Tuesday 11 April 2017

வரிகள் கொடுத்த வலிகள்...

வரலாறு ஒருபக்கச் சார்பாகவே   எவ்ளவோ  பொய்களுக்கு வடிவம் கொடுத்த சம்பவங்களால்  அவநம்பிக்கைகளுக்காண  அத்திவாரமே ஆடினபின்னும் எனக்கும் நான் பிறந்த நகரத்துக்குமிடையில்  நல்ல உறவுக்கான தேடலிருக்கு , அது என் சின்ன வயது  ஆத்மாவை  அறிமுகம் செய்தது .  மனம்  ஏதோ ஒரு மூலையில்  பிடிவாதத்தால் அழிந்துகொண்டிருக்கும்  வாழ்க்கையை  நம்பி போய்க்கொண்டிருக்கு என்கிறது.  இதனால் உறுதிமொழிகள் ஒருநாள்  சரியாகக் காயப்பட்டு  நலிந்து போகலாமென்று தெரிந்திருந்தும்  உறைபனியிலும் நெருப்பில் நடக்கவைக்கிறது இன்னும் அந்த நகரத்தின் நினைவுகள் . பத்திரமாய்  உயிர் வாழ்றதை காட்டிக்கொடுக்கும் அந்த அனுபவமும் ,  தோல்விகள் என்னை அடிக்கடி   சுவாசிப்பதால் நானே ஒருநாள் காணாமல் போனாலும்  இடையில்அகப்பட்ட வார்தைகளையாவது மன்னித்து விடு. என் சினேகிதமான  பழைய நகரமே !


..                                                               
அன்புக்குரிய நகரமே

நீ நலமா ?
நான் இங்கே நன்றாகவேயில்லை!
நேற்றுத்தான் 
உன் 
இன்றைய முகம் பார்த்தேன்.

அடங்கமறுக்கும் சில
ஆதங்கங்களைச் சொல்லுறேன்
கோவிக்காதேடி...
உன் புதுவிதமான பூரிப்பில் 
அதீத அலங்காரங்கள்
மறைமுகமான
ஆக்கிரமிப்புகள் போலவேயிருக்கு !
ஒரு
தியாக வேள்விக்கு 
அரைவாசித் தலைமுறையே
ஆகுதியாக்கிய
குத்திக்கால் அடையாளங்களை
ரகசியமாக அளித்தேவிட்டாய் !
இரவும் பகலும் நடந்தேகடந்த
புழுதிப் பாதையெல்லாம் தார் ஊற்றி
உன் மடியில்
கட்டிவைத்திருக்கும்
மனிதர்களின் எண்ணிகையை விடவும்
உறுமி மிரட்டிக்கொண்டிருந்த
இருசக்கர வண்டிகள்
அரியண்டமாய்த்தான் இருந்தது !
நாங்கள் வருவோம் என்று
மை போட்டு மழுப்பிய
உல்லாசக் கொண்டாட்டப்
பயண ஏற்பாடுகளை எதற்க்குச்
செய்து வைத்திருக்கிறாய் ?
நாத வினோதங்களிலும்
அதன் நளினசந்தோசங்களிலும்
சன்னங்கள் பாய்ந்த சத்தங்களை
நீ 
மறப்பாய் நாங்கள் மறக்கமாட்டோம் !
சங்கு ஊதும் சுடலையாவது 
அங்கே முடியட்டும்
என்று நினைத்ததெல்லாம் வீண்!
உன்
விழலுக்கு இறைக்கும்
அவசரங்களில் ஆத்மாவை நெரிக்கவிட்டு
படலைக்கு வரவே பிடிக்கவில்லை.
கொஞ்சம் அலுவல் கிடக்கு 
அடுத்த மடலில் சந்திக்கிறேன்.





கிறங்கவைத்த நகரமே

நீ நலமா ?

நானிங்கே உறங்காதபடி,
சில நாட்கள்முன்தான்
உன்
ஆட்டத்தையும் பாட்டத்தையும்
உன்பாடல்களையும் பார்த்தேன்

உனக்கு என்னத்துக்கு
இந்த சொத்துப்பத்து இல்லாத
குத்துப்பாட்டுக்கள்?
உன் இடுப்பு
மாவிலங்க மர உரல்
உன் தோள்கள் மலைகள் என்ற
மஹாகவியை ஏன் மறந்தாய் ?
சொல்லடி
உனக்குக் கொழுப்பெடுத்த நேரமெல்லாம்
அரைச்சுத் தீத்திய 
இலுப்பைப்பூக்கள் நினைவே இல்லையா?
சிலநேரமுன்
இயலாமையில் நியாயம் இருக்கு,
இளவேனிலே உன் மனவானில்
இதமாகவே சதிராடிய 
சில்லையூர் செல்வமும் நம்மிடமில்லை,
வாவென்று சொன்னதும் தமிழே
வாசலில் வந்ததும் தமிழே
நீரோடுநிலமெங்கும் பச்சை என்ற
புதுவை புதைந்தே போனார்,
உன்
கண்ணீர் கரைபுரள 
பேனாவில் ஒற்றி எடுத்துக்
கவிதை எழுதிய
ஆதவனும் சேரனும் செழியனும் வியேந்திரனும்
இங்காலப்பக்கம் தான்
வரிச்சுமட்டைவேலிகளைத் தாண்டி
ஓடிவந்துவிட்டார்கள்,
கொஞ்சமாவது ஜோசிதுப்பாரடி மவளே
சொல்லி மாளாத வலியில் 
சந்தி எல்லாம் சிரிக்கும் 
இந்தச் சந்தங்கள் உனக்குத் தேவைதானா?
எல்லிப்போல சோலி இருக்கு
அடுத்த மடலில்
சந்திக்கிறேன்.





நேசித்த நகரமே

நீ நலமா ?
நான் இங்கே ஜோசித்தபடி,
நேற்று முன்தினம்தான்
உன்
தோற்றுப்போன அடையாளம் பார்த்தேன்

விழுதுகளில்
தொங்கி ஊஞ்சல் ஆடும்
மண்டைப் பழுதுகளுக்கு 
நீ இனியெப்போதுமே
வேர்களின் விலாசம் சொல்லிக்கொடுக்கும்
விபரங்களோ அதிலில்லை
தோற்றுப்போனவர்கள்
தேரோடிய வீதியெல்லாம்
நீ
வேற்றுமனிதர்களோடு
விருப்பமில்லாமல் சல்லாபிக்கிறாய்,
நேசமான குங்குமமும்
வாச சந்தனத்தையும்
நீ மறந்தே மறந்துபோய்விட்டாய்
உன்
முக்காடு போட்ட அமைதி 
சந்தேகங்களைக் கிளப்பினாலும்
விரும்பியே ரசிக்கும்படியிருக்கு
ஓட்டுப் பொட்டும்
ஒய்யாரக் கொண்டையும் நளினமாயிருக்கு
அதையும் சொல்லுறேன்
இங்கிருந்து வெறுக்கவில்லை
உன் 
இலட்சினைகள் மிக இங்கிதமாகவிருக்கு
ஆனால் உன்னிடம்
இலட்சியங்கள்தான் இனியெப்போதுமில்லை
சரி விடு சோலைமலரே
கொஞ்சம் வேலை இருக்கு
இன்னொருமடலில்
சந்திக்கிறேன்.





பெரிதாகிய நகரமே

நீ நலமா ?
நானிங்கே உன்னைப் 
புரியமுடியாமலேயிருக்கிறேன்,
எல்லா வளர்ச்சியில்
நீ

மேலைநாட்ட்டுடன்
போட்டியாக மூச்சுமுட்டிமோதி 
முன்னோக்கியே முன்னேறியிருக்கிறாய்,
அனைத்துலக
அன்பான வாழ்த்துக்கள்!
ருதுவாகிய
உன்னை இருட்டுக்குள்ளும்
சுருட்டுக் கொட்டிலுக்குள்ளுமே
இருக்கச் சொன்னதேயில்லை,!
ஆனால்
நெருப்புக்குள் நடந்து
நெஞ்சமெல்லாம் உரமேற்றி
விருப்பு வெறுப்புகளை
வாசலோடு உதறிவிட்டு
விழ்ந்து போனவர்களின் 
வீரத்தையெல்லாம்
ஒரு செருப்புக்குக் கொடுக்கும்
மரியாதையையாக நினைத்தாவது
பின்னேர மழையில்
இந்நேரம் பிறந்து தொலைத்த
திசையறியாப் பிள்ளைகளுக்கு 
இருத்தி வைத்துச் சொல்லிக்கொடுடி !
இல்லையென்றால்
எடுப்புச் செருக்கில்
நீயும் வெளிய சிலுப்புவாய்
புற்றெடுத்துப் பரவி
உள்ளேயெல்லாம் உருக்குலைந்து போவாய்
கொஞ்சம்போல 
அலுப்புகள் இங்கிருக்கு
இன்னொரு விழப்பமான மடலில்
சந்திக்கிறேன்.






அறிவான நகரமே

எப்படி நலமாய் இருக்கிறாயா?
நானோ
மோனவெறியில் எழுதுகிறேன் !
விரல்கள் பிடித்து
நவராத்திரி விஜயதசமியில்

ஏடு தொடக்கிய உன் பிள்ளைகள்
இங்கேயும்
அணையாத அறிவுச்சுடரை
அந்நிய நாட்டிலும்
அழுத்தப்பதிவு செய்திருக்கிறார்கள்!
இப்ப உன் பக்கம் 
என்னமாதிரிச் சிலமன் ?
பிய்ந்து போன வேட்டியில்
அப்பாவும் 
அதிகாலை எழுப்பிய அம்மாவும்
தோட்டக் காணி பூமியையும்
அடக்குக்குத் தரகுகொடுத்துப்
விகசித்துப் பசியிருந்து
படிக்க வைத்த
போட்டிப் பரீட்ட்சைகளின்
பூரிப்பு அடைந்த
கல்வியின் காலடி ஓசைகள்
இப்பவும் அங்கே கேட்குதா ?
தயவுசெய்து கொஞ்சமாவது
பொறுப்பெடுத்து 
புதியதலைமுறைக்குப் புரியவையடி,
இனியுமங்கே வந்து
இன்னொரு இயக்கம் தொடக்கி
இருக்கிற இருப்பையும் 
அழிக்கவே முடியாது !
முன்னம்காலை ஊன்றி வைத்து
எடுத்தபாதையில் அறிவுதான்
அடுத்த அணுவாயுதம் !
அதன் உலகளவு விசாலம் தான்
இனி எங்களுக்கு இன்னொரு விலாசம் !
நிறையவே கிலேசமாயிருக்கு
இன்னொரு மடலில் 
சந்திக்கிறேன்....






வெளிச்சமான நகரமே

இப்போது எப்படியிருக்கிறாய்?
நானோ
ஒளிச்சு இருந்து எழுதுகிறேன்,
சென்ற கிழமையுன்
சம்சாரம் நிறைந்த

மின்சார இறைப்புக்களைப் பார்த்தேனடி,
நீயோ
அளவுக்குஅதிகமாகக்
கண் கூசவைத்து ஜொலிக்கிறாய்,
தரவைக்கடல் சதுப்பில்
நாங்கள் திரத்திய
மெதேன் வாயு வாய்விட்ட
கொள்ளிவால் பேய்களை
நீயோ
முற்றாகமறந்துவிட்டாய் போலிருக்கே,
அரிக்கன்லாம்பிலும்
உப்பு விளக்கிலும்
மெழுகுதிரிகளிலும்
நாங்கள் ஒரு விடிவெள்ளியே
தேடி எடுக்க நினைத்தோம்
அதுனக்குத் தெரியுமா?
தெரியாப் பருவத்தில்
பவுர்ணமிப் பால்நிலவு
எந்தவொரு திட்டமுமில்லாமல்
முற்றத்தில் பாய் விரித்தது அறிவாயா?
இன்றையதினமுன்
அபரிமிதமான மின்ஒளி விழிகளில் 
உனக்கே உனக்கான
ஏக்கங்கள் இல்லவே இல்லை,
உன் வீக்கங்கள்தான் 
வெளிப்படையாகவே தெரிகிறது!
எதையோ பரவவிட்டு 
எதை எல்லாமோ தவறவிட்டு
நீ இப்போது
எந்தப் பாதைக்கும் வழிகாட்டவில்லை
கொழுத்திவிட்ட சொர்க்கப்பானைகளில்
உன்னோட
கர்பப்பையில் நெருக்கமானவர்கள்
இருட்டோடு போய்விட்டார்கள்
இனிச் சொல்ல என்னவிருக்கு
விருப்புவெறுப்புஇல்லாமல்
இன்னொரு மடலில் 
சந்திக்கிறேன்.....






நேசமான நகரமே

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?
உன்
வற்றாத ஜீவாநதியின்
வாசனைகளோடு எழுதுகிறேன்,
உன்

நளினமான நடிப்பில்
சிதிலமான போக்கேபிடிபடுகுதில்லை,
இப்பெல்லாம்
காசோடு வருபவர்களைத்தானே
நீயும் உன் எடுபிடிகளும் 
கணக்கில் எடுக்கிரார்கலாமே ?
கடன்எடுத்து வாறவர்களையும்
மண்டியிட்டு வரவேற்று
உடன் விழுந்து வணங்குகிறாயாமே
என்னதான் 
நடந்தது உனக்கு?
வேரோடு விடுதலையைத்
தேரோடும் வீதியில்
எழுதியவர்கள் இனியில்லையென்ற
திமிரா உனக்கு ?
பிச்சை எடுத்தாலும்
எச்சில் இலை கழுவாத இனம்
அது உனக்கு எப்போது மறந்துபோனது?
உன்
வரலாற்று வெகுமதிக்குப்
பணம்தான் பெறுமதி என்றால்
பேசாமல்
நீயும் இங்கே ஓடிவந்துவிடு,
நானுக்குக்
கழுவும் வேலை
நல்லாவே எடுத்துத்தாறேன்,
வெள்ளையாகவே பின்னி எடுத்து
உரப்பையில் நாணயத்தை
முன்னெப்போதும் இல்லாதவாறு
அள்ளிக்கட்டி கொள்ளை அழகு பார்க்கலாம்,
சரி வாவேன் 
அரிசுக் கொட்டிக்கொண்டு
அதுக்குதானே ஆசைப்படுகிறாய்
வா வந்துபார் உனக்கும் வலி தெரியும்,
நாலுநாளா 
தோசைக்கு உறவைத்த மா புளிக்கிறது
இன்னொருநாள்
ஆசையோடு எழுதுகிறேன்..




வாஞ்சையுள்ள  நகரமே 
நலமாக  இருக்கிறியா ?
நானிங்கே 
காஞ்சுபோய்க்கொண்டிருக்கிறேன் !
ஒரு காலத்தில் 
புதினப்   புனைவுகளையும் 
யதார்த்த உரித்தெடுப்புக்களையும் 
 உயிரோடுறவாடக் கொடுத்த  
புத்தகங்களை 
அறிமுகம் செய்து வைத்தாய்,
ரசியாவின் 
தொலைதூர  சைபீரியாவும்  
சிங்கிஸ் ஜமைத்தாவின் 
ஸ்டெப்பி வானாந்தர  வெளியும்  
உன் தந்த  கதைகளில் எழுந்து வந்தது, 
தனித்தே  திரிந்த நாட்களில் 
இலக்கியத்தளமென்று   
தர்க்கரீதியாக  எதுவுமேயிருந்ததில்லை . 
தொட்டாச்சிணுங்கிகள்  கிடந்த . 
தோட்ட வெளியே 
நம்பிக்கையற்ற  கவலைபோல 
ஒருநாளின் பின்மாலையில் 
ஊரோடு ஒத்தோடி  வெளியேற்றவைத்தது.  
நானும்தான்  இப்போது 
என்னவெல்லாமோ இங்கிருந்து
எழுதிக்கொண்டிருக்கிறேன்
உன்
முகவுரையை
வடதுருவ  நாடொன்றின்  குளிரோடு

வரைய ஆரம்பித்த  போது

புரியாமலே போனதடி 

அதிலதான்

தெருவொழுங்கை  செம்மண்  புழுதி படிந்த

என்வாழ்கைப் புத்தகத்தின்

முடிவுரையையும்

சொல்ல வேண்டிவரும்   என்று
நம்பிக்கையோடு  இருடி 
நாளைக்கு விடியக்  காத்தால 
இன்னுமொரு  கடிதத்தில் 
சந்திக்கிறேன் 



எடுத்துக்கொடுத்த நகரமே

எப்படிஇருக்கிறாய்?

கொடுத்து வைத்தது

அவளவுதான் எண்டு

அமைதியாக இங்கிருக்கிறேன்,

உனக்குத் தெரியுமா

இலங்கை வானொலிதான்
இல்லாததைதையும்
பொல்லாதையையும்
ஒருகாலத்தில் எமன் எமக்கெனவேயென்று
இட்டுக் கட்டியதை ?
பின்மாலைச் செய்திகளில்
சட்சொருபவதிநாதன்
ஊரண்டங்குச் சட்டத்தை
உறுதிப்படுத்தியதை ?
ஈஸ்வரசர்மா
லங்காபுவத்தின்
ஊதுகுழலாகி ஊதியத்தை ?
மயில்வாகனத்தின்
அகால மரண அறிவித்தல்களை ?
அப்போதும்
கறல் பிடித்தஆயுதங்களோடு
வீரமுள்ள இளையவர்கள்
அமைதி படிந்த இரவில்
வீதிகளில் சண்டைக்காக நடமாடினார்கள்,
சிலநேரம்
சடசடசட என்று சன்னங்கள்பாயும்,
காலையில்
சாலைஓரம் ஒரு போராளியின்முகத்தில்
இலையான்கள் மொய்க்கும்,
அவர்களுக்கென்று
நடுகல்லோ நினைவுத்துயிலில்மோ
நீ விரும்பி வைத்ததில்லை,
சரி விடு
வரலாறு உன் வலப்பக்கம் இருந்ததால் 
உன் 
எடுபிடிகள் மட்டும் முதன்மையாகினார்கள்,
அவர்களைத்தான் 
இங்கேயும் கொடிபிடிக்க வைத்ததும் 
எல்லாம் தெரியும்
சொல்லவேண்டிய மிச்சத்தை
இன்னொரு ஆறாத மடலில்
எழுதுகிறேன்...