Sunday 26 July 2015

" சொங்க்ஸ்வான் " ஏறக்குறைய சொர்க்கம்....

சொங்க்ஸ்வான் ஏரி பற்றி எப்பவுமே புலம்பிக்கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியும். அதுக்கு காரணம் அதன் இயற்கைக் கவர்ச்சி அப்படி பிசத்த வைத்தது. அதனால ஒவ்வொருமுறை அந்த இடம் போகும்போதும் ஜோசிப்பது ஏன் இந்த இடத்தை ஒஸ்லோ பெருநகர நிர்வாகம் ஒரு ப்ரோமோசன் வீடியோ தயாரித்து இந்த இடத்தை பலரும் அறியும்படி செய்யவில்லை என்று,
                                                  நான் நினைத்த மாதிரியே இந்த மாதம் ஒஸ்லோ நகர நிர்வாகம். ஒரு அருமையான ,கவர்சியான வெறும் 49 செக்கன் ஓடும் ஒளித்தொகுப்பு ஒன்றை கையடக்கமா அதேநேரம் அமர்களமாக ஒரு உற்சாகப் பாடல் பின்னணியில் தயாரித்து இன்டர்நெட்,டெலிவிசனில் இப்ப அதன் விளம்பரம் அமோகமா ஓடுது. அதை நினைக்க உண்மையில் சந்தோசமாக் இருக்கு. என்னோட ஒரு அடையாளம் அதில ஒட்டிக்கொண்டு இருப்பது இதமான இன்பம்.
                                               என் வாழ்விடத்தில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் உள்ள சொங்க்ஸ்வான் ஏரிக்கரை ஒஸ்லோ நகர வடக்கு விளிம்பில் ,கடல் மட்டத்தில் இருந்து 210 அடி உயரதில் இருக்கு.நான் வசிக்கும் பேட்டை 240 அடியில இருக்கு . ஒரு பதினோருமாடி தொடர் குடியிருப்பில் ஐந்தாவது மாடியில் இருக்கும் என் வீடு 300 அடி உயரத்தில் இருக்கு .ஆச்சரியமா எனக்கே இருக்கு கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் நான் வசிப்பது. கடவுள் செய்த புண்ணியம் தான் காரணம். நிட்சயமாக நான் காரணம் இல்லை.
                                                      சொங்க்ஸ்வான் என்ற இந்த சொர்க்கம் நோர்ட் மார்க்கா என்ற பிரதேசத்தின் கடைசி இடம். அதுக்கு மேலே ஒன்றுமே இல்லை,வெறும் காடு ,மலை.அவளவுதான் ஆனால் உண்மையில் ஒஸ்லோவின் பல பகுதிகளில் வசிப்பவர்கள் பிரயாணம் செய்ய இலகுவான இடத்தில இருக்கு. சொங்க்ஸ்வான் என்ற பெயரில் ஒரு மெற்றோ ட்ரைன் ஓடுது அது நிற்கும் கடைசி ஸ்டேஷன் சொங்ஸ் வான். அதில இறங்கி கையைக் காலை உதறிப்போட்டு அஞ்சு நிமிடம் கையை வீசிக்கொண்டு நடக்க சொங்க்ஸ் வான் ஏரிக்கரை வா வேண்டு வெத்திலை பாக்கு நிறைகுடம் வைச்சு, வாய் நிறையப் புன்னகையுடன் பன்னீர் தெளித்து அழைக்கும் .
                                                       இந்த ஏரிக்கரை என்னோட ஆத்ம தேடலின் அத்திவாரக் கல்லு. இங்கே நான் அதைச் சுற்றி பந்தயக் குதிரை போல ஓடுவேன், வில்லோ மரங்களிருந்து வீ ப்பர் பறவைகள் நையாண்டி செய்வதை ரசித்துக்கொண்டு நடப்பேன், ரெண்டு சில்லும் சல்லிக்கல்லில் நெரிந்து கதறக் கதற சைக்கில் ஓடுவேன், எப்பவாவது வாத்துப்போல வலிச்சு வலிச்சு நீந்துவேன் , சும்மா போய் சின்னப் பிள்ளைகள் மணலில் வெள்ளை எலிகள் போல விளையாடுவதை விடுப்புப் பார்ப்பேன், பைன் மரங்களுக்கு கீழே இருந்து உலகம் ஏன் இவளவு அழகா இருக்கு என்று அநாவசியமா ஜோசிப்பேன். அழகான இளம்பெண்கள் வெய்யில் காய்வதை இளமை ஏன் இவளவு அள்ளிக்கொட்டுது என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆராய்ச்சி பண்ணுவேன்.
                                                      சொங்க்ஸ் வான் ஏரிக்கரையில் எல்லாரும் ஒரே மாதிரி இயங்குவதில்லை. நோர்வே நாட்டவர் ஆழ்கடல் சுழி ஓடுவார்கள். வெளிநாட்டவர் கிறில் என்று நெருப்பில் வாட்டி சாப்பிடுவதில் மும்மரமாக இருப்பார்கள். சிலர் மரத்துக்கு முண்டு கொடுத்துக்கொண்டு புத்தகம் வாசிப்பார்கள்.ஒரு இஸ்லாமியப் பெண் முகம் மட்டும் தெரிய உடை அணிந்து ஒரு பெரிய கல்லில இருந்து திருக்குர்ரான் போல என்னமோ ஒரு புத்தகம் ஆழ்ந்த வாசிப்பில் உள்வாங்கிக்கொண்டு இருந்தா.
                                                 பஞ்சு போலப் பெண்கள் பூப் பந்து விளையாடுவார்கள் .அவர்களுக்கு தசைகளின் வலிமை காட்ட காளை போல இளம் ஆண்கள் கால்ப் பந்து விளையாடுவார்கள் . கயாக் என்ற சின்ன மிதவையில் தண்டு வலிப்பார்கள் சிலர். தண்ணிக்குள்ள அடியைப் பார்க்க சிநோர்க்கிளின் அடிப்பார்கள். அடர் மரங்களுக்கு நடுவில் காதலர்கள் கட்டிப்பிடிச்சுக்கொண்டு கனவில கலியாணம் கட்டிக்கொண்டு இருப்பார்கள். வயதான தம்பதிகள் இழந்துபோன இளமையை நினைத்து கைகளை இறுக்கிப்பிடித்து கண்களில் காதல் வழிய நடப்பார்கள். சின்னக் குழந்தைகள் அம்மணமாக மணலில் விளையாடி மறுபடியும் பிறப்பார்கள்.
                                                        உறைபனிக் காலம் முழுவதும் சொங்க்ஸ்வான் தண்ணி வெள்ளித் தாம்பாளம் போல உறைந்துவிடும், ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு குறுக்குவாட்டில் அதன் மேலே நடந்து செல்லலாம். இளையவர்கள் கோலம் போட்டு அதுக்குமேலே பனிச் சறுக்குவார்கள். சிலர் பனிக்கட்டியில் துளை போட்டு பொழுதுபோக மீன் பிடிப்பார்கள் . தன்னை நம்பியவர்களை சறுக்க வைத்தும்,வழுக்க வைத்தும் அழகு காட்டி கொஞ்சம் கொஞ்சமாக கோடையின் வரவில் கரையத் தொடங்கும்
                                                 யாழ்பாணத்தில் பனங்காய் சூப்பிக் கொண்டு இருந்து போட்டு புலம் பெயர்ந்து வடக்கு ஐரோப்பா வந்ததில் செய்த ஒரு உருப்படியான காரியம் சொங்க்ஸ்வான் ஏரிக்கரை பற்றி, அது தந்த உந்துததால் கிட்டதட்ட ஐம்பது கவிதைகள் அந்த இடம் பற்றியே அதைச் சுற்றியே எழுதி இருக்கிறேன். பல கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். சில இயற்கையை மொழிபெயர்க்கும் நிழல் படங்கள் எடுத்து இருக்கிறேன். என்னோட மொபைல் போன் வீடியோவில் சின்ன ஒரு ஒளிப்படத் தொகுப்பும் செய்துள்ளேன்.
                                                  என்னோட வீராளி அம்மாளாச்சி மேலே சத்தியமா சொல்லுறேன் இப்படி ஒரு இடத்தில வசிக்கக் கிடைத்து இருக்கவிட்டால் இதெல்லாம் சாத்தியமாகி இருக்காது. உங்களையே இயற்கையிடம் கொடுங்கள் அது இரண்டு மடங்கு சக்தியுடன் திருப்பிக்கொடுக்கும் என்று துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடும் நவீன வாழ்வை நகர்த்தும் என்னோட அற்ப அறிவுக்கு பாடம் புகட்டியது " சொங்க்ஸ்வான் " .
                                    ஹ்ம்ம்.. என்னத்தை இதுக்குமேல சொல்ல. " சொங்க்ஸ்வான் " என்னைப் பொறுத்தவரை ஏறக்குறைய சொர்க்கம்..
.
.

No comments :

Post a Comment