Wednesday 5 August 2015

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா !

வாழ்க்கை ஒரு  நீண்ட  முடிவில்லாப் பயணம்  என்கிறார்கள் , அதில  ஏகப்பட்ட விசியங்கள்  குழப்பமாக இருக்கும் . முக்கியமாக  என்னைப்போல குழப்பமான ஆட்களுக்கு  நிட்சயமாகவே  குழப்பமாக  இருக்கும், அதில  என்னவெல்லாம்  பெற்றுக்கொண்டேன் என்பதில்  சொல்லும்படியான சாதனைகள்  இல்லவே  இல்லை. அனுபவங்கள் நிறையவே இருக்கு. ஒரு கற்பனைப் புனைகதை போலவே அதன்  ஒரு  பக்கம்  ஜதார்தமாய் இருக்கலாம். மற்றப் பக்கம் முசுப்பாத்தியாக இருக்கலாம் , இல்லையா,

                                        பல வருடங்களின் முன்  ஸ்வீடனில்  வசித்த போது சில வருடங்கள் , வாழ்கை வெறுத்து தனிமையில் இருந்த காலத்தில் , சந்தோசத்தை வெளியே அன்றாட உலகத்தின் இயல்பில்த்  தேடிப்பிடித்துப் போகாமல், குறுக்கு வழியில்த் தேட முயற்சித்து,  மூடிகளைத் திறந்த மதுப்போத்தல்கள்  முடியும் வரை இருந்த சின்ன சந்தோசம் அவ்வப்போது இருந்தது உண்மை , மிகப்பெரிய  உண்மையாக  என் தோல்வி முகத்துக்கு  முன்னுக்கு நின்றது . 

                                         அந்த மதுப்  போத்தல்களைத் தூர வீசி எறிந்த போது அவைகளுடன்  காற்றில்  மிதந்த இன்பங்கள்  போன அவலத்தில் , மாதன முத்தாவின் மண் பானை ஆட்டிண்ட தலைக்க போன மாதிரி மது  கடைசியில் கழுத்தில கயிறு போட்டு அலங்கோலப்படுத்த , இன்பத்தின் முடிவில்  துன்பமாக , ஒரு வருடம் ," அல்ஹோலிக்ஸ் " என்ற திருந்த முடியாத மடாக்குடியரை திருத்தும் "புனர்வாழ்வு சமூக" அமைப்பில் கவுரவ நோயாளியா /உறுபினரா ,அவர்களுக்கும்   , முடிந்தவரை அவர்கள் தந்த புணர்வாழ்வுகும்  சவாலாக இருந்தேன்!  

                                 அந்த  கவுன்சிலிங்/ குரூப் திரபி என்ற சிக்கிசை கொடுக்க எனக்கு நியமிக்கப்பட்டவள் கத்தரீனா  என்ற ஸ்வீடிஷ் 40 கிலோ தாஜ்மகால் ! அவளை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாலே ஜீவாத்மாவும் பரமாத்மாவும் தாறு மாறா எகிறும் . அவள் அசையாமல் நிண்டாலே அபிராமிப் பட்டர் " இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்துவடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு..    " என்ற அந்தாதியை அவளை நினைச்சு எழுதின மாதிரி இருப்பாள்.  

                                     அவள் நடந்து திரிந்தால் அதே அபிராமிப்பட்டர் அவளுக்கு பின்னுக்கும் முன்னுக்கும் திரிந்து  "  நடங்கொண்ட கொள்கை நலங் கொண்ட நாயகி , நல் அரவின் வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே......."  எண்டு எழுதி முடிச்ச மாதிரி அம்சமா இருப்பாள் . கவனக்குறைவாக எதையும்  சொல்லவில்லை , கவனச் சிதறிடிப்புகள்  நிறைய இருந்த  அந்த  இடத்தில  குவிமையம் போல  இருந்தாள் கத்தரீனா .

                           அதை விட அவளே எங்களைப் போல திருந்த முடியாத மடாக்குடிய நிலையில் இருந்து மீண்டு வந்து "புனர்வாழ்வு சைகொலோயி " மாஸ்டர் டிகிரி படித்தவள் ! அதலா அந்த சமூக நிறுவனத்தில் வேலை செய்தாள்.அவளை முதல் முதல் சந்தித்தபோது, நான் இந்திய, இலங்கை  ரெண்டும் கெட்டான் உருளைக்கிளங்கு  நிறத்தில் இருந்ததால் அவள் கொஞ்சம் அதிர்ந்து

                  " ஓ , இண்டேறேச்டிங் , உன்னை சந்திப்பது, நீ இந்தியாவைச்  சேர்ந்தவனா , 

                       "    இல்லைப்பா,,,நான்  இந்தியன் இல்லை "

                         "    என்னோட வாழ்கையை மாற்றிய குருநாதர் சுவாமி பிரபுபாதாவும் இந்தியர் ,"

                            "   அய்யோ  ராமா,,நான்  இந்தியன்  இல்லை  கத்தரீனா "

                            "     அவர் தொடக்கிய ....ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.... அமைப்புதான் என்னை வழி நடத்தி இப்ப இப்படி இருக்கிறேன் "

                         என்றாள்  ,அப்படி அவள் அதிர்ந்து சொன்னதுக்குக் காரணம்  , அவள் "ஹரே ராம, ஹரே கிருஷ்ணா " அமைப்பில் இருந்து, அந்த அமைப்பின் இணைப்புதான் அவளை "மடாக்குடிய நிலையில்"  இருந்து மீண்டவர உதவியதக சொன்னாள்!
                                         
                            " நான் இலங்கையைச் சேர்தவன்,  சுவிடனில் அரசியல் அகதியா  வாழுறேன்,குடியுரிமை கிடைத்த நாளில் இருந்து ,அறம்புறமா குடிக்க உரிமை கிடைத்தால் குடிக்க ஆரம்பித்தேன் ,"

                                "   அப்படியா,,நீங்க  இலங்கை  இந்தியர்  எல்லாரும்  ஒரே  கலரில்  இருப்பதால்  குழப்பமாக  இருக்கே "

                                   "   அய்யோ  ராமா,,நான்  இந்தியன்  இல்லை  கத்தரீனா "

                               "  சரி,,உன்  கதையை  சொல்லு,,என்ன  நடந்தது "

                                    "   சுவுடிஷ்  குடி உரிமையை கொஞ்சம் அதிகமா பாவித்து இப்ப அல்ககோல் மிஸ்யூஸ் டிஸ்ஓடர் என்ற மெடிக்கல் கொண்டிசன் நிலையில் இருக்கிறேன் ,"

                                   "  அது  உன் முகத்திலையே  நல்லா  தெரியுதே, கண்  ரெண்டும்  உள்ளுக்க  இழுத்து ,கையும்  நடுங்குதே , பை போலர்  சின்றோம் போல தலையை வேற தவரவிடுகிறாய் "

                                         "  சில நேரம் உனக்கு குழப்பமாக இருக்கும் இலங்கையை  ஸ்ரீலங்கா என்றுதான் ஆங்கிலத்தில் சொல்லுறார்கள்  " 

                                   "    சரி  வேற  என்ன  பிரசினை  உனக்கு "

                                 " கிளினிக்கல் டிபிரசன் "

                          "  ஒ  அது வேறையா..கொஞ்சம்  தண்ணி தெளிச்ச கேஸ் போல இருக்கே  நிலைமை ,,கிளினிகல் டிபிரசன்  எதுக்கு  வந்தது "

                                  "  செரோடொனின்,,டோப்பமின்  என்  சிஸ்டத்தில்  குறைவு  என்று  சைக்கற்றிஸ்  டாக்கடர்  சொன்னார் "

                                    "  ஹஹஹா,,அஹஹஹா  ,,பார்த்தியா  உன்னோட தோல்விக்கு  நீயே  ஒரு  நல்ல  மெடிக்கல் விளக்கம் கைவசம்  வைச்சு  எடுத்து விடுறாய்,,நீ  சொன்னது  எல்லாம் கிளினிக்கல்  டிபிரசனுக்கு முழுவதும்  காரணம்  இல்லை "

                                  " வேற  என்னதான்  காரணம்  சொல்லுப்பா "

                               "    குடி,,,குடியை  விட  முடியவில்லை,,அதுதான்  காரணம்,,அதை  முதலில்  ஒத்துக்கொள்ளு  அப்பத்தான்  நான்  உதவி  செய்ய  முடியும் "

                              "  ஓம்,,உண்மைதான்  கத்தரீனா ,,அதுதான்  உண்மை "

                                            என்று விருப்பம் இல்லாமல் விழுங்கி விழுங்கிச் சொன்னேன் . அதுக்கு அவள்

                               " ஸ்ரீலங்கா,,,இலங்கை ,,,என்கிறாய் அந்த நாடு  எங்க இருக்கு என்று கேள்வியேபட்டதிலேயே " என்றாள்,

                                அதுக்கு நான்  

                 " இலங்கை தான் ஸ்ரீலங்கா, இந்தியாவின் தென் கோடியில் மாம்பழம் போலத் தொங்கிக்கொண்டு இருக்கும்,நாலு பக்கம் கடலால் சூழப்பட்ட  , தமிழர் என்ற ஒரு  சிறுபான்மை இனத்துக்கு நிம்மதி இல்லாத குட்டி தீவு தான் என் தாய்த்திருநாடு " எண்டு சொன்னேன் .

                                    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா  அமைப்பு பற்றி படித்து முன்னமே இருக்கிறேன். உங்களுக்கு உண்மையைச் சொன்னாலென்ன சின்னவயசில்,   சைவசமய முறைப்படி மூன்று தீட்சை சைவாசாரிய  குருவிடம் பெற்றேன்,  ஆனால்  வளர்ந்தபின் ஒரு நாளும் அதுகள் செய்ததில்லை, ஆனாலும் ஆன்மிக விசியங்கள் கொஞ்சம் தெரியும்.  என்னிடம் ஆரம்ப விசாரணை முடித்தபின் ,

               "  உனக்கு PTSD , கிளினிகல் டிபிரசன்  இருக்கே,  அதை விட சொல்லபட்ட  அன்டபுஸ் , மருந்தே உதவி செய்யவில்லை போல இருக்கே ! கொஞ்சம் முத்தின கேஸ் போல இருக்குறியே " எண்டு ஜோசிதுப்போட்டு, அமைதியாக 

                               " எங்கள் ஆசிரமத்தில ,போய் சில வாரம் தங்கி இருந்து ...தியம்பகம் ஜெயாமகே சுகந்திம் புஸ்திவச்தனம் உருவாகுக விசி அமுதாத் தயே..... என்ற மந்திரம் சொல்லி மனதை கட்டுப்படுத்த பல  வழிகள் இருக்கு "

                               " யப்பா  சாமி  இந்த  நாசமாப்போன மந்திரம்  எல்லாம்  எங்கே  நீ  படிச்சாய்,,இதெல்லாம்  எங்க  நாட்டில்  பூசை  செய்யும் பிராமண  ஐயர்மார்தான்  சொல்லுவார்கள்   " 

                                          " தியானம்,சத்சங்கம்,பஜன் ,இவைகளை கற்றுக்கொள்,உனக்கு மனதளவில், பொசிடிவ்வாக எண்ணங்கள் உருவாகும்,நான் இப்படி இப்ப இருப்பதுக்கு அதுதான் உதவி செய்தது"

                       என்று ,அவளோட நண்பிகள் ஆசிரமத்தில் ,பருத்தி சேலை கட்டி, நெற்றியில் நாமம் போட்டு, கோகுலத்து கோபியர் போல ஆடிப்பாடும் குரூப் போட்டோ காடினாள் ! அவர்களுக்கு நடுவில சில வெள்ளை ஆண்களும் மேளம் போல ஒன்றைத் தோளில கொழுவிக்கொண்டு,குடுமி வைச்சு,பஞ்சகச்சம் போல வேட்டியை ஐயங்கார் ஸ்டைலில் கட்டிக்கொண்டு ஆனந்தத்தில்  கோபியரே கோபியரே கோவிந்தன் பெயரைச்சொல்லி ,,,எண்டு ஆடிக் கொண்டு இருந்தார்கள் .

                           வெள்ளைக்கார  ஸ்வீடிஷ்  பெண்களுக்கு சேலை கட்டினால்  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும் இருக்கும் , அவர்கள் எப்பவுமே ஒல்லியா வெள்ளையும் சொள்ளையுமா இருப்பது சேலைக்கு நல்லா எடுபடும் , அங்கங்கே பார்காட்டியும்  பார்க்காமலே பத்த வைக்கும் அவர்களின் வசீகரம் ஒரு வித ஆன்மிகதை அறிய ஆரம்பிக்கிறவனுக்கு  வைக்கும் முதல் சோதனை போல இருந்தது .அது பார்க்க அழகா மட்டுமில்லை,  நிறய  ஆர்வ கோளாறையும்  கற்பனைகளையும்  கிளப்பிவிடும் ! அதால

                  " இதில உள்ள மாதிரியா,உங்கள் ஆசிரமதிள்ள உள்ள பெண்கள் எல்லாரும் இருப்பார்கள் எண்டு ?"

              கேட்க ,அவள்             

                             "இதில உள்ள மாதிரியா, எண்டு எண்ணத்தைப் பார்த்து சொல்லுறாய்?"

                   எண்டு ,சந்தேகமா என்னோட கண்னுக்குள்ள நேராப் பார்த்துக் கேட்டாள், நான் , சாமாளித்து 

                "படத்தில அவர்கள் முகத்தில ,தெரியுற மாதிரி ,ஆன்மீக  களையுடனையா ,இருப்பார்கள் ?"

                           ,எண்டு கேட்க, சைகொலோயி " மாஸ்டர் டிகிரி" படித்த அவள் சிரிச்சுப்போட்டு,

                          " முதலில்,ஆசிரமம் போ, முதலில் கெட்ட சிந்தனைகள் அறவே வராது !"

                           எண்டு அழுத்தம் கொடுத்து என்னோட மனசாட்சிக்கு சொன்னதுபோல சொன்னாள் !

                                     நான் அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் நான் என்னமோ ஆன்மிகம் பற்றி தீவிரமா ஜோசிகுரன் எண்டு நினைச்சு

                                  " நீ எப்பவாது தியானம் செய்ய முயற்சி செய்து இருக்கிறாயா, தியானம் எவளவு முக்கியமான விடயம் எண்டு இந்தியர்கள் தான் ஆயிரம் வருடம் முன்னமே கண்டு பிடித்துள்ளார்கள்,..." 

                                     என்று சொன்னாள், நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                         " முழுமையான நிறைவான த்யானம்தான் வாழ்வின் உயரிய இன்பங்களை வழங்கும் என இந்திய சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. சரி த்யானத்தின் பொருளை ஆராய்ந்தால் ஆச்சர்யகரமாய்  த்யான நிர்விஷ்யம் மனஹ  என்கிறார்கள், 

                                "கிழிஞ்சுது  ரம்பாவின்  லுங்கி, ,,நீ சொல்லுறதைக்  கேட்க  மண்டை  விறைக்குது  இதுக்கு  என்ன  அர்த்தம்  தாயே   " 

                                         " அதாவது எதுவுமற்ற வெறுமையான மனநிலையும் அதையொட்டிய எண்ணங்களும். என்று எங்கள் குரு நாதர் பிரபுபாதா சுவாமிகள் மெடிடேசன் வேய் ஒப் லைப் புத்தகத்தில் எழுதியுள்ளார் " என்றாள்  
                                                  
                                                        நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு அவளைப்  பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன்.  அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு, 

                             " சரி...தியானத்தை அறியாதவர்கள் Material world எனப்படும் வாழ்வியல் இன்பங்களை எப்படி அடைவதாம்? சாமானியர்களும் தங்கள் ஆசைகளையும், இலக்குகளையும் அடைவதற்காகவே பண்டைய மகரிஷிகள் வழங்கிய சாதனா எனப்படும் யந்திர,தந்திர,மந்திர சாஸ்த்திரங்களில் சொல்லி  இருக்கிறார்கள்  "  

                                 "   இவளவு தானா  இல்லை  இன்னும்  இருக்கா "

                                "   ஏன்  உனக்கு  இப்ப  என்ன  "

                                 "இல்லை,,இப்பவே  எனக்கு அரைவாசி உயிர் போயிடும் போல இருக்கு  கத்தரீனா "

                             "   கொஞ்சம்  பொறுமையாகக் கேள்,,நான்  சொல்லவேண்டியதை  சொல்லிமுடிக்க விடு "

                                   "  சரி  சொல்லிமுடி ..எல்லாம்  என்னோட  காலக்கொடுமை,,நீ ஒரு முடிவோடுதான்  நிக்குறாய்   "

                                    "  இவை பற்றிய குறிப்புகள் இந்து சாஸ்திரங்களில் மட்டுமல்லாது பௌத்த, சமண, இஸ்லாமிய, கிருத்துவ மத நூல்களிலும் காணக்கிடைப்பது நான் சைகொலோயி மாஸ்டர் டிகிரி படிக்க ஒரு புத்தகம் ரிசர்ச்  பண்ணிப் படித்த போது அதில இருந்தது ஒரு ஆச்சரியமான விசியம், இதுக்கு மேல சொன்னால் உனக்கு அறுவையா இருக்கும் என்றால் சொல்லவில்லை " என்றாள் 

                            நான் அதுக்கும் பேசாமல் அவள் சொல்வதை ஆர்வமா கேட்பது போல ஜோசிதுக்கொண்டு  , அவளை பார்க்காதது போல முகத்தைத் திருப்பி வைச்சுக்கொண்டு,ஒரு கோணத்தில அவளை நல்லா விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்தேன். அவள் என்னோட ஆர்வத்தில் இன்னும் அதிகம் கவரப்பட்டு  இன்னும் கொஞ்சம் சொல்லுவாள் எண்டு நினைக்க அவள்,  

                " கொஞ்சம் பொறு,சில பேப்பர் வேலை இருக்கு,அதெல்லாம் முடிக்க வேண்டும்,நீ கையெழுத்து போட வேண்டும் " 

                           எண்டு சொலிப்போட்டு கொஞ்சம் பேப்பர்களில் குனிந்து எழுத , நான் கோபியப் பெண்கள் போல இருந்த அந்த சேலை கட்டிய ஸ்வீடிஷ் பெண்களின் " குருப் " படத்தை ஆன்மீகம் பித்தம்  தலைக்கு ஏற்றப் பார்த்துக்கொண்டு இருந்தேன் .சொன்ன மாதிரியே ரெண்டு கிழமை என்னை அங்கே  அவளோட காரிலேயே கொண்டுபோய் விட்டாள் கத்தரீனா, நான்    

                           " அந்தப் பெண்கள் எங்கே ஒருவரையும் காணவில்லையே " 

                                           எண்டு கேள்வி கேட்க தொடங்க முதலே அவள் ,

                          " இதுதான் உனக்கு கடைசி சான்ஸ் ,இதையும் குழப்பினாய் எண்டால் அந்த கிருஷ்ண பரமாத்மாவே  நேர்ல வந்தாலும் உனக்கு விடிவு இல்லை"  

                      எண்டு போட்டுப்போயிட்டாள் !

                             அந்த ஆசிரமம் கொஞ்சம் இந்திய முறைப்படி கட்டியது போல இருக்க ,வெளியே ஒரு கிருஷ்ணர் சிலை கோபியப் பெண்களுக்கு நடுவே ஆடுவதுபோல இருக்க , கோகுலத்து மாடுகள் கிருஷ்ணர் வாசிக்கும் புல்லான் குழகுக்கு மயங்க்கி பார்த்துக்கொண்டு இருக்க ,,ஆரம்பமே கொஞ்சம் அடகாசமா இருக்கும் போல இருந்திச்சு .ஆனால் நான் நினைத்த மணிரத்தினம் படத்தில வாற மங்கலான கனவு ஸீனில கதாநாயகி மிதந்து  நடந்து வருவது போல போல அங்க ஒண்டுமே உற்சாகம் தருவதுபோல இருக்கவில்லை.   

                                             அந்தக்  ஆசிரமத்தில " கோகுலம்" என்ற பெயர் உடைய மாடுப்பப்பன்னையில் நிறைய கறவை மாடுகள் ,கன்றுக்குட்டிகளுடன் நிண்டது, அதுக்கு பொறுப்பான ஸ்வீடிஷ்காரர்  நான் மாடுப்பப்பன்னையில் ஒவ்வுருநாளும்  என்னவெல்லாம் செய்யவேண்டும் எண்டு பொறுப்பாக சொன்னார், நான் பொறுப்பில்லாமல் கேட்டுக்கொண்டு இருந்தேன்!

                                          உங்களுக்கு  உண்மையை சொன்னா  என்ன,  " அல்ஹோலிக்ஸ் "வியாதியால் அவஸ்தைப் பட்டதால் நான் ஒண்டுமே அங்கே திட்டமிட்டபடி செய்யவில்லை , 24 மணித்தியாலமும் ஓடி ,ஆடி வேலை செய்யும் அதுக்கு பொறுப்பான  சாமியார் போல இருந்த  ஸ்வீடிஷ்காரர்  என்னிடம்  வந்து

                         " மன்னித்துக்கொள்,ஆரம்பமே  என்னோட பிழை ,"

                           "  ம் "

                           "     நீ வந்தவுடனே இதைக் கேட்டிருக்க வேண்டும் , "

                             "   ம் "
                                                  
                               "  பார்க்கும் போது நீ  நல்ல திடகாத்திரமாய்  இருந்ததால் நானும் உன்னை எல்லார் போலவும் நினைத்து பல வேலைகள் செய்யச் சொல்லி உன்னைக் கேட்டேன், "

                            "   ம் "

                                " உண்மையில்  உனக்கு ஏதாவது உருப்படியான வேலை செய்யத் தெரியுமா அதைச் சொல்லுப்பா ? "

                            "  ம் "

                                " குறை நினைக்காமல் அதை மட்டும் எனக்கு சொல்லுவியா "

                             எண்டு ஒரு நோயாளியை டாக்டர் கேட்பதுபோல் அன்பாகக் கேட்டார்,நான் 

                                "சமையல்காரனாகதான் வேலை செய்தேன்  , நான் அதுக்காக தான்  பயிறுவிக்கப்பட்டு, அதில் தான் பலவருடம் அண்டா,குண்டா சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டி வேலை செய்தேன் !"

              என்றேன்,அவர் ,நாடிய தடவிக்கொண்டு

                       "அப்ப நீ ,ஸ்டோக்கொலமில் உள்ள எங்களின்  கோவிந்தா ரேச்டோறேண்டில் போய் மிகுதி நாட்களைஅவர்களின் சமையல் வேலையிலும். அங்கே உள்ள கோவிலில் பயனை பாடி அவர்களுக்கு உன்னால் முடிந்தளவு உதவி செய்வியா  ,

                              "  ஓம்..மரக்கறி  சமையலும்  நல்லா  தெரியும் "

                             "   சரி    அங்கே  எங்கள்  பிருந்தாவனம்  கோயிலும் அதோடு உள்ளது,,உனக்கு  நிறைய மன அமைதி கிடைக்கும் பயனை பாடும்போது "

                                 என்றார் " நான் அது எப்படி இருக்கும் " என்டுகேட்டேன், இப்படி இருக்கும் எண்டு ஒரு DVD செருகி படம் போட்டுக் காட்டினார்!

                                          சும்மா சொல்லவிலை, மாடுப்பன்னையை விட நிறைய இண்டேறேச்டிங் விசியன்கள் கலர் கலரா தெரிந்ததால், " ஆதிசங்கரர் போல  " கோவிந்தா கோ "  எண்டு அந்த இடைத்தை முதலில் விழுந்து கும்பிடுடு , வலது காலை எடுத்து வைத்து உள்ளுக்குப் போய் " ஆன்மிகம் பாடல்கள் கிடாரில் நல்லா வாசிப்பேன் " எண்டு பொய் சொல்லி அங்கே  ஒரு கிழமை இருந்தேன், அங்கேதான் M .S .V யின் "கிருஷ்ணா காஹனம்  "LP ஐ முழுமையாகக் கேட்க சந்தர்பம் கிடைத்தது !  

                                                அதோட  முன்பக்கம் ஸ்பானிஷ் கிட்டார் போலவும், பின் பக்கம் ஹவாயன் கிட்றார் போலவும்  இருந்த ஸ்வீடிஷ் பெண்களிடம் இருந்து எப்படி " கோவேறு வளஞ்சேர் கோவிந்தா " எண்டு வாற  ஆழ்வார் பாடலுக்கு என்ன உண்மையான அர்த்தம் என்பதையும் கண்டு பிடித்தேன் .  அந்த அழகான  இளம் சுவிடிஷ் பெண்கள் காலையில் சேலை  கட்டிக்கொண்டு  ஹரே  கிரிசுனா  ஹரே கிருசுனா  ஹரே  ராமோ  ஹரே  ராமோ  என்று  பஜன் பாடுவார்கள் ,நான் அவர்களுக்கு நெருக்கமாக  இருந்து  ஜால்ரா  போடுவேன். 

                                                அழகான பெண்களுக்கு  ஜால்ரா போடுறது  இந்த உலகத்தின் அலாதியான இன்பம், அந்த அனுபவம் எனக்கு நிறைய இருந்ததால் நல்லா  ஜால்ரா போட்டேன். ஆனால் அந்தப் பெண்கள் படு பனங்காட்டு நரிப்  புத்திசாலிகள்  .நான் ஒரு உதவாக்காரை என்று ரெண்டாவது நாளே கண்டுபிடித்துவிட்டார்கள். நானும்தான் முன்னம் பின்னம் ஜோசிக்காம ஒரு குளறுபடியை செய்துபோட்டேன். 

                                 நீட்டி முழக்கி கதை எழுதிப்  போட்டு உங்களை அறுக்க விருப்பமில்லாததால் ,மிகுதிக் கதையை  இரண்டாம் பகுதியாக எழுதுறன், சரிங்களா?.
 .
.

3 comments :

  1. சுயம் கூறுவது எளிதல்ல. உள்ளதை உள்ளபடி உணர்வோடு சொல்லியிருக்கிறீங்க. உதாரணங்களாக காட்டிய பாடல் வரிகள் இலக்கியம் மீதான உங்களது பரந்த தேடலை காட்டி நிற்கிறது.. சுவைபட அரசன் எழுதினாலும் கடந்துவந்த பாதை கண்முன் விரிந்து மனம் கனக்கவும் செய்தது.
    But very very interesting .. plz. Continue.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete