Sunday, 18 October 2015

M.G.R

யாழ்பாணத்தில எங்களின் ஊரில M.G.R என்ற " மக்கள் திலகம் "என்ற ,இலங்கை  கண்டியில் பிறந்த, மருதர் கோபாலன் ராமச்சந்திரனுக்கு அதி தீவிர ரசிகர்களா இருந்தவர்கள், தொழிளால வர்க்க ,உடலால் கடுமையாக உழைப்பவர்கள். அவர்கள்ர்தான் M .N ,நம்பியாருக்கும் அதிதீவிர எதிரியாகவும் இருந்தார்கள் ! 

                                         தியடரில் M.G.R படம் வந்தால் அதை முதல் ஷோவில பார்க்க தியட்டர் வாசலில் முதல் நாளே போய் படுத்து இருந்து அடுத்தநாள் முதல் ஷோவில பார்த்து ஜென்மசாபல்யம் அடைவார்கள்! அவர்கள் வசிக்கும் குறுச்சியில் அவர்களின் இதய தெய்வத்துக்கு சிலை வைத்து அதுக்கு கீழே " பெண் மனச் செம்மல் " எண்டு அவரைப் பற்றி நன்றாக அறிந்ததாலோ , அல்லது தமிழ் மொழி தெரியாததாலோ பிழையாக தமிழில் எழுதி இருந்தார்கள்! 

                                    தமிழ் நாட்டில் ஒரிஜினல் M.G.R இறந்தபோது ,அவர் ஈழ விடுதலைக்கு ஆதரவா இருந்ததால்,யாழ்பாணத்தில அனுதாப அலை கொஞ்சம் "ஓவராக" அடித்தது !  இயக்க ஆதரவாளர்கள்  வாழை ,தோரணம் கட்ட,எங்கள் ஊர் M.G.R அதிதீவிர ரசிகர்கள் , பெரிய தென்னை மரத்தையே புடுங்கிக்கொண்டு வந்து சந்தியில் நட்டுப்போட்டு,சந்தியில் இருந்த பாரதியார் சிலையை தூக்கிப் போட்டு அதில அவர்களின் "இதயக் கனி " சிலையை வைக்கப் போவதாகப் பயமுறுத்தநிலைமை கொஞ்சம் மக்கள் திலகம் படங்களில் வரும்  வாள் சண்டை, குஸ்தி , கைகலப்பு , சீலடி சிலம்படி  போல நடக்கப் போகுதுபோல இருந்தது

                                   சவுகார் ஜானகி  வந்து காலில் விழுந்து,  கிளிசரின் வழிய அழுது ,குளறிக்  சண்டையை நிப்பாட்டிய மாதிரி  இல்லாமல் , அந்த நேரம் எங்கள் உரில இருந்த கவிஞ்சர் கந்தப்பு வெகுண்டு எழும்பி  "சினிமா நடிகனுக்கு சிலை வைக்கும் ,சிற்றுனர்வுள்ள சிற் எறும்புகளை......" எண்டு கவிதை எழுதி,"மகா கவி பாரதி சிலையில் கை வைத்தால் ,சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தடுப்பேன் " எண்டு பீதியக்கிளப்ப ,அந்தக் களேபரம் அதோட அமுங்கிவிட்டது!

                                உலகம் முழுவதும் தங்களின் அபிமான நடிகர் ,பாடகர் போல மானரிசம் பண்ணி வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்குறார்கள் !  அவர்களின் நடை உடை பாவனை மற்றவர்களுக்கு கோமாளித்தனம் போல இருக்கும் .ஆனால் அவர்களுக்கு ஒருவித சந்தோசம் கிடைக்கும் , அல்லது அவர்களின் நிறைவேறாத கனவுகளுக்கு ஒரு வடிகால் அப்படிக் கிடைக்கும் என்கிறார்கள் சைகொலோயிட்டுகள்!

                                           எங்கள் ஊரில M.G.R எண்டு ஒருவர் வெள்ளையா, உசரமா ,வெள்ளடியான் சேவல் போல கையை விசிக்கி விசிக்கி நடப்பவர் இருந்தார். அவர் ஜப்னா முனிசிபால்டியில் குப்பை டக்டர் ஓடும் டிரைவர் ஆக வேலை செய்தாலும் , வேலை முடிய  M.G.R போலவே,தோளில சால்வைத் துண்டு, மழை பெய்யும் நேரம்களிலும் கறுப்புகண்ணாடி, பலூன் விக்றவன் போல ஒரு வெள்ளை தொப்பி போடுக்கொண்டு, அவரோட குரலையே மாற்றி கொடுப்புக்குள்ள M.G.R போலவே கொன்னையாகக் கதைப்பார், எப்ப யாரைப் பார்த்தாலும் "v " போல விரலைக் காட்டி "நாளை நமதே ,எந்த நாளும் நமதே " எண்டு சொல்லுவார்! அவரை பார்த்து சிரிபவர்களை " அங்கே சிரிபவர்கள் சிரிக்கட்டும் ,அது ஆணவச்சிரிப்பு எண்டு " கம்பிரமா சொல்லுவார்!

                                   ஒரிஜினல் M.G.R போலவே அவர் இருந்ததாலோ என்னவோ அவருக்கும் வீட்டில இரண்டு பெண்சாதி! அதுவும் அவர்கள் அக்காவையும் ,தங்கசியும் எண்டு வேற ஊருக்குள்ள பேசுவார்கள்! அவருக்கு M.G.ர  இக்கு  ஜெ..... ஜெயராம்  இருந்ததுபோல , ஒரு செட்டப்  இருந்தது எண்டு பெடிசம் பாலசிங்கம் என்ட எங்கள் ஊர் சிவாயியின் தீவிர ரசிகர் எப்படியோ கண்டுபிடித்து சொல்லிருகிறார் ! மற்றப்படி M.G.R பெண்களை நிமிர்ந்தும் பார்க்கமாட்டார், தாய்க்குலத்தின் மீது அவளவு மரியாதை அவருக்கு!

                                  அந்தக் காலத்தில்  கிராம வாசிகசாலைதான்  பல முற்போக்கு நிகழ்வுகளை ஒழுங்கு செய்வார்கள் , விடுதலை  இயக்கங்களின் தொடகப்பப்புள்ளியே  ஒரு காலத்தில அதுவாதான் இருந்தது  ! அதில சேர்ந்த நட்புவட்டத்தில் இருந்துதான் பலர் எல்லா இய்கதுக்கும் போனார்கள் , பலர் நாசமாணார்கள் ! பலர் வீராதி வீரன் ஆனார்கள் ! M.G.R எங்கள் ஊர் வாசிகசாலையில் TV ,டெக்,படக் கொப்பி வாடகைக்கு எடுத்து ,அதை ஒரு விழாவாக்கி,அதுக்கு அவரே தலைமைதாங்கி , M.G.R படம் போடுவார் .

                              படம் தொடங்கமுதல் அவர் M.G.R படம் ஏன் எல்லாரும் பார்க்கவேண்டும் எண்டு, "இறுதியாக ஒண்டு மட்டும் சொல்ல விரும்புகிறேன்" எண்டு பத்துத் தரம்,சொன்ன ஒரே விசியத்தையே பத்துத் தரம் சொல்லி தலைமை உரையாற்றுவார் . "எங்க வீடுப் பிள்ளை "  படம் போட்ட ஒரு முறை, அவர் இரண்டு மைக் கையில பிடித்து இரண்டிலையும் மாறி மாறிக் குரலை மாற்றி M.G.R போலவே உரை ஆற்றினார் ,ஆச்சரியமாகி ,மேடைக்கு அருகில் போய் அவர் பேசிமுடிந்து மேடையைவிட்டு இறங்கிவர 

                                 " ஏன் இரண்டு மைக் கையில பிடித்து இரண்டிலையும் மாறி மாறிக் குரலை மாற்றி பேசினீர்கள் ?" எண்டு கேட்டேன் ,அதுக்கு அவர் 

                     " எங்க வீடுப் பிள்ளை படத்தில நம்ம தலைவர் " டபுள் அக்டிங் " எல்லா நடிக்குறார் ர்,அதாலதான் இரண்டு மைக் , இரண்டு குரல் " 

                             எண்டு சொல்லி "v " போல விரலைக் காட்டி "நாளை நமதே ,எந்த நாளும் நமதே " எண்டு சொலிப்போட்டு, 

                          " நீ போய் முதலில படத்தைப் பார் , வீட்டில இப்ப ரெண்டுபேரும் சண்டை , நெருப்பு எடுப்பாளுகள் ஒருத்திக்கு ஒருத்தி , இப்ப நான் போய் கெஞ்சி மண்டாடி  விலக்கி விடாட்டி , வீடு ரெண்டாப் பிரிஞ்சிடும்  " 

                               எண்டு போட்டு தோளில போடிருந்த சால்வையால தலைய மூடிக்கொண்டு ,வாசிகசாலை பின்பக்க வாய்கால்லுக்கால விழுந்து எழும்மி அந்த M.G.R போறதை நான் மட்டும்தான் பார்த்தேன்!
.

Friday, 16 October 2015

மனோன்மணி அம்மன் கோவிலில்

தேவதைகள்  எங்கள்  ஊரில்  இருந்தார்களா என்று  இப்ப சொல்ல முடியவில்லை. அந்த வயசில் எல்லா இளம் பெண்களுமே சுந்தரிகள் போலத்தான் இருந்தார்கள். அவர்களின் சின்னச் சிரிப்பே பெரும் காப்பியங்களை எழுதிய நேரத்தில் விடுதலைப் போராட்டம் வா வென்று அழைத்தது . ஒரு  காலம் அதன்  நினைவுகளில் கனகாம்பரப் பூக்களின் வாசத்தையும், அந்த ரம்மிய  மனதிலிருந்து வெளிவர முடியவில்லையே  என்று இரவெல்லாம் நினைக்க வைத்த வயசுக்கோளாறை எப்படிக் கடந்து வந்தோம் என்று அடிக்கடி நினைக்க வைக்கும் பழைய நினைவுகள் 

                                                       யாழ்பானத்தில நல்லூர் கோவிலுக்கு அருகில் பிறந்து ,வளர்ந்ததால் , சங்கீதமும் ஏதோ ஒரு விதத்தில கூடவே சேர்ந்து வளர்ந்தது ,என்னோட அப்பா " சைவசமய ஞாணப்பழம் " அதால தேவார திருமுறைகளை பண்ணிசையில் படிக்கவேண்டும் எண்டு அதைப் படிக்க  ஒரு "சங்கீத பூசனம் "  ஐயாவிடமும் , ஒரு பண்ணிசைத் திலகம்  மாஸ்டர்டமும் ஏற்பாடு செய்திருநதார் ,அதால சில வருடங்கள் படித்த சங்கீதம் கொஞ்சமும் என்னோட கூடவெ சங்கீதம் படித்த பெண்களின் முகம்கள் அதிகமாகவும் நினைவு இருக்கு,

                               நல்லூர் கோவிலுக்கு அருகில் இருந்த நாவலர் மணி மண்டபத்தில் ஒவ்வொரு ஞயிற்றுக் கிழமையும் பண்ணிசை வகுப்பு நடக்கும் ,அதை பண்டிதர் கார்த்திகேசு அவர்கள் நடத்துவார்கள். பண்ணிசை என்றால் தேவார திருமுறைகளை தமிழிசைப்  பண்ணில் பாடுவது . அதில நான் படித்தத பண்ணில்  மாயாமாளவகௌளை, இந்தோளம் , இந்த ரெண்டின் ஆரோகணம் அவரோகணம் இரண்டும் தான் இப்பவும் நினைவு இருக்கு . அதைச் சொல்லித் தந்த பண்டிதர் கார்த்திகேசு வேறு பல பண்கள் சொல்லி தந்தார் ,ஆனால் நினைவில் இல்லை .

                                    மற்றபடி எனக்கு கர்நாடக சங்கீதம் முழுமையா தெரியாது. ஒரு சில ராகமும் அதுவும் , கல்யாணி,ஆரபி ,சிவரஞ்சனி ,சண்முகப் பிரியா, சாருமதி ,நீலாம்பரி போன்ற  அழகான பெண்களின் பெயரில் உள்ள  ராகங்கள் மட்டும் நினைவிருக்கு,அதுகள் அழகான பெண்களின் பெயரில் இருந்தபடியால் மட்டும் இன்னும் நினைவுருக்கு மறக்கவே முடியவில்லை!

                               இவ்வளவுதான் நான் சொல்ல வந்த விஷயமும்
இவ்வளவுதான் அதற்குத் தேவையான வார்த்தைகளும்
இவ்வளவு தான் வாழ்க்கை என்று வாய்விட்டு சொல்ல முடியாத அந்த வயதில் சங்கீதம் மன்மத அம்புகள் தைத்த இடங்கள் எல்லாம் கோபுர சந்தனம் தடவியது . ஆனாலும் அதை முறைப்படி படிக்க சந்தர்ப்பம் இருந்தும் குழப்படித்தனத்தில்  படிக்கவில்லை என்பது ஒரு குறையாகவே இப்பவும் இருக்கு .

                                     நல்லூர் கோவிலை சுற்றி, நல்லை ஆதினத்தில், தெற்கு வீதியில்,கம்பன் கழகத்தில், மனோன்மணி அம்மன்கோவிலில் நிறைய சங்கீதக்கச்சேரி எப்பவுமே நடக்கும்! அண்ணாமலை இசை தமிழ் மன்றம் ஒவ்வொரு வருடமும் இசைவிழா நல்லை ஆதினத்தில நடத்துவார்கள், அதில "சங்கீத பூசனம் " பொன் சுந்தரலிங்கம், "சங்கீத பூசனம் " திலகநாயகம் போல், பாடினால் அரங்கு நிரம்பி வழிந்து வெளியே ரோட்டை வழிமறித்துக்கொண்டு நிண்டு கேட்பார்கள் ,அவளவு பேமஸ் அவர்கள் இருவரும்.

                            நல்லூர் கோவிலின் வடக்கு வீதியில் , நல்லைக் கந்தனின் அலங்கார அட்டகாச,பிரபலங்களில் இருந்து விலத்தி , "  நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால் நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ ...." என்று அமைதி நாடும் சாதாரண மனிதர்களின்,சாமான்ய இசை அறிவின் விளிம்பில் அடக்கமாக ,அமைதியாக ,ஆர்ப்பாடம் போடாமல் இருந்த  மனோன்மணி அம்மன்கோவிலில்தான் அழகான இளம் பெண்கள் ஒவ்வொரு ப்வுர்ணமி தினத்திலும் பாடுவார்கள். வெளியே மணலில் படுத்து கிடந்து கேட்கலாம் !

                       இளம் பெங்கள் பாடும் சங்கீதம் அவர்கள் போலவே இளமையா இருக்கும். பட்டுச்சீலை, மல்லிகைப்பூ மாலை, காதில லோலாக்கு , நெற்றியில் சாந்துப்பொட்டு ,என்று அவர்களே மனோன்மணி அம்மன் சிலைபோல , "நிலவின் ஒளியில் தெரிவது தேவதையா " என்பதுபோல சம்மானம் கட்டி இருந்து ,தேன் வழியப் பாட கோவிலை சுற்றியே சந்தன மல்லிகை வாசம் வரும்!

                                 பெரிய கிழட்டு  "சங்கீத பூசனம் " வித்துவான்கள் காட்டும் "ஆலாபனை வித்தை" எல்லாம் காட்டா மல் இயலப்பாக   அவர்கள் இளமை குரலில் அந்த தெலுங்கு மொழிக் கீர்த்தனைகளை பாடுவது நிறைய " பீலிங்க் " கொடுக்கும் , "எந்தரோ பா மகானுபாவ " தியாகராஜா கீர்த்தனை தொடங்க முளந்தண்டு குளிரும், "நகுமோமு  கனலேனே   நாசாலி  தெளிசே "  கீர்த்தனை ஆரம்பிக்க நாக்கில தண்ணி வத்திப்போகும் , "ஜகதானந்தா தரா " பஞ்ச கீர்த்தனை தொடங்க வயித்துக்குள்ள பட்டம் பூச்சி பறக்கும்,ஆரபி ராகத்தில " சாடிஞ்சனே " தொடங்கி ,அதன் சரணத்தில "சமயாகி ரிக்கி தகு மாடலாகு" எண்டு கொஞ்சம் வேகமான தாளத்தில பாய நாடி ,நரம்பெல்லாம் அதிரும்.

                                              தியாகப்பிரம்மம் தியாகராஜா சுவாமிகளின் " பஞ்ச இரத்தின  கீர்த்தனைகளையே" அதிகம் ஆலாபனை, அலாரிப்பு , தனியாவர்த்தனம் எண்டு வில்லங்கமாப்  போட்டு அதிரவைகாமல், அழகான அந்த இளம் பிள்ளைகள் பஞ்சுபோலப் பாடுவார்கள்! என் நண்பன் கிருபாவையும் இழுத்துக்கொண்டு போய் தான் மணலில் படுத்துக் கிடந்தது அந்த சங்கீதத்தைக் கேட்டு இருக்கிறேன். அவனுக்கு சங்கீதம் தெரியாது ஆனால் நிலவின் ஒளியில் ரம்மியமான இரவை நன்றாகவே ரசிக்கத் தெரியும் . அப்படி ஒரு நண்பன் கிடைப்பது அரிதான ஒரு நிகழ்வு .

                                  எங்களின் உரையாடல்கள் எப்போதும் அதிகாலைக் கனவு போல இருந்தது. 

                         " கேசி அவள் கொஞ்சம் மசியிறால்டா , இன்னும் கொஞ்சம் இறுக்கி சுழட்டினாள்,காய் விழுத்தலாம் , சூட்டி கட்டாயம் மடங்குவாள், கம்பஸில் படிக்கிற  அவளோட அக்கா தான் பிரசினை  மற்றப்படி வெட்டியாடலாம் , கொஞ்சம் பொறு மச்சான் அவளுக்கு நான் அலுவலைக் கொடுக்கப் போறேன்,,நீ பார் மச்சான்  " 

                                   என்று  கிருபா மணலில் மல்லாந்து படுத்துக்கொண்டு சொல்லுவான். சங்கீதக் கச்சேரி பின்னணியில் ஆயிரம் தாமரை மொட்டுகளே ஆனந்தக் கும்மி கொட்டுங்களே போல அலாதியாக இருக்கும் ஆனால் உண்மையில் அதெல்லாம் பாரதிராஜா படத்தில வார காதல் சீன் போல சோளம் விதைக்கையிலே சொல்லிபோட்டுப் போன மச்சான் போல முடியவில்லை, பதிலாக பாலச்சந்தர் படங்கள் போல அபத்தமாகத்தான் ரியாளிடியில் முடிந்தது 

                             கடைசியில் எப்பவும் ஆனந்த பைரவி தாய் ராகத்தில், அதன் மூன்று ஜென்ம ராகங்கள் அசத்தும் " கற்பக வல்லி நின் பொற் பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா ..." பாடல் எப்பவுமே மனோன்மணி அம்மனின் தனிப்பட்ட விருப்பம் போல பாடி முடியும் அந்த நிகழ்சியில் பாடி முடிய பவுர்ணமி  முழு நிலவு நடு உச்சிக்கு மேல அடிச்சுப் பிடிச்சுப்  பிரகாசமாக வழிய, அதன் பால் ஒளி கோவிலிக்கு அருகில் இருந்த நெல்லிமரம் எங்கும் சிதறி , கோவில் சுவரில நடனமாட, கடைசி இரவுக் குருவியும் சோம்பலாகப் பறந்து செல்ல, அந்தக் கச்சேரி முடிய,  அம்மனுக்கு ஆலாத்திகாட்டி. முடிவில, சுவையான  அவல், கடலை,சுண்டல்லும் தருவார்கள் ,  சங்கீதம் விளங்குதோ இல்லையோ  அவல், கடலை,சுண்டல்லுக்காகவே கச்சேரி முடியும் வரை  இருக்கலாம்!.

                        சாத்திரிய சங்கீதத்தின் பலவீனம் அதை முழுமயாக படித்தவர்கள்தான் அதன் சுவையை பிரிச்சு மேய்ந்து முழுமையா அனுபவிக்கலாம் என்கிறார்கள். என்னைப் போன்ற சராசரி  ரசிகர்களுக்கு  அதன் முழு வீச்சு விளங்காது ,அது ஒரு பலவீனம் , சரி, அப்ப அதன் பலம் என்ன என்று கேட்பிங்க , சொல்லுறன்....

                 சுவிடனில் இருந்த போது என்னோட  ஒரு நல்ல ப்ரென்ட் ஸ்வீடிஷ் வெள்ளை இனத்தவா ,பிறந்து வளர்ந்து முதல் ஸ்வீடனை தவிர வேறு உலகம் தெரியாத அப்பாவி , கிளாஸிக்கல் வெஸ்டேர்ன் முயூசிக் முறைப்படி படித்தவா. Pichoda. Beethoven, Mozart, Ennio Morricone என்ற மேலைத்தேய இசை மேதைகளின் சிம்பொனி ஒர்கேஸ்ரா எல்லாம் விரல் நுனியில் பியானோவில் விளையாடும் மேதாவி .

                                 ஒருநாள் ஒரு பரிசோதனை போல அவளுக்கு  "அலை பாயுதே கண்ணா,........." என்ற Dr. மங்களம்பள்ளி பாலமுரளி கிருஷ்ணா உருகி உருகிப் பாடிய பக்திப் பாடலை கிடாரில் வாசித்து காட்டி,   

                      "இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க்  வருகிறது? " 

                      எண்டு கேட்டேன், நான் கிடாரில வைச்சு நோன்டியத்தை  ,என்னோட நட்பாக இருக்கும்  ஒரே ஒரு குற்றத்துக்காக பொறுமையாகக் கேட்டுப்  போட்டு, அந்தப் பாடலின் அடி நாதமாக இருந்த ராகம் , அதன் உணர்ச்சிப் பிரவாகம்  , சாஸ்திரிய  இசை வடிவம்,  அவளை மயக்க கொஞ்ச நேரம் பொறுமையாக் கேட்டாள்..

                                  " இதை கேட்கும் போது உன்னுள்ளே எப்படியான பீலிங்க் வருகிறது " 

                            எண்டு மறுபடியும் கெஞ்சிக் கேட்டேன்  , அவள்  உண்மையாகவே சீரியஸ் ஆக என்னைப் பார்த்து நம்பமுடியாத மாதிரி சொன்னது,  

                       "  music is a kind of spritul dimension ,,i red  that many years back,,but feel that now,,,உருகி உருகி  அடி மனதில் அமைதியான, எளிமையான அர்த்தமுள்ள , தெய்வீகமான , கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு வருகிறது,அதை வார்த்தைகளில் மொழி பெயர்த்து  சொல்ல முடியவில்லை "   என்றாள்.

                         ..ஒரு ஐரோபியப் பெண் "அலை பாயுதே கண்ணா,........." பாடலை சிலை போலவே நின்று ரசித்துக் கேட்டு அதைக்   " கடவுளுக்கு நெருக்கமான ஒரு  பக்தி உணர்வு " என்று சொன்னாள் பாருங்க ,..அதுதான் கீளைத்தேய கர்நாடக சாத்திரிய சங்கீதத்தின் பலம்!
.



Wednesday, 14 October 2015

சிலையும் இல்லை, ஒரு மயிரும் இல்லை..

காலம்  எவளவு  வேகமாக  ஓடிப்போய்விட்டது என்று ஒரு வாழ்க்கை முறையின்   பிறழ்வுகளில்  முன்னேறிய ஒரு  மேலைநாட்டில்  இருந்துகொண்டு  நடுமண்டையச்  சொறிஞ்சுகொண்டு நாட்களைக் கடத்திக்கொண்டிருக்க  அப்பப்ப வரும்  சமய நிகழ்வுகள்  சில  சம்பவங்களை  உயிர்ப்பித்து விடுகிறது. அதிலொன்று இப்போது  இதுவுமாகிப் போய்விட்டது, மற்றப்படி யாருக்கும்  நெஞ்சறிய விரோதமில்லை......!

                                          ஊரில முன் ஒரு காலத்தில் இருந்த எங்களின் வீட்டில நடு  ஹோலில ஒரு " பிளாஸ்டர் அவ் பரிஸ்" என்ற வெண் சீமேந்தில் செய்த பிள்ளையார் சிலை சுவரில் கட்டப்பட்ட ஒரு  உப்பரிகை போன்ற சீமேந்துத் தட்டில்  இருந்தது . எங்கள் வீட்டுக் ஹோலில் இருந்த கவர்சியான ஒரே ஒரு கவனிப்புப் பொருளே பல வண்ணக் கலரில் இருந்த அந்த  பிள்ளையார் தான் . வேறு  சொல்லும்படியாக  எதுவுமே  அந்தளவு  பிரகாசமாக  இருந்ததில்லை .

                                             அதை என்னோட மூத்த அண்ணன் நல்லூர் கோவில் திருவிழாவில, பிள்ளையார் அழகா "கொழுக்கு மொழுக்கு" எண்டு கொழுக்கட்டை போல இருந்ததால் ஆசைப்பட்டு வேண்டிக் கொண்டு வந்து வைத்தார்! வேழமுகமும் விளங்குசிந்தூரமும் அஞ்சு கரமும் அங்குசபாசமும் நெஞ்சிற்குடிகொண்ட நீலமேனியும் நான்றவாயும் நாலிருபுயமும் மூன்றுகண்ணும் மும்மதச்சுவடோடு அந்த வாதாபி விநாயகர் இருந்தார்.

                                    அந்தப் பிள்ளையார்  வந்த  நேரம்  வீடே  கோவில் போல இருந்தது. ஆனால்  சில நாட்களில் அந்த  ஆனைமுகன்  எவளவு அலுப்பு பின்நாட்களில் கொடுக்கப் போறார் என்று அவர் வந்த நேரம் தெரியாது. 

                                     ஆனைமுகன் அம்பலவன்  அருள் பொழிவது போல இருந்த அந்த சிலையைப்  பார்த்த அப்பா   ,ஒவ்வொரு நாள் காலையிலும் , மாலையிலும் சாப்பிட முதல் அந்த பிள்ளையாருக்கு சூடாமணி விளக்கு கொளுத்தி, சாம்பிராணி பத்த வைத்து , பன்னிரு சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் பாடிய  இரண்டாம் திருமுறையில் உள்ள " வேயுறுதோழி பங்கன் விடமுண்ட கண்டன்..." என்ற கோளறு திருப்பதிகதில் உள்ள ஒன்பது  படலையும் பாடமாகச் சொல்லி ,அதைப்  பாடும் படியும் , அதைப் படித்தால் வீட்டில் " பிணி,துன்பம், கோளாறு " நீங்கி நன்மை உண்டாகும் என்று அன்பாக சொல்ல ,

                          " அந்த இந்தக் கதை தேவையில்லை, பிள்ளையார்  வந்ததே  இவங்களைத்  திருத்தி எடுக்கத்தான், அதால  ஒழுங்கா கடவுள் பக்தியோட அதைப் படித்தால்தான் காலையும்,,மாலையும்  சாப்பாடே தருவேன்  "

                                       எண்டு அம்மா கண்டிப்பாக கட்டளைபோட, பல வருடம் காலையிலும் , மாலையிலும் சாப்பிட முதல்,கை கால் முகம் கழுவி ,நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு  பிள்ளையார் சிலைக்கு முன்னுக்கு நின்று " ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்லஅடியாரவர்க்கு மிகவே..."  என்று  அதைப் படித்தோம்!

                                      வெள்ளிக்கிழமைகளில்  காலையில் பிள்ளையாரைத் தூக்கிக்கொண்டுபோய் கிணத்தடியில் வைச்சு துலாக் கயிறில தண்ணி இழுத்து வாளி வாளியா தலையில  அள்ளி ஊற்றிக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து வைச்சா  பிள்ளையார் பொன்ஸ்பவுடர் அடிச்ச பண்டிக்குட்டி போல பளிச் என்று இருப்பார். கிணத்துக் கட்டில சந்தனம் அரைக்கிற கல்லு இருந்தது அதில உரசி எடுத்த வாச கோபுர சந்தனத்தில் பொட்டும் வைச்சு விடுவோம் .  

                                       நான் விருப்பம் இல்லாமல் பக்தியைத் தூக்கி பக்கிஸ் பெட்டிக்க எறிஞ்சு போட்டு ,பசிதாங்க முடியாமல் , வேற வழி இல்லாமல்தான் படித்தேன் .என் சகோதரங்கள் எப்படிப் படித்தார்கள் என்று எனக்கு இன்றுவரை தெரியாது. குமுத சகாயன் குணத்தையும் கூறிஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் நன்றாகவே அறிந்த அந்த விநாயகக்கடவுளுக்கு என்னோட நிலைமை தெரிந்து இருக்கலாம். ஆனால் அவரும் ஒரு அக்சனும் பிராக்டிகலா எடுக்கவில்லை .

                                          பசியோட பிள்ளையாருக்கு அந்தப் தேவராப் பாடல்களைப் பாட எனக்கு கோபம் கோபமா வரும்! நெற்றியில திருநீறு பூசிக்கொண்டு , மனதுக்குள் பிள்ளையாரை திட்டிக்கொண்டுதான், அவரோட காலுக்க மிதிபட்டுக் கொண்டு இருக்கும் சின்னஞ் சிறு  மூஞ்சூறுக்காக இரக்கப்பட்டுக் கொண்டு, அவருக்கு அருகில் அடுக்கி வைத்திருக்கும் மோதகத்துக்காக ஏங்கிக் கொண்டு 

                             ".மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிசனிபாம் பிரண்டும் உடனே.." 

                                               எண்டு  ஒரு கிழமையில் ஒரு நாள் தன்னும் லீவு இல்லாமல் " ரன்னிங் கொமன்றி " போல அது காலையிலும் மாலையிலும் ஓடிக்கொண்டு இருந்தது.

                                பிள்ளையார் சிலை இருந்த ஹோல் மூலைக்கு அருகில் இருந்த பெரிய கண்ணாடி யன்னலுக்கால் வெளிய பார்க்க வாய்க்காலோடு வளர்ந்து சைடைச்சு நின்ற மஞ்ச வண்ணா மரம் தெரியும், அதில காலையில் குயில்கள் வந்திருந்து பாடும் . மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்,," என்று நாங்க பாடிக்கொண்டு இருக்க, ஆண் குயில் " ஏலேலங்  குயிலே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பார்க்காத நாள் இல்லையே ..." என்று பெண் குயிலை நினைத்துப் பாடிக்கொண்டு இருக்கும். உண்மையில் நாங்கள் பாடுவதை விடக்  குயில் பாடுவதைக் கேட்க நல்லா இருக்கும் .

                             கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் என்கிற பெயரால் பல்வேறு நம்பிக்கைகளில் தம்மை இழக்கும் மக்கள், இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்று  சைவசமயத்தாருக்கு ஞானசம்பந்தரால் உறுதி  கொடுத்து சொல்லப்பட்ட  அதை உருகி உருகி பசியோட வீட்டில் "கோளறு திருப்பதிகம்" படித்தும் " பிணி,துன்பம்,கோளாறு " பல வருடம் உடம்பில ஊத்தை போல ஒட்டிக்கொண்டு இருக்க , கோளாறு போன மாதிரி இல்லாமல் ,கடைசில கோதாரி வந்தது போல , சில வருடங்களில் அப்பா இறந்து விட்டார்!

                                           அவரோட சடலத்தை, தலை மாட்டில குத்துவிளக்கு ஏற்றிவைத்து , அந்தப் பிள்ளையார் சிலைக்கு முன்னால ஹோலில் வைத்தோம், பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் ஒண்டுமே செய்யவில்லை. அப்பா அகாலமான  அதுக்குப் பிறகு நிறைய " பிணி,துன்பம், கோளாறு " அதிகமாகிய நேரம் ஏனோ தேவாரம் படிக்கிரத்தை கொஞ்சம் கொஞ்சமா மறந்துவிட்டோம்!

                        அப்பா அகாலமாக  இறந்ததால் அம்மாவும் கடவுள்களில் நன்பிக்கை இழந்தோ,அல்லது வளர்ந்த நாங்கள் சொல்வழி கேட்கமாட்டம்  என்றோ ஒண்டுமே சொல்லவில்லை.முக்கியமா நான் சொல்வழி கேட்கும் நிலையில் அப்போது இருக்கவில்லை. முண்டினால் பிள்ளையார் சிலையே உடையும் போல கோவத்திலயும் ,கொமினிஸ்ட் சோஷலிசக் கொள்கைகளில் தீவிரமாக  இருந்தேன் .

                                            ஆனாலும் பிள்ளையாருக்கு விநாஜக சதுர்த்தி,சரஸ்வதிப் பூசை, நவராத்திரி,சிவராத்திரி நாட்களில்  பூ, புனஸ்காரம், படையல் எல்லாம் வைத்து எங்கள் " பிணி,துன்பம்,கோளாறு " நீக்க சொல்லி மன்றாடி கேட்டும், அப்பவும் பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் ஒண்டுமே செய்யவில்லை. ஆனால் அப்படியான விசேட நாட்களில் அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி போல பிள்ளையார் அலாதியாக என்ஜாய் செய்துகொண்டு இருந்திருக்கலாம் 

                                  அதுக்குப் பிறகு  அந்தப் பிள்ளையார் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல வீட்டு ஹோலில அவர் பாட்டுக்கு கவனிப்பார் அற்று இருந்தார் ! அம்மா மட்டும் தவறாமல் நித்திய கல்யாணி பூ புடுங்கி காலையில்  ஒவ்வொரு நாளும் வைப்பா! சொல்லும்படியாக எந்தவிதமான அதிசயங்களும் நடக்கவில்லை .

                                       வீட்டு நிலவரம் இப்படி இருக்க, அந்த நாட்களில் ஒரு "குண்டக்க மண்டக்க " இசைக் குழுவில்  நான் கிட்டார் வாசித்தபோது, எங்களின் எல்லா நிகழ்ச்சியிலும் தொடக்கமா " உச்சிப்  பிள்ளையார் கோவில் கொண்ட இடம் ...." பாடல் பாடும் போதெல்லாம் எங்களின் வீட்டில் இருந்த பிள்ளையாரை நினைத்துதான் நான் கிட்டாரை வாசிக்கத்  தொடங்குவேன்!  எனக்கு அப்பெல்லாம் சரியாக கிட்டார் வாசிக்கத் தெரியாததால் சும்மா சடைஞ்சு வாசிக்க அந்த  "பிளாஸ்டர் பரிஸ் பிள்ளையார் " செய்த உதவிதான் காரணம் என்று நினைக்கிறேன்.  அவர் இல்லாவிட்டால் என்னால் சமாளித்து இருக்கேவே முடியாது. 

                                          என்னோட அம்மாவே "உச்சிப் பிள்ளையார் கோவில் " பாடல்,நல்ல ஆசீர்வாதமான பாடல், அதைப் பாடினால் வீட்டில "அருள்,பொருள்,ஆனந்தம் "பெருகும் " எண்டு நம்பிக்கையில் சொன்னா, அவா சொன்னமாதிரி உச்சிப்பில்ளையா கூரையைப் பிச்சுக்கொண்டு வந்து எங்களுக்கு " அருள்,பொருள்,ஆனந்தம் "ஒண்டுமே கொடுக்கவில்லை! அதன் பின் சில வருடங்களில் என்னோட சகோதரியின் சாமத்திய வீடு நடந்தது,அது ஒண்டுதான் எங்க ள் வீட்டில நடந்த ஒரு நல்ல மங்களகரமான விசியம், பிள்ளையார் அதை சந்தோசமா சிரித்துக் கொண்டு பார்த்துக்கொண்டு இருந்த மாதிரி இருந்தது அவரின் முகம் !

                                         கொஞ்ச வருடங்களின் பின் என்னோட பாட்டி இறந்தா, அவாவின் சடலத்தை , பாட்டி ஆசைப்பட்டபடியே அவாவின் தலை மாட்டில, தூண்டாமணி விளக்கு விளக்கு ஏற்றிவைத்து,அந்தப் பிள்ளையார் சிலைக்கு முன்னால ஹோலில் வைத்தோம், மறுபடியும் பிள்ளையார் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார் , " செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம், வையத்து அறும்-பாவம்  என அறிந்து அன்றிடார்க்கு இன்றுவெறும்பானை பொங்குமோ " என்பது  போல அந்தப் பிள்ளையார் ஒண்டுமே செய்யவில்லை!

                                   அதுக்குப் பிறகு என்னோட உடன்பிறப்புகள் ஒவொன்றாக எட்டு திசை எங்க்கும் பிரிந்து போக, கடசியா சூரிய கதிர் ராணுவ நடவடிக்கையில் யாழ்பாணத்தை விட்டு வெளியேறிய பின் எனக்கும் அந்த வீட்டுக்கும் தொடர்பு இல்லாமல் போய் ,சில வருடங்களில் அதை என்னோட சகோதரிக்கு அம்மா சீதனமா கொடுக்க ,வெளிநாடில் இருந்த அந்த சகோதரி ,நாங்கள் அரை குறையாக வாழ்ந்து, பின் நாட்களில் ,சிறப்பாக வாழ வழி இருந்தும், அதைப் பராமரிக்க யாரும் இல்லாமல், சொல்லாமல் கொள்ளாமல் அதை அறவிலைக்கு வித்துப் போட்டா!

                             ஒரு காலத்தில் நடந்து இன்னொரு காலத்தில் இன்னொரு விதமான நினைவுகளின் அனுபவம் கொடுக்கும் என்பது உண்மை . புலம்பெயர்ந்து  கலாச்சார  வெற்றிடம் உள்ள ஒரு நாட்டில் வாழ்வதால், பழசையெல்லாம்  நினைக்கும்போது , ஒரு காலத்தில் பிடிக்காமல் இருந்த பிள்ளையார்  ,எப்படியோ  குழப்பத்திலும் எனக்கு ஒருவிதமான அனுசரணையுடன் தான் இருந்து இருக்கிறார் . அதனால்  அந்தப் பிள்ளையாரில் கோபம் இல்லை. 

                            சமைக்கத்தெரியாதவன் சட்டிபானை சரியில்லை  என்று சொன்னதுபோல  சொல்லுறேன்  என்று நினைக்க வேண்டாம். வாழ்கையில் பலவிசியங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையில் புரிவதில்லை. அதை எல்லாம் புரிந்துகொண்டு  என்ன வெட்டிக் கிழிக்கவா போகிறோம்  என்று  நினைச்சாலும் நெஞ்சாங்கூட்டில் சில  சம்பவங்கள்  கிரீஸ் கத்தியால  குத்துவது போல நடக்கும்.  

                          அதுக்கு இன்னுமொரு முக்கிய  காரணம்  நாங்கள் வளர்ந்துகொண்டு இருந்த போது எங்களின் வீட்டில் நடந்த எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருந்த ஒரே ஒரு  ஐ விட்னஸ்  சாட்சி அந்த " பிளாஸ்டர் அவ் பரிஸ் " பிள்ளையார். அதனால் அந்தப் பிள்ளையார் சிலையை எப்படியும் எடுப்பது என்று நினைத்தேன் . அதைக் கடல் கடந்து வாழும் என் சகோதரங்கள் இருவருக்கு டெலிபோனில்  சொன்னேன். அவர்கள் இருவரும் என்னை

                         " என்ன இவனுக்கு  இந்த வயசிலையே மண்டைப் பிழை வந்திட்டுதே,,,"

                                        என்பது போல சந்தேகமாகக் கதைத்தார்கள்.என் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் விக்கிரமாதித்தன் போல  சில வருடம் முன் இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் என்னோட " பிசினஸ் மக்னட் " தம்பி நல்லூர் திருவிழாவுக்கு யாழ்பாணம் போனபோது, அவனுக்கு சொல்லி , 

                    " அந்தப் பிள்ளையார் சிலை அந்த வீட்டில் இருந்தால் , அந்த வீட்டை வேண்டியவர்களுக்குப் பணம் கொடுத்து , சிலையை எடுத்துக்கொண்டு வரமுடியுமா "

                              எண்டு கேட்டேன் , அதுக்கு யாழ்பாணம் போய் வந்த அவன்,

                       " அண்ணே , நான் போய் விசாரிச்சன் அண்ணே  , அந்த வீட்டை வேண்டினவன்  என்னோட  கதைக்க  விரும்பவில்லை  அண்ணே "

                          "   நீ  என்ன  அவன்ட  வீட்டில  சம்பந்தம்  பேசிக்  கலியாணம்  முடிக்கிறதா  கேக்கப் போனனி ,,,பழைய  சாமான்  என்னவும்  இருந்தால்  தரச்சொல்லி  தானே "

                         " ஓம்,,ஓம்,,,அதுதான்  அண்ணே   ,,ஆனால்  அவன்  ஒரு  விடாக்கொண்டன்  மடாக்கொண்டன்  போல  திமிறிக்கொண்டு நிண்டான் "

                            " என்ன மண்டை விறாசா இருந்தாலும்  உனக்கு  என்ன "


                           "   ஓம்,,ஓம்,,அவன்   படலைக்கு வெளியால ரோடில வைச்சே என்னோட கதைச்சான் , உள்ளுக்க சும்மாவும் வீட்டை வெளியால பார்க்கவும் விடமாட்டான் என்டுட்டான் "

                               " சரி,,படலைக்கு  வெளியே  நின்றே  கேட்டு  இருக்கலாமேடா "

                              "   ஓம் , ஓம்,,  அதுதான்   ,,நானும்  செய்தனான்  அண்ணே"

                            "  சரி,,நீ என்ன  கேட்டாய்,,,என்னண்டு  கேட்டாய்  "


                              "   ஓம்நா,,ஓம் ,நான்  பார்த்துப்போட்டு எங்களின் பிள்ளையார் சிலை ஒன்று ஹோல் மூலையில் வைச்சுக்  கும்பிட்டணாங்கள் ,அந்த சிலையை மட்டும்  தரமுடியுமா, வெளிநாடில் இருக்கிற அண்ணன் ஒருவர் கேட்டார், அதுதான் கேட்குறன் எண்டு  கேட்டேன் "

                            "    அதுக்கு  அவன்  என்ன  சொன்னான் "

                            "  ஓம்,,ஓம்,,அவன்  ஒண்டுக்கும்  காது  கொடுத்துக்  கேட்கவில்லை.."

                            " ஹ்ம்ம்,, காசு  தாரன்  எண்டு  சொல்லிப் பார்த்தியே,,நான்  காசு  அனுப்பி  இருப்பேன்  எண்டு தானே  சொன்னேன் "


                            " ஓம்,,ஓம் ...காசு தாறம் எண்டு கடைசியா கேட்டுப் பார்த்தேன் அண்ணே "

                         "  வாவ்,,என்ன  சொன்னான்,,காசு  என்டவுடன  சவண்டு குத்துக்கரணம்  அடிச்சு  விழுந்து  இருப்பானே "

                                      " இல்லை,,அண்ணே , அவன்  இங்க ஒரு சிலையும் இல்லை, ஒரு மயிரும் இல்லை,, இந்த  விசர்க்  கதைகளோடு  இனி  இங்கே படலைப் பக்கம்  வந்தா  போலிசுக்கு  அடிச்சு  சொல்லுவானம்  எண்டு பேசி அனுப்பிப்போட்டான் அண்ணே "

                             "   அட,,,ஹ்ம்ம்,,,இனி  ஒண்டும்  செய்ய  ஏலாது "

                            " ஓம்,,ஓம் ,,     பிள்ளையாரை எங்கயும் ஒரு மூலையில் தூக்கி எறிஞ்சு இருப்பான் போல ...நான் அதுக்கு மேலே ஒண்டும் கேட்க்கவில்லை, " 

                                  "   சரி,,விடு "

                                  "    ஓம்,,ஓம்,,அண்ணே   இங்க சாமிப்படம் விக்கிற  கடையில வேண்டிய மாதிரி ,வேண்டிய சைசில் , வேண்டிய  கலர்ல பிள்ளையார் சிலை விக்குறாங்கள்."

                              " இல்லைப்பா,,,எனக்கு அந்தப்  பிள்ளையார்தான்  வேணும்..இல்லாட்டி  எந்தப்  பிள்ளையாரும்  தேவை  இல்லைப்பா "

                             " ஏன்  அண்ணே,,அப்படி  சொல்லுறியள் "

                            "  இல்லைப்பா...ஏன்  என்று சொல்லதெரியவில்லை "


                             "  நீங்க  இப்ப  சொல்லுங்கோ..உடன  கையோட  ஒரு சிலை வேண்டி டி எச் எல் இல அனுப்பவா   " 

                        "   இல்லைப்பா,,தேவை இல்லை, அதுகள் வேற  நான் தேடுறது வேற  "


                             "    சரி,,நான்  என்னால முடிஞ்ச வரை  முண்டுகொடுத்துப்  பார்த்திட்டேன்,,உங்களுக்கு  அந்தப்  பழைய  பிள்ளையார் தான்  வேணும்  எண்டுகொண்டு  நிண்டா  நான்  என்ன  செய்ய, 

                                "   சரி விடு,,எல்லாம்  காலக்கொடுமை ,வேற  என்ன  "

                                     " இப்ப வேணுமென்றால் ஒரு பத்துப் பதினஞ்சு பிளையார் சிலை வேண்டி அனுப்பலாம்,,கோவிலே கட்டிக் கோபுரமும் கட்டி  கும்பாவிஷேகமே செய்யலாம்     " 

                                         " அதில ஒண்டுமே இல்லை, நானே  இங்கே  வேண்டலாம் ,,அது ஒரு  பிரச்சினையே இல்லை "

                                    "  நான்  என்னவோ சொல்லுறதை சொல்லிபோட்டேன்  அண்ணே "

                                   "   அதுதான்   இதை  இனிக் கதைக்கவேண்டாம்  எண்டு சொல்லுறேன் "

                                      "  அண்ணே,,நான்  இப்ப  வைச்சு ஓடுற  வானுக்கு  ஏசி போடால்  நல்லம் போல  இருக்கு,,இப்ப  எங்கட  வெளிநாட்டு தமிழ்பாட்டிகள் அறம்பிறமா  வருகுதுகள், ஏசி வான் தான் வேணும்  எண்டு கேட்கினம் "

                                     "   ஹ்ம்ம்,,"

                                   "   சும்மா  ஒரு  பிள்ளையார் சிலையை  இவளவு காசு  செலவழித்து பாசல் செய்து  எடுக்கிறன்  எண்டு அழுங்குப் பிடியா நிக்குரிங்க,,பிள்ளையார் சிலை  என்ன  அள்ளிக்கொட்டப் போகுதே "

                                   "   ஹ்ம்ம்  "

                         " அண்ணே,,நான்  என்ன  சொல்லவாறன்  எண்டு  விளங்குதே "

                              "   ஓம்  ஓம்  நல்லா விளங்குதுப்பா  "


                        " அப்ப பின்ன டக்கெண்டு  அதுக்கு  அலுவலைப்பாருங்கோவன்,,எக்கவுண்ட்  நம்பர்  இருக்குதானே,,பழைய பாங் நம்பர்தான் ,,அண்ணே ,  " 

                                     இதுதான் வாழ்க்கை !



"பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு

யாழ்பாணத்தில புத்தகங்கள் படித்த காலத்தில, நோர்வே நாட்டு ஹென்றிக் இப்சன் என்ற ஒரு நோர்வேயிய எழுத்தாளரின் நாடகத்தை, எளிய தமிழில் மொழிபெயர்த்து வந்த "பொம்மை வீடு " என்ற சுருக்கிய புத்தகத்தைப் படித்த நினைவு இருக்கு!
                               அந்தக் காலத்தில் அப்படி நிறைய வெளிநாட்டு எழுத்தாளரின் புத்தகங்கள் சுருக்கிய வடிவில் வந்திருக்கு! உள்ளூர் ஆட்கள் எழுதுதும் ஜீவாவின் " மல்லிகை" , ஜேசுராசாவின் "அலை", போன்ற இலக்கிய சஞ்சிகைகளிலும் வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகள், கவிதைகள் மொழிபெயர்த்து வந்திருக்கு !
                                ஹென்றிக் இப்சன், நோவேயில் 18ம் நுற்றாண்டில் வசித்த ஒரு நடக்க ஆசியர் ,அவரை ஆங்கில மேடை நாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !
                          யாழ்பாணத்தில அவரின் "பொம்மை வீடு " படித்த போது உலக இலக்கியம் எல்லாம் பிரித்துமேயும் அளவுக்கு அறிவு இல்லை ,சும்மா வாசித்த நினைவு இருக்கு அதில வாற நோரா என்ற பெண்மணியின் வாழ்கை மட்டும் இன்றுவரை நினைவு இருக்கு !
                          சில வருடம் முன் நோர்வேயில் அவரின் "பொம்மை வீடு " நாடகத்தை தேட , அது மூன்று பெரிய புத்தகமாக இருக்க , அதை எப்படி யாழ்பாணத்தில சுருக்கிய புத்தகமாக ஒரு நெருப்புப் பெட்டி சைசுக்கு மொழிபெயர்த்தார்கள் எண்டு குழப்பமா இருந்தது !
                                       நோர்வே மொழியில் "பொம்மை வீட்டை " கொஞ்சம் நோன்டிபார்க்க , அது வேற மாதிரி அனுபவம் கொடுத்தது ! யாழ்பாணத்தில வாசித்து நோர்வேயிய மொழியில் இருந்து நேரடியாக மொளிபியர்ததா அல்லது மொழிபெயர்த்ததா என்பதிலேயே குழப்பம் வந்தது !

                            "பொம்மை வீடு " ஒரு சமூகப் பிறழ்வு நாடகம் ஹென்றிக் இப்சன் எழுதிய எல்லா நடகங் களும், அந்தக்கால , வறிய, ஆண் ஆதிக்க , நோர்வேயின் 18 ம் நுற்றாண்டு சமுக வாழ்கை அவலம் என்கிறார்கள் !
                                    பெண்கள் மீது இரக்கம் உடையவர் இப்பசன்.அதுக்கு காரணம் அவரின் சின்ன வயசில் பெற்றோர்கள் வறுமையில் வாடிய நேரம் ,உயர்குடிப் பிரபுக்களின் வைப்பாடிக்கள் வீட்டில் அவர் எடுபிடியாக வேலை செய்துதான் வளர்ந்தார்.
                                  அந்தப் பெண்கள் அவரோடு அன்போடும் கனிவோடும் அவரை தங்கள் பிள்ளைபோல வளர்த்ததால்,பின்நாட்களில் அவர் ஒரு சிறந்த நாடக ஆசிரியர் ஆனபின் முடிந்தவரை பெண்களின் அவலத்தை, அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை எல்லாம் நாடகத்தில் எழுதினார்
                                   பெண்கள் பிறந்ததே கலியாணம் கட்டவும் ,பிள்ளை பெறவும் ,குடும்பத்தைக் காக்கவும் என்பதை உடைத்து நோரா என்ற பெண்மணி ஆண்களைப் போல உலக விசியன்களில் நாட்டம் கொள்ள , அதை சுற்றி நடக்கும் குடும்ப சமுதாய பிரிவினை தான் "பொம்மை வீடு " நாடகம் என்கிறாகள் !
                                         நோரா அப்படி குடும்ப சமூக எல்லைகளை உடைத்தபோது எவளவு விமர்சனம் யதார்த்த வாழ்கையில் வந்திருக்குமோ அவளவு விமர்சனம் ஹென்றிக் இப்சன் எழுதிய "பொம்மை வீடு " நாடகத்துக்கும் பிற்போக்கு , கட்டுப்பெட்டி 18ம் நுற்றாண்டு நோர்வேயில் வந்ததாம் !
                                       ஒரு மொழி என்பது கலாசாரம் ,சமூக ,வாழ்வியல் சம்பனதமானது ! ஒரு மொழியின் ஆளுமை அந்தத் தாய் மொழியில் எழுதிய இலக்கியங்களில் இருக்கு. பிற மொழியில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கும் பலர் வெறும் மொழி வல்லுணரா மட்டும் இருந்தால் பல விசியங்கள் மொளிபெயர்ப்பில் இருட்டு அடி வேண்டின மாதிரி இருக்கும் ,
                                சரி அப்ப வேறு எப்படி பிறமொழி இலக்கியத்தை தாய் மொழியில் மாற்றுவது என்றால் ? அவர்களே கொஞ்சம் இலக்கிய சம்பந்தப்பட்டவர்களாயின் ,உயிரோடு விளையாடியும் இதயம் கிழிபாடாமல் மூல செய்தி வந்துசேர வாய்ப்பு இருக்கு ! "பொம்மை வீட்டை " வாசிக்க அப்படி நல்லதும் ,கெட்டதும் நடந்திருக்க வாய்ப்பு இருக்குபோல இருக்கு !
                                        
                                         இந்தப் படத்தில் பின்னுக்கு உள்ள கட்டிடம் "நேஷனல் தியட்டர் " என்ற ஹென்றிக் இப்சன் நாடகங்கள் அரங்கேறிய இடம் ,இதற்கு அருகில் ,தங்களில் இலக்கியப் பிதா ஹென்றிக் இப்சன்சனுக்கு வெங்கலத்தில் சிலைவைத்து கவுரவிதுள்ளார்கள் நோர்வேயிய மக்கள். இப்சன் எழுதிய நாடகங்கள் இன்றைக்கும் இங்கே நடக்குது ! அவர் மீதும் அவரின் இலக்கியதின் மீதும் மதிப்புள்ள பல வெளிநாட்டினரே வந்து பார்க்கிறார்கள் !
                                           நான் ஒரு நாடகமும் இதுக்குள்ள போய் இன்னும் பார்க்கவில்லை ! ஒருவேளை எனக்கு இன்னும் அந்தளவு இலக்கிய முதிர்ச்சி வரவில்லையோ தெரியவில்லை .பொதுவாக எனக்கு 18ம் நுற்றாண்டு கிளாசிகல் முயூஸிக், ஓவிய ,இலக்கிய விசியங்கள் கேட்க ,படிக்க ,பார்க்கப் பொறுமை இல்லை , அந்த வரலாற்று முக்கிய இடங்களுக்கு முன்னால நிண்டு, எதோ பெரிய அறிவுக்கொழுந்து போலப் படம் எடுக்க மட்டும் நல்ல விருப்பம் !!!
.
.

Sunday, 11 October 2015

வெரோனிக்கா ..02

அவள் கொஞ்சம் சந்தேகமாக என்னைப் பார்த்தாள். பிறகு இரவு உடுப்பை அவள் சூட்கேஸ்சில் இருந்து எடுத்து நிண்ட நிலையிலேயே போட்டாள். களைப்பா இருப்பது போல கொட்டாவி விட்டாள். பைபிள் போல என்னமோ ஒரு சின்னப் புத்தகத்தை தலையனைக்கு அருகில் வைத்தாள் .இன்றைய நாளுக்கு நன்றி  குட் நைட் என்று சொன்னாள். நான் அறைக் கதவை  இறுக்கி மூடிக் கொண்டு படு  என்றேன். அவள் செபம் போல என்னவோ சொன்னாள். காலையில் பார்க்கக்  கதவு மழைக்குப்  பாறி விழுந்த கிடுகு வேலி போல ஆவெண்டு திறந்து கிடந்தது.

                                           வெரோனிக்கா வந்த அந்த முதலிரவில் என்னோட கட்டிலில் படுத்தாள். நான் சோபாவில் உடும்புபோல நெளிஞ்சு வளைஞ்சு படுத்துக்கொண்டு இருந்தேன். காலையில் எழுப்பி அவள் படுத்து இருக்கிற விறுத்ததைப் பார்த்தேன். சின்னக் குழந்தைகள் உலகம் மறப்பது போல எல்லாத்தையும்  சுருட்டி பூனைக்குட்டி போல இறுக்கிக்கொண்டு அலங்கோலமாய்ப் படுத்து இருந்தாள்.

                                                 நான் போய் பெட்சீட்டை இழுத்து மூடிவிட்டேன். அன்றைய நாள் எப்படி விடியும் என்று தெரியாததால் முக்கியமா என் வேலைக்கு பகலே போக வேண்டி இருந்ததால் ஒரு பேப்பரில் " குசினியில் கோப்பி போட்டு வைத்து இருக்கிறேன் நீ எழும்பினவுடன் குடி " என்று எழுதி பெட்ரூம் கதவில ஒட்டி வைத்துப்போட்டு  வேலைக்குப் போட்டேன்.

                                             பின்னேரம் வேலை முடித்து வந்த போது வெரோனிக்கா கட்டிலில் படுத்து இருந்தாள். அடி வயிறு நோகுது போல முகத்தை இறுக்கி மூடிக்கொண்டு குப்புறப்படுத்து இருந்தாள் . நானே ஒரு குத்து மதிப்பில் ஒஸ்லோவில் உள்ள தமிழ்க் கடையில் வேலை முடியப்போய் வெந்தயம் வேண்டிக்கொண்டு வந்து இருந்தேன், அதை பச்சை தண்ணியில் போட்டு ஊறவைத்தேன். ரோடியோவைப் போட்டு பாட்டுக் கேட்க ,கொஞ்ச நேரத்தில் அவளே விழித்து என்னையும், தான் எங்கே இருப்பது போலவும் பார்த்தாள். எப் எம் ரோடியோவில் பாடின " La isla bonita " என்ற ஸ்பானிஷ் ஸ்டைல் ஆங்கிலப்  பாடலை முனுமுனுத்தாள். 

                           " ஒ உனக்கு அந்த மடோனா பாடின பாடல் விருப்பமா,,,நல்லா பாடுறியே ,,எங்கே கொஞ்சம் பாடிக்காட்டேன் எனக்கும் "

               " ஓகே,,நான் ஸ்பெயினில் சில மாதம் இருந்து இருக்கிறேன்,,இந்தப் பாட்டு சொல்லும் இடமான சென்ட் பியாகோவை சுற்றிப்பார்த்து இருக்கிறேன் "

             " ஒ அப்ப கட்டாயம் உனக்கு பாடல் வரிகள் நினைவு இருக்குமே,,அந்த இடத்தைப் பற்றிதானே அந்தப் பாடலே "

              " எஸ்,,,கொஞ்சம் பாடுறேன்,இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் உலகத்தின் கவலைகள் மறந்துவிடும்  
         
          Tropical the island breeze
          All of nature, wild and free
          This is where I long to be
          La isla bonita
          And when the samba played
          The sun would set so high
          Ring trough my ears and sting my eyes
          Your Spanish lullaby.....ஹ்ம்ம்,,,நல்லா இருக்கா என் குரல் "

           " யெஸ்,  இதுதான் அந்தப்  பாடல்,,,ஸ்பெயின் எனக்கும் மிகவும் விருப்பம் .."

            " ஸ்பெயின் பற்றி ஸ்பானிஷ் இல España, pasado y presente. donde comenzó donde alcanzó a  இப்படி சொல்லுவார்கள்,,"

               " கிழிஞ்சுது போ ,எனக்கு ஸ்பானிஷ் தெரியாது, ஆங்கிலத்தில் சொல்லுப்பா "

                 " ஓகே , அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு spain, past and present. where it began where it reached to... என்று வரும் "

                   " என்னோட தாய் நாடும்  ற்றொப்பிகல் என்ற வருடம் முழுவதும் வெய்யில் எறிக்கும்,,,தோலை  எரிக்கும் நாடு,, ஆனால் ஸ்பெயின் போல கடற்கரைகள் இருக்கு ஆனால்  நீல நிற கண்கள் உள்ள  அழகான   பெண்கள் அங்கே  இல்லை, மிக மிகக் குறைவு ..,"

                  " ஒ உன் தாய் நாட்டில் பெண்கள் வேறு எப்படி இருப்பார்கள் ,,உன்னைப்போல கறுப்பு தலைமயிர், ,பிரவுன் கலரில் சுமாரா இருப்பார்க்களா "

                         " எங்கள் நாட்டில் பெண்களும் ஆண்களும் ஏறைக்குறைய ஒரே மாதிரிதான் இருப்பார்கள்,,அதென்னவோ என் நாட்டு பெண்களின் முகத்தில் அதிகம் பெண்ண்மை இல்லாத மாதிரி இருக்கும்,,கண்கள் வெறும் கண்கள் எவளவுதான் மை பூசினாலும் ஸ்பானிஸ் ப்ளு ஐஸ் போல வரவே வராது .."

                       " ஹ்ம்ம்,,,அதுக்கென்ன நான் உனக்கு இருக்கிறேனே,,நீலக் கண்ணுடன்,,,ஹ்ஹஹஹாஹ்..சும்மா  ஜஸ்ட் எ  ஜோக்  ஆக சொல்லுறேன்,,ஹ்ம்ம்  .. "

                " ஒ நன்றி , உனக்கு பசிக்குதா வெரோனிக்கா, வயிறு நோவதுக்கு வெந்தயம் வேண்டிக்கொண்டு வந்து இருக்றேன் ,அதை ஊறவைத்த தண்ணியைக் குடி உனக்கு ஓகே ஆக இருக்கும் "

                    " அதென்ன ,,வெந்தயம் ..எனக்கு தெரியாதே, சூப் ஏதும் செய்வியா,ப்ளிஸ் அது செய்து தா " 

                  " வெந்தயம் ஊறவைத்த தண்ணி, அதுவும் ஒரு வகையில் சூப் தான் ,,ஹ்ம்ம்  அதுக்கு என்ன பெயர் என்று தெரியாது ,,சம்போ சிவசம்போ என்று உன்னைச் சந்தித்த நினைவாகப் பெயர் வைத்துக்கொள்ளலாம்.." 

             " ஒ மை காட்...பெயரைக் கேட்கவே பயமா இருக்கு,சரி அந்த சம்போ சிவசம்போ வையும் குடிக்கிறேன்,ஹ்ம்ம்  நீ செய்வதால்,வேற ஏதும் தெரிந்த பெயருள்ள சூப்பும்  செய் ," 

              " ஓகே ,செய்யலாம்,,உனக்கு என்ன சூப் இப்ப வேணும் ,,இருக்கிற மரக்கறி எல்லாம் போட்டு ஒரு சூப் செய்யவா "

                 " ஹ்ம்ம்..மினிச்ரோனி சூப் செய்வியா ,அது எனக்கு விருப்பம் ,"

             " ஓகே செய்யுறேன் , ஆனால் மினிச்ரோனி உனக்கு இப்ப சரிவராது ,அது ஹெவியான சூப் ,நான் சிம்பிள் சூப் செய்யுறேன் ஓகேயா " 

                 " ஹ்ம்ம்..ஓகே. நீ என்ன செய்தாலும் நான் அதை ரசிர்த்து குடிப்பேன் போல இருக்கு இப்ப..ஏன் காலையில் எனக்கு குட் மோர்னிங் சொல்லவில்லை "

                  " இல்லை, வெரோனிக்க நீ நித்திரையா இருந்தாய்,,நான் குழப்ப விரும்பவில்லை.,,அதால் பேப்பர் எழுதி ஓட்டிப்போடுப் போனேன் .."

                 " ஹ்ம்ம், நீ என்னை இழுத்து மூடிப்போட்டு போகும் போது நான் முழிப்பா தான் இருந்தேன் ..ஹ்ம்ம்.."

                     " ஒ அப்படியா எனக்கு அது தெரியாதே ,நீ ஒரு துகில் உரி நடனக்காரி என்று தான் இதுவரை நினைத்து இருந்தேன்,,நீ ஒரு நடிகை எண்டு எனக்கு தெரியாமல் போச்சே  "

                     " நான் நடிகை இல்லை ,உயிர் உள்ள, உணர்வு உள்ள  பெண் " என்று எழும்பி வந்தாள்,மேலாடை போல ஒன்றைக் கொழுவிக்கொண்டு வந்த எனக்கு முன்னாள் மேசையில் இருந்தாள்

                 " இப்ப எப்படி இருக்கு உன் வயிறு நோ.ஓகே யா..நல்ல சுடு தண்ணியில் குளி ,அது உடம்பில் உள்ள நோவுக்களுக்கு நல்லது "

               " ஹ்ம்ம்,,அது எனக்கும் தெரியும், அம்மாவும் அப்படிதான் சொல்லுவா ,நீ நல்லா குடும்ப வைத்தியம் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறாயே, அவசரத்துக்கு என்ன செய்யவேண்டும் என்றெல்லாம்  என்று ,நீ இன்றைக்கும் வேலைக்கு போகப்போறியா "

                 "பொஞ்சாதி இங்கே முக்கியமில்லை ,ஆனால்  வேலை இங்கே முக்கியம் என்று உனக்கே தெரியும், துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடிக்கொண்டு கொஞ்சநாள் வேலை செய்வேன்,,பிறகு அந்தக் காசில் ஜாலியா  ஊர் சுற்றுவேன்.."  

                " ஒ அது நல்ல ஐடியா,,உலகத்தை ரசிப்பது முக்கியம் என்று நானும் நினைப்பது,,உனக்கு தெரியுமா எதையுமே ரசிக்காமல் ஓடி ஓடி கொண்டு இருக்கும் மனிதர்கள் வயதாகி திரும்ப்பிப் பார்க்க அவர்கள் விட்ட இடத்தில வாழ்க்கை இருக்காது,,," 

                                     " அப்படியா,,வெரோனிக்கா "

                                  " இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்காது,,என்னடா இன்னும் முளைச்சு நாலு இலை விடவில்லை அதுக்குள்ள பெரிய தத்துவம் சொல்லுறேன் என்று நினைக்கிறியா " 

                                        "இல்லை,,நீ விபரமானவள்  வெரோனிக்கா  " 

                                         "    புத்தகப்  படிப்பும்  இருக்கு  கொஞ்சம்,,வாழ்க்கை  அதன்  வழியில்  வந்து  வேண்டாத  எவளவோ  விசியங்களில்  என்னிடம்  விட்டுச்  சென்றுள்ளது  " 

                    " இல்லை,,,நீ சொல்வதில் விசியம் இருக்கு , 

                         " சரி  ஏன்   அவசரப்படுறாய்...என்னோட  கொஞ்சம்  கதையேன்,,குறைஞ்சா  போயிடும் "

                                   "   இப்ப  நேரம்  மட்டு மாட்டா  தான்  இருக்கு  வெரோனிக்கா "

                                     "  என்னது,,காசுக்குப்  பின்னால  ஒடப்பறியா,,சரி  போ,,எனக்கு  யாரோடும்  இப்ப  அன்பா  கதைக்க வேணும்  போல  இருக்கு "


                             "யெஸ்,  வெரோனிக்கா, வேலைக்கு போகப்போறேன் ,சூப்  செய்து போட்டு போறேன், உனக்கு ஏதாவது சாப்பாட்டு வேண்டுமென்றால் அதையும் செய்து வைச்சிட்டுப் போறேன் "

                " பரவாயில்லை, நானே பின்னேரம் ஏதும் சமைக்காவா உனக்கும்,,எனக்கும்,ஏன் வேலை வேலை என்று ஓடுறாய் ,ஒருநாள் தன்னும் உனக்கு லீவு இல்லையா  "

                  " ஓகே,சமை,குசினியில் என்ன இருக்கு என்று பார், ,டீபிரிசரில் கனக்க இறைச்சி,மீன்  பிரீஸ் ஆகி கன நாட்கலாய்க் கிடக்கு விரும்பினதை வெளியே எடுத்து வைச்சுப்போட்டு உனக்கு விரும்பின மாதிரி சமை, சமையல் வேலை செய்வதால் நானே எனக்கு சமைக்க விருப்பம் இல்லை,,வேற ஆட்கள் சமைச்சால் எப்பவும் சாப்பிட விருப்பம் "

                    " சரி , அப்படியே செய்கிறேன்.. இந்த வீட்டில் நீ தனியா இருக்க போரிங்கா இருக்காதா உனக்கு, ஏன் நீ தனியா இருக்கிறாய் ,விரும்பினால் சொல்லு ,,விருப்பம் இல்லாட்டி சொல்லாதை "

                 " ஹ்ம்ம், இதைப்பற்றி நான் இப்ப கதைக்க விரும்பவில்லை,வெரோனிக்கா ,"

                 அன்று  மத்தியானம் அவளுக்கு,வெந்தயம் ஊற வைச்ச தண்ணியை ஒரு கப்பில் வடிச்சு வைச்சுப்போட்டு  மரக்கறி சூப் செய்து வைச்சுப்போட்டு  நான் வேலைக்கு போயிட்டேன். இரவு தான் வேலை முடிஞ்சு திரும்பி வந்தேன். வெரோனிக்கா அழகா உடுத்துக்கொண்டு டெலிவிசன் போட்டு அதில குழந்தைப்பிளைகளின் கஸ்பர் அண்ட் லீசா கார்டுன் சனல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் போட்டிருந்த டுன்னிக்கா  மேலாடை  ஏறக்குறைய  எல்லா  ஜவ்வன வளைவுகளையும் வஞ்சகம்  இல்லாமல்  வடிவமைத்துக்கொண்டிருந்தது 

                                     என்னிடம் இருந்த சின்ன சாப்பாட்டு மேசையை துடைத்து, எங்கேயோ ஒரு மூலையில் கிடந்த சின்ன பிளாஸ்டிக் பூங்ககன்றைக் கழுவி நடு மேசையில் வைச்சு , சாப்பிடும் போது பற்றவைக்கும் வாச மெழுகுதிரி பற்றவைத்து இருந்தாள். என்னோட அப்பார்ட்மெண்ட்டில் என்னவெல்லாம் இருக்கு என்று கொஞ்சம் நோண்டிப் பார்த்தது போல இருந்தது அவள் பார்த்த பார்வை .

              " ஹ்ம்ம்,,வேலை மிகவும் கஷ்டமா இன்று உனக்கு ,,களைச்சுப்போய் வாறாயே ,, நீ கிட்டார் வாசிப்பியா,,"

             " வேலை  எப்பவும் போல வேலை,,,எப்படி தெரியும் அது உனக்கு நான் கிட்டார் வாசிப்பேன் என்று "

               " ஒரு அக்கோஸ்டிக் கிட்டார் தூசு படிந்து போய் மூலையில் கிடக்கே ,,ஹ்ம்ம்,,என்னோட அம்மா பியானோ வாசிப்பா,,அதை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து தான் அப்பா எங்களை விட்டுப்போன பிறகு சீவியதை தள்ளிக்கொண்டு போனோம்,,"

                               "  நீ பாவம்,வெரோனிக்கா "

                              "   ஒலிவியா நல்ல பியானோ வாசிப்பாள்,,எனக்கு முயூசிக்ல  இண்ரெஸ்ட் இல்லை.." 

            " கிட்டார் எப்பவாவது சும்மா வாசிப்பேன்,,அதை முறைப்படி படிக்கவில்லை...சரி ஒலிவியா, அது  யார் "

           " அவள்தான் என் தங்கச்சி,,நாங்கள் ரெண்டு பேர் தான்,,ஒலிவியா ஒஸ்றியா போய் வியன்னாவில்  கிளாசிக்கல் பியானோ படிக்க ஆசைப்பட்டாள்..ஹ்ம்ம்,,,எங்கள் நாடு ஹங்கேரி இப்ப பொருளாதாரம் உடைந்து,,,எல்லா படிப்பு வசதிகளுக்கும் ஆப்பு விழுந்திட்டுது "

           " ஒ அப்படிதான்  நானும் கேள்விப்பட்டேன்,,கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஒரு காலத்தில் செல்வச் செழிப்பா இருந்து இருக்கு,,,ஹ்ம்ம்,,,நான் நினைக்கிறன் கொமினிசம் ஆட்சியில்  இருந்த போது என்று "

            " அதை விடு ,,எனக்கு அரசியல் அரசியல்வாதிகள் ரெண்டையும் கண்ணில காட்டக்கூடாது,,அவளவு கோபம் வரும்,,நீ களைச்சுப்போய் வருவாய் என்று ஒரு சின்ன சாப்பாடு செய்து வைச்சு இருக்றேன்..ஹ்ம்ம்,,,உன்னைப்போல பெரிய குக் இல்லை நான்,,எனக்கு தெரிஞ்ச மாதிரி சமைத்து வைத்துள்ளேன் "

            " ஒ அப்படியா ,,சரி வா சாப்பிடுவம்....சாப்பிட்டு சாப்பிட்டு மிச்சக் கதை கதைப்பம் ."

            " என்ன ஒ அப்படியா  என்று மட்டும் சொல்லுறாய்,,உனக்கு தெரியுமா அன்பா யார் சமைத்தாலும் அது ருசியா இருக்கும்,,சமைக்கும்போது அன்பான எண்ணங்கள் உருவானால் அந்த எண்ண அலைகள் சாப்பாட்டுடன் ஒட்டிக்கொள்ளும் "

         " ஒ அப்படியா,,,நானும் கேள்விப்பட்டுள்ளேன் ,,சரி இன்றைக்கு பிராக்டிக்கலா பார்க்கலாம் "

                    வெரோனிக்கா லசானியா போல என்னமோ செய்து, அதுக்கு உருளைக்கிழங்கு அவிச்சு வைச்சு இருந்தாள். சீசர் சலாட் போல என்னமோ கிடந்த இலை எல்லாத்தையும் வெட்டிப் போட்டு, சைனிஸ் டூபுவை சின்ன சின்ன சதுரமா வெட்டி அதுக்குள்ளே ஒலிவ் ஒயில் சரிச்சு ஊத்தின மாதிரி இருக்க அதில உள்ளியை முழுதா தோல் உரிச்சுப் போட்டு செய்து இருந்தாள். கொஞ்சம் டெக்னிகலா மெடிடேர்நியன் நாடுகளின் சமையல் அவளுக்கு தெரியும் போல இருந்தது. கதைத்துக்கொண்டு இடை இடையே ஜன்னலால் வெளியே பார்த்துக்கொண்டு  சாப்பிட்டாள். முகம் மெழுகுதிரி வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிர்ந்தது 

                 " வெரோனிக்கா,,உன் அம்மா இத்தாலி என்றாய் ,,பிறகு ஏன்,,நீயும் உன் அம்மாவும் தங்கச்சியும்  ஹங்கேரியில் வசிக்கவேண்டிவந்தது  "

                      " அது என் அப்பாவின் நாடு.அம்மாவுக்கு இத்தாலியில் சொந்தமா  வைன் தோட்டம் இருந்தது, தாத்தா வைன் வடிசாயையே வைச்சு இருந்தாராம்,என்னோட அப்பா அங்கே கோடை காலத்தில் முந்திரி பிடுங்கும்  வேலை செய்ய வந்தார், அப்போதுதான் அம்மாவை சந்தித்து இருக்கிறார், "

                         " ஒ உன் அப்பா பெரிய வைன் தோட்ட வேலைக்காரன் போல "

                      " ஒரு மன்னாங்கட்டியும் இல்லை,,அந்தாள் பெரிய குடிகாரன்,,வந்ததே வைன் குடிக்கப் போல ரகசியமா தாத்தாவின் வடிசாலையில் இருந்து திருடிக் குடிப்பாராம்,,அம்மாவுக்கு கன மாதங்களின் பின் தான் தெரியும் "

              "  ஒ ,,பிறகு என்ன நடந்தது "

                        " தாத்தாவுக்கு அந்தாளைப் பிடிக்கவில்லை, அதால சொத்தைப் பிரிச்சு கொடுத்து அம்மாவையும் போகச்சொல்லி விட்டார் "

                   " ஹ்ம்ம் ,,அப்புறம் "

                     " ஹ்ம்ம் அப்புறம் ,அம்மாவையும் கூட்டிக்கொண்டு ஹங்கேரி வந்திட்டார். வந்து புடாப்பெஸ்டில் ஒரு மாத வாடகை வீட்டில் வசித்து இருக்கிறார்கள். "

                            "     ஹ்ம்ம்,,,"

                                     "  நானும் ஒலிவியாவும் ஹங்கேரியில் பிறந்தோம். ஹ்ம்ம்  எனக்கு இன்றுவரை ஒரு சொந்த வீடு எப்படி இருக்குமென்றே தெரியாது,,அதை உணர்ந்ததே இல்லை "

                " ஒ ஹங்கேரி வந்து உன் அப்பா குடியை விட்டு ஒரு நல்ல மனிதனாக மாறிவிட்டாரா "

                " ஒரு மண்ணும் இல்லை,,அந்தாள் ஹங்கேரி வந்து குடி மட்டும் இல்லை ,,குதிரையிலயும் தொடங்கிவிட்டார்....Functional retards everywhere !!!!!! "

               " ஒ பணம் கட்டிப் பந்தயம் வைத்து குதிரை ரேஸ் விளையாடுவாரா "

             " இல்லை,,குதிரைகள் அவருக்கு விருப்பம்,அதால குதிரைகள் வளர்க்குமிடத்தில் வேலை செய்தாராம், அங்கேதான்  குதிரைகளை நேசிக்கும் இன்னுமொரு பெண்ணை சந்தித்து...ரெண்டு குதிரையும் ஒரு நாள் ஒட்டிப் போயிட்டுதுகள் " 

                    " ஒ உங்களுக்கு கஷ்டமா இருக்கே உழைக்க ஒரு ஆம்பிளை இல்லாமல்..."

              " ஹ்ம்ம் அப்படிதான் இருந்தது, நல்ல காலம் ,அம்மா பியானோ படிப்பித்து மாத வாடகை கட்டினா ,இத்தாலியில் இருந்து தாத்தா மாதம் மாதம் செலவுக்கு பணம் அனுப்புவார்,,ஒரு நாள் சாப்பிட்டு ஒருநாள் பட்டினி கிடந்துதான் நாங்க வளர்ந்தோம்,,தாத்தா மிகவும் நல்லவர்,,பொறுப்புள்ளவர் ,கண்ணியமானவர் ,,யாரையும் மனம் நோக வைக்காமல் கதைப்பார்.."

                  " ஒ..அப்படி நல்ல மனிதர்கள் பல பேர் இருக்கிறார்கள்."

                "அவர் ஒவ்வொரு கிறிஸ்மஸ்க்கும் உடுப்புகள் தவறாமல் வேண்டி அனுப்புவார்.  தாத்தாவின் இத்தாலி வீட்டுக்கு  நான் பள்ளி விடுமுறைகளில் போய் இருக்கிறேன்..எப்பவும் என்னை மடியில் வைத்து கதைகள் ,அறிவுரைகள் போல சொல்லுவார்,மனிதர்களைப் புரிந்துகொள்ள அந்த சின்ன வயசிலேயே எனக்கு அவரின் அறிவுரைகள் உதவியது "

             " ஒ அதுதானா நீ சோசியோலோயி படிக்க விரும்பினாய் ,,சோசியோலோயி என்றால் என்ன "

                " ஹ்ம்ம் ,,,சோசியோலோயி என்றால் ,,நீ நான்,,சமூகம். அதுதான்.  தனிமனிதர்கள் சமூகம் ஆகும் போது வரும் பல நெருக்கடிகளை  ஒரு விஞ்ஞான அணுகுமுறையில்  கற்கும் கற்கை நெறி அவளவுதான் .."

             " ஓகே,,இன்றைக்கு காணும் வெரோனிக்கா..உன் கதை மனதை கடினமாக்குகிறது " 

             " ஹ்ம்ம்,,,மன்னித்துக்கொள் அப்படி உனக்கு கஷ்டம் கொடுத்து இருந்தால்..நாளைக்கும் வேலையா உனக்கு,,நாளைக்கு லீவு எடேன்,ரெண்டு பேரும் ஒஸ்லோ நகரம் சுற்றிப்பார்ப்பம்,,எனக்கு படிக்கவும்,,ஸ்ட்ரிப்பில் வேலை செய்யவே நேரம் போகுது,,,ஒரு நாள் தன்னும் காலாற நடந்து ஒஸ்லோ நகரத்தைப் பார்க்க முடியவில்லை "

                   " சரி நாளைக்கு லீவு போடுறேன் ,,உன்னைக் கூ ட்டிக்கொண்டு போய்க் காட்டுறேன் "

                   " உண்மையாகவா சொல்லுறாய்,,உன் கையைப்பிடித்துக் கொண்டு போகவேண்டும் போல இருக்கு " 

                                     என்றாள். நான் திடுக்கிட்டுப் பார்த்தேன்.அதை அவளும் திடுக்கிட்டுப் பார்ப்பாள் என்று நினைச்சேன் ஆனால் அவள் இயல்பாக பார்த்து சிரிச்சுக்கொண்டு இருந்தாள்.  அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும் என்னவும்  உபத்திரவம்  இதால வருமா  என்றும்  எதுவும்  சொல்லமுடியவில்லை 

              " கை எல்லாம் பிடிக்க வேண்டாம் ,சும்மா வா , " என்றேன் 

                  " ஏன்  என்  கையைப்  பிடிச்சுக்கொண்டு  நடந்தா  உனக்கு  என்ன குடத்துத்  தண்ணியில    குடியா  முழுகிப் போகிவிடும் "

                       " அப்படி  எல்லாம்  இல்லை  வெரோனிக்கா,, எனக்கு  அது  இப்ப  தேவை  இல்லை  என்று  நினைக்கிறன் "

                      "  சரி  வேற  எப்ப  தேவை  வரும்,,அதை  சொல்லு "

                       "      வெரோனிக்கா  உனக்கு  ஒஸ்லோ சிட்டி  சுற்றிக்  காட்டுறேன்,,அவளவுதான்  வேண்டும்  என்றால்  தாக்கோ டின்னர்  மெக்சிகன்  டோர்ட்டில்லா  ரெஸ்ரோரெண்டில்  சாப்பிடுவம்,,நான்  பில்  பே  பண்ணுறேன் "

                                   " அப்ப  கையே  பிடிச்சு  நடக்கவே  மாட்டியா,,இவளவு  ஒஸ்லோ சிட்டியில்  செய்வேன்  என்கிறாய்,,கை  தானே  பிடிச்சு  நடக்கக் கேட்கிறேன் "

                             "வெரோனிக்கா  ,,சும்மா  கனவில  கரட்டி  ஓனான்  வெருட்டிக்  கலியாணம்  கட்டுற  மாதிரிக்  கதைக்காதே "

                           "   ஹ்ம்ம்,,கையைப்பிடித்து  நடக்கும்போது எவளவு  உணர்வுகள்  பாயும்  தெரியுமா,,நேசம்  என்பதே  ஆண்களுக்கு  புரியாது,,மென்மையான  உணர்வுகள்தான் மேன்மை  என்பது  அந்த  மண்டுகளுக்குப்  புரியவே  புரியாது "

                          "  இப்ப  என்ன  பிரசினை  வெரோனிக்கா  உனக்கு,,எனக்கு  ஒன்றுமே புரியவில்லை "

                            " என்ன  புரியவில்லை  உனக்கு ,,சொல்லு "

                      " எங்க  நாட்டில  ஒரு  சொலவடை சொல்லுவார்கள்    ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்? என்று "

                             "    அப்படி  என்றால்  என்ன  அர்த்தம்,,,,நான்  உன்  கையைப்பிடிச்சு    சும்மா காலாற   நடக்கக்  கேட்டால்  பெரிதா  என்னமோ  எல்லாம்  சொல்லுறியே "

                         "  ஹ்ம்ம்,,,அதுவும்  உண்மைதான்  வெரோனிக்கா "

                        "  சரி,,விடு...நான்  இனிக்  கதைக்கமாட்டேன்  இதுபற்றி "

                           " அதுதான்  நல்லம் ,,டியர்,  நாளைக்கு  குளிர்  காற்று  அடிக்கும்  எண்டு  காலநிலை  ரிப்போட்  டெலிவிசனில்  சொன்னார்கள்  ,,நீ  கதகதப்பா  உடுத்திக்கொண்டு  வெளிக்கிடு "

                                      "     வாவ்,,இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு "

                                     "  என்ன  சொன்னேன்,,கழுத்துக்கு  ஸ்கார்ப்  சுற்றிக்கொண்டு  இறங்கு,,இல்லாட்டி  குளிர்  பிடிக்கும்  வெரோனிக்கா  "

                              "  இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு ..ப்ளிஸ்  அதைக்  கேட்க  ஆசையாக  இருக்கு "

                               "     நான்  என்ன  சொன்னேன்,,நல்ல  கம்பளி  மேலாடை ஆடை  போடு  "

                       " இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு ,,ப்ளிஸ்  ப்ளிஸ் "

                             "  நான்  ஒண்டும்  சொல்லவில்லை,பிசத்தாதை  "

                         "  இல்லை  ,,இப்ப  ஒரு  அன்பான  சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு ,,என்னை பாசமாக அழைப்பது  போல,,ப்ளிஸ்   சொல்லு  சொன்னியே  அதை  திருப்பி  சொல்லு "

                                     " நாளைக்கு  குளிர்  காற்று  அடிக்கும்  எண்டு  காலநிலை  ரிப்போட்  டெலிவிசனில்  சொன்னார்கள்  ,,நீ  கதகதப்பா  உடுத்திக்கொண்டு  வெளிக்கிடு என்று  சொன்னேன் "

                                "  அதில்லை,,,பிளிஸ்  சொல்லு "

                                 "   வெரோனிக்கா  நான்  திருப்பி  திருப்பி  சொல்ல  என்ன  டெலிவிசனில்  தலைப்புச்  செய்தியா  வாசிக்கிறேன்,,சும்மா  இரு "

                   அவள் அதுக்குப் பிறகு ஒன்றுமே சொல்லவில்லை. எழும்பிப் போய் ஜன்னால் கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.நான் டெலிவிசனைப் போட அதில  ஜூலியா ரோபர்ஸ் நடித்த " வுமன் இன் லவ் " படம் ஓடிக்கொண்டு இருந்தது. சோபாவில் கால்களை நீட்டிக்கொண்டு அதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். 

                        "குட் நைட் , இன்றைய நாளுக்கு நன்றி ,நாளைய நாள் அலாதியான அனுபவங்களைக் கொடுக்கட்டும் " 

                                           என்று சொல்லிப்போட்டு அவள் போய்ப்படுத்திட்டாள் 

                                                  வெரோனிக்கா   கொல்லப்பட்டதோடு   இந்தக்  கதை  முடியும்.   அப்பட்டமான உண்மைகள்  வெளியே வராத  பல  சம்பவங்களில்  அதுவும்  ஒன்றாக  ஒரு  உறைபனி மாத  ஒஸ்லோவில்  சந்தடி அதிகம்  இல்லாத  ஒரு  புறநகரப்  பாதையில்  வெரோனிக்காகாவின்  ரத்தம் வெள்ளை உறைபனியில் மெல்ல  மெல்ல  வழிந்தோடி முடிந்தபோது வெரோனிக்கா இந்த உலகத்தைவிட்டுப்  போயே போய்விட்டாள் . அவள் நீண்ட குதிக்கால் சப்பாத்து தாறுமாறாகக்  கால்களில்  பின்னிப்பிணைந்து கிடந்தது 
                                 

                         இரவு நல்ல நித்திரையிலா ,அல்லது அதிகாலையா தெரியவில்லை,,தேசிங்கு ராஜாவின் பஞ்சகல்யாணிக் குதிரை என்னைத் திரத்தி கொண்டு வைன் தோட்டத்தில் இருந்து வந்து எனக்கு மேல பாய நான் அய்யோ என்று குழறிக்கொண்டு சோபாவில் இருந்து உருண்டு விழுந்து எழும்பினேன்..வெரோனிக்கா இரவு முழுக்க நித்திரை கொள்ளாதது போல எனக்கு முன்னுக்கு இருந்தாள்....      

...தொடரும் ...  
.

   .