Monday 31 October 2016

நாடோடியின் நகரம் முதல்த்தொகுப்பு

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது போன்றது ஒரு நகரத்தை நாலுவிதமாக ரசிப்பது . சலிப்புக்கள் எல்லாம் தாண்டி சந்தோசமான விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள் வாழுமிடம் உத்தரவாதங்கள் தரலாம் . இந்த உலகில் சந்தோசம் எங்கோ பதுங்கி இருக்கு என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  தொன்மையான அடையாளங்களை   வைப்பாட்டியாக  வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாகப் போட்டுக் கவிதை எழுதியுள்ளேன் 


                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  அதைப் படம் எடுப்பதையும் ,அதுக்கு கவிதை எழுதறேன் என்ற பிசத்தல்களை  ஒரு கட்டத்தில்  நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...

பறவைகளை
எதேச்சையாகக் கடக்கும்போது
தயவுசெய்து
கலவரம் ஆகாதீர்கள்
உங்கள் கவனம்
அவைகளின்
ஒரு நாளையே
குழப்பிவிடலாம்

இந்தப் படம்
அந்தச் செய்தியைச்
படபடத்து சொல்லிவிட்டு
வெய்யிலோடு
வெளியே போய்விடுகிறது

கவிதை
அதையொரு இடத்தில
கொண்டு வந்து
நிற்பாட்டி விட்டு
வானத்தை
வாடகைக்கு எடுத்து
விரித்து வைத்து
இருட்டுவதுக்குள்
எழுதிவிடு என்கிறது.......

இறக்கை முளைத்த
வெள்ளைப் புறாக்களையும்
அவை சூரியனோடு மோத
சுதந்திரச் சிறகை விரித்தது
பற்றியும்
எல்லாரும் எழுதியறுத்து
வெறுத்துப் போனதால்
இதுக்குமேலே
எழுத விருப்பமில்லை



ஒரு 

விட்டில் பூச்சியின் 
தற்கொலைக்கு ஒப்பான 
திடுக்கென்ற ஆச்சரியத்தை 


ஆர்கிஸ்எல்வா ப்ரோ

பாலத்தைக் கடக்கும்போது

சந்தித்தேன்



தண்ணியின் தாளங்களை
தனியாக
எண்ணி எடுத்து
ரசித்துக்கொண்டிருந்தாள்

மரணத்தைப் பற்றின
அறிமுகத்தோடு
தொடங்கியது
வருடங்களாய்
சந்திக்க முடியாமல் போன
அவளின் உரையாடல்

அளவுக்கதிகமாக
மெலிந்து போய்
கூந்தல் இழந்து
விரிசல் விழுந்திருந்தாள்

தனிமையைத் தள்ளி
வேரோடிய புற்றுக்களோடு
போராடுவதாக
தலையைத்
தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்தாள்

ஒன்றாக வேலை செய்தபோது
கடமை முடிய
வாசலை தாண்டினவுடனே
அற்பாயுளில்
மடிந்துவிடும் நிலையில்
எங்களின் நட்பு
ஒருபோதும் இருந்ததில்லை

ஒரே புள்ளியில்
தற்போதைய
என்னைப் பற்றி சொல்ல
ஒன்றுமில்லை என்றேன்

சமாளிப்புகளை
இறுகப் பற்றின
வாசனைகளால்
அவள் வார்த்தைகள்
நிறைந்திருந்தது
நம்பிக்கையை
நம்பிக் கை விடாதே என்றேன்

வலிகள் தரும்
சலிப்பிலிருந்து விலகி
எப்போதாவது
மீட்டெடுத்துக் கொள்ளும்
அற்புதமான
தருணம் இதுவென்று புறப்பட்டாள்

சலசலத்து
இயங்கிக்கொன்டிருந்த
ஆர்கிஸ் எல்வா நதியின்
சத்தத்தின் பின்னணியில்
அவள் முகம்
இறந்துபோயிருந்தது
அதிகம் போதாத
ஒருவிதமான விசிறியடிப்பில் 
பிர்ச் மரங்கள் 
வில்லோப் புதர்கள் 
மேப்பிள் மலர்களைக்
குளிப்பாட்டுது மழை....

நடைபாதைக்
கரையோரமெல்லாம்
வழுக்கியபடி
இறகுகளை ஈரமாக்கி
கொண்டை இழுத்து
சண்டை பிடிக்கும்
சாம்பல்ப் புறாக்கள்..

சோலையில்
சின்னக் குருவிகள்
நாளை வெயில் பற்றிய
நம்பிக்கையற்று
இன்றைய பொழுதுக்கு
மர வேரடியில்
புழுக்கள் தேடுகின்றன......

அவைகளைத்
திடீர் திடீர் என்று
திடுக்கிட வைத்துப்
பூச்சாண்டி காட்டுகின்ற
மரஅணில்கள்
இன்று வரவேயில்லை...

மழை
கிளைகளின் வழியாக
இலைகளில்
சொந்தம் கொண்டாட
மரங்களின் கீழே
சத்தமில்லாமல் இருட்டு
தியானம்செய்கிறது

சூடு கொடுக்கின்ற
அங்கிகளில்
கைகளை நுழைத்து
குடைகளை மறந்துவிட்டு
தலைநனைவதைக் கவனிக்காத
மனிதர்கள்
வேலைக்குப் வெளிக்கிடுகிறார்கள்
என்னைப் போலவே.......




சரசமாடும்

நகரப் பாதையில்

தேங்கிய மழைத் தண்ணி

என்னையும்
நிழலாக சேர்த்து இடிக்க
அந்த முதியவர்
பொறுமையாக என்னுள் பார்த்து
சிரித்தார்.

வலியோடு
குனிந்து பார்த்து
அவசரமான
நிமிடங்களை நிறுத்தி வைத்து
வழியை விலத்தி
சிரித்துத்
தயங்கி நின்றேன்

கதைக்கத் தொடங்கினார்..
.
என் சந்தேகங்களை
சாட்சியாக்கி
தன் ஆத்மாவுடன்
விசாரணையை ஆரம்பிக்க
எல்லாவற்றிலும்
உணர்வுகள்
தூறல் தூவிச்சென்றது

அவர் கேட்ட
சில கேள்விகளுக்கு
சிக்கனமாகப் பதிலளித்தேன்.
நான் கேட்ட
ஒரேயொரு கேள்விக்கு
இதயத்தின் பெரும் பகுதியின்
வெற்றிடத்தை
திறந்துகாட்டினார்.

ஒவ்வொரு
எதிரொலியிலும்
தனிமையோடு
போராடிக்கொண்டிருப்பதால்
யாரா இருந்தாலும்
கதைப்பேன் என்றார்

அவரின்
கதை கடந்து போன
வயதான அனுபவத்தில்
நான் இருப்பேனாவென்று
தெரியவில்லை
சில நேரமது
என்னையும் தொடரலாம்

இதன் அவலம்
அப்போது
என்னை அசைக்கவில்லை
தடமிழந்து
வாழ்வு நகர்த்த எதுவுமில்லா
வயசாகும் போது
தெரியுமிந்த வலி.



யன்னலைக்

காற்றுவர்ற பாதியில்

திருகித் திறக்க

நேரத்துக்கே எழும்பிவந்த

அவசர வெய்யில்
காலத்தை
நிலமெல்லாம் பரப்பி வைச்சு
பல்லாங்குழி
விளையாடிக்கொண்டிருந்தது

ஏனோ
சரியாகப்படவில்லை
தொலைவில்
முந்திக்கொண்டு
காதில்அறைந்து
பதினோரு மணிக்கு
ஞாயிற்றுக்கிழமை
பிராத்தனை
மணியடித்தது

விடுப்பு பார்த்து
தேவாலய
மணிக் கோபுரத்தை
நின்று நிமிர்ந்து நிதானித்துக்
கவனிக்க
வலஞ்சுழியில்
மணிக் கம்பியையும்
நிமிடக் கம்பியும்
ஒன்றயொன்று திரத்த

ஞானம் தெளிந்தது
நடுச் சாமமே
நேரத்தோட
ஒரு
மணித்தியாலம்
கையை உதறிப்போட்டு
பின்னுக்குப் போய்விட்டதாம்.



இயற்க்கை

தோல்வியில் கூட

சரியாக புரிந்து கொள்ளாமல்

அவசரமான தற்கொலைகளுக்கு
முடிச்சுப்போட்டுப் 
பார்ப்பதில்லை

அன்னியப்பட்டுப்
போவதில்லையென்ற முடிவோடு
உதிர்ப்பை உணர்ந்து
தன் வீழ்ச்சிக்கும்
பூசு மஞ்சள் குளித்து
வர்ணம் பூசிப் பார்க்கிறது

மெல்லிய காற்று
பனிமழையுடன் பேசும்போது
மகிழ்ச்சியாகவிருக்கும்
மரங்கள்
காலநிலையின்மையை
சபித்துக்கொண்டு
ஒதுங்கிப்போவதில்லை

விழுந்துகொண்டிருக்கும்
இதய வடிவ
மேப்பிள் இலைகளுக்கு
சிறகுகள் கொடுத்து
முதல் நிலையில்
தன்னைச்சுற்றியே
அணைத்துக்கொள்கின்ற
அற்புதமான செய்தியில்
தன்னிருப்பையும்
அர்த்தப்படுத்துகிறது.

இதுக்கும் மேலே
இனியென்ன எழுதிக் கிழிக்க
என்றபோதுதான்
என் சின்ன மகள்
விழுந்த மஞ்சள் இலைகளை
நெஞ்சோடு அள்ளி எடுத்த
நினைவு குறுக்கிட்டு வந்தது 


திசை தேவையில்லாமல் 
நடந்த பாதைகளில்
ஒட்டிக்கொண்டு 
நுழைந்த முகங்கள் 

இன்னமும் 

என் காதில்

கிசுகிசுப்பது போலவே

இருக்கிறது.


வருடங்களின்
முன் கடந்து சென்ற
வீதிகளில்
ஏனோ
மிகவும் தெளிவாக
விபரித்திருந்த
தோல்வி தெரிந்தது

தெளிவற்ற
ஆரம்ப கட்டத்தில்
விரிந்திருந்த
வழித்தடங்கள்
வெறும்
ஆர்வக்கோளாறென்று
அதிகாலைக் கனவோடு
உதறி எழுந்த போது
புரிந்துகொண்டேன்

ஜன்னலில்
இலையுதிர் மரங்கள்
குளிர்ந்த வெய்யில்
கசங்காத வானம்
பார்த்த போது
நினைத்துக்கொண்டேன்
போனது
எப்படியோ போகட்டும்
இனியாவது
எதிர்காலம்
அழகாக இருக்கவேண்டும்






எந்தப் புள்ளியிலும் 

சேராமல்  விலகுகிறோமென்பது
தெரியாமல் 
நினைவில் நிற்கும்
கதைகளோடு 
தள்ளிக்கொண்டே போகிறது 
க்ருன்ட்லான்ட் 
நடுநிசி நகரம் ..
டாக்சி ஓடிக்
காசைத் திரத்த
பாகிஸ்தானியர்
வேலை செய்யாமலே
அலுப்பில்
ஓய்வு எடுக்க
அகதிச் சோமாலிகள்
மெட்ரோட்ரைன்  ஸ்டேசனில் 
ராச்சியத்தை அறிவுக்கும் 
ஜெகோவாவின் சாட்சிகள்

தந்தூரிக்
கோழிக் கால்
வாசம் காற்றில்
தள்ளி விழுத்தி 
நிழல்கள் மிதிபட்டு 
நெரிபடும் நடைபாதைகள்..... 

வார இறுதிகளில் 
எப்படி விடியும் என்ற
கவலையில்லாதவர்களின் 
பிரிவிற்கு வருந்தத் 
தேவையற்ற
கொண்டாட்டம்
நம்பிக்கை தரும் 
சினேகிதங்களின் 
கற்பனைகளுக்கும்   
உத்தரவாதங்கள் உண்டு.. 

மனிதர்களை 
எழுதிச் செல்லும் 
நளினமான  நகரத்தை 
நடந்து கடக்கும் 
எல்லாருக்கும்
இன மதம் மொழி நிறம் 
இல்லாத ஒரு 
ஆசிர்வதிக்கப்பட்ட
நாளாகும்.

இறங்கி வராத
நட்சத்திரங்களோடு
கோபித்துக் கொண்டு
தலையைத் 
தொங்கப் போட்டுத்

திரும்பி நின்று விகசித்து

சிவப்பு மஞ்சள்

மையெல்லாம் கொட்டி

அலங்கோலமாக்கிய
மேகங்களில்
உயிர் எஞ்சியிருக்கும் என்ற
நம்பிக்கையில்
ஒரு
வானம்பாடி
தன் இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும்
பின் மாலைப்பொழுதை
கலங்காமல்
பாடும்
சில பாடல்களில்
பிரியங்களுடன்
மீட்டெடுத்துவிடலாம்.

மரங்கள் மொட்டையாகிய
நடைபாதையின் 
இக்கட்டான தருணத்தில் 
தானாகவே 

ஒரு வழியைக் 

கண்டுபிடிக்கிறது இசை



நின்று கேட்க

அமைதியிருந்தால்
சூட்சுமத்தை அறிந்துகொண்ட
ஒரு பாடலை
அது குளிரோடு போராடிச்
சொல்லலாம்

அதையொட்டியே
கேள்விக்கு பதில்களை
சின்னப் புள்ளியில்
சாத்தியமாக்கி
அனுபவங்களை வாசித்து
ஒரு ஒட்டுதலைப்
பிறப்பித்துவிடுகிறது சுரங்கள்

உணர்ச்சியை
வடிவமைத்துக்கொள்ள
இலையுதிர்
வெளிப்படையில்
நெருங்கும் பருவங்கள்
இன்றைக்காவது
பிள்ளைகளுக்கு
பரவலான அங்கீகாரத்தை
ஒரு நாளில்
உணரவைக்கலாம்.

திரிசங்கு சொர்க்க

மேகங்களின் கீழே

இருளோடு

அப்பப்ப

கைகுலுக்கிக்கொண்டே
நீண்டவாக்கில்
ஒளியை
அதன் இனிமையான
திசைகளில்
திருப்பி
நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
என்று
சொல்லி விடுகிறது
முப்பரிமான
அலங்கார நகரவீதி.! 

.
தளிர் பச்சையாகவே

இருக்கவிரும்பும்

மதனப் போதை

முற்றிலும் முறிந்துவிட்டது

குளிர் குளித்த வெளிச்சம் 
வழியும்
இலை வெளிகளில்
விலகித் தப்பித்து
ஓடி வந்த ரசனை
அந்தரங்கமான இரவில்
நிலமிறங்கி விட்டது
மரம் இனி வரையும் ஓவியத்தின்
வர்ணங்களும் வர்ணனைகளும்
வெளிச்சத்தோடு
போட்டி போட்டு
நடனமாடிக்கொண்டிருக்கும்
பின்கோடைப் பெருவெளியில்
நடுநிசியெல்லாம்
அழகு தேவதை அப்சரஸ்
பெண்களைப்
படைத்துக் களைத்த
அசதியின் தூக்கம்
பிந்திக் கலைந்த நேரம்
காலநிலைகள்
முந்திக் கொள்ள
தெளிவுபடுத்தமுடியாத
பிரம்மனின்
பகல்க் கனவுபோலவேயிருக்கிறது
ஒஸ்லோவில்
இலையுதிர்காலம்.


கோப்பிக் கடையின்

சுவாரசியமான மேசைகளில்

கோடை முழுவதும்

மேப்பிள் நிழல்

நடை பாதை 
மனிதர்களை
இழுத்து இருத்தியது

வெய்யில்
பிறந்த பகல் எல்லாம்
வியர்க்க வியர்க்க
கதைத்துக்கொண்டிருந்தோம்

நீ
விரல்களைப் பின்னிக்கொண்டு
கால்களை ஓட்டவைத்து
ஓடைத் தண்ணி போன்ற
மேகங்களை
வேடிக்கை பார்த்தாய்

இப்போது
மூசிமூசிப் பெய்யும்
இலையுதிர்கால
முன் பனியின்
நினைவுகளில் மட்டுமே
உன்
சூடான சுவாசம்

எல்லா
வெளிச்சங்களும்
வெளியே
தெரிவதில்லையென்று
தனக்குள் புழுங்குது
இலையிழந்துகொண்டிருக்கும்
மேப்பிள் மரங்கள்.

விடுமுறையோடு 
ஒப்பந்தம் போட்டு ஒதுங்கிய 
ஒரேயொரு நாளில் 
வேகமாக 
குறுக்குக் வீதிகளில் 
சுற்றுவதுக்குள்
நடை பாதைகள்
மாறி விட்டது

நிலத்தடி நிலையத்திலிருந்து
மிதந்துக்கொண்டு
கடக்க வேண்டிய
காலடிகளை
தெளிவாய்த் தெரிவு செய்த
தீர்க்க நடையினர்
என்னை
வேகமாக உரசி மறைந்தார்கள்

முழுசாக
இரண்டு மாதங்களே
வாழ்ந்தவன் போல
மூலை முடுக்குச் சந்திகளில்
தேவையில்லாமல்
பதுங்கிக்கொண்டிருந்தது
பயம்

புறாக்களுக்கு
தீனி போட்டு
விரும்பித்
தங்கி இருந்த போது
ஏற்படாத சலிப்பு
இப்போது இரண்டே
மணித்தியாலங்களில்

குட்டைப் பாவாடையில்
தொங்கிய நாடாவை
சரிசெய்துவிட்டு
நிமிர்ந்து பார்த்தவளின்
நெரிசலுக்குள் நெளிந்த
உரையாடலில்
அவளுக்கும்
ஒன்றுமே
பிடிக்கவில்லையாம்