Thursday 5 March 2015

மனதோடு மட்டுமே....

தலைக் கனம்
பிடித்திருந்து
விழுத்த முடியாதவர்களையும்
வழுக்கி விழுத்தி .
அழகு பார்த்த 
உறை பனி
அக்கறை காட்டத்
தேவையில்லாமல்
பாதை ஓரங்களில்
விடை பெறுகிறது.....
நிலை தடுமாறி
சமநிலை இழப்பது
கவனிக்க வேண்டிய
முக்கிய காரணமாகி .
அதிலிருந்து
தனிப்பட்டு
வேடிக்கைப் பார்க்க
முடியவில்லை..
இவ்வளவுநாளும்...
இன்னும்
சில நாட்கள்
சூரிய வெப்பம்
வெறுமனே
கவனித்தால் போதும்.
கீழ்ப்படிதலோடு
அவை
வாதம் செய்யாமல்
அழிந்து விடும்.....
புதிதாகும்
எல்லாவற்றையும்
கொண்டாடுகிற
வசந்தகால .
ஆன்மாவை
நேசிக்கின்ற
புற்களின்
முதல் வரவுக்கு இனி
எந்த வரைமுறையும்
கிடையாது...
உறைபனிக் கால
சப்பாத்துக்களின்
புரிந்துணர்வோடு
பயமின்றிப் பயணம்
செய்து முடித்த
பாதை நிகழ்வுகளின்
ஆவணங்கள்
உருகி மறைந்து
இல்லாமல் போவது
மனதோடு
மட்டுமே
முழுமையாக
எஞ்சியிருக்கட்டும்.
நாவுக் அரசன்
ஒஸ்லோ 05.03.15

1 comment :