Sunday 19 January 2020

அம்மாவின் குரல் !

விவரம் புரியாமல்
நேற்றுகளை நெருங்கியதும் ,
வியப்பாக
மனதைத் தகிக்கிற
நேற்றுமுன்தினங்களோடு விலகியதும் 

ஏதுமின்றி
விளையாட்டைப்போல
ஆண்டுகள் ஓடிவிட்டன.
இனி
நாளைக்கு என்பதுபோல
எல்லாமே கொஞ்ச நாட்கள்தான் !


*

எனக்குரிய நொடி
ஒரு கோப்பிக் கோப்பையுடன்
பதற்றமேதுமின்றிக்
கடந்துசென்றுகொண்டிருந்த
து 

இளம்சூட்டுடன்
இழுத்து மூடப்பட்ட
நிலவறை .


அசாதாரண அமைதியுடன்
நான்கு மெழுகுதிரிகள் ,

ஒளியூடுருவும்
கண்ணாடிக் குவளைகளில்
இரத்தநிற ரோஜாக்கள் ,


நடுவட்ட மஹோகனி மேசையில்
அலங்காரம் கலைந்த
பரஸ்பர பரிசில்கள்,


முதிர்ச்சியடைந்த திராட்ஸைரசத்துக்கு
அருகாமையில்
தலைவிரி கோலமயில்கள் ,


நடை தளர்ந்த
ஆடவர்கள் கையில்
புத்தம்புது உறைபனிக்கட்டிகள் ,


மகிழ்பொழுது
காதலா ? காமமா ?
ஏகமாக மூச்செறிப்புக்கள்


போதையேற்றும் அவதியில்
வேறெதையுமே உணரமுடியவில்லை
அவர்களால் !


இலக்கில்லாத
சம்பாஷணை இரைச்சலிலும்
மென் உதடுகளை
நெருங்கவைத்துக்கொண்டிருந்த
ஈர முத்தங்கள் !


எதுவுமே நிகழாதது போல்
எனக்குள்ளே
உட்கார்ந்திருந்ததே போதுமாகவிருந்தது !



*


சிலசமயம்
இலக்குகளின்றி
நினைப்புகளே
நினைப்புகளைச் சுற்றிவர
எதிர்பாராத தருணங்களில் 

திருப்பமுடியாதவாறு
ஏதோவொன்று
நிலைக்குத்திவிடுகிறது !


ஜன்னல்களில்
காற்றசைந்தபோது
உள்ளிருந்த துடிப்பு
பதற்றத்திடம் மனம்தள்ள
ஒரு அடையாளத்தை
தேடிக்கொள்வது சிரமம் 


அசாதாரண அமைதியுடன்
அதன் வலி
பலவகையிலும்
உங்களைப்போலவே
எனக்கும் நெருக்கமாகவிருந்தது.


அவ்வப்போது
கடிகாரத்தைப் பார்த்து
வெகுசிலரே
அதைத்தாண்டிய வெளியில்
பயணிக்கிறார்கள் !



*


எதுக்கு
இந்தப் போராட்டம் ?


விழிகளை
அயர்த்தும் போது 

நெகிழ்ந்துபோக வைக்கிறது
ஊறி நுரைத்துத் தளும்பும்
அன்புப்பிரியம் !



என்னவாகவிருக்கும்
வெளிப்படுத்திவிடும்போது
அது தரும்
அனுபவ தரிசனங்கள் ?


பாரங்களை
இறக்கி வைக்கமுடியாமல்
நமக்குளே
பாரமாகிக்கொண்டிருப்பது
போலிருக்குமா ?



*

வந்தவுடனேயே
எதுவும் சொல்லாமல்
எழுந்து சென்று விட்டது
வெய்யில் !


மெலிதாக வீசிக்கொண்டிக்கும்
உறைபனிக்காற்றில்
உள்ளங்கால்கள்
ஈரமாகிக்கொண்டிருக்கிறது !


சுற்றுச்சுழலும்
எல்லாவற்றுக்குள்ளும்
கண்களை நகர்த்தியபடியிருக்கிறேன் !


எனக்குமுன்னே
விறைத்துப்போன முகத்தோடு
ஒரு பெயர்தெரியாத மரம் !


அதில்
நிழலாகக் குளிர்காலம்
எஞ்சியிருக்கும் அடித்தண்டிலிருந்து
ஒரு தளிர்
முளை வளர்ந்திருந்தது !




*


இரண்டு விதமான
மந்தகாசச் சூழளில்
தன் நினைவுகளை
எழுதிக்கொண்டிருக்கிறது
பதற்றமில்லாத .

அலை !



நிறைய யோசித்தபின்
அவ்வப்போது
விளங்கிக்கொள்ளமுடியாமல்
காலடியில் முட்டிமோதுகிறது
கரை!


மணிக்கணக்காக
லாவகமாய் ஆர்ப்பரிக்கும்
மீன்கொத்திப் பறவைகளின்
தடுமாற்றத்தில்
பரிகாசங்கள் உடைந்துபோனவொரு
செய்தி !




*

அளவுகோல்களிலோ
அபரிமிதமான ஆற்றல்பற்றியோ
அதிகம் புகழும்படியாக..

எல்லைமீறாத ஆசைகள்



அன்றலர்ந்த பூக்கள்
மழை குளித்த மென்மையோடு
இன்னுமோராயிரம்
அனுபவ நனைவுகள்,


நெஞ்செரிக்கும்
காற்றின் நினைவுகளில்
மூச்சு இலட்சியத்தை
எழுதியேயாகவேண்டிய
வாழ்தலின் கதை,

,,,,,,,,,

ஒவ்வொரு
இருண்ட இரவுக்கும்
மூச்சைப் பிடித்து நிறுத்தும்
நடுநிசிகளில்
அந்தரங்க வாசனை !

என்னைக்கடந்து
நாகபாம்பின் கொட்டாவிபோல
நாசியைத் துளைக்கும்


இறைஞ்சல்களுக்கு மசியவிடாமல்
பக்கமாக மூக்கைத் திருப்பிவைத்து
சுவரைப் பார்த்தபடி
ஜன்னலோடு சாய்ந்திருப்பேன் !


கசங்கிப்போன
சம்பங்கிப் பூவாசனை போல
பனிக்காலமெல்லாம்
சுங்கதமெழுப்பியபோதும்
பொருட்படுத்தியதேயில்லை !


பொழுதுகள்
விழுங்கமுடியாமலிருந்த
இரவைச் சபித்துச் சொல்லி
குறைபடாத நாள் இருந்ததில்லை. !


ஒருநாள்
நடுவில் இருவருக்குமான எல்லையாக
வெளிச்சங்களைப்
படுக்கவைத்துப்பார்த்தேன் !


மோப்ப வாசனைகளே
இப்போது பழக்கத்துக்குள் வந்துவிட்டது !



*



அந்நியமாகி
பிடிநழுவி நகர்ந்துகொள்ளும்
உரைநடை !

இலகுவாக நுழையும் இடைவெளியில்
விரிந்த வானத்தை ,


நினைக்கும் இடத்தில்
நீளப் பெருக்கெடுக்கும் நதியை ,


மையமாக அலையும்
பிரபஞ்ச நட்சத்திரத்தை ,


அடைக்கலம் தேடும்
குழந்தைகளின் சிரிப்பை ,


தளதளவென்று சடைச்சு நிட்கும்
மல்லிகைப் பந்தலை ,



இன்மைக்கும் இருப்புக்கும் இடையே,
ஏதோ ஒரு வடிவில்

சிறகுகளைப் புறந்தள்ளும்
வண்ணாத்திப்பூச்சிகளை ,


ஜீவிதத்தை மீட்டெடுக்கும்
கன்னத்து முத்தங்களை ,


பிரியங்கள் ஊசலாடும் கணத்தில்
நினைவுகளின் பாரத்தை 


உள்ளங்கையில் ஏந்திவிடும்
கவிதைமொழி !


*
அம்மாவின்
கண்கள் பொளபொளவென்று
கொட்டிய நிமிடம்
ஞாபகமிருக்கிறது !

பாரவுணர்வை நெஞ்சுள் ஏற்படுத்தி
அசையும் நிழலுருவம் 


உடலெழிலை
விடாப்பிடியாக நிராகரித்த  
வயது 

ஒடுங்கியமுகம்
நரை கவிந்த தலைமுடி

கைநிறைய வளையல்கள்
ஏன் ?
வளையல்கள் ?


எனக்குள்ளே
கும்மிருட்டைத் திறந்து
வெறித்துப் போய்
அதிசயமாகப் பார்க்கிறேன் !


ஏன் என்ற கேள்வியில்
வளையல்கள் எதை குறிக்கிறது?


அம்மா
ஒரேயொரு வார்த்தையை
திருப்பித்திருப்பித்திருப்பித்திருப்பி
புதிப்பித்தபடி !


ஒளி அசையும் திரையில்
நிழலுருக்களை
வெளிச்சம் அடித்து மறைத்
து

கனவின் இறுதி வரை
அலைந்து திரிந்தவண்ணமிருந்தது
அம்மாவின் குரல் !


*

மறுபாதி உலகம்.

புல்லரிப்பது போன்று
இதுவரை நேர்ந்ததில்லைதான்
எனினும்
திசைக்காற்றின் செறிவில்
மெருகேறுகின்றது  
மழைமேகம் !

விரிந்து கவியும் வானம்

பரந்த வெளியின்மேல்

புதிதாகக் கற்றுக்கொள்வதுபோல 
ஆனந்தமாய் அசைந்து போகும்
பறவையின் குதூகலம் !


கவனத்தில் வையுங்கள்
ரம்மியவானவைகளைத் 
 தேர்ந்தெடுக்கும் முடிவே 
இயற்கையின்
அட்டகாசமான அறிமுகம் !


*

ஏறக்குறைய 
தலை நிமிராமல்
இழுத்துப் போர்த்திக் கொண்டு

விடியல் மழை 
வாசல் தெளித்துக் கோலம் போடும் !

அப்போதுதான்
பாதியில் நிறுத்திவிட்டு

அந்த அதிசயத்தை உணர்ந்தேன் !



முடியும் வரை நின்று
பாராட்டிவிட்டுப் போவதற்கு
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய
தூரதேச மாரிக்காலங்களும்
மாமழை போற்றுதும் நினைவுவரும் ,


வெள்ளங்கள் வடியும்வரை
பயமுறுத்திய இரவுலகங்கள்
என்றுமே எனக்குப் பிடித்தது !


நீர் அடித்து நீர் விலகாது

கிளர்ச்சியைத் தூண்டி 
நாளை அதைச் சொல்லுவதே அவமானம் ?


இப்போதெல்லாம்
எதையோ தேடிவிட்டு
திரும்பச் செல்லும் நினைவுகளில்
ஈரலிப்பு இல்லை !


இல்லை என்பதை விட
என்னைத் தவிர்க்கின்றனபோலிருக்கு !



*

விருப்பங்களை மறுப்பதிலும்
புதுவழிமுறைகள் போதிக்கின்றது
காலம் !


நினைவு போல் கனவும்
கனவு போல் நினைவுமாக...


வயதாவதில் உலர்ந்துகொண்டிருக்கும்
மேனி !


நினைவடுக்குகளில்
இளமை இரகசியங்கள்
பின்னகர்ந்தது போய்விடுகின்றன !


ஆனாலுமென்ன வந்தது
விருப்பப்படி இயங்க எத்தனை இருக்கிறது?


பரிணமிக்கும் விந்தைகளை
ஏன் விலக்க வேண்டும்?


வாழ்வதை விட 

எவ்வளவோமேல்
விடாமுயற்சித்துக்கொண்டிருப்பது !


*

அனைத்தையும் வெறுமையாக்கி
சுத்திகரிக்கப்பட்ட
ஆதிமனதை நிராகரித்
தேன்

எங்கிருந்து கேட்கிதென்றே தெரியாமல்
மனத்திரையை உற்றுநோக்கி

ஒரு அநாதியானகுரல் !


கடக்க முடியாத பெரும்பாதையில்
உறையவைக்கப்படும்
திசைக்குறிப்புக்கள் புரியவில்லை !


கசப்புககுள்ளேயும்
இனிமையான ஊடுறுவல்போல
வசந்தகாலமயக்கங்கள் !


இலைதளிர் காற்றின் அழைப்பு
புறங்கைகளை நீட்டிவைத்து
தீண்டச்சொல்லி வலியுறுத்துகின்றது 


காலப்பிரிகை நொடியில்
குப்பையாக நிரம்பிவிடுகிறது
மவுனம் !


*

அளவுகோல்களிலோ
அபரிமிதமான ஆற்றல்பற்றியோ
அதிகம் புகழும்படியாக
எல்லைமீறாத ஆசைகள்
...

*
அன்றலர்ந்த பூக்கள்
மழை குளித்த மென்மையோடு
இன்னுமோராயிரம்
அனுபவ நனைவுகள்,

*
நெஞ்செரிக்கும்
காற்றின் நினைவுகளில்
மூச்சு இலட்சியத்தை
எழுதியேயாகவேண்டிய
வாழ்தலின் கதை,

*
பழமை மொழியின்
சாத்தியங்களைச் சொல்லி
மரபுகளை சமன்படுத்தும்
வார்த்தைகளின் வெட்கம் !

*

பொன்மஞ்சள் மாலை
பூத்தூவி தமிழ் பாடி
ராக சுரங்களுக்குள்
நுணுக்கமெல்லாம் மீட்டிவிடும்
இறவாப் பாடல்கள்

*
வீராளியம்மன்
திருவீதி வலம் வந்து
ஆடம்பரங்களற்ற
சின்னஞ் சிறிய வாழ்வில்
சந்தனக் குடும்பம்,

*
முகம் பார்த்து
நிச்சயிப்புக்களை ஏற்றுகொள்ளும்
ஆத்மாவின் பாஷைக்குள்
நிறைந்துவிடும் நண்பர்கள்,

*
எழில்கொண்டு
பனிபொழியும்போதெல்லாம்
தலைக்குக் கூரையாக
வெய்யிலை விநியோகிக்கும்
திவ்வியமான நாடு

*
கலைந்தபடியிருக்கும்
ஆதிக் கனவுகளிலும்
முரண்பாடுகளோடு
இப்போதைகளையும்
யாசித்துக்கொண்டிருக்கிறேன் !


*

அவர்களைப்பற்றி
ஒன்றுமே தெரியாதிருக்கும் 


வெறுமையான புன்னகையோடு
விடைபெறுமுன்னமே
ரகசியங்களை அறிந்திருப்பேன்!


நேற்றைய காலத்தடத்தில்
ஊர்ந்துகொண்டிருக்கும்
எதிர்காலத்தின் குரல் !


வெளியே கிளம்பும்போது
வன்முறைக்கான சாத்தியங்கள் விரவியிருக்கும்
லேசாகவே கடந்துவிடுவேன் !


ஊக்குவிக்கவுமில்லை
நிரந்தரமாய் நிராகரிததுமில்லை 


நுனியில் தத்தளித்தபடியிருக்கும்
நிதிப்பற்றாக்குறை !


உணர்வுப்பூர்வமான கணங்களில்
அழுத்தமான பாதிப்புகள்
பின்ணணியை அணைத்தபடி !


இதயத்தில் துள்ளியிருக்கும்
மரண ஒத்திகை 


அதிகாலைகளில்த்தான்
அளவுக்கதிகமாக  
மனப்பாரமழுத்தும் !

அசாதரணமான சந்தர்ப்பங்களிலிருந்து
விடுவித்துக் கொள்ள
அவலமான நகைச்சுவை !


தொடர்பாடல்களில்
நீண்ட நட்புறுத்தலின் பிடியில்
கூச்சசுபாவத்தைப் பிடுங்கியெறிந்தபின்தான்
அசரீரி ஆச்சரியங்கள் !


எப்போதும்
இதுபோன்ற சில தெறிப்புக்களே
பித்து பிடித்ததைப் போல்
என் நாட்களைத் தீர்மானிக்கின்றன !


*

சேதமில்லாமல்
கீழிறங்கித் தரைக்கு வருகிறது
நெடுங்காலம் தன்னிலையை இழந்த
உஷ்ணம் !


ஏற்ற இறக்கமான நீரலைகளில்

சூரியப் பிரதிபலிப்புக்களை
கோலாகலப்படுத்துவதாகக் காட்டிக்கொள்ளும்
இளமஞ்சள் வெய்யில் !


வெளிச்சத்துக்கு ஏங்கி
இருட்டில் நசுங்கிய பகல்ப்பொழுது
முன்மாதிரிகளை வரைந்து
மெல்லென மாறிக்கொண்டிருக்கிறது


 வருடத்தின் பருவகாலம் 

ஒரு பிம்பத்தை உருவாக்கி
தீர்மானமாக அறுதியிட முடியாத நிலை


அதிகமாக நெருங்கவைப்பது
குழந்தையைப் போல
சிட்டுக்குருவிகளும்
தவிட்டுக் குருவிகளும் தருவிக்கும்
குதூகலமான மனநிலை !


*

நெகிழச்செய்கிறது
சிறையிலிருந்து வெளியேறத் திறக்கும்
பதின்பிராய இளமை !


மிக்க நேர்த்தியோடு
பெருமைப்படுத்தி வாசிக்கலாம் போலிருக்கு

எச்சரிக்கையான பார்வை !


தன்னிகழ்வுத் தீர்மானம் போன்று
வெளிச்சம் பாய்ச்சுகிறது முகம் !


கண்களால் ஜாடை செய்கிறாள்.
இன்னமும் அழகாக இருக்கிறது


யதார்த்தத்தின் சிரிப்பு. 

அரையிருட்டு வெளிச்சத்தில் 

சுற்றிலும் துஷ்பிரயோகம் 

பூடகமாகப் பொதிந்திருக்கும் 

ஒளிக்கீற்றே சுவாரசியமாயிருந்தது
காற்று அடித்துக் கொண்டிருப்பதைப் போல


விதிக்கப்பட்டவைகளை அசைத்துக்கொண்டிருப்பது
என்னவென்பதை
இங்கு சொல்ல விரும்பவில்லை.!


துணிச்சலை வரவழைத்து
பின்விளைவுப் பொருட்படுத்தாமல்
தனக்கு வேண்டியதைச்
வெளிப்படுத்தத் தெரியாதவரையில்
அவள் இன்னும் சிறுமிதான் !


*


புள்ளி உருமாற்றம்போல
எனக்குள்ளாகி
மெத்தென்ற தரையில் விழுந்தது
நிலவின் நிழல் !


பணியோடு திரைபோட்டு

குளிரோடு ஊடுருவியதால்
பவுர்ணமியின் வீழ்ப்படிவுகளில்
வெண்மை இடறியது !


புலனின் பாதைகளில்
உணர்வு நரம்புகள்
அனேகமாகக் காலியாக இருக்கும் 


இந்நேரம்
இரைதேடும் சத்தங்கள்
பிடரியின் புறப்பகுதிக்குள்
மல்லுக்கு நிற்பதுபோலத் தோற்றம்


முழுநிலவை
எனக்கெதிராகக்
கலவரமாக்கவிடப்போவதில்லை. !


இப்பெல்லாம்
அரண்டு போனவைகளை
உறங்க வைப்பதில் முடிந்துபோகிற
நிலாக்கால
ப் பொழுதுகள் !

*

முதல்க்கட்ட சந்திப்பு
எகிறி ஏற்படுத்திய
குழப்பத்தைத் தாண்ட
அதிக நேரம் ஆகவில்லை !


பரிமாற்றத்தின்

ஒரு முனையில் மட்டுமே நின்றாடிய
சிந்தனைப்போக்கில்
நம்பிக்கைகள் உடைந்தேபோய்விட்டது !


சமயங்களில்
உணர்வு உந்துசக்தி
அது முழுதும் உண்மையல்ல !


பிறகெல்லாம் 

ஜில்லென்ற காற்றைத் தொடர
கதைத்துக்கொண்டிருந்தது


ஒரு விதத்தில்
தூளி மழை போலவே
விடையின் முதல் பகுதி கிடைத்தது. 


அஃது
புரிதல் எவ்வளவு முக்கியமோ
அதை விட முக்கியம்
பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும்
மனம் !


*

திறமைக்கு மறுமொழியாக
மொழியைத்
தகுதிப்படுத்திக்கொள்வதில் ,


வைராக்கியமாக
சிறிய வார்த்தைகளை

வரிசைப்படுத்திக்கொள்வதில், 


நுனியில்
அதற்கடுத்த கட்டத்தை
சட்டென்று சேர்த்துக்கொள்வதில் , 


பிரண்டுகொள்ளும்
காலப்பிரமானத்துக்குள்
விவரங்களை தெரிவிப்பதில், 


முடிவுகளின் வளைவுகளில்
அபத்தங்களை
தெளிவுபடத் தெரிந்துவைத்திருப்பதில் ,


வாசகரிடம்
அதிகாரமாக நெருங்குவதில் , 


விமர்சகர்களின்
மறுப்பைக் கையாளுவதில் 


ஒரு
கவிதை எதிர்கொள்ளும்
கட்டமைப்பு
எப்படித் தோற்றமளிக்க வேண்டுமென்பதில்
ஆட்டவிதிகள்
குறைவாகவே 
மீறப்பட்டிருக்கிறது 

அல்லது
எதுவுமே பயிற்றுவிக்கப்படவில்லை !



*





இரவை எடுத்துக்கொள்ளுங்கள் !


ஒரு முகக்குறிப்பை
மூச்சிழுத்து எழுதிவிட நினைக்க
மீண்டு திரும்ப
வழி சொல்லாமலே
கலைந்து போய்விட்டன
சில நாட்கள் !

தொலை தூரம்
எல்லாம் சரியாக அமைந்திருக்க
எதிர்பார்த்திராத நேரத்தில்
ஏமாற்றம்


உள்ளுக்குள்
அனைத்தும் சரியும்
மிக ஆழத்தில்
நுரையீரல்கள் வீங்கிக்கொண்டன,
தனித்து விடப்பட்ட
திரை விளிம்பில்
வீழ்த்திக்கொள்வதுபோலிருந்தது
பரிசாகத் தந்த
ஊமைக்காயங்களின் நடனம் !
மருத்துவக் குறிப்பேட்டில்
நம்பிக்கை எஞ்சியிருந்தாலும்
முதுகைத் தேய்த்தபடி
எரிச்சல் கொள்ள செய்தது
மல்லாந்தவாக்கில் முடங்கியிருந்தது
எழுந்து மறைத்திருந்த போதும்
வருத்தப்பட ஒன்றுமில்லை...

புன்னகைத்து  முடிவெடுத்து
என்னை
எனக்குள்ளே உரசிப்பார்த்தேன் !
மனதிற்குள்
அவஸ்தையிருந்தும்
கனவுகளுக்கும்
கவிதைகளுக்கும் பிடித்த இடத்தில்
ஓய்விலிருந்ததால்
மறைந்திருந்த வலிக்குள்ளும்
ஒரு சுகமிருந்தது !

*

எல்லாவற்றையும்
விரும்பியது போலவே செய்துவிட்டு
எதையோ கடந்துவந்து
விசாரிக்கின்றது போனகாலம் !


அன்றொருநாள் வந்து சேர்ந்து
அப்படியே தொடர்ந்துகொண்டேயிருக்கிறதை
அப்படியே ஏற்றுக்கொள்வதுதான்
இன்றைவரையான புரிதல் !


முழுமையற்றவைகள்
மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தாலும்
சம்பந்தப்பட்ட
எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன் !


ஏதுமற்ற மையத்திலும்
அடையாளங்களுக்கும் வயதாகிவிட
இத்தனை வருடங்கள்
தூக்கியடித்து அலைக்கழித்திருக்கிறது
விதியின் வீச்சு !


ஒழுங்கின்றி நிரப்பப்பட்டு
விழுந்த இலைகள் மறைத்துவிட்டன
ஒற்றையடி நடைபாதையை
மறுமுனையில் எங்கோ மறைந்திருக்கலாம்
மீதிக் காலம் !


*

தூக்கிப் போட்டுவிட்டு
பூனை மாதிரி அமைதியாகவிருக்கிறது
துயரசம்பவங்கள் !

வரைந்து பெரிதுபடுத்துவதாக இருக்கும்
ஒவ்வொன்றும் 
தன்னிலையாக நிகழ்ந்திருக்கக்கூடும் 


இயல்நிகழ்ச்சியாகமுடியாது !


திரும்பிப்பார்க்கும் போதெல்லாம்
தடயங்களைத் தேடியழிப்பதிலும்
தன்னிரக்கமான தொனியில்
சிலகேள்வி தொடர்ந்தபடியேதானிருக்கு !


சமுத்திரம்போல நெருடல்கள்
அலைகளின் மீதேறிவரும் நினைவுகள் ! 


ஆற்றுப்படுத்த
சமாதானம் செய்துகொள்கிறது
அடையாளங்களைத் தாண்டிய
சகோதரஅன்பும் நேசக்கருணையும் !


வருத்தமிருந்தாலும்
இதையும் பதிவுசெய்யத்தான் வேண்டியிருக்கு 


ஞாபகஉஸ்ணம் தீண்டும்போதெல்லாம்
வரம்புமீறி தனித்துவிடப்பட்டுக்
கலவரமாக விவாதித்துக்கொண்டிருபவர்களின்
நரம்புகள் ஆர்ப்பரிக்கின்றன ! 


நெடும்பகல்களும்
நீள்விசும்பும் அமைதியிலிருந்தாலும்
ஆழப்படுத்திப் புரிந்துகொள்ள
ஊளைக்காற்று சாந்தமாக இல்லையே !



*



சர்வேசுவர சுவாமி தேவரீர்
வெடிகுண்டுகளின் மீதும் இரக்கமாயிரும்
அவைகளுக்கு
இரத்தத்தின் வாசனை தெரியும்
ரத்தத்துளிகளின் பெறுமதிகள் தெரியாது !

ஞானமேய்ப்பரான கர்த்தாவே
அவர்களையும் ஸ்தோஸ்திரமாக மன்னித்தருளும்
அவர்கள் திருப்பெயரால் வழிகாட்டப்படவில்லை
தீமைகளால் வழிநடத்தப்பட்டார்கள் !


ஆண்டவராகிய ஆதிக்கடவுளே
நடுத்தீர்ப்பு நாளிலாவது
சீவியத்தில் மரித்துப்போன குழந்தைகளுக்காக
உமது ஆசனத்தை முழுமையாக விட்டுக்கொடுத்துவிடும் ! 


பரலோகத்தில் எங்கும் நிறைந்தவரே
பாவிகளின் பூலோகத்திலும்
அசம்பாவிதங்களுக்காய் உருமறைப்பில் வருபவர்கள்மீது
இனிமேலாவது கொஞ்சம் விழிப்பாகவிரும் !


கர்த்தாவே
ஜெபம் செய்யும்போதும் கண்மூடியிருக்காமல்
சுற்றிவர நடமாடங்களைக் கண்காணிக்கும்படி
புதியஏற்பாடொன்றைப் பிறப்பித்துவிடும் ! 


ஆசிர்வதிக்கப்பட்டவரே
நைந்து போனவர்களிடம் இராச்சியத்தை கட்டியெழுப்பும்
வல்லமைகளை இப்போதில்லை
நீராகவே வந்து சிதைந்துபோன தேவாலயங்களைக்
கழுவித்துடைத்து கட்டித்தாரும் நல்ல பிதாவே !


உமக்கேயுரிய தேவபாசையில்
மதங்கடந்த மனிதநேசிப்பை
பதினோராவது கட்டளையாக்கிவிடும் மீட்பரே ! 


உயிர்த்தெழுந்த திருப்பலியில்
துரோகங்களின் திருப்பீடத்தில் சிதறிப்போன
அப்பாவி ஜீவாத்மாக்களுக்கு
வரப்பிரசாதங்களையும் மோட்ச்பாக்கியத்தையும் கொடும் ! 


மிக முக்கியமாக
முக்காலத்திலும் எல்லாமறிந்தவரே
கையாலாகாதவர்போல
நடந்ததுகொண்டுவகையில் நீரும் உடந்தை என்பதையும்
ஒப்புக்கொடுத்துவிடும் சுவாமி !


ஆமேன் !

*

ஒரு வைத்தியசாலையின்
சோதிக்கவைக்கும் காத்திருப்பு நேரம் !

தனித்திருந்தபடி
சின்னப்பெண்குழந்தை
வெற்றிடமான
மீன் படத்துக்கு நிறம் தீட்டுகிறாள் !


மீனின் வால்களுக்கு
செவ்வரத்த சிவப்புநிறம் பூசினாள்,

கார்களின் பின்புறத்தையவள்
பாதுகாப்புக்காகக் கவனித்திருக்கலாம் !


அதன் செட்டைகளுக்கு
செம்பகப்பூ நிறத்தை தேர்வுசெய்தாள்,
மலர்களின் இதழ்களோடு
நிறையவே நெருக்கம் இருந்திருக்கலாம் !


பூசுமஞ்சள் நிறம் குளித்த
முதுகுப் பிரதேசத்திற்கு
மேலதிகமாக நீலமேகம் தேய்க்க
பச்சை வெளியாகியது வயிற்றுப்பகுதி ,


பிரித்து வைப்பதிலும் பார்க்க
சேர்த்து விடுவதில் அதீத பிரியங்களிருக்கலாம்
ஆவாரம்பூப்போல
அலாதியாக்கி வைத்தாள் கண்களை !


அவளின் எண்ணம்போலவே
வண்ணமயமாக
மீன் இப்போது உயிர்த்துக்கொண்டது ! 


ஆனால்
எந்தவித உணர்ச்சியும் வெளிப்படுத்தவில்லை !


மீதியாகவிருந்தது
முத்தம் கொடுப்பதுபோல
முன்னோக்கிக் குவிந்த மீனின் சொண்டு!


என்ன செய்யப்போறாள்? என்று ஆர்வமாகினேன் 


கொஞ்சம்போல ஜோசித்தாள் 


அந்திக்கருக்கல் நிறத்தையவள் உரசியபோது
நாணப் பயிர்ப்பில்க் குறுகிய மீன்
சிரிக்கத்தொடங்கியது !


*

முடிவேயில்லாதுபோல
நம்பிக்கையில்
நாட்களை நகர்த்தமுயற்சிப்பதும் ,


நாளையென்பதை
திசைதவறிப்போன

இறுதிநாள்போல ஆசுவாசிப்பதும் ,


எனக்கே எனக்குரியவையான
வெறும் இச்சைகள் !


வாசல்ப்படியிலேயே விட்டுவிட்டு
இறங்கிநடக்கும்
தினசரி வாழ்க்கையைப்போல
சொன்னபடி அவைகளும் கேட்பதில்லை .


எனக்கவைகளின் மொழி தெரியும்
பரிமாணங்களும் தெரியும்
இருந்தும்
அவைகளின் நோக்கங்கள் புரியவில்லை.


அதனால்தான்
நீண்ட மவுனத்தோடு
அலைமோதிக்கொண்டிருக்கும்
விருப்பங்களை
வெளியே சொல்லப் பயமாக இருக்கிறது.


*


இனி
எழுதமுடியுமாவென்று
மனதிற்குள் சலித்துக்கொண்டிருந்தபோது
நெருங்கி நின்று
எந்திரத்தனமாகக்
கவனித்துக்கொண்டேயிருந்தது
சுயபுத்தி !

புறக் கவனமற்ற
பிளாஸ்ட்டிக் குழாய்களில்
வெண்திரவம்
இடது புறங்கையில்
குமிழிகுமிழியாக
ஏறிக்கொண்டுருந்தபோது
பிடிமானமாக
வலது கணுக்கட்டிலிருந்து
இறங்கிக்கொண்டிருந்தது
இரத்தம் !
நிர்மலமான முகத்தில்
எதைத் தேடுவதென்று யோசித்தபடி
போர்வையைப் போர்த்தி
தட்டிக்கொடுத்தாள்
தாதி !
ஓரளவுக்குமேல்
லயித்திருக்க முடியவில்லை
மிகத்தாமதமாக வேகமெடுத்து
எதற்காக
எழுதவேண்டுமென்ற
கேள்வி எழுந்து பதில் தேடியது.
நினைப்பதைப்போல
எனக்குள் பாரமாக
மீறி எடுக்கும் முடிவுகளென்று
எதுவுமேயிருக்கவில்லை ....
அனுபவத்தில்
கசிந்துகொண்டிருந்த ஈரத்தை
கடைசிச் சொட்டுவரை
இறுக்கிப்பிழிந்து உலரவிட்ட போது
இன்னுமின்னும்
எழுதமுடியுமென்று
நிமிர்ந்து நிரூபிக்கமுடிந்தது !


*

கேலிசெய்வதுபோல
நொடிகளின் நுனியில் நழுவிக் கொண்டிருக்கும்
விதியும் மூடநம்பிக்கையா ?


பக்கச்சார்ப்பாக
வியாக்கியானங்களிருந்தும்

இன்னும் உறுதியாகத் தெரியவில்லை !


மகோன்னதமான தளமொன்றுக்கு
அலாதியாகச் தூக்கிச்செல்லும் 


அல்லது
அடுத்த கட்டமொன்றில்
அக்கினிகளைப் பிரசவிக்கும் 


அல்லது
சாந்தமாகக் காற்றுவீசும்
வாக்கியங்களை அறிமுகப்படுத்தும் 


வெற்றிடமனநிலையொன்றில்
மூழ்கியபடியிருக்கும்போது
அதற்கான பொறி கிடைக்கலாமென்று
எப்போதோ
நினைத்துவைத்திருந்தேன் !


பயித்தியகாரத்தனத்தில்
சத்தியமாகத்
துவங்கும்போது நிச்சயமாய் அந்த எண்ணமில்லை. 


மையநிலையை அணுகமுடியாது
இப்போதைக்கெல்லாம்
திணறத் திணற
எல்லாவிதமான அனுமானங்களும்
பூஜ்யத்துக்குள்ளே வீழ்ந்துகொண்டிருக்கின்றன !


*

புத்துயிர்ப்பைப் பிரதிபலிப்பதுபோல
முன்னதாகவே
நிர்ணயிக்கப்பட்ட தொடக்கம் !


வேறொரு வகையான
மீள்சுழற்சியில் பரந்து விரியும்

வாழ்தலின் கதை !


வழமையானவைகளிலிருந்து
மாறுபடுவதற்கான
ஏற்றஇறக்கக் கோட்டில்
வயதாகிவிடுகிற திருமேனி ! 


காலம்காலமாக
அகழ்ந்தெடுக்கப்படுகிறது
நிலையாமைபற்றிய அனுபவங்கள் !


கைப்பற்றப்பட முடியாத
இறுதி பயணத்தில் திசைமாறிவிடுகிறது
உயிர்த்துடிப்பு !


நிழல் போன்ற நெருக்கத்தில்
மெய்ப்(!)பாதுகாவலன் போல
நம் கூடவே
நகர்ந்துகொண்டிருக்கிறது
மரணம் !


*

சம்பந்தமே இல்லாமல்
இப்படித்தான் வந்துசேர்கிறது
ஒற்றை வெளிப்பாடு !


வரிசைப்படி தொகுத்திருந்தால்
நேரடியாய் தெரியாத

காலத்தின் எச்சங்களிலிருந்தும், 


வாய்ப்பில்லாத
நினைவுகளிலிருந்தும், 


தோளொடு அணைத்துக்கொண்ட
கனவுகளின் தேக்கங்களிலிருந்தும் , 


எதைஎதையோ
எப்படிஎப்படியோ
எங்கெங்கோ
வெளிப்படுத்திவிடுகிறது
மனம் !


*


தூக்கத்துக்கும் விழிப்புக்கும்
போராடிக்கொண்டிருந்த பின்மனசில்
ஊடுபாவாக உள்நுழைந்த ஞாபகம்

அந்தப்பறவை !

அதன் கண்டப் புலம்பெயர்வையும்
கடல்தாண்டிய கூடு திரும்புதலையும்
ஒரு வெள்ளிக்கிழமை
அழைத்து நலம் விசாரிக்கக்காத்திருந்தேன் !

கவிதையொன்றுக்கு சகஜமாய் உரையாடி
வார்தைகளைக் கோர்க்கநினைத்திருந்த
ரெண்டுவாரமளவில் நானே சிதைந்துபோயிருந்தேன் !

நேற்று சனிக்கிழமை
நெடுஞ்சாலையின் நலிவுவாசலோரம்
பறவை பிய்ந்துபோய்க்கிடந்தது !

குற்றவுணர்ச்சிக்குள்
போட்டுவைத்த மரணக்குறிபோல
இழையறாமல் ஓடிக்கொண்டே இருந்தது
கடைசியான அதன் பார்வை !

அமைதியை ஒளித்துவைத்துவிட முயற்சிப்பது போல
மெதுவாய் என்னைக் கவிழ்த்த
இந்தக் கவிதை
வெளிமுகப்புக்கு இறங்கிப் பறந்து
அங்கே வட்டமிட்டுக்கொண்டிருந்தது !




*

பின்னாலிருந்து எட்டிப்பார்த்து
வானத்தை வளைப்பதுபோல
பந்தலின் கீழே
கைப்பிடிச் சுவர் !

அருகே ...
நீட்டிய காம்பில்
ஒற்றைப் பூ !


*

வயதிற்கு மீறிய சுறுசுறுப்பு
சுருட்டிப் பிடித்துக் கொண்டு
தோளுரச நடந்துகொண்டிருந்தார்கள் ,

இவ்வளவு பக்கத்திலும்
வயது வித்தியாசமாகவிருந்த

அம்மா யார்?
மகள் யார்?
மனம் தேடியலைந்து
வீதியைத் தாண்டிப்போய்க்கொண்டிருக்கிறது!


*

இளம்சிவப்பில் சூரியன்
மழைக்குளிரும் காற்றில்லை
சில்லென்று
கோடையிலும் ஈரம்
கழுத்திலும் நெற்றியிலும் !

முட்டிபோட்டு
தண்ணி மொண்டு
முகம் துடைத்து
கண் மழங்க விழித்தபடி
வெறும் தொண்டை விழுங்கி
மனசுக்குள் சலிச்சு
தினம் பழகிய கோலம்
விடிகாலை !


*

சன்னமான
இழைகளால் பின்னப்பட்டதுபோன்ற
நிலை பற்றிய தெரிவிப்புக்களில்
எப்போதுமே முரண்பாடு
முதலாவது

அருவருப்பால் முகம்கோணி
உண்மையைச் சொல்லமுடியாமல்
கையில்பொத்தி வைத்திருக்கிறதுபோல
ஒரு எண்ணம்


அல்லது எதிர்பார்ப்பு.
முடிந்தவரை அதில்
ஏதும் அறியாததுபோல
பாவனை செய்வதில் தோற்றுவிடுகிறேன் !


இரண்டாவது
உங்களைப் பற்றி எத்தனை தெரிந்திருக்குமோ
அதே அளவு
என்னைப்பற்றியதுமான
தகவல் வெளிப்பட்டுவிட்டது போல
ஒரு அவநம்பிக்கை 


அல்லது ஐயம் !
எனக்குத் தெரியும்
பணயம் வைக்கப்பட்டிருக்கின்ற
பரமரகசியங்களின் மதிப்பு அதிகமென்று! 


வாழ்க்கை என்னுமளவிலும்
கடினமான சூழல் ரெண்டிலுமே !


எப்படியோ
ரெண்டுமே நல்லதுக்கில்லை !


*


சோலை மரங்கள்
பருவக் குளிர்ச்சியையும் மீறி
உறக்கத்தில் மயங்கியபடியிருக்கும் ,


நிறங்களைச் சிதைக்க
கசகசவென்று உறுத்தியபடியே

விண்ணதிரும் கட்டிடங்கள்,


புதர்க்காடுகளில் வாசனை திருடும்
இராப்பூச்சிகளின் சப்தம்,


நிலவொளியை மூடிவைத்து
தூரிகையில்லாமல் வரையும்
மின்னொளி வீதிகள்,


கன்னங்களை
மீண்டும் மீண்டும் தடவி
புரையேறிய நினைவில்  
சொற்கள்

கண்களை மூடிக்கொண்டே
ந்த உருவமும் சரிவரப் பிடிபடாமல் 
ஏதோவொரு பிரமை ,


வேகமாய்க் கரைந்து நழுவுவதை
எழுதவேண்டுமெனில்
இரவை எடுத்துக்கொள்ளுங்கள் .