Monday, 7 December 2015

Enkeyum Eppothum Sankiitham ..M.S.V



ஒரு "சிம்பிள்" கதை! ஒரு இசைகுழு இந்தியாவில் இருந்து மலேசியா போய் இசைநிகழ்ச்சி செய்ய,அந்த இசை குழுவின் கிட்ராருக்குள் ஒரு பெண், ஒருவித நிர்பந்தத்தால போதைவஸ்து வைத்து கடத்த,அதே பெண்ணை அந்த குழுவின் முதன்மைப் பாடக்ர் மலேசியாவில காதலிக்க, அந்தப் பெண் கான்சர் இருப்பதை மறைத்து காதல் செய்ய,கமரா மலேசியா ,சிங்கபூரை 360 பாகையில் சுழண்டு படம் பிடிக்க, நாங்கள் எல்லாம் தியேட்ரில் "ஆ " எண்டு வாய்பிளந்து பார்க்க, வெள்ளி திரைகள் கிழிய கிழிய உலகம் எங்கும் ஓடியது "நினைத்தாலே இனிக்கும் "!
                                   இந்த படத்தில காமடிநடிகர் யாரும் இல்லை ,ஆனால் இதில நடித்த எல்லாருமே காமடி பண்ணுவார்கள். " Bodyய இந்தியா எடுத்திட்டு போறிங்களா ,இல்லை இங்கே மலேசியாவில அடக்கம் பண்ணபோறிங்களா " எண்டு பூர்னம் விஸ்வநாதன் சொல்லும்போது தியேட்டர் அத்திவாரமே அதிரும்!
                                      "இது ஒரு தேனிசை மழை"அப்படித்தான் அப்போது படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டது. படத்தின் முடிவு கூடஜெயபிரதா சாகிறதை காட்டவில்லை K.பாலசந்தர் ,பதிலாக , "சிம்பலிக்கா " ,ஜெயபிரதா ரத்தவாந்தி எடுக்க, "இனிமை நிறைந்த உலகம் இருக்கு" பாடலைபாட படம் முடியும் ! அருமையான பாடல்கள் படம் முழுவதும். மெல்லிசை மன்னர் M.S.V ,கவியரசர் கண்ணதாசன் கூட்டணி பின்னிஎடுத்த படம் !
                                அந்தப் படத்தில் "ஆனந்த தாண்டவமோ ஆண்டவனார் ஆடுகிறார் காலங்களெல்லாம்" எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய சிங்கப்பூரின் வீதிகளில் போதைமருந்து செலுத்தப்பட்ட பெண்ணாக ஜெயப்பிரதா ஆடிப்,பாடிய பாடல் சூப்பர் "சர்-ரியலிசம் ".இந்தப் படத்தில் தமிழ்த்திரையுலகத்தின் பெரும் பெண்பாடகிகள் பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி,வாணி ஜெயராம், எஸ்.ஜானகி, நால்வரும் ஜெயப்பிரதாவுக்கு இந்த ஒரு படத்திலேயே பாடியிருக்கிறார்கள். இப்படியொரு வாய்ப்பு வேறெந்தக் கதாநாயகிக்கும் வாய்த்திருக்கிறதா என்று தெரியவில்லை!....
                              கவலைகள் மறக்கு வைக்கும் உல்லாசப் பாடல்களின் கவிதைத்தொகுப்பு "நினைத்தாலே இனிக்கும் " அதை இப்ப நினைத்தாலும் இனிக்கிறது...,

Sunday, 6 December 2015

ஜுலிய சீசர்

அலாதியான காலங்கள் என்பது என்ன எண்டு சொல்ல வேண்டுமெண்றால், அந்தக் காலத்தில் நடந்த சம்பவங்கள் தந்த இன்பமான நினைவுகள் நம்மை அறியாமலேயே  இன்னுமொருமுறை  இழுத்து எடுக்கும். அதன் கோலங்கள் சில நேரம் அலங்கோலங்களாக அந்த நேரம் இருந்தது போலிருந்தாலும் இப்ப நினைக்கும்போதும்   எங்கள் ஊர் வாசிகசாலை மேடையில் அது அலாதியாகத்தான் இருந்தது.

                                                ஜுலிய சீசர் நாடகத்தில் கிளியோபற்றாவா பொம்பிளை வேஷம் போட்டு நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததும்,  அந்த நாடகத்தில் பொம்பிளை வேஷம் போட்டுக்கொண்டு, மேடையை விட்டு இறங்கி மூத்திரம் பெய்யப்  போன நேரம் ஒரு ரோட்சைட் ரோமியாவால் இருட்டில் கடத்தப்பட்டுக் கற்பழிக்கப்படுவதில் இருந்து மயிரிழையில் தப்பிய சம்பவம் நடந்த  ஜுலிய சீசர் நாடகத்தில் எனக்கு நடந்த நாடகத்தின் கதை தான் இது 

                                                கவிஞ்சர் கந்தப்பு எங்களின் ஊர் வாசிகசாலையின் ஆண்டு விழாவில் சிறப்பு நிகழ்வாக  ஜுலிய சீசர் நாடகம் போடப்போறதாக சொல்லிக்கொண்டு இருந்த நேரமே அவர் வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய  அந்த ஆங்கில நாடகத்தைத் அழகுத் தமிழில் மொழிபெயர்த்து வசனங்கள்  எழுதி முடித்து அதில் நடிக்க வேண்டியவர்களையும் தெரிவுசெய்து விட்டதாகத்தான் கதை அடிப்பட்டது. கந்தப்பு இயக்கி,அவரே அதில மார்க் அந்தோனி வேஷம் போட்டு நடித்தார் .

                                    அந்த ஆங்கில நாடகத்தில் வரும் பல உரையாடல்களை எங்கள் ஊரில இருந்த ரிட்டையட் கவர்மென்ட் செர்வன்ட் பெட்டிசம் பாலசிங்கம்தான் கந்தபுக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தார். பெட்டிசம் இங்கிலிஸ் தல காரணமா பேசுவார்,வாசிப்பார்,எழுதுவார். ஆனால் பெட்டிசம் " படிப்பறிவு இல்லாதுகள் கூ த்துப் போடுதுகள் " என்று சொல்லி வாசிகசாலைப் பக்கமே வரமாட்டார். அதைவிட வாசிகசாலை வெளி மண்டபம் கட்டினதில ஊழல் நடந்தது என்று முனிசிப்பல் கொமிசனருக்கு  பெட்டிசம் எழுதினதால் அவருக்கு பலர் எதிர்ப்பு. அதனால் என்ன ஒருவரின் அறிவு மற்றவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில பயன்படுவதே பெரிய விசியம் தானே 

                                            என்ன காரணமோ தெரியவில்லை அதில கிளியோபாட்ராவாக பொம்பிளை வேடம் போட்டு நடிக்க அவர் தெரிவு செய்த அரிச்சந்திர மயான காண்டம்  நாடகத்தில் சந்திரமதியாக  பொம்புளை வேஷம் போடும் அனுபவம் உள்ள  அந்த  நடிகர் கடைசி நேரத்தில் வரவில்லை. அதால கவிஞ்சர் கந்தப்பு வாசிகசாலை வாசலில் உருப்படியாக எதுவுமே செய்யாமல் சும்மா கைபார் அடிச்சுக்கொண்டு இருந்த எங்களின் குருப்பில்  இருந்து என்னை தெரிந்தெடுத்து நடிக்கப் வாறியா என்று கேட்டார். 

                                             நான் ஏற்கனவே அவர் போட்ட சீதையின் சுயம்வரம் நாடகத்தில் வில்லை உடைக்கவரும் பன்னிரண்டு ராஜாக்களில் ஒருவனாக நடித்து நான் செய்த குரங்குவேலைக்  குளறுபடியால் நாடகத்தின்  இடையிலேயே  மேடையில் இருந்து இறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவன் .அது தெரிந்துகொண்டும் ஏன் என்னைக் கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது, அதைவிட நானே   குரங்குவேலைக்  குளறுபடிகளில் இருந்து திருந்தாமல் பழையமாதிரித் தான் இருந்தேன்.

                       " எனக்கு நாடகத்தில் ஒழுங்கா நடிக்கத் தெரியாது,,அதைவிட பொம்புளை வேஷம் எண்டு சொல்லுரிங்க,,நடிப்பனா எண்டு குழப்பமா இருக்கே அய்யா,,பிறகு என்னவும் பிசகினால் என்ன செய்யிறது ,வேறயாரையும் போடுங்களேன் "

                                 " அரியநாயகம் கடைசி நேரத்தில சின்னமுத்து அள்ளிப்போட்டதால சுகமில்லை என்று வரமாட்டான் என்று சொல்லிப்போட்டான் அதுதான் உன்னைப் போட்டு நாடகத்தை ஒப்பேற்றப் போறேன் "

                                "  நான் வேஷம் போட்டா பொம்புளை போல  இருப்பனா எண்டு எப்படி சொல்லுரிங்க "

                                    "  உனக்குப் பொருந்தும்,,உயரமா,,மெல்லிசா இருகிறாய்,,முகத்தில ஒரு சரஸ்வதிக்களை  இருக்கு,,அதை வைச்சே கதையோட கொண்டுபோகலாம் "

                                   " எனக்குப் பயமா இருக்கு "

                                   " டேய்  எருமைமாடு, அஞ்சினர்குச் சதா மரணம்  அஞ்சா நெஞ்சத்து  ஆடவர்க்கு  ஒரு மரணமடா "

                                         " இதென்ன  அய்யா "

                                  " டேய் ,,இதுவும்  ஜுலிய சீசர்  சொல்லும்  வசனமடா "

                                    " ஜுலிய சீசர்,, பெரிய  ஆள்..அவர்  இதுபோல  என்னவும்  சொல்லுவார்,,நான்  அப்படி  இல்லையே  அய்யா "

                             " டேய்  பொம்புளை வேஷம் போட முதலே பெண்டுகள் போல பயமாயிருக்கு அது இது  பிரகண்டம் போல கதைக்குறாய் அதொண்டும் நடக்காது,,நான் பழக்கி எடுப்பேன் "

                      " ஹ்ம்ம், பொம்புளை போலவே நடிப்பு வருமா எண்டு பயமா இருக்கு அய்யா "

                             " டேய் பொம்புளை வேஷம் போட்டாலே நடிப்பு தானா வருமடா,,அதில  உனக்கு வசனமும் பேசுறதுக்கு அதிகம் இருக்காது "
                         
                              " பிறகு என்ன அதில எனக்கு நடிக்க இருக்கப்போகுது "

                             " டேய்,,அக்க்ஷன்,,,அக்க்ஷன்,,இல நடிக்க வேண்டும் ,பொம்புளை வேஷம் போட்டாலே அக்க்ஷன் தானா வருமடா,,பெண்டுகளைப் பார் எப்படி அக்க்ஷன் போடுராளுகள் எண்டு ,அது நீ நடிப்பாய் ,,நான் சொல்லித்தாறன் "

                              " ஒரு கொண்டிசன்,   அம்மாவுக்கு சொல்லக்கூடாது ,,அவா பொம்பிளை வேஷம் போட்டா கட்டாயம் வீட்டில வெட்டுக் குத்து  எண்டு சண்டை எடுத்துக் குழம்புவா என்னோட "

                         "  ஏன் கொம்மாவுக்கு என்ன விசரே..இது நாடகம் தானே ,,சரி.    இல்லை,,நான் சொல்ல மாட்டேன்,,நீ வா ,,நான் பழக்கி எடுக்கிறேன் "

                                " ஹ்ம்ம், பார்க்கலாம் "

                              " என்ன பார்க்கலாம் , உனக்கு ஒரு அருமையான கட்டம் அதில வரும்,சீசர் கொலப்பட்ட நேரம்,நீ அவர் நெஞ்சில விழுந்து ,உன்னோட மார்ப்பில் அடிச்சு ஒப்பாரி வைச்சு அழ வேண்டும் ,,அதை மட்டும் சரியா செய்தி என்டா நாடகம் சக்சஸ் ,,என்னைப் பொறுத்தவரை சக்சஸ்,"

                             " எனக்கு எங்க மார்பு  இருக்கு,,அதை எப்படி கொண்டுவரப் போறீங்க "

                                 "   பணகாய்ப் பினாட்டுப் ஒட்டின பாயைச் எலி சுரண்டினமாதிரி அக்குவேறு ஆணிவேறாக இப்பவே  கேள்வி கேட்டுக்  கொல்லுறியே "

                                  "  மிக முக்கியமான  கேள்வியத்தானே  கேட்குறேன் ,"

                                    " அட பேந்தும்பார்,, அதுக்கு என்னட்ட ஒரு டெக்னிக் இருக்கு ,,தேங்காய்சிரட்டை ,,அதை வைச்சு உனக்கு ரெண்டு எடுப்பான மார்பகம் கொண்டு வாறன் ,சும்மா விழல்க்  கதையை விட்டுப்போட்டு நீ நடிக்கிறாய்,,அவளவுதான்,,

                                         "  சரி முயற்சித்துப் பார்க்கிறேன், "

                                      " நாசமறுப்பு  ... உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்!  என்று ஒரு வசனம் சீசர் சொல்லுற மாதிரி இந்த நாடகத்தில வருகுது  அதுபோல தான் இருக்கு நீ சொல்லுறது  "


                                          " உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! "... இப்பிடிச் சொல்லித்தான் கவிஞ்சர் கந்தப்பு என்னை கிளியோபாட்ரா ஆக்கினார் . ஆனால் அந்த தேங்காய் சிரட்டையால் எனக்கு டெக்னிகலாப் பிரச்சினை வருமெண்டு எனக்கும் அப்ப தெரியாது. அது கவிஞ்சர் கந்தப்புக்கும் தெரிய வாய்ப்பில்லைதான்.

                                       அந்த நாடகத்தை வாசிகசாலை லைபிறேரி அறையில் ஒரு கிழமை வைச்சுப்  பழகினார் . அதில்  ஒரு கிழமையில் நாலு நாள் தான் நான்  ஒத்திகை பார்க்கப் போனேன் . எனக்கு அந்த இளவயது நேரம் சிமெந்து சுவரில கரிக்கட்டையால கீறின மாதிரி சின்ன மீசை இருந்தது, கந்தப்பு ஒருநாள்க்  கூத்துக்கு மீசையை எடுத்தவன் போல அதை மழிச்சு வழிக்கச் சொன்னார். புண்ணியக்குஞ்சியும் வந்து நின்று சுருட்டைப் பத்திக்கொண்டு விடுப்புப் பார்ப்பார் .அவர்தான் எல்லா நாடகத்துக்கும் மேடையில் திரைச்சீலை இழுப்பது. அவரை அதுக்கு விட்டாட்டி பிறகு எந்த நாடகமுமே மேடை ஏறாது.

                                  " இந்த நாடகம் நல்லா வரும் போல இருக்கே, என்ன நாடகம் போட்டாலும் நான் தானே தொடக்கி இழுக்கிறதும்,,முடிச்சு வைக்க இழுக்கிறதும், கொம்மாவுக்கு தெரியுமே நீ பொம்புளை வேஷம் போடுறது ,உனக்கு நல்ல கலாதியா தானே இருக்கு "

                                 "  இல்லை  சித்தப்பு ,,அம்மாவுக்கு மட்டும் இப்ப சொல்லிப்போடாதையுங்கோ ,,பிறகு பிரச்சினை வரும் "

                                  "   அதெல்லாம்,,ஒண்டும் வராது , கந்தப்பு என்ன லேசுப்பட்ட ஆளே, இருந்து பாரன் நாடகத்தில்  சீனடி சிலம்படி விளையாட்டை "

                                  என்று சொன்னார் புண்ணியக் குஞ்சி. ஆனால் புண்ணியக் குஞ்சியும் ஒரு லேசுப்பட்ட ஆள் இல்லை , திருவிளையாடல் தருமி போல அந்தாளும் எப்பவும் ஒரு குரளி வித்தை பொறுத்த நேரத்தில காட்டுவார். இந்த நாடகத்தில் என்ன செய்யப் பிளான் போடுறார் என்று மட்டுப் பிடிக்க முடியவில்லை. ஒரே ஒரு சம்பவம் சொல்லுறேன் புண்ணியக் குஞ்சி எப்படி அவரோட குசும்பை சரியான நேரத்தில்  குத்திவிடுவார் என்று

                                     கவிஞ்சர் கந்தப்பு " விதியா சதியா " என்று ஒரு சமுதாய விழிப்புணர்வு நாடகம் போட்டார். அந்த நாடகத்துக்கும் புண்ணியக் குஞ்சி தான் ஒவ்வொரு சீன் தொடங்கும்போதும்,முடியும் போதும் திரைச்சீலை இழுத்தார். அந்த நாடகமே ஒரு அழுது வடியும் நாய்க்கு வாயில சவ்வு மாட்டின மாதிரி  மாதிரி இழுவை நாடகம்.  அந்த நாடகத்தில் கவிஞ்சர் கந்தப்பு ஒரு வயதான அப்பா, அவரோட மகளுக்குக் கலியாணம் நடக்காமல் அந்தப் பெண் முதிர்கன்னியாக வாழ்வதுதான் அந்த நாடகம் , கலியாணம் ஏன் நடக்கத் தடையாக இருக்கு என்ற காரணம் அதில வெளிப்படையாக சொல்லப்படமாட்டாது .

                                           புண்ணியக் குஞ்சிக்கு அந்த நாடகமே பிடிக்கவில்லை, அந்தப் பெண்ணுக்கு கலியாணம் ஏன் நடக்கத் தடையாக இருக்கு என்ற காரணம்  அவர் மனடையைக் குடைஞ்சு கொண்டு இருந்து இருக்கு. அதால  வெறுப்பா திரைச்சீலை இழுக்கிற கயிறைப் பிடிச்சுக்கொண்டு நிண்டார்.   அந்த நாடகத்தில் ஒரு உரையாடல் வரும், கவிஞ்சர் கந்தப்பு அவர் வீட்டுக்கு தேடிவரும் புரோக்கர் பொன்னம்பலம் என்னத்துக்கு உங்களின் மகளுக்கு இன்னும் கலியாணம் நடக்கவில்லை என்று கேட்பார்

                                " அது ஒரு பெரீய கதை, கண்டியளோ ,புரோக்கர் .அது ஒரு பெரீய கதை.....அது ஒரு பெரீய கதை ..."

                          என்று பெரு மூச்சு விட்டுச் சொல்லுவார் வயதான கிழவன் வேஷம் போட்டு நடிக்கும் கந்தப்பு  மேடையில் . புண்ணியக்குஞ்சி இந்த இடத்தில உஷார் ஆகி

                               " கந்தப்பு, அந்தப்  பெரீய கதையை,  அது ஒரு பெரீய கதை எண்ட பினாத்தலை விட்டுப் போட்டு , அந்தப் பெரீய கதையை முதல் சொல்லும் காணும், அதாவது கொஞ்சம் சுவாரசியமா இருக்கா எண்டு பார்ப்பம் "
                           
                         அதுக்கும்  கந்தப்பு ,   " அது ஒரு  பெரீய கதையை,  அது ஒரு பெரீய கதை , " என்று சொல்ல புண்ணியக்குஞ்சி விடவில்லை

                              "  பெரிய கதை  என்றால், கொஞ்சம் கொஞ்சமா பாட் பாட்டாப்  பிரிச்சு சொல்லும்  காணும் , மூளையைக் கசக்கிப்பிழிந்து குத்திமுறிஞ்சு கோழிக்காலை எறிஞ்சு மாடு திருடுவதுபோல இந்த  நாடகம்  போகுதே ,,எனக்கு ஒரு அறுப்பும்  விளங்குதில்லை , கண்டியளோ கந்தப்பு "
                                   
                                         என்று சொன்னார்.நல்ல காலம் அது மேடைக்குக் கீழே இருந்து பார்த்த சனங்களுக்கு கேட்கவில்லை. கந்தப்புக்கு அது நல்லாக் கேட்டது .அவர் கறுவிக் கொண்டு அந்த நாடகத்தில் அதுக்குப் பிறகு நடித்துக்கொண்டிருந்தார்.நடித்து முடிய இறங்கி வந்து புண்ணியக்குஞ்சியக் பார்த்து

                       " கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் பாட்டில  வாறது  போல  நீரே  என்னில  பிழை பிடிகிறது  புண்ணியமூர்த்தி  கதை பேச்சு அளவோட  இருக்க வேணும்,, "

                                   " உதென்ன  பாட்டு  கவிஞ்சர்  கந்தப்பு,,சும்மா அதை இதை சொல்லி மழுப்பக்கூடாது கண்டியளோ "

                              " புண்ணியமூர்த்தி ..  சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன் என்று அந்த திருவிளையாடல் புராணத்தில்  வருமே  அதுபோல .புண்ணியமூர்த்தி  கதை பேச்சு அளவோட  இருக்க வேணும்,,."

                               "  ஓ,,உது  விளக்கம் இன்னும்  பெரிய  கிடாரம்  போல இருக்கே "

                                     "  புண்ணியமூர்த்தி  கதை பேச்சு அளவோட  இருக்க வேணும்,,இந்தக்  கிரந்தம் விடுறதை  என்னோட வைசுக்கொள்ள வேண்டாம்,சொல்லிப்போட்டன் "

                                         " பின்ன  என்ன பூசாரி  உடுக்கு அடிக்க அடிக்க  உரு  ஏறாத  சக்களத்தி  போல  விசர் நாடகத்தை  வைச்சு  இழுத்தா,,மனுஷருக்குக்  அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு கொதி வரும்தானே கண்டியளே "

                                           " அதுக்காக  நாடகம் நடக்கும்போதே எல்லாம் குறுக்க விழுந்து சொல்லிக்கொண்டு இருக்க முடியாது       புண்ணியமூர்த்தி, இதோட  கதையை விடவேணும்  இனி  விளக்கம் சொல்ல என்னால முடியாது "

                                              அந்த   வில்லியம் சேக்ஸ்பியர் எழுதிய நாடகத்தில் வாற  கிளியோபாட்ரா எப்படி இருந்தாள் என்று எனக்குத் தெரியாது. கந்தப்புக்கு தெரிந்து இருக்காலம் அதனால் அவள்  போல வேடம் போட " ஜேசுவின் பாடுகள் " , " பாலன் பிறப்பு  " போன்ற கிறிஸ்தவ நாடகம் போடும் அவரின் கலாமன்றக் கலையுலக நண்பர்களிடமிருந்து  ஒரு நீண்ட கறுப்பு நீளங்கி உடுப்பும், சடை வைச்சால் அடங்க மறுத்து திமிறிக்கொண்டு நிக்கும் கொண்டையும் ஒரு நாள் எடுத்துக்கொண்டு வந்து எனக்குப் போட்டுப்  பார்த்தார். நீண்ட கறுப்பு நீளங்கி உடுப்பிலையும் ,அந்தக் கொண்டையிலும் நிறைய மேடைகளை அது கண்ட அடையாளங்கள்  வியர்வை வாசத்தோடு இருந்தது 

                                                ஆனால் ஒரு பெண்ணாக உருவம் கொடுப்பதுக்கு முதல் மார்பகம் அவசியம். அதைத் தவிர்த்து யாருமே பெண்ணாக மாற முடியாத ஜதார்த்தம் இருக்க கொஞ்சமாவது நெஞ்சு விம்மிக் கொண்டு நிக்கவேண்டுமே அதுக்கு என்ன செய்யப் போறார் என்று குழப்பமா இருந்தது ,கடைசி ஒத்திகை நாள் பெண்கள் மேலே போடும் ஒரு பிளவுசும் ரெண்டு தேங்காய்ச் சிரட்டையும் கொண்டு வந்தார் கவிஞ்சர் கந்தப்பு. அதைப் பார்க்க நெஞ்சு பக்குப் பக்கு எண்டு அடிக்கத் தொடங்கியது 

                                " இந்த பிளவுசை முதல் போடு,,பிறகு ரெண்டு சிரட்டையும் உள்ளுக்க தள்ளு,,இப்ப  நான் பார்க்க வேண்டும் இடுப்புக்கு மேலே என்னமாதிரி உன் தோற்றம் கிளியோபாட்ராவுக்கு  பொருந்துது எண்டு, "

                                  என்று சொன்னார்,அவர் சொன்ன மாதிரியே செய்தேன் ,ஆனால் சிரட்டை ரெண்டும் பிளவுஸ் அமத்தின அமத்தில நெஞ்சில வெட்ட நோகத் தொடங்கியது. அதை சொல்லவும் பயமா இருந்தது,பிறகு அதுக்கும் சேக்ஸ்பியரில் இருந்து கந்தப்பு வசனம் எடுத்து விடுவாரோ என்று குழப்பமா இருந்தது.  இவளவு வரைக்கும் வந்தாச்சு இனி " வந்தாப் வா போனாப் போ கெலிம்பாற பிட்டக் கொட்டுவை " எண்டு நினைச்சு 

                                 "  பிளவுஸ் சின்னது போல இருக்கே ..  சிரட்டை பெரிசா இருக்கு  அதால நெஞ்சான் கூட்டில வெட்டுது அய்யா , "

                                 " கொஞ்ச நேரம் தானே,,நீ சமாளிப்பாய் "

                          " இல்லை சிரட்டை பெரிசா இருக்கு,,சின்ன தேங்காய் சிரட்டை இருந்தால் இப்படி வெட்டாது "

                               "  வயது ஏறினும் வதங்காது அவள் மேனி, வழக்க மரபுகளால் ஒருபோதும் குலையாத ராணி, பார்க்குமிடமெல்லாம் வரம்பிலா விதவித வனப்பு, இப்படி சொல்லுறார் சேக்ஸ்பியர் அவள் அழகை "

                               "  கேட்க நல்லாத்தான் இருக்கு,சிரட்டை வெட்டித் தள்ளுதே ,அதுதான்  எனக்கு சரிவருமா எண்டு ஜோசிக்குறேன்  "

                                " டேய்,,பிரகண்டம் பிடிச்சவனே,,இதெல்லாம் பெரிசா இருந்ததா தான் கவர்சியா இருக்குமாடா,,கிளியோபாட்ரா அவளே ஒரு கவர்சிக் கன்னி,,நான் கணக்கான சைசிலதான் தேங்காய் சிரட்டை தேடி எடுத்துக்கொண்டு வந்து இருக்கிறேன்.."

                                   " சரி   பிளவுஸ் ஆவது கொஞ்சம் பெரிசா எடுத்துக்கொண்டு வாங்கோ,,எனக்கு சிரட்டை விளிம்பு  இறுக்க நெஞ்சில  வெட்டுது "

                                   " டேய்,,செம்மறி,,இப்படி இறுக்கமா, மாலைதீவு செவ்விழனி போல  பெரிசா இருந்தாத்தான் கவர்சியடா ,,உனக்கு நல்ல எடுப்பா இருக்கு,,இது காணும்,,எனக்கு கரைச்சல் குடுக்காதை.."

                                   " சரி,நீங்க சொல்லுரிங்க அதால இந்த எடுப்பு எடுக்கிறேன் ,என்னோட குரல் அது உரல் போல  இருக்கே பொம்புளைக் குரலுக்கு சரிவராதே ,"

                                       " டேய், கழுதை ,நீ என்னடா லூசா ,இல்லைத் தெரியாமத்தான் கேட்குறேன்,,நீ ஒரு அரை லூசூ, அவன் அவன் என்னோட நாடகத்தில சும்மா தலையைக் காட்டி எட்டிப்பார்த்து நடிக்கவே அலையுறாங்கள்,,நீ ஒரு அரை லூசூ  ,அது தான் இப்பிடி எல்லாம் விண்ணாணம் கதைக்குறாய் "

                                    என்றார், அதால அவருக்கு அதுக்கு மேல கரைச்சல் குடுக்கவில்லை,ஆனால் இந்த ரெண்டு தேங்காய் சிரட்டையும் எனக்கு எப்படி ஒரு பயங்கரமான அலுப்புக் கொடுக்கப்போகுது என்று எனக்கு அப்ப  தெரியவில்லை. என்னோட நண்பன் பிட்டி கிட்டிக்கு பொம்புளை வேஷம் போடுறேன் என்றேன். அவனும்

                           " அது உனக்கு நல்லாப் பொருந்தும் மச்சான்  ,ஆனால் உன்னோட குரல் மச்சான்  சரிவராதே "

                              " அதைதான் அந்தாளுக்கு சொன்னேன் அதுபோல நிறையக் குழப்பம் இருக்கு எனக்குள்ள "

                             "சரி விடு மச்சான் இதுக்கு போய் பெரிசா ஜோசிக்குறாய்,,வா சொக்கன் கடைக்குப் போய் வடையும் பிளேன் டீயும் அடிச்சுப்போட்டு ஒரு மட்டக்கோன் தம் போட்டுக்  கொண்டு கதைப்பம் , கந்தப்பு வாத்தி ஒரு விடாக்கொண்டன் மடாக்கொண்டன் ,,நீ ஒரு அரை லூசூ   ''

                         "அதையேதாண்டா வாத்தியும் சொன்னார்டா ''

                             "  என்ன சொன்னார் "
                     
                              " நான் அறம்புறமாக்  கேள்வி கேட்க என்னைப் பார்த்து நீ ஒரு அரை லூசூ என்டு சொன்னார் டா "

                                ""சரி.. சரி..மச்சான் . கவலைப்படாதே... வாத்தி  உன்னை இன்னும் முழுசாப் புரிந்து கொள்ளவில்லை , அதாலதான் அப்படி சொல்லி இருக்கிறார் "

                                    " அடப்பாவி , என்னடா சொல்லுறாய் "

                                " மச்சான் நீ இருந்து பார் , ,,இந்த நாடகம் முடியிறதுக்குள்ள அந்தாளுக்கு நீ முழு லூசூ எண்டு தெரியவரும் ,அதைச் சொல்லுறேன் ''

                                    அந்த நாடகத்தில் ரோம் நாட்டு  வீராதி வீர சக்கரவர்த்தியாக வரும் ஜுலியஸ் சீசர் இக்கு நடித்தது அம்மாசிய குளத்துக்கு அந்தப்பக்கம் வடலிக்காணியை மறிச்சு அடைச்சு அதுக்குள்ளே பண்டி வளர்த்த தெய்வேந்திரம். இது ஒரு பெரிய முரண்பாடாக இருந்தாலும் நாடகமே வாழ்கையின் நிழலான ஒரு முரண்பாடுதானே.

                          தெய்வேந்திரம்முழுநேர நேர்ந்துவிட்ட தண்ணிச் சாமி.ஆனால் ஒரு கை தேர்ந்த நடிகன். காப்போத்தல் தென்னம் சாராயத்தை அண்ணாந்து உள்ளுக்க விட்டுப்போட்டு " இலங்கை வேந்தன் " நாடகத்தில் ராவணன் வேஷம் போட்டு மேடையிலேயே சிவகிரி மலையைக் ஒற்றைக் கையால தூக்கி வைச்சுக்கொண்டு நடிப்பார். கந்தப்பு அவர் நடிப்பை மட்டும் எப்பவும் பயன்படுத்திக் கொள்வார்.

                                     ஜுலிய சீசர்  நாடகம் உலகப்புகழ் பெற்றது என்று தெரியும். ஆனால் அதன் கதை பற்றி எனக்கு ஒரு மண்ணும் தெரியாது அந்த நேரம் ,முக்கியமா ஏன் ஜுலிய சீசரைக் கொல்லுறாங்கள் எண்டதுக்கு காரணமெல்லாம் எனக்கு தெரியாது.   நாடகம்  பழகிக்கொண்டு இருந்த நேரத்தில் தமிழ் அறிஞ்சரான  கந்தப்புவை ஒருநாள் மடக்கி

                                     " ஏன்,,ஜுலிய சீசரைக்  கொல்லுறாங்கள், ஐயா  " என்று கேட்டேன் ,அதுக்கு அவர்

                                    " ஏன், நீ போய் என்ன கிரிமினல் கேஸ் போடப்போறியா , மேடர் கேஸ்  போல விசாரிக்கிறாய் கழுதை "

                                  " இல்லை,,அய்யா, அந்தப்  பொயின்ட்  தெரிஞ்சா , கொஞ்சம் உணர்சியாக நடிக்கலாமே எண்டுதான் கேட்குறேன் "

                                  "  ஓ,,அப்பிடியே கதை  போகுது,,அதடா  எருமை... எகிப்தில் கள்ளத்தனமாக நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை! முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர்கள்  செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார்,,,,இதுதான் காரணம் "

                          "  ஓ,,அப்படியா,,நல்லா  இருக்கு ,நன்றி அய்யா "

                                 ஆண்டு விழாவில் விடிய ரெண்டு மணிக்கு ஜுலிய சீசர் நாடகம் தொடங்கின நேரம்  கவிஞ்சர் கந்தப்பு முதல் அந்த நாடகம் பற்றி ஒரு சின்ன அறிமுக உரை மேடையில்க் கொடுத்தார் , அதில  உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்..

                                ." உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ". 

                               என்ற  தகவலைச் சொன்னார், அதை மேடையின் ஓரத்தில் கிளியோபாட்ரா வேஷத்தில் நின்று கேட்கவே  எனக்கு உடம்பெல்லாம் மயிர்க்கால் எழும்பி நிக்க  புல் அரிச்சுது . அட  இவளவு விசியம் இருக்கா  கிளியோபாட்ராவுக்குப்  பின்னால, கட்டாயம் மேடையில் ஒரு அசத்தல் அச்சத்தான் வேணும் என்று நினைத்துக்கொண்டேன் 

                               உடம்பு முழுவதும் ஓடிய ரத்தத்தில் தமிழ்மொழிப் பற்ருள்ளவர்  கவிஞ்சர் கந்தப்பு. " அரனே அறுந்துண்டு வாழ்வோம்  உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை " என்ற  மொழி  வைராக்கியம்  அதிகமுள்ள தமிழ் அறிஞ்சரான கந்தப்பு இங்கிலாந்தில் ஸ்டாட்ஸ்போட்டில் பிறந்த  சேக்ஸ்பியரையே நல்ல தமிழில் " நாடக ஆசிரியர் செகசிப்பியர் " என்றுதான் சொன்னார். அந்த நாடகம் ஏன் எல்லாரும் பார்க்க வேண்டும் எண்டும் சொன்னார். அந்த நாடகத்தை மொழி பெயர்க்க உதவிய பெட்டிசம் பாலசிங்கத்துக்கு நன்றி சொன்னார்.

                                         அந்த நாடகத்தில் வரும் பாத்திரங்களை ஒரு சின்ன அறிமுகம் போல நாடகத் தொடக்கத்தில் ,பின்னணிக் குரலில் ஒருவர் சொல்ல அறிமுகப்படுத்தி வைப்பார் கந்தப்பு,  புண்ணியக்குஞ்சி துலாக் கிணறில தேடாவளயக் கயிறு இழுத்த மாதிரி தொங்கித் தொங்கி இழுக்க கிளியோபாட்ரா வரும் போது நான் மேடையின் நடுவில் போய் பார்வையாளருக்கு கவர்ச்சி நடிகை ஜெயமாலினி போல நெஞ்சை ஒரு ஆட்டு ஆட்டிக் காட்டி என்னோட எடுப்பான பெண்ணழகை அறிமுகம் செய்ய வேண்டும்

                             " .......அலெக்ஸ்சாண்ட்ரியாவின் அரண்மனையில் நின்ற எழுநூறு கழுதைகளின் பாலில், சுத்தமான வெள்ளை நிற , நிறக் கலப்புக்கள் எதுவுமற்ற அந்தக் கழுதைப்பாலில் அந்தபுரத் தோழிகள்  புடைசூழ கழுதைப்பால் குளியல் தொட்டிக்குள் கிளியோபேட்ரா இரங்கி ஊற ஆரம்பிப்பாள்..........."

                             இப்பிடிக் குரல்  சொல்ல,நான் நடு மேடையில் போய் நெஞ்சை ஒரு குலுக்கு குலுக்கி எடுப்புக் காட்டினேன். பெண் பார்வையாளர்  பக்கம் அது எந்த பாதிப்பும் கொடுக்கவில்லை. ஆண்கள் பக்கம்  சும்மா ஹேமமாலினி  அருவியில அரைகுறையாக குளிக்கிற சீன் பார்த்த மாதிரி  விசில் தாறு மாறாப் பறந்தது. இந்தக் உலகத்தில் ஒரு பெண் நெஞ்சை ஒரு குலுக்கு குலுக்கி எடுப்புக் காட்டினால் அது எப்படிப் பல ஆண்களைக்  குலுங்க வைக்குது என்ற உண்மை கொஞ்சம் ஆச்சரியமாகத் தான்  இருந்தது .

                              அதுக்குப் பிறகு ஜுலிய சீசர் வேஷத்தில் மேடையில் தெய்வேந்திரம் போய் நின்று அவர் வளர்கிற பண்டிகளைப் பார்ப்பது போல ரசிகப்பெருமக்களைப் பார்த்து ,  பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச்சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கிக் கற்பனையில் சொல்வது போல உரத்து மேடை அதிர  

                               " சிங்கமே! காலம் கரைந்தோடி அடித்துச் செல்லாத, பாலைவனத்தில் மண்புயல் மூடிச் செல்லாத மகத்தான படைப்பே ,  வெற்றியுடன் கைகுலுக்கிக் கொண்டு  நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு  வணக்கம் செய்கிற நான் தான் ஜுலிய சீசர் ! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிற  நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! "

                              என்று மேடையே அதிர்ந்து உடைஞ்சு விழுற மாதிரி சொன்னபோதும், கிளியோபாட்ராவின் குலுக்கலுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு ஜுலிய சீசருக்கு கிடைக்கவில்லை. அதன் பின்  மார்க் அண்டோனி, புருட்டஸ் எல்லாரின் அறிமுகமும் வந்தது . ஆனால் கிளியோபாட்ராவா நான் போய் செய்து  காட்டின நெஞ்சுச்  குலுக்கலுக்குக்  கிடைத்த  கரகோஷம் அவர்களுக்கும்  கிடைக்கவில்லை.

                                         அதன் பிறகு முதல் தொடங்கும், அந்தக் காட்சியில் , கிளியோபாட்ரா ஒரு சிங்கம்  ஜுலிய சீசரைத்  திரத்தும்  போல இரவு கனவு கண்டதை  கொல்லப்படுவதுக்கு முதல் நாள் வெளியே போகும் சீசருக்கு சொல்வது போல ஒரு காட்சியில் தொடங்கும் ,அந்த வசனத்தை நான் தான் சொன்னேன், என்ன சொன்னேன் எண்டோ, அல்லது எப்படி சொன்னேன் என்றோ இப்ப  நினைவு இல்லை,

                           " சிங்கம் ஒன்று பின் திரத்தி  வரக் கனவுகண்டேன்  கண்ணாளா  ..என் வார்த்தைக்கும்  உங்கள்    கருணைக்குக் கண்ணீருண்டு;.... அதிஷ்டத்துக்கு விழாக்கள் உண்டு ; அவர் அளவற்ற  வீரத்துக்கு  மரியாதை உண்டு ;  என் வார்த்தையில் சொல்கிறேன் ,,நீங்கள் அரண்மனை விட்டுப் போகவேண்டாம் ,,என்  கண்ணாளா ,,அந்த  சிங்கம்,,,,,அந்த  சிங்கம்  ,,அசிங்கம்"

                                         என்று சிங்கத்துக்குப்  பதிலாக அசிங்கம் என்று நடுக்கத்தில உளறிக்கொட்டி  சொன்ன நினைவு இருக்கு ,என் வார்த்தைகளை ஜுலிய சீசர் நிராகரித்து

                                 "  ஆச்சரியப்படுகிறேன்!  வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! முன் வைத்த  காலைப்  பின்  வைத்துப்  பழக்கமில்லை ,,வீரம்  ...அதுதான் முடிவில்லாது அதுக்கும்  இறப்பு உண்டு "

                                         என்று சொல்வதோடு ,நாடகம் கதையில் சூடு பிடிக்கும் , என்னோட  அடுத்த சீன் ஜுலிய சீசர் கொல்லப்பட்ட நேரம் அவர் உடலின் மீது விழுந்து ,நெஞ்சில அடிச்சு அழவேண்டும் ,கொஞ்ச நேரத்தில் ஜுலிய சீசரைக் கொண்டு போட்டு மார்க் அன்டனி ஆவேசமாக

                             " ஜுலிய சீசர், சக்கரவர்த்தித் திருமகன் என்னை நேசித்ததால் , தேம்பித் தேம்பி  அழுகிறேன். அவர்  அதிஷ்டமானவர் என்பதால் , அதில் நான் சந்தோஷமடைகிறேன். அவர் யுத்தங்களை வென்றவர் என்பதால், நான் அவருக்கு வீர வணக்கம் செய்கிறேன். ஆனால் அவர் மகா ஆற்றல் உடையவர் என்பதால் அவரைக் கொலை செய்தேன். "

                                   என்று சொல்லும் போது நானும் போய் நடு மேடையில் விழுந்து  நெஞ்சில் அடிச்சேன்,அடிச்ச அடியில ஒரு சிரட்டை நெஞ்சுச் சட்டைக்கு உள்ளே இருந்து கிளம்பி வெளிய வந்து மேடையின் ஒரு பக்கத்துக்கு உருண்டு ஓட வெளிக்கிட அதை அமுக்கிப் பிடிச்சு நெஞ்சில அடிச்சு அழுவது போல அதை மறுபடியும் உள்ளுக்கு தள்ளிட்டேன்,கந்தப்பு  அதைக் கண்டது போட்டு தலையில கையால அடிச்சார், நல்ல காலம் மேடையின் நடுவில நடந்ததால் ரசிகப்பெருமக்கள் யாரும்  காணவில்லை

                           " அவரின் கருணைக்குக் கண்ணீருண்டு;அதிஷ்டத்துக்கு விழாக்கள் உண்டு ; அவர் அளவற்ற  வீரத்துக்கு  மரியாதை உண்டு ;அவரின் அவா,"

                            என்று வசனங்ககள் பறந்து கொண்டு இருந்ததால், அந்த இடைவெளிக்குள் யாரும் பார்க்க முதலே ஒருமாதிரி சிரட்டையை உள்ளே அமத்தி வைச்சு ஒரு மாதிரி மறுபடியும் எடுப்பான மார்பகம் ஆக்க முடிந்தது.

                           
                             அதுக்குப்  பிறகு  சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவ. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா என்பது  போல ஒரு கடைசி சீன் எனக்கு  இருந்தது ,அதுக்கு முதலே எனக்கு மூத்திரம் பெய்ய வேண்டி வந்திட்டுது , நான் கந்தப்புக்கு காதுக்குள்ளே சொன்னேன் , அந்தாளுக்கு கொதி வந்திட்டுது

                                    " அடே கழுதை , பார்த்தியே,குறளி வித்தையத் காட்டத் தொடங்கிட்டியே , கொஞ்சம் அடக்கிகொண்டு  இரடா,,உனக்கு  இன்னும்  ஒரே ஒரு சீன் தான் இருக்கு "

                                  " அடக்க முடியவில்லையே  அய்யா, அப்பிடி  முடுக்குது "

                                " தாங்கமாட்டியா,,இப்ப  கிளியோபாட்ரா வேசத்தில நிக்குறாய்,,என்னண்டு மேடையை விட்டு  இறங்கிப்போய் பெய்யப் போறாய் "

                               " அது  தெரியாது,இப்ப  உள்ள நிலைமையில் மேடையிலேயே பம்பு செட் வைச்சு இறைச்ச  மாதிரி  அடிச்சுப் போடுவன் போல முட்டிக்கொண்டு வருகுதே  அய்யா "

                              " அட  பரதேசி  அப்படி செய்து  போடாதை,,டக்கெண்டு  பின்னால இறங்கி  வீராளியம்மன் வாய்க்கால் கட்டில நிண்ட நிலையில நிண்டு அடிச்சுப்போட்டு ஓடியா  ,உந்த வேஷம் கலைக்கக் கூடாது கண்டியோ ,,உதை வேண்டுவாய்,,வேஷம்  கலைச்சாய் என்றால் "

                             "  ஓம் ஓம்  நிண்ட நிலையில நிண்டு அடிச்சுப்போட்டு ஓடியாறேன்  அய்யா ,,"

                                    பொம்புளை போல  வேஷம் போட்டுக்கொண்டு நின்டதால் எப்படி " நிண்டுகொண்டு நிண்ட நிலையில அடிக்கிறது " என்று குழப்பமா இருந்தது. அதைவிட ஆட்கள் யாரவது பார்த்தால் என்ன  நினைப்பார்கள், சிலநேரம் பார்க்கிறவர்கள் குழப்பத்தில் மயக்கம் போட்டு விழுந்தாலும் விழ வேண்டி வருமே என்று நினைச்சுக்கொண்டு, இனியும் அடக்க முடியாது எண்டு போட்டு மேடையின் பின்னால் குதிச்சு இறங்கினேன்....

                                          ஜூலியா சிசர் நாடகதில அதுவரை நான் கிளியோபாட்ரா போல மேடையில் வந்தநேரம் எல்லாம் மேடையின் வலது பக்கம் மேடைக்கு மிக அருகில் நின்று அரிக்கன்கிடாய் போல முகத்தை வைச்சுக் கொண்டு ஒரு ரோட்சைட் ரோமியோ கண்ணடிச்சுக் கொண்டு இருந்தார், ஒருமுறை கீழே சரிஞ்ச என்னோட சிரட்டையை கொஞ்சம் தூக்கி அதை செட் செய்த போது விசில் அடிச்சு " சூப்பர் " என்றார், பிறகு ஒருக்கா நெஞ்சு  கொஞ்சம் தெரியிறமாதிரி குனிச்ச போது அதுக்கும்  விசில் அடிச்சு " சூப்பர் "  என்றார் ,வேலியில் சாத்தி வைச்சு இருந்த அவரோட சைக்கிளைக் காட்டி  சைகையால

                                      "  ஓடிப்போவமா ..."

                               என்று வேறு கேட்டார், நான் பெண்கள் போலவே அதைக் கவனிக்காத மாதிரி நடிச்சுக்கொண்டிருந்தேன். என்றாலும் நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க  ஒரு தற்பாதுகாப்புக்கு சைகையாலே புண்ணியக் குஞ்சிக்கு  அந்த ரோமியோ செய்யுற சேட்டையைக்  கொஞ்சம் கவனியுங்க சித்தப்பு என்று காட்டிவிட்டேன். புண்ணியக்குஞ்சுக்குக் கழுகுக்கு கண். அவர் ஆளை மட்டுப் பிடிசுக் கவனிச்சிட்டார்.

                                  அப்படி நான் செய்யாமல் இருந்திருந்தால் கட்டாயம் அந்த இரவு  பெரிய பிரச்சினைகள் வந்திருக்கும், புண்ணியக் குஞ்சிதான் அன்று ஒரு இரவையே என்னிடமிருந்து கைப்பற்றினார்,அவர் மட்டும் இல்லாட்டி கதை  கந்தல்  ஆகி இருக்கும். பாவம்  புண்ணியக்குஞ்சி எத்தைனையோ வருடங்களின் பின்னும்  அவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் நினைக்கும் போதெல்லாம், அவர் என்னைக் காப்பாற்றியது எப்பவுமே விழி ஓரம்  வரும்,அது வேற  கதை...

                                      ஒரு  மேடை நாடகத்தில் உணர்சிவசப்பட்டு  ரசிகர்கள் இப்படிதான் ரியாக்ட் செய்வார்கள் என்று தெரிஞ்சாலும்,கொஞ்சம் பயமா இருந்தது.  ஒரு பெண்ணாக வேஷம் போட்டதுக்கே இவளவு இம்சை கொடுக்கிராங்களே வாழ்க்கை முழுவதும் பெண்ணாகப் பிறந்து வாழும் பெண்களுக்கு எவளவு இம்சை கொடுப்பாங்கள் இவங்கள் என்பதை நினைக்க  பெண்களின் நிலைமை  கவலையாக இருந்தது. அது ஒரு படிப்பினையாக வளர்ந்து எந்தப் பெண்ணையும் அநாவசியமா நிமிர்ந்தே பார்க்கக்கூடாது  என்ற ஒரு அறிவை அப்பவே  அது  மண்டையில் மணி அடிச்சது

                                    நான்  மேடைக்குப் பின்னால  குதிச்சு, வீராளியம்மன்  வாய்க்கால் பண்டுக்கு போக வெளிக்கிட , இருட்டாக இருந்தது அந்த இடம் , என்ன இருந்தாலும் ஒரு இளமைக் கவர்சியான  பொம்புளை அந்த நேரம் தனியா இருட்டுக்க போக பயமாதானே இருக்கும் ,,இல்லையா நீங்களே சொல்லுங்க பார்ப்பம், அதால அங்காலும் இங்காலும் திரும்பிப் பார்க்க , அந்த ரோமியோ மேடைக்குப் பின்னால என்னைப் பின்தொடர தயாரா  நின்றார்....

............தொடரும்.......
.



Friday, 4 December 2015

அலிஅப்பூசியும் ஹபீபாவும் !

நட்பு என்பது எப்போதுமே நல்ல ஆரோக்கியமான உரையாடலில் தான் ஆரம்பிக்க வேண்டுமென்று அவசியம் ஒன்றும் இல்லை . முரண்பாடுகள்  ,ஏன் சிலநேரம் மொழி, கலாச்சாரம் தெரியாத நிலையில் பியர்ப்  போத்திலை உடைசுக் குத்தப்போன வாக்குவாதத்திலும் ஆரம்பிக்கலாம் . அதன் புரிந்துகொள்ள முடியாத  தொடக்கம் அவசரத்தில் ஆரம்பித்து அலாதியான நினைவுகளை இனி ஒருபோதுமே கிடைக்காத  காலத்தின் போக்கில் கருங்கற்களில் பதிந்தும் சென்றுவிடலாம் .

                                            கன்னித்தன்மையை  இழக்காத வடவேங்கடம் தென்குமரிக் கன்னித் தமிழ்தான் பேசுவதுக்கு அழகான மொழி என்று ஒரு மடையன் போலத்தான்   ஈரான் நாட்டு  பெர்சி மொழி பேசும் அலி அப்பூசியைச் சந்திக்கும் வரை நானும் நினைசுக்கொண்டிருந்தேன்.  பெர்சி மொழியின் அர்த்தங்கள் எனக்குத் தெரியாது . ஆனால் அலிஅப்பூசி அம்பத்தைந்து வயதுள்ள மனிதர். அவர் அவர்நாட்டு மனிதர்களுடன் பேர்சியில்  பேசினால் பல்லு முளைக்காத குழந்தைகள் அர்த்தமில்லாமல் கதைப்பது போல பால்குடி வாசனை கடவாயில் வழிந்து வரும்.

                                    அலிஅப்பூசியும்  பாக்கிறதுக்கு கன்னத்தில் கிள்ளவைக்கும் குழந்தைகள் போல கொழுக்கு மொழுக்கு எண்டு உருண்ட மனிதர். அப்பிள் போல வண்டி. குள்ளமாக இருப்பார். அவர் ஒரு இடத்தில இருந்தால் பங்ஸ் சூ வாஸ்து சாத்திரத்தில வைக்கும் சைனீஸ் ஞானி போல முகம் பிரகாசிக்கும் . தலையில மயிர் தடவிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாது. இருந்த தலைமயிர் எல்லாத்தையும் புடுங்கி மீசையில் வைச்ச மாதிரி அவர் மீசை  நெல்லுக் குப்பம் போல பொம்மிக் கொண்டிருக்கும். காதிலையும் நிறைய மயிர் கிடைத்த இடமெல்லாதையும் அடைத்து நிரப்பி நீட்டிக்கொண்டிருக்கும்

                                          கர்ம வீரர் காமராஜர் போல முன்னுக்குக் குத்திக்கொண்டிருந்த அந்த மீசையை எப்பவும் ரெண்டு பக்கமும் நீவி விடுவார் அலிஅப்பூசி . சிலநேரம் நாக்கால அதன் நுனிகளை நக்கிக் கொண்டிருப்பார். வச்சிரம் போட்டு அடிச்ச சுண்ணாம்புச் சுவர் போல  வெள்ளையான அந்த மனிதரின்   மீசை வறுத்த விசுக்கோத்துப் போல பிரவுன் கலர்ல இருக்கும். அதுக்குக் கீழே மேல் நோக்கி வளைந்த மூக்கு அலிஅப்பூசியின் முக்கிய முக அடையாளம் . ஈரான் நாட்டவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் .

                                         என்னோட அறை இருந்த பக்கம் உள்ள நீண்ட கொடிறோரின் தொங்கலில் இருந்த பொதுவான குசினியின் பக்கத்தில் அவர் அறை இருந்தது. அந்த அறையின் நிலம் முழுவதும் கார்பெட் விரிச்சு இருந்தார். மிஞ்சிய கார்பெட்டை சுவரிலும் தொங்க விட்டு இருந்தார்.அந்தக் கார்பெட்டில் சவூதியில் உள்ள மக்கா மதீனா  பள்ளிவாசல்கள் அழகான பலவர்ண நூல்களில் இழையோடி வரைந்து இருந்தது. யாரோடும் அதிகம் கதைக்க விரும்பாத  அலிஅப்பூசிதனியா இருந்தார்  என்று சொன்னா இனி நான் சொல்லப்போற கதையில் எழுத ஒண்டுமே இல்லை

                                 ஹபீபா அவளும் மத்திய ஆசிய நாட்டில் இருந்த பாலஸ்தினத்தில்  இருந்து வந்தவள். ஜாசிர் அரபாத் போல வெள்ளையும் கறுப்பும் கட்டம் போட்ட ஒரு துணியை எப்பவும் தலையைச்சுற்றிக் கட்டியிருப்பாள் . பூச்சப்பரச் சகடை போல அரக்கி நடக்கும்போது பெய்ருட் தக்காளி போல தக தக என்று முன்னுக்கும் பின்னுக்கும் சுண்டி இழுத்துக் கவனித்துப்  பார்க்க வைத்துக்கொண்டிருப்பாள். அதிகம் உயரம் இல்லாமல்  மொத்தமாக இருப்பாள். வெள்ளரிக்காய் போல ஆட்டா மா குழைச்சுப் பூசின நிறம். மட்டுவில் கத்தரிக்காய் போல முட்டைக்கண். அதுக்கு ஏகப்பட்ட மைதடவி  கண்ணாலயும் கையாலையும் உலகத்தின் மொழி எல்லாத்திலும்  கதை பேசுவாள்.

                                   ஹபீபா  நான் இருந்த கட்டித் தொகுதிக்கு முன்பக்கம் இருந்த பெண்கள், குழந்தைகளுடன் வசிக்கும் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் வசித்தாள். எல்லாரோடும் கலகலாப்பா பேச முடியாவிட்டாலும் சில்லறையாகக்   கிளு கிளுப்பு தரும்படியாகச் சிரிப்பாள். என்னோட அறையின் வலதுப்பக்க ஜன்னலை வேடிக்கை பார்க்கத்  திறந்தா  சில நேரம் அவளும் அவளோட இடதுபக்க ஜன்னலைத் திறந்து அதில முழங்கைகளை  வைச்சுக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள். ஹபீபா  தனியா இருந்தாள் என்று சொன்னா இனி நான் எழுதப்போற கதையில் எழுத ஒண்டுமே இல்லை.

                       கல் தோன்றி மண்தோன்ற முன் தோன்றிய மூத்த குடியின் வாசங்களே இல்லாத தமிழ் அடையாளமே  இல்லாத இந்தக்  விபரிப்பில் மண்டையைக் குழப்பி

                                      " டேய் மடையா  இந்தக் கதை எங்கயடா  நடக்குது எண்டு முதல் சொல்லுடா அலட்டல் மன்னா,  அலிஅப்பூசியும் ஹபீபாவும் யாரா இருந்தால் எங்களுக்கு என்ன வரப்போகுது   மோட்டுக் கழுதை "

                                 என்று நீங்க கேட்பீங்க ஏன்னென்றால் கேள்வி கேட்ப்பதுதானே உங்க வேலையே,,பதில் சொல்லுறதுதானே கதை சொல்லிகளின் தந்திரமான உத்தி . நீங்க கேட்டாலும் என்று இந்தக் கதையின் லோக்கேசனையும் சொல்லுறேன் . இந்தக்  கதையில் நான் இல்லை என்று சொன்னா இனி நான் சொல்லப்போற கதையிலயும்  எழுத ஒண்டுமே இல்லை.

                                      பிளேன் என்ற குக்கிராமம் மத்திய சுவீடனில் இருந்த பழமையான சோர்மலாண்ட் என்ற விவசாய நிலப்பரப்பில் இருந்தது. அங்கேதான் காட்டுவாசிகள் போல இருந்ததாலோ தெரியவில்லை என்னைப் போன்ற அரசியல் அகதிகளை ஒரு மரத்தால் கட்டிய தொன்மையான குடியிருப்பில் கொண்டுவந்து தள்ளிவிட்டார்கள் சுவுடிஷ் அகதிகளுக்கான அதிகாரமுள்ள அரசத் திணைக்களம். தள்ளிப் போட்டு முதல் விசாரணையில் கவடுக்க அலவாங்கு போட்டு நெம்பி எடுப்பம் என்பதுபோல அலட்சியமாக இருந்தார்கள்.

                                            பிளேன் அழகான அமைதியான சின்னக் கிராமம். அதன் இரண்டு பக்கமும் ரெண்டு சின்ன ஆறு ஓடியது. பச்சையான புல்வெளிகள், சுத்தமான பூங்காக்கள் , யாருமே கை வைக்காத காடுகள், அதன் நடுவில் ஒரு சுப்பர் மார்கெட், அதன் விழிம்பில் சில தொழிற்சாலைகள் , ஞாயிறு திருப்பலி பூசை வைக்கும் ஒரு சியோன் தேவாலயம் , அழகான மனிதர்கள் அவர்களின் முகங்களில் தனிமை. இப்படித்தான் சுவீடனில்  பருவகாலம் வருடத்தில்  நாலுமுறை மாறும் போதும் பிளேன் நகரம் ஒரு கன்வாஸ் ஓவியம் போலிருந்தது.

                                                    முக்கியமாக வீதிகளில், நடை பாதைகளில் வைகுந்த ஏகாதசிக்கு கழுவித் துடைத்த மாதிரி சுத்தம் . அளவுக்கு அதிகமான மயான அமைதி சுடலையை ஞாபகப்படுத்தும் பகல் நேரமே  .இது ரெண்டும் கச கச எண்டு காலுக்கையும் கையுக்கையும் குப்பைகளோடு உருண்டு பிரண்டு, காதைக் கிழிக்கும் சத்தங்களில் வாழ்க்கையைத் தேடிய எனக்குக்  கொஞ்சமும்  அந்த கிராமத்தோடு  ஓட்ட முடியாமல் தடுத்துக்கொண்டு இருந்தது .

                                         எங்கள் அகதி முகாம் அந்தக் கிராமத்தின் காடுகளுக்கு நடுவில் இருந்தது. அந்தக் காட்டைத் தாண்டி பிளேன் கிராமத்தின் சன சந்ததிக்கு வர ஒரே ஒரு மண் பாதைதான் இருந்தது. நாகரிகமான சுவுடிஷ் மக்கள் பல்லின நாடுகளில் இருந்து வந்த பல்லினக் கலாச்சார அகதிகளை அப்படிதான் தீண்டத்தகாதவர்கள் போல என்னைப்போல வந்தேறுகளை ஒதுக்கி ஒரு மூலையில் வைச்சு இருந்தார்கள். அது கொஞ்சம் கோபமாக இருந்தது.ஆனால் அவர்கள் அப்படிச் செய்வதில் அர்த்தமிருக்கு என்று அந்த அகதிமுகாம் வந்த சில மாதங்களில் உணரமுடிந்தது.

                                               அந்த அகதி முகாம் தான் என்னோட முதல் சுவுடிஷ் அனுபவம். ஒரு வருடம் அதில ஒரே ஒரு இலங்கைத் தமிழனாக நாடியைத் தடவிக்கொண்டு இருந்தேன். ஜன்னலுக்கால் காலையில் சுவிடனைப் பார்ப்பது. கோடையில் மஞ்சள் வெய்யில் மிகவும் சுத்தமாக இருக்கும். மத்தியானம் அதே ஜன்னுக்கால சுவிடனைப் பார்ப்பது. மருந்துக்கும் ஒரு வெள்ளை இன மக்களைப் பார்க்க முடியாது .பின்னேரமும் அதே ஜன்னுக்கால சுவிடனைப் பார்ப்பது , பறவைகள் மரங்களில் இருந்து என்னைப் பார்க்கும்.

                                            ஐரோப்பாவில் அகதி அந்தஸ்து எடுக்க என்ன என்ன பொய் சொல்லல்லாம் என்று ஜோசித்துக்கொண்டிருப்பதில்தான் என்னோட ஒரு நாளின் முழு நேரமே போய்க்கொண்டு இருந்தது. முகாமின் வாசலில் எனக்கு என்று கொடுத்து இருந்த தபால் பெட்டியை காலையில் போய்த் திறக்கவே பயம். அவடதில வைச்சுதான் பொலிஸ்காரன் உரிமையோடு அமத்துவான்.  இரவிலையும் யாரும் எசகு பிசகாத் தட்டினா என் அறையின் ஜன்னல்களை திறந்து பாய்ந்து ஓடிப்போக உள்ள மாதிரிதான் யாரும் மாஸ்டர் கீ இல்லை என்னவிதமான மசிராண்டிக் கீ போட்டும்  திறக்க முடியாதவாறு அறையின் உள்க்கதவுக்கு இரும்புக் கம்பி செருகி வைச்சு இருந்தேன்

                                                         நாசமாப்போன இந்தக் குக்கிராமத்தில் வந்து சுவாரசியம் இல்லாமல் நகரும் நாட்களை எண்ணிக்கொண்டு குளிர் காற்றை உள்ளுக்கு இழுத்து அதைச் சூடாக்கிக் கொட்டாவி விட்டுக்கொண்டு இருப்பதுக்கா இவளவு காசு செலவழித்து வந்தேன் என்று ஜோசிக்க விசர் வந்தது. ஆனால் அந்த ஒருவருட முடிவில் மார்கிட் எலிசபெத் நிலாண்டர்ஸ் என்ற சுவுடிஷ் பெண்ணை சந்திக்கும் வரை வாழ்க்கை கொல்லன் பட்டறையில் வாட்டி வாட்டி இரும்பு அடிச்ச மாதிரிதான் இருந்தது.நாளைக்கு நடக்கப் போவது இன்று விடியும் போதே தெரியுமென்றால் வாழ்க்கையே சுவாரசியம் இல்லாமல் போயிடும் தானே,,இல்லையா சொல்லுங்கோ பார்ப்பம் 

                                                   பிளேன் என்ற அந்தக் குக்கிராமத்தில் ஒரு இரவு நடன விடுதியில் நடனமாடி முடிய சந்தித்த உலகம் தெரியாத அப்பாவியான மார்கிட் எலிசபெத் நிலாண்டர்ஸ் என்ற சுவுடிஷ் பெண் என்னோட மனைவியாகியது, வாழ்வின் மிகச்சிறந்த சந்தோசங்களை என்னோடு பகிர்ந்து கொண்ட அந்தப் பெண்ணின் மண்டையைக் கழுவியது , பிறகு அவளை ரெண்டரை வருடம்  இலங்கைக்கு அழைத்துக்கொண்டுபோய் அவளோட பல்லாங்குழி விளையாடியது  போன்ற ரொமாண்டிக் கதையைவிட இன்னுமொரு அனுபவம் அந்த பிளேன் அகதிமுகாமில் நடந்தது


நாங்கள் வசித்துக்கொண்டு இருந்த  கட்டிடத்  தொகுதிக்கு ,ஒருநாள் புதிதாக வந்த அகதிகளோடு அலி அப்பூசி வந்த நாளில் இருந்து பிளேன் அரசியல் அகதிமுகாம் கலகலப்பா மாறியது. அந்த கட்டிடத் தொகுதியில் நான் உட்பட  கிட்டதட்ட பதினைத்து பல்வேறு நாடுகளில் இருந்த சண்டைகளில் தப்பி வந்த அகதிகள் வசித்தோம். நான் மட்டுமே ஒரேயொரு இலங்கைத் தமிழன் . மற்றவர்கள் அதிகம் பேர் நட்பான எதையும் தாங்கும் ஆபிரிக்க, சந்தேகமாய்ப் பார்க்கும் மத்திய ஆசிய நாட்டவர்கள். இஸ்லாமிய சமய நம்பிக்கைப்   பின்னணி உள்ளவர்கள் அங்கே அதிகம் பேர் இருந்தார்கள் .

                                                 அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை தங்கி இருக்க  , ஒவ்வொருவருக்கும் புறாக்கூடு  போல கொடுக்கப்பட்ட சின்னஞ்சிறு அறையில்,  தனியான ஆண்கள் மட்டுமே இருக்க அனுமதிக்கப்பட்ட அந்த கட்டிடத் தொகுதியில் வசிப்பதுக்கு வந்த  ஈரான் நாட்டைச்சேர்ந்த  அலி அப்பூசி ஈரானில் இருந்து வரவில்லை பதிலாக அமரிக்காவில் இருந்து வந்தார் . இலற்றோனிக் டெக்னிக் படித்தவர். அதை வைச்சுதான் அந்த முகாமில் பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்தார் .அவர் அவிக்கிற உளுத்தம் பருப்பை நான் கண்டுபிடிச்சு அதில அவருக்கு உளுந்துவடை சுட்டுக் காட்டினேன் . இப்பிடி வடைமாலை போட்டால்  அவருக்குப் பொறாமை வருமா வராத நீங்களே சொல்லுங்க பார்ப்பம்.

                                             சுவிடன் உலகத்தின் அதி நவீனங்களில் முன்னேறிய நாடு. அந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்கையில் நவீனம், புதுமை இது இரண்டுக்கும் எப்பவுமே அளவுக்கு அதிகமான  முன்னுரிமை கொடுப்பார்கள் என்பதை அவர்கள் வீசி எறியும் குப்பைத்தொட்டியில் சந்தோஷமாக இறங்கித் தேடிய போதுதான் நான் அறிஞ்சேன். அலிஅப்பூசிக்கு அது முதலே தெரியும். அதில்தான் நான் தேடி எடுத்த ஒரு டெலிவிஷனை  ஹபீபாவுக்குக் இனாமாகக் கொடுக்கப் போய் முதலாவது முரண்பாடு எனக்கும் அவருக்கும் வந்தது .

                                         நாங்கள் இருந்த அகதி முகாமுக்கு கொஞ்சம் தள்ளி சுவுடிஷ் மக்கள் தங்களுக்கு தேவை இல்லாத பொருட்களை எறியும் ஒரு பெரிய குப்பைத்தொட்டி இன்ன இன்னதை இதுக்குள்ளதான் எறியவேண்டும் என்று நிறைய இரும்பு கொண்டைனர்கள் வைச்சு அந்த இடமே என்னவோ அதியுயர் பாதுகாப்பு வலயம் போல முள்ளுக்கம்பி வேலி எல்லாம் அடைச்சு, சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் திறந்துவிடப்படுவது போல இருந்தது.

                                  என்னோட முகாமில் இருந்து அந்த இடத்துக்கு போறதுக்கே ஒரு பெரிய ஆற்றுப் பாலத்தையும்,இன்னுமொரு பயங்கரமான ரெயில்வே பாலத்தையும் கடக்க வேண்டும் .பாலத்தைக் கடக்கும்போது கீழே ஓடும் ஆற்றைக் குனிந்து பார்க்க தலை சுற்றும், அவ்வளவு ஆழமான பள்ளத்தாக்கு அதுக்குமேல இரும்புப்புப் பாலம் கட்டி இருக்கிறார்கள். அந்த ஆபத்தான வீதியில் நடந்தோ,அல்லது சைக்கிளிலோ கடக்கும் போது காரில் வேகமாகக் கடக்கும் சுவிடீஷ் மக்கள் எங்களை பார்த்து  விசில் அடிப்பார்கள் . மாமா கண்டால் நிச்சயம் காரை நிட்பாட்டி விசாரிப்பான். அதிகமாய்

                                 " எங்கே இதால போறாய் இந்தப் பாதையில் வாகனம் தவிர யாரும் நடமாட முடியாது, அதுக்கு போலீஸ் அனுமதியும் இல்லை, நீ எங்கப்பா  புதுப் பெண்டாட்டியாக் கூட்டிக்கொண்டு  ஹனிமூன்   போறவன் போல கையை விசுக்கிக்கொண்டு  உலாத்துறாய், பிசகிச்சு என்றால் நேராவே பரலோகம் போகவேண்டி வரும் பா..உன்னோட நன்மைக்குத் தான் சொல்லுறேன் எங்கே இதால போறாய்.. எங்கே இதால போறாய்.."

                                       என்று கேட்பான், நான் தங்கச் சுரங்கம் சோதிக்கப் போவது பற்றி  சொல்வதில்லை. ஆபத்துக்கள் பற்றிக்  கடுமையாக   எச்சரிப்பான்


அலிஅப்பூசியின் அறை முழுவதும் நிறைய இலற்றோனிக் சாமன்கள் குவிந்துபோய்க் கிடக்கும். சின்னச் சின்ன பிழைகள் இருந்தால் அதைத் திருத்தி அதை ஒரு விலைக்கு அவர் விற்பார். அகதி முகாமில் எங்களுக்கு அம்மன் கோவில் வாசலில் இருக்கும் பிச்சைக்காரனின் அலுமினியத் தட்டில் பிச்சை போடுற மாதிரி கொஞ்சம் காசுதான் ஒவ்வொரு கிழமையும் தருவார்கள்.அதை வைச்சு பலர் பல பொருட்கள் வேண்டுவார்கள் . அந்த அகதி முகாம் வந்த ஆரம்பத்தில் ஒரு நாள் அலி அப்பூசியிடம் கேட்டேன் இதெல்லாம் எங்கிருந்து உங்களுக்கு கிடைக்குது என்று...

                            " இன்ஷா அல்லா , இதெல்லாம் உழுத்துப் போன சாமாங்கள்  இங்கனேக்கதான் எங்கயும் இருந்து கிடைக்கும் , உனக்கு என்னவும் வேண்டுமா ,,தேடி எடு இதுக்குள்ள இருந்து "

                           " ஹ்ம்ம்,,அலி இந்த  முகாமுக்கு மேற்கால இருக்கிற ஜட்த்ருணா ஆற்றுக்கு அந்தப் பக்கம் குப்பை போடுற கொண்டைனர் இருக்கு என்று சொல்லுறாங்க உண்மையா "

                                " இன்ஷா அல்லா , ஒ, அப்பிடியா,,எனக்கு யாரும் சொல்லவில்லையே,உனக்கு யார் சொன்னது ,,சொல்லு "

                             "  டானியல் சொன்னான் "

                    "  டானியல்,அவன்  யார்,, டானியல்  இங்கே  எங்கே இருக்கிறான் சொல்லு    "

                             " கழுத்து முழுக்க நாய்ச் சங்கிலிபோல கொழுவிக்கொண்டு , நீளக் காட்சட்டை கழண்டு விழ அதை ஸ்டைல்போல அப்பிடியே விட்டு நிலமெல்லாம் கூட்டிக் கொண்டு திரிவானே  அந்த எதியோப்பியாக்காரன் ,,

                              "  அந்த எதியோப்பியாக்காரன்   இங்கே  எங்கே இருக்கிறான் சொல்லு    "

                     " என்னோட ரூமுக்கு பக்கத்துக்கு ரூமில இருக்கிறானே,,அவன்தான்  சொன்னான் "

                       " இன்ஷா அல்லா,  பொப் மார்லியின் ரெக்கே பாட்டு அதிர வைச்சு போட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பானே அந்த காப்பிலி அவனா "

                        " ஓம், அலி,  அவன்தான் சொன்னான், அவன் இங்க காம்பில ரெண்டுவருஷம் இருக்கிறான் என்றும் சொன்னானே "

                         " இன்ஷா அல்லா,,அந்த ஆபிரிக்கக் காப்பிலி அவனே ஒரு குப்பைவாளி ,,அவன் சுவீடனுக்கு வந்ததுக்கு ஒருக்காத் தன்னும் குளிச்சு இருப்பனா ,அந்தக் குப்பைவாளி உனக்கு குப்பைவாளி எங்க இருக்கு எண்டு சொல்லி இருக்கு "

                          " ம் , அவன் தான் சொன்னான், மற்றப்படி அவன் எனக்கு ஒன்றும் பிரென்ட் இல்லை அலி அப்பூசி,,சும்மா பழக்கம் அவளவுதான்   "

                              " இன்ஷா அல்லா,,,அவனே ஒரு கள்ளன், பொதுச் சமையலறை குசினியில் ஒரு சாமானும் பாதுகாப்பா வைச்சு எடுக்க முடியவில்லை,அந்தக் காப்பிலி ஸ்காப்பை உடைச்சு திருடுறான் ,அது தெரியுமா உனக்கு   "

                                " அப்படிதான் நானும் கேள்விப்பட்டேன் "

                             " இன்ஷா அல்லா,,அவன் ஒரு கள்ளன்,,சிலநேரம் கள்ளருக்குத்தான் எங்க களவெடுக்கலாம் என்றும் தெரியும் போல ,,ஆனால் நீ சொல்லுற மாதிரி ஒண்டும் என்  காதுக்கு கேள்விப்படவில்லை "

                              "  ஹ்ம்ம்,,கதைகள் பரவலாகக் கிடந்தது சுற்றுதே ,,நீங்க கேள்விப்படவில்லை என்று சொன்னா நான் ஒண்டும் சொல்லமுடியாது "

                                " இன்ஷா அல்லா, குப்பைத்தொட்டியைக் கிளறுவது பிச்சைகாரநாடுகளில் தான் நடக்கும் என்று கேள்விப்பட்டது ,உன்னோட ஷிரீலங்காவும் பிச்சைக்கார நாடு போல இருக்கே,,உனக்கு குப்பையைக் கிளற ஆசை வருகுது பார் "

                                 " ஹ்ம்ம்,,எங்கள் நாட்டில் குப்பைகளுக்கு நடுவேதான் வாழ்ந்து,,வளர்ந்தேன் அலி . அந்த வாசமே எனக்கு மிகவும் பிடிக்கும் அது வேற கதை, இப்ப அதுவா முக்கியம் ,,நான் கேட்டதுக்கு இப்ப பதில் சொல்லுங்க "

                           " இன்ஷா அல்லா, யாரோ ஒருவன் தேவையில்லை எண்டு எறியிரதை போய் தேடி எடுப்பது பெரிய கவுரவம் என்று நினைக்கிறாயா "

                               "  யாரோ ஒருவருக்கு ஆடம்பரமாகத் தேவை இல்லாதது யாரோ ஒருவருக்கு அடிப்படைத் தேவையாக இருக்கலாம்,அலி "
                               
                                  " இன்ஷா அல்லா, அது சரியெண்டு நான் சொல்லமாட்டேன் , அதை என்னோட அறிவில் சொல்லுவது எண்டா எப்படி சொல்லுவேன் சொல்லு பார்ப்பம் "

                                   "  நீங்களே ,,சொல்லுங்க "

                                "  ஹ்ம்ம்,, நமக்கு உரிமை இல்லாத பெண்டாட்டியின் சீலையைக் கிளப்பிப் பார்ப்பது போல "

                               "  ஹஹஹஹா ,,எங்கிருந்துதான் இப்படி எல்லாம் வார்த்தைகள் பிடிக்கிறிங்களோ தெரியலை அலி "

                               " இன்ஷா அல்லா, உனக்கு இதுக்குள்ள ஒரு பழைய கிட்டார் இசைக்கருவி ஒண்டு கிடக்குது வேணுமா, அதுக்கு கம்பி ஒண்டும் இல்லை,வேண்டிப் போடு , சின்ன வெடிப்பு இருக்கு, ஆனால் சத்தம் வரும் ஒரு இருநுறு குரோனரை தள்ளிவிடன் "

                             " என்னட்ட அவளவு காசு இல்லை,அலி, ஹ்ம்ம்,,,உண்மையா அந்தக் காட்டில ரீசைக்கிளிங்  கொண்டைனர் இருக்கா அலி .."

                         " இன்ஷா அல்லா, இப்ப நீ சொன்னாய் பார்  ரீசைக்கிளிங்  கொண்டைனர் அதுதான் நல்ல வார்த்தைப் பிரயோகம் , சிலநேரம் இருக்கலாம் ,ஆனால்  அந்தக் காட்டில் கரடி இருக்கு என்று சொல்லுறார்கள் "

                               " யார், சொன்னது உங்ககளுக்கு அப்படி "

                           " இன்ஷா அல்லா,  இங்கே முகாமில் உள்ள ஒரு அதிகாரி சொன்னார், பின் கரியலில் பெரிய கம்பி வலைப்பெட்டி வைச்சு கட்டின சைக்கிளில் அந்தப் பக்கம் உள்ள ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கப் போனேன் ,என்னை கூப்பிட்டு சொன்னார் "

                  " ஒ, அப்ப அந்தக் காட்டுப்பகுதிக்குப் போறது பயங்கரம் போல "

                           " இங்கே எல்லா இடமுமே பயங்கரம் தான், நீ என்னத்துக்கு இப்ப விடுத்தது விடுத்துக் கதை கேட்கிறாய்,"

                            "   சும்மா நாங்க வசிக்கும்  அகதி  முகாமின் சுற்றுவற்றாடத்தில்  என்ன எல்லாம் இருக்கு என்று அறிய முயட்சிக்கிறேன் அலி அப்பூசி "

                              "  அப்படியா  ,நீ என்ன பெரிய புவியியல் படிச்சனியோ,,இங்கே சுற்றுவற்றாடத்தில் காடும்,,நதியும், பள்ளத்தாக்கும் ,,கரடியும் தான் இருக்கு,,வேற என்ன இருக்கு "

                              " அட அவ்வளவுதானா " 

                            "   அப்பிடி என்றால்  என்ன அர்த்தம் "

                      "அவளவுதான் என்ற அர்த்தம் ஆச்சரியமா இருந்தது, அவளவுதான் அலி அப்பூசி "

                   " ,நான் முந்தி ஈரானில ஷா ஆட்சி நடந்த நேரம் ரகசிய போலீசில் வேலை செய்தவன் ,என்னட்ட  செம்மறியாட்டு வாலைக் காட்டிப்போட்டு நடுதுண்டுக்கு விலை பேசுறது வேகாது,,அதை தெரிந்துகொள் "
                     
                                    " இல்லை சும்மா கேட்டேன் "

                                 " இன்ஷா அல்லா , என்ன சும்மா கேக்கிறது ,நீயும் என்னைப்போல தொடங்கப் போறியா "

                               " அதுக்கு இல்லை, அலி  நீங்கள்  உண்மையில் பெரிய விஞ்ஞானியா இருக்க வேண்டியவர் , இதெல்லாம் எல்லாருக்கும் செய்ய முடியாது "

                              " இன்ஷா அல்லா, இப்ப நீயும் இந்த வேலை தொடங்கப்போறியா, ஏன் உனக்கு வொட்கா விக்கிறதில பொல்லால அடிச்ச மாதிரி நல்ல வரும்படி வருகுதே "

                                 "  இல்லை அதைநான் விடப்போறேன் ,

                            " அதுதானே நல்ல வரும்படியே உனக்கு, பெட்டைகள் வேற நேரம்காலம் இல்லாமல் உன்னோட கதவுக்க நிக்குறாளுகளே , அதைப்பார்க்க எனக்கே வயித்தெரிச்சலா இருக்கே "

                             " இங்கே அநாவசியமான பிரச்சினைகள். அலி அப்பூசி .அதைவிட.."

                        "   என்னப்பா  பிரச்சினை,,யாரால இங்கே உனக்குப் பிரச்சினை  சொல்லு "

                       "நானே தான்  எனக்குப் பிரச்சினை,அதை நானே குடிச்சுப்போட்டு விடியிறதும் இருடுறதும் தெரியாமல் நரி தேங்காய்ப் பொச்சை அடைஞ்சுகொண்டு கூழ்ப்பானைக்க விழுந்த மாதிரி உருண்டு கொண்டு திரியிறேன் "

                          " இன்ஷா அல்லா , உனக்கு இலற்றோனிக் திருத்த தெரியுமா ,ஒரு நல்ல ஜப்பானிஸ் கொடேக் கமரா இருக்கு எடுத்துக்கொண்டுபோ, காசில்லாட்டி உன்னட்ட வேண்டுற வோட்காவில் கழியன் ,"

                                      என்று சொன்னார் ,அலிஅப்பூசி இரவில என்னட்டைத் தான் குடிக்க வருவார். நான் அந்த நேரம் அதே காம்பில் ரசியன்காரங்களிடம் இருந்து வோட்கா வேண்டி ரகசியமா வித்தேன்.அது வெட்கா போல வெள்ளையாக இருக்கும் ஆனால் கோண்டாவில் கிழக்கு வெட்டிரும்பு போல வெட்டிக்கொண்டு போறதில ஓரியினல் உரும்பிராய்க் கசிப்பு போல இருக்கும் மூக்கை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு  உள்ளுக்க அண்ணாந்து விட்டால் சமாளிக்கலாம்.


கீரைக் கடைக்கே எதிர்க் கடை போடும் தமிழ் ரத்தம் ஓடும் ஒரு தமிழன் நான் என்பது  தெகரானில் பிறந்து வளர்ந்த அலிஅப்பூசிக்குத் தெரிய வாய்ப்பில்லை.  அலிஅப்பூசி பின் கரியலில் ஒரு கம்பிவலை போட்டுப்  பின்னிய பெட்டி கட்டின ஒரு சைக்கில் வைச்சு இருந்தார். அதில்தான் உழக்கிக்கொண்டு அந்த குப்பைதொட்டிக்குப் போவார் என்பதை கண்டு பிடிச்சேன். நானும் ஒரு சைக்கில் வைச்சு இருந்தேன். ஒருநாள் அவர் போற பாதையில் அவர் அறியமுடியாத தூரத்தில்  பின் தொடர்ந்து போய் அந்தக் குப்பைத்தொட்டியைக் கண்டு பிடிச்சேன்.

                                              அன்றைய நாள் சுவுடிஷ் மக்கள் குப்பை எறியும் நாள் இல்லை . அதெல்லாம் தெரிந்துதான் அலிஅப்பூஸி அதுக்குள்ளே போனார். நானும் அந்த நாட்களை மட்டும் வடிவா வாசித்தேன் . அந்த இடத்துக்குக் உள்ளே யாரும் போய் குப்பை கிளற முடியாது என்றும் கிளறினால் தண்டனை எண்டும்  சுவுடிஷ் மொழியிலயும், ஆங்கிலத்திலும் பெரிய போட் சுவுடிஷ் பொலிஸ் எழுதி வைச்சு இருந்தார்கள் .

                                        நிறைய ரீசைக்கிளிங் கொண்டைனர் இருந்தது. அவற்றில் சிலது நிறைந்து இருந்தது. நான் போய் அந்த இடத்துக்கு அருகில் இருந்த காட்டுக்குள்ள ஒழிச்சு இருந்து பார்த்துக்கொண்டு இருந்தேன் . அலிஅப்பூஸி ஒவ்வொரு குப்பை கொண்டைனரா இறங்கி தடவிப்பார்த்து தேடிக்கொண்டு இருந்தார் . நான் பார்த்து நல்லா ரெக்கி எடுத்துப்போட்டு வந்திட்டேன் .

                                          அதுக்கு அடுத்த சுவுடிஷ் மக்கள் குப்பை எறிய முடியாத நாள் நானே காலையில் நேரத்தோட போய் அந்த இடத்தில பதுங்கி இருந்தேன் . அலிஅப்பூஸி வழமைபோல வந்தார்,வந்து சைக்கிளை பொலிஸ் போட்டு இருந்த தடைக்கு மேலால தூக்கி இறக்கினார், நான் கரடிபோலக் கத்தினேன்.  சுவுடிஷ் காட்டுக் கரடி எப்படிக் கத்தும் என்று எனக்குத் தெரியாது.ஆனாலும் சும்மா கத்தினேன். எனக்கே பயம் வந்திட்டுது நான் கத்துறதைக் கேட்டு உண்மையான சுவுடிஷ் கரடியே வந்தால் எப்படிக் கரணமடிப்பது எண்டு பயமா இருந்தது

                                    அலிஅப்பூஸி  சைக்கிளையும் தூக்கி எறிஞ்சுபோட்டு வியர்க்க விறுவிறுக்க நாலுகாலில் துள்ளிய நடையில திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு ஓடத்தொடங்கினார். கொஞ்ச நேரத்தில் அவர் உருவம் மறைந்த நேரத்தில ,அந்தக் காட்டுக்க இருந்து ஒரு பெரிய கரட்டி அதன் பிள்ளைக் கரடியை இழுதுக்கொண்டு சர சர எண்டு குப்பைத்தொட்டி இருந்த இடதுக்கு கிட்ட உள்ள காட்டு விளிம்புக்கு வர நான் ஓடிப்போய் ஒரு இரும்புக் கொண்டைனருக்க ஏறிப் பாஞ்சேன் ,அதுக்குள்ளதான் ஹபீபாவுக்கு நான் கொடுத்த டெலிவிசனும் இருந்தது.

                      மிச்சம் பிறகு சொல்லுறேன் ..

Chennan Chiru Vayathil .Guitar Live Cover





ஒரு பாரம்பரிய பிராமணக் குடும்பத்தில் கணவனுக்கு மனைவிக்கும் இடையில் நடக்கும் புரிந்துணர்வை எடைபோட்டுப் பார்க்கும் ஜதார்த்தம் அது உருவாகும் பல குழப்பங்ககளை ஒரு சினிமாவாக எடுத்தார்கள். கணவன் வேலைசெய்யும் இடத்தில வேலைசெய்யும் ஒரு பெண்ணுடன் தன் கணவனுக்கு தொடர்பு இருக்கு என்று தெரிய வந்த போது வழமையாக எல்லாக் குடும்பங்களிலும் வெடிக்கும் சண்டையும் சந்தேகமும் தான் " மீண்டும் கோகிலா "என்ற படம்.
                                               உலகம் தெரியாத பதிவிரதையான மனைவி , உலாசமான பொழுதுபோக்கு உள்ள வக்கீல் வேலை செய்யும் கணவன்.இவர்கள் இருவருக்கும் நடுவில் ஆடம்பரமான ஒரு பெண் இப்படியான களமுள்ள ஒரு கதையை முதலில் புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன்தான் அரைவாசி வரை இயக்கினார். அவர் இயக்கத்தில் படம் சீரியஸ் ஆக வரவே, அந்தக் கதையின் படி அது ஒருவித காமடியாக வரவேண்டுமென்று அவரை தூக்கிப்போட்டு ரங்கராஜன் என்ற இயக்குனரைப் போட்டு புதிதாக இயக்கி இருக்கிறார்கள்.
                                                        அச்சொட்டாக ஸ்ரீதேவியே பாடுவது போல எஸ். பி. ஷைலையாவின் சின்னஞ்சிறு குரலில்,இடையில் வரும் ஹம்மிங்கில்,தயக்கத்தில் கோகிலாவுக்கு ஒரே ஒரு பாடலில் உயிர்கொடுத்த இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்தப் பாடல் ஒலி வடிவில் கேட்பதை விட விசுவலாகப் படத்தில் முதல் முதலாக மாப்பிளையைக் கல்யானப் பெண் பார்க்கும் ஒரு பிராமண வீட்டில் எப்படி நிகழ்வுகள் இருக்கும் என்று ஒரு பாடலோடு படமாக்கியிருந்தார்கள்.
                                                               திருமணம் முடிக்கக் காத்திருக்கும் பெண்கள் கர்நாடக சங்கீதம் கொஞ்சமாவது படித்து அதைப் பாடவேண்டும் என்ற அந்தப் பழையகால சம்பிரதாயங்கள் இப்போது அருகிவிட்டது போல இருக்கு. கிளி போலப் பெண் இருந்தாலும் " பெண்ணுக்குப் பாடத் தெரியுமா " என்ற ஒரு டயலக் எப்பவுமே பெண்பார்க்கும் போது வந்து விழும். இப்ப உள்ள நிலைமையில் கல்யாணப் பெண்ணைப் பாடச்சொன்னால் ஐ போனில MP3 Download பாட்டைப் போட்டு அதுக்கு வாயசைப்பார்கள். வேற என்னதான் செய்யமுடியும் அவர்களால்.
                                                     இசை படித்த பெண்களின் எண்ணங்கள் எப்பொதுமே மென்மையாக இருக்கும். அது கணவனுடன் சேர்ந்து வாழும்போது குடும்பத்தில் ஒருவித அமைதியை ஏற்படுத்தும் என்று முன்னோர்கள் நம்பி இருக்கிறார்கள். மனதைச் சாந்தப்படுத்தும் இசை என்பதே இதயம் வரை இறங்கி இசைந்து போவது தானே.
                                                 இந்தப் பாடலின் பல வரிகள் சுப்பிரமணிய பாரதியார் அவரின் கனவுக் காதலி செல்லம்மாவை நினைத்து எழுதியவை. கவியரசர் கண்ணதாசன் அந்த வரிகளையும் தன்னோட வரிகளையும் இணைத்து இந்தப் பாடலை எழுதி இருந்தார். ஒரு பாடல் எப்படி அதன் கதையோடு ஒட்டி உறவாடிப் போகுமென்று வரைவிலக்கணம் போல இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்த பாடலிது.

Monday, 30 November 2015

Kaathirunthu Kaathirunth





தமிழ் சினிமா கிராமங்களில் கால்ஊன்றி நிஜத்துக்கு வெகு அருகில் இருந்த எண்பதுக்கள் என் போன்ற இளையவர்களின் இளமைக்கால இசைவரம். அதை இன்னுமொருபடி மேலே காதலோடு கொண்டு போனவர் இசைஞானி இளையராஜா, அதை சொல்லிச் சொல்லியே நினைவுகளின் நதிக்கரையில் கால்களை நனைத்தவர்கள் எல்லாருமே கிறங்கிப்போன பாடல்கள் வந்த ஒரு படம் ‘வைதேகி காத்திருந்தாள்’. 

அந்தத் திரைப்படம் வெளிவந்த நாட்களில் காதல் தோல்விக்கு இன்னுமொரு விதமான அரிதாரம் பூசி வைத்தார் டைரக்டர் ஆர்.சுந்தரராஜன். மிச்ச வேலை முழுவதையும் இசைஞானி இளையராஜா பாடல்களில் சொல்லாமலே சொல்ல வைத்தார். அந்தத் திரைப்படம் வெளியாகி அதில் இசைந்த பாடல்களால் அது ஒரு மிகப்பெரிய ஹிட்டானது.

‘காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி ’இந்தப் பாடல் இசைஞானி இளையராஜா போல்க் என்ற folk music கிராமிய இசைவடிவ டெம்போவில் மிக எளிமையாக ஒரு பாடல் இதயத்தை பூத்திருந்து புன்னகை செய்ய வைத்த அதிசயங்களில் ஒன்று. இந்தப் பாடலை பி.ஜெயச்சந்திரனை தொடக்கத்திலும், இடையிலும் ஹம்மிங் கொடுத்துப் பாடவைத்து நாட்டார் பாடல் வரிகளுக்கு ஒருவிதமான கிராமிய அடையாளத்தை இடையில் செருகி அந்தப் பாடலைப் படத்தில் பார்க்காமலே நிறைவாகக் கற்பனை செய்ய வைத்தார்.

அண்மைக்காலமாக சினிமாப் பாடல்கள் இன்ன இன்ன ராகங்களில் வந்திருக்கு என்று பலர் எழுதுகிறார்கள். நானும் கொஞ்சக்காலம் அப்படி பாடல்களைக் தெரிந்த சங்கீத இசை அறிவில் வைச்சுக் கிண்டி, அதை வெஸ்டேர்ன் கிட்டார் ஸ்கேல் உடன் ஒப்பிட்டுக் குழம்பி ,முடிந்தவரை சில பாடல்களின் சுர அமைப்புகளை ராகங்களோடு ஒப்பிட்டு, அது என்ன இராகம் எண்டு கொஞ்சம் சந்தேகத்தில் தான் எழுதி இருக்கிறேன். பலருக்கு கர்நாடிக், வெஸ்டர்ன், ஸ்கேல், கிட்டார் ,போன்றவற்றில் அதிகம் விசியம் தெரியாததால் நான் என்னமோ பெரிய அறிவுக்கு கொழுந்து என்று நினைத்து வாசித்தும் இருக்கிறார்கள்.

ஆனால் இப்பெல்லாம் பாடலின் இராகம் பற்றி சொல்லப் பயமா இருக்கு,அதுக்கு நிறையக் காரணம் இருக்கு ,ஆனால் ஸ்கேல் போன்ற வெஸ்டர்ன் விசியங்கள் சொல்ல முடியும். காத்திருத்தலின் சோகத்தை இசைஞானி இளையராஜா எவளவோ பாடல்களில் பதிவு செய்து இருக்கிறார். நான் நினைக்கிறன் அவரின் மிகச்சிறந்த காதல் ரசம் பிழியும் பாடல்கள் கர்ணரஞ்சினி, தர்பாரிகானடா இரண்டு ராகத்திலும் காலங்களைத் தாண்டி நிக்கவைத்தார். ஆனால் அந்த ரெண்டு ராகமும் மிகவும் கடினம்,ஜோசிக்கவே கடினம், ஆனால் இந்தப் பாடல் சிவரஞ்சனி ராகத்தின் சுர சாயலில் உள்ளது. உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

சிவரஞ்சனி ராகம் பெயரைப்போலவே அழகான, ஆனால் சுரங்கள் குறைவான குறை ராகம், முழுமையான ஏழு சுரங்களும் அதில ஆரோஹணம், அவரோஹணம் இரண்டிலும் இல்லை.அதனால் அதன் வீச்சு எப்பவுமே குறைவு .ஒரு நல்ல இசைஅமைப்பாளர் அந்த சின்னச் சுரஞானக்கோவைக்குள் இறங்கி significant orchestration இக்குத் தேவையான முத்துக்களை எடுத்துக் கோர்த்து ஒரு மாணிக்க மாலை செய்ய முடியும் என்று நிரூபித்து இருக்கிறார் இசைஞானி இளையராஜா, அவரைப் பொறுத்தவரை significant orchestration என்பதெல்லாம் சிம்பிள்.

வெஸ்டர்ன் harmonies and string arrangements இல் சொன்னால் ‘காத்திருந்து, காத்திருந்து ’ பாடல் ஒரு மைனர் ஸ்கேல் பாடல். சிம்பிளான Fm என்ற ஸ்கேல் இல இங்கே நான் வாசித்துள்ளேன், இந்தப் பாடலின் தொடக்க ஹம்மிங் வாற இடத்தில ஒரு கோட்ஸ் இடையில் வரும். அப்படி ஒரு கோர்ட்ஸ் தமிழ் சினிமா பாடலில் இன்றுதான் வருவதைக் கவனித்தேன்.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனியில் வாசித்த இந்த வீடியோ ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம்.சும்மா என்னமோ கிட்டாருக்க இருந்து என்னமோ சத்தம் வருகுது என்று நினைத்துக் கேளுங்க .
.

Sunday, 29 November 2015

பெரிய மாமா ..முதலாவது புயல்

ஆண்களுக்கு ஒரு கிலோ தவிடு தூக்கிற பலம் இருக்கும் வரை ஆம்பிளை என்ற அடையாளம் வயது வளைந்து  வயதாகிக்கொண்டு போனாலும் பெண் ஆசையை மட்டும்  விலத்தி விட்டுப் போகா வைக்காது  என்று சொல்லுவார்கள். அதை அவளவு இலகுவாக வெளியே தெரியும்படி யாருமே காட்டிக்கொள்வதில்லை. சில ஆண்களுக்கு  அந்த ஓர்மம்  ஒரு நிழல்போல இயங்கி  வெறிபோலச் சதிராடும் நேரமெல்லாம் நேரடியாகப் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்.  

                                        வயதான காலத்தில் ,அதுவும் படுக்கையில் விழுந்த  நேரம் கணவன் உதவியாக இருக்கவேண்டுமென்றுதான் எல்லா மனைவியும் நினைப்பார்கள். முப்பது சொச்சம்  வருடம் தர்மபத்தினியாக வாழ்ந்த மனைவிக்கு உதவியாக இருக்க வேண்டிய நேரம் பெரியமாமா தனக்குச்  சமையலுக்கென  உதவிக்கு இன்னுமொரு அழகான பித்தளைக் குடம் போன்ற பெண்ணை நடு வீட்டுக்குள்ள கொண்டுவந்து வைச்சுக்கொண்டு நல்ல குருநாதன் போல உபதேசம் செய்து, நடுச்சாமம்  உபத்திரவமும் கொடுத்துக்கொண்டு இருந்தார்.  

                                       பெரிய மாமா எங்கள் குடும்பத்துக்கு தூரத்து அம்மாவழி உறவு. வயதில் அதிகமாகவும், பெரிய தோற்றமும் ,பெரிய வேலையும் அந்த நேரம் செய்துகொண்டு இருந்ததால் அவரை பெரிய மாமா என்று சொல்லவேண்டி வந்திருக்காலம் போல .  அதை விட எங்களின் ஊரில் இருந்த அவரே கட்டிக்  குடிபுகுரல் எல்லாம் பெரிதாகச் செய்த, முன்னுக்கு பெரிய தாமரைத் தொட்டி கட்டி , அதுக்கு நடுவில காஸ்மீர் ஏரிபோல விசிரியடிச்சு பைப் தண்ணி பூப்போல விரிஞ்சு பறக்க விட்டு , அதைச் சுற்றி பெரிய சீமெந்து  வாசில் போகன்வில்லாப்  பூக்கள் வளர்த்த  பெரிய  கல் வீட்டில் வசித்தார். எல்லாமே அவரைப் பொறுத்தவரை பெரிசாதான்
இருக்க வேண்டும் .

                                                வாழைச்சேனை அரசாங்க பேப்பர் கொம்பனியில் மார்கெட்டிங்  மனேஜர் என்ற விற்பனை முகாமையாளராக  வேலை செய்த பெரிய மாமா பென்சன் எடுக்கும் காலம்வரை மட்டக்களப்பில் தான் இருந்தார்.  உண்மையைச் சொன்னால் அந்தக் கிழக்கு  மாகாணத்தில் வடக்கிலிருந்து போய் வசித்தார்.  இந்த " வசித்தார் " என்ற வரிக்குள் இன்னுமொரு வாழ்கையே அவருக்கு மீன் பாயம் தேன் நாட்டில்  இருந்தது.  அது  எழுவத்தெட்டில்  மட்டக்களப்பில் புயல் அடிச்ச நேரம் தான் அரசல்புரசலாக வெளியால தெரியவந்தது. ஆனால் அதையும் பெரியமாமா புயல் போல எழும்ப விடாமல் அமுக்கி வைச்சிட்டார்  . 

                                        பெரிதாக எழும்பிப் பேசிய குடும்பத்தில் இருந்து அவர் வந்து இருந்தாலும் , பேப்பர் பக்டரி அரசாங்கக் குவாட்டசில்தான் தங்கி  இருந்து, மூட்டை கடிக்கும் ஒரு பழைய கட்டிலில் படுத்து எழும்பி, தானே சமைச்சு சாபிட்டுகொண்டு  வேலை செய்தார் என்றுதான் யாழ்பாணத்தில் சொல்லுவார்கள் ஆனால் அவர் அரசாங்கக் குவாட்டசில் இருக்கவேயில்லை.  இன்னொரு பெண்ணின் மடியில தலை வைச்சு உல்லாசமாக தான் வாழ்ந்தார் என்று அவரோட அதே பக்டரியில் வேலைசெய்த எங்களின் அயல் ஊரில் வசித்த இன்னுமொரு மாமா  சொன்னதை யாருமே நம்பவில்லை .

                                       மட்டக்களப்புப்  புயல்  வங்காளா விரிகுடாவில் தாளமுக்கமாக எழும்புது என்று ரேடியோவில் அறிவிச்ச நேரமே பெரியமாமா பேப்பர் பக்டிரியை விட்டுப்போட்டு , வந்தாறுமூலைப் பாலம் எல்லாம் கடந்து பாதுகாப்பான கிராமப் பக்கம் இருந்த , அவர்  கீப் ஆக வைச்சு கொண்டு சேர்ந்து வாழ்ந்துகொண்டு இருந்த அம்மணியின் வீட்டுக்கு போட்டார். புயலே அவர் பேப்பர் பக்டறியை  விட்டுப் போனாப் பிறகு மூன்று நாள் கழிச்சுதான் மட்டக்களப்புக்கு குறுக்கா அடிச்சது 

                           யாழ்பாணத்தில பெரிய மாமி ரேடியோவுக்கு பக்கத்தில அங்கால இங்கால நகராமல், கையில தேவாரப்புத்தகத்தை வைச்சுப் பாடிக்கொண்டு , சமைக்காமல் சாப்பிடாமல் உறங்காமல் இருந்து கொண்டு 

                                " கடவுளே , எண்ட மனுஷனுக்கு ஒண்டும் நடக்கக்கூடாது, பாதுகாப்பா இருக்க வேண்டும் , இந்த மனுஷன் எல்லாத்தையும் போட்டது போட்டபடி  விட்டுப்போட்டு தப்பி ஓடி வருவம் எண்டு இல்லாமல் வேலை முக்கியமெண்டு பக்டரியைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு நிக்குதே, எனக்கு இந்தாள் உயிர் முக்கியமெண்டு ஏங்கி ஏங்கி சாக இந்த மனுஷன் புயலுக்க நிக்குதே  " 

                                     என்று எல்லாக் கோவிலுக்கும் நேர்த்தி வைத்துக்கொண்டு இருந்தா.  அவா நேர்த்தி வைத்த கடவுள்கள் அவரைக் கைவிடவில்லை பாதுகாப்பா இருக்க வேண்டிய இடத்தில தான் கடவுள்களும் அவரை வைச்சு இருந்தார்கள். 

                                             புயல் அடிச்சு ஓஞ்சு பேப்பர் பக்டரி ஏறைக்குறைய முக்கால்வாசி அழிந்துபோன பின் ஒருகிழமை கழித்துதான் பெரிய மாமா பக்டரிக்கு வந்து பார்த்திருக்கிறார். அதுக்குப் பிறகு சில மாதம் அவர் யாழ்பாணத்தில் வந்து நின்றார்,எல்லாச் சனங்களும் போய் 

                          " மெய்யாத்தான் கேட்கிறம் , வங்காள விரிகுடாவில் இருந்து வந்த  புயல் எப்படி அடிச்சது, அதில நீங்கள் எப்படி உயிர் தப்பினீங்கள், உன்னான  பேப்பர் பக்டரிக்கு முன்னால நிண்ட லொறிகளின் ஹோர்ன் எல்லாம் தானா அடிச்சுதாமே,,"

                                      எண்டு கேட்டார்கள்,பெரிய மாமா அதுக்கு புயலுக்கு முன்னுக்கு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்று பேப்பர் பக்டிரியைக் காப்பாற்றின மாதிரி கதைகளை அவிட்டு விட்டுக்கொண்டு இருந்தார். அந்தக் கதைகளும் வங்காள விரிகுடா போல பெரிசு பெரிசாத்தான் இருந்தது .

                                      பெரிய மாமா  பேப்பர் பக்டரி திருத்த எடுத்த மாதங்கள் முழுவதும் எங்கள் ஊரில்தான் நின்றார். பெரிய ஒரு யுத்தத்தை வென்ற ஜெனரல் போல மீசையை முறிக்கிகொண்டு எழுப்பும் விட்டுக்கொண்டு திரிஞ்சார்.  பெரிய மாமி நேர்த்திக்கடன் வைச்ச மாதிரி, வைரவருக்கு வடை மாலை செய்து போட்டா, பழங்கிணத்தடிப் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கினா. வீராளி அம்மனுக்கு நெருப்புச் சட்டி தலையில வைச்சு வேப்பிலைக் காவடி எடுத்தா, நல்லூர் கோவிலுக்கு  போய்ப் பத்து நாள்  முழங்காலில் உள்வீதியில் அடியழிச்சு அருச்சனை செய்தா, பெரிய மாமா அதைக் கணக்கில் எடுக்கவில்லை ,
  
                             "  எடியே இப்ப என்னத்துக்கு இந்த காவடி ஆட்டமும், வேப்பிலைக்  கூத்தும் ,,நான் மட்டக்களப்பில் புசலுக்கால தப்பி வந்தது என்னோட மண்டையப் பாவிச்சு, இந்தப் புயல் என்ன இன்னும் எத்தினை புயல் வந்தாலும் தப்பி வருவன், புயல் என்னை என்ன செய்யும்,,அவளவு பயந்தவனா நான் இருந்தா இங்க இருந்து போய் மட்டக்களப்பை இந்த ஆட்டு ஆட்டுவனா,,சொல்லு பார்ப்பம் விளையாடத் தெரிஞ்சவனுக்கு எங்கயும்  சொல்வழி கேட்டு வித்தை விளையாடும் , இங்க ஒரு வீடுவாசல் .. போல... அங்க ஒரு வாசல் வீடு.. ,"

                                      என்று பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டு இருப்பார். ஆனால் பின் நாட்களில்  பென்சன் எடுத்த நேரம் அவர் இதே  நடுவீட்டுக்குள் அவரே கொண்டு வந்த அழகான பித்தளைக்குடம் போன்ற நடுத்தர வயது சின்னப் புயல், ஒரு நாள் தாளமுக்கமாகி நாலு பக்கமும் சுழண்டு அடிச்சு, சதிராடி ,எல்லாத்தையும் பிரட்டி , பெரிய ஒரு மலையையே தள்ளி விழுதி , அவரை ஒரேயடியாகச் சரித்துப்போட்டுப் போன நேரம்  அதன் அபரிமிதமான கவர்ச்சியில் பெரிய மாமாவின் தந்திரங்கள் எதுவுமே பலிக்கவில்லை. 

                                               பெரிய மாமா சுமாரான , ஆனால் ஒருவித சந்திர வம்ச லட்சணம் போல அழகான தோற்றமுள்ளவர் ,நல்ல சுத்தமான கலப்பில்லாத கறுப்பு நிறம். அரசாங்க வேலை செய்தாலும் வெள்ளை வேட்டிதான் கட்டுவார், வெள்ளை நீளக்கை சேட்டுத்தான் போடுவார்.அதை மடிக்க மாட்டார் . தோளில எப்பவும் ஒரு கலர்த்  துவாய் போட்டிருப்பார்.  அதிலதான் அவர் இன்னும் வடிவா இருப்பார். அவரோட முகத்தில எப்பவுமே எதையும் அலட்சியமாக எதிர்கொள்ளும் சிரிப்பு இருக்கும் . அந்த  அலட்சியக் கண்களில் ஒருவிதமான விரும்பின எல்லாத்தையும் அடையும்  லட்சியமான வசீகரம் பதுங்கிப்பாயத் தயாரா இருக்கும் .

                                              அவரிடம் எந்த ஒரு குறை சொல்லும்படியான  ஒரு கெட்ட பழக்கமும் இல்ல்லை. குடி வெறி, புகைத்தல் , ஏன் வெத்திலையே போடமாட்டார். சாப்பாட்டில பயங்கரக் கவனம். உடம்பு உடைஞ்சு போயிடும் என்று எப்பவுமே சுத்த சைவம் . அதால உடட்பயிட்சி செய்யாமலே கட்டுமஸ்தான பர்மாத் தேக்குமரத் தேகம் . பரந்த நெஞ்சில  அடர்த்தியான  மயிர் , எண்ணை போட்டுப் பிடிச்சுவிட்ட மாதிரி உடம்பு அந்த வயசிலும் அரிசி குத்திற  நாட்டு உரல் போல இறுக்கமா இருக்கும். 

                                               அந்தக் கண்களின் வசீகரம் அதுதான் அவரோட மன்மத லீலைகளுக்கு பெண்களை மயக்கவைத்த மன்மத அம்பு.  அவரோட இவளவு அடக்கமான சோலி சுரட்டுக்குப் போகாத மனுஷன் என்ற முகமூடிக்குப் பின்னால் பயங்கரமான முரட்டுத்தனம் இருந்தது. அது பூனை போலப் பதுங்கிக்கொண்டிருந்தது. அதுவே புலிபோலப் பாய்ந்த சம்பவங்கள் பலது இருந்தும் வெளியால ஒருத்தருக்கும் தெரியாது. 

                                             சின்ன வயசிலேயே அவருக்கு அந்த அரசாங்க உத்தியோகம் கிடைத்து இருக்கு .  பெரிய மாமி பதின்நாலு வயசில சாமத்தியப்பட்ட அடுத்த மாதமே மறு சாமத்தியப்பட முதலே வீட்டுக்க பூந்து இழுத்துக்கொண்டு வந்து இரவோடு  இரவாக்  கலியாணம் கட்டினார்.  அதை சட்டப்படி கவுரவமாக்க கோவிலில் தாலி கட்டினார்.   

                                         பெரிய மாமாவுக்கு மூன்று பிள்ளைகள் ,ரெண்டு பொடியன்கள்.  பெரிய ராசன், சின்ன ராசன் என்ற  ரெண்டு பொடியன்களும் என்பதுக்களின் தொடக்கத்திலேயே இயக்கங்களில் இழுபட்டு உருப்படாமல்  போயிடுவாங்கள் என்று பயத்தில கிழக்கு ஜெர்மன்  டி டி ஆர் விசா எடுத்து, ஒருத்தனை  ஜெர்மனிக்கும் , இன்னொருத்தனைப்  பிரான்ஸ்க்கும் பிடிச்சு அனுப்பிப்போட்டார் .

                                             " கலாச்சாரம் பண்பாட்டு  எவளவு முக்கியமெண்டு  இதுகளுக்கு விளங்குதில்லையே ..சின்ன ராசன்,,காடை வத்திப்போய்  வெள்ளைகாரிகளோடு அலையுறானாம் எண்டு பெரியவன் சொல்லுறான்,,இந்தப் பொடிக்கு என்ன குறைச்சல் எண்டு எனக்கு விளங்கேல்ல, இங்கனேக்க வரப்பண்ணி ஒரு ஊர்  உலகத்தில அறிஞ்சு நல்ல ஒரு  பொடிச்சிய கையில பிடிசுக் கொடுப்பமெண்டா வாரானும் இல்லையே ..."

                                                 எண்டு சொல்லுவர் . அவர் பென்சன் எடுத்து இருந்த காலத்தில் பிரான்சில்  ஒரு  இலங்கைப் பெண்ணைத் திருமணம் முடித்து இருந்த அவரோட மூத்த மகன் பெரிய ராசன் மட்டுமே காசு அனுப்பி தொடர்பில் இருந்துகொண்டு இருந்தான் . சின்ன ராசன் தொடர்பே இல்லை.

                                                  அவருக்கு ஒரு மகள் ராசாத்தி என்று இருந்தா .அந்த  மகள் யாழ்பாணம் கம்பச்சில் படிச்சுக் கொண்டு இருந்த நேரமே தன்னுடன்   சயன்ஸ் பக்கல்டியில் படிச்சுக்கொண்டு இருந்த முல்லைத்தீவு பொடியனை லவ் பண்ணிக் கலியாணம் செய்யப் போறேன் என்று ஒற்றைக்காலில் நிக்க ,

                                   " பொம்பிளைக்கு ஒழுக்கம் எவளவு முக்கியமெண்டு  விளங்கமாட்டேன்  எண்டு நிக்கிறியே காதல் தான் உனக்குப் பெரிசு எண்டு நினைச்சி எண்டா ,,நீயே உன் முடிவில போயிடு,,பிறக்கு என்னையும்  கொம்மாவையும்  நினைக்கத் தேவையில்லை,, ஒழுங்கு  மரியாதை  பண்பாடு இல்லாத பொம்புளைப் பிள்ளையை வீட்டுக்க வைச்சிருக்க எனக்கும்தான் பரிசுகேடு..." 

                               என்று சொல்லி  ராசாத்தி  விருப்பத்துக்கே கலியாணம் கட்ட விட்டார் . அவா பெரிய மாமா குடும்பத்தோடு தொடசல் இல்லாமல் திருகோணமலைக்கு டீச்சிங் வேலை எடுத்துக்கொண்டு போட்டா. அங்கே போய் யாரை லவ் பண்ணிக்கொண்டு இருந்தாவோ அவரையே கலியாணம் கட்டி சந்தோசமா வாழ்ந்துகொண்டு இருந்தா என்றுதான் சொல்லுவார்கள். காதலித்துக் கட்டுறதே  சந்தோஷமா இருக்கத்தானே.

                                    அதுக்குப்பிறகு பெரிய மாமியும்,பெரிய மாமாவும் வயதாகித் தனியாதான் அந்த பெரிய கல் வீட்டில் இருந்தார்கள்.  ஆனால் நல்லா உடுத்து, நல்லாச் சாப்பிட்டு  நல்ல வசதியாகத்தான்  இருந்தார்கள். இன்னுமொரு நடுத்தர  வயதுப் பெண்னை அவர் சமயல்வேலைக்கு என்று நடுவீட்டுக்குள் கொண்டு வரும் வரை. ஆனால் இந்தக் குளறுபடிகள் வெளியே அதிகம் யாருக்கும் தெரியாது. காதும் காதும் ஓட்ட வைச்ச மாதிரி பெரியமாமா அதைக்  காய்நகர்த்தி நடத்திக்கொண்டு இருந்தார் 

                              பிறகு எப்படி இதெல்லாம் எனக்கு தெரியும் என்று விடுப்பு அறிவதில் அனுபவம் உள்ளவர்கள் கேட்கலாம். நான் மட்டுமே அந்த வீட்டுக்கு உள்ளே நடமாட அனுமதிக்கப்பட்டேன். பெரியமாமாவுக்கு என்னில நல்ல விருப்பம், இப்பபோலத்தான் என்னைப் பார்க்க அப்பவும் நல்லவன் போல இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை  நம்பிக்கையும் அதிகம் அதால அனுமதித்தார். ஆனால் நான் இப்ப போலத்தான் அப்பவும் நிழலாக பல திருகுதாளம் செய்துகொண்டு இருந்தேன் . ஆனாலும்  யுத்தம் அகோரமாக நடந்துகொண்டிருந்த ,கரண்ட் இல்லாத அந்த வருடங்களில்  நான்தான்  அவர்களுக்கு கூப்பிட்ட  கைக்கு  எல்லா உதவியும். 

                               முக்கியமா அவர்களுக்கு தண்ணி இறைக்கிற மிசின் கொண்டு வந்து கிணற்று தண்ணியை நீண்ட பைப் போட்டு ஏற்றி  அவர்களின் உயரமான வாட்டர் டேங்க் இக்கு அடிச்சு நிரப்பிறது . அவர்களுக்கு டவுனில  கடைகளுக்குப் போய் சாமான் வேண்டிக்கொண்டுவந்து கொடுப்பது. எல்லாத்துக்கும் எனக்கு கைச் செலவுக்கு காசு தருவார் பெரிய மாமா. பள்ளிக்கூடம் இல்லாத சனிக்கிழமை  தின்னவேலி சந்தைக்கப் போய் மரக்கறி சாமான் வேண்டிக்கொடுப்பேன், மிச்சக் காசும் திருப்பிக் கேட்க மாட்டார் . ஞாயிற்றுக் கிழமை போய் அவர்கள் வீட்டில  தொட்டாட்டு வேலை எல்லாம் செய்து கொடுப்பேன். காசு பார்த்துப் பாராமல் தருவார்.    

                                   பெரிய மாமாவுக்கு சாப்பாடு சொல்லப்பட்ட மாதிரி ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும். மத்தியானம், உமியவிட்டு வடிச்ச புழுங்கல் கைக்குத்தரிசிச் சோறு ,எண்ணை தாளிச்ச  பிரட்டல் உறைப்புக்   குழம்பு, தேங்காய்ப்பால் மிதக்கும் ஒரு வெள்ளைக் கறி, சரக்குத் தூள் போட்டு ஒரு மரக்கறி வதக்கல் ,  வறை சுண்டிய இலை ,தேசிக்காய் புழிஞ்சு விட்டுக் கடைந்த முளைக்கீரை   ,கூட்டுப் பொரியல்,  பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் போட்ட பால்ச் சொதி, முறுக்கிக்கொண்டிருக்கும்  பப்படம்.  இது கட்டாயம் இருக்க வேண்டும் இல்லாட்டி குசினிக்க சட்டி பானை உடையும் 

                                           " இதெல்லாம் நேரத்துக்கு நேரம் இல்லாமல் மட்டகளப்பில இந்த மனுஷன் எவளவு கஷ்டப்பட்டுக் கொண்டு  இருக்குமே,  அங்க என்ன இருக்கப் போகுது, அரையும் குறையுமா அவிச்சு வடிச்சு ஆறப்போட்டு சாப்பிட்டு வாயும் வயிறும் எங்க நிறையப் போகுது, "

                                    என்று  பெரியமாமி சொலிச் சொல்லி பார்த்துப் பார்த்து சமைப்பா ,

                                  " இனிப் போய் பழையபடி வாய்க்கு ருசியா உப்புப் புளி இல்லாமல்,என்னோட சமையலை நினைச்சுக்கொண்டு  கிடந்தது , காஞ்சுபோன கடைச்  சாப்பாட்டைத் திண்டு  கொண்டு கிடக்கப்போகுதே , என்னோட சமையல் காணுமே என்னை மறக்காமல் நினைக்க வைக்க, எண்டாலும் ஒரு ஆம்பிளைக்கு பக்கத்தில இருந்து பார்த்துப் பார்த்து சமைச்சுப் போடுமாப் போல வருமே .."

                                        என்று கவலைப்படுவா. பெரியமாமாவுக்கு இதே அடுக்கில மட்டக்களப்பிலயும் சாப்பாட்டு , சிலநேரம் இதைவிட எடுப்பா எருமைத்தயிரும் வைச்சு ஒவ்வொருநாளும் கிடைக்கும் என்று அவாவுக்குத் தெரிந்திருக்க  நியாயம் இல்லைத்தான். இதெல்லாம் அவர் மட்டக்களப்பில் வேலை செய்த நேரம் நடந்தது. ஆனால் அவர் பென்சன் எடுத்து வீட்டோடு வந்த பிறகுதான் அவரோட ஒழித்துக் கொண்டு இருந்து வேஷம் போட்ட ஓர்மம் அதிகமாய் ஆட்டம் போடத் தொடங்கியது ..

                                  பெரிய மாமி ஒருநாள் பாத்ரூமில் குளிக்கும் போது வழிக்கி விழுந்திட்டா என்று செய்தியோடு  என்னை அவசரமா வரச்சொல்லி தகவல் பெரியமாமா அனுப்பி இருந்தார். போய்ப் பார்க்க பெரியமாமியின்  வலது முழங்கால் வளைஞ்சு, இடது கையும் மணிக்கட்டில் முறிஞ்ச மாதிரி இருந்தது. அந்த வயதான வயதில அவாவை பெரியாஸ்பத்திரிக்கு இழுத்துப் பறிக்க அவர் விரும்பவில்லை. அல்லது வேற ஏதும் பிளான் போட்டாரா தெரியவில்லை 

                                          வீட்டு செற்றியில் இருந்து ஜோசித்தார். நாயன்மார்கட்டில்  இருந்த முறிவு நெறிவுக்குப்  பத்துப்போடுற பொம்பிளையைக் கூட்டிக்கொண்டு வரச் சொன்னார். அவளைக் கூட்டிக் கொண்டு வர அவள் வந்து கையால எண்ணை போட்டு நெறி இழுத்து உருவிப்  பார்த்திட்டு பத்துப் போட்டாள். அது போட்ட அன்று சாமி அறையில் இருந்த படுக்கையில் பெரிய மாமி போய் விழுந்தா. அவளவுதான் அதுக்குப் பிறகு அத்தியாவசிய தேவைகளுக்குத் தவிர வேற எதுக்கும் எழும்பி  நடமாட முடியவில்லை,முக்கியமா சமைக்க அறவே முடியவில்லை . 

                                            பெரிய மாமா ரெண்டு நாள் தான் சமையல் ஒழுங்கில் இல்லாமல் சமாளித்தார். மூன்றாம் நாள் முடிவெடுத்தார். இனி சமையலுக்கு ஒருத்தி இந்த வீட்டுக்கு கட்டாயம் வேணும் என்று அதனால என்னைக் கேட்டார் 

                                 "  யாரும் ஒரு பொம்பிளை வந்து சமைச்சு வைச்சுப்போட்டு போற மாதிரி பிடிச்சுத் தர முடியுமா,,உனக்கு தெரிஞ்ச ஆரும் இருக்கினமே ,அல்லது கொம்மாவைக் கேட்டுப் பாரேன் சிலநேரம் அவாவுக்கு அயலட்டையில் நல்லா  தெரிஞ்ச மாதிரி  நல்ல பழக்க வழக்கம் உள்ள பொம்பிளை யாரையும் தெரிஞ்சு இருக்கலாம் ,,இல்லாட்டி இனி நான் தான் கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம்,,,அதயுமெல்லோ ஜோசிக்க வேணும் ,,நாளைக்கு ,,ஒண்டு கிடக்க  ஒண்டு  மேலே  ஏறிப்  பாஞ்சா... "

                                        என்று கேட்டார் .எனக்கு அப்படி யாருமே தெரியாது என்று சொன்னேன். ஆனால்  " கடிதம் எழுதிக் கூப்பிட வேண்டும் ,,,அதுகள்  பிரசினையில்  சில நேரம்  முடியலாம், " என்று விழுங்கி விழுங்கி சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறதுக்கு   என்ன அர்த்த மெண்டு கேட்க நினைச்சேன், நானே  சின்னப் பொடியன், பெரியாக்களின்   பெரிய பிரசினைகள் எனக்கு என்னத்துக்கு எண்டு கேட்கவில்லை . 

                                      ஆனால் நடு முதுகில வளம் பார்த்துப் பொல்லால அடிச்ச மாதிரி அடுத்த சில வாரங்களில்  ஒரு நடுத்தர வயது அழகான பித்தளைக் குடம் போல ஒரு பொம்பிளை குசினிக்க இல்லை, நடு வீட்டில நடமாடி ஏறைக்குறைய வீட்டுத் துறப்பையே எடுத்து இடுப்பில செருகிக்கொண்டு நடமாடியதை பார்க்க முடிந்தது.

                                     அந்தப் பொம்புளை எங்களின் ஊரில் உள்ள பொம்பிளை இல்லை. கதை பேச்சு கொஞ்சம் பிறத்தி ஊர் போல இருந்தது. கட்டியிருந்த நூல் சீலையில்  பின்னுக்கு கொசுவம் வைச்சதே வித்தியாசமா இருந்தது.கேள்வி  எல்லாத்துக்கும் வஞ்சகமில்லாத  பதில் போல சிரிச்சா. உள் சூட்டுக்  காச்சல் போல கணகணப்பான நடுத்தர வயது, உடம்பில ஒருவித றாத்தலடி நல்லெண்ணெய்  தடவி உள்ளங் கையால நீவி விட்ட  மாதிரி மினுமினுப்பு , பெரிசா இருந்தாலும் விழாமல் எடுப்பாய் குத்திக்கொண்டு நெஞ்சு , உயரமான கால்கள் நீளமான கைகள், முகத்தில நேர்மையான நட்பு, கண்களில் இன்னும் நிறைவடையாத ஏக்கம், மொத்தத்தில் பித்தளைக் குடம் போல அள்ளிப் போடுற வாளிப்பு , 

                                         பெரிய மாமா இந்த அள்ளிப் போடுற  பித்தளைக் குடத்தை நிட்சயமாக சமையலுக்கு மட்டுமே வைச்சு வீணடிக்க மாட்டார் என்று மட்டும் உத்தரவாதமாகத் தெரிந்தது. அவர் பரமார்த்தகுருவை நம்பி  ஆத்துக்குள்ள கொள்ளிக்கட்டை யை  வைச்சுப் பார்த்த மட்டி மடையன் போல விபரம் தெரியாத ஒரு  ஆள் இல்லை . வயதானாலும் அழகை ஆராதிக்கும் விபரமான  மனிதர். அதை சில நாட்களில் அவர் முக்கியமா  டவுனில  சுப்பிரமணியம் மருந்துகடையில் வேண்டச் சொல்லி தந்த சில்லறைச் சாமான் லிஸ்டில்  கண்டு பிடிச்சேன்.  

                                         அந்த லிஸ்டில், சீயாக்காய், சந்தனாதித்தைலம், ஜாதிக்காய், கராம்பு , ஏலம், மாதுளம்பழ எண்ணை, வாசப் புகையிலை, சுண்ணாம்பு ,வெத்திலை,பாக்கு , பாக்கு உரல் , சண்டுள் வூட் சோப் , இன்னும் பல இருந்தது. இதுகள் அவர் முன்னம் ஒரு போதும் வேண்டியது இல்லை,முக்கியமா  பெரிய மாமி வீட்டு குடும்பத் தலைவியாக இருந்த நேரம் வேண்டியதேயில்லை. எனக்கும் தெரியும் யாருக்கு வேண்டுறார் என்று.ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது  பித்தளைக் குடம் இதெல்லாம் பாவிப்பதால் தான் பவுர்ணமி ஜொலிப்பாகப்  பித்தளைக் குடம் போல இருப்பது போல இருந்தது. 

                                               பெரிய மாமிக்கு இன்னுமொரு பெண்ணைத்  தன்னோட புருஷன் சமையலுக்கு கொண்டு வந்து வைத்திருப்பது நன்றாகவே தெரியும், ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சமையலுக்கு மட்டுமில்லை என்பதும் தெரியவந்தநேரம் சாமியறைக் கதவை இறுக்கிச் சாத்திப்போட்டு, எப்பவுமே படுத்த படுக்கையை விட்டு எழும்பி நடமாடவே விரும்பாமல் ஒவ்வொருநாள் காலையிலும்  படித்துக்கொண்டிருந்த தேவார திருவாசகத்தையும் படிக்கிறதை நிட்பாட்டிப்போட்டு நிரந்தர மவுனம் ஆகிட்டா.  

                                        பித்தளைக்குடம் நல்லா சமைப்பா. அது ஒரு வேறு விதமான சமையல், நிறைய சரக்குத்தூள் அம்மியில அரைச்சுப் போட்டு செட்டிநாட்டு சமையல் போல இருக்கும். பெரிய மாமாவும் பித்தளைக்குடம் அருகில் இருந்து பரிமாற  மிகவும் சந்தோசமா சாப்பிட்டார். அதுக்குப்பிறகு பித்தளைக் குடம் சாப்பிட்டு முடிய  பெரிய மாமிக்கு ஒரு தட்டில சாப்பாடு போட்டு ஜெயிலில் உள்ளவர்களுக்குக்  கம்பிக் கதைவைத் திறந்து தள்ளி விடுவார்களே அதே போல தள்ளி விடுவா. பெரிய மாமா அதைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு  பித்தளைக்குடம் பாக்கு உரலில் வெத்திலை இடிச்சுப் போட முன்னுக்கு இருந்து சிரித்து சிரித்து கதைத்துக்கொண்டு இருப்பார் .

                                   பித்தளைக்குடம் வந்த ஒரு கிழமைக்குள் பெரிய மாமா அந்த வீட்டில சாமி அறை எந்தப்பக்கம் இருக்கு என்பதையே மறந்திட்டார். பித்தளைக்குடம் அவரை சேலைத் தலைப்பில முடிஞ்சு வைச்சு இருந்தா. நாய்க் குட்டி போல  பித்தளைக்குடத்தின் காலுக்க கிடந்தது சுழன்டார் பெரிய மாமா . எனக்கும் வேண்டுறதுக்கு சாமான் லிஸ்ட் எப்பவுமே பெரிய லிஸ்ட் ஆக இருக்க மிச்சக் காசு எவளவு வந்தாலும் கேட்க மாட்டார்.  அதால நானும் கைச் செலவுக்கு காசு அதிகம் வருகுது தானே என்று என்ன நாசமறுப்பு எண்டாலும் நடக்கட்டும் எண்டு என் பாட்டில் இருந்தேன், நான் சொன்னால்தான் வெளிய தெரியவரும் இதெல்லாம் எண்டு அவருக்கு நல்லா தெரியும் அதால இடைக்கிடை கடனாக நூ று . இருநூறு  எண்டு கேட்பேன்  உடனையே ஆயிரத்தில் மயில் தாள் உருவித் தருவார்  

                                          பித்தளைக்குடம் என்னோட அதிகம் கதைக்க மாட்டா , ஆனால் நல்ல ஒரு பெண்மணி போல இருந்தது அவா கதைத்த சில நாட்களில். பெரிய மாமா ஆகோ ஓகோ எண்டு தலை கால் சந்தோஷத்தில் மிதந்துகொண்டு இருந்தார், பத்துப் போடுற பொம்பிளை வந்து பெரிய மாமிக்கு பத்துப்போடுவா,

                        "  இனி நீ  மருந்து கட்ட வரவேண்டாம், கதவை இறுக்கி அடிச்சு சாத்திப்போட்டுப் போ, இந்த வீட்டுக்குள்ள என்னோட புருஷன் போடுற கூத்துப் போதும் எனக்கு வலிக்க வலிக்க செத்துப்போக  , இன்னும் சில  நாளில் நான் செத்துப் போக வேண்டும் , இனி நீ இங்க வர வேண்டாம்,,நீ இங்க அடிக்கடி வந்தா பிறகு உன்னையும் எண்ட மனுஷன் ,,வேண்டாம்,,எக்கேடு கெட்டு எண்டாலும்  வாழ்ந்து தொலையட்டும்,இன்றைக்கே நான் செத்தாலும் சந்தோசமா போயிடுவேன் ..நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ , முதல் இங்க நடக்கிற கதையும்,,சிரிப்பும்,,கும்மாளமும்  என்னை ஒவ்வொரு அணு அணுவா குத்திக் கொல்லுது ...நீ கதவை அடிச்சு சாத்திப்போட்டு போ " 

                       என்று சொன்ன நாளில் இருந்து அவள் வரவில்லை. 

                          பித்தளைக்குடம் வீட்டில இப்ப முக்கிய பிரமுகராக இருந்தாலும். அவாவின் செயல்கள் அதுக்கு பெரிய மாமா கொடுக்கும் ரியாக்சன், அதுக்கு பித்தளைக்குடம்  தள்ளி விடும் சைட் எபெக்ட் , பிறகு ரெண்டு பேரும் மாறிமாறி ஆளை ஆள் கண்ணால சிக்னல் போட்டு அதுக்குப்  போடுற பக்கிரவுண்ட் மியூசிக் இதுகளைப் பார்க்க பித்தளைக் குடமும் பெரியமாமாவும் முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. ஆனாலும் எங்கே  என்று உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது , 

                          ஒருநாள் குசினியில் சாப்பிடும் போது பெரிய மாமா கோபமாகி 

                      " செவிட்டில அறைஞ்சன் என்டா இப்ப உனக்கு,  வருசக் கணக்கா சமைச்சுப்போட்டும் இன்னும் என்னோட உப்புப் பதம் பிடிக்க முடியவில்லையே  ,என்னத்தைக் இவளவு வருசமும் கவிட்டுக் கொட்டிக்கொண்டு இருகிறாய் என்று மெய்யாத்தான் எனக்கு விளங்கவில்லை "

                                 என்று  சாப்பாட்டில உப்பு அதிகம் என்று தாறு மாறாக் கத்தினார் , இன்னொருநாள் வேட்டி வளம் மாறிக் கரை மடிசுக் கிடக்கு என்று உரிமையோடு கோபமாகி, 

                          " முகத்தில போட்டன்  என்டா இப்ப உனக்கு, நாலு முழம் வேட்டிக்கு பட்டுக்கரை பிடிச்சு மடிச்சு வைக்கத் தெரியாமல் இவளவு வருசமும் என்னத்தை ஆவெண்டு பார்த்துக்கொண்டு இருந்தனி,,இப்பிடி செய்யவேண்டாம் எண்டு எத்தின வருசமா படிச்சுப் படிச்சு சொல்லுறன்,,நீயும் நாய் வால் போல நிமிராமல் தானே நிக்குறாய் அடம்பிடிச்சுக்கொண்டு " 

                                      என்று தோச்சு மடிச்ச வேட்டியைக் கரை மாறி மடிச்சதுக்கு பேசினார் . அதுக்கும் பித்தளைக்குடம் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து "ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர: " மந்திரம் சொல்லி தாலி கட்டின கணவனிடம் திட்டு வேண்டுற பதிவிரதை மனைவிபோல  தலையைக்குனிந்து கால் விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தா. அப்பவும் பேச்சு பின்னணியில் பித்தளைக் குடத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து விழுந்துகொண்டு இருந்தது 

                                                இதெல்லாம்  எனக்குத் தெளிவாகக் கேட்க முடியாத தூரத்தில் நடந்த உரையாடல்கள். சிவாஜி கணேசன் நடித்த தமிழ் சினிமாப் படங்கள் பார்த்த அனுபவத்தில் உரையாடலுக்கும் வாய் அசைவுக்கும், முகப் பாவனைக்கும்  உள்ள வார்த்தைத் தொடர்பை உன்னிப்பாக ஊகிக்கும்  திறமை அந்த நாட்களில் என்னிடமிருந்தது. என்றாலும் ஒருநாள் பெரியமாமா வவுனியாவுக்குப் போய் இருந்த நேரம் பித்தளைக்குடத்தையே  மடக்கிக்  கேள்வி கேட்டேன் 

                                     " பெரிய மாமாவை,, ,சமையல் வேலைக்கு இங்கே வர முதல்  முன்னமே தெரியுமோ "

                                    " ஏன்  நீர் கேக்குறீர் ,,உமக்கு என்ன பிரசினை இப்ப "

                               "  இல்லை , முதலே வருசக்கணக்கா ஒன்றா வாழ்ந்தவர்கள் போல இருந்தது. அதால சும்மா கேட்டேன் "

                                " ஏன்  நீர்  என்னைக்  கேக்குறீர் , உம்மட மாமாவைக் கேளுமேன் முதலில் , அவர் சொல்லட்டுமென்  பதிலை. " 

                                  " இல்ல மாமாவைக் கேட்டால், பிறகு பிரசினை , எனக்கு ஏன் தேவையில்லாத கேள்வியும், தேவையில்லாத  பதிலும்  "

                                "  ஏன் எப்பவுமே இதுக்கு பொம்பிளையளிட்ட பதில் சொல்லச்  சொல்லி கேள்வி கேட்குறிங்க, செய்யிற திருக்கூ த்து எல்லாம் உம்மட பெரிய மாமா செய்துபோட்டு ,பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா ,,ஹ்ம்ம் ,,பெயர்தான்  பெரிய மாமா,,இப்ப உருத்திராட்சம் மாலையைக் கையில வைச்சு சுழட்டிகொண்டு இருந்தா சரிவருமே   "

                               "அய்யோ,,,என்னை விடுங்க,,,இந்தக் கேள்வியையே மறந்திருங்க இப்படிக்  குருசேஸ்திர   அஸ்திரங்கள்  பாயும் என்று  தெரியாமல் கேட்டுப் போட்டேன்  " 

                                       " ஹஹஹஹா, உங்க மாமாவே,, ஹ்ம்ம்,, இவர்தான் பெரிய்ய்ய்ய்ய்ய  மாமா,, பெரியமாமா  அவரும்  மறந்துதானே ஓடப்பார்த்தார் , விதி விடாதே "

                                       " விதி யாரைத்தான் விட்டு வைக்குது "

                                    " இல்லை,,நீர் மாமாவை  சும்மா கேளும், எனக்கும்  அவர் என்ன பதில் சொல்லுறார் எண்டு அறிய ஆவால் , ஹ்ம்ம், உமக்கு என்ன பிரசினை அதலா வரப்போகுது  எண்டும் பார்ப்பமேன்  " 

                                   " ஹஹஹா,,பிறகு மாமா இங்க வரவேண்டாம் என்டு சொன்னால்,,கைசெலவுக்கு காசு வருமானம் நிண்டு போடுமே,,அதால நானா வாயத் திறந்து ஒண்டும் கேட்கவே மாட்டேன் "

                                 " இல்லை உமக்கு மண்டைக்குள்ள கேள்விகள் கிடந்தது புழு குடையிற மாதிரி நிறைய இருக்கெண்டு நான் என்ன செய்யுறேன் எண்டு என்னை ஒவ்வொரு முறையும் நீர் இரகசியமாப் பார்க்கும் போது  எனக்கு தெரியும் "

                                      " அது உண்மை,,ஆனால் இப்ப எனக்கு இது தேவை இல்லாத உத்தியோகம்,,பெரிய மாமா எனக்கு நல்ல பினான்சியல் சப்போர்ட்,,அதுதான் காசு காய்கிற மரம்,   அதைக் கெடுக்க விரும்பவில்லை "

                                       " ஒ அப்பிடியே சங்கதி "

                                      "  பெரிய மாமா அப்படி செய்ய மாட்டார், என்றாலும் சொல்ல ஏலாது .."

                                        " இல்லை அவர் அப்படி செய்ய மாட்டார்,,நல்ல மனுஷன்,,விருப்பமான ஆட்களை ஒருநாளும் உதறி ஏறிய மாட்டார் "

                                     " ஹ்ம்ம்,,,அப்படியா ,ஹ்ம்ம், ,"

                                  " இப்ப என்னத்துக்கு சாமி அறையைப் பார்த்து பெரு மூச்சு விட வேணும் ..,,அதுக்கு என்ன அர்த்தம் சொல்லும் "

                                       " இல்லை,,ஒண்டுமில்லை "

                              "  இவர் உமக்கு என்ன தாய் மாமாவா , பெரிய மாமா எண்டு சிலநேரம் சொல்லுறீர் ,,இவர்  ,உம்மோட அம்மாவோட  அண்ணாவா .."

                                 " இல்லை ,,தூரத்துச் சொந்தமெண்டு அம்மா சொல்லி இருக்கிறா "

                                   " ஹ்ம்ம்,,எனக்கும் உம்மட மாமா  துராத்தில்...இங்கிருந்து  வெகு  தூரத்தில்,,,,நல்லா  தெரியும்,,,ஹ்ம்ம்,,,இங்கே யாருக்கும்  தெரியாமல்  இருந்து இருக்கும் .".

                                 "  என்னது  வெகு தூரத்தில் என்றால் எந்த ஊரில "

                              "  இல்லை ,,ஹ்ம்ம்,,இல்லை,,,என்னண்டு சொல்ல,  ஒருவேளை போன பிறப்பில ஒன்றாக கணவன் மனைவியாக இருந்து இருப்பமோ  தெரியவில்லை ,,ஹ்ம்ம்,,எப்படிப் பதில் நல்லா சோத்தாங் கையால பிடறீல அறைஞ்ச மாதிரி இருக்கா " 

                               "  எனக்கு ஒன்றுமே புரியவில்லை ,நான் பிறகு ஒருநாள் ஆறுதலாக் கதைக்கிறேன் ,,இவளவு கதைததுக்கே நன்றி . "

                                      பரிஸ் இல் வசித்துக்கொண்டிருந்த பெரிய ராசன் அந்த வீட்டில தாய் மீது மிகவும் அன்பும்,அக்கறையும் உள்ள ஒருவர். பெரிய மாமா  வீட்டில அண்மைக்காலமாக  நடக்கும் எதையுமே அவருக்கு சொன்ன மாதிரி தெரியவில்லை.முக்கியமா பெரிய மாமி படுத்தபடுகையாக இருப்பது சொல்லப்படவில்லை. மற்றப்படி அந்த வீட்டில்  ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போலதான் இருந்தது. இப்பிடி  " ஒன்றுமே சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டிருப்பது இல்லை போல "  என்று எப்பவாவது நடந்தால் அதுக்குப் பிறகு தான் பெரிய குண்டுகள் வெடிக்கும் . 

                               பெரிய மாமா  சில நாள் வவுனியாவுக்கு போய் லொட்சில் நின்று  ,பெரிய ராசனுடன் டெலிபோனில் கதைப்பார் , கதைச்சு காசு எடுத்துக்கொண்டு வருவார். அப்படிப் போனபோது பெரிய மாமி படுக்கையில் இருக்கிறதா சொல்லி இருக்கிறார் போல,ஏன் சொன்னார் என்று தெரியலை, அல்லது  சில பிராத்தனைகள் ,வேண்டுதல்கள் , இறந்துகொண்டிருக்கும் நம்பிக்கைகள் அவரை அறியாமலே அப்படி அவர் வாயாலயே சொல்ல வைத்ததா என்று எனக்கு சரியாத் தெரியவில்லை.

                                    வவுனியாவுக்கு போயிட்டு வந்த சில நாட்களில் ஒரு நாள் பின்னேரம் பெரியமாமா  வீட்டுக்குப் போனேன்  , பித்தளைக்குடம் குசினி வாசலில் நிலத்தில இருந்து கொண்டு  பாக்கு உரலில் வெத்திலை இடிச்சு வாய்க்க வழிச்சு அடைஞ்சு கொண்டு இருந்தா. பெரிய மாமா ஹோல் நடுவில் இருந்த குஷன் செற்றியில் காலுக்கு மேலே காலைப் போட்டுக்கொண்டு, அதை ஆட்டிக்கொண்டு, மெய்கண்டான் கலண்டரில் தாள்களை  ஒவ்வொன்றாய் பிரட்டிப் பிரட்டி ஜோசிதுக்கொண்டு இருந்தார் ,நான் ஹோல் வெளிக்கதவில்  பெட்ரோல்மக்ஸ்க்குக்  காற்று அடிச்சுக்கொண்டு இருந்தேன் , பித்தளைக் குடம் அன்றைக்கு அதிசயமா 

                                " என்ன ,,உம்மோட கொண்ணை வெளிநாட்டில் இருந்து வாறாராமே,,இனியென்ன உமக்கும்,,உங்களுக்கும்  கொண்டாட்டம்  தானே,,இனிப் பிறிச்சுப்   பார்த்து ..நான் பழையபடி  பிறத்தி ஆட்கள்  போல  வெளியால போக ..உங்களுக்கு  இனிக் கொண்டாட்டம்  தானே ,,ஹ்ம்ம்  "

                                   என்று சொன்னா. பெரிய மாமா அப்படிக் கதைக்க வேண்டாம் என்று சொன்னார். எனக்குப் பெரியமாமாவைப் பார்க்கக்  குழப்பமாக இருந்தது .அவர் கையில வைச்சிருந்த மெய்கண்டான் கலண்டரில  திருத்தனி முருகபெருமான்  தங்கவேலை இறுக்கிப் பிடிசுக் கொண்டிருந்த படத்தில ஒரு பக்கம் ஒட்டிக்கொண்டு வள்ளியும் மற்றப்பக்கம் ஒட்டிக்கொண்டு தெய்வயானையும் இருக்க " யாமிருக்கப் பயமேன் " என்று மேலே கறுப்புக் கொட்டை எழுதில மேல எழுதி இருந்தது   
                                  
                                  " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான், ....இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                     என்று சொன்னார்,,சொல்லிப்போட்டு என்னைப் பார்த்தார்,,நான் பித்தளைக் குடத்தைப் பார்த்தேன்,,பித்தளைக் குடம் பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா,,நான் அதைக் கேட்டுக்கொண்டு பெற்றோல்மக்ஸ்க்கு புசுக்கு புசுக்கு என்று காத்து அடிச்சுக் கொண்டு இருந்தேன் 

                                   " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                   "  இல்லை மாமோய் ,வடிவாக் கேட்கவில்லை, இன்னொரு தரம் சொல்லுங்கோ மாமோய்      "

                                        " ஹ்ம்ம், இந்த முறை வவுனியாவுக்கு போன நேரம், பெரிய ராசனுடன் கதைச்சனான்,,,ஹ்ம்ம்,,பத்தோடு பதினொன்டா ,,உளறிப்போட்டன் ..,,ஹ்ம்ம்,,,சண்டை பிடிச்சான்,,, இப்ப அவன் அடுத்த கிழமை வந்து இறங்கப் போறான் எண்டு சொல்லிப்போட்டான்,,,,,இந்தக் கிழமைகுள்ள  வந்திருவான் போல இருக்கு ...ம்..." 

                                      "  ஓ,, அப்படியே  சங்கதி .மாமோய் ....ம்,,,"

                                    " என்ன நான் சொன்னது கேட்டதே  உனக்கு,,,"

                                "  நல்லா விளங்குது மாமோய்  ..கன வருசம் ராசன் அண்ணை இங்காலே வரேல்லத்  தானே, வந்தா சந்தோசம்  தானே " 

                       என்று சொல்லி பித்தளைக் குடத்தைப் பார்த்தேன், பித்தளைக் குடம் நாடிக்கு கையை முண்டு கொடுத்துக்கொண்டு, வாயில வெத்திலை போட்டு மென்று கொண்டு,  பெரிய மாமாவைப் பார்த்துக்கொண்டு இருந்தா

                                     " இவளைப் பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் பார்ப்பம் என்று நினைக்கிறேன் ,, அல்லது  சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நினைக்கிறன் நீ என்ன நினைக்கிறாய் "

                                  "  உங்களுக்கு என்ன விருப்பமோ,,என்ன வசதியோ அதுபோல செய்யலாம்,,மாமி  முதல் சம்மதப்பட்டு வருவாவோ தெரியாதே "

                                       " அது தான், நீ ஒருக்கா கதவைத்திறந்து கேள்..நான் அந்த அறைப்பக்கமே இவ்வளவு நாளும் எட்டிப் பார்க்கவில்லை , இப்ப அவள் இப்ப என்னோட முகத்தைக் கண்டாள் கட்டாயம்  யமனை கண்ட மாதிரி  எரிஞ்சு பாஞ்சு விழுவாள் "

                                        "    சரி , நான் கதைக்கிறேன், சில நேரம் என்னோட அவா  கதைச்சு இதுக்கு எதுவும் ஒரு முடிவு கட்ட முடியும் என்றா நான் கதைக்குறேன்  மாமோய்    "

                                       "  விளங்கேல்ல, நீ சொல்லுறது  என்னத்தைக் கதைச்சு  என்னத்துக்கு முடிவு கட்டப் போறாய்,  நான் ஏற்கனவே குழம்பிக்கொண்டிருக்கிறேன்,  இதுக்குள்ள நீ வேற என்ன சொல்லுறாய் " 

                                    " இல்லை மாமோய் ,பிரைவட் வாட்டில் நிற்பாட்டி சென்றல் நேர்சிங் ஹோமில் வைச்சும் பார்க்கலாம் என்று நீங்க  நினைக்கிறதை சொன்னேன் மாமோய் "

                                    " அதுதான் நானும் நல்லது எண்டு நினைக்கிறன்,இப்ப உள்ள நிலைமையில் நான் கதைக்கப் போனால் பெரிய பிரசினை எடுப்பாள் "

                                      "     ம்  "

                                "  என்ன ம் ம் எண்டு மண்டிக்கொண்டு இருகிறாய்,,நீ கதைக்கிறியே ,,இப்பவே உதைக்  கொழுத்திப்போட்டு போய்க் கதை "

                                      "  மாமா ,,வந்து ..வந்து "

                                   " என்னடா  மண்டையச் சொறியிறாய் "

                              "  இல்ல  மாமா ,,ஒரு சின்னப்  பிரசினை  எனக்கு ,,மாமா "

                         " சொல்லடா,,நானே  பெரிய  பிரசினையில் நிக்குறேன் "

                                   " அது வந்து  மாமா,,,வந்து "

                                 " என்னடா  வந்தது  போனது  ,,வாயை திறந்து  சொல்லு "

                                     "   மாமோய் , ஏசியாச் சைக்கில்  ஒன்டு நல்ல விலைக்கு வந்திருக்கு மாமோய்,,இப்ப வைச்சு ஓடுற பழைய சைனாக்காரன் செய்த சைக்கிள் சக்குப் பிடிச்ச சைனாக்காரன் போலக்  கிடந்தது அவிக்குது மாமோய் "

                                        "   ம்  என்ன விலையாம் "

                                     "  ரெண்டாரியம் சொல்லுறாங்கள் மாமோய்,,"

                                        "     ம்,,நாளைக்கு காசு தாரன் ,,இப்ப நீ போய்க் கதைச்சு அவளை ஒரு வழிக்குக் கொண்டுவா ,,ரெண்டாயிரம் நாளைக்கு கட்டாயம் தாரேன் "

                                           "   சரி மாமோய் ,,நான் வெண்டு தாரன் நீங்க ஜோசிக்க வேண்டாம்,,உங்கட நல்ல மனதுக்கு எல்லாமே நல்லபடியாதான் நடக்கும், 2

                            என்று சொல்லி பெட்ரோல்மக்ஸ்சைக் கொழுத்தி வைச்சுப்போட்டு எழுந்து போய்க் சாமியறைக் கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தேன். பெரிய மாமி அரைவாசியாய் மெலிஞ்சு போய் கிடந்தா என்னை நேராகப் பார்த்தா. இதுக்கெல்லாம்  நீயும்தானே உடந்தை என்பது போல அந்தக் கண்களில் ஒரு கோபம் இருந்தது. என்னோடையும் கதைக்க விருப்பம் இல்லை என்று சொன்னா, " கதவை மட்டும் இறுக்கிச் சாத்திப்போட்டுப் போ " என்று சைகையில் சொன்னா.

                                        இது நடந்து ரெண்டாம் நாள் பெரிய மாமா சொன்ன மாதிரியே பெரிய ராசன் வந்திட்டார் என்றும் என்னை உடனடியா வரசொல்லியும் இந்த முறை பித்தளைக்குடம் தகவல் அனுப்பி இருந்தா. போய்ப் பார்த்த போது நான் நினைச்ச மாதிரிதான் புயலடிச்சு ஓஞ்சு   நாலு பக்கமும் சிதறி இருந்தது வீடு ..........

                           பாகம் இரண்டில்  புயல் தொடரும்.... ..