Wednesday, 23 November 2016

பித்தபுக்குவும் பவுத்தபிக்குவும்

நமக்கெனத்  தெரிந்த கொஞ்சமான  கிணற்றுத் தவளை அளவு அறிவை  வைத்துக்கொண்டு இந்த உலகத்தை ஒரு ஞானியின் பார்வையில் பார்க்க நினைப்பதுதான் பெரிய முட்டாள்த்தனம்  என்பது வயதைக்கடந்த அனுபவத்தில் தெரியவரும் சந்தர்ப்பங்களின் ஞானஉதயம் கிடைக்காவிட்டாலும் சுடலைஞானம்  கிடைக்கலாம், ஏனென்றால் சுடலைக்குப் போகும் வழியில் ஒரு திருப்பத்தில்தான் ஞானம் காத்திருக்கும். 

                                  என்னடா இப்படி அறப்படிச்ச பல்லி கூழ்ப்பானைக்குள்ள விழுந்த மாதிரி தொடங்கிறானே  எண்டு சலிப்பாக இருக்கா. சில விசியங்கள் வாழ்கையில் கற்றுத்தரும் பாடங்கள் அப்படிதான் இல்லாத சந்துகளின் இடுக்குகளில் நுழைந்து வெளியேறி இருப்பின் அர்த்தத்தை இன்னொரு திசைக்கு வழிமாற்றிவிடும் நிகழ்வுகள் நாம் விரும்பாத பாதையில் வசனமில்லாத  ஓரங்க நாடகம் போலவே நடக்கலாம்  

                                               சென்ற வருட இலையுதிர்கால ஒஸ்லோவில்  கார்ல்பாணபிளஸ்  என்ற நிலத்தடி மெட்ரோ ரெயில்வே ஸ்டேசனில் ஒரு பவுத்தபிக்கு ரெயின் ஏறுவதுக்கு நின்றார். நானும் அந்த ரெயில்வே பிளாட்பாரத்தில் அவருக்குக் கொஞ்சம் தள்ளி நின்றேன் . பயத்தில கொஞ்சம் தள்ளி நின்றேன் என்று சொல்ல முடியாது , எனக்கு அவர் அங்கே நின்றதே அவர் அருகில் வேகமாக ரெயில் பிடிக்க  அரக்கப்பறக்க  வந்து சேர்ந்த போதுதான் தெரியும். 

                                    ஏனோ தெரியவில்லை மெட்ரோ ரெயின் வரவேண்டி நேரம் வரவில்லை. மேலே நிமிர்ந்து பார்க்க ரெயின்  வரும்  நேர அட்டவணை  அறிவுப்புக்கள் ஓடும் இலற்றோனிக் அறிவுப்புப் பலகையில் மெட்ரோ ரெயின் ஒன்று சிக்னல் இழந்து பாதையை இடைமறிப்பதால் மேற்கொண்டு மெட்ரோ ரெயின் எல்லாம் வரவேண்டிய நேரம் கொஞ்சம் பிந்தியே வரும் என்ற அவசர அறிவுப்பு மின்னி மின்னி இன்னும் அவசரமாய் ஓடிக்கொண்டிருந்தது 

                                           பவுத்தபிக்கு அதை அண்ணாந்துபார்த்து மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்தார். அவருக்கு நோர்வே மொழி புரியவில்லை என்பது  முகத்தில் மையம் கொள்ளத்தொடங்கிய கலவரத்தில்  தெரிந்தது. ஆனால் அருகில் நின்ற யாரிடமும்  அந்த அறிவிப்பின் அர்த்தம்  என்னவென்று    கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தில் ஸ்டேசன் ஒலிபெருக்கியில் எதற்க்கா மெட்ரோ ரெயின் தாமதம் என்று நோர்ஸ்கில் சொன்னார்கள் 

                                         அந்தப் பவுத்தபிக்கு அதை இன்னும் குழப்பத்தில் காதைக் கொடுத்துக் கேட்டார். புதியவர்களுக்கு  நோர்வே மொழி  நோர்வே மக்கள் கதைக்கும் போது  புரிவதுக்கு மிகவும் கடினம், பலவருடம் அந்த மொழியில் தேர்ச்சியான வெளிநாட்டு மக்களுக்கே அது சில நேரம் வார்த்தைச்  சித்து விளையாட்டில்  போட்டுக் கிண்டி எடுக்கும்.   எனக்கே பல சமயம் அது தத்தித்தூதோதாது தாதித்தூதோதீது என்று அர்த்தம் பிரள வைக்கும் 

                                     வெள்ளை மனிதர்கள் அதிகம் கலவரம் ஆகவில்லை. பலர் மெட்ரோ ரெயின் எடுக்கக் காத்திருக்காமல் வெளியே பஸ்  பிடித்துப் போகப் போய் விட்டார்கள், ஆனாலும் பலர் இன்டர்நெட் போனில விரல்களை ஓடவிட்டு இழுத்து இழுத்து வாசித்துக்கொண்டு காத்திருப்பு  நேரத்தில் தொலைந்து கொண்டிருந்தார்கள் .பவுத்தபிக்குவையும், என்னையும் தவிர   பிளாட்போமிம் காத்திருந்த வெள்ளை மனிதர்கள்  யாரும் யாரையும் யாரும் பார்க்கவில்லை , 

                                 அந்தப் பவுத்தபிக்கு  மேலே ஓடிக்கொண்டு இருக்கும் அறிவிப்பைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.  அப்போது நான் அவரை  நன்றாகக் கவனித்தேன். ஒரு முப்பது சொச்சம் வயதிருக்கலாம், முந்தநாள்  தலை மயிரை மொட்டையாக வழித்து இருந்தும் விடாப்பிடியாக கறுப்பு மயிர்கள் வளரத் தொடங்கிய மெல்லிய தலைக்கறுப்பு இருந்தது. குளிருக்குப் போடும் சுவெட்டர் போட்டு அதுக்கு மேலே மஞ்சள்காவி உடையைப் பெண்டுகள் கொசுவம்  வைத்து  சீலை கட்டுற மாதிரி சுற்றியிருந்தார் 

                                    கொஞ்ச பிரயாணிகள் தாமதிக்க விரும்பாமல் வெளியேறிக்கொண்டிருந்தார்கள், ரெயில் வரும்  உத்தேசங்கள் அப்போதும் தென்படவில்லை,   

                                            தர்ம சக்கரத்துக்கு நடுவில் புத்த சாசன அடையாளச்சின்னம் வரைந்த மஞ்சள் காவி சீலைத்துணியில் தைத்த தோள் பையை அகலமான தொங்கு வாரில் விரித்து விட்டுக்  கொழுவி இருந்தார் , குளிருக்கு ஏற்ற தோல் சப்பாத்து போட்டிருந்தார். கையைக் காலை ஆட்டி வேலைசெய்யாத சொகுசு வாழ்க்கை சவுந்தர்யமாகக் கொடுத்து   ஆங்காங்கே தசைகளை மொத்தமாக்கி வைத்த   ஆரோக்கியமான  உடல்வாகு 

                              ஆரம்பப்  பள்ளிக் குழந்தைகள் அவர்கள் ஆசிரியர்கள் கண்காணிப்பில்  போக்கிமான் போல வந்து நுழைந்தார்கள்.   ரெயில் வரும்  உத்தேசங்கள் அப்போதும் தென்படவில்லை .  

                                        கார்ல்பாணபிளஸ்  மெட்ரோ ரெயில் நிலைய புளோரோசென்ட் குழல் விளக்கு வெளிச்சத்தில் அவர் முகம்  வெள்ளாவி வெளுக்கிற சலவைக் கல்லுப்போலப் பளிச்சென்று மினுங்கியது. பொக்கிளிப்பான் வைரஸ் காச்சல் வந்த போது போட்ட பொக்களங்கள் உடைந்த அடையாளமாகக் கன்னத்தில்  சின்னப் பள்ளங்கள் இருந்தது 

                                 ரெண்டு  மெட்ரோ  ரெயில்க் காவலர்கள் பிளாட்பாரம் மேடையில் நடந்து வந்தார்கள்.  ரெயில் வரும்  உத்தேசங்கள் அப்போதும் தென்படவில்லை.   

                                           சவுக்காரம்  தடவி  சவரக்கத்தி போட்டு மீசை,தாடி  மழுப்ப வழித்த  முகத்தில இமைமயிர் தும்புக்கட்டை போல அடர்த்தியாக இருந்தது .காது  ரெண்டும் சுளகுபோலப்  பெரிதாக இருக்க ,மூக்கும்  நிசங்க மன்னர்கள் ஆண்ட காலம்வரையில் நீண்டிருந்தது .  கண்களில்  ஒரு  சிங்களப்   பித்த புக்குக்குக்கு  அடிப்படையில் இருக்கவேண்டிய   ஆவேச அடையாளங்கள்  இல்லை. பதிலாக  கொஞ்சம் திரியம்பகம் சுகந்தம் தரும்  தியான அமைதி இருந்தது .



எனக்குச் சிங்களம் சுமாராகக்  கதைக்க முடியும் என்பதால் பவுத்தபிக்குவோடு கதைப்பமா  என்று ஜோசித்தேன், அந்தக் கணத்தில்   புத்தபிக்குவும் எனக்குச்  சிங்களம் சிலநேரம் தெரியலாம் என்பது போல என்னைப் பார்த்தார். எப்படிக் கதையைத் தொடக்கலாம் என்ற நொடியில் இன்னொரு அவசர அறிவுப்பு மெட்ரோ ரெயில் நிலைய ஒலிபெருக்கியில் வந்தது. அதில்  இன்னும் இருபது சொச்சம் நிமிடங்கள் ரெயில் தாமதம் ஆகலாம் என்று நோர்ஸ்கில் ஒரு இளம்பெண் அறிவித்தாள் , அவள் குரல் அவசரத்திலும் அழகாக இருந்தது 

                                 "  உங்களுக்கு  இந்த அறிவிப்புக்கள் விளங்குதா, நோர்க்ஸ் மொழி விளங்குமா  உங்களுக்கு ஹாமத்துறுவன்னே  "

                               என்று சிங்களத்தில் கேட்டேன், புத்தபிக்கு டக்கெண்டு என்னைப் பார்த்தார், சிரித்தார், ஹாமத்துறுவன்னே என்றால் கொஞ்சம் மரியாதையாக ஒரு துறவியை விழிக்கும் சொல்லாடல் 

                                    " விளங்கவில்லை , ஆங்கிலத்திலும் சொல்லலாமே , அது   இன்டெர்நசினல் லாங்குவேச் , என்னைப்போல வெளிநாட்டு மாணவர்களுக்கு விளங்குமே , எதுக்கு அவர்கள் மொழியில் மட்டுமே சொல்லுறார்கள், "

                                      என்றார், பிக்குவின்  அந்தக் கேள்வியில்   ஏற்ற இறக்கத்துடன் குரல் அமர்க்களமாய் கேட்பதற்குச் சுவாரசியமாக இருந்தது!   உங்கட நாட்டில மட்டுமென்ன தனிச் சிங்களத்தில்தானே உளறிக்கொட்டிகொண்டு இருப்பிங்க இங்க மட்டும்  என்ன எல்லாருக்கும் புரியும்  மொழியில்  சொல்ல வேண்டும்  எண்டு  அடம் பிடிகுரிங்க  என்று கேட்க நினைச்சேன், ஆனால் கேட்கவில்லை ,ஹாமத்துரு சிரித்துக்கொண்டு 

                          " எப்படி சிங்களம்  தெரியும்,,தமிழ்  ஆட்கள்  எல்லாரும்  சிங்களம் கதைக்க மாட்டினமே "

                           " நான்  தமிழ்  எண்டு  எப்படித் தெரியும் "

                    "  இதென்ன பெரிய விசியமா ,,நான் நயினாதீவு பன்சாலையில்  ஒரு வருடம் சொச்சம்  இருந்து இருக்கிறேன்,,அங்கேதான்தான்  தமிழ்  ஆட்கள் நல்ல பழக்கம் "

                          "  ஓம்,,நான்  தமிழ்  தான்,, அதுவும் யாழ்ப்பாணம் "

                         " அதுவும் முகத்தில தெரியுது "

                       "  ஹஹஹா,, என்னோடக்  சிங்களம் உங்களுக்கு விளங்குதா  ஹாமத்துருவன்னே "

                           "ஹ்ம்ம்,, விளங்குது,,இலக்கணப்படி பிழை  இருக்கு,,உச்சரிப்பும்  கொஞ்சம்  பிழை,, பஹா,,ஹா ,, சரியா வரவில்லை,,எப்படி சிங்களம் பேசு பழகும் சந்தர்ப்பம் வந்தது "

               "  சிங்கள ஆட்களோடு இலங்கையில் வேலை செய்த போது "

                                "  நல்லது  ஒஸ்லோவில்  என்னோட  சிங்களத்தில்  கதைப்பதுக்கு "

                          " எனக்கும்  இங்கே  யாரும்  இல்லை அந்த மொழி கதைக்க "

                        " ஹ்ம்ம்,,இங்கே ஒஸ்லோவில்    நிறையத் தமிழ் ஆட்கள்  இருக்கினம்  இல்லையோ "

                         " ஓம்,,ஓம்,,நிறையப்பேர் நோர்வேயில்  இருக்கினம்,சிங்கள  ஆட்களும்  கொஞ்சம்போல இருக்கினம் "

                             "   நான் ஒரு வருஷம் இங்கே இருக்கிறேன் ஒரு சிங்கள ஆட்களையும் சந்தித்ததில்லை "

                          "    என்னகுச்  சிலரைத்  தெரியும்,, அவர்களோடு முன்னம்  வேலை செய்து இருக்கிறேன்,,இப்ப  தொடர்புகள்  இல்லை  "

                        " தமிழ்  ஆட்கள்  என்னைஇங்கே வெறுப்பாகவும், சந்தேகமாயும் பார்கிறார்கள், "

                          "   இலங்கையில் யுத்தம் நடந்த ஆண்டுகளில்  எல்லாத் தமிழரையும் புலி என்றுதானே சிங்கள பிக்குகள் பார்த்தார்களே  அதன்  எதிர்வினை தான் இது  "

                          " எல்லாப் பவுத்த பிக்குகளும் இனத்துவேசம், மொழித்துவேசம், சமய வெறுப்பு   உள்ளவர்கள்  அல்ல, "

                               "   அப்படியா , ஹ்ம்ம்,,அப்படியும் இருக்கலாம் "

                                    " இங்கே  என்னோட புத்தசமய தத்துவம் படிப்பிக்கும்  புரொபசர் எப்பவும் ஆங்கிலத்தில்  சொல்லுவார்  Your presence ..and ..then your absence shall always tell us that this world is a beautiful place for living. soul is residing in our heart like a Lamp. This Lamp will never dismantle என்று அதுபோல வாழ்பவன் நான்  "

                          " ஆனால் புத்தபிக்குகள் அரசாங்கத்தில் ,சட்டத்தில் , இயல்ப்பு வாழ்கையில்  ஆதிக்கம் செலுத்தினார்களே     " 

                           "    அப்படி  இப்ப இல்லை,,முன்னம் அப்படி இருந்தது, இப்ப மஹாசங்கத்தை , அஸ்கிரிய பீடத்தை  ,மல்வத்தை பீடத்தை , எந்த அரசாங்கமும் கணக்கில் எடுப்பதில்லை, பவுத்த பிக்குகள் தனியாக பவுத்த சாசனத்தை பாதுக்காக்கப் போராட வேண்டியுள்ளது "

                               " இப்பதானே  பல  பலமுள்ள  சேணாக்கள் புதுசு  புதுசா   உருவாக்கி  இருக்கே "

                             "  அவர்கள்  அறப்படிச்ச முட்டாள்கள்,காவி உடை அணிந்த கேவலம் கெட்ட  தெருச் சண்டியர்கள்  , அவர்கள் சேனாக்கள்  ஒன்றும் உண்மையானவை  இல்லை,,அதில் உள்ள சில பிக்குகள் மட்டுமே பிரபலம், அதுவும் சும்மா வாயால  உழுந்து  ஆட்டி  அதே வாயால  வடை சுடுவதால்,"

                             "  அவர்கள்தானே இப்ப பிரசினைகளைக் கிண்டி கிண்டி விட்டு ஊதி விடுகிறார்கள் , அது  பிழைதானே "

                      "  அடிப்படையில்  அவர்கள் ஆவேசமான போக்கு உள்ளவர்கள்,  மதத்தைவிட  அவர்களுக்கு அரசியல் முக்கியமாக இருக்கு "

                                 "   அதுவே மற்ற சிறுபான்மை இனத்துக்கு அச்சம் கொடுக்கும் நிகழ்வுதானே  இல்லையா  ஹமாதுருவன்னே "

                           "    ஓம்,  அதுக்கேன்  பிடிச்சுத் தின்னுற மாதிரி  பேயைப் பிசாசைப்  பார்த்த மாதிரி  பார்த்துக்கொண்டு  ரோட்டில கடந்து போகினம் ,,அவளவு  கோவம்  இருக்கு எங்க புத்தபிக்குகளில்"

                     " அதெண்டா  உண்மைதான் அங்குலிமால  எண்டு  சிங்களத்தில்  சொல்லுவார்களே  அதுபோலவா "

                        "  ஹஹஹா,,அதுதான்  நிறைய  சிங்கள வரலாற்று  இதிகாச  விசியம் தெரியும் போல,,இந்தச்  சொல்லு  எல்லாரும்  சொல்ல மாட்டினம் "

                               "  புத்த பெருமானின் வரலாற்றை நான் படித்து இருக்கிறேன்  " 

                                   " என்ன மொழியில் படித்து இருகுரிங்க  " 

                             " தமிழில் தான்,, என்னோட அப்பாவின் ஒன்றுவிட்ட சகோதரர் சோ . சிவபாதசுந்தரம் கவுதமபுத்தர் அடிச்சுவட்டில் என்று ஒரு புத்தகம் தமிழில் எழுதி இருக்கிறார், அந்தப் புத்தகத்தை விழா  எடுத்து அரசமரியாதை கொடுத்து   ஸ்ரீமாவோ பண்டாராநாயக்க கவுரவப்படுத்தி இருக்கிறா  " 

                     "  அப்படியா,,இதெல்லாம்  நான் கேள்விப்பட்டதேயில்லை  " 

                       "  அரச மரத்தைக் கண்டால் அதில  காகம்  வந்திருந்து பீய்ச்சு தோ  இல்லையோ  உங்க ஆட்கள்     கீழே புத்தர்  சிலை வைச்சு பஞ்சாலை  கட்டுரின்களே "

                          "  ஹ்ம்ம்,,, அந்த இடங்களில்  சிங்கள பவுத்த சமய  வரலாற்றுத் தொடர்ப்பு இருந்தால் தான் அப்படிக் கட்டுவோம் "

                             " ஏன்  ஹாமதுருவன்னே எவளவோ புளியமரம் பேயோடு கிடந்தது அல்லாடிக்கொண்டிருக்க அதுக்குக்  கீழே சிலை வைக்காமல் அதை  விட்டுப்போட்டு  எப்பவும் அரச மரத்தையே குறியாகத் தேடிக்கொண்டு இருக்கிறீங்க "

                         " ஹஹஹா ,  நல்லா  என்னை வைச்சு முசுப்பாத்தி போல,,அரசமரத்தின் கீழே தான் போதிசத்துவ  புத்தசாது கபிலவஸ்து லும்பினி வனத்தில் பிறந்தார், போதிகயாவிலும்  அரச மரத்தின் கீழே தான் ஞான உதயம் பெற்றார், அவர் பரிநிர்வாணம் அடைந்ததும் ஒரு அரசமரத்தின் கீழே தான் "

                           "   அதனால  கண்ணில தெரியிற  அரசமரம் எல்லாத்தையும் வளைச்சுப் பிடிச்சு பன்சால     கட்டச் சொல்லி கவுத புத்த பெருமான் அவர் தத்துவங்களில் சொல்லி இருக்கிறாரா "

                           "  ஹஹஹா,, என்னோட விவாதம் செய்ய விருப்பம் தொடங்குது போல,, அப்படி புத்த சாது சொல்லவில்லை,,அரசமரமே அவர் காலத்தில் பிரபலம் இல்லை, அவர் மஹாபரிநிர்வாணம்  குஷிநகரில் அடைந்த பின் தான் அந்த மரம் புனித மரமாக பிரபலம் ஆகியது "

                                "    பிறகேன்  ஹாமாதுருவன்னே  இலங்கையில் ஒரு அரச மரத்தையும் நின்மதியாக இருக்க விடாமல் அட்டகாசம்  போடுரிங்க "

                          "  ஹ்ம்ம்,, அது  பிழைதான்,, அரச  மரத்தின்  கீழே  வடக்குக் கிழக்கு மாகாணத்தில் பிள்ளையார்  சிலை  இருக்கே, அமாத்தியான் சலய    அடாத்தாக  பிள்ளையார் சிலையை அகற்றிவிட்டு புத்தர் சிலை வைப்பது  பிழை "

                      " இந்த நேரம் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகுது  ,ஹாமதுருவன்னே "

                             "  சொல்லுங்கோ , கேட்பம் "

                                    "   எங்களின் வீட்டுக்கு  அருகில்  உள்ள சந்தியில் ஒரு பெரிய அரசமரம் என்னோட சின்னவயதில்  நின்றது, "

                              "  எங்கே  யாப்பனேயிலேயா "

                               "    ஓம்,  ஹமாதுருவன்னே ,   அவடத்தை  அரசடி என்பார்கள் , அது வயதாகி சரிந்து விழ அந்த இடத்தில  சுப்பிரமணிய பாரதியார் சிலை வைத்தார்கள், இப்ப அவடம் பாரதி சிலையடி என்று அழைக்கப்படுகிறது. "

                             " அப்படியா,, நல்லா  இருக்கே கேட்க "

                      "  என்ன ,,ஹமாதுருவன்னே,,கேட்கக்  கவலையா இல்லையா "

                                "   ஏன்  கவலைப்பட வேண்டும்,,சொல்லுங்கோ "

                             "  நல்லகாலம் அரசமரம் கொஞ்சக்காலம் நிண்டு இருந்தா அதுக்குக் கீழே புத்தர் சிலையை வைச்சு பஞ்சாலை கட்டி, அவடம் பன்சாலையடி  என்று வந்திருக்கும்  "

                      "   ஹஹஹா,,, என்னை  வைச்சு பகிடி விடுறிங்க போல இருக்கு பேச்சு வார்த்தை போற போக்கைப் பார்க்க  "

                                 "சரி விடுங்க ஹாமதுருவன்னே,   நீங்க  இங்கே  என்ன படிகுரிங்க இங்கே  என்ன மொழியில் படிக்கிறிங்க  "

                          "  ஒஸ்லோ யூனிவெர்சிட்டி கீளைத்தேய சமய வரலாற்று பக்கல்டியில் ஸ்கோலர்சிப் பலோவில்  வந்து   படிக்கிறேன், ஆங்கிலத்தில்  ஆராய்ச்சி செய்கிறேன் ,,நோர்க்ஸ்  மொழி  தெரியாது " 

                             "   இங்கே நோர்வேயில்  புத்த சமயம் படிப்பிக்க  ஆட்கள் இருகிறார்களா "

                               " ஹஹஹா  என்ன கிண்டலா,,இங்கே எனக்கு ஒரு புரோபசர் இருக்கிறார்,,நோர்வே நாட்டு மனுசர்,,ஆளுக்குத்  தெரியாத புத்த சாசனமே  இல்லை,,அவளவு அறிவுக்களஞ்சியம் ,,திபத், பூட்டான் இமாலயா,  எல்லாம்  போய்ப்  படிச்ச  மனுஷன் "

                      "  அவரும்  பவுத்த  துறவியா "

                      " இல்லை  அந்த மனுஷனுக்கு  மனைவி  பிள்ளைகள்  இருக்கினம்,,ஒருநாள் அவர் வீட்டுக்கு  வரச்சொல்லி சொன்னதால்  போய்  இருக்கிறேன்,நல்ல  அமைதியான  குடும்பம் "

                           "   அட,,அவர்  ஆங்கிலத்தில்  உங்களோடு ஆராய்ச்சி செய்ய அனுசரணையாக இருப்பாரா "

                                 "அப்படிதான்,,அவர்  ஒரு தத்துவ வித்தகர்,,சந்திரகுத்தமவுலியர் காலத்து   பாளி மொழியில் உள்ள கல்வெட்டு ஆதாரம்   எல்லாம் அழகா  ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்து சொல்லுவார்     "

                                 "  அப்படியா,,நீங்க  என்ன  விசியம் படிக்குரிங்க  ஹாம்த்துருவன்னே "

                                " திரிபீடிக தம்மத்துவ புஸ்தி வத்தன   தியான வழிபாட்டில் மகாயான பவுத்தமும் தேரவாத பவுத்தமும் எங்கே முரன்படுகுது எண்டு மாஸ்டர் டிகிரி ஆராய்ச்சி  செய்கிறேன் "

                          "   நீங்க  மட்டும்மா  இது  படிக்குரிங்க "

                    "  இல்லை ,,நானும்  நாலு  பெண்களும்  படிக்குறோம் "

                     " அவர்கள்  நாலுபேரும்  இலங்கையில்  இருந்து வந்தவர்களா" 

                   " இல்லை மூன்று  இளம்பெண்கள் நோர்வே நாட்டு வெள்ளைகள்,, ஒரு நடுத்தர வயது  ஆபிரிக்க  நாட்டுக் கறுப்புப்  பெண்"

                           "   ஒ  ஆச்சரியமாய்  இருக்கே "

                          "  ஹ்ம்ம்,,எனக்கும்  ஆச்சரியமாய்தான்  இருக்கு  அது "


புத்தபிக்கு  இலங்கையில்  என்ன இடத்தைச்  சேர்ந்தவர்  என்று கேக்க நினைத்தேன். அவர் கதைத்த சிங்களத்தில்  மகியங்கனைப் பக்கம் வேடா  என்ற இலங்கையின் ஆதியான குவேனி விஜயன் வரலாற்றில் வரும்  சிங்கள மக்களான   வேடுவர்கள்  இழுக்கும்  ஒரு  இழுவை இருந்தது, சிலநேரம் அது பாளி மொழியின் பாதிப்பா  என்று குழப்பமாக  இருந்தது,  அவர் பேசிய சில சொற்களில் நாக்கு  வழிக்கிற  நாட்டு வளப்பம் இருந்ததால்  ஒரு காட்டுப்பகுதி சேர்ந்த இடத்தில் பிறந்திருக்கலாம் போல இருந்தது.   என்றாலும் கேட்கலாம்  என்று  நினைச்சு 

                           "   ஹாமத்துருவன்னே இலங்கையில்  நீங்க  எந்த  ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் "

                             "அரந்தலாவை,, தெரியுமா அந்த  ஊர் "

                       "  அனுராதபுரதுக்கு  கிட்டயா "

                        "  ஓம்,,கொஞ்சம்  கிட்ட, வடமத்திய  மாகாணம்  ,மாவட்டம்  எண்டு  சொன்னால்  மதவாச்சி  வடக்குப்  பக்கப்   பிரதேச  எல்லை, நான் புத்த பிக்குவாய் பயற்சி பெற்றது  களனிய ரஜமகாவிகாரையில் "

                            "   அட ,, உண்மையாவா  "

                              "   ஓம்,, என்னோட  அப்பா சிறிலங்கா நேவியில்   வேலை  செய்தார்,,அம்மா பரம்பரையான   ஆயுர்வேத வைத்தியர்,நாங்கள் புளத்சிங்கள மடவெல  அக்கரபனாய்  சாதி , யாருக்கும் பயப்பிட மாட்டோம் "

                         "  அட ,, பிறகு  எதுக்கு நீங்கள்  இராணுவத்தில் சேராமல்   பவுத்த பிக்கு ஆனிங்க "

                         "   ஹஹஹா,,இப்ப  ரெயில்  வருமா  அல்லது  வராதா ,,அதை கொஞ்சம்  சொல்ல முடியுமா   "

                               "    ரெயில்  வராது  போலதான்  இருக்கு "

                             " அப்ப  என்ன  செய்யலாம்,,இன்னும் அரை  மணித்தியாலத்தில்  பிலிண்டிரன்  கம்பஸ்  போக  வேணும்  லெக்சர்  இருக்கே "

                     "  ஒண்டு  செய்யுங்க  டாக்சி  எடுங்க,, இப்ப  ரெயில்  தாமதம்  உங்களுக்கு  சாதகம்,,பிறகு  டாக்சி போன  செலவை  ஒஸ்லோ  மெட்ரோ ரெயில்வே அலுவலகத்தில்  காட்டினால்  அந்தக்  காசு  அப்பிடியே  தருவார்கள் "

                         "     அது  எனக்கும்  தெரியும் "

                          "  எப்படித்  தெரியும் "

                            "  என்னோட  பிரோபசர்  சொல்லித்தந்தார் "

                   "   பார்த்திங்களா  எப்படி  மனிதர்களின்  உணர்வை மதிக்கிறார்கள்  என்று  இந்த நாட்டில் "

                     "  ம்,, அது  உண்மைதான் , நான்  காத்து இருக்கிறேன்  ரெயில் வரும்வரை,,அதைவிட  உங்களோடு கதைப்பது  சந்தோசமாய் இருக்கு "

                             " எதுக்கு நீங்க பவுத்த பிக்கு ஆனிங்க  என்ற என் கேள்விக்கு என்ன  பதில் சொல்லாமல் சடைஞ்சுகொண்டு போனிங்க "

                               " ஹஹஹஹா,,சொல்லுறேன்,,அதில ஒரு ரகசியமும்  இல்லை ,,எனக்குப்  பயமும்  இல்லை, நானே எங்கள் பவுத்த சாது  ஏற்றிவைத்த ஒளியின் வழியில் வாழ்பவன் ,நீங்க  என்னை ரகசியமாக  விசாரிக்கும் உளவாளியா "

                             "  அப்படி  என்றால்  என்ன "

                          " இரகசிய  உளவாளி,,அதுதான் நைசா கதைச்சு நசுக்கிடாமல் குசு விடாமல்  முழு  விபரம்  எடுப்பார்களே "

                  " ஒரு  மண்ணும்  இல்லை,,,நானே ஒரு பிஞ்சு போன கக்குஸ் வாளி போன்ற  ஊத்தைவாளி,,என்னோட  முகத்தைப் பார்த்தால்  இன்டலிஜென்ஸ் ஆனா  உளவாளி போலவா இருக்கு,, ஹஹாஹ உங்க காமடி  தாங்க முடியலை  "

                                "  இல்லை இங்கே பலர் கதை கேட்டுக் கதை பிடுங்கி   அப்படி உலாவுரார்கள்  என்று சொன்னார்கள்   "

                    " மண்ணாங்கட்டி அவர்களுக்கு மட்டும்  என்ன  டிராபிக் போலிஸ் போல  நடு மண்டையில்    இன்டலிஜென்ஸ் பல்ப்  எரியுமா "

                        " அப்படி  இல்லை , நாங்கள்  எங்கள் நாட்டில் எதிரிகள்  இங்கேயும்  எதிரிகள் போலத்தான் என்று அவர்கள் நினைக்கிறார்கள்"   

                          "  யார் அவர்கள்  எனக்கே  தெரியாது  அவர்களை " 

                           "  யாருக்கும் தெரியாமல் அடிமடியில சுண்ணாம்பு  தடவி முகத்தில வெசாக் போல பூரணை சந்திரன் இழிக்கிற மாதிரி  சிரிச்சு முதுகில கிரீஸ் கத்தியை  சொருகுபவர்கள் தான் உளவாளிகள் "

                      "  அட அட  என்னமா  விபரிக்குரிங்க , அஹஹா  எனக்கு நம்பர் தகடு இல்லாத வெள்ளை வான் தான் நினைவு வருகுது "

                      " ஹஹஹா,,ஒரே  சிரிப்பா  இருக்கு உங்க கதையைக் கேட்க  எனக்கும்  அதுகளுக்கும்  சம்ப்பந்தம்  இல்லை , ரணசிங்கே பிரேமதாசதான்  அந்த  வெள்ளை வான் கடத்தல்களை  ஆரம்ப்பிச்சவர் "

                         "  என்னைப்  பார்க்க என்ன வரக்காபோளை  கொடுக்காப் புலி போல இருக்கா "

                           "  ஹஹாஹா   இல்லையே "

                       "   பின்ன என்ன புடுக்கு   இல்லாத பூனை போல இருக்கா "

                           "  ஹஹாஹா  இல்லையே "

                          "  பிறகென்ன அழுத் அவுருதுக்கு ரபான் அடிசுக் கிரிஸ் மரம்  ஏறி மலிபன் கொம்பனி  மஞ்சி பிஸ்கட்   பிரிச்ச மாதிரிப்  பிரசினை இப்ப   ஹாமதுருவன்னே "

                       " தமுனான்சலாகே நீங்க  எல்லார் போலவும் சாதாரண   மனிதர் போலதான் இருகுரிங்க "

                           "   சரி விடுங்க, இது  இப்ப முக்கியம்  இல்லை  தானே  ஹாமத்துருவன்னே "

                     "  என்னோட  கிராமத்தில் ஒரு கிளைமோர் கண்ணிவெடி வெடித்தது  ஒரு நாள்  இரவு,,அதில ஒரு பஸ்ஸில் போன  எல்லாருமே  செத்துப் போனார்கள் , அவர்கள் போனது ருவான்வேலிசாய தாதுகோபப் பன்சாலையில்  பிரித் ஓதப் போனவர்கள், என்னோட ரத்த உருத்து சொந்தங்கள் எல்லாம்  "

                                  "  ஹ்ம்ம் , "

                             " அதுக்கு  நானும்  போக  இருந்தேன்,,என்ன  காரணமோ  தெரியவில்லை அந்தப் பயணத்தில் போகவில்லை "

                                    "  ஹ்ம்ம்,,சொல்லுங்கோ "

                          "   அந்த பஸ்ஸில  கிளைமோர் குண்டில் செத்தவர்களை அடக்கம்  செய்ய  இன்னொரு பஸ்ஸில் அடுத்த நாள் எங்க ஊர் ஆட்கள் போனார்கள் "

                          "    ஹ்ம்ம்,,என்ன நடந்தது  பிறகு  அடக்கம்  செய்யும்  நிகழ்வு ஒழுங்கா நடந்ததா "

                        "  அடக்கம் செய்யப் போனவர்களின் பஸ் இன்னொரு கிளைமோரில் ஹெப்டிக்கொல்லாவை  என்ற இடத்தில  வெடித்தது ,, அதில ஒருவரும் உயிரோடு மிஞ்சவில்லை " 

                             " அடப்பாவமே "

                            "என்னோட ரத்த உருத்து சொந்தங்கள் பலர் அதில  பீஸ் பீசா  சிதறிப்போனார்கள்  அதுக்கும்   நானும்  போக  இருந்தேன்,,என்ன  காரணமோ  தெரியவில்லை அந்தப் பயணத்தில் போகவில்லை "

                                    "      ஹ்ம்ம் "



இந்த நேரம் என் பிரியமான சகி  சிசிலியா போன் அடிச்சாள், எங்க நிக்குறாய் என்று கேட்டாள் , கார்ல்பானாபிளஸ்  மெட்ரோவில் ரெயில் வராமால் நிக்குறேன் எண்டு சொன்னேன், எப்படிதான் கண்டு பிடிப்பாளோ தெரியாது என்னோட நிலைமை எப்பவும் பாதைகளில் இடறிகொண்டிருக்கும் போதெல்லாம் சிசிலியா அதை மன அலைகளில் ஏறிவந்து கண்டுபிடிப்பது போலவே அந்தக் கணத்தில் டெலிபோன் அடிப்பாள் 

                                     "   நான் வாறன் வாடா , கார்ல  ஏத்திக்கொண்டு போய் இறக்கி விடுறேன் "

                           "   ஹ்ம்ம்,, நல்ல  ஐடியா  ஒரு பிரெண்டும் நிக்குறார் ,அவரையும் கொண்டுபோய் விடுடி "

                                 " யார்  அவர்,, உன் பழைய பிரென்ட்  யாருமா, தமிழா காருக்க இருந்து  டோயலட் பேப்பரை உருவின மாதிரி  உன் உறண்டல் பிடிச்ச  தமிழில் நீயும் அவனும் அவிச்சுக் கொட்டினால்  எனக்கு விசர் வரும் " 

                                 "  இப்பிடிதாண்டி  அவங்களும்  எங்களை  இலங்கையில் திட்டுவாங்கள் "

                           "  யார்  அவங்கள்  ,,என்ன சொல்லுறாய் "

                      " இல்லை புதிய பிரென்ட் , அவருக்குத்  தமிழ் தெரியாது, அவர் சிங்களவர்  அவரின் சிங்கள மொழிதான் இலங்கையின் ஆண்டுவ பாசாவை , தமிழ் கதைச்சால் பிடிக்காது  "

                        "   அதென்ன அப்படி  ஒரு சட்டம் அந்த நாட்டில்,,அந்தாளை கொண்டுவா நான் நாக்கைப்பிடுங்கிற மாதிரி கேள்வி கேட்கிறேன் "

                         "   ஆள்  இண்டைக்கு எங்களோடு வரப்போகுது "

                        " சொல்லு   யார் அது, யார் அந்த புதிய பிரென்ட்,,இங்கிலிஸ் கதைப்பானா. டொனால் டுக் காட்டூன் போல நீயும் அவனும் கதைச்சு என் காதைக் கிழிக்க வைக்காதே  "

                            "அவர்  ஒரு  சிங்கள பவுத்த பிக்கு , இங்கிலிஸ் நல்லாக் கதைக்க   அவருக்குத்தெரியும் போல இருக்கு , இங்கிலிஸ்ல தான் ஒஸ்லோ யூனிவேர்சிட்டியில்  படிக்கிறார் சிசில் "

                     " பவுத்த பிக்கு ,,ஞே ,,, அப்படி என்றால்  என்ன அர்த்தம், சொல்லு ,,என்ன அர்த்தம்  எனக்குப் புரிய முடியவில்லை   "

                          " அவர்கள்தான்  நான் பிறந்த நாட்டின் ராஜாதிராஜ பராக்கிரம அரசியல் கிங் மேக்கர்க்கர்கள் "

                         " அப்படியா,,அப்ப அந்தக்  கிங்கை கையோடு கொண்டுவா  நானும்   என்ன பராக்கிரமம்  அவர்களிடம்  இருக்கு  எண்டு  டெஸ்ட்  பண்ணிப் பார்கிறேன் "

                            " விடுடி ,,நீ இப்ப வாறியா கார்ல்பானாபிளஸ்  தே பானா ஸ்டேசன் இக்கு வெளிய "

                                 "   சரி வாறன்  "

                                   பவுத்த பிக்குவை  சிசிலியாவின் காரில  ஏற்றிக்கொண்டு போனோம். ஆனால் புத்தபிக்கு அன்றைக்கு லெக்சர் போகவில்லை, வரமாட்டேன் என்று எங்க காரில் இருந்து டெக்ஸ் அனுப்பினார் ,சிசிலியாவுக்கு பவுத்தபிக்குவின் உடுப்பே ஒரே  களேபரமாக இருந்தது . பிக்கு அவருக்குத் தெரிந்த உடைசல் பழைய சாமான் விக்கிற  பஞ்சிகாவத்தை உடைசல் போன்ற ஆங்கிலத்தில் சிசிலியாவோடு கதைத்துக்கொண்டு வந்தார், 

                                        நான் எல்லாப்  பாம்பும்  பின்னுக்கு  ஒருக்கா இழுத்துப்போட்டுத்தான்  விசப்பல்லை இறுக்கும்  என்பது போல  கேட்டுக்கொள்கிறேன் பேர்வழி எண்டு  சும்மா  இருந்தேன் , புத்த பிக்கு ஆங்கிலத்தில் சொல்ல முடியாத விசியங்கள சிங்களத்தில் சொன்னார் நான் அதை சிசிலியாவுக்கு நோர்ஸ்க்கில் மொழிபெயர்த்து சொன்னேன் , எனக்கும் நிறைய புத்த சமய தத்துவம் பற்றிய கேள்விகளுக்கு விடையும் சொன்னார். நேர்மையான மனிதர். சில விசியங்கள் தனக்குத் தெரியாது என்றும் சொன்னார். 

                                    ஆனால் அன்று இரவு சிசிலியாவின் வீட்டில  நல்ல தண்ணிப்பாட்டி போட்டோம், சிசிலியா  வைத்து இருந்த கோரப்ச்சேவ் வெட்கா போத்திலைத் திறந்து பவுத்தபிக்குவுக்கு ஒரு சொட் குடுத்த உடனே பிக்கு டக்கி டிக்கி டுஸ் என்று சரண்டர் ஆகிட்டார். ஒரு சொட் தான் சும்மா எங்களுக்காகக்காகவும் குளிருக்காகவும் குடித்தார் . வாழ்கையின் மிகப்பெரிய கொடுப்பினைகள்  சாதி  ,மதம்,மொழி, வரலாறு  ஏதுமில்லா மரண வெளியில் விரிந்து விடலாம் 

                                   பிறகு  சிசிலியா  அவளின் ஹன்னா மொன்டானா ஸ்டைலில் ஆட்டம் போடத் தொடங்கினாள் . அன்றுதான்  நான் எவளவு பித்தம் பிடித்த புக்கு என்றும்   அந்தப் பவுத்தப்பிக்கு எவளவு நல்ல மனிதர் என்றும் அவரின்  இன்னொரு மென்மையான, காமடியான, மனிதாபிமானப்  பக்கத்தைப் பார்க்க முடிந்தது , மன ஓசைகள் மணி அடித்த அன்றைய இரவு  சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கும் வரை சிரிச்சோம், 

                                 அதை  இன்னொரு கதையாக எழுதுகிறேன்  
.

Saturday, 19 November 2016

என்ன சீவியமடா இது / பாகம் ஒன்று /

நோர்வேயில அந்தரிச்ச நேரம் பக்கத்தில கூடப்பிறந்த சகோதரங்கள் , நெருங்கிய சொந்தக்காரர் ,ரத்தம் கொடுக்க ரத்த உறவுகள் இல்லாட்டியும் இந்த நாட்டு அரசாங்கம் " பஸ்ட்லேக " என்று எல்லாருக்கும் ஒரு குடும்ப டாக்டர் வைச்சு இருக்கிறார்கள். நல்ல காலம் அந்த டாக்டருக்கு எங்கள் குடும்பத்தைப்பற்றி அதில் உள்ள கேவலங்கள் பற்றி ஒன்றுமே தெரியாது.

                                             ஆனால் குடும்பத்தில் இருந்து வரக்கூடிய பரம்பரை நோய்க் கூற்று வியாதிகள் பற்றி நல்லாவே தெரியும் . உடம்பு நல்லாவே இல்லை இன்று அதனால டாக்டரிடம் போகலாம் என்று நினைச்சேன் . ஆனால் அந்த பஸ்ட் லேகைக்கு முதல் காசு கட்ட வேணும் அப்பத்தான் அந்தாள் எனக்கு உயிர் இருக்கோ என்றே முதல்செக் பண்ணுவார்

                                              அதுக்கு காசு கட்ட இல்லாட்டி பிறகு பில் அனுப்பு என்று சொல்லலாம், அதைவிட அந்த டாக்டர் வயதான ஒரு கிழவன். பாட்டி வைத்தியம் போல அட்வைஸ் தான் இருத்திவைத்து சொல்லுவார் . அதுக்கு எதுக்கு காசு கட்டிப் பார்க்க வேண்டும் என்று போட்டு அதால இண்டைக்கு ஓசியில உலை வைக்க முன்னர் சமையல் வேலை செய்த ஹெல்த் செண்டரில் உள்ள நேர்ஸ் இடம் போனேன்.

                                       அந்த இடத்தில ரெண்டு நேர்ஸ் வயதானவர்களுக்கு மருத்துவ உதவிக்கு இருப்பார்கள். ரெண்டு பேருமே வசந்தகாலப் பூக்களுக்குப் போட்டியாக இளமைத் திருவிழா நடத்தும் இந்திரவிழாவில் நாடியம் ஆடும் சுந்தரிகள்.

                            எல்டர் செண்டர் போன நேரம் அவளவு உடம்பு அசதி ஆனால் அவளைப் பார்த்த உடன அரைவாசி அசதி போன இடம் தெரியவில்லை .

                        " என்ன பிரசினை உனக்கு இப்ப " என்று மாரியம்மன் கோவிலில் வேப்பிலை அடிக்கிற மாதிரிக்கேட்டாள் .

                                      " நேற்று காய்ச்சல் அதான் உடம்பு அசதியா இருந்திருக்கும். வேற என்னவும் குண்டக்க மண்டக்க இருக்கா என்று பார்த்து சொல்லுப்பா " என்றேன்

                                 அவள் கிட்ட வந்து ஷகிலா மலையாள பிட் படத்தில உரசுற மாதிரி செமையா நெருங்கி இருந்து கையைப் பிடிச்சு

                               " பிளட்பிரஷர் இருக்கா " என்று கேட்டாள்.

                                  " நிறைய பிரசர் இருக்கு ,பிளட் பிரஷர் இருக்கா என்று தெரியாது நீயே பார்த்து சொல்லுமா,"

                                  என்றேன் , கையில காக்கி துணி சுத்தி பிரஷர் மிசினை வைச்சு,கையில ஒரு சின்னப் பந்துக்கு காத்து அமுக்கி அமுக்கிப் பார்த்தாள், அவள் என் கையைத் தொட்டவுடன எனக்கு 
எனக்கு ஹை பிரஷர் ,லோ பிரசர் , ஹோட் பிரஷர். கொம்பிரசர், எல்லாம் தாறுமாறா கொன்ரோல் இல்லாமல் ஏகிறிட்டுத்து . அந்த பிரஷர் மிசினே பிச்சுக்கொண்டு போகும் போல இருந்திச்சு

                                         பிறகு கழுத்தில கொழுவி இருந்த செத்த ஸ்கோப்ப்பை நெஞ்சில வைச்சு பார்த்து

                                " வித்தியாசமா சத்தம் கேட்குது " என்றாள்

                                   " வித்தியாசமா எப்படி கேட்டுகுது என்று எனக்கும் சொல்லுப்பா " என்று கேட்டேன் ,

                                  " சங்கு ஊதிற சத்தம் கேட்குது " என்று சொன்னாள் ,

                          நான் " சேமக்கலம் அடிக்கிற சத்தமும் கேட்குதா " என்று கேட்டேன்.

                                   " நல்ல காலம் அது கேட்கவில்லை " என்றாள் .

                                 பிறகு இன்னொரு தெலுங்கு சமந்தா போல நேர்ஸ் வந்து அந்த கோப்பையை வைச்சுப் பார்த்தாள். அவள்செம பிகர்,அவள் ஏன் நேர்ஸ் வேலை செய்து வாழ்கையை வீனாக்கிறாள் என்று நினைச்சுக்கொண்டு இருக்க . அவள் கொஞ்சம் சீரியஸ் ஆக என்னோட இதயம் அடிக்கும் சத்தத்தைக் கேட்டுப்போட்டு

                                  " நீ ஸ்ரீலங்கா தமிழா " என்று கேட்டாள்

                                     " ஓம் "

                              " ஏன் காச்சல் அடிக்குது என்று நினைக்கிறாய் "

                              " காஞ்ச மாடு கம்பில விழுந்தா
 காச்சல் அடிக்கும் என்று நினைக்கிறன் "

                                   " என்னது அது,,இப்பிடிப் பிசத்துறியே,,மலேரியாக் காச்சல் போல இருக்குமோ "

                                   " போலன் அலேர்யி எனக்கு இருக்கு " என்று சொன்னேன்


                                "   டேய் மவனே என்ன மெடிக்கல் பிரசினை  எண்டு நாங்கள்  சொல்லுவோம் , நீ  ஒண்டும் சொல்லாதே ,    என்ன மண்ணாங்கட்டிக்கு மூன்று வருஷம் வேலை மினக்கெட்டு  நேர்சிங் கோர்ஸ்  படிச்சம் ,,சொல்லு பார்ப்பம் "

                        " அய்யோ தெய்வங்களே,,தெரியாமல் வாய் உளறிப்போட்டேன் "

                                  " உன் இதயம் அடிக்கும் சத்தம், தாரை தப்பட்டை படத்தில இளையராஜா போட்ட மூசிக் போல அடிக்குதே "

                                   " என்னது,,என்னாப்பா சொல்லுறாய் "

                              " எல்லாரோட ஹார்ட்டும் லப் டப் லப் டப் எண்டு அடிக்கும் உ ன்னோட ஹார்ட் லவ் லவ் லவ் லவ் எண்டு அடிக்குதே " எண்டு போட்டு

                                       " உனக்கு போலன் அலேர்யி இல்லை, இது வேற விதமான அலேர்யி " என்றாள்.
                                       
                                     " ஏன்பா இப்பிடி வித்தியாசமா அடிக்கு " என்று கேட்டேன்.

                                       " நீ என்ன நினைசாய் இங்கே வரும்போது "

                                     " கந்தர்வன் எப்படிக் கலியாணம் கட்டுவான் என்று ஜோசிதுக் கொண்டு வந்தேன் "

                                      " அட அட அட ,,இங்கே ஒரு ஸ்ரீலங்கா தமிழ் டாக்டர் நிக்குறார் அவரோடு கதைக்கப் போறியா" என்று கேட்டாள்

                                      " அவர் எப்படி எனக்கு உதவி செய்ய முடியும் " என்று கேட்டேன்

                                    " அது எனக்குத் தெரியாது,அவர் நல்லா கட்டிலில் படுக்க வைச்சு எல்லா இடமும் அமுக்கிப் பார்த்து, உனக்கு என்ன பிரசினை என்று சொல்லுவார்,,அவர் நல்லா அமுக்குவார்,,அது மட்டும் தெரியும் "

                                        " அதென்ன அவளவு தெளிவா சொல்லுறாய் "

                                  " ஹ்ம்ம் ,,நேர்ஸ் என்றா என்ன சும்மாவா ,,ஹ்ம்ம் எல்லாம் என்னோட அனுபவத்தில் இருந்து சொல்லுறேன் "

                                   " இங்கே டாக்டர் யாரும் முன்னம் இல்லையே "

                                   " ஹ்ம்ம்,,,இல்லைதான் இன்று இவர் ஒரு அவசரக் கேஸ் பார்க்க வேண்டியதால்,,நாங்கள்வரவழைத்தோம் "

                                 " அப்படியா,,பார்த்து மு டி ஞ்சு தோ,,,,"

                                    " ஹ்ம்ம்,,உனக்கு தெரியும்தானே ,,நானும்,,மற்ற நேர்சும் மட்டுமே இங்கே வேலை செய்வது "

                                       " ஓம்,,ஓம்,,அது நல்லாத் தெரிந்தபடியால்தான்நானே இங்கே வந்தேனே "

                                       " என்னது,,பிசத்துறாய்...."

                                      " அட அட அட என் அப்பன் பழனி ஆண்டவன் என்னை சரியான இடத்தில தான் கொண்டுவந்து வைச்சு அமுக்கி திருவிளையாடல் பார்க்கிறான் "

                                         " என்னது மூளை மலேரியா காச்சல் போலப் பிசத்துறாய் , மலேரியா நோர்வேயில் வர சந்தர்ப்பம் இல்லையே "

                                " நான் சும்மா நேரமே அர்த்தமில்லாமல் பிசத்துவேன் "

                                        " சொல்லு,,அவரை வரச் சொல்லவா,,உன்னோட நாட்டு ஆள்..உனக்கு கட்டாயம் உதவி செய்வார் "

                                   " ஓம்,,கதைக்குறேன் " என்றேன்

                                           அந்த தமிழ் டாக்டர் வெளிய வந்தார். அவரைப்பார்க்க நிறையத் தமிழ் இனமானத் தன்மான உணர்வு உள்ளவர் போல இருந்தார். ஆனால் சுருளிராஜன் போல சிரிக்கிறதைப் பார்க்க போலி டாக்டரா இருப்பாரோ என்று பயமா இருந்தது. வாயால புழுகித்தள்ளும் பேர்வழி போலதான் வெளிய பார்க்க தெரிந்தார்.

                                       நான் நினைச்ச மாதிரியே அவர் வெளிய வரும் போதே என்னைப் பார்த்து ,வலதுகைப் பெருவிரலை உயர்த்தித் தம்ஸ் அப் அடையாளம் காட்டி ,

                                  " உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு, மரணம் வந்தாலும் சூடு சொரணையோடு வாழ்பவன் தமிழன் "

                               என்று சொன்னார். எனக்கு அந்த நேர்ஸ் சங்கு ஊதிற சத்தம் கேட்குது என்றது நினைவு வர டயறியா போல வயித்தைக் கலக்கிற பயம் வந்திட்டுது.

                                " டாக்டர் நான் ஏற்கனவே பயந்துபோய் இருக்கிறேன்,,இப்பிடி டயலக் சொல்லி என்னை பயப்பிடுத வேண்டாம்,நான் பாவம்ஸ் டொக்டர் "

                          என்று தமிழில் சொன்னேன். அந்த டாக்டர் என்னை அடையாளம் பிடிச்சிட்டார்.

                              " நீ அவன்தான் தானே " என்று கேட்டார்

                                   " நான் எவன் என்று தெரியுமா " என்று கேட்டேன்

                           " ஹ்ம்ம்,, என்ன சீவியமடா இது என்று பேஸ்புக்கில் எழுதிக்கொண்டு இருக்கும் அவன் தானே"

                                     " அவனேதான் "

                                   " ஹ்ம்ம்,,,எல்லாருக்கும் கஷ்டம் இருக்கும் அதைக் குருவி தலையில பனங்காய் போல அடுத்தவர் தலையிலையும் ஏற்றிவிடுற மாதிரி இருக்கே சில நேரம் "

                                " ஓம்,,டொக்டர்,,,அது சும்மா என்னைப்போல அஞ்சாம் வகுப்பு படிச்ச ஆட்களுக்கு காமடியா எழுதுறது,,நீங்க படிச்சவர் அதெல்லாம் வாசிக்கக்கூடாது "

                              " என்னசெய்யுறது,,,என்ன சீவியமடா என்று சொல்லிக்கொண்டுதான் வாசிக்கிறது "

                             " அப்படியே,,அப்பிடி என்றாள் ஓகேதான் டொக்டர் "

                               என்று சொன்னேன் .அவர் மிகவும் நல்ல டாக்டர். என்னை கட்டிலில் குப்புறப் படுக்க வைச்சு நல்லா செக் செய்து ,

                                " உன்னோட ஈரல் வீங்கி இருக்கு,,சிரோசிஸ் வர சந்தர்ப்பம் இருக்கு ,,ஈரலைக் கவனி, ட்ரிங்க்ஸ் ,,அல்ககோல் ,குடிப்பியா,,என்ன குடிப்பாய் "

                              " ஓம்,,பியர் தான் தண்ணி போலக் குடிப்பேன் "

                                   " எவளவு குடிப்பாய் "

                                 " என்னவோ ,வீராளி அம்மாளாச்சி புண்ணியத்தில் ,என்னோட உடம்பு தாங்கி தொண்டைக்குழி நிரம்பும் வரை குடிப்பேன்"

                                 " ஹ்ம்ம்,,அது ஆபத்து ,,ஈரலில் பாதிப்பு ஏற்கனவே இருக்கலாம் ,,மண்ணீரல் கல்ஈரல்,சதயிரல் ,,எல்லாமே பாதிக்கும் "

                                  " அப்படியா ,,டாக்டர்,,இனி அளவோடு ஒரு நாளைக்கு ரெண்டு தரம் மட்டுமே குடிகிரதோட நிறுதிக்கொள்ள முயற்சிக்கிறேன் "

                                    " ஹ்ம்ம்,,,அட அட என்ன ஒரு பொறுப்புணர்வு "

                           " வேற ஒன்றும் பிரச்னை இல்லைதானே டொக்டர் "

                                 " உனக்கு வேற ஒன்றுமில்லை கொழுப்புதான் கொஞ்சம் அதிகம், அதைக் கரைக்க வேணும் " என்று சொல்லி எனக்கு மருந்து எழுதித் தந்து இருக்கிறார்.


                     ..................என்ன சீவியமடா இது ...................

யாழ்பாணத்தில்,சின்ன வயசில , எங்க வீட்டில Dr .நந்தாதேவ விஜியசேகர என்ற சிங்களவர் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு "முன்னைச் சிங்கள ஓவியங்கள் " இருந்தது. நந்தாதேவ அந்தப் புத்தகத்தை கல்கத்தா யூனிவேர்சிடியில் Phd ஆய்வுக்காக எழுதி இருந்தாலும் ,அதில நிறைய பழைய சிங்கள ராஜ்தானிகளின் விபரம்,வீராதி வீர மன்னர்கள் ,அவர்களின் பராகிரம சாதனைகள் எல்லாம் இருந்தது!
                                    பின்னாட்களில் வளர்ந்தபின் அந்த இடங்களைப் பார்க்கவேண்டும் எண்டு அதை வாசிக்கும் போதெல்லாம் நினைத்தது கடசியில நடந்தது! என்னோட ஸ்வீடிஷ் மனைவி இலங்கையில் என்னோடு வந்து வசித்தபோது இலங்கையின் தொன்மையான வரலாறை ஆர்வமாக ஆங்கிலத்தில் வாசித்து, ஏனோ தெரியவில்லை சிங்களமொழி பேசுவதுக்கு சுவாரசியமாக இருக்கு என்று விரும்பிப்படித்தாள் !

                                       எனக்கு சிங்களம் பேச முடியும் .சிங்களவர் சிங்கம் போல தமிழர் மீது பாய்ந்து இலங்கை இனப்பிரச்சினை அகோரமாக நடந்துகொண்டு இருந்தாலும் தனிப்பட சிங்கள மக்கள் நல்லவர்கள், துவேஷம் இருந்தாலும் அவர்களுடன் சிங்களத்தில் சலாப்பினால் ஓட்டிக்கொள்வார்கள் .வயித்தில பூசணிக்காய் அளவு குண்டைக் கட்டிக்கொண்டு நல்லா சிங்களத்தில் கதைத்தால் அதை வெடிக்க வைக்கும்வரை அதைப்பற்றி சந்தேகமா ஜோசிக்கவே மாட்டார்கள். அவளவு வெங்காய ஏமாளிகள் .

                                     சிங்களப் பகிடிகள் தமிழ் பகிடிகளை விட அருமையாக இருக்கும். சிங்களமே ஒரு காமடியான மொழி. சிங்கள மக்கள் எல்லாத்தையும் பகிடி ஆக்குவார்கள்,,அரசியல்வாதிகளே பாராளுமன்றத்தில் பயங்கரப் பகிடி விடுவார்கள் . பல தமிழருக்கு சிங்களம் தெரியாது ,அதைவிட பகிடி எண்டா என்ன எண்டு தெரியாது. அதால அவர்களால விளங்கமுடியாது , என்னை பொறுத்தவரை சிங்கள மக்கள் வாழ்க்கையை பகிடியாக்கி விடுவார்கள். பெண்களே டபுள் மீனிங் பகிடி விட்டா வயிறு குலுங்கும்

                                  அதால பிளான் போட்ட மாதிரி , ஒரு குறிப்பில் எல்லா இடங்களையும் குறித்துக்கொண்டு, "காலாச்சார முக்கோண வலய" தில் இருக்கும், தம்புள்ளையில் தங்கத்தால செய்த குகைப்புத்தர் கோவில், வரலாறுக்கு முற்பட்டு வானியலின் விபரம் உள்ள சந்திர வட்டக்கல், அப்புறம், அனுர மன்னர்கள் ஆண்ட அனுராதபுரதில பிரமாண்டமான ருவான்விலிசாய, இடிந்து விழும் நிலையில் உள்ள முன்னைச் சிங்கள "ஆர்கிடெக்சர்" ஆச்சரியம் அபயகிரி தாதுகோபம் , குசீநகரில் புத்த பெருமான் மகா பரிநிர்வாணம் அடைந்த மரத்தின் கிளையில் வளர்ந்த ஸ்ரீ மகா போதி அரசமரம், எல்லான் என்ற சோழ மன்னன் கட்டிய சிவன்கோவில் இதெல்லாம் அனுராதபுரதில் பார்த்தோம்

                               பிறகு மஹா பராக்கிரமபாகு மன்னன் கட்டிய பராக்கிரமபாகு சமுத்திரம், அவனே "மனச்சோர்வில் " பயந்து ஓடிப்போய் ஒளித்து இருந்த சிகிரியா மலைக் கோட்டை , தாதுசேன மன்னன் கொலை செயப்படக் காரணமா இருந்த காலவாவி, எல்லாம் சுற்றி , மகிந்த தேரர் ,அவரின் சகோதரி சங்கமித்யுடன் வந்திறங்கிய தம்ப்பபன்னி , குளக்கோட்டன் என்ற தமிழ் மன்னன் கட்டிய தம்பகாமம், இதெல்லாம் பார்த்தோம்

                                          இன்னும் பல இடங்கள் சுற்றியபோதுதான் தெரிந்தது, ஒரு வரலாறை புத்தகத்தில படிப்பதும் ,அதையே நேரடியாகப் போய் பார்ப்பதும் வேறு வேறு அனுபவங்கள். நேரடியாக பார்ப்பதில் எப்பவுமே ஒரு" த்ரில் ",அதேநேரம் அந்த வரலாறுக்கு முற்பட்ட இடங்களில் ஒருவித "Energy" இருக்கிறது என்பதும் தெரிய வந்தது !
                                         ஐரோப்பிய காலனிகாரர் வரமுன்பு ஐக்கிய இலங்கை ஒரு " பொருளாதார தன்னிறைவு விவசாய " நாடக இருந்தது எண்டு பாடசாலையில் படித்ததை நேர்ல உணரமுடிந்தது! அப்படி நிர்பாசன திட்டம் போட்டு வளமாக்கி இருகிறர்கள் பண்டைய சிங்கள மாமன்னர்கள்! அதனைக் கைவிட்ட அடையாளங்கள் பார்க்கும்போது மிகவும்கோபம் வந்தது . ஐரோப்பியர் இலங்கை என்ற குட்டித் தீவில் சுதேசிய மனிதர்களின் நாட்டில் சுய மரியாதையைக் காலுக்குள் போட்டு மிதித்தது கேவலமாயிருந்தது
                                           இலங்கையில் அப்போது வடக்கிலும்,கிழக்கிலும் சண்டை நடந்ததால் , கண்டி தலதா மாளிகை வேறு சக்கை லொறியால தாக்கப்பட்டதாலும், பல இடங்களில் கடுமையான கெடுபிடி இருந்தது! நான் கதைத்த சிங்களத்தில் பனங்கொட்டை தமிழ் வாசம் வீசியதாலும், என்னோட மனைவி வெள்ளை இனத்தவா என்பதாலும் , உத்தரட்ட மாநுவர என்ற இராஜசிங்கன் என்ற தமிழ் மன்னன் ஆண்ட கண்டியில் பல இடங்களில் ராணுவத்தினர் மறித்து ,
                          " உன்னுடன் வரும் வெள்ளைப்பெண் வெளிநாட்டு பத்திரிகையாளரா, எதுக்காக இந்த இடமெல்லாம் சுற்றுகிறாய், இந்த இடங்கள் அதியுயர் பாதுக்காப்பு உள்ள இடங்கள் தெரியுமா ?"
                               எண்டு சந்தேகமா என்னைத்தான் பார்த்துக் கேடார்கள், நான் ,சிங்களத்தில் கதைத்து ,அந்த போலிஸ் இடமிருந்து தப்பிக்கப் பொய் சொல்லி ,
                          " அவா சிங்கள காலாச்சார வரலாறு பற்றி ஆராச்சி செய்கின்றா, அதனால சுற்றிப் பார்க்கிறோம் "
                              " ஜெர்னலிஸ்ட்களுக்கு விசா கொடுப்பதே நாங்கள் தீவிரமா விசாரித்த பின் தான் அது தெரியுமா உனக்கு "
                                 " தெரியும் மாத்தையா. நீங்கள் எல்லாம் தீவிரமா விசாரித்து தானே செய்யுரிங்க "
                                    " இவளிடம் விசா இருக்கா , அதென்ன விசா உல்லாசப் பயணிகள் விசாவா "
                                    " இல்லை,,மாத்தையா , அவளிடம் ரெண்டு வருடம் இங்கே வசிக்க விசாவே இருக்கு "
                                     " அதெப்படி கொடுத்தார்கள்,,சொல்லு "
                              " அவள் என்னோட பொஞ்சாதி ,அதால பமிலி வதிவிட அனுமதி விசா எடுத்துக் கொடுத்தேன் ,மாத்தையா "
                               " உண்மையாவா சொல்லுறாய், இப்ப எல்லாம் உருவி செக் பண்ணுவோம்,எங்களுக்கு அதிகாரம் இருக்கு தெரியும் தானே "
                                  " ஓம்,,மாத்தையா,, எங்களிடம் உருவி துருவி செக் செய்ய ஒண்டுமே இல்லை , மாத்தையா "
                             " நீ ,,எந்த இடம்.. கம கொய்த ,,"
                            " நான் யாழ்பாணம் மாத்தையா "
                      " யாப்பானே, புலிகளின் யாப்பானே , நீ கொட்டியா "
                           " மாத்தையா நான் கொட்டியும் இல்லை ரொட்டியும் இல்லை,,சும்மா ஒரு அப்பாவி மாத்தையா "
                                " ஹறி,,இந்த சுத்தி வெள்ளைக்காரிக்கு எங்கள் நாட்டைப்பற்றி உண்மையை சொல்லு..கொட்டி நாட்டை அழிக்குது என்று "
                                      " ஓம் மாத்தையா , அவளுக்கு ஏற்கனவே நல்லா எல்லாம் தெரியும் , யார் நாட்டை அழிக்கிறது என்று "
                                   " வெளிநாட்டு ஜெர்னலிஸ்ட் நாட்டுக்கு உள்ளே வந்து சுத்திப்போட்டுப் போய் எங்களைப் பற்றி பொய்யாக எழுதுகிறார்கள் "
                                    " அதுபற்றி எனக்கு ஒண்டுமே தெரியாது, மாத்தையா "
                                   " இவள் ஜெர்னலிஸ்ட் என்று தெரிஞ்சா,,உன்னையும் அவளையும் உள்ளே போட்டு நாரியை முறிச்சு உழக்க்கிப் போட்டுதான் விடுவோம் ,,அதுக்கு எங்களுக்கு பயங்கரவாத சட்டத்தின் படி அதிகாரம் இருக்கு தெரியுமா "
                                        " தெரியும் மாத்தையா, அவா சிங்கள காலாச்சார வரலாறு பற்றி ஆராச்சி செய்கின்றா, உங்களைப் பற்றி நல்லா புகழ்ந்து எழுதுவா, பயப்பிட வேண்டாம் மாத்தையா "
                              என்றேன்,அவர்கள் வாயைப் பிளந்து
                          "ஏமத ,எமனம் ,நியம வட தமாய், " (அப்படியா,,அப்படி என்றால் சூப்பர் )
                                          எண்டு வழிவிட்டார்கள்! கையில துவக்கு இருந்தால் அவங்கள் சொன்ன கடைசி வார்த்தையோடு அவளவு பேரையும் போட்டுத் தள்ளிப்போட்டும் போயிருக்கலாம் .
                                                   என்னோட வெள்ளைக் குதிரை அந்த விசாரணை உரையாடல் நிகழ்ந்த நேரம் புத்த பெருமானின் புனிதப் பல்லு உள்ள பேழையைப் பார்த்துப் படம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லிப்போட்டு தலதா மாளிகையின் உள்ளே போய்விட்டாள். அவள் திரும்பி வரும்போது போலிஸ்காரங்கள் என்னை மறித்து வைத்து கதைப்பதைப் பாத்துப்போட்டு வந்து சிங்களத்தில் தடக்கித் தடக்கி
                                            " இங்கே,,,,,,, என்ன,,,,,, நடக்குது,,எதுக்காக இவனை ,,,,,,வைத்து ,,,,,,,,,,விசாரிக்கிறீங்கள் "
                                         என்று கேட்டாள். அந்த கும்பலில் நின்ற ஒரு போலிஸ் காரன் தடக்கித் தடக்கி ஆங்கிலத்தில் ஏன் விசாரித்தோம் என்று சொன்னான் .அவளுக்குக் கோபம் வந்திட்டுது ,சிங்களத்தில் கோவமாக
                                  " பிஸ்சுக் கத்தாவ "
                                   என்று சொன்னாள், லூசுத்தனமான உரையாடல் என்று அதுக்கு அர்த்தம், போலீஸ்காரங்களுக்கு சிரிப்பு வந்திட்டுது. கிடந்தது
                              " இங்கே பாரடா,,வெள்ளைக்காரி சிங்களம் கதைகிறதை "
                           என்று சொல்லிச் சிரிச்சுக்கொண்டு இருந்தாங்கள்.
                           அனுராதபுரத்தில் சுற்றிய போது "புனித நகர்" எண்டு ஒரு பகுதிய பெயர் போட்டு வைத்திருந்தார்கள்,அவசரத்துக்கு மூத்திரம் முடுக்க,
                                 " எங்க மறைஞ்சு மூத்திரம் பெய்யலாம் இந்த இடத்தில "
                                  எண்டு வழியில் சந்தித்த ஒருவரிடம் சிங்களத்தில் கேட்க அவர்,அந்த "புனித நகர்" பகுதியைக் காட்டி சிங்களத்தில்
                                 "அங்கதான் நாங்கள் எல்லாம் அவசரத்துக்குப் போவோம் "
                                          என்று அவர் அந்த புனித நகர் பகுதியைக் காட்டிச் சொன்னது ஆச்சரியமாகக இருந்தது!
                                      சிகிரியாவில் குரங்குகள் கை விரல்கலால் "........." எண்டு கெட்ட செயல் காட்ட ,வெளிநாட்டு டுரிச்டுகள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்! பொலநறுவையில் வெள்ளத்துக்கு ரயில்வே தண்டவாள சிலுப்பர் கட்டை மிதக்க ரயில் அங்கால,இக்கால அசைந்தது . உறங்கா நகரம் தம்புள்ளையில் அதிகாலை நாலு மணிக்கே மரக்கறி கொழும்பு போகும் லொறிகளில் ஏற்றிமுடிய, காலை ஆறு மணிக்கே சீட்டு விளையாட ஆரம்பிக்கிரார்கள் ,
                                           போகொல்லையில் பன்சாலைக்குப் பின்னால புத்தபிக்கு ஒளிஞ்சு நிண்டு புகையிலைப் புகை விட்டார், வரெகம என்ற பொறுத்த சிங்கள இடத்தில ஒரு காரைநகர் தமிழர் சில்லறைக் கடைவைச்சு, கடைக்கு மேல பூசணிக்கொடி வளரவிட்டிருந்தார்,இப்படி பார்த்தவை , எல்லாம் இங்க எழுத நேரம் இல்லை ! என்னோடு மனைவி கவலைப்பட்டாள் ,
                                     "நீ பிறந்த யாழ்பாணத்தை இப்படி சுற்றிப் பார்க்க எனக்கு போக முடியாமல் இருக்கிறதே "
                             எண்டு ! ஹ்ம்ம்! பல சமயம் ஜோசிப்பது , வடக்கிலும் சங்கிலியன்,வன்னியில பண்டாரவனியன், என்று வரலாறு இருக்கிறது , புலம்பெயர் நாடுகளில் நவீன வீடியோ தொழில்நுட்பம் படிதவர்கள் இருக்குறார்கள்,அவர்கள் அங்கு போய் அந்த "பண்டைய தமிழ் மன்னரின் " வாழ்விட வரலாறை ஒரு "டாகுமென்ட்" ஆகவாவது எடுத்தால் ,அடுத்த தலைமுறைக்கு குறைந்தபட்சம் ஒரு "டாகுமென்ட் " வடிவிலாவது "தமிழ் மன்னரின் "வரலாறு காப்பாற்றப்படும்!.....இல்லையா ?
                             ......................என்ன சீவியமடா இது...............

பேஸ்புக்குக்கு எதற்காக மூஞ்சிபுத்தகம் என்று அந்த மார்க்சுக்கர் பேக்கு போயும்போயும் இப்படி ஒரு பெயர் வைத்தான் என்று எப்பவுமே ஜோசிப்பது. ஒருவேளை காலையில் எழும்பி மூஞ்சி கழுவாமல் பல்லு விளக்காமல் அதை வைச்சு நோன்டும் ஒரு நிலைமைக்குள் அது எதிர்காலத்தில் பலரைத் தள்ளிவிடும் என்பதால் அப்படி பெயர் வைத்தானா தெரியவில்லை! 

                                         மூதேவி வாலாயம் பிடிச்சவனுக்கு முழுவியளத்திலும் விடியாதது போல இந்தப் புத்தகம் போதைவஸ்துக்கு அடிமையானது மாதிரி ஒரு அர்த்தமில்லாமல் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நடுத்தொண்டைகுழியில நிண்டு கொண்டு இன்னும் எவளவு காலம்தான் வாழ்கையில் அனுபவித்து வாழவேண்டிய அற்புதமான தருணங்களைத் திருடி எடுத்துக்கொள்ளுமோ தெரியவில்லை.


                                     இப்படி நிலைமையிலும்   பேஸ்புக் என்ற மூஞ்சிப்  புத்தகத்தைப்  பலர் கிண்டல் அடித்துக்கொண்டு அதில பல வருடம் விடாப்பிடியாக இருக்குறார்கள் ! இந்தப் புத்தகத்தில் பல நல்ல விசியங்களும் இருக்கு. ஒன்று உலகம் எங்கும் சிதறிய நண்பர்கள், உறவுகளை அது தேடி எடுத்துத் தந்துள்ளது . இன்னொன்று என்னைப்போன்ற எந்த இலக்கியப் பின்னணியும் இல்லாத பலரை எழுதுவதுக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருக்கு . ரெண்டும் மறைக்க முடியாத உண்மைகள். 

                                            மூஞ்சிப் புத்தகம் அரம்பத்தில அமைதியா உருவாகியதே ,பல்கலைக்கழகத்தில் தன்னோடு  கொம்புடர் படித்த  நண்பர்களுடன் மார்க் சுகர்பெர்க் இலகுவா மாலையில் எங்கே சந்திப்பது , எந்த பப்பில தண்ணி அடிப்பது, எந்த பிகரோட கடலை போடுவது  போன்ற ஆரம்ப சோசியல் ஒன்று கூடலை அமைக்க, அவரோட படித்த   கொஞ்சம் நண்பர்களை இணைத்து  சத்தம் இல்லாமல் உருவாக்கியது இந்த பேஸ் புக் என்கிறார்கள்  ! 

                           மூஞ்சிப்  புத்தக ஆரம்ப வருடங்களில் , அமரிக்கா , ஐரோப்பா , மற்றைய முனேறிய நாடுகளில் ,நன்கு தெரிந்த  குடும்ப நண்பர்கள் , குடும்பப உறுப்பினர்கள்  , ஒரே விசியன்களில் இண்டேறேச்ட் உள்ள நண்பர்கள்தான் அதில் இணைந்து ஒருவித கட்டுக்கோப்பாபாடு  இருந்தது ! இன்று  அது உலகம் முழுவதும் அது  பரவி, ஏழை ,வறிய,வளர்முக நாடுகளிலயே அது  தவிர்க்க முடியாத அத்தியாவசிய தேவைபோல வீட்டு படுக்கை அறை வரையும்  பரவி  ,அப்புறம் இப்ப எப்படி அது இருக்கு எண்டு உங்களுக்கே தெரியும் !

                                          மூஞ்சிப் புத்தக  உலகத்தில ஒரு நாளைக்கு எவ்வளவு லைக்குகள், எவ்வளவு பாராட்டுக்கள், எவ்வளவு அவமதிப்புகள், எவ்வளவு எதிர்மறைக்  கமெண்ட்கள், எவ்வளவு கழுத்தறுப்புக்கள்,  எவ்வளவு வைரஸ்  ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்கள், எவ்வளவு சம்மந்தா சமந்தம் இல்லதா  tag தொந்தரவுகள், எவ்வளவு ஆன்லைன் சாட்டிங் சமாளிப்புகள், எவ்வளவு fake id குளறுபடிகள், எவ்வளவு வில்லுபாட்டு வைபவர்களின் இடியப்ப  சிக்கல்கள் ,  பதிவுகளில் வந்து கும்மியடிப்பவர்களைய சமாளிக்கும் குத்துக் கரனங்கள் , இதுக்கெல்லாம் எவ்வளவு பல்டி அடிக்கும் திறமை வேண்டும் எண்டு  இங்க குப்பை கொட்டுற உங்களுக்கு நல்லா  தெரியும்.

                                         இவளவு துன்பதிலயும்  பெண்களின் சேலைக்குள் ஒளிந்து நிண்டு கொண்டு ஆண்மைச் சவால் விடும் ஆர்வக் கோளாறுகள், ஆண் நடிகர்களின் படத்தில உலாவரும்  கடலை மன்னன்கள், அவர்கள் உண்மை எண்டு நம்பி சிக்னல் கொடுக்கும், இளம் சினிமா நடிகைகளின் ப்ரோபில் படத்தில உல்டா விடும் கிழவிகள்.  இந்த இம்சையை விட மகா இம்சை  மூஞ்சிப் புத்தக  உலகத்தில , கருத்தை வெளிபடையாக  சொல்ல முடியாது ! அப்படி இல்லை எண்டு   எல்லோருக்கும் நல்லவனா இருக்க வேண்டுமானால் ...சிவாஜி ,ரஜனி கமலை விட சிறப்பாக  ஜால்ரா போட்டு நடிக்கத் தெரிய வேண்டும்..! 

                                     மூஞ்சிப் புத்தகத்தில  நல்ல நல்ல , ரசிக்கும் எழுத்துநடையில் எழுதிய சிறுகதைகள் , சமூக விழிப்புணர்வு , பெண் அடிமை கொடுமைக்  கடுரைகள், மொழி பெயர்ப்பு கட்டுரைகள் , ஏகாதிபத்திய அரசியல் எதிர்வு வினைகள் ,  போன்ற  அறிவுபூர்வமான விசியங்களுக்கு  எல்லாம் யாருமே அசந்தும் லைக் போடாமல் , சும்மா தன்னும்  உற்சாகக் கொமண்ட் அள்ளி தெளிக்காமல் , பிச்சைக்காரன் வைச்சிருக்கும் சில்லறைப் பாத்திரம் போல அனாதையா ஒரு மூலையில கிடக்கும்!

                                                அதே நேரத்துல ஊருல இருக்குற எல்லா மொக்கை போஸ்டிங் , டபிள் மீனிங் ஜோக்ஸ், விளங்காத காலண்டர் தத்துவம் ,  டெலிவிஷனை வீட்டுக்  ஹோலில் எங்க  வைப்பது போன்ற   வாஸ்து சாத்திரம் , நாறிப்போன  பிரதேச மாகாண  அரசியல் , முதல்  வரிக்கும கடைசி வரிக்கும் சம்பந்தம் சம்பந்தமில்லாத " ஹைக்கு " காதல் கவிதைகள்,  நடிகைகளின் சேலை அவிழ்ந்து விழுந்த கிசு கிசு, சாதி மத அடிதடி ஸ்டேட்டஸ், " கொசுக் கடி மன்னன்களின் " மரண மொக்கை ஸ்டேட்டஸ் , 

                                              அழகான பெண்களின் சுய புராண ஸ்டேட்டஸ் ,  இந்தியாவில் இருப்பவர்  காலையில வந்து சொல்லும் குட் மோர்னிங் இக்கு, நியுசிலாந்தில் இருப்பவர் சொல்லும் குட் நைட்,( இருந்தாலும், நேரம் காலம் தெரியாத, அவர்களின் கடமை உணர்ச்சிய பாராட்டத்தான் வேண்டும் ),மற்றவர்களுக்கு விடுற தூசன எச்சரிக்கை ஸ்டேட்டஸ் எல்லாம் சூரன் போர் போல பட்டையை கிளப்பும் !

                                                      அண்மையில்  நண்பர் ஒருவர்  ஸ்டேடஸ் போடிருந்தார் , அதில  ஒரு முகம் தெரியாத ,ஒரு சினிமா இளம் நடிகையின் படம் போட்ட  அழகான  பொண்ணு , அக்கறையா உலகம் விடிய 'good morning'னு status போட்டிருக்கா . கடமை உணர்சியுள்ள  178 பேர் like போட்டுருக்கான்கலாம்! நன்றி மறவாத மன்னன்கள்   'same to u' னு 83 பேர் comment பண்ணி வழிஞ்சிருக்காங்களாம் .  அதுல ஒருத்தன், அந்த பொண்ணோட 'good morning' message ஐயே share பண்ணி  அவனோட சுவரில போட்டு இருக்கணாம் !! அததான்டா என்னால தாங்கவே முடியல. எதுக்குடா share பண்ண ? நீயே good morning  எண்டு நாலு வரி எழுதி இருக்கலாம் இல்லையா ?

                                       இந்த இம்சை தாங்காம  காலப்போக்குல நல்ல நல்ல ஸ்டேட்டஸ் போடுறவங்களும் கடைசியா வெறுத்துப்போய் , நொந்து சைனிஸ் நுடுல்ஸ் போல நூலாகி போய், " கம்மக்கோ சிக்காகோ ,, வந்தா வா போன்னாப் போ" எண்டு துணிந்து கவிதை எழுதி , சின்ன சின்ன போஸ்டிங் போடும் மொக்கை ரூட்டுக்கு போகவேண்டி வருகிறது , பாவம் .....!!! நானும் அப்படி  வெறுப்பில கதை ,கவிதைபோல எல்லாம்  கிறுக்க வெளிக்கிட்டவன் தான்!


                                ............என்ன சீவியமடா  இது.............


பலவருடமா எழுதுவதுக்கு விசைப்பலகை ஆக இருந்த என்னோட மடிக்கணணி சில நாட்கள் முன் கையைவிட்டுவிட்டது. அது ஒரு நல்ல நட்பான மடிக்கணணி நான் மணித்தியாலக்கணக்கில் கதைவிட்டு உடான்ஸ் கதைகள் எழுதும் போது மூச்சு வாங்க வாங்க வேலைசெய்யும். என் கதைகளை முதன் முதலில் அதுதான் வாசிக்கும். அதனாலோ தெரியவில்லை ஒருநாளும் முகத்தைச் சினுங்கியதில்லை

                                          சென்ற கிழமை சனிபெயர்ச்சி நடந்ததால் என்னிடமிருந்து அது தப்பிப்போக சான்ஸ் கிடைத்த அதுவா அல்லது வேற என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை. காலையில காயத்திரி மந்திரம் கேட்போம் எண்டு அதை வலது கையால ஓன் செய்து போட சட்டென்று இயங்க மறுத்து முறுக்கிக்கொண்டு அடம்பிடித்தது.

                                  ஒஸ்லோவில் இருக்கும் ஒரு சாமியார் நல்லா கன்னிகளை,,அடச் சீ..கணணிகளை நல்லா புரட்டி எடுத்து சப்பித் துப்பி திருத்துவார் என்று தெரியும்அவர் என் நண்பரும் தான். அதனாலஅட்வைஸ். கேட்டேன். டெக்னிகலா சில விசியம் சொன்னார் . கையோடு கொண்டுவந்தால் தட்டித் தடவிப்பார்த்து என்ன வியாதி எண்டு சொல்லுறேன் என்றார்

                                          என்னிடம் பக்அப் என்று சொல்லுவார்களே வெத்திலைப்பெட்டி கையைவிட்டா கொட்டாப் பெட்டிக்க கையை விடுற மாதிரி ஆத்திர அவசரத்துக்கு சப்போட் கொடுக்கும் என்று ஒருமணிக்கணணி பக்அப்பில் வைச்சு இருந்தேன். நண்பர்கள் போல உடுக்கை இழந்தவன்கைபோல அது இடுக்கண்களைக்கும் என்று வேற அதை நம்பிக்கொண்டு இருந்தேன்

                                          அந்த பக்அப் மடிக்கணணியை மடியில வாஞ்சையோடு தூக்கி வைச்சு ஆன் செய்து தொடக்க அது நண்பர்கள் போல பொறுத்த நேரம் மக்கர் பண்ணத் தொடங்கியது. கோவத்தில அதை தூக்கி பக்அப்பிலேயே போட்டுவிட்டு. அடைமழைக்கு குடை இல்லாதவனுக்கு ரெண்டு பொஞ்சாதி போல நிலைமை ரெண்டு மணிக்கணணி வைச்சு இருந்தும் வந்திட்டுதே என்று ஜோசிதேன்

                                    ஆனாலும் என் பிடிவாதமான நல்ல குணங்களில் ஒன்று இலற்றோனிக் உபகரணங்களைத்திருத்துவதில் எனக்கு அதிகம் உடன்பாடு இல்லாத பஞ்சாயத்து எப்பவும் நடக்கும். அதனால ஒரு புது மடிக்கணணி ஒரு வினோதமான உடன்படிக்கையில் வேண்டினேன். அதுக்கு அவசரமான அந்த நேரம் என் பிரியமான சஹி ஒருவர் ஹுண்டாய் கார்ல ஓடி வந்து கைகொடுத்தார்.

                                          பழையதை திருத்தி இருக்கலாம் தான். அந்த கொம்புடர்எஞ்சினியர் சாமியாரும் அப்படிதான் சொன்னார். ஆனால் சரியான நேரத்தில புத்தியைக் காட்டி கரணம் தப்பிக் கைவிடும் இலற்றோனிக் உபகரணங்களை வேலைமினக்கெட்டு திருத்துறதும் ஓடிப்போன பொஞ்சாதியை திருப்பிக் கூட்டிக்கொண்டுவந்து வைச்சுக் குடும்பம் நடத்துறதும் ஒன்றுதான் என்பதால் அதுகளை திருத்துறது காலவிரயம்
                              நேற்று அந்த கணணி சாமியாருக்கு புது மடிக்கணணி வேண்டிய விபரம் மயிலில் சொன்னேன்,,அவர்
                                " என்னையா செட்டியாருக்கு சந்தனம் கூடக்கிடந்த நேரம் அதைக் குண்டியில தடவின மாதிரி என்ன பசை அதிகமா இருக்கோ ,,நான் எவளவு பேருக்கு எவளவு செய்து இருக்றேன்,,இது செய்யிறது பெரிய வேலையா "

                                    என்று சொன்னார்..
                                          அவர் எவளவு பேருக்கு எவளவு செய்தார் போன்ற புள்ளிவிபரங்களில் ஆர்வம் இல்லாததாலும் ,சாமியார்மாருடன் தனகுறது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல என்பதாலும் அவர் ஒரு சாப்வார் எஞ்சினியரா வேற இருப்பது என்னோட இன்டர்நெட் எழுத்துலக சித்துவேலைகளுக்கு அவரின் டெக்னிகல் தேவை இருப்பதாலும் அப்படியே சாஸ்டாங்க நமஸ்காரமா காலில விழுந்திட்டேன்
                                     ஆனலும் நண்டுக்குக் கொழுப்பு வளைக்குள்ளே எடுத்த மாதிரி வாய்க்கொழுப்பில் // ஓடிப்போன பொஞ்சாதியை திருப்பிக் கூட்டிக்கொண்டுவந்து வைச்சுக் குடும்பம் நடத்துறது ///...உதாரணத்தை விளக்கி மயில் அனுப்பினேன். பிரைவட் பிரைவசி இல தானேபெண்டுகளைக் காமடி செய்கிறேன் என்ற துணிவில் அனுப்பினேன்
                                            அவர்ஒரு நல்ல எழுத்தாளர் அந்த மயில்உரையாடலை மயிலறகு போல மெல்ல உருவி எடுத்து அப்பிடியே நிலைத்தகவல் ஆக அவரோட சுவரில போட்ட்டு கொக்தத்தடியில கொழுவி இழுத்த மாதிரி என்னோட பெயரையும் டக்கி செய்து பப்ளிக்கில் என்னோட காமடி உணர்வை வெளிக்கொண்டு வந்துள்ளார்
                                           இப்ப இந்த அலட்டல்புராணத்தை புதிய மடிக்கணணியில் எழுதிக்கொண்டு இருக்கிறேன். சும்மா சொல்லக்கூடாது புத் மடிக்கணணி அமர்களாமா வேலை செய்யுது. என்ன சில ப்ரோகிராமை உள்ளே நுழைக்கவேண்டிய நேரங்களில் புதுப் பெண்டாட்டி போலவெட்கப்படுகுது. மற்றப்படி அதன் எல்லா அம்சங்களும் புதுப்பெண்டாட்டிபோலதான் ஜொலிக்கு .
                                          கண்ணை வெட்டி வெட்டி எல்லாவிதமானபுத்தம்புதிய கணணி அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியையும் அதன் முகம் முழுக்க பிரகாசமாக்கி திரையை வெள்ளித்திரை ரேஞ்சுக்கு உயர்த்துகிறது. சவுண்டு சும்மா லண்டன் றோயல் பில்ஹார்மோனிக்கா சிம்பொனி ஒர்கேச்டிரா வந்து காதுக்குள்ள இறங்கின மாதிரி இருக்கு, விசைப்பலகை விரலை வைக்கவே மடல்வாழை இதழில் கொங்குநாட்டு தேன் வழிந்த மாதிரி வழுக்கிஓடுது.
                                          ஆளில்லா ஆலமரத்தில் ஆட்டுவிக்க யாருமின்றி அதுவாய் அசைந்தாடும் ஊஞ்சலின் சுகமாய் இப்பவே இணையவலையில் அது போடும் ஆட்டத்தைப் பார்க்க முதலிரவு இல்லாத ஒரு குறைதான் மற்றப்படி கல்யாணக்களைத்தான் போங்கோ..இதுக்கு மேலே சொல்ல எனக்கே வெட்கம் வெட்கமா வருகுது

                     .......................என்ன சீவியமடா இது.....................

ஒரு நாட்டைப் பற்றி புத்தகத்தில் படிப்பது என்பது வேற அந்த நாட்டை சுற்றிப் பார்ப்பது என்பது வேறு,இரண்டும் வேறு வேறு அனுபவங்கள். முக்கியமா ஒரு நேரடிப் பயணத்தில் ரியலிடியில் பார்க்கும் அனுபவம் அலாதியானது,அதை விட ஒவ்வொரு நகரத்திற்கும் பிரத்தியேக வாசம் இருக்கு அதை சுவாசிக்க முடியும், கலாசாரம் வழியும் பழைய இடங்களில் ஒரு வித பூமி சக்தியை உணர முடியும் ,
                                               இப்படி என்னைப்போல உலகம் சுற்றும் தனிப்பிரகிரதிகளின் அனுபவம் அலாதியாக இருந்தாலும் . பலருக்குப் பிரச்சினையே ஒரு நாட்டை எப்படி சுற்றிப் பார்ப்பது என்பதுதான், தனியாக வாழ்பவர்கள், என்னைப்போல தோளில ஒரு ட்ரவல் பையைக் கொழுவிக்கொண்டு,கையில லோன்லி பிளானெட் ட்ரவல் கைடு புத்தகத்தை வைசுக்கொண்டு கிறிஸ்தோபர் கொலம்பஸ் போல வெளிகிடலாம்,
                                                  பயணக் கட்டுரை ஒரு தனி மனிதனின் தனி அனுபவம்,அதை வைத்து ஒரு நாட்டை ஓட்டு மொத்தமா எடை போட முடியாது என்ற போதும் சில வருடங்கள் முன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோன,மட்ரிட்,சென் செபஸ்தியான் நகரங்களை ஒரு கிழமை கிடந்தது சுற்றினேன்,அங்கிருந்தே அந்த நகரங்களைப் பற்றி இங்கே சுட சுட ,சில நேரம் சூடு ஆறமுதல் எழுதினேன். அதை அண்மையில் நானே படித்த போது மறுபடியும் அங்கே நிற்பது போல இருந்தது,
                                          சில இடங்களின் வாசமும்,சில பெண்களின் வாசமும் நினைவு வர, பார்சிலோன நகர தெருவோர ரூம்பா காதலான இசை காதுக்க கிடுகிடுத்தது. பிரயாண அனுபவங்கள் எப்பவுமே அப்படித்தான், நினைவுகளின் இடப்பெயர்வு தான் பயணம், மறந்து போன ஒரு வாழ்வின் தொடர்ச்சி பயணங்களில் நிறைவு பெறலாம் போல இருக்கு,
                                                  ஆனாலும் எல்லாருக்கும் இப்படி உலகம் சுற்றிப் பார்க்க வாய்ப்பு, வசதி இல்லை என்பதை நினைக்கும் போது கவலையாவும் இருக்கு . சிலருக்கு இருக்கு அவர்களும் வீட்டை விட்டுக் காலடி எடுத்துவைத்து தீர்த்தயாத்திரைகள் தொடக்குவதில் பல குழப்பங்கள் எப்போதும் இருக்கு.
                                       குடும்பமா குழந்தை குட்டிகளுடன் போறவர்கள் அதிகம் வெளிய கவனிக்க நேரம் கிடைப்பதில்லை. பிரான்சில் வசிக்கும்,யாழ்பாணம் கம்பசிஸ் ஜோக்கிரபி படித்த ஒரு என்னுடைய உறவினப் பெண் ஒருவர் அண்மையில் கனடா போய் வந்தா எண்டு சொன்னா,
                                       " வட அமரிக்கா ஐரோப்பாவைவிடவும் நிலவியல் அமைப்பில் வேறுபட்டது , நீங்க கனடாவில் என்ன எல்லாம் பார்த்திங்க " எண்டு கேட்டேன்,
                                   " சும்மா பார்த்தேன்,பிள்ளைகளை ஒண்டையும் பார்க்க விடவில்லை , சின்னதுகள் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு இருந்ததுகள் , எண்ட மனுஷனுக்கு காலால் நடக்கப் பஞ்சி. அவருக்கு காலுக்க அக்சிலேட்டரை மிதிச்சு மிதிசுக் கார் ஓடி ,,நடக்க கால் சுளுக்குதாம் என்றார் " எண்டு சொன்னா,
                                   நான் " றோண்டோவின் லேன்ட் மார்க் ஆனா C N N கோபுரம் பார்த்திங்களா, அது எல்லாரும் விரும்பிப் பார்ப்பாங்களே " எண்டு கேட்டேன்,
                                அவா " அவடத்தை போனோம் ,நிமிர்ந்து பார்க்க சரியா நேரம் கெடைகேல்லேயே " எண்டு சொன்னா,
                                       நயாகரா வீழ்ச்சி பார்த்திங்களா எண்டு கேட்க வாய் எடுத்து, நயாகரா போய்க் குனிச்சு பார்க்க நேரம் கிடைக்கவில்லை எண்டு சொல்லுவாவோ எண்டு பயத்தில நான் கேட்கலை.
                                                      அந்த உரையாடலின் முடிவில் அவா போன எங்களின் உறவினர் வீடுகளில் என்ன மாதிரியான மொடேர்ன் கார் வைதிருக்கிரார்கள், என்ன அளவு பிளாஸ்மா ஸ்மார்ட் டெலிவிசன் ,எவளவு பெரிய வீடு, அதில உள்ள அறைகள் எண்ணிக்கை, எந்தப் பிள்ளை மெடிசின் படிக்குது, எந்தப் பிள்ளை எஞ்சினியரிங் படிக்குது போன்ற தமிழ் கலாசாரா அடையாளமான விடுப்பு விண்ணாணம் அறிவதில் ஒரு குறை வைக்காமல் விபரம் சொன்னா.
                                         இதில ஆகப் பெரிய காமடி ஐரோப்பாவில் வசிக்கும் பல தமிழருக்கு ஐரோப்பிய நாடுகளே உலகப் படத்தில எங்கே இருக்கு எண்டு தெரியாது,இங்கிலாந்தில் இருந்து கொண்டு கடவுளின் கனவு  என்ற  ஒரு வெப் ப்ளாக் வைச்சு எழுதும்  வேதா  என்ற  ஒரு பள்ளிக்கால தோழன்,சில வருடம் முன் நான் சுவிடனில் வசித்ததாக் கேள்விப்பட்டு,
                                     " நீ வசிக்கும் சுவிஸ் பேங்க் உள்ள சுவீடனும், நோபல் பரிசு கொடுக்கும் சுவிச்லாந்தும் வேற வேற நாடுகள் எண்டு அண்மையில்தான் தெரியும் "
                                   எண்டு சொன்னான், நான் பதில் ஒண்டும் சொல்லி அவன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பவில்லை, பரிசில் வசிக்கும் என்ஒ ன்றுவிட்ட சகோதரிக்கு பிரான்ஸ் தெற்கு ஐரோப்பாவில் எங்கே இருக்கு எண்டு தெரியாத அப்பிராணி . பிரான்சை சுற்றி உள்ள நாடுகளின் பெயரே தெரியாது,
                                   ஆனலும் பல ஐரோப்பிய நாடுகளுக்கு அவர்கள் காரில GPS நேவிகேசன் பொருத்தி ஓடி ,சாமத்திய வீடு,கலியாண வீட்டுக்கு அடிக்கடி போவார்கள், சாமத்திய வீடு,கலியான வீடுகளில் பார்த்த விசியங்கள்,நிறை,குறை.பெறுமதி,மினுக்கம்,விசியங்கள் நல்ல தெளிவா தெரியும்.
                                             சுவீடனில் என்னோட நண்பர் தலையிடி எண்டு ஒருவர் இருந்தார் ,அவருக்கு மப்பில் கண்டு பிடிக்க கடினமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளின்,தலை நகரம், அந்த நாடுகளின் அருகில் உள்ள நாடுகள் , எல்லைகள், ஏற் போர்ட் பெயர், அங்கே பேசப்படும் மொழி, பாவனையில் உள்ள காசின் பெயர் எல்லாம் தலைகாரணமா தெரியும்,அதுக்காக அவர் யுனிவெர்சிட்டி இல ஜோக்கிரபியில மாஸ்டர் டிகிரி முடித்தவர் எண்டு நீங்க நண்பினா நான் பொறுப்பில்லை,அவர் என்ன செய்திருப்பார் எண்டு பலருக்கு தெரியும்.
                                    பத்திரிகைத் தொழில் ரீதியாக பிரயாணம் செய்து நாடுகளை சுற்றிப் பார்த்து எழுதுவதை " ரவல் ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள்,சிலர் படம் எடுத்து போட்டு கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள் அவர்களை " ரவல் போட்டோ ஜெர்னலிஸ்ட் " எண்டு சொல்லுறார்கள்,
                                           சாதாரண ஆர்வக்கோளாரில் வெளிக்கிடும் என்னைபோல ஊர் சுற்றிகளுக்கு முன்னப் பின்ன தெரியாத ஒரு நாட்டில், அந்த நாட்டின் உள்ளூர் மொழி புரியாமல் சுற்றிப் பார்ப்பது எப்பவுமே, முன்னப் பின்ன தெரியாத ஒரு இளம் பெண்ணை இரவின் அமைதியில் நேருக்கு நேர் பார்ப்பது கொடுக்கும் த்ரில் போல இருக்கும்,நல்லதும் கெட்டதுமா சில விசியங்கள் நடந்தாலும் அதுவும் அந்த பயணத்தின் மறக்க முடியாத ஒரு அங்கமாக வரலாம்.
                                       நான் ஸ்பெயின் போய் சுற்றிய போது அந்த நகரங்களின் படங்கள் உள்ள நிறைய பிக்சர் போஸ்ட் கார்ட் அந்த அந்த நகரங்களில் இருந்து வேண்டி,ஆங்கிலத்தில் கொஞ்சம் காமடியா எழுதி ஒரு மத்திய ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் என் ஒன்றுவிட்ட சகோதரியின் பிள்ளைகளுக்கு அனுப்பி இருந்தேன், குழந்தைகள் வேகமா,வேறு கோணத்தில் எல்லாத்தையும் கற்றுகொள்வார்கள் என்பதால் அப்படி செய்தேன்
                                      அதைப் பார்த்த அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியாது, ஒருவேளை பெரிய உலகம் சுற்றும் அறிவுக் கொழுந்து எண்டு அறிந்து இருப்பார்கள் எண்டு அதைப் பற்றி அறிய அவர்களிடம்
                                " அந்தப் படங்கள் எப்படி இருந்தது , ஏதாவது பிடித்து இருந்ததா, ஸ்பெயின்உ அழகான காலாச்சார நாடு ,,சரி உங்களின் அம்மா என்னைப்பற்றி என்ன சொன்ணா "
                                எண்டு ஒரு முறை கேட்டேன்,
                                          " அவர்கள் படங்கள் சூப்பர் அங்கிள் , உங்களைப் பற்றி கேட்க அம்மா சொன்னா சும்மா,வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுத்துரவன் அனுப்புற படங்களைப் பற்றி தெரிந்து என்ன வரப்போகுது எண்டு சொன்னா அங்கிள் "
                                     என்றார்கள் அந்தப் பிள்ளைகள். இது எல்லாம் கலி முத்திப்போன காலக் கொடுமை என்பதால் அதுக்குமேலே ஒன்றுமே கேட்கவில்லை.
                                      அதற்காக நான் யாரையும் குறைசொல்லவில்லை . வெயிலோடும் மழையோடும் மனம்போல நடந்து புதிய புதிய நாடுகளின் ஆத்மாவோடு பேசுவது எனக்குப் பிடித்திருக்கு . அதுவே எல்லாருக்கும் பிட்டிக்கவேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லைதான் .இதுதான் வாழ்க்கைப் பயணம்......

                     ...............என்ன சீவியமடா இது...........................

உங்களுக்கு எல்லாம் அறிமுகமான சஞ்சயன் செல்வமாணிக்கம் என்ற ஒரு சீரியஸ் ஆனா எழுத்தாளரும் ஒரு காமடிப் பீஸ் எழுத்தாளரும் நோர்வேயில் ஒஸ்லோ நகரத்தில் சந்தித்தால் என்ன கதைப்பார்கள் ? ஆனால் சந்தித்துக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் எழுத்து சம்பந்தமானது இல்லை. சஞ்சயன் அமர்க்களமான ஒரு எழுத்தாளர் என்பதை விடவும் ஒரு சிறந்த கணனி மென்பொறியியளாளர்.

                                                 நான்சொல்லும்படியாக சாதனை செய்ததெல்லாம் சமையலில். நானே அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன கழுதை மேய்ந்தாலென்ன போன்ற ஒரு சமையல்காரன். ஆட்டுக்கு வால் அளந்து வைத்திருப்பது போல என் கணணி அறிவு இருந்தாலும் இந்த இலற்றோனிக் வட்டங்களை விட்டு அப்பப்ப பலவிசியங்கள் பேசிக்கொண்டோம்,

                                                    உண்மையில் நான் அஞ்சாம் கிளாஸ் பையன் அன்ட்டாடிக்கா எப்படி இருக்கும் என்பது போல கொம்புயுடருக்கும் கோவேறுகழுதைக்கும் என்ன வித்தியாசம் என்பதுபோல நோண்டி நோண்டிக் கேள்வி கேட்டேன் பொறுமையாக பதில் சொன்னார். இடை இடையில் தாறுமாறா நான் எகிறினதும் உண்மைதான். அவர் என்னைக் குண்டியில் உதைத்துக் கலைக்காமல் விட்டதே பெரிய விசயம்தான்.

                                                         என் மடிக்கணணி " உனக்கும் எனக்கும் இனிப் பேச்சுவார்த்தை இல்லை " என்று நேற்று இரவு விவாகரத்து வரைக்கும் போவதுபோல மறுபடியும் கையை விட்டது. அதுக்கெல்லாம் நான் பயப்படுவேனா? ,சொல்லுங்க பார்ப்பம். அதுவும் பரசுராமர் போல என் அவலத்தில் பக்கம் நிக்க சஞ்சயன் போன்ற ஒரு கணனி மென்பொறியியளாளர். இருக்கும்போது. அதுதான் நடந்தது .

                                                  என்னோட மடிக்கணணியை அலவாங்கு பிக்கான் கோடாலி மண்வெட்டி எல்லாம் போட்டு பிளந்து எடுத்து இன்று ஒரு வழிக்குக் கொண்டு வந்தார் கணனி மென்பொறியியளாளர். சஞ்சயன். என்னைப்பொறுத்தவரை சஞ்சயன் பற்றி அவர் மென்மையான மொழியில் பொருளோடு பேசும் அவர் ஆளுமை பற்றி நிறைய விசியங்கள் எழுதலாம்,

                                       பொதுவாக ரெண்டு எழுத்தாளர் எடக்கு முடக்கா சந்தித்தாலே ஈகோ பேசவே விடாது. ஆனால் எனக்கும் கணனி மென்பொறியியளாளருக்கும் . அப்படியான ஒரு பஞ்சாயத்தே இல்லை. அது இயல்பாக ஒரு உரையாடலுக்கு நெருக்கமாக இருந்தது. என்னோட மின்னேறிஞ்சவெளி என்ற வலைப்பூங்காவை எலிப் புழுக்கை போல உருளாமல் உருண்டாலும் உருளு மூஞ்சூறுபோல என்று உட்சாகம் தந்து உருவாக்கித் தந்தவரே சஞ்சயன் தான்.

                                       பனைமரம் என்ற பல்மேரா இலங்கைத்தமிழ் உணவகத்தில்தான் சந்தித்தோம். வேறு பல தமிழரும் அந்த உணவகத்தில் சாபிட்டுக்கொண்டிருந்தார்கள். ரெண்டு உலகப்புகழ் பெற்ற உரலில் அகப்பட்டது உலக்கைக்கும் தப்புமா என்று நவீன இலக்கியம் எழுதிக் கொல்லும் இரண்டு எழுத்தாளர்கள் ஒரு மேசையில் இருப்பதைக் கொஞ்சம் தன்னும் கவனிக்காமலே மாசால் தோசையும் உழுந்துவடையும்தான் என்னவோ படைப்பாளிகளின் உலகம் என்று அவர்கள் அதை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார்கள்.
                                              ஒரு விசியம் மட்டும் சொல்லுறேன் , அதுவும் அதை ஆங்கிலத்தில் சொன்னால் தான் அதுக்கு வயக்கிரா குளிசை போல வீரியம் கிடைக்கும் என்பதால் சொல்கிறேன்.கணனி மென்பொறியியளாளர் சஞ்சயன் " ஹி இஸ் எ ஜென்டில்மேன். .நான் ஒரு " டமால் டுமில் டோல்கி டப்பா உடான்ஸ் " அதுதான் உண்மை. நம்பினால் நம்புங்க நம்பாட்டிப் போங்க

                          ...............என்ன சீவியமடா இது ................
நட்புநாள் வாழ்த்துக்கள் எல்லா நண்பர்கள் நண்பிகளுக்கும். முகநூல் மூலமாக உலகம் எங்கும் பறந்து பரந்து சிதறிவாழும் பள்ளிக்கால இளமைக்கால இடைப்பட்டகால நண்பர்களை என் முத்திப்போன போண்டா மூஞ்சியை எத்தைனையோ வருடங்களின் பின் அடையாளம் கண்டு பலவிதமாக தொடர்புக்கொள்ளமுடிந்ததும் உண்மைதான்
                                    குத்துக்கல்லாட்டம் இருந்து கொண்டு அங்கெ இங்கே அசைந்து நடமாடி நிஜமான நட்புகளை சந்திக்கும் உதேசங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாத எனக்கு முகம் அறியாமல் செட்டியார் வீட்டுக்கலியாணம் போல ஒரு படையாகக் கிளம்பிவந்து புதிதாக வந்து இணைந்துகொண்ட நண்பர்கள் நண்பிகள் எப்போதும் என்னோட அபிமான வாசகர்களாக அமையப்பெற்றது ஒரு வரப்பிரசாதம்.
                                   இப்படி இணைந்தவர்கள் பலர் உள்வீட்டுப் பிள்ளைகள் போல என் அறுவைகளையும் அலட்டல்களையும் தாங்கிக்கொண்டு அன்னியோன்னியமாகப் பழகி என் இருத்தலின் முக்கிய அடையாளமாக மாறிய அதிசயம் இந்த முகநூல் என்ற ஒன்று வந்தே இருக்காட்டி சாத்தியமேயில்லை என்று தோன்றுகிறது.
                               என் எழுத்துகளை உட்சாகப்படுத்தும் பல படைப்பு இலக்கியதில் சாதனைகள் செய்த நல்ல இதயங்கள் என் நட்பில் இருப்பது ஒரு அதிரினலின் கிக் கொடுக்கும் நிகழ்வு. அது எப்போதும் என்னை ஏதாவது எழுதவைக்கும் ஒரு அலாதியான பொழுதுகளை காலமில்லா நேரத்திலும் உருவாக்கிவிடுகிறது
                                      என்னைத் கைதூக்கி விட்டு. எழுந்து ஓட வாய்ப்புக்கள் தந்த நண்பர்கள் பலருக்கு நான் பிரதியுபகாரமாய் ஏதும் செய்ததில்லை. அவர்களுக்கும் இந்த இனிய நாளில் நன்றி சொல்லிக்கொள்வதில் மனதளவில் மனசாட்சி ஒருவிதமாகத் திருப்திகரமான நிலைக்கு வந்துவிடுகிறது
                                        மிகவும் அந்நியமான கடல் கடந்த ஒரு கலாச்சாரத்தில் இரவல்மொழி பேசி குப்பைக்கொட்டிக்கொண்டு இருந்தாலும் தமிழ் மொழியான என் தாய்மொழியின் முதுகை வளைத்து நாரியை முறிச்சு வலி கொடுக்காமல் இயல்பாக எழுத முடிந்ததே என்னோட மிகப்பெரிய பலமாகி இவளவு நட்புக்களை தலைவாழை இலைபோட்ட விருந்துக்கு அழைத்து வந்திருக்கு என்று நினைக்கிறேன்
                                         இதை எல்லாம் ஒரு பெரிய அளவிலான வரமாக நினைக்கும்போது எதெல்லாம் நடக்கவேண்டும் என்று விதி எழுதி வைத்ததோ அதெல்லாம் சரியான நேரத்தில் நடந்தேதீரும் என்பதில் நிறைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சந்தோஷ அலைகளைக் அள்ளிக்கொண்டு ஒரு சுனாமிபோல வருகிறது.

                                 ..............என்ன சீவியமடா இது ..............

இன்னும் ஒழுங்கா நாரியைச் சூடாக்கும் வெப்பம் உள்ள கோடை வரவில்லை, அதுக்கு முதலே என்னோட குடிகாரக் குப்புசாமி நண்பர்கள் கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டார்கள். சுவாரசியமான, பரந்த மனது அன்பான, ஆத்திர அவரசரத்துக்கு அஞ்சைப் பத்தைப் பிரட்டிக் கடன் வேண்ட, நாட்டு நடப்புக் கதைக்க மனிதர்கள் நம்மைச்சுற்றி இருப்பது எப்புவுமே அலாதியான தருணங்கள்.

                                        நோர்வே மக்களை நண்பர்களாவைத்து இருந்தால் எப்பவுமே சோலி சுரட்டு இல்லை. கமக்கட்டில கையை வைச்சுக் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைக்காமல் இயல்பாகவே பயங்கரமான பகிடிகள் சொல்லுவார்கள் . அவர்களுடன் உரையாடும்போது எப்பவுமே நிறைய உலகத்த்தரமான விசியங்களை அறியமுடியும்.

                                                  முக்கியமாக நான் பெரிசு என் மண்டை பெரிசு என் அறிவு பெரிசு என்அனுபவம் பெரிசு என்ற அல்டர்ஈகோ எல்லாம்அவர்களிடம் இல்லை. மிக மிக அடக்கமாகப் பேசும்போதே ஒரு பெரிய உலகத்தைத் திறந்து விடுவார்கள். அதில் நமக்கு வேண்டிய எல்லாம் இருக்கும். நான் எவளவு பெரிய முட்டாள் என்று அப்போது உணருவேன்.

                                       நான் ஒரு டமால் டுமில் என்று கொக்கு தலையில வெண்ணையை வைச்சு உல்டா விடுற கதாசிரியர் என்று அவர்களுக்குத் தெரியவே தெரியாது .அதைச் சொன்னால் நம்பப்போறதுமில்லை. எனக்கு கதைவிட என்னவெல்லாம் தேவையோ அதை சத்தமில்லாமல் உருவி எடுப்பேன். அதுக்கு வெய்யில் வெங்காயம் விக்கும் கோடை காலத்தை நல்லாப் பயன்படுத்துவேன்.

                                                நோர்வே நண்பர்களோடு நட்பாக இருப்பதில் உள்ள முக்கிய நன்மை அவர்கள் ஒருநாளும் என் தனிப்பட்ட வாழ்கையில் மூக்கை நுழைச்சு எனக்கு மனைவி, காதலி, சின்ன வீடுகள், குழந்தைகள்,உருப்படியான வேலை ,பெறுமதியான கார் இருக்கா என்று சிம்மக் கல்லில அருவாள் வைச்சுத் தீட்டி வெட்டுற கேள்விகள் கேட்பதேயில்லை

                                                  இதில அமரிக்க ஆதிவாசி இந்தியர் ஸ்டைலில் இருக்கும்அண்ட்ரிஸ் நோர்வேநாட்டு கொமோண்டோ இராணுவத்தில் பணியாற்றியவர். மற்ற நண்பர் ரோவர் ஒரு ஓய்வுபெற்ற மனநலகாப்பகத்தில் வேலை செய்த நேர்ஸ். இப்படி ஒரு பட்டாளமே என்னைச் சுற்றி இருக்க என்னக்கென்ன கவலை. எனக்கென்ன குறைச்சல். சொல்லுங்க பார்ப்பம். உலகம் என் கையில்.

                                           இது நிம்மி அலெச்சான்றா எடுத்த படம் அவளுக்கு மட்டுமே என் உலகத்தில் என்னை எங்கே ஓடவிட்டு ஒரு கணத்தில் நிக்க வைச்சு எப்படி படத்தில விழுத்த வேண்டும் என்று நல்லாவே தெரிந்த சின்னப் பெண். நிம்மி ஒரு இயற்கையுடன் மனித உணர்வுகளை சமாந்தரமாகப் பயணிக்கவைக்கும் போட்டோகிராபர் .


                                     ..................என்ன சீவியமடா இது ...................


முன்னமெல்லாம் கடன் வேண்டியவர்களிடம் இருந்துதான் எப்போதும் சுடுகுது மடியப்பிடி என்று காசுப் பிரசினைகள் வரும். இப்போது அதுகள் ஒரு இஸ்தாபனமயப்படுத்தப் பட்டது போல பல சமயங்ககளில் அரசாங்கத்தோடு சில்லெடுத்துகொண்டு மோத வேண்டி இருக்கு 


                                    அன்பின் மொழி பேசும் அமைதி நாடு நோர்வேயில் இனத்துவேசம் ,நிறத்துவேசம் மறைமுகமாக கச்சிதமாகத் திட்டமிட்டபடி இயங்கிக்கொண்டிருக்கு என்று என்னைப்போல வந்தேறுகுடி நண்பர்கள் வந்த கதை வந்து நொந்த கதை சொல்லுவார்கள் .

                                         நான் மிகவும் அதிகமாக வெள்ளைமக்களுடன் நெருக்கமாக ஐக்கியமான ஒரு சாதாரண பொதுஜனன் . அதை அதிகம் நம்புவதில்லை .பல நடைமுறை பக்கச்சார்பு காரணங்களுக்காக அதை ஒருவித முயலாமை அற்ற இயலாமை என்று நினைப்பது

                                          பேயே நடுச் சாமாத்தில ஜமுக்காளதைப் இழுத்து மூடிக்கொண்டு உலாவின மாதிரி அது எனக்கும் கம்பியை பழுக்கக் காச்சி செருகி விளையாட்டுப் பார்க்குது. தலை இடியும் காச்சலும் அதுவும் தனக்குத் தனக்கு அதுவும் தண்ணி அடிச்சாத்தான் வருமென்று நினைத்துக்கொண்டு இருந்தேன் .இப்பதான் வலி தெரிகிறது .

                                         குற்றவாளிகளை அரசாங்கமே ஒருவிதத்தில் உருவாக்குது என்பது கொஞ்சம் நம்பமுடியாத உண்மை. ஆனால் இன்றைய நடப்பு நிலவரத்தில் டிபிலோமாடிக் திருடர்களே அரச நிறுவனங்களில் வெள்ளையும் சொள்ளையுமா இருந்துகொண்டு டெக்னிகலா திருடுகிறார்கள் .


                                    இதெல்லாம் மூன்றாம் உலக ஏழைநாடுகளில் வழமை என்று இருந்தது இப்ப அதுவே முன்னேறிய நாடுகளுக்கும் முன்னேறி வந்திட்டுது. உலக மயமாக்கல் போன்ற காரணிகள் அவர்கள் வயிற்றில் அடிச்சாலும் என்னைப்போன்ற அன்றாடம் காச்சிகளும் அதில் ஒருவிதத்தில் பாதிக்கபடுகிறார்கள் .

                                        இதுல உள்ள இன்றைய காலக்கொடுமை இந்த இன்டர்நெட். எல்லா அலுவலகமும் இப்போது ஒஸ்லோவுக்கு வெளியே எங்கேயாவது ஒரு குக்கிராமத்தில் குந்திக்கொண்டு இருந்து. ஈ மயிலில் தொடர்பாடல் செய்கிறார்கள். ஒரு பிரசினை வந்து நாலு கேள்வி நாக்கைப் பிடுங்கிற மாதிரிக் கேட்கவேண்டுமென்றால் அந்த குக் கிராமத்துக்கு வழி தேடிக்கொண்டு போகவேண்டும்

                                                அதுக்கு ஒரு முழுநாளும்,ஏறி இறங்கப் போக்குவரத்துச் செலவும் வேண்டும்.அப்படி இல்லை என்று அவர்கள் கஸ்டமர் லைன்னைப் பிடிச்சு போன் செய்தால் " எதுவா இருந்தாலும் இன்டர்நெட் மயிலில் தொடர்பு கொள் " என்று தெனாவெட்டா வெட்டு ஒன்று துண்டு நாலு என்றது போல இரக்கமில்லாமல் சொல்லுறார்கள்.

                                             யாரோடு நோகேன்யார்க்கெடுத்து உரைப்பேன் என்று மாணிக்கவாசகர்  போல பொறுமையாகப் போக ஏனோ வைராக்கியம் விடுகுதில்லை நேராகவே போய் அடிச்சு உடைச்சுப்போட்டு கொஞ்சநாள் ஜெயிலில் நின்மதியாக இருக்கலாம் போல இருக்கு.இந்த மாதிரி நேரங்களில் நாலு நாட்டு வெடிகுண்டு செய்ய அட்வைஸ் கேட்க நண்பர்களும் இல்லை

 ...............அம்மாவானதான் சொல்லுறேன்.என்ன சீவியமடா இது...............