Friday 6 November 2015

நடராசா பெரியப்பாவும் , J . கிருஷ்ணமூர்த்தியும்.

யாழ்பாணத்தில எங்கட வீடில, எங்கள் அம்மாவின் அக்காவைக் கலியாணம் செய்த, லண்டனில படித்து, ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரப் பகுதியில் உலகம் எங்கும் வேலை செய்த நடராசா பெரியப்பா ஒருவர்தான் நான் அறிய, கொழும்பில் வசித்தாலும், ஒவ்வொரு விடுமுறையிலும் யாழ்பாணம் வந்தால் J. கிருஷ்ணாமூர்த்தி என்ற J.K யோட புத்தகங்கள் மட்டும் வாசிப்பவர் . J.K புத்தகங்களைப் படிபவர்களுக்கு ஒரு " படிச்ச மனுசர் " எண்டு ஒரு அனாவசிய சமுக அந்தஸ்து இருந்தது யாழ்பானத்தில அந்த நாட்களில்!

                            சமஸ்கிரித ஆசிரியையா இருந்த என்னோட பெரியம்மாவோ, அவரின் ஒரே மகள் யசோ அக்காவோ அதெல்லாம் வாசிக்கமாடார்க, அவர் வாசிக்கும் J.K யோட புத்தகங்கள் சும்மா ஜுஜுபி ஆங்கிலத்தில இல்லை, படுபயங்கர தலைகரணமான ஆங்கிலத்தில் இருக்கும். பெரியப்பாவே J .கிரிஷ்ணமுர்த்திபோல அமைதியா ,ஒருவருடனும் அனவசியமா பேசாமல் தியானம் செய்பவர் போல இருப்பார்,சாம்பாரு போல எப்பவும் வேறு  நிறைய ஆங்கிலப் புத்தகங்களும்  வாசித்துக்கொண்டு இருப்பார், ஆனால் ஒருநாளும் அந்த புத்தகம் பற்றிப்பேசவே மாட்டார்,அவர் படிப்பது அவருக்கு மட்டுமே என்பதுபோல வாசித்துக்கொண்டு இருப்பார் !
.
                                                  நடராசா பெரியப்பா, பெரியம்மாவையும், யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்பந்த வேலையாக,  ,பொட்சுவான என்ற கிழக்கு ஆபிரிக்க நாடில் இருந்த லெசோதோ என்ற மாகாணத்தில் புள்ளிவிபரப் பகுதியில் வேலை செய்யப்போக என்னோட, பெரியம்மா  அந்த நாடில , உயர் BP ரத்த அழுத்தம் அதிகமாகி, அகாலமா இறந்துபோக, அவாவின் பூதவுடல் எரிக்கும் இடத்துக்கும் முன்னால, அவவின் இறுக்கி  மூடிய பிரேதப் பெட்டியைப் பார்த்தவாறு பெரியப்பாவும், யசோ அக்காவும் சோகமே உருவாக நிற்கும் போது,  எடுத்து அனுப்பிய படத்துடன் தான் அந்த மரண செய்தி வர என்னோட அம்மா

                    " அக்கா, என்னை விட்டுடு போயிடீங்களே "

                                    எண்டு குளறிக் குளறி அழுதா !  பெரியம்மா , எதோ ஒரு  ஆபிரிக்க நாட்டில் அனாதையா உறவுகள் சுற்றி இல்லாமல் இறந்த சில வருடங்களின் பின் நடராசா பெரியப்பா,  யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு விடுமுறையிலும் யாழ்பாணம் வந்தார் ,வந்து ஒருவருடனும் அனாவசியமா பேசாமல் , J.K யோட புத்தகங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார் !

                                    என்னைப்பொருத்தவரை ,  அந்தப் புத்தகம் எல்லாம் தொடக்க வரியில் இருந்து முடியும் வரை "வாழ்க்கைத் தத்துவத்தை " வில்லங்கமான மொழி நடையில், அதிகம் பாவனையில் இல்லாத விசித்திரமான ஆங்கில சொற்களில், அதைவிட விசித்திரமான வர்ணனையில், மானாவாரியாக தத்துவத்தை லொறி லொறியா அள்ளிக் கொட்டும். 

                                      சும்மா " டமால் டுமில் " எண்டு உங்களை வெருட்டச் சொல்லவில்லை அநதப் புத்தகங்களின் தலைப்பே விளங்க ஒரு கிழமை எடுக்கும்.தத்துவ மேதைகள் அப்படிதான் தலைப்பு வைப்பார்கள், அதுக்கு காரணம் அவர்கள் சொல்லும் விசியம் போலவே அதன் தலைப்பும் இருக்கவேண்டும் எண்டு இருக்கும் போல!

                             பிளேட்டோ அவரோட புத்தகத்துக்கு " டேமொசகிரசி" எண்டு வைக்க, எனக்கு ரெம்ப்பப் பிடித்த, பிரேடிச் நெட்சே அவரோட தத்துவ பைபிளுக்கு "யாரதுச்டிதிரா " என்ற அழிந்துபோன சமயத்தின் பெயரை வைத்தார்!J.K இன் போதனைகளைக் கேட்கவே ஒரு ரசிகர் மன்றம் கும்பலாக அலைந்து இருக்குறார்கள் உலகம் முழுக்க! ஆன்மீக வறட்சி உள்ள மேலைநாட்டினர் J.K ஐ அமரிக்கா, ரிஷி வலிக்கு, அழைத்து " கவுதம புத்தருக்கு பின் வந்த அறிவின் ஒளி " எண்டு அவரைப் பாப்பா மரத்தில ஏத்தினார்கள்!

                                         கொஞ்சநாளில் பெரியப்பா, யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு  கொழும்பில் இருந்த அவர்களின் வீடில் வாசித்த போது, பெரியப்பாவின்,  வயதான, அமைதியான, ஜோகர் சுவாமிகளின் " சிவ தொண்டன் " ஆன்மீக நிலையத்தில்  முழுநேரம் சேவை செய்த  தந்தையர், திடிரென நோய் வாய்ப்பட்டதால், 

                      " இனி யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை " 

                                    எண்டு ஒரு குறிப்பு எழுதி வைத்துவிட்டு , கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்தார் !அந்த மரண நிகழ்வுக்குக் நடராசா பெரியப்பா, யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு வந்து, மரண நிகழ்வு முடிந்தபின்  எங்களின்  வீட்டில் சில வாரம்  நின்றார்! அப்பவும் ஒருவருடனும் அனாவசியமா பேசாமல் , J.K யோட புத்தகங்கள் வாசித்துக்கொண்டு இருந்தார். நடராசா பெரியப்பா J.K புத்தகம் படிப்பது அயல் அட்டையில், ஒருவருக்கும் தெரியாது, பெரியப்பாவிடம் நான் கேட்டிருகிறேன்

                     ," நீங்கள் ஏன் J .கிரிஷ்ணமுர்த்தி புத்தகம் மட்டும் படிகுரிங்கள் ?"

                            எண்டு,அவர் அதுக்கு

                               " அவர் புத்தகம் படித்தால் ,வேறு ஒண்டுமே இந்த உலகத்தில படிக்கத் தேவை இல்லை, வாழ்கை பற்றிய புதிரை விடுவிக்கும் பிரஞை விழிப்புணர்வு வரும் "

                              எண்டார். சொல்லிப்போட்டு எனக்கு,தமிழில் மொழி பெயர்த்த J .கிரிஷ்ணமுர்த்தியின் புத்தகமான "விழிப்புணர்வு பற்றிய விளக்கங்கள் " எண்ட புத்தகம் சுப்பிரமணியம் புத்தகசாலையில் போய் வேண்டிதந்தார் ,தந்து

                                " இது ஒரு முறை வாசிக்க விளங்காது,"

                           எண்டு நான் எதிர் பார்த்த மாதிரியே குண்டை வேறு தூக்கிப்போட்டார் , அதை நான் பலமுறை வாசித்தும் ஒரு அறுப்பும் விளங்கவில்லை. விழிப்புணர்வும் வரவில்லை, பதிலாக அதைப் படிக்க விசர் தான் வரும்போல இருந்தது,என்றாலும் சக்கடத்தார் நொண்டிக் குதிரையில் ஊர்வலம் போன மாதிரி அதை சேடம்  இழுத்து இழுத்து வாசித்து முடித்தேன்  !

                                J.K அந்த புத்தகத்தில ஆதரமான இந்திய தத்துவ மரபை, செருப்பால அடிச்ச மாதிரி வெளிப்படயா சொல்லுறார், அதில , அவர் வளர்ந்த , அடையாறு பிரம்ம தியோசொபிகள் சொசைட்டியின் ஆரம்ப கால கொள்கைகள் நிறைய இருக்க, கொஞ்சம் அடிப்படை " சைகொலோயி" தில்லான்கடி தில்லாவவையும் கலந்து, அவரை சின்ன வயசில் இருந்து, அம்மாபோல வளர்த்த அன்னி பெசென்ட் என்ற ஆங்கிலேயப் பெண்மணியையும் விமர்சித்து இருந்தார்! மற்றப்படி அவர் சொன்ன விசியங்கள், ஏற்கனவே மேலைத்தேய, கீளைத்தேய தத்துவங்களில் ஏற்கனவே இருக்கு. 

                      J .கிரிஷ்ணமுர்த்தி தத்துவத்தில் நிறைய சைகொலோயி சயன்ஸ் இருக்கு! அப்புறம் குழப்பமும் இருக்கு எண்டு பிட்காலதில படித்தேன். ஏனோ தெரியவில்லை , அதுக்குப் பிறகு பலவருடம்  நடராசா பெரியப்பா,ஒரு வித வலிப்பு நோயாள அவதிப்பட்ட, அதுக்கு நிறைய  ஆங்கில மருந்துகள் சாப்பிட்ட யசோ அக்காவையும் கூட்டிக்  கொண்டு யாழ்பாணத்துக்கு வரவே இல்லை ,

                         கடைசியா யசோ அக்காவுக்கு திருமணம் செய்ய வந்தார் , நாங்கள் விற்ற எங்களின் வீட்டின் பின்னே உள்ள காணியை வேண்டி , அதில ஒரு வீடு கட்டி , அந்த வீட்டையே சீதனமாகக கொடுத்து கலியாணம் நடத்தி, யசோ அக்கா கணவனையும் அழைத்துக்கொண்டு கொழும்புக்குப் போனா, போய் சிலவருடம் வாழ்ந்து,...

       .                 ..ஒருநாள் ,

                            இன்றுவரை சரியாகத் தெரியாத எதோ ஒரு வெளிய சொல்ல முடியாத காரணத்துக்கு, தன்னையே பலியாக்கி, நிறைய நித்திரை, வலிப்பு நோய் மருந்துகளை ஒரேயடியாக அள்ளிப்ப்போட்டு, ஒரு கிழமை கோமா நிலையில் இருந்து விழிக்காமலே,30 சொச்சம் வயசில தற்கொலை செய்து போய் சேர்ந்துட்டா யசோ அக்கா! அந்த செய்தி யாழ்பாணம் வர ,மறுபடியும் என் அம்மா

                    " கடவுளுக்கே கண் இல்லையா,  வாழுற வயசிலேயே விதி கொண்டு போகுதே என் குழந்தையை "

                             எண்டு குளறிக் குளறி அழுதா !......

                           யசோ அக்கா தற்கொலை செய்து ,  தானாகவே முற்றுப் புள்ளியை முன்னுக்கு வைத்து, அகாலமா மரணித்த போது  நடராசா பெரியப்பா என்ன செய்தார் எண்டு இன்றுவரை எனக்கு தெரியாது. ஒரு வேளை அமைதியா ,ஒருவருடனும் அனாவசியமா பேசாமல் தியானம் செய்பவர் போல இருந்து  J. கிருஷ்ணா மூர்த்தியோட புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருந்து இருக்கலாம் எண்டு நினைக்கிறன்!.
.