Monday 31 August 2015

சனியனைப் பிடிச்சு பனியனுக்க விட்ட ..

நோர்வே உலகத்தில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று. பல நாடுகளில் கிடைக்காத நல்ல வாழ்க்கைதரம் இங்கே இருக்கு. அதன் பெறுமதிகள் வெளியே தெரிவதை விடவும் உள்ளுக்கு அதிகம். அந்தப் பணக்காரத்தனத்துக்கு கொடுக்கும் விலை அதுவும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது மிக அதிகம். ஆனால் இவளவு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தில் வாழும் மக்கள் பல அற்பமான விசியங்கள் செய்வார்கள். 

                                      
அதில ஒன்று லோப்பமார்கெட் என்ற பழைய சாமான்கள் விற்கும் தற்காலிக சந்தைகளில் பெறுமதியான காசுக்கு அதைப்போல பலமடங்கு பெறுமதியான தரமுள்ள பொருட்களை அவர்கள் வேண்டிக்குவிப்பது, சென்ற தலைமுறையில் காலம் நின்று போன இறந்தகாலப் பழைய பொருட்களில் அவர்கள் தங்களின் நிகழ் காலத்தை அடையாளப்படுத்துகிறார்கள்.  

                                       
நேற்று நான் வசிக்கும் பேட்டையில் உள்ள நோர்பேறி சிர்க்கா என்ற தேவாலயத்தில் அப்படி ஒரு விற்பனை நடந்தது. இளைய தலைமுறைக்கு சரிக்கு சமன் வயதானவர்களும் வந்திருந்தார்கள்.சில வயதான தம்பதிகள் தங்களின் வயதான கார்களில் எப்படியோ கேள்விப்பட்டு வெகு தூரத்தில் உள்ள ஒஸ்லோ நகரத்தில் இருந்தே ஒரு ஈ காக்கை கூட வழி கண்டு பிடித்து வந்து சேரக்கடினமான பாதைகளில் பயணித்து இந்தப் பேட்டைக்கு வந்திருந்தார்கள்.

                                              அவர்களை காலத்தின் வழித்தடத்தில் அப்படி இயக்கம் ஒரே ஒரு ஆர்வம். தங்கள் காலத்தில் தவற விட்ட ஏதோ ஒன்று இன்றைய காலத்தில் கிடைக்கலாம் என்பதாக இருக்கலாம் போல இருந்தது. பழைய மரத் தளபாட மேசை கதிரைகள், பழைய புத்தகங்கள், பழைய அலங்காரப் பொருட்கள்,ஓவியங்கள், தட்டு முட்டு சமையல் உபகரணங்கள், என்று அவர்கள் வேண்டிக்கொண்டு போய் பாவிக்காமல் காட்சிக்கு வைத்து அழகுபடுத்துவார்கள். 
                                   
                                                  பல வருடமா அப்படி அந்த விற்பனை தேவாலயத்தில் நடக்கும். முடிந்தளவு நேரம் ஒதுக்கி கொஞ்சநேரமாவது பார்க்கப் போவது. அதில நான் எதுவுமே, எப்பவுமே சில்லறைக் காசுக்கும் வேண்டியதில்லை. ஆனால் நான் போறதின் முக்கிய காரணம் சில நண்பர்களை சந்திக்க முடியும் என்பதுக்கும், அதை விட முக்கியமா மனிதர்களை விடுப்புப் பார்க்க. பழைய பொருட்களை வேண்டவரும் பணக்கார மனிதர்களை விடுப்புப் பார்ப்பது ஒரு வித சைக்கொலோயி.

                                  
பழையசாமானகள் தானே ,கொஞ்சம் மலிவு விலை தானே என்று வேண்டுடுவதில் ஒருவித சந்தோசம் கிடைப்பதால் வேண்டிக் குவிப்பவர்களும் இருக்கிறார்கள் அவர்களை " சொப்பிங்ஹோலிக்ஸ் " என்று சொல்லுறார்கள். அந்தக் குளறுபடி ஒரு மனநலம் சம்பந்தப்பட்ட வியாதி. வாழ்கையில் சந்தோசத்தை வேறு பல விசியன்களில் தொலைத்தவர்கள் வேண்டுவதில் சந்தோசத்தை நிவர்திசெய்கிறார்கள். ஏன் வேண்டுறம் என்று தெரியாமலே வேண்டி வேண்டிக் குவிப்பார்கள். 

                                   ஒரு கட்டத்தில் வீடு நிறையும் , அதைக் அகற்ற விடமாட்டார்கள். ஒரு சின்னப் பொருளை அவர்கள் வீட்டில் இருந்து வெளியே போடுவதே ஏறக்குறைய அவர்களின் உடலில் உள்ள ஒரு அங்கத்தை பிடிங்கி எறிவது போல இருக்கும் அவர்களுக்கு. இது மிகவும் முன்னேறிய நோர்வேயில் சீவி முடிச்ச கொண்டையில் ஈரும் பேணும் போல ஒரு மறைமுகமான சமூகத் தலைஇடி.

                                லோப்பமார்கெட் என்ற இந்த சந்தைக்கு எப்படிப் பொருட்கள் வருக்குது என்று ஜோசித்துப் பார்த்தால்,அதுவும் யாரோ ஒருவர் வேண்டிக்குவித்து இறந்து போக அந்த வீட்டை துப்பரவு செய்யும் புதியவர்கள் இந்தப் பொருட்களை சேர்ச் போன்ற உதவும் நிறுவனங்களுக்கு அப்படியே அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.மிகவும்விலைமதிப்பற்ற கலைச் சேகரிப்புப் பொருட்களும் அதில இருக்கலாம்.

                                           சில நேரம் வயதான வீட்டு உரிமையாளர் இறக்க, அவர்களின் உறவினர் வீட்டை அப்படியே துப்பவரவு செய்து எல்லாத்தையும் அள்ளிக்கொண்டு போக சில நிறுவனத்திடம் ஒப்பந்தம் போலக் கொடுப்பார்கள் .அவர்களும் பெறுமதியான பொருட்களை எடுத்து விற்பார்கள்.ஒரு வட்டம் போல வேண்டுறதும் அது கை மாறுறதும் வருஷங்களைச் சேர்த்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்கு

                                           ஸ்கண்டிநேவிய கலாசாரம் அவர்கள் பழமையை தூசிதட்டி இனிமை காண்பது. அதைப் பெருமையாக நினைப்பார்கள். பலர் இப்படி லோப்பமார்கெட் என்ற சந்தைக்கு வந்து காலம் கடந்து போன பழைய பொருட்களை, " கொடுவா புடி புடிச்சாதான் அருவா புடி கிடைக்கும் " என்று பேரம் பேசிக்கொண்டு நிக்காமல் கேட்ட விலைகொடுத்து வேண்டி நினைவுச்சின்னங்கள் போல வீடுகளை அழகுபடுத்துவார்கள். அவர்களுக்கு விலை முக்கியமில்லை பழைய பொருட்களின் கலைத்துவ ரசனை தரும் கிளர்ச்சி முக்கியம்.

                                         நோர்வே, சுவிடன் ,டென்மார்க் நாட்டவர்களில் வீடுகள் எப்பவுமே உள்ளே வரவேற்ப்பு அறை முழுவதும் அப்படிப் பொருட்களால அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அவர்கள் வீட்டுக்கு போனால் முதலில் தங்களிடம் உள்ள மிகப் பழமையான பொருட்களை காட்டுவார்கள்.இதில முக்கியமா எல்லா டென்மார்க் நாட்டவர் வீடுகளுமே ஒரு முசியம் போன்ற அருங்காட்சியகம் போல கலைப் பொருட்கள் நிரம்பி இருக்கும்.

                                                 நோர்வேயில் அதி நவீன இலற்றோனிக், இலட்றிக் சாதனங்கள் மொடல் மாறி மாறி வர அதைக் கவர்சியான விளம்பரங்கள் போட்டு மயக்குவார்கள். அதில விழுந்தவர்கள் அதுகளை நவீன நகர அங்காடிகளில் இருந்து கணக்குவழக்கு பார்க்காமல் வேண்டுவார்கள்.சில நேரம் கடனுக்கே வேண்டுவார்கள். அவை கொஞ்சம் பழசாக மறுசுழற்சிக் கொண்டைனரில் தூக்கி எறிஞ்சு போட்டு புதுசு வேண்டுவார்கள்.

                                          சுவிடனிலையும் இப்படிதான். இந்த மறு சுழற்சிக் கொண்டைனர்களில் நன்றாக இயங்கக்கூடிய பல பொருட்கள் எப்பவுமே கிடைக்கும். அந்த நாட்டுக்குள் முதல் முதல் அரசியல் அகதியாக உள்ளிட்டு ஒரு தொலைதூர அத்துவான அகதி முகாமில் இருந்தபோது ஒருகாட்டுக்குள்ள இருந்த ரீசைகிளிங் குப்பைதொட்டிக் கொண்டைனரில் இருந்து பொருட்களை எடுத்துக்கொண்டு வந்து என்னைப்போலவே அகதியாக இருந்த ஞானசூணியங்கள் விற்று கைச்செலவுக்கு காசு சம்பாரித்து இருக்கிறேன்.

                                    பூமியில் உள்ள எல்லாருக்கும் பொதுவான இந்த உலகத்தின் இயற்கைக் கனியவளம் என்ற நச்சுரல் ரிசோர்சஸ்சை அதிகம் எப்படி முன்னேறிய நாடுகளில் வசிப்பவர்களே உபயோகித்து சப்பித்துப்பி நாசம் ஆக்குகிறார்கள் என்ற உண்மை குப்பைத்தொட்டி கொண்டைனருக்குள் இறங்கித் தேடிய போதுதான் ஒரு ஞானஉதயம் போல எனக்குக் கிடைத்தது

                                    " ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துறாளாம் " போலப் போய்க்கொண்டிருக்கிறது உலகத்தில பழைய பொருட்களின் பெறுமதி மட்டும் முன்னோக்கிப் போகப் போக பெறுமதி அதிகமாகிக் கொண்டேபோகும். கொஞ்சம் ஜோசித்துப் பார்த்தால், சும்மா " ரோட்டால போன சனியனைப் பிடிச்சு பனியனுக்க விட்ட மாதிரி " இன்றைக்கு நாங்கள் வேண்டிக்குவிக்கும் அதி நவீன வேகாமாக இயங்கும் இலற்றோனிக் தொடர்பு சாதனப் பொருட்களை

                                   " ஜிகா பைட்ஸ் ப்ரோட்பாண்ட் இல் வேகமாகி இயங்கி உங்களின் பொண்ணான நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை "

                                 என்று தான் விளம்பரம் செய்கிறார்கள். உண்மையில் அவைகள் தான் ஏதோ ஒரு வடிவில் எங்களின் காசை உருவுறது தெரியாமல் அண்டவியர் வரை உருவி , பிரயோசனமான நேரத்தையும் திண்டு தொலைத்து ஏப்பம் விடுகுது .
.
............................. என்ன சீவியமடா இது !..........
..


.31.08.15

Saturday 29 August 2015

Sinnap Puraa Ondru ,Guitar Cover ,,Mestro Ilayaraaja





இளையராஜாவின் அகாலமான பியானோ " Riff " இல் தொடங்கும் இந்தப் "சின்ன புறா ஒன்று "பாடல் "அன்பே சங்கீதா " படத்தில் ஒரு காமடி நடிகரான தேங்காய் ஸ்ரீநிவாசன் அவரோட பிரிந்து போன தங்கையை நினைத்து பாடுவது போல வந்ததாலோ என்னவோ அதிகம் கவனிக்கப்படவில்லை!



இந்தப் பாடலின் தொடக்க, இடையே வரும் "ஹம்மிங்கை " S .P .சைலயா பாட, அந்த "ஹம்மிங்" தான் இந்தப் பாடலின் பிரிவின் வதையைப் பிழிந்து பிழிந்து சொல்ல , இந்தப் பாடலில் இளையராஜா வயலின் ,பியானோ  எல்லாம் வைத்து இசை அமைத்து  அரிதாக Bass கிட்டார் ட்ரக் Fretless ஸ்டைலில் வரும்!



பாடலின் interlude இல் bass கிடார் நோட்ஸ் ,லீட் இணைப்பில் வரும் அண்ணன் தங்கை பிரிவைச் சொல்லும் இந்தப் பாடலை S .B பாலசுப்பிரமணியமும் அவரின் தங்கை S .P .சைலயாவும் பாடியுளார்கள் என்பது ஒரு அழகு! இந்தப் படத்திலேயே p .ஜெயச்சந்திரன் "பெத்தாலும் பெத்தேனடா ஒரு போக்கிரி பையனடா " என்ற பாடல் இருக்குது! ஜென்சியும் ,ஜெயச்சந்திரனும் பாடும் "கீதா சங்கீத " என்ற கர்நாடக சங்கீத அடிப்படைப் பாடலும் இருக்கு!



.நீட்டிமுழக்கி அறுக்காமல் சுருக்கமா சொல்வது என்றால் "சின்ன புறா ஒன்று " பாடல் எண்ணக்கனாவினில் வண்ணம் கெடாமல் இன்றும் என்றும் வாழ்கின்றது , அதை இசைஅமைத்த இளையராஜா ,நினவில் உலவும் நிழல் மேகம் , அவர் நூறாண்டுகள் வாழ்கவே நூறாண்டுகள் வாழ்கவே!

Friday 28 August 2015

" பூஞ்சணம்பிடிச்ச பான் ...."

உண்மையில் விமர்சனம்  என்பது மிரட்டல்களுக்கும் உருளைக்கிழங்கு பிரட்டல்களுக்கும் பயந்துகொண்டே தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் பம்முவது என்பதல்ல பதிலாக அதிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது. விமர்சன விமர்சிப்புக்கள் நம்மை நாமே சுயபரிசோதனை செய்து இன்னும் ஒருபடி மேன்மக்களாக மேலேறிக்கொள்வது என்று நினைக்கிறேன்.

                                             தங்களால் தாயரிக்கப்பட்ட ஒரு படம் என்று சொல்லி ஒரு அன்பர் ஒரு லிங்க் சில மாதம் முன் அனுப்பி அதைப்பற்றி எழுதும்படி கேட்டு இருந்தார். எனக்கு திரைவிமர்சனம் எழுத முடியுமா என்பது எனக்கே ஒரு கேள்வியாக பல காலம் இருந்தாலும்,பல ஆங்கிலப் படங்களுக்கு " இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை .." போல என்னோட ஸ்டைலில் எழுதி இருக்கிறேன்,

                                       ஒருவேளை அதை நினைத்து அந்த பட லிங்கை சில மாதம் முன் எனக்கு அனுப்பி இருக்கலாம் போல
 . ஒரு படத்தைப் பலர் நேரம்,உழைப்பு செலவழித்து எடுத்து இருப்பதால் அந்தப் படம் என்ன என்று சொல்லி அவர்களின் உற்சாகத்தைக் குறைப்பது மோட்டுக் கழுதைத்தனம் அதால் அந்தப் படம் பெயர் சொல்லப்போறதில்லை.ஆனால் அதைப் பார்த்தபோது தோன்றிய சில விசியங்களை மட்டுமே என்னோட குறுக்காலபோற ஸ்டைலில் சொல்லுறேன்.

                                            பல இடைஞ்சல்களுக்கு நடுவில் முதலில் அதை எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள். எவளவோ  கஷ்டப்பட்டு  நேர விரைய  உழைப்பில்  அதை அதை  ஆர்வமாக  எடுத்து இருக்கிறார்கள் அதுக்குத் தலை  வணங்குகிறேன் . வாய்  பித்தத்தில் புளித்ததோ அல்லது மாங்காய் தான்  புளித்ததோ என்ற  விமர்சனம் போல இல்லாமல் என் வாசிப்பு,சினிமா பார்த்த அனுபவத்தில் இதை சொல்லுவது குறை பிடித்து மட்டம்தட்ட அல்ல பதிலாக அவர்கள் இன்னும் இன்னும் உயர்ந்த தரத்துக்கு முன்னேறிப் போக வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலை மட்டுமே.


                                 "  ஒரு திரைப்படத்தை, குறும்படத்தை ,டாக்குமென்ட்ரியை  விமர்சிக்க  உனக்கு  என்ன  தகுதி இருக்கு, நீ என்ன  பெரிய  அக்குரோ குரோசோவா ,   அப்ப  நீயே ஒரு  படம்  எடுத்துக் காட்டேன்  "  என்று ஒரு வாதம் எப்பவும் வரும். ஒரு தோசைக் கடையில் காசு கொடுத்து தோசை சாப்பிடுறோம். தோசை நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுக்காக அந்த கடை முதலாளி  வந்து  நீ அப்ப  தோசை போட்டுக்காட்டேன்  என்று கேட்க முடியாது. அசிங்கமா இருக்கும் .

                                          எனக்கு அனுப்பிய அந்த படத்தை நான் காசு ஒண்டும் கொடுத்துப் பார்க்கவில்லை. ஓசியில்  இன்டர்நெட் இல்தான்  பார்த்தேன். ஆனால் அந்த நேரம் எனக்கு முக்கியம். நான் செலவுசெய்த அந்த நேரத்துக்கு ஒரு காசுப் பெறுமதி இருக்கு. அதனால் என் கருத்தைப் பொதுவாக சொல்லுறேன். அதுக்கு  முதல்  மஸ்ஜித் மஸ்ஜித்   என்ற  ஈரானியர்  எடுத்த " சில்டர்ன் ஒப்  ஹவின் "  படத்தை பத்து முறை  பார்த்த அனுபவத்தில் உலக சினிமாவின் அடி அளவுகோல் எனக்கும் கொஞ்சம் தெரியும் . அதால சொல்லுறேன்

                                     தொடக்கமே நாலு வீதிகள் சந்திக்கும் இடத்தில நிக்கிற கதை எந்தப்பக்கம் போறது என்று தடுமாறும் அது முதலில் படம் போல இல்லை. ஒரு அளவுகோலில் பார்த்தால் குறும்படம் .கொஞ்சம் டெக்னிகலா சொன்னால் திரையில் ஓடவைக்க எடுக்கப்பட்ட டாக்குமென்ட்ரி போல இருந்தது. ஒரு திரைப்படம் எடுப்பது இலகுவான விசியம் இல்லை. " இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான் .." என்று போனாப் போ வந்தா வா என்று திட்டம் இல்லாமல் தொடங்கவே முடியாது.

                                                    அந்தப் படத்தின் கதையை  லைனியர் ஸ்டைலில் ஒரு வரியில் சொல்கிறேன் " பூஞ்சணம்பிடிச்ச பானை ஒரு பூனை பார்த்துக்கொண்டு இருக்கு." .......இவளவுதான்! ஆனாலும் என்னைப்பொருத்தவரை இந்த கொன்செப்ட் ஐ characteristics of the individual regardless of the nature or circumstances என்ற அணுகுமுறையில் வேற ஒரு லெவலில் எடுத்து இருக்காலம் போல இருக்கு.

                                                 இந்தப் படத்தின் கமராமான் என்ற ஒளிப்படக் கலைஞ்சர் பல இடங்களில் தன்னோட அலாதியான கைவண்ணத்தைக் காட்டி இருக்கிறார். ஒரு சின்ன நகரம் அதன் குறுக்குச் சந்திகள்,வீதிகள் ,அந்தக் கதை நடக்கும் வீடு, எல்லாத்தையும் ஒரு கன்வஸ் ஓவியம் போல பல படமாக்கி இருந்தாலும் ஒரு சொதப்பல் கதைக்கு அவரால் மட்டுமே கொஞ்சம் வண்ணங்கள் சேர்க்க முடிந்து இருக்கு. வேற என்னதான் செய்ய முடியும் ஒரு டெக்னிசியனால். எப்படியோ அவரின் பார்வை எதிர்கால கோடம்பாக்கப் பிரகாசங்களுக்கு உறுதிமொழி கொடுக்கிறது.

                                                  ஒருதிரைப்படம் எடுக்க முக்கியமா அதுக்கு ஒரு அமர்க்களமான கதை கையிலஇருக்க வேண்டும், அதை இடுக்குகளில் உள்ளே நுழைந்து விசுவல் ஆகச் சொல்ல திரைக்கதை ஆக மாற்ற வேண்டும், அலுப்படிக்காமல் நகர்த்த பூந்துவிளையாடும் வசனம் எழுத வேண்டும் ,தொய்வில்லாமல் அதைக் கமராவில் கதையாக இழுத்துக்கொண்டு பின் தொடரவேண்டும், பிண்ணனி இசை கதையின் ஈரமான பிரதேசங்களில் மழை பொழிய வேண்டும். . இவளவு இருந்தாலும் சில படங்கள் எடுபடாது,,சில படங்களில் இதில ஏதோ ஒன்று குறைவாக இருந்தும் வெற்றிபெறும்.

                                            ஒரு இடைதர நகரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்த போது அதில இருந்த மிகப்பெரிய ஓட்டை அந்தப் படத்தை இயக்கிய இயக்குனரின் பரிமாணங்களை கனதியாகப் பிரித்தெடுக்கத் தவறியது தெரிந்து. அந்தப் படமே அரைவாசிக்குமேலே நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில் மிச்சம் மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உயிரோட இருந்து பார்கத்தான் வேண்டுமா என்று மண்டையைக் குடையுது அதன் அசுவாரசியம்.

                                           முக்கியமா என்ன வகையான கதை திரையில் சொன்னாலும் அந்தக் கதையைத் தொடக்கும் நேரம் பார்வையாளருக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுக்க வேண்டும், பின்னர் பார்வையாளர் எதிர்பார்க்காத இடங்களில் கதிரை முன் நுனிக்கு கொண்டுவரும் திருப்பங்கள் வரவேண்டும்,முடிவுகள் முக்கியம் இல்லை என்று சொல்லலாம் ஏனென்றால் ஒரு படம் இன்னொரு படத்தின் தொடர்ச்சி , வெள்ளித்திரையில் தவறவிடும் வாழ்க்கைபோல ,,இந்த உத்திகளில் அந்த இயக்குனர் இயங்கவேயில்லை.

                                          கோணையன் கிழிச்சது கோமணத்துக்கு ஆச்சு போல சில நல்ல விஷுவல் விசியங்கள் அந்தப் படத்தில் இருந்தது.ஆனால் அந்த கொன்செப்ட்ஐ இன்னும் கொஞ்சம் டெவலப் ஆக்கி இருக்கலாம். ஏன் அந்த இயக்குனர் அதை மறந்தார் என்று ஜோசித்த போது அவரின் கலைத்துவக் கற்பனைத் திறமையில்தான் சந்தேகம் வருகுது. ஒரு படத்தில் வரும் அழகியல் வறட்சி நிச்சயமாக அந்தப் பட இயக்குனரின் கற்பனை வறட்சியே.

                                      நிறையப் பணம் போட்டு, முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்த ஒரு படம் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்பட்டால் மட்டும்போதாது அந்த லட்சியத்தை அடைய கடினமான உழைப்பு முதலில் கதையை விஷுவல் கோணங்களில் அகலப்படுத்த வேண்டும், கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆசை மட்டும் வைச்சுக்கொண்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், பிறகு ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க என்ற மாதிரித்தான் முடியும்.

                                      வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. இந்தக் கரணத்துக்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகின் பல பாகங்களில் இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் என்னோட சொந்த அபிப்பிராயம், ஒரு உணர்வுள்ள கவிதை எழுதக்கூடிய. சுவாரசியாமாக ஒரு சிறுகதை எழுதக்கூடியவர்கள் இயக்குனர்களாக இருக்கும்போது ஒரு திரைக்கதையை விஷுவல் ஆக முடிந்தளவு ரசிக்கவைக்க முடியும்.

                                   இதுக்கு நிறைய உதாரணம் வாய்க்குள்ள நுழையாத பெயர் உள்ள பெர்னாண்டோ பெட்ட  லூ ஸி,  ழான் கோலே, ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க், ரோமன்ஸ் பொலான்ஸ்கி போன்ற   இயக்குனர்களை உதாரணமாக சொல்லலாம். அவர்களின் திரைப்படஉத்திகள் வந்த படங்கள் பெயர் எல்லாம் சொன்னா அதை எல்லாம் வாசிக்க உங்களுக்கு அறுவையாக இருக்க ஒருகட்டத்தில் என்னில கொலைவெறி வரும் உங்களுக்கு.


                                     உலகத் தரமான படங்கள்  என்று  நானும்  பீலா  விடுறன் என்று நீங்க  நினைக்கலாம். ஆனால் அவர்களால் தேர்வு செய்யப்படும் கதைகள் மிக மிக சிம்பிள். அந்தக் கதைகள்  நமக்கு அதிகம் நெருக்கமாக இருக்கும். நல்ல சினிமா  பார்ப்பது எங்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோவது. அந்த அனுபவம் மிகவும் திரில் ஆக இருக்கும். 

                                             அப்படி எல்லாம் இல்லை"   நான் படம் எடுப்பேன்  நீ பார்த்தே ஆக வேண்டும் " என்றால் அந்தப் பிடிவாதமாகக்  கண்ணைக் கட்டி " எவடம் எவடம் புளியடி புளியடி .." என்ற கதை போல ஒரு வட்டத்துக்குள்ளேயே நின்று சுழரும்படியான ஒரு நிலையை ஏட்படுதிவிடும் . மனித வாழ்வின்  முக்கிய அனுபவம் சினிமா .அதன் பல் பரிமாணங்களை  நாங்கள்  புரியும்போது  வாழ்வியலின் அபத்த நிலைகளில்  உள்ள சிந்தனைப் போக்குகளை இன்னும்  ஆழமாகப்பதிவு செய்ய முடியும் .

                                  கொஞ்சம் ஜோசித்துப் பார்தால் “ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும், இறுதியாக அவர் சாதித்துப் பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்துகொண்டே இருக்கும். இந்த இடைவெளியைக் குறைப்பதற்குத்தான் மீண்டும்மீண்டும் முயல வேண்டியிருக்கிறது.” என்று லூயி மால் என்ற இயக்குனர் சொன்னதில் நிறையவே அர்த்தம் இருக்குப்போல இருக்கு.

.


27.08.15

Wednesday 26 August 2015

சிங்கி மாஸ்டர்..

யாழ்பாணத்தில் இள வயதில் சிறுகதை , நாவல், எழுத்து வடிவில் வந்த நாடகம் போன்ற உரை நடை இலக்கியம் ஆர்வமாகப் படிக்க முக்கிய காரணமா இருந்த ஒருவர் சிவாநந்தராஜா என்ற சிங்கி மாஸ்டர், அவரை மாஸ்டர் எண்டு சொன்னாலும் அவர் எந்தப் பாடசாலையிலும், எந்தப் பாடமும் படிபிக்கவில்லை . மலேசியாவில் பிறந்து ஆங்கில மீடியத்தில்ப் படித்த அவர், அன்றாட வாழ்கையை ஓட்டுறதுக்கு என்ன வேலை செய்தார் எண்டு அறுதியா சொல்ல முடியாது, 

                                    ஏறக்குறைய எல்லா வேலையும் செய்தார் எண்டுதான் சொல்லவேண்டும் ,அந்த வேலைகளிலும் ஒரு வேலை தொடர்ந்து ஆறு மாதத்துக்கு மேல ஒரு இடத்தில செய்தார் என்றதுக்கும் எந்த சான்றும் இல்லை. அவர் கொலும்பில அரசாங்கத்தில இன்கம் டக்ஸ் டிபார்ட்மென்டில வேலை செய்து தனிச் சிங்கள சட்டம் வந்து சிங்களம் கட்டாயம் படிக்க வேண்டும் எண்டு வர ,சொல்லாமல் கொள்ளாமல் அந்த அரசாங்க வேலைய விட்டுப் போட்டு ஊருக்கு வந்திடார் எண்டு சொல்லுவார்கள்.

                                எங்கள் ஊரில இருந்த வாசிகசாலையில் ,இலக்கிய சங்கத்துக்கு பொறுப்பா இருந்த, இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய தத்துவங்கள், இசங்கள், அவை வந்த இலக்கியப் புத்தகங்கள் எல்லாத்தையும் கரைசுக் குடிச்ச சிங்கி மாஸ்டர் தனியாதான், சுப்பிரமணியம் கடைக்கு அருகில், மசுக்குட்டி மாமி வீட்டில வாடகை ரூமில மாதம் மாதம் கடன் சொல்லி வாடகை கட்டியும்,கட்டாமலும் , மசுக்குட்டி மாமியின் இரக்க குணத்தில குருவிச்சை போல ஒட்டிக்கொண்டு வாழ்ந்தார். 

                                     அவருக்கு மனைவி எண்டு ஒருவரும் இருந்த மாதிரி எனக்கு தெரிந்தவரை இருக்கவில்லை, எனக்கு தெரியாமல் இருந்தது பற்றி என்னால் ஒண்டுமே சொல்லமுடியாது,ஆனால் மசுக்குட்டி மாமியும் அவாவின் புருஷன் விட்டுடுப் போக கொஞ்ச வருஷம் தனியாதான் இருந்தா எண்டு சொல்லமுடியும் .ஒரு விதத்தில அவருக்கு ஒரு பெண் துணை கிடைப்பதில் உள்ள முக்கிய பிரச்சனையே அவர் வாழ்ந்த விதம், அவரின் உலகம் வேற, அவர் இயங்கிய தளம் வேற, அது என்ன எண்டு சொல்லுறன்,

                                             யாழ்பாணத்தில இன்டலக்சுவல் எண்டு சொல்லும் அறிவு ஜீவிகள் நிறையப்பேர் அந்த நாட்களில் இருந்தார்கள் , இருந்தார்கள் எண்டு சொல்வது பிழை, அவர்கள் அதை ஒரு ஸ்டைல் போல ஆக்கி வாழ்ந்தார்கள்,சிங்கி மாஸ்டரும் அப்படிதான் ,அவர் எப்பவுமே ஒரு பருத்தி சீலையில செய்த பையைக் தோளில மாட்டிக்கொண்டு ,சோக்கிரட்டிஸ் போல முகம் முழுவதும் தாடி வளர்த்து , தலைமயிர் அதுபாட்டுக்கு அலை அடிக்க, போடுற உடுப்பில அக்கறை இல்லாமல், எப்பவும் ஜோசிக்கிரதாலோ என்னவோ நெற்றி எல்லாம் சுருக்கம் விழுந்து,அவர் புத்தகம் வாசித்ததை அதிகம் நான் கண்டதில்ல, ஆனால் வாசித்ததை ஜோசிக்கும்,விவாதிக்கும் சம்பவங்கள் அதிகம் நடக்கும், 

                    எங்கள் ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த கிறிஸ்தவரான ஆங்கில ஆசிரியரான அன்டனிப் பிள்ளை மாஸ்டருடன் எப்பவும்   சிங்கி மாஸ்டர் வாக்குவாதப்படுவார் ,

                      " அன்டனி மாஸ்டர் நீங்கள் விசியம் தெரியாமல் பைபிள் பற்றி போதிக்குரிங்க, உங்க பாதர் மாருக்கே ஒழுங்கா வரலாறு தெரியாது, பைபிளின் மூலநூல் லத்தீன் மொழியில் மட்டும் எழுதப்படவில்லை. லத்தீன் பைபிள் கூட ஒரு மொழிபெயர்ப்பு தான். பழைய ஏற்பாடு ஹீபுரு எபிரேய, அரமைக் மொழிகளில் எழுதப்பட்டது. 

                            " இதுகள் எங்களுக்கு தெரியும் ,மிஸ்டர்  சிவானந்தராஜா , நான் செமினரியில் கொஞ்சகாலம் தியோலாயி  படிச்சனான், இதை திருப்பி திருப்பி எனக்கே போட்டுக் காட்டுறது  ஒரு பிரிஜோசனமும் இல்லை கண்டியலே மிஸ்டர் ,, "

                               "  இல்லை  மாஸ்டர் ,  புதிய ஏற்பாடு முழுக்க கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இயேசுவின் பன்னிரண்டு  சீடர்களும் ஒன்றில் யூதர்களாக, அல்லது கிரேக்கர்களாக இருந்தனர். இயேசு என்பது அரமைக் பெயர், கிறிஸ்து என்பது கிரேக்கப் பெயர். அது உங்களுக்கு தெரியுமோ மாஸ்டர் .

                              "  கொஞ்சம்   கேள்விப்பட்டது  தான் ,,நீர்  மிச்சக் கதையை  சொல்லுமேன் மிஸ்டர்  சிவானந்தராஜா "

                                        "  இயேசுவின் போதனைகளை ஐரோப்பாவுக்கு பரப்பச் சென்றவர்கள் அனைவரும் கிரேக்க மொழி பேசினார்கள். அப்போஸ்தலர்கள் கிரேக்க மொழியில் எழுதிய சுவிசேஷங்களின் தொகுப்பு புதிய ஏற்பாடு, இதை சொன்னா உங்களுக்கு கோபம் வருகுது "

                         என்று பெரிய விளக்கம் கொடுப்பார் , அன்டனிப் பிள்ளை மாஸ்டர் பதில் சொல்லாமல் ஜேசுநாதர் போல பொறுமையாக் கேட்பார்.

                                               சிங்கி மாஸ்டர்  எங்கள் சந்தி ஞானப்பிரகாசம் தேத்தண்ணி கடையில கடனுக்கு சீனி போடாத பிளேன் டீ குடிச்சிக் கொண்டு , மார்கஸ் அரேலியசின் " மெடிடேசன் " புத்தகம் ஏன் பிலேட்டோ சொன்ன  " ரிப்ப்பபிளிக்  " புத்தகத்தை விட நடைமுறையில் பிரிஜோசனமானது எண்டு ஞானப்பிரகாசதுக்கு சொல்லிக்கொண்டு இருப்பார். ஞானப்பிரகாசம் கடனுக்கு கொடுத்த பிளேன் டீ காசு எப்பவரும் எண்டு தீவிரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார்.

                                   சிங்கி மாஸ்டருக்கு ஏறக்குறைய எல்லா இசங்களும் தெரியும் ,அவர் ஆங்கில அறிவுள்ளபடியால், கொஞ்சம் அட்வான்சாக அவர் காலத்து யாழ்ப்பான தமிழ் எழுத்தாளர்களை விட ஐரோப்பா,மேலை நாட்டு இன்டலக்சுவல் இலக்கிய விசியம் தெரியும் ஆனால் அவர் ஒரு கதையோ ,கவிதையோ,கட்டுரையோ எழுதிய சிலமன் இல்லை, இவை பற்றி அவரிடம் கேட்டால் 

                             "எடேய்  இந்த இசம்கள் எல்லாமடா  ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையேப்பா ,  அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாதடாப்பா  , எனக்கே ஆங்கிலத்தில் தான் அழகா விளங்கும் .." என்று சொல்லுவார் .

                                   அந்த நாட்களில் வந்துகொண்டு இருந்த முற்போக்கு ,பிற்போக்கு உள்ளூர் எழுத்துகளை அவர்

                             "எடேய் இவங்கள் எல்லாம்  சும்மா சிலு சிலுப்பு ,இவங்களுக்கு ஆழமா ஜோசிக்க வைக்கும் தத்துவார்த்த எழுத்து எழுததெரியாது "

                               எண்டு சொல்லுவார், அதுகளை வாசிக்குறது வேலை மினக்கேடு எண்டு தாடியைத் தடவி சொல்லி , அவர் அதுகளை வாசிக்கவும் மாட்டார்,

                            " நீங்கள் வாசிக்காமல் எப்படி சொல்லுரிங்கள் " எண்டு கேட்டால் ,

                      " எடேய் நான் முதல் பந்தியும், கடைசிப் பந்தியும் வாசிப்பனடா ,அதில பிடிபடும் அவங்களின்ட எழுத்திண்ட விறுத்தம் ,ஒரு கதையைத் தொடங்கிறதும் ,முடிகிறதும் தான் கஷ்டம், நடுவில என்னத்தையும் வைச்சு சலாப்பலாம் "

                          எண்டு சொல்லுவார்,அவர் அப்படி சொல்லுறது சரியா எண்டு எனக்கு தெரியவில்லை ,எப்படியோ அவர் உலகத் தரமான பல விசியங்கள் நல்லா தெரிதவர் .

                                ஆனாலும் இவை பற்றி இங்கே நான் எழுதும் இது பின்நவினத்துவ ஸ்டைல் கதை இல்லை,எனக்கு அந்த ஸ்டைலில் எழுத தெரியாது  . ஆனாலும் அவர் எனக்கு பல இசங்கள் அறிமுகம் செய்யப்பட்ட புத்தகங்கள்,அதை எழுதிய எழுத்தாளர் பற்றி எப்பவும் சொல்லுவார், முக்கியமா எப்பவும் போஸ்மோட்டம் இசம் எண்டு அடிக்கடி சொல்லுவார், போஸ்மோட்டம் என்ற இறந்தவர்களை சவச்சாலையில் வைச்சு கிண்டிக் கிளறுரதுக்கும் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் எண்டு விளங்காமல் இருந்தது . 

                                 ஒரு நாள் சுப்பிரமணியம் கடைக் கட்டைக் குந்தில இருந்த நேரம், அவரிடமே கேட்டேன் ,நான் கேட்டவுடன அவருக்கு இலக்கியத் தாகம் வந்திட்டுப்  போல

                           "எடேய்   சொல்லுறன் முதல் ஞானம் கடையில் ஒரு பிளேன் டீயும் வாய்பனும் வேண்டிதாறியாடா  " எண்டு கேட்டார், நான் வேண்டிக் கொடுத்தேன் , அவருக்கு இலக்கிய உற்சாகம் வந்திட்டுது ,

                  " எடேய்  நீ கேட்ட அது போஸ்மோட்டம் இசம் இல்லையடா மடைச் சாம்பிராணியே  ,போஸ்ட் மொடேர்ன் இசம் ,தமிழில பின் நவீனத்துவம் எண்டு சொல்லலாம் , மிஷேல் ஃபூக்கோ தான் அந்த இலக்கிய எழுத்து முறையைக் கண்டு பிடித்தவர்டா மக்கு மடையா  " என்றார் ,நான் அதை புரியும் படி சொல்ல முடியுமா எண்டு கேட்டேன்,

            அவர் கொஞ்சம் ஜோசிதார் ,

                     " எடேய் முதலில் வெளிய வா , அடேய் அவசரத்துக்கு பிறந்தவனே  முதல் அவசரப்படாதை , மனியத்திட்ட கடையில ஒரு கனகலிங்கம் சுருட்டு வேண்டிதா சொல்லுறன் "

                             என்றார் ,நான் சுருடுக்கும் படி அளந்தேன். குந்தில இருந்து அதைப் பத்திக் கொண்டு இருக்க , அந்த நேரம் பார்த்து ஒரு நாய் வந்து, வைரவர் கோவிலுக்கு முன்னால இருந்த லைட் போஸ்ட்டை சுற்றி சுற்றி பின்னங் காலை தூக்கி மணந்து பார்கிறதை எனக்கு காட்டினார்,

                 " அடேய் இப்ப நாய் என்ன செய்யப் போகுது சொல்லு பார்ப்பம் " என்றார்,

                                 நான் " நாய் பின்னங் காலை வேற என்னத்துக்கு பரதநாட்டியம் ஆடவா தூக்குது, தூக்கி மூத்திரம் பெய்யப் போகுது " என்றேன்,

                              சொன்ன மாதிரி நாய் பின்னங் காலை தூக்கி வலு சிரத்தையா லைட் போஸ்டுக்கு தண்ணி வார்க்க , அவர் என்னைப் பார்த்து

                       " அடேய் விழுவானே இப்ப பார்த்தியா , இந்த நாய் முன்னப் பின்ன ஜோசிகாமல் இயல்பா பின்னங் காலை தூக்கிச்சுதெல்லா ,  இது பின் நவீனத்துவ நாய் " எண்டு சொன்னார் ,

                       " அப்ப நாய் முன்னங் காலைத் தூக்கி இருந்தா முற்போக்கு நாய் எண்டு சொல்லலாமா " எண்டு கேட்க நினைச்சேன் கேட்கவில்லை.

                              "அடேய் செம்மறி ,  பின்நவீனத்துவம் என்றால் ஒருவகை எழுத்து முறை என்று எண்ணிக் கொண்டிருக்கிராய் என நினைக்கிறேன். அப்படி அல்ல , அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களால் முன்வைக்கப்பட்ட ஒரு எழுத்துமுறையும் அல்ல. அது ஒரு சுவாரசியமான பொதுப்போக்கு மட்டுமேடாப்பா "

                          எண்டு சொல்லிடுப் போட்டார்! உண்மைதான்,,இந்த இசம்கள் இமசைதான் விளங்கிக்கொள்ள , இருந்தாலும் வாசிக்க சுவாரசியமா சில நேரம் இருக்கும் போல இருந்தது அவர் சொல்லும் விளக்கம் கேட்க .

                                          அதுக்குப் பிறகு அவருக்குப் பின்னாலா திரிந்து பின்நவீனத்துவம் என்றால் என்ன எண்டு நான் கேட்கவேயில்லை , ஆனாலும் ஆங்கிலத்தில் படிக்கத் தொடன்கிய காலத்தில் அது என்ன விசியம் எண்டு நோண்டிப்பார்க்க , உண்மையில் அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியடைந்து, எல்லாவற்றையும் தர்க்கவியல் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் ஏற்பட்ட, அதை சில சமூக இயல்புகளை வைத்தும் சிந்தனைப் போக்குகளை வைத்தும் அடையாளப்படுத்துகிறார்கள். 

                                   பின் நவீனத்துவம் ஒரு குறிப்பிட்ட சிந்தனை முறையோ அல்லது இலக்கிய வகையோ அல்ல. அது ஒரு பொதுவான எண்ணம், இன்றைய உலகத்தின் இயல்பு ஒட்டு மொத்தமாக பின்நவீனத்துவ அம்சம் கொண்டது என்று சொல்கிறார் மிஷேல் ஃபூக்கோ, 

                                        குறிப்பாக ஒழுங்கமைப்பு அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்வது பின்நவீனத்துவம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இசம்கள் எல்லாம் ஐரோப்பிய கலாசார பின்னணியில் உருவானவை, தமிழ் கலாசார பின்னணியில் இல்லையே அதால அதை தமிழில் விளங்கப்படுத்த முடியாது ,எனக்கே ஆங்கிலத்திலதான் அது விளங்கியது.

                       எல்லா இயக்கமும் மும்மரமா யாழ்பாணத்தில் இயங்கிய காலத்தில் சிங்கி மாஸ்டர் எந்த இயக்கத்துக்கும் சார்பாக இருக்கவில்லை,ஆனால் அவர் கற்பனாவாத சோசலிசம் என்று ஒரு கட்டுரை உள்ளூர் பத்திரிகையில் எழுதி இருந்தார் என்று ஒரு முறை எனக்கு காட்டி இருக்கிறார் ,அதில அவர் எழுதியதுகளும் எனக்கு விளங்கவில்லை ,சுருக்கமா இதில என்ன எழுதி இருகுரிங்க என்று கேட்டதுக்கு, அந்தப் பேப்பரை வேண்டி சுழட்டி எறிஞ்சு போட்டு ,

                       " எடேய், நாசம் அறுவானே இதுவுமா உனக்கு தெரியாது ,   முதல் சோசலிச நாடாக சோவியத் யூனியனும் அதனையொட்டிப் பல நாடுகள் சோசலிச நாடுகளாக மாற ஒரு சக்தி வாய்ந்த சோசலிச முகாம் உருவாகியது. 
                          
                               "   ஒ ,,அப்படியா,,அதுக்குப் பிறகு என்ன நடந்தது .."

                        " அத்தகைய மகத்தான சாதனைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ் வழியில் நின்று நிகழ்த்திக் காட்டிய லெனின், ஸ்டாலின் மறைவிற்குப் பின்பு ,, இப்ப   என்னத்துக்கு  மண்டையச்  சொறியிராய் "

                            " மார்க்ஸ்,,ஏங்கெல்ஸ், லெனின்  ,,ஸ்டாலின்  ,,இவர்கள்  யார் , ஒன்றுமே  புரியவில்லையே "

                             " டேய்,,எருமை   அவர்கள்தான்  கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக்ஸ் ஏங்கெல்ஸ், விளாதிமிர் உளியானிவிச்  என்ற  லெனின்,,மற்றது  ஜோசப்  ஸ்டாலின் "

                          " அப்படியே,அவர்கள்  பெயரே  மண்டையை அம்மியில்  வைச்சு  அரைச்ச மாதிரிக்  குத்துதே "

                             " மிச்சத்தைக்  கேள்  கழுதை ..   பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டும் தத்துவத்தைச் செழுமைப்படுத்தும் போக்கிலும் சமூக நிகழ்வுகளின்  மாற்றங்களுக்கு உகந்த வகையில் வழிமுறைகளை வகுப்பதிலும் கோளாறுகள் ஏற்பட.... என்ன நான் சொல்லுறது உன் மண்டைக்குள்ள ஏறுதா "

                               "   கொஞ்சம் ஏறுது ,,மிச்சம் உள்ளுக்க போக முடியாமல் வெளியால நிக்குது .. மார்க்ஸ், எங்கெல்ஸ் பெயர்கள் கொஞ்சம் கேள்விப்பட்ட பெயரா இருக்கு "

                               "  சரி, அது உன் அறிவுக்கு அவளவே காணும். சொல்ல வந்ததை சொல்லி முடிக்கிறன்  , வர்க்க சமரசப் போக்கும் நாடாளுமன்ற வாதமும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோன்றி படிப்படியாக அக்கட்சிகளின் அடிப்படையையே சீரழித்துப் போட்டாங்களடா மூதேசிகள்  " 

                                       என்று கோபமாக, ஆனால் அவர் எப்பவும் கதைக்கும் பேச்சுமொழியில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு பொது மேடையில் பேசுவது போல  சொன்னார் .எனக்கு இவளவு முற்போக்கு சிந்தனையை ஜோசிக்கவே  மண்டைக்குள்ள யாரோ மணி அடிக்கிற மாதிரி இருந்தது.

                                  சிங்கி மாஸ்டர், கொஞ்சம் வித்தியாசமா , நிழலா இயங்கியதால் , அவரின் உண்மையான அறிவு வீச்சைப் புரிந்துகொள்ளாத பலருக்கு அவர் நடவடிக்கை கொஞ்சம் வித்தியாசமாக இருக்க, யாரோ அவர் 

                          " ........ " தின்  உளவாளியா இருக்கலாம் எண்டு வதந்தியைக் கிளப்ப ,ஒரு இரவு அவர் வீட்டுக்கு வந்த " ......  " க்க ஆட்கள் , அவர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்கள் எல்லாத்தையும் இழுத்துக் கொட்டி ,தேடு தேடு எண்டு சல்லடை போட்டுத் தேடி , அவரின் கண்ணைக்கட்டி , கை இரண்டையும் பின்னாலா கட்டி வேனில ஏத்திக்கொண்டு போனதா ,மசுக்குட்டி மாமி சொன்ன செய்தி கொஞ்சம் கொஞ்சமா ஊருக்குள்ள கசியத் தொடங்கியது , 

                                 அவரை தேடுறதுக்கு அவருக்கு எண்டு ஒரு குடும்பமோ ,மனைவியோ ,பிள்ளைகளோ இருக்கவில்லை , அவருக்கு அதுக்குப் பிறகு என்ன நடந்தது எண்டு யாருக்கும் தெரியாது....

.


நாவுக் அரசன்
ஒஸ்லோ.

Tuesday 25 August 2015

வாடைக்காற்று

ஒரு  எழுத்துருவில்  வந்த ஒரு  நாவலைப்  படமாக்குவது  எப்பவுமே  சவால் நிறைந்த ஒரு முயற்சி. இலங்கையின் முக்கிய  தினசரியான வீரகேசரியில்  தொடராக  வந்த  கதை வாடைக்காற்று. அதைப் படம் ஆக்கினார்  ஈழத்து ரத்தினம்  என்ற தயாரிப்பாளர். அதுவும் முப்பத்தைந்து   சொச்சம் வருடங்களின் முன். அப்போது  இலங்கை  எல்லா  இன மத மொழி மக்களும் ஒன்றாக இருந்த நேரம் . அப்படி வந்த வாடைக்காற்று  என்ற படத்தைப் பற்றி நோர்வே நாட்டு தலைநகர்  ஒஸ்லோவில்  இருந்து ஒரு மீள்பார்வை செய்கிறேன். 

                                              யாழ்பானத்தில் ராணி தியேட்டரில் ஓடிய , இலங்கைக் கலைஞர்கள் பலர் ஒன்றாக ஆளை ஆள் நீயா நானா எண்டு முரண்டு பிடிக்க்கும்  ஈகோ இல்லாமல்  சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள் நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. அந்தப் படத்தின் ரீல் களையே  என்பது மூன்று  அடிக்கலவரத்தில் சிங்களக்  காடையர்கள்  எரித்து விட்டார்கள்  என்றும் சொல்கிறார்கள் 

                                    அந்தப் படம் ராணியில்  ஓடியபோது வெளியே ஒரு கறுப்பு  வெள்ளையில் ஆர்டிஸ்ட்  மணியம் வரைந்த   பெரிய கட்டவுட் வைச்சு இருந்தார்கள். அதில் ஒரு மீனவப் பெண் சீத்தைத் துணியில் தைத்த பிளவுசும், பூப்போட்ட சரமும் கட்டி இடுப்பில் சாளை மீன் அள்ளும் ஓலைப்பிரம்புக் கூடையை வைச்சுக்கொண்டு ஏக்கமாக  அலைகளில்  அடித்துச் செல்லப்பட்ட  வாழ்க்கை ஒன்றின் சொல்லமுடியாத  வழியைப்  பார்வையில் ஏற்றிவைத்து  அந்தப் படத்தின் ஜீவனை வெளிக்கொணர்ந்திருந்தார்கள்.  

                                       மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற 'வாடைக்காற்று' படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெரிய இழப்பு என்று இள வயதில்என்னைப்போல அந்தப் படம் பார்த்த பலருக்கு தெரியும்.

                                      செங்கை ஆழியன் என்ற கலாநிதி கந்தையா குணராசா எழுதிய வீரகேசரிப் பிரசுரமாக வந்த வாடைக்காற்று நாவலாக வாசித்த காலத்திலேயே கொஞ்சம் ஜனரஞ்சகமா. கிளாசிகல் சுவாரசியமா இருந்த அதை , நாவலின் பெயரானா வாடைக்காற்று பெயரிலேயே திரைப்படமாக்க, கதை நெடுந்தீவில் நடப்பதால் அங்கேதான் ஏ. வீ. எம். வாசகம் என்ற காமராமான் ,கமராவை வைச்சு சுழட்டி எடுத்து இயற்கைக்கு உயிர் கொடுத்து இருப்பார் எண்டு நினைத்திருந்தேன்,

                                           உண்மையில், வெள்ளித் திரையில் கறுப்பு வெள்ளை படத்தொகுப்பிலும் மின்னிய ,கடல் கரை, அதை தழுவும் அலைகள், பனங் காணிகள், கன்னாப் பத்தைகள் ,பனை வடலிகள், கோவேறு கழுதைகள்,பிளமிங்கோ பறவைகள், மணல் கும்பிகள் எல்லாம் ,கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது என்று படித்த போது ஆச்சரியமா இருந்தது.

                                      நெடுந்தீவில் வேலை செய்த போது செங்கை ஆழியன் கவனித்த விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை பின்னர் அந்தக் கதை நடந்த நெடுந்தீவில்ப் படமாகப் பட முடியாமல்ப் போனதுக்கு முக்கிய காரணம் அந்த கதையை நாவலாக எழுதிய செங்கை ஆழியன், நெடுந்தீவு மக்களின் தோற்றம் ,ஹோலந்த் என்ற டச்சுக்காரர்கள் அந்த மக்களின் முன்னோர்களின் வழியில் ,வம்சத்தில் குறுக்கிட்டதால் ஏற்பட்ட சில ஜீன் மரபு ரீதியான தோற்ற வெளிப்பாட்டை அந்தக் கதையில் எழுதியதால், நெடுந்தீவில் அவர் சிவில் அரசாங்க அதிகாரியா வேலை செய்த அலுவலகம் முற்றுகை இடப்பட்டு,அடித்து நொறுக்கப்பட்டு அவருக்கு எதிராக வழக்கும் போடப்பட்டது எண்டு சொன்னார்கள்.

                                      இரவினிலே இறைவனை நம்பி தொழிலுக்காக செல்லும் மனிதர்களின் கதையான வாடைக்காற்று , வங்காள விரிகுடாவில் ஆவேசமாக எழும்பும் வாடைக்காற்று காலத்தில் மன்னாரில ,கரையூர்ல இருந்து வந்து வாடி போட்டு மீன் பிடிக்கும் வெளியூர்க்காரர்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் ஏற்படும் உறவு, பகை, காதல் ,ஒரு கற்பழிப்பில் சூடு பிடிச்சு, ஒரு கொலையில் முடியும் இதுதான் கதை . கதை இரண்டு பருவங்களில் ,கூளைக் கிடாய் என்ற பிளிகன் பறவைகள் ரசியாவின் சைபிரியாவில் இருந்து நெடுந்தீவு வந்து இறங்க,அவைகளின் வரவோடு கதை தொடங்கி , மனிதர்களின் விரிசல்களோடு கதை நடக்கும்.

                              சில வருடம் முன் மன்னாரில் இருந்து வந்து வாடிவீடு கட்டி தொழில் செயத சம்மாட்டி செமியோன் ஆக பொப் இசைப் பாடகர் ஏ இ மனோகரன் நடிக்க , உள்ளூர்ப் பெண்ணான பிலோமினா என்ற பெண்ணாக சந்திரகலா நடித்து இருந்தார். செமியோனுக்கும்,பிலோமினாவுக்கும் இடையில் இருந்த ஒரு வித காதல் கலந்த உறவு, அவளது அப்பா , அண்ணன் ஆகியோருடன் செமியோன்க்கு ஏற்பட்ட மனக் கசப்பினால் முறிந்து போய் விடுகிறது.

                                   உள்ளூர்க்காரரான பொன்னுக்கிழவர் ஆக நடித்த "முகத்தார் வீடு " புகழ் ஜேசுரட்னம், பெற்றார் இல்லாத தன் பேத்தி நாகம்மாவை கஷ்டப்பட்டு வளர்த்து வருகிற அவர், உள்ளுரில் கோவேறு கழுதையில் சுற்றித் திரியும், பத்தைக் காடுகளில் முயல் பிடிக்கிற அவளது முறை மாப்பிள்ளையான விருத்தாசலம் ஆக நடித்த அண்மையில் மறைந்த கே எஸ் பாலச்சந்திரனுக்கு அவளை கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்று ஆசைப்பட, மன்னாரில் இருந்து வந்த சம்மாட்டி வேதக்கார செமியோன், சைவக்கார நாகம்மாவையும் மனம்மாற்றி மயக்கிக் கொண்டுபோக சண்டை தொடங்குது.

                                  இந்தப் படத்தில மரியதாஸ் என்ற பாத்திரத்தில் நடித்த ,வைத்திய நிபுணர்,சில வருடம் முன் லண்டனில் மறைந்த டாக்டர் இந்திரகுமார் சிமியோனுகுப் போட்டியா வாற சம்மாட்டியா நடித்து இருந்தார், ஒரு டாக்டர் எதுக்கு தமிழ் சினிமாவில நடிச்சார் எண்டு இன்னுமே விளங்கவில்லை. மிகவும் அடக்கமான  புகழ் விரும்பாத டாக்டர்  இந்திரகுமார்   இலண்டனில் அவர்  இறந்தபோதுதான்  பலருக்குத் தெரியவந்தது  அவர்  ஒரு  ஜனாதிபதி விருது வேண்டிய நடிகரும் என்று .


                                             செமியோன் சம்மாட்டி வழக்கமாக மரியதாஸ் வாடி போடும் இடத்திலே பலாத்காரமா வாடி போட்டுத் தொழில் செய்ய, பணத்தைக் காட்டி உள்ளூர் மீனவத் தொழிலாள்ர்களை தன்பக்கம் இழுக்க, இவளவு நாட்டாண்மை செய்தும் செமியோனுக்கும், மரியதாஸுக்கும் நடக்கும் தொழில் போட்டியிலும் மரியதாஸுக்கே அதிகம் லாபம்,தொழில் வெற்றி கிடைக்க தொடங்க கதையில் வாடைக்காற்று திசை மாறி எதிர் எதிர அடிக்க தொடங்குது.

                                      டாக்டர் இந்திரகுமார் அவரது தொழில்சார் துறையாகிய மருத்துவத்துறையில் நிபுணராக விளங்கியதுபோதும்,தமிழ் மொழியின் மீதும், நடிப்புத் துறைமீதும் அதிகம் விருப்பம் இருக்க அவருடைய திறமைக்குச் சான்றாக அவர் மரியதாஸ் ஆகா நடித்த வாடைக்காற்று திரைப்படம் ஜனாதிபதி விருதினைப் பெற்றுக் கொடுத்திருக்கு. 


                                   எழுத்தாளராகவும், மருத்துவராகவும் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் இந்திரகுமார் 1983 கலவரத்தில் லன்டனுகுப் புலம் பெயர்த்து 25 வருடங்கள் அங்கே பிரபல வைத்திய நிபுணரா வேலை செய்த அவர்தான் வாடைக்காற்றுபடத்தில , உயர்த்திக் கட்டிய சரத்தோட , சேட்டும் போடாமல், " அப்புவைக் கேட்டுத்தான் எல்லாம் செய்வியா " எண்டு ஒரு " பன்ச் டயலக் " எப்பவுமே அவரின் காதலி நாகம்மாவிடம் குறும்பாகக் கேட்டு ,கடற்கரை எங்கும் மணல் வெளியில்க் காவியம் எழுதிய மரியதாஸ் எண்டு பலருக்கு தெரியாமலே போனது.....

                                            சுடலைச் சண்முகம் என்ற பாத்திரமாக ஜவாஹர் என்பவர் நடித்து இருந்தார் ,உண்மையில் அந்தப் பாத்திரம் தான் படத்தின் கதையில் முக்கியமான பல திருப்பங்களைக் கொண்டுவரும் .ஊர்த் திருவிழா நடக்கிற நேரம் , செமியோன் சம்மாட்டி தன் காதலி பிலோமினாவை ரகசியமாக சந்திக்கிற இரவு இருட்டு நேரத்தில , இந்த நேரத்தில் யாரோ மரியதாஸ் சம்மாட்டியின் வாடிக்கு தீ வைத்து விட. அதைப் பார்க்க செமியோன் அவசரமாகப் போக, தனியாக இருட்டில் போன சிமியோனின் மீன் கொத்தி பறவை போல அழகான காதலி பிலோமினாவை, சுடலைச் சண்முகம் கற்பழித்து கொலை செய்து விடடுகிறார் 


                            இதில  கதை  இன்னொரு  திசை நோக்கி திரிலர் படங்கள் போல உருவெடுக்கும் . எப்படியோ  நடந்ததை ஊகித்து அறிந்து கொண்ட விருத்தாசலம் சுடலைச் சண்முகத்தை துரத்திச் சென்று, தனது ஈட்டியினால் எறிந்து கொல்ல , விருத்தாசலம் பாத்திரமாகவே மாறி கேஸ் எஸ் பாலச்சந்திரன் அதில் நடித்து இருகிறார்..

                                           இவளவு குழப்பமும் வெளியூர் மீனவர்களால் உள்ளுரில் நடக்க அதை எங்கள் செங்கை ஆழியன் கதையாக எழுத வெள்ளித்திரையில் பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் டைரக் செய்து, கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றி, ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன்எழுதிய, பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி.முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க பாட, திரைக்கதை..வசனம் கே.எம்.வாசகர்   என்ற யாழ்பாண எழுத்தாளர் எழுதி இருக்கிறார்..


                              . இதில் புலோமினாவின் அண்ணன் சூசையாக தற்சமயம் ஐரோப்பாவில்,சுவிஸ்லாந்தில் புலம் பெயர்ந்து வாழும் குணபதி கந்தசாமி ஐயாவும் நடித்து இருக்கின்றார். 

                              இந்தப்  படத்தின்  " தீம் சாங் " என்ற  " வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே..."   என்ற  பாடல்  இலங்கை வானொலியில்  மிகவும் பிரபலமாக  இருந்தது.  அந்தப்  பாடலின்  மூன்று  சரணங்களும்  வேறு வேறு விதமான  உணர்வுப் பிழிவாக இருக்கும் .  ஒருவருடத்தில் ஒருமுறைதான்  வரும்  வாடைக்காற்றை  நம்பி  வாழும் ஒரு உழைப்பாள சமூகத்தின் அத்தனை அவலங்களையும் அந்த  ஒரு பாடலில் சொல்லியிருப்பார்கள் .  இந்தப்  படத்துக்கு டி எப்  லத்திப் இசை அமைத்து  இருந்தார்.

                                   யாழ்பாண தீபகற்பத்தின் நிலப்பரப்புக்கு வெளியே வங்காள விரிகுடாவின் அலைகள் தாலாட்டும் ஒரு சின்னத் தீவான நெடுந்தீவில் ஒரு சம்பவம் ஒரு கதையின் உயிர் ஆகி ,
நீல கடல் மீதினிலே ஓடமிது நீங்கி வரும் கலையிலே நாளுமிது வலைவீசி வாழுகின்ற கூட்டமிது,நாங்கள் வாழுவது கடலோரம் குடிசையிலே  எங்கள்  குடிசையிலே என்று மீனவ சமூகத்தின் வாழ்வின் தொடர்கதை வெள்ளித்திரையில்த் தவழந்து எங்கள் உள்ளம் கொள்ளை கொண்ட வாடைகாற்று அசைக்கமுடியாத இலங்கைத் தமிழரின் சரித்திர சாதனை ....


                                 இலங்கை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் ஜோசப் ராசேந்திரன் பாடிய இதயம் பிழியும்" வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே ,நல்ல வாழ்க்கை உண்டு எங்களுக்கு ஓரத்திலே ..." என்ற பாடலைப் பின்னணியில் நீலக்கடல் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் போது, விருத்தாசலம் ஆசையோடு கனவோடு காத்திருந்த அவரின் காதலி மரியதாஸ் சம்மட் டியோடு போக மனநிலை நொந்துபோக , சம்மடடி செமியோனும் பிலோமினா கற்பழிக்கப் பட்டுக் கொலை செயப்பட இழப்பினால் வருந்த, மரியதாஸ சம்மாட்டி நாகம்மாவை ஊரை விட்டுப் கூடிக்கொண்டு போகிறார் 


                         இலங்கைக்கு எந்த விதத்திலும் சம்பந்தமே இல்லாத  கூளைக்கிடாய் என்ற பிளிக்கன் பறவைகளும் தங்கள் சொந்த ரஸ்சிய நாட்டு சைபிரியாவுகுப் போக , மீண்டும் ஒரு மீன்பிடிப் பருவம் முடிவுக்கு வருகிறது. வாழ்கை தொடருது. பிளிக்கன் பறவைகளின் வரவையும்  அவைகளின் புறப்படுதலையும் சிம்போலிக் ஆக செங்கை ஆழியான்  அவர் நாவலில் எழுதி இருப்பார். வாடைக்காற்று எடுத்த டீம்  அதை  இன்னொருபடி மேலே போய்  விஷுவல் ஆக  வெள்ளித்திரையில் பின்னி எடுத்தார்கள் .

                             கண்களில் கண்ணீரை வரவழைத்து , உலகம் மறந்து கடற்கரை மணல் வெளி எங்கும் வலியோடு யதார்த்தமாய் வாழ்க்கை சொன்ன அழகின் அற்புதம் வாடைக்காற்று' , தென்னிந்திய சினிமா ஜிகிணா முகப் பூச்சு , அளவுக்கு அதிகமான மேக் அப் , நேரம் கெட்ட நேரத்தில கனவுக் காட்சி, ஹீரோவுகுக் கும்மியடிக்கும் குறுப் டான்ஸ் , இதுபோல ஒண்டுமே இல்லாமல் , மீனவ மக்களின் வியர்வையின் வாசத்தை, அவர்களின் இளகிய இதயத்தை திரையில உணரவைத்த அந்தப் படம், ஒரு கவிதை போல ஜோசிக்க வைத்து முடிவு இன்னொரு பருவத்தின் தொடக்கமாகி முடிகிறது.


                                 நம்மவர்களும்  சளைத்தவர்கள் இல்லை  என்று  சேட் கொலரை தூக்கி விட்டு  பெருமைப்பட வைத்த விதத்தில் வாடைக்காற்று   ஒரு பெருமழை பெய்து  முடித்த நிகழ்வுபோல இருக்கும்  அந்தத் திரைப்படம் பார்த்து  முடியும் போது .  அதைவிட அந்தப் பெருமழையில்   நனைந்தது  போலவே  உணர்வோடு ஓட்டிகொண்டு சில  கண்ணீர் துளிகளையும்  சிந்திவிட்டு வரவேண்டிய ஒரு காவியம்  வாடைக்காற்று.

.


Sunday 23 August 2015

பாரதியார் சிலையடி ..

யாழ்பாணத்தில் நம்ம பேட்டை, புவனேகபாகு கோவில் கட்டி , சிங்கை நகர் மன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூரில் பாரதி சிலையடி! எங்களின் வீடு இந்த பாரதியார் சிலையிட்கு மிக அருகில் முன்னொரு காலத்தில் இருந்தது. " பொய்யான சில பேர்க்கு புது நாகரகம், புரியாத பல பேர்க்கு எது நாகரீகம்" எண்டு எண்டு சொல்லிக்கொண்டே . பாடிகொண்டே போய்கொண்டு இருக்கின்ற உலகத்தில் வாழ்ந்து முடிய முன் வாசம் இழந்துபோன வீடு! 

                                    சென்றமாதம் யாழ்பாணம் போன நோர்வே வாழ் நண்பர் , புல்லாங்குழல் ஆசிரியர் , திருச்செல்வம்

                            " அரசன் இவடம் நினைவு இருக்கா ? " என்று கேட்டு இந்தப் photo அனுப்பி இருந்தார் !

                                மிகச் சிறிய வயதில் இந்த சிலை இருந்த இடத்தில அரசமரம் நின்றது.சடைச்சு வளர்ந்த விசாலமான அந்த மரம் சந்தி முழுவதுக்கும் நிழல் கொடுத்து கொண்டு இருந்தது. அது பட்டுப்போய் ஒரு கட்டத்தில் அதை ஒரு முதியவர் கண்டக் கோடாலி போட்டு அடிமரத்தில் இருந்து தறித்து விழுத்தியது நினைவு இருக்கு. அரசமர நினைவுகளில் தான் இவடத்தை அரசடி என்பார்கள்.

                                 இந்த சந்தியில் ஏன் எட்டயபுரம் சுப்பிரமணிய பாரதியாருக்கு சிலை வைத்தார்கள் என்று தெரியவில்லை. எப்படியோ பாரதியார் வந்தபின் இந்த இடத்தை பாரதி சிலையடி என்பார்கள்.விடுதலைப் போராட்டம் அகோரமாக நடந்த காலத்தில் எல்லா இயக்கங்களும் தங்கள் எழுச்சிப் பாடல்கள் , வீர மரணம் ,நினைவு நாட்கள் எல்லாத்துக்கும் மஹாகவி பாரதியாரில தான் லவுட் ஸ்பிகர் கட்டி அலற விடுவார்கள்.

                                   தெருப் புழுதி எல்லாம் அள்ளிக்கொட்டி இந்த சிலை எப்பவும் பனங்காய்க்கு திருநீறு அள்ளி அடிச்ச மாதிரி இருக்கும் , ஆனால் பாரதியார் நினைவு நாளுக்கு மட்டும் ,சிலையைக் கழுவித் துடைத்து யாழ்பாணம் முனிசிப்பால்டி நிர்வாகம் இந்த சிலைக்கு மாலை போட்டு,கந்தர்மடப் பள்ளிகூடப்பிள்ளைகள் வந்து சுற்றி நின்று " வந்தே மாதரம்... வந்தே மாதரம்... " என்று பாடி இருக்கிறார்கள். அன்றைக்குத்தான் பாரதியார் மாலை போட்டு கொஞ்சம் பளிச் என்று சந்தோசமாக இருப்பது போல இருக்கும் .

                                      பலர் பல இயக்கங்களுக்கு அள்ளுப்பட்டுப் போக இந்த சிலையடி ஒரு காரணம். நல்லூர் திருவிழா நேரம் எல்லா இயக்கங்களின் தெருக்கு கூத்து, எழுச்சி நாடகம் சிலையடியில் நடக்கும். ஈபிஆர்எல்எப் இயக்கப் பேச்சாளர் டேவிட்சன் அவர்களின் புரட்சிகர அறைகூவல் சொற்பொழிவுகள் நடக்க, முதல் முதல் பிப்டி கலிபர் வான்நோக்கி சுடும் சுடுகலன் துப்பாக்கி பெரிசுக்கு வந்த நேரம் அதை அவர்கள் பிக்கபில் பொருத்தி சிலையடியில் காட்சிக்கு வைத்தார்கள்.

                                       இருவத்தி ஐந்து வருடங்களின் முன் இந்த இடம் இப்ப இந்தப்படத்தில உள்ள மாதிரி இருக்கவில்லை. முக்கியமா இவளவு வெளிச்சம்,பரபரப்பு ,விளம்பரங்கள்,சீமெந்துச் சுவர்கள் ,அகலமான வீதிகள் இல்லை. மிகவும் அடக்கமாக நிறைய மரங்கள் கிடுகு வேலியில் சாந்து கொள்ள ,அடம்பர அவசரம் இல்லாத மனிதர்கள் ஆசுவாசமாக நின்று கடக்கும் ஆத்மாநாமின் கவிதை போல ஒரு வித ஆனந்தக் கிளர்சியில் இருந்தது.

                                      1989 இல் இந்திய அமைதிப்படை ராணுவத்துடன் நடந்த முதல் சண்டையில பாரதியாரின் சிலை உடைந்து தலை பறந்தது ! பின்னர் சிலைக்கு முன்னால் இருந்த வீட்டில் காம் அமைத்து சென்றி இல் இருந்த பஞ்சாப் ரெஜிமென்ட் சீக்கிய ஜவான்கள் ,பாரதியாரின் தலைப்பாக்கட்டு , முண்டாசுத் தாடி, அருவாள் மீசையைப் பார்த்த அந்த ஜவான்கள்

                        " அட இவரு நம்மட பஞ்சாப் சிங் ஆளுப்பா " என்று சொல்லிச் சொல்லி இந்த சிலைய மறுபடியும் திருத்தி அழகான சிலை ஆக்கினார்கள் !

                                         அண்மையில் பாரதியார் கவிதைகள் பல Amazen ஒன்லைனில படித்தேன், அதோட பாரதியார் வாழ்ந்தவிதம் பற்றியும் ஒரு புத்தகம் படித்தன் ,பள்ளிபடிக்கிற காலத்தில அப்பா ஒரே இம்சை அதுகளை படிக்கச்சொல்லி,அப்போதெல்லாம் ஆர்வம் இல்லை, கரணம் பாரதியாரின் தமிழ் பண்டிதர்களின் தமிழ் எண்டு நினைத்துருந்தது,ஆனால் அவரின் தமிழ் ஒருவித கவிதைக் கவர்ச்சியான தமிழ் என்று இப்போது அறியமுடிகிறது .

                                   நான் கிடாரில ஆங்கில பாடல்கள் பாடும்போது, அவைகளின் Lyrics கொஞ்சம் ரசித்து நோண்டி பார்ப்பவன். பாரதியார் பாடல் படித்தபோது,அவரும் அதே Lyrics ஸ்டைலில பாடல்கள் எழுதியுள்ளார், இசை அமைக்க தேவையான மாதிரி அவரே அழகா எழுதி இருக்கிறார். அதில் பல கவிதைகள் பாடல்களாக வந்துள்ளது உங்களுக்கு தெரியும்.

                                                     பாரதியார் ஏழை , அவரோட அன்பு மனைவி செல்லம்மாவுக்கு ஒரு பட்டுசேலை வாங்கவே தையதக்க தையதக்க போட்டிருகிறார், ஆனால் கற்பனையில கன்னம்மா என்ற காதலிக்கு பட்டு கரு நீல சேலை கட்டினால் எப்படி இருப்பா எண்டு,அந்த சேலையில வைரங்களைப் பதித்து கவிதை எழுதியுள்ளார், அது இப்படி முடியும் " பட்டுக் கருநீல புடவை பதித்த நல் வைரம் நட்ட நடு நிசியில் தெரியும் நடச்சத்திரங்களடி " எண்டு இயலாமையில் விலாசம் எழுப்பி எல்லா வறுமையான கவிஞ்சர் , புலவர் போலப் பாடியுள்ளார்.

                                                   பாரதியார் அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பிறந்த பிராமண சமுகத்தை விமர்சித்தவர், அதுக்கே அந்த நேரம் நிறைய " தில்" வேண்டும் ,அவர் எட்டயபுர கவிஞ்சன் ஆனபின் பல்லகில் ஏறி பவனிவர வாழ்நாள் முழுவதும் விரும்பி இருக்கிறார், ஆனால் அது நடக்கவே இல்லை .கடைசியாக அவரை யானை தள்ளி விழுத்தியத்தில் இருந்து எழுந்துவர முடியாமல் அவர் இறந்தபோது வெறும் 20 பேர் தான் போனாப்போகுது எண்டு பாடை தூக்க வந்திருகிறார்கள்.

                                              இந்தப் பதிவு போனவருடம் இதே நாள் எழுதியது. பாரதியார் சிலைக்கு அண்மையில் பிறந்து வளர்ந்ததாலோ என்னமோ தெரியலை நானும் இப்பெல்லாம் கவிதை போல சிலதுகளை எழுதிக்கொண்டு இருக்கிறேன்.இந்த சிலைக்கு அருகில் இருந்த " ஞானப்பிரகாசம் ஹோட்டல் " என்ற சாப்பாடுக் கடை பற்றி ஒரு சிறுகதையும்,இவடத்தில கிடந்தது அலைந்த எங்கள் உள்ளூர் தத்துவஞானி " சிங்கி மாஸ்டர் " என்ற சிறுகதையும் சென்ற வருடம் எழுதிப்போட்டு அதைப் பலர் ரசித்து வாசித்தார்கள்.

.

.
.

Saturday 22 August 2015

கப்பல்காரன் வீடு

யாழ்பாணத்தில எங்களின் வீடுக்கு கொஞ்சம் தள்ளி, எங்கள் வீதியின் முடிவில், கப்பல்காரன் வீடு இருந்தது! அந்த வீட்டில் என்னோட மிக சிறிய வயசில், அரச மரக்காலையில் ஸ்டோர் கீப்பர் வேலை செய்த கனகசுந்தரமும் ,அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும், அவர்களின் ஒரே ஒரு அழகு மகள் வக்சலாவும்,ஊருக்கும் இடைஞ்சல் இல்லாமல் , ஒருவருக்கும் இடைஞ்சல் இல்லாமல் அதில வாழ்ந்ததால " ஸ்டோர் கீப்பர் " வீடு எண்டுதான் ஆரம்பத்தில் ஊருக்குள்ள சொல்லுவார்கள் !

                                               அது எப்படி பின்னாட்களில் " கப்பல்காரன் வீடு " எண்டு மாறியது எண்டு சொல்லுறதுக்கு காரணம் யாழ்பாணத்தில 80 களில், எங்கோ அரபிக் கடலிலும் ,அத்திலாந்திக் கடலிலும் ஓடிய கப்பல் யாழ்பாணத்தில் சமூக, பொருளாதார மாற்றத்தை உண்டுபண்ணியதுதான் காரணம் எண்டு உங்களுக்கு நல்லா தெரியும்! இந்தக் கதை கப்பல்காரன் ,வக்சலா என்ற இரு மனிதர்களைப் பற்றியதால், கப்பலைப் பற்றியோ, அது ஓடின கடல் பற்றியோ மேற்கொண்டு அதை நீட்டி முழக்கப் போறது இல்லை!

                                  கனகசுந்தரம் அமைதியான மனிதர், அவரின் மனைவி ஸ்டோர் கீப்பர் மாமியும் அதிகம் வெளிய வராத வீடு உண்டு, வீட்டு வேலை உண்டு என்று இருக்கும் பெண்மணி. வக்சலா ஓரளவு அட்வான்ஸ் லெவல் வரைக்கும் படித்து ,மேற்கொண்டு படிக்க வைக்க வேண்டிய தேவை இல்லாததாலும் , அவா வெளிய போய் உத்தியோகம் பார்க்க ஸ்டோர் கீப்பர் குடும்பம் விரும்பாததால, ஒரு ப்ரோக்கர் பேசிக் கொண்டு வந்த, காங்கேசன்துறை தனபாலசிங்கத்தின் கப்பல் கொம்பனியில வேலை செய்த கப்பல்காரன், எழும்பின ஆம்பிளையா இருந்ததை விட ,கப்பலில வேலை செய்தது கவர்ச்சியா இருக்க ,மறு பேச்சு இல்லாமல் காதும் காதும் வைச்ச மாதிரி பேசி முடித்து, பொன் உருக்கி, பந்தல் கால் போட்டு, கன்னிக்கால் முள்முருக்கு நட்டு,மெட்டி அணிந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, நல்ல நேரதில கலியாணம் கட்டி வைக்க, நாலாஞ்ச சடங்கோட ஸ்டோர் கீப்பர் வீடு கப்பல்காரன் வீடு என்று மாறியது !

                                           எங்கள் அயல் அட்டையில் இருந்த ஒரே ஒரு, ரன்கூன் தேக்குமர தூண்கள் தாங்கி நிக்கும், மலையாளத்து ஓடு போட்ட, வீட்டுக்கு நடுவில திறந்த இடம் உள்ள, நடு வீட்டில ஆவெண்டு நீல வானம் தெரியும், வெயில் விழும் , மழை அடித்து ஊத்தும். ஒரே ஒரு நாட்சார் வீடு ஸ்டோர் கீப்பர் வீடுதான் , ஸ்டோர் கீப்பர் மாமி,அந்த திறந்த நடு இடத்தில மேலே வலை போட்டு காகம் குருவி உள்ளுக்க வராமல் தடுத்து,நல்ல வெயில் வாசியா எறிக்கும் நாட்களில் வேப்பம்ப்பூ வடாகம், மோர் மிளகாய், மிளகாய் வத்தல், நாரத்தங்காய் உறுகாய், புழுக் கொடியல் எல்லாம் காயப்போட அந்த இடம் கம கம எண்டு சாம்பாரு வாசம் அடிக்கும் , 

                                   அந்த திறந்த நடு இடத்தில ஒரு கண்ணன் சிலை இருந்தது, சிலைக்கு கீழே கோபியப் பெண்கள் குழந்தைக் கண்ணனின் பின் அழகை பார்த்து சொக்கி நிக்க, கண்ணன் அந்தப் கன்னிப் பெண்களுக்கு அந்த சின்ன வயசிலேயே மாய லீலை காட்டிக்கொண்டு இருக்க, அதை சுற்றி துளசி மரங்கள் வைத்து வக்சலா அதுக்கு தண்ணி ஊற்றி வளர்த்தா, கிருஷ்ன ஜெயந்திக்கு அதில பூசை வைச்சு எங்களுக்கு அவல் நிறையக் கிடைக்கும்.

                                        ஆனாலும் கப்பல்காரன் வந்தவுடன ,முதல் வேலையா அந்த வீட்டின் முன் பக்கத்தை மொடேர்ன் ஆக்கினார், ஸ்டோர் கீப்பர் மாமி அவாவின் பரம்பரை நாட்சார் வீட்டை உள்ளுக்கு மாற்ற விடாப்பிடியா விடவில்லை, என்றாலும் வெளியே முன்னுக்கு மொடேர்ன் ஆக மாற்ற, அந்த வீடு கொஞ்சம் அவமானம் தாங்கி அமரிக்கன் ஸ்டைலுக்கு மாறியது, பின்ன என்ன கப்பல்காரன் வீடு கட்டுமரம் போல இருந்து சரி வராதே, கப்பல் போலதானே இருக்க வேண்டும், நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் . 

                     நல்ல தேகக்கட்டுடனும் ,விசாலமான தோள்கள் ,கொஞ்சம் துள்ளி துள்ளி நடை என்று   கப்பல்காரன் வடிவான வலிகாமம் வடக்கு பக்கம் தோட்ட வேலை செய்யும் ஆண்கள் போல உறுதியான இறுக்கிப் பிடிக்க வைக்கும் ஆம்பிளை. கன்னத்தில நீண்ட கிருதா விட்டு முகத்தை எப்பவும் சேவ் செய்து இருப்பது முன்னால பார்க்க நடிகர் ரவிச்சந்திரன் போல இருக்க,பின்னால சுருள் முடியை அக்கறை இல்லாமல் பறக்க விட்டுருப்பதை பார்க்க சுருளிராஜன் போல இருப்பார். பாடசாலை நாட்களில் நல்ல விளையாட்டு வீரன் போல இருந்து இருக்கலாம்  உண்மையைச்சொன்னால் என்ன உங்களுக்கு அவர் அழகுக்கு உத்தரவாதமாக பெண்கள் சுழறுவார்கள்.

                                   கப்பல்காரன் கலியாணம் முடிந்து கொஞ்ச நாளிலேயே, கலியான மஞ்சள் குங்கும வாசம் அடங்க முதலே, கப்பலுக்குப் போயிட்டார், போயிட்டு ஆறு மாதம் கழித்து ஒருநாள் டாக்சியில் வந்து இறங்கினார், அவர் கொண்டுவந்த பெரிய பெரிய சூட்கேசை டக்சிகாரன் இழுக்க ஏலாமல் இழுத்து இறக்க ,கப்பல்காரன் பென்சன் அண்ட் கெட்சஸ் வெளிநாட்டு சிகரட் தங்க நிறப் பெட்டியில இருந்து எடுத்து ,அதன் பின் பக்கத்தை பெட்டியிலேயே தட்டி,கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி , ஒரு தங்கநிற லைடரில அதைப் பத்தவைத்து கொண்டு இருக்க ,நாங்கள் எல்லாரும் வேடிக்கை பார்கப் போக எங்களுக்கு, இன்னொரு பெட்டியில இருந்து சொக்கிலட் எடுத்து தந்தார், வக்சலா முகம் முழுவதும் சிரிப்போட சந்தோசமா ரோட்டுக்கே வந்து அவரின் கையைப் பிடிச்சு,

                           " இதில நிண்டு சிகரட் குடிக்க வேண்டாம் , பரிசுகேடு ,ஆட்கள் விடுப்பு பாக்குதுகள்,உள்ளுக்கு வாங்கப்பா "

                                   எண்டு இழுத்துக்கொண்டு போனா , அதுக்கு பிறகு வந்த முதல் கொஞ்ச நாள் கப்பல்காரன் வெளியவே வரவேயில்லை,

                                          சில கிழமையில் அவராவே வெளிய வந்தார் ,எங்களின் வீட்டுக்கு சில நாள் வருவார்,முக்கியமா அவர் எங்க வீராளி அம்மன் கோவிலுக்கு முன்னால இருந்த நயினாரின் பாருக்கு போக தொடங்கினார், அவர் ஏன் அங்கே போறார் எண்டு எல்லாருக்கும் தெரிந்தாலும் அவர் கப்பல்காரன் அதலா அதிகம் அதை யாரும் பெரிதா எடுக்கவில்லை. 

                                                ஊருக்குள்ள கஷ்டப்பட்ட ஆட்கள் குடிச்சா " வெறிக்குட்டி " என்பார்கள் , கொஞ்சம் மத்திய தர ஆட்கள் குடிச்சா " குடிகாரர் " என்பார்கள்,அதுவே பணக்கார ஆட்கள் குடிச்சா அவர் " சாதுவா ட்ரிங்க்ஸ் பாவிப்பார் " என்பார்கள்,கப்பல்காரன் நையினாரிட்ட என்ன குடித்தாரோ தெரியலை,அவர் அந்த பார்ல இருந்து குடிச்சிட்டு எங்க வீட்டுக்கு வருவார், சேர்ட் மேல் பட்டன் திறந்து, நெஞ்சில தொங்கிற புலிப் பல்லு போட்ட இரட்டை வடம் சங்கிலி வெளிய தெரிய கப்பல் போல கொஞ்சம் ஆடிக்கொண்டு வருவார், பின்னக் கப்பல்காரன் கப்பல் போல ஆடாமல் வேற எப்படி ஆடுறது ,நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் .

                            கடைசியா கப்பல்காரன் கப்பல் போறதுக்கு முதல் நாள் இரவு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்,அவர் கப்பலில் என்ன வேலை செய்தார் எண்டு எங்களுக்கு தெரியாது, நான்அவரிடம் சும்மா

                    " இரும்பில செய்த கப்பல் என்னண்டு தண்ணியில மிதக்குது "

                       எண்டு கேட்டேன், அவர் கொஞ்சம் ஜோசிதார்,

                       " நீரே சொல்லும் " எண்டார் ,நான் அப்ப சயன்சில படிச்சுக்கொண்டு இருந்த ஆக்கிமிடிஸ் தத்துவத்தில்

                      " ஒரு பதார்த்தத்தின் கொள் அளவு அந்தப் பதார்த்ததின் நிறை அளவை விட,,,,,,"

                      எண்டு சொல்ல தொடங்க , என்னோட அம்மா இடையில மறிச்சு,

                            " இவனுக்கு விசர் தம்பி, நீர் சொல்லும் தம்பி ,கப்பலில வேலை செய்தா சிங்கப்பூர் செயின் கஸ்டமில டக்ஸ் கட்டாமல் கொண்டு வரலாம் எண்டு கேள்விப்பட்டேன் மெய்தானே "

                        எண்டு கேட்க,கப்பல்காரன் சொண்டை சுளிச்சு சுளிச்சு சிரிச்சு சிரிச்சு

                " ஓம் அன்டி ,கொஞ்சம் உண்மைதான் ,உங்களுக்கு அடுத்தமுறை ஒண்டு கொண்டுவாரன் "

           எண்டு போட்டு ,எனக்கு

                         " நீர் சொல்லுறது எனக்கு விளங்கேல்ல ஆனாலும் கப்பல் தண்ணியில மிதக்கிறதாலதான்,நாங்கள் உசிரோட போட்டு உசிரோட வாறம் "

                     எண்டு சொல்லி சொண்டை சுளிச்சு சிரிச்சுப்போட்டு ,

                    " அன்டி இந்த முறை வேலைக்குப் போற கப்பல் ஹம்பேர்க் போகுது "

                        எண்டு சொல்லி கொஞ்சம் சந்தேகமா சிரிச்சார்,

                       அம்மா " அதெங்க இருக்கு " எண்டு கேட்டா
                       
                       அவர் " அது அன்டி, யுரோபாவில ஜெர்மனியில இருக்காம் " எண்டுசொல்ல

                      அம்மா " மெய்தானே,நீரும் எல்லா இடமும் பார்த்து எங்களுக்கும் கதைகளை பின்ன வந்து சொல்லுமன் " எண்டு சொல்ல,கப்பல்காரன் அப்பவும் கொஞ்சம் சந்தோசமா,   ..அதே நேரம் சந்தேகமா சிரிச்சார்.

                           அவர் போன சில வாரத்தில் இருந்து வக்சலா வீராளி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை சுமங்கலி தாலி பூசை செய்தா,செய்து முடிய அதில கொளுத்திய குத்துவிளக்கை கோவிலில் இருந்து அணையாமல் வீட்டுக்கு கொண்டுவருவா, ஸ்டோர் கீப்பர் மாமி சுளகால அந்த விளக்கு காற்று அடிச்சு அணையாமல் இருக்க பிடிச்சுக்கொண்டு வர ,வக்சலா கப்பல்காரன் கொண்டுவந்த நகை எல்லாம் ஆள்ளிப் போட்டு ,அவா குத்துவிளக்கை கொண்டு வாறது, ஒரு குத்துவிளக்கு இன்னொரு குத்துவிளக்கை தூக்கிக்கொண்டு வாற மாதிரி இருந்தது, கொஞ்சநாள் எல்லாம் வழமைபோல இருக்க, கிட்டதட்ட ஆரம்பத்தில் அவர் எப்போதும் போல டக்ஸியில் வந்து இறங்குவார் எண்டு வக்சலா வாசலைப் பார்த்து காத்து இருக்க, ஒரு கட்டத்தில் தாபால்காரனை தேடியே போய்

               " எங்களுக்கு கடிதம் ஏதும் இருக்கா "

                             எண்டு கேட்டு கொஞ்சம் சந்தேகம் வர தொடங்க ,எப்படியோ அவாவுக்கு மனதளவில் ஒரு ஏக்கம் இருந்த மாதிரி இருக்க, துளசி மரங்களுக்கு தண்ணி ஊத்திரத்தை நிப்பாட்ட, அவை வாடதொடங்க, ஒரு நாளும் கோவில் குளம் பக்கம் போகாத ஸ்டோர் கீப்பர் திடீர் எண்டு திருநீறு பூசிக்கொண்டு கோயிலுக்கு போக வெளிக்கிட, ஸ்டோர் கீப்பர் மாமி அடிக்கடி தலை சுத்துது எண்டு பிரசர் செக் பன்ண தொடங்க, ஏறக்குறைய அந்த வீடில இடி விழுந்து, பழையபடி கப்பல்காரன் வீடு ஸ்டோர் கீபர் வீடுபோல மாற, கப்பல்காரன் வரவே இல்லை, 

                            எங்களின் பெரிய மாமாவின் மகனும் கப்பலில் வேலை செய்தார் ,அவரும் இந்தக் கப்பல்காரனும் பல வருடம் முன் எண்ணைக் கப்பலில் வேலை செய்த போது தெரியும், அவர் ஒரு முறை வந்த போது ,

                        " சின்ன மாமி,விசியம் தெரியுமே "

                          எண்டு அவர் கேள்விப்பட்ட ,, கப்பல் காரன் போன கப்பல் ஜெர்மனி போனது அங்கே அவர் ஹம்பேர்க் ஹபர்ல கப்பல் நங்கூரம் போட இறங்கி , இரவு நடன களியாட்ட விடுதிக்குப் போனது ,அங்கே ஒரு ஜெர்மன் வெள்ளை குதிரையைக் கண்டது,அவள் அவரை இழுத்துக்கொண்டு போய் ஏழு கடல் தாண்டி சொர்க்கம் காட்டியது, அவர் அங்கேயே அகதியா பதிந்தது , எல்லாம்

                         " சின்ன மாமி ஒருத்தரும் சொல்லிப் போடாதயுங்கோ உங்களுக்கு மட்டும் சொல்லுறன் "

                             எண்டு என்னோட அம்மாவிடம் சொல்ல,அம்மா அந்த தகவல் ரகசியமா வைச்சால் தொண்டைக் குழி க்குள்லால சோறு தண்ணி இறங்காத மாதிரி தவிச்சு, கடைசியில் ஒருநாள் அதை கீரை விக்கக் கொண்டு வாற ப்ரேகிங் நியூஸ் குஞ்சரதுக்கு சொல்ல,,குஞ்சரம் அதை வக்சலாவின் சொந்தகாரருக்கு

                " அம்மளாச்சியான ஒருத்தரும் சொல்லிப் போடாதயுங்கோ உங்களுக்கு மட்டும் சொல்லுறன் "

                    எண்டு சொல்ல ,எப்படியோ கதை கசிந்து பெட்டிசம் பாலசிங்கத்துக்கு போக, திரைக் கதை வசனம் தொடங்கியது .....

                              அதுக்குப்பிறகு பல நாட்கள் நாட்சார் நடுவில இருந்த கண்ணன் சிலையை பார்த்தபடி, ஒருவருடனும் பேசாமல் ,கப்பல் கவுண்டதுபோல வக்சலா இருப்பதைப் பார்த்து இருக்கிறேன் ,எனக்கு அந்தக் கண்ணன் ஜெர்மன் பெண்களுடன் குத்து டான்ஸ் ஆடுற மாதிரி இருந்தது அந்த சிலையைப் பார்க்க...

                               அதுக்கு பிறகு சண்டை நாட்டில அமோகமாக தொடங்க வீட்டுப் பிரைச்சனைகளை மேவி நாட்டுப் பிரச்சினை வர ,,நான் வேற நிழல் விசியங்களை ஈடுபடத் தொடங்க ,,ஒரு கட்டத்தில் வக்சலாவுக்கு என்ன நடந்தது எண்டு எனக்கு அதிகம் தெரியாது ,தொண்ணுற்றி ஐந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கையில் இடம்பெயர்ந்த போது , நாங்களும் இடம்பெயர்ந்து ,அதன் பின் நானும் புலம் பெயர்ந்து வந்திட்டேன் ..

                              அந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட இருபது வருடங்களின் பின் நான் ஜெர்மனி சுற்றிப் பார்த்த போது, எங்களின் அபிமான கப்பல்காரன் கடைசியா இறங்கிய ஹம்பேர் நகரமும் போனேன், ஆனாலும் கப்பல் காரன் பெயர்த் தெரியாமல் எப்படி தேடுறது எண்டு குழப்பமா இருக்க, நிறைய தமிழ் ஆட்கள் கார்ல வந்து இறங்கி சூப்பர் மார்கெட் போறதும்,வாறதுமா இருக்க, ஜோசித்துப் போட்டு யாரிடமும் ஒண்டும் கேட்கவில்லை ,

                                பின்னேரம் ஹம்பேர்க் ஹபருக்கு அருகில் ஒரு இரவு விடுதியில் தண்ணி அடிப்பம் எண்டு போக,அதில ஒரு வயதான தமிழர் ஜெர்மன் வெள்ளைகளுடன் இருந்து ஜெர்மன் பாசையில் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தார் ,அவர் சிரிக்கிறதைப் பார்க்க கப்பல் காரன் சொண்டை சுளிச்சு சுளிச்சு சிரிக்கிற மாதிரி இருக்க,அவருக்கு கிட்டப் போய்

                     " நீங்கள் தமிழா எண்டு " கேட்டேன்,அவர் " ஓம் " எண்டார்,

                     " நீர் எங்க இங்க ஹம்பெர்கில் இருகுர்ரீரோ, உம்மை நான் ஒரு நாளும் கண்டதில்லையே" என்றார்,

                  நான் வசிக்கும் நாட்டை சொன்னேன்,

                            அவர் " அப்ப இதில இருமன், இவங்கள் டொச்சில தான் கதைபான்கள், இவன்கள் என்னோட நண்பர்கள் ,உமக்கு டொச் தெரியுமோ " என்றார்

                நான் கொஞ்சம் தெரியும் எண்டேன். 

                    கொஞ்சம் ஜோசித்துப் போட்டு ,

                      " உங்களுக்கு வக்சலாவை தெரியுமா " எண்டு கேட்டேன்,

                      அவர் திடுக்கிட்டார், என்னை காலில் இருந்து தலை வரை பார்த்தார், நெத்தியில பெரு விரலை வைச்சு தேச்சார் , நாடிய உள்ளங்கையால தடவ,அவரோட இருந்த ஜெர்மன் காரர் என்னை ஏதோ கலகக்காரன் போல பார்த்து, அவரிடம் என்னவோ கேட்க , அவர் அவர்களுக்கு என்னவோ சொல்லிப்போட்டு,

           "வெளியால வாரும் ,உம்மோட கதைக்க வேணும் , " என்றார் ,

                           ஒரு ஜெர்மன் பெண் அவரை சந்தேகமா என்னவோ கேட்க, அவர் கையால ஒண்டும் இல்லை என்பது போல சைகை செய்து,

                    " நீர் வெளியால வாரும் ,உம்மோட கதைக்க வேணும்,சிகரட் பத்துவீரா "

                             எண்டு ஒரு சிகரட் எனக்கு தர நான் வெளியாளகொஞ்சம் துள்ளி துள்ளி நடையில்  கன்னத்தில நீண்ட கிருதா விட்டு முகத்தை அப்பவும்  சேவ் செய்து நான் தேடின ஆள் போலதான் இருந்தார். வெளிய வந்தவுடனே நான் சிகரட்டை வாயில வைச்சு பத்த வெளிக்கிட அவர்

                        " உமக்கு இங்கத்தை  சிஸ்டம் தெரியாது போல,, கொஞ்சம் பொறும் ஐசே , இங்க எல்லா இடமும் பத்த முடியாது போலிசே கண்டால் அமத்துவான், "

                     எண்டு ஒரு பச்சை சதுரம் போட்ட இடத்துக்கு கொண்டு போனார் ,,போய் அதில நிண்டுகொண்டு சிகரெட்டை, பெட்டியின் பின்னால சரிச்சு தட்டி, கொஞ்சம் விரல்களுக்கு இடையில வைச்சு சுள்ளட்டி போட்டு , வாயில வைச்சு லைட்டரை டக் எண்டு அமத்தி ,உள்ளுக்க இழுத்து போட்டு சொல்ல தொடங்கினார்,,,,,,

               நான் கேட்டேன்,,கிடத்தட்ட ஒரு அரைமணித்தியாலம் சொன்னார், சொல்லிப்போட்டு

              " அவ்விடர் சேன் " (போட்டு வாறன் )

                     எண்டு ஜெர்மன்காரர் போல டொச்சில சொல்லிப்போட்டு போயிட்டார்,,நான் அவர் தந்த சிகரட்டை பத்தவில்லை,காலுக்கு போட்டு மிதித்து நசி நசி எண்டு நசித்தேன்,பிறகு அதுக்கு மேல காறித் துப்பினேன், அவர் அந்த பப்புக்கு வெளிய நிண்டு பார்த்துக்கொண்டு இருந்திட்டு,ஜெர்மன்காரர் போல, தோளைக் குலுக்கி ,கை இரண்டையும்

                                 .." நடந்தது நடந்து தான் " ... என்பதுபோல காற்றுக்கு சொல்லிப் போட்டு உள்ளுக்க போட்டார்..
 .