Wednesday 25 April 2018

உதவி கிடைக்குமா ?

இதுதான் சொல்லுறது கிடாய் ஆடு அறுக்க முன்னம் அதன் ...க்குப் பங்குகேட்டு முந்தக்கூடாது எண்டு. பொறுமை என்பது சிலநேரம் காலத்தை எம் கண்ணுக்கு முன்னேயே நீட்டி வைத்துக்கொண்டேயிருக்கும் . அதன் முடிவுவரையில் அதனோடு ஒருங்கிசைந்து போவதுக்கு எப்போதும் அசாத்தியமான மன ஒடுக்கம் வேண்டும் . 

                                                       அல்லது ஒரு இடத்தில அதன் தாங்குதிறன் வெடிக்கும் போது எப்போதுமே ஒரு சின்னப் பிரச்சினை அனாவசியமான கலவரத்தால் பெரிய பிரச்சினையாகிவிடலாம்.அதன் பிறகு ஆற அமர இருந்து ஜோசித்தால் அட இதுக்குப் போயா போயும் போயும் இந்தக் குதி குதிச்சோம் என்று ஆசுவாசமாக இருக்கும், 

                                                            ஆனால் ஒரு செக்கன் முன்னால் நடந்தது காலத்தின் கோணத்தில் நடந்ததே முடிந்ததுதான். உண்மையில் இந்தப் பொறுமையைச் சோதிப்பது மிகவும் அவசரமான நேரங்களில் அரசாங்க வேலையில் பொறுப்போடிருக்கும் மனிதர்கள் வழங்கும் சேவைகளில் தாமதங்கள் வரும்போதுதான்
கிட்டதட்ட ஒரு மணித்தியாலயம் நோண்டு நோண்டு எண்டு நோண்டி ஸ்பானிஷ் ஸ்டைலில் டிகிரிலினி பாஸ்தா லாமியா லாரின்னிக்குச் சமைத்துக்கொடுத்தேன், சாப்பிடத் தொடங்குமுதல் அவள் அந்த விலாசமும், அந்த தொலைபேசி இலக்கம் எடுத்து தந்தாள். அந்த இடம் அவசர வைத்திய சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையம். சில சேவைகளை அவர்களிடம் இருந்து பெறவேண்டிய அவசரத்தில் நான் இருந்தேன் .
                                                                            அந்தக்கிழமை முழுவதும், அவசர சேவையாக இருந்தபோதும் ஒரு வெளியக உதவி தேடுபவராக இருப்பதால். அந்த சேவை எனக்கு கிடைப்பத்துக்கும் கிரிஸ்மஸ் விடுமுறைக்கும் இடையில் மாட்டி ஐந்து நாட்களை தொடராக இயங்காமல் செய்துவிட்டது.
லாமியா லாரின்னி தந்த அட்ரசுக்கு டெலிபோன் அடிக்காமல் நேராகவே போனேன். தெருவெல்லாம் உறைபனிக்கு மேலே இரவு மழை சாந்திமுகூர்த்தம் போல விடிய விடிய கட்டிப் பிடித்துப் பிரண்டு விளையாடி ஏறக்குறைய அகல நடைப்பாதைகள் சேறும் சகதியுமாக ஆரம்ப கட்ட வரவேட்பே ரணகளமாக இருந்தது.
                                                                               மேற்பரப்பில் மெண்மையாகப் பஞ்சுகளால் மறைத்து உள்ளே பதுங்கி இருந்த கண்ணாடி உறைபணியில் இரண்டு இடத்தில வழுக்கி விழுந்து எழும்பி ,இன்னொருமுறை சறுக்கினால் அவசர வைத்திய சேவைகள் ஒருங்கிணைப்பு நிலையதுக்கு அம்புலன்சில்தான் போகவேண்டும் போல காலநிலை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருந்தது .
குங்ஸ்ஹோலாம் என்ற கிழக்கு ஸ்டோக்ஹலம் நகரின் நடுவில் பன்னிரண்டாம் நூற்றாண்டு குஸ்தாவ்வாச மன்னன் காலத்தில் கட்டியது போன்ற பழையகால கட்டிடத்தில் அந்த " அ வை சே ஒ நி " நிலையமிருந்தது. எதிர்பார்த்ததுக்கு எதிர்மாறாக ரிஷப்சனில் இருந்த அழகான இளம் பெண் மத்தியகிழக்கு மூக்கிலே இரான் வெள்ளை முகத்துடன் நின்றாள், 
                                                                          
நூறு வீதம் பந்தயம் கட்டிச் சொல்லலாம் சுவீடிஷ் இனத்தவள் இல்லையென்று. ஏழு வருடங்கள் முன்னர் பஞ்சம் புழைக்க உடுத்தியிருந்த  கட்டுத் துணியோடு  சுவீடனை விட்டுப் போட்டு  பக்கத்துக்கு நாடான சுவீடனுக்கு  முறை மச்சான்  முறையான  நோர்வேக்குப்  போனபோது இப்படி இடங்களில் பொன்னிற முடி சுவிடீஷ் வெள்ளைகளே வேலை செய்தார்கள். 

                                 இப்போது அதெல்லாம் அதரப்பழசான பழங்கதை!

" அ வை சே ஒ நி " ஆனா பட்டியால போன உடனேயே வெத்திலை பாக்கு வைச்ச மாதிரி, 
                                                 " உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                                           என்ற கேள்வி உள்நுழைந்து சில நிமிடங்களில் அந்த ரிசப்ஸ்டேனிஸ்ட் இடமிருந்து வந்தது . அப்போதுதான் நான் அவளைக் கொஞ்சம் கவனிச்சுப்பார்ப்பமா என்று நினைச்சேன், 
                                                                          ஆனால் போன அலுவல் கொஞ்சம் தலையில் பிக்கான் போட்டு நெம்புற மாதிரியான உடல்நலக்குறைவு " இனியும் பொறுக்கமாடேன் கையை விடப்போறேன் " என்ற எமெர்ஜெஞ்சி நிலைமை சம்பந்தமானது. ஆனாலும் அவள் சுவிடீஷ் பாஷையை எப்படி உச்சரிப்பில் கலந்து கொடுத்து கதைக்கும் விதத்தைக் கவனித்தேன்.
                                                                            அவள் கதைத்த சுவீடிஷ் மொழியில் அரபி வினைமுற்றுக்கள் எழுப்பும் சத்தம் உரத்து வந்தது. கடுமையான தொனியில் வாள் போல வீசும் கண்களால் சத்தங்கள் இன்னும் கொஞ்சம் பயப்பிடும்படியாக வேகமாகக் கதைத்தாள் .
                                                                  நான் நோர்வேயில் பல வருடம் வசித்துவிட்டு வந்ததால் என்னோட சுவீடிஷ் உச்சரிப்பில் நோர்க்ஸ் அதிகமாக இருந்தது, அதை அவள் சடாரென்று கவனித்தாள்,எனக்கு சுவீடிஷ் கொன்னை தட்டுறமாதிரி வந்தது ,அதில் நான் எப்படிவிளக்கமாகச் சொல்வது என்று ஜோசிக்க ரெண்டாம் முறையும்
" உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும், நோர்வேயில் இருந்து வந்திருக்கிறாயா ?, அல்லது ? நீ நோர்வேயியனா ? "
                                                                  என்ற கேள்வியை அரபிக்கள் விசிறும் ஸ்டைலில் என்னப்பனே அய்யப்பனே என்று பெங்களூர் ரமணியம்மா போல கை ரெண்டையும் விரிச்சுப் பாடுவதுபோலக் கேட்டாள். .நான் அவளுக்கு என்னோட பிரசனையைச் சொன்னேன். என்னோட மக்கள் வதிவிட சமூக விலங்கு அடையாளமான நம்பரைக் கேட்டாள் . சொன்னேன், 
                                                         
சடக்கு சடக்கு கணனியில் மஜெந்தா நிறத்தில் நெயில் போலிஸ் போட்டு, அழகாக கவனமெடுத்து வெட்டிய நகங்களுக்கு நோகாமல் எட்டு விரல்களுக்கும் வேலையைக் கொடுத்து குத்தினாள். குத்திப்போட்டு ஏதோவொரு வரவுக்காக காத்திருந்தாள். எடக்கு முடக்கான  திருப்பத்தில குளுவன் மாடு திருத்த வருமே அதுபோல என்னமோ வந்த மாதிரி வெருண்டு அடிச்சு,  என்ன வந்திச்சுதோ தெரியவில்லை சடாரென்று என்னைப் பார்த்தாள் .
" உன்னோட மக்கள் வதிவிட பதிவு இலக்கம் சரியா,,அல்லது பிழையாக சொல்லியிருக்கிறியா"
" இல்லையே,,இன்னொருமுறை சொல்லுறேன் ,,"
" சரி சொல்லு, ஒவ்வொரு இலக்கமாக இடைவெளி விட்டு சொல்லு, கடைசி நாலு கொண்ரோல் நம்பரையும் கவனமாகச் சொல்லு,,இங்கே என்னவோ உதைக்குது "
" என்ன உதைக்குது "
" அதுதான் தெரியவில்லை,,இப்ப திருப்பி அடிக்கவும் அதே பதில்தான் வருகுது "
" என்ன பதில் வருகுது "
" உனக்கு இந்த " அ வை சே ஒ நி " இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்கு என்று சொல்லுது "
" அப்படியா என்ன தடைகள் அது "
" அதுபற்றிய விபரங்கள் இங்கே இல்லைப்பா,,,"

" ஏன் இல்லை ,,கணனி திரையை என்பக்கம் திருப்பு,,நான் வாசிக்கிறேன்"

",வருமானவரித் திணைக்களம் தான் அந்த முடிவுகளை எடுத்து இங்கே வார்னிங் போல டேட்டா ப்ளாகிங் அனுப்பி இருக்கிறார்கள் "

" என்னது,,,சொல்லுறாய்"

"வருமான வரி ஒழுங்கா கட்டினால் தான் அரசாங்க சேவைகள் கிடைக்கும் பா.  அனுவல் டாக்ஸ் இன்கம் செலுத்தாமல்  வெருட்டி மருட்டி .ஓசியில நீ அலுவலைக் கொண்டுபோக சுவீடிஷ் அரசாங்கம் என்ன உனக்கு தாலி கட்டின பொண்டாட்டியா   "

"வரி பலவருடம் காட்டவில்லை எண்டுறது உண்மைதான்,,அதுக்காக அவசர  மருத்துவ சேவையுமா ஒரு மனிதனுக்கு கிடைக்காமல் செய்விங்க   "

" குழம்பாதை,,சிம்பிளா கேட்க்குறேன்,,ஏன்பா நீ வரி காட்டவில்லை  அல்லது கட்டவில்லை ,ரெண்டுல எதுவோ ,என்னமோ எதுவா இருந்தாலும் நீ ஏன் அதை செய்யவில்லை  ,,பதில் சொல்லுப்பா "
" நானென்லாம் வெள்ளையனுக்கு எந்தவிதமான வரியும் கட்டமாட்டேன் ,,கட்ட விருப்பமும் இல்லை "
" அடிடா சக்கை அம்மன் கோவில் புக்கை எண்டானாம், ஏன்பா ஏன் அப்படி ஒரு பிரியோசனமில்லாத கொள்கை வைச்சு இருக்கிறாய் "
" அதுதானே சொல்லுறேன் வரி கட்ட மாட்டேன்  என்று, எதுக்கு மீண்டும் மீண்டும் குடையுறாய்"
" ஏன்பா, உன் அளவில் அதுக்கு என்ன விளக்கம் வைச்சு இருக்கிறாய் சொல்லுப்பா "
" நானென்லாம் பாஞ்சாலம் குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மண் இனம் , வரி ,கிஸ்தி,குஸ்தி எல்லாம், வெள்ளையனுக்கு கட்டமாட்டோம் பா "
" அது யாருப்பா பானசாலம் கிறிச்சி கொட் ட பம்மன் ?"
" ஒழுங்கா சொல்லு,, வெள்ளையனுக்கு வரி கட்டாத அந்த மாமனிதனின் பெயர் பாஞ்சாலம் குறிச்சி வீரபாண்டிய கட்டப்பொம்மண் "
" சரிதான் ,,இதுவேறயா ,,,அந்தாள் யாருப்பா ?
" வெள்ளையனுக்கு வரி கட்டாமல் நாற்று நட்டாயா ? யூரியா உரம் போட்டியா ? களை பிடுங்கினாயா ? களை நாசினி மருந்து அடிச்சாயா ? கொஞ்சி விளையாடும் எங்களூர்ப் பெண்களுக்கு தேங்காய்ப்பூசம்பல் அரைச்சுக் கொடுத்தாயா ? என்று நெஞ்சை நிமிர்த்தி நேராகவே கேட்ட மன்னன் "
" அப்படியா,,அப்ப பின்ன வரி கட்டாமல் அந்த நாட்டியலயே இருந்திருக்கலாமே,,ஏன்பா இங்கே வந்து எங்களின் உயிரை எடுக்கிறாய் "
" ஹஹஹஹஹஹஹஹஹஹ "
" ஏன்பா இந்தப் பழைய கட்டிடமே அதிர்ந்து விழுகிறமாதிரி சிரிக்கிறாய்"
" பாஞ்சாலம்குறிஞ்சி வீரபாண்டிய கட்டப்பொம்மண் போல சிரிச்சேன் "
"ஓ,,அவர் இப்பிடி சிரிக்கிறதை நீ நேர்ல வேற பார்த்திருக்கிறீயா "
" இல்லை சினிமா படத்தில சிவாஜி கனேசன் என்ற நடிகர் கட்டப்பொம்மண் ஆக நடிக்கும் போது இப்பிடித்தான் சிரிப்பார் ,,அதைத் தான் பார்த்துக் கொப்பி அடிச்சு சிரிச்சேன் "
" சரி விடுப்பா,,வருமான வரி கட்டுறது முக்கியம்பா,,அதுகள் ஒழுங்கா கட்டாமல் ஓசியில அரசாங்க சேவை உதவிகளுக்கு தொங்கிக்கொண்டு நிக்கிறது கேவலம் பா, என்னமோ நான் சொல்லுறதை சொல்லிட்டேன் "
" அப்படியா "
" ஹ்ம்ம், அப்படித்தான்,,நீ உழைப்பு வரி கடந்தவருடம் கட்டாமல், அல்லது வருமானவரி ஏய்ப்பு போல எண்ணவும் தில்லுமுல்லு செய்து இருக்கிறாயா,"
" அப்படியா "
" அப்படியென்றால் தான் அதிகம் இப்படி அ வை சே ஒ நி உதவிகள் தடை செய்வதுக்கு எச்சரிக்கை வரும் "
" சட்டப்படி .எனக்கு இந்த சேவை கேட்க்கும் உரிமை இருக்கு "
" ஆமாப்பா,,சடடபடிதான் உனக்கு அ வை சே ஒ நி " இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்குஎன்றும் சொல்லுது "
" இந்த உதவி அவசரமா கிடைக்காவிடடாள் நான் செத்துப்போவேன் "
" அட அட அட ,,நீதான் விடாக்கண்டன் கொடாக்கண்டன் போல குத்தி எழுப்பி நிக்கிறியே "
" அது வெளியால,,உள்ளுக்கு என்ன நிலைமை மோசமாக்கிக்கொண்டு போகுது தெரியுமா"
" நீ சாகமாடடாய் என்னைக் கேள்விகேட்டு என்னை முதல் சாகடிச்சுப்போடுதான் நீ சாவாய் "
" அப்படியா.. இப்ப என்னதான் செய்யலாம் "
" அதுதான் எனக்கும் விளங்கவில்லை, என்னோட மேலதிகாரி உள்ளே இருக்கிறா, அனுபவம் நிறைய உள்ள பெண்மணி, கொஞ்சம் நேரம் தா, அவாவைக் கேட்டுச் சொல்லுகிறேன் "
                                                                          என்று சொல்லி ரிசப்ஷனுக்கு உள்ளே இருந்த கதவைதிறந்துகொண்டு போனாள். போய் எப்படியும் ஏதாவது ஒரு முடிவோடு வருவாள் என்றுபார்க்க. கதவைத் திறந்துகொண்டு ஒரு வயதான சுவீடிஷ் பெண்மணி வந்தா. அவாவுக்குப் பின்னால அந்த இளம் ரிஷப்சனிஸ்ட் வந்தாள் . வந்த வயதான அதிகாரி என்னைப் பார்க்கவில்லை 
                                                                      நேராப்போய் கணனியின் திரையைத்தான் பார்த்தா, பார்த்திட்டு , என்னவோ இன்னும் சில ரகசியமான சில சொற்களை தேர்வு செய்து குத்தினா, குத்திப்போட்டு,கொஞ்சநேரம் காத்திருந்து போட்டு ,
" ஆஆஆஆகாகாகா.... ஜஸ்ஸோ ஆஆஆஆகாகாகா.... ஜெத்தி கொன்சிட்,,ஹ்ம்ம்....ஜஸ்ஸோ "

சுவீடிஷ் மொழியில் " ஆ ஆ ஆஆ கா கா கா...".என்று இழுத்து விழித்தால் அது என்னமோ அலுப்பிலதான் கொண்டுவந்து நிட்பாட்டுமென்று நல்லாவே தெரியும் . ஆனாலும் என்ன சிக்கல் இந்தச் சிலெடுப்பு எண்டு விளங்கவில்லை. நான் பொறுமையாக அந்த ரிசப்ஷன் மேசைக்கு முழங்கையை முண்டுகொடுத்துக்கொண்டு நின்றேன். 
                                                               அந்த வயதான அதிகாரி அப்போதுதான் என்னை நிமிர்ந்து பார்த்தா, பார்த்துப்போடு அவசரமாக கைக்குழந்தையைக் கிணத்துக் கட்டில வைச்சுப்போட்டு வந்தமாதிரி சடார் என்று உள்ளே போட்டா . அந்த இளம் ரிஷப்சனிஸ்ட் கொஞ்சம் பொறு என்பதுபோல கண்களால் சைகை காட்டினாள்

சுவீடனில் இப்பெல்லாம் பல காரணங்களுக்காக தங்கள் தாய்த்திருநாடுகளில் இருந்து பிடிங்கி எறியப்பட்டு வந்த வெளிநாட்டு பெற்றோர்களுக்கு சுவீடனில் பிறந்த பிள்ளைகள்தான் வளர்ந்து படித்து அதிகம் முன்னுக்கு வேலை செய்கிறார்கள், சுவீடிஷ் மக்கள் முடிவுகள் எடுக்கும் அதிகாரமான அதிகம் சம்பளம் எடுக்கும் வேலைகளில் பின்னுக்கு எப்போதும் இருக்கிறார்கள்.
                                                                           அதில ஒரு புதிய இனமக்கள் எப்படி ஒரு புதிய நாட்டில் வேலை என்ற ஒரு பரந்த சமூக வெளியின் முக்கியமான பரிமாணத்தில் இயல்பாக உள்வாங்கப்படுகிறார்கள் என்பது வெளிப்படையாக இருந்தாலும், சில பாரம்பரியமான பழக்கவழக்கக் குழப்பங்களும் மறைமுகமாக இருக்கு. 
                                                                  அதிலொன்று கேள்வியை உள்வாங்கி அதுக்கு பொருத்தமான பதில் சொல்லாமல் வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல எதிர்வினைகள் கிடைப்பது

அந்த இளம்பெண்ணைக் கவனிக்க இப்போது எனக்கும் அவகாசம் கிடைத்தது. 
                                                                     மத்திய கிழக்கு அரேபியப் பெண்களை கண்ணை மூடிக்கொண்டு பார்த்தாலே அழகானவர்கள். இவளோ ஓடோமான் எம்பயர் காலத்து அழகை அப்படியே சிதறவிடாமல் அள்ளிக்கட்டிக் கொண்டு வந்தவள் போலிருந்தாள். நல்ல வேலை. நல்ல சம்பளம், விலை அதிகமான டோல்லஸ் கபானா கண்ணாடி போட்டிருந்தாள். அதன் பிரேமில் DG என்று வெள்ளை ரத்தினக்கற்களில் அந்த வியையுயர்ந்த பெயர் பதிக்கப்பட்டிருந்தது , 
                                                                  சுருக்கமாகச் சொன்னால் அவளுக்குக் கிடைத்த காதலனோ அல்லது கணவனோ போன ஏழு பிறப்பிலும் கொடுத்துக் கை சிவந்த புண்ணியவாளனாயிருக்க வேண்டும். அவ்வளவு ரம்மியங்கள் அங்கம் முழுதும் .

இப்போது அந்த ரிஷப்சனிட் மறுபடியும் உள்ளே போனாள்,பிறகு கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வந்தாள் , வந்த வேகத்தில் என்னிடம் அலட்சியமாகக் கேள்விகள் கேட்டாள். அவள் கேட்ட விதம் இவனை வேறெங்காவது ஒரு அலுவலகத்துக்கு அடிமாட்டு விலைக்கு சாச்சு விடமுடியுமா என்பது போலிருந்தது , மேசையில் பேனையை சிலம்பு விசுக்குபவர்கள் போல இரு முனைகளையும் இரண்டு பக்கமும் தட்டிக்கொண்டு
" உனக்கு இந்த அ வை சே ஒ நி உதவி சேவை இன்றைக்கே வேணுமா "
" இல்லைப்பா அடுத்த வருஷம் தேவை "
" என்னது ,கிண்டல் அடிக்கிறியா "
" வேற என்னடி சொல்ல மோட்டுக்கழுதை ,அந்தரிச்ச அவசர உதவிக்குத்தானே " அ வை சே ஒ நி " என்றே இருக்கு ,"
                                                                 அவள் முகத்தில எள்ளும் கொள்ளும் அள்ளுகொள்ளையா வெடிக்கிறமாதிரி என்னைப் பார்த்தாள். ஒரு அதிகாரியின் நிறைவேற்று அதிகாரம் அவள் பார்வையில் இருந்தது. ஒரு பேப்பர் கோப்பையில் தண்ணி எடுத்துக் குடித்தாள்
" வார்த்தைகளை,,அளந்து பேசு,,இன்னொருமுறை இந்த வார்த்தை வந்தால்,,உனக்கும் எனக்கும் இடையில் சிக்குறூட்டி வந்து நிக்கவேண்டிவரும் "
" ஹ்ம்ம், வேற என்னதான் சொல்லமுடியும் ,சொல்லு நீ சொல்லுறதை பார்த்தால் இப்ப உதவி கேட்டா பெஞ்சன் எடுக்கிற காலத்திலேதான் பதில் வரும் போலிருக்கே "
" வார்த்தைகளை,,அளந்து பேசு,,எந்த வேலையும் நீ நினைக்கிற நேரத்தில நடக்காது,,அது அது அதன் அதன் வேகத்திலதான் நடக்கும் ""
" அதெண்டா உண்மைதான்,,,முன்னமெல்லாம் இப்பிடி இல்லை, இப்ப அந்தப் பொய்த்துப் போன பொட்காலத்தைக் கதைச்சு வேலை இல்லையே "
" ஏன்பா,,உனக்கு என்ன பிரச்சினை முதலில் ,வார்த்தைகளை,,அளந்து பேசு, தொண தொண என்று கரிச்சுக் கொட்டாதே ,உனக்கு இந்த அ வை சே ஒ நி உதவி சேவை இன்றைக்கே வேணுமா !"
" ஆமப்பா,,இன்றைக்கே அவசரமா தேவைப்படுவதால்தானே இன்றைக்கே கலியாணப் பந்தல் கால் போட்ட மாதிரி வந்து நிக்குறேன் "
" அது தெரிகிறது,,ஆனால் உன்னோட பெர்சனல் நம்பர் எகிறிக்கொண்டு நிக்குதுப்பா "
" அது தெரியுது,, வேற எங்கேயும் இந்த மாதிரி அ வை சே ஒ நி உதவி பெறமுடியுமா "
" யெஸ்,,அதுதான் என் மேலதிகாரி சொன்னா,ஒரு டெலிபோன் நம்பரும் கதைத்து தேடியெடுத்து தந்தா , நம்பர் தாரேன் அதுக்கு நீயே போண் அடி ,,இது முக்கியமான இடம் "
" ஓகே ,,அது நல்ல அணுகுமுறை,நன்றி "

அந்த ரிஷப்சனிஸ்ட் ஒரு நம்பர் தந்தாள், நான் அவடத்தில இருந்தே என் கையடக்கியில் அந்த நம்பருக்கு அடிச்சேன் ,எதிர் முனையில் ஒரு நடுத்தர வயது ஆணின் குரல். குரலே நம்பிக்கைதருபடியாக இருந்தது
                                                            " ஹாய் , உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                                                                 என்ற கேள்வி பின்னனியில் பல குரல்களோடு ஒரு அலுவலகத்தில் இருந்து நுழைந்த சில நிமிடங்களில் நான் என் பிரச்சினையையும், என்னோட மக்கள் வதிவிட சமூக விலங்கு அடையாளமான நம்பரையும் சொன்னேன் , 
                                                              கொஞ்சம் கணனி எழுத்துப்பலகையில் விரல்கள் தாறுமாறா ஓடும் சத்தம்,,பின்னர் கொஞ்சம் அமைதி, 
                                                            ஒரு சின்ன ஆச்சரியமான விகசிப்பு, நான் டெலிபோனை செவிப்பறை வரைக்கும் நெருக்கும் படியாக இறுக்கிவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன்
                                                        கொஞ்சநேரத்தில் அடுத்த முனையில் குரல் உயிர்வந்து
" உனக்கு இந்த " அ வை சே ஒ நி " இந்த இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்கு என்று சொல்லுதுபா ,,ஏன்பா என்னதான் பிரச்சினை இப்ப உனக்கு"
" அதுதான் தெரியவில்லை, வேறு எங்காவது உதவி கிடைக்குமா "
" பொறுவாரேன் , இன்னொரு நண்பர் தாரேன் அதுக்கு அடிக்கிறியா , அடிச்சுக்க கேக்குறியா,,அது முக்கியமான இடம் "
" நீயே அடிப்பா அடிச்சு சொல்லு,,எனக்கு சுவீடிஷ் அவ்வளவாக பிரோகிராட்டிகள் லெவலில் விளங்கப்படுத்த முடியாது "
" சரி அப்டியே லைனில் நில்லு "

நான் என்னோட கையடக்கியை வறட்டி தட்ட சுவத்தில சாணி தப்பின மாதிரி அப்படியே காத்தோடு காத்தும்போக்காமல் தப்பி வைச்சுக்கொண்டு நின்றேன், அந்த மனிதர் வேறெங்கோ டெலிபோன் அடிச்சு கதைச்சுக் கொண்டிருந்தார், பல குழப்பமான சத்தங்கள் குறுக்க மறுக்க வந்து முடிய
" அந்த இடத்திலேயும் இந்தப் பிரச்சினைதான் பா , உனக்கு இந்த " அ வை சே ஒ நி " இந்த இடத்தில உதவி கொடுப்பதும் சில தடைகள் இருக்கு என்று சொல்லுதுபா ,,ஏன்பா நீ என்னதான் குளறுபடி செய்து வைச்சிருக்கிறாய் "
" ஹ்ம்ம்,, வேறே எங்கேயும் உதவி எடுக்கலாமா "
" ஹ்ம்ம்,,பார்க்கலாம் இன்னொரு இடமிருக்கு ,இது மிக மிக முக்கியமான இடம் ,,பொறு கேட்டு சொல்லுறேன் "
" சரி,,உங்கள் முயட்சிக்கும்,,நேரத்துக்கும் நன்றி "

நான் என் கையடக்கியை இன்னும் அதிகமாக இரவுக்காதலர்களின் நெருக்கம் போல காதுக்கு உள்ளேயே தள்ளி வைச்சுக்கொண்டிருந்தேன், பல மெல்லிய ஓசையில் குழப்பமான, கேள்விகளும் பதிகளும் , மவுனங்களும், உத்தரவுகளும் , சந்தேகங்களும் கலந்த சத்தங்கள் குறுக்க மறுக்க வந்து முடிய
" யெஸ் ,,இந்த இடம் உனக்கு உதவும்,,இதுதான் கடைசி இடம் பா ,,அனால் நீயேதான் இங்கே போன் அடிச்சு கதைக்கவேண்டும்,ஓகேயா,,இதுதான் மிக மிக முக்கியமான ,நம்பகமான, உத்தரவாதமான அலுவலகம், ஓகே யா "
" சரி,ஓகே,நன்றி உங்கள் நேரத்தை செலவழித்து இந்த நம்பர் எடுத்து தந்தத்துக்கு "

சுவீடன் ஒரு காலத்தில் யானை காதுமடலை படக்குப் படக்கு என்று அடிச்ச மாதிரி வேகமாக எல்லாமே நடந்த நாடு. இப்ப இங்கே சிஷ்டம் வெகு சிலோவாக போகுது, உண்மைச் சொன்னால் பல இடங்களில் சிஸ்டமே இல்லை. அந்தத் துன்பத்தை உங்களுக்குத் சொல்லி கட்டி அழ இப்ப நேரமில்லை என்பதால் விட்டு போட்டுப் போகிறேன்.
                                                                                 சிலநேரங்களில் இப்பிடித்தானே சரியான இடத்தை மூக்கைச் சுத்தி வந்துதானே கண்டடைய வேண்டி இருக்கு . நான் கொஞ்சம் என் கையடக்கியை காதில இருந்து எடுத்து மூச்சு விட்டேன். இந்த அலுவல் இன்றைக்கே இந்த நேரமே முடிக்க வேண்டும் என்பதால் , ரிசப்ஷனுக்கு கொஞ்சம் தள்ளி இடம் விட்டு வந்து ,என் கையடக்கியில் அந்த நண்பரை அடித்தேன் , 
                                                                    அது மூன்றுதரம் மணியடித்து முடியமுதலில் ஜாஸ் ம்யூசிக் போல ஒரு இசை வந்தது பிறகு
" அவசர மனிதர்களின் அவசரமான வைத்திய சேவைகளுக்கு நம்பிக்கை தருகிறோம் "
                                                                        என்று ஒரு அழகான பெண் டெலிவிஷன் சீரியல்களுக்கு நடுவில கல்யாணி ஜூவல்லர்ஸ் விளம்பரம் போல சொல்லிமுடிய அந்த ஜாஸ் இசை மங்கியது. அந்த அலுவலகத்தின் தீம் ஜிக்கில்ஸ் கேட்கவே இவளவு நேரமும் பட்ட அவஸ்தைகள் விலகி உத்தரவாதமாக இந்த இடத்தில உதவி கடடாயம் கிடைக்குமென நினைக்கவே
"அவசர மனிதர்களின் அவசரமான வைத்திய சேவைகளுக்கு அ வை சே ஒ நி நிலையம் உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                                             என்ற கேள்வி உள்நுழைந்து

அந்தக் குரலை இரண்டு மணித்தியாலங்கள் முன்னுக்கு கேட்டது போலிருந்தது , என்ன குழப்பம் என்று விளங்காமல் ,திருப்பியும் அடிச்சேன் , இப்போதும் அது மூன்றுதரம் மணியடித்து முடிய ,
" அவசர மனிதர்களின் அவசரமான வைத்திய சேவைகளுக்கு அ வை சே ஒ நி நிலையம் உனக்கு என்னதான் பிரச்சினை,,நாங்கள் எப்படி உதவ முடியும் "
                                             என்று கேட்க,,நான் ரிஸப்ஷனைப் பார்த்தேன்,,அந்தப் பெண்தான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்
" எனக்கு ஒரு அவசர அவசரமான வைத்திய சேவை மண்ணாங்கட்டிப் பிரச்சினை ஒன்றும் இல்லை,,சும்மா பொழுது போகவில்லை அதனால அடிச்சேன் "
                                             என்று சொல்லிப்போட்டு வந்திட்டேன்.
..

1 comment :

  1. ஹ்ஹஹ்ஹஹா ....... சிஸ்டம் ������

    ReplyDelete