Saturday 19 January 2019

கவனச்சிதறடிப்புக்கள் !

நனவோடையில் நனைந்தபடியோ அல்லது எதார்த்தமாக எழுத்துவத்துக்கோ எப்பவுமே அத்திவாரம் போல  ஒரு களம் எப்பவுமே தேவையாக இருக்கு. பலவருடங்கள் இருந்த நோர்வேயில் எழுதியவைகள் எல்லாம் ஒருவிதமானவை , நோர்வே போலவே வெளிப்புற அலங்காரங்கள் அதிகம் உள்ளவை. இப்போது வசிக்கும் சுவீடன் இன்னொருவகை,  சுவிடீஷ் வாழ்வியல் அமைப்புமுறை போலவே  மனதை அதிகம் விழுதிக்கொண்டிருக்கும் வகை.





                                                                      " It took me fifteen years to discover I had no talent for writing, but I couldn't give it up, because by that time I was too famous..."  என்று Robert Benchley என்ற ஆங்கில எழுத்தாளர் ஒருமுறை எழுதியிருந்தார். ஏனென்றால் இவளவு வருடங்களின் பின்  இப்பெல்லாம் அடிப்படையில் நானொரு விவரண எழுத்தாளன் என்றுதான் நினைப்பது  .


                                                                  என் வியர்வை நடந்து கடக்கும் மொழி என் வாழ்வின் மிகத் தனிப்பட எனக்கே எனக்கான அனுபவம். அதை மண்டையைத் திறந்து அதுக்குள்ளே மயிலெண்ணெய் விட்டுப்பார்த்த மாதிரி நான் உணர்கிறேன் . நான் பார்க்கும் உலகத்தைதான் நீங்களும் பார்கிறீர்கள், ஆனால் நான் அதை எப்பவும் வேறுவிதமாகப் பார்ப்பேன்




                                                              ஒரு நாட்டை சில பல காரணங்களுக்காய் அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போட்டு திரும்பிவந்து " அடைக்கலமானானேன் உன்னிடமே அடைக்கலமானானேன் உன்னிடமே " என்று ரெம்ப நல்லவன் போல பாட்டுப்பாடி அந்த நாட்டில் இன்னொருமுறை வாழ்வதுக்கான அடுக்களைக்கு கட்டமைப்பது ஒத்துக்கொள்ளும்படியாக உண்மையில் மிகவும் கஷ்டமான ஒரு கைங்கரியம்.


                                                                            சுவீடனில் இப்பெல்லாம் ஒரு கழுதையைத் தேடி அதுக்குக் குதிரை போல கொம்பு இருப்பதைக் கண்டுபிடிக்கலாம் ஆனால்  எழுத்துவதுக்கென்று  உந்துதல் தரும் பொறியைக் கண்டுபிடிப்பது  பூதக்கண்ணாடி வைச்சு கிண்டினாலும் கண்டுபிடிக்க கஷ்ட்டம் போலிருக்கு  .   


                                            அதில உள்ள குழப்பங்கள் சொல்லும்படியாக நடைமுறைச்சிக்கலை இடியப்பச்சிக்கல் லெவலுக்கு ஆக்கினாலும் வாழ்க்கையை வாழ்ந்தேயாகவேண்டும் என்ற அட்ப ஐடியாவில் வாழும் எனக்கு சுவாரஸ்யமாகவேயிருக்கு,
                          
*                                                            

என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,...

அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !



*


ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் ...

பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை ! 






*

எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு ...

எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !



*

அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது ...

இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்

நான் !




*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு,

வெளியே
கறுப்புப் பகல், !
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !





*



காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,...

தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !



*

இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு ...

காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !



*




எதிர்ப்பில்லாத் திசையில்
பார்ப்பதுதான்
ஒரு
பறவையின் ...

இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !


 *



ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த ...

சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!




 *



பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !...

தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !



*


ஆசுவாசமாக 
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில், 
மூடுமுன் கதவோடு 
உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !



*
ஆக்கிரமிக்கும்
தனிமைப் பார்வையில்
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல
அசாதரணமாகவே
கண்களைத் திறக்கின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !



*
காற்று 
தெருப்புழுதி நெரிசலில் 
என்னவெல்லாமோ
மதிக்கும்படி 
சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !



*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத 
எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ? 



*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு 
மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !










Saturday 12 January 2019

நினைவுக்கிடங்கிலிருந்து 003

" அரசியல் என்பது அறம் " என்று நீதியின் நிழலில் முன்னோர்கள் ஏட்டில் மொட்டையாக எழுதிவைத்தது மட்டும்தான் போலிருக்கு , ஏனென்றால் அதிகமான முன்னோர்களின் சாம்ராச்சியங்களே அதை நடைமுறைப்படுத்தியதில்லை.! இது வரலாறு ! இந்த வரலாறு முடிவில்லாமல் இப்பவும் தொடராவதுதான் நம் காலத்தின் கொடுமை ..
                                                             
                                                                     இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில ஏதோவொரு அவமானமான அதேநேரம் அவலமான சம்பவங்கள் ஆட்சிசெய்யும் அரசாங்கங்களின் கண்களுக்கு முன்னால் நடப்பதாக செய்திகளில் கேட்கும்போதெல்லாம் அதன் முழுமையான வீரியம் யாரோ ஒருவருக்கு வேறெங்கோ நடக்கிறதுபோல காற்றலைகளில் இடம்மாறிப் போய்விடுகிறது .
                                                     
                                                                     சுவீடன் இந்தப் பந்தியின் முதல் வசனத்தை நிறையவே நடைமுறையில் வைத்திருக்கும் நாடு. அதன் தலைநகர் ஸ்டோக்ஹோலாமில் நகர மையத்தில் சேர்க்கிள்டோர்க் என்ற திறந்த வெளியை ஒரு உரிமைக்குரல் அரங்கமாக வைத்திருக்கிறார்கள். அதில ஒவ்வொருநாளும் ஏதோவொரு உரிமை ஆர்ப்பாட்டம் , வன்முறை எதிர்ப்பு ,அராஜகக் கண்டனம் , சமூக விழிப்புணர்வு, என்று அமைதியாக நிகழ்வுநடக்கும் .
                                                         
                                                                       அரசியல் அகதிகளாக தங்கள் தாய்நாட்டில் இருந்து தப்பி வந்த உறவுகள் அங்கே இருந்து தப்பி வரமுடியாத தங்கள் உறவுகளின் உயிர்ப் பிரச்சினையை மனிதாபிமான உரிமைகளை இங்கே இந்த அரங்கில் வைத்து உரத்து சொல்லுவார்கள்.
                                                             
                                                                உணர்வுபூர்வமாக இருக்கும் அவர்களின் பிரச்சினைகளை அறியும் போதெல்லாம். அவசரமான வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகளை தலையில போட்டுகொண்டு இந்தத் திறந்த வெளி அரங்கைக் வேகமாகக் கடந்துசெல்லும் மனிதர்கள் கண்டும் காணாமலும், கேட்டும் கேளாமலும் கடந்து செல்வார்கள்.



சில நாட்களின் முன் ஒருநாள் சேர்க்கிள்டோர்க் பக்கமாக போகவேண்டி இருந்தது.அங்காடிக்காரியை அவரோகணம் பாடச்சொல்ல அவள் வெங்காயம் கறிவேப்பில்லை என்றாளாம் என்பது போல அரசியல் பற்றிய அடிப்படை அறிவிலதன்னும் இன்னும் நான் முதலாம் வகுப்பு தாண்டவில்லை.
                                                 போராட்டம் ,விடுதலை , புரட்சி போன்ற பிசுக்கங்காய் வார்த்தைகளைக் கேட்டாலே உடம்பில நாயுன்னிச் செடியை உரசின மாதிரி சொறியத்தொடங்கும் அதனால மனசாட்சியோடு உரிமைமீறகள் முரண்படும் கோட்ப்பாடுகளில் எனக்கு ஆர்வம் இல்லை.
                                                  சும்மா இது என்னதான் ஆர்ப்பாட்டம் என்று மேஞ்சு பார்க்க கொஞ்சநேரம் அவடத்தில நின்று கேட்டேன். அம்னஸ்டி இன்டெர்னசினலும் , ஓர்கனைசனன் எகனைஸ்ட் எக்ஸ்சிகுயுசன் என்ற அமைப்பின் ஆதரவில் மனுநீதிகேட்டு வசந்தகாலக் கவிதையொன்றில் வாழ்விழந்த வரிகளை வேறெங்கோ தொலைத்துவிட்ட இரானிய மக்கள் சோகமாக நின்றார்கள்.
                                                  அப்போதுதான் மரணதண்டனை எதிர்நோக்கி காத்திருக்கும் தங்கள் உறவுகளின் படங்களைப் தூக்கிக்காட்டியபடி நின்றவர்களுக்கு நடுவில் சுவீடனில் வசிக்கும் ஒரு வயதான அப்பா ஈரானில் தூக்கில தொங்க காத்திருக்கும் தன்னோட மகளின் படத்தை கழுத்தில மாட்டிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தப் படத்தை எடுத்தேன்.
                                                   
                                                    பிறகு அவருடன் தனியாகக் கதைத்தேன். பெண் குழந்தைகளின் உரிமைக்காக போராடிய தன்னோட மகளை இரானிய அரசாங்கம் குற்றம் சாட்டி சிறையில் அடைத்து மரணதணடனை கொடுக்க வைத்திருப்பதாகவும், தன்னோட மகள் இந்த நிலைமையில் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாகவும் சொன்னார். ஈரானில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் முடிவில் குறைந்தது பத்துப்பேர் தூக்கில இழுக்கப்படுவதாகவும் சொன்னார் .
                                                            அவளவுதான் சொன்னார் , அதுக்குமேல நானும் ஒன்றும் கேட்க விரும்பவில்லை. மனித உரிமை அமைப்புகள் சொல்வதைப் பாலைச் சுண்டக் காச்சி ஆறவைச்சு அதுக்குக் கள்ளப் பூனையைக் காவல் வைச்ச மாதிரி அரசியல்வாத அரசாங்கங்கள் மண்ணாங்கட்டிக்கும் கணக்கில் எடுப்பதில்லை.
                                                             
                                                              மரணத்தை நிமிடங்களில் எண்ணிக்கொண்டு கைவிரல்களைக் கோர்த்து ஒரு வித நம்பிக்கையில் மவுனமாக எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர இந்த வயதான அப்பாவால் சுவீடனில் இருந்துகொண்டு வேறு என்னதான் செய்யமுடியும் ?

                                                                 
கையில கமராமொபைல்போன் இருக்கிறதால சாகடிக்கிறது போல அதுபாட்டில இருக்கிற இயற்கையையும், நிலைமாறாத இடங்களையும், நிம்மதியான மனிதர்களையும், கனவில்ப் பயணிக்கும் காலநிலைகளையும் சுழட்டி சுழட்டி எவ்வளவோ அலப்பறைப் படங்களை எடுத்து நானே இங்கே என் சுவரில் போட்டு அதுக்கு கவிதைவேற எழுதுறேன் பேர்வழி என்று உங்களின் உசிரை பலமுறை எடுத்து இருக்கிறேன் .

                                                சலிப்புத்தரும்படியாக
எரிய வேண்டிய சுடர் அணைந்துகொண்டிருந்த
  போதிலும்  இந்தப்படத்தில முகமறியாத யாரோ ஒரு ஜீவனுக்கு கொஞ்சம் உயிர் கொடுத்ததுபோல ஒரு மனஅமைதி !







எழுதக்கூடியவர்கள் ஒரே இடத்தில ஒரே நகரத்தில் இருந்து குப்பை கொட்டுவதில் அதிகம் சுவாரசியங்கள் கிடைப்பதில்லை . அப்படி இருப்பதே குட்டையில் தேங்கிய தண்ணியின் மெல்லிய சலசலப்பு ஏட்படுத்தும் சின்ன அலைகளைத் தவிர வேற ஏதும் நடப்பதில்லை.

                                                      புதிய நாடு ,,புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய முகங்கள் ,புதிய வாசங்கள் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதியின் அனுபவம் போல ஏகப்படட புது விசயங்கள் ஒவ்வொரு பொழுதும் கிடைக...
்குது. பழைய பழகிய பாதைகள் அவை தேக்கி வைத்திருக்கும் நினைவுகள் . கோடையும் உறைபணியும் தந்த பாடங்கள்.

                                                                   இப்போது ஸ்டாக்ஹோலம் என்னோட புதிய தளம். ஒரு காலத்தில் சுவீடனில் படித்த போது இந்த நகரத்தையும் சல்லடை போட்டு தேடித் தேடி ரக்ஷித்து இருக்கிறேன். காதுக்குள் மிக ஆழத்தில் அமுங்கிப்போன சுவிடீஷ் மொழி வேறு கொஞ்சம் கொஞ்சமாய் தூசு தட்டிக்கொண்டு வருகுது. மிக நெருக்கமான ஸ்டாக்ஹோலம் நிலத்தடி ரெயிலில் பிரயானிக்கும் போதெல்லாம் சக பயணிகளின் உரையாடல் வெளிகள் அந்த மொழியின் அலாதியான போக்கை இன்னொரு முறை மீட்டு எடுத்துத் தருகிறது.

                                                      பிடிகொடுக்காமல் உதறி எறிந்து பிடிக்காத நகரம் கொஞ்சம்   கொஞ்சமாய் பிடிக்கத் தொடங்குது . என்னதான் இருந்தாலும் ஸ்டாக்ஹோலம் விசாலமான ஐந்து சந்திகளில் விவரணம் காட்டும் பரந்து விரிந்த நகரம், பிரிந்து போன என் அன்புக்குரிய ஒஸ்லோ மிகச் சிறிய மூத்திரச் சந்து போன்ற நகரம். ஆனாலும் அது தந்த ஆதர்சங்கள் மறப்பதுக்கில்லை . மறைப்பதுக்குமில்லை .

                                              

ஒஸ்லோவில் அனாமிக்கா என்னை எழுத வைத்தாள்.. என்னை ஆச்சரியம் கலந்த நனவோடைக்குள் இழுத்துச் செல்கிற அதிசயாமாக ஸ்டோக்ஹோலம் எழுத்தாளர்களைக் கொண்டாடும் நகரம்,



அவர்கள் வாழும் காலத்திலேயே உலகம் எல்லாம் இருந்து அவர்களை அழைத்துக் கவுரவப்படுத்தும் நல்ல வாசக உள்ளம் உள்ள சுவிடீஷ் மனிதர்கள் வசிக்கும் நகரம், இந்த மாதம் இந்த நகரத்துக்கு சில எழுத்தாளர்கள் வருகிறார்கள் என்ற விளம்பரம் தான் இது.




                                                       ஸ்டாக்கோலம் தியேட்ட்ட்ர் கலரிக்கு முன்னால் இருந்தது. அதில வாசித்துப்பார்க்க ஓரேன் பாரமுக் என்ற துருக்கி நாட்டு இலக்கிய நோபல்... பரிசுபெற்ற ஒருவரின் பெயர் தவிர வேறு பெயர்கள் அறிந்ததில்லை,

                                                        ஒரேன் பாராமுக் எழுதிய ஒரு நாவல் ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு, தமிழில் மொழிபெயர்ப்பாக " என் பெயர் சிகப்பு " என்ற ஓரன் ப்ரேமுக்கின்  வரலாற்று நாவல் வாசிக்க கிடைத்தும் இங்கேயும் அங்கேயும் இன்றி சில அத்தியாயங்கள்  பிரட்டியதைத் தவிர  முழுமையாக வாசிக்கவில்லை,



                                                            அவரின் எழுத்துநடை அபாரமானது. உண்மையானது. நிறைந்த வாசிப்பு அனுபவம் நிச்சயமாகக்  கிடைக்கும் . " என் பெயர் சிகப்பு  " இன்றைய இஸ்தான்புல் நகரத்தையும் பழைய ஒட்டுமேன் சாம்ராச்சியத்தையும் , இஸ்லாத்தையும் பின்னிய ஒரு கதை . அது வரலாற்றோடு சமாந்தரமாகப் பயணிக்கும். 


                                           அரசியல் காரணங்களுக்காக இந்தமானுட எழுத்தாளரை     துருக்கி நாடுகடத்தியது. பலவிதமான விவாதம், சர்சை, என்று அவரோட ஆளுமை எப்போதுமே ஒரு சவாலாகவே இருக்கிறது இப்ப அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து வாழ்கிறார். இப்பவும் எழுதிக்கொண்டிருக்கிறார் .

                                                                           மற்றப்படி அதில் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ள det var inte jag igen அந்த சுவிடீஷ் வாசகம் கொஞ்சம் ஜோஷிக்கும் படியான அர்த்தமுள்ள வாசகம் ,it was not me back என்று ஆங்கிலத்தில் சொல்லலாம் . தமிழில் மொழிபெயர்த்தால் , " புதிதாக எதுவுமில்லை அந்தப் பழைய நானேதான் " என்று வரும்,

................சிலநேரம் எனக்கும் அது பொருந்தலாம்.!.......


Stockholm, Sweden.








Wednesday 9 January 2019

வழிதவறிய பெருவெளி...

ஒரு அபாரமான  சம்பவத்தை , ஒரு ஆழமான  அனுபவத்தை , அல்லது ஒரு அகலமான நினைவை சுருக்கமாகக் கவிதைமொழியில் சொல்லாடலாக்கி "நச்  "என்று ஒருவிதமான  கச்சிதமான  வடிவதுக்குள் எழுத்தில் கொண்டுவருவதுதான் உள்ளதிலேயே சவாலான விசியம்.
                                                             
                                                           வார்த்தைகளை அளவுக்கணக்கு இல்லாமல் அவிழ்த்துப் போட்டு , விலாவாரியாக  உருவகிக்கிறேன் பேர்வழி என்று உள்ளதெல்லாத்தையும்  உளறிக் கொட்டாமல்   ஒரு  குறுகிய வடிவத்தில் இருப்பதால் அவைகள்  எப்போதும் வாசிக்க இலகுவாக இருக்கும். அதேநேரம் அர்த்தங்கள் பிரம்மாண்டமாயும் இருக்கும் . 

                                                           இந்த எழுத்துருக்கள்  சென்ற வருடம் 8 th , 9 th  January இந்த ரெண்டு நாட்களில் முகநூலில்  எழுதியவைகள் . சிலசமயம் ஜோசித்தால் எனக்கே  பின்மண்டை கிறுகிறுக்குது எப்படி இப்படியெல்லாம்  எழுத முடிந்தது என்று அதுவும் ரெண்டே ரெண்டு நாளில். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் இருக்கு அது அது அந்த நேரம் வந்து சேரும் என்று முன்னோர்கள் சொன்னாலும் சொன்னார்கள். அதனால்   எழுதவரும் போது எழுதிவிடுவது நல்லது, இதயத்திலிருந்து  எழுந்துகொள்கிறது அதைச் செய்த திருப்தி  .

                                                                                பின்னொருநாள் நாடியையும் தாடியையும் தடவிக்கொண்டு  விட்டத்தை அண்ணாந்துபார்த்துக் கொட்டாவிவிட்டுக்கொண்டு    எழுதுவத்துக்கு எதுவுமே இல்லாதது போன்ற ஒரு வெறுமை வெளிக்குள் சலித்துப்போன  மனப்பிரமை வந்து சேர்ந்துகொள்ளவும் வாய்ப்பிருக்கும் என்று இன்றைக்கு நான் நினைப்பதுபோல இன்னொரு மனிதருக்கும் நேரலாம் , இல்லையா ? 


*
மவுனம்தான்
இட்டுநிரப்பிக்கொண்டிருந்தது
அதுக்குப்பிறகு
நானாகி நீயும் 
நீயாகி நானும்
பேசவேயில்லையே !

*

மழைக்கூந்தல்
துவட்டியபடியே
விரதமிருந்து
பனிப்பூக்கள் சொரியும் 
நீர்மேகம் !

*

அந்தத்
தேன்வண்டின்
முதல்க் காதல்த்தோல்வி
முதல் சந்திப்பில் 
முத்தமிட்ட
வாசமில்லாத மலர்!

*

குரைக்கவைத்து
நாயை
உறங்கவிடாமலாக்கியது
சதிரான சத்தங்களும் 
திகிலான இரவும்
பழியெல்லாம்
அப்பாவி நிலவுக்குமேல் !

*

நுனிக்காம்பில்
காலைப் பனித்துளி
அந்தநேரம்தான்
விடாப்பிடியாக 
ஊஞ்சலாட விரும்புகிறது
இலை !

*

வானம்
அடர் இரவுகளில்
சில்லறைத்தனமாகப்
பிச்சைதான் எடுக்கிறது, 
அலுமினியத்தட்டில்
சிதறிக்கிடக்கும்
நட்சத்திரங்கள் !

*

தந்திரமான
குளிர் நீரோடை
தலைகுனிவு நாணல்கள்
பிறகெப்படி
தனித்துவமிழக்காத
நிலவும் சேர்ந்தே
மிதந்து கிடக்குது ?

*

செறிவான
முன்னேற்பாடுகள்
குறைவான
அத்தியாவசியங்கள் 
இத்தனை
சுழிப்புகளை எதிர்பார்க்கவில்லை
வாழ்க்கை !

*

வெளிச்சம்
உந்திப்பறக்கமுடியாமல்
உறைந்துவிடத் தொடங்குகிறது ,
குளிர்காற்றில்
செதுக்கிக்களைந்த
இலைகள் !

*

எல்லாத்தையுமே
கொடுத்துவிட்டுப்போய்விட்டது
நடுக்கோடைமழை !
நனைத்த யாருமே 
நன்றியோடு இரங்கவில்லை !
கூரைக்கு மட்டும்
அடங்காத சோகமுகம் !
தாள்வாரத்தில்
சொட்டுச்சொட்டாக
கண்ணீர்த்துளிகள் !

*
மூன்றாம்
சாமக்கனவு
ரகசியமாக ஏற்படுத்தும்
உக்கிர சலனங்கள்,
ரெண்டாவது
வெண்பனிப்பொழிவு,

*

உருவப்
புரிதலின்றிதான்
நிராகரிக்கப்படுகின்றன
ராத்திரிகளை 
விடியலாக்கிவைக்கும்
வெள்ளிகள் !

*

ஏராளம்
காதல் உத்தரவாதங்கள்
ஒன்றாகவே
விசிறிக்கொள்ளும் போதும்
மொழியை
விறைக்கவைக்குது
நினைவிலொரு
தனிக்கவிதை !

*

மழை
தேங்கவைத்த
சிதறல் வெள்ளத்தில்
காணாமல்ப்போன
நிலவின்
நீர்த்த வாசனை !

*

பின்னிரவின்
பிரத்யேகப் பார்வை
திருடப்படுகிறது
தீங்கிளைப்
பயங்கள் அடர்த்தியான
கறுப்புநிறத்தில் !

*

முந்தநாளிருந்து
பிரிந்துபோன நேற்று
நாளையிலிருந்து
இடப்பெயரும் நாளைமறுநாள்
தத்தளிப்பு
இன்றைய மனநிலை !

*

ஒரு பக்கம்
நிறையா வெறுமை
இன்னொரு மறுபக்கம்
தோல்விகள்
பின்னுக்கு
அந்நியமாகிப்போனவர்கள்
ஒரே ஒரு நம்பிக்கை

எதிரில் நீங்கள் !

*

விவாதங்களின்
பயங்கர விரட்டல்
துல்லியமான
எதிர் விமர்சனம்
எதிர்பார்ப்புகள் தரும்
ஏமாற்றம்
இடையில் நிகழும்
பயணம் !

*

வழி தளரும்
நடைபாதை
விழிக் காத்திருப்புகளின்
சூட்ச்சுமங்களை
நிலைமழுங்க வைத்த
நாட்குறிப்பு !

*

வலியைக்
கவிதைக்குள்
வழிக்குக்கொண்டுவந்ததே
வெளிப்படும் பாவத்தில்
நுழைந்துகொண்ட
விதி !

*

அவதானிப்பில்
நீட்சிகுறித்த பயம்
ஓய்வாக
மரக்கிளையிலும்
சிறகை
நீள விரித்தபடியே
பறவை !

*

உள்ளெல்லாம்
திருப்த்தியின்மை
அத்திவாரமில்லாத
அந்தக் கணத்திலும் 
வெளிநோக்கி
அந்தமெல்லாம் முடிவில்லா
வாழ்வு சுரக்கிறது !

*

இருட்டில்
மின்மினிப்பூச்சிகளோடு
சலசலசலசலக்கும்
அதே
நதியில்தான்
மூழ்கிக்கொண்டிருக்கிறது
பிசுக்கேறிய
நகரத்தின் இரைச்சல் ! 

*
நேர்த்தியான நீள்பாதை
தெருவிளக்கின்
நீளமான நீலவெளிச்சம்
சட்டென்று 
விபரீதமாகக்
குறுக்குவழியில் இறங்கினேன்
கூடவந்த நிழல்
பின்வாங்கிவிட்டது ! 

*
நான்
அவஸ்தைகொடுத்துத்தான்
பிறந்திருக்கிறேன்
அம்மாவின் 
மடிவயிறு முழுவதும்
தழும்புகள் !

*

அமைதி நகரம்
நீண்ட நிசித்தூக்கம்
வழிதவறிய
பெருவெளிகளிலும் 
காத்திருக்கிறது
வெண்பனி !

*

தவறி விழுந்த
சருகின் மேல்
நீர்ப்போக்கில்
ஆற்றுக்கு 
அடங்காத பெருமிதம்
வழிகாட்டி நகர்த்தும்
இரு கரைகளை
யாருமே
மதிப்பதில்லை !


*
காற்றில்
உல்லாசமாய்
ஏறிப்பயணிக்கும்
இன்றைய மனம் 

கதை சொல்லியினுடைய
விதை !