Wednesday 4 March 2015

நாங்கள் மறந்த போதும்.....,

குச்சு ஒழுங்கைகள் 
மனம் உவந்து 
ஒன்றையும் 
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு 

விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை.....

வீட்டைக் காலி செய்து
போனவர்கள்
வழி முழுவதும்
திட்டித் தீர்த்த
இயலாமையின்
வார்த்தை....

கல்யாணத்தின்
மங்களத் தொடக்க
ஊர்வலத்தில்
தவிலோடு
நாதஸ்வரதிலிருந்து
வழிந்த
" வாராய் என் தோழி
வாராயோ ",

மரண வீட்டின்
கடைசி
ஊர்வலத்தில்
பாடைக்கு முன்னால
இழவுப் பாடகர்கள்
செத்துக்கொண்டே
பாடிச் சென்ற
பட்டினத்தார் பாடல்....

வண்ணாத்திப் பூச்சியைத்
திரத்தி திரத்தி பிடிச்ச
குழந்தைகளின்
எண்ணமெல்லாம்
வஞ்சகமில்லாச்
சிரிப்பு ....

ஒழுங்கை முழுவதும்
தனக்கே சொந்தம் எண்டு
உயில் எழுதிவைச்சு
ஓயாமல் குரைத்த
தெருநாயின் ஓலம்,...

மாலைக் கருகலில்
பதுங்கி மயங்கி
நெருங்கிக் கிறங்கி
நின்று
காதலர்கள் சொன்ன
ரகசிய வாக்குறுதிகள் ....

வெத்திலை பாக்கை
போட்டு மென்று
விழுங்கி
சிவப்பாகக்
காறித் துப்பியவர்களின்
கரகரப்புக் குரல் ,

தலைகரன வெறியில்
தறிகெட்டு
வேலியப் பிடிச்சு
தவண்டு வந்தவர்களின்
நடு இரவுத்
தத்துவ முத்துக்கள் ,

நிறுத்தி நிறுத்தி
சிணுங்கியே
கீதம் இசைத்த
தபால் காரனின்
சைக்கிள் மணி ,

"அம்மா பால்
அம்மா பால் "
என்று
குரலில்ப் பால் கறந்த
பால்காரனின்
வெள்ளைக் குரல் .....

அய்யா
புண்ணியத்துக்கு தர்மம்
போறவழிக்கென்று
படலையத் திறந்தவனின்
அலுமினியத் தட்டில
சிதறி விழுந்த
சில்லறை ..

அவசரத்துக்கு
நிண்டுகொண்டே
ஓரமாக
ஒண்டுக்கு
ஒதுங்கியவனின்
மரியாதையை
இழந்து போன
மவுனம்....

நின்று நிதானமா
ஜோசிக்கும் நாங்கள்
நல்லதையும்
கெட்டதையும்
மறந்த போதும்.....,

குச்சு ஒழுங்கைகள்
மனம் உவந்து
ஒன்றையும்
மறப்பதுமில்லை ,
மனசாட்சிக்கு
விரோதமாக
ஒன்றையும்
மறைப்பதுமில்லை
!.


.

No comments :

Post a Comment