Friday, 26 January 2018

ஸ்டோக்ஹோலம்....001.



ராஜஸ்தானத்து ராஜபுத்திர சரபோஜி மன்னர்களின் அரண்மனை போலிருக்கும் இந்த இடம் ஒரு ரெயில்வேஸ்டேஷன். இந்த இடம் இருப்பது இந்திய உபகண்டத்தில் இல்லை. இருப்பதுவோ ஆர்டிக் சேர்க்கிள் என்ற வடதுருவத்தில். நிறைய வருடங்கள் எதுவும் ஜோசிக்கத் தேவையில்லாமல் கடந்து பயணித்த இந்த பிரயாண மையப்புள்ளி . சுவீடனின் தலைநகரத்தில் உள்ள ஸ்டோக்ஹோலம் மத்திய சென்ட்ரல் ரெயில்நிலையம்.
                                                                    அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையம் போலவே ஈ அடிச்சான் கொப்பி போல அதே அமைப்பில் வடிவமைக்கப்பட்டது. .விசாலமானது, சுவர்கள் முழுவதும் வாட்டர் கலர் ஓவியங்கள் அலங்கரிப்பு, உப்பரிகைகளில் வண்ணமயமான குமிழிகளில் தொங்கு விளக்குகள், என்று தமிழ் சினிமாவில் பெண்கள் குரூப் டான்ஸ் ஆடுவது போன்ற காட்சியில் பின்னணியில் வரும் காட்சிபோலிருக்கும் இடம்
                                                            சுவீடிஷ் தொலைதூர நகரங்களையும் , ஐரோப்பிய நாடுகளையும் நோக்கிப் புறப்படும், அங்கிருந்து வந்து இடைத்தங்கி ஓய்வெடுக்கும் பயணிகளை வேடிக்கைபார்ப்பது எப்பவுமே அதிசயங்கள் குறையாத ஆச்சரியம் கலந்த மனநிலைகளை உருவாக்கி விடுகிறது. இளம் காதலர்கள் இந்த ரெயில் நிலையத்தில் பயணத்துக்காய்ப் பிரியும் போது இழுத்து வைத்து இடைவெளியில்லாமல் முகம் செருகி முத்தமிட்டுக்கொள்கிறார்கள். அது இந்த இடத்துக்கு இன்னுமொருபடி அதிகமாக ரொமான்டிக் கொடுக்க. வயதானவர்கள் கைகளை இறுக்கிப்பிடிக்கிறார்கள். அது மனதைப் பிசையும் கனதியாகவிருக்கு
                                                      உலகத்தின் பல மொழிபேசும் மக்களும் , பல நிற மக்களும் பகல் எல்லாம் நிரம்பி வழியும் இந்த இடம் காசகசகச என்று தி நகர் ரெங்கநாதன் தெருபோலதான் இருக்கும். ஆனால் எப்போதும் எல்லாத்திலும் முக்கியமாக ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சல் இல்லாமல் வழிகளில் விட்டுக்கொடுத்து ஒரு ஒழுங்குமுறை இருக்க நேரத்தை துரத்தும் அவசரங்கள் பரபரப்பாக இந்த இடத்தை வைத்திருக்கு
                                                          வழியனுப்புபவர்களும், வரவேட்பவர்களுமாக நகர்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் சந்திப்பு மையமும் இதுதான்.அதனால்தானோ தெரியவில்லை இடங்களை மாற்றி மாற்றிப் பிரயாணிக்கும் மனிதர்களின் சுழட்ச்சியை குறியீடாகக் காட்ட சுழலும் பூமிப்பந்தை சிட்பமாகச் செய்து வைத்துள்ளார்கள் போல இருக்கு .
                                                      இப்போது வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தில் இன்னொருவிதமான அனுபவம் தருகிறது இந்த இடம். காலமும் நேரமும் மாறிக்கொண்டிருக்கும்போது நம்மைச்சுற்றி உள்ள உலகத்தின் தோற்றங்களும் அவைகளுக்கு உள்ளே மறைமுகமாகப் பதிவாகி இருக்கும் செய்திகளும் நிறையவே கற்றுக்கொள்ளும் மனநிலைக்கு ஆத்மாவைத் தள்ளிவிடுகிறது.
                                                  ஒரு நாடோடியாக நாடுகள் சுற்றிச் சுற்றிப் பார்ப்பத்துக்கு எனக்கு எப்பவுமே விருப்பம். அதில எப்பவுமே நிறைய தகவல்கள் எழுத்துவதுக்கு சேர்ந்துகொள்ளும் . ஒரு புத்தகத்தை இருந்த இடத்தில இருந்து படித்து பெற்றுக்கொள்ளும் அறிவைவிட நேரடியாகவே வாழ்க்கைப் பாதையில் பயணித்து திருப்பங்களில் அடிவேண்டும் போது கிடைக்கும் அனுபவத்தில் நிறையவே திரில் இருக்கு .
                                                     எனக்கென்று ஏற்கனவே எழுதிவைத்த பாதைகளை அவ்வளவு இலகுவாக மாற்றி நடக்க முடியாது போலிருக்கு. அதிலேதான் எதிர்பாராத சுவாரஸ்யங்களை, மனிதர்களையும், நட்பையும் , அன்பையும், உதவும் குணத்தையும் ஆழமாக உணரும் நேரத்தில் உலகத்தை கொஞ்சம் கருணையோடு நின்று பார்க்கும் வாஞ்சையுள்ள வாழ்க்கை ஒன்றையும் கற்றுக்கொள்கிறேன்....




பொன் எழுத்துக்களால் ஒரு நாளுமே என் வரலாறு எழுதப்படப்போவதில்லை , அதுதான் கொடுப்பினை இல்லாமல் கிடப்பில கிடக்குது என்று நினைச்சாலும் ஒரு கரிக்கட்டைப் பெஞ்சிலால் தன்னும் என் வரலாறு எழுதப்படாமலிருக்கும் இன்றைய நாட்களில், ஒரு முக்கியமான வரலாற்றுச் சம்பவத்துடன் நேரடியாக அதுவும் முதன் முதலில் இணையும் சந்தர்ப்பம் ஒன்று அண்மையில் இப்போது ஆண்டி மடம் கட்டி அண்டிப் பிழைத்துக்கொண்டிருக்கும் ஸ்டோக்ஹோலம் நகரத்தில் சென்ற பத்தாம் திகதி நடந்தது. 

                                                             பன்னிரண்டு வருடங்கள் காலமெடுத்து , மில்லியன் குறோணர்கள் செலவு செய்து, ஸ்டோக்ஹோலாம் நகரத்தின் அடி மடியைக் குடைந்து இரண்டு புதிய ரெயில் நிலையங்கள் உருவாக்கி உள்ளார்கள், அந்த நிலையங்களைக் புண்ணியகாலத்தில் கடக்கும் முதல் முதல் ரெயில் வெள்ளோட்டத்தில் அந்த ரெயிலில் பிரயாணிக்கும் வாய்ப்பு வீராளி அம்மாளாச்சி கருணையால் கிடைத்தது. இந்த நகரத்தை , இந்த சுவீடன் நாட்டை விட்டுப் போனாலும் இன்னொரு முறை வரும்போது இந்த நிகழ்வு நிச்சயமாக ஒரு முக்கிய சமபவமாவே இருக்கும். 

                                                                    இந்த இரண்டு ரெயில் நிலையமும் அதல பாதாளத்தில் இருக்கு. முன்னர் இயங்கிய பலதளங்களில் பிரயாணிகளை உள்வாங்கிய இணைப்பு ரெயில்நிலையத்தை மூடிப்போட்டு ரெண்டு ரெயில் நிலையத்தில் சுருக்கமாக அல்லாடி அலைக்கழியும் உபரி நேரத்தை சுருக்கியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.. எலிவேட்டர் என்ற ஏற்றி இறக்கும் மின்சாரப்படிகளில்தான் உள்ளிறங்கி வெளியேற வேண்டும். ஐரோப்பாவில் இன்றய நடப்பு நிலவரத்தில் மிகவும் முன்னோடியான அல்றாமோடேன் டெக்னோலஜியில் உருவாகியுள்ள புதுமையான ரெயில் நிலையம் இந்த இரண்டும் என்கிறார்கள் .

                                                                 எப்படியோ மூன்று தட்டுக்கள் கீழே இறங்கி இறங்கிப் போகவே கல்லறை வாசம் வருவது போலிருக்கு. அவ்வளவு தூரம் கீழ்நோக்கி பிரயாணிக்க வேண்டியிருக்கு. இது எப்படி நேரத்தை சுருக்குது என்று விளங்கவில்லை. ஆனால் கருங்கல்லைக் குடைந்து அந்த பாறை முனைகளை அழகாக சலவைக் கற்களில் உருவாகும் நளினங்களுடன் வடிவமைத்திருப்பது அதிகப்படியான பய உணர்வுகளைத் துரதியடித்து ஆக்ரா தாஜுமகாலை நினைக்கவைத்து முன்னுக்கோ பிண்ணுக்கோ நடக்கும் இளம்பெண்ணில் காதலை வரவழைத்துவிடுகிறது.

                                                                கடைசி இறக்கத்தில் உள்ள ரெண்டு ரெயில் நிலையமும் உள்ளகச் சுவர்களில் உண்மையில் மாடர்ன் ஆர்ட் மியூசியம் போலவே இருக்கு. அவ்வளவு ஆர்ட் ஓவியங்கள்,,சிட்பங்களை கொண்டுவந்து சரியான இடங்களில் பிரத்தியேகமான வெளிச்சம் விழுத்தி வைத்திருக்கிறார்கள். ஓவியங்களும் சிட்பங்களுக்கும் ஒளியும் நிழலும் எப்படி முக்கியமென்று இங்கேதான் அவதானிக்க முடிந்தது,

                                                                     தலைக்கு மேலே கிரிஸ்டல் சில்லுகள் மிதமான வெளிச்சத்தில் நட்சத்திரங்களைப் போல மின்னிப் பின்னந்தி மழை பொழிய ,பாதங்களோ சில இடங்களைக் கடக்கும் போது காலடி ஓசைகளைச் சுரங்கச் சுவர்களில் மோதி எதிரொலி எழுப்புவது போல அமைக்கப்பட்டுள்ள கலையம்சம் உண்மையில் அந்தப் படைப்பாளிகளின் கட்பனை வீச்சைச் சிலாகித்துப் பிரமிக்க வைக்குது 

                                                                                 முன்னமெல்லாம் நேரமுள்ள காலமொன்றில் மனிதர்கள் கலையைத் தேடி ஆர்ட் கலரிகளுக்குப் போவார்கள்.இப்பெல்லாம் அப்படியே இல்லையே அதனால அவசர மனிதர்கள் நடமாடும் இடங்களைத் தேடிக் கலைகள் வந்துவிட்டன போலிருந்தது. கலை அன்றாட வாழ்க்கையின் இன்னொரு பரிமாணம் என்றும் அதை ஒரு பிரயாணத்துடன் இணைப்பது அலாதியான நினைவலைகளை மீட்டும் என்பதும் போலிருக்கு சும்மா சுற்றிப்பார்க்கவே, தெரிந்தது. 

                                                                                              சுவீடனில் முக்கியமான கலைப்படைப்பாளிகளின் படைப்புகள் நிறையவே உள்ள இந்த ரெண்டு ரெயில் நிலையமும் தேடல் உள்ளவர்களின் வாழ்வின் இன்னொரு பக்கத்தை ரம்மியமான ஒரு ரயில் பயணத்தில் இயன்றளவு வடிவமைத்து விடுகின்றன. ஸ்டோக்ஹோலம் வரும் யாருமே இந்த இரண்டு ரெயில்நிலையங்களுக்கு உள்ளே நுழைந்து கொஞ்சம் மூச்சு வாங்கி உலாத்திப்போட்டு வெளியேறும் போது நிச்சயமாக கொஞ்சம் பூமியின் அடியாளாத்தின் வாசனையையும், அதிகமாகக் கலையுணர்வின் மஹோன்னதமான உணர்வுகளை நினைவாகவும் மனதோடு எடுத்துக்கொண்டுதான் வருவீர்கள்!


" பெண்டில்டோர்க் " இதுதான் சுவீடிஷ் மொழியில் இந்த வகை ரெயிலின் பெயர். அதன் அர்த்தம் சுவர் மணிக்கூட்டில் பெண்டுலம் என்று ஒன்று தொங்கிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நிக்காமல் ஆடிக்கொண்டு இருக்குமே அதேபோல இந்த ரெயிலும் ஸ்டாக்கோலம் மைய நகரத்தை ஊடறுத்து இணைத்துக்கொண்டு நகரத்தின் நான்கு திசைகளிலும் இருக்கும் புறநகரங்களின் விளிம்புகளை இணைத்துக் குறுக்கமறுக்க ஓடிக்கொண்டிருக்கும்.
                                                                    பெண்டில்டோர்க் என்று பொதுவான பெயர் இருந்தாலும் , அவற்றுக்குத் தனித்தனியான பெயர்களும் இருக்கு, ஆனால் சுவீடனில் ரெயில்களுக்கு பெயர் வைப்பதில் ஒரு புதுமை செய்துள்ளார்கள்.உடம்பைச் சல்லிமுட்டி போலக் குலுக்கி உடம்பில எங்கெங்கே எலும்பு மூட்டுக்கள் பொருந்துது என்று எப்பவுமே நினைவுபடுத்தும் இலங்கை ரெயில்கள் போல இல்லை இவைகள். மெர்சிடஸ்பென்ஸ்க் காரில் பயணம் செய்வது போன்ற குஷியான இந்தவகை ரெயில்கள் பதின்நாலு நேரம் காலம் இல்லாமல் இரவு பகல் என்று கடமை உணர்ச்சியோடு ஓடுது,
                                                                         இலங்கையில் ஓடும் ரெயில்களுக்கு யாழ்தேவி, உத்தரதேவி, உத்தரட்டமெனிக்கே என்று தமிழிலும் சிங்களத்திலும் பெயர்கள் இருக்கு. அந்தப் பெயர்களுக்கு காலம் இடம் பெயர் என்ற காரணகாரிய இடுகுறி விளக்கம் இருக்கு. ஏனென்றால் அதை விவரண நோக்கத்தில் வைத்தவர்கள் வளர்ந்த மனிதர்கள் . சுவீடனில் ஸ்டாக்கோலமில் ஓடும் " பெண்டில்டோர்க் " ரெயில்களுக்கு பெயர் வைத்துள்ளவர்கள் குழந்தைத்தனம் மறையாத நேர்சரி பாடசாலைப் பிள்ளைகள். பெயர்களும் விரல் சூப்பும் குழந்தைத்தனமாகவேயிருக்கு !
                                                                        அவற்றுக்கு விளக்கம் என்று ஒண்டும் இல்லை. சின்னக் குழந்தைகள் அந்த ரெயில், நாட்டியக்காரயின் சலங்கைபோலக் குலுங்கி , நாக்கிளிப்புழு போல அசைந்து, தோகைமயில் போல ஆடிப் , பாம்புபோல நகருவதை பார்க்கும் போது அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைப் பெயராக வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை ரெயிலில் எழுதி எந்தப் பாடசாலைப் பிள்ளைகள் அப்படிப் பெயர் வைத்தார்கள் என்றும் விபரம் அதில் சேர்த்து இருக்கிறார்கள்.
                                                                            பெண்டுலம் போல வாழ்க்கையோடு அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அதைக் கவனிப்பதில்லை. எனக்கு அதுதான் மிகவும் பிடித்த ரெயில்ப் பிரயாண நேரமில்லா சுவாரசியம் !
                                                                                 படிப்பறிவை ஒருபக்கமா ஓரங்கட்டி வைச்சுப்போட்டு ஜோசித்துப்பார்த்தா அந்தப் பெயர்கள் அர்த்தமில்லாத கட்பித்தங்களிலும் ஏதோவொன்றை நெஞ்சுக்கு நெருக்கமாக்கிவிடுவது உண்மையில் ரசிக்கும்படியாகவே இருக்கு. இந்த உலகத்தில் உள்ள எல்லாப் பொருட்களுக்கும் குழந்தைகள் பெயர் வைக்கும்படியான ஒரு நிலைமை இருக்குமென்றால் இந்த உலகம் எவ்வளவு முழுமையாக ரசிக்கும்படியாக இருக்கும் ,,இல்லையா,, சொல்லுங்க பார்ப்பம் ?



Monday, 22 January 2018

சொல்லமுடியாத காரணங்கள் !

கவிதைகளை எப்படி அடையாளம் காண்பது, அவற்றை எப்படி மொழியோடு விளையாடும் வார்த்தைகளில் அர்த்தப்படுத்துவது என்பதுபற்றி எப்பவுமே  விவாதங்கள் அரங்குகளில்  நடக்குது. பல பிரபலமான  எழுத்தாளர்கள் கவனிக்கும்படியான கருத்துக்கள் எப்போதும் தங்கள் பதிவுகளில்  சம்பந்தமாக எழுதுகிறார்கள்.  வாசிக்க நமக்கும் பயணிப்பதுக்கு இலக்குகள் வைத்து  நல்ல திசைவெளிகளும்  கிடைக்கலாம் , அண்மையில்   தேவதச்சன் பற்றி ஒரு கட்டுரை வாசிக்கக்கிடைத்தது .                                   
                                                                "தேவதச்சன் கவிதைகளில்  சமூக மனிதன், அக மனிதன் என இரண்டு எதிர்நிலைகள் காணப்படுகின்றன. எது சமூகமனிதனின் குரல். எது அக மனிதனின் குரல். இந்த இருவரையும் பிரிக்க முடியுமா. இந்த இரண்டின் உருவாக்கம் எவ்வாறு உருவாகிறது. உண்மையில் இது நிழலுக்கும் உருவத்திற்கும் உள்ள தொடர்பு போன்றதா என்பதை விவாதிக்க வேண்டியுள்ளது " என்று  கவிஞ்சர் தேவதச்சன் கவிதைகள் பற்றி ஒரு பதிவில் எழுதி இருப்பார் எஸ் ராமகிருஷ்ணன் .

                                                                     40 வருடங்களுக்கு மேலாககே கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர்    கவிஞ்சர் தேவதச்சன் . அவரோட சில கவிதைகளாவது உங்களை கட்டாயம் பாதித்து ,ஜோசிக்க வைத்திருக்கும்.. அவரின் " உடுப்பு தோய்க்கும் போது குருவிகளின் குரல் " என்ற கவிதை பலவருடம் முன் படித்தும் இப்பவும் நல்ல நினைவு இருக்கு. எப்படிச் சுற்றியுள்ள உலகத்தை பரிமாணங்களில் உடைத்து அதுக்குள்ளே இருக்கும் ரசனைகளை வெளியே கொண்டுவருவது என்பதுதான்  கவிஞ்சர் தேவதச்சனின் திறமை .

                                                         வழக்கம்போல முகநூலில்  எழுதிய    என்னுடைய  சின்னக் கவிதை போன்ற பதிவுகளை  வலைப்பூங்காவில் தூவிவிட்டு   உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !
*
நிரப்ப 
வெற்றிடமில்லாமல் 
கத்திக்கதைத்துக்கொண்டு 
போதை மனிதர்கள்,
நடுங்கியபடி
சனிக்கிழமையிரவு,
முட்டிமோதிக்கொள்ளும்
மதுக்கிண்ணங்கள்,
கைகளைப்
பிசைந்தபடி
காலியான நாற்காலியில்
நான் !
*


*
தப்படிகளில் 
தாளம் தவறும் 
நடித்துடிப்பு !
ஒறு 
நொடியில்
தமனித்தசைகள்
வியர்த்துக்களைப்படைந்து
மறுகணம்
இதயலயிப்புடன்
ஈடுபாடுகள் தொடருது !
*


*
எப்பவோவொரு வயதில் 
வாசித்துமுடிக்காமல் 
மூடிவைத்துவிட்டுப்போன 
புத்தகம்தான் !
தலைப்பை
மறுபடியும்
நேற்றுச் சந்தித்தபோது
சட்டென்று
இடைமறித்தது
அமைதி !
*


*
ஒரே நேரத்தில் 
போட்டிபோட்டு
மூன்று 
சலங்கைச் சத்தம் !
நீ
நடந்து வந்துகொண்டே
வாய்விட்டுச்
சிரித்தபோது !
*


*
தூக்கம் 
முன்னொரு காலத்தில் 
வடிவமைக்கப்பட்ட 
குறுகலான பாதை ,
முடிவுகள்
பூதாகரமாகத் தெரிய
அவரவர்
கனவின் கதவுகள்
திறக்கப்படுகின்றன !
*


*
அச்சடிக்கப்பட்ட 
விடைத்தாள் போலிருக்கு 
அடையவேண்டிய 
இலட்சியங்கள் ,
கீறிட்ட
இடங்களில்
புள்ளடி போட்டபடி போகுது
வாழ்க்கை !
*


*
யாரோ
காலடியில் 
வந்ததுபோனதுக்கு
அடையாளமாய் 
புதைத்துவிட்டுப்போன
ஒற்றைச் சப்பாத்து,!
கொஞ்சம்கொஞ்சமாக
திமிராகவே
விழுங்கிக்கொள்கின்றது
பனிப்பொழிவு !
*


*
தும்பிக்கையோடிருப்பதால் 
வேழமுகத்துப் 
பிள்ளையார் 
ஆனை போலப் 
பலமென்கிறார்கள் !
எனக்கென்னவோ
அந்தக் கையில்
நம்பிக்கையின்
சாயல்தான்
அதிகம் !
*


*
அலைச்சல் 
முடித்து திரும்பும் போது 
இருள் விரியும் 
வெண்பனி நடைபாதைகள் !
திணறலால்
தவறி விடப்பட்ட
குளிர் மூச்சில்
சுவாசிக்க ஒன்றுமில்லை !
நடுக்கத்தை மட்டுமே
பரிசளித்துவிட்டுத்
தொலைகிறது வெளிச்சம் !
*


*
வருத்தம் 
தெரிவிக்கவேண்டிய
சூனிய சூழலுக்குள் 
காலப்பிரஞ்சை !
பெயரளவிலும்
ஒரு
எதிர்வினையை ப்
பதிவுசெய்யாமலேயிருக்கு
வாழ்வு !
*


*
என் 
பலவீனத்தையும் சேர்த்தே 
இந்த வரியைச் 
சொல்கிறேன்! 
பேசுவதுக்கு
எதிர்பார்ப்பு வேண்டுமே ஒழிய
இடையே நிகழுமிந்த
பனிப்போரை
முடித்து வைக்க விரும்பும்
அறிவுரைகள்
அல்ல !.
*


*
எது எப்படியோ 
ஒரு 
குருட்டு 
நம்பிக்கையில் 
கனவாவது
கண்டுகொண்டே கடைசிவரை
உனக்கு
நண்பனாகவே
நான் இருப்பேன் !
*


*
" வேறென்ன ? "
இந்த வார்த்தையோடுதான் 
நீயும்
உரையாடலிருந்து
அறுந்து போகிறாய்
நேரத்தை வீணடித்த
இருவருக்கும்
கிடைத்த எதிர்பார்ப்பு
முழுக்க முழுக்க
ஏமாற்றம் !
*


*
இரவெல்லாம்
விறைத்துப் போய்
வெளி வாசலில்
சிதைந்து கிடக்கிறது
உறைபனி !
காலை எழுந்துகொள்ளும்
உற்சாக தருணங்கள்
சிறிதளவே மிச்சம் !
வேறென்ன ?
இந்த வார்த்தையோடு
நான்
சலித்துப்போகிறேன் !
*


*
கனதியான
அந்தக் கசப்பு வார்த்தையை 
நீ 
விரும்பியே
சொல்லாமலே விட்டிருக்கலாம்,
விட்டிருந்தால் ,
சொல்ல முடியாத
காரணங்களாவது
இறவாதிருந்திருக்கலாம் !
*


*
பொறுப்புகள் 
செழுமையாக 
வாய்க்கப் பெற்றிருந்தாலும் 
உன் 
பொறுமையை
உலகளாவிய விஷயமாக
மாற்றுவதில்
எதிர்மறையாகத்
தோற்றுப்போகிறதடி
எந்தக் கவிதையும் !
*


*
என் 
மன அழுத்தம் 
வடிவமைக்கும் 
தலை குனிவுகள், 
கால்கள்
சுமையாகி விட்டபோதும்
தோல்வியிலும்
உணர்வுகளை உயிர்ப்பிக்கும்
உன்
இறுகப்பற்றிய
கைகள் !
*


*
எந்தவொரு 
வர்ண ஓவியனும்
மென்மைகளில் 
அதீத முயற்சி செய்து 
வரவழைக்க முடியாத
பிரமையின் பிரதி
உன்
புன்சிரிப்பு முகம் !
*


*
முழுக்கவே 
வர்ணனைகளற்ற 
வசனங்களில் 
ஈரநெஞ்சின் மொழியில் 
நம்
இருவரிடையே
நிகழும் உரையாடல்
மவுனம் !
*


*
பிடிவாதக் 
கொள்கைகளும் 
புதிர்க் குழப்பங்களும் 
பிரமாண்டங்களோடு 
நீர்த்து விடுவதால்
பலநேரங்களில்
யாரோடும் கதைக்கவே விடுகுதில்லை
தனியறுநிலையில்
அதுவாகவே ஒதுங்கிப்போகும்
பிடிவாதம் !
*


*
சோடனைகளோடு
பெரிதுபடுத்தவிரும்பவில்லை 
கடைசிப் புகலிடம்,
நிறை நம்பிக்கை,
வாழ்வியல்ப்பிடிப்பு ,
சாதிக்கும் பேராசை ,
உதவும் மனது,
இப்போதைக்கு இதுவேதான்
இருப்பு முன்னிறுத்தும் வாய்ப்புகளெனில்
எதைத் தேர்ந்தெடுப்பது?
*


*
நாளையதினம் 
என்னவாகவிருக்கும் என்பதைக் 
குறிப்பறிந்து 
சோம்போறித்தனமான 
இரவுக்கள் 
நேரத்தையும் காலத்தையும்
சமாந்தரமாகச்
சுற்றிவளைத்து
வெளிச்சங்களை விழுங்குது !
*


*
நினைவிருக்கிறதா ?
உனது 
கண்ணீர்த்துளிகளை
நீயும், 
என்னுடையதை
நானும்,
அவரவர்
விரல்களால்
வழித்துத் துடைத்துத்தானே
பிரிந்தே போனோம்
நினைவிருக்கிறதா ?
*


*
இன்னும் 
என்னவெல்லாமிருக்கோ 
மடைதிறந்த 
கதைத்துக்கொண்டேயிரு,
சலித்துப்போய்
சுரமிழந்து நிறுத்திவிடாதே !
எங்கோவொரு
அலைவரிசையில்
உனக்குள்ளிருந்து
என்னை
கண்டுபிடிப்பேன் !
*


*
நீ
விரும்பும்வரையில்
மரங்கொத்தி,
நான் 
திரும்பும் வழியில்
திசைகளை வெறித்த
பட்டமரம் !
உனக்காகத்தானே
வாறதெல்லாம்வரட்டுமென்று
காத்திருக்கிறேன் !
*


*
நெறிப்படுத்த 
மேட்கொள்ளப்பட்ட 
எல்லா 
முன்முயற்சிகளும் 
பின்வாங்கிவிட்டன
அபத்தமான
வார்த்தைச்சிக்கலில்
தன்னை மாட்டிக்கொண்ட
கவிதையில் !
*


*
மவுனச்சிறையில் 
முடங்கிப்போன 
காலத்தை 
பாழ்வெளியெங்கும் 
சுமந்துகொண்டு
இடம் தொலைத்ததுபோல
நடந்து திரிந்து
எனக்குள்ளே வந்துசேர்ந்தேன் !
*


*
மவுனச்சிறையில் 
முடங்கிப்போன 
காலத்தை 
பாழ்வெளியெங்கும் 
சுமந்துகொண்டு
இடம் தொலைத்ததுபோல
நடந்து திரிந்து
எனக்குள்ளே வந்துசேர்ந்தேன் !
*


*
எதிர்ப்பில்லாத் திசையில் 
பார்ப்பதுதான் 
ஒரு 
பறவையின் 
இலட்சியமென்று
கடினமான உராய்வுகளிலும்
சிறகுகளைத்
தாங்கிப் பிடிக்கும்
காற்றுக்கும்
நன்றாகவே தெரியும் !
*


*
ஒரு
சின்ன உயிரின்
இழப்புக் குறித்து 
வருத்தப்பட்டுக்கொண்டிருந்த 
சம்பவத்துக்கு
ஒருசில அடிகள் தள்ளி
என் கனத்த
இதயத்துடன்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறேன்..!
*


*
மெதுவாக அசையும் 
விடிகாலைப்பனி ,
அசையாத 
நீலாம்பரி நீரேரி,
அக்கறையோடு அணைப்பதுபோல
நெஞ்சோடு நீரலைகள்
நீந்தியதால்
பருவ இலையொன்று
பக்குவமிழந்து விட்டது !
*


*
எதிர்பார்த்தைவிட 
தயங்கியபடியே 
எத்தனையோ வருடங்கள் !
இரண்டு புள்ளிகளை 
இணைக்குமிடத்தில்
தூக்குமாட்டிய
தற்கொலை போலிருந்தது
அலைக்கழித்தும்
கலையாமலிருந்தவந்த
சந்திப்பு !
*


*
ஆவிபறக்கும்
கடுங்கோப்பி
பூனைகள்
நடமாடித்திரியும் 
இருட்டை கொண்டுவருகிறது,
அதன்
வறுத்தெடுத்த வாசனையில்
பிரியங்களேதுமில்லை
பால்
கலந்தபோது
உன்
நிறம் வந்துவிட்டதடி !
*


*
வயதுக்குவந்த
மழைத்துளியின்
சோம்பல் முறிப்பில்
அலைந்தோடி 
தூரத்தில் சென்ற
தாவனித் துப்பட்டா
வானவில் !
*


*
தீராப் பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத 
தவிப்பு
காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
சருகு !
*

*
இருட்டில்
கலவி நெருக்கமாகும்
ஒரு
பெண் பூனையின் 
விலகி வெளிப்படும்
உச்சக்கட்ட அலறல்
ஒரு
இரவு முழுவத்துக்குமான
பதற்றத்தை
உருவாக்கிவிடுகிறது !
*


*
நுட்பமான
உணர்ச்சிப்பரிமாற்றங்களோடு
வயதான
நேரமெழுப்பி மணிக்கூடு , 
அதிகாலை
இயக்கி வைத்தபடியே
எழுப்பிவிடும்
மிரட்டலான
அகங்காரத்தைத் தவிர்த்து
அதற்கென்று
சுயவிருப்பங்களேயில்லை !
*


*
நிலவு
போதை மேகங்களோடு
வெறித்தூறிக்கிடந்த
நிசிகடந்த நேரம் 
தேவதைகளின்
குரலெடுத்துப்பாடிய
முகமூடி
ஜன்னல் முகம்
யாருடையது ?
அதன்பிறகு
இருட்டு நிசப்தமாகிவிட்டதே !
*


*
அங்கேதானே 
மாக்கோலத்துக்குப் போட்டியாக 
பொங்கலுக்கு 
நிறச்சேலை உடுத்தினாய்,
இங்கே
எதட்காக
பால் பொங்கி
கரும்பு வில்லோடு
அடங்காப் பெருங்கனவு ?
*

*
எனக்கோ
இடை நழுவிவிடும்
கவனச்சிதறடிப்புக்கள் !
உனக்கு 
எல்லாமே
புரிந்து விடுகிறது
ஒரேயொரு
நுனிப் பார்வையில் !
*


*
அறைக்கதவை
அகடித் திறக்கச்சொல்லும்
வெளிச்சங்கள் !
கழட்டித் 
துடைக்கும் போதுதான்
கவனித்தேன்
வார்த்தோல்ச் சப்பாத்தின்
பாதங்களில்
பனி சிதறி உதறிய
வைரங்கள் !
*


*
அமரஜீவிதக்
காதல்
தென்றலோடு
மேலோட்டமாகச் 
வாழச் சம்பந்தப்பட்டது !
அசட்டுத்தனமான காமம்
குற்றத்தையும்
அதுக்கான தண்டனையையும்
பேய்க்காற்று
நேரடியாகவே உரசிச் செல்வது !
*


*
எனக்கு
கட்டுப்பாடுகளிலும்
சுதந்திரத்திலும்
காற்றில் பறப்பது போன்ற ஆயாசங்கள்
அப்போதெல்லாமிருந்த
அந்தப் பழைய சம்பவம்
ஒரு
நேர் கோட்டில்
ரெண்டையும் சேர்த்து
மேலும்கீழுமாகவே
தலைகீழாக அறையப்பட்டிருந்தது !
*


*
அவசர அவசரமாக
உறைபனி
பாதைத்தடங்களை
மாற்றி மாற்றி வைக்குது 
இது
நிகழ்ந்துகொண்டிருந்த நேரம்
பிறிதொரு
திசைப்பரிமாணத்தில்
முடிவிலி வழியில்
வெகுதூரம் போய்விட்டேன்
நான் !
*


*
ஒருபோதும்
ஒத்துக்கொள்ளவேமுடியாது
வர்ணங்களையும்
எண்ணங்களையும் 
பிரிக்கும்
நிறங்களின்
மனவோசையை
ஓவியமாக்கியவனின்
தற்கொலை முடிவுக்கான
காரணத்தை !
*


*
பருந்து
தடுமாற்றமின்றித்
தன் இலக்கைக்
குறிவைத்துப் பார்க்குது !
தாய்க்கோழி
உசாராகி
அணைத்துக்கொள்வதை
காதில் வாங்கிக்கொள்ளாமல்
குஞ்சுகள்
விடுப்புப் பார்க்குதுகள் !
*


*
நான்
நேர்தியாகத் திட்டமிட்டு
நகர்த்திய வியூகங்களைப்
அலட்டிக்கொள்ளவில்லை !
பிறகு
நாலாம் நிசியில்
நம்பிக்கைகள்
உடைந்துபோய்க்
குமுறி அழுத நிமிடத்தில்
மறப்பதை விடவும்
மன்னிப்பதிலேயேயிருந்தாள்
அவள் !
*


*
வியந்து
திறந்து பார்க்கிறேன்,
உள்ளுக்கு
வெள்ளை இரவு, 
வெளியே
கறுப்புப் பகல்,
உறைந்த ஜன்னலில்
பனிக்குளிர்காலம்
எனக்கென்ன குறைச்சலென்று
இறுமாந்துகொள்கிறது !
*


*
இன்னுமொரு
தப்பியோடிப் போகும்
திட்டம் ,
இன்னுமொரு 
காய் நகர்த்தும்
தந்திரம்,
பழைய இடத்துக்கே
திருப்பிக்கொண்டுவந்துவிடும்
எதிர்பாராதமுடிவில்
இன்னுமொரு
ஆட்டம் தொடங்கலாம் !
*


*
காற்றிடை
வெறுமைக்குள்
சிக்கிப் பறக்கும்
திக்குத்திசையிழந்த சருகு,
தீராப்பெருங்காமம்
ஆக்கிரமித்துவிட்ட
மென்மனதில்
ஆரவாரங்கள் அடங்காத
தவிப்பு !
*


*
என்னையன்றி
வேறொருவர் நானறியேன் ,
உன்னைத்தவிர
யாருமேயில்லை உனக்கு,
அதனால்த்தான்
நம்மை
விட்டுவிட்டு போய்
நம்மிடமே
வந்துசேர்ந்தோம் !
*



Sunday, 14 January 2018

தழும்புகள் !

ஒரு கதையோ, அல்லது கவிதையோ அதை சின்னதாக சுருக்கிய வடிவில் அதன் ஆதார செய்திகள் உரசப்படாமல் எழுதுவது எப்பவுமே கடினம். வடிவத்தில் கொஞ்சம் எழுதத்தான் நேரத்தில் நிறைய ஜோசிக்க வேண்டும் . சின்னக் கவிதைகளின் பலமே தீப்பொறிபோல அர்த்தம் பத்தவைக்கும் மொழியும், ஆடம்பரங்கள் இல்லாத சம்பவங்களும் அது உருவாக்கும் ரம்மியமான உணர்ச்சியும்.

                                                             பலர் சின்னக் கவிதைகளை ஜப்பானியர்களின் ஹைக்கூ வடிவம் என்று குழம்புகிறார்கள். ஹைக்கூ அதன் கட்டுமான வடிவத்தில் வேணுமென்றால் மேலோட்டமாக கவிதை போல இருக்கலாம். ஆனால் அதன் ஜீவநதிப்பிரவாகம் ஆரம்பிப்பது தத்துவத்தில் இருந்து. உலகம் பற்றிய பார்வையில் ஜென் தத்துவத்தின் ஜன்னல்கள் சாதரண மனிதர்களின் பார்வை நோக்கில் ஹைக்கூவில் திறக்கப்படுகின்றன .

                                தழும்புகள்  இப்போது அடையாளமாக இருக்கலாம் ! ஆனாலும்  ஆழமான வலியை ஒருபொழுது தந்து சென்றவை ! காலத்தின் நீடிப்பில் இப்போது மறந்துபோனவை !  நானும் குட்டிக் கவிவிதை வடிவில் எழுதிப்பார்த்த பெரிய வானத்தில் ஒரு  சிட்டுக்குருவியின் பறத்தல்போன்ற  சின்னச்சின்ன முயட்சிகளை உங்களோடு இந்தத் தொகுப்பில் பகிர்ந்துகொள்கிறேன் !

 *
நாலுநாட்கள் 

முன் வாங்கிய
உறைபனிச்  சப்பாத்து
காலைக் கடித்துக்கொண்டிருந்தது
இன்றோ
வாழ்க்கை போலவே
இங்கிதம் சேர்த்து 

இதமாகிவிட
இப்போதைக்கு 
கொஞ்சம்  எதிர்பார்ப்பு !
*
*
தென்கிழக்கு சூரியனில்
வெளிச்சமான வீதி
சிரிக்கிறது  நகரம்

அரக்கப்பரக்க அவசரத்தில்
கண்ணாடி 

இழுத்து வழிப்பவன்
பிரகாசமான ஒளியில்
தன் 

முகத்தைப் பார்க்கிறான் 
*

*
சிவப்புநிற பாதைக்கடப்பு
வேண்டுமென்றே 

ஒரு பொல்லாப்புமில்லை
எப்பவோ முடிந்த காரியமென
அலட்ச்சியமாய் 

நிலைமாறுகிறேன் !
*

*
கன்னங்களில் 

மதுக்கு கிண்ணங்களைத்
தாங்கிறாள் லாமியா லாரின்னா
பிடிக்காத நகரத்தின்
மிக உயரமான கட்டிடங்களின் கீழே
அவசர மனிதர்களைத் 

திட்டிக்கொண்டு
மெதுவாக அலைகிறேன் 

*

*
மனவோசை மொழியை
ஆவணப்படுத்திவிடு என்கிறது
ஆத்மா
இன்றய நிலைமையும்
தட்காலிகமானது என்கிறது 

காற்று
திசைவழியிழந்து
அன்புக்குரியவளே 

உன்னிடம்
அடைக்கலம் கிடைக்கும்வரை
நான்
மவுனமாகி
க்கொண்டிருக்கிறேன்
*

*
உறை குளிர் 
காற்றின் விருப்பமில்லாக் 
காதலோடு மல்லுக்கட்டி 
அடைக்கலம் தேடத்தொடங்குகிறது 
பார்த்துக்கொண்டிருக்க
நினைவெழுதிக்காட்டி
அள்ளிக்கொண்டுபோகும் 

வீதிகள்!
*

*
மழுங்குத் திருப்பங்களில்
ஒடித் தப்பிக்கிறது
மழை
எல்லா நிறமான மனிதர்களில்
யாருமே 

குடை பிடிக்கவில்லை .
மழை தலைகளை
உரிமை எடுத்தபடியிருக்கிறது !

*. 

*
விறைத்து நடுங்கியபடி
பதுங்கிக்கொண்டேயிருக்கிற
தெருவிளக்குகள்
அணைத்துவிடும் போதெல்லாம்
பொண்ணுச்சி மலர்களின்
தளிர் மென்மையை
தனிமை இரவுகளுக்குள்
படபடப்புடன் சேர்ந்துவிடும் !

*

*.
நேற்றுவரை
அழகற்றதை எழுதியதற்காக
விரோதம் காட்டிய நகரத்தின்
அடங்காத கோபம்
தனியாதபடியேதானிருக்கிறது
அழகை நிராகரித்தவன்
நான்

*

*

எனக்கு 

வெறுப்புக்கள் தருவதில்தான்
தெரிவுகள் பதுங்கியிருக்கு
ஆனால்
எனது நிலைப்பாட்டில்
இப்போதுவரை 
மாற்றமில்லை.
*

*
அவதானிப்பில்
நீட்சிகுறித்த பயம்
ஓய்வாக
மரக்கிளையிலும் ...

சிறகை
நீள விரித்தபடியே
பறவை !
*



*
வெள்ளைத்தாடி
மிக மெல்லவே நடக்கும்
வயதானவர் ,
மிச்சமின்றி ...

ஓடிக்கழைத்துப்போன
காலம் !
*


*
பின்னிரவின்
பிரத்யேகப் பார்வை
திருடப்படுகிறது
தீங்கிளைப் ...

பயங்கள் அடர்த்தியான
கறுப்புநிறத்தில் !
*


*
மழை
தேங்கவைத்த
சிதறல் வெள்ளத்தில்
காணாமல்ப்போன ...

நிலவின்
நீர்த்த வாசனை !
*


*
மூன்றாம்
சாமக்கனவு
ரகசியமாக ஏற்படுத்தும்
உக்கிர சலனங்கள்,...

ரெண்டாவது
வெண்பனிப்பொழிவு,
*


*
வெளிச்சம்
உந்திப்பறக்கமுடியாமல்
உறைந்துவிடத் தொடங்குகிறது ,
குளிர்காற்றில் ...

செதுக்கிக்களைந்த
இலைகள் !
*


*
முந்தநாளிருந்து
பிரிந்துபோன நேற்று
நாளையிலிருந்து
இடப்பெயரும் நாளைமறுநாள் ...

தத்தளிப்பு
இன்றைய மனநிலை !
*


*
வலியைக்
கவிதைக்குள்
வழிக்குக்கொண்டுவந்ததே
வெளிப்படும் பாவத்தில்...

நுழைந்துகொண்ட
விதி !
*


*
ஏராளம்
காதல் உத்தரவாதங்கள்
ஒன்றாகவே
விசிறிக்கொள்ளும் போதும் ...

மொழியை
விறைக்கவைக்குது
நினைவிலொரு
தனிக்கவிதை !
*


*
வழி தளரும்
நடைபாதை
விழிக் காத்திருப்புகளின்
சூட்ச்சுமங்களை ...

நிலைமழுங்க வைத்த
நாட்க்குறிப்பு !
*


*
செறிவான
முன்னேற்பாடுகள்
குறைவான
அத்தியாவசியங்கள் ...

இத்தனை
சுழிப்புகளை எதிர்பார்க்கவில்லை
வாழ்க்கை !
*


*
விவாதங்களின்
பயங்கர விரட்டல்
துல்லியமான
எதிர் விமர்சனம் ...

எதிர்பார்ப்புகள் தரும்
ஏமாற்றம்
இடையில் நிகழும்
பயணம் !
*


*
ஒரு பக்கம்
நிறையா வெறுமை
இன்னொரு மறுபக்கம்
தோல்விகள் ...

பின்னுக்கு
அந்நியமாகிப்போனவர்கள்
ஒரே ஒரு குறை.
எதிரில்
நீங்கள் !

*

*
அந்தத்
தேன்வண்டின்
முதல்க் காதல்த்தோல்வி
முதல் சந்திப்பில் ...

முத்தமிட்ட
வாசமில்லாத மலர்!
*


*
குரைக்கவைத்து
நாயை
உறங்கவிடாமலாக்கியது
சதிரான சத்தங்களும் ...

திகிலான இரவும்
பழியெல்லாம்
அப்பாவி நிலவுக்குமேல் !
*


*
மழைக்கூந்தல்
துவட்டியபடியே
விரதமிருந்து
பனிப்பூக்கள் சொரியும் ...

நீர்மேகம் !
*


*
மவுனம்தான்
இட்டுநிரப்பிக்கொண்டிருந்தது
அதுக்குப்பிறகு
நானாகி நீயும் ...

நீயாகி நானும்
பேசவேயில்லையே !
*


*
காற்றில்
உல்லாசமாய்
ஏறிப்பயணிக்கும்
இன்றைய மனம் ...

கதை சொல்லியினுடைய
விதை !
*


*
உருவப்
புரிதலின்றிதான்
நிராகரிக்கப்படுகின்றன
ராத்திரிகளை ...

விடியலாக்கிவைக்கும்
வெள்ளிகள் !
*


*
நுனிக்காம்பில்
காலைப் பனித்துளி
அந்தநேரம்தான்
விடாப்பிடியாக ...

ஊஞ்சலாட விரும்புகிறது
இலை !
*


*
வானம்
அடர் இரவுகளில்
சில்லறைத்தனமாகப்
பிச்சைதான் எடுக்கிறது, ...

அலுமினியத்தட்டில்
சிதறிக்கிடக்கும்
நட்ச்சத்திரங்கள் !
*


*
தந்திரமான
குளிர் நீரோடை
தலைகுனிவு நாணல்கள்
பிறகெப்படி...

தனித்துவமிழக்காத
நிலவும் சேர்ந்தே
மிதந்து கிடக்குது ?
*


*
தவறி விழுந்த
சருகின் மேல்
நீர்ப்போக்கில்
ஆற்றுக்கு ...

அடங்காத பெருமிதம்
வழிகாட்டி நகர்த்தும்
இரு கரைகளை
யாருமே
மதிப்பதில்லை !
*


*
அமைதி நகரம்
நீண்ட நிசித்தூக்கம்
வழிதவறிய
பெருவெளிகளிலும் ...

காத்திருக்கிறது
வெண்பனி !
*


*
நான்
அவஸ்தைகொடுத்துத்தான்
பிறந்திருக்கிறேன்
அம்மாவின் ...

மடிவயிறு முழுவதும்
தழும்புகள் !
*


*
எல்லாத்தையுமே 
கொடுத்துவிட்டுப்போய்விட்டது   
நடுக்கோடைமழை !
நனைத்த யாருமே
நன்றியோடு இரங்கவில்லை !
கூரைக்கு மட்டும்
அடங்காத சோகமுகம் !  
தாள்வாரத்தில்
சொட்டுச்சொட்டாக  
கண்ணீர்த்துளிகள் !

*

*
புயல் 
அறிகுறிகள் ஆரம்பமே 
நீ 
ரகசியமாக 
குமிழி விழுத்தி
வாய்பொத்திச் சிரித்தபோது,
வெளிப்படையாக
அடியோடு பிடுங்கி ஏறியப்பட்டது
கரையைக்கடந்தபோது
மனது !
*


*
எவளோடோ
படுத்துக்கிடந்தது போட்டு
எழும்பிவருவதாக
நேற்றுமட்டும் 
மஞ்சள் முகம்காட்டிய
அரிதார வெயிலை
வெளிச்சத்தில் திட்டினேன்,
என்னை
நேராகப் பார்ப்பதை
இன்று
நிராகரித்துவிட்டது !
*


*
பத்து வருடம்
கதைவழி இல்லை
நேற்றுக்
ஹலோ என்கிறாள் 
இந்தப்பக்கம்
அவனுக்குள்
சன்னமான எதிரொலிகள்
காலப்பிரிவில்
பெருமவுனமாகிறது !
*


*
நினைவுப்
பெரு மூச்சை
நாலுபக்கமும் உடைக்கிறது
ஒரு 
மழைத்துளிக்குள்
உள்ளிட்டு
விழுந்து சிதறித் தெறித்த
உன்
விம்பம் !
*


*
ஒரு
சமுத்திரக்கரையில்
எங்கிருந்தோ
அலை தள்ளி வந்து சேர்த்த
ஒரு
சின்னஞ்சிறிய
படகு
மணல்தட்டிக் கரைஏறியும்
தனை நம்பி இறங்கிய
நாலு மனிதருக்காய்த்
தத்தளிக்குது !
*


*
ரெண்டாயிரம்
ஆண்டுக்கணக்கு
மக்கிய மரச்சிலுவைக்கு,
அந்தத் 
திருமனிதன்
உள்ளங்கை ஒழுகிவழியும்
ரத்தத்தில்
நேற்று அறைந்ததுபோலிருக்கு
ஆணிகள் !
*


*
எதுக்கடி
தலையைக் குனிகிறாய்
உன்
வெட்கத்தையெல்லாம்தானே 
போகிறபோக்கில்
காற்று
அள்ளியெடுத்து
சொந்தம்கொண்டாடுதே !
*


*
வேகமாக
நடை நடக்கிறாள்
கடக்கமுடியாமல்
பின்தள்ளிச் செல்கிறது 
ஈரக் கூந்தல்
வாசம்
*


*
இன்று
விரியத் தயங்கும்
மொட்டுக்குள்
நாளைய பொழுதுக்கென்று 
ஒரு
பூந்தோட்டமிருக்கலாம் !


*


*
மழைக்கால
மாதவிடாய் !
தத்தளிப்புகளுக்குள்
மனத்தூய்மையோடு
...

மூன்று நாட்கள் தாங்கலாம் .
மூன்று வாரங்கள் ?
முடியாதப்பா !
அதனால்த்தான்
உக்காரவிரும்பாத
கருமேகங்கள்
கலைந்தோடுகின்றன !
*


*
சலனக் கெஞ்சல்களில்
உனக்குரிய
நிழல் நெருங்கியபோது
நானறியாத ...

எனக்குரிய
இதயத்தமணிகளை
நீயேதான்
திறந்து காட்டினாய் !
பிறகெதற்கு
தூரமாகிப்போய்நின்று
நாடித்துடிப்பை சந்தேகப்படுகிறாய் ?
*


*
ஆசுவாசமாக
நிறுத்திக்கொண்ட
நிலத்தடி ரயில்,
மூடுமுன் கதவோடு ...

உந்தித்தள்ளி ஏறினேன்,
ஒரு முழம்
கால் நிமிண்டு வழுக்கி
கணநேர நிலைச்சறுக்கல் !
சுமூகமான உறவைப் பேண
ஒரு
பிடிக்கம்பி கைநீட்டியது !
நிமிர்ந்த பிரயாணிகள்
யாரும் கலவரமடையவில்லை !
என் வயது
" கிளுக் " கென்று கெக்கலித்தது
எனக்குள்ளேதான் !
*


*
காற்று
தெருப்புழுதி நெரிசலில்
என்னவெல்லாமோ
மதிக்கும்படி ...

சித்துவேலை செய்துவிடுகிறது !
உன்
சேலைத்தலைப்பைத்
மெல்லத் தீண்டிப்பார்க்கும்
ஒரவிசிறிப் பிடிப்புகளில்
துணிச்சலின்றிக்
களங்கப்பட்டுத்தான்போகிறது !
*



*
ஆக்கிரமிக்கும் 
தனிமைப் பார்வையில் 
உன்
செவ்வந்தி ரவிக்கையில் 
ஜன்னல்கள்
அசாதரணமாகவே   
கண்களைத் திறக்கப்படுகின்றன !
சரிதான்
தாலாட்ட வாவேன் டி 
பற்றித் தள்ளாடும்
பனித்தாளம்பூக்களில்
தேன்கசியும் வாசனைகள் தேடுவோம் !

*

*
அலட்சியங்களுக்குள் 
தலை நுழைந்துகொண்ட 
கோபத்தைக் 
கணக்கில் எடுக்காமல்
நீ ,
மன்னிப்புக்காக
மன்றாடும்
ஒவ்வொரு முறையும்
கீறல் விழுந்த
இதயமே பலவீனமடைகிற
நான்  !

*

*
அடங்கிப் போகவேண்டிய
தேவைகள் இல்லாத
வெண்பனி
பிறப்பிவிக்கப்படுவது
அதன்
அனுபவத்தை
மிதித்துக்
கேவலப்படுத்தி
நடுத்தெருவிலிருந்து
நடைபாதைக்கு
இழுத்து
விவாதிப்பதற்க்காக
அல்ல !

*

*
விரிசல்கள்
தொடுவான எல்லையில்
போய் முடிகிறது,
பறவைக்கு
மிகப்பிடித்தமான இடத்தில
சிறகுகள்
உடைய முன்னர் நிறுத்த
எவ்வளவு தூரம்
பறக்க முடியுமோ
அவ்வளவே அவ்வளவுதான்
வானத்தின் எல்லை !
*


*
இது
வெய்யிலைத்
தோற்கடித்து
பெரும்பான்மை
வாக்குக்களில் வென்ற
உறைபனியின்
ஆட்சிக் காலம் !

*

*
மென் பாதைகளின்
பரிந்துரைப்புக்களில்
வாழ்ந்து கடப்பதென்பது
மரணத்தில்
பயணம் செய்யும்
மனிதர்களின்
சுயநிர்ணய உரிமை !

*

                 அன்புகலந்த தமிழர் திருநாள் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!