Tuesday 1 May 2018

அடைக்கலமாகிவிடும் போது !

அந்தி மழை அழுதாலும் விடாது எண்டுறது போல  அன்றன்றைக்கு இடக்கு முடக்கில்  நேரமும், மனவெளியில்  உட்சாகமும், காற்றில் மிதப்பது போல் கற்பனைகளும்  கிடைக்கும்போதெல்லாம், சரியாகக் கவிதை என்று வரையறுக்கமுடியாவிட்டாலும்  க... வி... தை போல என்னமோ எல்லாம்   எழுதிக்கொண்டு இருந்திருக்கிறேன். அவற்றையெல்லாம் பதிப்புருவில் கொண்டுவர  முகநூலில் இருந்து மின்னெறிஞ்சவெளியில் தொகுக்கும்போது தெரிகிறது இதுவே ஒரு  பெரிய  எடிட்டர் செய்யிற வேலை  என்று.

                                                                மடிக்கணனி விசைப்பலகையில் மொழிமாற்று  உள்ளீட்டு மென்பொருளில் மரண வெறியில  இருட்டில பாதை தடவுடற குடிகாரர்மாதிரி   அங்கே இங்கே என்று விரல்களில் சுழியோடி தட்டச்சு செய்யும் போது  பல சொற்களில் எழுத்துப்பிழைகள் எகிறிக்கொண்டு வந்துவிடுகிறது. 

                                                    அஃது தொல்காப்பிய உரையாசிரியர் கல்லாடனார் இப்ப இருந்திருந்தால் என் எழுத்துப் பிழைகளை உட்கிடக்கையில்ப் பொறுக்கமுடியாமல் பாறாங்கல்லை வயித்தில கட்டிக்கொண்டு பாழுங்கிணத்துக்க குதிச்சிருப்பார். அவ்வளவு . வார்த்தை அமைப்பில் முரணும் , பொருந்தாத வாக்கியங்களும் வந்து விழுந்துமிருக்கின்றன. . அதைத் திருத்தி அமைப்பது  இன்னொரு விதமான இம்சை. !

                                                          அன்றாடம் வாழ்க்கை வேறு பல அந்நியமொழிகளில் கடந்துகொண்டிருந்தாலும்  ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல் என்று  தாய்மொழியில் எழுதுவதே ஒரு சிலாகிப்புத்தான். படைப்பு என்று காத்திரமான வடிவத்துக்குள் சில விசயங்களை பதிவுசெய்யும் நோக்கத்தில் எழுதும் போது அதில் சொல்லதிகார விதிகளின்படி   எழுத்து மொழியிடை நின்று பொருள் உணர்த்தி சொற்பிழை பொருட்பிழை  இல்லாமல் எழுதவேண்டும் என்று தமிழ்க்கூறும்  எதிர்பாப்பது எப்பவுமே ஒத்துக்கொள்ளும்படியான உண்மைதான் .

                                                     அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 



என் 
முகவரி பிரபலமில்லை 
இப்போதும்தான் 
கைவிடப்பட்ட 
பாதையொன்றில் 
காலத்தில் பாழடைந்த 
முகப்புக் கதவில்
நைந்துபோன எழுத்துக்களில்
அறையப்பட்டுத்
தொங்கிக்கொண்டிருக்கு !


யரோ 
தெரிவுசெய்த
வீட்டிலக்கம் !
அதனாலோ தெரியவில்லை
அதிகம்பேர்
களும் 
கடிதங்களும்   
தேடிவந்ததில்லை !

நேசத்துக்குரிய வாசனைகளோடு
தட்செயலாக கண்டுகொணடவர்கள்
தயங்கியபடியே
மரணத்தைப் பார்ப்பது போல
உள்ளே எட்டிப்பார்த்தார்கள் !


என்
தனிமைக்கு இந்த ஒதுங்கிப்போதல்
மிக இயல்பாகப் ஒத்திசைந்ததால்
இன்றைவரையில்
அப்படியே விட்டுவைத்திருக்கிறேன் !


சில நேரம்
அதீதமான இருட்டின் பின்னே
பிரகாசமான
தொலைதூர நடச்சத்திர வெளிச்சத்தை
அடையாளம் கண்டு
உங்களில் ஒருவர் கதவுதட்டி
என்
விலாசம் சரியாவென வினவலாம் ,


மன்னித்துக்கொள்ளுங்கள்
என்
நிசப்த இடுகாட்டு
அமைதியைக்குலைக்கும் யாருக்கும்
நான்
உள்ளிருந்து பதிலளிக்கப்போவதில்லை !


...........................................................................................


எழுதியேவிடுவதென்று 
ஆயத்தமாகிவிடும்போதோ 
அல்லது 
தள்ளிப்போடும் உத்தேசங்கள் 
சோம்பலாகியே வீழும் போதோ 
தவறாமல்
பலசொற்கள் கடத்தப்பட்டுவிடுகிறது.


கடந்துபோய்
ஒரு
கணப்பொழுதின்
எண்ணங்களை மறந்துவிட்டேன் என
உண்மையாகவே ஒத்துக்கொள்ள
எத்தனை பெரிதான
ஆற்றமுடியாத துயரத்தை
ஆத்மா சுமந்திருக்க வேண்டும்?


நினைவுகளைப் பிரட்ட விரும்பாத
அது குறித்த
ஏக்க மனதைவிட
கலவரமான விஷயம் வேறில்லை!


ஒவ்வொரு முறையும்
நான்
சேமித்து வைத்த வார்த்தைகள்
வேறெங்கோ சேர்ந்து
புகழ்பெற்று
புல்லரிப்பாவுகளாகவே பரவுகிறது.


சகித்துக்கொண்டு போனாலும்
நிரந்தர இழப்பென்னும்
மறக்க முடியாத
ரகசியக் கதவுகளின்பின்
உள்ளூர உடைவு நிகழத்தான்செய்கிறது


அதுவும்
ஒவ்வொரு முறையும்
உந்திச்செலுத்துவதாக
உறுதிமொழிகள் தந்த வார்த்தைகள்
பெரிதான வாஞ்சையுடன்
இன்னொருவரிடம்
அடைக்கலமாகிவிடும் போது !


..............................................................................

தொலைபேசி இணைப்புகள்தான்
இப்போதும்
உடன்பிறப்பு உறவுப்பாலத்தை இனைக்க
விருப்பமோடு காத்திருக்கு


நானாகவே நானிருக்கும் 
பழக்கத்தை வழக்கமாகி வைத்திருப்பதால்
அந்தப்பக்கத்தில்
நீங்கள்
உருவாக்கி வைத்திருக்கும்
அளவுக்கதிகமான ஆடம்பரங்களில்
எனக்கு
ஆச்சரிய அக்கறைகளில்லை !


செய்வினை சூனியம் போலவே
வேகமெடுத்துக் கடந்த காலம்
நினைவுகளை சுற்றிவைத்து
எதிர்காலத்தை
சூனியமாக்கிக்கொண்டிருப்பதிலிருந்து
தப்பமுடியவில்லையென்பது உண்மைதான்!


அவ்வளவு இலகுவாக
வரட்டுக்கவுரவதை 

உதறவிட்டுப் பேசுவத்துக்கு
உங்களையே ஆட்டுவிக்கும்
மனதில் உத்தரவுகள் இல்லை !


ஆனாலும்
உங்களுக்கேயுரித்தான
நேரமில்லை என்ற சமாளிப்பில்
நேர்மைகள் இல்லவேயில்லை !


ஒரேயொரு
அழைப்பில் சொல்லிமுடிக்காத
இழப்புக்களின் பெறுமதியோடு
என்
தொலைபேசி இலக்கங்கள் சரியாகவே
இயங்கிக்கொண்டிருக்க

இந்தப் பக்கம்
இப்பவும் எப்பவும் போலவே
நிறைய அன்புடன்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன் !


...................................................................................

ஒரு 
பயணத்தின் முடிவு
இன்னொரு வாசலின் தொடக்கம்
இடைப்பட்ட
யாத்திரையின்
கணங்களுக்குள் சிக்கியுள்ள 
நம்பிக்கைகளை விபரித்துச்
சொல்லவேமுடியவில்லை !


நீண்டகால சந்தேகம்
தறிகெட்ட தற்பெருமை
ஒரு
திடீர் திருப்பத்தில்
இன்னுமொரு நம்பமுடியாத இடத்துக்கு
நாளையையும்
நகர்த்திவிடலாம் !


ஆச்சரியம் கொடுக்கும் அனுபவம்
நுட்பமான தந்திரம்
மனதை வடித்துவிடும் முடிவுகள்
இவற்றோடுதான்
எப்போதும்
ஆழமான மனப்பதிவுகளாக
கனவுமுடிகிறது .


நிறங்கள் அடர்தியானவொரு
ஓவியத்தின்
இருட்டின் நிழல்த் தெரிவுகள்
அருகருகில் தடுமாற்றமாக
இப்போதைய தேவையெல்லாம்
ஒரு
மூலையிலாவது
பதுங்கியபடியிருக்கும்
வெளிச்சங்களைத் தேடியெடுக்கும்
முயட்சி மட்டுமே !


..........................................................................................


எனக்குக்
கொஞ்சமும் தெரியாமலேயே
எனக்குள்ளேதான் நுழைந்துவிடுகிறது
நீட்ட முடியாத கால்களின்
வலி ,


முடிவு வரும் வரையில்
சமாளித்துவிடலாமென்கிற
சிநேகிதமான சமாதானம்
கலங்கல் நீரில் விழும் .
வெளிச்சங்களில்லா நிழல்,


ஒவ்வொரு
ஏமாற்றங்களுக்கும்
எதிர்பார்ப்புகளுக்குமிடையிலான
விழித்தபடியிருக்கும் 

அலைக்களைப்புகளில்
மனசிலும் இறுக்கிக் குத்திவிடுகிற
பரிதவிப்பு


எந்த 

எதிர்ப்புமின்றி 
அப்படியே சாய்ந்துவிடுகிறது,
ஒரு
முழுமையான நாளை
முந்திக்கொள்ளும் இரவுகளும்
பிந்தி எழுந்துகொள்ளும் பகல்களும்


சுவாரசியமான இடத்திலிருந்தே
அசைக்கும் பயணங்களில்
தயவுசெய்து
என்னுடைய இடத்தில்
நீங்களாகவே
உட்கார நினைக்கவேண்டாம் !


இப்போதுதான்
வயதைவிட எதையாவது
சாதித்தேதீரவேண்டுமென்று தெரிகிறது.!

இளவேனில் பருவத்தில்
பூக்கக் காத்திருக்கும் 

டுயூலிப் மலர்களோடு .
என் கால்களிழும்
பலங்களை சேர்த்துக்கொள்வதென்னவோ
இரண்டு கைகளையும்
தீர்க்கமாக இறுகப்பற்றுவது போல


இப்படியாவது உணரமுடிவதே
இந்த நிமிடத்திலும்
பெரிய நம்பிக்கைதரு விஷயம்தான் !


....................................................................................

குளிருக்கு
மாங்கல்யத் தாலிகட்டி
பதிவிரதைப் பவ்யத்துடன்
வாழ்நாளெல்லாம் வாழ்க்கைப்பட்ட்து போல
வெய்யிலின் சூடான 
கோடை அரவணைப்புகளையும்


துளிர்கள் வயதுக்குவரும்
வசந்தகால வரவுக்கான 

முன்னறிவிப்புகளையும்

பறவைகளின்
பாடல்கள் அரங்கேறும்
கிழக்குவான உட்சாக உதிப்புகளையும்

மேகங்களே விரும்புகின்ற
பின்னந்தி மயக்க முழுக்குகளையும்

விதண்டாவாதமாக
தள்ளி வைத்து கொண்டிருக்கும்
நகரத்தில்
நானிருக்கிறேன்


ஒரு
பகல் பொழுதில்
அலைகழிந்தேவிடும் நேரம்
இருட்டில் தான்
அதிகமான இடங்களை ஆக்கிரமிக்குது


ஒரேயொரு
மெழுகுதிரி தியாகமாகிடும்
வெளிச்சச் சிதறல்களை
நெஞ்சோடு நெருக்கமாக்கி
ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்து
ஒரு
வாழ்வின் கதையை 

எழுதிவிட நினைக்கிறேன்.

.......................................................................................................

அந்த
தடுப்புகள் தேவையற்ற இளமையான
தாய்லாந்துக்காரி
இரவுகள் தந்துசெல்லும்
மன்மத வாடைகளோடு 
வயதான மனிதரை
இறுக்கி இறுக்கிக் கொஞ்சுகிறாள்,


அவரோ
சொத்துப்பத்தெல்லாம்
எங்கோ எழுதித் தொலைத்ததுபோல
ஆயாசமாகவிருக்கிறார் !


அந்த சவுகரியமான
சரிவு இருக்கை ரெயில்பெட்டியில்
எங்கள்
மூவரையும் அநாதையாக்கித்
தவிக்க விட்டுக் கொடுத்துக்கொண்டு
குமஞ்சான் வாசம்
விசிறிப் பரவிக்கொண்டிருந்தது!


தாய்லாந்துக்காரி
தொடுதிரையில் வந்துகொண்டிருக்கும்
குறுஞ்சசெய்திகளுக்கு
சொண்டு இளகிவிட சிரித்து
உடனுக்குடன் பதில் அனுப்புகிறாள்,


அது
இன்னுமொரு
வலையில் சிக்கிய
பணக்கார முதியவராக இருக்கலாம் !


மத்தியான ரெயில்
உயிர் உள்ளவரை தொடர்வது போல
மெதுவாக நகர்த்துக்கொண்டிருக்க
நான் அவளையே
பார்ப்பதை அவளும் பார்த்தாள்,


வயதானவர்
உறவுக்கென்ன 

அர்த்தமென்ன என்பதுபோல
ஜோசித்துக்கொண்டிருந்தார்,


அவள்
ரெண்டாம் முறை
முறைத்துப் பார்த்தபோது
உள்ளடக்கப் பண்புக்கூறு
மனசாட்சியை உரசியதால்
ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன் !


காடுவெட்டிகள்
வயதான மரங்களை
வெட்டிச் சரித்துக்கொண்டிருந்தார்கள்.....!


....................................................................................

வெறுமனையே 
காலாற நடக்காதே 
என்னோடு 
ஆத்மார்த்தமாய்ப் 
பத்தும்பலதையும் பேசிக்கொண்டிரு !


தூக்கிலிடப்பட்டவனின்
சங்கு சளிந்த கழுத்துப்போல
பாதைகள்
வளைந்துகொண்டே செல்கின்றன !


உன்னுடைய
மிகப்பெரிய கனவு பற்றிய
முயட்சியைச் சோதிக்க
நடுகற்களை
முடிவில்தான் வைத்திருக்கிறேன் !


வியர்வை முகத்தைச்
சுளித்துக்கொள்ளவிடாமல்
அசிங்கமாக வெறிபிடித்த
வெய்யிலோடு
அலைமுழுங்கும்
கடல் வரையிலும்
அலைந்துகொண்டிருக்கிறேன் !


மருகி மரியாதையோடு
குறுக்கு வழிகளில்
என்னை
பெருமைப்படுத்த
கருணையுள்ள காலம்
பார்த்துக்கொண்டிருக்கும்
உன் காலடிகளைச்
பொக்கிஷமாகச் சேர்த்துக்கொள் !


சந்துபொந்துகளில்
கிடைத்துக்கொண்டிருக்கும்
மலிவான வாசனைகளை
வாசித்துக்கொண்டே நிட்கிறேன் !


என்
கவுரங்களை விட்டுக்கொடுத்து
நீண்டும் குறுகியும் வளைந்தும்
இப்படித்தான்
அனுபவங்கள் தருகிறது
பயணம் !


.......................................................................................

பிரித்தறியமுடியாத 
வாசனையோடு
ரெயில் பயணத்தில்
என்னருகில் வந்திருந்தாள்

எங்கேயோவொரு வயதில் 
பரிச்சயமான வாசனைதான்
இப்போது 
வயதாகியதால் வாசனைகளும்
உணர்வுக்குள்
மாறிக்கொண்டிருக்கிறதால் மங்கிவிட்டதா ?


கொண்டை போட்டு
கலியாண வீட்டுக்கு வெளிக்கிட்ட
சுமங்கலி நாட்களின் வாசனையா ?
சரியாக சொல்லமுடியவில்லை !


ஓடிக்கொண்டிருக்கிற
நாலு பக்கமும்
கசிந்துகொண்டிருந்து அந்த வாசனை
ஏகாதசிக்குப் பிடுங்கிய
துளசி இலைகள் திறுநீரோடு
சேர்ந்து கொண்ட வாசமா ?
அதுவும் தெளிவில்லை !


தண்ணி போலவே
தளும்பிக் கொண்டிருந்தது 

அந்த வாசனை
வீட்டு முற்றத்தில் பூத்துக் குலுங்கிய
நந்தியா வெட்டையும் கனகாம்பரமும்
கதைத்துக்கொண்ட வாசனையா ?
அதிலும் விபரமில்லை !


விழுங்குவதுபோல
நகர்ந்து கொண்டிருக்கிற நேரம் .
இயல்பாய் செயல்பட ஆரம்பித்து .
மூச்சுமுட்ட சுவாசித்து
சேமித்துக் கொண்டிருந்தேன் !


தலை துவட்டிய ஈரத் துவாயின் வாசமா ?
இருக்கவே முடியாது

என் நானும் 
நானும் ஒரு வாசனையே !

தலையைக் குனிந்தபடி
கடினமான அசௌகரியமாகவிருந்தும்
உள்சுவாசத்தில் உல்லாசமாகிகொண்டிருந்தேன் !


அல்லது
தள்ளி விலத்தி நின்ற
அந்த நாட்களின் அவஸ்தை வாசனையா ?


ஹ்ம்ம்
இலகுத்தன்மையோடிருக்கிறதால்
எத்திசையிலும் நகரமுடிகிற தீர்மானம் !


வெட்கத்தை த் தள்ளிவிட்டு
அவளிடமே கேட்டிருக்கலாம்
அதட்குள் 

அவள்தான் எழுந்து போய்விட்டாளே !

............................................................................................................


ஒரு
வாழ்விழந்த பெண்ணின்
முதிர்ச்சியடைந்த பொறுமையில்

ஒரு
ஆதரவுகளை அள்ளித் தருகிற
பின்மாலைப் பொழுதில்

ஒரு
குழந்தையின் விளக்கமுடியாத
கண்களின் வியப்பில்

ஒரு
நினைவுகளை நனைத்து
மூசிப்பெய்யும் மழைநாளில்

ஒரு
முகஸ்துதி விரும்பாத மனிதனின்
அழுத்தமான உதட்டசைவுகளில்

ஒரு
தடுமாற்றமில்லாமல் நெருங்கும்
கிளர்ச்சியான இரவில்

ஒரு
புரியமுடியாத உலகத்தின்
ஒட்டுமொத்தமான பேரழகில்

ஒரு
முக்கியத்துவம் கொடுத்து
பேரம் பேசிய சம்பவத்தோடு

ஒரு
ஒப்பீடோடு 

முரண்பட்டுக்கொண்டிருக்கும்
கற்பனைகளிடம் 
நிஜங்களெல்லாம் 
அடைக்கலமாகி
இப்படியேதான் மறுபடியும்
ஒரு
கவிதையாகிவிடுகிறது !