Wednesday 28 September 2016

பார்வையற்ற உலகம் !!!

கதைகள்  உண்மையாக  இருக்கவேண்டிய அவசியமில்லை. எல்லா  உண்மைகளும் கதைகளாக வரவேண்டிய அவசியமும் இல்லை. தன்னிலையை முன்னிறுத்தி நான், என் அனுபவம், என் வாழ்வினைப் பாதைப் பயணம் என்று எழுதும்  எல்லாவற்றிலும் இருக்கும்  நான் வேறு ,புனைவுகளின் அபரிமிதமான சுதந்திரத்தை எடுத்து நான்  என்று  எழுதும்  நான் வேற . அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது இதுதான் ஒரு கதைசொல்லியின் உண்மையான ஆத்மாவின் குரல் .

                                                அகத்தின்  அழகு  முகத்தில் தெரியும்  இது எவளவு பெரிய உண்மை என்பது சின்னவயசில் அந்த சொல்லாடலைப் படித்த போது பெரிதாக ஒன்றும் அர்த்தம் கொடுத்ததில்லை . வாழ்க்கைப் பாதையில் பலவிதமான அனுபவங்கள் சேர்ந்துகொள்ளும் போது அதன் பரிமாணம் இன்னொரு படிமுறையில் பல்வேறு காரணகாரியங்களுடன் நம்மை அறியாமல்த் தொடுத்துவிடுகிறது. அந்தத் தொடர்சிகள் சுவாரசியமானவையாகவும் இருக்கலாம் .  

                                                    ரயில்ப் பயணங்களும், ரயில்ப் பயணிகளும் எப்போதுமே சுவாரசியமான பல வாழ்க்கை அனுபவதைத் கொடுபார்கள்   என்பது தெரியும். ஆனால்  மேலை நாடுகளில் ரெயில் பயணங்கள் எப்போதுமே திட்டமிட்ட நேர அவதிக்குள் அல்லாடுவதால் பல விசியன்களைப் போகிறபோக்கில் கவனிக்க முடிவதில்லை. பலவருடமாக  காலையும்  மாலையும்  ஒரு ரெயில் பயணியாக நகரத்தை ஊடறுத்துப் பிரயானிப்பதால்  அதை  உணரமுடிகிறது. 

                                               எவளவுதான் இயல்பாக ஒரு பயணத்தில் நமக்கு  அறிமுகமில்லாத  பல  மனிதர்களின் பல சம்பாஷனை உரையாடல்கள் தண்டவாள சத்தங்களுகுச்   சமாந்தரமாய்க்  காதுகளைக் கடந்தாலும் ,ஏறுவதில்   அவசரமும்  ஏறி  இறங்குவதில் இடங்களைத் தவறவிட்டு விடுவோமோ என்ற  எச்சரிக்கையிலும்  சில நல்ல தருணங்கள் தரும் பல படிப்பினைகளையும்  கடன் வாங்கியும் பட்டினி கல்யாணம் பண்ணியும் சந்நியாசி போன்ற ஒரு நிலமையையை உண்டாக்கி விடும். 

                                                          லிண்டருத்  மெட்ரோ  ஸ்டேசனில் நான்  ட்ரைன்  ஏற  நின்றபோது  அவளும் நின்றாள் . வெள்ளைப் பிரம்பைத் தட்டித் தட்டிப் கைப்பிடிக்கும் சட்டங்களைப் பிடித்துப்  பிடித்து  ஒவ்வொரு அடியையும் மேல்நோக்கி கவனமாக வைத்து  படியேறி வரும்போதே அவளைக் கவனித்துவிட்டேன் . பார்வையர்வர்களின் உலகம் எப்படி இருக்குமென்று அறியும் ஆவலில்  அவள் இருக்கைக்கு  முன்னே போய் இருந்து  ,அல்லது அருகில் கவனிப்புக்கள் இடஞ்சலில்லாத ஒரு அருகிலிருந்து  கவனிப்பதுதான் என்னோட பிளான் ஆக அப்போது இருந்தது.

                                                       முக்கியமாகப்  பார்வையற்றவளின் உலகம்  என்று  ஒரு  கவிதை எழுதும் அற்ப  ஐடியாதான்  முதலில் வந்தது. கவிதைமொழியும் நேரடி விவரணை வார்க்கும்  வர்ணனைகளும் கைகோர்க்கும் போது கவிதை  அடுத்த தளத்துக்குப் போகுமென்று புகழ்பெற்ற  கவிஞ்சர்கள்  சொல்கிறார்கள்.   ஏனென்றால் கவிதை  எழுதுவதுக்கு  இந்த  நேர்வே நாட்டில்  சம்பவங்களோ, காட்சிகளோ அதிகம் இல்லை. கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது மாதிரி தோண்டித் துருவி  எடுத்து  ஏற்கனவே  நிறைய எழுதி எழுதி எனக்கே அலுத்துப் போய்விட்டது. 

                               ஆனால் இதில  நிட்சயம்  ஒரு  கவிதைக்குக்  கரு கிடைக்குமென்றுதான்  என்னோட  மனது சொன்னது. பார்வையற்ற ஒரு பெண்ணின் புலன் இழப்பைச் சாதகமாகப் பயன்படுத்துவது மனிதாபிமான  இடறலாக இருந்தாலும்  முக்கியமாக  மனசாட்சிக்கு  விரோதமிலாமல் பார்க்க நினைத்தேன் .  அதனால்  அவள்  ஏறிய  பெட்டியில் அவளுக்குப்  பின்னால் ஏறினேன். ஆனால் அதன் பின் நடந்த சம்பவங்கள் அந்த உரையாடல் எதிர்பார்க்காத திசைகளில் ஒரு கதையாக  நகர்த்தும்படி  நிகழ்ந்தேவிட்டது .

                                         ஜன்னலுக்கு சற்று விலகி இருந்த தனி இருக்கையில் தடவித்தடவி இருந்தாள். வெள்ளைப் பிரம்பை ரெண்டாக மடித்துப் பின் நாலாக மடித்துப் பின் எட்டாக மடித்தபோது அது கையடக்கமான ஒரு குச்சி போல வந்துவிட்டது. அதை அருகில் கால்களில் உரசும்படி வைத்தாள் . தோளில் கொழுவி இருந்த பையைப் கழட்டவில்லை. முக்கியமாக அவள் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கண்களை மறைக்கவில்லை . உடம்பை இயல்பாக்கி அதைவிட இயல்பாக இருக்கையில் சாய்ந்துகொண்டாள் 

                                            நான் அவளுக்கு  முன்னுக்கு இருந்த வெற்று இருக்கையைத்  தேர்வு செய்து  மிக மிக அமைதியாகப் போய் இருந்தேன். அவள் தலையைக் குனிந்து ரெண்டு கண்களின் இமைகளையும் வேகமாக அடித்து அடித்து என்னவோ மனதுக்குள் தேடுவது போல இருந்த நேரம் தான் அவள் கண்களைப் பார்த்தேன். மஞ்சள் பழுப்புக் கலரில் ரத்தநாளங்கள் கோடுகீறி  விழித்திரையில் பாசிபிடித்து வெளிக் கருவளையங்களில்  இருண்டு  இருந்தது 

                                                   அந்த ரெயில் பெட்டியில் அதிகம் பயணிகள் இருக்கவில்லை.  இருந்த சில இளைவர்கள் கையடக்கித் தொலைபேசியில் முகத்தை வலைபோட்டு  ஓடவிட்டுக் கொண்டிருந்தார்கள் . ஒரு வயதான கிழவி பத்திரிகையில் அதிஸ்டலாபச் சீட்டு வெற்றி விபரத்தை வாசித்கொண்டிருந்தா, நடுத்தர வயதான ஒரு நேரமில்லா  வெறிக்குட்டி தொலைபேசியில் அவனோட காதலியோடு  உரத்துக் கத்திச்   சண்டை பிடித்துக்கொண்டிருந்தான். இரண்டு நடுத்தரப் பெண்மணிகள் விண்டர் குளிரில் இருந்து தப்ப இந்தமுறை   சூடேற்ற  எங்கே போகலாம்  என்று விடுமுறை சந்தோசங்களில் கதைத்துக்கொண்டிருந்தார்கள்

                                            இப்போது நான்  அவளை  கொஞ்சம்  பார்த்துவிட்டேன் .அந்த நேரம்   என் நோக்கம்  அவளின்  புற அழகைப் பார்ப்பது அல்ல. கனவில வந்த பணம் செலவுக்கு  உதவாது என்றது போல அழகான பெண்கள் எப்பவுமே என் வாழ்கையில் எம்பிக் குதிச்சு வந்து வீழ்ந்ததேயில்லை .அது   எனக்கு நல்லாவே தெரியும் .  ஆனால்  நான்  நினைத்ததுக்கு மாறாக அவளிடம் ஒரு  நளினம் அவள் தோற்றத்தில் இருந்தது.   அதனால்  அவளைப்பற்றி சொல்கிறேன்.  ஏனென்றால் அந்த நளினம்தான் உரையாடலின் முடிவில் இன்னொரு திசைக்கு  இருவரையும் விரும்பியே தள்ளி இருக்கலாம் என்று நினைக்கிறேன் . 

                                          நேரமொதுக்கி முகத்துக்கு  பவுண்டேசன்  மேக்கப் போட்ட  எந்த அடையாளமும் இருக்கவில்லை. மிக இயல்பான முகம் ,அது அகல் வட்டத்தில்  பெய்த பகல் மழை போல இன்னும் இயல்பாக அக்கம் பக்கம் பார்த்துப்பார்த்துப் பேசக்  கண்களைத்திறந்து மூட ஒருவிதமான சங்கடத்தில் இருப்பது போல இருந்த இமை மயிர்களுக்குத்  தென்னம் ஓலைபோல    கொஞ்சம் மஸ்கார தடவி இருந்தது  ஓரளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது .

                                                        மெல்லிய உடட்பயிட்சி  செய்யும் உ ருவம், என்னைவிடக்   குறைந்தது  நாலு  செண்டிமீட்டர்  உயரம், ஒடுங்கிய அவரைக்காய்  முகம், ஸ்கண்டிநேவியப்   பொன்னிற முடிகள். நடு வகிடு பிரிச்சு பிரில் ஸ்டைலில்  பறக்க விட்டிருந்தாள். கண்களைத் திண்டுவிடும் பூசணிக் கன்னம் , நீண்ட கல்லாடம் போன்ற கழுத்து. அளவான மாதுளை மார்பு, நீண்ட ஹென்னேஷ் அண்ட் மாரிஸ்  ஓட்டுமன் கலக்சன் வூல்  கவுன் போட்டிருந்தாள் , அதே கலரில் முழங்க கால்களைப்  பாதம்வரை மறைக்கும் ச்டோக்கிங்க்ஸ்  போட்டிருந்தாள் .நல்லகுருநாதன்  நாக்கில் வந்து  உக்காருவதால்   உள்ளதை உள்ளபடி சொல்லுறேன் அவள்மிக அழகாக இருந்தாள். 

                                                  எனக்கு  இருந்த மிக முக்கிய பிரசினை அவளோடு எப்படிக் கதையைத் தொடக்குவது. ஏனென்றால் என்னால் இலகுவாக வெட்கமின்றி யாரோடும் கதைக்க  முடியாது. அப்பிடி இல்லை  என்று வில்லங்கமாகத் தொடக்கினால்  கல்லடிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடுபொடி போல  அது  வேற வேற எங்கேயோ எல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல்  இழுத்துக்கொண்டு போய், முடிவில் நடுமண்டையில் நாரத்தங்காய் தேச்சுப் பித்தம் இறக்கவேண்டிய ஒரு நிலைமைக்குள் கொண்டுவந்து விடும் . அதால சத்தமில்லாமல் இருந்தேன் .

                                            அவள் கைப்பையில் இருந்து ஒரு கட்டு பேப்பர்கள் எடுத்தாள், மடியில் வைத்தாள்  கட கட என்று பத்து விரல்களையும் அதன் பேப்பரில் தடவித் தடவி வாசித்துக்கொண்டு போனாள். அந்தப் பேப்பர்கள் மொத்தமாக இருந்தது. அதில் புள்ளிகள் ஆழமாகக் குத்திய அடையாளங்களை இங்கிருந்தே என்னால் பார்க்க முடிந்தது . ஒவ்வொரு வசனம் முடியும் போதும் ஒவ்வொரு உணர்ச்சி முகத்தில் காட்டினாள். பிரகாசமான  அவள்  வயது சுமாராக  இருவத்தி இரண்டு போல இருக்கலாம் போலிருந்தது. பெண்கள் உணர்ச்சி காட்டும்போது அவர்கள்  வயதை ஓரளவு யூகிக்கலாம் என்று எனக்குத் தெரியும் .

                                       சில நேரம் தலையைச்  சரித்து ஜோசிதாள். சுண்டுவிரலைத் பேப்பர் நுனியில்   தட்டினாள். வாய்க்கும் தெரியாதபடி மெல்லெனச் சிரித்தாள். பக்கங்களைப்  பெருவிரலால் ஒற்றி எடுக்கும் லாவகத்தில் அவள் ஒரு தேர்ந்த படிப்பாளி என்பது நிறுவப்பட்டுக் கொண்டிந்தது. ஒரு பக்கம் முடிந்து அடுத்த பக்கம் புரட்டும்  இடைவெளியில் முகத்தை இறுக்கி வைத்தாள். மற்றப் பக்கம் புரட்டிய முதல்  வசனத்தோடு  அவள் மூக்கு ராகம ஜம்புக்காய் போல சிவத்து விட்டது . ஒரு இடத்தில பத்து விரல்களையும் ஓய்வாக்கி அண்ணாந்து மேலே பார்த்தாள். அவள் கழுத்து வியர்த்திருந்தது.

                                          அவள்  என்ன  கதை படிக்கிறாள் என்று சத்தியமாய்  எனக்கு  விளங்கவில்லை.   ஒருவேளை அவள் மேற்படிப்பு யூனிவெர்சிட்டியில்  படித்துக்கொண்டு இருந்தால்  அவள்  படிப்பது அவள்  ஆராச்சி சார்ந்த பட்டப்படிப்பு  புத்தகமாக இருக்கலாம். அல்லது அவள் வேற என்னவாகவாவது இருந்தால் அதுவும் வேற   என்னவாகவும் இருக்கலாம். ஆனால் எழுத்தும்   வாசிப்பு உணர்வும் சேர்ந்து அவளுக்கென்று ஒரு பிரத்தியேகமான உலகத்தை அந்தக் கணங்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தது  மட்டும்  என்னவோ உண்மைதான். 

                                         படக்குப் படக்கு என்று பதின்மூன்று  பக்கங்களை வாசிதுப்போட்டு அமைதியாக இருந்தாள். அது எப்படி சரியாகப்  பதின்மூன்று பக்கங்கள் என்று சொல்லுறேனா,,ஹ்ம்ம்,,நான்தான் எண்ணிக்கொண்டு இருந்தேனே. இந்த அமைதியில் கதையைத் தொடக்க நினைத்தேன். முதல் பிரசினை அவள் என்ன மொழி கதைப்பாள் என்று தெரியவில்லை. பார்க்க நோர்வேக்காரி போல இருந்தாள். ஆனால் இந்த ரெயிலில் அதிகமாக ஒஸ்லோ  பிளிண்டரன் யூனிவெர்சிட்டி  வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக பயணம் செய்வார்கள். 

                             ஏனென்றால் நான் இறங்கவேண்டிய ஸ்ட்சனுக்கு மற்றப் பக்கம் தான் யூனிவெர்சிட்டி ஸ்டுடண்ட்ஸ் தங்கிப்படிக்கும்  பதினைந்து  வானுயர தொடர்மாடிகள் இருக்கு . அதனால் அவள் ஒரு வெளிநாட்டு மாணவியாக இருக்கலாம். அல்லது நோர்வேநாட்டுக்காரியாக இருக்கலாம் . அதனால் கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம் என்று  நினைச்சு நோர்ஸ்கில் ,நோர்வே மக்கள் முன்னம் பின்னம் தெரியாதவர்களுடன்  எப்பவும் உரையாடல் தொடக்கும் தந்திரமான காலநியையைக் கையில பிடிச்சு 

                   " இன்றைக்கு வெயிலும் அதிகம் இல்லை   குளிர் நல்ல மிதமாக இருக்கு, நாளைக்கு  மழை  பெய்யுமாம்  என்று  சொல்கிறார்கள். உனக்கு  நோர்வேயின் இலையுதிர்காலம்  விருப்பமா  "

                                            என்று  நோர்ஸ்கில்  கேட்டேன் , அவள் சடார் என்று என்னை முகத்துக்கு முகம் பார்க்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பி வலது  காதை எனக்குக்  காட்டி,சக்கரைப்பொங்கலில்   வெல்லக்கட்டி கசிந்து பிசுபிசுத்த மாதிரி    அன்பாகச் சிரித்து ,

                                " யா,  அது  உண்மை,,உண்மையே  தான்,,எனக்கு  இந்த  இலையுதிர்காலக்  குளிர் கன்னத்தில் தடவுவது மிக மிக விருப்பம்,  அப்புறம் நீ வெய்யில்  என்று  சொன்னாய்,,,சொறி  என்னால்  அதைப்  பார்க்க முடியவில்லை..எப்படி  இருந்தது "

                                 " ஒ  சொறி.. நான்  என் பார்வையில் இருந்து  அப்படி  சொல்லிப்போட்டேன் "

                                    " அட,,சொறி  எதுக்கு, இதில  என்ன  இருக்கு ,,நீயும்  பிளிண்டரன் யூனிவெர்சிட்டி கிறிஸ்டானியா  அக்கடமியில்   படிக்கிறாயா , நீ  நல்லா  நோர்க்ஸ் கதைக்கிறாய் ,,நீ  நோர்க்ஸ்கா "

                                " நான்  படிக்கவில்லை,,வேலை  செய்கிறேன் "

                             "  அப்படியா,,,அது  மிகவும்  நல்லது , "

                             " எப்படியோ  உன்னைப் முதன்முதலில்  பார்த்த போது  நான்  நினைத்தது  சரியாகத்தான் இருக்கு, இல்லை  நான் நோர்க்ஸ் இல்லை,,வெளிநாட்டு வந்தேறுகுடி  "

                              "  அப்படியா  நீ  என்ன  நினைத்தாய் ,கனகாலம் நோர்வேயில் வசிக்கிறாய் போலிருக்கே "

                       " நீ ஒரு   யூனிவெர்சிட்டி மாணவியாக  இருக்காலம்  என்று  நினைத்தேன் , யா,,பல வருடம்  வாழ்கிறேன் "

                                 என்று சொன்னேன். அவள் அழகாக நோர்க்ஸ்கில் கதைத்தாள். நோர்வேக்காரிதான்  அந்த  சந்தேகம் அதோடு தெளிவாக 

                          "  என்னோட பெயர் ............."

                           என்று  சொல்லிக்  கையைக்  குலுக்குவதுக்காக  நீட்டினேன் ,அவளும்  கையை நீட்டினாள் 

                       " என்னோட  பெயர்  ஏஞ்சலினா ஹால்ஸ்றோம் ,ஹால்ஸ்றோம் அப்பா  பெயர் , அம்மா  எவான்யளிஸ்ட்  மரியா  ஹால்ஸ்றோம்,  ஆனால்  எனக்கு  உன் கை  எங்கே  இருக்கு  என்று  தெரியவில்லை  அதனால் நீயே  அதைப்  பிடித்துக் குலுக்கிவிடு" 

                              எதற்க்கு அளவுக்கு அதிகமான  குடும்ப விபரம் இருத்தி  வைச்சு  அடிச்சுப்பிடிச்சுச்   சொல்கிறாள் என்று எனக்கு ஆரம்பமே குழப்பமாக இருந்தது. தனிமையில் வாழும் கதைக்க அதிகம்பேர் இல்லாத, நிறையவே   சொல்லிவிட விரும்பும் நோர்வே நாட்டு   மனிதர்கள் இப்படித்தான் கதைப்பார்கள் என்பதை பலமுறை அவதானித்து இருக்கிறேன். இப்படி சம்பவங்கள்தான் ஏதுமில்லா வெற்றிடத்தை நிரப்பும் என்ற அற்ப ஆசை அவர்களிடம் இருக்கு   

                        "  ஓ  சொறி....பார்த்தியா ஏஞ்சலினா,, அதிலும்  நானே  பிழை விட்டுவிட்டேன் "

                        " என்ன  பிழை "

                        " இல்லை  நான்  வழமைபோல  உன்னையும்  எல்லார் போலவும்  நினைத்து  கையைக் குலுக்க நீட்டி விட்டேன்  பார்த்தியா "

                               "  அப்படி  அது  பழக்கம்...அதில  பிழை  இல்லை..மற்றது  ஒன்று சொல்கிறேன்  நானும்  எல்லார் போலவும்தான் "

                             "   அப்படியா,,எப்படி  இவளவு  துணிவா தெளிவா  உன்னால் சொல்லமுடிகிறது  ஏஞ்சலினா"

                       "  இதில  என்ன  கஷ்டம்..நான்  உணர்வதைச்  சொல்கிறேன் "

                           "  சரி,,,அதுவே  பெரிய விசியம்   " 

                            "  உன்  பெயர்  எனக்கு  விளங்கவில்லை..உன்  குரல் அதைத்தான் நான்  பதிவுசெய்து வைத்துள்ளேன்  " 

                        "   அட..அது  போதுமே  "

                           "  மிகவும்  நன்றி..எனக்கு  குரல்கள்தான்  மனிதர்களின்  அடையாளம் "

                            "   நீ போட்டு இருக்கும் இந்த ஹென்னஸ் அண்ட் மாரிஸ் கவுன்  உனக்கு  மிக  மிக  அழகா  இருக்கு "

                              " அட,,,அப்படியா..ஓ  நன்றி..நன்றி..ஆனால் எனக்குதான் நான் போடும்  உடைகளைக்  கண்ணாடியில்  பார்க்க முடியாதே  "

                                 "  அய்யோ..பேந்தும் பார்  சொறி ,,ஏஞ்சலினா "

                               " இல்லை  சொறி சொல்லாதே,  எனக்கு  எவளவு  ஆசையாக  இருக்கு தெரியுமா,,நீ  அழகா  இருக்கு என்று  சொல்லும்போது "

                               "  உண்மையில்  நீ  ஏஞ்சலினா,,ஏஞ்சல்  ,,தேவதை போலதான்  இருகிறாய் "

                            " இதுகொஞ்சம்  ஓவர்,,ஐஸ்  வைக்காதே,,சரி  இந்தக்  கவுன்  ஹென்னஸ் அண்ட் மாரிஸ்  என்று  எப்படி  தெரியும் ,,அதை  சொல்லு "

                             "  கழுத்துக்  கொலர் விழிம்புக்கு  உள்ள  சுவுடிஷ்  H M
 என்று  எழுதி அவர்களின் விற்பனை அடையாளமான உலகப்புகழ் பெற்ற H M  இருக்கே "

                           "  அய்யோ,  நீ  மைக்கிராஸ்கோப் லெவலில்  ஆராச்சி  செய்யுறாயே ,, இந்த  கவுன் என்  சுவுடிஷ் பிரென்ட்  பிறந்தநாள் பரிசாக  வேண்டித்தந்தது "

                        "  சரி,,நீ இப்போது  சில  பேப்பர்கள் வாசித்தாயே  அதில  என்ன  எழுதி இருந்தது "

                          "   உனக்கு  எப்படித்  தெரியும்  ,,நீ எனக்கு முன்னே நான் ஸ்ட்சனில்  ஏறி அமர்ந்த நேரத்தில் இருந்து எனக்கு முன்னுக்கு  இருக்கிறாயா "

                           " யா..அப்படிதான்,,நீ பதின்மூன்று பக்கங்கள் வாசித்தாய் "

                            "  அட அட  அவளவு விபரமாய்க் கவனிச்சியா "

                          "  யா,,நீ வாசித்து முடித்து மேலே அண்ணாந்து பார்த்தாய் ,,அப்போது உன் கழுத்து வியர்த்து இருந்தது "

                             "  அடப்பாவி,,அதையும்  பார்த்தியா "

                           "   யா..எல்லாம்  பார்த்தேன் ஏஞ்சலினா"

                        "எதுக்கு  இவளவு  விபரமாய் நோண்டிப்  பார்க்கிறாய் "

                      "  உன்னை  லின்டரூட் ஸ்ட்சனில்  கண்டபோது  உன்னைக்  கவனித்து  ஒரு  கவிதை  எழுத  நினைச்சேன் "

                    "  அட,,உண்மையாவா,,எவளவு  சந்தோஷமாய்  இருக்கு "

                           "  இப்ப  கதை  மாறிட்டுது "

                      "  என்ன  கதை..எது  மாறியது,ஒன்றும் புரியவில்லை எனக்கு "

                 " ஆரம்பத்தில் உன்னை வைச்சுக்  கவிதை  எழுதநினைத்தேன் " 

                     " அப்படியா  ,,நீ  பெரிய  கவிஞ்சனா,,நீ  வேலை  செய்வதா  சொன்னாய்  முழுநேர எழுத்தாளனா  நீ..அதுவா  உன்  வேலை "

                          "    ஹஹஹஹா ..இல்லை  ஏஞ்சலினா,,நான்  சமையல்காரனாக  வேலை  செய்கிறேன் "

                        "   அப்படியா,,நான்   சைகோலோயியில் கவுன்சிலிங்  திரபி ஸ்பெசலிஸ்ட் ஆக  வருவதுக்குப்  படித்துக்கொண்டு இருக்கிறேன் "

                           "  வாவ்,,,அது  நல்ல படிப்பு  என்று  கேள்விப்பட்டு இருக்கிறேன் ஏஞ்சலினா"

                           "  சரி,,விசியத்துக்கு  வா ,,என்ன  கவிதை  என்றாய்,,என்ன  கவிதை  எழுதுவாய்,,சொல்லு ,,முதல்  என்னை  வைச்சு  என்ன  எழுத  நினைத்தாய் ,,சொல்லுப்பா "

                            "   ஹஹஹா,,அய்யோ,,அந்தக்  கேவலத்தை  ஏன் கேட்கிறாய், கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரியாகி  பிறகு  கப்பல் உடைந்ததால்  பிச்சைக்காரியாகி பிறகு   கழனி பானையில் கைவிட்டமாதிரி கவிதை  எழுதுவேன் "

                         "  என்னப்பா  சொல்லுறாய்,,ஒன்றுமே  புரியவில்லை "

                          " சரி  என் அலங்கோலத்தை விடு ஏஞ்சலினா,நீ  கவிதை  வாசித்து  இருக்கிறாயா "

                        "     யா,,என்னிடம்  ஒரு  குற்றெழுத்து கைப்பிரதியே  சொந்தமாக்  இருக்கு,,அது  ஒன்றுதான்  விரும்பி விரும்பிப்  படிப்பேன்,,அடிக்கடி "

                                   "    அப்படியா  அது  யார்  எழுதியது  ஏஞ்சலினா"

                           "  லேர்ன் போல்தர்,  தெரியுமா,,பிரெஞ்சில்  எழுதியது,,,அவரோட  கவிதைத்தொகுப்புத் தான்  அது, அவரை  நீயும்  படித்து  இருக்கிறாயா "

                                 "  யா,,அவரோட  ஒரு  கவிதைத்தொகுப்பு தமிழ் மொழியில் மொழிபெயர்த்தது  படித்து இருக்கிறேன் ஏஞ்சலினா, அதுவும்  என்  டீன்ஏஜ்  வயசில் "

                              "  அதென்ன  தமிழ்மொழி,  சொல்லு,,டீன்ஏஜ்  வயசில்  வாசிக்கப்படத்தான்  கவிதைகளே  எழுதப்படுகின்றன,,அது  தெரியாதா  உனக்கு "

                             "   தமிழ்மொழி  என்  தாய்மொழி  ஏஞ்சலினா, வயதான  காலத்தில்  கவிதை  வாசிக்கக்கூடாதா "

                          "  வாசிக்கலாம்  அப்போது  அது  இன்னொரு  பரிமாணத்தில்  எல்லைகளை  நீட்டிவைத்து  வரைவிலக்கணம்  இல்லாத  வெறுமையில்  இன்னொரு  அர்த்தம் கொடுக்கும் "

                            "    யப்பா  சாமியோ..இதெல்லாம்  உனக்கு  எப்படித்  தெரியும் ,,போட்டுக்  கொல்லுறியே  தாயி "

                             "  ஹ்ம்ம்,,சைகோலோயி படிப்பதாலும்  ,,லேர்ன் போல்தர் படிப்பதாலும்  ,,ரெண்டையும்  இணைச்சுப் பார்ப்பேன்,,சிம்பிள்,,அவளவுந்தான்  I love sublime poems..."

                             "  ஹ்ம்ம்,,,,ஆனால்  உன்னால்  பார்க்க முடியாத  ஒரு உலக நடப்பை விவரிக்கும்  கவிதையை  எப்படி  உனக்குப்  பார்வையற்ற  அனுபவதில் இருந்து  முழுமையாக  உணரமுடியும்,,சொறி  இப்படிக்  கேட்பதுக்கு "

                        " முதலில்  சொறி..சொறி  என்று  பினாத்தாதே , ஒரு  நல்ல  கவிதை  உன் ஆழ்மனதோடு  உரசி உறவாடும்  அதுக்கு  விசுவல் பிக்ஸர்ரைசேசன் அவசியமில்லை "

                               " அட,,எனக்கு  உன் மீது  நிறைய  மதிப்பு  வருகுது   ஏஞ்சலினா,,நீ  எவளவு  படித்து  இருகிறாய் ,,நான்  எல்லாம் ஒரு வீணாப்போன உதவாக்கரை "

                         "  அப்படிச் சொல்லாதே,  I love sublime poems  ,லேர்ன் போல்தர்  அவரோட   சப்லைம் பொயடிக் ஸ்டைல் பற்றி அருமையாக  சொல்லி  இருக்கிறார்,,அதுவும்  ஆங்கிலத்தில்  தான்  இப்ப நினைவு  இருக்கு "

                                "  என்ன  சொல்லி  இருக்கிறார்  ஏஞ்சலினா,,சொல்லுப்பா,,உன்னை  வைச்சு  நாலு வரி சலாப்பி  கவிதை  எழுதி  உடான்ஸ் விட நெனச்சேன்,,,இப்ப  உன்னிடமே  வந்து  வசமா  மாட்டிக்கொண்டு  நிக்குறேன் "

                          " ஹஹஹஹா,,அப்பிடி  எல்லாம்,,இல்லை,,முதலில்  உன் தன்னம்பிக்கையை  நம்பு "

                                     "  சரி ,,லேர்ன் போல்தர்  அவரோட   சப்லைம் பொயடிக் ஸ்டைல் பற்றி என்ன  சொன்னார் ஏஞ்சலினா "

                             "  அவர்  சொன்னார்  whether you believe in absolutely anything I think it's a great quality to find something beyond self to keep that going, whatever you need , you find it & you do it for that reason. you never quit, you push yourself , fuss & cry , but you pull through . Because you believe in life , a purpose & a reason for your being. "

" அட,,எண்ட வீராளி அம்மாளாச்சி என்னை சிங்க வாகனத்தில வந்து இந்த காப்பியநாயகியிடம் இருந்து காப்பாற்றுமா "

" என்ன சொல்லி பிசதுறாய் You become a poet for the vary fact that you must know the full spectrum of possible problems that a poem can face. Not using the knowledge is not an accurate description of why you would learn that knowledge. "

" அட,, வீராளி அம்மாளாச்சி உன் பக்தன் மிகப்பெரிய சிக்கலில் வாயக்கொடுத்து மாட்டி நிக்கிறான் ஓடி வந்து காப்பாற்று அம்மா தாயே "

" இதையும் அவர் சொல்லி இருக்கிறார்,,கேள் , You DO use it in the sense that you must determine that this piece of knowledge is not a contributing factor to a problem இந்த அவரோட வரிகளில் நானும் எங்கேயோ அழுத்தமாக இருக்கிறேன் ,,நிட்சயமாக இருக்கிறேன் "

" பிறகு என்ன ஆச்சு ,,கவிதைக்கு மொழி முக்கியமா ஏஞ்சலினா "


" அதுக்கும் லேர்ன் போலதர் If languaqge were only taught the 10-20% of knowledge that they use think of the numerous situations that poem would not be treated for. It is kind of too bad that they have to learn the extra knowledge, because more words would have an easier time becoming poems ."

" அய்யோ சாமி நான் இனிக் கவிதையே எழுதமாட்டேன் ,,ஏஞ்சலினா "

" ஏன் அப்படி சொல்லுறாய்..நீ இன்னொருவர் போல இல்லை,,,இன்னொருவர் உன்னைப்போல இல்லை "

" அதெண்டா உண்மைதான்,,நான் உன்னைப்போல உன் அறிவு வீச்சுப் போல இல்லவே இல்லை "

" சும்மா பதறாதே,, லேர்ன் போல்தர் உன்னைப்போல பிரகிரதிகளுக்கும் ஒரு உண்மையை சொல்லி இருக்கிறார் "

" என்ன சொல்லி இருக்கிறார், ஏஞ்சலினா,,அதை சொல்லு தாயி ,,நான் ஏற்கனவே அம்மாவசை இரவில இருட்டு அடி வேண்டினவன் மாதிரி நிக்குறேன் "

" அவர் சொன்னார் , you are supposed to tell the entire world the plan of action for a moments . That's why poets go through all the trouble.!!!. இப்படி சொல்லி இருக்கிறார் பா "

" ஹ்ம்ம் "

" இப்ப நான் சொறி சொல்லுறேன்,,ஏன் மவுனமாக இருகிறாய் "

" ஒன்றுமில்லை,,எனக்கு மூச்சு முட்டுது,,இந்த வரிகளை எப்படி நீ இவளவு கிளியர் ஆக நினைவு வைச்சு இருகிறாய் "

" ஹஹஹா என்னோட மூளையில் நிறைய இடம் இன்னும் கிளியராதான் இருக்கு,,உன்னைப்போல அநாவசியமான பிம்பங்கள் இல்லை I love that."

" அப்படியா, "

" யா,,அப்படிதான் ,,அதனால் எனக்கு இலகுவாக இருக்கு,,கவனக்குறைவாகவும் என்னிடம் கவனச்சிதறடிப்புக்கள் இல்லவே இல்லை,, Sometimes I think mentally ill break , but if I look for something beyond myself it just calms me or something "

" சொறி ஏஞ்சலினா "

" ஏனென்றால் எனக்கு அந்த வழிகள் திறக்கப்படப் போவதில்லை "

" ஹ்ம்ம்..சொறி .சொறி, "

" உனக்கு இரவு இருட்டு,,பகல் வெளிச்சம்,,எனக்கு எல்லாமே இருட்டுதான்,,ஆனால் ஒருநாளின் ஒவ்வொரு நிமிடமும் எனக்குச் சத்தம் .But I love that."

" வாவ்,,,, என்ன ஒரு விளக்கம் "

" யா,,இந்த உலகமே எனக்குச் சத்தங்களும் வாசனைகளும் மட்டுமே,,சிலநேரம் தொடுகை உணர்ச்சி..மற்றப்படி ஒன்றுமில்லை,,ஆனால் நான் சந்தோசமாக இருக்கிறேன் I love that."

" நீ சந்தோசமாய் இருகிறாய் என்பது தெரிகிறது ஏஞ்சலினா, சரி நீ எங்கே வசிக்கிறாய் "

" நான் ...............இல வசிக்கிறேன்,,நீ எங்கே வசிக்கிறாய் "

" நானும்............. ...இலதான் வசிக்கிறேன்,, "

ட்ரைன் இப்போது அவளும் நானும் இறங்க வேண்டிய ஸ்டேஷனுக்கு முதல் ஸ்டேசனில் நின்றது ,அவள் சுதாகரித்து வெள்ளைப்பிரம்பை நீட்டினாள்.தொழில் கொழுவி இருந்த பையை அனைத்துக்கொண்டாள், ஏதாவது தவற விட்டாளா என்று இருக்கையை எச்சரிக்கையாகத் தடவிப்பார்த்து உறுதிப்படுத்தினாள். நான் உதவிசெய்ய நினைத்தேன். அவள் தானாகவே இறங்கினாள்

பிறகு நான் கேட்டுக்கொண்டதுக்கு இணங்கி அந்த ஸ்டேசனுக்கு வெளியே போட்டிருந்த மரவாங்கில் இருந்தாள் . நான் ஒன்றுமே கதைக்காமல் கொஞ்சநேரம் அவளைப் பார்த்து ஜோசிதுக்கொண்டிருந்தேன் . குளிர் கொஞ்சம் கொஞ்சமாக முதுகில் குத்தத் தொடங்கியது. மழை வரும்போல காற்று நிறைய மர இலைகளின் வாசனைகளை இடையில் செருகிக்கொண்டிருந்தது

இந்த உலகத்தில் இவள் எப்படி வாழ்கிறாள், அழகாக இருக்கிறாள் , அறிவாக இருக்கிறாள், நம்பிக்கையோடு இருக்கிறாள்,இதைவிட வேற என்ன வேண்டும் வாழ்கையில், என் குறுக்கால போல கோணங்கிப் புத்தியில் இவளைக் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்கும்போது அவளே கதைக்கத் தொடங்கினாள்

" என்ன ஜோசித்துக்கொண்டு இருக்கிறாய்,,சொல்லு,,"

" ஒன்றும்மில்லை ,ஏஞ்சலினா ,"

" இல்லை, இந்த உலகத்தில் இவள் எப்படி வாழ்கிறாள், அழகாக இருக்கிறாள் , அறிவாக இருக்கிறாள், நம்பிக்கையோடு இருக்கிறாள்,இதைவிட வேற என்ன வேண்டும் வாழ்கையில், என் குறுக்கால போல கோணங்கிப் புத்தியில் இவளைக் கலியாணம் கட்டினால் எப்படி இருக்கும் என்றுதானே ஜோசிக்குறாய் "

" ஹஹஹா, ஏஞ்சலினா ,ஹ்ம்ம்,,என்னத்தை சொல்ல,,,ஹ்ம்ம்,,உண்மைதான் ஏஞ்சலினா அப்படிதான் நினைத்தேன் "

" இப்பிடி உன் மனசாட்சிக்கு உண்மையாக இருக்கு "

" சரி,,நான் நினைத்து அப்பிடியே உனக்கு எப்படி தெரியும் "

" எண்ணம்கள் தான்,,அது ஒரு அலை, உன் எண்ணம் அலைகளில் ஏறிவந்து என்னை உணரவைக்குது "

" ஹ்ம்ம்,, இந்த ஸ்டேசனுக்கு கீழே நீ கடக்கும் பாதையில் ஒரு பாதை இருக்கே அதில எப்பவும் வாகனங்கள் தாறுமாறாய் வருமே எப்படி பயமில்லாமல் கடக்கிறாய் "

" வாகனங்களின் எஞ்சின் உறுமல் சத்தத்தை வைத்து அவை எவளவு தூரத்தில் வருகுது என்று கணிப்பேன் , என் காலடிகள் எனக்கு என் பாதையின் வழியில் தப்படிகள் தவறாமல் இடம் காட்டும் "

" ஹ்ம்ம்,என்னைக் கண்டால் ,என்னோடு இன்னொருமுறை கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தால் கதைப்பியா "

" ஹஹஹா,,பிறகும் உன் பழக்கம் குறுக்கிடுகிறது, உன்னை நான் எப்படிக் காண முடியும் சொல்லு "

" அய்யோ சொறி சொறி ,,நான் உன்னைக் கண்டால் கதைக்கிறேன் "

" சரி கதை பிரசினை இல்லை,,என் டெலிபோன் நம்பர் தாரேன் அதில கதை ,

" அதுவும் நல்ல ஐடியாதான் ஏஞ்சலினா "

" நீ சிகரெட் பத்துவியா "

" ஓம் , சிகரெட் ஊதித்தள்ளுவேன் "

"வர்யினியா பில்டர் டொபாக்கோ பிராண்ட் வகையா பத்துவாய் ,,மால்பிரோ ,பரமுன் இந்தவகையா,,சின்ன வயசில் அப்பா அதுதான் பத்துவார் "

" அட, சத்தியமாய் ஆமாப்பா அதுவேதான் ,, "

" எப்பவும் நேர்வேஸ் ஆக இருப்பியா , அலைபாயும் சிந்தனையில் அவதிப்படுவாயா "

" அதெப்படித் தெரியும் "

" இந்த மரவாங்கில் விரல்களால் தட்டிக்கொண்டு இருக்கிறாயே , உன்னிடம் ஒருவித பாதுகாப்புத்தன்மையற்ற பயமிருக்கு "

" ஹஹஹா,,உண்மைதான் "

" அடிக்கடி ட்ரெயினில் பிரயாணம் செய்வாயா "

" இல்லை,,இப்போது குறைவு , ஏனென்றால் பல நாட்கள் நான் சைக்கில் ஓடியே ஒஸ்லோ சிட்டி போவது "

" அப்படியா,,எனக்கு சைக்கிளில் இருந்து பிரயாணம் செய்ய மிகவும் விருப்பம்,,அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்று அறிந்ததேயில்லை "

" சரி ஒருநாள் உன்னை என் சைக்கிளில் ஏற்றி ஓடிக்காட்டுறேன் "

" வாவ்,,உண்மையாவா சொல்லுறாய் ,,"


" யா,,,உண்மையாதான் சொல்லுறேன்..நோர்வே முழுவதுமே ஓடிக்காட்டுறேன் "

" ஹஹஹா,,அப்படி எல்லாம் வழியாதே,,சும்மா இந்த ...,,,,,,,,,,,,.. இடத்தையே காட்டு..ஓகே யா "

" ஓகே,,ஏஞ்சலினா "

" உனக்கு ஒரு விசியம் சொல்லவா, அல்லது கேட்கவா,,செய்வியா,, நீ என் கையைப்பிடித்து ஹாய் சொன்னபோது அதை உணர்ந்தேன், "

" அட அது என்ன சொல்லு அப்பிடியே நீ வாசித்த அந்தக் கதை என்ன என்று சொல்லு "

" ஹஹஹா,,அது ஒரு கதை "

" அதுதான் என்ன கதை அது ஏஞ்சலினா ,,எனக்கு கதை கேட்க பயங்கர விருப்பம் ,,ப்ளிஸ் சொல்லு "

" ஒரு பார்வை அற்றவள் ட்ரெயினில் பயணிக்கும்போது மார்பைத் திறந்து அவள் குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள், அவளுக்கு முன்னே ஒருவன் இருந்து அதைப் பார்க்கிறான் . அவன் நோக்கமே வேற ..பிறகு...ஹ்ம்ம்...பிறகு...... "

" அடப் பாவமே பிறகு என்ன நடந்தது ஏஞ்சலினா "

" அடுத்தமுறை சந்திக்கும்போது சொல்லுறேன்,, "


................தொடரும் ......