Wednesday 28 October 2015

ஜோர்ச் ஹரிசன், இந்தியாவை நேசித்த இதயம்!

யாழ்பாணத்தில, என்னோட இளவயதில் கிடார் பயின்றது மட்டுமில்ல , பின்னாட்களின் அதை சொல்லித்தந்த மாஸ்டரின் இசைக் குழுவான, திருநெல்வேலி ,கலாசாலை வீதியில் இயங்கிய " அபர்ணாலயா " என்ற அவரின் சிறிய, உள்ளுர்ப் பாடகர்கள் பாடிய , கோவில் திருவிழாவில விடிய விடிய இசை மழை பொழிந்த, ஒரு இசைக்குழுவில் bass கிடார் வாசித்த போது, நீண்ட தாடி, நீண்ட தலைமயிர் வளர்த்து இருந்தேன் . பார்க்க ராப்பிச்சைகாரன் ஒருவன் தவறுதலா  கிட்டாரோடு மேடையில் தோன்றியது போலவே ஒரு  ஸ்டைலில்  வாசித்தேன்!                                                         

                       பலநண்பர்கள் , உறவுகள் அந்த நேரம்  நேரடியாவே கேடார்கள்                                                                                     
                               "உனக்கு என்ன ஏதும்  காதல் தோல்வியா? அல்லது வேற என்னவும் பிரசினையா,,,,என்னத்துக்கு இப்பிடி  பிடிவாதமாக அலங்கோலமாக  , ஏன்  இப்படி தலைமயிரையும் ,தாடியையும்  விசர் ஆசுப்பத்திரியில் இருந்து தப்பி வந்தவன் மாதிரி வளத்துக்கொண்டு திரியிறாய்,  " என்று கேட்பார்கள். அதுக்கு  நான் எப்போதும் சொல்வது                                              

                                    " ஜார்ஜ் ஹரிசன் என்ற கிட்டாரிஸ்,,,அவரின்  பாதிப்பு இது ,,அவரை மாதிரி கிட்டார் வாசிக்க முடியாவிட்டாலும் அவரைப்போல தாடி,,தலைமயிராவது  வளர்த்து  என் ஆசையை  நிறைவு செய்கிறேன்,,,ஹ்ம்ம்,,,பார்க்கலாம் ஒரு நாள் அவர் போலவே கிட்டார்  கையில் எடுத்து இசைமழை  பொழியும் நிலைக்கு  வரவேண்டும் என்று வெறியிருக்கு  " எண்டு சொல்லுவது                                                          

                                      இப்ப எப்படியோ தெரியாது ,,ஆனால் பலருக்கு அந்தகால யாழ்பாணத்தில விளங்கவில்லை நான் என்ன சொல்லுறன் எண்டு ! அதனால ஒரு குத்துமதிப்பா எனக்கு மனநிலை சரி இல்லை எண்டு என் காதுபடவே புரளியக் கிளப்பி , அதையே கொஞ்சம் நாலு பக்கமும், உண்மை போலவே ஊதி விட்டார்கள் ! ஜோசிதுப்போட்டு, அவர்களின் கேள்விக்கு வாயை அடைக்கும் பதில் ஒன்று சொல்லாமல் அவர்களின் புரளியை நிறுத்தமுடியாது என்று நினைத்து ,அதுக்குப்பிறகு என் அடையாளத்தைக் கேலி செய்பவர்களுக்கு                                   

                                   "செல்வ சன்னதி முருகனுக்கு நேர்த்திக்கடனுக்கு வளர்கிறேன்" 

                                         என்று சொல்லத் தொடங்கினேன் , அதன் பின் பலர் நண்பினார்கள் ! இப்படிதான்,தமிழ் கலாசார சூழலில் ஒருவன் தாடி ,மீசை ,தலைமயிர் வளர்க எப்பவுமே வலுவான காரணங்கள் தேவை!                                                    

                                      சரி ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு இப்ப உங்களுக்கே குழப்பாம இருக்கும் இல்லையா ? சொல்லுறன் .

                                பீட்டில்ஸ் ,இந்தப் பெயர்  உலகைக் கலக்கிய பெயர். ,இந்த  இசைக்குழு உலகத்தின் அதிகம் பேர் கேட்ட பாடல்களை இசைஅமைத்து பாடிய இசைக்குழு , அவர்களின் இசை,பாடல், வரலாற்றின் பெறுமதி இன்றய நிலவரத்திலும் பில்லியன் டாலர்கள் வருமானம் புரட்டிய அதிசயம், நான்கு இசைக்கலைஞர்கள்  சேர்ந்து அந்த சாதனையைச் செய்தார்கள். அவர்களின் இசை நாடித்துடிப்புப் போல தாளம் போட வைக்கும் "ராக் அண்ட் ரோல் " என்ற வகை அதில் இருந்த கிடாரிச்ஸ் ஜோர்ச் ஹரிசன்                                    
                                                     
                                      யாழ்பாணத்தில அந்த ஜார்ஜ் ஹரிசன் என்பவர் ககிட்டார்  வாத்தியக் கலைஞ்சரா இருந்த, " பீடில்ஸ் "இசைக் குழுவின் பாடல்கள் ஆங்கிலப் பாடல்கள் கேட்பவர்களுக்குத்தான் தெரியும் அந்த நேரம் ,எங்களின் வீட்டுக்கு அருகில் வசித்த, " கஸ்சுப் புஸ்சு " எண்டு கொடுப்புக்குள்ள இங்கிலிசு கதைக்கும் அப்போதிகரி டாக்டர் ஒருவர் ,அவரின் மகனுக்கு கணக்கு சொல்லிகொடுக்கப் போன என்னோட பெரிய அண்ணனனுக்கு அவர் விரும்பிக் கேட்ட " பீடில்ஸ் " பாடல் அடங்கிய ஒரு கேசட் கொடுக்க அதை அண்ணன் வீட்டில கொண்டுவந்து போட, அந்த பாடல்களின் இசை அண்ணனை மயகாமல், ஏனோ என்னை மயக்கியது , 

                                          அதுக்குப் பிறகு " பீடில்ஸ் " இசைக்குழுவின் விபரம் அறிய , "ஜப்னா முநிசிபால்டி பப்ளிக் லைபெறேரியில்" இருந்த " insider story of Beatels " என்ற புத்தகத்தை வரிக்கு வரி படிக்க , என்னோட நெஞ்சினில் " பீடில்ஸ் " நெருப்பு பத்தியது. அவர்களின் பாடல்கள்,,இசை  இந்த உலகத்தை திருப்பி மற்றப்பக்கமா சுழற விடுவது போல இருந்தது                                               

                                              அந்த பீடில்ஸ் இசைக்குழுவின் கலர்ப்படம் ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடியின் மேலே ஒட்டி வைச்சு இருந்தேன் .அதில அந்த இசைகுழு அங்கத்தவர் எல்லாருமே ஜிப்ப்சி ஸ்டைலில் தாடி ,மீசை,தலைமயிர் எல்லாம் அக்கறை இல்லாமல் வளர்த்து, மாதக்கணக்கில் தோய்க்காத டெனிம் காற்சட்டை போட்டுக்கொண்டு நிற்பார்கள். இவளவு கேவலமாக இருந்தாலும் அவர்கள் உலகத்தின் நம்பர் வான் இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள்.                                              

                                 அந்தப் படத்தை , முகக் கண்ணாடியில் முகம் பார்க்க மறந்து எப்பவுமே மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டு இருப்பதைப் பார்த்த என்னோட அம்மாவே ஒரு கட்டத்தில்                                    " 

                                  " டேய்..இவங்கள் யாரடா,, பார்க்கப் பரதேசிகள் போல இருக்கிறவன்களோட படத்தை ஒட்டி வைச்சு ஒவ்வொருநாளும் பார்த்துக்கொண்டு இருகிறாயே  ,,மூதேவி வாலாயம் பிடிச்சவங்கள் போல இருக்கே இவங்கட மூஞ்சியும் முகரக்கட்டையும் ,,இது   வீட்டுக்கு முழுவியளத்துக்கே உதவாத படமடா,, இதை  நீயா இப்ப கிழிச்சு எறியப்போறியா, இல்லாட்டி இப்ப நானே  கிழிச்சு அடுப்பில நெருப்பில  எறியப் போறேன்.."                                 

                                    என்று ஒரு நாள் சண்டை பிடிச்சா. ஒரு மாதிரிக் கெஞ்சி மன்றாடி அதைக் உரித்து எடுத்து கொண்டு வந்து என்னோட அறையில் இரகசியமாக வைச்சு சில வருடம் அந்த இசைக்குழுவின் மானத்தைக்  காப்பாற்றினேன்.                                                 

                                       ஜார்ஜ் ஹரிசன், இங்கிலாந்தின் மேற்க்கு கரையில் உள்ள துறைமுக நகரமான ,லிவர்பூலில் ஏழ்மையான  உழைக்கும் வர்க்கப் பெற்றோர்களுக்கு பிறந்தவர், அவரோட லிவர்பூலில் நகரத்தில் பிறந்த , பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற "Beatels "இசை குழு உருவாகிய போது  , அந்த இசைக்குழுவில் lead கிடாரிஸ்ரா இருந்தவர்,

                                பின்னர் அந்த இசைக்குழுவில் இருந்த உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஜோன் லென்னன் உடனும் ,லென்னனின் ஜப்பான் நாட்டுக்  காதலி ஜோகோ ஓனோவுடன் ஏற்பட்ட  மனஸ்தாபத்தில் பீட்டில்ஸ் இசைக்குழுவை விட்டு  பிரிந்து போய் தனியாக அல்பம் இசை அமைத்தவர் , அவரின் பாடல்கள் இசைக்காத நாடுகளே இல்லை, பாடாத மேடைகளே இல்லை , மயங்காத மனிதர்களே இல்லை என்கிற அளவுக்குக் கலக்கியவர் !                                                  

                                                       பின்னர்  அவரின் செவ்விகளில் விமானத்தில் பறந்து சென்று இசைநிகழ்ச்சி செய்ய பயந்து, அதை ஒரு காரணமாக சொன்னாலும் ,  ஜான் லனன்னின் ,காதலி  ஜோகோ ஓனோ இன் இம்சையைப்  பொறுக்கமுடியாமல் ,அந்த குழுவில் இருந்து விலகி தனியானதா சொன்னார் ! 

                                                  ஜோர்ச் இன் ஆழ்மனது  இசைப்பொறி உண்மையில் " ராக் அண்ட் ரோல் "  இல்லை.  இசையின் உண்மையான சோடனைகள் அற்ற அதன் உண்மையான முகத்தை அவர் தன்னுளே தேடினார். அவரின் அந்த  இசைத் தேடல் கீழத்தேய இந்தியாவுக்கு அழைக்க , இந்தியாவுக்கு போய் ரவிசங்கரிடம் சித்தார் பயின்றவர்,"here comes the sun " என்ற உலகப் புகழ் பெற்ற பாடலில் கிடாரில் , ரவிசங்கரின் சிதார் போல இசை அமைத்து வாசித்தவர்!                                              

                                                               இந்தியாவின் ஆன்மிகத்தில அலாதியான அமைதி இருப்பதை உணர்ந்து , ஹரிசன் ஒரு கட்டத்தில் "ஏகம் தத், அகம் பிரம்மாஸ்மி " எண்டு சொல்லி முழுவதும் இந்திய ஆன்மீகத்தில் இறங்கியவர்! இமயமலை அருகில் , ரிசிகேஸ் மலையடிவாரத்தில , ஜோகி ஒருவரின் ஆசிரமத்துக்குப் போய், உலகத்துடன் தொடர்பைத் துண்டித்து வருடக்கணக்கில் தியானம் செய்தவர் ! அவரின் இசை  அடையாளம் ஒரு கலாச்சார  அடையாளமாகவே மாறியது.                                     

                                                   இந்திய ஆன்மீகப் பாதிப்பால் ,அதன் பின் அவர் இசை அமைத்த பாடல்கள் எல்லாம் "everything must pass "  ,"Oh ,my sweet loard " ,"while my guitar gently weeps..."  எண்டு பாடிய அவரோட ஆன்மீகத் தேடல்கள் நிரம்பி வழிந்து," ஆன்மீக வரட்சி " நிரம்பிய மேலை நாடுகளில் பிரபலம் ஆகிக்கொண்டு இருந்த "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா " பக்தி இயக்கம், அவரின் பாடல்களைப் பாட , இன்றைக்கு ஜார்ஜ் ஹரிசன் யார் எண்டு, இசை உலகில் எல்லாருக்குமே தெரியும்.

                                                 அவர் நிறைய ஆன்மிக தேடல் ,நிலையாமை , கடவுளின் கருணை,பாவங்களின் மன்னிப்பு என்று  நிறைய ஆன்மீகப் பாடல்கள் இசை அமைத்து அல்பங்களாக வெளியிட்டார்,கோடிக்கணக்கில் அவை விற்றன . எழுபதுகளின் இறுதியில் ஹிப்பிஸ் ஸ்டைலில் வாழ்ந்த இளையவர்கள் அவர் பாடலைப் இபேச என்ற ஸ்பானிஸ் தீவில் பாடி,ஆடிப் பிரபலம் ஆக்கினார்கள். ஜார்ஜ் ஒரு சாமியாரா இருந்து  இருக்க வேண்டிய ஆள், தவறாக கிட்டாரிஸ்ட் ஆகிவிட்டார் போல இருந்தது அன்றைய வருடங்கள் என்று சொல்லலாம்.                                               

                                                        ஜார்ஜ் ஹரிசன் ,பங்களாதேஸ் வெள்ளத்தில் மிதந்தபோது "Banagaladesh we love you " என்று பாடி"  live concert "  இசை நிகழ்ச்சி செய்து வந்த காசு முழுவதையும் அந்த நாட்டு மக்களுக்கு கொடுத்தவர்! தான் இறந்தால் உடலை எரித்து அதில் ஒரு பகுதியை புனித கங்கை நதியில் வீசும்படி சொன்னவர்! ஜார்ஜ்சோட ஆன்மீக தேடல் வித்தியாசமானது,அப்படி இருந்தும் ,பைபிளையும்,ஜேசுநாதரையும் கிண்டல் அடித்து எடுக்கப்பட்ட  படமான "life of brian "எண்ட படத்தையும் அவர் தான் காசு  கொடுத்து  தயாரித்தார்!                                             

                                                             ஜார்ஜ் புற்று நோய் வந்த இறந்து அவரோட பூதவுடல் வைக்கப்படிருந்த அறையில் எந்த விளக்குகளுமே இல்லாமல், அந்த அறை மிகவும் பிரகாசமாக இருந்ததாக அவரோட மனைவி ஒலிவியா எழுதியுள்ளா!.இதைவிட வேற என்ன ஆத்மா விடுதலை வேண்டும் இந்தியாவை நேசித்த இதயத்துக்கு .
.

.

1 comment :

  1. Wow.. the way of your writing .. very interesting

    ReplyDelete