Wednesday 4 March 2015

அன்றோமிடாவின் அலை பாயும் கூந்தலில்...

எங்கள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே மனிதர்கள் வசிக்கக்கூடிய கிரகங்கள் இருக்குதா என்று சில நண்பர்கள் என்னிடம், நான் என்னவோ நாசாவில் அஸ்ட்ரோ பிசிக்ஸ் வின்ஞானி வேலை பார்ப்பது போலக் கேட்டார்கள். இப்படிக் கேள்வி பலருக்கு இருக்கு, அதுக்கு முக்கிய காரணம் வேற்றுக் கிரக வாசிகள் வந்தார்கள்,போனார்கள் எண்டு நிறையக் கதைகள் இருக்கு, அதெல்லாம் இன்னும் நிரூபிக்க முடியாத சுவாரசியமான கதைகளாகவே இருந்த போதும் அது பற்றி எழுதிய கவர்ச்சியான புத்தகங்கள் மில்லியன் கணக்கில் விற்றும் இருக்கு, 

                         அதில உள்ள இன்னுமொரு குழப்பம் அப்பப்ப நாசா வேறு புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது எண்டு தலைப்பு செய்தி கொடுப்பதும், அது அங்கேயும் போய்க் காணி வேண்டி வீடு கட்டலாம் எண்டு கொடுக்கும் ஆர்வமும் காரணம், இன்றைவரை 305 வெவ்வேறு நட்சத்திரங்களை 715 கோள்கள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் அறிந்த கோள்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ள விபரம் நாசா சயன்ஸ் நியூஸ் சொல்லுது.

                                நாங்க வசிக்கும் இந்தப் பிரபஞ்சம் பிரமாண்டமானது, அதுதான் முதல் பிரச்சினை எங்கள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே இன்னும் ஒண்டுமே உறுதிபடுத்தும் அளவில் கண்டு பிடிக்க தடையா இருப்பது. எங்கள் சூரியக் குடும்பத்து கோள்களில் மனிதர்கள் போன்ற உயிர்கள் வாழும் கிரகம் இல்லை,போனாப் போகுது எண்டு செவ்வாய்க் கிரகத்தில் பக்டிரியா போன்ற மைகிரோ லெவல் உயிர் இருக்கலாம்., அயலில் உள்ள அல்பா செந்தூரி சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தில் சித்தப்பா,பெரியப்பா,அத்தை,மாமி இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், அங்கே போகவே ஒளியின் வேகத்தில் நாலரை வருடம் பிரயாணம் செய்ய வேண்டும்,

                                           ஒரு ஒளி ஆண்டு 9.5 டிரில்லியன் கி.மீ, இன்னும் ஒளியின் வேகத்தில் பறக்கும் தொழில் நுட்பம் தியரி வடிவிலேயே இல்லை. அப்புறம் எப்படி வேறு கோள்கள் இருக்கு எண்டு உலகக்கோப்பை காலப் பந்து ஸ்கோர் விபரம் போல சிம்பிளா சொல்லுரார்கள் எண்டு கேட்பிங்க, சொல்லுறேன். ஆனாலும் உண்மையில் புதிய கோள்களைப் பற்றிய மனிதர்களின் தேடுதல் வேட்டையில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி அண்மையில் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லுரார்கள். முக்கியமா எங்கள் பால் வீதி கலக்ஸ்ஸிக்கு மிக அருகில் உள்ள ஒன்றுவிட்ட உறவு முறையான அன்றோமிடா கலக்ஸ்சியின் அலை பாயும் கூந்தலில் நிறைய நம்பிக்கை நட்சத்திரங்கள் இருக்கு எண்டு சொல்லுறார்கள் 


                                       கோள்கள் தனியா சுயமாக ஒளி உமிழ்வதில்லை, நட்சத்திரங்கள் என்ற சூரியன்கள் ஒளியுமிழும், அதால தான் இருட்டான வானத்தில் நிறைய வெள்ளிகள் மின்னுது. அதை நாங்க பார்க்க முடியும். பிரபஞ்சத்தில் கோள்கள் தனியாக இல்லை,எப்படியோ ஒரு சூரியனையோ,அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூரியனையோ சுற்றிக்கொண்டுதான் கோள்கள் இருக்கும், எங்கள் சூரியன் ஆடிக்கொண்டு இருக்கு, காரணம் அதை சுற்றி பல கோள்கள் சுழறுவது, அந்த கோள்களை இழுத்து வைத்து இருக்கும் சூரிய ஈர்ப்பு விசை,கோள்களின் பருமன்,சரிவு ,தூரம் கொடுக்கும் சமனற்ற தன்மையில் உருவாகும் இழுவிசை எங்கள் சூரியனை வைச்சு ஆட்டுது. 

                        எங்கள் கண்ணுக்கு அது ஆடுறது தெரியாது, ஆனால் ஆடுது, அதே போல பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள தொலை தூர நட்சத்திரங்கள் ஆடுது, அப்படி ஆடும் நட்ச்சத்திரங்களை சுற்றிக்கொண்டு கோள்கள் இருக்கலாம் எண்டு சொல்லுறார்கள், அதை கெப்ளர் போன்ற விஷேட தொலை நோக்கிகளால் அவதானித்து கோள்களில் இருப்பிடம்,அளவு,சொல்லுறார்கள்.

                                      பூமியிலிருந்து 500 ஒளி ஆண்டுகள் தொலைவில் கெப்லர் 186எஃப் என்ற ஒரு கோள் பூமி போலவே இருக்கு எண்டும், காதல் செய்து கலியாணம் கட்ட மிதமான வெயிலும், தொட்டில் ஆட வைக்க மிதமான குளிரும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த கோளில் மதுபான வடி சாலைக்கள் உருவாக்க தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதியாக உள்ளதாகவும் நாசா விஞ்ஞானிகள் அண்மையில் சொன்னார்கள். கேட்க சந்தோசமா இருந்தது,இதை விட வேற என்ன ஒரு புதுக் கோளில் வேண்டும் ,சொல்லுங்க பார்ப்பம், ஆனாலும் அது பூமியைவிட 10 மடங்கு பெரியதாகவும், பாறைகள் நிறைந்தும், அதிக ஈர்ப்பு சக்தியுடன் இருக்கிறது என்றும் சொல்லுறார்கள்.

                                    சில வருடம் முன்னர் வின் வெளிக்கு அனுப்பிய கெப்ளர் தொலை நோக்கியின் அல்பா,காமா கதிர்கள் புதிய உத்தி மூலம் புதிய கோள்களுக்கான தேடல் தொடங்கியபின் அதிகப்படியான கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன . இதுவரை கோள்கள் எண்டு அடையாளம் காணப்பட்ட கோள்களின் எண்ணிக்கை சில வருடங்களியே வியக்கத்தக்க வகையில் இரு மடங்காக உயர்ந்திருக்கிறது. அதில் பூமி போலவே சாதிச் சண்டை ,இனச் சண்டை,மொழிச் சண்டை,மதச் சண்டை,எல்லைச் சண்டை பிடிக்கக் கூடிய கிரகங்களும் இருக்கு எண்டும் உத்தரவாதம் தந்து நெஞ்சில பாலை வார்க்கிறார்கள் நாசா ஜோன்சன் ஸ்பேஸ் செண்டர் விஞ்ஞானிகள்.

                                        நாங்கள் ஏன் வேறு பூமி போன்ற கோள்களை வேலை மினக்கெட்டு தேட வேண்டும் எண்டு ஒரு கேள்வி இருக்கு .ஒரு காரணம் சில வேளை எங்களைப் போலவே மனிதர்கள் அங்கே வசித்தால்,தொடர்பு ஏற்படுத்த , அடுத்த முக்கிய காரணம் எங்கள் எல்லார் தலை விதியிலையும் ஏற்கனவே எழுதி இருக்கு. நாங்கள் வசிக்கும் பூமியை இன்னும் சில மில்லியன் வருடத்தில் எங்கள் சூரியன் விழுங்கி, அதுவும் வெடித்து சிதறப் போகுது,அந்த நேரம் மனித இனம் வேறு ஒரு கிரகத்தில் இடம் தேடித் போக வேண்டும்,அதுக்கு இப்பவே வேற கிரகம்,அண்மையில் உள்ள சூரிய தொகுதியில் தேடிப் பிடிச்சு வைக்க வேண்டும் , மில்லியன் வருடங்களில் ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்யும் தொழில் நுட்பம் வரப்போகுது.

                              சும்மா டாக்சியில் ஏறிப் போற மாதிரி எல்லாரும் இந்தப் பூமியைக் கைவிட்டு வேற ஒரு கோள் போயே ஆக வேண்டும், அங்கே போயும் கோள் மூட்டவும் ஒரு கோள் இருக்கும் அந்த நேரத்தில், கடைசியா பெட்டி படுகையோடு ,நானோ டெக்னோலோயியில் டிக்கெட் புக் பண்ணி, ஹிலியம் 3 என்ற ஹைபர் எனேர்யி சக்தியில் இயங்கும் இன்டர் கலக்ஸ்சி ரொக்கெட் இல் சுப நேர ராகு காலம் பார்த்து , வலது காலை வைச்சு ஏறும் நேரம் மறக்காமல் காணி உறுதி, காணி எல்லைச் சண்டை வழக்கு போட்ட பதிவுகள் , நகை நட்டு, அடிப்பெட்டியில் மறைச்சு வைச்ச சீட்டுப் பிடிச்ச காசு, நிலத்துக்க தாட்டு மறைச்சு வைச்ச வைப்பு சொப்பு எல்லாத்தையும் மறக்காமல் அந்த நேரம் எடுத்துக்கொண்டு போனால் சரி,


                  அவளவுதான் , ஜோசிக்கிற மாதிரிப் பெரிய கஷ்டம் ஒண்டும் இல்லை.

.

No comments :

Post a Comment