Wednesday, 23 March 2016

மோனிக்கா.

இதுதான் வாழ்க்கை என்று சலித்துக்கொள்ளும் நேரமெல்லாம் பழைய சம்பவங்கள் முன்னுக்கு வந்து வசதியான  இடத்தில் ஏறி உட்காந்து  கொள்ளும். அதில பல வீழ்ச்சிக்குப் பின்னரான சந்தோசங்கள் வெறும்பேச்சாகிப் போகாமல் ஒரு காலத்தின் நினைவுகளில்  பன்னீரைத் தூவி ஒய்வெடுக்கும் தருணம் மறைக்கவோ ,மறக்கவோ  முடியாத ஒரு சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வந்து தொண்டைகுழியில் இறுக்கிப்பிடித்து நெரிக்கும் 

                                                         இப்பவே சொல்லுறேன், இது  அப்பட்டமான உண்மைக் கதை இல்லை, அதுக்காக முழுவதும் கற்பனையும் இல்லை . விரும்பினால்  முடிவில் யாவும் கற்பனை என்ற வரியை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள்.  ஆனாலும்  எல்லாக் கதைகளில் அடித்து விரட்ட முடியாத யதார்த்தம் கொண்டு வரும்  உண்மை மனிதர்களின்  ஒரு காலகட்டத்தில் நடந்து,மறந்துவிட்டுப் போன  கடந்தகாலப்  பாதையில் ஏனோதானோ  என்று  விசுக்கிவிட்டுப் போன  கற்பனைக் கதை போல...

                                                    மோனிக்காவை முதன் முதல் சந்தித்தது, ஆறு மாதம் " சமையல் இடங்களின் பாதுகாப்பும் ஸ்வீடிஷ் சமையல் சட்ட திட்டமும் " என்ற " டிப்பிளோமா கோர்ஸ் " படித்தபோது, கோடைகாலத்தில் ரெஸ்டாரென்ட் குக் ஆக வேலைசெய்த இடத்தில இருந்து என்னை நிற்பாட்டிய நேரம், கிடைத்த இடைவெளியில் என்னோட சமையல் திறமையை அதிகரிக்க ஜோசித்து, அந்த டிப்பிளோமா லைசென்ஸ் எடுக்கப் படித்தேன் 

                                             கையால கரண்டியைப் பிடிச்சு சமைக்க தெரியுதோ, இல்லையோ அந்த டிப்பிளோமா லைசென்ஸ் கையில இருந்தாதான் ஸ்கன்டிநேவியாவில் குசினிக்க முன் பக்கத்தால உள்ளிடலாம் என்ற ஒரு அவல நிலைமை இருந்தால் வேண்டா வெறுப்பா படிச்சேன். அந்த டிப்பிளோமா லைசென்ஸ்  ஒரு சமையல்காரனின் கன்னத்தில் இருக்கும் அதிஸ்ட மச்சம் போல . அது  இருந்தால் சம்பளமும் கொஞ்சம் அதிகமா  டிமாண்ட் விட்டு கேட்கலாம் என்பதாலும் படிச்சேன்.

                                                              அந்தக் கோர்ஸ் ஒண்டும் நான் யாழ்பாணத்தில குத்தி முறிஞ்சாவது  கம்பஸ் இக்கு போயே ஆகவேண்டும் என்று விழுந்து விழுந்து படிப்பது போல , முறிஞ்சு முறிஞ்சு மண்டையைக் கசக்கிப் படிக்கவில்லை. அந்த லைசென்ஸ் கிடைச்சாப் போதும் எண்டு ஆர்வம் இல்லாமல் படித்தேன். அந்த "டிப்பிளோமா கோர்ஸ் "க்கு பொறுப்பான மோனிக்கா ஆர்வமா படிப்பிசாள். ஸ்வீடிஷ் மொழி அதிகம் எழுத்து வடிவில் தெரியாததால் எனக்கு பல விசியம் விளங்கவே இல்லை.

                                          ஒரு ரேச்ட்டோரென்ட் சமையல் குசினியில் நெருப்பு பிடிச்சா, எந்த வகை அடையாளம் போட்ட  தீ அணைப்பு கருவி, தீ அணைப்பு திரவம், தீ அணைப்பு கெமிகல் பாவிக்க வேண்டும், எந்தவகை உணவு அலேர்யி, உணவு பதனிடல், அதை பாதுகாத்தல் ,கிருமிகள் தொற்று ,பொதுவான சுகாதாரம் ,,என்று பலவிசியம் அதில டிப்பிளோமா பாடத் திட்டமா இருந்து படித்தாலும் பலது படிக்கும் போதே நினைவில்லை 

                                                 ஆனால் ரெஸ்ட்டோரென்ட் சமையல் குசினியில் நெருப்பு பிடித்தால்  சில குறிப்பிட்ட அடையாளம் போட்ட கதவால் வெளியேற வேண்டும் எண்டு  பாதுகாப்பு நடைமுறை இருக்கு.அதையும் சொல்லி தந்தார்கள். அந்த  எந்த அடையாளம் போட்ட எந்தக் கதவால ஓடித்தப்ப வேண்டும் என்ற ஒரு விசியம் மட்டும் நான் ஆரவமா படிச்சேன், படிச்சுக் கிழிச்சதில அது ஒன்றுதான் இன்றை வரை நல்லா தெரியும்.  அந்த நம்பிக்கையில தான் இப்பவும் ரெஸ்டோறேண்டில் குக் ஆக வேலை செய்கிறேன் .
            
                                                   எப்படியோ படிப்பில்  நான் ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரிந்த மோனிக்கா ,வகுப்பு முடிய எனக்காகவே வேலை மினக்கெட்டு என்னை அந்த இன்ஸ்டிடியுட்ல இருந்த லைபிறேரியில் உள்ள ஒரு அறையில் என்னை இருத்தி வைச்சு முறிஞ்சு முறிஞ்சு சொல்லி தருவாள். அவளவு என் எதிர்காலத்தில் பிரகாசமான விடிவெள்ளிகள் தோன்ற வேண்டும் என்று நினைத்த அப்பாவிப் பெண் மோனிக்கா . ஆனால்  படிக்கிறது  இலுப்பெண்ணை  போல எப்பவும் இருப்பதால் நான் கிடந்தது  நாக்கிளிப் புழு போல நெளிவேன் .

                                            மோனிக்காவும் ஒரு குக் , நல்ல அன்பானவள், ஐஸ்லாந்துக் குதிரை போல நடப்பாள், அவள் முகம் சலவைக்கல்லில செய்த மாதிரி இருக்கும், அவளின் மூக்கு மேல் நோக்கி அடல்ப் ஹிட்லர் மூக்கு போல வளைந்து வலது கன்னத்தில ஒரு கறுப்பு மச்சம் இருக்க வேண்டிய இடத்தில இருக்கும், உதடுகளுக்கு மேலே அதிகமா லிப்டிக்ஸ் போட்டு அதன் விளிம்பில் ஒரு பென்சில் கோடுபோல போர்டரின் போட்டு, தலை மயிரை யூலியா ராபர்ட்ஸ் போல பிரிச்சு விட்டு,கொஞ்சத்தை நெற்றியில் விழ விட்டிருப்பாள்

கழுத்தில நீலநிற அக்குவா மரைன் கல்லு வைச்ச ஒரு சங்கிலி மட்டும் போடிருப்பள். காதிலையும் அதுக்கு மச் பண்ணுற மாதிரி ஒரு தொப்பாஸ் கல்லு வைச்ச தோடு போட்டிருப்பாள். லூயிஸ் வோலுதன் சமர் கலக்சன் வேஸ்ட் போட்டு எப்பவுமே இத்தாலிப் பெண்கள் போல ஒரு கொட்டன் ஸ்கார்ப் கழுத்தில நிரந்தரமாவே கட்டி இருப்பாள். மன்மதன் அம்பு விட்ட மாதிரி இடது கைக் கல்யான ரிங் போடும் விரலில் ஒரு பச்சைக் கலர் எமிரல் கல்லு வைச்ச மோதிரம் போட்டிருப்பாள்.

                                         ஒரு நாள்  

                                 " நான் , இரண்டு பிள்ளைகளுடன் வீடில முறிஞ்சு, உனக்கும் இங்கே நேரம் ஒதுக்கி சொல்லிதாரன், நீ ஏன் ஆர்வம் இல்லாமல் இருக்குறாய், இன்னும் ஒரு கிழமையில் கடைசி பரீட்சை வரப்போகுதே "    

                                  எண்டு குண்டை தூக்கிப் போட்டால், நான் அவள் கலியாணம் கட்டாமல் இருப்பாள் எண்டுதான் நினைச்சேன் ,ஆனாலும் அவள் இரண்டு பிள்ளைகள் எண்டு சொன்னாள், கணவனோ,காதலனோ பற்றி சொல்லவில்லை என்பது கொஞ்சம் நல்ல செய்தியாக இருந்தது,

                                     
சுவீடனில் பெண்கள் பிள்ளை பெற தாலி கட்டிய கணவன் தேவையிலை,அந்தப் பிள்ளைகளுக்கு அப்பாவின் பெயரும் தேவை இல்லை,அதுகளைதான் தீவிரமா ஜோசித்தாலும், கடைசி பரீட்சை வரப்போகுதே எண்டு அவள் சொன்னத நினைக்க பயம் வந்தது,மோனிக்கா மனம் வைச்சா அந்த பரிட்சையில் பாஸ் பண்ணி டிப்பிளோமா லைசென்ஸ் எடுக்கலாம் எண்டு வடிவா தெரிந்தாலும் ,அவளை எப்படி வழிக்கு கொண்டுவாறது எண்டு கொஞ்சம் ஜோசித்தேன்.முதல் அவளைப் பற்றி சில விசியம் தெரியவேண்டும் எண்டு போட்டு , 

                                        மோனிகாவுக்கு மலர்கள் என்றால் விருப்பம்,அவளே வீட்டில கோடைகாலத்தில் நிறைய மலர்கள் தோட்டமா வைச்சு இருக்கிறதா சொல்லி இருந்தாள். நான்  

                                        " ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் என்னிடம் இருக்கு உனக்கு வேண்டுமா, வேண்டும் என்றாள் நானே கொண்டுவந்து உன்னோட தோடத்தில நட்டு விடுறன் "    

                            எண்டேன், அவள் முகம் பிரகாசமாகி    

                          " வாவ் வாவ் ,,அது எனக்கு ரெம்பப் பிடிச்ச மலர், கேள்விப்பட்டு இருக்றேன், ஒரு நாளும் வேண்ட முடியவில்லை, விலையும் அதிகம் ஸ்பெயினில இருந்து வேண்டிக்கொண்டுவரவும் யாரும் இல்லையே"  என்றாள்,

                                        " உன் கணவன் போய் வேண்டி கொண்டுவரலாமே "    

                                              எண்டு நூல் விட்டுப் பார்க்க கேட்டேன், அவள்  

                                            " எனக்கு அப்படியாரும் இல்லை "    எண்டு சொன்னாள். கொஞ்சம் ஜோசித்து,  

                                   " சரி உன் போய் பிரெண்ட் ஆவது போய் வேண்டி கொண்டுவரலாமே "  

                      எண்டு கயிறு  விட்டுப் பார்க்க கேட்டேன், அவள் அதுக்கும்    

                          " எனக்கு அப்படி   யாரும் இல்லை "  

                         எண்டு என் நெஞ்சில பாலை வார்த்து சொன்னாள். அவளே  

                                 " நீ ரெம்ப நல்லவன்,வெளிப்படையானவன் , பார் எப்படி  வஞ்சகம் இல்லாமல் கேள்வி கேட்குறாய், 

                                 " ஹ்ம்ம்,,அதெண்டா  உண்மைதான்  ,,மோனிக்கா "

                               " உன்னைப்போல ஒளிவுமறைவு  இல்லாத ஒப்பின் ஆட்களை எனக்கு மிகவும் பிடிக்கும் , வெளிநாட்டு ஆட்கள் நல்லா ஓப்பின் பிரண்ட்சிப் உள்ள ஆட்கள் என்று  எனக்கு தெரியும்   " 

                                 " ஓ அப்படியா,, நான் போட்ட பிளான் வேர்க் அவுட் ஆகுதே "

                                   " என்ன பிளான் போட்டாய்,,சொல்லு ,,"

                                    " இல்லை,,உனக்கு சாடினியா  மலர்கள் வேண்டி கொண்டுவந்து நட்டு ,,,அதில  இருந்து  என்னத்தையும்  தொடங்கலாம்  என்றுதான்  மோனிக்கா "
                                    
                                    " சனிகிழமை பிள்ளைகள் வீட்டில நிற்பார்கள் ,நானும் ஓய்வாக நிற்பேன்,சமைக்கலாம் உனக்கு , அதால அன்றைக்கே நீ  சாடினியா மலர்களைக் கொண்டு வந்து அதை தோடத்தில உனக்குப் பிடித்த வடிவத்தில நட்டு விடு "

                                      எண்டு சொல்லி, " சமையல் இடங்களின் பாதுகாப்பும்,ஸ்வீடிஷ் சமையல் சட்ட திட்டதுக்கும்  சம்பந்தம் இல்லாத சில டிப்பிளோமா விசியங்கள் அதுக்குப் பிறகு ஆர்வமாகக் கதைத்தாள். 

                                          
ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் பற்றி எனக்கு ஒண்டுமே தெரியாது, மலர்களை மணிக்கணக்கில் பார்ப்பேன்.ஆனால் அவைகளின் ஜாதகம் பார்ப்பதில்லை. முக்கியமா சாடினியா அது  என்ன நிறம் எண்டே எனக்கு தெரியாது. பிறகு எப்படி சடார் எண்டு சொன்னேன் எண்டு நீங்க நினைபிங்க,சொல்லுறன் ,

                                         என்னோட அப்பார்ட்மென்டுக்கு கொஞ்சம் தள்ளி கொஞ்சம் பணக்கார தனிவீடுகளில் பணக்கார வயதான பெருங்குடி மக்கள் வசித்தார்கள்,அதில் ஒரு வீடில இருந்த வயதான கிழவி எப்பவும் தன்னோட வீடுக்கு முன்னால இருந்த மலர்த் தோடத்தில ஏதாவது கிண்டிக்கொண்டு இருப்பா,என்னைக் கண்டால் இழுத்துவைத்துக்   கதைப்பா,சில நாள் கோப்பி போட்டுக் கொண்டுவந்து தந்து பேர்ச்  மரங்களின் என்னை உக்கார வைத்துக் கதைப்பா 

                                                தான் வளர்க்கும் பூனைகள், ஏமாத்திட்டு இன்னொரு பணக்காரியோட போன கணவன், கிரிஸ்மஸ் விடுமுறைக்கு மட்டும் வந்து பார்க்கும் பிள்ளைகள்,தோட்டத்தில் வளர்க்கும் மலர்கள், இவை பற்றி கன நேரம் ஒருவித  தனிமையில் கதைப்பா, ஒரு நாள் எனக்கு ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் தன்னிடம் வளர்வதாகவும், அவை வேறு யாரிடமும் இங்கே இல்லை எண்டு சொல்லி எனக்கு அதைக் காட்டி இருக்குறார், அதைவிட தனக்கு பின்னேரம் சரியா கண் தெரியாது எண்டும் சொல்லி இருக்குறா, 

                                 இப்படிதான் நாங்கள் வாழ்கையில் சந்திக்கும் மனிதர்கள் சொல்லும் தகவல்களை, நாங்கள் அதிகம் கணக்கில் எடுப்பதில்லை,ஆனால் அவைகள் வேற ஒரு சந்தர்ப்பத்தில் உதவலாம்,நான் அந்த மனிசியின்,வீட்டை நினைச்சுப் பார்த்தேன்,நான் நினைச்ச மாதிரி அந்த வீட்டுக்கு வெளியே வேலி சின்னதா ஏறிப்பாயக் கூடிய மாதிரி இருந்தது நினைவு வந்தது. 

                                          
சொன்ன மாதிரியே ஒரு வெள்ளிகிழமை நாள் இரவு,கிழவி வீட்டை போனேன், ஜன்னல்களில் திரைச்சீலை போட்டு மூடி, வெளிச்சம் இல்லாமல், கிழவி உசிரோட இருக்கிற சிலமன் ஒண்டுமே இல்லாமல் இருக்க,வெளியே அப்பிள் பழங்கள் மரத்தைச் சுற்றி விழுந்து கிடக்க, ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் இருக்கிற இடத்தைப் பார்த்தேன்,எனக்காகவே நல்ல பொலிவா அந்த மலர்கள் வளர்ந்து இருந்தது, 

                                       அந்த டிப்பிளோமா லைசன்ஸ் நினைவு வர, ஜோசிச்சுப் போட்டு, நானும் மனுஷன் தானே,நானும் எல்லாரும் போல வாழ்கையில் முன்னேறத்தானே வேண்டும் எண்டு சொல்லிக்கொண்டு, கிழவிய நினைக்கப் பாவமா இருந்தது ,என்றாலும் பகவத் கீதை சொன்ன   

                        " உன்னுடையது ஏதோ அது நாளை மற்றொருவனுடையதாகிறது " 

                                    என்ற  சுலோகம் நினைவுவர, சத்தம் இல்லாமல் சாடினியா மலர்கள் வேலையை முடிச்சிட்டு,அந்த தோட்டதில சில மலர்கள் தண்ணி இல்லாமல் வாடி இருந்தது பார்க்க பரிதாபமா இருக்க அதுகளுக்கு கொஞ்சம் தண்ணி குழாயில பிடிச்சு நல்லாக் குளிப்பாட்டிப் போட்டு ,ஒரு கடதாசிப் பெட்டியில் சாடினியா மலர்களை வேரோட பிடுங்கி அடுக்கிக் கொண்டு வந்திட்டேன் .

                                    
சனிகிழமை ,பஸ் பிடிச்சு மோனிக்கா வசிக்கும் புறநகர்ப் பகுதியில் உள்ள அவள் வீட்டுக்குப் போனேன் அவள் வீடு வில்லா என்ற தனி வீடு,வீட்டைச் சுற்றி நிறைய புல் வெளிகளும்,தோட்டமும் இருக்க, அவளின் அப்பன் வீட்டு சொத்துப்போல இருந்தது அந்தப் பழங்கால வீடு. என்னை வெளிப் படலையில்க் கண்டதும் மோனிக்கா  ஓடி வந்து மலர்களை ஆச்சரியமா பார்த்தாள், என்னை அதைவிட ஆச்சரியமா பார்த்தாள் ,  

                            " எங்க நட்டா அழகா இருக்கும் "  

                               எண்டு அட்வைஸ் கேட்டாள்,எனக்கு மலர்த் தோட்டவேலை எண்டால் என்ன எண்டே தெரியாது, சும்மா  

                          " இங்கே இதய வடிவில் நட்டா நல்லா இருக்கும் எண்டு சொன்னேன் ",    

                          " இதய வடிவில் நட்டா நல்லா இருக்கும் " 

                                                                            எண்டு  சொல்ல அவளுக்கு முகம் சிவந்திட்டுது ,பெண்களின் மென்மையான இதயம் அப்படிதான் சடார் என்று சில சொற்களில் சறுக்கும். எனக்கு ஏறக்குறைய அந்த டிப்பிளோமா லைசென்ஸ் கையில கிடைச்ச மாதிரி இருந்தது,அதுக்கு பிறகு அவள்,    

                          " உனக்கு ஏதாவது சமைக்கிறேன், வேலை முடிய எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம் "    

                                      எண்டு சொல்லி வீட்டுக் உள்ளபோய் குசினி ஜன்னலுக் கால நான் குனியாமல் நிமிராமல் வேலை செய்யும் அழகைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்,

                                      
நான் கொஞ்சம் வேண்டா வெறுப்பா குனிஞ்சு நிலத்தைக் கிண்டினேன், நிண்ட நிலையில பூ கன்றுகளை ஒவ்வொன்றா தூக்கிப் போட்டு காலால,மண்ணைத் தள்ளிப் போட்டு கொஞ்ச மலர்களை நடத்தொடங்க அவளோட இரண்டு சிறிய பெண் குழந்தைகள் நான் என்ன செய்யுறன் எண்டு பார்க்க மெல்ல மெல்ல தயங்கி வந்தார்கள் ,வந்து

                         " நீ எந்த நாட்டவன்,  நாங்களும்  அம்மாவும்  வெள்ளையா இருக்குறோம் , நீ ஏன் கருப்பா இருக்குறாய் "

                           எண்டு கேட்க, ஒரு சின்னப் பெண் என்னை வந்து தொட்டுப் பார்த்தாள், நான்

                        " நீ ஏன் இப்ப என்னை தொட்டுப் பார்த்தாய் "

               எண்டு கேட்டேன் அவள்,

                                     " நான் நினைச்சேன் நீ கறுப்பு பெயின்ட் அடிச்சு இருக்குறாய் ஆக்கும் " எண்டு சொன்னாள்

                                  நான் முதுகுக்குப் பின்னால திரும்பிப் பார்த்தேன்.மோனிக்கா குசினி ஜன்னலில் நாடிக்கு கை முண்டு கொடுத்துக்கொண்டு ,எங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்,  ஒரு அரை மணித்தியாலம் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  வேலை செய்து இருப்பேன்,அந்தக் குழந்தைகள்  

                         " நீ முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்கிறாய்  உனக்கு களைப்பா இருந்தா ஒய்வு எடு "    

                              எண்டு சொன்னார்கள்,

                                நான் அந்த தோட்டத்தில் போடிருந்த ஒரு வாங்கில இருந்துகொண்டு ,  

                                  " உங்களுக்கு சிலோன் சின்னத்தம்பி குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை தெரியுமா "  

                  எண்டு அந்த குழந்தைகளிடம் கேட்டன்.அவர்கள் கொஞ்சம் ஜோசித்து  

                                " யானை சிரிக்குமா "    

                   எண்டு சந்தேகமாக் கேட்டார்கள் ,நான் சிலோன் சின்னத்தம்பிகுனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை சொன்னேன், அதன் முடிவை சொல்லவில்லை,பிறகு யானை  போல  அவர்கள் இருவரையும் முதுகில ஏற்றி  கொஞ்ச நேரம் அந்த தோட்டத்தில உப்பு மூட்டை சுமந்தேன் 

                                  
சிலோன் சின்னத்தம்பி குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை. அது ஒரு கலியாணம் கட்டுற ஆட்களுக்கு சொல்லுற கொசப்புக் கதை அதை எப்படி குழந்தைகளுக்கு சடைஞ்சு சொல்லி முடிகுறது எண்டு எனக்கே தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருந்த நேரம், அந்த ரெண்டு குழந்தைகளும் என்னோட மடியில வந்து ஏறி இருந்து    

                          " யானை குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   சிரிச்ச முடிவை இப்ப சொல்லு "    

                           எண்டு கொண்டு நிக்க, நான் அதை வேறு விதமா,ஒரு நீதிக் கதை போல திசை திருப்பிச் சொன்னேன், ஆபாசம் கொஞ்சமும் இல்லாமல் சொன்னேன் . சொல்லி முடிய அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கவில்லை, பதிலாக நான் எதிர்பார்த்த மாதிரியே   

                                    " யானை பாவம் "    என்றார்கள் ,

                                       நான் கொஞ்சநேரம் டிப்பிளோமா லைசென்ஸ். மோனிக்கா,.ஏன் இந்த உலகதையையே மறந்திட்டேன்,

                                                  குழந்தைகளுடன் பேசும் போது மட்டும்தான் வளர்ந்தவர்களால் உலகத்தை மறக்கமுடியும் போல இருந்தது. 

                                             நான் முதுகுக்குப் பின்னால திரும்பிப் பார்த்தேன்,மோனிக்கா குசினி ஜன்னலில் சிலோன் சின்னத்தம்பி  குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   யானையைச் சிரிக்க வைத்த கதை போல கோப்பி கோப்பையைக் கையில வைச்சுக்கொண்டு எங்களையே சந்தோஷமாப் பார்த்துக்கொண்டு இருந்தாள். 

                                                  
அதுக்குப் பிறகு நாங்கள் எல்லாருமே சிரிச்சு சிரிச்சு சாப்பிடும் போது .மோனிக்கா என்னை விழுங்கிற மாதிரிப்   பார்த்தாள். ரெண்டு பிள்ளைகளையும் கொண்டு போய் ஹோலில் இருந்த சோபாவில் இருத்திப்போட்டு, அவர்களுக்கு டெலிவிசனில் கார்டூன் படம் போட்டு ஓடவிட்டுப் போட்டு என்னிடம் வந்து     

                          " நீ என்ன லீனாவுக்கும்,லின்டாவுக்கும் மடியில வைச்சு சொன்னனி "    

                      எண்டு கேட்டாள் மோனிக்கா , நான் சிலோன் சின்னத்தம்பி யானையைக் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில   சிரிக்க வைத்த உண்மையான,  கலியாணம் கட்டுற ஆட்களுக்கு சொல்லுற, உதவாக்கரை   கொசப்புக் கதையை கொஞ்சம் அவளுக்கு புரியிற மாதிரி சொன்னேன் ,அவள் விழுந்து விழுந்து சிரிசாள் ,    

                             " அடப்பாவி இவளவு உதவாத கொசப்பு கதையா ,,,இதெல்லாம் தெரிஞ்சு நீ எங்க உருப்படப் போறாய், ஆனாலும் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  யானையை சிரிக்க வைச்ச அந்த மனுஷன் கெட்டிக்காரர்,,"

                                         "  ஹி...ஹி....ஹிஹி  "

                                                   அவர் உன்னோட நாட்டு ஆள்  போல இருக்கே,,, , அடப்பாவிகளா யானையை வைச்சு நீ பிறந்த நாட்டில இப்படி எல்லாம் கொசப்பு கதை உருவாக்குவின்களா,," 

                                          " ஹிஹி...ஹிஹி "

                                                 " ,அந்த யானை பாவம்பா, ஆனாலும் அந்த சின்னடம்பி கொஞ்சம் உன்னைப்போல எடக்கு முடக்கான வில்லங்கமான ஆளா இருப்பார் போல  "  

                                                 எண்டு சொன்னாள், சொல்லி அடக்க முடியாமல் சிரிச்சாள். போகும் போது ஸ்பானிஷ் சாடினியா மலர்கள் கொண்டுவந்து நட்டத்துக்கு நன்றி என்றால் , நான்  அவள் வீட்டு வெளிக் கதவில் முதுகை குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில முண்டு கொடுத்துக்கொண்டு ,   முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்கிற அந்தக் சாடினியா மலர்கள் களவு கொடுத்த கிளவிய நினைச்சேன்,

                                    போக வெளிக்கிட , மறுபடியும்  அடக்க முடியாமல் சிரிச்சாள். ஏன் சிரிக்கிறாய் மோனிக்கா , முதலில் சொல்லிப்போட்டு சிரி  என்றேன் ,

                                              " அந்த உதவாத கொசப்புக்  கதை  ,,,இதெல்லாம் தெரிஞ்ச நீ எங்க உருப்படப் போறாய் என்று நினைக்க சிரிப்பு வருகுது   , ஆனாலும் குனியாமல் நிமிராமல் நிண்ட நிலையில  யானையை சிரிக்க வைச்ச அந்த  ஷின்னடம்பி ,  அந்த  ஆள்  ஷின்னடம்பி போல நிறைய ஆட்கள் நீ பிறந்த உன்னோட நாட்டில இருப்பாங்க போல,,,ஜீசஸ்கிரிஸ்ட் ,, "   ,

                                                  என்று சீரியஸ் ஆகச் சொன்னாள். நான் சும்மா நான் பிறந்த என் தாய்த் திருநாட்டை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டு வேற அசுமாத்தம் இல்லாமல் கேட்டுக்கொண்டு நின்றேன்     

                                        " பரிட்சைக்கு ஒழுங்காப் படிக்கிறியா , நான் தான் பேப்பர் திருத்துவேன் , நீ எப்படியும் பாஸ் பண்ணுவாய், அதில பத்துக் கேள்வி முக்கியமா நீ விளக்கி விபரம் எழுத வேண்டி வரும், அது சரியா எழுதினால் அதுவே முக்கால் வாசி பாஸ் பண்ண உதவி செய்யும்  "  

                  எண்டு சொல்லி என்னோட நெஞ்சில பாலை வார்த்தாள்,நான் ஒண்டுமே சொல்லவில்லை, பேசாம வந்திட்டேன் , நான் போக வெளிக்கிட மோனிக்கா கிட்டவந்து  

                            " உன்னிடம் ஒரு முக்கியமான விசியம் சொல்ல வேண்டும் "  

                              "  ஹ்ம்ம் சொல்லு "

                                  " நாங்கள் பெண்கள்  ,,சின்ன சின்ன  விசியன்களில் உள்ள அன்பை எப்பவும் சட்டென்று  அடையாளம்  காணுவோம் "

                             "  ஒ அப்படியா,,கேட்கவே நல்லா இருக்கே "

                                "  என்ன சொல்லுறாய் "

                                 " ஒண்டும் இல்லை .." 

                                 " ஹ்ம்ம்,,என்னிடமும்  ஒன்றும்  இல்லை,,ஆனால்  எல்லாம் உன்னிடமே  இருக்கு,,நான் சொல்லுறது விளங்குதா உனக்கு .." 

                                        என்றாள் ,நான் கொஞ்சம் நடுங்கி விட்டேன்,ஒரு வேளை டிப்பிலோமாப் பரீட்சை பற்றி ஏதும் வில்லங்கமா  சொல்லப்போறாலோ  எண்டு இனி தலைக்கு மேல வெள்ளம் வந்த பிறகு கவலைப்பட்டு வேலை இல்லையே எண்டு பேசாமல் வாறது வரட்டும் எண்டு தலையைக் குனிந்து கொண்டு நின்டேன்,  அவள் மறுபடியும்

                                 " ஹ்ம்ம்  இதை உனக்கு கட்டாயம் சொல்லத்தான் வேண்டும்.....ஹ்ம்ம் ....   என்னோட பிள்ளைகள் உன்னைப்போல புது ஆட்களுடன் லேசில சேராதுகள் .....ஹ்ம்ம் ..  உன்னோட எப்படி இப்படி ஓட்டினார்கள் எண்டு ஜோசிக்கிறேன்,,ஹ்ம்ம்  "   

                                   "  குழந்தைகள்  அப்படிதான் , " 

                                       "நீ  என்ன நினைக்கிறாய்   " 

                                 "அந்தக்  கிழவியை  நினைக்கிறன்   " 

                                      "எந்தக்  கிழவியை,,  " 

                                      "சரி,,விடு  அது  வேற  கதை  "  

                                     " நான் என்ன நினைக்கிறன் எண்டு இப்ப சொல்லலாமா  ,,இல்லை  பிறகு  சொல்லலாமா என்று  நினைக்கிறேன் "

                                          எண்டு என் கண்களைப் பார்த்து சொன்னாள்,நான் ஒண்டும் சொல்லாமல் ஹ்ம்ம் எண்டு நானும் பெருமூச்சு விட்டுப்போட்டு வந்திட்டேன்.

                                           
அடுத்த கிழமை பரீட்சை நடந்தது , அதில் என்னோட படித்தவர்கள், போன முறை பெயில் பண்ணியவர்கள் எண்டு பலர் வந்திருந்தார்கள்.  நான் கேள்வித்தாளை பார்த்தேன்,முதலில் இருந்து எல்லாக் கேள்விகளையும் வாசித்தேன் எனக்கு கேள்வியே விளங்கவில்ல்லை . ஜோசிசுப் போட்டு கடைசிக் கேள்வியில இருந்து வாசித்தேன் அது இன்னும் குழப்பமா இருந்தது.

                                         இது சரிவராது ஆறுமாதம் முறிஞ்சு முறிஞ்சு டிப்பிளோமா படிச்சதுக்கு அர்த்தமே இல்லை போல இருக்க, அதிலும் முக்கியமா அவள் சொன்ன பத்துக் கேள்வியில் முதல் அஞ்சு கேள்விக்கு விடை தெரியவில்லை,மிச்ச அஞ்சு கேள்வியே விளங்கவில்லை , பல் தேர்வு வினா எண்டு நாலு விடை தந்து அதில சரியானதைப் புள்ளடி போட சொல்லி இருவது கேள்வி இருந்தது, 

                                                      அதைப் பார்க்க வண்ணத்திப்பூச்சி  நடு  மண்டைக்க  பறந்தது, வேற வழி இல்லாமல் நாலு விடையில் சரியானதைக் கண்டு பிடிக்க எறும்பு புடிச்சு விட்டு பார்க்கலாம் எண்டால் சுவிடனில் எறும்பும் இல்லை , எப்படியும் மோனிக்கா ஏதாவது செய்வாள் எண்டு நினைச்சு தெரிந்த சில கேள்விக்கு மட்டும் பதில் எழுதினேன்,

                               சிலோன் சின்னத்தம்பி யானையைக் கடைசில இருட்டில தேடின மாதிரி மோனிகாவை தேடினேன் அவள் அந்த பரீட்சை நிலையத்திலேயே இல்லை.  எண்டாலும் 

                             " ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவைத் திறப்பான் " 

                                         எண்டு பைபிளில் சொல்லி இருக்கிறதை நினைக்க, மண்டபக் கதவைத்  திறந்து கொண்டு வேளாங்கண்ணி மாதா  போல மோனிக்கா வந்தாள்,  தூரத்தில நிண்டு எல்லாரையும் பார்த்தாள் ,கிட்ட வந்து என்னோட கதைக்கவில்லை ,  

                                                      நான் பேப்பரை வைச்சு முழிஞ்சு கொண்டு இருக்குறதை ஓரக் கண்ணால பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் எல்லாம் விளங்கின மாதிரி விடை எழுதுவது போல கேள்வித்தாளில் குனிஞ்சுகொண்டு ரோசாப் பூ படம் கீறிக்கொண்டு இருந்தேன் ,
     
                                நான் விடைப் பேப்பரை அவளிடம் கொடுக்கிற நேரம் சிரிச்சாள்,    

                      " அந்த பத்துக் கேள்வி சரியா எழுதினாயா "    எண்டு கேட்டாள் ,  

                               நான்   " முதல் அஞ்சு கேள்வியும் ,,பிறகு வாற அஞ்சு கேள்வியும் எழுதவில்லை "   எண்டு சொன்னேன்,

                                  அவளுக்கு  முதல் கன்னம் சிவக்க கோபமும், பிறகு இரக்கப்படும் சிரிப்பும் வந்தது ,  நான் அவள் ஏதும் தாறு மாறாய்ப் பேசப் போறாள் எண்டு நினைக்க , மோனிக்கா கிட்ட வந்து ,    

                          " கொஞ்சம் வெளிய வா, அந்த மரத்துக்கு கீழ போட்டுள்ள மர வாங்குக்கு  போவம்  "  

                                   எண்டு சொல்ல ,நானும் போனேன் . இடது கையால தலை மயிரைப்  பின்னுக்குக்  கோதி விழுத்திப் போட்டு, முகத்தை வலது கையால வழிச்சுப் போட்டு, வலது கைச்  சுட்டு விரலை   சொண்டில வைச்சு கிள்ளிப் போட்டு,  ஸ்வீடிஷ் நீலக்கடல்விழிகளால் என் கண்களுக்குள் பார்த்து,

                                 " ஹ்ம்ம்....லீனாவும் ,லிண்டாவும் நீ வந்து தோட்டத்தில பூக்கண்டு நட்டுப் போட்டு போன  பிறகு எப்பவும் உன்னைப்பற்றிக் கேட்குங்கள்,..

                                           " ஹ்ம்ம்     ."

                                   " ..இதெல்லாம் ஏன் சொல்லுறேன் தெரியுமா..ஹ்ம்ம் ..  உன்னோட ஒரு முக்கியமான விசியம் கதைக்க வேண்டும்...ஹ்ம்ம்......"

                                            "இந்த டிப்பிளோமா லைசென்ஸ் கிடைச்சால்,,,"

                                          "............... , கொஞ்ச நேரம் நிற்க  முடியுமா..

                                          " .ஹ்ம்ம்.... " 

                                   "  நான்  விடைத்தாள் பேப்பர்  எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு வாறன்,,ஹ்ம்ம் .... " 

                                         எண்டு கேட்டாள். அதுக்கு  நான்

                                                   " இல்லை மோனிக்கா இந்த டிப்பிளோமா லைசென்ஸ் எனக்கு முக்கியம்,  அதுதான் கவலைப்படுகிறேன் , "

                                              " ஆண்டவன் ஒரு கதவை அடைச்சா மறுகதவைத் திறப்பான் " 

                                        " எனக்கு சமையல் வேலை மட்டும் தானே தெரியும், "

                                  "  உனக்கு சமையல் வேலை சரிவராது, "

                                           " வாழ்கையை ஏற்கனவே நல்லா சேறு போலக் கலக்கிப் போட்டு  நடுரோட்டில நிக்கிறேன்,  " என்றேன் "

                                         " ஜீசஸ்கிரிஸ்ட் , நான் என்னவோ கதைகுறேன், நீ என்னவோ விளங்கி கதைகுறாய், ஜீசஸ் கிரிஸ்ட் , " 

                                          "அதுதான் நான் ஜோசிக்கிறேன்  " 

                                         " உனக்கு சமையல் வேலை சரிவராது, என்னோட  அண்ணா சூப்பர் மார்கெட் வைச்சு இருக்கார்,அது என்னோட அப்பாவின் காசில தொடங்கியது, எனக்கும் அரைவாசி பங்கு உரிமை இருக்கு, "

                                                   " ????????? "

                                            " நான் அதில உனக்கு ஒரு வேலை எடுத்து தாரேன், முதலில் நான் சொன்ன விசியத்துக்கு பதில் சொல்லு " 

                                    ,  " மோனிக்கா எனக்கு சூப்பர் மார்க்கெட் வேலை எல்லாம் செய்ய தெரியாது, சமையல் வேலை மட்டுமே தெரியும், "

                                              "  நான் என்னவோ கதைகுறேன், நீ என்னவோ விளங்கி கதைகுறாய்,"

                                                " இந்த டிப்பிளோமா லைசென்ஸ் கிடைச்சால் வீராளி அம்மன் கருனையால மறுபடியும் வேலையை ஆரம்பிக்கலாம் , அதுதான் நான் ஜோசிக்கிறேன் " என்றேன்.

                                                 " ஜீசஸ்கிரிஸ்ட் ,  அது யாரடா வீராளி அம்மன்,,,, உன்னோட கேர்ள் ப்ரெண்டா,,,,சொல்லவே  இல்லையே, ஹ்ம்ம்,,,,, ஜீசஸ்கிரிஸ்ட் ,,,,ஹ்ம்ம்,,,இப்பவாவது சொன்னியே, ஜீசஸ்   கிரிஸ்ட்  , தலைக்கு  கயிறுவிழமுதல் தப்பிட்டேன், என் பிள்ளைகளின் அப்பாவும்,,,,அந்தக்  கழிசடையும்,,எனக்கு  சொல்லவே  இல்லை, ஜீசஸ் கிரிஸ்ட் ,கடைசியில்   ஒருநாள் கையும் மெய்யுமா பிடிச்சேன் ,,,அதுவும்  என்னோட வீட்டு படுக்கை அறையில்.......ஜீசஸ்கிரிஸ்ட் , நான் வேலைக்கு போயிட்டு தவறவிட்ட திறப்பை  திரும்பி எடுக்க வந்த நேரம்,,, " என்று கோபமாக கதைக்கத் தொடங்கினாள் மோனிக்கா, நான் இடை மறித்து 

                                      " இல்லை மோனிக்கா, வீராளி அம்மன் , ஒரு பெண் கடவுள் என்னோட சமயத்தில்,,எங்களின் குல தெய்வம் அவா, அவாவின் கோவிலுக்கு அருகில் தான் நான் பிறந்து வளர்ந்தேன் ,,,, " என்று விபரமா சொன்னேன்  

                                     "  ஜீசஸ்கிரிஸ்ட் , ஹ்ம்ம்,,,ஹ்ம்ம் ..ஜீசஸ்கிரிஸ்ட் , "

                                     என்று சொல்லிக்கொண்டு கேட்டுக் கொண்டு இருந்தாள்.  நான் அவளோட எல்லா ஹ்ம்ம் இலும் தொங்கிக்கொண்டு  நின்றேன்.  மோனிககா வந்து மிச்சக் கதையை முடிவாகச்  சொன்னாள். .

                                                  ." வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டுக்  " குறுந்தொகைச்  சுருக்கம் போலச்  சொன்னாள்.... 

                                                         அந்த டிப்பிளோமா லைசென்ஸ் எனக்கு கிடைக்கவில்லை , அது கிடைக்காமல் போனதை விட என்னோட வாழ்கையைத் திருப்பிப் போட்ட வேற ஒரு சம்பவம் நடந்தது.

                  தொடரும்......

Sunday, 20 March 2016

முதல்க் கதை

எழுத்து என்பது எல்லாராலும் காட்ட முடியாத வில்வித்தை . முக்கியமாக சுவாரசியமாக எழுதுவது  ஹம்தக்கினி  முனிவரின்  வரம் போல  இயற்கையாகவே கை வரவேண்டிய  அருள் நிறைந்த  அமைப்பு. அது கைவசம் இல்லாமல் அலவாங்கு போட்டு நெம்பின  மாதிரி  எழுதி, வாசிப்பவர்களின் குரல் வளையை  நெரிக்கும் ஒரு அவலத்தை   நானே  உருவாக்கக்கூடிய  ஒரு நிலை வரக்கூடாது  என்று  இளவயதில் என்னோட  முதல்க் கதையை எழுதும் வரை நினைத்திருந்தேன். 

                                                    அதனால்தானோ தெரியவில்லை முப்பது சொச்சம் வருடங்கள்  முன்னர் நானே என் முதல் கதையில் முழங்காலை முறித்துக்கொண்டேன் என்று சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது .

                                        இந்த உலகத்தில் கபடமான  திருட்டு கப்பட்டித்தனத்தை  இரத்தம் முழுவதும்  ஓடவிட்டுக் கொண்டு உலாவும்  மனிதர்கள் மிகவும் சுலபமாக அவர்கள் சாக்கடை லெவலுக்கு  இறங்கி வந்து செய்வதில் இருந்து எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் " ப்பூ " என்று நச்சுக்  காற்றை ஊதிதள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள் .

                                                           அப்படி ஒரு   நச்சுக்  காற்றின் விஷத்தன்மை வடக்கின் வாடையோடு சுற்றிச் சுழன்றது. 

                                         
என்னுடைய  துடிப்பான இளமையில்  நிறைய ரசிய மொழியில் எழுதப்பட்டு  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  ரஷியன்  நாவல்கள், கதைகள் ,கவிதைகள் அந்தக் கால வயசில் அள்ளு கொள்ளையாக வாசித்துக்கொண்டு இருந்தேன். கதைக்கான  கதைகள் , உரையாடல்கள் , திருப்பு முனைகள்  நிறையவே  சுற்றி இருந்தும் ஒரு நாளும் நானே ஒரு கதை எழுதிப்பார்க்க ஜோசித்ததில்லை .

                                                கதை எழுதுவதுக்கு கரைகள் ரெண்டிலும்  பாதுகாப்பற்ற ஒரு நதி பற்றிய  கனவு எப்பவுமே உந்தித்தள்ள  வேணும். அதுவே  காரணமாக    இருக்கலாம்  ஒரு கதை தானாகவே எனக்கு முன்னுக்கு எழுந்து " என்னை எழுதடா என் காப்பிய நாயகனே  " என்று ஒருபோதும்  கேட்டதில்லை. ஆனால் பவதாரணி ,,ஆதவன்   இருவரும்  எழுந்து வந்த நேரம் நான் சுதாகரித்துக்கொண்டு எழுதத் தொடங்க  முடிந்தது  

                                               அந்த  முதல்க் கதையை மட்டும் எப்படி எழுதினேன் என்று இப்போது  ஜோசிக்கும் போது பல சம்பவங்கள் விட்டுப்போய் விடுகிறது . அந்தக் கதையில் வந்த சம்பவங்களே இப்ப  முதல் நினைவு இல்லை. ஆனால் அந்தக் கதைக்கு நடந்த துரதிஸ்டமான  அங்கீகார  முடிவுக்கும், தவலோகராஜா  என்ற மனிதருக்குமிடையான தொடர்புகள் ஏனோ இன்னும் நல்லாவே நினைவு இருக்கு.

                                             யாருக்கும் தெரியாத காற்றின் கனமான  செய்திகள்  தான்  காலம்  கடந்து  ஒரு அமைதியான நாளில் புயலாகி வெகுண்டு எழும் போது   வீதிக்குக் குறுக்கே ஒரு மரம் விழுந்து விடும்  அப்போது  கதையாகலாம்.  ஒரு முடிவில்லாமல்  போன  கதை பற்றிய கதையில்  அந்த சம்பவங்கள்  முடித்து வைக்க வேண்டிய மூலக் கதையை விட சுவாரசியமான  முடிச்சுக்கள்  தன்  கழுத்தைச் சுற்றியே போட்டுக்கொண்டும்  இருக்கலாம், இல்லையா , என்ன சொல்லுரிங்க , அப்படித்தானே 

                                               
எங்கள் ஊரில் இருந்த வாசிகசாலை மூலமாக ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் " வெளிச்சிறை " என்று ஒரு காலாண்டு இலக்கிய  இதழ் வெளிவந்துகொண்டிருந்தது  அந்த நாட்களில்.

                                                       சுமாரான  ஒரு நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாமல்  இரண்டின் அடையாளங்களையும் கொஞ்சம் கொஞ்சம் அங்கேயும் இங்கேயும் கலந்து வரைந்த ஒரு கன்வஸ் ஓவியம் போலிருந்த எங்களின்  ஊரில் இருந்து வந்த " வெளிச்சிறை " என்றதுக்கு  என்ன சிம்போலிக்  அர்த்தம் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது . இனித் தெரிந்தும்  ஒண்டும்  கிழிக்கப் போறதுமில்லை . 

                                       
" வெளிச்சிறை  " அதில சாதியத்தை  எதிர்த்து குடியான சாதியர்கள்  முதுகில  சீனியைப் போட்டு உயர்ந்த சாதியர்களை நக்க விடுற  முற்போக்கு  சிந்தனைக்  கதைகள், கருங்கட்களில் உருவான கடவுளுக்கு எங்கே கண் இருக்கு  என்ற  அனல் எரியும் கட்டுரைகள் . விறகு கொள்ளியால மாட்டுக்குக்  குறி சுட்ட மாதிரி  கவிதைகள், அறிவியல் என்ற பெயரில்  அவியல் கட்டுரைகள் , மூக்குப்பொடி போட்டுத் தும்மின மாதிரி சின்னச் சின்ன துணுக்குத் தகவல்கள்  .

                                                       கடைசி ரெண்டு பக்கத்தில் கேள்வி பதில். அதன்  ஆசிரியராக இருந்த  தவலோகராஜாவே  கேள்வி கேட்டு அவரே பதிலும் எழுதி இருப்பார் .

                                                 அதுக்கு எடிட்டிங் ஆசிரியர், கவுரவ ஆசிரியர் , பதிப்பாசிரியர்  என்று அரைச்சு விட்ட மாதிரி    எல்லாமாகவே   இருந்தவர்  தவலோகராஜா. அந்தக் கிராம  சஞ்சிகை நகரத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த பல முக்கிய இலக்கிய மாத இதழ்களைவிடக் கனதியானது, பரமானந்தம் நடத்திய  தனலக்ஷ்மி  அச்சுக் கூடத்தில்  கவனமாக உருவாகி ,  தரமான தாள்களில் மொட்டைக்கறுப்பன்  சோற்றுக்கு மோர்க் குழம்பு அள்ளி ஊற்றி விட்ட மாதிரி பளிச் பளிச் என்று லித்தோகிராப்பிக் ஸ்டைலில்  அட்டைப்படம் போட்டு வலு கலாதியாக வரும்.  

                                                 
நீங்களே சொல்லுங்க பார்ப்பம் இப்படியான ஒரு சஞ்சிகையில் ஒரு கதை எல்லாருக்குமே தன் பெயரில் எழுதி வரவேண்டும் என்று ஆசை இருக்கத்தானே செய்யும்.  வெளிச்சிறை எங்கள்  ஊர் சஞ்சிகை, வேப்பமரக் காற்று எல்லாத்தையும் அப்பிடியே அள்ளிப்பிடித்து வைத்து  ஆர்ப்பரிக்கும் அதன் நெருக்கம்  தரும் கிளுகிளுப்பு கள்ளக் காதலர்களின்  இரகசிய இரவுகள் போல.

                                                            அதுவும் அந்தக் கதைகள் அதே ஊரில் உள்ள ஒருவரால் எழுதப்படும் போது கிடைக்கும் ஆனந்தம் நினைவில்  வரும்போது எப்போதும் நினைப்பது அதில என்னுடைய  ஒரு கதை வந்தே ஆகவேண்டும் என்று  

                                    " ஒரு பெண் ஒரு பொது வெளியில்  வரும் பிரபலமாக  வருவதுக்கு அவள் பாதையில்  எழுதப்படாத பல சட்ட திட்டப் பொந்துகளின் ஊடக நுழைந்து தன்னைச் சிதைக்காமல் வெளியே வந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் " 

                                                என்று " உரத்தநாடு  " சமூக நாடகத்தில்  கவிஞர் கந்தப்பு  அவரோட அனுபவத்தில இருந்து எடுத்து வசனம்  எழுதி இருந்தார்.  அந்த நாடகத்துக்கு  மேடையில் நான் தான் காட்சி தொடங்கும்போதும் முடியும் போதும் திரை இழுத்தேன்.

                                                       ஒரு கதையும் பதிப்பில் வருவதுக்கு எழுதப்படாத பல சட்ட திட்டப் பொந்துகளின் ஊடக நுழைந்து தன்னைச் சிதைக்காமல் வெளியே வந்தால் தான் அதெல்லாம் சாத்தியம் என்பது போல அந்த வசனம் அர்த்தம் கொடுத்தது 

                                       ஆனால்  நான் எழுதிய அந்த முதல் கதையில் இருந்து ஒரு முக்கியமான அரிவரி அடிச்சுவடி படிக்க வேண்டி இருந்ததுதான் உண்மையில்  " வெளிச்சிறை  " என்ற அந்தப் பெயரின் இன்னொரு  அர்த்ததை அந்த நாட்களில் எனக்கு உணர்த்தியது. ஆனால் யாருக்கும் அதை அப்போது சொன்னதேயில்லை.

                                                                   சொல்லி இருந்தால் இன்னும் பெரிய  குழப்பங்கள் வந்திருக்கும். எங்கள்  ஊரில் ஒழுங்கா இருக்க முக்கிய தகுதி வாயை கொட்டாவியை இறுக்கிப் பொத்தின மாதிரி பொத்திக்கொண்டு இருப்பது.                                   

                                                         
தவலோகராஜா எங்களின் ஊரில்  இருந்த  சைவமங்கை தமிழ் கலவன்  ஆரம்பப் பாடசாலையில் படிப்பித்த ஆசிரியர். நான்  அந்த ஆரம்பப் பாடசாலையில் படித்த நாட்களில் அவர் எனக்கும் சில வருடங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரை தவலோகம்  மாஸ்டர் என்று சொல்லுவார்கள்.

                                                         செருப்பு போடாமலே உயரமானவர்.  எப்பவும் முன்னுக்கு நீல நிற பிரம்பு பாஸ்கெட் கொழுவவிட்ட  இங்கிலண்ட் ஹம்பர் சைக்கிளில் வருவார். அவரோட வேட்டி வெள்ளை போலவே அவர் வைச்சு இருக்கும் கணுக்கு வைச்ச மூங்கில் பிரம்பும் வெள்ளை . மேலும் கீழும்  இடைவெளி உள்ள காவிப் பற்கள் . படிப்பிக்கும் போது ஈக்கிலை அதுக்குள்ளே விட்டு மரம் அரியிற வாள் போல இழுப்பார் .

                                        வாசிக்க சாலையின் ஆண்டு நிறைவு விழாவுக்கு  " வெளிச்சிறை " விஷேட பதிப்பு வருகுது என்றும் அதில கதை எழுதப் போட்டி என்றும் , முதலாவதாக வெல்லும் கதை அதில சிறப்புக் கதை என்று வரும் என்றும், முதல் பரிசாகாக " சோவியத்யூனியன் " என்ற ரசியன் இலக்கிய மாத சஞ்சிகை ஒருவருடம் இலவசமாக கிடைக்கும் என்றும் நோட்டிஸ் ஒட்டி இருந்தார்கள்.

                                                   வாசிகசாலை இலக்கிய அரங்கில்.  கவிஞ்சர் கந்தப்பு " ஜுலிய சீசர் " நாடகம் பழக்குவதைப் பார்க்கப் போன நேரம் அந்த நோட்டிசைப் பார்த்தேன் .

                                     
வீட்டை வந்து ஒரு கதை எழுதத் தொடங்கினேன் , அந்த நேரம் வீட்டில ஹோர்ம் வேர்க் மட்டுமே எழுத அனுமதி இருந்தது, அம்மாவுக்கு கதை எழுதுறது தெரிஞ்சால் செவிட்டில அறைஞ்சு,

                               " கதையோ,,இப்ப  கதையோ  தம்பி உனக்கு தேவைப்படுது, நாளைக்குக்  கண்டறியாத  இந்தக் கதையோ  உனக்கு சோறு போடப் போகுது,,இப்ப வந்தனென்டா தம்பிக்கு  கதை  காதுக்குள்ள ஒட்டிக்  காட்டுவன்,,ஒழுங்கா  பாடத்தை படிச்சு ,ஹோர்ம் வேர்க்கை  எழுதடா,,அந்த  இந்த  விசர்க்கதைகளை  விட்டுப்போட்டு .."

                                                                     என்று சங்காபிசேகம் தொடங்கும் என்று தெரியும். அதனால  சமய பாடப் புத்தகத்தை எடுத்து வைச்சுக்கொண்டு, அதில  சேக்கிழார் எப்படி பெரிய புராணத்தை சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் அரங்கேற்றினார் என்ற விவரணத்தை விரிச்சு வைச்சுப்போட்டு  அதுக்கு மேலே வெள்ளை புல்க்ஸ்காப் பேப்பரில் உ  எழுதி பிள்ளையார் சுழிபோட்டு, சிவமயம் என்று அதுக்குக் கீழே எழுதி, வலது கையால பேனையைப் பிடிச்சு ...

                                " குச்சு ஒழுங்கையில் கவசமணிந்த  பின்மாலைக்                     கும்மிருட்டு மெல்லிய லில்லி மலர்கள் வாசத்துடன்                                                  இரவுக்குப் பாய் விரிக்க, கிளுவை மரங்கள் வரிச்சுப் பிடிச்ச                                 மணல் தரவையில், மாதவிலக்கு  மஞ்சளாகி வாடி விழுந்த                                 பூவாரசம்பூ தவிர வேறு யாருமே  இல்லை,

                                                 ஆதவன் சொல்லியே வாக்குக் கொடுத்த மாதிரி  ஒழுங்கையின் வடக்கு வளைவில் சைக்கிளை மதிலோடு சாத்திப்போட்டு ,அதே  சீமெந்து சுவரில்  ஒரு காலைப்  பின்னுக்கு வைச்சு ஒருக்கழித்து மற்றக் காலை சுவரோடு தேய்ச்சு உரசிக்கொண்டு  கவரிங் பொசிசன்  எடுத்து பவதாரணி வாறதைப்  பார்த்துக்கொண்டு நின்றான்,

                                            அம்மச்சியாகுள  தொடக்கக் ஒழுங்கைப் பக்கமாக பவதாரணி டியூசன் புத்தகத்தை நெஞ்சோடு இரண்டு கையாளும் இறுக்கிகொண்டு  ஒழுங்கை முடிவில் நிக்கும் சைக்கிளின் பின் ரெட் லைட்டை வைச்சு நிக்கிறது ஆதவன் என்று தெரிந்த போது சிரித்துக்கொண்டே பின்னால் திரும்பி வேற யாரும் வருகிறார்களா  என்று பாக்க,,,

                                      இந்திய இராணுவ சீக்கிய ஜவான் ஒருவன் எஸ் எல் ஆர் ரைபிளை ஒழுங்கை முடிவை நோக்கி நீடிக்கொண்டு  அவளுக்கு மிக மிக சமீபமாக வந்தான் , ஆதவன் சடார் என்று  பையரிங் பொசிசன்  எடுக்க , முன்னுக்கு  வந்த  பஞ்சாப் மேஜர்தர  சிங் அதிகாரியின்   பின்னே நிறைய முண்டாசு தாடி மீசை ஜவான்கள் ரைபிள்களை நீட்டிக்கொண்டு வந்தார்கள் ..."

                                         
அந்தக் கதை இப்படிதான் தொடங்கியது. கொஞ்சம் எழுதிப்போட்டு ஏன் சேக்கிழார் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்த நாயன்மார்கள் எல்லார் பற்றியும் பெரியபுராணம் எழுதி அதில் சும்மா அவர் புத்தகத்தை வெளியிட மட்டும் பந்தா போட்ட சிதம்பரக் கோவில் பிராமணர்களைத் "  தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் " எண்டு சொன்னார் என்று ஜோசிதேன்.

                                                            அந்த அந்தணர்கள்   மொஹாலாயப் படை எடுப்பு நேரம் சிதம்பரம்  கோவிலை அம்போ எண்டு விட்டுப்போட்டு ஓடிப்போனவர்கள் .  சேக்கிழார் பெருமான் அவர் புத்தகம் வெளிவர அப்படிக் காக்கா பிடித்து தூக்கிப்  பிடித்தாரோ என்றும் ஜோசிக்க வைத்தது.  

                                     
 நான் எழுதிய அந்த முதல் கதை இந்திய இராணுவம் அமைதி இராணுவம் என்ற நிலையில் இருந்து மாறி ஆக்கிரமிப்பு நிலையில் இருந்த நேரம் நடக்கும் ஒரு காதல் கதை. நானே செக்கிங்  நெருக்குதல் , இரவுகளில் சுற்றி வளைப்பு,  நடு இரவு காதைக் கிழிக்கும் டாம் டூம் குண்டு வெடிப்புகள், அதிகாலை தெருவோரதில் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் என்று பலவற்றை அந்த நேரம்  அதற்குள் நின்றே அனுபவித்துக்கொண்டு இருந்ததால் இலகுவாக எழுத முடிந்தது. ,

                                                பவதாரணி  என்ற இளம் படிக்கும் பெண் ஆதவன் என்ற ஒரு  இளைஞனைக் காதலிக்கிறாள்,  இருவரும் ஒன்றாகப்  படித்தார்கள், ஒவ்வொரு பாட இடைவெளிக்கும்   பாடசாலை மணி அடிக்கும்போது உருவாகிய காதல் . நல்லாப் படிக்கக்கூடிய அந்த ஆதவன் தொடர்ந்து  படிக்கவில்லை. .. .......என்ற  இயக்கத்தில் சங்கீதன்  என்ற பெயரில் இயங்குகிறான்.

                                                அவர்களின் முதல்  காதல்  தொடங்கிய  அந்த ஒழுங்கையில்   ஒருநாள் வழமை போல சந்திக்க அவளும் அவனும்  பிளான் போடுகிறார்கள், நிலைமையோ டைம்  செட்  செய்யப்பட்ட வெடிகுண்டுக்கு மேலே நிற்பது போல.. 

                                               இடையில் எப்படியோ  புலனாய்வு செய்து மோப்பம் பிடித்த  இந்திய இராணுவம்,,அந்த சந்தர்பத்தை வைத்து ஆதவனைப் போட  வர,  ,,கதையின் முடிவில் ஆதவன்  காயங்களுடன்  மரவள்ளித்  தோட்டத்து வாய்க்காலில் நிலை எடுத்து தட்பாதுகாப்பாக சுட்டுச் சுட்டு தப்பிப் போய் விடுவான், பவதாரனி இந்திய இராணுவ துப்பாக்கி ரவைகள் தோள்பட்டையில் பாய்ந்து முன்னுக்கு வலது மார்பைப் பிய்துக்கொண்டு போய்  அந்த செம்பாட்டு வீதியில் இறக்கிறாள். 

                                    "    ஒழுங்கை முழுவதும்  துப்பாக்கிச்சூடுகளின் அதிர்வும் , செம்பாட்டு மண்ணில் சிதறிஓடிய நாய்க்களின்  ஒலமும்  ஓய்ந்து முடியும் போது ஒரு பூவரசம் பூ பவதாரனி நெற்றியில் நேராக  கும்குமப் பொட்டுப் போல  விழுந்தது .."

                                          இதுதான் கதையின் கடைசி வரி , ஏன் பவதாரணி இறந்தாள் என்பதுக்கு அவள் ஆதவனைக் காப்பாற்ற ஒரு தந்திரம்  செய்வாள். பெண்களுக்குத்தான் துணிவு வரும் இந்த நேரங்களில் . பயங்கரமான யுத்த நிலைமை, இந்தியன் ஆர்மியின்  எஸ்எல்ஆர் செல்ப்  லோடிங் துப்பாகிகள் வெடிக்கப் போகுது , ஆதவனின்  ஆட்டோமாடிக் கலாஸ்நிக்கோவ் ரைபிள் எப்பவும் மனுவல் செட்டிங்கில்  பிபி  பாக் இல் லோட் செய்து சேம்ம்பரில் ரவுன்ஸ் ஏற்றி வைச்சிருப்பான். அதுவும்  அவளுக்கு தெரியும் ,

                                             அப்பவும்  அவள்  ஆதவனைக் காப்பாற்ற ஒரு தந்திரம்  செய்வாள். அதுதான் கதையின் " செண்டிமெண்டல் ஹய்லைட்ஸ் " 

                                 ஆனாலும் பவதாரணி  துணிந்து வைக்கும் ரெண்டாவது  காலடியில் ..கதையை எகிறிப்பாய வைக்க  அப்பிடியே  கேர்பின்  வளைவுபோல நூற்றி எண்பது பாகை  டிகிரியில் ஒரு திருப்பம் வைச்சேன்.

                                                    ஏனென்றால்  அந்தக் கதையில் ரஷியன்கிர்கீசிய  மொழி எழுத்தாளர்  சிங்கிஸ் ஜேமேதாவின்  ஜமீலா போன்ற ஒரு பெண்ணாக யாழ்ப்பாணத் தமிழ் பெண் பவதாரணியை சிருஸ்டிக்க நினைத்தேன்...அதனால கதை எனக்குப் பிடித்து இருந்தது. மற்றவர்கள்  என்ன நினைப்பார்கள் என்பது பற்றி ஒன்றுமே நான் நினைக்கவில்லை. 

                                 

இந்திய ராணுவம்  எங்கள் பிரதேசத்தை விட்டுப்போன  பின் சில வருடங்களில் அதை எழுதி இருந்தேன். அந்தக்  கதையைத்தான் வெளிச்சிறைக்குப் போட்டிக் கதையாகக் கொடுத்தேன், நேரடியாகவே கொண்டு போய்  தவலோகராஜாவிடம் கொடுத்தேன். அவர் வேண்டி மேலோட்டமாகப் சர் சர்  என்று  கண்ணை  கடுக்காய் நண்டு போல இழுத்துக்கொண்டு போய்  வசன  முடிவுவரிகளில்  செருகி வைச்சு பார்த்தார். அப்பிடிதான் அவர்  வாசிப்பார்  போல  இருந்தது.  

                                       "   உன்னோட கை எழுத்து நல்லா இருக்கு,,கதை  எழுத்து  எப்படி  இருக்கும் என்று முழுக்க வாசிதுப்போட்டு சொல்லுறேன்,,"

                                           "   ஓம்..  சேர் "

                                     " ஆனாலும் இது  போட்டி  கண்டியே,,அதால  இப்ப  நான்  இதை  வேண்டீனா,,இனி  முடிவு வரும் வரை  யாருக்கும்  எதுவும் சொல்லக்கூடாது.."

                                        "   ஓம்..ஓம்,   சேர் "

                                " அதுதான் போட்டிக் குழுவின்  சட்டம்  தெரியும்  தானே "

                                    "   ஓம்..ஓம்  தெரியும்  சேர் "

                                  "   கதை என்ன இயக்கக் காலக்  கதையோ,,இந்தியன் ஆமியோடு பூனையும்  எலியும்  பிடிச்சு விளையாடின கதையோ "

                                 " ஓம்,,ஓம்  சேர்..கொஞ்சம் அப்படிதான் "

                               " இதென்ன கதையின் தொடக்கம்,,ஒரு மாதிரி  சக்கரைச் சாக்கு சளியிற மாதிரி  வர்ணனையில்  தொடங்குது,,"

                                           "   ம்..ம்  ....... சேர் "

                                " இப்பிடி எங்கட ஆட்கள்  எழுத மாட்டினமே "

                                " ஓம்,,,சேர்  ,,நான்  நிறைய ரஷியன்  மொழிபெயர்ப்பு கதைகள்  படிப்பது,,அவைகளின்  பாதிப்பு "

                             "  ரஷியன்  கதைகள்  நீ படிச்சா  நீ என்ன  கொம்போ, இப்புடி  வர்ணனை வாக்கியம்  எல்லாம் கொமிடியில் உள்ள மற்ற மெம்பர்களுக்கே காதுக்க  சில்வண்டு  சுத்துமே "

                                     "??????????????? "..

                             " அவயளுக்கே கொஞ்சம் கஷ்டமே  விளங்க "

                                " இல்ல,,சேர்,,நான்  தவறுதலா ரஷியன்  கதை  பற்றி  சொல்லிப்போட்டேன்  சேர்.. "

                                 " டேய்,,நீயே  ஒரு  கழிசடை,,,என்னட்ட தவண்டு தவண்டு  படிச்சனி தானே,"

                                                 "   ஓம். ... சேர் "

                                    " ,ரெண்டு  வருஷம் மட்டில்  நான் தானே  உனக்கு  கிளாஸ்  மாஸ்டர்   நினவு இருக்கோ  "

                                 " ஓம்..ஓம் ,,சேர்,,,ரசியன்  கதை  யாரும்  வசிக்கலாம்  ,,சின்னப்  பிள்ளைகளை  நித்திரை கொள்ளவைக்கும்  போது சொல்லுற மாதிரி இலக்குவான கதைசொல்லிகள்  அவர்கள்..  சேர் "

                                "   ஓ ,,அப்படியோ ,இப்ப என்ன நாவல்  படிச்சுக்கொண்டு  இருகிராய் ,,,சும்மா  பொய் அவிட்டு விடாதை  ,,பிறகு பிடிபடுவாய் "

                              " லேர்மன் தாவ் எழுதின நாவல்  சேர் "

                             " அவர்  தானே  கரமசோவ் சகோதரர்கள் நாவல் எழுதினது "

                           " இல்லை சேர்  அது  பியோடர்  தவஸ்தேயாஸ்கி "

                            " அவர் தானே  தானாபாய்  என்ற  விவசாயி ஒரு குதிரை  வைச்சு  இருந்தான்  எண்டு  எழுதினது,,,அந்தக்  குதிரைக்கு  என்ன பெயர்"  

                           "  குதிரைக்கு  குல்சாரி  பெயர், சேர் , அதை  எழுதியது    பியோடர்  தவஸ்தேயாஸ்கி இல்ல சேர்   அதை  எழுதியது  சிங்கிஸ்  ஜமாதவ் "
                           
                                " ஒ...அப்பிடியே,,ஆனாலும்  நீ  கனக்க  தெரிஞ்ச பன்னாடை போல    எனக்கே  பிழை பிடிக்கிறது  நல்லதுக்கு  இல்லை  தெரியுமே.."

                          " ஓம்,,சேர்,,நான்  எனக்கு  தெரிஞ்சதை  மட்டும் சொன்னேன்  சேர்..நீங்க  இலக்கியம்  நல்லா  படிச்சவர்  சேர்..."
                               
                         " சரி,,இப்ப  நீ வாசிக்கிற புத்தகம்  என்ன,,எனக்கும்  சொல்லு,,எப்படி  என்று  ஜோசிக்கலாம் "

                          " --நம் காலத்து நாயகர்கள் ---- என்ற நாவல் சேர் ,,லேர்மன்  தாவ்   எழுதி  இருக்கிறார் "

                            " ஓ.. அப்படியே,,,அவர்  உந்த  ளார்ர்மன் தாவு எப்படி  உந்தக் கதை தொடன்குறார் ,,எங்க கொஞ்சம் சொல்லு பார்ப்பம்,,"

                         "அவர் பெயர் ளார்ர்மன் தாவு இல்லை சேர்..லேர்மன் தாவ்  சேர்,,அந்த  நாவல்  ---- ரஷியக் கடற்கரைக் கிராமங்கள் எல்லாவற்றிலும்  கேடு  கெட்டது தமாம்----- இப்படி  தொடங்குது .  சேர் "

                          " டேய்..என்னடா..நீ  என்னட்ட  பிரம்பால அடிவேண்டிப்  படிச்ச  கழுதை  எனக்கே  பெயர்  திருத்துது,"

                                      "   சொறி  சேர் ...நான், ,  சொறி  சேர்,  வாய் ,  சொறி  சேர்,,,,குளறி,,,   சொறி  சேர் "

                                     ," நாலு பேப்பரில்  உள்ள கதையைக்  கிழிச்சு ஏறிஞ்சு போடுவேன்  தெரியுமா ,,சேட்டை விட்டாய் என்றால் "

                     " சொறி  சேர்..நான்  வாய் குளறி அப்படி சொல்லிட்டேன்.."

                   " நான் தான் வெளிச்சிறையின்  ஆசிரியர்  தெரியும்  தானே,,"

                                        "   ஓம்..ஓம்  தெரியும்  சேர் "

                                           " ஒண்டவிட்டு ஒருநாள்  பின்னேரம்  வீட்டுக்கு  வா,,நாலு வாளி  தண்ணி அள்ளி முன்னுக்கு நிக்கிற செவ்வரத்தம் பூக்கண்டுகளுக்கு  ஊத்து  ,, என்ன நான் சொல்லுறது  விளங்குதே "

                  " ஓம்,,சேர்..இது  நான்  எழுதின  முதல் கதை  ,,சேர் "

                      " ம்..ம்ம்... நான்  இரவுக்கு  வாசிப்பேன் ..தண்ணி வாளி நினைவு இருக்குதானே .."

                     " ஓம் ஓம் சேர்,,இது  முதல்  கதை,,ஆர்வத்தில்  எழுதியது,,சில  பிழைகள்  இருக்கும்ம் சேர்.."

                          " டேய்..அதுக்குதானே  நான்  வெளிச்சிறை  ஆசிரியரா  இருக்கிறேன்,,என்னைவிட இந்த  ஊருக்குள்ள வேற ஆருக்கும்  தகுதி  இருக்கோ,,சொல்லு  பார்ப்பம்," 

                      " இல்லை,,சேர்,,நீங்கதான்  ஒரே  ஒரு  தகுதியான ஆள்  சேர்  " 

                        " கதை  கொஞ்சம்  நல்லா  இருக்கு  தொடக்கத்தில்,,எண்டாலும்  நான்  முழுதும் படிக்காமல் சொல்ல மாட்டேன்.  " 

                           " ஓம்..ஓம்...ஓம்..சேர்,,மற்ற ஆட்களும் அனுப்புவினம் தானே,,அதுகள் இதைவிட நல்லா இருக்கும்  சிலநேரம்,,ஆனால் வெளிவராட்டியும் பரவாயில்லை ,சேர் "

                               " சரி,,கனக்க  வள வள எண்டு கதைக்காதை,  ஒண்டவிட்டு ஒருநாள்  பின்னேரம்  வீட்டுக்கு  வா,,நாலு வாளி  தண்ணி அள்ளி முன்னுக்கு நிக்கிற செவ்வரத்தம் பூக்கண்டுகளுக்கு  ஊத்து  "

                                   " ஓம்..ஓம்...ஓம்..சேர் "

                                 " , என்ன நான் சொல்லுறது  விளங்குதே" 

                                       " ஓம்  சேர்  ..நினைவு  இருக்கு, திறந்தவெளிச்சிறைச்சாலையும் நினைவு  வருது,,,,"
                 
                           " என்ன  பிறகு  வாய்க்குள்ள  முனுமுனுக்கிறாய் "

                       " இல்ல,,சேர் ,திறந்த  மனதுடன்  வெளிச்சிறைக்கு  நீங்க  ஆசிரியரா இருப்பதால்,,,நல்ல தரமாக வருகுது  என்று  சொன்னேன் "

                         
ஒரு கதை ஒரு சஞ்சிகையில் வருவதுகுக்காக  அதன் பதிப்பு ஆசிரியர் வீட்டுக்கு  ஒண்டவிட்டு ஒருநாள்  பின்னேரம்  போய் நாலு வாளி  தண்ணி அள்ளி முன்னுக்கு நிக்கிற செவ்வரத்தம் பூக்கண்டுகளுக்கு ஊற்றிகொண்டிருந்தேன்,  அவர்  நாலு  வாளி என்று  கதையைக்   கையில வேண்டும்போது சொன்னார்  ஆனால் அவர் வீட்டுக்குப்போக அது  பத்து வாளி ஆகிட்டுது.

                                               எப்படியோ  அவர் வீட்டுக்கு தண்ணி ஊற்றப் போனால் அவர் கதைக்க மாட்டார். என்னைக் கூலி வேலைக்கு வந்தவன் போல கண்டும் கானானது போல இருப்பார். வெளி விறாந்தையில்  ஈசிசேரில்  இருந்துகொண்டு காலச்சுவடு, கணையாழி, கசடதபற போன்ற இலக்கிய சஞ்சிகைகள்  வாசித்துக்கொண்டிருப்பார்.  

                                 எப்படியும் பின் வளவில இருந்த  கட்டுக் கிணற்றில் இருந்து  வாளியில்  தண்ணி நிறைச்சு முன்னுக்குக்  கொண்டு வந்து   தண்ணி ஊற்றி முடிய  அதிகமாக  மாட்டுக்கு புல்லு அரிஞ்சு போடச் சொல்லுவார், சில நேரம் அவர் மனைவி அள்ளிக் குளிச்சு  முழுக  பெரிய தொட்டியை நிரப்பிவிடச் சொல்லுவார்,  சின்ன மாதுளம் கண்டுகளைச் சுற்றி கிண்டிப் பசளை போட்டுவிடச் சொல்லுவார்.

                                         இதெல்லாம் சொல்லுவார் என் கதையின் நிலை பற்றி ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.

                               
ஒரு கதை  எழுதி அதை ஒரு உலகமகா  இலக்கிய ஆசிரியரின் கையில கொடுத்த துணிவில் அதுக்குப்பிறகு  அடிக்கடி  வாசிகசாலை இலக்கியமன்றம்  பக்கம்  போறது. ஆனால் தவலோகராஜாவை அங்கே  காணமுடியவில்லை .

                                           ஒருநாள் ஆண்டிறுதி கணக்கு வழக்குப்பதிவு சம்பந்தமான ஒரு அறிக்கை தயாரிக்க  வந்திருந்தார் . நான்  என் கதை பற்றிக் கேட்டேன் . ஆச்சரியமாக அவரே வந்து 

                                  " டேய்..செம்மறி,,சும்மா சொல்லக்கூடாது...கடவுளே என்று  கதை  நல்லா  இருக்கடா..நான்  மூன்று  தரம்  த்திருப்பி  த்திருப்பி வாசித்தேன்,,,"

                                 " அப்படியா,,நன்றி  சேர்.."

                         " ஆனால்,,அந்த  குளத்தம்  கரையில்  அந்தப்  பெடிச்சியும்,,பொடியனும்  கதைக்கிற  உரையாடலை  கொஞ்சம்  அதிகமா  நீட்டி  எழுதி  இருக்கலாம்  போல  இருக்கு  "

                            " அப்படியா,,ஏன்  சேர்  அதை  நீட்ட  வேணும்  "

                            "  அவளவு ருசியா  இருக்கடா, படலையத்  திறந்து  கொண்டு  போய்க் கேட்காமல்  பக்கத்தில  வேலிக்கால  எட்டி நிண்டு  விடுப்பு  கேட்கிற  மாதிரி  இருக்கு "

                        " அப்படியா  சேர் ,, நல்லது  ,,இனி  ஒண்டும்  செய்ய  ஏலாதுதானே,,"

                        " டேய்  எருமை  மாடு //    படலையத்  திறந்து  கொண்டு  போய்க் கேட்காமல்  பக்கத்தில  வேலிக்கால  எட்டி நிண்டு  விடுப்பு  கேட்கிற  மாதிரி ///  இப்பிடி இந்த  வசனம்  நீ தானே  அதில  எழுதி  இருகிறாய்,,அதை  நான்  திருப்பி  சொன்னேன்,,நல்ல  வசனமடா அது  வாற  இடம்  "

                       " ஓம்,,சேர்...நான்  தான் எழுதி  இருக்கிறேன் ,,எனக்கும்  குழப்பமா இருந்தது  நீங்க  சொல்லும்  போது.."

                        " சரி விடு  விசியத்துக்கு  வாறன் ,,இந்தக்  கதை  என்னட்ட தந்த கதை சிலமன் வேற யாருக்கும்  சொன்னனியே "

                    "  இல்லை,,சேர்..உங்களைத் தவிர வேற யாருக்கும்  தெரியாது " 

                    " ஏன்,,வீட்டில கொம்மாவுக்கும்  சொல்லேல்லயா "

                      " வீட்டில கொம்மாவுக்கும்  சொல்லேல்ல சேர் "

                      " அறைஞ்சன் என்றா  இப்ப காதில , நான் கேட்டது , உன்னோட  கொம்மாவுக்கும்  தெரியாதோ  என்று "

                  "  இல்லை சேர்,,வீட்டிலயாருக்கும்  சொல்லவில்லை சேர் "

                    " ஏண்டா  டேய் கொம்மாவுக்கும் சொல்லேல்லயா ,,உன்ட கொக்கா இங்கிலிஸ் பொயம்ஸ்  எல்லாம் தேடித் தேடி  மொழி பெயர்ப்பாளே  அவளுக்கும் தெரியாதா "

                   " ஒருத்தருக்கும் தெரியாது,  சேர்,  அம்மா கதை எழுதினது தெரிஞ்சால் தோலைக் கண்டம் கீறி கருவாடு போட்டுடுவா சேர், "

                      " கந்தப்பருக்குத் தெரியுமே,,அந்தக்  காளமேகப்புலவருக்கு  என்னவும்  பறைஞ்சனியே "

                           " இல்ல,,,சேர்,,,கவிஞ்சர்  கந்தப்புக்கும்  தெரியாது "

                      " சரி,,நான் ஒண்டு சொல்லுறேன்  இந்தக்கதை  இந்த  ஆண்டுவிழாப் பதிப்பில்  நீ எழுதியதாக வர சான்ஸ்  இல்லைப்  போல  இருக்கு,,,,"

                                 " ஏன்   , சேர்,  "

                                           " ஏன்னென்றால் வேறு ஒரு  பொடிச்சி  ஒரு  பெண்விடுதலைக் கதை  எழுதி  இருக்கிறாள்  அதுதான்  செலக்சன் கொமிட்டி ஆட்களுக்குப் பிடிச்சு இருக்கு.."

                      " என்னோட  கதை  அவர்களுக்கு  பிடிக்கவில்லையா  சேர்,,"

                     " உன்னோட  கதை...அது  வந்து,,,ஹ்ம்ம்,, அதை  அவர்கள்  யாருமே  வாசிக்கவில்லை......"

                     "சரி,,,சேர்,,,இன்னும் அவர்களுக்கு  என் கதை  வாசிக்க  நேரம்  கிடைக்கவில்லை என்று  நினைகேறேன் ,,வாசித்தபின்  சொல்லுவார்கள்,,,"

                                  " .அது  வந்து,,,ஹ்ம்ம், "

                                " எனக்கு  யாராவது  வாசித்தால்  போதும்,,அதுக்கு  பரிசெல்லாம் தேவை இல்லை..தகுதி  இருந்தால் பரிசு  கொடுக்கட்டும் "

                        " ஹ்ம்ம்,,அது,,வந்து,,,சரி  விடு,,,எனக்கும்  ஒரே  கரைச்சல் இவங்கள்  சிறப்புக்கதை   எழுதி தரசொல்லி , சுடுகுது  மடியைப் பிடி என்று நிக்குறாங்கள் "

                                       " ஏன்   , சேர்,  "

                                        "   அனுவல் பப்பிளிசிங் கொமிட்டி ,,என்னத்தைப்  பிடிச்சு  எழுதுறது  என்று தெரியவில்லை,,நாள்  வேற  நெருங்குது ...".

                        " ஹ்ம்ம்,,,அது  பரவாயில்லை,,நீங்க  ஒருவர்  வாசித்ததே  எனக்கு  மனநிறைவு சேர்.."

                     "  டேய்,,உண்மையாதானே  சொல்லுறாய் இந்தக்  கதை  என்னட்ட தந்த கதை சிலமன் வேற யாருக்கும்  சொல்லவில்லை  என்பது  "

                                   " ஏன்   , சேர்,  "

                                "  அது  உண்மைதானே  நீ படிக்கிற சரஸ்வதி மேல சத்தியம் செய்து சொல்லு "

                  " சரஸ்வதி மேல சத்தியமா சரஸ்வதியைத் தவிர வேற   ஒருத்தருக்கும் தெரியாது "

                    " சரி,, அப்ப இதை  உனக்குள்ளே மட்டும் வைச்சிரு,,இனிப்   பூக்கண்டுக்கு தண்ணி ஊற்ற வராதை ,,சரி  தானே,,"

                                       " ஏன்   , சேர்,  "

                                       " வாயையும்  கண்டபடி திறக்காதை,,,தளராமல் உன்னோட ரெண்டாவது  கதையை  எழுது.....ஹ்ம்ம்,,,ஆனால்  யாருக்கும்  கொடுக்காதே,, ஹ்ம்ம்,,,"

                    "  சரி சேர்,,நீங்க  சொன்னபடியே  செய்யுறேன்  சேர்,"

                   
அதுக்குப்பிறகு  நான்  கதையே  எழுதவில்லை..சும்மா வேற விசியங்களில் ஓடுப்பட்டுக் கொண்டு திரிந்தேன்.  ஆனால்  பவதாரணி  ,ஆதவன்  என்ற  அந்தக்  கதை அந்த வருட ஆண்டு விழாவில் இருந்தது . அது
                               
                                                   " குச்சு ஒழுங்கையில் கவசமணிந்த  பின்மாலைக்                     கும்மிருட்டு மெல்லிய லில்லி மலர்கள் வாசத்துடன்                                                  இரவுக்குப் பாய் விரிக்க, கிளுவை மரங்கள் வரிச்சுப் பிடிச்ச                                 மணல் தரவையில், மாதவிலக்கு  மஞ்சளாகி வாடி விழுந்த                                 பூவாரசம்பூ தவிர வேறு யாருமே  இல்லை,

                                           இப்பிடித் தொடங்கி

                           "    ஒழுங்கை முழுவதும்  துப்பாக்கிச்சூடுகளின் அதிர்வும் , செம்பாட்டு மண்ணில் சிதறிஓடிய நாய்க்களின்  ஒலமும்  ஓய்ந்து முடியும் போது ஒரு பூவரசம் பூ பவதாரனி நெற்றியில் நேராக  கும்குமப் பொட்டுப் போல  விழுந்தது .."             

                                      இப்படி  முடிகிறது. அதை தவலோகராஜா அவரின்  எழுத்துலகப்  புனைபெயரான கூளங்கைச் சக்கரவர்த்தி  என்ற  பெயரில் எழுதியதாகப் போட்டு இருந்தது. சிறப்புச் சிறுகதை என்று பெரிதாக மூன்று இடத்தில விளம்பரம் போட்டு இருந்தார்கள்.


கவிஞ்சர் கந்தப்பு  ஒருநாள் அந்தக் கதையை சிலாகித்து " ஜுலிய சீசர் " நாடகம் பழகும்போது சொல்லிக்கொண்டிருந்தார் 

                            " தவலோகம் ஒரு  கதை  எழுதி இருக்கிறான்  எங்கட  வெளிச்சிறை ஆண்டு விழா மலரில சும்மா சொல்லி வேலை   இல்லை,.."

                             " .கதை ????தவலோகம்  மாஸ்டர் ???கதை  எழுதி ??? "

                       " . அஞ்சிலே ஒண்றாராக ஆருயிர்க்காக ஏகி  அஞ்சிலைலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு  என்று  ....கம்பநாட்டாள்வான்  சொல்லுவான் ,,அதபோல  ஒரு  காதல்  கதை "

                             " அதென்ன  கதை  ,,கவிஞ்சரே "

                      " டேய்,, அது  எங்கட  ஊர்  காதல்  கதை,,ஒரு  ஒழுங்கையில் முடியுது..கோதாரி  விழுந்த  இந்தியன்  ஆமிக்காரன்  அந்தக் குமர்ப்   பிள்ளையை   சரிச்சுப் போட்டாங்கள்,,"

                                    "பிறகு என்ன நடந்தது..கவிஞ்சர் ஐயா   " 

                                   "அந்தப்  பெடிச்சி  அந்தப்  பொடியனை  ஒரு  ட்ரிக்ஸ்  விட்டுக்  காப்பாற்றிப் போட்டு  செத்துப் போனாள்..புண்ணியம் செய்த  சீவன்  "

                              "  ம்....பிறகு  .."

                           " கதை  உண்மையான சம்பவம்  போல இருக்கு  வாசிக்க, குருக்கள் வளவடிப்  பெட்டை  எண்டு தவலோகம் எழுதி இருக்கிறான், "

                                         "பிறகு என்ன நடந்தது. .."

                             " குருக்கள் வளவடி  எண்டா  , அவடதில  ஆர்  ஆட்கள் ,"

                                     " எனக்கு  எப்படி  தெரியும்  கவிஞ்சர் அய்யா "

                            " குருக்கள் வளவடியில்  அருளானந்தம் வாத்தியாரின்   ஒரு  மகள், ரெண்டாவது  எண்டு  நினைக்கிறன் , வாசிட்டியில் படிச்சுக்கொண்டு  இருந்தாள்,,"

                                            " தெரி....  எனக்கு  சரியா..தெரி....பிறகு...  "

                                     அவள்  தானே  இயக்கத்துக்குப்  போனது "

                                       " அதுவும்  எனக்கு  சரியா  தெரியாது,,அருளானந்தம் மாஸ்டரின்    கடைசி  மகள் என்று  நினைகிறேன்  "

                               " அப்பிடியே,,ஆனால்  அவள்  இந்தியன் ஆமியுடன்  அடிப்பட்டு  எல்லோ  சண்டிலிப்பாயில்   அவங்கட  கவசவாகனத்தைக் கவிட்டுப் போட்டு  எல்லோ  செத்தவள்   "

                                 " ஹ்ம்ம்,,,ஒரு  கதைக்கு  சில  விசியங்கள்  அதில்  இருந்து  அவருக்கு  கிடைச்சு இருக்கலாம்,  அப்படி  எடுப்பது  பிழை  இல்லைதானே " 

                         " எண்டாலும்,,கண்டியே , யாரையும் கொப்பி  அடிக்காத  தனித்துவமான  எழுத்து நடை  எங்கட  தவலோகதிட்ட இருக்கு "

                            "  ம் "

                 " ஒவ்வொரு  திருப்பமும்  பார்த்தியே எண்டால்   ,,கடுகண்ணாவை ஏத்தம்  இறக்கம்  போல  புல்லரிக்கும்  "

                               "   ம் "

                             "  யாருமே  தொடாத சப்ஜெக்ட் என்ன   சொல்லு  பார்ப்பம்,,,இந்தியன் ராணுவம் இருந்த நேரம்  இதை  எழுதி இருந்தான் எண்டால்,,தவலோகத்தை  இழுத்துப்போட்டு சுட்டு இருப்பாங்கள்  அந்த எளிய இந்திய ஆமி  நாயள் "

                          "     ம் " 

                     " இந்த  மாதிரி அடுத்தவனின்டைக்க  கையைவிட்டுத் துலாவி  எடுக்காமல்  யூனிக் ஆக  சிந்திக்க எங்கட தவலோகம் ஒருத்தனுக்குதான்  தெரியும். "

                        "ம்  ம் .. " 

                       " மற்றவங்கள்  சும்மா  தார் ரோட்டுப்போல  சும்மா சங்கானை மனியத்திண்ட வெங்காய லோறிபோல  இழுத்துக்கொண்டு  போறது,,,ஒரு அறுப்பும்  இல்லை  அதை  வாசிக்கிறதில "

                           "   ம் "

                   "  நீ  இருந்துபார்  தவலோகம்  இதோடு  ஒரு  எழுப்பம்  எடுப்பான்  பார்,, "
                                  "  ம் "

                         " பாரன்  அவனிண்ட  அடுத்த  கதையை அது   மாதா கொடி திரி எண்டு  இதைவிட  எழுப்பமா  இருக்கப்போகுது ,,"

                        " அது  எப்படி  அவளவு  உறுதியா சொல்லுரிங்க  கவிஞ்சர் "

                        " டேய் ,  நீ  இருந்து  பார்.. நான் சொல்லுறன்  எல்லோ,,நீ இருந்து பார்," 

                                   
அதுக்குப்  பிறகு பல வருடம்  நான்  இருந்து பார்த்தேன் அப்பிடி  ஒரு  கதை  தவலோகம் என்ற கூளங்கைச்சக்கரவர்த்தியிடம் இருந்து எழுதப்படவில்லை.

                                            அதற்கு அடுத்த ஆண்டும்  சிறப்பு மலர் வந்தது. அதுக்கும் தவலோகராஜா சிறப்பு ஆசிரியர் ஆக இருந்தார். அப்படி  வந்த ஆண்டுவிழா சிறப்பு இதழிலும் ஒரு சிறப்புச் சிறுகதை வெளிச்சிறையில்  இருந்தது .

                                  " பூக்களுடன்  பேசுவதை நிறுத்தியவள் "

                                             என்று அந்தக் கதைக்கு  தலைப்பு இருந்தது 

                                             
அதை எழுதியிருந்தது  இப்போது இங்கிலாந்தில் வேல்ஸ் என்ற  இடத்தில கைனகோலோயிஸ்ட்  என்ற பெண்நோயியல் வைத்திய நிபுணராக இருக்கும் கவ்சல்யா . டாக்டர் கவ்சல்யா  எங்கள் ஊரில் அயலில்  பார்வதம்   மாமியின் மகள் .

                                            அந்தக்  கதை கவ்சல்யாவின்  சொந்த வாழ்வின் கதை. உண்மையைச் சொன்னால் யாராலும் திருடி எழுத முடியாத, ஒரு ஆண்  தான் எழுதியதாகப் பெயர் போட விருப்பப்படாத கதை.

                                    அதால் அது எழுதியவரின்  சொந்தப்பெயரில் தப்பி இருக்கலாம்..!!!!


           

Sunday, 20 March 2016.