Sunday 4 February 2018

இப்படிக்கு அவசரமான வாழ்க்கை !

இன்னும்தான் உருப்படியாக நாலுவிசியம் நச் என்று உள்வாங்கும் வித்தைத்துவதில்  எழுதும் பக்குவம் கைவரவில்லை. கம்பன் மகன் அம்பிகாபதி  மன்னன் மகள் அமராவதி போல உள்ளதை உள்ளபடியே அப்படியே ஒப்பிப்பதில் கவித்துவமோ, கவிதைத்தனங்களோ  இல்லை. 

                                                      உள்ளதையும் நோண்டிக் கெடுத்தாணாம்   நொள்ளைக்கண்ணன் போல  வித்தியாசமாக எழுதுகிறேன் பேர்வழி என்று அலப்பறையாக அலட்டிக்கொண்டு நிறையவே வியாக்கியானம் சொன்னாலும்   மொழியை வேறொங்கோ கவிதைமொழியாக்கி  எடுத்துக் கொண்டுசெல்வதில் நிறையவே திசைவழிகள் பிழைத்துவிடுகின்றன .

                                                                   ஒருகாலத்தில் எழுதிய கவிதைகள் இன்னொரு காலத்தில் வேறுமாதிரியான வாசனைகளோடு  இருக்கிறது. வாழ்வோட்ட  அனுபவம், அறிவியல் முதிர்ச்சி ,விரிவான விரிவான  வாசிப்பு, நினைவுகளின் சேமிப்பு, கனவுகளின் பின்வாங்கல் எல்லாமே எழுத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஆதிக்கம் செய்ய எதிர்காலத்தில்தான் ஒருசில நல்ல கவிதைகளாவது எழுதமுடியும்போலிருக்கு.  

                                                             வழக்கம்போல முகநூலில்  எழுதிய    என்னுடைய  சின்னக் கவிதை போன்ற பதிவுகளை  வலைப்பூங்காவில் தூவிவிட்டு   உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !


வாழ்வில்
எங்கேயாவது  
காதல் இருக்கட்டும்,
சாகசம் ஏதாவது
கிடைக்கும் வரையாவது  
பரிசோதனை
செய்துபார் என்பதுபோலப்
பார்க்கின்றன
விழுந்து  சரிந்து கிடக்கும்
சருகுகள் ! 

.............................................................

ஆற்றுப்படுக்கையின் 
அமைதியில்
நதி 
ஒரு கணம் நின்று
அனைத்துக்கொண்டுவந்து 
சேர்த்து விட்ட 
மணல்க் குறுணிகள்   
அலசிக்கொண்ட
கரையை
ஈரக்கண்களில்ப் பார்க்கிறது !

.......................................................................

புரிந்துகொண்டு 
பிறர்மீது கடினமாக
இருப்பது மறையத் தொடங்க
என்ன தான் 
செய்யமுடியும் ?
இருப்பில்  
கிடைக்காத விளக்கம்
பின் தொடர்வுகள் 
நிகழும்போது
நிகழ்ந்துவிடுகின்றன!

...............................................................

நான் 
செவிடாக 
நடித்த போதும் 
துயர்சொல்லில்  முடிந்த 
வார்த்தைகள் 
வாய்தவறி விழுந்த 
வளவளத்த வசனங்களென்று  
மன்னிப்புக்கேட்டவள் 
நீயடி  ! 

.........................................................


மங்கலான 
தெருவிளக்குகள் 
நடைபாதைகளின்  
அமைதியோடு 
மல்லுக்கட்டினாலும்  
வழி நெடுகிலும்
நிழல் வழிந்து  
துணை 
வரத்தான் செய்கின்றன!

..........................................................

இந்த வருடம் 
எழுதிக் கொண்டிருக்கும் 
என் 
ஆனந்த  வசனங்கள் 
உறவைச் 
சாகடித்துப்போட்டு 
உயிரைத் திருடி எடுத்து 
புதிதாகப் பிறந்த 
உன் 
புதுக்கவிதைகளென்று  
ஒத்துக்கொள்ளடி !

........................................................

கொஞ்ச நேரம் 
நின்று நிமிர்ந்து பார்க்க 
இதயத்தில்
தேடுவதுக்கு ஏதாவது 
இருக்கிறதா?
இல்லையென்றால்
நேரத்தை வீணடிக்காமல் 
வீடு போய்ச்சேர
நேரத்தைச் சொல்லியது
பின்னிரவு !

...................................................

யாராயிருக்கும் 
நிலவின் நிழலுக்குக் 
குறிவைத்து 
காறிக்குதப்பி 
உமிழ்ந்து துப்பியது ?
ஒரு
அலையைப்
பின்தொடர்ந்து
விரட்டியபடியேயிருக்கு
தெருத்தண்ணி !


..................................................


ஒருசமயம் 
இரக்கத்தின் விளிம்பிலும், 
பாட்சாதாபதிலும் 
இன்னுமொருமுறை 
உன்னிடம் திரும்பிவந்தால் . 
முடிந்தவரையில்
நிதானமாக
சாகும்வரைவாழ்ந்துவிடு !
இப்படிக்கு
அவசரமான வாழ்க்கை !


..............................................................

யாருமேயில்லாத 
பொழுதுகளிலும்
இருட்டுக்கு 
அளவுகடந்த
எதிர்ப்புக்  காட்டி
ஆழ்மனத்திலும்
வெளிச்சங்கள் 
அவைகளுக்கென்று  
ஒரு பிடிப்பு
வைத்திருக்கின்றன!

...........................................................

கண்களில் 
கண்டுபிடிக்க முடியாமல் 
போனதே 
உன் மனதுக்கு 
உயரப்பறக்கவே
தெரியாது என்பதை போல 
நீ 
மறுபடியும்
நடிக்கத்  தொடங்கியதை !

.....................................................................

என்னைசத் 
தேடிக்கொண்டு திரியும் 
என் 
கவிதைகளையே 
சந்தர்ப்பம் இருந்தும் 
நானின்னும்
சந்திக்கவில்லை !
உங்களை
நானெப்படி
மதிப்பிடமுடியும் !


.................................................................

இதற்குப்பிறகு
எனக்கு என்ன நிகழும் ?
நலிவடையவைக்கும்
இதைக்
கேட்கவே வேண்டாம் ,
இதற்குப்பிறகு
எனக்கு என்ன விருப்பம்
அதைமட்டும்
விசாரியுங்கள் !


.........................................................

நாட்பட்ட முதுகு
நாரி முறிக்கும்
விலா எலும்புகள்
நகரமறுக்குமிப்போதே
சேமித்துவைக்கும்நோக்கத்தில்
நிறுத்தக்குறிகள்
வைக்காமலே நிரம்பிவிட்டது
உளைவு வலி !


..................................................

நினைவு
அருகில் இருப்பதால்
மகிழ்ச்சி நிறைந்து வழியும்
தனியிரவு !
நட்ச்சத்திரங்கள் 
ஒவ்வொன்றும்
விளக்கனைத்துப்போய்விட
விடியும் பொழுதில்
வேறு பலது
பிழைத்து விடுகிறது !


............................................................

சொந்தமென்று
எனக்குள்
விதைக்கப்பட்ட கனவு,
அதிலேயே
சுவாச நேசிப்பைத் 
தேடி எடுத்துத்தந்து
மிகவும் ரம்மியமானவற்றை
உதாரணமாக்கியவள்
நீயடி....!


............................................................

ஓட்டைகளால்
உள்நுழைந்து வெளியேறுகிறது
தந்திரமான குளிர் !
முடிந்தவரை
தேசியக்கொடியால் 
இறுக்கிப்போர்த்தபடி
நடுங்கும்
பிச்சைக்காரன்!
தைக்கப்படவேண்டிய
கிழிசல்கள்
இன்னும்தான்
நிறையவேயிருக்கு !


...............................................................

நிலைப்பாடுகளில்
நடுக்கொள்ள
ஒரு
பூனைக்கு
ஏகப்பட்ட சாத்தியங்கள் !
சுவருக்கு
அந்தப்பக்கமும்
சுவர் !
இந்தப்பக்கமும்
சுவர்தான் !


.........................................................

விவரணையை
உசுப்பிவிட்டுப் போகவும்
மேகமில்லாத
வெற்று வானம்!
கைகளை அகலவிரித்து 
கொட்டாவி
பின்மூச்சு மூட
அழைப்பிதழ்கள் இல்லாமல்
எதற்காக
உள்ளே வந்தாய் என்றது
வெளி...!


.............................................................

சும்மா தன்னும்
எட்டிப்பாரேன் என்றது
வழிவிடுதலைத்
தீர்மானிக்கும்
வெளிக்கதவு ,
மெதுவாகத்திறப்பதட்குள்
தோச்சுப்பிழிந்த
குளிர்காற்றை
புறங்கையால் வழித்து
முகர்ந்து பார்குது
முகம் !


.............................................................

இன்னும்
தூக்கம்விடியாத
மூஞ்சியில்
அதிகாலைப் புகார்,
தண்ணி தெளித்து
எழுப்பிக் கொண்டிருக்கு
ஜன்னலோரக்
கண்ணாடியெங்கும்
பேர்ச்மரங்கள்!


............................................................

தன் 
நிலைபடுத்தி 
விமர்சிக்குமளவுக்கு 
பெருமையாக 
உளறிப்போட்டேன்!
அவ்வளவுதான்!
என்
தொடர்கதை
முடித்துவைக்கப்படலாம் !


..............................................................

நிசிநேரத்திற்கு
முன்னோடியாக
நம்பமுடியாத
எல்லாவற்றையும்
மனமழுந்தி உச்சரிக்கும் 
பன்னிரண்டுமணி !
சிணுங்கல்
மொழியலைகள்
இங்கிருந்துதான்
கதைக்கத் தொடங்குகிறன !


...................................................................

அலட்டிக்கொள்ளாமல்
மேனியுரசி
ஆடையவிழ்க்குது
வெள்ளுறை
வெண்பனிவெய்யில்,
எனக்கு
மூக்கு நுனி மட்டுமே
வேர்க்கிறது !


.........................................................

போனாப்போகுது
இரண்டு இதயங்கள்
ஆத்மார்த்தமாய் 
சமாந்தராகப் பயணிக்கவில்லைதான்  
எனக்கு எப்பவுமே
விசுவாஷம் காட்டுவதிலும் 
அப்படியென்ன 
அகாலமாக 
அப்பிக்கொண்டிருக்கு 
கனதியாகிய காரணங்கள்  ?

...............................................................

பல்லை
நெரித்தபடியேயிருக்கிறது
கையலைபேசி ,
விலகி ஓடச்சொல்லுதா ?
அல்லது 
இயலாமையின்
சமீபங்களை நெருங்கச்சொல்லுதா?
அதுதான்
குழப்பமாகவிருக்கிறது. !


......................................................................

இனிமேலாவது
ஏதாவது நடந்தேறுமா ?
நினைப்பை
முடிப்பதுக்குள்ளாகவே
இச்சை 
மோப்பங்களை
அவிழ்த்து விடுகிறது
ஆதிமனது !


..........................................................

பலவீனங்களைப்
பலப்படுத்தமுடியாத
ஊனுடம்பு,
பழையன
கழிதலுக்குள் 
ஒடுங்கிவிடுகிறது
மரணம் !


............................................................