Monday 27 July 2015

ஆகாயக்கடல்வெளி இளையநிலா..

தொன்நூறுகளின் ஆரம்பத்தில் யாழ் குடாநாடு குண்டு மழைக்கு மத்தியில் அதிர்ந்து கொண்டு இருந்த நேரம், கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாக இசைமழை பொழிந்த நேரம், என்னோட இளவயதில் ஒரு இசைக் குழுவில் கிட்டார் வாசித்தேன். அந்த இசைக்குழு என்னோட கடைசித் தம்பியின் நண்பர்கள் நடத்தினார்கள்.

                                   நாங்க யாழ்ப்பாணம் டவுனில இருந்தாலும், நிகழ்சிகள் செய்யும் அழைப்புகள் அதிகம் கிராமக் கோவில்களில் இருந்து வரும்,அந்தப் பையன்கள் என் கடைசித் தம்பியை விட சின்னதாக இருந்தது நினைவு இருக்கு.இசைக் குழுவில் அதிகம் ஏலேற்றோனிக் கருவிகள் இருக்கவில்லை, அதனால இசை கொஞ்சம் இரைச்சல் இல்லாமல் இயல்பாக கிராமத்து ஆவாரம்பூப்  போல அழகா எப்பவும் மயங்க வைக்கும் .

                                அந்த இசைக்குழு பெயர் இப்ப நினைவில் இல்லை,அதுபோலவே அதில நான் எப்படிக் கிட்டார் வாசித்தேன் எண்டும் அறவே நினைவு இல்லை.பயணங்கள் முடிவதில்லை படத்தில வந்த இளையநிலாப் பொழிகிறது..  என்ற பாடலை தொடக்கம் முதல் இறுதிவரை கிடாரில் பொழிந்து வாசிக்கும் திறமை என்னிடம் இருந்ததால்  என்னை அந்தப் பையன்கள் ஆஸ்தான கிடாரிஸ்ட் ஆக அந்த இசைக் குழுவில் வைத்து இருந்தார்கள். 

                                          இந்தக்கதை இளையநிலா பாடலோ,அதில் வரும் கிட்டார் அதிசயங்களோ, அல்லது பிஞ்சு போன  அந்த இசைக்குழு பற்றியதோ இல்லை, இளமை  நெஞ்சமெல்லாம்   வயதுக்கோளாறு  ஹோர்மோன்கள் கொலுவிருந்த  நாட்களில்இ ளைய நிலாவை விட இளமையான ஒரு பெண்ணை அந்த இசைக்குழு நடத்திய ஒரு நிகழ்சியில் முன்னப் பின்ன தெரியாத ஒரு ஊரில சந்தித்து பற்றியது..

                                 வடமராட்சியில் சமரபாகுதேவன்குறுச்சி என்ற இடத்தில ஒரு பிள்ளையார் கோவிலில் அந்த இசை நிகழ்ச்சி நடந்த இரவு, எல்லா இரவும் போல இருட்டா இருந்தது, எல்லா கிராமத்துப் பிள்ளையார் கோவில் போல இருந்த அந்த சின்னக் கோவிலில் பிள்ளையாரும் சின்னதா இருந்தார்,கோவிலும் சின்னதா இருந்தது . கோவிலுக்கு முன்னால ஒரு ஆலமரத்திற்குப் பக்கத்தில, மேடை போட்டு,எளிமையா நடந்த அந்த நிகழ்சியில் அந்த இசைக் குழுவின் பிராதான அறிவிபாளார் அன்று வரவில்லை,பையன்கள் கேட்டாங்கள்

                 " அண்ணே நீங்க பாடல் தொடங்குமுன்,ஒரு சின்ன அறிமுக அறிவுப்பு கொடுக்க முடியுமா " எண்டு,

                              எனக்கு எனவுன்சர் என்ற அறிவிப்பாளர் போல எப்படிப் பேசுவது எண்டு தெரிந்தாலும், என்ன பேசுவது எண்டு தெரியவில்லை,நான் அவங்களிடம் அதை சொன்னேன்,அவங்கள்

                   " அண்ணே அது பரவாய் இல்லை,உங்களுக்கு பிடித்த மாதிரி சொல்லுங்க அண்ணே ,எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை " எண்டு உற்சாகம் கொடுக்க,

                                    நான் மைக்கைப் பிடித்து,ஒரு கையால வேட்டியை இறுக்கிப்பிடித்து கொண்டு ,  என்னோட பாணியில் ஜோக் அடித்து தொடங்கினேன்,அது கொஞ்சம் வித்தியாசமா இருந்ததாலோ என்னவோ சனங்கள் ரசித்தார்கள், அப்பத்தான் மேடையின் கீழே ஒரு இளம் பெண் கொஞ்சம் அளவுக்கு அதிகமா விழுந்து விழுந்து சிரிக்கிறதை,சில நேரம் நான் மைக்கை கையில எடுக்கவே அந்தப் பெண் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்க ஆச்சரியமா இருந்தது. 

                                         உங்களுக்கு உண்மையை சொன்னா என்ன நிகழ்சியில் நான் என்னோட கிடாரை விட அவளை அதிகமாக ஓரக்கண்ணால் கவனித்தேன்.....

                                       கோவில்களின் கடைசி பூங்காவன திருவிழா ஒரு வருடத்தில் நடக்கும் ஒரு நினைவு நிகழ்வு, சனங்கள் அது எப்படி குளறுபடி இசை நிகழ்வாக இருந்தாலும் ரசிப்பார்கள். இரவின் அமைதியில் விடிய விடிய நடந்த அந்த நிகழ்வின் நடுவில அந்தக் கோவில் ஐயருக்கு பொன்னாடை போர்க்கும் நிகழ்ச்சி நடக்கப் போறதா சொல்லி ,எங்களை மேடையில் இருந்து இறக்கி, அந்த திருவிழா உபயகாரர் வீட்டில சாப்பாடு ரெடியா இருக்கு, எல்லாரும் போய் சாபிட்டு போட்டு வந்து தொடர்ந்து இசை நிகழ்சி செய்யச் சொல்ல, ஒரு வயதான ஐயா வந்து

                  " பொடியள் உங்களுக்கு, இடம் வலம் இந்தப் புது ஊரில தெரியாது ,நான் விதானையார் வீடு காட்டுறன் எனக்குப் பின்னால வாங்கோட"

                          எண்டு சொல்ல ,நான் அந்தப் பெண்ணைப் பார்த்தேன், அவள் நேரத்தோட எழும்பி , ஆலமரப் பக்கம் நிண்டு எனக்கு என்னவோ சொல்லுரது போல கையால சைகை செய்ய எனக்கு இருட்டில சரியா விளங்கவில்லை ,அவளவுதான் அவள் மின்னல் சொப்பன சுந்தரி நளினத்தில்  மறைந்து போயிட்டாள்,நான் கவனித்து போல அவளும் என்னைக் கவனித்து இருக்கிறாள் எண்டு விளங்கினாலும் எதுக்கு எனக்கு அப்படி சிக்னல் காட்டினாள் எண்டு விளங்கவில்லை.

                            அந்த ஐயா கல்லு ஒழுங்கை பனைவடலி வீதியால எங்களை இழுத்துக்கொண்டு போக,நாங்க பின்னால இழுபட்டுப்போக, பாதத்தியில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய வீதியில்,கோவில் லவுட் சபிகர் சத்தத்தை நோக்கி தொடர்ந்து குரைக்கும் நாய்கள் எங்களைப் பார்த்து இன்னும் அதிகமா குரைக்க தொடங்க  ,

                                  ஆரவாரமற்ற இரவு நேர இசை நிகழ்ச்சி அமளி துமளி குறைந்து குறைந்து அமைதியாக ஒழுங்கை முடிவில் சத்தம் சில்வண்டு இரைச்சல் அளவுக்கு நிசப்தமாக அடங்க,  நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு போக,ஒரு மரத்தில அரிக்கன் லாம்பு விளக்கு தொங்க, அந்த வீட்டுக்குள்ள அந்த ஐயா போக முதல்

                          " ராசாத்தி பிள்ளையள்  வாறாங்கள், அம்மாட்ட டக் எண்டு பந்தி விரிச்சு சாப்பாடு போட சொல்லனை "  

                              எண்டு சொல்ல,அந்தப்பெண் அந்த மரத்துக்கு பக்கத்தில், படலையில் ஓரமா நிண்டாள், பெடியங்கள் எல்லாரும் பசியில அடிச்சுப் பிடிச்சு உள்ளுக்கு உள்ளிட, நான் அவளைப் பார்த்தேன், சடார் எண்டு வேட்டிய முழங்காலில இருந்து அவிடுக் கீழ விட்டேன், அவள் எனக்கு என்னவோ சொல்ல,அல்லது கதைக்கக் காத்து இருப்பதுபோல பார்த்தாள். 

                            அவள் நின்ற அந்த படலையின் அருகில் இருந்த  மரத்தில இருந்து ஒரு முன்னம் பின்னம் அறியாத வாசம்வர

                    " இது  என்ன மரம் "  

                        எண்டு மரங்கள் பற்றி என்னவோ தாவரவியல் ஆராய்ச்சி செய்யுற மாதிரி நூல் விட்டு அவளிடம் கேட்டேன், அவள் முகமெல்லாம் சந்தோசமாகி,

                          " இது ஆமணக்கமரம், நீங்க நல்லா கிட்டார் அடிக்குரிங்க " எண்டாள் ,


                      நான் கொஞ்சம் ஜோசித்து " இது உங்களின் வீடா " எண்டேன்,

                அவள்," ஓம் ஓம் ,நீங்க நல்ல முசுபாத்தியா எனவுன்ஸ் செய்யுரிங்க, சிரிப்பு வருகுது " என்றாள் ,

                     நான், " இவங்கள் எல்லாம் என்னோட தம்பியின் பிரென்ஸ், கிட்டார் வாசிக்க தெரியுமா நீங்க மூயுசிக் படிகுரின்களா" எண்டேன்,

                           அவள்," நீங்க இளையநிலா பொழிகிறது பாடல் நிகழ்சியில் பாடுவின்களா " எண்டாள் ,

                         நான் " அப்பிடிதான் நினைக்கிறன், உங்களுக்கு அது விருப்பமா,இன்று உங்களின் திருவிழாவா எண்டு கேட்க" ,

                            " நிலாகாயும் நேரம் சரணம்.... பாடலுக்கு முதல் நீங்க சொன்ன விளக்கம் வித்தியாசமா இருந்தது " எண்டாள்,

                         " நான்  என்ன விளக்கம்  சொன்னேன் ,,எனக்கே  நினைவு இல்லை "

                             " காதலனும்  காதலியும்  கையைப்பிடித்து நடப்பது  போல  அந்த பாடலின் தாளகதி  இருக்கு  எண்டு சொன்னிங்க "

                                " அப்படியா "

                             "  ஹ்ம்ம்  என்னமோ  ஒரு இங்கிலிஷ் சொன்னிங்க  வாத்து  அப்படி  நடக்கும்  என்று "

                               " வாடலிங்  அதுவா ,,,வாத்து  அப்படிதான்  நடக்கும் "

                              " ஹ்ம்ம்  அதுதான்,,நல்லா  இருந்திச்சு ,,அப்படி  ரசித்து  சொன்னது "

                              " அப்படியா,,அது  இங்கிலிஸ்  சொல்லு " 

                              " என்ன அப்படியா என்டுரிங்க,எவளவு  ஆசையா  இருந்திச்சு  தெரியுமா  அதைக்  கேட்க  "

                             " இந்த இசைக்குழுவில் உள்ள எனவுன்சர் இண்டைக்கு வரவில்லை  அதால  நான்  சும்மா  அறிவிப்பாளர் போல  என்வுன்ஸ் செய்தேன் "

                                  " அவர் இனி வரத் தேவை இல்லை,,நீங்களே  மைக்கைப் பிடிச்சு  எனவுன்ஸ்  செய்யுங்கோ "

                               " அட அட ,,எனக்கு  அது எல்லாம் தெரியாது "

                               " வேற  என்ன  தெரியும்,,,சொல்லுங்கோ "

                              " உண்மையைச்சொன்னால் எனக்கு கிட்டார்  வாசிகிறத  தவிர வேற ஒன்றுமே தெரியாது "

                                  " உண்மையாவா சொல்லுரிங்க,,கிட்டார்  எப்படி  வாசிக்கிறது  "

                                    " ஹ்ம்ம் .அது  எல்லாரும்  வாசிக்கலாம் ." 

                                   "  என்ன ஹ்ம்ம்,,வேற  சொல்ல  மாட்டிங்களா  "

                                 " வேற சொல்ல ஒன்றுமில்லை ..."

                       "  என்ன ஒன்றுமில்லை,,ஹ்ம்ம், கோபம்  கோபமா வருது  " 
                                
                                   "    எதுக்குக் கோபம் வருகுது "

                                "  அதுதான்  தெரியவில்லை ..."

                              நான் " நீங்களும் சினிமாப் பாட்டு எல்லாம்  பாடுவின்களா " எண்டு கேட்க,

                            அவள், " நீங்க இனியும் உடுப்பிட்டிக்கு வருவிங்களா " எண்டு கேட்டாள்,

                       நான் தலையைச் சொறிஞ்சு  " உடுப்பிட்டி எங்க இருக்கு " எண்டேன்

                                       அவள் " இது தான் உடுப்பிட்டி " எண்டு சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள்,

                         அவள் சிரிக்கிறதைக் கேட்டு,எங்களைக் கூ டிக்கொண்டு வந்த ஐயா,

                                 " அது ஆர் பிள்ளை ராசாத்தி படலைக்க நிக்குறது "  

                            எண்டு கேட்க நான் கதையை நோர்மல் ஆக்கி விடுப்பு கேட்கிற மாதிரி,

                                " ஏன் அரிக்கன் லாம்பை சுற்றி பூச்சி பறக்குது, இது என்ன பூச்சி " எண்டு கேட்டேன் .

                               " இது விட்டில் பூச்சி. இன்று இரவு மழை சிலநேரம் வரலாம் போலக் கிடக்கு ,கவலையா இருக்கு மழை வந்தா நீங்க எல்லாரும் இடையில இசை நிகழ்ச்சி செய்யாமல் போயிடுவின்களே , இந்த விட்டில் பூச்சிகள்  சிம்மினியில் மோதி மோதி செத்துப்போகும்,அதன் வாழ்கை ஒரு இரவுதான் "

                    எண்டு  மெதுவாக சொன்னாள்.

                          " அவங்கள் இடையில  போனானாலும் ,நான் மழையில நனைத்து கொண்டு ,மைக்கைப் பிடிச்சு எனவுன்ஸ் பண்ணிக்கொண்டு இருப்பேனே "

                                எண்டு சொன்னேன்,வாய் விட்டு சிரித்தாள், சல்லி முட்டி  உண்டியலை உடைச்சு சில்லறைக் காசு வெள்ளித் தாம்பாளத் தட்டில கொட்டின மாதிரி இருந்தது. 

                           அதுக்குப் பிறகு ,என்னோட ஊரைக் கேட்டாள்,சொன்னேன், அவள் வட இந்துவில் படிகிறதா சொல்லிக்கொண்டு இருக்கும் போது, வீடுக்க உள்ள இருந்து

                           " கோகிலா,கோகிலா ,இருட்டில எங்க ராசாத்தி சிலமன் தெரியேல்லையே பிள்ளை, பெட்ரோல் மக்ஸுக்கு மண்எண்ணை குறையுது, எண்ணைக் கானை எங்க பிள்ளை வைச்சனி "

                      எண்டு கேட்டு ஒரு குரல் அந்த வயதான அய்யாவின் குரல் போல  வர, அவர் யார் என்று கேட்டேன், தன்னோட பெரியய்யா   என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் அவள் சத்தம் இல்லாமல்

                        " அம்மா கூப்பிடுறா , நீங்க பசியோட இருபிங்க உள்ள வந்து முதலில்  சாப்பிடுங்க " எண்டாள்,

                                 படலைக்கு உள்ள போகும் போது தலையை திருப்பி பார்த்தாள் , தேவதை போல சிரிச்சு மின்னல் போல மின்னிப் போட்டு உள்ளுக்குப் போயிடாள்,

                                எனக்கு விளங்கிட்டுது இந்தக் கதை இதோட முடியாது போல இருக்கு எண்டு எண்டாலும் ஆரம்பம் விளங்காத ஒரு விசியம் எப்படி இனித்தொடரும் எண்டு குழம்பிக்கொண்டு, நான் கொஞ்சம் பிந்தி சாப்பிட வர சாபிட்டுக்கொண்டு இருந்த பெடியங்கள் என்னை சந்தேகமாப் பார்த்தாங்கள்,

                      " அண்ணே இடியப்பம் முடியப் போகுதண்னே "

                           எண்டாங்கள்,நான் ஒண்டும் சொல்லவில்லை. சின்னப்பொடியன்களை முதல் சாப்பிட விட்டுப்போட்டு பிறகு அண்ணே கடைசியா சாப்பிட வாரார் ஆக்கும் எண்டு ஜோசித்திருப்பான்கள் போல.  நான் சாப்பிட ஒரு மூலையில இருக்க, அவள் கதவுக்கு மறைச்சு அரை வாசியா என்னைப் பார்க்க, அவளோட முகம் அஷ்டமி சந்திரன் போல பாதியாக , இமைகள் மட்டும் மூன்றாம் பிறை போல இருட்டில தெரிந்து,

               அவளின் அம்மா

                               " எங்கட ஊர் இடியப்பம் சொதி, உங்களைப் போல டவுனில வளரும் பிறத்தி ஆட்களுக்கு நல்லாப் பிடிக்கும் போல "

                           எண்டு சொல்ல, நான் அவளைப் பார்த்தேன், அவளே கடுகு தாளிச்சுப்போட்ட தேங்காய்ப் பால் சொதிபோல தான் இருந்தாள், சிரிப்பு வந்தது.

                   அவள் என்னைப் பார்த்துக்கொண்டே  

                             " எணை அம்மா,   பச்சை மிளகாய் வெள்ளச் சம்பலும் இவயளுக்குக் பிடிகுமாமம், அங்கே போடணை "

          எண்டு என்னோட இலையை அவளின் அம்மாவுக்கு காட்டினாள். 

                     நான்  பச்சை மிளகாய் வெள்ளைச் சாம்பலைப் ரசித்துப் பார்க்கிற மாதிரி ஒரு கோணத்தில்,தலையை அதிகம் நிமிர்த்தாமல்  அவளைப் பார்த்தேன்.

                                        கோகிலா இளமையா என்னோட வயசு போல இல்லை ,கொஞ்சம் குறைவு போல சின்னதாக இருந்தாள். இருட்டிலையும் அவள் தலை மயிர் நல்ல வள வள எண்டு வழுக்கி வழுக்கி அலைபாய , காதில போட்டு இருத்த பெரிய வளையத் தோட்டுக்க கொஞ்ச தலைமுடியை வேண்டும்  எண்டே வளைச்சு விட்ட மாதிரி இருக்க,முகம் சின்ன சிட்டுக்குருவி போல அப்பாவியா இருந்தது, முழங்காலுக்கு கீழ வரை வரும் ஒரு நீண்ட பாவாடை அணிந்து, ஒரு சில்க் துணியில தைச்ச பிளவுஸ் மேல போட்டு, கையில நிறைய வளையல்கள் அணிந்து இருக்க, அவளின் உருவம் கன்னியாகுமரி அம்மன் சிலைபோல கலர் புல்லா இருக்க கையில ஒரு கிளி வைச்சிருந்தா மதுரை மீனாட்ட்சி அம்மன் போல இருப்பாள் போல இருந்தது.

                               அந்த வடலிப் பாதையில இருந்த பனை மரங்களின் காவோலையில் காத்து மோதி சர சர சர எண்டு சருகுகளுக்குள்ளாள சாரப்பாம்பு போற மாதிரி சத்தம் வந்தது அவள் சத்தம் இல்லாமல் இருந்த சில நிமிடங்கள். தலையைப் பக்கவாட்டில் சரிச்சு, ஒரு கையால தலை மயிரை அள்ளி எறிஞ்சு பின்னுக்கு விழுத்தி, சின்னக் குழந்தைகளின் உலகம் தெரியாத பூரிப்பில் சந்தோஷமா சிரிக்கும் போதெல்லாம்.... 

                                     நான் கடைசியா சாபிட்டு,வெளிய வர பொடியன்கள் எண்ணப் பார்த்துக்கொண்டு வடலிப் பாதையில் நிண்டாங்கள்,நான் ஆமணக்கம் மரத்தையும் அரிக்கன் லாம்பையும் பார்க்க கோகிலா மறுபடியும் அதில நிண்டாள், ஆனால் கொஞ்சம் பதட்டமா நின்றால் என்பதை இருட்டு வெளிகாட்ட, இருட்டில வேற சில உள் ஊர் இளஞ்சர்கள் கொஞ்சம் தள்ளி அந்த வடலிப் பாதையில் நிக்குறது எனக்கும் தெரிய, நான் கொஞ்சம் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கிற மாதிரி ,

                              " உங்களின் அரிசிமா இடியப்பம்,தேங்காய் சொதி, பச்சை மிளகாய் வெள்ளைச் சம்பல்,சும்மா நாதம் பேசியது, அதுக்கு நன்றி. உங்க விருப்பமா சாப்பாட்டுக்கு நன்றியாக இளையநிலா பொழிகிறது பாடல்.. எப்படியும் இன்று பாடுவம் ,அதுக்கு நான் தான் இன்ற்றடக்சன், இண்டர்லுத், பினிசிங் எல்லாம் கிடாரில் வைச்சு தட்டப் போறேன் "  

                                  எண்டு கொஞ்சம் விபரமா சொல்லிப் போட்டு ,அவள் பதில் என்ன சொல்லப்போறாள் எண்டு ஜோசிதுக்கொண்டு நின்றேன்,

                                அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆமணக்க மரத்தில தொங்கின அரிக்கன் லாம்பை எடுத்துக்கொண்டு படலையை மெள்ள சாத்திப்போட்டு, வீட்டுக்க போயிட்டாள்.

                    பெடியங்கள் வந்து

                      " அண்ணே அந்த அக்கா யார் " எண்டு கேட்டாங்க,

                      நானும் " அது தான் எனக்கும் பிரச்சினை ,அந்த அக்கா யார் எண்டு எனக்கும் தெரியாது " எண்டு சொன்னேன்,

                அவங்கள்

                       " அண்ணே இந்த ஊர் எங்களுக்கு தெரியாது ,வீண் சோலி வரும் அண்ணே, நீங்க வாங்க நாங்க மேடையில ஏறப்போரம் "

                  எண்டு சொல்ல, நானும் அவங்களோட வந்து மிச்ச நிகழ்ச்சி முழுவதும் கிட்டார் வாசித்தேன்,  இளையநிலா பாடல் பாடி வாசிக்க இளையநிலா இருந்த இடம் வெறுமையா இருந்தது. அவள் வரவே இல்லை, அந்த வெறும் இடத்தைப் பார்த்து பார்த்து கொண்டு இருந்தேன், கடைசியா " நாளை நமதே எந்த நாளும் நமதே...." பாடல் வாசித்து நிகழ்ச்சி முடிய,எல்லா வாத்தியமும்,ஒலி பெருக்கி சாதனங்களும் வானில ஏற்றி முடியவும் அந்த இடம் வெறுமையா இருந்தது .

                           திருவிழா முடிய எல்லாசனமும் வீடுகளுக்குப் போக, அந்த கோயில் நிர்வாக வயதான மனிதர்கள் கோவிலுக்கு வெளிய நிற்க ,நாங்களும் எல்லா மூசிக் சாமான்களும் வானில ஏற்றி முடிய நான் வேட்டிய மடிச்சு முழங்கால் வரை கட்டிக்கொண்டு வெளிக்கிட, நாலு சங்குமார்க் சரம் கட்டின வாட்ட சாட்டமான இளைஞர்கள் எங்களின் வானுக்கு கிட்ட வந்து,என்னோட மட்டும் கதைக்க வேண்டும் எண்டு சொன்னார்கள்,பெடியங்கள் என்னை ஏதோ வில்லங்கத்தில மாட்டுற மாதிரி பார்த்தாங்கள்,நான் சாமாளிப்பேன் எண்டு அவங்களுக்கு சொல்லிப் போட்டு தனியப் போனேன்,

                           அவங்களில் ஒருவன் ,

                                   " வதனியை  முதலே தெரியுமா " எண்டு மரியாதையைக் கேட்டான்,

                            விலங்கமான நேரத்தில ஓவரா மரியாதை வெளிய வருவது நல்லதில்லை எண்டு தெரிந்தாலும் ,

                       நான் " யார் வதனி ,அப்படி யாரையும் தெரியாதே  " எண்டு கேட்டேன்,

                             " அவ தான் விதானையின்ற மகள்,நீங்க இருட்டில நிண்டு என்னவோ குசு குசுதின்களே அவளோட " என்றான் 

                             " ஒ,  அவங்களுக்கு  வதனியா  பெயர் "

                            " ஏன்,,வேற பெயர்  சொன்னாளா "

                           "  இல்லை,,நான்  கேட்கவுமில்லை,,சொல்லவுமில்லை ,கோகிலா  என்று அவர்கள் வீட்டில ஒரு அம்மா  கூப்பிட்டா "

                         " ஓம்,,அதுதான் வீட்டில பெயர் , என்ன கதைத்தாள் "

                           "  ஒன்றும் விசேஷமாக  கதைக்கவில்லை,,இசைக்குழுவில் என்ன பாட்டு வாசிப்பிங்க  என்று  கதைத்தாள் "

                               "   அப்படியா ,,அவளவுதானா  "

                                "   அவளவுதான்,,"

                              நான் நடந்ததை சொன்னேன், அந்த நாலு பேரில் ஒருவன் நான் எதிர் பார்த்த கேள்வியை அவனே சொல்லி அதுக்கு கச்சிதமா பொருந்தும் பதிலையும் அவனே சொன்னான், இதெல்லாம் உலகம் முழுக்க கிராமம்,நகரம் வித்தியாசம் இல்லாமல் நடக்கிற விசியம் எனபதால் நான் ஒண்டுமே சொல்லவில்லை ,நான் என்ன சொல்ல முடியும் சொல்லுங்க பார்ப்பம் ,முதல் அவன் சொன்னது அவனுக்கு மட்டும் உள்ள ஆதங்கமா எண்டும் எனக்கு தெரியாது,அவங்களில் கொஞ்சம் சண்டியன் போல இருந்த ஒருவன், கொஞ்சம் வெருட்டுற மாதிரி சில விசியம் சொன்னான், அது எனக்கு இன்னும் குழப்பாமா இருந்தது ,,,

                                  அந்த நிகழ்சியின் பின் அந்த இசைக்குழு பிரிந்து  என்னோட தம்பி ஒரு முன்னணி இசைக்குழுவில் தபேலா கலைஞ்சனா முன்னணி மேடைகளில் ஏறப்  போக , என்னைப்போன்ற மற்ற சில்லறைகள் எல்லாரும் பிரிந்து எல்லாரும் கொஞ்ச நாளில் காணாமல் போக ,ஒரு கட்டத்தில் அதுக்குப் பிறகு நான் எல்லாத்தையும் மறந்து விட்டேன்,கோகிலாவின் முகத்தை மட்டும் மறக்கவே இல்லை,அது பார்க்கிற இடம் எல்லாம் முன்னுக்கு வந்து மறைக்கிற மாதிரி இருந்தது, 

                                          ஆனாலும் அஞ்சு நிமிடம் பேசியதை வைத்துக்கொண்டு ஒரு இளம் பெண்ணில் காதல் கோட்டை கட்ட அத்திவாரம் போட முடியாது எண்டு நல்லா தெரிந்தாலும், அந்த இளம் பெண் நிறைய விசியம் என்னோட பேச விரும்பி இருக்கலாம், சந்தர்ப்பம் கிடைக்காத போது தான் பேசாத விசியங்கள் இதயம் முழுவதும் இறுக்கிக்கொண்டு பாரமாக இருக்கும்.எப்படியோ அந்த நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமா அழியத் தொடங்க ...

                                        ....சில வருடங்களின் பின் அந்த முகத்தை வேற ஒரு இடத்தில,ஆணையிறவு ஆகாயக் கடல் வெளிச் சண்டையில வீரச்சாவடைந்த போராளிகள்  .விபரம்,ஈழ முரசு  இல வந்த நேரம் பார்த்தேன். சண்முக சுந்த..... .. கோகிலவதனி , மேயர் இளையநிலா எண்டு படம் போட்டு அதில அவள் என்னையே பார்ப்பது போல இருந்தது, இளையநிலா அப்ப வரிப் புலியில் வீரமாக இருந்தாள்,,பாவம் உசிரோட இல்லை!

                                                யுத்தகாலத்திலிருந்து  அந்த நேரம் வாழ்ந்த  எல்லாரையும் போல  இழப்புக்கள்  பற்றி அலைந்துகொண்டு  இருந்த  எல்லா இடங்களிலும் பதில்கள்  இல்லாத  கேள்விகளுடன்  வெயிலோடும்  மழையோடும் தனிமையிலும் ஏராளமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஜதார்த்த   வாழ்க்கை என்பது  எப்போதும்  உண்மையோடு என்னிடம் ஏராளமானவற்றைப்   பகிர்ந்துகொண்டிருக்கிறது.

                                               இதில மறைக்கவோ திரிபுபடுத்தவோ ஒன்றுமேயில்லை அப்படி நினைத்து   நல்லா உத்துப்பார்த்த போது முகத்தில அஷ்டமி சந்திரன் ,இமைகள் மூன்றாம் பிறை.பின்னணியில் ஆமணக்க மரம்,அதில அரிக்கன் லாம்பு, பாதத்தில் ஓட்டிக் கொள்ளும் செம்மண் துகள்கள் நிரம்பிய கல்லு ஒழுங்கை , தொடர்ந்து குரைக்கும் நாய்கள். இரவு நேர இசை  நிகழ்ச்சி, ஆகாயக் கடல் வெளியில் இளையநிலா !
.