Saturday, 28 November 2015

திரும்பபப் பெற்றுக்கொள்ள முடியாத இசை

ஆங்கிலப் பாடல்கள் கிட்டாரில் வாசித்துப் பாடிய நேரம் கொஞ்சம் வித்தியாசமா காதல் பாடல்கள் இசை அமைத்த பலரில் ,முக்கியமானவர் போல தெரிந்த கேட்ஸ் ஸ்டீவன்ஸ்  இன் ஒரு " it's a wild world And it's hard to get by just upon a smile " பாடலை எப்போதும் பாடுவேன் ! அதில் உள்ள கிடார் கோட்ஸ் அமைப்புகள் மிகவும் அழகா இருக்கும் ! 

                                  அந்தப் " it's a wild world And it's har
d to get by just upon a smile "பாடல் சென்ற  வருடம்  நான் facebook இல் என்னோட சுவரில தப்பினேன்,ஒருவரும் ரசித்துக் கேட்ட மாதிரி தெரியவில்லை,என்ன காரணமாக இருக்கும் எண்டு எனக்கு இண்டுவரை விளங்கவில்லை. இந்தப் பாடல் ஒரு உலகப் புகழ் பெற்றபாடல், டெக்னிகலா "ரிதம் " அதன் அரிதான chords ஒழுங்கமைப்பில் பல புதுமை செய்த பாடல்,

                              ஸ்கண்டிநேவிய சுவிடன்,நோர்வேயில்  இது ரெம்பப் பிரபலம், துரதிஸ்டவசமாக மற்ற நாடுகளில் அதிகம் கவரப்படவில்லை ! பாடல் வரிகளும் அர்த்தம் நிறைந்த , humanitarian பற்றிif you wanna leave, take good care ,Hope you make a lot of nice friends out there,But just remember there's a lot of bad and beware, beware நிறைய விசியங்கள் உள்ளது !

                                           இதைப் பாடி,இசை அமைத்த Cat Stevens என்ற இந்தப் பாடகர், கிரேக் நாடட்டு அப்பாவுக்கும்,ஸ்வீடன் நாட்டு அம்மாவுக்கும் ,இங்கிலாந்தில் பிறந்தவர்,அந்த நாடில வளர்ந்தவர்,14 வயதில் கச நோயால தாக்கப்பட்டு மயிர் இழையில் உசிர் தாப்பியவர் ! "டீன் ஏஜ் வயசில்" கிற்றார் வாசிக்க தொடங்கி "டீன் ஏஜ் " வயசிலையே அவரோட முதல் அல்பத்தை வெளியிட்டவர்,அது இரண்டு கிழமையில் 5 மில்லியன் வித்து தள்ளியது !

                                          கட்ஸ் ஒருமுறை கடலில் குளிக்கும் போது சுழி இழுக்க ,எல்லா கடவுளையும் கூப்பிட ஒருவரும் வரவில்லை,கடசியா " அல்லா நீயாவது வந்து என்னைக் காப்பாற்று " என்று கதற ,அலைகளின் மீது ஒரு மரப்பலகை மிதந்துவர அதைப் பிடித்து உசிர் தப்பினார் ,அன்றில் இருந்து இஸ்லாம் மார்கத்துக்கு மாறி , யூசப் இஸலாம் எண்டு பெயரை மாற்றிக்கொண்டு ,அடியோடு பொப் இசை அமைப்பதை நிறுத்திவிட்டார் !

                                    கிட்டார் என்ற வாத்தியத்தில் "Consonance and dissonance" என்ற வித்தையில் கில்லாடியான கட்ஸ் , இசை உலகை விட்டுப் விலத்தி ,இசலாமிய ஆன்மீகத்தில் இறங்கியது ,இசை உலகத்துக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு ,அவர் இஸ்லாமியர் ஆனபின் "A FOR ALLAA " எண்டு ஒரு அல்பம் வெளியிட்டார், அது பல சர்சைகளைக் கிளப்பியது. அதன் இசையில் கிட்டார் இருந்தாலும்,கருத்துக்கள் கொஞ்சம் தத்துவ வில்லங்கமாக இருக்க ,உலகம் எங்கும் உள்ள அவரோட ரசிகர்கள் குழம்பிப் போனார்கள் ! 

                                      அவதுவும் இல்லாமல் துணிந்து " அமரிக்காதான் இந்த உலகின் முதல் பயங்கரவாதி " என்று சொல்ல அவரை வாழ்நாளில் அமரிக்காவுக்குள் வரமுடியாதவாறு தடை செய்துவிட்டார்கள்!

                                           இதயத்தில ஈரம் உள்ள , கட்ஸ் ,அவரோட இசை அல்பங்கள் விற்றுவரும் பணத்தையும்,தன்னோட எல்லா கிடார்களையும் ஏலம் விட்டு, வந்த பணத்ததை வறிய இஸ்லாமிய நாடுகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொடுத்துவிட்டார் . இசையில் இருந்து ஒதுங்கினாலும், இந்த இசை மேதைக்கு , அவரோட பழைய பொப் ,சோல் ,ப்ளு கிராஸ் ஸ்டைல் பாடல் தந்த பாதிப்பில் இன்னமும் விடாப்பிடியாக உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்குறார்கள் !

                                       அப்படிதான் அவர் , மனதை கசக்கிப் பிழியும் மெட்டுக்களில் பாடல்கள் இசை அமைத்தார் ! இந்த உலகத்தில எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்கிறது,இந்த நுற்றாண்டின் திரும்பபப் பெற்றுக்கொள்ள முடியாத இசை இழப்பு கேட்ஸ் ஸ்டீவன்ஸ் ....it's a wild world I'll always remember you....!

.

Samsaaram Enpathu Veenai...Guitar Cover .Vijaya Baskar





.தமிழில் அதிகம் அறியப்படாத, தமிழ் நாடில் முதலியார் குடும்பத்தில் பிறந்த விஜயபாஸ்கர் என்ற கன்னட இசை அமைப்பாளர் இசைஅமைத்த , ",S .B B இக்கு புகழ் தேடித்தந்த ,கவியரசு கண்ணதாசனின் வரிகள் அசத்திய " சம்சாரம் என்பது வீணை சந்தோசம் என்பது இராகம் " பாடல் விஜயபாஸ்கர் இசை அமைத்தது .

கன்னட படங்களில் கொடிகட்டிப் பறந்த விஜய பாஸ்கர் தமிழை விட, கன்னடா, தெலுங்கு,மலையாளம் ,மராத்தி,கொங்கனி ,துளு மொழிப் பாடல்களுக்கும் இசைஅமைத்துள்ளார். புகழ்பெற்ற அடூர் கோபாலக்ருஷ்ணன் என்ற மலையாள இயக்குனரின் எல்லாப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார் !
சிறுவயசிலேயே ஹிந்துஸ்தானி இசை வெஸ்டர்ன் பியானோ முறைப்படி பயின்ற விஜய பாஸ்கர் ,தெனிந்திய திரை உலகில் "Theme Music "என்பதை முதல் முதல் அறிமுகம் செய்தவர் என்கிறார்கள்! கன்னட மொழியின் சிறந்த கவிஞ்சர்கள் எழுதிய கவிதைகள் எல்லாத்துக்கும் இசை அமைத்து உள்ளாராம்! எழுபதுகளிலேயே லண்டனுக்குப் போய் Robert Clive என்ற இந்திய வரலாற்று ஆங்கிலப் படத்துக்கு BGM பின்னணி இசைஅமைத்துள்ளார்!
தென் இந்திய இசை அமைபாளர்களிலேயே மிகக் குறைவான இசை கருவிகளை ஒர்கேஸ்ராவில் வைத்து இசை அமைத்தவர் இவர் ஒருவர்தானாம் , அதாலதான் அவர் பாடல்கள் இனிமையாக அதே நேரம் எளிமையாக இருக்குது போல ! ஆறு முறை ஒரு மாநிலத்தின் சிறந்த " State Film Award for Best Music Director " பரிசு வென்றவர் ,
ஹிந்துஸ்தானி கஜல் பாடல்கள்,தெய்வீகப் பக்திப் பாடல்கள், நாடுப்புற FOLK பாடல்கள் இசை அமைத்த விஜய பாஸ்கர் ஒரு பேட்டியில் அடக்கமாக "folk music was the forerunner of all existing forms of music in the world" என்று இசையின் ஆதரமே நாடுப்புற இசையில் தொடங்குகின்றது எண்டு சொல்கின்றார் !
77 வயதில் 2002 இல் பெங்கலுரில் மார்அடைப்பால் திடீர் எண்டு இந்த உலகை விட்டுப் போனாலும் விஜய பாஸ்கர் இசை அமைத்த பல பாடல்கள் அவளவு இலகுவாக ரசிகர் மனங்களை விட்டுப்போக முடியாதவை!

Sunday, 22 November 2015

மங்களேஸ்வரி...முதல்ச் சண்டை

சிங்கம் எல்லா வேட்டையிலும் வெல்லாது அதுபோல ஒழுக்க சீலமாக  நல் நடத்தையோடு  வாழவேண்டும் என்று எழுதி வைத்த எல்லாமே எப்பவும் நடக்காது . அது வெறும் தியரி , அதை நடைமுறையில் எதிர்கொள்ளும் போது முன்னுக்கு வந்து விழும் வாழ்க்கை அனுபவம் என்பது பிரக்டிக்கல். ஆனாலும் ஒரு இடத்தில தொடர்ந்து ஒரே வேலையைச்  செய்வதுக்கு தியரியும், பிரக்டிகலும் பல சந்தர்பங்களில் ஒரே நேரத்தில் பாஸ் செய்யவேண்டியிருக்கும். 

                                                  அப்படி சொல்லிக்கொண்டுதான் மங்களேஸ்வரி அந்த இடத்துக்கு ஒரு கிழமை சோதனை மேற்பார்வைக்கு வந்தா. வந்து நல்லா அடிப்பெட்டியில் இருந்து அகப்பைக் காம்பு வரை சோதனை செய்து , அந்த ஒரு கிழமை முடிவில் என்னோட வேலைக்கு அவா எழுதிய  சோதனை மேற்பார்வை ரிப்போட் ஆப்பு வைச்சுது. அது நடக்கும் என்று மங்களேஸ்வரி வந்த முதல் நாளே அவா தலையை விரிச்சுப் போட்டு வேப்பிலை இல்லாத குறையாகப் பத்திரகாளி ஆட்டம் போட்ட போதே எனக்கு விளங்கியதால், நான் அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .

                                                            முதலில் நான் வேலை செய்த அந்த  மயான அமைதியான  இடத்தையும் , ரெண்டாவதா அதில என்ன வெட்டுக் குத்து வேலை செய்தேன் என்பதையும், மங்களேஸ்வரி என்ற மங்கல்ஸ் யார் என்பதையும்..பிறகு  ,,பிறகென்ன  உங்களுக்கே வரிச்சு மட்டை வேலியைப் பிடிச்சுக்கொண்டு போன மாதிரி வாசித்துக்கொண்டு போக விளங்கும் ஏன் மங்களேஸ்வரி கோடாலி போட்டுப்  பனங்கொட்டுப் பிளந்தது போல  எனக்கு ஆப்பு வைச்சா எண்டு 

                                                 சில வருடம் முன்னர்  நோர்வேயில் ஓய்வூதியம் பெறும் வயதானவர்களுக்குப்  பகல் நேரம் மத்தியானச் சாப்பாட்டு கொடுத்து , பின் அவர்களை  வேறு சில உடட்பயிட்சியுடன் இயங்க வைக்கும் நிகழ்வுகள் நடத்தி , முக்கியமா அவர்கள் தங்களுக்குள் இளமையில் செய்த  எல்லா நல்ல செயல்களையும் நினைத்துச் சிரித்து, துன்ப நிகழ்வுகளில் துக்கித்து,  கதைத்துப் பேசி, கோப்பி குடிக்கும் " எல்டர் செண்டர் " என்ற  இடத்தில ஆரம்ப நிலை சமையல் குக் ஆக வேலை செய்தேன்

                                       அந்த இடம் வயதானவர்களின் கடைசிக்காலம் அதன் கடைசிப் பக்கத்தில் பிரியாவிடை எழுதும் நேரத்துக்காகக் காத்திருக்குமிடம். ரெண்டு கிழமைக்கு இடையில் ரெண்டு பேருக்கு அதே இடத்தில படம் வைச்சு மெழுகுதிரி ஏற்றுவார்கள். அந்த ரெண்டு பெரும் சில வாரம் முன் என்னோட கோப்பி குடிக்கும்போது வாழ்க்கை எவளவு அழகானது எண்டு கதைத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். மற்றவர்கள் அந்த மெழுகுதிரி வாசத்தில் அந்த ரெண்டு பேரின் நினைவுகளைப் பேசிக்கொண்டு தங்களுக்காக  மெழுகுதிரி ஏற்றி வைக்கும் நாளுக்காக மவுனமாகக் காத்திருப்பார்கள். 

                                                    இது வழமையா நடப்பதால் எனக்குச்  சாவு வெறுத்துப் போச்சு. யமன் பாசக் கயிறு எல்லாம் எறிஞ்சு என்னை பிடிச்சு இழுக்கத் தேவையில்லை நானே அதுக்குள்ளே விரும்பித் தலையைவிடத் தயாராக இருந்தேன். நானே நிறைய வாழ்வா அதில் சாவா  அல்லது சாவதுக்கு வாழ்வா எண்டு பார்க்க மதுபோதையின் விளிம்பு வரை போய் சித்திர குப்தனின் கணக்கு வழக்குமுடித்து  வைக்கும் வரவுப் பதிவு புத்தகத்தை தொட்டுப்பார்த்துப் போட்டுத் திரும்பி வந்துதான் அதில சிசிலியாவின் புண்ணியத்தில் வேலை கிடைத்து செய்தேன்.  

                                                        அந்த வேலை எனக்கு என்னோட பிரெண்ட் சிசிலியாதான் மினக்கெட்டு எடுத்து, தலையைப் போட்டுப் பிச்சு என்னை சிபார்சு செய்து ,அதில ஒரு வருடம் வேலை செய்ய வாய்ப்புத்  தந்தாள் . ஜெர்சிப் பசு  மாட்டில பால் கறந்து அதைக் காச்சி காராம்பசுவுக்குப் பருக்கிற  மாதிரி அலுப்பில்லாத வேலை. சில குறிப்பிட்ட உணவுகள், குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட கலோரி சக்கி உள்ளதாக சமைக்க வேண்டும், அங்கே சமையல் கொத்திப் பிரட்டி  ருசி இல்லாட்டியும் பரவாயில்லை ஆனால் அங்கே மெனு  எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள " சத்துணவுச்  சட்டப்படி " சமைக்க வேணும் ,சிம்பிளாச் சொன்னால் சிம்பிள் வேலை!

                                                                       மங்களேஸ்வரி இலங்கைத் தமிழ் பெண். யாழ்பாணத்தில செம்பாட்டு மண் உள்ள தோட்டக்காணிகள் உள்ள ஒரு இடதில பிறந்ததா சொன்னா, இடம் நினைவில்லை. நோர்வேயிட்கு என்பதுக்களின் ஆரம்பத்தில் போல்க்ஹைஸ் ஸ்கோல் என்ற நோர்வேகாரனின் குடிமக்கள் குடிசைக் கைத்தொழில் படிக்கும் பாடசாலைக்கு படிக்க வந்தவா, அதில படிச்சு,நோர்க்ஸ் மொழி படிச்சு , நடுத்தரப் பாடசாலையில் படிச்சு ,நோர்வே நெளிவு சுளிவு படிச்சு, யூனிவேர்சிட்டியில் சத்துணவு விஞ்ஞானத்தில் டிகிரி படிச்சு ,ஒஸ்லோ சுகாதார திணைக்களத்தில் வேலை செய்தா. அவளவு படிச்சதாலோ என்னவோ தெரியவில்லை  என்னைச்  செக் பண்ண வரும்போது கையோட ஆப்பு ரெண்டும் எடுத்துக்கொண்டு வந்தா.

                                                      தோற்றத்தில் குள்ளமாக என்னோட தோள் மூட்டுக்கு  நிக்கும் அவ்வாவோட நெற்றியில் ஒட்டி இருக்கும் சிவப்பு ஒட்டுப் பொட்டு. உடம்பு ஆட்டுக்கல்லுப் பிரமாணத்தில் ரெண்டு சுற்று ,அதிகம் நடந்தா மூச்சு காற்று கேட்டு வாங்கும். முகத்தில சந்தோசம் கலியாணம் கட்டின அடையாளம் , கடின உழைப்பால் ஜவ்வன ஜொலிப்பு கொஞ்சநாளில் விடை பெற்றுப் போன தடங்கள். படித்த நோர்வே பெண்கள் போல உடுப்பு. இலக்கண சுத்தமா  நோர்வே பாசை எழுதுவா, ஆனால் கதைக்கும் நோர்க்ஸ் மொழியில் இலக்கணம் இருக்கும் அதையும் மேவி மேற்படியான்  ஜெப்னா டமில்ஸ் இன் குறளிவித்தை இழுவையும்  இருக்கும், அது ஒரியினல் நோர்ஸ்கில் இல்லை. மற்றப்படி   சட்ட திட்டத்தில் மங்களேஸ்வரி கையில பிரம்பு இல்லாத கணக்கு டீச்சர். 
                                          

                                                      நான் அந்த இடத்தில வேலைக்கு சேர்ந்த முதல் மூன்று  மாதமும் பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று  ஒழுங்கா வேலை செய்தேன், பிறகு அந்த வேலை அலுப்படிக்கத் தொடங்க சுத்து மாத்து செய்யத் தொடங்கிட்டன். இப்பிடியே கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர் போல ஜோசிச்சுக்கொண்டிருந்தா வாழ்கையில் முன்னேற ஏலாது எண்டுதான் அதைத் தொடங்கினேன் . நாலு சுவருக்குள்ள நடந்த  அது எல்லாம் எப்படியோ மேலிடத்துக்கு தெரிய வந்துள்ளது. நாலு சுவர் தாண்டி யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியாது, சுவரில பல்லி இருந்தால் அதையாவது கேட்கலாம் அதுவும் நோர்வேயில் இல்லையே .

                                                                      நான் என்ன திருகுதாளம் செய்தேன் என்று உங்களுக்கு சேர்ச்சில் பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்கும்போது சொல்லுறதில ஒருவித மனப்பாரம் குறையும் எண்டு சொல்லுறாங்களே அதுபோல சொல்லுறேன். இல்லை முழங்காலில் இருந்துதான் சொல்ல வேண்டும் எண்டு சொன்னாலும் அப்படி இருந்தும் சொல்லுறேன். இதில வெட்கப்பட என்ன இருக்கு நான் செய்து முடிச்ச, முடிந்த விசியம் தானே . போகேக்கா  என்ன  அதையும் சேர்த்தா கொண்டு போகப்போறேன் இல்லையே, பிறகென்னதுக்கு பிடாரி அம்மன் கோவில் கிடாய் வெட்டுப்போல  மறைக்க வேண்டும்

                                                             எல்டர் சென்டரில் இன்ன இன்ன நாள் இன்ன இன்ன சாப்பாடுதான் செய்ய வேண்டும் என்று மெனு இருந்தது. நான் அதைத் திட்டமிட்டு அதிகம் கவனிப்பதில்லை. மெனுவில இல்லாத ,ஸ்ரீலங்கன் ,இண்டியன்,பாகிஸ்தானி, மெக்ஸ்சிகன், துருக்கி  சாப்பாடு எல்லாம் செய்வேன். வயதானவர்கள் அதன் பெயர் எல்லாம் கேட்டு ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். தலை வாழை இலையில பால்ப்பாயசம் ஊற்றி புறங்கையை  நக்கி வழிச்சு சாப்பிட்ட மாதிரி திருப்திகரமாக இருந்ததாலோ என்னவோ ஒரு நாளும் ஒரு குறையும் சொன்னதில்லை. 
                                        
                                            அவர்களே இந்தா அந்தா எண்டு இண்டைக்கோ நாளைக்கோ என்று  ஆணை விழுந்த அதர் அடியில ஆமடையன் பெண்டிலும் விழுந்த மாதிரி  சொல்லாமல் கொள்ளாமல் மேல போற ஆட்கள் தானே அதால அது அவர்களுக்கு அது போற வழிக்கு   ஒரு பெரிய பிரசினை இல்லை. பசித்த  வயிற்றுக்கு வயிறாற ஈஸ்ட்மென் கலரில் விருந்து படைத்தது மகிழ்ந்தேன் எண்டுதான் நான் நல்லகுருநாதன் போல நினைசுக்கொண்டிருந்தேன் . ஆனால் "  சத்துணவுச் சட்டப்படி " அதுவும்  பிழை   எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ் 

                                                      அந்த இடத்துக்கு சமைப்பதுக்கு வேற ஒரு பெரிய குசினி விநியோக மையத்தில் இருந்து ரெண்டு கிழமைக்கு ஒரு தடவை எல்லா உணவுப்பொருட்கள் ,சேர்மானங்கள் ,வேறு எல்லாக் குசினித் தேவைகளும் வரும் . முடிய முடிய முடிந்தவைகளின் லிஸ்ட் அனுப்ப மேலதிகமாகவும் வரும் . விலை அதிகமான மிகத் தரமான உணவுப்பொருட்கள் அவை என்பதுக்கு உத்தரவாதம் எப்பவுமே அதில இருக்கும். நோர்வே நாடு வயதான மக்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து சாவைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது போல இருக்கும் அவங்கள் அனுப்புற சாமான்களைப் பார்க்க, 

                                                     ஒவ்வொரு கிழமைக்கும் நாலு  சிகப்பு ,ரெண்டு வெள்ளை, என ஆறு வைன் போத்தல் ஒதுக்கப்பட்டிருக்கும். வைட் வைன் சோஸ்,ரெட் வைன் சோஸ் , ரெட் வைன் வேறு சில " பிரெஞ்ச்  ப்லேம்மே ஸ்டைல்  குசின் " எண்ட சமையலுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும். அதை முழுவதும் நான் சோஸ் செய்யப் பாவிப்பதில்லை, முக்கியமா " பிரெஞ்ச் ப்லேம்மேக்கு " ரெட் வைன்னுக்கு பதிலா வினாகிரியை உதறிவிட்டுபோட்டு, சோஸ் செய்யும் போது வாசத்துக்கு கொஞ்சம் மேலே தெளிச்சுப் போட்டு மிச்சப் போத்திலை கொஞ்சம் கொஞ்சமா குசினிக்க வைச்சே நான் உள்ளுக்க விட்டுருவேன் , அதுவும் " சத்துணவுச் சட்டப்படி " அது பிழை எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்  

                                                              வெறும் வயித்தில வைன் சரிச்சு விட்டுக்கொண்டு இருந்தா ஈரல் குலை எரிஞ்சு குடல் அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதால , அப்படி வைன் அடிக்கும்போது, குளிர்சாதனப்பெட்டியில் சமைக்க எண்டு வைச்சிருக்கும் விலையுயர்ந்த உருகுவே நாட்டு மேல் தோள்பட்டை மென்சவ்வு இறைச்சி எடுத்து மெல்லிய சூட்டில் வாட்டி அதுக்கு ,பச்சை மிளகாய் வெட்டிப் போட்டு " கேசெல்லோ பீப் சோஸ் " செய்து அதையும் சேர்த்துதான் சாப்பிடுவேன் ,நான் என்ன செய்ய  ஈரல் குலை அறுந்து விழும் எண்டு டாக்குத்தர்மார் சொல்லுறதாலதான் அப்படிச் செய்தேன். அதுவும் " சத்துணவுச் சட்டப்படி "  பிழையாம் எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்,

                                                  அந்த இடத்தில நான் வேண்டுமென்றே கலர் கலரா சமைப்பேன். அதில ஒண்டும் பெரிய டெக்னிக் இல்லை, வழமையான சாப்பாட்டில், கேக் அடிக்கும் போது  ஐசிங் சுகருக்கு போடுற " எடிபிள் கலரிங் " கிடந்தால் மாறி மாறி அதில ஒவ்வொரு நாளுக்கு ஒரு கலர் எண்டு அள்ளிப்போட்டு விடுறது. அந்த வயதானவர்கள் அவர்கள் வாழ் நாளில் அப்படி ஒரு சாப்பாட்டை கண்டே இருக்காத மாதிரி ஆச்சரியாமா அதன் பெயர் எல்லாம் கேட்பார்கள். நான் அந்த நேரம் வாய்க்குள்ள வந்து தவறிவிழும்   என்னவோ ஒரு பெயரைச்சொல்லிபோட்டுப் போவேன் .அவர்கள் மேல சொர்க்க வாயிலுக்கால  போற நேரம் எதை மறந்தார்களோ இல்லையோ என்னோட கலர்  கலரான சாப்பாடுகளை அந்த நேரமும் மறக்க மாட்டார்கள், ஆனால் அதுவும்  " சத்துணவுச் சட்டப்படி " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.   

                           நான் அந்த இடத்தில வேலை செய்த போது எப்பவுமே " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..." என்று ஒரு தமிழ் சினிமாப் பாட்டுப் பாடுவேன் . அதை சில நேரம் நான் எப்பவும் பாடுவதைக் கேட்ட அந்த வயதானவர்கள் சில நேரம் முதல் சில வரிகளைப் அவர்களும் சேர்ந்து பாடுவார்கள். மங்களேஸ்வரி சோதனைக்கு என்று வந்து நின்ற ரெண்டாவது நாளே அந்தப் பாட்டை படிக்க வேண்டாம் எண்டு சட்டம் போட்டா. அதைக் கேட்க தனக்கு அண்டம் குண்டமெல்லாம் பத்திக்கொண்டு வாற கோபம் வருகுது எண்டா  ,பிறகு " சத்துணவுச் சட்டப்படி  " அது பிழையாம்  எண்டு ரிப்போட் எழுதினா  மங்கல்ஸ்.

                                       மங்களேஸ்வரி ஒரு கிழமை தான் பரிசோதனை மேற்பார்வைக்கு வந்தா என்று சொன்னேன் எல்லா, வந்த முதல் நாளே என்னை அவாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் நட்பாகப் கதைத்தேன்,. அவா என்னோட திருகுதாளாங்கள் பற்றி கேட்ட கேள்விக்கு நான் பொறுப்பில்லாமல் பதில் சொல்ல உலக்கையால தூக்கி அடிக்கிற மாதிரி முழிஞ்சு பார்த்தா.  ஆனால் நான் மயிரை விட்டான் சிங்கன் என்று பயப்பிடாம உண்மையச் சொன்னேன். வேண்டா வெறுப்பா எல்லாம் செக் செய்தா, வயதானவர்களிடம் என்னைப்பற்றிக் கேட்டா, ஸ்டோக் என்ற இருப்பு எல்லாம் செக் செய்தா, லொக் புக்கில் போட்ட  மெனு  எல்லாம் செக் பண்ணினா. 

                                                  ரெண்டாம் நாளே ரிப்போட் எழுதத் தொடங்கிட்டா, ஆனால் ரெண்டாம் நாளே முக்கிய சூரன்போர் சண்டை தொடங்கி ,முதல்த் தலை கோவில்  வடக்கு வாசலில் விழுந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தது. மங்களேஸ்வரி வந்த முதல் நாள்,  என்னோட நட்பான வயதானவர்கள் அவா யார், என்ன பெயர், எண்டு விசாரித்தார்கள். நான் அவா பெயர் நோர்க்ஸ்குகள் சொல்ல நீண்ட பெயராக இருப்பதால் பகிடியாக சுருக்கி                      

                         " மங்கல்ஸ் " 
                                   
              என்றும் , இன்னும் ஒரு பகிடியாக அவாவின் வேலையை 
                      
                      " குசினிக்கு தொற்று நீக்கி மருந்து அடிக்க வந்திருக்கிறா  " 

                     என்று சொல்லிக் கதையைப் பரப்பி விட்டேன் . 

                                நோர்வேயில் கள்ளனைப் பிடிக்க வாற பொலிஸ்காரனே அவனுக்குக் ஹலோ சொல்லி, அவனின் பெயர் சொல்லி கையைக் குலுக்கிப் போட்டுத்தான் கையை மடக்கி விலங்கு போடுவான். மங்களேஸ்வரி வந்த நேரத்தில் இருந்து சம்பிரதாய நடைமுறை அறிமுக வந்தன வணக்கங்கள் ஒன்றுமே சொல்லவில்லை. அந்த அறிமுகத்தையும்  நான் விரும்பி எதிர்பார்க்கவுமில்லை, என் பெயர் மற்ற விபரங்கள் பதிவுகளில் இருக்கும் .  

                                                          மங்களேஸ் ரெண்டாம் நாள் காலை வந்து வயதானவர்களுடன் கதைத்த போது பதறிப் போட்டா, கொஞ்சம் என்னோட நுளம்புத்திரிப் பிரச்சாரம் வேலை செய்திருக்கு ,நேரே குசினிக்கு வந்தா 

                              " எனக்குப் பெயர் திருமதி மங்களேஸ்வரி.........,,  மங்களேஸ்வரி ,,ஹ்ம்ம் ,, கங்காள அம்மனின்  பெயர்  தெரியுமா அது  ,

                                "  ஹ்ம்ம்  அது  தெரியுது "

                                   "  நல்ல அழகான அம்மன்  பெயர் அப்பா அம்மா வைச்சது ,,நீ போய் கிழடுகளுக்கு என்னக்கு என்ன ஒரு புதுப் பெயர் சொல்லிக் கொடுத்து இருக்கிறாய் ,,"

                                  " சும்மா  சொன்னேன்  மங்கல்ஸ் "

                                  " என்ன  சும்மா  இனி மங்கல்ஸ்  எண்டி  எண்டா  வாயில  பளார்  எண்டு  போடுவேன்  தெரியுமா  " 

                                    " வாயில  போடாதையுங்க..முதுகில  பளார்  என்டு  போடுங்க..நாரி உளையுது  அதாவது  எடுபடும்  " 

                                  "   பாத்தியா  நீ  என்னை  ஒரு  மேலதிகாரி  என்று  கொஞ்சம்தன்னும்  மதிக்கிறாய்  இல்லையே ,,உனக்கு  வாயில  என்னடா  சீலம்பாயா  சுதிக்கிடக்குது "

                                      "  எனக்கு  வாய் சரி  இல்லை  மங்கல்ஸ் ,  பால்குடியா  பிறந்த  நேரத்தில  இருந்து இப்பிடித்தான்  கதைப்பேன் என்று  எனோட  அம்மாவே  சொல்லுவா "

                                     " இதுதானா இங்க வேலை உனக்கு,,இதுக்கா நோர்வே அரசாங்கம் சம்பளம் தருகுது உனக்கு ,,சொல்லு,,பதில்  சொல்லு,,"

                                  "  என்ன பெயர் சொன்னார்கள் அவர்கள் "

                                  " என்ன பெயரோ ,,அந்தக் கிழடுகள் மண், கல் எண்டு என்னவோ உளறுதுகள் ,,நீ என்ன பெயர் எனக்கு எண்டு சொன்னனி அதை,,சொல்லு,,எனக்குப்  பதில் சொல்லு,,பதில்  இப்ப வேணும் , இப்ப இதுக்கே சட்டப்படி  நடவடிக்கை எடுக்கலாம் தெரியுமா "

                                      " மங்கல்ஸ் எண்டு சொன்னேன்,,அது உங்களுக்கு இளமையா ,,அழகா இருந்தது,,எனக்கும் அந்தப் பெயர் பிரெண்ட்லியா இருக்கு,,அப்படி  நான் கூப்பிடவா  உங்களை "

                                   " ஒ ,,பெயர் வைக்கிறதில பெரிய காளமேகப் புலவர் போல, என்னை அப்படிக் கூப்பிட  வேண்டாம் , மேடம் எண்டு கூப்பிடு அல்லது மங்களேஸ்வரி என்று கூப்பிடு , இல்லாட்டி வாயைப் பொத்திக்கொண்டிரு,  உனக்குத் தெரியுமா நான் சட்டப்படி உன் மேலதிகாரி "

                                     "   தெரியும் மங்கல்ஸ் "

                                   " அய்யோ பேந்தும்பார்..இவளவு சொல்லியும் உனக்கு மண்டைக்க ஏறுதில்லையே ,,ஆண்டவா என்னைக் காப்பாற்று "    

                                "  உங்க பெயர் நீண்டதா இருக்கு  அதை சுருக்கி மங்கல்ஸ் எண்டு வைச்சேன் அதுக்கு என்னவோ குடியிருந்த குடிசை தீப்பற்றின மாதிரி  இந்தக் குதி குதிக்குரின்களே மங்கல்ஸ்   "

                                "  அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ் ,மங்கல்ஸ் எண்டு சாகிறியே,,என்னை மேடம் எண்டு சொல்லு ,,உனக்கு ஒண்டும் குறைஞ்சு போகாது ,,உன்னட்ட என்ன கிடக்கு குறைஞ்சு போக ,,இனி   மேடம் எண்டு கூப்பிடு    "

                                       " நான் தானே உங்களை குசினிக்க மட்டும் அப்படிக் கூப்பிடுறேன் , இதில என்ன பெரிய பிரசினை, வயதானவர்கள் வேற என்ன சொன்னார்கள்,,உங்க வேலை என்ன எண்டு கேட்டார்களா மங்கல்ஸ் " 

                                  " அய்யோ கடவுளே  பேந்தும்பார், மங்கல்ஸ் ,,மங்க்ல்ஸ்..கிழடுகள் அதொண்டும் சொல்லவில்லை,,மண் கல் எண்டுதுகள்,,சரி நீ சொல்லுற மாதிரி மங்கல்ஸ் எண்டு ஸ்டைல்ல சொன்னாலும் பரவாயில்லையே ,,அதெல்லே கொதி வரப்பண்ணுது "

                                      " சரி விடுங்க ,,சிரிச்சிட்டுப் போங்க " 

                                   " ஹலோ,,மிஸ்டர் .N.....  நான் இங்க சிரிக்க வரவில்லை,,நீ என்னக்கு  சிரிப்புக் காட்டுறதுக்கு நோர்வே அரசாங்கம் உனக்கு சம்பளம் தரவில்ல,,அதை நினைவில் கொள்ளு ,,உன் அணுகுமுறை இதெல்லாம் சட்டப்படி பிழை தெரியுமா " 

                               " தெரியும் மங்கல்ஸ் ,,ஏன் காலைக்  கெந்திக்  கெந்தி நடகுரிங்க "

                        "  காலில  பித்த வெடிப்பு  இருக்கு "

                                          "   அதுக்கு  ஆமனக்கு  எண்ணையில் கடுகு வெந்தயம் தாளிச்சுப் போட்டு அதைப் போட்டு  உருவி விட்டா  நல்லா  இருக்கும்  "

                                              "    நீ அதெல்லாம்  செய்வியா "

                                    "  நாட்டு வைத்தியம் கொஞ்சம் தெரியும்  மங்கல்ஸ் "

                                  "  இதே  சாட்டில பெண்டுகளின் கால் கையைத் தடவுற  பிளான்  போட்டு வைச்சு இருக்கிறாய்  போல  "                   

                                   " தாமரைப் பூவுக்கும்  தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே வந்ததில்லை, ...நாக்கில மூக்கையே தொட்டவன் நானடி ..."          

                                   "  ஹ்ம்ம்,,,இதென்ன  பாட்டு,,என்னை வைச்சு முசுப்பாத்தி போல,,,,நான் யார் தெரியுமா,,உனக்கு மேலதிகாரி,,,எனக்கே கொசப்பு பாட்டு பாடிக் காட்டுறாய் , அதுவும் எனக்கு முன்னாலேயே "

                                 " இல்லை,,இது ஒற்றுமையை வலியுறுத்தும் பாட்டு மங்கல்ஸ் "

                               " அய்யோ,,எனக்கு மண்டை வெடிக்குது, இனி மங்கல்ஸ் எண்டு சொன்னி எண்டால் ,,எனக்கு கோபம் வருமா எண்டு எனக்கே தெரியவில்லை,,ஆனால் கொஞ்சம் நல்லாத்தான் இருக்கு,,ஆனால் சிரிப்பன் எண்டு நினைக்காதை அது நடக்காது,,நான் உன்னோட மேலதிகாரி அதை நினைவில் வை     "

                                "  சரி ,,மங்கல்ஸ் "

                            " என்ன சரி ,,முதல் வாய்க்கு வாய் காட்டாதை, மேலதிகாரி சொல்லுறதைக் கேள், அது ஆம்பிளையோ,,பொம்பிளையோ  அது முக்கியமில்லை, ,நீயா நினைத்துக்கொண்டு எழுப்பம் விட்டு ஆடாதை  "             
                                    " இல்லை,,மங்கல்ஸ் ,இதில என்ன இருக்கு,நீங்க ஒரு கிழமைதானே இங்கே வேலை செய்து ரிப்போட் எழுதி கொடுக்கப் போறீங்க,,,அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்...மங்கல்ஸ் என்ற பெயர் ஒருகிழமை மட்டும் இருந்திட்டுப் போகட்டுமே " 

                               என்றேன். " அந்த ஒருகிழமையோடு நானும் நிட்ச்சயமா போயிருவேன்.."  இந்த வார்த்தையைக் கேட்ட போது மங்கல்ஸ் கொஞ்சம் இரக்கமா என்னைப் பார்த்தா.என்னதான் இருந்தாலும் அவா ஒரு தமிழ் பெண் தானே,கட்டாயம் இறுக்கம் இருந்தாலும் இரக்கமும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதனால் மங்கல்ஸ் பிறகு பெயர் பற்றி ஒண்டும் சொல்லவில்லை . 

                                      முதல்ச் சண்டை இப்படி மெல்லவே தொடங்கினாலும்  மூன்றாம் நாள் தான் வாழை வெட்டுப்போல முக்கிய சண்டை குசினிக்க தொடங்கியது .கதை வடக்கன் மாடுகளை அவிட்டு விட்ட மாதிரியான  திசை வளத்தில்  போறதால் ,மிச்சத்தைப் பாகம் ரெண்டிலும்,மூன்றிலும் எழுதி ஒரு முடிவு காணுறேன் ...  ஓகே யா ?
.
.

Ore Naal Unai Naan Acoustic Guitar Cover



திருமணம் முடித்து சில நாட்களில் கணவனைப் பிரிந்துவிட்ட ஒரு இளம்பெண்ணின் தவிப்பு ஒரேயொரு நாள் தன் மிக நெருங்கிய நண்பியின் காதலனுடன் விரகதாபமாகி ஏதேச்சையாக நடந்த உடலுறவில் அந்தப் பெண்ணின் வாழ்க்கை எப்படி திசைமாறி சீரழிகிறது என்பதை ஒரு சினிமாப் படமாக இல்லாமல் வாழ்க்கைப் பாடமாகத் திரையில் பதிந்துவிட்ட திரைப்படம் இயக்குனர் ஸ்ரீதர் திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய " இளமை ஊஞ்சல் ஆடுகிறது ".

.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பஹடி என்ற மலைகளின் ராணி என்று சொல்லப்படும் ஹிந்துஸ்தானி ராகத்தின் சுரங்கள் அதிகமுள்ள பாடல். டாக்டர் எஸ் பி பாலசுப்பிரமணியமும்,வாணி ஜெயராம் அம்மாவும் பாடிய ஒரு டுயட் காதல் ரொமாண்டிக் பாடல்.

.

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது ஒரு அமர்களமான இளமைக் கவிஞ்சர் வாலியின் காதல் வரிகள் உள்ள பாடல், நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன் கற்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம் மழை நீ, நிலம் நான் தயக்கமென்ன,,இதைவிட ஒரு கற்பனை யாருக்கு வரும்.

.

இந்தப் படத்தில் இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின், கதை இந்த நாலுபேரையுன் தான் சுற்றி கொஞ்சமும் விலகாமல் நடக்கும். இந்தப் படத்தில் உள்ள ஒரு முக்கிய விசியம் ஒரு ஹீரோ எப்பவுமே புக்கு புக்கு என்று சிகரெட் ஊதித்தள்ள மற்ற ஹீரோ எப்பவுமே சுவிங்கம் சாப்பிடுவார்,டைரக்டர் ஸ்ரீதர் அவரும் ஒரு செயின் சுமோக்கர் என்று சொல்லுறார்கள்.

.

இந்தப் பாடல் ரேடியோவில் ஒலிபரப்புவது போலத் தொடங்கும், " இளமை ஊஞ்சல் ஆடுகிறது படத்தில் கவிஞ்சர் வாலி எழுதிய பாடலுக்கு இசை இளையராஜா இசை என்று அந்தப் படத்திலேயே புதுமையாக அப்படி சேர்த்து வைத்தார் இயக்குனர் ஸ்ரீதர் .அதைவிட இந்தப்படம் ஒரு திரைப்படம் எப்படி எடுக்கவேண்டும் என்று பாடம் சொல்லிக்கொடுக்கும் படம்.

.

முக்கியமா இந்தக் கரோக்கி பிண்ணனி ஒரியினல் பாடல் போல முழுவதும் இல்லை. அதுக்குக் காரணம் ஒரிஜினல் பாடல் G Major என்ற ஸ்கேல்ல இருக்கு. இந்தக் கரோக்கி F#m என்ற ஸ்கேல்ல இருக்கு. வேற வழியில்லாமல் நண்பர் பிரிஸ்டோ அய்யர் பின்னணி இசை வாசித்த F#m ஸ்கேல் இல் வாசித்துள்ளேன். இப்படிக் குழப்பங்கள் நிறைய கரோக்கி பிண்ணணியில் பாடல் வாசிக்கும் போது ஏற்படும்.

.

அதனால் தாழ்மையுடன் சொல்லுகிறேன், இதை முழுவதும் ஒரிஜினல் பாடல் என்று நினைத்து யாரும் கிட்டாரில் வாசிக்கப் பழக வேண்டாம். ஒரு 80 வீதம் ஒரியினல் பாடல் போல இருக்கும். இன்றைய ஞாயிறு விடுமுறையில் ஓய்வாக வீட்டிலிருந்து கொண்டு காலைக் கையை இளமைக் காலத்தில் ஊஞ்சல் போல ஆட்டிக்கொண்டு கேட்கக் கொடுத்துவைத்தவர்கள் கேளுங்க.

.


Friday, 20 November 2015

சிசிலியா

கலாச்சாரத்துக்கும் அறிவியலுக்கும் எப்பவுமே ஒத்துப்போவதில்லை என்று தெரிந்தாலும் பல விசியங்களை வெளிப்படையாகப் பேச முடியாத வாழ்வியல் பின்னணியில் இருந்து வேறுபட்டு ,சுதந்திரமான கருத்துக்களை சொல்லவும், கேட்கவும் , கலந்துரையாடவும் முன்னேறிய நாடுகளில் எப்பவுமே சாத்தியங்கள் வாசல்களை அகலமாகத் திறந்து வைத்திருப்பது ஒரு அதிஸ்டம்.

                                      முக்கியமாக பெண்கள் , அவர்களின் உரிமைகள் பற்றி என்னைப் போன்ற ஒருவன் என்னைப்போலவே தமிழ்க் கலாச்சாரப் பிண்ணனி உள்ளவர்களுடன் பேசினால் விதண்டாவாதம் வந்து சிலநேரம் வெறும் வாயில் உளறி  அடி உதையும் அவல் போலக் கிடைக்கும். ஆனால் சிசிலியாவோடு கதைத்தபோது வேற மாதிரி ஆச்சரியங்கள் கிடைத்தது. 

                                         இந்த வருடம் கோடை வெய்யில் அளவுக்கு அதிகமாக ஒஸ்லோ நகரத்தை வெளிச்சமாக்கி ,வெப்ப நிலையை அதிகரித்து வைத்திருந்த ஒரு  வெள்ளிக்கிழமையன்று  சிசிலியா அவள் வேண்டிய புது வோசிங் மிஷினை நகர அங்காடியில் இருந்து ஏற்றி அவள் வீட்டில் பறிச்சு அதைப் பொருத்த  உதவி செய்வியா என்று போனில கேட்டாள்.

                             " ஏற்றிப்   பறிக்க முடியும்,,அதைப் பொருத்தும் தொழில்நுட்ப விசியங்கள் எனக்கு சுட்டுப் போட்டாலும் வராது சிசில் , அதெல்லாம் நீதான் செய்ய வேண்டும் ஓகேயா  "

                              "  ஹஹஹா அதென்ன பெரிய வேலையா, கட்லோக் இருக்கும், அதைப்     பார்த்து பொருத்தலாம்,,"

                                  " சரி  நீ சொல்லிதா சிசில்  நான் செய்து பார்கிறேன் "

                          " குழாய் எங்க பொருத்தமாய் ஓட்டுறது எண்டு எனக்கு நல்லா தெரியும் ,,"

                                  "     ஹஹஹாஹ, என்னடி உனக்கு இண்டைக்கு கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்குற மாதிரிப் பிசத்துறாய்  ,"

                                     " நீ சும்மா  பார்த்துக்கொண்டிரு நான் அதெல்லாம் செய்வேன் ,,என்ன வாரியா, சொன்கன் ப்ரிவில்லிக் சென்றாளில் வந்து நில்லு ,எனக்கு அங்கே ஒரு மீட்டிங் இருக்கு 

                          "   சரி  வா  சிசில் "

                               "   மீட்டிங்   முடிய , நான் கார்ல  ஏத்துறேன், அலனாபுருவுக்குப் போக வேண்டும்  "

                                "  சரி வா ,,அது  ஏத்தி இறக்கி பொருத்தி முடிய,,,பின் இரவு சொயிஸ் பப் இக்கு போகலாம்,,மார்டினும்  ,ஆமுண்டும் ,ஜோன் எரிக்கும் இன்று வாறதா சொன்னார்கள் ,,நீயும் வருவியா சிசில் "


                                சிசிலியா என்ற சிசில் என்னோட பிரெண்ட். பிரெண்ட் என்றால் பிரெண்ட். வில்லங்கமா வேற ஒன்றுமில்லை. நிரந்தரமா இன்னும் யாரையும் கலியாணம் கட்டவில்லை.  என்னை விட எட்டு வயசு குறைந்தவள். நேர்ல பார்க்க என்னைவிட பதினைந்து வயது குறைந்தவள் போல இருப்பாள்.  குதிரைச்சவாரி செய்வாள், பணக்காரி , திருப்பி தாறதா ஒரு நாள் சொல்லி அவசரத்துக்கு கேட்டால் உடன காசு தருவாள். தந்திட்டு சொன்ன நாளுக்கு மறக்காமல் போன் அடிச்சு " வையடா காசை  " என்று அந்தக் காசைக் கேட்பாள் 

                                    என்னோட நோர்வே நாட்டு நண்பர்களில் ஒரே ஒரு பெண் நண்பி.  ஒஸ்லோவிலும் அவள் வில்லா என்ற  தனி வீட்டில் கீழே வசித்தாள். அதன் மேல்வீட்டை வாடைக்கு விட்டிருந்தாள் . மத்திய நோர்வேயில் உள்ள மிக மிக அழகான வால்ரஸ் என்ற இடத்தில பெருங்குடியில் பிறந்தவள். அதனாலதானோ தெரியவில்லை மிக அழகா, உயரமா இருப்பாள். ட்ரோன்ஹேய்ம்  யூனிவேர்சிட்டியில் படித்தவள். அதிகம் பேச மாட்டாள்,நிறையச் சிரிப்பாள் . முக்கியமா நிறைய விசியம் தெரியும், சுருக்கமாக சொன்னால் " இளமை இன்டர்நெட்  "
                               
                                        வயதானவர்களுக்கு வயதானதை மறக்கவைக்கும் பல நிகழ்வுகளை அன்றாடம் நிகழ்த்திக்காட்டும் அந்த  இடத்துக்கு சிசிலியாவுக்காகப்   போய்க் காத்திருந்தேன் . இன்னும் இளமையாக இருக்கும் எனக்கும் , என்னை விட அரைவாசி இளமையாக இருக்கும் சிசிலியாவுக்கும் எந்த விதத்திலும் அந்த இடம் சம்பந்தமில்லை. ஆனால்  சிசிலியா அந்த மாதிரியான சமூக நிறுவனத்திற்க்கு காசு ஒதுக்கும்ஒஸ்லோ நகரசபையில் அதன் தலைமை அலுவலகத்தில் எக்கொனொமிஸ்ட் ஆக  வேலை செய்கிறாள். என்னை சந்திக்க மட்டுமே அந்த இடத்துக்கு வரச்சொல்லி இருந்தாள்.

                                      அங்கே போய் ஒரு சவுகரியமான சோபாவில் வெளியே ஜன்னலுக்கால மழை பெய்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிசிலியா ஏற்கனவே வந்து அந்த பெரிய அறையின் தொங்கலில் இருந்த இன்னுமொரு பெரிய அறையில் மீட்டிங் வைச்சுக்கொண்டு இருந்தாள். அது முடிய என்னை வந்து சந்திப்பதாக சொன்னாள். அதால அந்த அறையில் இருந்த புத்தக அலுமாரியில் இருந்த புத்தகங்களின் தலைப்பை மேய்ந்து கொண்டு இருந்தேன். ஒரு நோர்வே மொழிப் புத்தகம் மிகவும் இளமையாக " இளம்பெண்ணே உனக்கு " என்ற ஒரு தலைப்பில் அழகா இளம் " டீன் ஏச் " பெண்களின் படம் போட்டு இருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து கொஞ்சம் வாசித்தேன்.

                                                அந்தப் புத்தகம் இளம் பெண் பிள்ளைகள் வயதுக்கு வரும் போது ஏற்படும் உடலியல் மாறுபாடுகள், மனவியல் வேறுபாடுகள், அவை சம்பந்தமான சந்தேகக்  கேள்விகள் , அவற்றுக்கு நம்பிக்கை தரும் பதில்கள், பெண்ணியல் பற்றிய நிறைய விஞ்ஞான தகவல்கள் என்று சுவாரசியமாக இருந்தது அந்தப் புத்தகம்.  இளம்  பெண்களின் ஒவ்வொரு பருவ நிகழ்வும் அழகாக படம் போட்டு விளக்கி இருந்தார்கள்.

                                                          அதை வாசித்தபோது உண்மையாகவே என்னோட மரமண்டை மூளையில் எவளவோ விசியங்கள் அன்றுதான் ஆச்சரியமாக மணி அடித்தது. முக்கியமா ஒரு பெண்ணின் கருமுட்டை  வெறும் ஐந்தரை மணித்தியாலங்கள் தான் உயிர்ப்புடன் கருப்பை வாசலில் காத்திருக்கும் என்றும், ஒரு ஆணின் விந்து ரெண்டரை நாட்கள் வரை உயிர்ப்புடன் உள்செலுத்தப்பட்ட பின் இருக்கும் என்றும் போட்டிருந்தார்கள். அதனோடு சேர்ந்த பல விசியங்களை " சயண்டிபிக் அப்புரோச்சில் " அழகாக,எளிமையாக எழுதி இருந்தார்கள்.

                                                       அதே புத்தகத்தில் ஒரு சின்னக் காட்டூன் படம் போட்டிருந்தார்கள்.ஒரு  டீன்ஏச்  இளம் ஆண் பிள்ளையும், ஒரு பெண் பிள்ளையும் ஒரே கட்டிலில் படுத்து இருப்பார்கள். ஆனால் அந்தக் கட்டில் " அப்பர் டெக் " என்ற ரெண்டு தட்டுக் கட்டில் ,பொடியன் மேலேயும், அந்தப் பெண் பிள்ளை கீழேயும் படுத்திருந்து ஜோசிக்கிரார்கள்,பொடியன் ஜோசிக்கிறான்  " இவளுக்கு மேலே படுத்து இருப்பாதால்  இவள் கர்ப்பம் ஆகிவிடுவாளா " என்றும் அந்தப் பெண் பிள்ளை " இவனுக்கு கீழே படுத்து இருப்பதால் இவன் என்னைக் கர்ப்பம் ஆக்கி விடுவானோ " என்றும் ஜோசிக்கிறாள் .

                                                  இளையவர்களின் ஆதராமான சந்தேகத்தை  எளிமையாக விளக்க அப்படி ஒரு காட்டூன் வடிவில் கொஞ்சம் ஜோக் ஆகப் போட்டு இருந்தது, அதைப் பார்த்து சிரித்துக்கொண்டு அந்தப் புத்தகத்தை மூடி வைக்க முன்னுக்கு சிசிலியா நின்றாள்

                                     " இப்ப என்னத்துக்கு இந்தப் புத்தகத்தைப் பார்த்து சிரிச்சனி,என்ன எழுதி இருக்கு,,எனக்கும் சொல்லு நானும் சிரிக்கிறேன் "

                                        என்றாள் , நான் அந்தப் பக்கத்தைக் காட்டினேன்,ஹஹஹஹா எண்டு சிரிச்சாள், பிறகு அநதப் புத்தகத் தலைப்பை பார்த்தாள், வேற பக்கம்களையும் புரட்டிப் பார்த்தாள்,பார்த்திட்டு

                                  " ஒ இந்தப் புத்தகமா  இவளவு நேரமும் இண்டரஸ்ட் ஆக வாசித்துக்கொண்டு இருந்தாய் ,,"

                              "ஹ்ம்ம்  " 

                                 "  என்ன படிச்சுப் புரிந்து கொண்டாய்,,நல்ல விசியம் என்னவும் இருந்தா எனக்கும் சொல்லேன் "

                                     "   சயன்ஸ்  தான்  எழுதி இருந்தாங்க ,," 

                                    "  .உன்னோட வாயல லேடிஸ் ஒன்லி மாட்டார் கேட்க்க சுவாரசியமா இருக்கும் ,,சொல்லு "

                                 " ஹ்ம்ம், ஒரு பெண்குழந்தை  வயதுக்கு வரும் போது உடலியியலில் நடக்கும் மாற்றங்களை அழகாக எழுதி இருக்கிறார்கள், எங்களின் நாட்டில் இப்படியெல்லாம் வெளிப்படையாக இதை பேசவோ,எழுதவோ மாட்டார்கள்..  "

                              "    ஒ உங்கள் நாட்டிலும்   பெண்குழந்தைகள்   வயதுக்கு வருவார்கள் தானே ,,அதில  என்ன குழப்பம்,, சரி வா, காருக்குள்ள இருந்து கதைத்து கதைத்து கடைக்குப் போவோம் "

                                  என்றாள். காருக்க ஏறி பெல்ட் போட்டு, போட்டிருந்த எப் எம் ரேடியோவை ஆப் செய்து போட்டு , லிப்ஸ்டிக் எடுத்து சொண்டில ரெண்டு இழுவை இழுத்துப்போட்டு,டாஸ் போட் கண்ணாடியில் பார்த்து தலைமயிரை ஸ்டைலா முன்னுக்கு இழுத்து விட்டுப் போட்டு , ஜி பி எஸ் நேவிக்கேசனில் அலனா புறு  எண்டு அடிச்சுப்போட்டு ,காரை ஸ்டார்ட் செய்து, ரிவேஸ் எடுத்து , ஒஸ்லோவுக்கு போகும்  கொஞ்சம் நேரான வேகப் பாதையில் இறக்கினவுடன சிசிலியா கதையைத் தொடக்கினாள்.

                                 " சொல்லு,உங்கள் நாட்டில் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தால் என்ன செய்வார்கள்,,ஒரு ஸ்ரீலங்கன் தமிழ் குடும்பம் அதுக்கு ஒரு விழா எடுத்ததை இங்கே ஒஸ்லோவில் ஒரு அல்பத்தில் படங்கள் பார்த்தேன் "

                                      " ஹ்ம்ம்,,அப்படிதான் இரவல்  சீலையை நம்பி இடுப்புக் கந்தையைக் கழட்டி  எறிந்த மாதிரி செய்வார்கள் .

                                      " என்ன ஒரு சோடனை,,ஹ்ம்ம்,,சும்மா  பாபிலோனியன் தொங்கு பூங்கா போல சோடிச்சு ,,யப்பா,,பார்க்கவே  அழகு ..,உண்மையா என்னதான் செய்விங்க "

                                " யெஸ்,,அதைதான் சாமத்திய வீடு எண்டு எங்கள் பக்கத்து மனிதர்கள் சொல்லுவார்கள் ,, "

                               " சரி அதை ஏன் செய்கிறார்கள்,,பெண்பிள்ளைகள் வயதுக்கு வருவது ஒன்றும் உலக அதிசயம் இல்லையே,,இயல்பா உடம்பில நடக்கும் பயோலோயிகள் ,அனோடோமிகள் மாற்றம் தானே ,,"

                              " அதுதான் எங்களுக்கு கொண்டாட்டம்,,எங்கள் கலாசாரத்தில் பெண்களை கொண்டாடுவது ஒரு சம்பிரதாயம்,,அதைவிட  வருடத்தில் குறைந்தது அஞ்சு கொண்டாட்டம் நடக்கும்,,அதில பெண் பிள்ளைகள் உள்ள வீட்டில் இதுவும் ஒரு கொண்டாட்டம் "

                             "  ஒ ஆனால் நிறைய மனிதர்கள் வருவார்களே, எங்க இருந்தப்பா இவளவு ஆட்கள் வாறாங்க,,பெரிய முயூசிக் கொன்சேர்ட்டுக்கு வாற மாதிரி  "
                              
                                " அது உண்மைதான் நெருங்கிய உறவினர், நண்பர்கள் இப்படிக் கொண்டாடங்களில் தான் ஒன்று சேர்வார்கள், அதுகள்  குடும்பங்களின் நெருக்கத்தை அதிகரிக்கும் ஒரு சம்பவம்,,உங்களுக்கு  கிறிஸ்மஸ் போல "

                                " ஒரு வருடத்தில் ஒரே ஒருமுறைதானே கிறிஸ்மஸ் வருகுது எங்களுக்கு,,சரி அந்த சாமத்திய வீட்டில் என்ன ஸ்பெசல் ஆக அந்தப் பெண்ணுக்கு செய்வார்கள் "

                                    " தலைக்கு தண்ணி வார்ப்பார்கள் "

                                     " என்னது தலையில குளிக்கிறதா,,,அதுக்கு என்னத்துக்கு இவ்வளவு ஆட்கள்,,இவளவு  சோடனை,,கொண்டாட்டம் "

                           " ஹ்ம்ம்,,அடிப்படையில் அதுதான் , அறுகம் புல்லைப் புடுங்கி  பாலில போட்டு, அந்தப் பாலை பூசுமஞ்சள் தடவிய தலையில ஊற்றி தலைக்கு தண்ணி ஊற்றிக் குளிக்க வார்ப்பார்கள்.."

                          " அதென்ன  அறுகம் புல் ,,ஹெர்பல் சாம்பூவில் கலந்திருக்குமே ஆலோவீரா  என்ற ஹெர்பல் அதுவா ,,பூசு மஞ்சள் ,அதென்னப்  பா ,,ஒருவகை சம்பூ  அல்லது பொடி லோஷனா ,,"

                             "  இல்லைப்பா அருகம்புல் அது  இங்கே இல்லை,,பால் அதுதான் கவ் மில்க்,,பூசு மஞ்சள் அதுதான் சமையலுக்குப்  பாவிக்கும்  டெர்மரிக்  "

                             " ஹ்ம்ம் ,,பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டி என்ன குற்றமா,,அல்லது  அந்தப் பெண்ணுக்கு அதுக்குப் பிறகு ஒழுங்கா மாதவிடாய் வராதா,,,,"

                                 " அதெல்லாம் வரும்,அல்லது முத்திப் பிந்தி வந்தாலும் வர வேண்டியது எல்லாம் வரும் அது பிரச்சினை இல்லை ,,இதெல்லாம் ஒரு சம்பிரதாயம்,,ஆனால் மஞ்சள் அது இயற்கையான கிருமி நாசினி  அது வைச்சுக் குளிச்சா யாருக்குமே நல்லதுதான் "

                              " ஹ்ம்ம்,,வேற  என்ன செய்வார்கள்,,அந்தப் பெண்ணை தேவதை போல அலங்கரித்து மேடை போல ஒண்டில சாமி போல வைச்சு பூசை செய்வார்களா "

                              "  ஹஹஹஹா அது பூசை இல்லை,,ஒரு வித ஆராதனை,,ஆராத்தி எண்டு சொல்லுவார்கள்,,எங்கள் நம்பிக்கைப்படி ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைச்சுதான் அந்தப் பெண்ணின் எதிர்கால  ருது திருமண  சாதக பலனே கணிப்பார்கள்,,,"

                           "  அப்படியா ,,என்னடா சொல்லுறாய் "

                                        "   அதன் அடிப்படையில்தான் அநதப் பெண்ணின் திருமணம் அமையும்,, அவர்களின் கலியான பேச்சு ஆரம்பமே சாமத்திய வீட்டில் இருந்து தொடங்கலாம் "

                                 "   ஒ ,,அப்படியா,,,இண்டரஸ்டிங் ,,ஒ கலியாணம் தொடங்குமா,,வாவ் எவளவு நல்லா இருக்கு கேட்கவே "

                    "அது ஒரு நல்ல ஆரோக்கியமான சடங்கு,,வயதுக்கு வந்த பெண்ணின் உடல்நலத்தை  முன்னிறுத்தி பல விசியங்கள் செய்வார்கள் " 
                                            
                                                 " ஆனாலும் அந்தப் பெண்ணின் சோடனையப் பார்க்க எனக்கே கால் ரெண்டும் குறுகுறுக்குது, எனக்கு அப்படி யாருமே செய்யவில்லையே  என்று, நான் ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் "

                          " கிழிஞ்சுது,,நீ அங்கே பிறந்திருந்தால்,,அங்கே இருந்து  கொண்டு அய்யோ நான் ஒரு நோர்ஸ்கியாப் பிறக்கலையே என்று ஏங்குவாய் "

                          " இல்லை,,எனக்கும் அங்கே சாமத்திய வீடு நடந்து இருக்குமெல்லா,,அழகா சோடிச்சு என்னையே எல்லாரும் கவனித்துப் பார்க்கிற மாதிரி ஒரு நாள் கிடைக்குமென்றால் எவளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா, ஒரு பெண்ணாக இருந்து அதை உணர்ந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் "
                           
                              "உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே  பலர் தங்களைப்   கவனித்துப் பார்க்க வேண்டும் என்கிற மாதிரித்  தானே சோடிச்சுக்கொண்டு திரிகிறார்கள் ,பிறகென்ன அதுக்கெண்டு ஒரு ஸ்பெஷல் நாள்  "

                                              இந்த இடத்தில இதையும் சொல்லத்தான் வேண்டும். உலகம் முழுவதும் பெண்கள் தங்கள் அழகை ஒருகணம் யாராவது உற்றுப்பார்க்க வேண்டும் என்ற அவாவில் தானே இயங்குகிறார்கள். கோடிக்கணக்கான டாலர் பிரளும் அழகுசாதன, முகப் பவுடர், அழகு சோடனைப் பொருட்கள் விற்பனை நடப்பதே பெண்களுக்குப் பின்னே உள்ள அந்த சைக்கோலோயியை அடிப்படையில் வைத்துக்கொண்டு தானே . இந்த முகப்பவுடரில் ஏமாந்து வாழ்கையை முழுதாகத் தொலைத்த ஸ்ரீராமன்கள் நிறையப்பேர் இருக்கிறார்களே.

                                  "  சரி ,,இப்ப நீ என்னத்துக்கு அதிகம் கலவரம் ஆகுறாய், சாமத்திய வீடு தமிழரின்  எளிமையான  கொண்டாட்டமாக இருந்தது , இப்ப சில தமிழ் வீடுகளில் ஆடம்பரமும், தங்களின் பணக்காரத்தனத்தை காட்டவும் வெளிக்கிட்டு   திண்டாட்டமும்  ஆகிவிட்டது சிசிலி "

                              " எனக்கும் ,பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்க வார்த்து  இருந்தா,,நல்ல கலியாணம்  கிடைத்து இருக்கும் போல,,,அதுகள்  வைச்சு தலை முழுக்காட்டாததால் தான்,,ரெண்டு தரம்  போய் பிரண்ட் பிடிச்சும்,,ரெண்டு பேரும் ஆறு மாதத்தில ஓடிட்டாங்கள் போல  " 

                                     " ஹஹஹா சிசிலி நீ என்ன ஒரு லொயிக் இல்லாமல் குழந்தைப் பிள்ளைகள் போல ஜோசிக்கிறாய் ,அல்லது என்னோட காலை வாருரியா "

                                      " இல்லை ,,நான் உண்மையத்தான் சொல்லுறேன்,,நான் ஒரு கலாச்சாரா அடையாளம் இல்லாத வெறுமையில் வாழ்வது என்னோட எண்ணங்களைப் பாதிக்குது,,அதன் பாதிப்பு என் நடத்தையில் எதிரொலிக்கலாம் " 

                                   " யப்பா சாமி  நான் தெரியாம உனக்கு எல்லாம் சொல்லிபோட்டேன் ,,உன்னோட  போய் பிரண்ட்ஸ் ஓடிப்போனதுக்கு  பால் அறுகு பூசுமஞ்சள் காரணமில்லை "

                              "என்னடா சொல்லுறாய் , எனக்கு என்ன குறைச்சல் சொல்லு ,எனக்கு நீ சொல்லும் விளக்கம் கேட்கக்  கவலையா இருக்கு  " 

                                        "  அதுக்குக் காரணம்  உன்னோட அணுகுமுறை . உன் வாழ்க்கை முறையில் உறவு என்பதை நீ எப்படி நடைமுறையில் கடைப்பிடிப்பது என்பதில் தங்கி உள்ளது # 

                             "நீ  எப்பவும்  என்னோட அன்பா கதைக்கமாட்டாய்,,என்னை ஏண்டா  திட்டுறாய்,, எப்பப்  பார்  இப்பிடியே கதைக்கிறாய் ,, எனக்கு அழுகை வருகுது தெரியுமாடா   "

                                 " உனக்கு ஒண்டும் குறைச்சல்  இல்ல இப்பவே தேவதை போலதானே இருக்கிறாய்.."

                              " ஹ்ம்ம்,,உண்மையாவா சொல்லுறாய், நான் அதிகம் கதைகிறேனா ,"

                                " ஹஹஹாஹ்,,சினிமாவில் கவர்ச்சி நடிகை அதிகம் கதைத்தால் யாரும் ரசிக்கமாட்டார்கள், ,அவள் சும்மா உடல் மொழியால் பேச வேண்டும் எல்லாரும் ரசிப்பார்கள் "

                                " என்னது என்னைப்பார்த்தால் கவர்ச்சி நடிகை போலவா இருக்கு,,இப்ப அலனா புரு  போறதுக்கு இடையிலேயே என்னட்ட அடி வேண்டிச் சாகப்போறாய் "

                            "  ஆமாடி மோட்டுக் கழுதை, சிசிலி  ,நீயே நேற்றுதான் சாமத்தியப்பட்ட மாதிரி மினுக்கு மினுக்கு எண்டு மினுக்கிக் கொண்டு அணில் பாயும்  செவ் இளனிக் குரும்பை , மாலையில் மொட்டு விட்ட மல்லிகை போல இருகிறாய் " 

                           "   ஹ்ம்ம்,,,உண்மையாவா சொல்லுறாய்,,உண்மையாவா சொல்லுறாய் "

                               "  ஆமாடி,,மோட்டுக் கழுதை உண்மையாதான் சொல்லுறேன் சிசிலி, நீ  நாயுண்ணி மலர்களுக்கு நடுவில்  நாகதேவன்துறை  செம்மங் குண்டில  செளிர்த்து வளர்ந்த செந்தாமரை போலவே இருகிறாய்  "

                             அந்த உரையாடல் முடியும் போது அலனாபுறுக்கு வந்திட்டம், முன் இருட்டு இருட்டி விட்டது, சிசிலியா காரைப் பார்க் பண்ணிப்போட்டு ,இறங்கி உள்ளுக்குப் போய் கொஞ்ச நேரத்தில் கையில பேப்பர்களோடு வந்தாள், காரைப் பின்னுக்கு விநியோகிக்கும் வாசலுக்கு கொண்டுபோய் டிக்கிய திறத்து அதில வோசிங் மிசினை ஏற்றி முழுவதும் உள்ளே தள்ள இடமில்லாமல் பின் கதவை அரைவாசி மூடி பெல்ட் போட்டுக் கட்டி மெல்ல மெல்ல ஓடிக்கொண்டு வந்தோம். அவள் வீட்டுக்குப் போற வழி முழுவதும் ஒன்றும் பேசவில்ல,எப் எம் ரேடியோவைப் போட்டுடுத் தனக்குள்ள சிரிச்சுக்கொண்டு வந்தாள்   ,

                                                   வோசிங் மிஷினை அவளோட வீட்டில கொண்டு வந்து இறக்கி வைச்சு முடிய, சிசிலியா வந்து உடனையே பைப் லைன் எல்லாம் இழுத்துப்போட்டு பொருத்துவாள் என்று நினைக்க ,அவள் சம்பெயின் வைட் வைன்  போத்தலும் ரெண்டு சம்பையின் கிளாசும் எடுத்துக்கொண்டு வந்து மேசையில் வைச்சாள், மேலுடுப்பைக் கழட்டிபோட்டு ரெண்டு நூலில தொங்க விட்ட மாதிரி  ஒரு சின்ன ஸ்போர்ட்ஸ் பெனியன் போட்டிருந்தாள்.  

                            " சிசிலி,,,என்னாச்சு ,,நீ இப்ப பைப் லைன் எல்லாம் கொழுவவில்லையா , நீதானே அது செய்யுறது எண்டு சொன்னாய் ,அதையும் என்னையே  செய்யச்சொல்லி  வேலை காட்டப்போறியா  .."

                           "  இல்லை,  நீ  ஏன் கிடந்தது பதறுகிறாய் ,,நீயே  கொழுவு,,கட்லோக்கைப் பார்த்துக் கொழுவு,கஷ்டம் இல்லை,,மூண்டு விதமான பைப் லைன் தான் வரும்,நீ பிடிப்பாய்,,ஒரு ஆம்பிளை வியர்க்க வியர்க்க வேலை செய்யுறது பார்க்க ஆசையா இருக்கும் ,,அவங்கள் தான் மச்சோ ஆண்மை உள்ள ஆம்பிளைகள் .. "

                              " அடிடா சக்கை எண்டானாம் , சரி ,,நான்  கொழுவிப் பார்கேறேன்,,நீ என்ன இப்பவே வைன் போதில்லை திறக்கிறாய்,,இரவு சொயிஸ் பப் போற பிளான் இல்லையே "

                               " ஹ்ம்ம்,,அங்கேயும் பிறகு போவோம்,,இன்றைக்கு என்னவோ ரொமண்டிக் மூட் ஆக இருக்கு,, வெளிய வெயில் சூடு,,ஹ்ம்ம்,,உள்ளுக்கும் எல்லாம் சூடாக் கொதிக்குது ,,ஹஹஹாஹ் ,,என்ன ஜோசிகுறாய்,,வீட்டுக்கு உள்ளே என்றேன் " 

                                            என்று சொல்லி ஜன்னல் எல்லாத்தையும் திறந்துவிட்டாள்,நான் கட்லோக்கை பார்த்து ஒரு மாதிரி எல்லா பைப் லைன்னும் கொழுவிப் போட்டு, சுடுதண்ணி, பச்சைத் தண்ணி , ரெண்டையும் திறந்து போட்டு  முதல் முதல் மிசினைப் போட்டேன்.அது பூனை புறுபுறுத்த மாதிரி மெல்லிய சத்தத்துடன்  சுற்றத் தொடங்க, சிசிலியா வந்து பார்த்தாள். கையில கொண்டு வந்த ஒரு சம்பெயின் வைன் கிளாசைத் தந்து தன்னோட வைன் கிளாசுடன் முட்டி மோதி

                   " சியேர்ர்ர்ர்ர்ர்ஸ்  ஒரு கிளாஸ் குடிச்சிட்டு சாப்பிடப் போறியா "

                                                 என்று கேட்டாள், எனக்கு வேண்டாம் என்றேன், அவள் என்னமோ மைக்கிரோ அவனில சூடாக்கி சாப்பிட்டாள் ,எனக்கு ஒரு கிளாஸ் வையின் வாயில வைச்சா பிறகு சாப்பிடமாட்டேன்,,பிறகு தண்ணி தண்ணியா உள்ளுக்கு விட்டாத்தான் தாகசாந்தி தீரும். ஆனால் வைன் என்னோட விருப்ப லிஸ்டில்  இல்லை, அதனால  அந்த ஒரு கிளாஸ் வைன் கிளாசை வைச்சு சூப்பிக்கொண்டு அவளோட மூன்று பூனைகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிசிலியா குளிக்கப் போறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு துவாயைக் கட்டிக்கொண்டு வந்தாள், 

                               " இப்ப நீ இண்டைக்கு சொன்ன பால் அறுகு மஞ்சள் வைச்சு தலையில குளிச்சா எப்படி இருக்கும் ,,ஹஹஹஹா,,இன்றைக்கு இரவு ருது கலியாணம் என்னவும் நடக்க சான்ஸ் கிடைக்குமா ...ஹஹஹஹா...சொல்லு நீ தானே சாத்திரம் எல்லாம் நல்லா சொல்லுறாய் .."

                               "  இப்ப    பால் அறுகு மஞ்சள் வைச்சு தலையில குளிச்சுப்போட்டு வெளிய போனால் கலியாணம் கிடைக்காது,,,உனக்கு சன்னிதான் பிடிக்கும் ,,போடி போய் முதல் குளியடி,,வைன் வாயில மணந்தால் சொயிஸ் பப்புக்கு உள்ள விடமாட்டான் "

                                  "  ஹ்ம்ம்,,பாத் ரூம் கதைவைத் திறந்து போட்டு குளிக்கவா ,,உனக்கு ஒண்டும் ஆட்சேபனை இல்லைதானே "

                                 " உன்னோட வீட்டில நீ என்னத்தை வேண்டுமெண்டாலும் திறந்துபோட்டுக் குளி. எனக்கு ஒரு மண்ணும் இல்லை.ஹஹஹஹஹஹா"

                            " இப்ப என்னத்துக்கு இப்பிடி அலாவுதீன் அற்புத விளக்குக்  கண்டு பிடிச்ச மாதிரி  சிரிக்கிறாய்,,சொல்லு "

                            " கதைவை மூடிக்கொண்டு குளியடி,,உன்னோட பூனைகள் என்னத்தையும் பார்த்து மிரளப் போகுதுகள் "

                              " ஹிஹிஹிஹிஹிஹி,,அதுகளுக்கு எல்லாம் நல்ல பழக்கம்,,,,நீ மிரளாமல் இரு ..அது  போதும்..பிறகு  நான் அம்புலன்சுக்கு அடிக்க ஏலாது "

                                       நான் ஹோல் சோபாவில் மடிஞ்சு இருந்துகொண்டு டெலிவிசனில் " ஜக்தன் போ சார்லிகெட் " என்ற  " விவசாயி காதலியத் தேடுறான் " என்ற நோர்வே நாட்டு நாட்டுப்புற விவசாயி கண்ணாபிண்ணா எண்டு காதல் தேடும்  நிகழ்ச்சி பார்த்துக்கொண்டு இருந்தேன். கொள்கையைத் தளர்த்தி  வாயில நனைச்சதால இனி எல்லாம் ஒண்டுதான் என்று  வைன் போதில்லை சரிச்சு உள்ளுக்க விட்டுக் கொண்டிருந்தேன். 

                               சிசிலியா குளிச்சு முடிச்சு நடு  உடம்பை மட்டும் மறைக்கும் குறுக்குக் கட்டில  துவாயைக் கட்டிக்கொண்டு  பாத்ரூம்  கதவில எட்டிப் பார்த்தாள் , அதுக்குப்பிறகும்  ஒரு மணித்தியாலம் சோடினை போட்டு வெளிய வந்தாள்.துவாயைக் கட்டிக்கொண்டு ஹை ஹீல்ஸ் போட்டு ஒரு மாதிரி வில்லங்கமா சொண்டைக் கடிச்சாள் . நான்   மேலே இருந்து கீழே போட்டிருந்த ஹை ஹீல்ஸ் வரைக்கும் ரெண்டுதரம் ஆச்சரியாமா பார்த்தேன் .அவள் அழகு அப்படி சுண்டியிழுக்கும் அழகு 

                                தலை மயிரை மர்லின்மன்றோ போல நடுவகிடில் பரப்பி ரெண்டு பக்கமும் பொப் பிடிச்சு இருந்தாள். கண் இமைக்கு போட்ட மஸ்கார இஸ்தான்புல்லுக்கு வரச்சொல்லி அழைப்பு விட்டது, சொண்டில லிப்ஸ்டிக்  கலீல் ஜிப்ரானின் காதல் கவிதையில் தோச்சு எடுத்த மாதிரி இருக்க, ஐய் ப்ரோ இல் பெண்மயில் நிண்டு அகவும் சத்தம் வந்தது. கழுத்தில கோகினூர் வைரம் வைச்ச பென்டன்  போல என்னவோ போட்டிருந்தாள், 

                                 டொல்லஸ் கபானா  இத்தாலியன் வெஸ்ட் போட்டு ,அதுக்கு மேலே லியுவான் மொண்டே பிரெஞ்ச்  கலெக்சன் சமர் கோட் போட்டு கீழே ஒரு ஹென்னேஷ் அண்ட் மாரிஸ் லெதர் குட்டைப் பாவாடை,,அதுக்கு கீழே முழங்கால் முட்டி வரை நீண்ட ரெட் லேடி சப்பாத்து. தோளில மைக்கல் குரோஸ்  செலிபிரிட்டி நம்பர் வன் ஹான்ட்பாக் கொழுவியிருந்தாள் . எல்லாம் சேர்ந்து இண்டைக்கு இரவு என்னவோ வில்லங்கம் வரப்போகுது போலதான் இருந்தது.

                                         சிசிலியா எனக்கு ஒரு விலை அதிகமான  புது சென்ட் பாஸ்ட் செபஸ்தியான் சேட் கொண்டு வந்து தந்தாள். அவள் ரோம் சுற்றிபார்க்க  இத்தாலி போனபோது ஒரு டசின் வேண்டிக்கொண்டு வந்ததா சொன்னாள். அளவு எனக்கு சரியா இருந்தது,,நானும் பாத் ரூமில் போய் அரைக் குளியல் குளிச்சிட்டு அந்த சேட்டப் போட்டுக்கொண்டு வந்து போக வெளிக்கிட 

                                   " இண்டைக்கு இரவு எனக்கு கலியாணம் நடக்கப்போகுது ஏன் சொல்லு பார்ப்பாம் "

                              "   ஹ்ம்ம் தெரியலை ,நீயே சொல்லு சிசிலி "

                             " நான் இப்ப தலைக்கு வைச்சுக் குளிச்ச  லோசனில்  பாலும்,,பாலாடையும் ,,ஆலோவீராவும்  தேனும் ,,அதுதான் மில்க் அண்ட் ஹணி  ஆலோவீரா  சேர்த்து செய்தது எண்டு போட்டு இருந்தது "

                               " அடி,,செருப்பால,,,,அய்யோ,,உனக்கு தெரியாமல் நான் விளக்கப்பட்டுத்தப்போய் இப்ப நரி சிங்கதிட்ட மாட்டி தப்பி ஓடி வந்து வாசிக சாலையில் உதயன் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மாதிரி மாட்டிட்டனே "

                               "  என்னடா  சொல்லுறாய் "

                                "அடியே எருமை மாடு ,,நீ போட்ட சம்புக்கும் பால் அறுகு பூசுமஞ்சளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை,,இப்ப நீ வெளிக்கிடுற ஸ்டைலுக்கு கலியாணமில்லை..யாரும் இழுத்து வைச்சுக் கற்பழிக்கப் போறாங்கள் "

                                 "  ஹஹஹஹா,,நீதானே என்னோட வாராய்..யார் வரப்போறான் என்னோட சேட்டை விட "

                                   "  அட  நானே ஒரு பயந்தாங்கொள்ளி ,எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா போல அவசரத்தில எஸ்கேப் ஆகிற ஆள்டி மோட்டு  எருமை "

                                   "   இன்னும் ஒரு கிளாஸ் வைன் அடிச்சிட்டு இறங்குவமா,,அடுத்த  தேபாணா  ட்ரைன் 21. 06 இக்கு கீழ ஸ்டேஷன் அடிக்கு  வரும் ,,பாட்டி முடிய நீ டாக்சியில் போ,,நான் காசு தாரன் ,,நானும் டாக்சி அடிச்சுதான் வருவேன் "

                                 "   ஹ்ம்ம், "

                                    "அல்லது  இன்றைக்கு இரவு என்னோட வீட்டில தங்கேன், எனக்கும் இரவெல்லாம்  ஜாலியா கும்மாளம் அடிச்சுப்போட்டு டக் எண்டு  கரண்ட் நின்று லைட் எல்லாம் அணைந்த மாதிரி  தனியவர  வெறுப்பா இருக்கும் "

                                    "  இல்லை,,சிசில்,,எனக்கு அது சொல்ல முடியாது இப்ப,,,பிறகு போறநேரம் பார்க்கலாம்,,,,

                                   "  என்ன நடக்கும்  சொல்லு,,உன்  வாயால சொல்லடா  என் கந்தர்வா "

                                       "  என்ன நடக்குது  எண்டு முதல்ல சொயிஸ் பப் புக்கு போவோம்,,மாட்ரின் ரெண்டு மெசேஸ் அனுப்பி இருக்கிறார்,,எங்க நிக்கிரம் எண்டு கேட்டு "

                            நான் ஒரு போத்தல் வைட்வைன் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் குடித்ததால்  ஒஸ்லோ சிட்டிக்கு நடுவால் நடந்து போகவே வெறி போல ஆட்டியது, சிசிலியா உற்சாகமாக கையை விசிக்கிக்கொண்டு " Reidun Sæther " என்ற நோர்வே பாடகி பாடிய " High on love " பாட்டுப் பாடிக்கொண்டு, நடைபாதை மனிதர்களை பார்த்துக்கொண்டு,  கத்திக்கொண்டு கடந்து போன சோமாலியர் கதைப்பது போல வேடிக்கையாக மிமிக்கிரி செய்துகொண்டு  வந்தாள். எனக்கு நடக்கிற மாதிரி இல்லாமல் கொஞ்சம் மிதக்கிற மாதிரி இருந்தது ஒவ்வொரு அடியும் 

                                       சொயிஸ் பப்புக்கு நாங்க போய்ச் சேர்ந்த நேரம் வெளி வாசல் வரைக்கும் அது நிரம்பி இருந்தது,பலர் இருக்க இடமில்லாமல் நிண்டுகொண்டு குடித்துக்கொண்டிருந்தார்கள் , " மெட்டாலிக்கா  ஸ்டைல்"  இசைக்குழு ஒண்டு லைவ் ஆக உள்ளே மேடையில் வாசித்துக்கொண்டு இருந்தார்கள்,அவர்களின் முயூசிக் சத்தம் மரம் அறுக்கிற மிசினில இருந்து வாறது போல வெளிக்கிளம்பி கண்ணாடி ஜன்னல் எல்லாத்தையும் அதிர வைத்தது. 

                                          பப் வாசலில் போய் வெளிக் கதவின் கண்ணாடியை  வெறியில இடிக்கப் பார்த்தேன்,அதில  நின்ற " டோர் வக்த் "  என்று சொல்லும்  வாசல் சிக்கியூரிட்டி என்னைக் கட்டாயம் வெறியா என்று செக் பண்ணுவான் என்று நினைக்க,அவன் என்னை உள்ளுக்கு விட்டான்,,உள்ளுக்கு கதவைத்திறந்து கொண்டு போய் ஒருத்தனின் நெற்றியில் மோதினேன்,,அவன் திரும்பிப் பார்க்க முதலே பக்கத்தில நின்டவனின் மண்டையில் மோதினேன் ,பின்னால பார்க்க சிசிலியா உள்ளுக்கு வரவில்லை,திரும்பிப் பார்ப்பமெண்டு  திரும்ப பூமி ஒருக்கா மற்றப் பக்கம் சுத்திச்சு ஜன்னலுக்கால பார்க்க  சிசிலியாவை மறிச்சு வைச்சு இருந்தான், ஒரு மாதிரி மிதந்து கொண்டு வெளிய வந்து  


                               "  ய்ய்வளை  யேயேன் மமாமாறிச்சு வைஸ்ஸ்ச்சு  றிருக் ருகிறாய்,,ய்ய்வள் யேன் பிரிரிரெண்ட் யின்னோட வென்ந்தாள்,,லுள்ளே வேறும் ஸில்ல நோண்பர்கள் யேங்களுக்காக கா ஆத்துக்கொண்டு யிய்யிருக்கிறார்கள்,,அவ்வவர்கள் ஒரு மேசையே புக் ப்னப்ண்ணி வைத்து யிஈருக்கிறார்கள்  "


                            "    பிரதர்,,நீ ஓகே,நீ நிதானமாய்க்  கதைக்குறாய் ,நிதானமாய் நிக்குறாய் ,,இவள் கொஞ்சம் நடை தடு மாறுகின்றாள் ,,கொஞ்சம் பொறு நான் அஞ்சு நிமிடம் கவனித்துப் போட்டு உள்ளே விடுறேன் "

                                என்றான்,கொஞ்ச நேரத்தில் சிசிலியா உள்ளுக்கு வந்திட்டாள்,வந்து முதல் கொஞ்சநேரம் மாட்ரின், ஆமுன்ட்,ஜான் எரிக்குடன் கதைச்சுப்போட்டு ஒரு " ப்லோடி மாரி " கொக்டையில் எடுத்தாள், அதை அவள் உறிஞ்சி முடிக்க முதல் நான் மூன்று " ஜெகமாஸ்தர் சொட் " அடிச்சு முடிச்சிட்டேன், பிறகு அவள்  ஒரு " கியூபா லிபரே "  கொக்டைல் எடுத்தாள், அது முடிய முதல் நான் ரெண்டு " சிர்மனோவ் வோட்கா " சொட் உள்ளுக்கு தள்ளிட்டேன் ,கடைசில 

                          " என்னது  பந்தயக் குதிரை ஓடி முடிச்சு தொழுவத்தில தண்ணியை முகத்தால இழுத்த மாதிரி இழுக்கிறாய்,,"

                       " இந்தப் பப்பில் ஒரு மண்ணும் எனக்கு நடக்காது,,இது  என்னோட சொந்த வீடு போல,,நீ பிசத்தாதை "

                                   "  இண்டைக்கு என்னவோ நடக்கப்போகுது ,எனக்கு கடைசியா இன்னும் ஒரு  கொக்டைல் எடுக்கலாம் போல இருக்கு,,"

                             "   ஒண்டும் வராது  டான்ஸ்  ஆடு ,,இயல்பா இரு,,என்ஜாய்  பண்ணு ,,உலகத்தை மற..முக்கியமாய் நாளை என்பதே இல்லை என்று நினை சிசிலி "

                                  "  இப்பவே உன்னோட கண் நாலாத் தெரியுது,,நீயே சொல்லேன் ஒரு ரொமாண்டி ஆன கொக்டைல்  "

                            "  செக்ஸ் ஒன் த பீச் "

                             " என்னது,,இது,,உனக்கு  வெறி ஏறிட்டுது போல,,,ஹ்ம்ம்,,இவளவு கெதியா உனக்கு ஏறாதே இரும்பு மனிதா,,,என்னாச்சு இன்று "

                            " ஹ்ம்ம்,,உனக்கு செக்ஸ் ஒன் த பீச் என்று ஒரு கொக்டைல் இருக்கு தெரியுமா, டொமினிக்கன் ரிப்பப்பிளிக் தான் அதன் பிறப்பிடம், கரிபியன் தீவுகளில் அது பேமஸ். மலிபு வெள்ளை ரம் விட்டு செய்வாங்கள் ,இங்கே இருக்கா  என்று கேள் " 

                           "  வாவ்,,வாவ்,,உனக்கு வெறி எண்டாலும்,,முக்கியமான விசியங்களை மறக்க மாட்டாய்,,,வாவ் வாவ் செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா  அய்யோ பெயரைக் கேட்கவே உடம்பெல்லாம் கிளுகிளுப்பா இருக்கே,,நான் ஜாமைக்கா  , பார்படாஸ் போய் இருக்கிறேன் ,,ஆனால் இந்த கொக்டைல் கேள்விப்பட்டதில்லையே .." 

                                     " ஹ்ம்ம்,,,நீலக் கடல் அலை உன் காதுகளில் தாலாட்டும் , தளர் மேனி தள்ளாடும் , இனி விட்டால் நானே பிசத்துவேன்,,வா இன்னும் கொஞ்ச நேரத்தில் இது மூடப்போறாங்கள், தொர்ஸ்கோ சதுக்கத்தில் துருக்கிக்  கடையில் டோனர் கெபாப் சாப்பிடுவம், ஓகேயா உனக்கு " 

                                " ஓகே ,வாவ் ,,,வாவேன் எஞ்சேல்பேர்ட் ஹம்பர்டிக்கின்   ஸ்பெனிஷ் ஐஸ் பாட்டு வாசிக்குறாங்க  என்னோட சலசா ஆடேன்,,நீ நல்லா சலசா  ஆடுவாயே , ஹ்ம்ம்,,அது  முடியுது  ,கொஞ்சம் பொறு பிளமிங்கோ பாட்டு வாசிக்குறாங்க டான்ஸ் ஆடிப்போட்டு வாறன் ,,என்னோட கொக்டைல்லைப் பார்த்துக்கொள். என்னோட கைப் பையையும் தாரேன் பத்திரமாப் பார்த்துக்கொள் " 

                                  எனக்கு லத்தின் அமரிக்கன் டான்ஸ் ஆடத்தெரியும்,ஆனால் அந்த நேரம்  ஆடியிருந்தால்  பிறகு அது சிவபெருமானின் ஊழித்தாண்டவம் போலதான் ஆட வேண்டி வருமென்பதால் ஆடவில்லை.  சிசிலியா அதுக்குப் பிறகு ஒரு முக்கால் மணித்தியாலம் தாங்கோ, சலசா,  பிளெமிங்கோ, மரிம்பா , இங்கிலீஷ் வால்ஸ், ரிதம் அண்ட் ப்ளுஸ்,  எல்லா நடனமும் பலரோடு சேர்ந்து ஆடினாள். 

                                           சிசிலியா  ஒரு அருமையான நடனக்காரி , நடனத்தை ஒழுங்காகப் படித்தவள் . அவள் வெட்டி வெட்டி  நடக்கும் போதே  கால்களில் சந்தம் தவறாத தாளம் வரும்.  அவள்  இடுப்பே ஒரு  பதஞ்சலி முனிவரின்   பரத நாட்டிய நடனம் ,  அவளை அனைத்துப் பிடித்து ஆடிய ஆண்கள் அவளை வேண்டுமென்றே நெஞ்சில் நெரித்து, பின் புறத்தை தடவி விட்டு , முத்தம் கொடுக்க முயட்சித்துகொண்டிருந்தார்கள் , நான் கடைசி " ஐரிஷ் ஸ்கொச் விஸ்கி சொட் " ஒன்றை குடிக்க முடியாமல் குடிச்சுக்கொண்டிருந்தேன் ,

                                        சொயிஸ் பப் அதிகாலை மூன்று மணிக்கு மூடினார்கள். வெளியே டாக்சிக்காரர்  கொண்டையில் மஞ்சள் லைட் போட்ட கார்களில் வரிசையாக நின்றார்கள், தற்காலிகமாக ஜோடி சேர்ந்த இரவுக் காதலர்கள் யார் வீட்டுக்குப் போவதென்று பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள் , அதிகம் குடித்த ஒரு ஜென்டில்மேன் பாதை ஓரம் குந்தி இருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார், ஒஸ்லோ நகரம் நீலமாக விடிந்திருந்தது, சிசிலியா நடக்க தடுமாறிக்கொண்டிருந்தாள்,வாய் உளறிக்கொண்டு  

                              " செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா  செக்ஸ் ஒன் த பீச்,,ஹஹஹா,,,யப்பா சாமி என்ன ஒரு கொக்டைல்,"

                                    " ,ஹ்ம்ம், ரசிதுக்குடி அதை அது காளிதாசன் கண்ணதாசன் பருகத் தவறிய  தேன் சிட்டுக்குருவியின் தெய்வீக மதுரசம் "

                                  "    என்னடா  உளருராய்,,நோஸ்ர்கில்  சொல்லு,,உன்  மண்ணாங்கட்டி  தமிழ்  எனக்கு  புரியாது  என நண்பனே "

                             "   இப்ப  எனக்கு உலக மொழிகள் எல்லாமே ஒண்டுதான்,,என்னை விடுடி சிசில்,,எனக்கு வெறிடி செல்லம்" 

                                " ஜமைக்காவில் போட் ஒப் ஸ்பெயின் தீவில  பொப் மார்லி பாட்டுக்கேட்டுக் கொண்டு ,,பறக்கிற மாதிரி இருக்கு ,,உனக்கு தெரியுமா எனக்கு இப்பவும் கவலையாக இருக்கு "

                               "  உனக்கு என்ன கவலை இப்ப ,,சொல்லு சிசிலி "

                                   " கலியாணம் தொடங்குமா,,வாவ் எவளவு நல்லா இருக்கு கேட்கவே ..ஆனாலும் அந்தப் பெண்ணின் சோடனையப் பார்க்க எனக்கே கால் ரெண்டும் குறுகுறுக்குது,,எனக்கு அப்படி யாருமே செய்யவில்லையே  என்று,,நான் ஸ்ரீலங்காவில் தமிழ் பெண்ணாகப் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிறேன் "

                           " போச்சுடா,,விடியக்காலை, மூன்று மணிக்கு ஆரம்ப்பிசிட்டியா "

                               "  இல்லை,,எனக்கும் அங்கே சாமத்திய வீடு நடந்து இருக்குமெல்லா,,அழகா சோடிச்சு என்னையே எல்லாரும் கவனித்துப் பார்க்கிற மாதிரி ஒருநாள் கிடைக்குமென்றால் எவளவு சந்தோசமா இருக்கும் தெரியுமா,,ஒரு பெண்ணாக இருந்து அதை உணர்ந்து பார்த்தால் தான் உனக்கு தெரியும் .."

                         " ஹ்ம்ம்,,,அதில ஒரு மண்ணும் இல்லை ,,சம்பா விளைஞ்சு சரிஞ்சு கிடக்க உம்பார் இல்லாமல் ஊர்க் குருவி திண்டிச்சாம் அதுக்குள்ளே ஒருத்தி  சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சம்மணம் கட்டி இருந்தாளாம்  என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள் எங்கள் ஊரில் "

                          " சம்பா விளைஞ்சு சரிஞ்சு கிடக்க உம்பார் இல்லாமல் ஊர்க் குருவி திண்டிச்சாம் அதுக்குள்ளே ஒருத்தி  சட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து சம்மணம் கட்டி இருந்தாளாம்  ,,இதுக்கு என்ன அர்த்தம் "

                         "   எனக்கு அர்த்தம் நோர்ஸ்கில் சொல்ல முடியாது சிசில்,"  

                        "  இல்லை,,என்னோட அம்மாவும்,,அப்பாவும்  எனக்கு மூன்று வயதில் பிரிந்து விட்டார்கள்,,நான் தனியா சில காலம் அம்மாவோடு,,சில காலம் அப்பாவோடு வளர்ந்தேன்,,எனக்கு ஒரு பெண்ணாக என்னோட இதயத்தின் மென்மையான பிரதேசங்களில் நினைவு கொள்ளும்படி ஒரு கொண்டாட்டமுமே என்னை முதன்மைப்படுத்தி நடக்கவேயில்லை,,அது எவளவு வேதனை தெரியுமா ,,,உனக்குப் புரியாது "

                         " ஹ்ம்ம்,,அதுக்கு இப்ப என்னதான் செய்ய முடியும்,,சிசிலி  சொல்லு,,"

                           "எனக்கும் ,பால் அறுகு பூசு மஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டி இருந்தா,,நல்ல கலியாணம்  கிடைத்து இருக்கும் போல,,,அது வைச்சு தலை  முழுக்காட்டாதால் தான்,,ரெண்டு தரம்  போய் பிரண்ட் பிடிச்சும்,,ரெண்டு பேரும் ஆறு மாதத்தில ஓடிட்டாங்க "

                        "  ஹஹஹஹஹஹாஹ்  ஒ அதுவா இப்ப பிரசினை,உனக்கு இப்ப வெறி சிசிலி  "

                          " போடா மடையா,,,ஒண்டுக்கும் உதவாத மடையா,,,"

                           " ம்,,....................................."

                          "  நீ என்னை சில நேரம் மோட்டுக் கழுதை எண்டு திட்டுவாய்,,நீ யார் தெரியுமா,,நீ ஒரு காட்டுப் பண்டி,,எருமை மாடு,,,கருங் குரங்கு,,ஹஹஹஹா,,,காணுமா ,,இல்லை இன்னும் வேணுமா 

                     "  ஹஹஹ ,,இப்போதைக்கு,,இன்றைய இரவுக்குக்  காணும்  சிசிலி "
      
                      "  என்ன ஹஹஹஹஹஹா, உனக்கும் இப்ப வெறி ,,,உன்னால என்ன செய்ய முடியும் "

                        " எனக்கு வெறிதான்,,சரி  உனக்கு இப்ப என்ன வேணும் சொல்லு "

            " எனக்குப் பால் அறுகு பூசுமஞ்சள் வைச்சு தலை முழுக்காட்டிவிடு " 
                                      

                 " ஹஹஹா  ஓகே,,வா, கேபாப் சாப்பிட்ட முதல் ,விடிய விடியத் திறக்கிற பாக்கிஸ்தான் சில்லறைக் கடையில ஒரு போத்தல் பால் வேண்டுவம், குருண்லான்ட் பார்க்கில கொஞ்சம் புல்லுப் புடுங்குவம், இந்தியன் ரெஸ்ரோரெண்டில் கொஞ்சம் தந்தூரி கோழிக் காலுக்குப் பூசுற சிவப்புத் தூள் வேண்டுவம் எல்லாத்தையும் தலையில தப்பி உன்னை ஆர்கிஸ் எல்வா ஆற்றுக்க முக்கி எடுக்கிறான், அதோட உனக்கு கலியான ராசி தொடங்கும்,,ஓகே  யா."

                         "  ஹ்ம்ம்..இன்றைக்கு நீ என்னோட வீட்டை வாவேன்,,ப்ளிஸ் ,,எனக்கு தனிமையா இருக்கு, ப்ளிஸ், "

                                என்று  சிசிலியா அன்று முழுவதும் மூன்று அடி தள்ளி நின்றவள் என் கைகளைப் பிடித்துக் கேட்டாள் , நான் ஒன்றும் சொல்லவில்லை , அவளை ஒரு டாக்சி பிடிச்சு உள்ளுக்க தள்ளி அடைஞ்சு போட்டு, டாக்சிக்காரனின் நம்பரை வேண்டிக்கொண்டு , என்னோட வீட்டுக்கு போறதுக்கு கடைசி நைட் பஸ் எடுக்கிற இடத்துக்கு நடந்து போய் கடைசி நைட் பஸ்ஸில் நெரிச்சுக்கொண்டு போய் இறங்கிற நேரம் தடுமாறி விழுந்து எழும்பி வீட்டுக் கதைவை அரைமணித்தியாலம் திறப்புப் போட்டு திறந்து டமார் எண்டு கட்டிலுக்கு  அருகில் நிலத்தில் விழுந்து படுத்திட்டேன்.

                                                     அடுத்த நாள் ,மத்தியானம் போல சிசிலியா போன் அடிச்சு எழுப்பினாள் ,நேற்று என்ன நடந்தது எண்டு கேட்டாள், நான் எனக்கு என்ன நடந்தது எண்டு கொஞ்சம் கொஞ்சமாக  நினைவுகளை மீட்டு எடுத்துக் கொண்டிருக்க அவள் , 

                                           " நேற்று இரவு ஒன்றும் நினைவில்லை,,ஆனால் கனவில் கலியாணம் கட்டுற மாதிரி கனவு வந்தது " 

                                          என்று சொன்னாள், 

                                       "  போடி மோட்டுக் கழுதை " 

                             எண்டு சொல்லிப்போட்டு நான்  போனை வைச்சிட்டேன்.


Sunday, 15 November 2015

நடிகன்

இளமைக்காலம் அளவுகள் இல்லாத  காலத்தின் இடை வெளி.  அதில் இலக்கிலாமல் அலைந்தால்  ஒரு கட்டத்தில் ஞானம் பிறக்க வைக்கும், அல்லது நினைவுகளின் சேமிப்புக் கிடங்கில் எதோ ஒரு ரகசியமான இடத்தில மிகவும் ரசிக்க வைக்கும் சம்பவங்களை எங்களை அறியாமலே பதுக்கி  அடுக்கி வைத்திருக்கும், 

                                                   ஒரு நாள் அதைத் திறந்து பார்க்க தூசு பிடித்த பூஞ்சன வாசத்துடன் ஒரு கதை நமக்கு முன்னே விரியலாம்,

                                                    

யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் கோட்டை நல்லூரில் முத்திரைசந்திக்கும் கவ்வியன்காட்டுகும் இடையில் உள்ளது! இந்த அரண்மனையில் "பூதத் தம்பி "என்ற படம் 23 ஆண்டுகளின் முன் எடுக்கபட்டது! அந்தப் படம் இலங்கைய முதல்முதல் காலனி ஆக்கியாண்ட  போத்துகீசரை  எதிர்த்துப் போராடிய ஒரு மன்னனின் வரலாறை உலகத்துக்கு தெரியப்படுத்தி சொன்னது . 

                                             நான் அதில் நடித்திருந்தேன், ஏனோ தெரியவில்லை அதில நான் நடித்த வரலாறு உலகத்துக்கு தெரியவரவே இல்லை!.

                           கல்வியங்காட்டில் உள்ள அந்தப் படம் எடுத்த  வசந்த மாளிகை சங்கிலியனோட உண்மையான "நல்லூர் ராஜதானி " அல்ல. உண்மையான முத்திரைச்சந்தையில் யமுனா ஏரிக்கு அருகில் இப்ப ஒரு சேர்ச் உள்ள இடத்தில இருந்த கோட்டையைப்  போத்துக்கீசர் அழித்து,அந்த கோட்டையின் கற்களையும்,பழைய நல்லூர் கோவில அழித்து அந்தக் கற்களையும் எடுத்தே யாழ்பாணம் கோட்டையை கட்டிய்யதாக ஒரு வரலாறு உள்ளது.


                                                   உண்மையில் "பூதத் தம்பி " படமெடுத்த அந்தப் பழங்கால  வீடு போல உள்ள அரண்மனை  மாளிகை அவரோட வைப்பாடிகள் வசித்தஇடம் எண்டு படம் எடுத்தபோது சொல்ல கேட்டுருக்கிறன்!

                                             

 "பூதத்தம்பி " என்ற அந்த வரலாறுப் படதை எங்கள் ஊரில் எங்க வீட்டின் அண்மையில் வசித்த கல்யாணப் புரோகர் தட்சணமூர்த்தி எடுத்தார். அவர் ஒரு தமிழ் அறிஞ்சர்.புலவர் என்றும் அவரைச் சொல்லுவார்கள். அவர்தான் அந்தப் படத்துக்கு திரைக்கதை,வசனம் எழுதிய நினைவு இருக்கு .

                                                      வீடியோக் கமராவில் அந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்தார்கள்.ஒளிப்பதிவாளர் விஜயா ஸ்டுடியோ என்ற சிங்கள திரைப்படங்கள் எடுத்த நிறுவனத்தில் பெரிய எரிபிலெக்ஸ் கமராவில் கமராமான் ஆக வேலை செய்தவர் என்று சொன்னார்கள். 

                                          

சின்ன வயசில சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் போல வர ஆசைப்பட்டு அந்த படத்தில நடித்த கேவலத்தை சொல்லுறன்! 

                                                 நான் வாட்ட சாட்டமா காத்தவராயன் போல நெஞ்சை நிமித்திக்கொண்டு அந்த இளந்தாரி நாட்களில் இருந்ததால், எங்கள் அப்பாவின் நண்பர் தட்சணாமூர்த்தி அதில பூதத் தம்பி அரசனுக்கு " பொடிகார்ட்" அதுதான்,சேவகன் பாத்திரம் கொடுத்தார். 

                                                 ஒரு வரலாற்று அரச படம் . பல காட்சிகள் எங்கள் வீராளி அம்மன் கோவிலில் ,அந்தக் கோவிலில் இருந்த சங்கிலியனின் வாளுடன் எடுத்தார்கள். 

                              

பூதத் தம்பி ஒரு யாழ்ப்பாண மன்னன், போத்துக்கீசர்களை எதிர்த்துப் போரிட்ட மன்னன் என்று வரலாறு சொல்லுது. ஆனால் அந்தப் படத்தில் ஜனரஞ்சக திரைக்கதைக்காகவா  அல்லது வேற நோக்கங்களுக்காககவா  சில மாற்றம் செய்து எடுத்தார்கள் என்பது அப்போது புரியவில்லை . 

                                                    முக்கியமா அந்த மன்னன் ஒரு பாதிரியாருடன் சேர்ந்து சமரசம்,சமாதான உடன்படிக்கை எல்லாம்  செய்வது போல எல்லாம் வரும். இப்படிப் பரங்கிகளுடன்  டிப்பிலோமாடிக்கா  தாஜா மாஜா செய்வதை ராஜதந்திரம் என்று புரோக்கர் சொன்னார். அதுவும்  தமிழ் மன்னன் உண்மையாகவே அப்படியெல்லாம் ஒரு வீரமானமன்னன் செய்வானா என்று அப்பவே குழப்பமாக இருந்தது

                                      

அந்த நாட்களில் வீட்டுக்கோ,நாடுக்கோ பிரிஜோசனம் இல்லாமல் கட்டாக்காலி மாடுகள் தரவையில் மேயிற மாதிரி  ஊர் வம்பில அலைந்ததால், நடிகனாகியாவது உருப்படுவம் எண்டு ஜோசித்து, வீடில அம்மாவிடம்

                              " பூதத் தம்பி படதுல முக்கிய வேடத்தில சேவகனா நடிக்கிறன்" 


                                   எண்டு சொல்ல ,அவா கோவத்தில


                                           " கொப்பர் உனக்கு அரசன் எண்டு பெயர் வைக்க,நீ போய் அரசனுக்கு எடுபிடியா ,சேவகனா நடிக்கிறாய் எண்டு சொல்லுறாய் ,வெட்கமா இல்லையா ?" 


                             எண்டு பேசினா,நான்,


                                       "சூப்பர் ஸ்டார் ரஜனியே 16 வயசினிலே இல பரட்டை என்ற வில்லனாதானே அறிமுகமானார் அணை " 


                                            எண்டு சமாளித்தேன்.


அதில சம்பளம் இல்லாம சும்மா நடிச்சன்! சேவகன் என்பதால், மன்னனுக்கு முன்னுக்கும் பின்னுக்கும் திரிந்ததால் ஒரு வசனம் தன்னும் பேச சான்ஸ் கிடைக்கவில்லை.! 

                                                     எங்கள் வீராளி அம்மன் கோவிலில் மன்னன் பூதத்தம்பி கும்பிட வரும்போது " பகைவர்களைத் தாக்கி அழிக்கும்  வீரமாகாளியம்மா " என்ற பாடல் கம்பிராமாக மன்னன் நடந்து வந்து அம்மனைக் கும்பிட்டு சண்டைக்கு வெளிக்கிடுவது போல ஒளிப்பதிவு செய்தார்கள். அந்தப் பாடலைப் பின்னர் உள்ளூர் இசைக்குழுக்கள் மேடைகளிலும் பாடினார்கள்

                                            அந்த நேரம் யாழ் முனிசிப்பால்டி மேயராக இருந்த சிவஞானம்  அய்யா முக்கிய பாத்திரத்தில் அதில பாதிரியாராக நடித்துருந்தார்! அந்தப் படத்தை சில மாதங்களின் பின் வெளியிட்டு,யாழ் நகரதில அப்போது யுத்தகாலதில இருந்த எல்லா " மினிசினிமாவிலயும்" கட்டாயம் காட்டும்பாடி அப்போது யாழ்பாணத்தை ஆண்டவர்கள் உத்தரவு போட்டதால்  பல "மினி சினி மாவில்" அதை வேண்டா வெறுப்பாக திரையிட்டார்கள்.

                                       மக்கள் என்னோட நடிப்பை எப்படி ரசிக்கிரார்கள் எண்டு பார்க்க நானும் போய் "மினி சினிமாவில்" கடைசி வாங்கில இருந்து பார்த்தேன்.நான்


                                  " வீராதி வீர , வீர பாராகிரம பூதத் தம்பி மன்னன் வாறார் !" 


                                              எண்டு சொல்லிக்கொண்டு, மன்னனுக்கு அருகில்  கொலைவெறியோட வரும், முதல் "சீன் "இல ஒருத்தரும் என் நடிப்பைப் பார்த்து விசில் அடிக்கவில்லை! கவலையாக இருந்தது! 


                                                  ஒரு நடிகனை ஆராதிக்கத் தெரியாத மோட்டு ரசிகர்கள் இருக்கும் இந்த ஊரில இருந்து ஒரு வெற்றிபெற்ற  சூப்பர் ஸ்டார் நடிகனாக வர முடியுமா என்று அப்பவே குழப்பமான சந்தேகங்கள் இருந்தது .அதால் படத்தின் இடையில் எழும்பி வந்திட்டேன். 

                                          வெளிய வந்து படம் முடிய மினி சினிமா வாசலில் நின்று என் முகத்தைக் காட்டிக்கொண்டு நின்றேன்,அப்பவும் என்னை ஒருத்தரும் அடையாளம் காணவில்லை. அவன் அவன் என்னை டிக்கட் கிழிக்கிறவன் எண்டு நினைச்சு சும்மா பார்த்துக்கொண்டு போனாங்கள். 


                                           ஒரு நடிகனை  அவளவு கேவலப்படுத்திபோட்டு போனாலும் அதில ஒரு பாடம் படித்தேன்,இனி சைட் ரோல் எண்டுற உப நடிகனாக இனி வாற எந்தப் படத்திலும் நடிப்பதில்லை.நடித்தால் முக்கிய வேடம்,இல்லாட்டி சும்மா இருப்பது என்று 

                                      

பூதத் தம்பி படம்  அதுக்குப் பிறகு என்ன ஆனது எண்ட வரலாறு  எனக்குத் தெரியாது! 

                                                   இடை இடையே புரோக்கர் வீட்டுக்குப் போய் அவரோட கதைத்துக்கொண்டு  இருப்பது. சில நேரம் அவர் பேசி பொருத்தம் முடித்த கலியாணப் பேச்சுக்கள் சரிவரும் போது,பொம்பிளை பார்க்க,,மாப்பிளை பார்க்க அவர் போகும் வீடுகளுக்கு என்னையும் கூ ட்டிக்கொண்டு போவார். ஆனால் நான் ரகசியமா  வேற என்னவும் படம் எடுக்க திரைக்கதை எழுதுறாரா எண்டு திரி விட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தேன். 

                                      அந்த இடைப்பட்ட மாதங்கள் கலியான ராசி மாதங்கள். அதால் அவர் அவரோட மெயின்  கலியாணம் பொருத்தும் பிசினஸ் இல பகல் எல்லாம்  நேரமில்லாமல் ஓடிக்கொண்டு இருந்தார். சில நேரம் இரவு அவரோட அலுவலகத்தில் களைத்துப்போய் நிற்பார். கொஞ்ச மாதங்களின் பின் நடிக்க   இன்னொரு சான்ஸ் வந்தது , அதுவும் புரோக்கரிடம் இருந்துதான் வந்தது. 


ஒருநாள் புரோக்கர் தட்சணாமூர்த்தி

                        " பூதத்தம்பியில நல்லா நடிச்சியே(?) இன்னுமொரு குடும்பப் படம் எடுக்கிறன் நடிக்கிறியா,  "


                                "   ஓம் "


                           " அரச படத்தில சேவகன் வேடம் தந்து உன்னை அறிமுகப்படுத்தினத்துக்கு நன்றி இல்லாமல்,,புறு புறுதுக்கொண்டு திரியிராயாமே,,"


                           "   இல்லை,,சும்மா ஆட்கள் சொல்லி இருப்பாங்கள் 


                             " சாடை மாடையாக் கேள்விப்பட்டன், சொல்லு,,உண்மையைச் சொல்லு "


                             "   இல்லை,,கொஞ்சம் கோபம் தான்  என்னோட திறமை அதில வெளிவரவில்லை என்ற ஆதங்கம் "


                             "  இது குடும்பப் படம்  இதில முக்கிய பாத்திரம் தாரேன், நடிக்கிறியா   ?"


                         "  ஹ்ம்ம்,நடிக்கிறன் புலவர் ,,என்ன கதை அது "


                         " குடும்பக் கதைதான்,,குடும்பங்களுக்குள்ள  வாற சிக்கல் ,பிக்கல்,பிடுங்கல் தான் வேற என்ன, "


                              "அப்படியா,,அம்மாவுக்கும்  முத்துராமன் போல நான் நடிக்க விருப்பம், அவாவுக்கு முத்துராமனை விட்டா வேற ஒருத்தருக்கும் நடிக்கத் தெரியாது எண்டு நினைப்பு "


                          " இது கொஞ்சம் அப்படியான கதைதான் "


                         " அம்மா பாலச்சந்தர் படம் என்றால் உயிரை வாசலில் விடுவா,,அவாவுக்கு  கட்டாயம் இந்தப் படத்தில நான் நடிச்சா அள்ளுகொள்ளையாய் சந்தோசம் எழுப்பி எடுக்கும் "


                            " ஆனால் கதையை வேற ஒரு கோணத்தில் யாரும் சொல்லாத, இதுவரை யாரும் செல்லாத பாதையில் சென்று திரைக்காவியம் ஆக்கப்போறேன் "


                     " ஒ,,கேக்கவே நல்லா இருக்கே,,அதுக்கு என்ன பெயர் புலவர் "


                        " புரியாத புதிர் என்று பெயர் வைச்சுதான் திரைக்கதை எழுதி இருக்கிறேன் , இதிலயும்  பூதத்தம்பி டீம் ஐத் தான் களமிறக்கப் போறேன் "


                      " அப்படியா,,அந்த திரைக்கதை எழுதிய பேப்பர்களைத் தர முடியுமா,,"


                              "  என்னடா  சுடுகுது மடியப் பிடி எண்டு பெண்டுகள் பிள்ளைப்பெறுவுக்கு அடி வயித்தில கையை வைச்ச மாதிரி நிக்குறாய் "


                                     " இல்லை   படிச்சுப் பார்த்தால்,,,நடிக்க இப்பவே கற்பனையில் நடிச்சு பிராக்டிஸ் செய்து பார்க்கலாம் என்று நினைக்கிறன்."


                            " சரி,,தாரன்,,ஆனால் முக்கியமான சில சம்பவங்கள்,,அதில இன்னும் எழுதவில்லை,,," 


                     "இதென்ன பிரகண்டம்,,நீங்கள்  முழுக்கதையும் எழுதாமல் படம் எடுக்க மாட்டிங்களே  " 


                                     " எழுதினா சில நேரம் உன்னைப்போல ஆட்கள் அதை வாசித்து என்னோட டேர்னிங் பொயின்ட்ஸ் எல்லாத்தையும் கொப்பி அடிச்சுப் போடுவாங்கள் என்று அதுகள் பேபரில் எழுதவில்லை, படம் எடுக்கிற ஒன் த ஸ்போட் இல்தான் அது விரியும் "


                                      என்று பேப்பர் கட்டு ஒன்று கொண்டுவந்து தந்தார்,அதை வாசித்துப் பார்த்தேன்,ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் சில சம்பவங்கள் ஒன்றை ஒன்று இடைவெளி விட்டுத் தொடர,,மொத்தத்தில் அதன் தலைப்பு புரியாத புதிர் போலத்தான் அந்தத் திரைக்கதை இருந்தது. 


                                              யாருக்குத் தெரியும் அந்த தொடராத இடைவெளிகளில் தான் பெரிய வளைவுகள் திருப்பங்கள் இருக்கும் போல. பெரிய பெரிய டைரக்டர்கள் அப்படிதானே இயக்குவார்களாம் படங்களை, டைரக்டர் ஸ்ரீதர் சூட்டிங்  நடக்கும் ஒன் த ஸ்பொட்ட்டில் வைச்சுத்தானே திரைக்கதையையே ஜோசிப்பாரமே. 

                                  

நிறைய நம்பிக்கைகளுடன் அன்று பின்னேரம்  வீட்டை வந்து, கால் முகம் கழுவிப்போட்டு கண்ணாடியில் காகக் கூடு போல காடை வத்திப்போய் அநாதரவா எண்ணை தண்ணியில்லாமல் கிடந்த  தலைமயிரை இழுத்து நிமிர்த்தி  ரஜனி போல பக்கவாட்டு சரிச்சு விட்டுபோட்டு மறுபடியும் அம்மாவிடம் 

                            " புரோக்கர் குடும்ப்பப் படம் எடுக்கிறார்,,அதில முக்கிய ரோல் இல நடிக்கப் போறேன் ,,கொஞ்ச நாளில் படப்பிடிப்பு தொடங்கப் போகுது "


                              " மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா,,,ஹ்ம்ம்இது   குடும்பப் படம் என்டுறாய்  ,கட்டாயம் நடி ,முத்துராமன் போல நடி ,சரி என்ன கதை அது? "


                                "  அதுதான் எனக்கும் புரியாத புதிரா இருக்கு "


                              " படம் எடுக்கத் தொடங்க முதலே இப்பிடி சீலம்பாய் கிழியுது,,இதெங்க இந்த சீலடி சிலம்படி போய் முடியப்போகுதோ தெரியல்லையே,,சரி நீ என்னவா அதில நடிக்கிறாய்    "


                                    " அதுவும் தெரியாது,,நாளைக்குத் தெரியும்  புரோகர்,வரச் சொன்னார் நாளைக்கு காலை நேரத்தோட "


                               "  பலாச்சந்தர் படம் போல வந்திச்சு எண்டா,,நல்லா சனங்கள்  ரசித்துப்  பார்குமடா,,நீ  முத்துராமன் போல நடியாட,,குரங்குச் சேட்டை விடாமல் ,,ஒழுங்கா புரோக்கர் சொல்லித் தாற மாதிரி நடியடா "

                                    
                            
அடுத்தநாள் காலையில கண்ணாடியில் முகத்தை  " முள்ளும் மலரும் " ரஜனிபோல ஸ்டைலா  சரிச்சு சரிச்சுப் பார்த்தேன்,தலைமயிரை " தர்ம யுத்தம்"  ரஜனிபோல ஒருக்கழித்து சைட்டில் விழுத்திப் பாத்தேன்,,இருந்த சின்ன மீசையை " பதினாறு வயதினிலே " ரஜனி போல " இது எப்பிடி இருக்கு ,இது எப்பிடி இருக்கு " என்று டயலக் சொல்லி தடவி விட்டு ரெண்டு பக்கமும் இழுத்து விட்டேன் ,முகத்தை  இறுக்கி வைச்சு " முரட்டுக்  காளை " ரஜனி போல கீழ் வெட்டுப் பார்வையில் பார்துப்போட்டு 

                               கிணத்தில ஓட்டை வாளியில அள்ளிக்  குளிச்சுப்போட்டு, எங்களின்  வீட்டு ஹோலில இருந்த பிடிச்சு வைச்ச பிள்ளையார் சிலைய தொட்டுக் கும்பிட்டுட்டு ,வீராளி  அம்மன் கோவிலுக்கு குசினியில இருந்த சம்பலுக்கு வேண்டி வைச்சு இருந்த  தேங்காயை அம்மாவுக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டுபோய்  உடைச்சு போட்டு, நல்லூர் கந்தனுக்கு கப்பூரம் ஒன்று கடனா சுப்பிரமணியம் கடையில வேண்டிக்  கொளுத்திப்போட்டு, தட்சனாமுர்த்தியிடம் போய் ,குடும்பப்  படத்தில வாற  குணசித்திர நடகர்  போலவே கை ரெண்டையும் கட்டிக்கொண்டு  பவ்வியமா நிண்டன் !


                                  அவர் ,நாடிய தடவிக்கொண்டு ,டைரக்டர் எ சி திருலோகச்சந்தர்  போல கையால சீன் போட்டு ,
டைரக்டர் பாலச்சந்தர்  போல ரெண்டு கையின் சூப்பிர விரலையும் பெரு விரலையும் சேர்த்து  பெட்டியாக்கி அதில ஆங்கிள்  பிடிச்சுப் பார்த்து , கொஞ்ச நேரம் டைரக்டர் பீம்சிங்  போல ஆழ்ந்து ஜோசித்துப்போட்டு . கடைசில டைரக்டர் ஸ்ரீதர் போல கையைத் தட்டிப்போட்டு  என்னை தலையில இருந்து கால் வரை பார்த்திட்டு


                                     "  உண்னாதத் தான் சொல்லுறன் உன்னை மனதில நினைத்துதான்  உன்னோட தோற்றத்தைக் கற்பனை  செய்து பார்த்துதான் சொல்லுறேன் 


                                    எண்டு சொல்ல .நான் நினைச்சன் இந்த படத்தில கட்டாயம் குடும்பப்பாங்கா நடித்து , தாய்குலத்தைக்  கதறிக் கதறி  அழவைத்து , படத்தை எப்படியும் வெற்றியாக வர நடித்துக்  கொடுக்க வேண்டும் எண்டு மனதளவில் சபதம் எடுக்க ,


                                    திரைக் கதை ஆசிரியர், வசனகர்த்தா, டைரக்டர், தயாரிப்பாளர் என்ற முக்கிய தகுதியில் இருந்த  புரோக்கர் தட்சணாமூர்த்தி என்னோட சீன் வர இடத்தை  இப்படி தொடங்கினார்


                         " முக்கியமான கட்டத்தில தான் நீ இந்தப் படத்துக்க என்டர் பண்ணுறாய், பார் சும்மா விசில் பறக்கும் அந்தக் கட்டத்துக்கு ,,


                                 " அய்யோ,,அய்யோ  இதைக் கேட்கவே இப்பவே காது  ரெண்டிலும் சில்வண்டு கிளம்பின மாதிரி   விசில் பறக்குது  " 


                                "  நாலு பேர் சேர்ந்து ஒரு இளம் பெண்ணை மொரிஸ் மைனர் கார்ல ஏத்திக் கடதிக்கொன்டு போய் கதற கதற கற்பழிக்கிறாங்கள் ,"


                                    "  என்னது "


                                     " நீ தான் அந்த நாலுபேருக்கும் தலைவன், உன்ட உடம்பு சேப்புக்கு வலு பொருத்தமா பொருந்தும்  "


                             "   என்னது "


                                  " இதில நீ ஒழுங்கா உணர்ச்சி கொப்பளிக்க நடிச்சி எண்டா பிறகு  நோ சான்ஸ் எங்கேயோ போயிடுவாய் " 


                             " என்னது  


                         " எதுக்கு இப்ப எல்லாத்துக்கும் என்னது என்னது  எண்டு மண்ணெண்ணெய் வண்டில்காரன்  வயல் அறுப்பு நேரம்  டீசல் டக்ரில ஏறின கதை போல   நெளிப்புக் காட்டுறாய் "


                              "  நோ சான்ஸ் எண்டா அதுக்குப் பிறகு படமே எனக்கு நடிக்கக் கிடைக்காதா."


                           " டேய் நோ சான்ஸ் எண்டா அதில்லையடா அகராதி பிடிச்சவனே,,நோ சான்ஸ் எண்டா நீ பெரிய நடிகன் ஆகிடுவாய் அதை சொல்லுறேன் மோடயா  "


                           " ஹ்ம்ம்,போயும் போயும் ஒரு கற்பழிப்புக் காட்சியிலயுமா  ஒருத்தன் உணர்ச்சி கொப்பளிக்க நடிப்பான்,,


                                  "  ஓமடாப்பா  அதிலதான் நடிக்கிறது கஷ்டம் தெரியுமோ,,அதுவும் வில்லன் போல,,அகோரமான வில்லன் போல எல்லாராலும் நடிக்க ஏலாது தெரியுமே  " 


                                        "   என்ன சீவியமடா இது,,அம்மா அந்த சீனில நடிக்க விடமாட்டா எண்டு நினைக்கிறன் "


                            " அப்ப வேற என்னத்துக்கு நடிக்கப் போறாய் "


                         " குடும்பப் படம் என்டிங்க குணசித்திரமா நடிக்க ஒரு ரோல் தாங்களேன்,,"


                                             "  அதெல்லாம்  இல்லை,,நீதான் வில்லன்,,கற்பழிப்பு வில்லன்  " 

                                          "  சரி  பிறகு  என்ன நடக்குது,,பிறகாவது ஒரு நல்ல சீன் வருகுதா  " 

                                          "  இல்லை,,உன்னை அந்தப் பெட்டையின் காதலன் வந்து அடிச்சு போட்டு பொலிசில பிடிசுக் கொடுக்க,,நீ ஜெயிலுக்குப் போறாய்,,அதோட உன்னோட காட்சிகள் முடியுது,,உன் கதையும் முடியுது,,கதைக்குத் தேவைப்பட்ட மாதிரிதான் உன்னைப் போட்டு இருக்கிறேன்   "

                                   "  ஹ்ம்ம்,, இது நல்லாவே இல்லை,,கேட்கவே நல்லா இல்லை "

                          " உன்னோட விறைச்ச மண்டையன் சேப்புக்கு வசனம் பேசி குடும்ப்பபாங்கா நடிச்சா எடுபடாது 


                               " ஹ்ம்ம்,, இது வேற விதமா  எல்லோ அதுவும்  குரங்கு இளனிக் கோம்பைக்குள்ள  கையை  விட்டு உதற முடியாமல் மாட்டின மாதிரி எல்லோ  எடுபடப்போகுது "

                                 " சும்மா கிரந்தம் கதையாதே,   உன்னோட மண்டை விறாஸ் போல உள்ள முகத்தை  மனதில நினைத்துதான்  உன்னோட தோற்றத்தையும்  கற்பனை  செய்து பார்த்துதான்  இந்த ரோலுக்கு செலக்ட் செய்தேன் "

                                 என்றார்,எனக்கு நடிப்பிலேயே  வெறுப்பும் , சினிமாவில்  கோபமும் அவடதில வைச்சே  வந்தது,


                                                அந்த கற்பழிப்பு கூட்டதுக்கு தலைவனா நடிப்பது பற்றி முடிவு  ஒண்டும்  பதில் சொல்லாமல் வீட்டில வந்து ஹோலில இருந்த பிள்ளையார் சிலைய வெறுப்பா பார்த்துக் கொண்டிருந்தேன், 

                                                ஊருக்குள்ள கற்பழிப்பு சீனில நடிச்சா மானம் போயிரும். அம்மாவுக்கு குமார் பிள்ளையைக் கற்பழிக்கிறது என்ற வார்த்தையைக் கேட்டாலே கொலை செய்யிற கோபம் வரும். அதைவிட கற்பழிக்கிற கூட்டதுக்கு  தலைவனா நடிச்சா அம்மா அடுத்தநாளே வீட்டை விட்டு அடிச்சு கலைச்சுப் போடுவா. அதை எல்லாம் ஜோசிதுக்கொண்டு இருக்க ,அம்மா வந்து

                                 " கதை கேட்கப் போறான் எண்டு சொன்னியே,புரோகர்,இந்தப் படத்தில உனக்கு என்ன வேடம் தந்தார் ,,சொல்லு என்ன கூத்து நடந்தது "


                      "     ஹ்ம்ம் "

                      "பாலச்சந்தர்  கதை போல சொல்லி இருப்பாரே,,"

                         " கிழிச்சார் , கொதி  வருகுது  அந்தாள் சொன்ன திரைக்கதை, சும்மா இரன  வெறுப்பைக் கிளப்பாமல்  "

                             "   புலவர் நல்ல குடும்ப விசியங்களை அவதானித்து எழுதும் விசியம் உள்ள மனுஷன்  "

                              " கண்டறியாத பாலச்சந்தர் "


                             " ஏண்டா அந்தாள திட்டுறாய்,,யார் பெயரை இழுத்தும் கதை பாலச்சந்தர் பெயரை மட்டும்  இழுத்து கதைசாய் எண்டா வாயில போடுவேன் "


                                     "  இப்பவே பின் மண்டையத்  தடவி   பிடரியில போட்ட மாதிரிதான் இருக்கு அவர் கதை சொன்ன விறுத்தம் "

                                         "   நான் தானே சொன்னேன் முத்துராமன் போல நடி எண்டு ,,அதுக்கும் இப்ப என்ன பிரச்சினை உனக்கு "

                            " கண்டறியாத முத்துராமன் "


                            " டேய்..என்னடா எல்லாரையும் பேசுறாய்,,புரோக்கர் என்னடா கதை சொன்னார்,,நீ என்னவா நடிக்கிறாய்,,அதை மட்டும் சொல்லு உன்னோட கிடந்தது பிரகண்ட்டப் பட எனக்கு நேரமில்ல "


                            " சரி நான் நடிக்கிற சீன் மட்டும் சொல்லுறேன்,"


                           " சரி சொல்லு அதைதானே இவளவு நேரமும் கேட்கிறேன் நீ பாஞ்சு விழுகிறாய் "


                            " வேற ஒண்டும் கேட்கக்கூடாது,,சொல்லவும் மாட்டேன் "


                         "  இல்லை கேட்க மாட்டேன் ,நீ சொல்லு "


                          " நாலு மண்டை விறாசுக் குத்தியங்கள் ஒரு குமர்ப்பிள்ளையை மொரிஸ் மைனர் கார்ல  கடத்திக்கொண்டுபோய்க்  கற்பழிக்க முயற்சிக்கிறாங்கள் "


                                " அட,,சொல்லு சொல்லு பிறகு, அதாரது அந்த குமர்ப் பிள்ளை,,எங்கட அயலட்டைப்  பிள்ளையோ  "

                                           "  நான் அந்தக் காரைத் வெறுங் காலில் ஓடித் திரத்திக்கொண்டு போய் ஒரு கையால மொரிஸ் மைனர்  காரை மடக்கிப் பிடிச்சு  மற்றக் கையால அந்த நாலு மண்டை விறைச்சவங்களையும்  பேரையும் முகத்தில  அடிச்சு முழங்காலை நொறுக்கி, "

                                         "  பிறகு ,,சொல்லு  சொல்லடா, குமர்ப்பிள்ளை எண்டும் பார்க்காமல் கடதுரான்களே  "

                                             "  இடுப்பில உதை உதை எண்டு உதைச்சு அவங்கள நொறுக்கி எடுத்து  குளறிக் குழறித் தப்பி சிதறி ஓட வைச்சு அந்த குமர்ப் பெண்ணைக் காப்பாத்துரன், "

                                " அட,,அட  நான் பெத்த பிள்ளை  எல்லா நீ,,பிறகு  சொல்லு,,சொல்லு  என்ன நடந்தது "

                                    " அந்த இளம் குமார்பிள்ளை நன்றியாக என்னப் பார்த்து  சிரிப்பா, "

                          " ஓ,,,இதென்ன  ,  அவள்  எங்கட சாதி சனமே,,என்னன்ட்டு  அது விசாரிக்காமல் உன்னைப் பார்த்து சிரிப்பாள் ,சரி  சொல்லு,,பிறகு "

                               " உடன காமரா ஒரு மஞ்சள் செவ்வரத்தம் பூவையும் ,ஒரு சிவப்பு செவ்வரத்தம் பூவையும் பக்கத்தில பக்கத்தில குளோசப்பில் காட்டும்   .."

                          " அட..இது  பார்த்தியே  எப்படி  புலவர் காதலை அழகா தொடக்கிறார்  என்று "


                          "  ஓம்,   இதுதான் நான் வார ஒப்பிங் சீன் ,, "     

                                 என்றேன்....அம்மா,  திடுக்கிட்டு, 


                         " பரவாயில்லையே, நாலு மனுசருக்கு பயன்படுறமாதிரி படத்திலயாவது நடிக்கிறியே,அதுவே பெரியவிசியம் ! கட்டாயம் நடி , அந்தக் குமர்ப் பிள்ளையை காப்பற்றின படியால்  இனி  இதுக்குப்   பிறகு வாற கதையில் கட்டாயம் முத்துராமன்  போல நடிக்க வேண்டிய குடும்ப  சம்பவங்கள் வருமடா,,,


                           "   என்ன வரும்,,விசரா  உங்களுக்கு "

                           "     நான் முதலே சொன்ன்னான் எல்லோ இது பாலச்சந்தர் படம் போலதான் வருமடா ,கட்டாயம் ஒரு அந்தரிச்ச குமார் பிள்ளைய கழிசடை காவாளிகளிடமிருந்து காப்பாற்றி   நடிக்கிறாய் பார் "

                             "   அதில என்ன மண்ணாங்கட்டி எனக்கு வரும் "

                                    "   அப்பவாவது ஊருக்குள்ள சனம் உன்னையும் ஒரு மனுசனா மதிக்குமடா " 

                                 

அம்மாவுக்கு  நான் ஒரு பதிலும் சொல்லவில்லை, ஆனால் கோவத்தில ஒண்டும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்துகொண்டு இருந்தேன் . 

                                                எல்லா மனிதர்களின் வாழ்கையே படமாக்கப்படாத  ஒரு திரைக்கதை தானே. அம்மாவுக்குப் பொய் சொன்னது பிழை போல இருந்தது. பொய் சொல்லாமல் உண்மையை சொல்லி இருந்தால் என்னோட சீவியம் கிழிஞ்சு இருக்கும்.

                                    எப்படியோ என்னோட   நல்ல காலம் புரோக்கர் அந்த புரியாத புதிர் என்ற  படம் அதன் பின்  நான் யாழ்பாணத்தில் இருந்த காலத்தில்  எடுக்கவில்லை. 


                                             சிலநேரம் அதன் பின் எடுத்தாரா என்பது என்னைப் பொறுத்தவரை இப்பவும் ஒரு  புரியாத புதிர் !
.