Sunday 27 March 2016

மாரிமுத்து

ஒரு கதையில் கற்பனை காட்டாறாக ஓடுகிறது என்று இலகுவாகச்  சொல்லி முடிக்கலாம் . ஆனால் ஆறும் படிகள் தாண்டாத  கரைக்குள் தான் ஓடுகிறது. சில நேரம்  நாங்கள் எதிர்பார்க்காத  ஒரு நாள் அது உடைக்கலாம். ஆனால் எதுவும் விதிகளை  மீற முடியாது. வெள்ளம்  பள்ளம் நோக்கி வழிந்து ஓடிவிடும் . அவ்வளவுதான். அதே போல சுயநலமான  மனிதர்கள் தங்கள்  இஷ்டத்துக்கு அமைத்துக் கொண்டிருக்கும் தந்திரமான வழிகள் வேறு . இயற்கையின் நேரான பாதைகள்  என்பதே வேறு.

                                        மாரிமுத்து வைத்து இருந்த ஒற்றைச் சுழி வடக்கன் மாட்டுக்கு காளிங்கன் என்று  பெயர் வைச்சு இருந்தார். அவர் வைச்சு இருந்த  மர  இழுவை வில்லு வண்டிலுக்கு அதைத்தான் மூக்கனாங் கயிறு போட்டுக்கட்டி வண்டில் ஓடுவார். நலமடித்ததால்   கல்யாணம் காட்சி  குடும்பம் வம்சம் என்று எதுவுமேயில்லாத காலிங்கன் தான்  அவரோட குடும்பத்தைக்  குண்டும் குழியுமான  கிரவல் வீதிகளில் மூக்காகல நுரை தள்ளத் தள்ள  இழுத்து இழுத்து ரெண்டு நேரமாவது  வீட்டில அடுப்பு  எரியவைத்து உலை வைக்கக்  காப்பாற்றியது. 

                                      காளிங்கன்  என்ன வகை நாம்பன் மாடு என்று டீட்டேயிலா சொல்லுறது கஷ்டம். விருதுநகர் காங்கேயன் காளைகள் போல அது ஒன்றும் பெரிய அளவில் "சிக்ஸ் பக் " கட்டழகுத் தோற்றம் என்றெல்லாம் சொல்வதுக்கு எதுவும் இல்லை. அட்டைக் கறுப்பும் செம்பாட்டு நிறமும் கலந்த ஒருவகை ரோமம். முகத்தில வலது பக்கம் மட்டும் கொஞ்சம் வெள்ளை நிறத்தில பால் அப்பம் அப்பி விட்ட மாதிரி ஒரு அடையாளம். நெற்றியில் ஒரு சின்ன எழும்பல் . மாரிமுத்துவின் கட்டை வண்டில் இழக்க இவளவு தகுதியும் அதுக்குப் போதுமானதாக இருந்தது 

                                         அதன் ரெண்டு நாம்பன் கொம்பிலும் போன வருஷம் மாட்டுப் பொங்கலுக்கு தடவின குங்குமம் கொஞ்சம் அழியாமல் இருக்கும். மஞ்சள் தண்ணி ஊற்றிக் குளிக்க வார்த்து ,சந்தனப்பொட்டு வைச்ச அந்த மாட்டுப் பொங்கல் மட்டுமே அதுக்கு எப்பவுமே மிகவும் பிடித்த நாள் . அன்று மட்டுமே மாரிமுத்துவின் குடும்பம்  தன்னையும் ஒரு உயிர் உள்ள ஜீவன் என்று மதித்து நடத்திய நாள் என்று எப்பவும் நன்றியோடு நினைச்சு , அந்த நாளுக்காக ஏங்கிக் கொண்டு கடைவாயில் எச்சில் வடிய அசை போட்டுக்கொண்டிருக்கும் .

                                  மற்றப்படி ஊருக்குள்ள திமிறிக்கொண்டு சவாரி ஓடுற வண்டில் மாடுகளும் வைத்திலிங்கம் அய்யா வீட்டில நின்றது. காளிங்கன் அப்படி எல்லாம் ஓடும் வலு இல்லாத வகை. ஒரு வண்டில் இழுக்கும் வலு மட்டுமே அதனிடம் இருந்தது. மாட்டு வண்டில் சவாரிப் போட்டிகள் தவறாமல் பார்க்கும் மாரிமுத்துக்கு சவாரி விடுற மாடுகள் வைச்சிருந்து போட்டிகளில் பங்குபற்றும் கனவு எப்பவுமே ஒரு ஓரத்தில் இருந்தது.  அது எப்பவுமே ஒரு அதிகாலை நித்திரையில்   கால்களை  வேகமாக  உதைத்த கனவாகவே ஓரமாக  ஓடிக்கொண்டிருந்தது. 

                                  மாரிமுத்து காலிங்கனின் பின்னங்கால்  இடது தொடையில் இரும்புக் கம்பியை தணல் போல நெருப்பில போட்டு எடுத்து , தன்னோட பெயரை மாட்டில பொறிக்க M M  என்று இங்கிலிசில் ரெண்டு எழுத்து சுட்டு வைச்சார். M M என்கிறது மாரி முத்துவின் சுருக்கமான இனிசல் . பழுத்த தணல் கம்பி சூட்டுக்கு மாடு எகிறும் என்று காளிங்கனின் நாலு காலையும் தேடாவளயக் கயிறால கட்டிப் பாட்டில விழுத்திப்போட்டு, மாடு கத்தாமல்  இருக்க வாய்க்குள்ள யூரியா பாக்கை  அடைஞ்சு  சூடு வைச்சார் . காளிங்கன் " அம்மோய்  ஓடி வந்து  என்னைக்  காப்பாற்று  அம்மோய், அம்மோய்  " என்று அதன் அம்மாவை கூப்பிட்டுக்  கத்தியது அதன் தொண்டைக் குழியை விட்டு வெளியே வரவில்லை. 

                                          தணல் கம்பியால சுட்ட புண் ரெண்டு நாளா ரத்தம் வடிய வடிய காளிங்கன் நடக்கக்  கஷ்டப்பட்டது. மாரிமுத்து அந்தப் புண்ணுக்கு பிடிசாம்பல் தடவி விட்டார். ஒரு கிழமையில் அந்தப் புண் ஆறி அந்த இடத்தில ரோம மயிர்கள் எரிஞ்ச இடத்தில  தோல் கண்டிப்  போய் ,அடுத்த கிழமை அந்த இடம் கரிக்கட்டையால இழுத்த மாதிரி  கண்டங் கறுப்பு ஆகி  அதில M M என்ற எழுத்துக்கள் பதினைஞ்சு அடி தள்ளி நிண்டு பார்க்கவே தெளிவாக தெரியத் தொடங்கியது . மாரிமுத்து அந்த  M M எழுத்தைத் தடவிப் பார்த்து , தட்டிக் கொடுத்து ம் ம் ம்  என்று சந்தோசப்படுவார் . 

                                           பொதுவாக தரவையில் மேயப் போகும்   கட்டாக்காலி அலைச்சல் மாடுகளுக்குதான் களவு போகாமல் இருக்க, அல்லது வழி தவறிப்போனால் கண்டுபிடிக்க  குறி வைப்பார்கள்.  காளிங்கன் வீட்டோட வாழ்க்கைப்பட்டு, நாலு வேலிக்குள்  நிக்கும் அடக்க ஒடுக்கமான வண்டில் மாடு.  மாரிமுத்து தன்னோட பவரைக் காட்ட வேண்டும் என்றே அந்த M M குறியை வைச்சார். மாரிமுத்துக்கு இளிச்சவாயன்களுக்கு தவிச்ச முயலடிசுப்  பவர் காட்ட காளிங்கனுக்கு  M M குறி வைச்சுப்  பார்ப்பதைத் தவிர வேற எந்தத் தகுதியும்  ஊருக்குள்ள அவருக்கு  இருந்ததில்லை . 

                                         சில நேரம் வண்டிலின் பின் சில்லு சேறு அடிச்சு காளிங்களின் பின் பக்கமெல்லாம் செம்மண் தோட்டத்தில கிடந்தது உருண்டு பிரண்ட மாதிரி  சகதியாக இருக்கும். மாரிமுத்து பழைய சாக்கு ஒண்டு எடுத்து தண்ணியில தோச்சுக் கொண்டு வந்து குறி சுட்ட அடையாளத்தை மட்டும் நல்லா துடைச்சு விடுவார். அந்த  M M அடையாள எழுத்துக்கள் அதன்பின் வடிவாத் தெரியும். மாரிமுத்துக்கு அந்த  எழுத்துக்கள் எப்பவுமே முழிப்பா இருக்க வேணும். அவளவு செய்யும் தொழிலே தெய்வமென்று  அக்கறையுள்ளவர்.

                                       குருக்கள் வளவுக்கும்  அம்மன்கிளை  சங்கக்கடைக்கும் நடுவில இருந்த நெருக்கமான பனைமட்டை வரிச்சுப் பிடிச்ச வேலிகள் பிரிக்கும் இடைக் குறிச்சியில் மாரிமுத்துவின் ஓலைப்பத்தி இறக்கின  வீடு இருந்தது. எப்பவும் மாடுச் சாணமும், மாட்டு மூத்திரமும்  கலந்த வாசம்   காஞ்சு வறண்டு வரும் அந்த வீடே மாட்டுக் கொட்டில் போலத்தான்  இருந்தது . பின்னால தென்ன மரங்களுக்கு நடுவில வில்லு வண்டில் அவுத்துப் போட்டுக் கிடக்கும். காளிங்கனை நாலு குத்தி நட்டு நடுவில வைக்கல் போட்ட இடத்தில கட்டி இருப்பார். ஆறுமணிக்கு நுளம்பு அந்த இடத்துக்கு அலைபோல வரும். 

                                                மாரிமுத்துவின் வில்லு வண்டில் அதிகம் எங்கள் ஊரில் எல்லா தொட்டாட்டு  வேலைகளுக்குத்  தேவைப்படும் இழுவைக்கு அம்மாவாசை பறுவம்  ராகுகாலம் என்று  பார்க்காமல் இழுபட்டுப் போகும் . மாரிமுத்து கொடுப்கில வெத்திலையை அடைஞ்சு கொண்டு, தலைக்கு கலர் துவாயால முண்டாசு கட்டிக்கொண்டு கொன்னையாக நாக்கைப் பிரட்டி கமாண்டிங்  கொடுத்துக்கொண்டு  வண்டில் ஓட்டுவார். ஒவ்வொரு நாளும் ஒரு மொத்தமான பூவரசம் தடி முறிச்சு கையில எடுத்துக்கொண்டு தான் வண்டிலில் முன்னுக்கு ஏறுவார் .பின்னேரம் வீட்டுக்கு வரும்போது அந்தப் பூவரசம் தடி விளக்குமாறு போலப் பிஞ்சு தும்பாகி வரும் .

                                                 ஆனால் அவர் ஒருநாளும் இழுவை முடிய நேராக வீட்டுக்கு வர மாட்டார் , நேராக வண்டியோடு  கடுக்காய் கோப்பிறேசனுக்குப் போவார். காளிங்கனை அவிட்டு கோப்பிரேசன் வேலியில் நிக்கிற கோணல்புளிய  மரத்தில கட்டிப்போட்டு, கொஞ்சம் வைக்கல் எடுத்து  உதறிப்போட்டுட்டு உள்ளே போய் பிளாவில தென்னம் கள்ளு எடுத்துக்கொண்டு போய் மணலில  குந்தினால் கோப்பிரேசன் மூடும் வரை கள்ளும் பிளாவும் நீயா நானா  என்று இழுவை நடக்கும் .

                                  மாரிமுத்து எப்பவுமே கோப்பிரேசன் குடிகாரர்களின் குதர்க்கமான பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளாமல் ஒரு  அமைதியான வாதனாராணி மர மூலையைப் பிடிச்சு முழங்காலை மடிச்சுக் குந்தி இருப்பார். சாரத்தை ஒருக்கழிச்சு ஒதிக்கிக் கணுக்காலில்  வைச்சு ,போட்டிருக்கிற சேட்டைக் கழட்டி உடம்பு  வியர்வை முழுவதையும் அதால  துடைச்சுப்போட்டு ,சுருட்டி இடுப்பில கட்டிக்கொண்டு ,பிளாவில கள்ளுக்கு மேலே விழுந்து கிடக்கிற தென்னம்பூவை விரலால் சுண்டி எடுத்து எறிவார் . பிறகு அந்த விரலை ரசித்துச் சூப்புவார்  

                                                    வெறி தலையைக் குத்தி ஏற  காளிங்கனுக்கு கோப்பிரேசன் உள்ளே இருந்தே குரலை என் எம் நம்பியார் போல மாற்றி கமாண்டிங் கொடுப்பார். காளிங்கன் அது பாட்டில அநியாயத்துக்கு வந்து மாட்டின அதன் அடிமாட்டுச் சீவியத்தை நினைச்சுக்கொண்டிருக்கும். கோப்பிறேசன் வேலியை பொஞ்சாதியின்  கை என்று நினைச்சு இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு தடவித்  தடவி வெறியில மாடு நிக்கிறது தெரியாமல் அதுக்கு மேலே மோதி விழும் அஸ்கு பிஸ்குகளையும்  அது இரக்கத்துடன் பார்க்கும்.

                                     " புளிச்ச  கள்ளுக்குக் கதை கள்ளப் பெண்டில்  " என்று சொல்லுவார்கள் பெருங்குடிமக்கள் எங்கள் ஊரில் . பழைய தென்னம் கள்ளின் மப்பில   இழுத்து  இருத்தி  வைச்சுக் கதைக்க ஆள் இல்லாதவர்கள் வெளிய வந்து மாடு எது மனிசர் எது என்று தெரியாமல் வேட்டி அவிண்டு விழ  காளிங்கனோடு கலியாணக் கதையையே  அதுக்கு முன்னுக்கு நின்று கதைப்பார்கள் . " காதலிக்க இப்ப இது நேரமில்லை " என்று பாவப்பட்ட காளிங்கன் அந்த மாடுகளுக்கு சொல்லவா முடியும் ,,இல்லையே  அதுகளையும் சுவாரசிமாக  அது கேட்டுகொண்டே இருக்கும் 

                                        கோப்பிரேசன் படலையை  இழுத்து மூடுற நேரம் தான் மாரிமுத்துக்கு வண்டிலும், காளிங்கனும் நினைவு வரும். எழும்பி வந்து வண்டிலைக் கட்டி ஏறிப் படுத்திடுவார். காளிங்கனுக்கு அந்த சிக்னல் வழமை போலவே விளங்கும் .அது வண்டிலை தானே இழுத்து கிரவல் மண் பாதையில் இருந்து தார் ரோட்டுக்கு ஏற்றி , வலது பக்கமா இடம்பிடிச்சு , பாதையில் வரும் வாகனங்களை விலத்தி , குருக்கள் வளவு சந்தியில் நிதானமாக , பின்னால பாயிற மாதிரிப் பதறிக்கொண்டு நிக்கிற வாகனங்களுக்கு இடம் கொடுத்து  நின்று, மெல்ல மெல்ல பாதுகாப்பாய் வீட்டு வாசலில் கொண்டு வந்து நிற்பாட்டும்.  மாரி முத்துவின் பொஞ்சாதி வந்து வாயே திறக்காமல் வண்டிலை உள்ளே எடுப்பா. 

                                  வழமையா  இப்படிதான் நடக்கும் , ஆனால் அன்றைக்கு  உடையார் வளவுக்கும் பழங்கிணத்தடிக்கும்  இடையில் வைச்சு ஒரு மோட்டர் சைக்கிள்காரன் அவசரத்தில குறுக்க போட்டு காளிங்களின் வலது முன்னம் காலில் முழங்கால் மூட்டுதெறிக்கிற மாதிரி  அடிச்சுப் போட்டான். எலும்பு வரைக்கும் அடிச்ச அடியில்  காளிங்கனுக்கு உயிர் போய் உச்சம் தலையில தடவிப்போட்டு வந்தது. அது கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தது .மோட்டார் சைக்கிள்காரன்  அதைப் படுதூசணத்தில திட்டிப் போட்டு  ஓடிப் போட்டான் . 

                                  மாரிமுத்து வெறி நித்திரையில்  யாரோ தூசனத்தில் பேசியது கேட்டு கொஞ்சம் முழிச்சு பார்க்க, ஒருவரும்  இல்லை. மாரிமுத்துக்குக் கோவம் வந்திட்டுது . எழுப்பி

                                         "எளிய   சவத்தை ,,நீ  எனக்கு  தூசனத்தால திட்டுற அளவுக்கு வந்திட்டியோ  " 

                                            என்று  காளிங்கனுக்கு ஒரு உதை விட்டார். பிறகு பிசதிக்கொண்டு  விழுந்து படுத்திட்டார். காளிங்கன் மாட்டுக் கொட்டிலுக்கு வந்த நேரம் முழங்காலில் சதை கிழிஞ்சு இருந்தது. ரத்தம் திட்டாக அப்பிக்கொண்டு இருந்து .சுண்டியிழுக்கும் வலியும் இருக்க இரவெல்லாம்  மாட்டு இலையானும் நுளம்பும் அந்த புண்ணுக்குப் போட்டி போட்டது.

                                            அடுத்தநாள் ஓலை ஏற்றிப் பறிக்க போக வேண்டி இருந்ததால் மாரிமுத்து காலையில் எழும்பி நல்ல வளமான ஒரு மொத்தப் பூவரசம் கம்பு முறிச்சு போட்டு வண்டிலுக்கு காளிங்கனை அவிட்டுக் கட்ட இழுத்த நேரம் தான்  மாடு முன்னம் காலில் நொண்டுவதை பார்த்தார், கிட்ட வந்து முழங்காலைப் பார்த்தார் .

                                          " சவத்தை,,நேற்று இரவு  எங்கயோ கொண்டுபோய் காலைச் செருகிப்போட்டுதே ,,எடியே வாடி  இங்க,,இங்க வந்துபார்,,இரவு  என்னடி நடந்தது,,நீ தானே கயிறு அவிட்டுக் கட்டினனி..என்னடி வெள்ளி வேதாளமே பாத்தனி ,சவத்தை ,,,,பாரடி  மாடு  காலை நொண்டுது "

                                       என்று சொல்ல மாரிமுத்துவின் பொஞ்சாதி மூக்கால சளி  வெள்ளையா ஓடிக்கொண்டு இருந்த ஒரு கைக்குழந்தையை இடுப்பில வைச்சுக்கொண்டு வந்து பார்த்தா, அவரின் மற்றப்  பிள்ளைகளும்   ஓடி வந்து பார்த்தார்கள் 
  
                                   " சவத்தை  இரவு என்னடி  பார்தனி , உனக்கு கண் என்ன பிடரியிலையா , மாடு இரவு சவட்டி இருக்கும்,,நீ என்னடி  பாத்து அவிடுக் கட்டினனி,,வண்டிலில ஒரு சேதமும்  இல்லை,,முன்னம் கால் உடைஞ்ச மாதிரி இருக்கே "

                                  என்று திட்ட , மாரி முத்துவின் மனுசி வாயைத்திறந்து  

                                  " இல்லையுங்கோ ,,நான்  இருட்டில  சரியாப்  பாக்கலையுங்கோ "

                              " எடியே,,சவத்தை,,நீ ஆற்ற ........ பார்த்துக்கொண்டு கவிண்டு  கிடந்தனியடி  இரவு முழுவதும்,,சொல்லடி  சவத்தை "

                                " காயத்தைப்  பார்க்க  யாரோ  ரோட்டில வைச்சுத் தட்டிப் போட்டுப்  போட்டாங்கள்  போல கிடக்குங்கோ,,மாட்டிண்ட முகத்தில    வலி தெரியுதுங்கோ , காயத்தை மாற்றிப்போட்டு  வண்டில்ல கட்டுங்கோ ,,வாயில்லாத  சீவன்  பிறகு  பழி  குழந்தை குட்டிய  விடாதுங்கோ "

                             " எடியே,,சவத்தை  ,,இப்ப  உன்னை  டாக்குத்தர் போல விளக்கம் சொல்லவே இங்க கூப்பிட்டனான் "

                                 " பழக்கமான பாதையில  தானே  வந்திருக்கும் ,,என்ன நடந்து எண்டு எனக்கு எப்பிடித் தெரியுமுங்கோ "

                                 " எடியே சவத்தை,,அதுக்கு  தானே  பாதை,,இடம்  வலம்  எல்லாம் பழக்கி வைச்சு இருக்கிறேன் டி "

                                " எண்டாலும் அது மனுசர் போல இந்த ரோட்டெல்லாம்  சுழிச்சுக்கொண்டு வருமெண்டு சொல்ல முடியாதுதானேங்கோ "

                               "  சவத்தை,, இப்ப  பொறுத்த நேரம்  கையை விடப்போகுது  போல  இருக்கே,,இண்டைக்கு  புன்னியக்குஞ்சிக்கு  ஓலை ஏற்றிப்  பறிக்க வேணுமே ,சவத்தை அந்த  மனுஷன்,,ஒரு  கொதி  பிடிச்சதே  "

                                 "  நீங்களுங்கோ  கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு பிரண்டு கிடக்கிறது,," 

                              " என்னடி  சவத்தை  , என்ன கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு  நான்  பிரண்டு கிடக்கிறனோ ,,"

                             " ஓம்,  அதுதான்  இவளவுக்கும்  காரணம்,,அதில ஏன் பழியப் போடுறிங்களுங்கோ,,அதுக்கு  என்ன  தெரியும்  பாவம்  "

                               "  எடியே சவத்தை,  நான்  தாண்டி  எருமை மாடு போல  பகல் எல்லாம் உழைக்கிறான், புண்ணியக்குஞ்சி  ஒரு பிரகண்டம் ,,இண்டைக்கு என்னைத் தெண்டல் எடுக்கப் போகுதே ,"

                              " நானும் தான்  காலங்காத்தால குருவி கத்த முதல் எழும்பி,,நாரி முறிய வீட்டையும் சின்னதுகளையும்  நிமிர்த்திக்கொண்டு இருக்கிறேன் "

                                 " எடியே சவத்தை ,,இப்ப என்னடி  சொல்லுறாய், இண்டைக்கு ஓலை  ஏற்றிப் பறிச்சா  ஒரு  கணக்கு வெளிக்கும் எண்டு  நினைச்சனே  "

                               " நானும்  உங்களைப்போல கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு பிரண்டு எல்லோ கிடக்க வேணும் ,,சொல்லுங்கோ பார்ப்பமுங்கோ   " 

                                  " சவத்தை,,கதை  இப்பிடிப்  போகுதோ..இரவு  உடம்பு அசதிக்கு எல்லிப்போல கள்ளுத் தண்ணி குடிச்சா கண் மண் தெரியாமல் குடிச்சுப்போட்டு  நான்  பிரண்டு கிடக்கிறனோ.."

                              என்று  காதைப் பொத்திப் " பளார்,பளார்  " என்று ரெண்டு  அறை விட்டார். மாரிமுத்துவின் பொஞ்சாதி அதை வேண்டிக்கொண்டு அசையாம நின்றா. காளிங்கனும் அசையாமல் கேட்டுக்கொண்டு நின்றது. அதன் கால் வலி  இப்ப கண்களில் கொஞ்சம் கொஞ்சமா தெரியத்தொடங்கியது. மாரிமுத்து அன்றைக்கு காளிங்கனின் காலுக்கு ஒன்றுமே வைத்தியம் செய்யவில்லை. புண்ணியக்குஞ்சி  வந்தா  ஆள் இல்லை, என்று சொல்லச்சொல்லிப்போட்டு வெளிக்கிட்டுப் போட்டார். மாரிமுத்துவின் பொஞ்சாதி காளிங்கனுக்கு மஞ்சளை நல்லெண்ணையில் குழைத்து அந்தப் புண்ணுக்கு மேலே தடவிவிட்டா .

                                 பின்னேரம் நல்ல வெறியில் மாரிமுத்து வந்து மாட்டைப் பார்க்க, காளிங்கன்  எழும்ப முடியாமல் நிலத்தில சரிஞ்சு  படுத்து இருந்தது.

                            " சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே..இதுக்குதான்  இதை வித்துப்போட்டு ஒரு  லான்மாஸ்டர்  எடுக்க வேணும் எண்டு  நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை  ,,கையை விட்டுப் போட்டுதே   " 

                                 என்று  திட்டிக்கொண்டு நின்றார். அவர் மண்டைக்குள்ளே லான்ட் மாஸ்டர்  ஓடிக்கொண்டு இருந்தது. காளிங்கன் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்ப்பதை ஏனோ தவிர்த்து வேறு பக்கம் பார்த்துகொண்டிருந்தது.  அன்றைக்கு முழுவதும் புண்ணியக்குஞ்சி வரவில்லை, ஆனால்  வெளிய படலையில் லல்லியக்கா வந்து நின்று , படலையத் தொட்டால் என்னவோ தீட்டுத் துடக்குப் போல  தொடாமல் கொஞ்சம் தள்ளி நின்று 

                               " ம்ம்ம்,,பின்ன,,டேய் ,,மாரிமுத்து ,,நாளைக்கு காலையில கையோட  விறகு ஏற்றிப் பறிச்சு விடுறியே,  கைலாயதிண்ட விறகு காலையில் ரெண்டு தூக்கு  பாலைக்குத்தி வேண்டி அந்த தொட்டக்காட்டுப்  பொடியனை பிளக்கச் சொல்லிப்போட்டு வந்ததணான் "

                                என்று சொல்ல ,  மாரிமுத்து படலைக்குள்ள வந்து 

                               " அதுங்கோ,,அக்கோய்  மாடு  படுத்திட்டுது அக்கோய் "

                           " ம்ம்ம்..பின்ன,மாட்டுக்கு  அசதி வந்தாப் படுக்கும்தானே, நீ அதைக் கட்டி இழு இழு எண்டு இழுக்கவைச்சு போட்டு முறிச்சு இருப்பாய் "

                                " அது இல்லையுங்கோ,,அக்கோய் ,,அதுக்கு ஒரு கால் ஏலாது. அடிபட்டுப் போச்சுதுங்கோ  அக்கோய் .மருந்து போட்டுக்கொண்டு இருக்கிறனுங்கோ  ,,அக்கோய் "

                               " இதென்ன புது வில்லங்கம்  , டேய்  மாரிமுத்து, ,இரவுக்கு  சாதுவா மழை தூறும் போல கிடக்கு,,விறகு நனையப்போகுதே "

                             " இல்லையுங்கோ அக்கோய்,  வேற ஆரையும்   கேளுங்கோ,,மாடு  ஒரு கிழமைக்கு அசையாது போல கிடக்கு "

                               " சரி பின்ன விடு,,நான்  அந்த தோட்டக்காட்டுப் போடியனையே கொஞ்சம் கொஞ்சமா சைக்கிள்  கரியலில் கட்டி எடுக்கிறேன் ,,வேற  என்னத்தை செய்யுறது,,மாட்டுக்கு  ஒழுங்கா வைத்தியம் செய்து  எழுப்படா.."

                                  " ஓமுங்கோ,,அக்கோய்,,அதுகுதானுங்கோ  அலுவல்  பாக்கிறேன் "

                     மாரிமுத்து மறுபடியும் வந்து காளிங்கனைப் பார்த்தார்,  

                               " சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே.  இந்த  நேரம்  பார்த்து  ஓட்டங்கள்  வருகுதே ...இதுக்குதான்  இதை வித்துப்போட்டு ஒரு  லான்மாஸ்டர்  எடுக்க வேணும் எண்டு  நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை  ,,கையை விட்டுப் போட்டுதே   " 

                               என்று திட்டிப்போட்டுப்  படுத்திட்டார். அந்த ஒரு கிழமையும் காளிங்கன் படுத்துதான் கிடந்தது. அந்தப் புண் இப்ப மஞ்சள் சிதள் கரைகளில் பிடிக்க சிவப்பும் மஞ்சளுமா தண்ணி பிசுபிசுத்து வடியத் தொடங்கியது. மாரிமுத்து பொஞ்சாதி சக்குப்பிடிச்ச  பழைய உறண்டல் சீலையால  துடைத்து துடைத்து  மருந்து போட்டாலும்  மாட்டு இலையான்கள் அதன் புண்ணில மஞ்சள் நல்லெண்ணெய்க்கும் பயப்பிடாமல் எப்பவும் மொய்க்கும் . அது காலை இழுத்து இழுத்து மாட்டு இலையான்களைக் கலைத்து முழங்காலின் மற்றப்பகமே மண்ணில உராஞ்சி ரத்தம் வரத் தொடங்கீட்டுது . 

                                   ஒருநாள் புண்ணியக்குஞ்சி  மாரிமுத்துவைத் தேடிக்கொண்டு வந்தார், படலையில் நின்று 

                               "    டேய்,,வடுவா,,நானும்  பார்த்துப்  பார்த்துக் கொண்டு  நிக்குறன் ,,வண்டிலும்  இல்லை  பெண்டிலும்  இல்லை... என்னடா  செய்யுறாய் ,,எங்கையடா  வண்டில்..ஓலை கிடந்தது  காயுது,,,எடடா வண்டிலை இப்ப  கட்டையில  போறவனே "

                                  "  சித்தப்பு ,மாடெல்லோ  படுத்திட்டுது...சித்தப்பு..குறை நினையாதையுங்கோ "

                                 " டேய்..எருமை மாடு,,,மாடு  ஏனடா  படுத்தது,,என்ன  சீலம்பாய்க் கதை விடுறாய்.. ஓலை கிடந்தது  காஞ்சு  காவோலை ஆகப்போகுது,,பிறகு  அதை  என்ன அடுப்புக்க  ஓட்டச் சொல்லுறியே  "

                               " இல்லையுங்கோ சித்தப்பு ,,மாடு  காலில  அடிவேண்டி,,இப்ப புண்  பெருத்திட்டுதுங்கோ  "

                                    " எங்க  விடு  பாப்பம் ,,இதென்ன  புதுக்  கதை  விடுறாய் "

                              என்று  புண்ணியக்குஞ்சி படலையத் திறக்கச் சொல்லி அதில முட்டாமல்,,வீட்டுக்கு  பின்பக்கம்  மூக்கைச் சுழிச்சுக்கொண்டு போய் அந்த  வளவில பின்னுக்கு  படுத்துக்கிடந்த காளிங்கனின்  காலைப்  பார்த்தார்.

                                    "  எடேய்..அறுவானே,,புண்  புழு வைச்சுப் போட்டுதடா,,டேய் கட்டையில போற  பரதேசி  என்னடா இவளவு நாளும் பாத் தனி "

                             "    எண்ட  மனுசிதான் மருந்து போடுறதுங்கோ   சித்தப்பு "

                          "  எடேய்...எல்லிப்போல மண்ணெண்ணெய் என்றாலும் அடிச்சு விட்டு இருக்கலாமே டா,,,இப்ப புண்  கரணம் தாப்பாத  கேஸ் லெவலுக்கு வந்திட்டுதே "

                          " எனக்கு  உதுகள்  தெரியாதுங்கோ  சித்தப்பு.."

                            "  நீ என்னடா கோவணம் அவிண்டு விழ ஆவெண்டு  கோபுரத்தைப்   பார்த்துக்கொண்டு நிண்டனியே,,செம்மறி, டேய் ,மாடு  இனி எழும்பாது  போல கிடக்கு  ,,அவுக்கெண்டு  மிருக டாக்குத்தரைக் கையோடு  பிடிச்சுக்கொண்டு  வாடா  ஏமாலாந்தாமல் "

                                "    அதுக்கு   ,,ஹ்ம்ம்,,முதல்  அவரைக்  கொண்டுவந்தால்  சுளையா  அவிட்டுக்  கொடுக்கக் காசு எல்லோ  வேணும் சித்தப்பு "

                                 "  டேய்..மோட்டு  மூதேசி ,இப்ப அவுக்கு அவுக்கெண்டு அலுவல் பார்க்காட்டி,,மாடு  எழும்பாது  கண்டியோ.."

                              " கையில  காசும்  இல்லை,,   எனக்கு  உதுகள்  தெரியாதுங்கோ  சித்தப்பு..இதுதான் உதை ஆப்பிட்ட  விலைக்குத்   தள்ளிப்போட்டு ஒரு  லாண்ட்மாஸ்டர்  வேண்டினால் இந்தக்  கரைச்சல் இல்லை என்று  நினைசேன்  "

                                    "  எடேய்..மாடு  கிடந்தது  உத்தரிக்குதடா ,,முகத்தைப்  பார்,,,சித்திரகுப்தனைப்  பார்க்கிற மாதிரி கிடந்தது வெருளுதடா  அவுக்கெண்டு  அலுவலைப்  பார்.."

                                   "  சித்தப்பு,,கையில  ஐஞ்சு சதம்  இல்லை,,சித்தப்பு..நாலுநாள் கள்ளுத் தண்ணி நாக்கில நனைக்காமல் எனக்குக்  கை  நடுங்குது  சித்தப்பு "

                               "  எடே  அறுவானே, இவளவுநாள் சம்பாரிச்ச வரும்படி எல்லாம்  எங்கையடா,கள்ளுத்தண்னிக்க ஊதிப்போட்டியே,, அவுக்கெண்டு  டாக்குதரைக்  கொண்டு வா  இல்லாட்டி  சொல்லிப்போட்டேன்  மாடு  கையை விடும் கண்டியோ "

                        " ஓமுங்கோ  ,,சித்தப்பு  அதுதான்  நானும்  ஜோசிக்கிறேன்.."

                              " டேய்  அறுதலி,,ஜோசிசுக்கொண்டு நிக்க இப்ப நேரமில்லை,,நான் போய்க் கையோடு  பிடிச்சுக்கொண்டு வாறன் ,,காசு  நான்  கொடுக்கிறேன்,,வாயில்லாதா  ஜீவனடா,,பாவமடா "

                                        புண்ணியக்குஞ்சி  கூட்டிக்கொண்டு வந்த டாக்குத்தர் காளிங்கனின் புண்ணை டோச்லைட் அடிச்சுப் பார்த்தார்,புண்ணுக்கு உள்ளே புழு நெளிஞ்சுது. கைக்குக் கிளவுஸ்  போட்டுடு ஒரு  வெள்ளை சீலைத் துணி எடுத்து   அதைக் ஹைரியின் பரோக்சைட்  இல நனைச்சு புண்ணில வைச்சு துடைக்க அது நுரைச்சது, முடிந்தவரை எல்லா புழுவையும் வெளியே இழுத்துக் கொட்டிப் போட்டு நாவல் கலரில்  கழிம்பு போல  கொஞ்சம் அதில பூசிப் போட்டு ,காளிங்கனின் பின் தொடையில் நரம்பு தடவி ஒரு  அன்டிபயாட்டிக் ஊசியும்  போட்டார். 

                                       ஆனால் புண் பெருத்து ஆழமாக வெள்ளை எலும்பை சுற்றி விசலாமாக இருந்தது. மிருக டாக்குத்தர் காளிங்கனின்  நிலைமை பற்றி வெளிப்படையாக ஒன்றும் சொல்லவில்லை.  மாரிமுத்து அவர் குறி வைச்ச  M M எழுத்துகளைக் கவலையோடு பார்த்துக்கொண்டு நின்றார் .புண்ணியக்குஞ்சி சுருட்டைப் பத்த வைச்சுக்கொண்டு அங்காலும் இங்காலும் சுற்றி சுற்றி மாட்டைப் பார்த்துக்கொண்டு கோடாப்  போட்ட புகையை நல்லா  இழுத்து இழுத்து விட்டுக்கொண்டு நின்றார். 

                              மாரிமுத்து  " சவத்தை,, பொறுத்த நேரம் கையை விட்டுப்போட்டுதே.  இந்த  நேரம்  பார்த்து  ஓட்டங்கள்  வருகுதே ...இதுக்குதான்  இதை வித்துப்போட்டு ஒரு  லான்மாஸ்டர்  எடுக்க வேணும் எண்டு  நினைச்சனான்,,அதுக்குள்ளே சவத்தை  ,,கையை விட்டுப் போட்டுதே   " என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, இனி ஒரு லான்ட்மாஸ்டர் எப்படியும் வேண்டி அதன் பெட்டியில் " MAARIMUTHU  "என்று கொட்டை எழுத்தில எழுதி ஓடவேண்டும் என்று நினைச்சுக்கொண்டு இருந்தார் 

                                          காளிங்கன் அதன் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தது. அதன் முகத்தில் அதன் அம்மா அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தா , அதுக்கு இருட்டிலையும் அம்மாவின் முகம் பளிச் பளிச்  என்று அடிச்சது.  ஆனால் அதுக்கு சாவதுக்குப் பயமில்லை. இனியும் எவளவுகாலம் தான் பூவரசம் கம்பால அடிவேண்டி, பாரமான வண்டிலை இழுத்துக்கொண்டு இருப்பது.அதனால் அது சாவதுக்கு சந்தோசமாக இருந்தது. அதுக்கு சாவு நீண்ட கொடுமையில் இருந்து  விடுதலை போல இருந்தது .

                            அன்றைக்கு இரவே காளிங்கனின் அம்மா வந்து  "இனியும் கிடந்தது உத்தரிக்காதை மகனே,,பேசாமல்  என்னோட வந்திரு  " என்று கூட்டிக்கொண்டு போட்டா. காலையில் காளிங்கன் முகம் முழுவதும் மாட்டு இலையான் குந்தி இருந்தது , அதன் கண்கள்  திறந்து கிடக்க முகம் சரிஞ்சு பக்கவாட்டில புழுதியில் கிடந்தது.  மாரிமுத்து முக்கனாங் கயிறைக் கொண்டு வந்து ரெண்டு பின்னங்காலையும்  சேர்த்துக் கட்டி அதை இழுத்துக்கொண்டு போய் குளத்து வெளியில் ஒரு பெரிய கிடங்கு வெட்டித் தாட்டுப்போட்டு வந்திட்டார். 

                               அதுக்குப் பிறகு மாரிமுத்து, மரம் தறிக்கிறது ,தேங்காய் புடுங்கிறது,வேலி அடைகிறது, தோட்டம் கொத்தப் போறது  போன்ற அன்றாடம் கூலி வேலை இதுகளுக்குத் தான் போய்க்கொண்டிருந்தார் . கட்டை வண்டிலை ஒரு விலைக்கு வித்து அதையும் கோப்பிறேசனுக்குப் படி அளந்து மூக்கு  முட்டக் குடிச்சு முடிச்சிட்டார். 

                                புண்ணியக் குஞ்சி ஊரில வேலியில நிக்கிற ஓணானைப் பிடிச்சு வேட்டியுக்க விடுறது போன்ற குழறுபடிகள் செய்துகொண்டு இருந்தாலும்  எப்பவுமே  எல்லாருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர் , அவர் ஒருநாள் வந்து 

                                    "  டேய் ,  சும்மா சிரைச்சுக் கொண்டு நிக்கிறதை விட்டுப்போட்டு நான் சொல்லுறதைக் கேள் ,  

                                   " ஹ்ம்ம்..சொல்லனை  சித்தப்பு,,இனி  என்னத்தைச்  செய்யுறது   "

                                    " சித்தங்கேணியில் ஒரு வளக்கம்பரை ஆட்களின்  வடக்கன் மாடு ஒண்டு நிக்குது , எண்ட காசைப்போட்டு ஒரு விலையைப் பேசி அவிட்டுத் தரவா, "

                          "இல்லையுங்கோ,,சித்தப்பு  இனி  வண்டில்  மாடு  சரிவராது  போல  இருக்கு  எனக்கு சித்தப்பு...மாடுகளோடு அலைச்சல்பட்டது  போதும் "

                                 " ஓ,,அப்ப பின்ன என்ன இனி  இசுசு லொறி வேண்டி ஒடப்போறியே ,,உன்னட்ட கட்டை வண்டில் நல்லா  நிக்குதுதானே ,,இழுக்க ஒரு  மாடு,,அவளவுதானே "

                                 " இல்லையுங்கோ ,,சித்தப்பு,,ஒரு  லான்ட் மாஸ்டர் ,,,அதுதான்  நெடுக நாளா  நினைக்கிறது...

                               " டேய்  ,அடி சக்கை எண்டானாம் , என்னடா ,,லான்ட் மாஸ்டரோ,  நாடு  நாயப்  போல போற போக்கில உனக்கு வந்த பவுசைப்பார் "

                                  " ஓமுங்கோ சித்தப்பு, அதுதான்  கண்னுக்க முன்னால வந்து வந்து நிக்குது ."

                                   " டேய்,,கழுதை, சும்மா  இருக்கிறதை விட்டுப் போட்டுப் பறக்கிறதை  பிடிக்காமல் ,அதுக்கு  இப்ப அள்ளுகொள்ளையா காசெல்லோ வேணும்,,அதுக்கு  எண்ணை  ஊத்திக்கட்டுமே உனக்கு "

                             "  ஓம்,,சித்தப்பு,,ஆனால் உழைக்கலாம்  தானே .."

                               " டேய் , நான் காசு தாரேன் ,போயிலைச் சிப்பம் ஒரு லொறி நாலாங் குறுக்குத்தெருக் கிட்டங்கிக்கு  ஏற்றிவிட்ட காசு  வந்து  கிடக்கு ,நீ  காசு  கொஞ்சம் கொஞ்சமா பிறகு  தா,"

                            "  ஹ்ம்ம்,,,ஜோசிக்கிறேன்,,சித்தப்பு "

                              " டேய் , என்ன நான்  சொல்லுறது  மண்டைக்குள்ள ஏறுதே,,விறுமாண்டி போல முகத்தை நீட்டிக்கொண்டு நிக்குறாய்   "

                                    என்று கேட்டும்  மாரிமுத்து விருப்பப்படவில்லை. வண்டில் வித்த கதையும் அவர் புன்னியக்குஞ்சிக்கு சொல்லவில்லை.

                                       ஊரில் அந்த நேரம் நாலா பக்கமும் அடைச்சு வைச்சிருந்த  முகாங்களில் இருந்து அடிக்கடி முன்னேறி வெளிக்கிடும் இராணுவத்துடன்  சண்டை அகோரமாக  நடக்கும்.  அன்றைய நாட்களில் ஹெலிகாப்டர்  வாகனங்களைக்  கண்டால்  திரத்தித்  திரத்தி பிப்டி கலிபரால் அடிப்பான், அல்லது ஜாம் போத்தலுக்குள் கிளிப்பை இழுத்துப்போட்டு ஹான்ட்கிரனைட்டைச்  செருகி மேலே இருந்து எறிவான். சில நேரம் ரொக்கெட் ஹெலியில் இருந்து  அடிப்பான்  என்ற பயத்தில  யாரும் இரவில் லைட் போட்டு வாகனங்கள் ஓடுவதில்லை. 

                                          ஒருநாள் ..................

                                  மாரிமுத்து நல்லாக் குடிச்சுப்போட்டு உடையார் காணியின் வேலியோடு படுத்து இருந்த நேரம் அவடதால வந்த  முன் லைட் இல்லாமல்,  பதுங்கு குழிக்கு தென்னம் குற்றி ஏற்றிக்கொண்டு வந்த லான்ட்மாஸ்டர் ஒன்றைக் ஹெலிக்காரன்  நைட்விசனில பார்த்து இயக்கத்திண்ட்ட  ஆட்டிலறி பீரங்கிப்படை செல் ஏற்றிக்கொண்டு போகுது என்று நினைச்சு திரத்தி அடிக்கத் தொடங்க , லான்ட் மாஸ்டர் காரன் பதறி அடிச்சு சைட் எடுக்க ரோட்டு ஓரமா வேகமா விட்டான். 

                                      லான்ட் மாஸ்டரின் பின் சில்லு  இருட்டில மாரிமுத்துக்கு மேலே ஏறி இறங்கியது  . லான்ட்மாஸ்டர் ஓடிக்கொண்டு வந்தவனுக்கு சில்லுக்க என்னவோ மாட்டி எலும்பு முறியிற சத்தம் போலத்தான் கேட்டது.  மாரிமுத்துவின் கழுத்து எலும்பு உடைஞ்ச நேரம் தான் அவளவு சத்தம்  வந்தது. 
                                 

3 comments :

  1. எனக்கு புரியாத ஒரு புதிர், மாடுகள் பற்றி இத்தனை விபரங்கள் எப்படி இவருக்கு தெரிஞ்சு இருக்கு என்பது தான் . சின்ன சின்ன குறிப்புகள் கூட தவறவிடாமல் அருமை. எதை பற்றி எழுதப் போனாலும் அதை பற்றிய ஒரு தெளிவான விளக்கங்கள் சொல்லுவது கதையின் சிறப்பு. அருமையான பழமொழிகள், புதுமொழிகள் . அற்புதம். நல்லதோர் ஊரை அப்படியே படம் பிடித்து காட்டிய கதை.

    ReplyDelete
  2. சிறப்பான கதை... மாடுகள் பற்றி இவ்வளவு தெளிவா சொல்லுறீங்களே... அதன் உணர்வுகளைச் சொன்னவிதம் மனம்தொட்டது..
    அரசனின் சிறப்பான பழமொழிகள் அடைமொழிகள் .. மிக்க அழகு ...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete