Sunday, 26 July 2015

சின்னக்காவும் பெரியண்ணையும்...

மனதில் தோன்றிய எண்ணங்கள் சரியான இடத்தில் ஆரம்பிக்கவில்லையென்றால் பயணம் எளிதாக இல்லாமல் போகலாம். வாழ்கையில் அந்த சரியான இடம் எது என்றே தோன்றாமல் குழம்பிக் கொண்டிருக்க, மிகச் சரியான இடத்தில் ஆரம்பித்திருந்தும், தொடர்ந்த பயணங்கள் திருப்தியை அளிக்காமல் திசை மாறி நீர்த்துப் போகலாம். அந்த மாதிரியான நிலைமை நிஜவாழ்கையில் பலருக்கு நடக்குது. சிலரோட வெற்றியும் தோல்வியும் சுற்றியுள்ள மனிதர்களால் மட்டுமில்லை, சூழ்ந்து வரும் நிலைமைகளாலும் ஏற்படலாம்.

                                              சின்னக்காவின் உண்மையான பெயர் யாருக்கும் ஊருக்குள்ள அவா உசிரோடு இருந்த காலத்தில் தெரியாது, அது என்ன என்று , இந்தக் கதையின் முடிவில் நடந்த சம்பவத்தில்  ஒரு நாள் அவா உயிர் இல்லாமால்ப் போன அந்த  நாளில் தான் அறியமுடிந்தது.  சின்னக்காவின் புரியனின்ட பெயர் பெரியண்ணை அவரோட உண்மையான பெயரும்  யாருக்கும் ஊருக்குள்ள தெரியாது . சின்னக்கா,பெரியண்ணை இந்த இருவரின் பெயர்கள் நெருக்கமாக இருந்த மாதிரி அவர்கள் நெருக்கமாக வாழவில்லை. இருவருமே வேறு வேறு குணாதிசியங்கள் உள்ள இரண்டு துருவங்கள்

                                     எங்களின் ஊரில் இருந்த வீராளி அம்மன்  கோவிலின் முன் வீதியில்  அம்மச்சியா குளத்துக்கும் கொஞ்சம் அருகில் இருந்த பழைய ஒட்டிசுட்டான் ஓடு போட்ட, முன் விராந்தைகள் திறந்து கிடந்த, தேக்குமரங்கள் நின்ற பெரிய வளவில இருந்த கல்லு வீட்டிலதான் அவர்கள் வசித்தார்கள்.நாங்கள் கட்டைக் காட்சட்டை போட்டுக்கொண்டு அது கழண்டு விழ விழ இழுத்து விட்டுக்கொண்டு இருந்த வயதில் அவர்கள் நாற்பது சொச்சம் வயசில் இருந்தார்கள்.

                                               நாயுண்ணிப் பத்தைகள்  அள்ளு கொள்ளையாக  வளர்ந்து நின்ற அந்தக் காணிக்கு கருப்பங்கொல்லை என்று பெயர் சொல்லுவார்கள். அது பெரியன்னைன் பிறந்து வளர்ந்த  சொந்தக் காணி ,பரம்பரை வைப்புச் சொப்புக்  காணி. பெரியண்ணை சின்னக்காவைக் காதலித்து கலியாணம் கட்டின நேரம் அவர் சி டி பி பஸ் டிப்போவில் என்னவோ வேலை செய்தார் என்று சொல்லுவார்கள்.ஆனாலும் சின்னக்கா வீட்டில் காதலுக்கு பச்சைக்கொடி வேண்டிக்கொண்டுதான் கருப்பங்கொல்லைக்கு வந்தா. அவாவின் தாய் தெகப்பன் கட்டிக் கொடுத்த நேரம் வெறுங் கழுத்தோடு அனுப்பாமல், கழுத்தில காதில கையில தங்கம் போட்டுதான் கட்டிக்கொடுதார்கள்.

                          ஆனால் சின்னக்கா மஹாலட்சுமிபோல வீட்டுக்கு விளக்கு ஏற்ற வந்த நாளில் இருந்து பெரியண்ணை அந்த வேலையை விட்டுப் போட்டு எங்களின் ஊரில இருந்த களுத்துறையில் ஒரு பொம்பிளை,காலியில் ஒரு பொம்புளை, ஊருக்குள்ள புன்னியக்குஞ்சியம்மா இவர்களுடன் வாழ்ந்த மாஸ்டர் மைன்ட்  புன்னியக்குஞ்சியோட சேர்ந்து,

                                      " புண்ணியம் சிங்கள நாட்டில அள்ளுகொள்ளையா சம்பாரிக்கிறான், ஆக்கி அரைத்துப் போட்டவள் கெட்டவள், வழிக்கூட்டி அனுப்பினவள் நல்லவள் போல பெண்டுகள் நாட்டாண்மை செய்யிற வீட்டில இருந்துகொண்டு இனி ஒன்டும் செய்யேலாது , இதுகளில் ஒன்றிலுமே உருப்படியா ஒண்டுமில்லை, பொய்க்கு   இல்லை மெய்யாத்தான் சொல்லுறேன் , இந்த சி டி பி பஸ்ஸைக் கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருக்கிற வேலை சரிவராது,நான் புண்ணியத்தோட போய் பிசினஸ் செய்யப்போறேன்   "

                          என்று  சிங்கள நாட்டில பிசினஸ் செய்யுறேன் என்று  சின்னக்கா போட்டுக்கொண்டு வந்த  நகை நட்டு எல்லாத்தையும் வேண்டிக்கொண்டு போனார். போட்டு ஆறுமாதம் கழித்து வந்த நேரம், நகையும் இல்லை அதில நட்டும் இல்லை, பிசினசும் இல்லை, அதில லாபமும் இல்லை.அதுக்கு பிறகு  கைம்பெண்டாட்டி தாலியைக் கூழைக்கையன் அறுத்தானாம் கதை போல புண்ணியக்குஞ்சிய தூசனத்தில  திட்டிக்கொண்டு கொஞ்ச நாள் இருந்தார்.  சின்னக்கா என்ன ஏது நடந்தது என்று கேட்கவேயில்லை .

                                சின்னக்கா குடும்பப்பெண் என்ற வகையில் ஊரில் வாழ்ந்துகொண்டு இருந்த பெண்கள் போல அவா அமைதியாக வாழ்ந்தாலும், அவா புருஷன், அதுதான் சொல்லுவார்களே குடும்பத் தலைவன் என்று அப்படி சும்மா பேருக்கு இருந்த பெரியண்ணை அதுக்குப் பிறகு வீட்டிலையோ அல்லது வெளியிலையோ ஒரு வேலையும் செய்வதில்லை.  வேலையேதும் செய்யச்சொல்லி  கேட்டால் வீடு ரெண்டாகும் .ஒரு கிழமைக்குப் பிரளயம் வெடிக்கும் .

                                   மிகவும் பிரயாசையான சின்னக்கா,வடக்கன் மாடு ரெண்டு வளர்த்தா, கட்டு வண்டில் வைச்சு இருந்தா,  வீட்டில பின்னுக்கு நின்ற தென்ன மரங்களுக்கு நடுவில புல்லு  வளவில ஆடு வளர்த்தா,  வீட்டு ஒரு பக்க  தாழ்வாரத்தை பத்திபோல இறக்கி அதில கோழி அடைச்சுவைச்சு வளர்த்தா, இதை எல்லாம் மிஞ்சுற மாதிரி பொதுவாக ஆண்களே செய்யத் தடுமாறும் ஒரு பிசினஸ் செய்தா. அதுதான் சின்னக்கா என்ற பெயரை ஊருக்குள்ள பேமஸ் ஆக்கியது.  

                 பெரியண்ணை மெலிந்த ஒல்லிப்பிச்சான் போல இருந்தாலும் காமராஜர் போல அடர்த்தியான மீசை வைச்சு இருப்பார். ஆனால் கமுகு மரம் போல உயரமா இருப்பார். சரத்தை எப்பவும் சேட்டுக்கு மேலே வரிஞ்சி முறுக்குக் கட்டிக்கொண்டு, சின்ன வயசில் அவருக்கு வாதம் வந்திருக்கலாம் போல கொஞ்சம் கெந்தல் நடையில நடந்துபோவார். வெளி ஆட்களோட அதிகம் வள வள ராமாயணம் வள வள மகாபாரதம் என்று கதைக்கமாட்டார்.  கொஞ்சம் உண்மையைச்சொன்னால் ஊருக்குள்ள சோலி சுரட்டுக்க தலையை விடாத மனிதர். அவரோட ஒரேயொரு  வீக் பொயின்ட் கள்ளுக்குடி , அதைக் குடிச்சுப்போட்டு வந்து நாக்கால மேல் சொண்டில் முன்னுக்கு விழுந்த நுனி மீசையை பூனை போல அங்காலும் இங்காலும் இழுத்துக்கொண்டு இருப்பார்.    

                                   சின்னக்காவுக்கு ஒரு மகன் இருந்தான் ,அவனுக்கு எங்களின் வயதுதான் ,அவனுக்கு பெயர் சிம்மேந்திரன். ஆனால் வீட்டில அவனை பபா என்றுதான் சொல்லுவார்கள்.பபா எங்களைப்போல பள்ளிக் கூ டம் தொடந்து படிக்கவில்லை,ஒரு வயதில் அவனுக்கு ஒரு மன வியாதி வந்து வீட்டை விட்டு வெளிய போக மாட்டான், வீட்டு முற்றத்தில் நின்ற வேப்ப மரத்துக்குக் கீழே கதிரையைப் போடட்டுடுடு அதில இருந்து கொண்டு தனக்குள்ள சிரிப்பான்,தனக்குள்ள கதைப்பான்.அவளவுதான் அவன் உலகம்

"குறுக்கால போனதுகள் , போக்கற்றதுகள்  பொழுது விடிஞ்சதும் சீரளிஞ்ச மாதிரி, தேவையில்லாமல் சனியன் மூதேசிகள் யாரோ கழிப்பு கழிச்சுப் போட்ட பூசனிக்காயை சந்தியில போட்டு அதை எண்ட பொடி மித்திசு இப்ப மூளை மாறாட்டத்தில் அவதிப்பட வைச்சுப் போட்டுதுகளே தூமைகள் "

                             என்று பெரியண்ணை எப்பவும் திட்டிக்கொண்டு இருப்பார். சின்னக்கா அதுக்கும் ஒன்றும் சொல்ல மாட்டா. பபா என்ன விதமான மன வியாதியில் அவதிப்பட்டான் என்று எங்களுக்கும் அப்ப தெரியாது ஆனால் ஓரளவு இப்ப தெரியும்.தெரிஞ்சும் என்ன அவனும் சின்னக்கா கதை முடிந்த கொஞ்ச நாளில் அவனின் கதையும் அவலமாக முடிந்து போனதால் இப்ப அதைக் கதைத்து வேலை இல்லை.

                            சின்னக்கா வீட்டில கலர் டிவி அந்த நேரமே இருந்தது. பல வீடுகளில் அந்த நேரம் ரேடியோதான் உலகமா இருந்ததால் இரவு சனம்கள் ரூபவாகினி செய்தி, நிகழ்சிகள பார்க்கப் போவார்கள்.சின்னக்கா டெலிவிசனைப் போட்டுட்டு வெளி விறாந்தையில் தனியா இருந்து உள்ளங்கையை ஒன்றோடு ஒன்று கொழுவி வைச்சுக்கொண்டு அடுத்த கட்டப் பிளான் போட்டுக்கொண்டு இருப்பா. ஆனால் புதன் கிழமை நடக்கும் கலையரங்கம் நிகழ்ச்சி மட்டும் டெலிவிசனுக்கு முன்னுக்கு இருந்து

                            " மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்? ஈசா மண்மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்? " 

                         என்று பாடிக்கொண்டு ரசித்து ரசித்து பார்ப்பா. வேற ஒரு நாளும் ஒரு நிகழ்ச்சியும் பார்க்க மாட்டா. கலையரங்கம் ஆர்வமா அவா பார்பதுக்கு ஒருவேளை அவாவும் நடனம்.சங்கீதம் படிக்க ஆசைப்பட்டு இருக்கலாம்,அல்லது அது இடையில குழப்பப்பட்டு கலியாணம் நடந்து இருக்கலாம், எப்படியோ சரியான காரணம் தெரியாது..

                           சின்னக்காவின்  " பிசினஸ் மனேஜ்ச்மென்ட் டக்டிஸ் " சிம்பிள்.  " புத்திசாலிகளால் எது ஒன்றிலிருந்தும் எதையும் விடுவித்துத் தனதாக்கிக்கொள்ள முடியும் " என்பதுதான் அது. அதில தொடக்கி சின்னக்கா செய்த பிசினஸ், ஒரு மினிவான் வேண்டி அதுக்கு "சந்நிதியான் " என்று பெயர் வைச்சு, அதை யாழ்பாணம் அச்சுவேலி லைனில ஓடவிட்டா, காலையில் வான் வெளிக்கிட்டா இரவு தான் அவாவின் வீடுக்கு உள்ள உள்ள வளவில கொண்டுவந்து விடுவார்கள்,அதை ஓட்டும் டிரைவரும்,கிளினரும். சின்னக்கா அன்றைய கலக்சனை கணக்குப் பார்த்து எடுத்து ,கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் டைவருக்கும்,கிளினருக்கும் அன்றன்றே கையில சம்பளம் கொடுப்பா.

                               அவர்கள் போனபின் வானுக்க ஏறி கூட்டுவா, கதிரைகளின் சீட் கிழிஞ்சு இருந்தா அதுகளை மாற்றுவா, முன்னுக்கு எஞ்சினைக் திறந்து ஒயில் பார்ப்பா, பெட்ரோல் டாங்கில் கம்பியை விட்டு அதன் அளவை செக் பண்ணுவா, பட்டரிகளை அசிட் இருக்கா என்று ஆட்டிப் பாத்து போட்டு எல்லாம் முடிய வான் டாஸ்போட்டில இருக்கும் சன்னதிமுருகன் படத்துக்கு சாம்பிராணிக் குச்சி கொழுத்தி வைச்சு கும்பிட்டுப் போட்டு வந்திடுவா.

                                 இப்படிதான் வழமையாக ஒவ்வொருநாளும் நடக்கும், இதெல்லாம் நடக்கும் போது அவா புருஷன் பெரியண்ணை பனை ஓலைப் பாயிட்கு மேலே தென்னம்ஓலை வெட்டிப்போட்டுட்டு, அதில கடுக்காய் கோப்பிறேசனில் கள்ளு அடிச்சுப்போட்டு வந்து காலுக்கு மேல காலைப் போட்டு ஆட்டிக்கொண்டு வதனமோ சந்திரப் பிம்பமோ என்று பாடிக்கொண்டு அரை நித்திரையில் மம்மிக்கொண்டு கிடப்பார்.

                  ‘பாட்டுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை....கோயில் வாசல்லயும் கிணத்தடியிலும் எனக்காக வந்து பல்லை இளிச்சுக்கொண்டு நின்ற நேரம், இதெல்லாம் தோன்றவில்லை போல, ஹ்ம்ம்..தலையில  எழுதியதை யாராலும் மாற்ற ஏலாதே,  சினிமாவில் வருவது போன்ற பயங்கர சம்பவங்கள் , வாழ்க்கையிலும் இப்ப நடக்குதே "

                              என்று அலுத்துக்கொண்டு போவா..

                        " எக்காலும் கூடியிருக்கலாம் சற்றேனும் ஏறுமாறாக இருப்பளேயாமாகில்  கூறாமல் சந்நியாசம் கொள் எண்டு உன்னைப்போல பெண்டுகளுக்குதான் எழுதி வைசாங்களடி அந்தக் காலத்தில் "

                             என்று சொல்லிக்கொண்டு தென்ன்னம் மட்டையைக் கையில எடுப்பார்  பெரியன்னை .

                        "  இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை ,பார்க்கப் பட்டினத்தார் போல இருக்கு  " 

                           என்று சிரிச்சுப்  போட்டு சின்னக்கா அந்தாள் இருகிறதே தெரியாதமாதிரிப் போவா .

 பெரியன்னைக்கு பகல் பன்னண்டு மணிக்கு வீராளி அம்மன் கோவில் வைரவர் மணி அடிக்க கை நடுங்கத் தொடங்கும். தலைச் சொறிஞ்சுகொண்டு

                      " பிச்சை எடுத்தானாம் ஆண்டி அதைப் பிடிங்கிச்சாம் அனுமார் போல இவள் அறுதளியிட்ட படியளக்க வேண்டி கிடக்கே " 

                                   என்று புறுபுறுதுக்கொண்டு அங்கேயும் இங்கேயும் , குதிக்காலில ஆணி  வளர்ந்து அது குத்தக் குத்தக்  கெந்துற மாதிரி ஒரு இடத்தில நிக்க முடியாமல் நடந்து திரிவார். சின்னக்கா

                                " குசினி மேசையில தானே கொட்டிக்கிடக்கு " என்று சொல்லுவா ,அவர் போய் அதில கிடக்கிற காசை எடுத்துக்கொண்டு கடுக்காய் கோப்பிறேசனுக்கு வெளிக்கிடுவார். அவருக்கு காசு கண்ணிலபட்டவுடன  உடம்பு ஒருக்கா உதறும்.

                             " எண்ட ராசாத்தி,  நீயல்லால் தெய்வமில்லை " 

என்று பாடிக்கொண்டு அவரோட ரலிச் சைக்கிளை எடுப்பார்.  

                                சின்னக்கா நல்ல தோற்றமான, உயரமான பெண். அவா நடக்கிறதே ஆம்பிளைகள் கையை விசுக்கி விசுக்கி நடப்பது போல நடப்பா. அவாவுக்கு பாம்புக் காது.ரோட்டாலை போறவங்கள் என்ன கதைகுரான்கள் என்று வீட்டில இருந்துகொண்டே சொல்லுவா. அவாவின் வலது நெற்றியில் ஒரு வெட்டு விழுந்த தழும்பு  இருந்தது. அது எப்படி வந்தது என்று தெரியாது. சின்னக்கா என்று அவா ரோட்டில போற நேரம் நாங்கள் யாரும் அக்கோய் என்று கூபிட்டால் நேர கிட்ட வந்து கண்ணுக்குள்ள பார்த்து

                             "  என்னடா மருமோன் என்ன சிலமன் , கேள்விக் குறிபோல வளைஞ்சு வளைஞ்சு போறாய், இளந்தாரிகள் கலியாணம் கட்ட முதல் இப்பவே இப்பிடி வளஞ்சா வாற பொம்பிள துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்டு எடுபட்டு ஓடப்போராளுகள் " 

                      என்று சிரித்துக்கொண்டே சொல்லுவா.

                              சில நாட்களில் அவா வீட்டில நின்ற மினிவான் சிலநேரம் காலையில் எஞ்சின் ஸ்டார்ட் ஆகாது. நாங்கள் போய் கிளினருடன் சேர்ந்து அதைப் தள்ளுவம் . அப்பவும் அது மக்கர் பண்ணும் .சின்னக்கா பார்த்துக்கொண்டு நிண்டுபோட்டு வந்து 

                              " பெடியள் ஒரு கை பிடியுங்கடா, சந்நிதியான் என்னட்ட என்னத்துக்கு இன்றைக்கு குழப்படி விடுறான்,எங்க ஒருக்கா இறுக்கித் தள்ளுங்கடா ,சன்னதி முருகா நீ என்னைப்போட்டு இப்படி சோதிக்கலாமா " 
                         என்று போட்டு எங்களோடு வந்து ரெண்டு உள்ளம் கையையும் அகட்டி வைச்சு எங்களுக்கு உற்சாகம் தர  

                      " எங்க பிடியுங்கடா , இந்தா பிடி,, இந்தா பிடி , அடே வழுக்கி  உருள அச்க்சிலேடரை  குத்திப் போடுங்கடா ,,இந்தா பிடி ,,இழுத்துப்போடு  ,,இந்தா பிடி  சந்நிதியான் ,,அவன் விடமாட்டான்  இந்தா பிடி  "  

                                 என்று  தள்ளுவா, அந்த ஒரு தள்ளில மினிவான் விக்கி விக்கி இழுத்துப்போட்டு சடார் என்று ஸ்டார்ட் ஆகி  அசுவத்தாமா குதிரை போல எகிறிப் பாயும்..

                         சின்னக்கா சந்நிதியான் மினிவான் நல்லா ஓட அதில வந்த லாபத்தில் இன்னொரு மினிவான் வேண்டினா அதுக்கு " வல்லிபுரத்தான் " என்று பெயர் எழுதி அதையும் வடமராட்சி யாழ்பாணம் லைனில ஓட விட்டா.ஆனால் அதில வேலை செய்த டிரைவரும் கிளினரும் கலக்சன் காசில கொஞ்சக் காசு அடிச்சுக்கொண்டு இருந்தது ஒரு நாள் பிடிபட்டது. ரெண்டு பேரையும் வீட்டு செவ்விழனி மரத்துக்கு கீழ நிக்கவைச்சு விசாரணை செய்தா. அவங்கள் கையைக்கட்டிக்கொண்டு களவெடுத்ததை ஒத்துக்கொண்டு தலையைக் குனிஞ்சுகொண்டு நிண்டாங்கள்

                            "  தம்பியவை வாகனம் ஓட்டினால்தான் எனக்கும் வருமானம், உங்களுக்கும்  வீட்டில அடுப்பு எரிஞ்சு உலை வேகும், காசைக் கண்டால் எல்லாருக்கும் தான் கை இழுக்கும், ஆனால் செய்யும் தோழியே தெய்வம் எண்டு சொல்லிதானே உங்களை வேலைக்கு சேர்தனான் ,பிறகு என்னத்துக்கு எண்ட சீவியம் தாற சீதேவி குடத்தை சரிச்சுப் பார்த்த மாதிரி இந்தப் பொறுக்கி வேலை செய்த நீங்கள், சொல்லுங்கடா " 

                         என்று கேட்க ,கொஞ்சம் வயதான  டிரைவர் " சீட்டுக் காசு கட்டப் பிந்திப் போச்சு அக்கோய் " என்று தலையச் சொறிஞ்சான், இளமையான கிளினர் அதுக்கு பதில் சொல்லவில்லை, " இதில்லாட்டி இன்னொரு வேலை இருக்கு " என்றது போல விறைப்பா பார்த்துக்கொண்டு இருந்தான். சின்னக்கா ரென்று பேருக்கும் மூன்று நாள் சம்பளமும் கையில கொடுத்து அதோட நிட்பாட்டிப்போட்ட. வேற ஆட்கள் அடுத்த வாரம் எடுத்த போது " கட் அண்ட் ரைட் " ஆ களவு மட்டும் செய்யக்கூடாது என்று உறுதியுரை வேண்டிக்கொண்டு தான் வேலைக்கு எடுத்தா.

                          யாழ்ப்பாணத் தீபகற்பம்,  பெருநிலப் பரப்பு  வன்னியுடன்  பாதைகள் தடைப்பட்டு இருந்த நேரம், ஆணையிறவு , நாகதேவன்துறை நேவிக்காரன் இரவு இரவா கடலில பலரின் கதையை முடித்த கிளாலி கடலுக்கால பிரயாணம் நடந்த போது  சின்னக்கா மூன்றாவதா இன்னுமொரு இன்வெஸ்ட்மென்ட் செய்தா. அது எங்களின் ஊருக்க இல்லை.  பூநகரிக்குப் போய் தென்னம் காணியும், சிறுபோகம் பெரும்போகம் ரெண்டு செய்யக்கூடிய வயலும் வேண்டினா, வேண்டி அந்த ஊர் ஆட்களை வைச்சு வருசா வருஷம் ரெண்டு போகம் விதைப்பா 

                               அதால அடிக்கடி வயல்வெட்டு நேரம் கிளாலிக் கடல் பாதையால் போவா .போய் வயல் வேலை ஆட்களுக்கு கணக்கு வழக்கு பார்த்து முடிச்சுப்போட்டு, நெல்லை அங்கேயே மில்லில் உடைச்சு வித்துப்போட்டு, வரும்போது கையோடு கொஞ்ச புழுங்கல் அரிசி நெல்லு மூட்டை ,ஆடுக்கு தவிடு, மாட்டுக்கு  வைக்கல் ,கொஞ்சம் மொட்டைக்கறுப்பன் அரிசி  வீட்டுக்கு தேவையென்று  மூட்டையா வள்ளத்தில  ஏற்றி இறக்கிப் பறிச்சு பிறகு  லாண்ட்மாஸ்டர் ஒன்றில ஏற்றிக்கொண்டு அந்த லான்ட் மாச்டரிலையே அவாவும்  ஏறி வருவா.

              அவா வீட்டுக்கு அன்றாட வாழ்க்கை வாசல்படியில் விளக்குமாற்றை வைச்சு விடியாமல் கொஞ்சம் இடைஞ்சல்பட்ட அந்தரிச்ச  சனம்கள்

           " அக்கோய்,,,எண்ட....  அக்கோய்  ,,காத்தால போன மனுசனை இன்னும் காணேல்ல   அக்கோய் . வடக்கால பலாலி பக்கம்  ஹெலி அடிக்கிறான் அகோர அடி அக்கோய் .பெடிசுகள் பச்சை தண்ணிய குடிச்சுப்போட்டு கிடக்குதுகள்  .உண்ணான சீவியம் போற போக்கு பிடிபடுகுதில்லை அக்கோய் ..,இன்னும்  உலை வைக்கேல்ல அக்கோய் "

                         எண்டுகொண்டு பகல் போனால் ,முதல் வேலையா ஒரு மாட்டுத்தாள் பையில் மொட்டைக்கறுப்பன் அரிசி கொண்டுவந்து கொடுதுப்போட்டுதான் மிச்சம் ஹெலி அடிக்குதா,,புலி அடிக்குதா என்ன ஏது என்று விசாரிப்பா. வேலியில முருங்கக்காயும் பிடிங்கிக்கொண்டு வந்து கொடுப்பா, " வாறநேரம் தா " என்று சொல்லி கைச் செலவுக்கு காசும் கொடுப்பா  

                      "  மெய்யாதான்  கேட்கிறேன் , உனக்கு என்னத்துக்கு இந்த ஊருக்கு சம்பளம் இல்லாமல் உதவுற வேலை, காக்கொத்து அரிசிக்கு வழியில்லாத  சனம்கள் என்னவோ உன்னட்ட பொன்னம்மா மில்லுக்க திரவியம் கிடக்கிற மாதிரி வருகுதுகள், உன்னான , நாலுமுழம் வேட்டி கட்டின  பூனையைப் பார்த்து எலி உடுப்பிலாமல்  ஓடிபோன மாதிரி இந்த வீட்டில   நான் சொல்லி நீ எண்டைக்குத்தான் கேட்டனி  "

                                 என்று கை நடுங்க தொடங்கப் புருபுறுப்பார். சின்னக்கா அதுக்கு ஒன்றும் சொல்ல மாட்டா. கேட்டுக்கொண்டு இருப்பா. கொஞ்ச நேரத்தில் குசினிக்க போட்டு வந்து  ரலிச் சைக்கிளை எடுத்துக்கொண்டு,மீசையத் தடவிப்போட்டு  பெரியண்ணை கடுக்காய்மரத்தடிக்கு போயிடுவார்..

                       சின்னக்கா பூநகரி போறதெண்டால் வீட்டில புருசனுக்கும். மகனுக்கும் சமைக்க  கீரை விக்கிற வயதான குஞ்சரம் என்ற கிழவியத் தான் ஒழுங்குபடுத்திப்போட்டுப் போவா . ஒரு முறை சின்னக்கா பூநகரி போய் நின்ற நேரம் கிளாலியில் அடிபாடு  சண்டை  ரெண்டு பக்கமும் அகோரமாக நடந்தது. போன சின்னக்கா ஒரு கிழமைக்கு மேல திரும்பி வரவில்லை. அதுக்குள்ளே நாலு தரம் பிரயாணிகள் படகுகள் நேவி திரத்தி சுட்டு அதில இறந்த பலர் ரெண்டு பக்கமும் உப்புத் தண்ணியில் ஊறி வீங்கிக் கரை ஒதுங்கினார்கள் என்று செய்திகள் உள்ளூர் பேப்பரில்  ஒரே செத்தவீடு மயமாக இருக்க. போன சின்னக்க  ரெண்டு கிழமை வரவில்லை.

                                 பெரியண்ணை அவர் பாட்டில சின்னக்கா இல்லாததால் மினிவான் கலக்சன் காசில விளையாடிக்கொண்டு ஏறக்குறை காலையிலேயே குடிக்கப்போய் நல்லா இருட்டின பிறகுதான் தலைகரணமா வருவார். மினிவான்கள் சரியான கவனிப்பு இல்லாமல் கொற இழுவை போல என்ஜினில சத்தம் வர ஓடிக்கொண்டு இருந்தது. பபா எப்பவும் போல வேப்ப மரத்துக்கு கீழே இருந்து தனக்குள்ளே சிரிச்சுக்கொண்டு இருந்தான்.

                                ஏதோ ஒரு சந்தேகத்தில் ,கன நாளா பெரியண்ணையோடு கதைவழி இல்லாமல் இருந்த புண்ணியக்குஞ்சி தான் வந்து பெரியண்ணையோடு வீட்டுக்கு வெளிய நின்று விசாரித்தார்  ,,

                              " உண்ட வெறிக் கதையை விட்டுப்போட்டு ஏன் உன்ட மனிசியின் சிலமன் இல்லை ஏன் காணும் இன்னும் தேடாமல் இருக்கிறாய் என்று . " கேட்டார் , அதுக்கு பெரியண்ணை

                         " உண்ட விசர்க்கதை அங்கால் போடு, என்ட பொஞ்சாதி போனவள் வரவில்லை என்றால் உனக்கு என்னடா அக்கறை ,அவளுக்கு அள்ளி வைச்சது போதாது எண்டு இப்ப கொள்ளி வைக்கவும் தேடுறாய் போல கிடக்கே,போய் உண்ட பெண்டுகளிண்ட .....ஒழுங்கா இருக்க எண்டு ஆராச்சி பண்ணுறதை விட்டுப்போட்டு  அடுத்தவன் பொஞ்சாதிக்கு......"

                             என்று கொளுவல் தொடக்கிற மாதிரி கதைக்க தொடங்க கடைசியில் கொளுவல் வந்து புண்ணியக் குஞ்சி

                               " இங்கவா  ,உன்னோட விழல் கதையை முதல் விட்டுப்போட்டு , மனுசர் மாதிரிக் கதை , உனக்கு என்ன மூதேவி வாலாயம் வந்த மாதிரி கையில சனியன் காசு உலாவுது நீ எங்க தேடப்போறாய் "

                                 என்று சொல்லிப்போட்டு வந்து பெட்டிசம் பாலசிங்கத்திட்ட நடந்ததை சொல்ல ,பெட்டிசம் தான்

                      " புண்ணியம்... இதுக்குள்ள என்னவோ பிரகண்டம் இருக்கு,எதுக்கும் நீ சைக்கில் எடு நானும் வாறன் பெரியாஸ்பதிரி சவச் சாலையில் கிளாலியில் செத்துப்போன சனம்களிண்ட பிரேதம் அடையாளம் காட்ட வைச்சு இருகிறாங்களாம் எண்டு காலங் காத்தாலை பேபரில் போட்டு இருந்தாங்கள்,எதுக்கும் ஒருக்கா போய்ப் பார்ப்போம். "

                              என்று சைக்கிள் ஓடத் தெரியாத பெட்டிசம் பாலசிங்கம் பின்னால கரியரில் ஏறி இருக்க,வயதான புண்ணியக்குஞ்சி கனகலிங்கம் சுருட்டைப் பத்திக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு மூச்சு வாங்க மிதிசுக் கொண்டு போனார்.

                         உங்களுக்கு ஒரு விசியம் இந்த இடத்தில சொல்ல வேண்டும் பெட்டிசம் பாலசிங்கமும் புன்னியக்குஞ்சியும் நரகத்து நடு முள்ளுகள் போல ஆளையாள் முகத்தில முன்டுற எதிரிகள்,ஏனோ அன்றைக்கு ரெண்டு பேரும் ஒன்றானது ஒரு அதிசயம். அவர்களின் சண்டை சச்சரவு அட்டகாசம் பற்றி நானே ரெண்டு கதை தணியத்  தனிய எழுதி இருக்கிறேன் என்றாலே  பாருங்களேன் ஆட்கள் எப்படிப்பட்ட   பேர்வழி என்று.

                             பிரேத சவக்காலையில் இடம் இல்லாமல் பிரேதங்கள் வெளிய போட்டு இருந்தார்கள். எல்லா பிரேதமும் உப்புத் தண்ணியில ஊதிக் கிடந்தது. புண்ணியக்குஞ்சிதான் சின்னக்காவை நெத்தியில இருந்த  வெட்டை வைச்சு அடையாளம் கண்டார். பிசுக்கங்காய் போல அவா உடம்பு சளிஞ்சு போய்க் கிடக்க  சூ ட்டுக்காயம் ஒன்றும் இல்லை, அடிபாட்டுக்கு நடுவில பிளாஸ்டிக் போட்  அகப்பட்டு குண்டு துளைத்து தண்ணி நிரம்பி கவுண்டு விழுந்ததால் தண்ணியில தத்தளித்து மரணம் அடைந்து இருக்கலாம் என்று கொஞ்சம் ஊகமான விசியங்களை உண்மையாகச் சொல்லிக் கூடிய, அரசாங்க உத்தியோகம் பார்த்த பெட்டிசம் பாலசிங்கம் சொல்லிக்கொண்டு இருந்தார். 

                         பிறகு செத்த வீடு ரெண்டு நாள் சாம்பல் வாழை , மாவிலை தோரணம், தகரப்பந்தல் ,வாடகைக் கதிரை , பறை மேளம் எல்லாம் பிடிச்சு நடந்தது. பெரியண்ணை கேவிக் கேவி ஒரு மூலையில் இருந்து அழுதுகொண்டு இருந்தார். புண்ணியக் குஞ்சி அவருக்கு ஒரு போத்தல் திக்கத்து தென்னம் சாராயம் கொண்டுவந்து கொடுத்து

                        " இண்டைக்கு ரெண்டு நாளாவது  வீட்டில இரு , பொறுப்பில்லாத மோட்டுக் கழுதை , " என்று சொன்னார்.

                கொஞ்சநாள் பெரியண்ணை போத்திலில் கள்ளு வேண்டிக்கொண்டு வந்து வீட்டில வைச்சே குடிக்கத் தொடங்கிட்டார். அடுத்த வாரமே சின்னக்கா இல்லாததால் பெரியண்ணை ரெண்டு மினி வானையும் ,

                               " உதுகளை இந்த உருப்படிகளை என்னால வைச்சு  மேய்க்க ஏலாது ,,இப்பிடியே உருட்டித்  தள்ளிக் கொண்டு போறது எண்டாலும் போங்கோடா " 
                                   என்று கேட்டு வந்த அற விலைக்கே  வித்தார், பபா கொஞ்சநாள் என்ன நடக்குது என்று விளங்காமல் யாரோடும் பேசாமல் இருந்தான்.முக்கியமா அவன் தனக்குளே சிரிப்பதை நிப்பாட்டிப்போட்டு தலையைத்  தீடிர் திடீர் என்று திருப்பி யாரையோ உற்றுப் பார்ப்பது போலவும், கேள்விக்குப் பதில் சொல்ல்வது போலவும் வித்தியாசமாக அவன் மனநிலை அலைபாய, அடிக்கடி கிணற்றை எட்டிப்பார்க்க தொடங்கி,ஒரு நாள் வயித்தில் சீமெந்து அரிகல்லை கட்டிக்கொண்டு பாஞ்சிட்டான். 

                 வீட்டுக்கு வந்து ஒருவரின் சிலமனும்  இல்லை என்று குஞ்சரம்  பெரியன்னையத் தேட அவர் இல்லை, அவர் ரலிச்  சைக்கிளும் இல்லை , வீட்டு வளவு முழுவதும் தேடிப்பார்த்த குஞ்சரம் தற்செயலாக கிணத்துக்க எட்டிப்பார்த்துக் குழற....அந்த ரெண்டாவது செத்தவீடு சின்னக்கா போய்ச் சேர்ந்த ரெண்டாவது வாரம் நடந்தது ..

                        சின்னக்காவின் முப்பத்தி ஒண்டுக்கு  ஒரு சின்ன கல்வெட்டு நினைவுப் புத்தகம் கவிஞர் கந்தப்பு எழுதிய கலித்தொகை வெண்பாக்கள் எல்லாம் போட்டு அடித்தார்கள். அதில்தான் சின்னக்காவின் பெயர் ஆனந்தகிருஷ்ணாவேணி  என்றும் பெரியண்னையின் பெயர் தில்லைஅம்பல நடராசன் என்று அறிய முடிந்தது .
.
.

Putham Puthuk Kaalai....Guitar Cover



ஞாயிறு பொழுதுபோக்கு இசைவிருந்து.... நடபைரவி இராகத்தில் வந்த ஒரு அருமையான இளையராஜா பாடல் " புத்தம் புதுக் காலை பொன்னிற வேளை...." நடபைரவியில் முழுவதும் இருந்தாலும் சங்கராபரணம் இராகம் மிகச்சிறிய அளவில் கலந்து இருக்கு.. " அலைகள் ஒய்வதில்லை..." படத்தில் எஸ்.ஜானகி பாடிய இந்த அருமையான பாடல் வரிகளைக் கங்கை அமரன் எழுதியிருந்தார்.
இந்தப் பாடல் உண்மையில் மருதாணி என்ற படத்துக்கு இசியாமைக்கப்பட்ட பாடல் என்றும் அந்தப் படம் பல காரணங்களால் வெளிவரவில்லை என்று அதைப் பின்னர் இளையராஜா குடும்ப நிறுவனமான பாவலர் கிரியேசன்ஸ் தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் தொடக்க பாடலாகப் போட்டும்,அதுவும் படத்துக்கு நீண்டு விட்டதால் வெட்டிவிட்டார்கள்.
மருதாணி படத்துக்கு பூஜை போட்ட போது எந்தவித காட்சியும் இல்லாமல் கங்கை அமரன் இந்த பாடல் வரிகளை ஒரு காலைப்பொழுது எப்படி இருக்கும் என்று மனத்தால் நினைத்து வரிகள் எழுதிய பாடல் . ஆனால் அண்மையில் வந்த மேகா படத்தில இதை இசைஞானி புதிதாக இசை அமைத்து , ஹங்கேரி நாட்டு இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி அதை மறுபடியும் பாடலாக்கி இருக்கிறார்..
எண்பத்தி ஒன்றில் இசைஅமைத்த இந்தப் பாடலுக்குள் தொடக்கம் முதல் விளையாடும் புல்லாங்குழல் வாசித்தது வர்ஜினிய நிக்கொலோய் என்ற நிங்கி.இசைஞானி இளையராஜாவோடு சில வருடம் இசைஅமைப்பில் வாசித்த நிங்கி நெதர்லாந்துநாட்டு வெள்ளை இனப் பெண்மணி (இப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை). நிங்கி பற்றி தனியாக ஒரு போஸ்டிங் பதிவு எழுதியுள்ளேன் . .இதில் பிழைகள் இருந்தால் சொல்லுங்க திருத்திக்கொள்ள அந்தக் கருத்துக்கள் மிகவும் உதவும் எனக்கு







Sunday, 19 July 2015

June Poonaal .. Guitar Cover Instrumental





நட்போடு ஞாயிறு இசை விருந்து.,ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த, நேற்று என்பது கையில் இல்லை,,நாளை என்பது பையில் இல்லை, இன்று மட்டுமே உண்டு என்ற நம்பிக்கை வரிகளை வைத்து உருவான பாடல்.. என்னோட விருப்பமான ஸ்டைலில், லைட் அக்கொஸ்ட்டிக் கிட்டார் இன்ஸ்ட்ருமென்ட்டல் ஸ்டைலில் வாசித்துள்ளேன். சும்மா காலை ஆட்டிக்கொண்டு இன்றைய வார இறுதி விடுமுறை நாளில் கேளுங்க. ஒரிஜினல் பாடல் போல இல்லை , அல்லது பிழை இருக்கு என்று நினைத்தால் சொல்லுங்க. அந்த கருத்துக்கள் எனக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும்

Tuesday, 7 July 2015

குச்சு ஒழுங்கைகள்

குச்சு ஒழுங்கைகள் 
மனம் உவந்து 
ஒன்றையும் 
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு 
விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை.....

வீட்டைக் காலி செய்து
போனவர்கள்
வழி முழுவதும்
திட்டித் தீர்த்த
இயலாமையின்
வார்த்தை....

கல்யாணத்தின்
மங்களத் தொடக்க
ஊர்வலத்தில்
தவிலோடு
நாதஸ்வரதிலிருந்து
வழிந்த
" வாராய் என் தோழி
வாராயோ ",

மரண வீட்டின்
கடைசி
ஊர்வலத்தில்
பாடைக்கு முன்னால
இழவுப் பாடகர்கள்
செத்துக்கொண்டே
பாடிச் சென்ற
பட்டினத்தார் பாடல்....

வண்ணாத்திப் பூச்சியைத்
திரத்தி திரத்தி பிடிச்ச
குழந்தைகளின்
எண்ணமெல்லாம்
வஞ்சகமில்லாச்
சிரிப்பு ....

ஒழுங்கை முழுவதும்
தனக்கே சொந்தம் எண்டு
உயில் எழுதிவைச்சு
ஓயாமல் குரைத்த
தெருநாயின் ஓலம்,...

மாலைக் கருகலில்
பதுங்கி மயங்கி
நெருங்கிக் கிறங்கி
நின்று
காதலர்கள் சொன்ன
ரகசிய வாக்குறுதிகள் ....

வெத்திலை பாக்கை
போட்டு மென்று
விழுங்கி
சிவப்பாகக்
காறித் துப்பியவர்களின்
கரகரப்புக் குரல் ,

தலைகரன வெறியில்
தறிகெட்டு
வேலியப் பிடிச்சு
தவண்டு வந்தவர்களின்
நடு இரவுத்
தத்துவ முத்துக்கள் ,

நிறுத்தி நிறுத்தி
சிணுங்கியே
கீதம் இசைத்த
தபால் காரனின்
சைக்கிள் மணி ,

"அம்மா பால்
அம்மா பால் "
என்று
குரலில்ப் பால் கறந்த
பால்காரனின்
வெள்ளைக் குரல் .....

அய்யா
புண்ணியத்துக்கு தர்மம்
போறவழிக்கென்று
படலையத் திறந்தவனின்
அலுமினியத் தட்டில
சிதறி விழுந்த
சில்லறை ..

அவசரத்துக்கு
நிண்டுகொண்டே
ஓரமாக
ஒண்டுக்கு
ஒதுங்கியவனின்
மரியாதையை
இழந்து போன
மவுனம்....

நின்று நிதானமா
ஜோசிக்கும் நாங்கள்
நல்லதையும்
கெட்டதையும்
மறந்த போதும்.....,

குச்சு ஒழுங்கைகள்
மனம் உவந்து
ஒன்றையும்
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு
விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை!.
.

.
21-01-14 

.

Monday, 6 July 2015

மோகனச் சிரிப்பு !


தலை வகிட்டில்
மின்னல் நதி,
அது துளியாகி
நெற்றியில் விழும்
நவ இரத்தின
மூன்றாம் பிறை,

வட துருவ
நட்சத்திரமாக
வைர மூக்குத்தி,
கழுத்தோட
கட்டிப்பிடிச்சு
விளையாடும்
அடக்கமான அட்டியல்,

அள்ளி அடுக்கின
வெள்ளிகளில்
அரிதாரம் வழியும்
இரட்டை வடம்,
தாலாட்டு பாடி
காதில லோலாக்கு
எரிமலை,

இடுப்பை
ஒளித்து வைக்கும்
அலங்கார
ஒட்டியாணம்,
கை மறைய
சொக்கத் தங்க
வானவில் வளையல்,
விரலை விழுங்க
விதம் விதமாய்
வின் மீன்கள்,

கெஞ்சி
நடக்க வைத்து
உரசக்
கொடுத்து வைத்துக்
கொஞ்சும்
கொலுசு,
பிஞ்சு
இஞ்சி விரல்களில்
இளிக்கும்
வெள்ளி மிஞ்சி,

அடிப்பாவி
இதில
ஒன்றைத்தன்னும்
அசந்து மறந்தும்
ரசிக்க விடுகுதில்லையே
உன்
மோகனச் சிரிப்பு !
.
.
15-02-2014
.

Tuesday, 30 June 2015

.அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ..

புழுதி படிந்த வீதியில் களைத்துப்போய் வந்த ஒளவைப்பிராட்டி ஒருநாள் புளியமரத்துக்கு கீழே நிழல் ஒதுங்கினாள். புளியமரத்தில புளியம்பழம் உலுப்பிக்கொண்டிருந்த முருகப்பெருமான் அதியமான் இரும்பொறை நெல்லிக்கனி கொடுத்த தமிழ்ப் புலவியுடன் அறிவில் விளையாட ஆசைப்பட்டு
                               " வடவேங்கடத் தென் குமரித் தமிழின் இருப்பிடமே .மிகவும் களைத்துப்போய்விட்டாய் போல, புளியமரத்தின் கீழே சற்று நீடுகையில் இளைப்பாறு , அந்த இடைவேளையில் உனக்குப் படிக்க ஒரு கவிதை தருகிறேன், ஆனால் முதலியேயே சொல்லு உனக்கு சுட்ட கவிதை வேணுமா அல்லது சுடாத கவிதை வேணுமா " என்று என்று கந்தக் கடவுள் கேட்க .
                                ஒளவைப்பிராட்டி ஜோசித்தாள், இந்தப் பொடியனைப்பார்க்க எடிக்கேசன் இல்லாத சுண்டங்காய் போல இருக்கிறான் ,ஆனாலும் அவளுக்கு சுட்ட கவிதை என்றால் என்ன சுடாத கவிதை என்றால் என்னவெண்டு தெரியாது. ஆனாலும் ஒரு சின்னப்பொடியன் புளியமரத்தில நிண்டு தமிழ் கூறும் ஆயிடை நல் உலகு தலைவணக்கும் புலவிக்கு சவால் விடுகிறானே என்று நினைத்து , அதென்ன சுட்டது,சுடாடது என்று விளக்கம் கேட்க ஈகோ விடாததால் , பொடியன் முதல் கவிதை போடட்டும் பிறகு அவனை வைச்சு மடக்கலாம் என்று வந்தா வா போனாப் போ கம்மாக்கோ சிக்காக்கோ என்று நினைத்து
                                            " ஆடையால் ஏனை அணியால் அலங்கரித்துப் பெறுபேற வந்த பெரு மூடன் போலிருக்கும் பெருமானே சுட்ட கவிதையே போடு மகனே " என்று சொல்ல .
                                   திருச்செந்தூர் கந்தக்கடவுள் யாரோ பேஸ்புக்கில் எழுதிய ஒரு கவிதையை ஒரு சின்னப் பேப்பரில் எழுதி கீழே தள்ளி விட்டார்
                                                  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல் மரங்கள் என்று எழுதிய ஒளவைப் பிராட்டி அதை வாசித்துப்போட்டு,நானே கத்தும் கடல் சூள் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அகப்பட்ட காளமேகத்தின் தலையையே தனிப்பாடல் வெண்பாவில் உருடின ஆள். இதெல்லாம் ஒரு கவிதையா என்று பொருமிக்கொண்டு ,
                                     " இப்பூ ,இதுவா கவிதை , " என்று அந்த சின்னப் பேப்பரை ஊதித்தள்ளிவிட
                                        " ஹஹஹஹஹஹா பாட்டி பாட்டி ,நீ அவசரத்துக்கும் ஒரு பார்டி வைக்க தகுதி இல்லாத பார்டி , கவிதை ரெம்ப சூடாக இருக்கா அதுதான் இப்பூ ,இதுவா கவிதை என்று ஊதித்தள்ளி விட்டாயா " என்று கேட்டாணாம்...அறிவுக்களஞ்சியதை மடக்கிய அறிவுக்குகொழுந்து ...
.
.

Sunday, 21 June 2015

கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா...

வாழ்க்கை அனுபவம் என்பதை எப்படியும் எழுதலாம்.அதில் உண்மைகள் அரைவாசி புனைவுகள் அரைவாசி. அந்த விகிதாசாரம் தேவைக்கு ஏற்றபடி கலக்கும் போது சில நேரங்களில் பிரமிப்பாக இருக்கும். அந்த நினைவுகளில் ஏதோவொன்று ஒரு காலக்கடத்தின் சந்தோசங்களை மறுபடியும் உயிராக்கும் .
                             
                                                     இந்த இசைகருவி, நோர்வே , தலைவிதி நகர் ஒஸ்லோவில ,என்னோட அயல்வீட்ல வசித்த, என்னைப் போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு வயதான வடக்கு ஈராக்  நாட்டைச்  சேர்ந்த ஒரு வயதானவரிடமிருந்து  ஒரு நாள்  கிடைத்தது!அது கிடைத்த போது அதிகம் உட்சாகமாய் பின்னுக்கு பல சம்பவங்கள் தொடருமென்று அப்போது தெரியாது. 

                         அந்த வயதான அரபா மனிதர் நான் வீட்டில கிடாரை அகாலமான நேரம்களில் அதிரவைத்து நோண்டுவது தெரிந்து ஒருநாள் என்னை அழைத்து, தானும் தன் மனைவியும் நோர்வே குளிர் ஒத்துவராததால் மீண்டும் ஈராக்  போகப் போவதக சொல்லி இந்த அரபிக் தன்பூர் இசைக்கருவியைக் காட்டி 

                             "உங்களுக்கு இதை அன்பளிப்பாக தர விரும்புகிறேன் மகன் "என்றார் !

                                                         இந்த கருவி எனக்கு வாசிக்க தெரியாது, ஆனால் இந்த இசைக்கருவி வாசிக்கும் நிகழ்வுகள் ஈரான் நாட்டு மாணவர்கள் என்னோட படித்த போது பார்த்திருக்கிறேன். எனக்கு வாசிக்க முடியாத கருவி என்று நினைத்துக்கொண்டிருந்தேன் அதால் இண்டரெஸ்ட் வரவில்லை, அவர் வாசிப்பதை சும்மா பார்த்து கொண்டு இருந்தன், அவர் நல்லா வாசித்தார் , வாசித்து முடிந்தபின் நடந்த அந்த உரையாடலில் அவர்


                            " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்,,
இன்ஷா   அல்லா,,,," 

                             "        என்ன சொல்லுறீங்க அரபா,,உண்மையாவா சொல்லுறீங்க "

                                       "  ஆமாப்பா,  இன்ஷா   அல்லா,,  ,உண்மைதான்,,இதன் இசையில் ஒரு பெண்களைக் கவரும் கவர்ச்சி இருக்கு "

                                           " அட,,இது எனக்கு இவ்வளவுநாளும் தெரியாமல் போச்சே "

                                          " அதனால் என்ன,,இப்ப  நான்  சொல்லி இருக்கிறேனே,,வாழ்க்கையில் சில சம்பவங்கள் சில நேரத்துக்காக காத்திருக்கும்,அந்த நேரம் வரும் போதுதான் அதிசயங்கள் நடக்கும்,,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ,"


                                         எண்டுசொல்ல, நான் அவரின் நடுத்தர வயதான மனைவியைப் பார்த்தேன் , அந்தப் பெண்மணி கழுத்தைப் பாலில் குளித்த கிளியோபட்ரா போல அந்த நடுத்தர வயதிலும் வீனஸ்  நட்சத்திரம் அளவுக்கு  ஜொலிக்க , இதுக்கு மேல என்ன உத்தரவாதம் தேவை எண்டு , ஜோசிக்கத் தேவை இல்லை எண்டு போட்டு , சடார் புடார் எண்டு கலியாணம் கட்டுற ஹோர்மோன்கள் மூளையின்  ஹிப்போட்டலாமாஸ் இல் தாறுமாறாய் பாய தொடங்க
                          
                               " இதைதான் இவளவுனாலும் தேடிக்கொண்டு இருந்தேன் அய்யா ,ஆண்டவன்  உங்களின் வடிவில் வந்து அருள் புரிந்து இருக்கிறான் ,நன்றி அய்யா " 
                                        
                        எண்டு சொல்லி இந்த இசைகருவியைக் கையோட கிளப்பிக்கொண்டு வந்துடன்,
                                       
                                 "  மகன்,நீங்கள் தனியா இருகிரிங்கள்,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா, கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் ,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா
                           
                                         எண்டு வேறு சொனாரா, நானும் இத வீடில வைத்து நோண்டி "ஹபீபி ஹபீபி " (அன்பே அன்பே ) எண்டு தெரிந்த கொஞ்ச அரபிமொழிய வைத்து வாசித்து பழகினன்.கிடார் வாசித்தால் இது வாசிக்கலாம், fred board கொஞ்சம் வித்தியாசம்! 

                                   என்னோட தொடர் மாடியில் நட்பான,ஒரு அரபிமொழி பேசும் , மத்திய ஆசியாவின் எதோ ஒரு நாடில இருந்து வந்த அரசியல் அகதிக் குடும்பம் இருக்குது, அந்த வீடில உள்ள பெண்கள் எல்லாம் பிரம்மதேவனிடம் அட்வான்ஸ் கொடுத்து, அளவு கொடுத்து சொல்லி செய்விச்ச மாதிரி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிபோல அழகா இருப்பார்கள் ,அவர்கள் அழகைப்பற்றி ஒரு கவிதை அல்ல ஒரு கவிதை தொகுதியே எழுதி சொந்தகாசை செலவழித்து அதை வெளியிடலாம் ,,அவளவு சொக்கத் தங்க தேவதைகள் !

                                           
                          ஒரு நாள் எப்படியும் அவர்களுக்கு இந்த அரபிக் தன்பூர் கருவியில் கீதம் இசைத்து ,அவர்கள் அன்பைப் பெறவேண்டும் எண்டு எப்பவுமே நினைப்பது ஒரு நாள் அந்த இளம்பெண்களை தொடர்மாடி நிலத்தடி வாசலில் சந்திக்க நேர்ந்தது ,பாலைவனத்தில ஒட்டகம்போல ஒரு ஓரமா ஒதுங்கி நிண்டு , அந்த வீட்டில வசிக்கும் கடைசி , சிறிய இளம் பெண்னிடம் ,

                          " என்னிடம் அரபிக் தன்பூர் இசைக்கருவி வீட்டில இருக்கு " 

                               எண்டேன், பேரீச்சம்பழகலரில் இருந்த அந்த சின்ன தேவதை திடுக்கிட்டு, நான் சொன்னது விளங்காமல் ,ஏதோ என்னோட வீட்டில அனக்கொண்டா மலைப் பாம்பு இருக்கு எண்டு சொன்னதுபோல விழிக்க ,நான் அவளுக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னேன் !அவள் பிரகாசமானா பாரசீக விழிகளால் ஆச்சரியமாகி ,

                       
                              "ஒ அப்படியா ,நீ வாசிபியா அதை ? எதுக்கும் அக்காமாரிடம் போய் சொல்லுறன்  எண்டாள், நான் இயல்பாக
                              
                       "அதுக்குதானே உன்னிடமே சொன்னேன் " எண்டு மெதுவாக சொல்ல,இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா , 
                    
                      அவள் "என்ன சொன்னாய் எண்டு குழப்பமா கேட்டாள்", நான்
                          
                     " உன் அக்காமார் அரபிக் தன்பூர் இசையில் மயங்கி உயிரை விடுவார்கள் எண்டு கேள்விப்பட்டன் என்றேன் ! 
                        
                            அவள் சிரிச்சுப்போட்டு , "அப்படி எல்லாம் நாங்க மயங்குற ஆட்கள் இல்லை ,",என்று சொல்லிப் போயிட்டாள்
                                

                               அதன் பின், அந்த சம்பவத்தையும் அரபிக் தன்பூர் இசைக்கருவியையும,மறந்தாலும்,ஒருகோடைவிடுமுறையில் அவர்கள் குடும்பமாக வெளியே புல்வெளியில் இருந்தததை ஜன்னல் வழியாகப் பார்த்த போது, அந்த வயதான ஐயா சொன்ன ஆசீர்வாதம், அவரின் கிளியோபட்ரா மனைவி நினைவுவர, ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ,ஆனால் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையில் , நைசா அரபிக் தன்பூர் இசைக்கருவியை நாரதர் போல தூக்கிக்கொண்டு போய் ஒரு ஓரமா பிச்சைக்காரன் போல , அவர்களோடு நானும் குந்திஇருந்து இந்த கருவிய வாசித்தன்,
                                                

                                    நான் பல மாதமா திட்டமிட்டு ,பழகிய " கல்யாண நாள் பார்க்கச் சொல்லவா ....." பாடலை இழுத்து இழுத்து வாசித்தேன் ,அவர்கள் என்னை அதிகம் கவனிக்கவில்லை, நாசாமப்போன இந்த அரபிக் தன்பூர் கருவியை அதிகம் கவனித்தார்கள் ! அவர்கள் வீட்டில இருந்து வந்த குட்டிப்பெண் மட்டும் என்னை சந்தேகமாகவே இவன் என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறான் என்பதுபோல எச்சரிக்கை உணர்வோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

                                      என்ன உலகமடா இது எண்டு வெறுப்பு வந்தாலும் அவர்கள் என்னோட இன்னிசை மழையைக் கொஞ்சம் ரசித்தார்கள், குப்புஸ் என்ற அரபிக் சாப்பாட்டை வாயில அடைஞ்சு கொண்டு இருந்த அந்த அழகான பெண்கள் என்னை ஏன் நாயே என்றும் கவனிக்கவில்லை. ஆனால் யாரும் அந்த வயதான ஈரரக் நாட்டவர் சொன்ன மாதிரி மயங்கின மாதிரி தெரியவில்லை, 


                                                 இன்ஷா   அல்லா,  அல்ஹம்துல்லா ஆணையாக   அவர்கள் வளர்க்கும் இருண்டு பூனைகள் மட்டும் படு இண்டரஸ்ட் ஆக கேட்டுக்கொண்டு இருந்தன, வேற ஒண்டுமே நடக்கவில்லை. எழும்பிப் போற நேரம், இவன் எங்கே உருப்படப் போறான் என்று அந்த ரெண்டு பூனைகளும் என்னைப் பார்க்க , அந்தப் பேரீச்சம்பழ சின்னப் பெண்ணிடம் எப்படி என் பாட்டு என்று கேட்டேன் ,அதுக்கு அவள் நோர்ஸ்கில் என்னை விசாரித்தாள் 

                       " என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு , 


                             " அப்பிடி எல்லாம் ஒன்றும் இல்லை,,அரபிக் தன்பூர் இசைக்கருவி எனக்கு உயிர் தெரியமா "

                                " அப்பிடியா ,சரி ஒரு பாட்டுத்தானே  என்னமோ வாசித்தாய் ,,அது  எங்கள் நாட்டு இசை போல இல்லையே "

                                  " ஓம்,,அந்த ஒரு பாட்டுதான் இதில கிடந்து முறிஞ்சு முறிஞ்சு வாசிக்கப் பழகினேன் ,ஒரு முடிவோடுதான் பழகினேன் ,இது இந்திய இசை "

                                  "  சரி,,அந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் "

                               "  அது வந்து,,வந்து,,,,,ஓட்கம் தெரியுமெல்லோ,,அது  ஒருநாள் பாலைவனம் முழுவதும் அலைஞ்சுச்சாம் "

                               "  எதுக்கு அலைஞ்சுது ,,,"

                                "அதுக்கு  சாப்பாடு  இல்லை ,,தண்ணி இல்லை என்று  அலைஞ்சுது "

                                 "  ஹஹஹஹ் ,,ஓட்டகம் ,,அப்பிடி எல்லாம்  அலையாது" 

                          " வேற என்னத்துக்கு ஓட்டகம் பாலைவனத்தில் அலையும் "

                                " ஓட்டகம் தண்ணி இல்லாமல் ,சாப்பாடு இல்லாமால் மாதக்கணக்கில் சமாளிக்கும் "

                                      " அதெப்படி "

                                         " ஓட்டகம் அதன் கழுத்தில நிறைய கொழுப்பு சேர்த்து வைத்திருக்கும்,,அது அதுக்கு  பசி வரும்போது இரைமீட்டிட உதவும் "

                                         " ஓ,, நீங்களும் ஓட்டக்கப்பாலும் பேரிச்சம் பழமும் சாப்பிடத்தாலா இப்படி அழகா இருக்குறீங்க "

                                            " என்ன,,உனக்கு இப்ப என்ன பிரச்சினை,,சொல்லு,,என்ன பிரச்சினை,,நாங்க வடிவா இருந்தா உனக்கு என்ன "

                               " ஆனால் அநியாயத்துக்கு அள்ளிக்கொட்டுற வடிவா எல்லோ இருக்குறீங்க "

                               " இப்ப உனக்கு  என்ன  பிரச்சினை அதில "

                                     "   ஹ்ம்ம்,பேசாமல் ஒரு ஓட்டகாமா பிறந்திருக்கலாம்      "             

                                            "  அது எனக்கு தெரியாது,,,ஓட்டகம் பின்னங் காலில் எம்பி உதைக்கும் தெரியமா,,,,அந்த அடியில நீ அந்த இடத்திலேயே குளறிக் குளறி உயிரை விடுவாய் "

                                          " அட,,அப்படியா ,,பயமா  இருக்கே "

                                        " நாங்கள் குருதிஸ்தானில் வசித்த நேரம் எங்களின் மாமா இப்படி இசைக்கருவி வாசிப்பார்,,ஆனால் நல்லா ரசித்து வாசிப்பார், "

                                           "  ஓ  ,,அவர்  என்ன  பெரிய ஓல்டு மொங்கு பிஸ்தாவா "

                                            "      என்ன "

                                           "   ஒண்டுமில்லை "

                                       "  இல்லை நீ என்னவோ  எங்க மாமாவைப்பற்றி சொன்னாய் "

                                        "  இல்லைப்பா,,சும்மா  வாய் தவறி உளறிப் போட்டேன் "

                                         " நீ இந்த இசைக்கருவியோடு இங்கே வந்து குந்தின நேரத்தில் இருந்து சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உளறிக்கொண்டுதானே இருக்கிறாய் "

                                         "  சம்பந்தம் முடிக்க தான் வந்து இருக்கிறேன் "

                                 " என்னது ,,இதென்ன  சொல்லுறாய்,,உனக்கு விசரா "

                                          " அப்பிடி எல்லாம் ஒன்றும்  இல்லை "

                                           " நீ  என்னமோ மாஸ்டர் பிளான் போட்டுக்கொண்டு தான் வந்து இந்த இசைக்கருவியை வாசிக்கிறாய் போல இருக்கு  நீ மசிங்கி மசிங்கி வாசிக்கிறதை பார்க்க  " எண்டாள்  .

                        நான் கோவத்தில, " இப்படியா ஒரு இசைக்கலைஞ்சனை அவமதிப்பிங்க " என்று கேட்டேன் 


                                       அவள் ஈஈ ஈ ஈ ஈ  என்று ஒட்டகம் போலப் பல்லை இளித்தால், நானும் பதிலுக்கு ஈ ஈ ஈ ஈ ஈ என்று கோவேறுகழுதை போலப்  பல்லை இளிதுப்போட்டு வந்திட்டேன்                               

                                 
                                       அதுக்குப் பிறகு , கொஞ்ச நாள் இந்த கருவி வீடில சுவரில தொங்கியது ,பார்க்க அழகா இருக்கும்,நினைக்க கோபம் வரும், இப்படியான தருணங்களில் தான் இசை மீதும்,இசைகருவிகள் மீதும் ,கடவுளின் " நற்கருணை" மீதும் வெறுப்புவருகின்றது ! இருந்தாலும் நம்பிக்கை இழக்காமல் இந்த அரபிக் இசைக்கருவியில் ஒரு முன்னோடிபோல ,பல தமிழ் ,ஹிந்தி ,பாடல்கள் வாசித்தாலும் , கீளதேய சாஸ்திரிய கரநாடக சங்கீத இல் வரும் தியாகராஜ சுவாமிகளின் " எந்தரோப மகானோ பாவு லு " என்ற பஞ்ச இரத்தின கீர்த்தனையை இதில வாசித்திருக்கிறேன் !
                                          

                                 சில மாதங்களின் முன், எனக்கு கலியாணத்துக்கு ராசியில்லாத இந்த இசைக்கருவி இனி வேலைக்கு ஆகாது எண்டுபோட்டு என்னோட தொடர்மாடியில் தனியாக வசிக்கும் , என்னைப்போலவே அரசியல் அகதியாக அடைக்கலம் பெற்று வாழும் ஒரு ஆப்கானிஸ்தான் இளம் நண்பனுக்கு..
                        
                                    " இதை வாசித்தால் அழகான பாரசீகப் பெண்கள் மயங்குவார்கள்" 
                             
                                       எண்டு அந்த வயதானவர் எனக்கு சொன்ன டைலாக்கை சொல்லி கொடுக்க அவனும் என்னைப்போலவே வாயைப் பிளந்து வேண்டினான் ,ஆனாலும்
                            
                                            " நான் திருமணம் ஆகியவன் , என்னோட மனைவிக்கு இன்னும் நோர்வே வர "பமிலி ஸ்பொன்சர் விசா" கிடைக்கவில்லை ,

                                    "  அப்படியா,,அது  கவலையான நிலைமைதான்"

                                  " எப்படியும் அவளுக்கு  இங்கே வர ஒருவருடம் எடுக்கும் போல இருக்கு "

                                   " அது,,இன்னும்  துன்பமாய்  இருக்குமே,,உங்களுக்கு "

                                      "  நல்ல உதவி நீங்கள் இதை தந்தது ,,மனைவி வரும்வரை யாராவது பாரசீகப் பெண்கள் கிடைக்க கடவுளின் நற்கருணையால் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் எண்டால் அது நடந்துதான் தீரும் ,,இன்சா அல்லா ,," என்றான்
                          
                                  நீங்களே சொல்லுங்க பார்ப்பாம் ? கடவுளும் இருக்கிறவனுக்கு தான் இன்னும் கூரையப் பிச்சுக்கொண்டு கொடுக்கிறார் !.


.

.