Monday, 16 July 2018

திணிக்கப்பட்ட அமைதி !

கவிதையை அதிகம் பேர் தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்து வாசிப்பதில்லை, முக்கியமாக நாள் முழுவதும் இடைவிடாது கையடக்கி அலை பேசிகளில் இன்டர்நெட்டில் உலகத்தை விலைபேசி இணைத்துக்கொண்டிருக்கும் இளையவர்கள் வாசிப்பதில்லை. வயதானவர்கள் கண்ணாடியைப் போட்டு வாசிப்பதைப் பார்த்து இருக்கிறேன்.
                                                      
                                                               சிலர் வாசித்து முடிய தமக்குள் புன்னகைப்பார்கள். சிலர் " ஹ்ம்ம் " என்று பெருமூச்சு விடுவார்கள் ,சிலர் முகத்தை " ஓ " என்று ஆச்சரியம் ஆக்குவார்கள். சிலர் " வாவ் " என்று பிரமிப்பார்கள். சிலர் "அடாடா " என்று ஆர்ப்பரிப்பார்கள் . சிலர் மவுனத்தை மொழியிடம் கொடுத்துவிட்டு முகத்தில் எந்தவிதமான சலனமும் காட்டமாட்டார்கள். ஒவ்வொருவர் மதிப்பீடும் வேறு வேறு விதமாக இருக்கும்.
                                                          
                                                                    இதில ஏதோ ஒரு உணர்ச்சியை அந்தக் கவிதை வாசிக்கும் அவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளதால் அது ஒரு நல்ல கவிதையாக இருக்கவேண்டும் என்று நினைப்பது. ஏன் என்றால் இன்றைவரைக்கும் நல்ல கவிதை என்று ஒரு கவிதையைச் சொல்ல எந்த அளவீடுடுகளும் இல்லை. ஆனால் ஒரு நுளம்பு கடித்த அளவு உணர்ச்சி கொடுப்பதால் அதை எழுதிய கவிஞ்சனின் நோக்கங்களில் ஒன்று தன்னும் நிறைவேறி இருக்கிறது என்றும் நினைப்பது .
                                                               
                                                                     அந்தக் கவிதை அவர்கள் பல வருடம் முன்னமே வாசித்து இருக்கலாம். கவிதைகள் காலத்தில் தொடர்ச்சியாகப் பிரயாணம் செய்துகொண்டிருக்கும் ஒன்று. அதுக்கு மூன்று காலமும் ஒன்றுதான். நேற்று எழுதியதின் எதிர்வினை நாளையும் நடக்கலாம் என்பது போல.ஒரு கவிதைக்கு இறப்பு என்பதே இல்லை. மரணம் கவிதையைப் பொறுத்தவரை நடக்கமுடியாத ஒரு செயல்.

                                         2017  / 2018 ல் முகநூலில்  எழுதியவைகள் இவைகள்.  வழக்கம் போல   எல்லாவற்றையும் புத்தகம் ஆக்கும்  ஒரு திட்டத்துக்கு முன் முயற்சியாக  சொற்களை விதைக்கும் எழுத்து முயற்சிகளை  தொகுத்து   இங்கே பதிகின்றேன்.

விதி 
கடந்த காலத்துடன் 
பிணைக்கப்பட்டிருக்கிறது போல
ஆரம்பித்தபின்  நிறுத்துவதுதான் 
மிகக் கடினமாகவிருந்தது. !
ஒரு விஷயம் சொல்ல வேண்டும்,
பாதைகளில் நிறுத்தி ஓய்வெடுப்பதற்கான
இடங்களென்று எதுவும் கிடையாது,
மொழியின் சிக்கல்களின் வழியாகவே
மீட்சியளிக்கும் நீண்ட பயணத்திலிருந்து
விழித்துக்கொள்ளும்
சுதந்திரத்தைக் கண்டடையத் துவங்குகிறது
கவிதை !.



*
காதலுக்குத்தான் 
முற்றுப்புள்ளியே இல்லையே! 
எனவே
ஒவ்வொரு நாளும்
அன்று 
எது வரை கதைக்க வேண்டும்
எதுவரை கொஞ்சவேண்டும்
எதுவரை உரியையெடுக்கவேண்டும்
எதுவரையில் நெருங்க வேண்டும்
என்பதையெல்லாம் முன்கூட்டியே
குறித்து கொள்ள வேண்டியதாயிற்று !
ஒரு நீள நதிக்கரையில்
நீண்ட நடைப்பயணம் போல
ஆனந்தமாயிருந்தது
கொஞ்சம் போல உண்மைதான் !
ஆனால்
மிதமிஞ்சிய சபலங்கள் 

மனம்மாறுகிறது என்பதைத் தவிர 
 வேறெதுவும் நிகழ்வதில்லை !


*
நேர்மைதான் 

நேர்வழியில்க் கிடைக்காமல்  போனாலும் 
இயல்புத்தன்மையை 
அப்படியே பின்பற்ற ஆரம்பித்த
இப்போதைக்கும்
அதற்குமுன்னருக்கும்
பார்வைகளில் என்னவென்ன வித்தியாசங்கள் ?
சில பிறழ்வுகள் இருக்கக் கூடும்
எந்த நிச்சயமும் இல்லை !
எதையெல்லாம் தனித்திருந்து பார்க்கிறோமோ
அதிலெல்லாம் தெரிந்துகொண்டிருக்கிறது .
உள்நோக்கம் !



*
முற்றிலும்
அந்நியமானவனாகி
கிளர்ச்சிகளையும்
கற்பனைகளையும்
இப்போது  நினைத்துப் பார்க்கும்போது
கொஞ்சம் ஆச்சரியமாயிருக்கிறது.!
மனநிலை அன்றாடத்தைப்
பாதித்திருக்கக்கூடிய விதத்தை பற்றிதான்
எண்ணம் இருக்கும். !
ஆழத்தில் மிதப்பதுபோல
சிலசமயம்
அதன் இயல்பு குறித்த
கவனச் சிதறல்களும் அழகு தான் !


*
கால இடைவெளியைச்
சமன் செய்கிறது
ஒருசில பள்ளிக் காலத்துப்
புகைப்படங்கள் !
அடையாளம்
தெரியாமல் மாறிவிட்டிருந்தது
முகத்தின் வாளிப்புகளிலிருந்த
இளமை ஜவ்வனம் !
பிதுங்கிவிட்டது போலக்
காலம் இறந்துவிட்ட ஒன்றாக
இருந்தாலும்,
நினைவுகள் குறித்து
சந்தேகங்கள் ஆரம்பிக்கும்
இத்தனை ஆண்டுகளில்
வயதின் வியப்பை விலக்க முடியவில்லை !


*
நேரடியாகப்
பரிச்சயமில்லாதவர்களுடன்
அவளாகக் கதைதொடுப்பதில்லையென்றாள் !
தெரிந்தும்  எந்தவிதமான அச்சங்களும்
இல்லையென்பதாலா
நட்புக்குள் வந்து விழுந்தாள் ?
அஞ்சல்கள் எழுதும்போதெல்லாம்
இயல்பாகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள
முகம் மறையும் தருணங்கள் !
அசட்டுத்தனமான இளிப்புடன்
ரகசியங்களையெல்லாம்
பின்னிருத்தி வைப்பாள் !
ஒருநாள் கேட்டேவிட்டேன் !
அன்றுதான்
முதலும் கடைசியுமாகக்
கற்பனை நிஜமாக மாறியது!


*
என்னைத்தவிர
இவ்வளவு கேவலமாக வேறு யாரவது
செய்திருப்பார்களா ?
எதிரில் வந்து முகத்தில்
வீசிக்கொண்டிருந்தது !
உணராராது போல்
அடைந்தையாகவிருந்தேன்
வலியவந்து பேச்சுக் கொடுத்தது.!
நடந்ததைப் பற்றி
துருவிக் கேட்பதாக இல்லாமல்,
மிக இயல்பாக
சில ஆறுதல் வார்த்தைகள்!
காற்றுக்கும் பூடகமாகச் சொல்லி
நேசிக்க வைக்கும் இதயமிருக்கு !


*
வழக்கமான
உறுதிமொழிக்குப்பின்
அவசரமாக ஏதொவொன்றைச்
சாட்டாகச் சொல்லி 
மழுப்பிய துயர் முகத்தில்
சிரிப்பை வரவழைத்து
புரிந்து கொள்ள முயல்வதுபோல
என்னைக் காப்பாற்றி
வெளிக்கிடும் போதுதான்
எதிர்பார்த்த ஏதோவொன்றைச்
சந்திக்காதது போன்ற
வெறுமையுணர்வு !


*

மிகப்பரிச்சயமான
துயரமொன்றுக்கு
அனுதாபம் தெரிவிப்பது போல
நகரம் !
விட்டு வெளியேறி சுமந்தலைந்து
தொடர்பற்றுப்போகுது
வெறிச்சோடிப்போன
தெருக்கள் !
உயிர்தெழுதலில்
சுருங்கிவிட்டது போல தோற்றமளிக்கும்
மனிதர்கள் !
எல்லாவிதத்தில்
யதார்த்தத்தை மீறுவதாகவுள்ளது
திணிக்கப்பட்ட அமைதி !



*
ஒரு  தனிப் பறவை 
எதிர்வினைகளில்லாத 
மழை மேகத்தை ,
சுழல் காற்றின் வாய்ப்புகளில்ப்
புறக்கணிப்புக்களை,
எல்லைகளை நீட்டி வைக்கும்
ஆழ்கடலின் வானத்தை,
சமரசம் செய்துகொள்ளாத பெரும் புயலின்
சமிக்ஞைகளை
எதிர்கொள்ளவேண்டிவந்தால் .
சரியான நேரத்தைத் தேர்ந்தேடுத்து .
சிறகுகளை மட்டும் விரிக்கத் தெரிந்தால்
வேறெந்தத் திசைகளும் தேவையில்லை !.



*
ஒரு அமைதிப் பூங்கா,
ஒரு போர்வீரனின் சிலை,
ஒரு  பள்ளி ஆசிரியை
ஆரம்பக் குழந்தைகளுக்கு
அதிதீரவரலாறு விளக்குகிறாள்!
அவன் கையில்
பதம் பார்க்கின்ற
கூர்மழுங்காத வாள்,
விசுவாசத்தின் ஆதிக்கக் குறியீடாக
இரும்புக் கவசங்கள்,
முன்னம்கால்கால்களில்
எகிறிப்பாயும் வெள்ளைப் புரவி ,
கண்களில் ரத்த நிறத்தில் கொலைவெறி,
அதிகாரமென்றால்
அடுத்தது அராஜகம்தானே!
குழந்தைகள்
தமக்குரிய எல்லைக்குள் நின்று
குதிரையின் வாலைத்
தடவி விளையாடுகிறார்கள் !



*
நம்
நிகழ்கால யதார்த்தங்கள்
ஒரேமாதிரி
இருக்கப்போவதில்லை !
அடிக்கடி  விருப்புக்களின்றி
நேசிப்புகள் மாற்றப்பட்டலாம் !
காத்திருக்கையில் பழகிப் போன
உணர்ச்சி விஷயங்களும்
பழசாகிப்போன பாவனை முகங்களும்
உங்களுக்கு நினைவு வருகிறதா?
தயவு செய்து அபத்த தரிசனங்களை
அழித்துவிடுங்கள் !



*
உஷ்ணமாகும் வருடத்தின்
இந்த மாதத்துக்கு
இது மிகவும்குளிர்தான் , 
வடமேற்கே
நீல மலைகளில்
இன்னும் பனிபடர்ந்திருக்கிறது,
வெடித்தபடி நொறுங்கிக்கொண்டிருக்கிற
அசையா நதியின்
சரிவான கரையில்
சறுக்கியபடி கீழிறங்குது
உறை பாளங்கள் ,
தேவையற்ற சுமையென
நினைத்திருக்கலாம்
ஒரு மஞ்சள்ப் போர்வையை
போர்த்திவிட்டு நகருது
வடதுருவ சூரியன் !


*
தீவிரமாகத் தேடிப்பார்த்து
எல்லைகள் கிழிக்கப்படுகின்ற இடத்தில்
தூக்கத்தைக் கெடுக்கிறதுபோல 
அந்தக் கனவு !
என்னைத்தவிர
யாரெல்லாருமோ
அந்தரங்கமான பங்கெடுப்புக்களில்
வந்துவந்து போனார்கள் !
என்னையறியாமல்
நுழைந்தபோதும்
திருப்திப்பட்டுக்கொள்ள  ஏதுமிருக்கவில்லை !
சில சமயம்
ஒரு கனவென்பது
எனக்குரியதென்பதையும்
தாண்டிப்போய்விடுகிறது.!


*
குறுகலான
சந்து முடுக்கில்
இருட்டுப் பிரவேசம் ! ,
சட்டென்று
உரையாடல் துவங்கும் போதே 
ஒருமையில் தான் ஆரம்பித்துவிடுகிறது!
நொடிப்பொழுதில்
அடையாளம் கண்டு
விசாரிக்க வருகிறார்கள்!

நான்  நானாகவேயிருக்கிறேன் !
இப்போதெல்லாம்
முன் போல் கோபப்படமுடிவதில்லை.
என்னிடமிருந்து
மனம் அயர்ந்து விடுகிறது.1
இப்போது
நான் நிட்பதைக்
கணக்கிலெடுக்காமல்க்
கடந்துவிடுகிறார்கள் .!
வெளியேறிவிட
அந்த விளிப்பு ஒன்றே
போதுமானதாயிருந்தது !


*
பின் மனசில்
அலைக்கழிப்புக்கள்
மேல் அமிழ்த்தி
ஓடிக்கொண்டேயிருக்கும்
காட்சி ஞாபகம் ,
புரிதல்கள்
முற்றிலும் வேறாகவிருந்தாலும்
தினவாழ்க்கை
கொஞ்சமாய் என்னவென்று தெரியாத
ஏதோ ஒன்றை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது,
கண் காணாமல்
அடிமனசில் ஒளித்து
அது எப்போது வேண்டுமானாலும்
தீர்ந்து போகக் கூடும் !


*

இப்போதுதான்
புறப்பட்டுப்போனாள் !
இருட்டு விழுங்கிக் கொண்டது .
எவ்வளவு நேரமென்று தெரியவில்லை !
வானம் கவிந்திருந்து
மழை எப்போது வேண்டுமானாலும்
தடமழிக்க  வருமென்பது போலிருந்தது.!
வழியனுப்பி நினைக்க வைத்து விட்டு
விளக்குகள் அணைக்கப்பட்ட
நொடிப்பொழுதில் அடையாளம் கண்டு
மறக்காமல்த் தேடி வந்து விடுகிறது
காலடியோசை !



*
நெற்றிக்குக்
கை வைத்துக்கொண்டு
உயரத்திலிருந்து
கீழ் நோக்க

 பிடரியில் லேசாகக் கிறுகிறுத்தது,
ஏழுமாடி படியிறங்கிவிட
கையைப் பிசைந்தபடி
சாலை முழுதும் போக்குவரத்து நெரிசல், !
குறுக்க பறந்த
பறவை 
துணை அழைப்பதைத்
தீனமாய்க் கேட்டபோதும்
எனக்கதை விளங்கிக்கொள்ள முடியவில்லை !
மின்கம்பியிலிருந்தவொரு பறவை
சாந்தமாகவே திரும்பிப் பார்த்தது . !


*


நிறுத்த முடியாத 
ஒரு சந்தத்துடன் தொடரும் 
பயணம் போலிருக்கிறது நாட்கள், 
நம்பிக்கையில்  உயிரற்ற காற்று
உல்லாசக் கொண்டாட்டம் ,
ஏதோவொரு ஒழுங்கற்ற வரிசையில்
மீண்டும் மீண்டு
மீண்டும்  

கலைத்துத் தொகுக்கப்படும் நினைவுகள்,
மனதளவிலாவது
எனக்கென்று அதிகளவு சுதந்திரம்,
ஒரு வேளை
நான் இதைக் கனவு கண்டிருக்கலாம்,!




Friday, 13 July 2018

அம்மாவின் முதல்க்கேள்வி !

தங்கபஸ்பத் தலைமுடியை
தொன்மையான காற்று
தொட்டுப் பரிசீலிக்க
எதற்காக
எனக்கெதிரே
முன்வந்திருக்கிறாள் ?...
நகரத்தின் நியான் வெளிச்சம்
ஒளிமுறித்தெறிப்பில்
சொண்டெல்லாம் சொரிய

எதற்காக
காதொலியில் இரைச்சல்களை
அதிகப்படுத்திக்கொண்டிருக்கிறாள் ?
நீண்ட பாம்புக் கழுத்தில்
தூக்கில்போட்ட செயின் !
எதற்காக
வைன்கிளாசில் விரல் சுண்டுகிறாள் ?
புளிப்பேறிய கன்னங்களில்
திராட்ஸை மதுவின் ரஸபோதையேற்றி

எதற்காக
விரத மவுனமாகவிருக்கிறாள் ?
என்
!!!!!!!!!!!!!!!!!!!!!! மாகி
?????????? களுக்கு
.................... வைக்க
என்
முதல் கேள்வியைத் தயார்ப்படுத்தினேன் !
சட்டென்று
நிமிர்ந்து பார்த்துப் பின்வாங்கி
நீலக் கண்கள்
தீரவெறித்துப் பார்த்தபோதும்
ஓரப்பார்வை
வெட்கப்பட்டு விலத்திக்கொண்டது !



*

தனித்து
ஊஞ்சலாடும் காற்று,
தனக்குள்தானே
ரகசியம் பேசும் குளிர்,
அநிச்சயமாகப் ...

பேரம்பேசும் இருட்டு,
இந்த நேரம்கெட்ட
நேரத்தில்
இழுத்துப்போர்த்திய
வெண்பனிக் கம்பளத்திலோ
கல்யாணக்களை !



*

அக்கறையின்மையில்
நாள்ப்பட்ட புதர்த்தாடி
நேரமொதுக்கி
நேர்த்தியாக மழுப்ப வழித்து
பனிப்பொலிவோடு வெளியேறிவர ...

பிரியமான
நெடுநல் வாஞ்சையோடு
கன்னத்தைத் தடவுது
ஜில்லென்ற குளிர்காற்று !
.



*

ஒரு
உண்மைக்கதைக்குள்
சார்புகளற்ற மனசாட்சியை
உள்நுழைத்து
குற்றவுணர்ச்சியை ...

விசாரித்துக்கொண்டிருந்தேன்
அந்தவொரு
முழுமையற்ற நாளுமே
பொய்த்துப்போய்விட்டது !
.



*

நான்குமுறை
பரபரப்பாக விவாகரத்தான
விருதுவென்ற நடிகையின்
சுயசரிதை
அமோகமாக விற்றுத்தீர்க்குது !...

ஒரு
ஆணாதிக்கனின் அடாவடித்தனம்
ஒரு
காமப்பசாசின் வெறியாட்டம்
ஒரு
பச்சோந்தியின் துரோகத்தனம்
ஒரு
நயவஞ்சகனின் கபடத்தனம்
வலுக்கட்டாயமாக
வார்த்தைகளுக்குள்ளிறங்கி
விலாவாரியாக விபரிக்கப்பட்டிருந்தது !
கனதியானபுத்தகம் முழுதும்
பதின்மஇளமைக்காலத்திலிருந்து
அறிமுகமானவொருவன்

உலாவிக்கொண்டிருந்தான் !
காதலுக்கும் நேசத்துக்கும்
வாழக்கிடைக்காத அவன்தான்
ஆதர்ஷ மனிதனாக
நேர்மறை உதாரணசாட்சியாகவிருந்தான்! !
அவன் முகத்தை
முடிவுவரையிலுமவள்

வெளிப்படுத்தவில்லை .


*

நான்
இள வெய்யிலை
நினைத்துக்கொண்டே
கோடைமழையை
நனைத்துகொண்டிருக்கிறேன்!
ஒவ்வொரு
மணித் துளிகளும்
கிலேசம் தரும்
காமரஸப் போதையுணர்வுகள் !
அவை
மழைக்கும் எனக்குமான
அந்தரங்க உரையாடல் !
நீங்கள்
குடைகளின் கீழ் ஒதுங்கி
சாரல்களைத்
திரத்திப்பிடித்து எடுத்து
பொய்களில் கவி வடிக்கிறீர்கள்!
எனக்கு
மொழி முக்கியமில்லை
இன்பமானவந்த வலி முக்கியம் !
என்மேல்
விழுந்துருண்டு நெளியும்
ஒவ்வொரு
மென் தூறல் முத்தும்
எனக்கான
இதழ் முத்தப்பரிசளிப்புக்கள் !
அதனால்த்தான்
அசையாமல் நி
ற்கிறேன் !


*



வெளிச்சமும் 
முன்னிருட்டும் 
முரண்பட்டுக்கொள்ளும் 
பழுப்புநிறத்தில் 
கிறங்கிக் கிடக்கும் 
சருகளுக்காக
இரக்கப்பட்டுக்
குளிரோடு போர்தொடுக்க
தேர்ந்தெடுத்த
புதிய
வார்த்தைகள்தான்
என்
அமைதியுடன்
அசைவற்றுக்கொண்டே
அதிகமாய்
அடம்பிடிக்கின்றன !





*

உறைபனியிலும்
வெய்யில்
விசாரிக்க வந்தது,
நிலவும்
விடாப்பிடியாக 

வளர்ந்துகொண்டிருந்த
இலையுதிர்வில்
பனிமழை பெய்தது !
இனி
நெருங்கும் கோடையில்
மலர்களுக்கும்
சிருங்காரம் சேர்ந்துகொள்ள
மேகங்கள்
ஓடியாடி விளையாட
பிறப்புக்கும் இறப்புக்கும்
வியாக்கியானம் போலவே
தேவதைகள்
அந்திமச் சிலிர்ப்புக்களுடன்
உலாவருவார்கள் !



*


எதிர் எதிரில்
சந்திக்கவைத்த
வெகுதொலைவில்
நமக்கெனவே
நெருக்கமான மழை !

ஒவ்வொரு துளியிலும்
பிரிக்கமுடியாத
நிலாக்கால நேரம்.!
நெஞ்சில்
பாஞ்சு வழிந்துபோன
அதையெல்லாம்
தாலாட்டுக்கள் போலவே
மறந்தேவிடு !
விலகிப் போகும்
விழிக் கண்ணீரில்
கண்கள் கண்டதெல்லாம்
நிழல்களின் நிழலில்
என்னைக் கொடுத்த
நீயும்
உன்னைத் தொலைத்த
நானும்
தேகதாகம் தனித்த
மழையும் தான்!





*


நேற்றுவரையில்
தந்திரங்களில்லை
அதனால்
விலைகளில் மாற்றமில்லை !
வாசலில் 

வாதக்கால்களை அகட்டி வைத்து
பிச்சை எடுக்கும் நாடோடிக்கு
கொஞ்சம்போல
வருமானமிருந்தது !
இன்றைக்கு
ரெண்டு எடுத்தால்
ஒன்றின் கொள்விலை !
நிரம்பி வழிந்து
தள்ளுபடி அங்காடியைத்
நெருக்கியடித்து
தள்ளி விழுத்தாத குறையாகக்
தலைகளின் கூட்டம் !
நாடோடியின்
ரெண்டு கால்களும்தான்
முடங்கி ஒடுங்கியபடி
ஒன்றாகிவிட்டது !









*
காட்சியறையில்
ரசித்துப் பிடித்தமான
ஆடம்பர வேகக்காரின்
அபரிமிதமான விபரங்களைத்
திரத்தியபடியே வாசிக்கிறான் 

அவளின் அவன் !
அரங்கு வாசலில்
புதுப்படக் கதாநாயகனின்
வலுவான கட்டழகை
அடைந்துகொள்ள வெறிக்கிறாள்
அவனின் அவள் !
உறைபணியில்
நினைவெய்திய மலர்களோடு
தோளில் சாய்ந்து
நாளை மாலையிலிருவரும்
சந்திக்கும் உத்தேசம் !
நீண்டநேரம்
மயங்கிக்கிறங்கிய
இவ்விரண்டு சம்பவத்தையும்
ஒருவருக்குள் ஒருவர்
பகிர்ந்துகொள்வார்களா ?



*

வருடக்கணக்கில்
நிலத்தில்விழுந்து
ஊர்ந்துசெல்வது போல
தனியாகத்தான் இருந்தான்!
என்னோடு 

எழுந்து நின்று
அழகிய பெண்கள்
ஆலகால விஷம் என்றெல்லாம்
நிறுவிக் கதைப்பான் !
சென்றகிழமை
இன்னொருத்தியோடு
கொஞ்சுவதைப் பார்த்தேன் !
கண்டும் காணாமல்
என்னைக் கடந்துகொண்டிருதான் !
மூன்றுநாள்முன்னர்
வேறொரு பேரழகிக்கு
மலர்கள் திணித்துக்கொண்டிருந்தான்!
நான்
வியர்த்துக்கொண்டிருந்தேன் !
நேற்று முன்தினம்
சாலையோரம்
வாலைக் குமரியொருத்திக்கு
முத்தங்கள் நிறைத்துக்கொண்டிருந்தான் !
நான்
வியந்துகொண்டிருந்தேன் !
நேற்றவன்
இன்னொருத்தியின்
பின்புறம் ஒருகை பிசைந்தபடி
மறுகைகோர்த்து நடக்கிறான் !
நான்
பார்த்த இடத்திலேயே
விஷபல்லு நாக்கில கடிபட
பாம்பாகி விழுந்து விட்டேன் !





*

" சாப்பிட்டியா? "
அம்மாவின்
முந்திக்கொள்ளும்
முதல்க்கேள்வி !
" முதலில் சாப்பிடுப்பா " 

ஒரே வயிற்றின்
அதீத அக்கறை !
பிறகு
" என்ன சாப்பாடு? "
ஆதரவின் ஆதங்கம் !
என் பதில்கள்
வழமைபோலவே சலிப்புகள் !
" ஏன் சமைக்கவில்லையா? "
மூன்றாவது அரவணைப்பு !
இப்பெல்லாம்
அன்பு விசாரிப்புகள்
துரமாக்கிக்கொண்டுபோய்விட்டது !
நினைக்கும் போது
பசிக்கிறது !






















Thursday, 12 July 2018

சில முற்றுப்புள்ளிகள் ...

என் 
பக்கங்களை
நீங்கள் 
வாசிப்பதில்லையென்று 
சொல்வது 
எனக்குப் பிடித்திருக்கிறது !
இந்தத்
திருப்புமுனைத் தருணங்கள்
கவனப்படுத்தப்படும்போது
புதிய
புத்தியிர்ப்புக்கள்
பிரசவிக்கப்படுகின்றன !
ஏனென்றால்
இதயத்தைத்
தொட்டுணரக்கூடிய விதமான
வலுவானவொரு
அந்நியனாக இருப்பதே
என்னை
முழுமையடையவைக்கிறது !


.................................


இனி
எல்லாவற்றையும்
அறிந்துகொள்ள முடியாது ,
அடையாள
முகமில்லாதவைகள் 
அதனதன் போக்கில் போகட்டும் !
முகவரி
விலாசங்களையும்
விட்டுவிடலாம் !
தெரியாதென்று சொல்வதில்
உங்களுக்குப்
பெரிய நஷ்டமொன்றுமில்லை !.
யாருமற்ற கடற்கரையில்
டால்பின்களைத் தொடர்ந்து
நீந்திச் செல்லும்
அலைகளின்
முழுப்பெயரே கூட
நமக்குத் தெரிவதில்லை !


........................................................................


வெளியே
உஸ்ஸென்று சத்தமிட்டபடி
பனிக்காற்று ,
வேறெங்கோ
எடுத்துச் செல்லப்படும் 
வாசனைகள் !.
ஆணையிடப்படி
முன்னேறிக்கொண்டிருக்கும்
உறைகுளிர் !
தொலைவில் மறைகின்ற
காலடிகளின்
நினைவுகளெல்லாம் கூடக்
குழப்பம் !
பயமாயிருக்கிறது
அப்பாவி
வெள்ளையிரவுகளுக்குள்ளும்
அளவுக்கதிகமான
அதிகாரங்களிருப்பதை
நினைக்கும் போதெல்லாம் !


.....................................


எனக்கொரு
தீராத ஆசை,
மேகங்களைத்
திரத்திக்கொண்டு
ஒரு கவிதை எழுத வேண்டும் !
அதுவென்
இருப்பு நிலைகளை
மாற்றிவைத்து
இளங்காற்றில்
நேசிப்புகளை அரவணைத்து ,
உதட்டால்த்
தொட்டபடி முத்தமிட்டு
விருப்பமான
வெற்றிகளுக்கு ஆணையிட்டு
பறைவைகளோடு
மிதந்தபடி
என்னை
தொடுவானத்துக்கு அப்பால்
வேறெங்கோ
எடுத்துச் செல்லவேண்டும் !


..................................


வெளியேறினால்
திரும்பி வர முடியாதென்பதை
காதல்
நன்றாகவே அறிந்திருந்தது !
புதிதாய் 
ஒவ்வொரு அடியெடுக்கும்போதும்
பாதப் பதிவுகளை
உற்று நோக்கி
ஒரு
சாகசமாய்க் கருதியே
புறப்பட்டது !
புதிய வாய்ப்புக்களில்
உணர்விப்பும்
எதிர்பார்ப்புத்தான் !
அறியப்படாதவொன்றை
நோக்கிய
நேசிப்பேன்
நீண்ட பாய்ச்சலில்
தீர்மானிக்கப்பட்டதென்று
எதுவுமேயில்லை !
எல்லாமே சாத்தியம்தான் !


..................................


தனியொரு
வாழ்க்கை பற்றிச் சொல்லி
ஓர்
பிரத்தியேக அடையாளத்தைச்
சுவீகரித்துக்கொள்ளக் 
கதைகள் இருக்கின்றன!
நேற்றைகளைத்
திரும்பிப் பார்க்கையில்
நாளைப்போலிருக்கும்
ஒவ்வொரு
இன்றைய
சம்பவத்திலும்
ஒரு மைய நிகழ்வு
மேலோங்கி நிற்கிறது.!
அது
பின் வரும் அனைத்தையும்
உருவமளித்துத்
திரித்துவிடுகிறது !


...............................



பின்னோக்கி பார்க்கையில்,
இழக்க விரும்பாதவொரு
கிறக்கமொன்றை
என்
விதியில் ஏற்பட்ட
யாத்திரையின்
திசை திரும்பல்கள்
எனக்குள்ளே நிரப்பியதில்லை !
அபூர்வமான
உறுதிப்பாடுகளை
ஏற்றுக்கொள்வது போலவே
நம்பிக்கை
தந்ததேயில்லை
பெயர்ந்த தேசங்கள் !
சன்னமான
கருநீல வண்ணக்
கோடுகளின் பின்னல்
நான் யாரென்பதை
அறிந்து கொண்டபின்தான்
நானாயிருக்கிறேன் !


..........................



தேசங்களை 

மாறுவதென்பது 
கடினமான 
துயரப் பருவமொன்றை 
விரும்பிக்கடப்பது போல் 
கத்தரிக்கப்பட்ட
வாழ்வொன்றை மீட்டெடுக்க
அவள்
திரும்பிச் செல்கிறாள் .!
அங்கிருந்தபடி
மனதோடு
முழுமையாய்ப்
பொருந்தியிருக்க
எப்போதும் முடியுமா ?
வளர்ச்சியின்னும்
முழுமையடையாத
அவர்களின்
தலைமுறை இடைவெளி
வேறொரு வண்ணம் பூசுகிறது !


..................................


மரங்கள் அகற்றப்பட்ட
ஓரிடத்திலிருந்தேன்
இடம் வெட்டவெளி ,
தலைமறைவு
அல்லது பின்வாங்கல் போலப் 
பேரமைதி .!
முன் பின் அறியாதவர்கள்
ஒவ்வொருவராய்
வந்து நின்று தோப்பானார்கள் !
மிகக் குறைவான
ஆதிவாசிகளின்
தொலைந்துபோன பாடல்களிலிருந்து
மெட்டுப் பிடித்து.
மீண்டும் மீண்டும் பாடினார்கள்!
ஏதோவொரு தந்தியை மீட்ட
மார்பெலும்புக்குள்
இதுவரையில் அறியாத
உணர்வு சிலிர்த்துக்கொண்டது.!
அவர்களைப் பார்த்து
வேர்களை
நினைத்துக்கொண்டேன் !
இன்றும்கூட
நினைவுகூர முடிகிறது
புல்த்தரையில்ப் பரவியிருந்த
வெட்டப்பட்ட மரத்துண்டங்களின் மீது
அவர்களின் முகங்களை !


................................


அனைத்திலிருந்தும்
தன்னை விடுவித்துக் கொள்ள
விரும்புகிறதா ?
அல்லது
சன்னமானவொரு 
முன் யோசனையாய்
காதலை
அடியோடு வெறுப்பது
போலிருக்கிறதா ?
அல்லது
மெல்லமுடியாத எல்லாவற்றையும்
சொல்லித் தீர்க்கிறதா ?
அல்லது
மரணத்தை
ஆனந்தமாய்த் தழுவிக்கொள்ள
நினைக்கிறதா ?
ஏனென்றால்
மீட்க முடியாதவாறு
அடியறுத்து விடுகிறது
காற்றில்
மிதந்துகொண்டிருக்கும்
பறவையொன்றின்
பாடல் !


.............................


அதிகாரப்பூர்வ
உரிமையுடன்
இரட்டை ஜன்னல்கள்,
திறக்கப்படும்போது
கண்கள் 
இரண்டாய்ப் பிளந்து கொள்ளும்
அரைகுறை முயற்சியில்
சில மரங்கள்,
பழுப்புநிறத் தொடுவானம்,
மிகச் சிறிய புல்வெளி ,
சீனப்பட்டு போன்ற உறைபனி,
தொடர்சாலை,
தலைகீழாய் புரண்டு கிடக்கும்
ஒரு பகுதி நகரம்,
தூரத்தில்
ஒவ்வொரு நொடியையும்
ஆக்கிரமிக்கும்
நீயும் நானும்
நடந்த பாதையும் தெரிகிறது !
மிச்சம்
பகல்க்கனவு !


.............................


சில 

முற்றுப்புள்ளிகள் 
கண்களுக்கு ஓய்வு தருகின்றன, 
இல்லையா? 
ஆனால் 
எப்போதும்
அடுத்ததொடர்
வாக்கியத்துக்குத்
திரும்பவே விரும்புகிறது
யதார்த்தம் !
அனுபவித்துக் கொண்டிருக்கும்
சுவாரசியங்களை
மீளுருவாக்கம் செய்யும்போது
குறிப்பாகக்
கனவு காணும் பகுதியில்
முற்றுப்புள்ளிகள்
நமக்குரிய
சுதந்திரத்தைக்
கட்டுப்படுத்திவிடுகின்றன !