Saturday 1 October 2016

அலங்கார நகரம்

அலங்கார நகரம்- 001
******************************* 

பரபரப்பில்லாமல் உங்களுக்கு பிடித்தமானவரோடு கூடவே இருப்பது போன்றது ஒரு நகரத்தை நாலுவிதமாக ரசிப்பது . வேலையும் வீடும் காசும் பணமும் என்பதை எல்லாம் தாண்டி சந்தோசமான விசயங்கள் நிறைய இருக்கு ஒரு வாழ்கையில் என்று நாங்கள் வாழுமிடம் உத்தரவாதங்கள் தரலாம் . இந்த உலகில் சந்தோசம் எங்கோ பதுங்கி இருக்கு என்பதை உணரும்போது நீங்கள் முழு மனிதராய் உணர்வீர்கள். உங்களுக்கும் இதுதான் தேவையாக இருக்கிறது. எனக்கும்தான் !

                                              ஒஸ்லோ ஒரு சின்ன நகரம். பழமையும் புதுமையும் அருகருகே ஒன்றுக்கு ஒன்று இடைஞ்சல் இல்லாமல் கிளிபோலப் பொஞ்சாதி  இருந்தாலும் குரங்குபோல  வைப்பாட்டி வைத்திருக்கும்  நளின நகரம். என்னோட மொபைல்போனில் அந்த நகரத்தை வேலைக்கு கடந்து போகும்போதும் வரும்போதும் கிளிக் செய்த படங்களை ஒவ்வொன்றாக அலங்கார நகரம் என்ற தலைப்பில்போடுறேன். 


                                இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம் போலவே  எழுதுவதுக்கு  இன்னமும் படங்களும் இடங்களும்  இருக்கு. ஒருவித சலிப்பில்  பதினாறு சின்னப்  பதிவுகளோடு இதை நிறுத்திவிட்டேன் . எதையுமே  அதிகமாய் எழுதினால் வாசிக்கும் உங்களுக்கும்  துன்பமாக இருக்கும். இல்லையா ?

                                                 சிலநேரம் இங்கே  என் மொபைல் போன்  மஹாலக்ஷ்மி எடுத்த   படங்களில் பிரமாண்டமாகப் பிரமிக்க வைத்தாலும் ஒஸ்லோ நோர்வேநாட்டுப் பெண்களின் கொடியிடை இடுப்புப் போல ஒரு அடக்கமான, அவர்களின் கண்கள்போலவே மையிட்ட கண்களில் மான் விளையாடும் நீலமான சின்ன நகரம்...

                                                    


அலங்கார நகரம்- 002
******************************* 
பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்னமே, புழக்கத்தில் இருந்த ஒஸ்லோ என்ற பெயரை, 1624 இல் நோர்வே, சுவிடனை ஆண்ட டன்மார்க் நாட்டு சக்கரவர்த்தி கிறிஸ்டியான் IV தன்னோட பெயரையும் ,அவர் அம்மாவின் பெயரையும் இணைத்து கிரிஸ்தானியா என்று மாற்றி இருக்குறார்.


                                             1905 இல் நோர்வே அந்த சக்கரவர்தியின் டேனிஷ் ஆக்கிரமிப்பில் இருந்து சுதந்திரம் பெற்றாலும் 1925 இல் தான் மறுபடியும் , ஆக்கிரமிப்பின் அடாவடித்தனத்தில் இழந்து போன ஒஸ்லோ என்ற பெயர் உத்தியோக பூர்வமாக இந்த நகரத்திக்கு மறுபடியும் கிடைத்திருக்கு.. 

                                             இன்றும் ஒஸ்லோவில் கிரிஸ்தானியா என்ற பெயரில் பல பழைய ஹோட்டல் கட்டிடங்கள் இந்த நகரத்தில் வரலாற்றின் கறுத்தப் பக்கத்தின் சாட்சியாக இருக்கு..

                                                 


அலங்கார நகரம்- 003
******************************* 
நவீன நகரத்தின் நடுவில் பழமையான தேவாலயம் இந்தப் படத்தின் பின்னணியில் உள்ள " ஒஸ்லோ டோம் சிர்கா " என்ற யாழ்பாணத்தில பெரிய பிஷப் பங்க்குதந்தை இருப்பாரே " பெரியகோவில் " அதுபோலதான் இதுவும் நோர்வேயில் முக்கிய தலைமை கிறிஸ்தவ அமைப்பின் சேர்ச் ! 

                                      நோர்வே நுற்றாண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவ நாடு இன்றைக்கு வயதான தலைமுறையில் உள்ள சமயப்பற்றான முதியர்வர்களை தவிர ,இளைய தலைமுறைக்கு அவர்கள் வசிக்கும் இடத்திலேயே " சேர்ச்" எந்தப் பக்கம் இருக்கு எண்டு தெரியாது !

                                    ஆனாலும் கிறிஸ்மஸ் போன்ற விடுமுறைகளை வேறுவிதமாக குடும்பங்களுடன் சமயம் சார்ந்து இல்லமால், ஒரு இனிய கொண்டாட்டா நிகழ்வு போல கொண்டாடுகின்றார்கள் !


                                                 


அலங்கார நகரம்- 004
*******************************
" ஒஸ்லோ கிராண்ட் ஹோட்டல் ", நோர்வேயின் பழமையான பெருமிதங்களைத் தங்கவைத்து காலத்தையும் தாண்டி நிற்கும் ஹோட்டல். பெயர் போலவே உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் வந்தால் இங்கே தங்குவது இன்னும் பெருமை அவர்களுக்கு. அதனால் இங்கே சேவைகள் எல்லாமே " கிராண்ட் " தான்.

                                 ஒவொரு வருடமும் நோர்வே கொடுக்கும் சமாதான நோபல் பரிசு பெறுபவர்கள் இங்கேதான் " நோபெல் சூயுட் " என்றஅதியுயர் ஆடம்பரமாடியில் தங்கவைக்கப்படுவார்கள் ,சமாதான இரவு இங்கே தங்கியிருக்கும் அவர்கள் வெளியே கூடிநிற்கும் மக்களுக்கு " நோபெல் சூயுட் உப்பரிகையில் " இருந்து கையசைத்து நன்றி சொல்வது ஒரு சம்பிரதாயமாக நடக்கும் ஒவ்வொருஆண்டும்.

                                 வடஐரோப்பாவில் நோர்வேயின் முக்கிய அயல்எல்லை நாடுகளான டென்மார்க், சுவிடன் கொடிகள் இந்தக் கொட்டலின் கூரையில் சம அளவில் பறக்கவிட்டு இருப்பது பார்க்க இது ஸ்கன்டிநேவியாவின் அடையாளம் போல இருக்கும்.

                                      இங்கே உள்ள .நோபல் பரிசு பெற்றவர்களின் சுவாசத்தை உணர " நோபெல் சூயுட் " என்ற அதியுயர் ஆடம்பரமாடியில் தங்குவதுக்கு லட்சம் டொலர்களை ஒரு நாளில் விசுக்க முடிந்தவர்கள் "ஒன்லைனில் " பதிவு செய்யலாம்.

                                               
                                                    


அலங்கார நகரம்- 005
*******************************
ஒஸ்லோ நகரத்தை ஊடறுத்து மெதுவாக ஆடி ஆடி நடந்து கொண்டு இருக்கும் நதி என்ற நோர்க்ஸ் மொழிப் பெயரில் ஓடுவதை " ஆர்கிஸ்எல்வா " என்று சொல்லுறார்கள். இதை நதி என்றும் ஆறு என்றும் சொல்ல முடியாது. வெள்ளம் ஓடும் வாய்க்கால் போல இருக்கும், 

                              ஒஸ்லோவின் வடக்கு தொங்கலில் உள்ள " மரியடால்ஸ்வன் " என்ற நீர்த்தேக்கத்தில் இருந்து வழியும் உபரியான தண்ணிதான் உருண்டு பிரண்டு ஒஸ்லோ நகரத்தை வளைந்து நெளிந்து அரவணைத்துக் கொண்டு வெயிலோடும், மழையோடும், உறை பனியோடும் பாடிக்கொண்டு வந்து " ஒஸ்லோ பிஜோட் " கடலில் கரைந்தோடி முடிகிறது.

                                      சாம்பல் புறாக்கள் அடைக்கலம் பெற்று வாழும் நகரத்தின் முக்கிய பச்சைநிறப் புறநகரப் பேட்டையான " க்ருண்லாண்ட் " இல் வைத்து அதுபாட்டுக்கு விடுப்புப் பார்த்துக்கொண்டு போன " ஆர்கிஸ் எல்வாவை " வழிமறித்து , " க்குருண்ட் தோர்க் பார்க்கில் " உள்ள படித்துறையில் நின்று இந்தப் படம் எடுத்தேன். 


                                                          

அலங்கார நகரம் 006
******************************

                                                    அலைபாயும் அவசர நகரம் அமைதியான இடங்களையும் ஆங்காங்கே ஒளித்து வைத்திருக்கு. இந்த ரெஸ்டாரென்ட் இருக்கும் இடம் ஒஸ்லோ நகரத்தின் நடுவில் சீஸ், பெஸ்ட்டோ, பாஸ்டா,பிஸ்ஸா .இப்பவும் கல்அவனில சுட்டு,அதுக்கு நாக்கைத் தொங்கப்போடும் வைன் சகிதம் அடக்கமாக இருக்கும் சத்தமில்லாத ஒரு இத்தாலியன் மூலை. 

                                              இத்தாலி நாட்டு வைன், அந்த நாட்டின் பிரதேசங்களின் பெயரில் உள்ள உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் இந்த இடத்தில கோடை காலத்தில் இத்தாலியில் இருந்து வந்த பல நிறுவனங்கள் சந்தைபோல தற்காலிகமாக அமைத்து பல பொருட்கள் விற்பார்கள்.

                                 இந்த ரெஸ்ரோறேண்டில் ஆறுமாதம் வேலை செய்தால் இத்தாலியன் குக்கிங் டிப்பிலோமா கொடுப்பார்கள். இங்கே பரிமாறும் வேலை செய்யும் அழகான இளம் பெண்களைப் பார்த்துக்கொண்டு ஒரு வருஷம் வேலை செய்து போட்டு டிப்பிலோமா எடுக்காமல் போனாலும் பரவாயில்லை போல இருக்கும்.




அலங்கார நகரம் 007
******************************
மெடிடேர்னியன் மத்திய தரைக்கடல் நாடுகளில் உள்ள ஓட்டோமான் எம்பயர் கட்டடக்கலை அமைப்பில் ஸ்கண்டிநேவிய பளிங்குத் தாஜ்மஹால் போலவே இருக்கும் இந்தக் கட்டிடம் ஒஸ்லோவில்தான் இருக்கு. ஆனால் ஒஸ்லோவில் வாழும் பலருக்கு தெரியாது. காரணம் இது ஜெர்மன் நாஸிகள் நோர்வேயை ஆக்கிரமித்த கால இரண்டாம் உலக யுத்தகால இராணுவ தலைமை அலுவலகம்,

                                    இதுக்குள்ள இராணுவ மிடுக்கோடு நோர்வே ஆர்மியில் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் போறதையும் வாறதையும் பார்த்தேன். என்னைப்போல வந்தேறுகுடிகள் சும்மா கண்டபாட்டுக்கு இங்கே முக்கிய இடங்களை இப்ப படம் எடுக்க முடியாது ,அதால ,என்னைக் கடந்து " லெப்ட் ரைட் லெப்ட் ரைட் " என்று " மாட்ச் பாஸ்ட் " இல் அழகா நடந்து போன ஒரு அழகான ஆர்மிப் பெண்ணிடம்

                                 " படம் எடுக்கவா,படம் எடுத்தால் பிரசினை ஒன்றும் இல்லையா "

                                   என்று அனுமதி கேட்டுக்கொள்கிறேன் பேர்வழி என்று கேட்டன் ,கேட்டுமுடியமுதலே நான் ஏதோ குண்டு வைக்க வந்தவன் போலப் பார்பாள் என்று நினைக்க, அவள் சிரிசுக் கொண்டு செல்பிக்கு போஸ் கொடுப்பது போல நெளிச்சாள் .

                                   நான் , " இந்தக் கட்டிடத்தைப் படம் எடுக்க முடியுமா என்று தான் கேட்டேன் " என்று அவள் போட்டு இருந்த உருமறைப்பு உடுப்புக்கு பயந்துகொண்டு கேட்டேன் ,

                                        " இப்பூ, ,,, நான் என்னமோ என்னைப் படம் எடுக்கப்போற்றாய் என்று எல்லோ நினைச்சேன் " என்று சொன்னாள்,,

                                           ஹ்ம்ம்... இதை எடுத்து என்னத்தைக் கிழிக்கப்போறாய் என்பது போல சிரிச்சுப் போட்டுப் போட்டாள்

                                             ஆனால் இப்பவும் இது இராணுவ தலைமை அலுவலகமா என்று தெரியவில்லை. ஜன்னல்களுக்கு உள்ளே எட்டிப் பார்க்க நல்ல ரொமாண்டிக் செய்யக்கூடிய இடம் போல இருந்தது. அதை விட இது இருப்பது ஒஸ்லோபியோட் கடல் விளிம்பில் உள்ள ஆர்கிஸ்ஹுஸ் பெஸ்டினிங் என்ற கோட்டைக்கு உள்ளே.

                                                      அண்மையில் நடந்தஒரு குழந்தைகளின் களியாட்ட விழாவுக்கு இராணுவம் ஒரே ஒருநாள் இந்த இடத்தை குழந்தைகளுக்காக திறந்துவிட்டார்கள். அந்த சந்தர்பத்தில் நானும் குழந்தைகளுடன் குழந்தையாக வாயுக்குள்ள விரலைவைச்சு சூப்பிக்கொண்டு இதுக்குள்ள உள்ளிட்டு என் மொபைல்போனில அமுக்கினேன்..




அலங்கார நகரம் 008
******************************
மேடை போட்டுக் கூட்டம் கூடிக் கோஷம் எழுப்பி ஆர்பரித்து ஆர்ப்பாட்டம் செய்ய,மேதினத்தில் தொழிலார்கள் தங்கள் உரிமைகளை வாய்கிழியக் கத்த,நோர்வேயில் வந்தேறிகளாக வாழும் அரசியல்அகதிகள் தங்கள் சொந்த நாட்டில்நடக்கும் வன்முறை மனித உரிமை மீறல்களை ஒன்றுகூடி முழக்கித்தள்ள, மரணதண்டனையை எதிர்த்து சர்வதேச மன்னிப்புச்சபை அடிக்கடி இரவுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து உயிர்காக்கும்படி கேட்கும், 


                                             புரட்சிகர இசை நிகழ்சிகள், திறந்த வெளி அரசியல் விழிப்புணர்வு மேடை நடகங்ககள், என்று எல்லாருக்கும் அனுமதிக்கப்பட்ட விடுதலையின் முகவரியாக இந்த ஒஸ்லோவில் உள்ள பழமையான கட்டிடங்கள் அணிவகுக்கும் சதுக்கத்துக்கு பெயர் " யுங்க்ஸ்தோர்யட் " . 

                                                  நோர்வேயின் முக்கியாமான அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்கங்கள் இந்த சதுக்கத்தின் மூன்று பக்கமும்உள்ளது. ஒரு பக்கம் நோர்வே தழுவிய உழைப்பாளர் உரிமைகளை ஒருங்கிணைக்கும் சம்மேளனம் என்ற LO இருக்கு. 

                                               

                                             
.

அலங்கார நகரம் ..009
********************************
ஒஸ்லோ நகரம் ஒருகாலத்தில் அதன் முக்கியமான பெருமிதங்களை ஒரு சின்ன இடத்துக்குள் வைத்திருந்து இருக்கு போல இருக்கும் அதன் தொன்மையான வரலாற்று இடங்களைப் பார்க்கும்போது. இந்த கட்டிடம் பல்கலைக்கழகம். 


                                               இப்போது ஒஸ்லோ யூனிவேர்சிட்டி நகர விளிம்பில் நவீனமான கட்டிடங்களுக்கு இடம்பெயர்ந்தாலும் இதுதான் ஆதியான அறிவுத் தாயின் இருப்பிடம். இப்பவும் ஒவ்வொரு வருடமும் பட்டமளிப்பு விழா இங்கேதான் நடக்குது. பழமைகளில் இனிமை காணும் நோர்வே மக்கள், இந்தக் கட்டிடத்தில் கையை வைச்சு எந்த மாறுதலும் செய்யாமல் வகுப்பறைகள்,விரிவுரை மண்டபங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே வைத்து இருக்கிறார்கள் உள்ளே. 

                                                    இப்ப சில நிர்வாக அலுவல்கள் இயங்கும் அலுவலம் மட்டும் ஒஸ்லோ யூனிவேர்சிட்டியின் தொடரான வரலாறையும் சம்பிரதாயத்தையும் கைவிடாமல்,பல நோபல்பரிசு பெற்ற விஞ்ஞானிகளை உருவாக்கிய பெருமையில் அதன் கம்பீராமான கல்வி அடையாளத்தைக் காப்பாற்றிக்கொண்டிருக்கு.

                                                   


அலங்கார நகரம் ..010
********************************
" ட்ராம் " என்ற " நகர்வீதிப்புகைவண்டி" ஸ்கண்டிநேவிய நாடுகளின் தலைநகரங்களில் ஒன்றான ஒஸ்லோவில் அது பொதுமக்களின் அன்றாட பயணங்களுக்கும், அவசரமாக ஏறி இறங்கவும், முக்கிய புறநகரங்களையும் இணைக்கும் போக்குவரத்து சாதனமாகவும் ஓடிக்கொண்டிருக்கு.

" ட்ராம் " உல்லாசப்பிரயாணிகள் ஒஸ்லோ நகரத்தை அதன் வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும் போதே விடுப்புப்பார்த்து சுற்றிப்பார்க்கவும் வசதியானது. ஒருகாலத்தில் மரத்தால் அதன் பெரும்பாலான பாகங்கள் வடிமைக்கப்பட்ட " ட்ராம் " வண்டிகள் இப்போது மொடேர்ன் ஆகி ஆடம்பரமாகிவிட்டது.

ஐம்பது வருடம் ஓடிக்களைத்த பழைய வண்டிகளை ஒஸ்லோவின் மஜெச்டுவா என்ற இடத்தில ஒரு மூயூசியம் இல வைத்து அழக்காகப் பராமரிகிறார்கள். ஒழுங்கு செய்தால் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளை ஒரு நாள் அதில ஏற்றி நகரமெல்லாம் சுற்றிக் காட்டுவார்கள் எப்படி காலமும் கோலமும் வரலாற்றுக்கு சமாந்தரமாய் மாறியது என்று.

நகரத்தின் நடு வீதிகளில் போடப்பட்டுள்ள தண்டவாளங்களில் வழுக்கி நழுவும் " ட்ராம் " ஒரு காலத்தில் குதிரைகள் இழுத்தும், பின்னர் நிலக்கரி எஞ்சினிலும் ,அதன் பின்னர் டீசல் எரிபொருள் வலுவிலும் ஓடியது, இப்பெல்லாம் தலைக்கு மேலே தொங்கும் மின்சாரக் கம்பிகளைக் தடவிக்கொண்டு ஓடுவதால் சூழல் மாசடைவுக்கு அதன் பங்களிப்பு அறவேயில்லை.

இருந்தாலும் அதில் பயணிப்பது காலத்தில் பின்னோக்கி ஐம்பது வருடங்கள் போய் அமைதியான ஒரு காலத்தின் நதி ஓட்டத்தில் இசைந்து அதன் அலைகளில் தாலாட்டும் அசைவுகளில் மிதந்து அவசர வாழ்க்கையின் அர்த்தமற்ற சில மணித்தியாலங்களை மறக்கவைக்கும் அனுபவம் அதில எப்பவும் இருப்பதை பலமுறை உணர்ந்துள்ளேன் .

அயல்நாடான சுவிடனின் தலைநகர் ஸ்டாக்ஹோலமில் அது ஒரு காலத்தில் ஓடியது இப்ப ஓடுவதில்லை, ஆனால் அந்த நாட்டின் இரண்டாவது நகர் கோத்தன்பேர்கில் அது ஓடுவதைப் பார்த்தேன், டென்மார்க் தலைநகர் ஹோபன்கேகனில் அது இப்பவும் ஓடுது


அலங்கார நகரம்..011
******************************
எல்லா முக்கிய நகரங்களுக்கும் " லேன்ட் மார்க் " என்று ஒரு அடையாளப்படுத்தும் இடம்,அல்லது கட்டிடம் அல்லது ஏதோவொன்று இருக்கும். ஒஸ்லோவில் நகர நடுவில் இருக்கும் மத்திய ரெயில்வே நிலையத்துக்கு வெளியே உள்ள இந்தப் புலி தான் இந்த நகரத்தின் அடையாளம் போல இருக்கு.

நோர்வேயில் புலி இல்லை ஒரு கலைப்படைப்பாக புலி சிலை வடிவில் இருக்கு. இந்தப் புலி காட்டில் உள்ள புலி போல இல்லை.உயரமா இருக்கும். இவளவு உயரமா புலி இருக்காது . ஏன் இப்படி உயரமான புலியை வடிவமைத்தார்கள் என்று விளங்கவில்லை.

இந்த இடம் தான் பலரின் அடையாளம் சொல்லிச் சந்திக்கும் இடம். கோடையில் புலியைச் சுற்றி இந்த சதுக்கத்தில் பல நிகழ்வுகள் நடக்கும்,இசை நிகழ்சிகள்,கண்காட்சி என்று ஒரே அமர்களாமா இருக்கும் இந்த இடம் ,புலி அதை எல்லாம் கணக்கில் எடுக்காமல் அது பாட்டுக்கு யாருக்கு மேலே பதுங்கிப் பாயலாம் என்பது போல அதன் சிந்தனையில் எப்பவும் இருக்கும்.

ஒஸ்லோ வந்து போகும் உல்லாசப்பிரயாணிகள் அதிகம் படம் எடுத்தது இந்தப் புலியைதான் என்று சொல்லுறார்கள். பாயும் புலி பண்டாரவன்னியனின் வழிவந்த புலம்பெயர் வீரத்தமிழர்கள் அதிகம்பேர் வசிக்கும் நோர்வேயில் புலி அடையாளமாக இருப்பது ஒருவிதத்தில் தாய்த்திருநாட்டில் ஒரு புலிசிலை வைக்கமுடியாத இனத்திற்கு பெருமையாக இருக்குபோல..


அலங்கார நகரம் 012
******************************
உலகின் எல்லா நாடுகளிலும், முக்கிய நகரங்களில் " ஒபேரா ஹவுஸ் " இருக்கு. அதன் தமிழ் பெயர் எனக்கு தெரியாது. நான் நினைப்பது அதை " செவ்வியல் அரங்கு " என்று அழைக்கலாம் என்று. அதிகமாக இதில பல நூற்றாண்டுகள் முன் இசை அமைக்கப்பட்ட கிளாசிகல் சிம்பொனி, கிளாசிகல் நாடகம்,நடனம் தான் நடக்கும். நிறையப் பொறுமையும் கலைகளில் காதலும் வேண்டும் அதை ரசிப்பதுக்கு. துரதிஸ்டவசமாக அது ரெண்டுமே என்னிடம் இல்லாததால் உள்ளே போய் நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை..

பத்து வருடங்களுக்கு முன்னர் ,ஒஸ்லோ நகரம் " பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு.." எண்ட பழமொழி போல ,சும்மா அலை கரையை அடித்துக்கொண்டு கிடந்த தரவையான இடத்தில இந்த " ஒபேரா ஹவுஸ் " கட்டினார்கள். கொஞ்சம் எழுப்பமா வெளிய தெரியாவிட்டாலும் உள்ளுக்க நல்ல பிரமாண்டமா இருக்கும். நிறைய மில்லியன் குறோணர்களை விழுங்கியது இந்தக் கட்டிடம் இப்படி எழுந்து நிற்க.


அலங்கார நகரம் 013
******************************
வாழ்கையே ஓரு நாடகம் போலவும் , அந்த மேடையில் மனிதர்கள் எப்பவும் பரபரப்பாக இயங்குவது போலவும் மிகவும் அவசர மனிதர்கள் அதிகம் அன்றாட தேவைகளுக்கும், வேலைகளுக்கும் குறுக்க மறுக்க நின்று நிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் கடக்கும் இறுக்கமான காற்றில் வரலாற்று வாசம் வீசும் இந்த சுற்று வட்டாரத்தின் பெயர் " ஹென்றிக் இப்ப்சன் சதுக்கம் ".

இந்தப் படத்தில் உள்ள கம்பீரமான, அதன் நிறம் மாறினாலும் புகழ் மங்காத பழையகாலக் கட்டிடம் "நேஷனல் தியட்டர் " என்ற ஹென்றிக் இப்சன் நாடகங்கள் அரங்கேறிய இடம். இதற்கு அருகில் , தங்களில் இலக்கியப் பிதா ஹென்றிக் இப்சனுக்கு வெங்கலத்தில் சிலை வைத்து கவுரவிதுள்ளார்கள் நோர்வேயிய மக்கள்.

இப்சன் எழுதிய நாடகங்கள் இன்றைக்கும் இங்கே நடக்குது ! அவரின் இலக்கியதின் மீது மதிப்புள்ள பல வெளிநாட்டினரே வந்து பார்க்கின்ற முக்கிய காலங்கள் தாண்டிய கலைச் சின்னம் இது ! அலங்கார நகரத்தின் நடுவில் இப்பவும் கசங்காமல் இருக்கும் நசினல் தியட்டர் ஒஸ்லோ வாசிகளின் கலாச்சார அடையாளம்.

ஹென்றிக் இப்சன், நோவேயில் 18ம் நுற்றாண்டில் இந்த அலங்கார நகரத்தில் ஏழையாகப் பிறந்து, அநாதை போல வளர்ந்து , பின் நாட்களில் ஒரு முதல்தர மனிதராக வசித்த ஒரு நடக்க ஆசிரியர். அவரை ஆங்கில மேடைநாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !

இப்சன் எழுதிய உலகப்புகழ் பெற்ற நாடகம் "பொம்மை வீடு " .அது ஒரு சமூகப் பிறழ்வு நாடகம். ஹென்றிக் இப்சன் எழுதிய எல்லா நடகங்களும், அந்தக்கால , வறிய, ஆண் ஆதிக்க , நோர்வேயின் 18 ம் நுற்றாண்டு சமூக வாழ்கையில் பெண்கள் எதிர்கொண்ட அவலங்கள் என்கிறார்கள் !

நோர்வே மக்கள் எதையுமே சிம்பிளாக ஜோசிக்கும் மேலோட்டமான எண்ணம்களில் வாழ்கையின் பிரஞ்ஞையை மிதக்கவிடும் மக்கள். அவர்கள் இண்டலக்சுவல் அறிவு சார்ந்த விடயங்களில் அதிகம் ஆழமாகப் போகமாட்டார்கள். தனி மனிதர்களாக சிந்திப்பவர்கள் ஆனாலும் தங்களின் கலாச்சார அடையாளங்களை பேணிப் பாதுகாப்பதில் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறார்கள் என்பதே அலாதியான செய்தி.

நான் ஒரு நாடகமும் இதுக்குள்ள போய் இன்னும் பார்க்கவில்லை ! ஆர்வமும் இல்லை. இதுக்குள்ளே இப்பவும் நாடகம் பார்க்கப் போகும் மக்கள் உண்மையில் காலமில்லாக் காவியங்களின் காதலர்கள் . ஒரு வேளை எனக்கு இன்னும் அந்தளவு இலக்கிய முதிர்ச்சி வரவில்லையோ தெரியவில்லை. பொதுவாக எனக்கு 18ம் நுற்றாண்டு கிளாசிக்கல் வகை இலக்கிய விசியங்கள் கேட்க ,புத்தகங்கள் படிக்க , நாடகங்கள் பார்க்கப் பொறுமை இல்லை ,

இந்த அலாதியான ஒஸ்லோ நகரத்தில் அந்த வரலாற்று முக்கிய இடங்களுக்கு முன்னால நிண்டு வேடிக்கை பார்த்து, படம் எடுத்து அதைப் போட்டு, அறிவுக்கொழுந்து போல அவைகளின் வரலாற்றை எழுதுவதில் மட்டும் ஒரு " அதிரினளின் கிக் " கிடைக்குது. 


அலங்கார நகரம் 014
******************************
ஒரு சமுதாயம் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவ உண்மைகளை கலையினுடாகக் காட்சிப்படுத்தல் என்ற வடிவில் மிக எளிமையாக இந்த உலகிற்கு முன்னோடிகளாக முன் வைக்கும் நகரத்தில் ஒஸ்லோவும் ,அதன் கலாரசனை மக்களும் பிரகாசமான உறுதிமொழிகளோடு இருக்கிறார்கள் என்று அந்த நகரத்தின் தெருக்களில் நடந்து அலையும் எல்லாருமே அவதானிக்க முடியும்.

ஜனநாயக நோர்வேயை கட்டி ஆளும் ஜனங்களின் பாராளுமன்றம் தலைநகர் ஒஸ்லோவில் மிக நவீனமா இடத்தில இருக்கு. அதற்கு முன்னால் எப்பவுமே கலைப்படைப்புகள் உள்ள சிற்பங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி மாற்றி காட்சிக்கு வைப்பார்கள்.

சில நாட்களின் முன் இந்தப் படத்தில் உள்ள ஒரு மரவீட்டை அப்படியே அத்திவாரத்தோடு கிளப்பிக்கொண்டு வந்து பாராளுமன்றதின் முன் காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். இது சிலை இல்லை உண்மையான மனிதர்கள் வாழ்ந்த ஒரு உயிரோடு உறவாடிய வீடு. ஆனால் இந்த மர வீட்டுக்கு நிறைய வரலாற்றுப் பெறுமதி இருக்கு.

இந்த வீட்டை முதலில் பார்த்த போது யாரோ ஒரு பெரிய வில்லா போன்ற வசந்தமாளிகை வீட்டில் வாசித்த நோர்வே பணக்காரர் " கீப் " போல " செட் அப் " ஆக வைச்சிருந்த வாணி ஸ்ரீ போன்ற ஒரு சின்ன வீட்டுக்கு " கன்னத்தில் தேன் வழிய அதைக் கிண்ணத்தில் ஏந்துகிறேன்.. " என்று பாடி ரகசியமாக ரொமான்ஸ் விடக் கட்டிக்கொடுத்த " சின்னவீடாக " இருக்குமோ என்றுதான் என்னோட குறுக்காலபோன புத்தியில் ஜோசித்தேன்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் நோர்வே, மீன்பிடி ,விவசாய, கைத்தொழில் நாடு. அந்த நேர நோர்வே மக்கள் சொல்லும்படியாக
செல்வச்செழிப்பில் சந்தோசமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லமுடியாது, முக்கால்வாசி மக்கள் நாட்டுப்புறங்களில் வாழ்ந்து உள்ளார்கள். அவர்களின் மிகக்குறைந்த அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய ஒரு மலிவான வீடு தேவையாக இருந்து இருக்கு. இந்த வீடுதான் அது. இது ஒரு " ஸ்டாண்டட் மொடல் " போல நோர்வேயில் அதிகம் கட்டப்பட்டு வசிக்கப்பட்ட வீடு இது.

காட்சிக்கு வைத்துள்ள இந்த வீட்டின் உள்ளேயும் போய்ப் பார்க்கலாம். இப்படியான ஒரு வீட்டுக்கு உள்ளே போகும் சந்தர்பம் எப்போதுமே கிடைத்ததில்லை. அதால் உள்ளிட்டு ஆராய்ந்து பார்த்தேன். மிகவும் எளிமையான உள்ளக அமைப்பு. இரண்டு மாடித் தட்டு. மிகக் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சின்ன இடமும் தேவை இல்லாமல் வீணாகப்படவில்லை. உறைபனிக் காலத்தில் சூடேற்றும் வசதிகள் சென்ற நூற்றாண்டின் தொழில்நுட்பதில் அமர்க்களமாக இருந்தது.

" ஆர்கிடெக்சர் " என்ற கட்டடக்கலையில் ஒரு கட்டிடம் எப்பவுமே " பங்சனல் ப்ரோஸ்பெக்ட் " என்று மிகச் சிறந்த இயங்குநிலையின் முழுமையான சாத்தியங்களில் இருப்பது போல வடிவமைப்பதுதான் சவால் என்று சொல்லுகின்றார்கள். இந்த வீட்டை வடிவமைத்தவர் அந்த விசியத்தில் நிறையவே ஜோசித்து வடிவமைத்த மாதிரி இருக்கு அதன் வெளியைத் தேவையோடு இடம் நிரப்பும் கோணங்களைப் பார்க்கும்போது.

மிகவும் மலிவான, கைக்கு எட்டிய தூரத்தில் உள்ள , அபரிமிதமாக அள்ளி வீசிக்கொண்டு வளரும் மரங்கள்,,கருங்கல்லுகள் போன்ற சுற்றுச்சூழலில் இருந்து கிடைக்கக்கூடிய கட்டுமானப் பொருட்களில் இதைக் கட்டி இயற்கையின் முகவரியை வாசல் படியிலேயே சொந்தமாகிவிட்டுப் போய்விட்டார் இதை வடிவமைத்த ஆர்கிடெக்சர்.

இந்த வீட்டிற்கு உள்ளே நின்ற சில நிமிடங்களே போதுமானதாக இருந்தது ஒரு தேசத்தின் வரலாற்று வாசத்தை முழுமையாக மூச்சில் உள்வாங்கிக் கொள்ள. முன் ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் இருந்த எங்களின் சொந்த வீட்டில் இருந்த ஆட்டுக்கொட்டிலில் நிற்பது போலவே கனதியாக இருந்தது அந்தக் காற்றின் பெறுமதி .

தங்களின் வாழ்வின் தொடர்ச்சி எப்படி ,எங்கிருந்து,வந்தது என்று நகர மக்களுக்கு யதார்த்தத்தை சொல்லும் விதமாக இந்த வீட்டை காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். இந்த நாட்டின் முன்னோடிகள் பலர் இப்படியான ஒரு வீட்டில் இருந்தே வந்திருக்கலாம். அவர்களை வாழ வைத்து மனிதர்களாக்கி இந்த வீடு நாட்டுக்குக் கொடுத்து இருக்கலாம்.

ஏன், பின்னுக்கு உள்ள நாடாளும் இந்த பாராளுமன்றத்தில் நாட்டை நிர்வகிக்க சட்டம் இயற்றும் ஒரு அரசியல்வாதியும் கூட இந்த மாதிரியான ஒரு வீட்டில் இருந்து பிறந்து கையைக் காலை உதறித் தவழ்ந்து, ஒரு இலட்சியத்தோடு வளர்ந்து வந்திருக்காலம். யாருக்குத் தெரியும் !


அலங்கார நகரம் 015
******************************
ஆர்கிஸ் எல்வா ஒஸ்லோ நகரை அதன் வடக்கில் உள்ள நோர்ட்மார்க்கா வடக்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகும் நீர்விழ்ச்சிகளின் தண்ணியை மரியடால்ஸ்வன் என்ற நீர்த்தேகத்தில் சேமித்து அதன் உபரித் தண்ணி பரவிப் பாஞ்சு ஆரம்பித்து ,வளைந்து வளைந்து இடம் கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து,மெல்லக் கடந்து நகரத்தை நளினமாக ஊடறுக்கும் சின்ன ஆறு.

ஒரு காலத்தில் இந்த ஆற்றின் தண்ணியில் இருந்து இயந்திரங்களை இயக்கம் வலுவை எடுத்து கைத்தொழில் தொழிற்சாலைகள் அதன் இரண்டு பக்கமும் இருந்து இருக்கு. இப்பவும் இந்த ஆற்றின் கரையில் அமைக்கப்பட்ட நடைபாதையில் நடந்து போனால் கைவிடப்பட்ட அந்த தொழிற்சாலைகளைப் பார்க்கலாம்.

ஆர்கிஸ் எல்வா நெருக்கமான நவீன குருன்லான்ட் புறநகரத்தைக் கடக்குமிடத்தில் இந்தப் படத்தை எடுத்தேன்.இடங்களை வளைத்துப்போட்டு கட்டிடங்கள் எழும்பியுல்லாதால் நெருக்கமான ஒஸ்லோ நகரத்தை ஆர்கிஸ் எல்வா அண்மிக்கும் போது ஒடுங்கி சின்ன ஒரு வாய்க்கால் போலதான் இப்ப நகருது .

இந்த இரும்புப் பாலமும் மிகப்பழமையான பாலம். இப்படி ஒரேயொரு பாலம்தான் ஒஸ்லோவில் இருக்கு என்கிறார்கள். அதனால் இதை அதன் பழமையில் எந்த மாற்றமும் செய்யாமல் மிகவும் கவனிப்போடு பராமரிகிரார்கள்.

" ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் " என்று தமிழ் முன்னோர்கள் எழுதி வைத்த வரிகளை நிரூபித்துக்காட்டியபடி ,கோடையில் தெளிந்து ஓடியும், உறைபனியில் உறைந்தும், அதன் இரு மருங்கிலும் வளைந்து வழிவிடும் மரங்களோடு பேசிக்கொண்டு ஆர்கிஸ் எல்வா அதன் கரைகளில் சந்தித்த மனிதர்களின் அனுபவங்களை வயசாகச் சேர்த்துக்கொண்டு ஒடிக்கொண்டிருக்கு....


அலங்கார நகரம் 016
******************************
ஒஸ்லோ வீதிகளில் அப்பப்ப அதிசயங்களுக்கு குறைவில்லை. " திசைமாறி அலாஸ்காவுக்கு வந்த ஒட்டகம் ..." என்ற கவிஞ்சர் வ ஐ ச ஜெயபாலன் ஐயாவின் கவிதைதான் நினைவுக்கு வந்தது சட்டென்று பார்த்த போது. என்னைப் போன்ற வெய்யிலும் வெக்கையும் வருடம் முழுவதும் அபரிமிதமாகக் கிடைக்கும் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வந்த எல்லாருமே சில நாட்களாவது இந்த நகரின் தாங்கமுடியாத குளிரைத் திட்டி இருப்பார்கள். 

                                                           ஒஸ்லோ நகரின் முக்கிய தெருவில் இந்த ஒட்டகத்தைப் பார்த்தபோது அதுவும் எங்களைப் போலவே முகத்தைச் சுழித்து " எங்கே எனது முடிவில்லா மணல் வெளிகளும் பேரீச்சைமரங்களும் ..." என்பது போல விந்தையாகப் பார்த்தது. ஒரு உறைபனிக் குளிர்நாட்டில் அரேபியன் கனவு போலவே இந்த பாலைவனக் கப்பலை வைத்து அழகு பார்கிறார்கள் நோர்வே மக்கள்.