Thursday 20 August 2015

புறாக்களுடன் பேசியவள் ...

வாழ்வாதார  வலிகள்  நம்மைச்சுற்றி  இருக்கும்  மனிதர்களுக்கு   எப்பவுமே  வாழ்வா  சாவா  என்ற  விளிம்புநிலைக்  கோடுகள்  வரைந்து வைக்கும்  வட்டம். எனக்கு  எந்தவிதமான  பிரச்சினைகளும்  இல்லை  என்ற  சுயநல  புத்தியில்  நாங்கள் நழுவிவிடுகிறோம் . அதன் ஒருகண வலி நம்மை  அதிகம் பாதிப்பதில்லை. ஆனால் சில மனிதர்கள் வருவார்கள்  அவர்களின் கதை போட்டது போட்டபடி அவளவு  இலகுவாக  நம்மை விட்டுப் போகாது .

                                                         வேலை நாட்கள்  நேரத்தை செக்கன்  கணக்கில்  விழுங்கும் ஒஸ்லோவில் அதிகம் அவசரமான  பிரயாணிகள் மெட்ரோ நிலத்தடி ட்ரைனில் இருந்து அவசரமாக இறங்கும் மத்திய நிலத்தடி நிலையத்தில் இருந்து ,  வெஸ்ட்லி லின்சே என்ற மேற்கு  முடிவை நோக்கிப் போகும் திசையில் மூன்றாவதாக உள்ள டேசனுக்கு வெளியே புறாக்களுக்கு தீனி போட்டுக்கொண்டு, கையில  " போல்கட் ஆர் போல்கட் " என்ற நோர்வே மொழி சஞ்சிகையைக் கையில் வைச்சுக்கொண்டு கணுக்கால் வரை  நீண்ட பாவாடை அணிந்து,கைகளில் நிறையப் பாசிமணி மாலைகள் போட்டுக்கொண்டு  புறாக்களுடன் ருமேனிய ஜிப்ப்சி மொழியில் அவள்  பேசிக்கொண்டு இருந்தாள்.

                                         முன்னைக் கலாச்சார நினைவிடங்கள் நவீன காலத்துக்கு சமாந்தரமாய் இப்பவும் வரலாறு சொல்லும் பகுதியில் இருக்கும் அந்த ஸ்டேசனில் அடிச்சுப் பிடிச்சு இறங்க எனக்கு எப்பவுமே அவசரமான அலுவல்கள் இருப்பதில்லை, ஆனாலும் வில்லோ மரங்கள் வளைந்து வழி விடும் மரத்தோப்புக்கள் இன்னும் மிச்சம் இருக்கும் அந்த இடத்தில காலாற நடக்கும் நடைபாதைகளில் எப்பவுமே சுவாரசியமான மனிதர்கள் ஏதாவது எப்பவுமே எதிர்பாராமல் செய்துகொண்டு இருப்பதால், அந்த ஸ்டேசனில் இருந்து கொஞ்சம் வெளியே விடுப்புப் பார்த்துக்கொண்டு நடப்பதில் ஒரு அலாதியான இன்பம் உத்தரவாதமாக இருக்கும் .


                                       பல நாட்கள்  மனித நடமாட்டம்  குறுக்கமறுக்க நேரமில்லாமல் வேகமாகக்  கடக்கும்  சதுக்கம் போன்ற அந்த  இடத்தை வேடிக்கை  பார்த்துக்கொண்டே  நடக்கும்  போது அவளைக் கண்டு இருக்கிறேன். அவள் நட்பாகச் சிரிப்பாள். கையில உள்ள சஞ்சிகையை தூக்கிக்  காட்டுவாள் , நானும் நட்பாகச் சிரிச்சு கையைத் தூக்கி ராணுவ மரியாதை  போல சலுட் அடிச்சுப்போட்டு அவசரமாக நெரிசலில் நழுவிக்கொண்டு இருப்பேன். காற்றிலேயே ஈரமான அனுதாபம் ஒட்டிக்கொண்டு இருக்கும் அவள் பதிலுக்கு நன்றியோடு சிரிக்கும்போது .

                                        ஒருநாள் ,    முதல் முதல் அவளைச் சந்தித்த போது


                          "ஹலோ பிரென்ட் ,  சிமோல் மணி  பிக்  ஹெல்ப்   ,  பிரெண்ட் ,டூ மச் பிரப்பிளம் லிவ்விங் நோர்வே  , பை வன் மகஸின்  ,,ப்ளிஸ் பிரெண்ட்  "


                                 என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி , அந்த " போல்கட் ஆர் போல்கட் " என்ற சஞ்சிகையை ஏறக்குறைய என் முழங்கையில திணித்து கட்டாயம் வேண்டச் சொல்லி சிரித்தாள்.


                                   " போல்கட் ஆர் போல்கட் " என்ற அந்த நோர்வே மொழி சஞ்சிகையின் தமிழ் மொழிபெயர்ப்பு " மனிதர்கள் எப்பவுமே மனிதர்கள் "  என்ற அர்த்தம் கொடுப்பது. அதை நாடு இல்லாத ரூமேனிய ஜிப்சிகளுக்காக  இரக்கப்படும் நோர்வே நாட்டு மனிதாபிமானிகள் வெளியிட்டு அதை விற்கும் காசை அவர்களுக்கு கொடுகிறார்கள் .


                               " போல்கட் ஆர் போல்கட் " சஞ்சிகையை விட அவளின் அப்பாவித்தனமான சிரிப்பு கவர்சியாக இருக்க, அவள் அடிக்கடி உடம்பை வெட்டி வெட்டி பேசுவது பந்தல் காலில் பரிசம் போட்ட பவள மல்லிகை போல மின்னிக்கொண்டு இருக்க , அவளோடு பேச்சுக் கொடுக்க நினைக்க முதலே அவளே பேச்சைத் தொடக்கினாள்.

                                         தன்னோட பெயர் மாரியா என்று சொன்னாள். தன்னுடைய நாலு பிள்ளைகளும் ருமேனியாவில் புசாராஸ் இல் தன்னோட வயதான அப்பா,அம்மாவோடு என்றும், அவள் மட்டும் தன் கணவனுடன்  ஒஸ்லோவின் தெருக்களில் வசிப்பதாகச் சொன்னாள்.  திருப்பியும்,


                       " பிரெண்ட்,,மை  குட் பிரெண்ட் ,,... சிமோல் மணி  பிக்  ஹெல்ப் .  .....ப்ளிஸ் மை பிரெண்ட் . பை வன் மகஸின்....சிமோல் மணி நத்திங் போர் யூ ...பிரெண்ட் ..."


                        " ஹஹஹஹாஹ்  நல்ல டிப்பிலோமாடிக் டெக்னிக் ,,,உன் வியாபர உத்தி  "  என்றேன் 

                          " ஒ அதுக்கு என்னத்துக்கு ஹஹஹஹஹா என்று சிரிப்பு வருகுது ,,,அதை கொஞ்சம் சொல்லு "

                                  " இல்லை,,இந்த உலகத்தில வாழுற எல்லா மனிதர்களுக்கும் ஒரு நாள் , சிமோல் மணி நத்திங் போர் , என்ற ஒரு நிலை வரும்  அந்த நேரம் ஏழை,பணக்காரன் என்ற ஒரு தகுதியே இருக்காது  அதை நினைச்சேன் சிரிப்பு வந்தது "

                              " ஒ ,,அப்படி  கடைசிக் கட்டத்தை ஜோசிச்சியா,  பிரெண்ட்,,மை  குட் பிரெண்ட் ,,... சிமோல் மணி  பிக்  ஹெல்ப் .  .....ப்ளிஸ் மை பிரெண்ட் . பை வன் மகஸின்..."

                                           என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி , அந்த " போல்கட் ஆர் போல்கட் " என்ற சஞ்சிகையை ஏறக்குறைய கையில திணித்து வேண்டச் சொல்லி சிரித்தாள். புத்தகம் சஞ்சிகை வாசிக்க நேரம் இல்லாததால் ,அதை வேண்டி  சும்மா எங்காவது வைச்சுபோட்டு போவது  அதில் வேலை மினக்கெட்டு எழுதிய எழுத்தாளர்களை அவமதிப்பது என்று எப்பவும் நினைப்பதால் அதை வாசிக்க  விரும்பாத நிலையில்  நான் அதை வேண்ட ஆர்வப்படவில்லை.


                                   "  சஞ்சிகை வேண்ட காசு இல்லைப்போல இருக்கு,,,பரவாயில்லை , சரி சில்லறை இருந்தா தா , கொக்கக் கோலா வேண்டிக்குடிக்க ஆசையாக இருக்கு "


                                       என்றாள்  ,சில்லறை கொடுத்தேன். அவள் பிளாஸ்டிக் போத்தலில் அடைத்த கொக்கக் கோலா குடிப்பதில்லை என்று சொன்னாள் , கண்ணாடி போத்தலில் அடைத்து வரும் கொக்கக் கோலா தான் குடிப்பேன் என்றாள் . அதிகம் கண்ணால் பேசினாள்.வித்தைக்காரி போல அவள் கண்கள் ஒரு வட்டத்துக்குள் அடங்க மறுத்து எப்பவும் காளிதாசனின் மேகதூதத்தை

வரிக்கு வரி  இமை வெட்டில் வழிய விட்டது.

                                              " ஏன் அப்படி அதில என்ன விசேஷம்,நான் வேலை செய்யும் இடத்திலும் கண்ணாடிப் போத்தல் கொக்கக் கோலா தான் பரிமாறப் பாவிப்பது,,அதுக்கு நிறையக் காரணம் இருக்கு,,உனக்கு என்ன வந்தது பிளாஸ்டிக் போத்தலில் அடைத்த கொக்கக் கோலா குடிப்பதுக்கு  "  என்று கேட்டேன்


                                                    " பிளாஸ்டிக் போத்தலில் அடைச்சு வாறது குடிக்கிறதும் பச்சைத் தண்ணியை கையில பிடிச்சு வாயால் உள் இழுத்துக் குடிக்கிறதும் ஒன்றுதான்,,அதில ஒரு அலாதியான சுவையும் இல்லை .." என்றாள்.


                               இவள் விளக்குமாத்துக்குப் பட்டுக்  குஞ்சரம் கட்டின மாதிரி  கொஞ்சம் ரசனை உள்ளவள் போல இருந்ததால் கையோடு அவளைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தேன் . வழமை போல வறுமை அவள் உரையாடலில் முதன்மையாக இருக்க ,  இப்போது கர்ப்பமாக இருப்பதாக சொன்னாள். அதாலவோ என்னவோ தெரியவில்லை அவள் நாலு பிள்ளை பெற்றும் இன்னும் அவரைக்கொடி போல அங்கங்களில் இளமையாக இருந்தாள் . வெள்ளரிக்காயின் வெளித் தோல் போல வெளிறி இருந்தது அவள் முகம்.


                            என்னைப் பலமுறை கவனித்து இருக்கிறாள்.என்னை இந்தியா நாட்டவர் என்று நினைச்சாளம், புச்சாரஸ்சில்  அவள் வீட்டில் குடும்பமாக எல்லாரும் இருந்து இரவில் ஹிந்திப் படம் விடியோ கேசட்டில் போட்டு  பார்ப்பாளம் என்றாள். " ஆச்சாரே போல் தி ஹே ஹை சோரா..   " என்று என்னமோ ஒரு பாட்டு பாட்டிக்காட்டினாள் . அவள் குரல் முகேஷ் இன் ஆம்பிளைக் குரல் போல இருந்தது , அவள் பாடுற முகத்தைப் பார்க்க ஹேமமாலினி காஸ்மீர்  ஏரிக்கரையில் மிதந்து வெள்ளித்திரை வாற மாதிரி இருந்து . கடைசியில் அந்தப் பாதையால் நான் போவதையும் வருவதையும் தான் கண்டுள்ளதாக சொன்னாள்.உண்மையா சொல்லுறாளா அல்லது பொய்க்கு சொல்லுறாளா என்று அந்த நேரம் அவள் கண்களில் கண்டுபிடிக்க எந்த சலனமும் இல்லை.


                                  " ஏன் எப்பவும் அவசரமாக இந்த வீதியால் போய்க்கொண்டு இருக்கிறாய்,,ஒரு நாள் கூ ட கொஞ்சம் நின்று நிதானமாய் புறாக்களை இரசித்ததை நான் கண்டதே இல்லையே அப்படி என்னதான் வேலை செய்கிறாய் " என்று சிரித்து சிரித்து கேட்டாள் .


                                      நான் " ரெச்டோறேண்டில் குக் ஆக வேலை செய்கிறேன்  உன்னைப் போல வீதி எங்கும் அலையும் விதி போல எனக்கு அமையவில்லையே. வேலைக்கு போகும்போதும் வரும் போதும் மட்டுமே வீதிகளை வேடிக்கை பார்க்க வாவது நேரம் கிடைக்குது " என்றேன் .


                                   "  ஒ.... அப்படியா நீ வேலை செய்யும் ரெச்டோறேண்டில் எனக்கும் ஒரு சின்ன எடுபிடி வேலையாவது எடுத்து தாவேன் , இந்தப் புத்தகம் வித்து கால் வயிறும் அரை வயிறுமா அல்லாடுகின்றேன் , மரக்கறி வெட்ட ,கோப்பை கழுவ தெரியும் ,சின்ன வேலையாவது எடுத்துத் தாயேன் புண்ணியமாப் போகும் "   என்று அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டாள்.


                                " இங்கே நோர்வே பாசை தெரியாமல் ,சுடுகுது மடியப்பிடி என்று நிண்டுகொண்டு  வேலை எடுப்பது கஷ்டம்பா ,நீ வேற என்ன வேலை உன் நாட்டில் செய்து இருகிறாய் அதை சொல்லு "

                              " கோடை காலத்தில் உள்ளூர் தோட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை நேரம் இழுக்கப் போவேன், உருளைக்கிழங்கு வேண்டிய மாதிரி வேண்டிய ஸ்டைலில் சமைக்க தெரியும் பிரெண்ட்.."

                                "  உனக்கு தோட்டப் பராமரிப்பு வேலை தெரியுமா,தெரிந்த நோர்வே நண்பர்களுக்கு சொல்லி வைச்சால் சில நேரம் அவர்களின் தோட்டத்தை பராமரிக்க வேலை சில வாரங்கள் வெய்யில் நல்லா எறிக்கும் கோடை காலத்தில் கிடைக்கலாம் "

                          "   ஹ்ம்ம்,,எனக்கு தோட்டத்தில போய் மலர்களை மட்டும் ரசிக்கத் தெரியும்,,அதில வேலை செய்யத் தெரியாதே  பிரெண்ட்  " என்றாள் 

                       " அப்ப கஷ்டம் தான், எனக்கு தெரிந்தவரை நோர்வே ஒரு அகராதி பிடிச்ச நாடு ,இங்கே வேலை தேடி எடுப்பது இலகு அல்ல,,அதுவும் நீ ருமேனியா நாட்டு ஜிப்ப்சி ,,கொஞ்சம் ஜோசிப்பாங்க இந்த நாட்டவங்க "

                         " சரி, பிரெண்ட் ,,,அப்ப நீ வேலை செய்யும் ரெச்டோறேண்டில்,,உன் செல்வாக்கைப் பயன்படுத்தி கதைத்து பாரேன்,,பிரெண்ட்   " என்றாள்  

                                 நான் அதுக்கு சும்மா அனுதாபமாக சிரிச்சுப்போட்டு கதையை மாத்த புறாக்களைப் பார்த்தேன். நோர்வேயில் ரோமானிய மக்களை கள்ளர் என்று தான் பொதுவாக நினைகிறார்கள். ஒரு கதைக்கு இவளை என்னோட வேலை இடத்துக்கு கொண்டு போய் என்னவும் பார்ட் டைம் வேலைக்கு கதைத்தாலே முதலில் என்னையும் சேர்த்து வெளியே அனுப்பத்தான் அலுவல் பார்ப்பார்கள் அங்கே வேலை செய்கிறவர்கள்.


                             " புறாக்களுக்கு எப்பவும் ஏதாவது நொறுக்குத்தீனி வீசிக்கொண்டு இருக்கிறாயே அது எங்கிருந்து கிடைக்குது,உனக்கு உணவு கிடைப்பதே குதிரைக்கொம்பு, இங்கே எப்படிப்பா உன்னால் இப்படி வீசி எறிஞ்சு விளையாட  முடிகிறது "


                        என்று கேட்டேன் . அதுக்கு அவள் சிரித்தாள். பதில் சொல்லவில்லை,ஒரு சின்னப் பையில் இருந்து இன்னும் கொஞ்சம் நொறுக்குத்தீனி உள்ளங்கையில் என்னவோ அவளோட ரோமானிய ஜிப்ப்சிப் பாசையில் சொல்லி எறிஞ்சாள் அது  சோளகக்  காத்தில வேப்பம்பூ உதிர்ந்து விழுந்த மாதிரி விழ முதலே பல புறாக்கள் அந்தரத்தில் அதைக் கவ்விப் பிடித்தன .
 இப்படி வீசி எறிஞ்சு விளையாட  முடிகிறது பார்த்தியா  இதுதான் உன் கேள்விக்கு விடை என்பது போலப் பார்த்தாள் 

                                      " எனக்கு இன்றைக்கு கொக்க கோலா வேண்டாம்,அப்பிள் சாபிட்ட வேண்டும் போல இருக்கு, வேண்டித்  தாறியா, அல்லது வேண்ட காசு தாறியா ,எனக்கு சில்வண்டு ஸ்டிக்கர் ஒட்டின பச்சைக் கலர்  அப்பிள் தான் விருப்பம் அதில தான் ஒரியினல் அப்பிள் மாச்சத்தும் சீனியும் கலந்த   சுவை இருக்கும்  " என்றாள்.


                      அவளுக்கு இதுக்கு மேலே கதைக்க நேரமில்லையோ,அல்லது பசி போலவோ பார்த்தாள்,பொக்கட்டில் கிடந்த சில்லறையை வழிச்சு எடுத்து அந்தக் காசைக் கொடுத்தேன் ,


                                " தேங்க்ஸ் ப்ரென்ட் , ஹவ் எ நைஸ் டே பிரெண்ட்,......மீட்ஸ் யூ நெக்ஸ்ட் டைம்  "  என்று போட்டு போயிட்டாள்.


                                           அதுக்கு பிறகு சில வாரம் அந்த இடத்தைக் கடந்து போனபோது அவளை தற்செயலாகவும் காணவோ,சந்திக்கவோ முடியவில்லை. ஆனால் ரோமானிய ஆண்கள் பெரிய செல்லோ பேஸ் வயலின், கிளாரினட்,  கொன்கோட் றம், அக்கொச்டிக் கிட்டார் வைச்சு கொண்டு பழைய ஸ்பானிஷ் பாடல்கள் ஒரு மூலையில் பாடி வாசித்துக்கொண்டு இருந்தார்கள்.


                                                சில வாரங்களின் பின் ,நோர்வேயின் தேசிய சுதந்திர நாள் அண்மித்துக்கொண்டு வர  , நசினல் தியேட்டர் ஸ்டேஷன்,அதை அண்டிய கால் ஜொஹான்ஸ் காத்தா, ஒளி விளக்கு  சோடனை ,பாதையோரப் பதாதைகள் , நோர்வே தேசியக்கொடிகள்  என்று அமளிதுமளியாக கொண்டாடதுக்கு தயாராகிக்கொண்டிருந்த ஒருநாள் மறுபடியும் மரியாவை பழைய இடத்தில சந்தித்தேன்.


                                            கோபமாக பேசிக்கொண்டு ஓடிவந்தாள் . படக்கு படக்கு எண்டு அரைகுறை ஆங்கிலத்தில் வார்த்தைகள் வேகமாக வெளியே வந்து விழ அழாத குறையாக எனக்கு என்னவோ சொல்லவேண்டும் போல அந்தரிச்சாள்


                                   "  அந்தக் கழிசடை, அந்த தே...... மவன் , அவன் மட்டும் இப்ப கையில கிடைச்சா தலையைத் திருகி கண்ணை நோண்டி எடுதுப்போட்டுதான் விடுவன், சீ எவளவு கேவலப்பட்டுப் போய் விட்டேன் தெரியுமா, எனக்கு ஒரு கணவன் இருக்கிறான்,,,அவன்  மட்டும் தான் இன்றுவரை கணவன்,,அவனுக்கு மனதாலும் நான் துரோகம் செய்ததில்லை,,,என்னோட நாலு பிள்ளைகள் மேல சத்தியமா சொல்லுறேன்,,இந்த கழிசடை கையில அம்பிடடும் ஒரு அவனுக்கு,,குடலை உருவாமல் விடமாட்டேன் "


              என்று யாரோ ஒருவனை பேசினால்,,,பேசிக்கொண்டே  இருந்தாள்..


                                      "  என்னாச்சு உனக்கு இன்று ,நீ ஒருநாளும் இவளவு டென்சனா இருப்பதில்லையே என்று கேட்டேன் ."


                                        "   பொறு உனக்கு சொல்லுறேன் ப்ரென்ட் ,,கொஞ்சம் பொறு ,,ப்ரென்ட் ,,"


                                       என்று தன்னை கொஞ்சம் அமைதியாக்கிக் கொண்டு அவளின் கோவத்துக்கு காரணம் சொன்னாள் .அவள் சொன்னது


                                 மாரியா என்னைப்போலவே வீதியில் சந்தித்த ஒரு நோர்வே நாட்டுக்காரனை,நல்லவன் என்று நம்பி, ஆங்கிலத்தில் சொல்லி அதை   நோர்க்ஸ் மொழியில் ஒரு காட் போட் மட்டையில் பின்வருமாறு எழுதித் தரச்சொல்லி கேட்டு இருக்கிறாள் ,அவள் ஆங்கிலத்தில் சொன்னது


                                                  "    எனக்கு நான்கு பிள்ளைகள் ,மிகவும் கஷ்டம் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து , அவர்களை சமாளித்து அன்றாடம் வாழ்வது,தயவு செய்த என் நாலு பிள்ளைகளையும் வாழ வைக்க கொஞ்சம் சில்லறை தாருங்கள்,ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பான்  " என்பது


                                        ஆனால் அந்த நோர்வே நாட்டவன் அதை நோர்க்ஸ் மொழியில் எழுதிக்கொடுதுப்போட்டுப் போனது இப்படி


                                              "  எனக்கு நான்கு கணவன்மார்கள்  ,மிகவும் கஷ்டம் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து , அவர்களை சமாளித்து அன்றாடம் வாழ்வது,தயவு செய்த என் நாலு கணவன்மார்களையும்  வாழ வைக்க கொஞ்சம் சில்லறை தாருங்கள்,ஆண்டவன் உங்களை ஆசிர்வதிப்பான் "என்பது


                                           நோர்வே மொழியில் பிள்ளைகளை " பார்ன் " என்பார்கள், கணவனை " மான் " என்பார்கள். அதால் இது தற்செயலாக சின்ன ஒரு சொல்லில் வந்த பிழை இல்லை, வேண்டும் என்றே செய்த விஷமத்தனம் என்று தெரிந்தாலும் அதை செய்தவன் யார் என்று தெரியாமல் ஆகக் குறைந்தது " ஏன் இப்படிச் செய்தாய் " என்று கேட்க முடியாத ஒரு கையறு நிலைதான் விளிம்புநிலை மனிதர்களின் இயலாமை     


                                      நோர்வே மொழி தெரியாத  மரியா அந்த மட்டையை வைச்சுக் கொண்டு நசினல் தியட்டர் மெற்றோ ஸ்டேஷன் வாசலில் குந்தி இருந்து பிச்சை எடுத்து இருக்கிறாள் ,பலர் சந்தேகமாகப் பார்த்து அதை வாசித்துக்கொண்டு போய் இருக்கிறார்கள்.ஒரு நோர்வே பெண்மணி வந்து அது பற்றி விசாரித்த போது தான் மரியாவுக்கு உண்மை தெரிய வந்தது. அந்த மட்டையை தூக்கி சுழட்டி எறிஞ்சு போட்டு இப்ப அவனைத் தேடிக்கொண்டு இருக்கிறாள்.இதுதான் அவள் உடைந்து உடைந்து மூக்கைச் சிந்திகொண்டு சொன்ன கதையின் காரணம்.

                                           நான் ஒண்டும் சொல்லவில்லை.அவளும் இது பற்றி என்னிடம் ஒண்டுமே கேட்கவில்லை, நோர்வேயில் வேற்று நாட்டவர் மீது துவேஷம் உள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதை அவளுக்கு சொல்ல வேண்டியதில்லை.அவளுக்கே நல்லா தெரியும் . ஆனால் மறுபடியும் இங்கேயும் அங்கேயும் தேடிக்கொண்டு


                         " அந்தக்  கழிசடை, அந்த தே...... மவன் , அவன் மட்டும் இப்ப கையில கிடைச்சா தலையைத் திருகி கண்ணை நோண்டி ,,"


                    என்ற பழைய பல்லவியை மறுபடியும் தொடக்கித் திட்ட ..


                                      "   மரியா இப்ப உனக்கு என்ன வேணும்,,கொக்கக் கோலா வேணுமா,,அல்லது  பச்சை அப்பிள் வேணுமா வேண்ட சில்லறைக்   காசு தாரேன் " என்றேன்


                                      அவள் கோபமாக "  இப்ப நஞ்சு ....நஞ்சு  வேண்டக்  காசு  தா,,அதைக் குடிச்சிட்டு சாகலாம் போல இருக்கு " என்றாள் ..நான் ஒன்றும் சொல்ல வில்லை .


                                  "  இன்னொரு மட்டை எடுத்து அழகாக நோர்க்ஸ் மொழியில் உனக்கு எழுதித் தரவா "  என்று கேட்டேன் ,சந்தேகமா என்னையும் பார்த்தாள்.


                                          "   உண்மையாகவா சொல்லுகின்றாய் ப்ரென்ட் ,,,நீ நல்லவன்  போல தான் அரம்பத்தில இருந்தே பழகிறாய்  பிரெண்ட் ,ப்ளிஸ் ,நீயே அதை எழுதித்தா,,"  என்று சொன்னாள்.


                      கதைத்துக்கொண்டு இருக்கும் போது நோர்வே குதிரைப் படை பெண்  போலிஸ் அதிகாரிகள் இரண்டு பெரிய அமரிக்கன் செடில்பிரெட் குதிரையில் எங்களைக் கடந்து மெல்ல மெல்ல நோட்டம் விட்டுக் கொண்டு நகர் வலம் போனார்கள். மரியா போலிஸ்காரரை வாய்க்குள்


                 " சாத்தானின்.......  இக்கு......    நேரம் .......பிறந்த       கோவேறு கழுதைகள்  இரவில் தூங்க விடாமல் எழுப்பிக் கலைத்து ...   .சாத்தானின்.......  இக்கு......    நேரம் .......பிறந்த       கோவேறு கழுதைகள்.....எங்களை     மனிதர்களாகவே மதிப்பதில்லை " என்று திட்டினாள்.


                          "  சரி விடு ,,நானும் அவர்களை நரகத்தில்  இருந்து வந்தவர்கள் என்றுதான் நினைப்பது ,,,ஹ்ம்ம்  சரி விடு ,,உன்னைக் கேவலப்படுத்தி எழுதித் தந்த அந்த துவேசம் பிடித்தவனை விட இவர்கள் கொஞ்சம் பரவாயில்லை,கருணை உள்ளவர்கள், "


                                 "  அதை  எப்படி  சொல்கிறாய் "

                              " இது  அவர்கள்  நாடு, அவர்களின் மக்களை  அவர்கள்  பாதுகாக்கிறார்கள் ,நானும்  நீயும்  வேண்டாத விருந்தாளிகள்,,மரியா  "

                            "   ஆனால்  நீ இங்கே  பலவருடம்  வசிப்பது போல இருக்கே "

                          "அது  உண்மைதான்,,ஆனாலும் நாங்கள் வந்தேறிகள்  அதில  சந்தேகமே  இல்லை,  அவர்களைப்  பொறுத்தவரை மரியா  "

                               "     நான்  இந்தத்  தெருவோரம்  வசிப்பதில்  எவளவு  கஷ்டம்  தெரியுமா  உனக்கு "

                                   "தெரியும்  மரியா  ...,அதுக்குக்  காரணமே  வேற "

                                      "    என்ன  காரணம் "

                                      "    அதை  சொல்ல  முடியவில்லை ,,அதுக்காக  போலிஸ் காரரைத் திட்டாதே  மரியா "


                                " ஹ்ம்ம்,,சரி,,நீ சொல்வதை  கேட்கிறேன் "

                                   " அவர்கள் நகரத்தை இரவில் பாதுக்காக்க அப்படி செய்கிறார்கள், கொஞ்சம் பொறு நான் ஒரு மட்டை எடுத்துக்கொண்டு வாறன் முதலில்  " என்றேன் .அவள் பொறுமையாக இருந்தாள்

                                   நான் கொஞ்ச தூரத்தில் முடக்கில் இருந்த " றேமா தூசன் சூப்பர் மார்க்கெட்டில் " போய் அவர்களிடம் ஒரு காட் போட் மட்டை கேட்டு வேண்டிக்கொண்டு வந்து அதில எனக்கு எழுத முடிந்த அளவு நோர்வே மொழியில் கொஞ்சம் கொஞ்சமா எழுத்துக்களை ஜோசித்து ,இப்படி எழுதிக் கொடுத்தேன் ..


                                            "    இன்றைக்கு இந்த நகரம் உங்கள் எல்லாருக்கும் அழகாக இருக்கு, வீட்டில் நாலு சின்னஞ் சிறு வயிறுகள் பசியோடு காத்திருக்க, அவர்களுக்கு உணவளிக்க உங்களிடம் இருக்கும் சின்னஞ்சிறு   சில்லறைகள் போதுமானதாக இருக்கும்போது, உங்களையும் என்னையும் படைத்த ஆண்டவன் பேரில்  இந்த உலகமே அழகாக இருக்கும்  "


                                எண்டு எழுதிக் கொடுத்துப்போட்டு புறாக்களைப் பார்த்தேன். வழமையாகப் புறாக்கள் நிக்கும் ,பறக்கும் இடத்தில ஒரு புறாவும் இல்லை


                             " ,உன்னை இன்னொரு முறை சந்திக்கிறேன் மரியா "


                                " இதில  என்ன  எழுதி  இருக்கிறாய் "

                              "  கொஞ்சம் இதயங்களை  உலுப்புவது  போல  எழுதி  இருக்கிறேன் "

                                       "அதென்ன  சொல்லு "


                                    "  மரியா,,இந்த  நாட்டு மக்களுக்கு  இளகிய  இதயம்  இருக்கு,,ஆனால்  வாழ்கையில்  அவர்கள்  எதையும் சொந்தமாகப் பொறுப்பு எடுப்பதில்லை "

                                       "அப்படி  என்றால்  என்ன,,எனக்குப் புரியவில்லை "

                                      " மரியா  இவர்கள் வேகமாக  இயங்கும்  மனிதர்கள் ,,இவர்களை  ஒரு கணம் நிறுத்தி வைத்து மனசாட்சியைக் கேள்வி கேட்க வைத்தால்  சுருண்டு விழுவார்கள் "

                                       " அப்படியா,,இது  ஆச்சரியமாக  இருக்கே "

                                          " அதுதான்  உண்மை ,,சுள்  எண்டு  நெஞ்சைத்தொடுற   மாதிரி  எழுதி இருக்கிறேன் "

                                          "  உண்மையாவா  சொல்லுறாய் ,,நான்  ஏற்கனவே  கேவலப்பட்டுப் போய்  பிஞ்சு  நொந்து  இருக்கிறேன் "

                                               "  கட்டாயம் இந்த முறை உனக்கு சில்லறைகள் விழும், நீ சந்தோசப்படுவாய்,,,,வேற என்ன வேண்டும்,,ஹ்ம்ம்  ,,ஆண்டவன் புண்ணியத்தில்  நீ சந்தோசமாக இருப்பாய் "

                                         என்று சொல்லி இருந்த சில்லறைகள் எல்லாத்தையும் முதல்ப்  பிச்சையாக அவளுக்கு கொடுதுப்போட்டு  வேலைக்கு போய் விட்டேன் .


                                                "  அதுக்கு பிறகு இன்னும் கதை விட நீ மரியாவை சந்திக்கவில்லையா ? "  


                                         என்று மிச்ச விடுப்பு அறியிற ஆர்வத்தில நீங்க கட்டாயம்  கேட்பிங்க .துரதிஸ்டவசமாக அவளை நான் அதன் பின் காணவே இல்லை இன்றுவரை.ஆனால் இடைப்பட்ட காலத்தில் நோர்வே டெலிவிசன் செய்தியில்ஒஸ்லோ வீதிகளில்  நிறைய வீதியோர  ரோமானிய மக்கள் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டு அவர்கள் நாட்டுக்கு பலவந்தமாக திருப்பி அனுப்பட்டது பெரிய விவாதமாக கொஞ்சநாள் போய்க்கொண்டு இருந்தது.
.
.
.