Thursday 26 April 2018

வண்ணாத்திப்பூச்சியின் காதல்


என்னதான் நானே எழுதினாலும் இன்னும்தான்  கவிதை பற்றிய நிறைவான ஒரு கோட்ப்பாடு என்னிடம் இல்லை, அதனால அதை  அறிய  இலக்கிய விமர்சகர்கள் எழுதிய  கட்டுரைகளை  எப்போதும்  வாசிப்பது . அதிகம் அலட்டிக்கொண்டு இருக்காமல் " கவிதை விமர்சனம் " என்ற வகையில் " கவிதைகளின் நேரடித்தன்மை " என்ற தலைப்பில் வா.மணிகண்டன்  என்னும் கவிஞ்சர் எழுதிய நீண்ட கட்டுரையில் உள்ள ஒரு கருத்தை  சுருக்கமாக அப்படியே தருகிறேன். மிக எளிமையாக அதே நேரம் ஆழமான ஒரு கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். 

                                                            " கவிஞன் தனது வாழ்வியல் அனுபவத்தை கவிதையில் அடர்த்தியாக தர முயற்சிக்கிறான். அனுபவத்தை அதீத அடர்த்தியாக்குவதற்கு கவிதையின் வடிவத்தில் மேற்கொள்ளப்படும் சில மாறுதல்கள் உதவக் கூடும். வார்த்தைகளை நீக்குதல், மாற்றியமைத்தல், வரிகளை மடக்குதல் போன்ற யுக்திகளை கவிஞன் தனது கவிதையைச் செறிவாக்கும் பொருட்டே செய்கிறான். பயிற்சியுடைய கவிஞன் ஒருவனால் கவிதைக்குள்ளாக சில சொற்களை மாற்றியமைத்து கவிதை தரும் மொத்த அனுபவத்தையும் திசை திருப்ப முடியும்."


                                                       ஒரு பானை பழஞ்சோறுக்கு  தொட்டுக்கொள்ள ஒரு துண்டு நாரத்தங்காய் உறுகாய்போல இப்படி சொல்லி இருக்கிறார் கவிஞ்சர் வா மணிகண்டன். அப்புறம் வழக்கம் போல முகநூலில் வலம்வந்த  என்னோட  சொற்களை விதைக்கும் எழுத்து முயட்சிகளை  தொகுத்து   இங்கே பதிகிறேன், வாசித்தால் , வாசித்து பிடித்து இருந்தால் , உங்க கருத்தை மறக்காமல் சொல்லுங்க. 


வண்ணாத்திப்பூச்சியின் காதல் 
எந்தவையென்று 
எப்பவாவது அதனிடம்
காற்றை முன் நிறுத்தி வைத்து 
விசாரித்திருக்கிறோமா ?
இல்லையே !
அதையெல்லாம் விட்டுவிட்டு
படிமங்களை
அதன் சிறகுகளில் ஏற்றி
பறப்பதைச் சிக்கலாக்கினோம் ,
நனவோடை உத்தி என்று
குறுக்குவழிகளில்
புத்தி சொல்லிக்கொடுத்தோம்,
தேடல் என்ற பிரயோகத்திலதன்
சுயநிர்ணயத்தை
மொத்தமாகக் களவாடினோம்,
தேர்வுசெய்த
தோல்வியின் விபரிப்புகளுக்கோ
கனவுகள் காணாமல்போதலுக்கோ
அதன் பெயரைப் பாவிப்பதுக்கு
முன் உத்தரவுகள் வாங்குவதில்லை,
பயங்கரமான சொல்லாடல்களில்
அதன் பெண்மைப் பாதுகாப்பே
பதறிக்கொண்டது,
திடீர் திருப்பங்களென்று
அதன் பழக்கப்பட்ட திசைகளை
மாற்றிவைத்தோம் ,
கவிதைமொழிப்பற்றி அதனுடன்
ஒருநாள்த்தன்னும்
கலந்துரையாடியதில்லை !
ஒதுங்கிக்கிடக்குமதன்
ரகசிய விருப்பங்களையும்
பிரத்யேகமாக சேர்த்து வைத்திருக்குமதன்
காதல் குறிப்புகளையும்
கணக்கில் எடுத்ததேயில்லை !
இப்படித்தான்
அதீத பலாத்காரங்களுடன்
தப்பிப்போகாதவாறு
கவிதைகளில் உள்நுழைக்கப்பட்டு
அடிவேண்டியே செத்துப்போன
அட்ப ஜீவன்
வண்ணாத்திப்பூச்சி !


.........................................................................................

எதிர்பார்த்த வேகத்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் 
அலைக்கழித்தும் கலையாமலிருந்த
அந்த சந்திப்பு 
இரண்டு புள்ளிகளை இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய தற்கொலை போலிருந்தது!
ஒன்று
அமரஜீவிதக் காதலும்
அசட்டுத்தனமான காமமும்
நேரடியாகவே சம்பந்தப்பட்டது !
இரண்டாவது
குற்றமும்
அதுக்கான தண்டனையையும்
மேலோட்டமாக உரசிச் செல்வது !
ஆனால்
ரெண்டையும் சேர்த்து
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில் மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்தது !
மறப்பதை விடவும்
மன்னிப்பதில் குறியாகவேயிருந்தேன் !
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை !
ஆனாலும்
ஒரு கட்டத்தில்
அவள் உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தை
இப்பவும்
பொக்கிஷமாகவே சேகரித்துவைத்திருக்கிறேன் !


.....................................................................................................

தனித்தனியாக நின்று 
இருட்டின் 
மொழிபெயர்ப்புகளை 
உறக்கமின்றி 
ஒன்றோடொன்று தொடர்பிளக்கச் செய்யும் 
கனவுகள் !
பயணமாகிக் கொண்டிருக்கும்
நெடுந்துராப் பாதையில்
அச்சம்தரும் அமைதி !
இருத்தலைப்
பொறுமையோடு அணுகிக்கொண்டிருக்கும்
வெவ்வேறு கணங்களில்
அருகருகே
வெளிச்சக் குறுக்கீடுகள் !
ரகசியமாகப் படர்ந்திருந்தாலும்
நிசப்தங்களை
நீட்டிக்கொண்டேயிருக்கும்
நிசி மவுனம் !
இதெல்லாம்
இயங்கக் காரணமாயிருக்கிற.
இரவின் குரலை
எப்போதாவது
கேட்டேவிடுவதென்று முயட்சித்த
அத்தனை நாட்களிலும்
முதலில்த் தூக்கம்
அப்புறம் தான் மற்றதெல்லாமென்று
சொல்லாமலே
விடிந்துவிடுகிறது !


...............................................................................................

முன்னெப்போதுமில்லாதவாறு 
உனக்கேயான 
ஒவ்வொரு நொடிகளையும் 
நினைவாக்கிவிடு !
வயதான தம்பதிகள் 
மர வாங்கில் நெருக்கமாகி
கைகளைப் பிடித்துக்கொள்கிறார்கள் !
வாழ்ந்துகொண்டிருப்பதே
ஒருவிதமான
ஆதிக்கும் அந்தத்துக்குமிடையிலான
அட்புதமான குறுக்கீடு !
பள்ளிக்குழந்தைகள்
ஓவென்று கத்திச் சிரித்தபடி
பாதையைக் கடக்கிறார்கள் !
என்னை
முடிவில் திட்டுவதை நிறுத்து
நான்
கருவில் உருவான
பிறப்பின் ஆரம்பத்திலிருந்தே
உன்னோடு பயணிக்கிறேன் !
ராத்திரியின்
அளவுக்கதிமான ஸம்போகத்தில்
மேலாடைகள் கலைந்த
நகர வீதிகளின் நிசப்தம் !
உன்
இறுதிக்கணப் பாடலை
இப்போதே எழுதி எடுத்துக்கொண்டு
வீரனைப்போலவே காத்திரு !
காற்றின் திசைகளை
தேர்ந்தெடுத்துக்கொண்டு
தேவாலய மணிகள்
விட்டு விட்டு அடித்துக்கொள்கிறது !
என்
ஆத்மாவின் தேடலைப் புரிந்துகொண்ட
ஆழ்மனதின் கெஞ்சலுக்கு
இப்படித்தான்
கடைநிலை விளக்கம் தருகிறது
மரணம் !


..............................................................................

மனமகங்காரம் 
அவ்வளவு இலகுவாக 
சமயங்களில் விட்டுக்கொடுக்குதில்லை, 
மோனத்தை ஆனந்தமாக்கும் 
செப்படி வித்தைகளும் 
பிடிபடுகுதில்லை,
அப்பட்டமாகச் சொல்வதென்றால்
விழிப்புணர்வின்றி
நாளைகளை களவெடுத்து
இன்றோடு பொருத்திக்கொண்டு
அத்தமில்லாக்
காலத்தில் வாழ்ந்து போவது குறித்து
வருத்தப்படமுடியவில்லை !
மேன்மையானவொன்றை இழக்கிற
கவலை
உதறி எழ முடியாதவாறு
ஆக்கிரமிக்கிறது !
இன்னும் இன்னும் வேண்டுமென்ற
மனப்பான்மை
ஆழ்ந்த விவாதத்திறகுரிய
எளிதில் மறுக்கவியலாத
நோக்கங்கள் நோக்கி
வழி நடத்தும் பொறுப்பிருப்பதாகவும்
நம்பமுடியவில்லை !
புரிகிறதோ
இல்லையோ
ஆழ்மனக் கொந்தளிப்புக்களை
முடிந்தவரையில் அடக்கிக்கொண்டு
நேர்மையான
சிருஷ்டிகர்த்தாக்களுக்கு
உண்மையானதை விட்டுக்கொடுத்து
ஒதுங்க வேண்டியதுதான்.!


.....................................................................................

முதல்முதலா 
உங்கள் வெளிறிய முகத்தைக் 
கதவை திறக்கச்சொல்லும் வெளியில்
காற்றோடு அறிமுகமாகித்தான் 
பார்த்தேன் !
என்
உறவுமுறை தேடிவந்த
உங்களுக்கு எதுக்கு
முகம் சட்டேன்று வெள்ளையானது ?
அது எனக்கும் புரியவில்லை !
தலைமுறைப் பிறழ்வுகள்
நீண்ட தூரங்களை அனுமதிக்கும்
பார்வைப்பரிமாற்றத்தில்
அளவில்லா அதிர்ச்சிகளை
நீங்கள்
எதிர்பார்த்திருக்க நியாயமில்லை !
ஒருவேளை
அந்த இடத்தில என்னை
பலவருடம் முன்னைய
பால்ய நாட்களில்
அடையாளம் கண்டிருக்கலாம் !
அதில் தான்
என்
வயதை நேரடியாகச் சந்திக்கிறீர்கள்,!
இரண்டாம் முறையாக
கதவைத்திறந்து நீக்கலாக விட்டு
காலத்தைக் கொஞ்சநேரம்
கசியவிட்டேன் !
நீங்கள்
மேம்படுத்தல்களில்லா
எனக்குரிய வாசனையை
அடையாளம் கண்டதுபோல
தலையைக் குனிந்துகொள்கிறீர்கள்,
தயைகூர்ந்து
அம்மாவின் சாயலோடிருக்கும்
என்னை
நானே
எனக்குள்ளே
பத்திரமாக வைத்திருப்பது பற்றி
யாருக்கும் சொல்லிவிடாதீர்கள் !


..........................................................................

சாதாரணமான பார்வையில்
எளிதாகவே
கவனிக்கப்படாமல் தப்பிவிடும்
சின்ன விபரங்கள்,
பிரத்தியேகமாக அனுபவங்கள் 
எதிர்கொள்ள விரும்பாத
நேரடியான யதார்த்தம்,
நீண்ட கதைகளாகவேண்டியதை
வரிகளுக்கிடையில் சுருக்கிவிடும்
நரித் தந்திரங்கள்,
நல்ல சந்தர்பங்களைத்
தள்ளிப் போட்டுவிடும்
அசந்த மன அழுத்தம்,
இன்னார் என்று பெயர்சொல்லி
இந்த இடத்திலென்று குறிப்பிடமுடியாத
இணைக்கப்பாடுகளற்ற
கணநேர சம்பவங்கள்,
எந்தச் சந்தேகங்களையும்
சிக்கலாகிவிடும்
போதையேற்றும் கற்பனை ,
நிறைவேற்றமுடியாத
மவுன வெளிகளில்
தனித்து நின்று கேலிசெய்யும்
மொழிப்பிரயோகம்.
சில உண்மைகளையும்
பல பொய்களையும்
நம்பும்படியாகவே
உருவாக்கிய விதம் ,
இவற்றோடு போராடித்தான்
ஆச்சரியங்கள் தருகின்ற
ஒரு கவிதையை
எழுதிமுடிக்கவேண்டியிருக்கு !


.......................................................

கறுப்பு நிறத்தை 
நேருக்குநேர் சந்திக்க 
வெறிச்சோடிக்கொண்டிருக்கும் 
இரவுநேரத்தெருக்கள்,
கரண்ட் வயரின் 
மீதமர்ந்து பாடிக்கொண்டிருக்கும்
மோர்கோப் பறவைகள்,
சின்ன வெளிச்சக்கீற்று
வசீகரமான கட்பனையாக
அடிவைக்கத்தவறிய வேகத்தில்
முன்னோக்கி விழுந்தேன் !
விவரிக்கமுடியாத
பயங்கரவலி முள்ளந்தண்டில் !
மொத்த உலகமும்
என்
தோல்வியால் போர்த்தப்பட்டு
மென்மஞ்சளாக மங்கியது,!
மனதின்
கபடமான பகுதி
திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்கிறது,
தடுமாறும் மற்றையபகுதி
பைத்தியக்க்காரத்தனமாக
முடித்து வைக்கப்போகிறதென்கிறது !
வயதாகும் வயது
மறைமுகமாகக் கிண்டல்செய்கிறது
என்பதே என்னோட சமாதானம் !
முற்றிலும் மாறுபட்ட
தொனியில்
முனகிக்கொண்டு எழுந்துவிட்டேன்!
விழுகிறதே
எழுவத்துக்குத்தானே
என்றுசொல்லி முடிப்பதுக்குள்
ரெண்டாவது முறையும் சறுக்கிவிட்டது!


.....................................................................................

என்னை
வேகமாக உந்திச் செலுத்தி
நான்
அறிந்திருந்கும்
முன்னரங்க எல்லைகளை 
உடைத்துக்கொண்டே தகர்த்து
வலிகளையே
வார்தைகளாக்கும்
மிக முக்கியமானவொரு
சம்பவத்தில் முழுமையடையாமல்
தொக்கி நிக்கிறேன் !
உள்வாங்கி உச்சக்கடத்தில்ப்
பாவிக்க வேண்டியிருந்த
கவிதைமொழி
கடைசி நேரத்தில்
புத்தியையைக் கபடமாகக்காட்டிப்
பின்வாங்கிவிட்டது !
ஒரு
குறிப்பிட்ட
பின்விளைவுச் செயல்பாட்டில்
கைகளை பிசைந்தவாறு
ஏதுமில்லாமல்
திரும்பிப் பார்க்கையில்
இழந்தவை அத்தனையும்
சமாதானம் சொல்லி ஈடாகுமாவெனும்
சின்னக் கேள்வியை
பெரிய வரலாற்றிடம் கேட்கிறேன் !
விட்டுக்கொடுப்புகளற்ற
கபடத்தனமான வரலாறு
அந்தக்
கனதியான கேள்விக்கு
சீரழித்துக் கொண்ட
மிருகத்தின் மூர்க்கத்துடன்
இப்போதும்
ஆம் என்றே பதிலுரைக்கிறது. !


.................................................................................

முடிந்தவரையில் 
உன் 
சின்னச் சிரிப்புக்குள் 
ஓராயிரம்
உணர்ச்சிகளை மறைத்துவிடு !
பார்வைக்கு எட்டியவரையில்
வசந்தகால மரங்கள்
பூக்கத்தொடங்குகின்றன !
அதிகமதிமாய்த்
துயரங்களோடு
அங்கலாய்த்துக்கொண்டே
அலைக்கழியாதே
நன்றாகவே நடந்தால்
கொண்டாடிவிடு !
முன்கோடைப் பறவைகள்
கீழ் வானத்தை
சின்னச் சிறகில் மிதந்து
இன்னுமின்னும் விரித்துக்கொண்டிருக்கின்றன !
தோல்விகளைத்
தூசிதட்டிக்கொண்டிருக்காதே
நாளைக்கான
அனுபவமாக்கிவிடு !
பார்வையற்றவொருவன்
மிகத் தெளிவாக
வழி தேடியெடுத்துக்கொள்கிறான் !
முன்னிருக்கும்
சவால்கள் எல்லாவற்றையும்
சந்தோசமாய் எதிர்க்கொள்ளு !
சின்னவனுக்கு
சைக்கிள் பழக்கும் அப்பா
முதன் முதலாகக்
கைகளை விடுவித்துக்கொள்கிறார் !
என்
அர்த்தத்தேடல்களைப் புரிந்துகொண்டு
ஆழ்மனதின் குரலுக்கு
இப்படித்தான்
உரைநடை விளக்கம் தருகிறது
வாழ்க்கை !