Saturday, 29 October 2016

தலைப்புக்கவிதைகள் இரண்டாம் தொகுப்பு

என்னைப் போல மன உளைச்சலை  வார்த்தைகளில் ஏற்றி எழுதி வைத்து அமைதி காணவிரும்பி எல்லாருக்கும் புரியும்படி எளிமையான கவிதைமொழியில் எழுதும் பலர் இருக்கிறார்கள். எங்களின் கவிதைகள் காற்றில புடைக்கிற சுளகில இருந்து பறக்கிற உமி போல. அற்பமான ஆயுள் உள்ள ஒருமுறை வாசிக்கவே விளங்கும்படியான ஒரு பொழுது ஒரு உணர்வு என்ற வகையைச் சேர்ந்தவை, அவற்றால் நிரந்தரமான தலைஇடி இல்லை.

அப்படி இருந்தும் பல கவிதைகள் விளங்கவில்லை என்று கேட்பார்கள், அதுக்கு முடிந்த விளக்கம் கொடுப்பது எழுதியவர்களின் மதிப்பை அதிகரிக்கும். அப்படிக் கேள்வி கேட்பவர்களுக்கு கட்டாயம் விளக்கம் சொல்லவேண்டும் என்று சட்டம் ஒன்றும் இல்லைதான். விளங்கவில்லை என்று சொல்ல கட்டாயம் தில் வேணும்.ஏனென்றால் கீழைத்தேய மன ஓட்டத்தில் ஒன்று எங்களுக்கு விளங்கவில்லை என்று கேட்டால் அவர்களைப் படுமுட்டாள்கள் என்ற வகையில் சேர்ப்பார்கள். உண்மையில் மேலைநாட்டு பழக்கத்தில் தெரியவில்லை என்பவர்களிடம்தான் தேடலே அதிகமிருக்கும் 


அம்மாவின் ஞாபகம்....
..................................................
உறை பனி

சறுக்கி விழுத்தும்

ரகசியாமாக 
அந்நியமான 
இருண்ட
மாலைப் பொழுதில்
தவிர்க்க முடியாத 
துயரங்களுடன்
மூக்கு நுனியை 
துருவக் குளிர் 
விறாண்டிச்  செல்ல...

சில
நினைவுகள் 
வேகம் பிடித்து
தூக்கி எறிந்த வேகத்தில் 
எல்லைக்கு அப்பால்
ஓடின...

சில
சம்பவங்கள் 
உரிய இடத்தில்
வந்து நின்ற போதும்
காற்றை விசாரிக்க  
கதவைத் தாண்டவே இல்லை...

கடந்து செல்லும் 
பாதையின் 
தனி மரத்தில் 
மிக இறுக்கமான
இயற்கையின் 
கை விடப்பட்ட 
கால நிலையில்
சின்னக் குருவி
சிதிலமான  கூட்டை 
மறுபடியும் 
சீரமைக்கும் 
நேர்த்தியைப் பார்க்க  
அம்மாவின்  ஞாபகம்
வந்து விடுகிறது.

மாமரங்களுக்கு வயதாகி விட்டது..

........................................................................

சுருக்கம் விழுந்து 

இறுக்கமாகி

இதுக்கு மேலும் 
வேர்கள்  
ஓட மறுத்து  
மாமரங்களுக்கு 
வயதாகி விட்டது..

நல்ல 
நினைவாக 
பூரண கும்பத்திலும் 
துன்ப நிகழ்வாக 
தோரணங்களுடனும் 
மாவிலைகள் 
வருடம் தவறாமல் 
பழங்களோடு 
நெருங்கி வந்தன..

உறுஞ்சி எடுத்த
குருவிச்சைகள்
அதிகமாக 
ஊஞ்சல் கட்டிய
வடுக்களில் 
அணிலும்
புலினிகளும்
ஆர்ப்பரிக்க 
நடு இரவு  
நத்துக்களும்
நடுங்க வைத்த
நாட்குறிப்பு.... 

ஒன்றாய் 
வளர்ந்தவர்கள் 
ஓடிப் போனபின்
புதியவர்கள்
வந்த நேரத்தில்  
புதுக்கவிதை
எழுத முடியாமல்
இருந்திருக்கலாம்....  

கிளைகளின்
நடுவே 
கூடு கட்டிக் 
குஞ்சு பொரித்த 
சின்னப் பறவை 
நன்றியாக 
ஒரு 
சின்னச் சிறகை 
விட்டுச் சென்ற 
சம்பவத்தில் 
பழையவர்களின்
நினைவுகள்
மீட்டப்பட்டிருக்கலாம்.


...........................................................
நடக்கப்போற 
நல்லதையே 
நாலுவிதமாய்
பேசிக்கொண்டேயிருக்குது 
தென்றல்...

தூறல் மழை 
தூவிக்கொண்டு
போகும்  
கருத்துக்களுக்கு 
நடுவில்  
நல்ல எண்ணம்களும் 
நனையத்தான் 
செய்கிறது......

எரிச்சல்  தருகிற
குளிரிலும் 
பரபரப்புத் தேடும் 
செய்திகளோடு
உவமானம் 
சேர்த்து வைக்க  
அலையுது 
இயற்கை....

எப்போது 
சிரிக்கலாமென 
எதிர்பார்த்து நின்று 
வழிந்து ஓடிப் போன
வசவுகளை  வரவேற்ற
வாழ்க்கை   
இதயத்தை மட்டும் 
அசைக்கவேயில்லை...

ஆனாலும்
சாரலாகி ஓடிப் போன
கடந்தகாலம் 
காதலுக்காக மட்டும்  
அப்பப்ப 
ஆடிப்போனது 
என்பதென்னவோ 
உண்மைதான்...

.........................................................
வழமை போலவே 
கோபத்தைக் 
கணக்கில் எடுக்காமல் 
சுவர்க்கத்தை அடைய
அவர்களின்   
மன்னிப்புக்காக
மன்றாடும் 
ஒவ்வொரு முறையும் 
இதயம்  பலவீனமடைகிறது.....

ஒரு
கச்சிதமான
பொய்யை 
நாலு பக்கமும் 
கற்பனையில்   உருவாக்கி
அதை ஆராதிக்கிறார்கள்... 

திட்டிப்  பேசுகிற
நேரங்களில்
மிக இயல்பான
ஆரோக்கியமான 
அமைதியான  வாழ்வு
அடி வேண்டுவதை 
சாத்தியமாக்கும்
பின் விழைவுகளை 
தவிர்க்க முடியவில்லை.... 

இந்தப்
விரிசல்கள் 
தொடுவான எல்லையில்
போய் முடிய முன் 
வசதியான இடத்தில 
முழுவதும்
உடைய முன்னர் 
நிறுத்திக்கொள்ள வேண்டும் 

ஒவ்வொரு
செயலுக்கும்
ஒருஅர்த்தம்
முக்கியத்துவமாயுள்ள
தீர்மான உணர்வு
நிரந்தர திருப்தியை அளிக்க
எவ்வளவு தூரம்
பறக்க முடியுமோ
அவ்வளவு தான்
மனித எல்லை.

வெளிப்படையாகவே வைத்திருக்கிறேன்....

..................................................................................

இந்த 
குளிர் காலம் முழுவதும் 
ஒளிந்து பிடித்து 
விளையாடும்
குழந்தைகளின் 
உற்சாகம் போல  
கவிதைகள் 
கவனித்துக்கொண்டேயிருந்தன.. 

மைய உணர்வுக்குள்
இணைத்துக்கொண்ட
தருணம்களில் 
ஒதுக்குப் புறத்தில் 
வார்த்தைகளை 
உருவக் காரணமாயிருந்தது
தனிமை.....

விமர்சனங்கள்
வெளியடையாத
அதில் தேர்ந்த கவிஞ்சனின் 
கர்வமோ 
புத்திசாலித்தனமோ 
அடிப்படையிலுமில்லை....

பார்த்த போது ஏற்பட்ட
விந்தையான 
எண்ணத்தைத்
இழுத்தெடுத்து 
உருகிப்  போகாத 
உறைபனியில் 
எழுதி வைத்தேன்.

சறுக்கி 
நடக்கும்போதோ
வழுக்கி  நகரும்போதோ
மாற்றுமுயற்சிகளிலும்
புதிய இரசனைகளிலும்
தீவிர உரையாடல்களிலும்
அவைகளின் 
பங்களிப்பும்
இணைந்திருக்கவில்லை.. 

நம்மையறியாமல் 
நம்பிக்கையில் 
கொண்டு வந்து
நிறுத்தும்  
மனசாட்சி
அதுவாகவே  
என்னை இயக்கியது
எனச் சொல்லலாம்.

அந்நியமான வரிகள் 
உருவானதற்குப் 
பின்னணியில்
இருந்தவர்கள்
பற்றிச்  சொல்லேன் என
நீ  
ரகசியமாகக் கேட்டால்  
நீ
என்ன பதில்
வைத்திருக்கிறாயோ 
அதேயே தான் நானும்
வெளிப்படையாகவே 
வைத்திருக்கிறேன். 



தெருவிளக்கின் விளக்கம்...

............................................................

மங்கலான 
தெருவிளக்குகள் 
நடைபாதைகளின்  
அமைதியோடு 
மல்லுக்கட்டினாலும்  
வழி நெடுகிலும்
நிழல் வழிந்து கொண்டே  
வரத்தான் செய்கின்றன

யாருமேயில்லாத 
பொழுதுகளிலும்
இருட்டுக்கு 
அளவுகடந்த
எதிர்ப்புக்  காட்டி
ஆழ்மனத்திலும்
அவைகள் ஒரு பிடிப்பு
வைத்திருக்கின்றன

வாழ்வில்
எங்கேயாவது  
காதல் இருக்கட்டும்,
சாகசம் ஏதாவது
கிடைக்கும் வரை 
பரிசோதனை
செய்து பார் என்பதுபோலப்
பார்க்கின்றன

கொஞ்ச நேரம் 
நின்று நிமிர்ந்து பார்க்க 
உனது இதயத்தில்
தேடுவதுக்கு ஏதாவது 
இருக்கிறதா
இல்லையென்றால்
நேரத்தை வீணடிக்காமல் 
வீட்டுக்குப் 
போய்ச்சேரும் 
நேரத்தைச் சொல்லியது

புரிந்துகொண்டு 
பிறர்மீது கடினமாக
இருப்பது மறையத் தொடங்க
என்ன தான் 
செய்யமுடியும்
வெளிச்சத்தில் 
கிடைக்காத விளக்கம்
பின் தொடர்வுகள் 
நிகழும்போது
நிகழ்ந்துவிடுகின்றன.

சிற்பியின் மொழி
............................................
பல கற்கள் 

காலுக்குள் 

மிதிபட 
சிலது மட்டுமே 
கடவுளாகித்  
தொட்டுக் கும்பிடும் 
தகுதி பெறுகின்றன..

பிரம்மாண்டமான 
கற்பனையில் 
ஈரத்தைக் கசியவிடும் 
எல்லாக் பாறைகளுக்குள்ளும்
வாழத் துடிக்கும்  
பெண்களின்  
சிலைகள் இருக்கலாம்.... 

சிற்பியின் மொழி 
கருங் கல்லுக்குப் 
புரியும் நேரம் 
உளிக்கு வலிக்குமென்று 
தெரிந்தும் 
தேவையற்றதை
தேடி ஒதுக்கி   
நீக்குவதால்  
வெளியே வருகுது
தெய்வத்தன்மை... 

அவை 
திருப்திகளின் 
உத்தரவாதத்தில் 
நம்பிக்கைகளை 
உடுத்தியபடி 
கலாச்சாரங்களை
ஆவணப்படுத்தி 
பண்பாட்டைப்
பிரார்த்தனை செய்கின்றன..

கால ஓட்டத்தில் 
சிற்பி 
உயிரோடு 
இல்லாத காலத்திலும் 
 பேசமுடியாத  சிற்பம் 
காலமுள்ளவரை 
உயிரைப் பிடித்து
வைத்துக்கொண்டுதான்  இருக்கு 

நல்லவர்களுக்கு நடுவில்.....

................................................................

குழந்தையைத்

திருத்துவது போல

வளர்ந்தவர்களைத் 
திருத்த முடியுமாயின் 
எத்தனை சுகமாக
இருந்திருக்கும்.......

எதிர்பார்க்காமல் உதவும்
நண்பர்கள்
எப்போதாவது தென்பட 
எதிர்பார்ப்புடன்
உதவும் நண்பர்கள்
கை தட்டும் கிட்டத்தில் ,

நம்மை 
அழிக்கத் துடித்து  
உணர்வுகளைப் 
பொருட்படுத்தாத
உறவுகளுடன்தான்
இப்பவும் வாழ்க்கை 
வேண்டா வெறுப்பாக  
பிணைக்கப்பட்டிருக்கிறது.....

தகுதியற்ற 
மனிதர்களுக்கு
முக்கியம்  கொடுத்து 
முகஸ்துதிக்கு
முகவரி  வரைந்து வைத்து 
அவர்களிடம் 
சுய கவுரவத்தையும் 
கொடுத்து வைக்கிறோம்....

நமக்காக
வாழும் வரையில்
அவர்களின்
நேர்மையின்மை
துன்புறுத்தும்
அவர்களுக்காக
நாம் வாழ
ஆரம்பிக்கும்போது
அது அங்கீகரிக்கப்படும் ...

முழுக்க முழுக்க
நல்லவர்களுக்கு 
நடுவில் நம் வாழ்க்கை
அமைந்திருந்தால்...
ஒரு வேளை 
இத்தனை இதமாக 
இருந்திருக்குமென்று 
உலகத்தை
சின்னக் கைகளில் 
விரிக்கும் 
குழந்தைகளின் 
குதூகலம் 
நமக்கும் கிடைத்திருக்கலாம் !

தெரியாமத்தான் கேட்கிறேன், 
....................................................................
நன்றாகவே
நினைவிருக்கு
விழுதுகளை  அறுத்த 
புது உலக தந்திரம்
சும்மா கிடைக்க
இறந்துபோன
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கிள்ளித் தந்து  போன  
சந்தோசங்கள் ..

பழைய வீட்டின் 
கதை சொல்லும்
வேப்பமரக் கதவுகள் 
தாழ்வாரமெங்கும்
பாட்டியின் 
நினைவைத்தின்னும்
நிழல்.

கன்னிக்கால்
முள் முருக்கின் 
வேலியோட
ஓதியமரக் கிளையெங்கும் 
வளைந்து ஓடி
இருட்டிலும்  ரகசியமா
இலை தடவும் அம்பலவி,

பின்னால கொய்யாவும்
மறக்காத மாதுளையின் 
நடுவே
அடர் பாசி
அள்ளிக் கொட்டி
இருள் போல
துலாக் கிணறு.

இடையில
எலுமிச்சை
நாவுற நாரத்தங்காய் ,
தெற்கால தென்னையும்
கரை எல்லாம் கமுகோடு 
வாசல் வரைக்கும்
குலை தள்ளி
வாழ்வாங்கு வாழ வைத்த
வாழைமரம் ,

தெரியாமத்தான் கேட்கிறேன், 
குளத்தையும் ,
கோவிலையும்
குடும்பங்களையும்,
கும்மாளத்தையும் 
உறவுகளையும்
ஊர்களையும் 
இருபதாயிரம் மைல் தள்ளி 
இழந்து போட்டு வந்து
அப்படியென்ன
சுதந்திரம்
அடுத்தவனின்  நாட்டில் ?

...............................................................
இருப்பதில் 

எடுத்துக் கொடுத்து 

உதவி செய்வதில்
திருப்தியடையும்
மனமுள்ளவர்கள்
உற்சாகமாக
இருக்கிறார்கள்.... 

விழியாக இருந்து
வழி காட்டிக் கொண்டே 
கடந்து செல்லும் 
நிமிடங்களை 
மற்றவர்களுக்காக
இழக்கத் தயாராக
இருப்பவர்களை   
உலகப் 
பார்வையற்றவர்களுக்கு
தெரிவதில்லை... 

உதவ தயாராக
இருப்பவர்களுக்கு
இது சாதாரண செயல் 
உதவி கோருபவருக்கு
இது சரியான
நேரத்தில் கிடைத்த
உயிர் மூச்சு... 

உதவுபவர்கள் 
பயனாளிகள்
இருவரையும் 
மற்றவர்கள் 
மதிப்பீடு செய்யலாம்
முடிவில் 
உதவி மட்டும்
நியாயத் தீர்ப்பு நாள் 
தாரசு முள்ளின் 
நடுவில் இருக்கும்

ஆய்த எழுத்துக்கள் மட்டும் 

.....................................................
ஒரு

பரிசுத்தமான 

பின்னிரவில் 
உயிர் மெய் 
எழுத்துக்கள் 
காணாமல்ப் போனது.... 

அதைக் 
களவெடுத்த 
கவிதாயினிகள் 
விதவையாகிக் 
கவிதையாக்க
கவிஞ்சர்கள்
மொழியின் வீரியத்தை
நலமடித்தார்கள் ..

பலர் 
சிறுகதையாக்கி 
சிறுமைப்படுத்த
புனைகதை  எழுதிய சிலர்
உயிரையும்
மெய்யையும்
பிரித்தே வைத்து
புதிர் ஆக்கினார்கள்.. 

மொத்தமாகக் 
கொள்ளையடித்த 
ஒருவர் 
நாவல் எழுத
கடைசி வரிகளில் 
காட்டிக் கொடுத்து சிலர் 
கட்டுரை எழுதினார்கள்...

சுய நிர்ணய உரிமை 
இழந்த மிஞ்சிய எழுத்துக்கள் 
அதை எதிர்த்து 
இலக்கணம் 
தவறாமல் ஊர்வலம் போக..

அதிகம் அறியப்படாத 
ஆய்த எழுத்துக்கள் மட்டும் 
ஆக்ரோஷமாக 
முழங்கி
வன்முறையால்  
தங்கள் தலை எழுத்தை 
மாற்றப் போவதாக 
சபதம் எடுத்துள்ளன.

மறந்த இறுதி நிமிடத்தில்...
..................................................
காதல் 
எந்தத் தந்திரத்திலும்  
விட்டுக்கொடுப்பதில்லை
விட்டு விடுதலையாகிச் 
சுதந்திரத்தில் 
பறப்பது.....
பறந்து 
இரந்து கெஞ்சிப்  
பிச்சை எடுப்பதில்லை
கொடுத்த கவுரவத்தை
இழக்காது திருப்பி
இதயத்தைத்  திறந்து  
எடுப்பது...

எடுத்த 
புரிந்துணர்வை
அபத்தங்களில் 
வளர்ப்பதில்லை
புரிந்தே கொடுத்த 
பந்தங்களின் 
உணர்வாக
இருப்பது....

இருந்த 
வரை முழுவதும்
இயல்பாகவிருந்து
தவறியும் நினைக்க 
 மறப்பதையே
ஜோசிக்க 
மறப்பது..

மறந்த
இறுதி நிமிடத்தில்
மரண உறுதியாக 
வரும் போது 
நினைத்த
ஒரேயொரு  முகம்
உன்னுடையதாக
இருக்குமாயின் 
இறக்க மறுத்திருக்கலாம் 
உனக்காவும் 
எனக்காகவும் 
அந்தக் காதல்.


.....................................................
மீட்டிய 

சட்ஷமம் 

முதல் தருணம்  
சுரம் கொடுத்த  
நாதங்களுக்கும் 
விரல்களுக்கும்
நீ  சரணம் ..

பின் 
எழுந்த 
பஞ்சமங்கள் 
பட்டாம்பூச்சியாகி
இதயமெல்லாம் 
காரணமேயில்லாமல்
நீ  பல்லவி  

சங்கீதம் 
தளிர்விடுமோவென   
நடுவில்
பன்னீரைத் தூவி
பதங்கள் 
பாதயாத்திரை போக
நீ சிம்மேந்திரமத்யமம்

இன்னொருமுறை
கிடைக்காவிட்டாலும் 
பார்வைகள் 
இடையே
தவறி விழுந்த
கற்பனை ஸ்வரங்கள்
பேசிய
உன்  உருத்திரவீணையில்  
மட்டும் ்
நான் இப்பவும்    
அனுபல்லவி.  


ஏமாந்து போகிறேன்...

...........................................................

அளவோடு அமைதி
ஓட்டிக்கொண்டிருக்கும்
நிலத்தடி மின்சாரஊர்ந்தில் 
அலட்சியமாக
ஏறுபவர்களை பார்த்து 
ஆர்வமின்றி
இறங்குபவர்கள்
மனங்களில்
தேக்கம் இல்லாமல் 
கடக்கிறார்கள்

நீட்டி
நிமிர்ந்திருக்க 
போட்டி
போட்டுக்கொண்டு
இடம் பிடிக்க
தேவையே இல்லாத 
நிலை தான்
இடைவெளி  உள்ள
ஒரு சித்திரம் 

பனிச் சறுக்குப்  
பயணிகள் 
அதிகம் 
கதைத்துகொண்டு 
வந்ததில்  விழுந்தெழும்பிய 
தாக்கங்கள் உள்ள 
அனுபவங்களின்  
வார்த்தைகளே அதிகம் 
சறுக்கி சறுக்கி 
வழுக்கி விழுகிறது 

முன்னிருக்கையில் 
அருகருகேயிருந்தும்  
மன அளவில்
வெகுதொலைவு
இடைவெளி உள்ள
அவனும் அவளும்    
தரையில் விழுகிற கால்கள் 
ஒன்றையொன்று
தற்செயலாகத்
தொட்டுக்கொள்ள
எச்சரிக்கையாகி
சட்டென்று
 விலகிக்கொள்கிறார்கள் 

அதிகம் 
யாருமற்ற 
மெற்றோவை 
புதிய எண்ணப்போக்கில் 
இன்று மட்டும் 
ஆக்கிரமித்து   
உறைபனி  சிதறும்  
ஜன்னல்களில் 
என் முகத்தை  
முதல்ப் பக்க 
செய்தி ஆக்கிப் பார்த்து
ஏமாந்து போகிறேன்

ஆனாலும் 
பழகிய  எண்ணப் போக்கில்  
உருவாகும்
எதுவும்
ஏற்கனவே இருந்த
அனுபவத்தின்  
பிரதிபலிப்பாகத் தெறித்து 
அடங்கும் 
இதன் தொடர்ச்சியை
யாரும்
முறிக்கவே  முடியாது.


கடந்து கொண்டே போய் விடுகின்றன..

...................................................................................
அநேகமாகப் 
பெறுமதியான நாட்களை 
யாரும் 
செலவழிக்கத்
தேவையில்லை 
சொல்லாமல்க் 
கொல்லாமல் 
அவைகளாவே 
கடந்து கொண்டே 
போய் விடுகின்றன..

வெப்பக்
காற்றுக்  கசியும்
சாம்பல் வண்ணம்
தீட்டப்பட்ட
புற்களோடு கலந்த
மண்வாச நகரத்தை 
பார்த்துப் பார்த்துக்
கண்களுக்கு
அலுத்துவிட்டது .... 

கதவைத் திறந்தவுடன்
தடவி உறைக்கும்  
குளிரில் நடக்கும்
சக்தியைக்
கால்களுக்குள்
இழுத்துப்போட்டு ஏற்றுவது
இனியும் 
அவ்வளவு
சுலபமாக இல்லை...

நிரந்தரமில்லா வேலை
தப்பி வாழும் 
ஆர்வத்தைக்
குறைத்து விடுகின்ற
கடை நிலைத்
தருணங்கள்  
முட்டிமோதிக் கொண்டு
பயப்படுத்துகிறது...

சிதறியிருக்கும்
உடன் பிறப்புக்களின் 
நினைவுகள்  
நனைத்து  விட்டுப்  போன 
பழைய வீட்டின்
நிரம்பி வழியும்
கடந்த காலத்தையும் 
சேர்த்துத்
தூக்கிக் கொண்டு..

கால்களில்
நடப்பதற்கான
தெம்பும்
கண்களில்
காண்பதற்கான
கனவும்
நிரம்பிய வரை 
வருகின்ற 
வருடத்தின்
வார்த்தைகள் தரும் 
உத்தரவாதத்தில்
தங்கியிருக்கலாம்.



Friday, 28 October 2016

இரவின் மடியில் இதயம் வரை....

காலம் மிக மிக வேகமாக முன்னோக்கிப் பாய்ந்து போகுது.  கூடவே அகாலமாக துன்பங்களும் மூஞ்சூறு  விளக்குமாத்தை தூக்க முடியாமல் காவிக்கொண்டு போனமாதிரி சேர்ந்துகொள்கிறது. சேர்ந்துகொள்கிறதா ? அல்லது  சேர்ந்து கொல்கிறதா ? என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக பதில்களில் சிக்கிக்கொண்டு திணறிக்கொண்டிருக்கு . இதுக்கு  இன்றைய உலக மயமாக்கல் முகத் திரையில்  முன்னேறிய நாடுகள் கொடுக்கும் விலை கனதியாகத்தான் இருக்கு .

                                சென்ற தலைமுறையின் தேவைகள் மிகக் குறைவு. அல்லது அப்படியான ஒரு திருப்தியான கட்டமைப்பை உருவாக்கி மிகக்குறைந்த வாழ்க்கைத்தரதில் மிகப்பெரிய சந்தோசங்களை அவர்களால் தன்னிறைவாக்க முடிந்திருக்கு. அதுதான் அவர்களின் வெற்றி .அதன் சில படிப்பினைகளையாவது மீள்விக்கப்பட்ட ஒரு மனநிலையில் இருந்து நின்றுகொண்டு  நிதானமாக  ஜோசிக்கவே நேரமில்லாமல் எகிறும் இன்றைய காலத்தில் ...

                                                    இரண்டு வருடங்கள் முன்   வசந்தகாலம் விடைபெறும் கடைசி மாதத்தில், பேர்ச் மரங்களும் வில்லோ மரங்களும் அவைகளின் கடைசி இலைகளைக் கழட்டி மஞ்சளாகிய இலையுதிர்கால வாரம், ஒஸ்லோவில் " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் இலற்றோனிக் கண்காட்சியும்  கொல்லைக் காட்டு நரி பல்லைக் காட்டினது  போல விற்பனையும், தலைநகரின் நடுவில் உள்ள ஒரு பெரிய மகாநாட்டு மண்டபத்தை வளைச்சுப் பிடிச்சு நடத்தினார்கள்.

                         ஜப்பான்,தென் கொரியா, தாய்வான் ,சைனா இல இருந்து பல்தேசிய இலற்றோனிக் உற்பத்தி நிறுவனங்கள் அவர்களின் சந்தைப்படுத்தல் முகவர்களை அனுப்பி வைச்சு, அந்த நிறுவனங்களின் அதி நவீன இலற்றோனிக் உற்பத்திகளின்  கண்காட்சி என்ற பெயரில், முடிந்தளவு  அவர்களின் வேறு சில தயாரிப்புகளையும் அதைப் பார்க்க வந்தவர்களின் தலையில் " நடக்கமாட்டாத லவாடிக்கு நாலு பக்கமும் சவாரி " பழமொழி போல பாசல் கட்டி ஏத்தி அனுப்பிக் கொண்டு இருந்த ஒரு இடத்துக்குப்  போனேன்  

                           கொஞ்சம் டெக்னிகலா  பார்வையாளரக்  கவர   " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற தலைப்பில் அந்த விற்பனையும் கண்காட்சியும் நடந்தது. மொடேர்ன்  சயன்ஸ், அஸ்ரோ பிசிக்ஸ்  இவைகளில் மிகவும்  ஆர்வம்  இருப்பதால்  அந்தத்   தலைப்பின்  ஈர்ப்பு விசையில் கொஞ்சம் கவரப்பட்டு உள்ளுக்க வலது காலை எடுத்து வைச்சுப் போய்  சுற்றிப் பார்த்தேன். பார்த்த போது  உண்மையில்  அந்தக்  கண்காட்சி இன்றைய நவநாகரிக  நுகர்வோர் கலாச்சரத்தின் பொழிப்புரை போல இருந்தது .

                                                அந்த மண்டபத்துக்கு வெளியேயும், உள்ளேயும் அடிச்சுப் பிச்சு இளம் பெண்கள்தான் குறுக்க மறுக்க " மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது " குறுந்தொகை போல நிறைந்து இருந்தார்கள். மண்டப வாயிலில் இன்னும் கொஞ்சம் இளம் பெண்கள் ஒரு " கட்லோக் " என்ற கடைகளின் விபரம் அவை விற்கும் பொருட்கள் பற்றி ஒரு சின்னக் குறிப்பு உள்ள துண்டுப்பிரசுரம் தந்தார்கள். 

                                  அந்த இடமே ஏறக்குறைய " வண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் " அகநானூறு கால இளமையா இருக்க, அதையும் வேண்டிக் கொண்டு " தந்தன தந்தன தாளம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் " எண்டு பாடிக்கொண்டு உள்ளுக்கு சும்மா சுற்றினேன். அதிலும் சும்மா  கிடக்கிற  வாய்க்கு  அவல் போட யாரவது ஒரு மெல் இடையாள் அம்பிடுவாளா  என்றுதான்  சுற்றினேன் 

                                           எல்லா சின்ன சின்ன கடைகளிலும் நிறைய அதி நவீன , " பிளாஸ்மா " , " மட்ரிக்ஸ் ", " ஹை டேபிநிசன் ", " லேமொட்த் "தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சாதனங்கள் உலக அழகு ராணிகள் போல " என்னைப் பார் என்னைப் பார் " எண்டு ப்ளஸ் ஏற்ற  புரோட்டான்களும், மைன்ஸ் ஏற்ற இலத்திரன்களும் ஓடிப்பிடிச்சு விளையாட அவைகளுக்கு நடுவில்  நடுநிலை நியுற்றோன்கள் போல  ஒரு ஓரமாக ஒதுங்கி நிண்ட போது  அவைகளின் பாவனை ஏன் இப்ப எங்களுக்கு தேவை எண்டு ஜோசிக்க வைத்தது...

                              அந்த கண்காட்சி உண்மையில்  பணமும் பத்தாயிருக்க, பெண்ணும் முத்தாயிருக்க, முறையிலேயும் அத்தை மகளாயிருக்க பிரமிப்பா இருந்து, எதிர்கால " ஹை டெக் "  தொழில் நுட்பம் உண்மையில் பயப்பிடுத்தும் போல இருந்து, டெலிவிஷனை ஒரு சீலை போல சுருடிக்கொண்டு போய் விரும்பின சுவரில வைச்சு தப்பிப்போட்டு வேண்டிய சனல் பார்க்கலாம் எண்டு ஒரு செய்முறை விளக்கம் செய்து காட்டினார்கள் அதைப் பார்க்க குதிக்காலில சீனி எறும்பு கடிக்கிற மாதிரி திரிலா இருந்தது.

                                       அந்தப் பொருட்களை உலகத்தின் வேற ஒரு மூலையில் இருந்து கொண்டு எப்படி யாரோ ஒருவர் கண்டு பிடிக்கிறார் என்ற ஆச்சரியதைவிட,  இவளவு அழகான பெண்கள்  ,அவைகளை வாயில தேன் போத்திலை வைச்சு சரிச்சு ஊத்தின மாதிரி தேன் ஒழுகப் பேசி , சிக்கலான டெக்நோலோயில் உருவான சாதனங்களை இலகுவாக விளங்கப்படுத்தி விற்பனை செய்த இளம்பெண்களை  யார் எங்கிருந்து கண்டுபிடித்து இங்கே கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி மிகவும் ஆச்சரியமா இருந்தது.

                             எல்லாக் கடைகளிலும் இருந்த விற்பனைப் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல எண்டு " ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க.... " அபிராமிப் பட்டருக்கே சவால் விடுற மாதிரி இருக்க பேசாமல் இந்த கண்காட்சிக்கு " எதிர்கால இலற்றோனிக் சாத்தியங்கள் " என்ற பெயரை விட " எதிர்கால வாழ்க்கைத் துணைகளின் சாத்தியம் " எண்டு பெயர் வைச்சிருக்கலாம் போல இருந்தது..,,

                               வளர்ச்சியடைந்து கொண்டு வரும் நாடுகளின் உற்பத்திப்பொருள்கள்,  வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் அதிக விலைக்கு விற்பனை ஆகுது.  அதுக்கு காரணம் மேலை நாடுகளில் உள்ளவர்களிடம் திருப்பி இல்லைப் போல இருக்கு, அதிகமாக இளம் பிள்ளைகள் தான் விடுத்தது விடுத்தது கேள்வி கேட்டு அதுகளை வேண்டி  " பத்தியத்துக்கு முருங்கைக்காய் வாங்கிவா என்றால், பால் தெளிக்கு அவத்திக்கீரை கொண்டு வந்த மாதிரி " பாவித்துப் போட்டு, அதன் நவீனம் கொடுக்கும்  பெறுமதி குறைய,  ஏற்கனவே வீட்டில் இருக்கும் மற்றபல இலற்றோனிக் குப்பைகளுடன் அதை எறிஞ்சு போட்டு மறுபடி அதி நவீனம் தேடுவார்கள்,

                                இப்படியான கண்காட்சி விற்பனை ஒழுங்கு செய்பவர்கள் அவர்களுக்கு கடன் கொடுக்க கையோடு சில " பேங்க் " குகளையும் ஒழுங்கு செய்து வைச்சு இருப்பார்கள், அந்த விற்பனை நிலத்திலேயே " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்கிறோம் "  எண்டு பெருமையா விளம்பரம் எப்பவும் டெலிவிசனில் செய்யும் ஒரு பேங்க்,                                        
                                  
                                "  ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை, போனா வராது ,வந்தாப் போகாது  ...ஓடியா.. ஓடியா ..கையில காசு வாயில தோசை, கையில காசு வாயில தோசை .."

                                   எண்டு விளம்பரம் செய்து கொண்டு, எவன் வந்து மாட்டுவான் " நோர்வேயின் பொருளாதரத்தை நிமிர்த்திப் பிடிக்க " என்று ஒரு " மினி பேங்க் ஸ்டால் " திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார்கள். வங்கிகள் கொடுக்கும் கடன்தான்  மிகப்பெரிய தந்திரம். ஆரம்பத்தில்  எல்லாமே  நல்லாவே  இருக்கும் . கடைசியில்தான்  அவர்களும் கழுத்துக்குக்  கயிறு போட்டு இழுப்பார்கள்.

                                          கொள்ளை அடிப்பவர்கள் இப்படிதான் எப்பவுமே திட்டம் போட்டு கும்பலாகக் கொள்ளை அடிப்பார்கள் என்று கொமினிசம் சார்ந்த புத்தகங்களில் சின்ன வயசில் படித்து இருந்தாலும் அன்றுதான் நேரடியாப் பார்க்க முடிந்தது. அதிலும் ஆற்றம்  கரையில்  கொள்ளிக்கட்டை  அடுப்பங்கரையில் கொழுக்கட்டை  போல  இப்பிடியும்  துணிந்துவெளிப்படையாகவே கொள்ளை அடிப்பார்கள்  என்றும்  அன்றுதான் அறியமுடிந்தது 

                          ஒரு கட்டத்தில் இப்படி பேங்க் கடனுக்கு  அழுது வடிந்து வேண்டிய இலற்றோனிக் பொருட்கள்  கழுதை வளையற்காரன் கிட்டபோயும் கெட்டது, வண்ணான் கிட்டபோயும் கெட்டது  போல நீர்த்துப்போனாலும் பேங்க் இல் எடுத்த கடன் முடியும் வரை கட்டத் தான் வேண்டும். அதைதான் பேங்க்காரங்கள் " வந்தாப் போகாது " எண்டு சொல்லி சொல்லியே எல்லாரையும் மயக்கும் வித்தை போல இருந்தது.

                                  நான் அந்த இடம் முழுவது சுற்றி,பல விஞ்ஞானம்  விந்தைகளில் ஆர்வம் உள்ளவன் போல பல அதி நவீன பொருட்களையும்,  அழகுப் பெண்களையும் மேஞ்சு போட்டு, அந்த மண்டபத்தின் நடுவில் பேப்பர் கப்பில் கோப்பி விக்கும் கடை போட்டு இருந்தார்கள் அதில இருந்து ஒரு கோப்பியை வேண்டி உறுஞ்சிக்கொண்டு, சின்னப் பிள்ளைகள் உலகம் மறந்து கேம்ஸ் விளையாடும் விளையாட்டு சாதனங்களுடன்  தோற்று தோற்று விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். 

                                 வயதான ஒரு பெண்மணி " ரிமொர்ட் கொன்றோல் " போல இருக்கும் பழைய நோக்கியா பழைய போனை வைச்சு ஆருக்கோ நம்பர் தேடி தேடி அதில குத்திக்கொண்டு எனக்கு முன்னால வந்து இருந்தா, 

                         " ஹாய் "

                            எண்டு சொல்லி  என்னைப் பார்த்து சிரிச்சுப்போட்டு,

                         " என்னோட பேரப்பிள்ளைகள் வந்து நிக்குதுகள் அதுகளோட வந்தேன், "

                            " அப்படியா ,அது  மிகவும் நல்லதே   இன்று  குளிரும்  அதிகம்  இல்லையே "

                               " ஓம்..  என்னோட பென்சன் காசில கொஞ்சம் கொஞ்சமா சேமித்த காசு கொண்டு வந்து அதுகளுக்கு சில பொருட்கள் வேண்டிக் கொடுக்கத்தான் நானும் வந்தன், "

                                 " அட,இது  இன்னும்  நல்லா  இருக்கே  கேட்க,,என்ன  வேண்டிக் கொடுக்கப்போரிங்க "

                                "  அதுதான்  குழப்பமா  இருக்கு..இங்கே  எவளவோ  சாமான்கள்  அடுக்கி  வைச்சு  இருகுறாங்கள்,,,இதில  இருக்கும்  பல  சாமான்கள்  நான்  என்  வாழ்கையில்  கண்டதேயில்லை "

                          "    உங்க  தலைமுறை  வேற,,,இப்ப  உள்ள  தலைமுறை  வேறைதானே "

                             "  ஓம்,   இப்ப என்னடா எண்டால் என்னோட சேமிப்பு காசு  முழுவதுக்கும் ஒரு வழி பண்ணிப்போட்டு தான் அதுகள்  வெளிய வரும்கள் போல இருக்கு "

                      எண்டு விபரமா சிரிச்சு சிரிச்சு சொல்லி முடிய, 

                   " நீ ஒண்டும் வேண்டவில்லையா ,"

                      "    இல்லை,,,"

                     " ஏன்   உனக்கும்  என்னைப்போல  இதுகள்  பரீட்ச்சயம்  இல்லையா  "

                         "   அப்படி  இல்லை.. நான்  இரண்டுங்கெட்டான்   இடைப்பட்ட தலைமுறை ,ஆனால்  எல்லாம்  விளங்காது "

                     "  பிறகென்னதுக்குக்  கப்பல்  கவுண்ட  மாதிரி   ஜோசித்துக்கொண்டிருக்கிறாய் "

                               "   இங்கே போட்டுள்ள  விலைகள்  எனக்குக் கட்டுபடியாகாது "

                           " அதுக்கென்ன  உள்ளே  நாலு  பாங்  கடன்  கொடுக்க ஏற்பாடு  செய்து  வைச்சுக்கொண்டு  நிக்குரான்களே,,கடனா வேண்டி  கொஞ்சம் கொஞ்சமா கட்டு  " 

                       "  அந்த  பாங்கில்  கடன்  எடுத்தா  போட்டிருக்கிற  ஜட்டியையும்  உருவிப்போட்டுதான்  விடுவாங்கள் கடைசியில்  " 

                  " ஹஹஹஹா,, ஒ,,அதுவா  பிரசினை ,  நிறைய மொபைல் டெலிபோன் எல்லாம் போட்டு இருகுரான்களே, "

                        " ஓம்,,ஓம்,, அதெல்லாம்  மொடேர்ன் டேக்னோலோயி ,,இலற்றோனிக் போய்  இப்ப  பிளாஸ்மா,குவாண்டம் ,,ஹைடேபிநிசன்  எல்லாம்  வந்திட்டுதே "

                            " என்னப்பா  சொல்லுறாய்,,,ஒண்டுமே  விளங்கவில்லை,,,என்னவோ உள்ளதைச்   சொல்லுறன்  எல்லாம் வந்திட்டுது  ஆனால்  இருந்த நின்மதி  போயிட்டுது "

                          "   ஹஹஹஹஹஹா...அதெண்டா  உண்மைதான் "

                            "  அதைத்தான்  என்னோட  மனுசனும்  சொல்லுவார்,,அவர் நோர்வே நேர்வியில் பலவருடம்  இருந்தவர், இப்பவும் சுங்கானிலதான்  புகையிலை  அடைஞ்சு  சுருட்டுப்பிடிக்கும் ஆள்  "

                          "  நீங்க கையில  வைச்சிருக்கிற  இந்த  மாசிக்கருவாடு  போல  இருக்கும்  பழைய  மொபைல்  போனை  எறிஞ்சு போட்டு   நவீன  மொபைல்  போன்  வேண்டவில்லையா "

                        "   ஓம்,,ஓம்..நானும்  கொஞ்சம்  விபரம்  கேட்டேன்  அப்பிள்  ஐபோன்  எண்டு  ஒண்டு  ஒரு  பெட்டை  காட்டினாள்  வேண்டச் சொல்லி "

                           "   ஓம்,அது  அன்றோயிட்  போன்  எல்லோ "

                              "  அதென்ன  அ ந்தி ரோ யிட் , இவளவு காலமும்  அப்பிள்  பழம் தான்  இருக்கு  எண்டு  நினைச்சேன்  இங்க  பார்க்க  அப்பிள்  பெயரில  ஒரு சூப்பர் மார்கெட்  நிறப்பிர  அளவில  சாமான்கள்  கிடக்கே "

                                 "  ஹ்ம்ம்,,தொடுதிரை ,,ஐபோன்  ஒன்று  சும்மா  எப்படி  இயங்குது  என்று  பார்த்திருக்கலாமே   "

                       "   ஓம் ,,பார்த்தேன் , அதில விரலை வைக்கவே  கொன்றோல்  இல்லாமல்  இழுத்துக் கொண்டு தண்ணியில அன்னம்போல வழிக்கிக்கொண்டு போகுதே "

                          "  அட,,அதுதான்   தொடுதிரை,,டச்ஸ்கிரீன்   எண்டுறது,, " 

                             " ஒரு சேர்விஸ் பெண் பிள்ளை எனக்கே செய்து காட்டி வேண்டச் சொன்னாள் " , 

                               என்று போட்டு மறுபடியும் கையில வைச்சு இருந்த பழைய நோக்கியாவில் கல்லு உரலில நெல்லு நிரப்பி  உலக்கையால குத்துற மாதிரி குத்திப்போட்டு, 

                   " என்ர  மனுசன் போன் எடுக்குதில்லை, அந்தாளுக்கு காதும் ஒழுங்கா கேட்காது , "

                    எண்டு போட்டு மறுபடியும்

                " நீ ஒண்டுமே வேண்டவில்லை  என்பது  கவலையா  இருக்கு  ,ஏன் உன்னிடம் காசு இல்லையா,அல்லது நீ அகதியா வந்து அகதி முகாமில் இருக்குறியா  "   எண்டு   சணப்பன் வீட்டுக்கோழி தானே விலங்கு பூட்டிக்கொண்டது போலக்  கேட்டா,, 

                            நான் "  ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, இதுக்குள்ள ஒரு மண்ணும் வேண்ட விரும்பவில்லை "  

                                 "  ஏன்பா  வாழ்கையில்  அவளவு  வெறுப்புப் போல சொல்லுறாய்,, வாழ்கையில்  எவளவோ  நல்ல  விசியங்கள்  இருக்கு ,,ஒருநாள்  ஒரு பொழுது  என்று  வாழப்பார்   " 

                                   "ஹ்ம்ம்,,,அதுவும்  உண்மைதான்  ஆனால்  சிலநேரம்  பழஞ்சீலை புறுபுறுத்துக்   கிழிஞ்ச  மாதிரி   என்ன  சீவியமடா  இது  என்பதுபோல  வெறுப்பு வருகுது   " 

                             " என்ன  சீவியமடா  இது ,,,இப்படி  சொல்லுறாய்  இதுக்கு என்ன  அர்த்தம்  " 

                                 "   அதுதானே  உங்க  ஆட்கள்  சிலநேரம்  சொல்லுவாங்களே  hva i helvete med dette livet   எண்டு  அதை  என்  தாய்மொழியான  தமிழ்  மொழியில்  சொல்லுவேன்   "

                                 எண்டு நல்ல  கவுரவமான நோர்க்ஸ் உச்சரிப்பில் சொல்லி சிரிச்சேன்,மனுசி நான் வெறியில இருக்றேன் எண்டு நினைச்சோ என்னவோ கொஞ்சம் என்னை சந்தேகமாப் அக்கம் பக்கம் பார்த்திட்டு 

                       " போட்டு வாறன்,நோர்வே சரியான வாழ்க்கைத் தரம் உயர்வான ,அதே நேரம் வாழ்க்கைச் செலவு அதிகமான நாடு, கவனம்பா காசு கண்டபாட்டுக்கு செலவழிப்பதும் நல்லதில்லை, ஹா டே ப்ரோ , ஹா டே குட்  , ஹா என் பின் டாக் " 

                            எண்டு சொல்லிப்போட்டு எழும்பிப் போயிட்டா . 

                                  நோர்வே போன்ற நாடுகளில் வீடுகளில், அன்பாக ஆதரவாக நாலு வார்த்தை அக்கறையாகப் பேச யாரும் இல்லாமல்,  நிறைய மனிதர்கள் பேசுவதுக்கு உயிர் உள்ள மனிதர்கள் இல்லாமல் தனியாக இருக்குறார்கள்,ஆனால் அவர்கள் வீடு முழுவதும் இலற்றோனிக் தொடர்பு சாதனங்கள் நிறைந்து கிடப்பதைக் கண்டு இருக்குறேன். அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாய், பூனையோடு கதைத்துக்கொண்டு வாழுங்கள்.

                                     ஏன் அவங்களைச் சொல்லுவான் " சேணியனுக்கு ஏன் குரங்கு? " என்று அந்தக் காலத்தில் பழமொழி  எழுதி வைச்ச மாதிரி என்னுடைய வீட்டிலேயே நிறைய இலற்றோனிக் டீவி, டிவிடி , சிடி பிளையர், மைகிரோவேவ் அவன், அறுவத்தெட்டு டெலிபோன்,மோடெம், சடளைக்ஹ்ட் பொக்ஸ், அதிவேக ஜிகா மெகா வேக இன்டர்நெட் இணைப்பு .லாப் டாப் கணணி,டிஜிட்டல் கமரா , இசைக்கருவி சம்பந்தமான அம்பிளிபயர் சாதனங்கள் எல்லாம் கச கச எண்டு வீடு முழுக்க லொட்டு லோடுக்கு இலத்திரன் ஓடும் சாதனங்கள் அம்முக்கி கொண்டு குவிந்து கிடக்குது, 

                                  அதை எல்லாம்  வைச்சு உலகத்தை வேகமாக இயக்கலாம், மிக மிக வேகமாக இருப்பின் அர்த்தத்தைத் தொலைக்கலாம் , தொலைத்துப்போட்டு இன்னும் வேகமாக நாலுநாள் தாக்குப்பிடிக்கும் நண்பர்களைத்  தேடலாம் , அப்படமாகச் சொன்னால்    வாழ்க்கையை அடுத்தவனுக்கு கலர் படம் காட்ட   " ஹை டெக் லெவலில் மெயின்டேயின் " பண்ணலாம்.... ஆண்டவன் புண்ணியத்தில் அவளவுதான்செய்யலாம்! 

                                           
ஆனாலும் உண்மையில்  சின்ன வயசில்   எங்க வீட்டு ஹோலில் இருந்த மரத்தால செய்த பெட்டி போன்ற  பழைய ட்ரான்ஸ்சிஸ்டர் ரேடியோ  இரவின் மடியில் இதயம் வரை தந்த இன்பம் இதுகளில் இல்லை. அதில்  சில்லையூர் செல்வராசனின்  " தணியாத தாகத்தை "  எங்கள்  எல்லோரோடும்  சேர்ந்தே தொடர்ந்த  அம்மாவே  வடஅமரிக்கக்  கண்டத்துக்கு  ஓடிப் போட்டா, 

                                                  அதில் " இசையும் கதையும் " எழுதிய காவேரி அக்கா ஜெர்மனியில் டுசில்டோபில்  வாழ்க்கையையே  கந்தலான கதை ஆக்கி சொதப்பிப்போட்டு  நிக்கிறா ,

                                   இதை  எல்லாம்  ஜோசிக்க வந்த விசருக்கு அரைவாசி குடிச்சு முடிஞ்ச   கோப்பிக் கோப்பையை ஊத்திப்போட்டு  உள்ளங்கையில் வைச்சு நசிச்சு போட்டு குப்பைக் கூடையில் எறிஞ்சு போட்டு வெளிய வந்தேன். வேற  எப்படி  இவளவு  மண்டைக் குழப்பத்தில் இயல்பாக  இருக்க முடியும் ,,சொல்லுங்க  பார்ப்பம், 

                                        வந்து வெளியே என்ன சோடினை போட்டு இருக்கிறாங்கள் எண்டு பார்த்தேன்,மண்டபத்தின் முக்கிய வாசலுக்கு மேலே நியோன் குழாய் விளக்கில் வளைச்சு ,  " அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கின கதை  போல வெளியால விசியங்கள் வேற மாதிரி இருந்தது,  

                         " நாளைய உலகம் இன்றைக்கு ஒஸ்லோவில்  "

                               என்று அந்த லைட் சுழண்டு சுழண்டு ஓட,  

                         " இந்த உன்னத நிகழ்வில் இணைவதில் ஒஸ்லோ நகரம் பெருமைப்படுகிறது "

                                          என்று ஒஸ்லோ நகரத்தின் நகரபிதா மேன்மை தங்கிய பேபியான் ஸ்டெங் வாழ்த்து சொல்லும்  பெரிய விவரண வர்ணப்  படம்  இணைத்த இன்னுமொரு அழகான விளம்பரப் பலகை அதுக்குக் கீழ வைச்சு இருக்க,  அதுக்குக் கீழே இரண்டு வசிக்க வீடு இல்லாத தெருவோரம் வசிக்கும் வெள்ளை இன நோர்வேயிய ஹோம்லெஸ் மனிதர்களில் ஒருவன் பேப்பர் கோப்பி கோப்பையை நீட்டி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க ,மற்றவன் கம்பி அறுந்து போன கிடாரில்

                                 " jeg sto i skyggene i regn og vind
                          
                                  jeg var en fremmed til du åpnet deg og lot meg inn

                                 jeg sto alene helt til du steg frem " 

                                    " நான் ஒரு வீடு இல்லாத மழையிலும்,குளிரிலும் வாழும் மனிதன்,தயவு செய்து கதவை திறந்து உள்ளே அனுமதி , " என்ற ஜோஹனாஸ் பிஜெல் என்ற நோர்வே நாட்டவர் பாடிய  நோர்வே மொழிப் பாடலை இரவின் மடியில் இதயம் வரை உலகம் இறந்து கொண்டு இருப்பது போன்ற குரலில்ப்  பாடிக்கொண்டு இருந்தான்....

.