Tuesday, 5 January 2016

ஞானப்பிரகாசம் ஹோட்டல்

காலம் என்பது சில நேரம் விரும்பாத நேரத்தில் எதிரும் புதிருமாகக்  கோடுகள் போலக் கோலம் போட்டுவிடும். அதன் வடிவங்கள் மேலோட்டமாகப் பார்க்க அலங்கோலமாக இருக்கும். கொஞ்சம் உற்றுக் கவனித்துப் பார்த்தால் அதன் உள்ளே ஒரு வித அழகு மறைமுகமாக இருக்கும். கூடவே  தவிர்க்க முடியாத வேதனைகளும் வலிகளும் அதன் போக்கில் கடைநிலையில் வழிகளை அடைத்துக்கொண்டும் இருக்கும் .அதிலிருந்து சிலரே மீண்டு வருகிறார்கள்.

                                   எங்களின் ஊரில  எங்கள்  வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி, சந்தியில ஞானப்பிரகாசம் என்ற ஞானத்தோட தேத்தண்ணிக் கடை இருந்தது, அதுக்கு ஞானப்பிரகாசம் ஹோட்டல் எண்டு பெயர்ப் பலகை ஹில்டன் ஹோட்டல் ரேஞ்சுக்கு ,முன்னுக்கு இறக்கிய தாழ்வான பத்திக்கு மேல தொங்கினாலும், அது இருக்கிறது அதிகம் பேருக்கு தெரியாத மாதிரிதான் இருந்தது அந்த ஹோட்டல் , 

                            ஞானப்பிரகாசம் ஹோட்டல்க்கு ஒரு பக்கம் பழமுதிர்சோலை சில்லறைக் கடையும், இன்னொரு பக்கம் அன்னக்கிளி பாண் பேக்கரியும் இருந்தாலும், ஞானப்பிரகாசம் ஹோட்டலில் இருபத்துநாலு மணித்தியாலம் அலறும் ரேடியோவும், பின்னேரம் தொடங்க்கி நடு இரவுவரை ஹோட்டலின் முன்னால்  கொத்து ரொட்டிக்காரன் "  டக்காடா டக்கடா " எண்டு, தண்டவாள தகட்டில ரொட்டி போட்டு உலகம் அதிரக் கொத்துற சத்தமும் கட்டாயம் அதால போற வாற எல்லாரையும் திரும்பிபார்க்க வைக்கும், இரவின் அமைதியில் ரொட்டிக்காரன் கொத்துற சத்தம் எங்களின் வீட்டுக்கே கேட்கும் 
                                         
                              பிரகாசம் எண்டு எல்லாராலும் அழைக்கப்படும், ஞானப்பிரகாசம் மலையகத்தைச் சேர்ந்தவர், ஆனால் பனங்காய் சூப்பின மாதிரி யாழ்ப்பாணத் தமிழ் கதைப்பார் . அந்த நேரம்  நாற்ப்பது ஐஞ்சு சொச்சம் வயசில் இருந்தார். சுமாரான உயரம் உள்ளவர்.  ஆனால் பெருத்த உடல்வாகு அந்த வயதுக்கு அவருக்கு  இருந்த வண்டி பெரிதாக இருந்தது. சிங்களவர் போல சாரம் கட்டுவார்.  அவர் மனைவி சிங்களப் பெண், அவர்கள் எப்படி எங்களின் ஊருக்கு வந்து,ஹோட்டல் தொடக்கினார்கள் எண்டு அதிகம் வரலாறு யாருக்கும் தெரியாது.

                                     பெட்டிசம் பாலசிங்கம் மட்டும் ஞானப்பிரகாசம் ஏன் ஹட்டனில் இருந்து, சின்ன வயசிலேயே கொழும்புக்குபோய்  கொழும்பு ஹபர்ல வேலை செய்து, அங்கே வேலை செய்த நேரம்  சிங்களப் பெண்ணைக் காதலித்து, இலங்கையில் எல்லா இடமும், எல்லா இனமும் வாழக்கூடிய நேரத்தில, எங்கள் ஊருக்கு பெட்டி படுக்கையோட வந்து அந்த இடத்தை எடுத்து வருசக் கணக்கா ஹோட்டல் நடத்திக்கொண்டு இருக்கும் பின்னணி ஓரளவு தெரிந்தவர், 

                                           ஆனாலும் பெட்டிசம், அவர் சமூக அக்கறை சார்ந்து கொஞ்சம் எச்ற்றாவா, அந்தச் சிங்களப் பெண் இன்னொருவரின் மனைவி எண்டும் ,

                        " பிரகாசம் அவளை மருந்து போட்டு  மயக்கி உடுத்த சீலையோட அந்தப் பெடிச்சியை யாழ்பாணம் இழுத்துக் கொண்டு வந்திட்டான் "

                                      எண்டும் அவர் பாணியில் விபரம் சொல்லுவார். அது உண்மையா எண்டு ஊருக்குள்ள யாருக்கும் தெரியாது,  அதைவிட அது பெட்டிசம் பாலசிங்கதைத் தவிர வேறு யாருக்குமே தேவை இல்லாத ஒரு விசியமா இருந்தது.  ஞானப்பிரகாசம்  அவர் பொஞ்சாதியை " நோனா "  எண்டுதான் கூப்பிடுவார் சில நேரம் கோபம் வரும்போது " கழுதை " எண்டு கூப்பிடுவார், அவரோட வாழ்கையத் திரும்பிப் பார்க்கும் நேரம் எல்லாம் , ஆட்களுக்கு முன்னாலேயே கோபமா 

                        "  கேத்தாரமா பஞ்சாலையில் வெசாக் பாக்கப்போன நேரம் இந்தக் கழுதையை மட்டும் சந்திக்காமல் இருந்து இருந்தால் இப்ப நான் இருக்க வேண்டிய இடமே வேற , இந்தக் கழுதை  கலியாணத்துக்குப் பிளான் போட்டு  குழிப் பனியாரத்தை  சீனிப் பாணியில தோச்ச மாதிரி போட்டுப் பினைஞ்சு  கதைச்சு மடைக்கிப் போட்டுதே நாட்டு வழப்பம் தெரிஞ்ச கழுதை  "  என்று திட்டுவார் ,

                                    அந்த நோனா, ஒரு நாளும்  ஞானப்பிரகாசத்தை  ஆட்களுக்கு முன்னால் மரியாதை குறைவா பேசமாட்டா, அதிகம் யாழ்ப்பாணத்  தமிழில் கதைக்கமாட்டா, ஒரு வித குழந்தைகளின்  மொழித் தமிழில் சிங்கள வார்த்தைகள் தவறி விழுவதை  விழுங்கி விழுங்கி  பகுபதம் பகாப்பதம் பிழையாக வசனம் வைச்சு, 

                                " உங்களுக்கு என்னோட வாழ விருப்பம் இல்லை என்றா, ஒரு போத்தல் பொலிடோல, அல்லது ஒரு முழம் தேடாவளயக் கயிறு வேண்டி தாங்கோ,,நான் யாருக்கும் உபத்திரவம் இல்லாமல் இந்த உலகத்தை விட்டே போறேன்,,இனி என்னால உங்களைக் கட்டி போட்டு  பிறகு பிக்குது பிடுங்குது எண்டு விட்டுப்போட்டு என்னோட அப்பா,அம்மா உள்ள சிங்கள நாட்டுக்கு போறதை விட இங்கேயே சாகலாம் " என்று சொல்லுவா  

                                   " ஓமடி ஓமடி ,,இனி என்னத்தைக் கதைச்சு என்ன வரப்போகுது, கொழும்புக்கு வேலைக்கு வராமல் உடப்புசல்லாவையில் இருந்து இருந்தா,,இப்ப எங்கயும் இரப்பர் தோட்டக் கானியோடு ஒருத்தியைக் கலியாணம் கட்டி,,காலையும் அந்திக்கும் கித்துள் கள்ளுக் குடிச்சுக்கொண்டு இருந்து இருப்பேன் " 

                                " பிறகேன் பன்சாலையில் வைச்சு கண்ணடிச்சுக் காதலிக்கிறேன் ,  சொந்தமா  இரப்பர் தோட்டம் இருக்கு எண்டு ,,அதில பால் வடியுது அது இது எண்டு பொய் சொல்லி என்னோட அப்பா அம்மா சகொதறன்களோடு சண்டை பிடிச்சு இங்க கொண்டு வந்திங்க "

                               " அதுதாண்டி  நான் செய்த மோட்டுப் பிழை ,,என்னோட தமிழ் சாதி சனத்துக்க ஒரு பொம்பிளை எடுத்து இருந்தா இப்படி எல்லாம் நடந்து இருக்குமே "

                             " அட,,அட,,அவளையும் என்னைப்போலதான் அடிச்சுப் பிழிஞ்சு தோச்சுக் காயப் போட்டு இருப்பிங்க,,போங்க நீங்க ,,என்னோட  இனி இந்தக்  கதை கதைக்க வேணாம் "

                              " பார்த்தியே உனக்கு வாய் கபரக்கொய்யாவுக்கு நீளுற மாதிரி நீண்டுகொண்டு வருகுதே ,,வாயைப்பொத்திக்கொண்டு போ,,எனக்கு விசர் வரப் பண்ணாதை ,,நான் பாணந்துறை ஓசிக் கொறியாவின்  சண்டியங்களுக்கே அழுத்மாவத்தை சந்தியில் வைச்சு சுருள் வாள் எடுத்துக்கொண்டு போய் வெளுத்தனான் , இண்டைக்கு வெள்ளிக்கிழமை அதால சொல்லுறேன்  என்  கையாலயே  அடிவேண்டிச் சாகாதை "

                                                    என்று திட்டுவார். ஞானப்பிரகாசம், உண்மையில அவளவு சண்டியனா என்று தெரியாது , கட்டின  மனுசியை வெருட்டுற ஆம்பிளைகள் எல்லாருமே இப்பிடி வாள் எடுத்து வீசி சண்டித்தனம் செய்த மாதிரி வாயால கதைப்பது வழமை . ஆனாலும் விதி என்பதுதே மைதானங்களை நாங்களாவே தேர்ந்தெடுக்க முடியாத , எழுதப்பட்ட  ஆட்ட விதிகள் இல்லாத விளையாட்டு. அது முடியும் போதுதான் வெற்றி தோல்வி என்பதே தெரியவரும் . உங்களுக்கும் எல்லாருக்கும் போல ஞானப்பிரகாசத்துக்கும் அதில விதி விலக்கு இல்லை .  

                                  குள்ளமான உருவம் உள்ள ஞானப்பிரகாசம்,  ஹில்டன் இண்டர்னசினல்  ஹோட்டல் முதலாளி போல எப்பவும் கசியரில் ஏறி இருந்து , உள்ளங்கை கை ரெண்டையும் ஒன்றோட ஒன்று தட்டிக்கொண்டு ஜோசிதுக் கொண்டு இருப்பார், அல்லது வெளிய கடைக்கு முன்னால ஒரு மர ஸ்டூல் போட்டு அதில காலுக்கு மேல காலைப் போட்டு,  அதை ஆட்டிக் கொண்டு, பிரிஸ்டல் சிகரட்  குடித்துக்கொண்டு இருப்பார்,ஞானப்பிரகாசம் பிரிஸ்டல் சிகரட் தவிர வேற எந்தவகை சிகரட்டும் குடிக்க மாட்டார், அவர் குடிக்கும் பிரிஸ்டல் சிகரட்டிலேயே அரைவாசிதான் பத்துவார்,,மிச்ச அரைவாசியை சுண்டி எறிவார்.

                                            சில நேரம் எங்கள் ஊரில இருந்த உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர் எப்பவும்  கனகலிங்கம் சுருடுப் பத்திக்கொண்டு  ஞானப்பிரகாசத் துக்கு முன்னாலா நிலத்தில குந்தி இருக்க , ஞானப்பிரகாசம் புகையை நல்லா உள்ளுக்க இழுத்து, ஊட்டிக் குளிர் போல  ஊதி வெளியவிட்டு கொண்டு " எப்படி பிசினஸ்ஐ டெவலப் ஆக்காலம் " எண்டு விளக்கமா  உள்ளூர் தத்துவமேதை சிங்கி மாஸ்டர்க்கு சொல்லிக்கொண்டு இருப்பார். 

                                       ஞானப்பிரகாசம்  ஒருநாளும் ஒரு வேலையும் ஹோட்டலில் செய்ததை நான் கண்டதே இல்லை ,ஒருவேளை அவர் " பிசினஸ்ஐ டெவலப் " ஆக்கிற சிந்தனையில் மூளை எந்த நேரமும் வேலை செய்துகொண்டு இருந்ததால் மற்ற வேலை செய்ய நேரம் இருக்காமல் இருந்து இருக்கலாம் எண்டு நினைக்கிறேன் . ஒருமுறை அவரோட நோனாவை 

                                 " ஏன் உங்க மாத்தையா இருந்த இடத்தில இருந்து வேலை எடுகிறார் ,உங்களுக்கு ஒரு உதவி செய்வதில்லை,,நேரம் காலம் இல்லாமல் நீங்க கிடந்தது நாலா முறியிரிங்க,பார்க்கவே ஒரு மாதிரி  இருக்கு ,  " 

                                           என்று கேட்டேன். அவா அதுக்கு 

                              "என்னை எப்படி நடத்தினாலும்  எண்ட மனுஷன் நல்லவர்  ,அவரை நான் கஷ்டப்படுத்தாமல் வைச்சு இருக்க வேணும் எண்டு விருப்பம் ,உண்மையில் அந்தாள் ஒரு  பாவம் ,,அயின்செக்க மினியா எண்டு சிங்களத்தில சொல்லுறது இப்பிடி ஆட்களைத்தான் "

                                          எண்டு சொன்னா. 

                                                தொண்ணுறுகளில் யாழ்பாணத்தில் சண்டை அமோகமா நடத்த நேரம் கரண்ட் இல்லாமல் பல வருஷம் யாழ்ப்பாணமே ஒளி இழந்த நேரம், அரிக்கன் லாம்பும், பெட்ரோல்மக்ஸ்உம் விழியாக, கார், லொறி பட்டறி இலயும் , ஜெனறேடரிலையும் மின்சாரம் இயங்கிய நேரம், ஞானப்பிரகாசம் கடையில, லொறி பட்டறியில் கரண்ட எடுத்து எந்த நேரமும் ரேடியோ பாடும் ,நாங்கள் விரும்பும் இளையராஜா இசை அமைத்த பாடல்கள் உள்ள  கெஸட் கொண்டுபோய் கொடுத்தா அதையும் போடுவார். 

                                         ஆனால் இரவு எப்படியும் லண்டன் பி பி சி தமிழோசை செய்தி போடுவார், அதைக் கேட்கவே நிறையப்பேர் அவர் கடைக்கு முன்னால வந்து நிற்பார்கள். அது முடிய எம் யி ஆர் , சிவாயி பழைய பாடல்கள்தான் இருட்டோடு இசைவாகிக் காற்றில் மிதந்து இரவின் மடியில்த் தாலாட்ட ,அந்தப் பாடல்களும் விட்டு விட்டு எங்களின் வீடுக்கு வரும்.  ஆனாலும் அபத்தமாக  சிலநேரம்

                       " நீர் மேகம் ஆனால் என்ன.... நான் தோகை ஆனா பின்னே....  " 

                        என்று பாடல் தொடங்க, கொத்து ரொட்டிக்காரன் டக்காடா டக்கடா எண்டு கொத்த தொடக்க, கொஞ்சநேரம் தகர சத்த தனி ஆவர்த்தனம் சத்தம் மட்டும் கேட்டு , அவன் கொத்துரத்தை நிற்பாட்ட ,

                              ."...மயில்த் தோகை எண்ணம் கண்டேன் மான் விழியே ....."  

                         எண்டு பாடலின் கடைசி வரிகள் தெளிவாக வந்து , அந்தப் பாடல் அடிவேண்டியே இறந்து போகும், அதுக்கு ஓசியில் பாட்டுக்கேக்கிற நாங்கள் ஒரு குறையும் சொல்ல முடியாது ,ஞானப்பிரகாசம் ஹோட்டலில் இருபத்து நாலு மணித்தியாலம் அலறும் ரேடியோ போடுறது பிஸ்னஸ் டெவெலப் பண்ண. எங்களுக்கு ஓசியில் மெல்லிசை மன்னரின் இன்னிசை மழை பொழிவதுக்கு இல்லையே ...சொல்லுங்க பார்ப்பம். 

                                                    ஞானப்பிரகாசம் ஹோட்டல் இயங்க முக்கிய காரணம் நிச்சயமா ஞானப்பிரகாசம் இல்லை.  அவரின் சிங்கள  மனுசிதான் அதை நாரி முறிய முறிய நடத்தினா, அவாதான் கண்ணுக்கு நெய் விட்டு , முன்னுக்கும் பின்னுக்கும் ,குசினிக்கும் டீ பட்டறைக்கும் ,கசியர் மேசைக்கும் நாள் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கும் அந்த மனுஷி  மிகவும் பிரயாசையானா பெண்மணி , 

                                            கொத்துக்காரனுக்கு அடுப்புக்கு விறகு குறையுது எண்டால் பின்னால அடி வளவில, அடுக்கி இருக்கிற பெரிய மரக்குத்தியை இழுத்துக் கொண்டு வந்து, கோடாலியால பளார் பாளர் எண்டு பாலைக் குத்தியப் பிளப்பா, பிளந்திட்டு ஓடி வந்து டீ அடிப்பா, கொதிதண்ணி அடுப்புக்கு கரி அள்ளிப் போட்டுடு , கையை துடைச்சுப்போட்டு கொதிக்கிற எண்ணையில் வாய்ப்பன் போடுவா, கையை துடைச்சும் துடைக்காமலும் ஓடி வந்து கசியரில் காசு எடுப்பா,ஒரு கையால சடக்கு சடக்கு எண்டு மரக்கறி வெட்டி கொண்டு மற்றக் கையால கறிக்கு உப்பு புளி பார்ப்பா ,சடார் புடார் எண்டு சாம்பாரு வைப்பா,வடைக்கு ஓட்டை போடுற நேரமே , உரலில சம்பல் இடிப்பா, பெட்ரோல் மக்ஸுக்கு காத்து அடிப்பா, அடிச்சுப்போட்டு, டக்கெண்டு சாப்பாடு மேசை எல்லாம் துடைப்பா, வெறியில  வந்து வம்புக்கு   " பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்.. ....  ..  " எண்டு பாடிக்கொண்டு  வந்து அட்டகாசம் செய்கிரவங்களை பிடிச்சு தள்ளிக்கொண்டு வந்து வெளிய போடுவா,

                                              இதெல்லாம் இயல்பா நடக்கிற நேரத்தில்  ஞானப்பிரகாசம், கடைக்கு முன்னால மர ஸ்டூல்ல காலுக்கு மேல காலைப் போட்டு,அதை ஆட்டிக் கொண்டு,பிரிஸ்டல் சிகரட் குடித்துக்கொண்டு ,புகையை நல்லா உள்ளுக்க இழுத்து, ஊதி வெளியவிட்டு எப்படி பிசினஸ்ஐ டெவலப் ஆக்காலம் எண்டு விபரமா ஜோசிதுக்கொண்டு இருப்பார். 

                                            அந்த ஹோட்டலில் அவர்களின் உறவுக்காரா சுரேஷ் எண்டு ஒரு பையன்தான் சப்பிளையரா வேலை செய்தான் ,அவன் யாரவது டீ ஓடர் பண்ணினா முன்னுக்கு நிண்டு

                      " மாமி ஒரு பிளேன் டீ "

                           எண்டு கத்துறது செம்மணி வயல் வெளிகளில் ஆட்காட்டிக் குருவி தாழப்பறந்து கிரீச் கிரீச் எண்டு காத்தில ஏறிக்  காது  கிழியக்  கத்துறது போலக்  கத்தி ஓடர் கொடுப்பது எங்களின் சந்தியில் இருந்த  சுப்பிரமணியம் கடைக்குக் கேட்கும், மாமி குசினில நிண்டு

                         " ஏண்டா சுரேஷ் சாகப்போற  மாதிரி கத்துறாய்,  மெதுவா சொல்லடா "

                              என்று கிணத்துக்க நின்று கத்துற மாதிரி  கத்துறதுசுப்பிரமணியம் கடையில் இருந்து ரெண்டு வீடு தள்ளி இருந்த எங்களின் வீட்டுக்கே கேட்கும், இருவரும் கதைச்சுப் பேசி அந்த அகோர சத்தத்தை ஒருநாளும் குறைத்தே இல்லை. 

                                            ஞானப்பிரகாசம் ஹோட்டல் வாய்பன் நல்ல ருசி , பிரகாசம் மனுஷி குசினியில வாய்ப்பன் போடுறது, கிரிகெட் பிளையர் ஸ்பின் போல் போடுறமாதிரி இருக்கும். கையில வாழைபழம் பிசைந்த புளிச்ச வெள்ளைமாவை கிள்ளி, உள்ளங்கையில அமத்தி , மோதகம் போல ஒரு சுழட்டு சுழட்ட , அது சுழன்டுபோய் எண்ணையில சுழண்டு விழந்து, அதிலயும் கொஞ்சம் கிடந்தது சுழண்டு , உருண்டையா பிரவுன் கலரில வாய்பன் வரும் ,

                                               நானும் ஒருநாள்,

                                 " மாமி , நானும் வாய்பன் போட்டுப பார்க்கவா "எண்டு கேட்டேன்,

                     " அதுக்கென்ன செய்து பாருமன் " எண்டு சிம்பிளா சொன்னா,

                          நானும் சிம்பிளா புளிச்ச வெள்ளைமாவை கிள்ளி ,உள்ளங்கையில அமத்த அது விரல் இடைவெளிக்கால பிதுங்கி வெளியவர, சுழட்டோ சுழட்டு எண்டு சுழட்டியும், கடைசியில கையை உதறியும் வாய்ப்பன் மா கையையே விட்டுக் களரவில்லை, அவா சிரிச்சுக்கொண்டே

                             " பெடியா உனக்கு வாழகையில சமையல் வேலை சரியே வராது " எண்டு சொன்னா , நான் அதை அப்ப பகிடியா நினைச்சன்,,அதுவே என் வாழ்கையில் இப்பவும் விளையாடும் விந்தைக்கு பெயர்தான் விதி..

                                             தொண்ணுற்றி ஐந்து சூரியகதிர் இராணுவ நடவடிக்கையில் யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த போது , நாங்களும் இடம்பெயர்ந்து வன்னிக்குப் போன போது,ஒருநாள் ஞானப்பிரகாசதை கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் உள்ள மதவடியில் கண்டேன், கவலையா கையைக் கட்டிக்கொண்டு பகலிலேயே நுளம்பு அடிசுக் கொண்டிருந்தார்.  அடுத்தது என்ன செய்யுறது எண்டு தெரியாத மாதிரி , நாடியைத் தடவிக்கொண்டு வாய்க்கால் தண்ணி ஓடுறதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்  

                                            " கிட்டப் போய், " என்ன முதலாளி என்ன நடக்குது , என்ன பிளான் ,ஹோட்டல் இங்கயும் திறக்கிற பிளான் ஒண்டும் இல்லையா " எண்டு கேட்டேன்,

                             " ஹ்ம்ம்,, இங்க பட்டப் பகலிலேயே நுளம்புக் கடி தாங்க முடியவில்லை ,,இங்க என்னத்தைப் பிடிச்சு என்னத்தை செய்யுறது "

                                     "  ஆனால்,நீங்க சும்மா இருக்க மாட்டிங்களே "

                                   " அது உண்மைதான்,,,சமையல் சட்டி பானை எல்லாத்தையும் விட்டுப்போட்டு வந்து நிக்குறன்,,இனி எல்லா அடுக்குகளும் புதுசா வேண்டி எல்லோ வேலை தொடங்க வேண்டும் "

                                    " ஹ்ம்ம் "

                                   " கதிரை,மேசை,சோக்கேஸ், தேத்தண்ணி பொயிலர் , கொத்து ரொட்டி போட கொத்து மேசை எல்லாத்துக்கும் ஒரு கணக்கு இப்ப போகப் போகுதே,,,கையில காசும் அந்தளவு  இல்லை  "

                                   "   ஹ்ம்ம் "

                            " எல்லாம் ,இந்த சிங்கள மனுசியைக் கட்டினதால  வந்தது,,இல்லாட்டி  கொழும்புக்கு வேலைக்கு வராமல் உடப்புசல்லாவையில் இருந்து இருந்தா,,இப்ப எங்கயும் இரப்பர் தோட்டக் கானியோடு ஒருத்தியைக் கலியாணம் கட்டி,,காலையும் அந்திக்கும் கித்துள் கள்ளுக் குடிச்சுக்கொண்டு இருந்து இருப்பேன் "

                                    " இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்,,இது இராணுவ நடவடிக்கையில் இடப்பெயர்வு,,எல்லாரும்  தானே இப்பிடி திக்கு திசை தெரியாமல் வன்னிக்குள்ள வந்து நிக்கிறம் "

                                 " அதுவும்,,சரிதான்,,, இப்படி நடக்கும் எண்டு முன்னமே தெரிஞ்சு இருந்தா ,,முருகண்டி,,முழங்காவில் பக்கம் ஒரு பிரான்ச் திறந்து இருக்கலாம்,,இப்ப எல்லாத்தையும் பறிகொடுதுப்போட்டு தேத்தண்ணி பொயிலர்   பத்த வைக்க நெருப்புக் கொள்ளியும் அடுத்த மனுசரிட்டக் கடன் வேண்ட வேண்டி இருக்கே "

                                " ஆனால்  உங்கட நோனா சும்மா இருக்க மாட்டவே "

                              " அவளோ,,இங்க நுளம்பு ஒரு பக்கக்  காதுக்க கிண் கின் கிண் கின் எண்டு புறுபுறுக்க நோனா மற்றக் காதுக்க கடை எடு கடை எடு புறுபுறுக்க எனக்கு இரணைமடுக்குளத்துக்க குதிச்சு சாகலாம் போல இருக்கு "

                                   "  ஒ அப்ப நோனா இங்கேயும்  அடியடா பிடியடா எண்டுதான் நிக்குறா போல ,,அவா நல்ல பிரயாசை ,,இங்கேயும் கடையை நடத்துவா போல இருக்கே "

                             " அதுக்குதான் வேலை நடக்குது ,  மனுஷி கிளிநொச்சி பழைய சந்தைக்குப் பின்னால ஒரு இடம் எடுத்து இருக்குறா , வேலை நான் பிளான்  போட்டுக் கொடுத்த  மாதிரி நடக்குது . 

                             " அப்ப நீங்கள் கிட்ட நிண்டு கைக்கு உதவியா நிக்கலாமே "

                             " அதுதான் பிளான் போட்டு நோனாவிட்ட கொடுத்திட்டனே "

                                    "  ஹ்ம்ம் " 

                                    " இடம்பெயர்ந்த சனம்களிட்ட ஹோட்டலில் போய்   காசு  கொடுத்து சாப்பிட வசதி இங்கே அதிகம் இல்லப்போல  நிலவரம்  கிடக்குது ,எண்டாலும் எனக்கு இப்ப ஹோட்டல் நடத்துறதை விட்டா வேற வேலை தெரியாதே , "

                                        " அதுவும் ஒரு பிரச்சினை தான் ,,நிவாரண அரிசியையே சனம்கள் செலவுக்கு காசு இல்லாமல் கடைக்கு அறவிலைக்கு  விக்குதுகள் "

                                       " இந்த நோனாக்  கழுதையைக் கலியாணம் கட்டி யாழ்பாணம் ஒளிஞ்சு ஓடி  வராமல் இருந்திருந்தா,இப்ப கொழும்பு ஹாபரில  அரசாங்க வேலையில  இருந்து பென்சனும் எடுத்து இருக்கலாம்,,,"

                                   " மறுபடியும் தொடங்கிட்டிங்களா ,,இதை நிற்பாட்டிப்போட்டு நடக்கிறதைப் பாருங்க "

                                      " அதுதான் இடையில  தாலி அறுந்து போச்சே ,,,சரி  வாவன் பொடியா உனக்கு இப்ப கட்டுற கடையக் காட்டுறன் "

                 என்று  விரக்தியா சொன்னார் , நானும் என்ன நடக்குது என்று பார்க்கப் போனேன், 

                                      கிளிநொச்சி பழைய   சந்தைக்குப் பின்னால, ரெயிலே தண்டவாளம் ஒரு காலத்தில் போட்டு இருந்த இடத்தைக் கிரவல் மண் போட்டு நிரவிய  காட்டு பகுதியில முதிரை மரத்துக்கு கீழ ஒரு கொட்டில் ஏறக்குறைய போட்டு முடிஞ்சு ,ஞானப்பிரகாசதிண்ட மனுஷி ஒரு மேசைக்கு மேல ஏறி நிண்டு, இடுப்பில பனை ஈக்கை செருகிக்கொண்டு, வாயிலயும் கொஞ்சம் பனை ஈக்கை கவ்விக்கொண்டு, மேசையில விழுகிற மாதிரி பலன்ஸ் பிடிச்சு நிண்டு தென்னம் கிடுகு ஓலை அடுக்கி அடுக்கி கூரைமேய சப்பிளையர் சுரேஷ் கீழ நிண்டு ஒவ்வொரு ஓலையா

                        " மாமி பிடிடியுங்கோ பிடியுங்கோ மேசை விழப்போகுது " எண்டு மெதுவா சொல்ல ,

                       மாமி " ஏண்டா சுரேஷ் அவசரப்படுதுறாய் " எண்டு மெதுவா, குரலே இல்லாத மாதிரி சொல்லிக்கொண்டு இருந்தா.அந்தக் கொட்டில் பார்க்க மாட்டுக்  கொட்டில் போல இருந்தது ,அதைத் தேத்தண்ணிக்  கடை போல ஆக்குவதுக்கு இன்னும் எவளவோ முதலீடுகள் செய்ய வேண்டும் போல இருந்தது . 

                                                     ஞானப்பிரகாசம் பக்கத்தில பாட்டில விழுத்திப் பிளந்து  இருந்த ஒரு தென்னங் குத்தியில குந்தி இருந்து ஒரு ஆர் வி ஜி பீடியைப் பத்த வைச்சுக் கொண்டு ஜோசித்தார். அவரிடம் இருந்த  முதலாளிக்கு உரிய களை இறங்கி இருந்தது. சேட் கொலரைக் காற்று உள்ளுக்கு இறங்கி விளையாடக்கூடிய மாதிரி நல்லா உயர்தி விட்டு  கட்டி இருந்த சாறத்தால முகத்தைச் துடைசார் .  நான் 

                                         " என்ன முதலாளி  பெரிசாக் கப்பல் கவுண்ட மாதிரி ஜோசிகுரீங்க ,பிறகென்ன கிட்டதட்ட கடை போல வந்திட்டுதே கொட்டில் " 

                                           எண்டு சிரிச்சுக்கொண்டு  கேட்டேன் ,

                              " இல்லை , சும்மா கடை போல வந்து பிரிஜோசனம் இல்லையே,,இதை ஞானப்பிரகாசம்  ஹோட்டல் போல ஆக்க வேணுமே , ஆக்கி  பிறகு இந்த யானைக்  காட்டுக்குள்ள எப்படி பிஸ்னஸ்ஐ டெவெலப் ஆக்கலாம் எண்டு ஜோசிகுரன் " 

                                         எண்டு சீரியஸ் ஆகப்  பதில்  சொன்னார் .
.
.

பஞ்சு அருணாசலம்.

செட்டிநாட்டில்,அதிகம் அறியப்படாத ஒரு கிராமத்தில் அரிசி மில் நடத்திக்கொண்டு இருந்த ,சினிமா, இசை ,பாடல்கள் இன் கவர்சியால் கவரப்பட்டு, சென்னை வந்து கவிஞ்சர் கண்ணதாசனுக்கு உதவியாளராய் இருந்து அவர் சொல்ல சொல்ல பதினைத்து வருடங்கள் பக்கத்தில் இருந்து பாடல்களை எழுதிக் கொடுத்து ,கண்ணதாசனுக்கு எடுபிடிபோல வெத்திலை பாக்கு மடித்துக் கொடுத்து , பாடல் எழுதும் வித்தையைக் கண்டு பிடித்து, ,தற்செயலாக " பொன் எழில் பூத்தது பூஞ்சோலை... " என்ற பாடலை மக்கள் திலகத்துக்கு எழுதி அன்று முதல் பாடலாசிரியர் ஆகி ,

                                                      கவிஞ்சர் வாலி மெல்லிசை மன்னர் சகாப்தம் முடிய பாடல்கள் எழுத வாய்ப்பு அற்று இருந்த நேரம் அவரை அழைத்துவந்து தன்னோட " வைதேகி காத்திருந்தாள் " படத்தில் " ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சம் காற்றாடி போலாடுது " என்று இளையராஜாவுக்கு எழுதவைத்து தமிழ்நாட்டை அந்தப் பாடல் பட்டி தொட்டி எல்லாம் கலக்கவைத்து ,சொந்தமாகவே அவரே நிறையப் பாடல்கள் எழுதிக்குவித்த,

                              கவிஞ்சர் கண்ணதாசனின் மூத்த சகோதரரின் மகன் பஞ்சு அருணாசலம்.
  அவர்தான் காமடி நடிகர் விவேக் என்ற விவேகானந்தனை, விவேக் செய்துகொண்டு இருந்த அரசாங்க வேலையை விட்டு விட்டு முழு நேர நடிகன் ஆகு என்று நம்பிக்கை கொடுத்த...

                               தமிழ் சினிமாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை எழுதி,பாடல்கள் எழுதி , யாருமே நம்பிக்கை அற்று இருந்த நேரம் இளையாராஜா என்ற இசை அமைப்பாளரை முதல் முதல் இனம் கண்டு " அன்னக்கிளியில் " அறிமுகம் செய்து கமலஹாசன் ,ரஜனிகாந்து கால் ஊன்ற கதைகள் எழுதி தானே அதை படமாகத் தயாரித்த பஞ்சு அருணாசலம் செட்டியார் ,,,

                                  திரைக்கதை எழுதுவது கடினம்,,கதை,கவிதை,நாவல் எழுதுவது போல அதை எழுத முடியாது,விஷுவலா வெள்ளித்திரையில் வருவது போல சம்பவங்கள் ,திருப்பங்களை வைச்சு பார்பவர்களை தியேட்டர் கதிரையை விட்டு எழும்பிப் போகாமல் எழுதவேண்டும். அவர் எழுதிய " மேலோன்சொளிக் ஸ்டைல் " திரைக்கதை " ஆறில் இருந்து அறுபது வரை,," அதேபோல " மெலோராமிக் ஸ்டைலில் " எழுதிய திரைக்கதை " கல்யாணராமன்" ,இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள். இந்த இரண்டு படமும் ஒரு கிழமையில் ஒரே நேரத்தில் திரைகதை எழுதப்பட்டு,ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டது என்று சொல்லுறார்கள் .பஞ்சு அருணாசலம் அங்கேயும் இங்கேயும் நடந்து நடந்து கொண்டுதான் திரைக்கதை எழுதுவாராம்

                                     அன்னக்கிளி பாடல்களை இளையராஜா எந்தவித வாய்தியமும் இல்லாமல் மேசையில் தட்டி கிராமத்தில் நெல்லு அறுக்கப் போகும் பெண்களின் தெற்கில் இருந்து வந்த நாடோடித் தென்றல் நின்று நிதானமா அள்ளிக்கொடுத்த " அன்னைக் கிளி உன்னை தேடுது ஆறு மாதம் ஒருவருடம் ஆவாரம்பூ மேனி வாடுது..." என்று தான் போட்ட மெட்டுகளை அவரே பாடிக்காட்டி இருக்கிறார்.அந்தப் பாடல்கள் தந்த தொடக்கம் இன்றுவரை இளையராஜாவை தேட வைக்கும் வரலாற்று சம்பவத்தை தமிழ் சினிமாவின் இசை அத்திவாரக் கற்களின் ஆத்திசூடி ஆக்கிக் காடியவர் பஞ்சு அருணாசலம்.

                              அரிசி வியாபாரம் செய்துகொண்டு இருந்த இந்த சாதாரண மனிதர் மட்டும் இல்லை என்றால் இளையராஜா என்ற ஒரு இசை அமைப்பாளர் எங்களுக்கு கிடைக்காமலே போயும் இருக்கலாம். ஜோசித்துப் பார்த்தால் சாதாரண மனிதர்களின் அசாதாரண தன்நம்பிக்கையில் தான் வரலாறு பொன் எழுத்துகளைத் தேடி எடுத்து திசை திரும்புகிறது....


.

Sunday, 3 January 2016

வெல்வெட்டின்..

சைனிஸ் வெல்வெட்டிங் இது முக்கியமான ஒரு சைனிஸ் இறைச்சி வகையை வாய்க்குள் கடிபடாமல் சுவிங்கம் போல மென்மையாக ரசித்து உள் இறக்க வைக்கும் சமையல் டெக்னிக். கொஞ்சம் பொறுமையும் நேரமும் வேணும் இதை இப்படிப் பதப்படுத்தி எடுப்பதுக்கு. 

                                          நீங்கள் எல்லாருமே சைனிஸ் ரெஸ்டோரென்ட் போய் இருந்து, பல வகையான டெவில், சொப் சூயிய் ஓடர் கொடுத்து சாப்பிட்டு இருப்பிங்க. அந்த டெவில் இல் இருக்கும் இறைச்சி வகை மிக மிக மென்மையாக வெளித்தோற்றதில் வெளிச்சம் பட்டுத் தெறிக்க வெல்வெட் போல வழு வழுப்பாக இருக்குமே.உண்மையில் பலருக்கு அதன் மர்மமான பதம் தெரியாமல் அலாலதியாக சாப்பிட்டும் இருபிங்க.

                                               டெவில், சொப் சூயிய் என்ற இந்த ரெண்டுவகை உணவிலும் சேர்க்கப்படும் இறைச்சித் துண்டுகள் உண்மையான சைனிஸ் முறைப்படி வெல்ட்டிங் முறையில் பதப்படுதப்பட்டே பின்னர் டெவில், சொப் சூயிய் செய்யும் போது அதை அதில போட்டு செய்ய வேண்டும். அது தான் அங்கீகரிக்கப்பட்ட சைனிஸ் கலுனேறி சமையல் முறை

                                                 ஆனால் சைன்ஸ் அல்லாத பல ரெஸ்ரோறேன்ட்களிலும் இப்பெல்லாம் இந்த டெவில், சொப் சூயிய் செய்கிறார்கள். முக்கியமாக இலங்கையில் நீங்க பல சிங்கள ரெஸ்ட்ரோறேன்ட்களில் டெவில், சொப் சூயிய் சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு தெரிந்தவரை அங்கே அவர்கள் வெல்வெட்டிங் டெக்னிக் பாவிப்பதில்லை. கொதி நிலை எண்ணையில் இறைசியப் பொரித்து எடுத்து செய்கிறார்கள்

                                         இந்த சைனிஸ் வெல்வெட்டிங் அதுதான் சைனிஸ் சாப்பாடுகளைப் பதப்படுத்தப்படுதுவதில் ஒருவித சிதம்பர இரகசியம் போல பல நூற்றாண்டுகளாய் இருந்தது. இப்ப அப்படி நிலைமை இல்லை. என்னைப்போல சமையல் தொழிலில் வேறு வழியில்லாமல் சைனிஸ் குக்மாருடன் வேலை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்த பலர் அந்த இரகசியத்தை உடைத்து வெளியே கொண்டுவந்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த ரெண்டு முறையில் இலகுவான ஒரு முறையை உங்களுக்கு சொல்லித்தாறேன்.

                                              தேவையானவை முட்டை வெள்ளைக்கரு, முக்கியம் மஞ்சள்கரு சேர்பதில்லை. கோரன்பிளவர்என்ற சோளம் மா, சைனிஸ் ரைஸ் வயின், கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சீனி ,சைனிஸ் டார்க் சோயா சோஸ். இறைச்சியைக் கழுவி சிறிய குயுபிக் துண்டுகளாக வெட்டி அதற்குள் மேலே சொன்னவற்றைப் பிரட்டி எடுத்து ஒரு இரவு மெல்லிய பொலித்தீன் கொண்டு மூடி அதன்ஈரலிப்புத் தன்மையை வெளியேற்றாமல் குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள்.

                                                 இதில ஒரு முட்டையை கையில் வைத்தே உடைத்து அதில உள்ள மஞ்சள் கருவை இரண்டு பாதியிலும் மெல்ல மெல்ல நயன்தாராவின் இடுப்புப் போல அசைத்து டெக்னிகலாக வெளியேற்றுவது ஒரு சமையல் டெக்னிக். அதை எழுத எனக்கு முடியவில்லை. செய்து தான் காட்டவேண்டும். நீங்கள் வீட்டில் ஒரு சின்னப் பாத்திரத்தில் ஒரு முட்டையைத் தட்டி உடைத்து ஊற்றி அதிலிருந்து மஞ்சள் கருவை வேறாக்கி கரண்டியால் எடுக்கலாம்.அது எவளவு தூரம் வொர்க்அவுட் ஆகும் என்றும் எனக்குத் தெரியலை

                                                   பின்னர் தண்ணியைக் கொதிநிலையில் கொதிக்க வைத்து அது ஆவி பறக்கக் கொதிக்கும் போது, வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு ஒன்றோடு ஒன்று ஓட்ட விடாமல் அரைவாசியில் அவித்து எடுங்கள். போடும் போது கவனம் கொதி தண்ணி தெறிக்கலாம்.பிறகு கையைக் காலைச் சுட்டுப் போட்டு என்னைத் திட்ட வேண்டாம்

                                                      அப்படி எடுத்த இறைச்சியை சைனிஸ் வூக் தாச்சியில் கொஞ்சம் எண்ணை விட்டு ,அதில் டெவில் செய்யும் போதோ,,அல்லது சோப் சூய் செய்யும் போது ஒயிஸ்டர் சோஸ் கொஞ்சம் சேருங்கள் ,போடவேண்டிய வூக் மரக்கறிகள் அரைப்பதத்தில் வேகும் போது வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியை அதில போட்டு கிளறிக்கொண்டே இருங்கள். இறக்கும்போது கொஞ்சம் செசமி ஒயில் சேர்த்து விடுங்கள்.

                                                         வெல்வெட்டின் முறையில் மரினேட் செய்த இறைச்சியின் மெதுவான, வழுவழுப்பான சுவையை சைன்ஸ் நூடில்ஸ் செய்யும் போதும் சேர்க்கலாம் ,சஞ்சுவான் மண்டரின் சிக்கின் என்பதுக்கும் அதைப் பயன்படுத்தலாம் .அதிலும் அதன் சுவை அமர்களமாக இருக்கும்.

.

லசானியா..

புது வருடத்துக்கு .பழைய நோர்வேயின் நண்பர்கள் வீட்டுக்குப் போய் அவர்கள் இடத்திலேயே சமைச்சேன் எண்டு சொல்ல பல நண்பர்கள் " என்னத்தை சமைச்சுக் கிழிசாய் ? " எண்டு ஆதங்கமாகக கேடார்கள் ! நான் செய்து கொடுத்தது உடன் " லசானியா " 

                                               லசானியா இத்தாலியின் தேசிய உணவு ! ஒரு இளம் பெண்ணின் பெயரில் இருக்கும் அந்த உணவு மார்க்கோ போலோ என்ற இத்தாலியன் கடலோடி சீனாவுக்குப் போனபோது கண்டு அதிசயித்து ,அதை அப்படியே சுட்டுக்கொண்டு வந்து ,இத்தாலியன் "சீஸ் , "மீட் சோஸ " இரண்டையும் அதில இணைத்து ,ஒரு கீழைத் தேச உணவின் கொஞ்சம் மொடிபய் பண்ணிய இன்னொரு வடிவம் எண்டு என்னோட வேலை செய்த மார்கோ என்ற இத்தாலி நாட்டு "செப் "சொன்னார் !

                                              இங்கே பொதுவாக ஐரோபிய உணவுகளை ஏதோ ஒருவிதத்தில சமைக்க கற்றுக்கொள்வது இலகு காரணம் அவர்களுடன் இங்கே நாங்களும் சேர்ந்து குப்பை கொட்டுவதால் ! நான் நோர்வேயியின்" அஸ்கர் பாரும் " என்ற ஒரு ஒஸ்லோவுக்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு சுடுதண்ணி "இத்தாலியன் செப்" போடு வேலை செய்தேன் !

                                               அவன் அதிகம் சாப்பாட்டு ஓடர் வந்து குவிஞ்சது எண்டால் என்னை அறம்புறமா இத்தாலியன் பாசை தூசனதில திட்டுவான் ,வார்த்தைகள் கொதிதண்ணி போல சரமாரியா வந்து விழும் ,,அவன் என்னை மட்டுமல்ல , அந்த ரேச்ற்றோரன்ட் அப்பாவி முதலாளியையும் அறம்புரமா அடுக்கு மொழியில் பேசித் தள்ளுவான் .

                                     " அதிகம் சாப்பாட்டு ஓடர் வந்து குவியிற நேரம், நீ ஏன்பா இப்படி டென்சன் ஆகி எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டுறாய்?"

                                    எண்டு ஒருமுறை ஆங்கிலத்தில் கேட்டேன்

,                                " அது எங்கள் நாட்டு கிட்சென் சமையல் கலுணறி கலாசாரம்,கைக்கு வேலை கொடுக்கும்போது வாய்க்கும் வேலை கொடுப்போம்

                                  எண்டு சொல்லிப்போட்டு ,என்னைப் பார்


                                       "நீ ரெம்ப நல்லவன்பா எப்படித்தான் படு தூசனத்தில உன்னை திட்டினாலும் ,சிரிகிறியே!"

                                       என்றான் , எனக்கு அந்தப் பாசை தெரியாது அதலா வேற என்ன செய்ய எண்டு கேட்டு

                                   " நீ என்னை எப்படி திட்டுறாய் எண்டு ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா ? "

                                    எண்டு கேட்டேன் ,அவன் அரைகுறை ஆங்கிலத்தில்

                                    "நான் உன்னை மட்டமில்லை , உன்னோட அம்மா , உன் னோட அம்மம்மா , அக்கா,,தங்கசி,,உன்னோட காதலி எல்லாருமே வம் ........ பிறந்த தேவ .......கூட்டம் "

                                  எண்டு திட்டுவேன் எண்டு சொன்னான் ,,நான் அதுக்கும் அப்பாவியா சிரிச்சேன் !

                                    இதாலியர்களுக்கு தூசனம் "திருவாசகம் " படிகிரமாதிரி,,என்னதில , எண்ணத்தைப் பற்றி பேச தொடங்கினாலும் கடைசியில் "..............மம்மா மியா ,,,,,," எண்டு முடிப்பதை அதிகம் கவனிக்கலாம் ! மற்றப்படி அவர்கள நாட்டு செப் மாரோடு வேலை செய்தால் சைனிஸ் செப் போல ,சமையல் ரகசியம் சொல்லி தரமாட்டார்கள் !

                                    நாங்களா எதாவது கற்றுக்கொண்டால் வழியே மற்றப்படி ஒரு பிரிஜோசனமும் இல்லை ! முக்கியமான சில "இணைப்பு ருசி கொடுக்கும் " இன்கிரிடீன்ஸ் போடுற நேரம் பிளேட் கழுவ சொல்லுவார்கள் ,அல்லது வேற எதாவது வேலை சொல்லுவார்கள் !

                                   இத்தாலியர்களுக்கு , தக்காளி எவளவு முக்கியமோ அதுபோல Parsley, sage, rosemary, and thyme...இந்த வாசனை இலைகள் போடாத ஒரு இத்தாலியன் உணவே இல்லை ! எங்களுக்கு கறிவேப்பிலை போல அவர்களுக்கு அது மிக முக்கியம்

                                        மேடிடேர்நியன் என்ற மதிய தரைக்கடல் மிதமான தட்ப வெட்ப நிலையில் வளரும் இந்த Parsley, sage, rosemary, and thyme...போட்டு ஒரு "பெச்டொ " எண்டு ஒரு இலை குழை தளை அரையல் இருக்கு ,அது இத்தாலியின் ஒவ்வொரு ப்றோவின்சே என்ற பெரதேச நிலப்பரப்பின் பெயரில் சொல்லுவார்கள் !

                                            இத்தாலியன் பெண்கள் அதை எல்லாம் சாப்பிடுவதால் தான் , தக்காளி போல "தக தக " உடம்போட , உயரமான கால்களுடன் ,நீலக் கண்கள் விழியெங்கும் " வைன்" போல மயக்க ,உலகப் புகழ் பெற்ற அவகளின் பின் அழகு , வில்லுப்போல "வின் "எண்டு இருக்குது போல

                                            லசானியா " பர்மசின் சீஸ் " என்ற உலர்ந்த இத்தாலியன் சீஸ் மேல போட்டு சாப்பிட , நாதம் பேசும் அலாதியா இருக்கும் ,,ரெட் வைன் கொஞ்சம் போல உள்ளுக்கு விட்டிடுடு ட்ரை பண்ணிபாருங்க ! எனக்கும் இத்தாலி ரெச்ற்றோன்ட் லசானியா பிடிக்காது ! அதலா எப்பவும் எச்ராவ ஜெலபிநோஸ் என்ற மெக்ஸ்சிகன் நாட்டு "குட மிளகாயை " , அப்படியே அதில செருகி போடுதான் சாப்பிடுவேன்

                                                இதில உள்ள பச்சை நிற சலாத் இலைக்கு பெயர் " ரக்குளா சலாத் "பார்க்கப் பசாசுபோல இருக்கும் அதால் அப்படி சொலுரார்கள் !எப்படியோ நான் மேல சொன்ன மாதிரி ரெட் வைன் கொஞ்சம் போல உள்ளுக்கு விட்டிடு ட்ரை பண்ணிபாருங்க !( நான் சொன்னது கொஞ்சம் ரெட் வைன் லசானியாவுக்கு உள்ளுக்க விட்டுடு ...)

.

Saturday, 2 January 2016

முஸ்தப்பா

பெண்கள் பற்றிய புரிந்துணர்வு  அதிகமில்லாத  வாழ்க்கையில் கடக்க முடியாத  சுவர்கள்  இல்லை  என்று படிப்பறிவு சொல்லிக்கொடுத்த அனுபவம் எப்போதும்போல உண்மையாக  இருப்பதில்லை.  அதன் பாதிப்பில் ஒவ்வொருவரும்  ஒவ்வொருவிதமான புளியமரம் ஏறிப்  குருட்டுப்  பேய்க்கு வாழ்க்கைப்பட்டது போன்ற  படிப்பினையைப் பெற்றுக்கொள்ள அப்பப்ப முஸ்தப்பா போல சில நண்பர்கள் வந்துதான் போகிறார்கள்.

                                             வாழ்க்கை அனுபவத்தில் சுத்துமாத்து  என்ற வார்த்தையை சந்தி முடுக்குகளில் எடக்கு முடக்கா சந்தித்த அனுபவம் நிறையவே இருக்கு , ஆனால் அதுக்கு  சுருக்கமான பெயராயும் சில் மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள் , அவர்களே அதுக்கு விரிவான பெயராயும் இருந்தார்கள்  என்பதை புரிந்து கொண்ட நாளில் அவன்  என் சிந்தனைகளை விட பிஸியாக இருந்தான்  . அவன் நல்லவனா கெட்டவனா என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. ஒரு நாளின் முடிவில் அமைதியாக இருந்து ஜோசிதால் அவன் வாழ்கையின் சுவாரசியமான ஓரங்களில் உரசிக்கொண்டு பயணிக்கும் ஒரு மனிதன்.

                                               ஒஸ்லோவின்  கடைநிலை  நகர விழிம்பில் ,வெளிநாட்டவர் அதிகம் நோர்வே மக்களுடன் கலந்து  வசிக்காத  க்ரிங்க்சு இல் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கும் உயரமான தொடர்மாடி வீடுகளுக்கு மெட்ரோ ரெயில்வே ஸ்டேசனில் வந்து இறங்கி இடதுகைப் பக்கமாக சொங்க்ஸ்வான் நெடும் சாலையைக் கடந்து கீழ்நோக்கிப் போகும் இறக்கமான படிகளில் இறங்கத் தொடங்கும்போது வலது பக்கம் உள்ள மூலையில் சின்னதாக முகத்தை இழுத்து மூடிக்கொண்டு " யார் வருவார் எப்போது " என்பது போல துருகிக் கடை இருந்தது.

                                      க்ரிங்க்சு  நவீன ஒஸ்லோ நகரத்தின் கட்டை விரலில் போட்ட மாணிக்க மோதிரம் .வில்லோ மரங்களை  தென்றலே அசைக்க விரும்பாத பின் அந்தி மாலை போல அமைதியான பிரதேசம், பழமையான நோர்பேறி சிர்க்கா என்ற தேவலாயம் இருக்குமிடம். அன்பான மனிதர்களின் சரணாலயம் . பத்து நிமிட நடை தூரத்தில் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை. கப்பல் ஓடி திரைகடல் திரவியம் தேடிய பணக்கார நோர்வே மனிதர்கள் அதிகம் ஆடம்பரமாக  வசிக்கும் பகுதி .அநாவசியமாக இரைச்சல்  கையை விட்டு நோண்டாத அதன் அமைதி பிரமிக்க வைக்கும் . அதன் அழகு யாருமே எழுத முடியாத ஒரு கவிதை மொழி .

                                           முஸ்தப்பா அந்தக் கடையை ஒரு வருடம் வாடகைக்கு எடுத்தான், அவன்தான் முதலாளி , ஆனால்   சில மாதங்கள் மட்டுமே நடத்தினான், அப்போதுதான்  அவனுக்கு நான் நண்பன் ஆனேன். நானாக அவனோடு நண்பன் ஆகவில்லை. ஏதோவொரு உள்மன எச்சரிக்கையில் அவனை நானாக நல்ல நண்பன் எண்டும்  சொல்வதில்லை .ஆனால் முஸ்தப்பா என்னை ஒரு நல்ல நண்பன் எண்டு எப்பவும் அந்தக் கடைக்கு போகும் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டு திரிந்தான்.

                                           தனிப்பட எனக்கு முஸ்தப்பா மிகவும் பிடித்த ஒருவன் . நல்லவனுக்கு நல்லவன் போன்ற அவன் தத்துவம் எப்பவுமே என்னோடு கை கொடுத்ததும் கை கோர்த்தும் பயணித்தது . மன அழுத்தத்தில் ஒரு மூலையில் ஒடுங்கிப்போய் இருந்த நேரம் " வாழ்க்கை வாழ்வதுக்கே " என்று ஜன்னல்களை அகலமாகத் திறந்து விட்ட உண்மையான நண்பன் . அவனோட லைப் ஸ்டைல் ஒரு பாம்பும் ஏணியும் விளையாட்டு. அதில் அவன் எப்பவுமே ஏணியா இருக்க விரும்பினான்,,எடேன் தோட்டத்தில் புசிக்க விரும்பிய கனியைக் கொடுத்துப்  பாம்புபோலப் பெண்கள் வந்தார்கள்

                                       அவனோட கடைக்கு க்ரிங்க்சு இல் உள்ள ஒரேயொரு வெளிநாட்டவர் அதிகம் வசிக்கும் ஒன்பது மாடி தொடர் குடியிருப்பில் வசிப்பவர்கள்தான் வாடிக்கையாளர் .நோர்வே வெள்ளை மக்கள் அந்தக் கடைக்கு சூப்பர் மார்கெட் மூடி உள்ள வார இறுதி நாட்களில் , அல்லது இரவு பதினோரு மணிக்குப் பிறகு தான் வேறு வழியிலாமல் என்னவாவது வேண்ட அவசரத்துக்குப் போவார்கள்.முஸ்தப்பா  அந்த வியாபாரத்தில் தான் சிலந்திபோல தொங்கிக்கொண்டு  அதை ஓட்டிக்கொண்டிருந்தான் .

                                        காரீம் அல்ஜுமைரி முஹம்மது  முஸ்தப்பா  வடக்கு ஈராக்கில் உள்ள உலகின் முதல் நாகரீகம்  தோன்றிய சுமேரியர்களின்  ஆணி வேரடியில்  யுபிரடிஸ் டைகிரிஸ் என்ற இரண்டு நதிகள் பாயும் கழிமுகத்தில் உள்ள ஒரு இடத்தில பிறந்தவன். தன்னை எப்பவும் அசுமேரி என்று பெருமையாகச் சொல்லுவான், ஈராக்கி என்று சொல்லவே மாட்டான் ஈரான்நாட்டுக்கும்  ஈராக் நாடுக்கும்  எல்லைச் சண்டை புருஷன் பொஞ்சாதி சண்டை போல நடந்த வருடங்களில் இள வயதில் நோர்வேயிட்கு அரசியல் அகதியாக வந்தவன் ,நோர்வே மொழி அரபிச் சத்தத்துடன் உரத்துப் பேசுவான்.

                                      நோர்வேயிய மொழியில் பீய்பாண் என்று ஒரு இடறலான வார்த்தை இருக்கு. அதுக்கு அர்த்தம் டேய் சனியன் என்பது. நோர்வேயிட்கு வரும் வெளிநாட்டவர் முதன் முதலில் அறிந்துகொள்ளும் வார்த்தை அது. அந்த வார்த்தையை நோர்வே மக்கள் கோபம் வரும்போது அல்லது நெருங்கிய நண்பர்கள் உரையாடும்போது மட்டுமே பாவிப்பார்கள். முஸ்தப்பாவுக்கு அது எப்பவுமே என்னோட கதைக்கும்போது உரையாடலின் தொடக்கத்தில் அல்லது முடிவில் வந்து விழும். அது எனக்கும் நெருக்கமாக இருக்கும். அதன் தரக்குறைவான அர்த்தம் அவனைப் பொறுத்தவரை யானையில் நுளம்பு கடிச்ச மாதிரி

                                     சதாம்உசேன் போல  உயரமானவன் முஸ்தப்பா , அவரைப் போலவே எடுப்பான அடர்த்தியான மீசை . எப்பவுமே விலை அதிகமான டிசைன் கடைகளில் விற்கும் உடுப்புகள் தான்  செலக்ட் செய்து வேண்டிப் போடுவான் அவனோட வடிவு அது ஒரு மன்மத அம்புகள் பாயும் கந்தர்வக் கவர்ச்சி. தலை மயிர் ஈச்சம் பத்தை  போல அடர்த்தியான சுருள் முடி , முகம் வச்சிரம் போட்டு அடிச்சது போல வனிலாக்  கலர் கலந்த  வெள்ளை நிறம் . கண்ணில எப்பவுமே ஒரு அவசரமாக  அடைக்கலம் தேடும் அவதி, அவன் சிரிப்பு எந்தப் பெண்ணையும் நின்று நிமிர்த்து நேராகப் பார்த்து சில நிமிடம் ரசிக்க வைக்கும், அப்படி குழந்தைப்பிள்ளைகள் போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பான்.

                                        அவன்  எப்பவுமே உரலில அவல் இடிச்ச மாதிரி கதைச்சுக்கொண்டு இருப்பான், ஒன்று அவன் வைச்சு இருக்கும்  மொபைல் போனில் கதைச்சுக்கொண்டு இருப்பான், அவன் கடையில் வேலைக்கு வைத்து இருக்கும் இளம் பெண் பிள்ளைகளோடு கதைச்சுக்கொண்டிருப்பான், அல்லது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள இழுத்து வைச்சுக் கதைச்சுக்கொண்டிருப்பான்,  அல்லது கடைக்கு வெளிய வந்து ரோட்டால போற யாரையாவது கூப்பிட்டு வைச்சுக் கதைச்சுக்கொண்டிருப்பான், சில நேரம் என்னக்கே போன் போட்டு வரச்சொல்லி கதைச்சுக்கொண்டிருப்பன்,

                          "  மாலிக்,  பீய்பாண் , உனக்கு ஒரு விசியம் தெரியுமா , பீய்பாண்,  எனக்கு    யாரோடயாவது கதைக்காம அஞ்சு நிமிஷம் இருந்தா நடு   மண்டை வெடிச்சு சிதறும் போல இருக்கும், பீய்பாண் ,  பல  சனங்களுக்கு வாய் என்னத்துக்கு இருக்கு எண்டே தெரியாது, பீய்பாண்  இந்த நோஸ்கங்களுக்கு வாய் எங்கே இருக்கே எண்டே தெரியாது ,பீய்பாண் இவங்களுக்கு சிரிக்க முதல் தெரியாதே , பீய்பாண்   இவங்கள் சிரிச்சாங்கள் எண்டால் செத்த பிணம் சிரிக்கிறது மாதிரி இருக்கும் எனக்கு ,, பீய்பாண் "

                                      எண்டு சொல்லுவான், அவனோட அவதானிப்புகள் கொஞ்சம் உண்மைபோலதான் எனக்கும் இருக்கும். ஆனால் அதை அலட்டிக்கொள்ளாமல் சும்மா கேட்பது. பாணும் பருப்புக்கும் நடுவில் உம்பளக்கட மாசி சம்பல் வந்தது போல இருக்கும் அவன் அப்படி சொல்வது 

                                         அவனோட கடையில் அவன் ஒருநாளுமே கையைக் காலை ஆட்டி குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்யிறதைப் பார்த்ததே இல்லை.எப்பவும் ஒரு இளம் பெண்ணை சாமான் அடுக்க ,சாமான் எடுக்க வேலைக்கு  வைச்சு இருப்பான். ஒட்டகத்தில் ஏறி இருக்கிற மாதிரி கசியரில் உயரமான ஸ்டுல் இல் அவன் இருப்பான். க்ரிங்க்சு பல்கலைக்கழக மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடம், அது அவனுக்கு வாசியாகப் போயிட்டுது. அதால் எப்பவுமே அவனுக்கு பார்ட் டைம் வேலைக்கு மாணவர்கள் கிடைப்பார்கள். அதில இளம் பெண்களை மட்டும் தான் வேலைக்கு எடுப்பான். அவர்கள் அழகாக இருப்பார்கள் .

                                        அவனோட மிகப்பெரிய பலம் அல்லது புத்திசாலித்தனம் எந்த ஒரு பெண்ணுடனும் அஞ்சு நிமிஷம் பேசினான் என்றால் அந்தப் பெண்ணின் சைகோலோயியை சிரிச்சு சிரிச்சே அடியோடு பிரட்டி பிரதி எடுத்திடுவான். அப்படி உருவி எடுக்கிறது அவனோட பிறவிக் கலை. அப்படிதான் ரிஸ்வாணாவும் சொன்னாள்,சிசிலியாவும் சொன்னாள், அவன் கடையில் ஒரு கிழமை மட்டுமே வேலை செய்த ரெண்டு இளம் பெண் பிள்ளைகளும் சொன்னார்கள் ,அந்தக் கடைக்கு தபால் போட வந்த தபால்காரியும் சொன்னாள்  அது ஏறக்குறைய அவனோட மிகப்பெரிய பலவீனம் போலவும் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும் .

                                       அவனோட கடைக்கு நான் எப்பவுமே ஏதாவது பொருட்கள் வேண்டப் போவது. அந்தப் பொருட்கள் மிக அருகில் உள்ள நோர்வே நாட்டவரின் சூப்பர் மார்க்கெட்டில் வேண்டாலாம். ஆனாலும் அவனும் ஒரு வெளிநாட்டவன் அவனும் பஞ்சம் புழைக்க வேண்டும் என்று நினைத்து பஞ்சியப் பார்க்காமல் பாதைகளில் ஏறி இறங்கிப் போவது. அது எப்படி முஸ்தப்பாவுக்கு இந்த விசியங்கள் அவளவு இலகுவாகக் கை வருகுது என்று அவனோட பழகிய சில நாட்களிலேயே கேட்டேன், அவன் என்னை எப்பவும் மாலிக் என்றுதான் சொல்லுவான் அதுக்கு அரபியில் என்னோட பெயரின் அர்த்தம் எண்டு சொல்லுவான்

                             " முஸ்தப்பா  என்னடா,,ரெண்டு நாளைக்கு முன் வேலை செய்த அந்த நோர்க்ஸ் பெட்டையைக் கானேல்லேயே,,இது யாரடா ஒரு புது பெட்டைய வேலைக்கு வைச்சு இருகிறாய் "

                               " ஹ்ம்ம்,,மாலிக்,,அவள் ஒரு உதவாக்கரை,,வேலைக்கு உதவ மாட்டாள்,,அதால வீட்டுக்கு அனிப்பிட்டேன் "

                                " என்ன வேலைக்கு உதவமாட்டாள்கள் எண்டு சொல்லுறாய் முஸ்தப்பா "

                                   " ஹிஹிஹிஹி ,,இவளுகள் சோம்போறிகள் மாலிக்,,நான் ஒண்டு சொன்னா இன்னொன்னோடு செய்யுராளுகள் "

                                 " முஸ்தப்பா ,,நீ சொல்லுறது அவளுக்கு விளங்காமல் இருக்கலாம் தானே "

                                        "  ஹிஹிஹிஹிஹி,,இவளுகளா ,,ஹிஹிஹி பழுத்த பழத்தையும் மிஞ்சி வெம்பிப் பழுத்த பிஞ்சுப் பழங்கள் "

                                   " என்னடா இப்பிடி சொல்லுறாய் "

                                     "  மாலிக்,,உனக்கு இதெல்லாம் விளங்காது ,,இந்த உலகம் ஏன் சுத்துது சொல்லு பார்ப்பம்,"

                                          " அது சூரியனின் ஈர்ப்பு விசையில் அப்படி சுத்துது எண்டு நினைக்கின்றேன் "

                               " மாலிக்,, உலகம் சுத்துது ஏனென்றால் பெண்களால் தான் காரணம் ,,உனக்கு இது புரியாது சனியனே "

                                 " அப்படியா,,இப்பிடி ஒரு விளக்கம் இன்றுதான் கேள்விப்படுறேன் "

                                      " சரி அதை விடு மாலிக் ,,ரிஸ்வானா ஏன் இப்ப கடைக்கு வாறதில்லை ,அவளைப் பாற்றி என்னவும் அறிஞ்சியா "

                                  " ரிஸ்வானா  யார்பா ,,அவளை எனக்கு தெரியாதே "

                                    " அவள் தான் உன்னோட அப்பர்த்மேண்டில் வசிக்கிறாலே ஈரான் நாட்டுக்காரி "

                                   " அப்படியா,,எனக்கு அவளைத் தெரியாது "

                                  " டேய்  சனியன் ,,அண்டைக்கு நீ பேரீச்சம்பழம் வேண்ட வந்தநேரம் என்னோட கதைச்சுக்கொண்டு நிண்டாளே அவள் டா,,அவள் உன்னைத் தெரியும் எண்டு சொன்னாளே "

                                          " நான் உன்னோட கடைக்கு வாற நேரமெல்லாம் நீ யாரோ ஒரு பென்னோடுதானே கதைச்சுக்கொண்டு நிக்குறாய்,,இதில யாரை எவளை நான் நினைவு வைச்சு அடையாளம் காணுறது சொல்லு பார்ப்பம் முஸ்தப்பா "

                                         " ஹிஹிஹிஹி டேய் சனியன் , நானா கதைக்குறேன்,அவளுகள் தானே  வழிஞ்சு வழிஞ்சு கதைகிராளுகள்,,சூடு ஏதிப்போட்டுப் போற பாலைவனப் புயல்கள் அவளுகள் "

                                         " நீ ரிஸ்வானாவோடு என்னவும் விசர்க்கதை கதைச்சு இருப்பாய் அதால அவள் இங்கால வரப் பயப்படுவாள் "

                                             " டேய்   சனியன் ,,அவள் தாண்டா டபிள் மீனிங் இல கதைப்பாள்,,நீ சும்மா பொத்திக்கொண்டு இருக்கு,,ஆனால்  ஒரு சின்னப் பிரச்சினை நடந்தது "

                                           " ஒ, உனக்கு சின்னப் பிரச்சினை ,,உன்னோட அளவுகோலில் ,,ஆனால் ,நீ சின்னப் பிரசினை எண்டு சொன்னால்,,அது  உலகமாக பெரிய பிரசினையாதன் இருக்கும் "

                                            " டேய் சனியன்,,அவள்  போன் அடிச்சா எடுக்கிறாள் இல்லையடா , வொயிஸ் மெயில் ரெக்கொர்டிங்கில போகுது "

                                        " ஒ அப்ப அவள் எச்சரிக்கை ஆகி இருக்கிறாள் என்று அர்த்தம் "

                                       " ஹிஹிஹிஹி,,டேய் சனியன் ,,,பொறு அவளுக்கு செய்யிறன் வேலை ,,உன்னோட அப்பார்ட்மெண்ட் இல்  எட்டாவது மாடியில் இருக்கிறாள் எண்டு சொன்னாள், "

                                     " சரி அதென்ன அந்த சின்னப் பிரச்சினை ,,எனக்கு சொல்ல விரும்பினால் சொல்லு முஸ்தப்பா "

                                    " ஹிஹிஹிஹி ,,அது,,,ஹ்ம்ம்,,அதை விடு சனியன் ,,பெண்கள் ஆண்களுடன் கதைச்சுக்கொண்டு இருக்கும் நேரத்தை விட கதைக்காமல் இருக்கும் நேரம் தான் அதிகம் ஆண்களை ஜோசிப்பாளுகள் ,,அதுதான் வுமன்  சைகோலோயி ,,ஆனால் இவள் கிறுக்குப் பிடிச்சவள் போல இருக்கிறாளே "

                                " நீதான் வுமன்  சைகோலோயி இல் மாஸ்டர் டிகிரி முடிச்சவன்,,நீ சொன்னால் அது சிக்மண்ட் பிரெய்ட்  சொன்ன மாதிரி உண்மையாத்தான் இருக்கும் "

                                   " ஹிஹிஹிஹி   சரி அதை விடு சனியன் ,,அவளைக் கண்டாள் ஒரே ஒருக்கா கடைக்கு வந்திட்டுப் போகச்சொல்லி சொல்லுவியா,,அதோட நான் இந்த சின்னப் பிரச்சினை முடிச்சு வைக்கிறேன் எண்டு சொல்லு,,நீ சொன்னாள் சிலநேரம் கேட்பாள்,,நீ ரெம்ப நல்லவன் எண்டு அவளுக்கு சொல்லி வைச்சு இருக்றேன் மாலிக் ,,ப்ளிஸ்  சொல்லுவியா "

                                  "  பார்க்கலாம் முஸ்தப்பா,,அவளைக் கண்டால் கேட்குறேன்,,ஆனால் நான் இதுவரை அவளோடு கதைத்ததே இல்லை,,"

                                " டேய்,,சனியன்  உன்னை என்னோட பெஸ்ட் பிரென்ட் எண்டு நினைக்கிறன்,,இப்பிடித்தான் நல்ல நண்பர்கள் அவசரத்துக்கு உதவ மாட்டாங்கள் எண்டு சொல்லுறது "

                               " சரி உன்னோட பிரச்சினையை சொல்லு இப்பவாவது "

                              " டேய் சனியன்,,,அது  ஊசி போற இடத்தில உலக்கையை வைச்சு ஓட்டுறது போல கொஞ்சம் குழப்பம் ,,ஹ்ம்ம்,,,அது உனக்கு இப்ப தேவை இல்லை,,பிறகு சொல்லுறேன் "

                              " முஸ்தப்பா,,இப்ப உன்னோட கதைச்சுக்கொண்டு நிக்க நேரம் இல்லை,,நான் வேலைக்கு போக வேண்டும் பா "

                               " என்னடா ரெண்டு நிமிஷம் கதைச்சுதுக்கு வருஷம் முழுக்க கதைச்ச மாதிரி சொல்லுறாய் டேய் சனியன் "

                                      " அடப்பாவி,,இப்ப அரை மணித்தியாலம் கதைச்சே காற்றோடு போயிட்டுது ,நான் போறேன் பிறகு வந்து கதைகுறேன் "

                                   " சரி,,போய்த்தொலை,,ரிஸ்வாணாவை கண்டால் மறக்காமல் கேள் ஓகே தானே , வெளிய தட்டில டுரியான் பழம் பழுத்து மணக்குது ரெண்ட எடுத்துக்கொண்டு போ. அதுவும் கையை விடும் போல இருக்கு கொண்டு போ .காசு வேண்டாம் ,, "

                                         நான் ஒரே ஒரு டுரியான் பழத்தை சொப்பிங் பாக்கில் எடுத்து வைச்சுக்கொண்டு வந்திட்டேன்.  அன்று முஸ்தப்பா அவனோட சின்னப் பிரச்சினையை எனக்கு சொல்லவில்லை , முதல் அதைக் கேட்டு அதுக்கு தீர்வு சொல்ல நான் என்ன சைகோ அனலைசிங் கவுன்சிலிங்கா  செய்துகொண்டு இருக்கிறேன் நீங்களே சொல்லுங்க பார்ப்பம் . நானே குருவி தலையில பனங்காய் போல தேவை  இல்லாத பிரச்சினைகளில் தலையைக் கொடுத்துப்போட்டு சேனப்பன் வீட்டுக் குரங்கு இழனிக் கோம்பைக்க கையை விட்ட மாதிரி   போற பாதை தெரியாமல் தடுமாறிக்கொண்டு பம்மிக்கொண்டு இருக்கிற ஆள் .

                                                  ரிஸ்வானாவுக்கு ரிஸ்வானா என்ற பெயரே முஸ்தப்பா சொல்லித்தான் எனக்கு தெரியும்.ஆனால் அவள் என்னோட அப்பாட்மென்டில் இருந்தாள். கன்னத்தில  கோபுர சந்தனம் தடவின மாதிரி அழகான நடுத்தர வயது, கொஞ்சும் இளமை ஆடாமல் தீர்க்கமாக நடப்பாள் ,தனியாவா அல்லது கணவனுடம் இருக்கிறாளா எண்டு தெரியாது.மூன்று சின்னப் பிள்ளைகளுடன் எப்பவும் வெளிய போவாள் . அடக்கமான பெண்.   ஊமத்தம்பூப்போல  பெரிய முகம் . கோடையில் நானும் என் நோர்ஸ்க் நண்பர்களும் வெளியே மர வாங்கில் பியர் அடிச்சுக்கொண்டு இருக்கும்போது  நிமிர்ந்தே எங்ககளைப் பார்க்க மாட்டாள். 

                              அரபி நாட்டவர்களுடன் நாங்கள் அவர்கள் வழியில் குறுக்கிட்டு வழமையாக எல்லாருக்கும் சொல்லும்  " ஹாய் " என்பதைக்  கூடச் சொல்ல மாட்டோம். அதுக்கா அவர்கள் புதினமான மனிதர்கள் என்று இல்லை. நட்பானவர்கள் .ஆனால் எப்பவுமே அவர்களின் கலாச்சார எல்லைகளை இலகுவில் விட்டுக்கொடுத்துத்  தாண்டமாட்டார்கள் .முக்கியமாகப் பெண்களோடு வெளி ஆட்கள்  யாருமே கதைக்க மாட்டார்கள் , அவர்களும் தங்கள் பாட்டில் போவார்கள்,வருவார்கள் 

                                                   ஒஸ்லோவில் சாமத்தியப்பட்ட பெண் தலை முழுக முகமெல்லாம் பூசிக்கொண்டது போல   பூசுமஞ்சள் வெயில் வெளிச்சமாக அடிச்சுக்கொண்டு இருந்த   ஒரு நாள் , வெளியே மரவாங்கில் இருந்துகொண்டு பேர்ச் மரத்தில  குருவிகளுக்கு தீனி கட்டித்  தொங்க விட்ட குழாயை மோர்க்கோ பறவைகள் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததை நானும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு  இருந்தேன் ,ரிஸ்வான அவளோட மூன்று பிள்ளைகளோடு என்னைக் கடந்து சூப்பர் மார்கட்டில் பொருட்கள் வேண்டிக்கொண்டு அப்பாட்மென்ட் நோக்கி வந்துகொண்டு இருந்தாள்  , என்னை கொஞ்சம் விபரமாகப் பார்த்தாள் ,நான் முதல் முறையாக அரபியில்

                           " ஹேப கால  "

என்று கேட்டேன் ,,அவள் அதுக்கு சடார் என்று ஜோசிக்காமலே,

                             " அல் ஹம்துல்லா "

                                  என்று சொன்னாள், எனக்கு கொஞ்சம்  " அட்டிகைக்கு ஆசைப்பட்டவள்   இடுப்பில எருமைச் சங்கிலியைக் கட்டிக் கொண்டாளாம் .." போல அரபி மொழியில் வணக்கம் போன்ற சில விசியங்கள் சொல்ல தெரியும். துருக்கிகாரர்களின் ரேஸ்டோறேண்டில் கோப்பை கழுவும் வேலை சுவிடனில் செய்த போது பாடிப் பாடி அவர்களிடம் இருந்து கொஞ்சம் அரபி படித்தேன், அந்த மொழியில் எப்பவுமே ஒரு கவர்ச்சிகரமான சந்தம் இருப்பதைக் கவனித்து இருக்கிறேன்  

                               " கேபகாலக் கேவந்த சிலோனோக் சபாரக் ஐவோக் கல்லா அல்லாக் கரீம் அல்ல்லாமோ சல்லம் "

                                        என்று சொன்னேன்,அவளின் குழந்தைகள் என்னோட அரபியில் ஆச்சரியாமாகி என்னைப் பார்க்க, அவள் அதுக்கும்

                      " சுக்கிரியா ,,சுக்ரியா  அல்ஹம்துல்லா அல்ஹம்துல்லா ,,இந்த மாலும் அரபி " 

                              என்று  நன்றி நன்றி,,ஆண்டவன்  ஆசிர்வாதம் ,,நீ அரபி கதைப்பியா என்று அரபியில் கேட்டாள் ,நான் 

                         " அனா அரப் மாபி,,அனா வோல்லா மாந்தி மாய் அரப் "

                    நான் அரபு கதைப்பவன் இல்லை,,கொஞ்சம் தெரியும் என்று அரபியில் சொன்னேன் 

                         சுக்கிரியா ,,சுக்ரியா  அல்ஹம்துல்லா அல்ஹம்துல்லா 

                           என்றாள், நான் முஸ்தப்பா கேட்ட கேள்வியைக் கேட்டேன்

                                   " முஸ்தப்பா உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                                                என்று நோர்ஸ்ச்கில்  சொன்னேன்,அவள் கன்னம் சிவப்பாகி விட்டது, பிள்ளைகளை தள்ளிப் போய் விளையாடச் சொன்னாள்,என்னை நேராகப் பார்த்து, வறுத்த மிளகாய்த்தூள் தடவின  நோர்ஸ்ச்கில்

                       "  என்ன?????????????? "

                                               என்று மிகக் கடுமையான அழுத்தம் கொடுக்கும் நோர்ஸ்ச்கில் இடியன் கட்டுத் துவக்கு வெடிச்ச மாதிரிக் கேட்டாள் ,பெண்கள் மென்மையாவர்கள், அவர்களின் உலகத்தில் கடுமை என்பது கடுகு போல . அவர்கள் ஒரு போதுமே கோபமாக " என்ன???????????? " என்று கேட்க மாட்டார்கள்,ஆனால் " என்ன????????????? " எண்டு இறுக்கிக்கொண்டு கேட்டால் அது முகத்தில கையை வைச்ச மாதிரி , நான் மறு முறையும்

                           " முஸ்தப்பா,துருகிக் கடை ஓனர் ,,கடை வைச்சு இருக்கானே அவன் ,, உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                           என்று மென்மையான  நோர்ஸ்ச்கில்  சொன்னேன், அவள் கை ரெண்டையும் இடுப்பில பின்னோக்கி வைச்சுக்கொண்டு

                            " என்ன ???????????????????"

                                என்று நோர்ஸ்ச்கில் கேட்டாள், பெண்கள் ரெண்டாம் முறையும் " என்ன????????????????? " எண்டு உதைக்கிற மாதிரிக் கேட்டால் அது மாட்டுச் சாணியில் கையை வைச்சு அந்தக் கையை மூஞ்சியில் அறைஞ்ச மாதிரி, ரிஸ்வானா என்னை முறைச்சுப் பார்த்திட்டு தன் மூன்று பிள்ளைகளையும் தாய்ப் பறவை குஞ்சுகளை காப்பது  போல நெருக்கமாக பாதுகாப்பாக அணைத்துக்கொண்டு கூட்டிக்கொண்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்  என்பது போல உள்ளுக்கு போயிட்டாள்.

                                      நான் மரவாங்கில் இருந்துகொண்டு காலை ஆட்டிக்கொண்டு பேர்ச் மரத்தில  குருவிகளுக்கு தீனி கட்டித்  தொங்க விட்ட குழாயை மோர்க்கோ பறவைகள் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு இருந்ததை நானும் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டு  இருந்தேன் ," மவனே ..இங்கே என்னதான் நடக்குது  " என்பது போல மோர்க்கோ பறவைகள் சந்தேகமாக என்னைப்  பார்த்துக்கொண்டு இருந்தன

                                   கொஞ்ச நேரத்தில் ரிஸ்வானா அப்பாட்மென்ட் வெளிக் கதவை வேகமா உதைத்து  தள்ளித் திறந்துகொண்டு வெளிய வந்தாள்,,வந்து எனக்கு நேரே வந்து , தலையில் மூடி இருந்த ஸ்கர்ப்பை சரி செய்து கொண்டு, சொண்டை வெங்கனாந்திப் பாம்பு  போல இறுக்கி வைத்துக்கொண்டு

                                                " உன்னோட கொஞ்சம் சீரியஸ் விசியம் பேச வேண்டும் இப்ப பேச முடியுமா "

                                           என்று கேட்டாள். இந்த  " உன்னோட கொஞ்சம் சீரியஸ் விசியம் பேச வேண்டும் இப்ப பேச முடியுமா  " என்ற வார்த்தைப் பிரயோகம் நோர்வே வெள்ளை மக்கள் சொல்லும் வார்த்தை. ஏதாவது முக்கிய விசியம் பேசவேணும் என்றால் இப்படிதான் சொல்லுவார்கள்.சும்மா வாய்க்கால் தண்ணி வள வள எண்டு ஓடின மாதிரி முக்கிய விசியங்களை அவர்கள் போகிற போக்கில் பேச மாட்டார்கள். ரிஸ்வானா அப்படிக் கேட்டது அவளுக்கு நோர்ஸ்ச்கில் ,நோர்வே கலாசாரத்தில் நிறைய விசியம் தெரியும் போல இருந்தது ,அல்லது ஈரானில் அப்படிதான் பேசுவார்களா என்று எனக்கு தெரியாது.

                                    " நீ முஸ்லீமா "

                                " இல்லை "

                                 " பிறகு எப்படி அரபி கதைக்குறாய் "

                                  " கொஞ்சம் அங்கே இங்கே சுரண்டிக் கற்றுக் கொண்டது ,முஸ்தப்பா கொஞ்சம் சொல்லி தந்தான் "

                                   " ஒ அதுமட்டுமா சொல்லித் தந்தான் ,,வேற ஏதும் சொல்லித் தந்தானா? "

                                  " இல்லை,,வேற ஏதும் சொல்லித்தரவில்லை "

                                   " இன்ஷா அல்லா,,அதோட உன்னை விட்டானே,,அதுக்கு அல்லாவுக்கு நன்றி "

                                  " ம்,,"

                               " நான் முன்னம் பின்னம் தெரியாத ஆண்களுடன் பேசுவதில்லை,,இப்ப உன்னோட பேசியே ஆக வேண்டும்,,,இல்லாட்டி என்னோட நெஞ்சு வெடிக்கும்  போல இருக்கு ,,முஸ்தப்பா என்ன சொன்னான்  அதை சொல்லு முதலில் "

                                 " அவன் ,, உன்னுடன் பேச வேணும் எண்டு சொன்னான்,,ஒரே ஒரு முறை கடைக்கு வந்திட்டுப் போகச் சொல்லிச் சொன்னான்,,அவன் கேட்ட தகவலை உனக்கு சொல்லுறன் "

                                        " ஒ அப்படியா,,முதலில் உன்னோட பெஸ்ட் பிரண்டுக்கு சொல்லு,,ஆட்களை நரி வெருட்டின மாதிரி வெருட்ட வேண்டாம் எண்டு "

                                 "அவன் என்னோட் பெஸ்ட் பிரெண்ட் எண்டு யார் சொன்னது "

                               " அவனே தான் சொன்னான்,,நான் யார் தெரியுமா,,,,என்னோட  அப்பா ஈரானின் ஆர்மியில் ஜெனரல் ஆக இருந்தவர்,,இவன் ஒரு சுண்டங்காய்,முஸ்தபாக்கு ,சொல்லு,,ஆட்களை  வெருட்ட வேண்டாம் எண்டு முக்கியமா பெண்களை வெருட்ட வேண்டாம் எண்டு,,எனக்குப் பயமில்லை எண்டு சொல்லு "

                            " ஹ்ம்ம் "

                            " விபரம் தெரியாத என்னோட பிள்ளைகளே என்னைக் கேட்குதுகள்  ஏனம்மா அழுகுரிங்க ,,ஏனம்மா பேய் அறைஞ்ச மாதிரி இருகுரிங்க எண்டு "

                             " ம் ,,சொறி,,எனக்கு தெரியாது உங்க பிரச்சினை என்ன எண்டு "

                          "  ஹ்ம்ம்,,என்னக்கும் தான் தெரியவில்லை,,என்னோட பிரச்சினை என்ன எண்டு,,அதுதான்  பிரச்சினையே "

                               " அய்யோ,,எனக்கு மண்டை எல்லாம் சுத்துது,,இதைக் கேட்க "

                                       " நான் ஆம்பிளைகளுக்கு முன்னால் இப்பிடிக் கதைக்கவே மாட்டேன்,,ஆனால் என்னோட அப்பா என்னக்கு சொல்லி சொல்லியே வளர்த்தார் என்னை ,பிழை நடந்தால் அதைத் தட்டிக் கேள் எண்டு,,என்னோட அப்பா ஒரு ஆர்மி ஜெனரல் "

                              " ம்  ம் "

                           " முஸ்தப்பா நல்லவன், எனக்கு விசர் வருகுது , நான் என்ன சொன்னாலும் உலக்கதுக்கு உண்மை தெரியாது,,நான் ஒருநாளும் மனத்தால் யாருக்கும் ஒரு சின்னத் தீங்கு நினைக்காதவள் ,ஹ்ம்ம் ஆனால் அவன்,,உன் பெஸ்ட் பிரென்ட் முஸ்தப்பா  நல்லவன் இல்லை,,எனக்கு அழவேண்டும் போல இருக்கு,," 

                                  " ஹ்ம்ம் ,,இங்கே அழாதே பிறகு ஆட்கள் என்னைத் தப்பாக நினைப்பார்கள்,நான் ஏற்கனவே பிச்சைக்காரன் போல பிஞ்சு போய் இருக்கிறேன்  " 

                              " பாவம் எண்டு அவனுக்கு உதவி செய்தேன், அவன் நல்லவன் எண்டு , இன்ஷா அல்லா , அதுவும் அகமத்துக்கு தெரியாமல்..... "

                         " அப்படியா "

                               " நான் ஒரு மடைச்சி,,முட்டாள்..அறிவே இல்லாத ஜென்மம்,,ஆனால் முஸ்தப்பா நல்லவன், ஹ்ம்ம் அன்பானவன் , அவனை நினைச்சால் அடி வயிறே நோகும்,,ஆனால் அவன்  நல்லவனில்லை ,அதுவும் எனக்கு தெரியும்  "

                                      " ஹ்ம்ம்  அதை அவனும் சொல்லுறான் இல்லை,,நீயும் சொல்லுறாய் இல்லை  மாதன முத்தா மண்பானையில் மண்டையைச் சுத்தி  மூக்கைத் தொட்ட மாதிரி இடையில நான் கிடந்தது தடுமாறுறேன் "

                                     " என்னோட ஸ்பார கொண்தோர் பாங்  அக்கவுண்டில் எவளவு பணம் இருக்கு எண்டு அகமத் ஒருநாளும் என்னைக் கேட்டதில்லை,,அவர் அன்பான ஒரு நம்பிக்கையான மனிதர் ,,நான் அதை என் பிள்ளைகளுக்காக சேமித்துக் கொண்டு வந்தேன் "

                                   " ஹ்ம்ம்,,அது நல்ல விசியம் தானே "

                                          நான் இதென்னவோ இதுக்குள்ள  கும்முடிப்பூண்டு குச்சுப்பிடி விளையாட்டு  இருக்கும் எண்டுதான் நினைச்சேன்,,ஆனால் இது என்னவோ காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை போலத்  தான் மேலோட்டமாக இருந்தது ,என்றாலும் ஆழமாமாக என்னத்தை ரெண்டு பேரும் சுழி ஓடினார்கள் என்று அனுமானிக்க முடியவில்லை

                                 "  ஹபீபி ஹபீபி எண்டு கொஞ்சிக் கொஞ்சி,,,என்னை சித்திரவதை செய்தான்,,அதால் உதவி செய்தேன் ...இப்ப அகமதுக்கு தெரிஞ்சா அவர் என்னைத் தலித் தலித்  எண்டு மூன்று முறை சொல்லி   தள்ளி வைச்சாலும் வைக்கலாம் அதுவும் நடக்கலாம் "

                                  " ஹ்ம்ம்,,அகமத் யார் "

                              " அவர் என்னோட புருஷன் "

                              " ஒ ,,நான் கண்டதே இல்லையே அவரை இங்கே உன்னோடு "

                               " அவர் அக்காவோடு இருக்கிறார்,,"

                                  " ஒ உன்னோட அக்கவோட இருக்கிறாரா,,இல்லை அவரோட அக்காவோடு இருக்கிறாரா ,,ஒண்ணுமே புரியலையே    "

                               " இல்லை,,அது அவர் முதல் மனைவி,,நான் அவாவை அக்கா எண்டுதான் சொல்லுவேன்,,என்னோட கூடப்பிறந்த அக்கா போலதான் ,,நல்ல உயிர் போல என்னோட  பாசமானவா "

                           " ஒ ,,இப்பிடி எனக்கு ஒரு துவரம்பருப்பு சுண்டல் போல வாழ்க்கை  ஒண்டும் கிடைக்குதில்லையே "

                              " என்ன கிண்டலா, துள்ளார் டு மேய் ..,நான் எவளவு கோவத்தில் இருக்கிறேன் தெரியுமா "

                                      " ஹ்ம்ம்  "

                                 " சரி,,,உன்னோட மட்டும்  ஒரே ஒரு விசியம் சொல்லுறேன் ,அதை மட்டும் முஸ்தப்பாவுக்கு போய்ச் சொல்லுவியா ."

                                      இந்த உலகத்தில் பெண்கள்தான் எல்லாவிதமான வலியையும் சுமக்கிறார்கள்.அவர்களின் வலி இந்தப் பூமித்தாயின் வலி. அது எனக்குத் தெரியும் .ஆனாலும் அவர்கள் தான் அன்புக்கு ஏங்கும் இதயத்தில் எதோ ஒரு வழியில் தடம்புரண்டு போகிறார்கள் ....

                                   

,,,,,,,,,,,,,,,தொடரும் .............

...