Tuesday 18 December 2018

கனவுகள் !


*



முன்னிருக்கைப்
பெண்ணின்
ஸ்பரிசக் கூந்தல்
தள்ளிவிடும் வாசனைகள்
ஒரு

பயணத்தையே
இலக்கின்றி நகர்த்துகிறது !


இதே
சுகந்தத்தையா
அவர்களுக்கே தெரியாமல்
நெருங்கியிருக்கும்
எல்லாரிடமும் நுகர்ந்து
நினைவிலிருந்து தப்பித்து
முடிந்தபின்
விலத்திக்கொள்கிறேன் !


எவ்வளவு
சுயநலமான சுகபோகி !
என்னையே
வெறுக்கும்படியான வேற்றுணர்வு !


இங்குதான்
இச்சைகளின் அலைச்சல்கள்
ஆத்மாவினுள்ளே
குற்றஉணர்ச்சியைச் சந்திக்கிறது. !


*

கைகளின் தொலைவில்
வள்ளங்கள் ,
கண்கள் விழிக்கும் திசையில்
குப்பி விளக்குகள் ,
குரல்கள் கேட்குமளவில்

நீண்ட அடிவானம் ,
அவ்வப்போது
நீரோட்டங்களில் எழுந்துகொள்ளும்
ஆர்ப்பரிப்புகள் ,
எதிர்பாராத வினாடியில்
பிரளயம்போலவே
பேய்க்காற்றுப் பிரட்டி
நீரடிப்பு சோர்ந்துபோனபோதில்
கடலின்
தத்தளிப்பு
அலைகளைப் பிரித்துவிட்டது. !
பெயர் சொல்லிப்
பெருங்கடலைத் திட்டி
துயரக்குரலெடுத்து அழுகிறது
மணல்க்கரை !


*

சரியான நேரத்தில்
சந்தித்துக்கொண்ட
உரையாடல்கள் ,
சரியான பருவத்தில்
மனவலிமையைச் சோதித்த

இளவயது ,
சரியான இடத்தில்
வீரியத்துக்குக் குறைவில்லாத
ஆசைகள் ,
சரியான தெரிவில்
தன்மானத்தை முன்னிறுத்திய
பாதைகள்,
சரியான வாய்ப்புகளில்
தவறிப்போன
குறிக்கோள்கள் !
தனக்கேயுரிய முறையில்
மிகச்சரியான தருணங்களில்
குறுக்கிட்டுக்கொண்டபடியேயிருக்கிறது
விதி !


*

கதைப்போக்கில்
ஒரு
மனச்சித்திரத்தை உருவாக்கி
குறிப்பிட்ட
வழமையானவையென்ற ...

வகைமாதிரிகளைக் கடந்து
பழக்கத்துக்கு அடிமையானதுபோல
எங்கிருந்து
வந்ததென்றே தெரியாமல்
என்னுடன் சேர்ந்து
முடிந்தளவு
அவமானப்படுத்தல்களைச்
சகித்துக்கொண்டு
துரதிருஷ்டவசமாகத்
தன்
தடயத்தையும் விட்டுச்செல்லும்
காலத்துக்கு
எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் !


*

நிராகரிக்க முடியாதளவுக்கு
வலுவான ஆளுமை
காலநிலை !
ஒத்திசைவில்
இதுதான் 

வலிக்கவும் செய்கிறது !
அடைப்புகளையும் மீறி
மெலிதாக வெளிப்படும்
யாரோ ஒருவனின்
கதறல்போலக்
குளிர் நெருக்குகிற
இரவுகளில்
சூழும் ஆபத்துகள்
வெளியுலகில் இல்லைத்தான்
ஆனலும் ,
அடிப்பயத்தில்
தொண்டைக்குள் வந்துவிடுகிறது
ஏதோவொன்று !


*

மூச்சுத்திணறலுடன்
திறக்கப்படும்
ஜன்னல்களை
நையாண்டிசெய்கிறது
உள்நுழையும்

காற்றின் மமதை !
திருத்தமான
திசையில்செல்ல
வழிகாட்டுகிறது
கொஞ்சபோல வெளிச்சங்கள் !
நவீன யுகத்தின்
அல்லாடல்களுக்கு
நன்றி கூற வேண்டும் !
பிறகென்ன
மரியாதையைக்
காப்பாற்றிக்கொள்ள
வெளிச்சென்று
கதவை மூடிவிடுகிறது
இன்றைய நாளின்
எஞ்சிய பகுதி !


*

புரிந்துகொள்கிற
அடிப்படையில்
அப்படியொன்றும்
தியாகம் செய்வதுபோல்
சிலாகிப்புக்கள் இல்லை !

தவிர்க்கமுடியாமல்
இதைச் செய்தேன் என்று
சொல்லிக் கொண்டு
நெருங்கிப்பழகிய
ஒரு இறுக்கம்
மறக்கமுடியாமல்த் தவிக்கலாம் !
அடிப்படையில்
குறிப்பிடத்தக்க விஷயங்களில்
தொலைந்துபோனது மாதிரியிருப்பதால்
மன்னிப்புக்கும்
காரணங்களுமில்லை !
ஒரு
கைச்சொடுக்கலிலேயே
முன்னோக்கி
விழுந்துவிடுகிறது
அநிச்சயம் !


*


மிகச்
சந்தோஷமான
தருணம் !
இறுதிநாளிலும்
ஒரு வழி
இருட்டில் தேடிக்கொண்டது ! 


இயல்பாகவிருந்ததை விட
கனிவாகவும்
பெயரைச் சொல்லி
நேராகவே
அழைக்கப்படும்போது
எல்லாமே
அழகாகவிருந்தது !


பிறகு
உணர்ச்சி ததும்பும்
வாழ்க்கையை
விலகி நிக்கும் பார்வையில்
உலர்ந்துபோன
வார்த்தைதைகளில்
வருணிப்பது போலிருந்தபோதுதான்
இட்டு நிரப்பமுடியாமல்
இடைவெளிகள்
இறுக்கிக்கொண்டது !


*




வாழ்க்கையோடு
சம்பந்தப்பட
சில தங்குகின்றன,
மற்றதெல்லாம் நிற்பதில்லை.

தூக்கிப்போடக்கூடிய
கனதியானவொரு மூட்டை போல
மனசாட்ச்சியைப்
பார்ப்பது சுலபமாக இல்லை,


இப்போதெல்லாம்
ஒவ்வொரு காரணத்தையும்
அளந்துபார்த்து
வரிசைப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கு !


இப்படியுமில்லை,
அப்படியுமில்லை,
என்னைப் பொறுத்தவரை,
நான்
யாரென்பதை
நான் அறிந்திருந்தால்
அது போதும் !


*




மழைக்காற்றில்
நலுங்கும் சிம்மினி !

சுடர்போல
ஏதோவொன்று
ஆடிக்கொண்டிருந்த
அதிகாரமான
நெருக்குதலோடு
அனிச்சையாக
நெஞ்சைப்பிடிக்கும்
படுக்கையைச் சுற்றி
மெதுவான பேச்சுக்குரல் !

ஒருநாளல்ல
தொடர்ச்சியாகப்
பலசந்தர்பங்களில்
திகைப்பு மயக்கம்போல !

அதன் உச்சமான வலியை
அமைதிப்படுத்திக்கொண்டிருப்பதுதானா
அல்லததை
இழை இழையாகப் பிரிக்கும் உணர்வா?

விழித்துக்கொண்டு
வைராக்கியம் மேலெழுகையில்
ஏதோவொன்று வெடித்துச்சிதறுவதைப் போல
போர்வையை உதறி எழும்பிவிட்டாள்!

இன்றுகாலை
அவளுக்கு(ம் ) நடந்ததெல்லாம்
தலைப்புச் செய்தி !






*




நோக்கிப் புன்னகைக்கும்
இந்த அவளை
எந்த இடத்திலும்
இதுவரையில்ப் பார்த்ததில்லையே !

எதுவும் விபரீதமாக இல்லைப்போலிருக்கும்
நீள் நடைப் பாதையொன்றில்
அதிகம் தனித்திருப்பதின்
மனப்பிறழ்வா ?

இது எந்த இடம்?
எப்படி இங்கு வந்தேன்?

எண்ணங்கள் தோன்றியபடி
பேச்சுக்கள் பதிவாகியிருக்கும்
அவள் சற்று முன்னர் நடந்துசென்ற
இலையுதிர்சோலை !

அதையொரு
தொடுதிரையில் பார்ப்பதுபோல
பின்தொடர்ந்துகொண்டிருந்தது
பரவசமாகவிருந்து !





*


சிதிலமடைந்த
மரவாங்கின் விளிம்பில்
அமர்ந்தபடி,
அந்தரங்கங்களைப்
பிரிப்பது போலவே
காற்றிலேறி வந்த
குளிர் நெடியை முகர்ந்து
தேங்கு மழைநீரில்
அசைவுகளைப் பிரித்தெடுத்து
அதை
உடைக்கிறதில்
வளையங்களாக நெளியும்
சுழல்களைப் பார்த்தபடி ,
உரையாடலில்
அதீத உணர்ச்சிகளேதுமின்றி
காலத்தைச்
சமன் செய்தபடியிருக்கவே
இரவுநேரம்
போதுமானவளவு திகட்டிவிட்டது !


*


சுயநலமான
அதீத நினைவுகள்
ஒவ்வொரு நமக்குரிய நாளிலும்
நம்மை நாமே
அடையாளம் வைத்துக்கொள்கிறது!

நமக்குத் தொடர்பில்லாத
நம்முடையவொரு
ஒளிநகலைப் பார்ப்பதுபோலவே
சிலசமயங்களில்தான்
தன்ணுர்வுன்னு
தனியாகப்பிரிந்துவிடுகிறது !

நமதென்ற வரம்புமீறி
உள்வாங்கும் உணர்வுக்குள்
அகோரமான தனிமை நுழைந்துவிடும்போது
நம்மைச் சுற்றியுள்ளவர்களும்
தனித்தன்மையோடு
நமக்குள்ளும் நெருங்கிவிடுகிறார்கள் !






*





கனவுகளிடமிருந்து
தற்காலிகமான
தப்பித்தல் நிர்ப்பந்தம்போல
உரையாடிக்கொண்டிருக்கிறேன் ,


நிஜத்தில்
அசட்டுத்தனமாக
நிராகரிக்கப்பட்ட கேள்விகள் !


குறியீடுகள் நிரம்பிய
அவற்றுக்கு
மனசாட்சியற்ற பதில்கள் !


எச்சரிக்கைகளை மீறிக்கொண்டு
தொட்டுணர்வதுபோல
மெல்லசைவுகளில்
கவனம் குவியும்போது
நிழல்கள்போல
விலகிச்சென்றுகொண்டிருந்தேன் !


உறக்கத்தின்
இறுக்கமான அரவணைப்பில்
நெருக்கமானதாகத்
தொடங்குவதுதானென்றாலும்

நீட்டிப்பை நிறுவுவதுபோல
புரியமுடியாத
அபத்தங்களோடு திரும்புகின்றன
கனவுகள் !