Friday 21 September 2018

நினைவுவரும் போதெல்லாம் !


மனதளவில்
" நான் "
தொலைந்து போனதாலோ
தெரியவில்லை
சிலசமயம்
நிலைகுலையச் செய்யும்
பிரார்த்தனை
நினைவுகளிலிருந்த
துயரங்களின் பிடிப்பை 

விடுவித்திருக்கிறது !


அது
காரணமாயிருக்கலாம் 

" நான் "
 ஒன்றுமே
செய்யவில்லை போலிருந்தாலும்
வாழ்கையின்
உண்மைத்தன்மையை
உரசிப்பார்த்தது  !



" நான் "
வேறென்ன சொல்லமுடியும் ?
மனதளவில்
" நான் "
தொலைந்து போன
அட்ப மனிதர்களின்
பெருங்கனவுகள்
எப்போதுமே
சாதிக்கப்படுவதில்லை !







*


முரண்டன் போலிருப்பேன்
ஆனால்
எனக்கு எதிரிகள் இல்லை,



வெற்றித் திசையில் 
பழக்கமான  தோல்விகளோடு
மெல்லவே

நடந்துபோகிறேன்
ஆதலினால்
போட்டியாளர்கள் இல்லை !



ஒவ்வொரு
ஈரமான கைகளையும்
வாஞ்சையோடு பற்றிக்கொள்வேன்
ஆகவேதான்
எஜமானர்கள் இல்லை.



என் பார்வைகளில்
நான்
யாரையும் அஞ்சவில்லை.



இரவு
இந்த அந்நிய நகரத்தில்
பயப்படாமல்
நடந்து செல்கிறது என்பதே
கிட்டத்தட்ட
அதிசயமாக இருக்கிறது.!







*


சாதித்து முடித்து
ஓர்
அடையாளத்தை
சிறகென
விட்டுச் செல்வதால்

அந்த
அனுபவத்துக்கு
உண்மையாகவிருந்த
பறவையைப்பற்றி
எழுதியேயாக வேண்டுமென்றிருந்தது !



என்னோடு
மாறுபட்டுக்கொண்டிருக்கும்
வார்த்தைகளில்
பறத்தலின் வீழ்ச்சி பற்றி
நம்பும்படியாக
வலியுறுத்தமுடியாது !



நினைவு வைத்து
உன்னிப்பாக கவனிக்கிற
என்
மனசாட்சியோடு
மிச்சமிருப்பதெல்லாம்
அசல்த்தன்மைக்கு
முயற்சிப்பது மட்டுமே !



அதுவே
நீண்ட பொழுதுகளை
மவுனிக்கப்போதுமானதாயிருந்தது !







*


இரவுகள்
நேர்த்தியான
நீண்ட பயணம் ,
தூக்கிப்போடும் அலைச்சலிலும்
விழிப்புடன் இருந்தவர்கள் ...

மிகச் சிலரே ,


அதிகாலை
ஒவ்வொருவரும்
அவரவருக்கேற்ற
இடத்தில் இறங்குகிறார்கள் ,


அடையாளப்படுத்திக்
கோபப்படுத்துவது
இதுதான்:
பிடித்திருக்கிறதோ
இல்லையோ
திசையின்றி
அலைந்துகொண்டிருப்பவர்கள்
எதிர்பாராத இடங்களில்
தரை தட்டலாம். !










*


திரும்பத்திரும்பச்
சந்திக்கும் அதேசில
நண்பர்கள்,



வாசனைகளோடு
ஒன்றிப்போன
சூப்பர் மார்க்கெட், ...


எப்போதாவது நினைவுவரை
ஒரு தேவையைக் குறைக்கிற
முடிவெட்டுமிடம்,


மிக மிக மலிவான
பொருந்தாத சராசரி
உணவகங்கள்,


மாதமொருமுறை
வலுவான பிணைப்புள்ள
ஆதார ஆஸ்பத்திரி,


வருடங்களில் 

மெல்லப் புரிந்தது
இந்த
அந்நிய மனிதர்களை !


பிறந்து வளர்ந்த ஊர்,
ஊரில் இருந்தவர்களெல்லாம்
என்னைப்பற்றி தெரிந்தவர்கள்.


இந்த
நினைவுவரும் போதெல்லாம்
ஒரு விதத்தில்
சற்று ஒதுங்கிக் கொள்வது நல்லது !







*


பேச்சுவாக்கில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
பரிமாணங்கள் கொண்ட
காரணங்கள் !


ஒருவகைத்  

தேர்வுணர்வில் ...
வகைப்படுத்திப் புரிந்து கொண்ட
தொடர்பில்லாத
சம்பவங்கள்!


நிலவு தனித்தலைந்த
ஒரு
பருத்த பவுர்ணமியிரவில்
எதற்காக

நிர்மமூலமாக்கினார்கள் ?

கேள்வியின் விடை
திரும்பிவராமல்ப்போனவர்களிடம்
ஒளிந்திருக்கிறதுபோல
நிச்சயம்ஏற்றுக் கொண்டாக வேண்டும்
இடித்து தள்ளப்பட்ட நாள்
இன்னமும்
நன்றாய் நினைவிருக்கிறது!







*


நீங்கள்
அதிகம் பிரஸ்தாபிக்குமிடத்தில்
என்
சுயத்தை பிரதிபலிப்பது
முக்கியமா ?...


ஒரு அங்கலாய்ப்புத் தான்.!
அது
அவசியம் என்பவர்களும்
அது
அலட்டல் என்பவர்களும்
விதிமுறைகளை மீறி
சம அளவில் இருக்கலாம் !


புனைவம்சங்களை
அறிந்து விலகிய
அனுபவத்துக்கு இடமளிக்கவேணும்
விரிசல்களில் நுழைத்துவிட
ஒருபொழுதும் முயன்றதில்லை !


ஆதலினால்
என்னைப் பற்றி
அதிகம் கற்பனை செய்யவேண்டாம் !







*


ஒரு பயத்தை
ஊன்றி நிறுத்திவிட்டதுபோல
இரவுத் தெருவெல்லாம்
வெறிச்சோடிவிடுகிறது ,


பத்துப்பத்தரைக்கே ...

கதவை இழுத்து மூடிவிடுகிற
நடைபாதைக்

கோப்பிக்கடைகள் ,

ஆள் நடமாட்டமில்லாத

சதுக்கங்களில்
நிழல்களே
காலடியில்த் தேங்கியிருக்கும்
இருட்டை
வெருட்டிக்கலைப்பது போலிருக்கு, 


குடித்துவிட்டு உளரும்

 குரல்களும்
சமீபத்தில் கேட்கவில்லை,


நம்பிக்கை தருவதுபோல் 
சில நேரம்
நகரமே பெருமூச்சு விடுவதுபோல
ஒருவிதமான
ஊதல்க் காற்றுக் கடந்து போகும் ,


அதுவொன்றுதான்
இயல்பாகவே
கிட்ட வந்து நின்று
விசாரித்துவிட்டுப் போகுது !







*


எவ்வளவுதான்
பொத்திப் பாதுகாத்த
கனவுகள்
ஆழப் புதைக்கப்பட்டிருந்தாலும்
யாரென்று அறியாமல் ...

ஒரு
கவிதைப் புத்தகத்தின்
உயிர்த்துடிப்பு ஒலிக்கிற
ஓரிரு பக்கங்களிலாவது
முழுமனதாய்
அவன் காலத்திலோ
அல்லது
அவள் காலத்திலோ
எழுதிக்கொண்டிருப்பதினுள்
மறைந்திருக்கும்
மரணபயத்தை மறுதலிக்கும்
ஏதோவொன்றுதான்
வாழ்தலைச் செலுத்துகிற
உந்துவிசை!







*


சொல்ல முடியாதவைகள்
எனக்குள்
உள்ளார்ந்து
ஊர்ந்துகொண்டிருக்கிறது
அதில் ...


முன்னேற்பாடாய்ப்
பதுக்கி வைத்திருந்த
சில முடிவுகள் ,


வெகு காலம்

மறக்கப்பட்டுவிட்ட
ஒரு நம்பிக்கை ,
மர்ம பரிபாஷைகளில் எழுதப்பட்ட
நிகழ் குறிப்புகள்,


இவைகளையெல்லாம்
சலனத்தை
உருவாக்குவது குறித்த
பெருங்கனவுகளைக்
கலைத்துப்போட்டுவிட்ட
நினைவில் தெரியவில்லையே !










Tuesday 11 September 2018

நாளைக்காகவும் காத்திருக்கிறேன் !


பலசமயம் மண்டையைப்பிச்சு  ஜோசிப்பது  தொடர்ந்து மீண்டும் புதிதாய்ப் படைத்துக் கொள்ளும் தேவை  குடகுமலையில் அகஸ்தியமுனியால் ஓலைச்சுவடிகளில்  எழுதப்பட்ட விதிகளின் வழியில் பயணித்துக்கொண்டிருக்கும்  தமிழ் மொழிக்கு இருக்குதா என்று ?  ஆதியான இலக்கண மொழியில் அவ்வளவு இலகுவாகக்  கோழி குப்பையைக் கிளறின மாதிரி புதிய படிமங்களைச் செருகிவைக்கிறோம் பேர்வழி என்று   மாற்றம் செய்ய முடியாது என்பது ஒரு பொதுவான கருத்து .


                                         ஆனாலும் ஒவ்வொருவரும்   காலஒட்டத்தில் கனவுகளோடு பயணிக்கும்   புனைவுக்  கவிதைகளிலும் , புதுவிதமான சிந்தனைப் போக்கில் மொழியைப் பரிசோதிக்கும் முனைவுகளிலும் அவர் அவர்கள் பாணியில் மொழியின் சாத்தியங்களை  தீண்டுவது நிற்கவில்லை,  ஆனால் பலசமயம்  அத்தனை  பரிசோதனையிலும் மரபின் மீறலும், குழப்பமான கருத்துக்களும் சேர்ந்த ஒருவிதமான ஒவ்வாமை   நெடி சிறிதளவு வீசுவதையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது ,


                                   “உள்ளபடியே உள்ளது இவ்வுலகம்,” என்ற மாபெரும் துவக்கத்துக்குப் பின் உள்ள    அனுபவம் போல மொழியில் கைவைத்து விளையாடுவது அவ்வளவு நல்லதில்லை போலிருக்கு. ஆனாலும் நான் எப்பவுமே ஏதாவது கோமாளித்தனமாக செய்துகொண்டுதான் இருக்கிறேன். அது எவ்வளவுதூரம் சரி என்று நீங்கதான் சொல்லவேண்டும் !


                                                          உருப்படாத மாடு ஒன்றை முழுசாத்  தின்றுமுடிக்காமல் ஒன்பதுகட்டுப் புல்லை இழுத்துப்போட்டுத்   தின்னுமாம்  என்பார்களே அதுபோல பலவிதத்திலும்   இந்த எழுத்துருக்கள் பலவிதமான மனோவிசித்திர  சம்பவங்களோடு சேர்மதியானவை .  இந்தவருடம் மிகஅண்மையில்  முகநூலில் எழுதியவைகள். இயன்றளவு எழுத்துப்பிழைகளை திருத்தி  தொகுத்துப் போடுகிறேன் !




*


அந்தச் சம்பவத்தை
முழுவதுமாக மறந்தேவிட்டேன் .
வேண்டுதல்களை
நிராகரித்து
விட்டுப் புறப்பட்ட

குழப்பமான முடிவுகளும் ,
விடையில்லாத கேள்விகளும்
நிழலும் கூடத் தெளிவாக இல்லை .


மீண்டும்
நிலைகொண்டுவந்து விட்ட
இன்று காலை
அவளைப்பற்றியதான
பேச்சுவரும்வரை
நினைவிலதுவும் சுத்தமாக இல்லை.


சில சமயம்
தூரத்திலிருந்து
திரும்பிப்பார்ப்பது போலிருக்கும்
தருணங்களில்
தவறுவிட்டேன் என்று தெரியுமே தவிர
என்ன என்று தெரியவில்லை !







*


வரிசையில்
கடைசியாக நிற்பதினால்
ஏதாவது எதிர்பாராமல் நிகழுமா,
முதலில்

அதைத்தான் நினைத்தேன்.

எனக்கு முன்னால் ...

பத்துப் பதினைந்து தலைகள் ,
அவர்கள் கிசுகிசுப்பது
என் மண்டைக்குள்

குலைத்துக்கொண்டிருந்தது.

அருவருப்பைத்
தந்ததுகொண்டிருந்தது
வெயிலுக்குச் சூடு ஏறியிருந்த
வெள்ளைத்தோல் வியர்வை


மொட்டை அடித்த மாதிரி
கடைசியில் நின்றுகொள்வதால்
கிடைக்காமலே போய்விடலாமென்ற
ஏக்கம் இருந்தாலும்
உரசல்களிலிருந்து
விலகியிருந்தது
சுதந்திரமாகவிருந்தது !







*


தண்டவாளத்தைத் தாண்டி
ஒற்றைப் பாதையில் நுழைந்து
அமைதியாகச்

சென்றுகொண்டிருந்தது
மழை ,


அதன் குரல் ...

சிலநேரம் தெளிவாக
சிலசமயம் சத்தமாக
சிலபொழுது ஆவேசமானபோதும்
என்னால் அதைச்

சரியாக கேட்கமுடியவில்லை.

என் பெயர் சொல்லி
அழைத்தும் சுயநினைவில் இல்லாததால்
உற்றுப்பார்த்து
யாரென்று கேட்கவே
பதட்டமாகவிருந்தது.


கொஞ்சம்போல நெருக்கமான
ஆதித்தாய்மண்வாசனை
கலந்து இருந்ததால்
சிலதுளிகளைக் கையேந்தி
முகத்தில் விசிறியடித்துவிட்டு
மீண்டும்
என்னை மறக்கத்துவங்கினேன்.!







*


மான் தோலில் மேலங்கி,
மஞ்சள் காலுறைகள் ,
பூனைப் படம் போட்ட
வெள்ளைத் தொப்பி
வில்போலக் கழுத்து...

தோள்களித் தாங்கு நாடாக்கள்
தலையில் அப்படியொரு
செழிப்பான கறுப்புமுடி
குளிரில் இலேசாக நடுங்கியபடி
அமர்ந்திருக்கிறாள் !
 அவள் யாரென்று
இன்னும் நான் சொல்லவில்லை,
ஆனால்
விலக்கப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட
கைவிடப்பட்ட
மனப்பிறழ்வின் உச்சத்தில்
நாங்கள் இருவரும்
ஓரிடத்தில் இருக்கிறோம் !







*


நிபந்தனைகளின்றி
வழங்கப்பட்டுவிட்டது
வாக்குறுதிகள் ,
இறுக்கம்
தளர்த்தப்படுகிறது


விவாதங்களில் ,
களைத்துப்போய்
முகமூடிகளைக்
கழற்றி விடுகிறார்கள்
பழையவர்கள்  ….


கேலிச்சித்திரங்களில்
புதியவர்கள்
அளவுக்கதிகமாகவே
வெற்றித் தீவிரமாயிருக்கிறார்கள் ,


உண்மைக்கும்
பொய்களுக்கும்
நடுவிலதான் தொங்குகிறது
பிடிமான நம்பிக்கை,


நாளை
குடியுரிமையை
வாக்குப்பதிவாக்கும்
இறுதி நாளென
பிரகடனம் செய்கிறார்கள் !





*


தினப்பொழுதுகளில்
என்ன நடக்கிறதென்று 
 கேட்பதில்லை.
சாதாரணமாக இருப்பது போல

மெல்லப் பார்க்கிறாள்,


நீடிப்பில் 
 பியானோ வாசிக்கிறாள்,
நதியோரம்
நடக்கப் போகிறாள்,


நல்லபடியாகவே தெரிகிறாள்.
ஆனால்
நானோ நம்பிக்கைகளோடு
ஐயப்படும் முரட்டு முட்டாள்,


குறிப்பாக
நேற்றுபகல் குலுங்கி இருமியபோது
இரத்தம் திரண்டு வந்தது,
இது
இப்படியே நீடிக்காதென்று
அச்சமாகவிருக்கிறது.


அவளுக்கு
லுகீமியா வந்த பிறகு
நான்
எந்த உபதேசங்களையும்
மேற்கோள்காட்டுவதில்லை,!



*


என்னிடம்
மிச்சமிருக்கும்
கடைசி வாக்கியத்திலும்
நம்பிக்கை கொடுப்பதாக
எதையாவது சேர்க்க விரும்புவதால்...

பின்விளைவுகளையோ
நிராகரிப்புகளையோ
நான்
கேள்வி கேட்பதில்லை ,


இடையில் எப்போதாவதுதான்
என்னவென்று தெரியாத
முற்றுப்புள்ளி
நிரந்தரமாக விட்டுப் போவதை
தீர்மானிக்கவேண்டும்போலிருக்கும் 


 அதனால்த்தான்
நாளைக்காகவும்   காத்திருக்கிறேன் !





*


பஸ்தரிப்பில்
உட்கார்ந்து கொண்டுடிக்கிறேன்,
நான் யாருக்காகவும்
காத்திருக்கவில்லை !


கசககசவென்று வியர்த்த

உள்ளங்கைகளைச் 

  சூடுபடுத்துகிறேன்,
கொஞ்சம்போலத்
தூறல் போட்டுவிட்டுப்போன

ஆவணி மழை
தாழ்வாரங்களில்
வடிசல்த் தண்ணியைச்
சொட்டிக்கொண்டிருக்கிறது ,


பெரும் கொண்டாட்டம் நேரப்போகிற
உணர்வும்,
உடனே அதைத் தொடர்ந்து
வழக்கமான நம்பிக்கையற்றுப் போன
உணர்வும் ,


இதுதான் அனேகமாக
வாழ்க்கையின் நிலைமை
இப்போதெல்லாம் !



*


காற்றில்
உந்திக்கொண்டிருக்கும்
ஊஞ்சலே
காலத்தச்சன் கைவண்ணம்,


திருவிழாக்கால

ஒப்பனைப் பூச்சுக்கள்
இளமையின் கற்பனைகள்,


நொடிகளின் நுனியில்
நமக்கென காத்திருக்கின்ற
மொட்டுக்கள் போல்
அவிழ்வதற்கு
அழகின்
ரகசியம் என்பதே
மறைந்திருப்பதுதானே !


மாயைகளோடு
மோதித்திரத்திக்கொண்டிருக்கும்
மனம்
மகிழ்ச்சியின் பொழுதுகளில்
பெரும்பாலும்
இவ்வாறே நின்று விடுகிறது !





*


காலம்
அடிவேரின் தொடக்கம்,
பார்வையின்
பரிமாணங்களுக்கேற்ப
விரிந்த கிளைகள், ...

இலைகளாய் படர்ந்த
தரிசனம் தத்துவம்,
பொழுதுகளில்
வயதாகச்
செறிந்து உதிர்ந்து
பரவச அனுபவத்தின் வழியாக
மற்றுமொரு
கேள்வி நோக்கி நகர்த்தியபடி
மெல்ல அசைகிறது
போதிமரம் !





*




வியாபிக்கவேண்டி
தருணத்தை
எதிர்பார்த்திருக்கிறது
அலை விளிம்பிலிருந்து
புறப்படுவது போலிருக்கும் ...

நடைப்பயணங்கள் !


ஆனாலும்
என்
கால்களிரண்டும்
கடத்தப்பட்டுவிட்டதுபோல
சில நேரங்களில்
நகரவே முடிவதில்லை !


விரல்களிடை
எனக்கு பரிச்சயமான
அந்தச் சில நேரங்களில்த்தான்
வெறும் பாதங்களை
குறுனிக்கல்லில்
தேய்க்கவேண்டும் போலிருக்கும் !





*


அங்கலாய்ப்புகளில்
எவ்வளவு முடியுமோ
அவ்வளவில்
முரண்பாட்டுக்கொண்டிருக்கு
பழுப்புநிற நிழலில்

வெளிச்சப் பொழுதுகளை
அசைத்தபடி நீட்டிவைக்கும்
பகலும் ,
சகலத்தையும்
முழுமையாக அறுத்து
இருட்டிடை ஸ்தம்பிக்க வைத்தபடி
ஒளிந்துகொள்ள
இடமொன்றைத் தேடும்
இரவும் !







Saturday 8 September 2018

மழைச்சாரல் போலவே !

ஒரு மொழியில் இலக்கணப்  பிழை இல்லாமல் எழுதவேண்டியது எல்லாவிதமான  கேள்விகளுக்கும்  அப்பால்  கீழ்ப்படிவுடன் பின்பற்றவேண்டிய சட்டதிட்டம்  . அதுவும் தாய்மொழியில் எழுதும் போது  நிச்சயமாக இலக்கணப் பிள்ளைகளோடு எழுதுவதென்பது உண்மையில் ஒரு கனதியான மன்னிக்கமுடியாத குற்றம், அப்படியிருக்க எதுக்காக பிழைகள் வருகுது என்று ஜோசித்துப்பார்த்தால். இன்றைய காலகட்டம் ஒரு முக்கிய காரணமாக இருக்கு.
                  
                                                                     எனக்குள்ள முக்கிய பிரச்சினை  எவ்வளவுதான் தமிழில்  வாசித்தாலும்   தமிழ்மொழி விசித்திரமான   அர்த்தங்களோடு பின்வாங்கிக்கொண்டு இருக்கு . இந்த வாசிப்பு என்பது ஒருவிதமான பரந்தவெளி . சொற்களையும், வாக்கியங்களையும்  பொறுத்தவரையில்  இணையத்தில் எழுதும் தென் இந்திய  எழுத்தாளர்கள் ஒருவிதமான அன்றாடப் பாவனையில் உள்ள பேச்சுமொழியை இலக்கியத் தரம்போல கொஞ்சம் மேலே தூக்கி வைத்த   தமிழில் எழுதுகிறார்கள்.


                                                                               இலங்கைத் தமிழர்கள் இப்பவும் கட்டுப்பெட்டிப்  பண்டிதமணி  இலக்கணம் கொஞ்சம் தானும் பிசகாமல்  ஒருவித கிரந்தமாக  எழுதுகிறார்கள், புலம் பெயர் தமிழர்கள் எந்தவித பொறுப்பும் யாருக்கும் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல மேலைநாட்டு சுதந்திர வீச்சில்  ஒருவிதமாக எழுதுகிறார்கள், இண்டலெக்சுவல் லெவலில் எழுதுபவர்கள் சமஸ்கிருத சொற்களை தமிழ்ப்போலவே நிறையவே நனைத்து வழியவிடுகிறார்கள்.  


                                                      இவ்வளவும் போதாது என்று மேலைத்தேச பின்நவீனத்துவ, யூன் போல்  ஸாதரிச , மார்க்கோசின்  இருப்புநிலை,  லத்தீனமெரிக்க மாஜிகல்ரியலிச, கொமினிச ,லெனினிச, சோஷலிச ,   இஸங்களை சாம்பிராணி காட்டி  வழிபடும்  மேட்டிமைவாதிகள் இன்னொருவிதமான தமிழில் போட்டு உலுப்பி எடுப்பார்கள்  , வாசிக்க விழி ரெண்டும் பிதுங்கி வெளியவரக் காதுகுள்ளே கிளைமோர் மிதிவெடி முழங்கும் . 


                                                   இவை எல்லாவற்றின் ஒட்டுமொத்தப்பாதிப்பு நிச்சயம் கலந்துகட்டி வாசிக்கும்போது நம்மை அறியாமல்  உள்நுழைந்துவிடுகிறது . இவளத்தையும் தாண்டி கணனி விசைப்பலகையில் எழுதும்போது அது கொஞ்சம் கண் அசந்தாலே  ஒரு எழுத்தை  அதுக்கு விரும்பியபடி போட்டுவைச்சு இன்னொருபக்கம் இழுத்துகொண்டுபோய்விடுகிறது . ஒரு எழுத்து சிலநேரம் அந்த வாக்கியத்தின் ஆதாரமான அர்த்தத்தையே களேபரம் செய்துவிடும் அபாயம் நிறையவே இருக்கு.


                                                            இவளவு சல்ஜாப்பு சொன்னாலும் நான் பிழையாக எழுதுவதுக்கு ஒத்துக்கொள்ளும்படியான காரணம், எனக்கு தமிழ்மொழி அதிகம் பரீட்ச்சயம் இல்லை என்பதுதான்.நானறிய  தமிழ்மொழியை ஒருபொழுதும் ஆர்வமாக மனதுக்குள் உள்ளிறங்கி  நேசித்ததில்லை . அதைவிட தமிழ்மொழி ஒவ்வொருநாளும் என்னைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டே போகிறது.  இந்த எழுத்துருக்கள் இந்தவருடம் முகநூலில் எழுதியவைகள். இயன்றளவு எழுத்துப்பிழைகளை திருத்தி  தொகுத்துப் போடுகிறேன் !




*




அவள்
பெரும்பாலும்
நேருக்குநேரராகப் பார்ப்பதில்லை
என்பதாலிருக்கலாம்
அந்தமுகமே

பகலிலும் தெளிவற்றிருந்ததுக்கு !
சமயங்களித்தான்
தயங்கித்தயங்கியே கதைப்பாள் !
முன்னமெல்லாம்
நகங்களைத் தடவுவாள் !
அவளுக்கு மிகவிருப்பமான
மரஅணில்களைப்பற்றி
உரையாடத்தொடங்கும் போதே
பிடியிலிருந்து
வெடுக்கென்று விலகிக்கொள்வதுபோல
விரல்களைத் தொடுவதையே
பின்வாங்குகிறாள் !
ஏதோவொன்றிலிந்து
அவளுக்குள்ளாகவே மெல்ல ஒடுங்குவதை
உணர்ந்துகொண்டேயிருப்பதால்
எங்கோ பார்த்து
ஏதோ ஒரிரு வார்த்தை பேசுகிறாள் !
ஒருகாலத்தில்
கண்சாடையிலேயே
அபிநயங்கள் செய்துகாட்டியவள்
இப்போதெல்லாம்
நிமிர்ந்து பார்ப்பதையே விட்டுவிட்டாள்!





*


சேலையின்
விசிறியிலை மடிப்புகளை
உதறிவிட்டுக் கொண்டிருப்பது போல
மழை பெய்கிறது ,
காற்றோட்டமாக உணரமுடிந்தாலும் ...

புழுக்கம் உண்டாக்கும்
வியர்வை மணமெல்லாம்
உப்பின் வாசம் !
நனைந்த மேல்ச்சட்டையில்
ஈரம் உலர்ந்துகொண்டிருந்ததால்
சில்லென்றிருந்தது
குரல்வளை !
அழுத்தமான குரலில் உறுமுவதுபோல
சூடானைப்புகளை
வெளியேறிக்கொண்டிருக்கிறது
நினைவு மூச்சு !
இந்தமழை
வந்து போனதிலிருந்து
மனது தத்தளித்துக் கொண்டேயிருக்கிறது!



*


விடியல்களில்
வெளிச்சங்கள் எழுந்துவிடுகிறது,
திட்டங்கள் தீட்டப்படாத
விடியல்களில்
இதயத்துடிப்போடு ...

சலிப்புகளும் வந்துவிடுகின்றன ,
முழுக்கமுழுக்க
எனக்குரியவைகளில்
விருப்பமில்லாமல்
என்னுடனே
பயணித்துக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு அதிகாலைப்
பயணங்களும் !



*


அழகான ஏரி
கரைகளைக் கடந்ததும்
வானத்தின் நிறமாக மாறத்துவங்கும்
நிர்மலமான நீரோட்டம் ,
என்னைப்போலவே ...

தயக்கத்தில் நின்றவர்கள்
முகத்தைக் கோணிக்கொண்டு
பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருக்க
மீதிப்பேர்
ஆடைகளைக் களைந்து
நீச்சலில்க் குதித்தார்கள் ,
மிதமான குளிரில்
வெயில் விளையாட
என்னென்னவோ தோன்றியது,
கால்களை மட்டும்
நனைத்துக்கொண்டு
தலையைத் திருப்பிக்கொண்டேன் !





*


பகல் பொழுதுதான்
நிழல்களை
உணர முடியாத அடர் காடு.
எப்போதாவது
உள்நுழைந்து அலைந்து ...

தொலைந்துபோவேன் .
நேற்றோ
முரட்டுத்தனமான
ஆர்ப்பரிப்புடன்
வரவேற்பதுபோல வீசிய காற்றில்
மஞ்சள் இலைகளை
இதழிதழாகத் தூவும் மரங்கள்;
ஒருவிதமான பதட்டத்தில்
வண்ணத்துப் பூச்சிகள்.
தளிர்ப் புதர்களில்
வண்ணக் கோலங்கள்;
காற்றில்ப் பரவும் சாரல்;
தூரத்து
இடி மின்னல் முழக்கம்,
இந்த மாதங்களில்
இத்தனை கலவரமாக இருந்ததில்லை
சென்றவருடம் !



*


மரங்கள் நிரம்பிய
பரந்தவெளிப் பூங்காவனம் ,
அங்குமிங்கும் அலையும்
யாரையும் கண்டுகொள்ளவில்லை
பறவைகள் ! ...

சுற்றியிருந்த நண்பர்களோடு
பேசிக்கொண்டிருக்கும் நண்பர்கள் !
என்ன வருகிறது,
என்ன போகிறதென்று தெரியாமல்
ஒட்டியாடும் குழந்தைகள் ,
யாரையும் உறுத்தாமல்
நடுவில்
பாதிக்கும்மேலாகவே
நிர்வாணமாகவேயிருந்த
இளம்பெண்கள்
வெயில் காய்கிறார்கள் !



*



ஏதோவொரு
சாவகாசமான
கனவின் பின்னணி ,
அல்லது
ஆழத்தில் எதையோ தேடும் ...

வெளிறிய சந்தனமுகம் ,
அல்லது
ஏதோவொன்றின்
தொடுகையை விலக்கமுடியாமலிருக்கும்
தெளிவற்ற அவஸ்தை ,
அல்லது
நினைவின் தொலைவிலிருக்கும்
அந்திமல்லியைப் புன்னகை ,
இதுபோன்ற
ரகளையான சமயங்களித்தான்
தத்துப்பித்தென்று உளறாமலிருக்கத்
திண்டாடவேண்டியிருக்கு !



*


இறுக்கிப் பிடித்தபடி
மடிப்புமடிப்பாகக் கவிந்து
உள்ளும் புறமும்
இயல்பல்லாத நிலை
ஆகாசம் !...

விழுவதைப் பற்றுவதைப் போலவோ
திசைகளை
இழுத்துப் பிடிப்பதைப் போலவோ
மேகங்களை
ஊதித் தள்ளுகிறது
காற்று !
திரைமறைவில்
நீலநிறத்தைத் தொலைத்ததால்
கலங்கிவீங்கியிருக்கும்
நடுநிசி !
மிக இரகசியமாக
கூடவேயிருந்து அலைக்கழிக்கும்
இந்தச் சூதாட்டத்தின் நியதிகளை
வென்றுவிடுகிறது
சிறகுகளை ஒருசேரவிரிக்கும்
இரவுப் பறவை !



*


வழியில்ப் பார்த்த
மீதி எல்லாவற்றிலும்
மழைச்சாரல் போலவே
நினைவுத் திரைகள் ,
சுற்றித்திரிந்த தெருக்களும் ...

பதின்வயது நண்பர்களும் ,
எப்படியாவது
ஊருக்குப் போய்விடவேண்டும் !
வடதுருவ ஐரோப்பிய
நகரத்தின்
உரசல்களிலிருந்து விலகமுடியாதிருப்பது
அயர்ச்சியாக இருந்தபோதும்
இங்கிருந்தே
ஊருக்குச் செல்வத்துக்கு
இத்தனை வழிகள் இருப்பதையே
அப்போதுதான் கண்டேன்.!



*




எனக்கு முடியவில்லை
உண்மைதான்
ஒத்துக்கொள்கிறேன் ,
ஆனாலுமது
நிராகரிக்கப்படுவதால்

ஏற்படும் கூச்சம் வெளிப்பட்டதாக
எனக்குள்
ஒருநாளும் தோன்றியதில்லை,
சுறுசுறுப்போடும்
ஆச்சரியமாகவுமிருந்த
வேர்த்து கொட்டும் முகத்தில்
உட்பக்கமாக தேய்ந்த சப்பாத்தோடு
இளையவர்கள்
வேகமாக ஓடிக்கொண்டிருப்பதை
சமாளிக்க வேண்டிய
பார்வையோடு
நின்று
பார்த்துக் கொண்டிருக்கிறேன் !





*


ஒன்று
தூக்கமில்லாத
பின்னிரவுகளில்
நேரத்தைக் கடத்துவது
பெரும்பாடாகவே முடிவது !...

இரண்டாவது
நடக்க இருக்கும்
மற்ற வேலைகளும்
நடக்கப்போவதில்லை என்கிற அலுப்பு!
மூன்றாவது
அதன்பின் எப்போதுபோல
துருவ வெள்ளிகள் நகர்ந்துகொள்ள
விடிந்துவிடுகிறது !
இந்த மூன்று
செய்திகளும்
அபத்தமாகவிருந்தாலும்
சுவாரஸ்யமாகத்தானிருக்கு !




*


அது
அவநம்பிக்கைதான் என்கிற
மற்றொரு குரல்
பூனையின் மெல்லிய அழைப்புபோலக்
கேட்டுக்கொடியிருக்கிறது ,...

வெளியே
சொல்ல முடியாத வலிகளை
எப்படி உள் வாங்குகிறாள்
சின்னவள் ?
மாற்றிவிடமுடியாது
ஒவ்வொரு நாளும்
கடந்து செல்கிற
கேள்வி மனதில் இருந்தது!
அதைத் தவிர்க்கவே
வேறு என்னவெல்லாமோ
அவசர வேலைகள் இருப்பதுபோன்ற
பாவனையோடு
அவள்
கண்களைப் பார்ப்பதேயில்லை. !





*


காலத்தோடு
தூக்கிவைக்க முடியாத கால்கள்,
தேய்ந்து போன
பறவையின் கூவல் போலப்
பின்வாங்கும் குரல் ,...

தூண்டிலைப் போல
தோளில் மாட்டியிருக்கும் பையில்
என்ன இருக்கும் ?.
தன்
இரக்கமான பார்வையால்
சொல்ல முடியாதவைகளை எப்படி
வெளிப்படுத்த முடியும் ,?
தள்ளாட்டத்தினால்
கவனத்தை இழக்கும்
முதுமை
தெளிவாகத் தெரிவிக்கின்ற
கொடுமை !
பெரும் சிரமமாகவிருந்தது
அவரைக்
கொஞ்சநேரம் கவனிப்பதே !



'


அதன் முகத்தில்
தயக்கம், கோபம்
அல்லது
வெறுப்போ எதுவும் இல்லை.
அதனாலேயே என்னவோ ...

இருட்டுவதுக்குள்
எல்லா தெருக்களுக்கும்
சென்றுவிடவேண்டுமென்கிற
வேகத்தில்
தடுமாற்றத்தில் சறுக்கி,
தேவையானளவு மென்மையை சேர்த்து,
அடையாளக் குறி வைத்து
உறுதி செய்துகொண்ட
உப்பலாகக் கிடந்த
சில நடைபாதைகளை மட்டுமே
தேர்தெடுத்து
நனைக்கிறது
மழை !.