Friday 4 December 2015

Chennan Chiru Vayathil .Guitar Live Cover





ஒரு பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவிக்கும் இடையில் நடக்கும் புரிந்துணர்வை எடைபோட்டுப் பார்க்கும் ஜதார்த்தம் அது உருவாகும் பல குழப்பங்ககளை ஒரு சினிமாவாக எடுத்தார்கள். கணவன் வேலைசெய்யும் இடத்தில வேலைசெய்யும் ஒரு பெண்ணுடன் தன் கணவனுக்கு தொடர்பு இருக்கு என்று தெரிய வந்த போது வழமையாக எல்லாக் குடும்பங்களிலும் வெடிக்கும் சண்டையும் சந்தேகமும் தான் " மீண்டும் கோகிலா "என்ற படம்.
                                               உலகம் தெரியாத பதிவிரதையான மனைவி , உலாசமான பொழுதுபோக்கு உள்ள வக்கீல் வேலை செய்யும் கணவன்.இவர்கள் இருவருக்கும் நடுவில் ஆடம்பரமான ஒரு பெண் இப்படியான களமுள்ள ஒரு கதையை முதலில் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன்தான் அரைவாசி வரை இயக்கினார். அவர் இயக்கத்தில் படம் சீரியஸ் ஆக வரவே, அந்தக் கதையின் படி அது ஒருவித காமடியாக வரவேண்டுமென்று அவரை தூக்கிப்போட்டு ரங்கராஜன் என்ற இயக்குனரைப் போட்டு புதிதாக இயக்கி இருக்கிறார்கள்.
                                                        அச்சொட்டாக ஸ்ரீதேவியே பாடுவது போல எஸ். பி. ஷைலையாவின் சின்னஞ்சிறு குரலில்,இடையில் வரும் ஹம்மிங்கில்,தயக்கத்தில் கோகிலாவுக்கு ஒரே ஒரு பாடலில் உயிர்கொடுத்த இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் பாடல் ஒலி வடிவில் கேட்பதை விட விசுவலாகப் படத்தில் முதல் முதலாக மாப்பிளையைக் கல்யானப் பெண் பார்க்கும் ஒரு பிராமண வீட்டில் எப்படி நிகழ்வுகள் இருக்கும் என்று ஒரு பாடலோடு படமாக்கியிருந்தார்கள்.
                                                               திருமணம் முடிக்கக் காத்திருக்கும் பெண்கள் கர்நாடக சங்கீதம் கொஞ்சமாவது படித்து அதைப் பாடவேண்டும் என்ற அந்தப் பழையகால சம்பிரதாயங்கள் இப்போது அருகிவிட்டது போல இருக்கு. கிளி போலப் பெண் இருந்தாலும் " பெண்ணுக்குப் பாடத் தெரியுமா " என்ற ஒரு டயலக் எப்பவுமே பெண்பார்க்கும் போது வந்து விழும். இப்ப உள்ள நிலைமையில் கல்யாணப் பெண்ணைப் பாடச்சொன்னால் ஐ போனில MP3 Download பாட்டைப் போட்டு அதுக்கு வாயசைப்பார்கள். வேற என்னதான் செய்யமுடியும் அவர்களால்.
                                                     இசை படித்த பெண்களின் எண்ணங்கள் எப்பொதுமே மென்மையாக இருக்கும். அது கணவனுடன் சேர்ந்து வாழும்போது குடும்பத்தில் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் நம்பி இருக்கிறார்கள். மனதைச் சாந்தப்படுத்தும் இசை என்பதே இதயம் வரை இறங்கி இசைந்து போவது தானே.
                                                 இந்தப் பாடலின் பல வரிகள் சுப்பிரமணிய பாரதியார் அவரின் கனவுக் காதலி செல்லம்மாவை நினைத்து எழுதியவை. கவியரசர் கண்ணதாசன் அந்த வரிகளையும் தன்னோட வரிகளையும் இணைத்து இந்தப் பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடல் எப்படி அதன் கதையோடு ஒட்டி உறவாடிப் போகுமென்று வரைவிலக்கணம் போல இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்த பாடலிது.

No comments :

Post a Comment