்.ஆனால் நல்ல நெருக்கமாக அவளோடு பக்கத்தில் இழுத்து இருத்தி வைத்துக்  கதைத்தார்கள். 

                          ஒரு இளம் பெண் தனிய வந்து எங்களின்  வீட்டில நட்பா இருப்பது ஒரு அதிசயம் அந்த நாட்களில் யாழ்பாணத்தில்.  ஆனாலும் அவளுக்கு என்னோட அம்மா, மற்ற பேர்களைப் பிடித்து இருக்கலாம், ஒருவித எதுவுமே அசம்பாவிதமாக நடக்காது என்ற பாதுகாப்பு உணர்வு அவள் கண்களில் இருந்தது. எங்கள் வீட்டில் பிறந்து வளர்ந்த ஒருவர் போலவே நடு வீட்டுக்க சிரிச்சு சிரிச்சு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கொண்டு இருந்தாள். 

                         நல்லூர் தேர்த்திருவிழா இரவு எங்கள் சொந்தகாரச் சனங்ள் வீடில இரவு முழுவதும் கச கச எண்டு கதைத்துக்கொண்டு கச்சான் கொட்டை உடைத்து திண்டுகொண்டு இருந்த நேரம். நான் அப்ப கிட்டாரில் பழகிய முதல்ப் பாடலான, " ஒ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்...." பாடல் நல்லா நெஞ்சத்தைக் கிள்ளுற மாதிரி வாசிப்பேன், அது எப்படி இளம் மனத்தைக் கலக்கும் என்பது பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும்.அதைவிடக் காதல்,அது  இபோலா வைரசை விடக் கெட்ட சாமான்.சும்மா காற்றிலேயே பரவிப் பத்த வைக்கும் என்பது அந்த வயசிலேயே நல்லாத் தெரியும் . 

                                        இரவு உறவினச் சனங்கள் எல்லாரும் படுத்தபிறகு, கிட்டாரை எடுத்துக் கொண்டு வந்து   வெளியே எங்களின் வீட்டுக்கு முன்னால் உள்ள கறுத்தக்கொழும்பான் மாமரங்கள் சடைச்சுக் கிளை விட்டுத் தலை முழுகிய இளம்பெண் தலையை அவிட்டு விட்டு விரிச்ச இடத்தில பிளாஸ்டிக் கதிரையைப் போட்டு,அதில இருந்து  " ஒ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்...."பாடல் வாசிக்கத்  தொடங்கினேன்

                             மேற்கு வானத்தில அஷ்டமி சந்திரன் அரைவாசியா பிரகாசிக்க, மாமரத்து இலைகளுக்கு நடுவால அது அள்ளி எறிஞ்ச பால் நிலவு உடைந்து துண்டு துண்டாக விழ , தனிமையில் இருட்டுக்கு பயந்த ஒரு நத்து மஞ்சவன்னா மரத்தில இருந்து பாக்கு வெட்டி போல டிக்கு டிக்கு என்று கத்த, கோவிலைச் சுறிப் போட்டிருந்த ஐஸ்பழக் கடைகளில் இருந்து வந்த ஜெனரேடர் சத்தத்தையும் மேவிக்கொண்டு சந்தியில் இருந்த ஞானப்பிரகாசம் தேத்தண்ணிக் கடையில் இருந்து  ஏ எம் ராஜாவின் இரவின் கடைசிப்  பாடலாக " தனிமையிலே இனிமை காண முடியுமா, நல் இரவினிலே  சூ ரியனும் தெரியுமா .....  " .பாடல் நசிந்து ஜூலை மாதக் காற்றில் சூடாக ஏறிக் கொண்டு வர ...

                            அவள் எழும்பி வந்து எங்களின் வீட்டு போட்டிக்கோவில் ,  எனக்கு முன்னால் ,இருட்டில முழங்கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு சீமெந்துக் கட்டில் இறுக்கமாகக்  குந்தி இருந்தாள்.

பாடிய  கீதங்கள் பாகம்  ரெண்டில் தொடரும்...... 
.
.
.